Normal view

Received before yesterday

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி

சூக் சியாங் கூட்டுக்கொலை

1942இன் பி்ப்ரவரி மாதம்.

18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில் ஒரு அறிவிக்கை செய்தது. இந்த அறிவிக்கை, துண்டறிக்கைகளாக ஒட்டப்பட்டும், இராணுவ வீரர்களால் ஒலிபெருக்கி வழியாகவும் அறிவிக்கப்பட்டன. 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீன ஆண்கள் அனைவரும் தீவின் குறிப்பிடப்பட்ட ஐந்து இடங்களில் சோதிக்கப்படுவதற்காக வரவேண்டும் என்று அந்த அறிவிப்பு சொன்னது. சிங்கப்பூர் தீவில் இருந்த ஒரு யப்பானிய இராணுவப் பிரிவுக்கு கெம்பெய்டாய் (Kempeitai) என்ற பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் பிரிவுதான் சிங்கப்பூரில் சோதனைகள், தண்டனைகள் போன்றவற்றை நிறைவேற்றும் பொறுப்பை வைத்திருந்தது. அறிவிப்பின்படி சீன ஆண்கள் வந்து சேரவில்லை என்று தோன்றினால் வீட்டுக்கு வீடு சோதனையிட்டு சீன ஆண்களை முகாம்களுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். இந்த ஆண்கள் அனைவரும் விக்டோரியா பள்ளியின் விளையாட்டுத் திடல்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நான்கு அல்லது ஐந்து பெரிய பாரமேற்று மோட்டார் வாகனங்கள் அங்கு வந்தன. அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆண்கள் அனைவரையும் அந்த நான்கைந்து வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தானா மேரா(Tanah Merah) அருகே இருந்த கடற்கரைக்குக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர்.

தடுக்கப்பட்டு வைத்திருந்த அனைவரின் கைகளைப் பின்புறம் வைத்து, கயிறுகளால் பிணைத்து நீண்ட வரிசையில் அவர்கள் கட்டப்பட்டார்கள். அங்கு கடற்கரை மணலில் இறக்கிவிடப்பட்ட அவர்கள் கடலைநோக்கி வரிசையாக நிற்குமாறு பணிக்கப்பட்டார்கள். பின்புறம் கைகள் பிணைக்கப்பட்ட, நீண்ட வரிசைகளில் நின்ற அவர்கள் கடலை நோக்கி ஒரே அளவில் நடக்குமாறு சொல்லப்பட்டார்கள். அவர்களது பின்புறம் வந்து நின்ற கெம்பெய்டாய் படை, தானியங்கித் துப்பாக்கிகளால் (machine guns) சட சடவென்று அவர்களைச் சுட்டது. அத்தனை சீன ஆண்களும் சிங்கப்பூர் கடற்கரையில் கொத்துக் கொத்தாக விழுந்தார்கள். அப்படி விழுந்தவர்களில் இறந்தும் இறக்காமல் இருந்தவர்களை, துப்பாக்கிக் கட்டையின் கத்திகளால் குத்திக் கொன்றார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டபின், இயங்கு வாகனங்கள் சென்று விட்டன. கடற்கரையில் கூட்டுக் கொலை செய்யப்பட்ட சீன ஆண்களின் பிணங்கள் காக்கைகளும் வல்லூறுகளும் சிதைக்க, கிடந்து அழுகின. முறையான ஒரு அடக்கம் கூட செய்யப்படவில்லை. யப்பானியர்கள் இந்த சூக் சியாங் நடவடிக்கையால் ஏறத்தாழ 6000 சீன ஆண்களைக் கொன்றதாக பின்னாட்களில் ஒப்புக் கொண்டனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இளமையும் வலிமையும் கொண்டிப்பதாகக் கருதப் பட்ட சீன ஆண்கள் வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். [1] மேற்கண்டவாறு யப்பானிய கெம்பெய்டாய் கொடுங்கோண்மைப் படை செய்த கூட்டுக் கொலைகள் பலவற்றை வரலாறு பின்னர் பதிவு செய்திருக்கிறது.

Syonan Years – Mass Clensing

இந்த நடவடிக்கைகளை யப்பானிய இராணுவம் அந்த நாட்களிலும், பின்னாட்களிலும் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டதாக நியாயப்படுத்தியது. ஆனால் சூக் சியாங் படுகொலை இரண்டு மூன்று நாட்கள் இடைவெளிக்குள் நடந்தது. யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக, மூன்றாண்டுகளில் ஐம்பதாயிரத்திலிருந்து லிருந்து ஒரு இலக்கம் (50,000 – 1,00,000) வரையான சிங்கப்பூரிய சீன ஆண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கணக்கீட்டை தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலில் திரு லீ க்வான் யூ அளிக்கிறார். சிங்கப்பூரின் சிங்லாப், பூங்கோல், சாங்கி போன்ற இடங்களின் கூட்டுப் புதைகுழிகளில் பல பிணங்கள் இட்டுப் புதைக்கப்பட்டன. [2].

அந்தப் புதைகுழிகளில் பலவற்றை, அந்தக் கட்டுப்பட்டவர்களைக் கொண்டே வெட்டுவித்தார்கள் யப்பானியர்.

அரிதானது உணவு

சிங்கப்பூர் ஒரு தீவு என்றும் அது ஒரு துடிப்பான துறைமுக வணிக நகரமாக இருந்தது என்றும் நாம் அறிவோம்; யப்பானிய ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிறகு போரின் மீது ஏற்பட்ட இயல்பான அச்சத்தால் வணிகப் போக்குவரத்து குறைந்தது. யப்பானிய நிருவாகம் தீவின் மக்களுக்கும் படைகளுக்கும் தேவைப்படும் உணவுப் பொருள்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. உணவுப் பொருள்களின் வரத்து இயல்பாகவே குறைந்தது. தீவிலேயே வசித்த மக்களுக்கு மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் அரிதாயின. வெளியில் கிடைத்த பொருட்களை யப்பானிய இராணுவமும் படைகளும் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள். செயலாக இருந்த சீன ஆண்கள் மொத்த, மொத்தமாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளோடு, தமது குடும்பத்தின் ஏனையவர்களின் உணவுக்குப் பெண்களும் குழந்தைகளும் உடல் வலிந்து பணி செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

உணவுக்குத் தவிப்பு

சூழலில் இது மேலும் மேலும் நிச்சயமற்ற தன்மையையும், தினப்படி வாழ்வியல் அழுத்தத்தையும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு ஏற்படுத்தியது. பொருள் கொடுத்தாலும் இராணுவ நிர்வாகம் கொடுக்கும் உணவு அளவுக்குட்படுத்தப்பட்டதாகவே இருந்தது ( rationed supplies). ஒரு ஆணுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 12 கிலோ அரிசி என்ற கணக்கில் மட்டுமே தானியம் கொடுக்கப்பட்டது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் குறைவான அளவு தானியம் கிடைத்தது. தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவு, போர் தொடரத் தொடர, படிப்படியாக குறைக்கப்பட்டு 1945இல் கிட்டத்தட்ட பாதியாகி ஒரு ஆணுக்கு சுமார் 5 கிலோ அரிசி மட்டுமே ஒரு மாதத்திற்குக் கிடைத்தது. மக்கள் தீவில் மரவள்ளிக் கிழங்கை அதிகம் பயிரிடத் தொடங்கினார்கள். அவித்த மரவள்ளிக்கிழங்கு, கம்போங்குகளில் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன் போன்ற உணவுகள் வழக்கமான உணவாயின. மக்கள் அவ்வாறு பயிரிட்டாலும் அதனை யப்பானிய இராணுவத்தினர் பறித்துக் கொண்டு போவார்கள் என்ற அச்சத்தினால், நகரத்தை விட்டு வெளியேறி மலாய் பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தொடங்கினார்கள். இருந்த மக்களை விவசாயம் செய்து விளைபொருட்களை உற்பத்தி செய்யும்படி, தீவின் இராணுவ நிருவாகம் வற்புறுத்தியது. தவறுகள் குற்றங்களாகக் கருதப்பட்டன; குற்றங்களுக்குக் கொடிய தண்டனைகள் அளிக்கப்பட்டன.

மொழி, கல்வி, பொது நிருவாக நிலை

யப்பானியர் அவர்களது மொழியான யப்பானிய மொழியை பள்ளிக் குழந்தைகள் முதல் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பள்ளிகளில் யப்பானிய மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.யப்பானிய மொழி கற்றுக் கொள்ளத் தனிப்பள்ளியையும் யப்பானிய இராணுவ நிருவாகம் தொடங்கியது. தினமும் சங்கொலி முழங்கியவுடன், மக்கள் பொது இடங்களில் குழுமி யப்பான் இருக்கின்ற திசை நோக்கி மண்டியிட்டு, யப்பானிய தேசிய கீதத்தை இசைக்க பணிக்கப்பட்டார்கள்.

யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்த சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதமும் சுமாராக 50 கைக்குழந்தைகள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள், குழந்தை ஏசு தேவாலயத்தின் வாசலில் அநாதையாக விடப்பட்டன என்ற ஒரு புள்ளிவிவரம் தரும் அதிர்ச்சியிலிருந்து சமூக நிலை எவ்வாறு இருந்தது என்பதை உணரலாம்.

குற்றங்களுக்குக் கடும் தண்டனைகளும், சிறைவாசமும் வழங்கப்பட்டாலும், சிறைக் கைதிகள் மிக மோசமான நிலைமையில் இருக்க வேண்டியிருந்தது. பொது சமூகத்துக்கே தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றும் கிடைக்காத நிலையில் சிறைக் கைதிகளின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? ஆரோக்கியமான மனிதனுக்கு 2200 கலோரி உள்ள உணவுப் பொருள் தேவைப்பட்ட நிலையில், சிறைக்கைதிகளுக்கு சுமார் 1000 கலோரி அளவுள்ள உணவுப் பொருள் மட்டுமே அளிக்கப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாதது, அளவுக்கதிகமான நெருக்கடி, ஊட்டமற்ற உணவு போன்றவற்றால் சிறைகளில் தொற்று நோய்கள் பெருகின. ஆடை, செருப்பு போன்றவற்றிற்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 14000 சிறைக்கைதிகள் இந்தக் காலகட்டத்தில் மரணமடைந்தார்கள்.

கைதிகளின் கோரநிலை

சிங்கப்பூரின் பணவிடை மாற்றப்பட்டு, யப்பானியப பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பூக்களின் படமும், வாழைமரத்தோடு கூடிய வாழைத்தார் இருக்கும் படமும் இருந்ததால் அது ‘வாழைப்பழநோட்டு’ என்ற பொருளில் பனானா கரன்சி என்று பொதுமக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

விண்ணைத் தொட்ட விலைவாசி

சிங்கப்பூரில் ஏற்கனவே இருந்த பிரித்தானிய காலனி நிருவாகம் வெளியிட்டிருந்த பணவிடை முற்றாக யப்பானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது; எனினும் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மற்ற இடங்களில், அந்தப் பணவிடைக்குச் செலாவணி இருந்ததால் அது பெரிதும் மதிப்பில் விழவில்லை. ஆனால் வாழைப்பழ நோட்டுக்கு அந்த செலாவணிப் பெறுமதி சிங்கப்பூரில் இல்லையாதலால், அந்தப் பணவிடைக்கு சந்தை மதிப்பு இல்லாதிருந்ததோடு, நாள் செல்லச்செல்ல மேலும் அதன் மதிப்பு வீழ்ந்தது; அதனை வாங்குவார் அருகினார்கள். விளைவாகப் பொருட்களின் விலை விண்ணுச்சத்திற்குப் போனது. போர் தொடங்குவதற்கு முன்னர் சிங்கப்பூரில் 100 காடிக்கான (60 கிலோ) அரிசியின் விலை சுமார் 5 வெள்ளியாயிருந்தது. அதே பொருள் யப்பானிய ஆக்கிரமிப்பின் 1944 ஆம் ஆண்டு சுமார் 5000 வெள்ளிக்கு உயர்ந்தது![3]

இந்தக் காரணங்களால் ஆக்கிரமிப்புச் சிங்கப்பூரில் கள்ளச்சந்தை துடிப்பாக இயங்கியது.

பிரித்தானிய பணத்தாள்
யப்பானிய வாழைப்பழப் பணத்தாள்

கள்ளச் சந்தையில் தங்க நகைகள், மற்றும் உணவுப் பொருட்கள் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் பெற்றன. லீ க்வான் யூ தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலிலும் அந்நாட்களில் கள்ளச் சந்தை எவ்வாறு இயங்கியது என்றும், அப்போது பதின்மத்தில் மாணவனாக இருந்த தான் எவ்வாறு கையில் இருந்த பணத்தைக் கொண்டு, செலாவணி ஆகக் கூடிய சிறு தங்கத் தோடு போன்றவற்றை வாங்கி, பின்னர் சில நாட்கள் கழித்து விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை, எவ்வாறு தனது குடும்பத்தின் உணவு சம்பாத்திய தேவைக்குப் பயன்படுத்த முடிந்தது என்பனவற்றை விவரித்து எழுதியிருக்கிறார்.

இரணகளத்திலும் யப்பானியர்களுக்கான கிளுகிளுப்பு

சிங்கப்பூரின் வசதி படைத்த சமூகங்கள் வசித்த பல பகுதிகளில் இருந்த வீடுகள் ‘சொகுசு நிலைய’ங்களாக யப்பானிய இராணுவத்தினரால் மாற்றப்பட்டன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தாமே ஓடிப்போயிருந்தார்கள் அல்லது சில இடங்களில் விரட்டியடிக்கப்பட்டார்கள். கொரிய, மலாய், தாய்லாந்து மற்றும் சீனப் பெண்கள் அந்த வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். யப்பானிய இராணுவப் படையின் காமத் தேவைகளைத் தீர்த்து வைக்கவேண்டுவதே அவர்களது பணி. அந்தப் பெண்களில் 14 வயதேயான இளஞ்சிறுமிகளில் இருந்து 35 வயது வரையான பெண்கள் வரை பலர் இருந்தார்கள். வார இறுதி நாட்களில் இந்த வீடுகள் இருந்த பகுதிகளில் நெடும் வரிசைகளில் படையினர் சாரிசாரியாகக் காத்து நிற்பார்கள். அந்த வீடுகள் இருந்த பகுதிகள் மரப் பலகைத் தடுப்புகளால் அரண் போல அமைக்கப்பட்டன. ஒரு பெண், ஒரு நாளில் ஏறக்குறைய 30 லிருந்து 40 ஆண்களுக்கு காமப்பணி செய்யவேண்டியிருந்தது. இந்த கொடும் சுமையில் பெண்கள் நோய்ப்படுவதும் இறப்பதும் பெரும் எண்ணிக்கையில் நடந்தன. அந்த எண்ணிக்கை கொரியா, பர்மா, தாய்லாந்து போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய பெண்களால் மீண்டும் நிரப்பப்பட்டன. இந்த நிலையங்களில் சில யப்பானியப் பெண்களாலும் நிரப்பப் பட்டன; அவர்கள் யப்பானிய இராணுவ அதிகாரிகளின் தேவைக்காக மட்டும் வேலை செய்தார்கள். பெரும் சமூக அவலமாக இது நடந்தாலும், இந்த வடிகால் ஏற்பாட்டினால் ,பொது சமூகத்தில் இராணுவத்தினரால் ஏற்படும் கற்பழிப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

ஆக்கிரமிப்பின் ஆவணங்கள்

சிங்கப்பூர் யப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த நாட்களை அதிகாரப் பூர்வமாக விவரிக்கும் நூல்களில் முக்கியமானது லீ கெயோக் போய் (Lee Geok Boi) எழுதிய தி சியானன் இயர்சு (The Syonan Years – Singapore under Japanese rule 1942-1945) என்பது. இது இந்தக் கொடுங்காலத்தை மிகச் சரியாக ஆவணப்படுத்துகிறது. இது தவிர லீ க்வான் யூ அவர்களின் தி சிங்கப்பூர் சுடோரியின் ஒரு அத்தியாயம் பல செய்திகளை நேரடி சாட்சியாக ஆவணப்படுத்துகிறது. அப்போது லீ அவர்கள் பதின்ம வயது பள்ளி மாணவர். இன்னும் சில ஆவணங்கள், அந்த நாட்களின் சாட்சியாயிருந்தவர்கள் பலரை, பின்னாட்களில் சந்தித்து அவர்களது அனுபவத்திலிருந்த பல செய்திகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை சிங்கை மரபுடைமை ஆவணக் காப்பகம் மற்றும் சிங்கை தேசிய நூலகத்தின் கருவூலங்கள் போன்றவற்றில் காணக் கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பொதுவான நோக்கில் பின்வரும் நான்கு விதமான வகைப்பாட்டில் இந்த கொடுங்காலத்தின் உண்மைகளைப் பதிவு செய்கின்றன. 1. சமூக, பொருளாதார நோக்கில் கள்ளச்சந்தை, கூட்டுக் கொலைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது; 2. புவியியல் நோக்கில் வாழ்வியல் இடங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், இடப்பெயர்வுகள்; 3. சிங்கப்பூரில் மற்றும் தென்கிழக்காசியாவில் அக்காலகட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு யப்பானியர்கள் கொடுத்த அணுசரனையான சலுகை, பதவிகள், வாய்ப்புகளால் சுபாசு சந்திர போசின் இந்திய தேசியப் படையும் அதன் இயக்கம் இந்திய விடுதலைப் போரில் செலுத்திய தாக்கம் பற்றிய செய்திகள்; 4. யப்பானிய மொழியை திறந்த மனத்தோடு கற்றுக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தின் சிலரோடு சமூக அளவில் யப்பானியர்கள் எந்த அளவு ஒன்ற முடிந்தது என்பது பற்றியும், அது விளைவித்த சமூக மென்மாற்றங்கள் பற்றியும்; என இந்த நான்கு நிலைகளில் இந்த ஆய்வுக் குறிப்புகள் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளையும், விளைவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கின்றன.

(தொடரும்)

__________

1.  The Singapore Story – Memoirs of Lee Kuan Yew – From the part of ‘The Japanese Invaders’.
2. Syonan Years – யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தின் நேரடிச் சாட்சிகள் விவரித்த சம்பவங்களில் இருந்து தொகுக்கப்பட்ட சிங்கை தேசிய ஆவணக் காப்பக குறிப்பேடுகளில் இருந்து
3. https://en.wikipedia.org/wiki/Japanese_occupation_of_Singapore – விக்கிபீடியா தளம் தரும் குறிப்பில் இருந்து.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள் appeared first on கிழக்கு டுடே.

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் (திருக்குறள் 484)

தகுதியான காலத்தை ஆராய்ந்து, அதனை ஏற்ற இடத்திலும், உலகத்தையே வென்று கைக்கொள்ள நினைத்தாலும் அது இயலும் செயலே

அதிர வைத்த குண்டுகள்

1941ஆம் ஆண்டு, திசம்பர் திங்கள் 8 ஆம் நாள். அதிகாலை 4 மணி அளவு.

சிங்கப்பூர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

யப்பானிய விமானங்கள் காகிதத்தினால் செய்தவை என்று சிங்கப்பூரில் இருந்த பிரிட்டானியப் படைத் தலைமை சொல்லிக் கொண்டிருந்தது என்று பார்த்தோம். அந்தக் ‘காகித விமானங்கள்’ வீசிய குண்டுகள் தட், தட்டென்று சிங்கப்பூரில் விழுந்தன! யப்பானியர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதும், தென்கிழக்காசியப் பகுதியின் தலைமைத்தளமாக அப்போது இருந்த சிங்கப்பூரின் காலனி நிர்வாகமோ, அங்கிருந்த பிரித்தானியப் படைகளோ எந்த வித ஆயத்தமோ, பயிற்சிகளோ கொண்டிருக்கவில்லை. ஆனால் இரண்டாவது உலகப் போரைத் தொடங்கிய ‘அச்சு நாடுகளின்'[1] முக்கியக் கூட்டாளியான யப்பானியர்களோ, தென்கிழக்காசியாவுக்கான தெளிவான திட்டமும், தீர்க்கமான தளபதிகளையும் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது உலகப் போரை செருமனி தொடங்கினாலும், அதன் முக்கியக் கூட்டாளிகளாக இத்தாலியும் யப்பானும் இருந்தன. இரண்டாவது உலகப் போரின் தொடக்கம் செருமனி போலந்தைக் கைப்பற்றியதன் மூலமே தொடங்கியது; யப்பான், தென்கிழக்காசியாவில் இந்த மூக்கூட்டணியின் பங்காளிப் பங்கை ஆற்றியது.

ஆக்கிரமிப்புத் தாக்குதலின் முக்கியப் பங்களிகளான இத்தாலிலியும், செருமனியும் பல கூட்டு ஒப்பந்தங்களை அறிவித்திருந்தன. இரண்டு நாடுகளின் தலைநகர்களான ரோம், பெர்லின் ‘இணைந்த அச்சின்’ இயக்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே போரைத் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு நாடுகள் அச்சு நாடுகள் (Axis Countries) என்று அழைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலைச் சமாளித்து ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்த பிரித்தானியா,பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்த நாடுகள் (Allied Countries) என்று அழைக்கப்பட்டன.

’1941ஆம் ஆண்டு 8 ஆம் நாள் காலை 4 மணிக்கு இராபிஃல்சு பள்ளியின் ஈ பிளாக் விடுதியில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, மந்தமான ஆனால் அழுத்தமாகத் தட்டென்று கேட்ட குண்டு வெடிப்புச் சத்தம் என்னை எழுப்பியது. யப்பானோடு சண்டை தொடங்கிவிட்டது. அந்தக் குண்டுவீச்சு எதிர்பார்த்திருக்காத, வியப்பளித்த ஒன்றாக இருந்தது. தெரு விளக்குகளோ இன்னும் ஒளிர்ந்துகொண்டு இருந்தன! (போரை, தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் நாடு பொதுவாக இரவுகளில் விளக்குகளை அணைத்து விடும். அதனைக் குறிப்பிட்டே எந்த அளவு மெத்தனமாக சிங்கப்பூர் காலனி நிருவாகம் இருந்தது என்று சுட்டவே இதனைக் குறிப்பிடுகிறார் லீ க்வான் யூ) அந்தக் குண்டுகள் சிங்கப்பூரில் வீசப்படும் வரை, வான் தாக்குதலை எதிர்பார்த்துச் செய்யப்படும் அபாயச் சங்குகள் ஏதும் ஒலிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அந்தக் குண்டுவீச்சு 60 பேர்களைக் கொன்றிருந்தது; 130 பேர்களைக் காயப்படுத்தியிருந்தது; சிங்கப்பூரின் பிரித்தானிய காலனி நிர்வாகம் அந்த குண்டுவீச்சுத் தாக்குதலைப் பற்றி மிகவும் அடக்கி வாசித்தது.’ என்று அப்போது இராபிஃல்சு பள்ளியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த லீ க்வான் யூ, பின்னாட்களில் தனது ‘தி சிங்கப்பூர் சுடோரி’ (The Singapore Storey) நூலின் மூன்றாவது அத்தியாயத்தில்,[2] சிங்கப்பூரின் மீது நடந்த யப்பானியக் குண்டுவிச்சு பற்றிப் பதிவு செய்திருக்கிறார்.

எதிர்பாரா புதுவரவு- தளபதி யமாசிட்டா

தெற்கு நோக்கி முன்னேறும் யப்பானியப் படைகளைச் சமாளிக்க இயலாத பிரித்தானியத் துருப்புகள், தென்கிழக்காசியப் பகுதிகளில் இருந்த நிலைகளை விட்டுவிட்டு சிறிது சிறிதாகப் பின்வாங்கி, கப்பற்படைத் தளத்தையும், மூன்று விமான இறங்குமிடங்களையும் கொண்டிருந்த தென்கிழக்காசியப் பகுதியின் பிரித்தானியத் தலைமையகமான சிங்கப்பூரை அடைகின்றன. ஆனால் சிங்கப்பூரின் கப்பற்படைத் தளத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரித்தானிய வீரர்கள், போர் அனுபவமோ, போதுமான பயிற்யோ, களத்தின் தீரமோ இல்லாதவர்களாக இருந்தார்கள்.

இலண்டன் நிருவாகம் சிங்கப்பூரைக் காக்கவும், சிங்கப்பூர் படைகளுக்கு உதவவும் அனுப்பிய இரிப்பல்சு, பிரின்சு ஆஃப் வேல்சு (Ripples , Prince of Wales) என்ற இரண்டு போர்க்கப்பல்களும் யப்பானிய விமானங்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. மலாயாத் தீபகற்பத்தைத் தாண்டி யப்பானியர்கள் மேலும் மேலும் முன்னேறி சிங்கப்பூரை நோக்கி வருகின்றனர். ’அவர்கள் தளவாடங்கள், மோட்டார் வண்டிகள் போன்றவற்றில் வரத் தாமதமாகும்; அவர்கள் வருவதற்கான சரியான வழி இல்லை’ என்று சிங்கப்பூரில் இருந்த காலனி நிர்வாகப் படை நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தே பார்த்திராத ஒன்று நடந்தது. யோகர் ஆற்றின் மறுகரையில் இருந்த காடுகளை ஊடறுத்துக் கொண்டு வந்த யப்பானியப் படை மிதிவண்டிகளில் சாரிசாரியாக யோகர் பாலத்தைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தது !!! (பார்க்க படம்) [3]

சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப் படைக்குத் தலைமை வகித்தவர் தளபதி யமாசிட்டா (Yamashitta). அவர்கள் அதிகமான வீரர்களுடனும், மிதிவண்டிகளில் மிகக் குறைந்த போர்த்தளவாடங்களோடும் பயணித்து வருவார்கள் என்று சிங்கப்பூரில் இருந்த காலனிப் படை நினைத்தும் பார்க்கவில்லை. வியப்பின் கூறோடு, சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப்படையின் முன்னர் ‘உலகின் வெல்லப்படமுடியாத’ நாட்டின் படையான பிரித்தானியப்படையால் ஏழு நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. சிறிது கூட அணியமற்று இருந்த பிரித்தானிய சிங்கப்பூர் காப்புப் படையும், கப்பற்தளமும் யப்பானியர்களிடம் ஏழாவது நாள் வீழ்ந்தது. ஏழுநாள் நடந்த கடுமையான, ஆனால் சிறிதும் நம்பிக்கை இல்லாத சண்டைக்குப் பிறகு பிரித்தானியப் படையின் தளபதியான ஏ.இ. பெர்சிவல், யப்பானியப் படைத் தளபதியான யமாசிட்டாவிடம் சரணடைந்தார். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அச்சம்; தீவில் இருந்த குடிநீர் தீர்ந்து போய்விடும் என்ற அச்சம்! நீரின்றிச் சாக விரும்பாத அவர்கள் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள், சீனப் புத்தாண்டின் முதல்நாள் சரணடைந்தார்கள். ஏழு நாட்களுக்குள் சிங்கப்பூரைப் பிடித்தது யப்பான்.

அகமும் முகமும் மாறியதே…

சிங்கப்பூரின் பெயர் சோனான் என்று யப்பானிய மொழியில் மாற்றப்பட்டது. அதன் பொருள் தெற்கின் ஒளி என்பது. ஆனால் சிங்கப்பூர் சந்தித்ததோ மறக்கவியலாததொரு கொடுங்கனவு. சிங்கப்பூரின் கடிகாரங்கள் தோக்கியோ நேரத்துக்குத் திருத்தி அமைக்கப்பட்டன. காலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து சக ஆசியர்களை மீட்க வந்தவர்களாக யப்பானியர்கள் தங்களை வரித்துக் கொண்டார்கள். அவ்வாறே அறிவிக்கவும் செய்தார்கள். ஆனால் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த சுமார் நான்காண்டுகளில் சிங்கப்பூர் குடிமக்கள் கொடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. சீன இனத்தைச் சேர்ந்த வசதி மிக்க வணிகர்கள், போருக்கு முன்பாக யப்பானுக்கும், யப்பானிய முயற்சிகளுக்கும் எதிராகச் செயல்பட்டார்கள் என்பதை அந்தப் படை நினைவு வைத்திருந்தது. அவர்கள் குறிவைத்து ‘பாடம் கற்பிக்கப்’பட்டார்கள். நூற்றுக் கணக்கில் (ஆயிரக்கணக்கில் கூட இருக்கலாம் என்று சில செய்தி மூலங்கள் சொல்கின்றன) சீனர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்; அல்லது காணாமற் போகிறார்கள். யப்பானிய இராணுவ நடவடிக்கைகளுக்காக சீன வணிகர்களிடமிருந்து 50 மில்லியன் டாலர்கள் பணம் ‘வலிந்த நன்கொடை’யாக வசூலிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களை மட்டும் சிறிது பரிவோடு அணுகுகிறார்கள் யப்பானியர். இந்தியாவும் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடுவதால் அவர்களை ஆதரிப்பதாக தங்கள் நிலையை முன்வைக்கிறது யப்பான். சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் கொடுமைப்படுத்தல்கள் இல்லாத கண்காணிப்பு வேலைகள் வழங்கப்படுகின்றன. இந்திய தேசியப்படையை அக்காலகட்டத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த இந்திய விடுதலைப் போரின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுபாசு சந்திர போசை ஆதரிக்கும்படி யப்பானிய மேலிடம் யப்பானியப் படைகளுக்கு உத்தரவிடுகிறது. இந்திய தேசியப்படையில் அதிக அளவில் சிங்கப்பூரிலிருந்த இந்தியத் தமிழர்கள் சேர்கிறார்கள். சிங்கப்பூரை பிரித்தானிய நிர்வாகத்திடமிருந்து வென்றுவிட்ட யப்பானிய இராணுவம், இந்த இந்திய தேசியப் படையின் சிங்கப்பூர்ப் பிரிவினரோடு இணக்கமாகவும், நீக்குப் போக்காகவும் நடந்து கொள்கிறது. பிரித்தானிய காலனி நிருவாகத்தின் கீழ் இருந்தபோது, சிங்கப்பூரின் இந்தியத் தமிழர்கள் நினைத்தும் பார்த்திருக்க இயலாத அதிகாரம் மிக்க பதவிகளில், யப்பான் இராணுவ நிருவாகம் அவர்களை அமர்த்துகிறது. இதே விதமான அணுசரனையாக போக்கை மலாய் இனத்தவர்களிடமும் யப்பானியப் படை காட்டுகிறது. மலாயாவின் மற்ற இடங்களில் இருக்கும் மலாய்க் காரர்கள், சிங்கப்பூரின் மலாய்க்காரர்களோடு தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். இது மலாய் இனத்தவர்களிடையேயும் யப்பானிய இராணுவப் படையைப் பற்றியும் நிருவாகத்தைப் பற்றியும் நம்பிக்கையைக் கொடுக்கிறது.

நடப்பதொரு கொடுங்கனவு

சிங்கப்பூர், யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் நான்காண்டுகள் இருக்கவேண்டியிருந்தது.யப்பானிய இராணுவம் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது சிங்கப்பூரில் இருந்த பலர், மலாயாவின் உள்பகுதிக்குள் சென்று விட்டால் போரின் இடர்களிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த அதே நாள், மலாயாவின் கோத்தாபாருவிலும்(Kota Bharu) இறங்கினார்கள் என்ற செய்தி பின்னரே வந்தது. ஏற்கெனவே யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய யோகர் ஆற்றின் மறுகரையின் சதுப்பு நிலங்கள் வழி மிதிவண்டிகளில் வந்தார்கள் என்று பார்த்தோம். இது பிரித்தானியர்கள் எதிர்பாராதது. அச்சத்தில் அப்பகுதிகளில் இருந்த பிரித்தானியக் குடும்பங்கள் பின்வாங்கி ஆற்றைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய வேண்டி வந்தது. அல்லது, தெறித்து ஓடித் தப்பிக்க வேண்டி வந்தது. மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் மத்திய கிழக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டிய சில ஆசுத்திரேலிய வீரர்களையும் மூன்று கலங்களில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தது இலண்டனின் காலனி நிருவாகம். அவர்கள் எதிர்பார்த்திருந்தது சிங்கப்பூர் விழுந்து விடாது என்பது. ஆனால் சிங்கப்பூரை முன்னிட்டு யப்பானிய இராணுவம் நடத்திய போரின் நான்காவது நாளில், அந்த வீரர்கள் தமது ஆயுதங்களைக்கூட சுமந்து கொள்ளப் பிரியப்படாமல் இருந்ததாக, அப்போது மாணவனாக இருந்த லீ க்வான் யூ தனது சிங்கப்பூர் சுடோரி புத்தகத்தில் பதிவு செய்கிறார். இச்சமயத்தில் பிரித்தானியப் பிரதமராக இருந்த, பின்னால் பெரும் புகழ் பெற்ற வின்சுடன் சர்ச்சில் சிங்கப்பூரின் வீழ்ச்சியை இவ்வாறு பதிவு செய்கிறார், ‘ சிங்கப்பூரின் வீழ்ச்சி பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகுந்த அவமானமிக்க தோல்வியும், கொடுமையான நிகழ்வும் ஆகும்’.

சமூக இனப் பிளவு

சிங்கப்பூரில் இருந்த ஆசிய இனத்தவர்கள், பிரித்தானியர்கள் இரு சமூகத்துக்குமே யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த சிங்கப்பூரின் மூன்றரை ஆண்டுகாலம் கொடுங்கனவாகவே இருந்தது. ஏனெனில் 1800கள் முதலே பிரித்தானியர்கள் தங்களது ஆதிக்கத்தை வன்மையுடன் மற்ற ஆசிய சமூகத்தினரிடம் செலுத்தி வந்தார்கள். ஆசிய இனத்தவர்கள் அனைவருக்கும் வெள்ளையினத்தவர் என்றால், அவர் ‘துரை’. வெள்ளையினப்பெண் என்றால் அவர் ‘துரைசானியம்மாள்’. நூறாண்டுக்கும் மேலாக சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில் பழகிப் போயிருந்த இது யப்பானியர்கள் ஆக்கிரமிப்பில் சிங்கப்பூர் இருந்த மூன்றரை ஆண்டுகளில் தவிடுபொடியானது. பற்றாக் குறைக்கு இந்தியர்களை யப்பானியர்கள் கண்காணிகளாக நடத்தத் தொடங்கியது பிரித்தானியர்களுக்கு மேலும் சித்திரவதையாக இருந்தது. யப்பானியர்களின் கடுமை சீன இனத்தவரிடமும் பிரித்தானியர்களிடமும் மிகக் கடுமையாகவும், மலாய் இனத்தவரிடம் சிறிது கடுமை குறைந்தும், இந்தியத் தமிழர்களிடம் இன்னும் கடுமை குறைந்தும் காணப்பட்டது. இந்த வேறுபாடு பிரித்தானியர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்த விளைவு, பின்னால் மீண்டும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் வந்தபோது தெரிந்தது.ஆனால் பொதுவாக சிங்கப்பூர் சமூகத்தைப் பொறுத்தவரை, யப்பானியர்களின் ஒட்டுமொத்தக் கடுமையும், பிரித்தானியர்கள் ஆசிய சமூகத்திடம் நூறாண்டுகளாகக் காட்டி வந்த கடுமையைவிட அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். ஒரே பகுதியைச் சேர்ந்த ஆசியர்கள் என்பதால் யப்பானியர்கள் சிங்கப்பூர் ஆசியர்களை எளிமையாகவெல்லாம் நடத்தவில்லை.யப்பானியர்கள் சிங்கப்பூரைப் பிடித்த தொடக்க சில நாட்களில் பிரித்தானியர்கள், சீனர்களின் தொழில் செல்வங்கள், வீடுகள் சூறையாடப்பட்டன. ஆனால் சீக்கிரமே யப்பானியர்கள் சிங்கப்பூரில் இவ்விதச் சூறையாடல்களுக்கு முடிவு கட்டினார்கள். சில சூறையாடிகள் பிடிக்கப்பட்டு அவர்களது தலைகள் கொய்யப்பட்டுப் பொது இடங்களில் கட்டிவிடப்பட்டன. தண்டனைகள் கொடுமையாக அரங்கேற்றப்பட்டன. கத்தியால் உடலின் மேற்தோல்கள் சீவப்பட்டதெல்லாம் தண்டனைகளாகக் கொடுக்கப்பட்டன.

யப்பானிய இராணுவம் குறிப்பிட்ட சமூகப் பெரியவர்கள், அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு வேண்டியதை மிரட்டிப் பெற்றார்கள். வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை அள்ளிச் சென்றார்கள். சிங்கப்பூரில் எந்த உணவும் மிகுதியாக உருவாக்கவோ,பயிரிடவோ படவில்லையாதலால் உணவுப் பொருள்கள் அருமைப் பொருள்களாயின.

மக்களின் தினவாழ்வு கொடுமையானதாக மாறியது.

(தொடரும்)

__________

படம்: சிங்கப்பூருக்குள் நுழையும் யப்பானியப் படை – நன்றி சிங்கை தேசிய ஆவணக் காப்பகப் பக்கம்

1. https://www.britannica.com/topic/Axis-Powers
2. The Singapore Story – Memoirs of Lee Kuan Yew, chapter 3.
3. From Singapore Heritage Board resources – With thanks.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு appeared first on கிழக்கு டுடே.

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள்

காவல்

சிங்கப்பூர் ஒரு தீவு என்பது நமக்குத் தெரியும். அதுவும் நிலப்பரப்பின் ஒரு சந்தியில் இருக்கின்ற ஒரு சிறு புள்ளி. பெரும்நிலப்பரப்பின் எல்லைப் பரப்பில் இருக்கின்ற பகுதிக்குரிய இயல்பான குண இயல்புகளுடனேயே சிங்கப்பூர் இருந்தது. கண்காணிப்போ, கட்டுக் காவலோ இல்லை. வழியற்ற குடியேறிகள், வேறு இடங்களில் சட்டத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி ஓடிவரும் குற்றவாளிகள், சீனத்திலிருந்த வந்த கூட்டத்தில் கலந்து வந்த அபின் வணிகர்கள், சீன இரகசியக் கும்பல்கள், கிழக்கிந்திய கம்பெனியே கொண்டு வந்து இறக்கிய இந்திய தமிழகச் சிறைவாசிகள் (அடிமை வேலைகளுக்காக!), துணிச்சலும் துடிப்புமான வியாபாரிகள் என்று அனைவரும் சங்கமித்துப் புழங்கும் இடமாக சிங்கப்பூர் அப்போது இருந்தது. இதோடு கிழக்கிந்திய கம்பெனியின் வணிகத்துக்கும் வர்த்தகத்தும் உதவி புரிவதற்காகக் கொண்டுவரப்பட்ட அல்லது அந்த வேலை வாய்ப்புகளுக்காக வந்த குடியேறிகளும் இருந்தார்கள்.

ஒரு புறம் பணப்புழக்கமும், உழைத்து, வணிகம் செய்து பிழைக்க வந்த பணம் சம்பாதிக்கும் கூட்டம்; மறுபுறம் ஏதிலிகள், ஒளிந்து கொள்ள வந்த குற்றவாளிகள் போன்றவர்கள். எளிதாகக் குற்றச் செயல்கள் நடக்கத் தொடங்கின. (சீனத்தில் அபின் என்ற போதைப்பொருளைப் புழங்க விட்டது பிரித்தானியர்தான். அதன்மூலம் சீனத்தையும் வளைக்கத் திட்டமிட்டார்கள். பிரித்தானியர்கள் சீனத்தில் அபினை இறக்கிச் செய்த உள்ளடி வேலைகளும், கொடுமைகளும் ஒரு பெரும் நெடுங்கதைக்கு உரிய பொருண்மை உள்ளவை. சீனர்கள் பெரும்பான்மையினர் அப்போது பிரித்தானியாவால் இறக்கிவிடப்பட்ட அபினுக்கு அடிமையானார்கள்; சீனர்களில் பெரும்பான்மை போதைப்புழங்கிகள் அப்போதைய தலைமுறையில் இருந்து வந்தவர்களே என்று சொன்னால் இது மிகையில்லை; சிங்கப்பூரிலும் கிழக்கிந்திய அபின் பண்ணைகளை வைத்திருந்தது. போருக்கு முந்தைய நிலையில் கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய வருமானத்தின் ஒரு பகுதி சிங்கையின் அபின் பண்ணைகளில் இருந்து வந்தது என்பதைக் கருதினால், அபினை முன்வைத்து பிரித்தானியர்கள் என்னவற்றை நடத்தினார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.)

எனவே சிங்கப்பூர்க் காவல்படை ஒன்றை காலனித்துவ நிர்வாகம் தொடங்கியது. முறையான காவல்படை இயங்கத் தொடங்கியது தேவையற்ற, தான்தோன்றித்தனமாகக் குற்றச்செயல்கள் நடப்பதைத் தடுத்து, வணிகத்துக்கு உதவி செய்தது.

வளர்ச்சியின் கூறுகள்

பாய்மரக் கப்பல்களிலிருந்து நீராவிக் கப்பல்களுக்கு கப்பல் போக்குவரத்து மாறியபோது, இடைத்துறைமுகமான சிங்கப்பூரில் வர்த்தகர்கள் இந்தச் சேவைக்கான தேவையை உணர்ந்தார்கள். எனவோ தஞ்சோங்பாகரில் ஒரு நிலக்கரி வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டது. மலாக்கா நீரிணையில் ஒருமுனையாக இருக்கும் அதன் இருப்பிடம், சூயஸ் கால்வாயின் வழியாகச் செல்லும் நீராவிக் கப்பல்களின் நிறுத்திச் செல்லும் துறைமுகமாக சிங்கப்பூர் இருந்தது அதன் வணிகத்தை மேலும் பெருக்கியது. எண்ணெய், நீலக்கரிச் சேவைகள், வழங்கீட்டுப் பொருள்கள் போன்றவற்றின் காரணமாக சிங்கப்பூரின் வணிகம் வளர்ந்தது. 1926-ம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகம் 1886 மில்லியன் வெள்ளிகள் என்ற உச்ச வணிகநிலையை அடைந்ததாக கிழக்கிந்திய கம்பெனியின் வணிகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1933-ம் ஆண்டின் மாபெரும் மந்தநிலையில்கூட அதன் வணிகம் 512 மில்லியன் வெள்ளிகள் என்ற அளவில் இருந்தன.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி வணிகம் பெரிதாக நடைபெறவில்லை; சொல்லப்போனால் அறவே இல்லை என்றே சொல்லலாம். துறைமுகத்தின் முக்கிய வருமானம் பண்டசாலை வர்த்தகமே. அதாவது மற்ற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, சிங்கப்பூருக்குள் நுழைந்து செல்லும் சரக்குகள் அங்கிருந்து மற்ற இடங்களுக்கு மறுவிநியோகம் செய்யப்பட்டதால் வந்தவை. இதுபோலவே பதனம் செய்யும் நிலையங்களின் மூலமும் வருமானம் வந்தது. பொருட்களைப் பிரித்து அடுக்கும் வரை அவை பதன நிலையங்களில் வைக்கப்பட்டன. மலாயாவில் தயாரிக்கப்பட்டு வரும் ஈயம், இரப்பர் தொழிற்பண்டங்கள் சிங்கப்பூர் துறைமுகம் முக்கியத் துறைமுகமாக வளர்ந்து மேம்படுவதற்கு உதவின.

கல்வி

சிங்கப்பூர் கிழக்கிந்திய கம்பெனியால் தென்கிழக்காசிய வட்டாரத்தில் வாங்கப்பட்டது என்று பார்த்தோம். கம்பெனியின் இந்திய வட்டாரத்தின் தலைமையகம் அன்றைய கொல்கத்தாவில்தான் இருந்தது. எனவே சிங்கப்பூரும் கொல்கொத்தாவில் இருந்தே மேலாண்மை செய்யப்பட்டது. இதனால் இயல்பாக சிங்கப்பூரின் மேலாண்மையில் ஒரு தொய்வு இருந்தது. கிழந்திய கம்பெனியின் வணிகத்துக்குக் கட்டாயமாகத் தேவைப்பட்ட வளர்ச்சிக் கூறுகளில்தான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். அதாவது வர்த்தகத்திலும் வருமானத்திலும். மற்றவற்றில் சிங்கப்பூருக்கான போதிய கவனம் கம்பெனிக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. இது அங்கிருக்கின்ற சமூகங்களின் சமூக வாழ்க்கைத் தேவைக்கான ஈடுபாடுகளை அந்தந்தத் சமூகங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியது. சிங்கப்பூரில் சீனர்கள், ஏற்கெனவே பழங்குடிகளாக வாழ்ந்த மலாய் இனத்தவர்கள், கம்பெனியால் கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழர்கள், இவர்களுடன் வணிகம் வர்த்தகத்துக்காக வந்த மேற்குலகச் சமூகம் என்று நான்கைந்து சமூகங்கள் இருந்தன. இச்சமூகங்களின் சமூக ஒழுங்குகள், நடவடிக்கைகள், குலமரபு போன்றவை அந்தந்தச் சமூகங்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், ஈடுபாடு காட்டவும் கிழக்கிந்திய கம்பெனியின் காலனி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. ஆனால் இச்சமூகங்களின் சார்பாக காலனி நிர்வாகத்தோடு தொடர்பு கொள்ள, ஆங்கிலம் தெரிந்த,மொழியறிவு தேவைபட்ட ஒரு சிறு சமூகத் தலைவர்கள் கூட்டம் தேவைப்பட்டது; அவர்களும் உருவானார்கள். அவர்கள் தத்தமது சமூக மக்களின் தேவை, கல்வி போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இந்தத் தேவையை நிறைவு செய்ய சமயத் திருப்பணியினரும், சீனத்தின் கொடைவள்ளள்களும் முன்வந்தார்கள். ராஃபில்ஸோ, காலனி நிர்வாகமோ இதில் போதிய அக்கறை செலுத்தாததால், சமூகக் குழுக்களின் மூலம் உருவான இத்தகைய பள்ளிகள் அந்தந்த தாய்மொழி வழிக் கல்வி நிலையங்களாக உருவாகின. ஆனால் சமயத் திருப்பணியினரால் உருவாக்கப்பட்ட பள்ளிகள், ஆங்கிலமொழிவழிக் கல்விக்கு விரைவில் மாறின. காலனி நிர்வாகத்துக்குத் தேவையான பணியாளர்களை அளிக்க வேண்டிய தேவை இருந்ததை அவர்கள் உணர்ந்ததால் இந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டார்கள். சீனப் பள்ளிகளின் நிர்வாகத்திலும் கல்வி முறையிலும், காலனி நிர்வாகம் ஈடுபடாததால், சீன அரசாங்கம் அவற்றில் ஊடுருவத் தொடங்கியது.

கம்யூனிசம் வளர்க்கும், சீனத்துவ சிந்தனைகள் சிங்கப்பூரின் சீனப்பள்ளிகளில் உரம்பெறத் தொடங்கின. (இந்தநிலை வளர்ந்து காலனி நிர்வாகத்திற்கு இடரானபோது, 1920-ல் பிரித்தானிய சிங்கப்பூரின் சீனப்பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கையில் எடுக்கக் காரணமானது). மலாய்ப்பள்ளிகள் பெரும்பாலும் சமயப் பள்ளிகளாகவோஅல்லது அடிப்படைத் திறமைகளைக் கற்பிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டவையாகவோதான் தொடக்கத்தில் இருந்தன. மாறாக சீனப்பள்ளிகள் சீனப்பற்றும், கம்யூனிசமும் வளர்த்தாலும், சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் மீதும் கண்வைத்து தொடக்கத்திலேயே இயங்கத் தொடங்கின. ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள் சீனப் பெண்கள் பள்ளி, ராஃபில்ஸ் 1823-ல் தொடங்கிய சிங்கப்பூர் கல்விக் கழகம் (பின்னாளில் ராஃபில்ஸ் கல்விக் கழகம்), 1873-ல் தாமதாகத் தொடங்கப்பட்ட ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி, சமயத் தொண்டர் பெஞ்சமின் கீசுபாரி தொடங்கிய மலாயப்பள்ளி போன்றவை . [1]

வணிக மையமான சிங்கப்பூர்

தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் இரண்டுக்கும் இடையே உள்ள கடல் பாதைகளின் சந்தியில் பாதுகாப்பாக அமைந்திருந்தது சிங்கப்பூர். அதோடு அதன் துறைமுகம் இயல்பிலேயே ஆழமானது. இது பாய்மரக்கப்பல்கள் காலத்திலிருந்தே இருந்த நிலை. இதனால் இயல்பான ஒரு நிறுத்து துறைமுகமாகவும் (Stopping Harbour port). பண்டமாற்றுத் துறைமுகமாகவும் சிங்கப்பூர் எளிதில் மாறியது. கிழக்கிந்திய கம்பெனி சிங்கப்பூரை வாங்கிய பிறகு விரைவாக சிங்கப்பூரில் சில அடிப்படைக் கட்டுமானங்களைச் செய்தது என்று பார்த்தோம். அவை ராஃபில்ஸின் முன்னெடுப்புகள். சிங்கப்பூரின் கிழக்கு மேற்குத் தொடர்பு அதன் தொடக்க கால வளர்ச்சிக்குப் பெரும் காரணியாக இருந்தது என்று பார்த்தோம். மேற்கத்தியர்கள் சிங்கப்பூரில் வந்து தங்கியபோது, சிங்கப்பூரைச் சீனாவுக்கான ஒரு நுழைவாயிலாகப் பார்த்தார்கள். மேற்கிலிருந்த வந்த சமயவாதிகள் சீனத்தை மாற்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள், மூலதனங்களுக்காக ஒரு செயல்படும் தளமாக சிங்கப்பூரைக் கருதினார்கள். அவர்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த காலத்தில் தங்கள் குடும்பத்தினர் படிப்பதற்குப் பள்ளிகளை அமைத்தார்கள்; கிறிஸ்தவ மதநூலான பைபிளை மொழிபெயர்த்தார்கள். அச்சுத் தொழிலை நிர்மாணித்தார்கள்; அதனைக் கற்பித்தார்கள். சீன சந்தையின் மீது கண்வைத்திருந்த வியாபாரிகளுக்கும் சிங்கப்பூர் முதல் துறைமுக இறங்குமிடமாக இருந்தது.

யோகர் பாலம் – அன்றும் இன்றும்

யோகர் பாலம் – இன்றைய தோற்றம் – பக்கவாட்டில் மாபெரும் குடிநீர் குழாய்கள்
யோகர் சிங்கைப் பாலம் 1924 – சிங்கை தேசிய ஆவணத்திற்கு நன்றியுடன்

வேறு சமூக மாற்றங்கள்

இதன் காரணமாக சிங்கப்பூரில் இருந்த வர்த்தக சமூகத்திற்குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆதரவுவும் கவனமும் கிழக்கிந்திய கம்பெனியால் தரப்படவில்லை என்ற எண்ணத்தைத் தந்தது. தங்களுக்கு ஏற்படும் இடர்களையும் கடினப்பாடுகளையும் கொல்கொத்தா நிர்வாகம் அறிந்து கொள்ளவில்லை என்பதோடு, அவற்றில் ஆர்வமும் காட்டுவதில்லை என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினர். இது தொடர்ந்து வளர்ந்து, கிழக்கிந்திய கம்பெனியின் மலாயாக் குடியேற்றம் (Straits Settlement) ஒரு கட்டத்தில் லண்டனில் இருந்து ஆளப்படுகின்ற முடியாட்சியின் காலனியாக 1867-ல் மாறியது.

அதிலிருந்து சிங்கப்பூருக்கு இந்தியாவுடனான தொடர்பு சிறிது குறைந்தது. 1869-ல் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆகியவற்றால் லண்டன், சிங்கப்பூருக்கு இடையேயான தகவல் தொடர்புகள் வலிமையும், வேகமும் பெற்றன. 19-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் (1900) சிங்கப்பூர் மலாயாப் பகுதியில் இருந்த இலண்டனின் காலனித்துவ நிர்வாகத்தின் அதிகார மையமாக மாறியது. சிங்கப்பூரில் இருக்கும் மலாயாக்காரர்களுக்கு எளிதான கல்வி வசதி, மற்ற இனங்களிடையான தொடர்பு, போட்டி ஆகியவற்றால் சமூகம் அறிவுமேன்மை கூடுகிறது. முதல் செய்தித்தாள்கள், தொடக்கக் கால அறிஞர் குழுக்கள், எழுத்துப் படைப்புகள் தோன்றத் தொடங்குகின. 1923-ல் சிங்கப்பூரையும் யோகரையும் இணைக்கும் யோகர் காசவே (Johar Causeway) தரைப்பாலம் கட்டப்பட்டது. [2] இந்தப் பாலத்தின் வழி சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து இரண்டும் சிங்கப்பூருக்கும் மலாயாப் பகுதிக்கும் ஏற்படுகின்றன. இது இருபுறத்திலும் வணிகத்திலும், மக்கள் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தது. மக்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து பெருகியது. 1927-ல் யோகர் சுல்தானுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் சிங்கப்பூருக்கான குடிநீர், யோகரிலிருந்து பெரும் குழாய்கள் (சுமார் இரண்டு மீட்டர் விட்டம் உடைய பெரும் குழாய்கள் மூன்று) வழியாக வர குழாய் இணைப்பு யோகர் பாலத்தில் இணைக்கப்பட்டது.

சமூக வாழ்வு நோக்கில் பார்த்தால் சிங்கப்பூரில் இருக்கும் மலாய் இனத்தவர்கள் தவிர மற்ற இனத்தவரின் நோக்கு எப்போதும் அவரவர் தாய்நாடு நோக்கியே இருந்தது. 1915-ல் ஏற்பட்ட ஒரு சிறு சிப்பாய்க் கலகம் சிங்கப்பூர் இந்தியர்களை-பெருமளவிலான தமிழர்களை, இந்திய நாட்டுப்பற்று நோக்கித் தள்ளியது. இது திடீரென்று கிளம்பினாலும், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரிடையே ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுவந்தது.

சீனர்களைப் பொறுத்தவரை அவர்களின் தாய்நாடு சீனாதான்; அது அப்போது ஒரு மாற்றத்துக்கான, புரட்சிக்கான ஆயத்தங்களில் இருந்தது. அது நல்லநிலையை அடையும் வரை தற்காலிகமான இல்லமாகவே தென்கிழக்காசியாவைக் கருதினார்கள். ஆனால் ஒன்றுபட்ட சீனம், கம்யூனிசப் பற்று போன்றவற்றை தென்கிழக்காசியாவில் பரந்து வசிக்கும் சீனர்களுக்கிடையே உயிர்ப்புடன் வைத்திருக்க புரட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தினார்கள். யாட் சென் போன்ற புரட்சித் தலைவர்கள், அடிக்கடி சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு வந்து சீன சமூகத்தினரிடம் அளவளாவி அச்சமூகத்தினரின் சீனம் நோக்கிய பார்வையை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்தனர். இந்த நேரத்தில் 1937-ல் ஜப்பானியர்கள் சீனாவில் படையெடுத்தனர். இது சீனர்களை ஜப்பானியத் தயாரிப்புகளை, சரக்குகளைப் புறக்கணிக்கத் தூண்டும் காரணியானது. இதற்கு வளமான, வலிமையான சினத் தொழிலதிபர்கள் ஆதரவு கொடுத்தனர். சீனத்தின் நடக்கும் போர் முயற்சிக்காக தென்கிழக்காசிய நாடுகளில் சீன சமூகத்தினரிடம் தோன்றி நிதி திரட்டும் முயற்சி, சிங்கப்பூரிலும் வலிமை அடைந்தது.

ஜப்பானியர்கள் தெற்கு நோக்கி நகர்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதும், பிரித்தானியர்கள் அதனை ஒரு கருதத்தக்க நிகழ்வாக எண்ணவில்லை; அவர்கள் ஜப்பானிய விமானங்கள் காகிதத்தால் செய்யப்பட்டவை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அதற்கான விலையை லண்டன் காலனி நிர்வாகம் வெகு சீக்கிரமே தென்கிழக்காசியாவில் பரவலாகவும், சிங்கப்பூரில் குறிப்பாகவும் கொடுக்க வேண்டியிருந்தது என்பதுதான் விசேடம்!

(தொடரும்)

__________

[1] சிங்கப்பூர்-தேச உருவாக்கம் நோக்கிய பயணம் – நூலின் காலனித்துவக் கல்விக் கொள்கை பகுதியில் இருந்து – சிங்கப்பூர் தேசிய மரபுடைமைக் கழக வெளியீடு

[2] https://biblioasia.nlb.gov.sg/vol-20/issue-2/jul-sep-2024/singapore-malaysia-johor-causeway/ – சிங்கை நூலக வாரியம் அளிக்கும் யோகர் பாலம் அமைப்பு பற்றிய தகவற்பக்கம்

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #4 – வளர்ச்சிக் காரணிகள் appeared first on கிழக்கு டுடே.

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #3 – துடிப்பாகத் தொடங்கிய ராஃபில்ஸ்

பொ.உ. 18 ,19-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளின் பெருந்தொழில் நிறுவனங்கள் அரசுகளிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததையும், அவர்கள் சொற்படி அரசுகள் முடிவுகள் எடுத்ததை வரலாறு விவரிக்கிறது. ஈஐசி என்ற கிழக்கிந்தியக் கம்பெனி, பிரித்தானிய அரசுக்கான நாடுபிடிக்கும் நடவடிக்கைகளில் பெருந்துணையாக தென்கிழக்காசியப் பகுதியில் இருந்ததும் கண்கூடு. இந்தப் பின்னணியில்தான் ஒவ்வொரு நிலப் பிரதேசத்திலும், தமக்கான தொழிற்கேந்திர இடங்களைப் பிடிக்க இந்தத் தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டதை சென்ற பகுதியில் பார்த்தோம். தென்கிழக்காசியாவில் இவ்வாறு போட்டியிட்ட தொழில் நிறுவனங்களி்ல் கிழக்கிந்திய நிறுவனமும், டச்சுச் காரர்களும், போர்ச்சுகீசியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் முக்கியமானவர்கள்.

1800-களின் தொடக்கத்தில் மலாக்கா நீரிணைப் பகுதியில் டச்சுக்காரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. அக்கடல்பகுதியின் துறைமுகங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்த பிரித்தானிய இந்தியாவுக்கும் சீனத்துக்கும் இடையில் நடைபெற்ற வணிகப் போக்குவரத்துகளுக்கான வழி, மலாக்கா நீரினைப் பகுதி வழியாகவே சென்றது. இத்துறைமுகங்களைக் கடக்கவும் பயன்படுத்தவும் டச்சுக்காரர்கள் பிரித்தானியக் கலங்களுக்கு மிக அதிக வரி வசூலித்தார்கள்.[1] அவர்களோடு வெளிப்படையாக முரண்டவும் பிரித்தானிய நிறுவனங்களால் இயலாதிருந்தது. ஏனெனில் ஐரோப்பாவில் உட்கண்ட பிரெஞ்சின் ஆதிக்கத்தை சமனப்படுத்துவதற்கு அவர்களுக்கு ஹாலாந்தின் தயவு வேண்டியிருந்தது. எனவே பிரித்தானியர்களும் கிழக்கிந்திய கம்பெனியும் அகலாது அணுகாது டச்சுக்காரர்களைக் கையாள வேண்டியிருந்தது. எனவேதான் கிழக்கிந்திய கம்பெனியை மலாக்கா நீரிணைப்பகுதியில் தனக்கான துறைமுகங்கள், வணிகக்கட்டமைக்குகள் வேண்டும் என்று நினைத்தது.

அதன் விளைவே சென்ற பகுதியில் பார்த்தபடி கிழக்கிந்திய கம்பெனி மலாக்கா, பினாங்கு ஆகிய பகுதிகளை வாங்கி, வணிகக் கட்டமைப்பை நிறுவியதன் காரணம். ஆனால் இந்தக் கட்டமைப்பு எளிதாக நடந்து விடவில்லை. இதற்காக ராஃபில்ஸ் தேர்ந்தெடுத்து அனுப்பப் பட்டபோது, இந்தியப்பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்தவர் மார்க்குவெஸ் ஹாஸ்டிங்ஸ். இவரது காலத்தில்தான் இவரது பதிலியாகவும் (Agent), சுமத்ரா பகுதியின் உதவி ஆளுனராகவும் இருந்த ராஃபில்ஸ் நிலம் தேடி கடற்பயணம் வருகிறார். அவருக்கு யோகர் நிலநீர்ச்சந்தியில் இருந்த மலேயப் பரப்புதான் பிடிக்கிறது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனி வாங்குகின்ற நிலப்பகுதி டச்சுக்காரர்கள் ஊடுருவி வராத நிலமாக இருக்கவேண்டும் என்றும் அவர் நினைத்தார்; எனவே மேலும் சுற்றிவரும் போதுதான் கழிமுகத்தீவாக இருந்த தெமாஸக் என்றழைக்கப்பட்ட சிங்கப்பூர் நிலப்பரப்பு அவரது கண்ணைக் கவர்நது. காரணம், சிங்கப்பூர் துறைமுகம் கப்பல்கள் வந்து செல்ல ஒரு நல்ல இடமாக அவருக்கும் தோன்றுகிறது.

பலருக்கும் தோன்றாத அது அவருக்குத் தோன்றியதுதான் சிறப்பு. ஏனெனில் அவர் சிங்கப்பூர் கடற்கரையில் கால்பதித்த 1819-க்கு முன்னரே இருநூறு, முந்நூறு ஆண்டுகளாக தென்சீனக் கடல், இந்தியப் பெருங்கடல் இரண்டுக்குமான சந்தியில் இருக்கும் சிங்கப்பூரின் துறைமுகம் ரியாவ், லிங்கா ஆகிய தீவுகளின் நீரால் பாதுகாக்கப்பட்டிருந்ததால், இயல்பான நல்ல ஒரு கவர்ச்சிகரமான துறைமுகமாக விளங்கியது. சீன மரக்கலங்கள், தொழில் மரக்கலங்கள் அல்லது பாய்மரக்கலங்கள் இவை ஏதாக இருப்பினும், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்றுகள் ஒன்றுக்கொன்று மாறும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வசதியான துறைமுகமாக சிங்கப்பூர் துறைமுகம் விளங்கியது. இதனைத் தனது நுண்பார்வையில் உணர்ந்ததே ராஃபில்ஸின் திறன்.

ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் போட்டி

1800களில் யோகர் சுல்தானின் பிரதிநிதியாக சாபாண்டார் அல்லது அமைச்சராக இருந்த ஒருவர் துறைமுக அதிகாரியாக சிங்கப்பூரில் இருந்தார். சிங்கப்பூரைச் சுற்றி இருந்த கடல்வழியைப் பயன்படுத்த வரும் மரக்கலங்களிடம் வரி வசூல் செய்வதற்காக அந்த அதிகாரி இருந்தார். 1819-ல் அவ்வாறு சுல்தான் நியமித்திருந்த அதிகாரி, தெமோங்காக் அப்துல் ரகுமான். அப்போது சிங்கப்பூரில் இருந்த மனிதர்கள் எண்ணிக்கை சுமார் 400 பேர். அவர்கள் ஓராங் லாவுட் மற்றும் ஓராங் சிலேத்தார் இனத்தவர்கள் (சிங்கப்பூரில் அப்போது இருந்த சீன மலாய் பழங்குடியினர்) ஆவர்.

ராஃபில்ஸ் சிங்கப்பூர் தீவின் கடற்கரையில் இறங்கியபோது நேரில் பார்த்த வா ஆக்கிம் கூறுவது பின்வருமாறு. ‘அந்தப் படகு காலையில் கரையை அடைந்தது. அதில் இரண்டு வெள்ளையர்களும் ஒரு சிப்பாயும் இருந்தனர். ஒரு வெள்ளையர் சிறிது குள்ளமாக இருந்தார். அவர்கள் கரையில் இறங்கியவுடன் நேரே தெமாங்கோங்கின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களுக்கு தெமாங்கோங் உபசரிப்பு அளித்தார். ரம்புத்தான் (சிங்கப்பூர், மலாயாப் பகுதிகளில் விளையும் ஒரு வகைப் பழம். சிவப்பு நிறத்தோலுடன் எருக்கங்காய் வடிவத்தில் முள் முனைகள் வெளிப்புறத்தில், உள்ளிருக்கும் சதைப்பகுதி வெண்மையாக இருக்கும்) உள்ளிட்ட பல வகையான பழங்களை அவர்களுக்குக் கொடுத்தார். அந்தச் சிப்பாய் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி இருந்தார்’. வருணனையில் குள்ளமாக இருப்பதாகச் சொல்லப்படுவபவர்தான் ராஃபில்ஸ்.

பேச்சுவார்த்தை முடிந்து சிங்கப்பூர் தீவின் குத்தகை, யோகர் சுல்தானிடமிருந்து ராஃபில்ஸால் பெறப்படுகிறது. உடனடியாக மலாய் பிரதேசத்தில் ஒரு பிரித்தானிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. வருடக் குத்தகை 5000 வெள்ளிக்கு ஒப்பந்தம். டச்சுக்காரர்களுக்கு உள்ளூர எரிச்சல் எழுந்தாலும் அவர்களால் ஏதும் செய்து விட இயலவில்லை. எனவே வட்டாரத்தின் வணிகத்தை அமைதியான இரு தரப்பினரும் மேற்கொள்ளும் வகையாக 1824-ல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியுடன் மேலும் ஓர் ஒப்பந்தம் போடுகிறார்கள். அதன் படி இருவரும் ஒருவர் வணிகத்தில், வணிக வழிகளில் மற்றவர்கள் தலையிடப்போவதில்லை; சிங்கப்பூர், மலாய் மூவலந்தீவில் (தீபகற்பம்) கிழக்கிந்திய கம்பெனி எந்த வணிக முயற்சிகளையும் எடுக்கலாம்; டச்சுக்காரர்கள் சிங்கப்பூர் நீரிணைக்கும் தெற்குப் பகுதியில் தமது வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்வதில் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஏதும் ஆக்கினைகள் கிடையாது; உன்வேலையை நீ பார், என் வேலையை நான் பார்க்கிறேன்; இருவரும் வட்டாரத்தைச் சுரண்டுவோம்’ என்ற புரிதலுக்கு வருகிறார்கள். [2]

ஆனால் சிங்கப்பூரில் கிழக்கிந்திய கம்பெனி காலூன்றுவது ஐரோப்பியப் பெரு வணிக நிறுவனங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது. சீனத்துடன் வணிகத் தொடர்புக்காக கலங்களை அனுப்பும்போது இடைநிலையில் பயணத்துக்கு அனுகூலமாக ஓர் அருமையான துறைமுகம் அவர்களுக்குக் கிடைக்கப்போகிறது.

கட்டுக்களில்லா வளர்ச்சியின் தொடக்கம்

ராஃபில்ஸ், சிங்கப்பூரைத் திட்டமிட்டது ஒரு வணிக மையமாகத்தான். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை அவர் திட்டமிட்டார், நிருமாணிக்க ஆணைகள் பிறப்பித்தார். ஆனால் அவருக்குப் பின்னர் கிழக்கிந்திய பிரித்தானிய பிரதியிதியாக வந்த ஜான் கிராஃபோர்ட்தான் முதன்முதலில் சிங்கப்பூரைக் கட்டுப்பாடுகளற்ற துறைமுகம் (Free Port) ஆக்கினார். வழக்கமாக பல கட்டுப்பாடுகள் நிறைந்த துறைமுகங்களாகவே அக்காலத்தின் பல துறைமுகங்கள் இருந்தன. புதிய சிந்தனையான இந்தக் கட்டுப்பாடுகளற்ற துறைமுகம் என்ற அமைப்பு, சிங்கப்பூரின் கவர்ச்சியை அதிகப்படுத்தியது. இன்றும் தென்கிழக்காசியத் துறைமுகங்களில் அதிகக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத துறைமுகமாக சிங்கப்பூர் விளங்குவதே அதன் வணிகம் பாய்ச்சல் பெருக்கத்தில் அமைந்திருப்பதன் காரணம்.

சிங்கப்பூர் பிரித்தானியாவின் உடைமை என்ற நிலை அளித்த பாதுகாப்புணர்வு, வட்டாரத்திற்கான புதிய முதலீடுகளையும், புதிய தொழில் முயற்சிகளையும் வெகு வேகமாக ஈர்க்கத் தொடங்கியது. கட்டுப்பாடற்ற துறைமுகமாக இருந்ததாலும், கூடவே எல்லா இனங்கள், சமயங்கள், நிறங்கள் கொண்ட மக்கள், வேறுபட்ட அரசியல் நோக்கம் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் இடமாகவும் இருந்ததால், சிங்கப்பூர் நிறமாற்றம் பெற்றது. கிழக்கிற்கும் மேற்குக்கும் இடையே அப்படி ஒரு சந்திக்குமிடம் வேண்டியதன் தேவை அப்போது இருந்தது. அந்த வாய்ப்பைக் கப்பென்று பிடித்துக் கொண்ட சிங்கப்பூர் வெகுவேகமாக வளர்ந்ததில் வியப்பென்ன?

புதிய துறைமுகங்கள், மேலும் வளர்ச்சி

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே சரக்குகள் வைத்திருந்த முக்கிய வியாபாரிகள், வணிகம் செய்வதற்காக உற்பத்திப் பொருட்கள் அல்லது பணம் வைத்திருக்கும் வாங்குபவர்கள் போன்றோருக்கு இடையான தரகு வியாபாரியாக சிங்கப்பூர் தன்னை உயர்த்திக் கொண்டது. இதுதான் இறக்குமதி, ஏற்றுமதி வணிகத்தின் மூலத் தொடக்கம். இதன் காரணமாக சீன மரக்கலங்கள், பெரும் பாய்மரக் கப்பல்கள் போன்றவை சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் குவிகிந்தன. மேலும் மேலும் இது நடப்பது பின்னால் 1869-ல் கெப்பெல் துறைமுகம் (Keppel Bay) உருவாவதன் அவசியத்தைத் தீர்மானித்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், பெருஞ்சீன நாட்டில் அரசியல் நிலையின்மை நிலவியது. பஞ்சம், பெருகிய நோய்கள், போர்கள் போன்றவை அதிகரித்தன. எனவே சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் தென்கிழக்காசியாவின் வேறு வட்டாரங்களில் வாழ்க்கை வசதிகளைத் தேடினர். பிரித்தானியப் பொறுப்பின் கீழ் அமைதியான, ஆனால் சுறுசுறுப்பான வணிகம் நடைபெறும் இடமான சிங்கப்பூர் அவர்களைப் பெருமளவில் ஈர்த்தது. ஏற்கெனவே சிங்கப்பூரில் இருக்கின்ற குறைவளவு சீனர்கள் அவர்களுக்கு வேண்டும் உதவிகள் செய்ய, சீனக் குடியேறிகள் வருகை சிங்கப்பூரில் வெகுவேகமாக வளர்ந்தது. 1830களுக்குள் சீனர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் மலாய் இனமக்களை மீறத் தொடங்கியது.

காலம் செய்த முடிவு

நவீன சிங்கக்கப்பூரைக் கட்டமைத்த முதல் சிற்பி ஐயத்துக்கிடமில்லாமல் ராஃபில்ஸ்தான். சிங்கப்பூரை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்காக கண்டுபிடித்த பெருமையும் அவருக்குத்தான். ஆனால் ராஃபில்ஸ் சிங்கப்பூருக்கு மூன்று முறைதான் வந்திருக்கிறார் என்று அறிந்தால் வியப்புக்குள்ளாவோம். முதல் முறை சில நாட்கள் மட்டும் 1819-ல் சிங்கப்பூர் தீவை யோகர் சுல்தானிடமிருந்து ஒப்பந்ததிற்கு வாங்குவதற்காக. இரண்டாவது முறை 1822-ல். அதுவும் குறுகிய காலப் பயணம்தான். மூன்றாவதும் கடைசியுமான முறை 1822 அக்டோபர் மாதம். அப்போது வந்தவர், 1823 ஜூன் மாதம் வரை எட்டு மாதங்கள் தங்கியிருந்தார். இந்தக் குறுகிய காலத்தில்தான் சிங்கப்பூர் நகருக்கான நகர அமைப்புகள் அவரால் உருவாக்கம் பெற்றன. கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏற்கெனவே சிங்கப்பூரின் பொறுப்பாளராகத் தங்கியிருந்த ஃபார்குவாரைப் பதவி நீக்கம் செய்தார். தீவின் கட்டமைப்புப் பொறுப்பைத் தானே ஏற்றார். நகரத் திட்டங்களும், கட்டடத் திட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டன. சிங்கப்பூரில் ஒரு வர்த்தக வட்டாரத்தையும் (CBD என்ற Central Business District) , இனவாரியான குடியிருப்புப் பகுதிகளுக்கான திட்டமும் வரையப்பட்டன. (பார்க்க படம்). வணிக சதுக்கம் (Raffles Square) திட்டமிடப்பட்டு, அதற்காக ஒரு சதுப்பு நிலம் மீட்கப்பட்டது. தற்போதை போட் கீ (Boat Quey) ஆற்றோரமாக ஆற்றங்கரையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. உள்நாட்டு மக்களின் மொழியையும் மரபுகளையும் கற்றுக் கொள்ளும், கற்றுக் கொடுக்கும் அமைப்புகள், மலாய் ஆட்சியார்கள், நிர்வாகிகள் ஆகியோரின் வாரிசுகளுக்குக் கல்வி கற்கும் அமைப்புகள் போன்றவை பற்றி சிந்திக்கப்பட்டன. தனக்கான ஒரு மாளிகையை இன்றைய ஃபோர்ட் கானிங் மலையில் கட்டத் திட்டமிட்டார். அன்று அது புகிட் லாரங்கான் (Forbidden Hill) என்று அழைக்கப்பட்டது.

(சிங்கப்பூர் – தேச உருவாக்கம் நோக்கிய பயணம் நூலிலிருந்து நன்றியுடன்)

சிங்கப்பூருக்கான இத்தனை திட்டமும் கிழக்கிந்திய கம்பெனிக்காக ராஃபில்ஸால் தீட்டப்பட்டது. ஆனால் உண்மையில் லண்டனில் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகம் அப்போது சிங்கப்பூரை வாங்குவதில் இருந்து பின்வாங்கி விடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தது என்பதுதான் விநோதம். இன்றைக்குப்போல தகவல் தொடர்புகள் அன்றைக்கு எளிதாக இருந்திருந்தால் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி சிங்கப்பூரைக் கட்டமைப்பதில் இருந்து பின்வாங்கியிருக்கவும் கூடும். ஆனால் முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம், அதனைத் தகவலாக அனுப்புவதில் தாமதம் முதலிய காரணங்களால், இந்தத் ‘தாமதப்படுத்தும்’ ஆணை கிடைப்பதற்குள் 1824-ல் சிங்கப்பூர் தீவு யோகர் சுல்தான்களிடம் இருந்து மொத்தமாக ராஃபில்ஸால் வாங்கப்பட்டுவிட்டது. லண்டன் தலைமையகம் சிங்கப்பூரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருக்கும் அதே நேரம், சிங்கப்பூர் சுறுசுறுப்பாக வளர்ந்தது. 1819-ல் சிங்கப்பூரில் 400 என்ற எண்ணிக்கை அளவில் அதுவும் பழங்குடிகள்தான் வாழ்ந்தார்கள் என்று பார்த்தோம். ஆனால் 1824-ம் ஆண்டில், அதாவது ஐந்தாண்டுகளுக்குள் சிங்கப்பூரில் 10683 பேர் மக்கட்தொகை இருந்ததாக பிரித்தானிய ஆவணங்கள் பதிவு செய்கின்றன. எனவே லண்டன் தலைமையகம் சிங்கப்பூரை அப்படியே விட்டது.

காரணம் எதுவாக இருந்தாலும், ராஃபில்ஸ், அந்த வருவதறியும் கண்கள் கொண்டு கண்டடைந்ததே சிங்கப்பூர் தீவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முடிவாக சிங்கப்பூரின் துடிப்பான நவீனத்தின் தொடக்கமாக ராஃபில்ஸ் அமைந்ததன் காரணம், கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல, காலம் செய்த முடிவும் கூட. ஏனெனில் லண்டன் தலைமையகம் சிங்கப்பூரை வாங்கிய பின், அதனைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதில் தயக்கங்களோ, சிந்தனைகளோ கொண்டிருந்த காலத்திற்குள், ராஃபில்ஸின் சிங்கப்பூர், பற்றிக் கொண்ட விண்கலம்போல பாய்ச்சல் முன்னேற்றத்தில் தள்ளப்பட்டது காலத்தின் முடிவன்றி வேறென்ன?

(தொடரும்)

__________

[1] https://en.wikipedia.org/wiki/Founding_years_of_modern_Singapore

[2] சிங்கப்பூர்-தேச உருவாக்கம் நோக்கிய பயணம். சிங்கை அரசின் தேசிய மரபுடைமைக் கழகம் வெளியீட்ட நூலில் இருந்து

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #3 – துடிப்பாகத் தொடங்கிய ராஃபில்ஸ் appeared first on கிழக்கு டுடே.

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கை வரலாற்றின் காலக்கோடு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. பத்து, பதினோராம் நூற்றாண்டில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராசேந்திர சோழனின் காலம், பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ திரிபுவன நீல உத்தமன் காலம், பதினெட்டாம் நூற்றாண்டின் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸின் காலம், இறுதியாக உச்ச நட்சத்திரமான ஆசியாவின் மாபெரும் சுடர்த்தலைவர்களில் ஒருவரான திரு லீ க்வான் யூ அவர்கள் வடிவமைத்த இருபதாம் நூற்றாண்டின் சிங்கப்பூர் – இவையே சிங்கப்பூர் வரலாற்றின் முக்கியமான காலக்கோட்டின் வரையறைகள்.

நவீன சிங்கப்பூரின் வளர்ச்சி கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ராஃபில்ஸ் மேற்கொண்டதுதான். அதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகளில் அரசர் பரமேசுவர வர்மன், திரிபுவன நீல உத்தமன் போன்றவர்களின் காலங்களும் குறிப்பிடத்தகுந்தவை. ஆனால் அவர்களது சிங்கப்பூர் தொடர்பான பொருண்மையின் விளைவு, தமிழ் மாமன்னன் இராசேந்திர சோழன் ஆட்சி வழியாகவே வந்திருக்க இயலும் என்ற பார்வையையும் நாம் வலுவாகச் சிந்திக்க வேண்டும். இந்தத் தொடர்பு ஒரு மறைகணமாக சிங்கப்பூர் வரலாற்றில் கருதத்தக்கது.

முதலாம் இராசேந்திரன் தொடர்பு

பழந்தமிழ் நாட்டின் சோழர் வரலாறு நமக்குத் தெரியும். சோழர் வரலாறு முற்காலச் சோழர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு என்று இரண்டு காலங்களைக் கொண்டது. முற்காலச் சோழர் வரலாறு பொது யுகம் முன் இரண்டு நூற்றாண்டுகள் தொடங்கி பொதுயுகம் மூன்றாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் கொண்டது. பிற்காலச் சோழர் வரலாறு ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தேய்ந்து நீண்டது. இருந்தாலும் அதன் உச்சம் பதினோராம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியே. சோழர் வரலாற்றின் உச்ச நட்சத்திரம் எந்தவித ஐயமும் இன்றி முதலாம் இராசேந்திர சோழனே. அவனது ஆட்சிக் காலத்தில் உச்சத்தி்ல் தமிழகம் தொடங்கி வங்காள விரிகுடாவின் கரையோரப் பிரதேசங்கள் அனைத்தும் (இன்றைய வியட்நாம் வரை) நெடுகி, பின் கீழிறங்கி, இன்றைய மலேசியாவின் முழுப் பகுதி, இன்றைய இந்தோனேசியாவின் முழுப்பகுதி, இன்றைய தாய்லாந்தின் சில பகுதிகள், சீனத்தின் கரை வரையான பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியது.

முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய ஆட்சிப் பரப்பும், பொறுப்புப் பரப்பும்
முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய ஆட்சிப் பரப்பும், பொறுப்புப் பரப்பும்

அவனது ஆட்சிக் காலத்தில் ஆட்சி முறைக்காக மூன்று தலைநகரங்கள் இருந்ததாகவும், அவை முறையே கங்கை கொண்ட சோழபுரம் \ தஞ்சை, ஸ்ரீவிஜயம் (இன்றைய பலெம்பாங்), கடாரம் (இன்றைய கெடா) என மூன்று நகரங்களின் வழி இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. (1)

மேலும் கடாரம், சாவகம் (இன்றைய சகார்த்தா) போன்ற தீவுகளுடன் பொ.உ. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் கிடைக்கின்றன. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப்பாலை நூலில் உள்ள ஒரு செய்யுளில் ஒவ்வொரு நாட்டின் சிறந்த ஆக்கங்களைப் பற்றிய விவரணை வரும்போது, இன்றைய கெடா என்ற அன்றைய காடகம் என்ற காழக நகரின் ஆக்கங்களைப் பற்றிய சிறப்பு சுட்டப்படுவதையும், அந்த நாடுகளோடு தமிழர்களுக்கு வணிக, தொழில் தொடர்பு இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்,(2)
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

(இந்தப் பட்டினப்பாலை முற்காலச் சோழர்களின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கரிகால்சோழனின் ஆட்சித்திறத்தை விவரித்து எழுதப்பட்ட நூல். இன்னொரு வியக்கத்தக்க ஒற்றுமை, மாமன்னர் இராசேந்திரனைப் போலவே, கரிகால் சோழனுக்கும் கடல்வணிகத்திலும், நாவாய்கள் மூலம் கடல்வழிப் பிரயாணங்கள், வணிகத்தை ஊக்குவிப்பதிலும் பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. அவனது காலத்திய சோழநாட்டின் காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார் மிகச்சிறந்த துறைமுக நகராக இருந்திருக்கிறது!)

முதலாம் இராசேந்திர சோழனின் புகழ்ப்பெயர்கள் திரிபுவனச் சக்கரவர்த்தி, கோப்பரகேசரிவர்மன், கடாரம் கொண்டான் என்பவையும் ஆகும் என்பதை இங்கு குறித்து வைத்துக் கொண்டு தொடர்வோம். மாமன்னன் இராசேந்திர சோழனின் உச்ச நிலை பொ.உ 1030-1050 வாக்கில் இருந்தது. தான் வென்ற பகுதிகளில் பலவற்றைத் தனது பொறுப்பாளர்களின் பொறுப்பில் அந்தந்த நாடுகளின் அரசவைகளோடு இணைந்து ஆட்சி செய்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்து விட்டு, பொது அதிகாரம் தன்னிடம் இருக்குமாறு இந்தத் தென்கிழக்காசியாவின் நாடுகள் அரசமைப்பை மாமன்னன் இராசேந்திரன் அமைத்திருந்தான்.

0

‘சிங்கப்பூர் கல்’ (3)

பொ.உ.1819-ல் இருந்து சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிஃல்ஸின் வழிகாட்டுதலில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் பொறுப்பில் இன்றைய சிங்கப்பூர் கைக்கொள்ளப்பட்டது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். கிழக்கிந்திய கம்பெனி இந்திய, சீனப் பகுதிகளுக்கு இடையேயான ஒரு வணிக மையமாகச் சிங்கப்பூரை மாற்றியமைக்கும் வண்ணம்.

அதனைச் சீரமைத்தது. இதன் ஒரு பகுதியாக 1847-ல் சிங்கப்பூர் ஆற்றின் கரைகளை ஒழுங்குப்படுத்தினார்கள். சிங்கப்பூர் ஆற்றின் கரையில் இருந்த பல கற்பாறைகள் உடைத்து அகற்றப்பட்டன. இவ்வாறு உடைத்து அகற்றப்பட்ட பாறையின் ஒரு பகுதி பின்னர் ஆய்வறிஞர்களின் கைகளில் அகப்பட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் என்ன என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் அறியத் தலைப்பட்டனர்.

அவர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வறிஞர் இயான் சின்கிளேரும் (Ian Sinclair) ஒருவர். அவர் உடைக்கப்பட்ட பாறைக்கல்லின் பொறிப்பு ‘கேசரிக’ என்ற தமிழ்ச்சொல் என்று கண்டறிந்தார். பரகேசரி என்ற சிறப்புப் பெயர் சோழர்களின் சிறப்புப் பெயர். தவிர அந்தப் பாறைக்கல்லின் காலம் ஏறத்தாழப் பதினோராம் நூற்றாண்டு என்றும் கண்டறிந்தார். எனவே அந்தக் கல்வெட்டு சோழ மாமன்னனான இராசேந்திர சோழன் காலத்தில் சிங்கப்பூரில் வெட்டப்பட்டிருக்கலாம் என்ற கண்டுபிடிப்பை முன்வைத்தார். இது பின்னர் சிங்கப்பூர் இந்தியப் பண்பாட்டுக் கழகத்தில் பணி செய்த திருவாட்டி நந்தினி கோபால் அவர்களாலும் இணைவாராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டது.(4) இந்த ‘சிங்கப்பூர் கல்’லின் எச்சங்கள் இன்றைய சிங்கப்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழர்-சோழர் தொடர்பின் மறைகணம்

வரையறுக்கப்பட்ட வரலாற்றின் படி பதினான்காம் நூற்றாண்டின் சிங்கப்பூர் எழுச்சி திரிபுவன நீல உத்தமன் என்ற அரசன் வழி வருகிறது. இந்த இளவரசன் ஸ்ரீவிஜய நகரத்தைச் சேர்ந்தவன். அப்போதைய சிங்கப்பூர் கரையில் இந்த இளவரசன் சிங்க விலங்கைக் கண்டதாகவும், எனவே சிங்கபுரம் என்ற பெயரில் ஒரு குடியிருப்பை ஏற்படுத்தினார் என்றும் வரலாறு சொல்கிறது. இந்தச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் என்பதையும், ஸ்ரீவிஜயம் மாமன்னன் பரகேசரி இராசேந்திரன் ஆளுமைக்குப்பட்டதாக பொ.உ.1050க்குப் பிறகு இருந்தது என்பதையும் கருதல் வேண்டும்.

பொ.உ. 1365 எழுதப்பட்ட சாவக இலக்கியமான நகரகிரேத்தாகமா என்ற நூலில் துமாசிக் என்ற தீவில் இருந்த குடியிருப்பு பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. துமாசிக் என்ற சொல்லின் வேர் சரிவரத் தெளிவாக அறியப்படாவிட்டாலும், தாசிக் என்ற மலாய்ச் சொல்லின் திரிபு என்று கருதப்படுகிறது. தாசிக் (Tasek) என்ற சொல்லுக்குக் கடல் அல்லது ஏரியால் சூழப்பட்ட இடம் என்ற பொருள் உண்டு. இது ஒரு விரிந்த பொருள்கூறலாக இருந்தாலும், வரலாற்றில் இந்தக் குறிப்பும் முக்கியத்துவமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நீல உத்தமன் உருவாக்கிய சிங்கபுரம், மயாபாகித் என்ற சயாமியர்களால் வெளியேற்றப்படும் வரை மன்னர் பரமேசுவர வர்மனின் ஆட்சிக்காலத்தில் இருந்தது. (1344-1414). இவர் துமாசிக் என்ற இடத்திலிருந்து (சிங்கப்பூர்) வந்து மலாக்கா பிரதேசத்தை உருவாக்கினார். பரமேசுவரன் என்ற மன்னரும் தமிழ் வழி வந்த மன்னராகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பரமேசுவரா என்ற சொல்லே தமிழ்ச்சொல்தான். [5]

இந்தக் கண்டுபிடிப்புகள் சிங்கப்பூர் பகுதி உட்பட்ட மலேசிய, இந்தோனேசிய, தாய்லாந்துப் நிலப்பரப்புகளின் பெரும்பகுதி மாமன்னன் இராசேந்திரன் ஆளுகைக்கு உட்பட்டதாகப் பதினோராம் நூற்றாண்டிலிருந்து, பின்னர் அவரது பிரதிநிதிகள் தமிழ் மன்னர்கள் வழி தொடர்ந்திருக்க வேண்டும் என்ற சாத்தியங்களை முன்வைக்கின்றன. மாமன்னன் இராசேந்திரனின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் தென்கிழக்காசியப் பகுதிகளை பொ.உ.1050 வாக்கிலும் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தச் சாத்தியங்களின் வாய்ப்புகள் அதிகம் என்று கொண்டு மேற்செல்வோம்.

0

மாமன்னர் இராசராசன் தென்கிழக்காசியப் பகுதியின் பெரும்பகுதியை வென்றபிறகு, தன்னுடைய வழித்தோன்றல்கள் உறுதியாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வண்ணம் ஆட்சியை நிலைநிறுத்தியிருந்தால், வட்டாரத்தின் வரலாறு வேறாகவும் இருந்திருக்கக் கூடும். மாறாக சுல்தானிய ஆட்சிப் பொறுப்புகளுக்குள் வந்த மலாக்கா, சிங்கப்பூர் பிரதேசங்கள் 1400களின் மத்தியிலிருந்து, பின்னர் நானூறாண்டுகள் தொடர்ந்து சுல்தானிய ஆட்சிப் பொறுப்புக்குட்பட்ட பிரதேசமாகவே தொடர்ந்தது. இதன்படி சிங்கப்பூர் பகுதி யோகூர் சுல்தானியர்கள் பொறுப்பிற்கு வந்து, சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் 1819-ல் சிங்கப்பூர் கடற்கரைக்கு வரும் வரை அவர்கள் பொறுப்பிலேயே தொடர்ந்தது.

ராஃபில்ஸின் தந்தை பிரித்தானிய கப்பல் தலைவர். ராஃபில்ஸ் பிறந்ததே ஒரு கப்பலில்தான்! அந்தக் கடற்காதல்தான் ராஃபில்ஸுக்கு தனியான கடல்நோக்கைத் தந்திருக்க வேண்டும். வருவதறியும் நுண்ணறிவு கொண்டே அவர் சிங்கப்பூரை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கேந்திரக் குடியிருப்பு இடமாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சிங்கப்பூரின் கேந்திர முக்கியத்துவத்தை அறியும் ஒரு ஞானக்கண் ராஃபில்ஸுக்கு இருந்தது. சிங்கப்பூரைக் கிழக்கிந்திய கம்பெனிக்காக வாங்கியதோடு மட்டுமல்லாமல், அதனை ஒரு வலுவான கேந்திர வணிகக் குடியிருப்பாகவும் துறைமுகமாகவும் மாற்றும் பல நடவடிக்கைகளை ராஃபில்ஸ் மேற்கொண்டார். அவற்றைப் பற்றி வரும் பகுதிகளில் சிறிது விரித்துப் பார்ப்போம்.

எனவே தொகுக்கப்பட்ட குறிப்புகளிலிருந்து தெரிவது,

1. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கெடா என்ற கடாரம் (கழாகம்), ஸ்ரீவிஜயம் நிலப்பகுதிகளோடு தமிழ் மன்னர்களுக்குத் தொடர்பும் வணிகமும் இருந்திருக்கிறது.

2. பொ.உ 1030 வாக்கில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னர் இராசேந்திரன் ஆட்சிப் பொறுப்பில் வருகிறது.

3. பின்னர் நீல உத்தமன், பரமேசுவரன் என்ற பல பெயர்களுடைய மன்னர்கள் சிங்கப்பூரை ஆண்டிருந்தாலும், அவர்கள் மாமன்னன் இராசேந்திர சோழனின் அதிகாரப் பிரதிநிதிகள் வழி வந்தவர்களாகவே இருந்திருக்கக் கூடும். இதற்கான உறுதியான வரலாற்றுச் சான்றுகளை எவரும் தேடிக் கண்டடையவில்லை என்றாலும், இது ஒரு பலமான சாத்தியம்.

4. அதற்கடுத்து யோகர் (Johar) சுல்தான்களின் பொறுப்பில் இருந்த சிங்கப்பூரை 1819-ல் ராஃபில்ஸ் வாங்கியபோது பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் பொறுப்புக்கு வந்து, பின்னர் இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்புக்கான காலனியாக மாறியது.

5. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையானபோது சிங்கப்பூர், மலேசியாவுடைய பகுதிப் பிரதேசமாக, சுதந்திர நாடாக விடுதலை பெற்றது.

6. எனினும் மலேசியாவுடன் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் 1965-ம் ஆண்டில் லீ க்வான் யூவின் தலைமையில் தனிநாடாக ஆகஸ்ட் 9, 1965-ல் மலர்ந்தது. அப்போது நிகழ்ந்த உறைகணத்தைத்தான் முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.

சங்க கால சிங்கபுரியின் முக்கியத்துவம் மாமன்னன் இராசேந்திர ஆட்சிக்காலத்தில் இருந்து கிளைத்திருக்கலாம் என்ற சாத்தியத்தையும், நவீன சிங்கப்பூரின் பெருவளர்ச்சி சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ், பெருந்தலைவர் லீ க்வான் யூ இவர்களின் பார்வையின் வழி முகிழ்ந்தது என்பதையும் இப்போது மனதில் கொள்வோம்.

(தொடரும்)

__________

1. தமிழகத்துக்கும் கழாகம், கடாரம் என்ற கெடா நகரோடு தமிழ்நாட்டுக்கிருந்த வணிகத்தொடர்புக்கான வரலாற்று இலக்கியச் சான்று.

2. Ibid

3. சிங்கப்பூர் கல் – ஒரு வரலாறு ;
சிங்கை நூலக வாரியம் அளிக்கும் செய்தி.

4. சோழ வம்சத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு: இயான் சின்கிளேய்ர்

5. மன்னர் பரமேசுவரா, நீல உத்தமன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு appeared first on கிழக்கு டுடே.

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு

‘All my life’ என்று அந்த உதடுகள் உச்சரித்த கணத்தில், கம்பீரத்திலும் ஆணித்தரமாகவும் எப்போதும் ஒலிக்கின்ற அந்தக் குரல் தடுமாறி நின்றது; கலங்கியது; கரகரப்பானது. சில கணங்கள்; சில கணங்கள்கூட இல்லை, பல கணங்கள். அவர் கண்கள் கலங்கியதையும், குரல் தழுதழுத்ததையும் சுற்றியிருந்தவர்கள் பெரு வியப்புடன் பார்த்தார்கள்.

ஆகஸ்ட் 9, 1965.

தனது தேசத்தின் மக்களுக்காகத் தலைவர் என்ற முறையில் அவர் ஆற்றிய முதல் உரை அது. ஆனால் அது, தேச மக்களுக்குத் தான் விரும்பாத ஒன்று நடந்துவிட்டதையும், அந்தத் தேசத்தையும் மக்களையும் எவ்வாறு இனிமேல் வழிநடத்துவது என்ற ஆழ்ந்த சிந்தனையையும், அந்தக் கணத்தின் வலியையும், ஏமாற்றப்பட்ட அல்லது எதிர்பாராதது நடந்துவிட்ட சோகத்தையும், தன் தோளில் சுமந்திருக்கின்ற பொறுப்பின் பாரம், எதிர்காலம் பற்றிய பதற்றத்தையும் வெளிப்படுத்தியது. இவை அனைத்தும் இணைந்த கணம், அந்தக் கணம்தான் அவரை வாழ்க்கையில் முதன்முதலில் உடைய வைத்திருக்க வேண்டும்.

சுற்றிலும் ஒலியொளிப்பதிவுக் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கும் ‘விர்ர்’ என்ற ஒலியைத் தவிர சில கணங்களுக்கு வேறு ஒலிகளேயில்லாத அமைதி. கலங்கிய கண்களை ஒரு துடைப்புத் துணியை வைத்துத் துடைத்துக்கொண்டு மேலும் பேச முற்பட்டார். இன்னும் வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. சொற்களில் தடுமாற்றம். In all my adult life என்று மூன்று நான்கு முறை அந்தச் சொற்களைக் கூறினார்; தனது வலிமையான நம்பிக்கை பொய்த்துப் போனதன் வலி அது. நடந்ததை நம்பவே இயலாததன் மறுதலிப்பில் தலை இரு மருங்கிலும் அசைந்தது.

இரண்டு மூன்று பத்திகளில் இதனைப் பற்றி நாம் இங்கே விவரித்தாலும், அதிகப்படியாகச் சுமார் பதினைந்து நொடிகள்தான் இந்த அல்லாட்டத்தி்ன் காலம்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பவும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். தன் நாடு ஒரு மாநிலமாக அண்டை நாட்டுடன் இணைந்திருக்கப் போகிறது; அருகருகே இருந்து நாம் வளரப் போகிறோம்; சிறக்கப் போகிறோம் என்ற நம்பிக்கை சிதைந்ததன் வலி அது. எல்லாம் சில கணங்கள்தான். குரலில் எப்போதும் துலங்கும் உறுதியும் தீர்மானமும் கம்பீரமாகத் திரும்பின. சொல்லப் போனால் அவர் ஊடகங்களின் முன்னிலையில் உடைந்த முதலும் கடைசியுமான கணம் அது. பின்னர் 70 ஆண்டுகளுக்குத் தொடரப் போகும் அந்த நாட்டின் வளர்ச்சியின் பேருரு, அந்தக் குரலில் திரும்பவும் மீண்டு விட்ட உறுதிக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்த உறுதி 2013-ம் ஆண்டு மார்ச் 14-ம் நாள் வரை அந்த மனிதனுக்குள் பிரம்மாண்டமாய் வளர்ந்து நின்ற உறுதியின் பேருரு. அந்தப் பேருரு சாதித்த செயல்களை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்தால் எந்த ஒரு மனிதருக்கும் மூச்சடைத்துப் போகும்.

பன்றிகள் மேயும், மீன்பிடிக்கும் தொழில் மட்டுமே நடந்து கொண்டிருந்த, 250 சதுர மைல்களுக்குள் அடங்கியிருந்த ஒரு சின்னஞ்சிறு நிலப்பரப்பான சிங்கப்பூர் என்ற நகர நாட்டை, ஐம்பதே ஆண்டுகளுக்குள் தென்கிழக்காசியாவின் உயர் வளர்ச்சி நிறைந்த நாடாக மாற்றிக் காட்டிய ஒரு சாதனை நாயகனுக்குள் இருந்த பேருரு அது.

அந்த மனிதரின் பெயர் லீ க்வான் யூ. அவரது முறைகள் முன்னெப்போதும் கேள்விப்பட்டிருக்காதவை. இந்தச் சாதனையைத் தனி ஒரு மனிதராக, தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகர்கள்போலச் செய்து காட்டி விட்டார் என்று சொல்லவருவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. தினப்படித் திட்டமாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் தனது திட்டங்களைச் சீராய்ந்து, கவனித்து, செயல்படுத்தி, மாற்றங்கள் தேவைப்பட்ட இடத்தில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, தோற்றுவிட்ட இடங்களை மனதில் இருத்திக் கொண்டு, தோல்விகளை ஏற்றுக் கொண்டு மேற்சென்று, ஆனால் எப்போதும் தனது குறிக்கோளில் எந்த இடத்திலும் வழுவாது மேற்கண்ட ஒரு தவவாழ்வுபோல ஒரு நாட்டின் தலைமைத்துவத்தைத் தமது கடமையாகச் செய்தார். இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இந்தத் தொடர் கட்டுரை நெடுகிலும் நாம் உணர்ந்து அறிந்துகொள்ளப் போகிறோம்.

நவீன சிங்கப்பூரின் கட்டுமானத்தில் லீ க்வான் யூவின் பங்கு பெரும்பங்கு. எனவே இந்தக் கதை நவீன சிங்கப்பூரின் கதையாக இருக்கின்ற அதே நேரத்தில், புள்ளிகளை இணைத்தால் லீ க்வான் யூவின் கதையாகவும் தோன்றக் கூடும். ஏனெனில் இரண்டையும் முற்றும் முதலாகப் பிரித்துப் பார்த்துவிட இயலாது என்பதுதான் இரண்டுக்குள்ளும் இருக்கும் அந்தச் சிறப்புத் தொடர்பு. அந்தத் தொடர்பு ஏற்பட்டதும் காலம் தீர்மானித்த செயல்தான். இல்லாவிடில் லண்டன் மாநகருக்குச் சென்று பாரிஸ்டர் என்ற வழக்குரைஞர் படிப்பைத் தங்கப்பதக்கத்துடன் முடித்த ஓர் இளைஞனுக்குள், நாடு, சமூகம் தொடர்பான மாபெரும் கனவுகள் முளைவிட்டிருக்காது.

நமது குடும்பம், நமது வசதி, நமது சம்பாத்தியம் என்று அந்த இளைஞன் மாபெரும் பொது மக்கள் கூட்டத்தின் ஒரு சாதாரணப் பணக்காரத் துளியாகக் கரைந்து மறைந்திருக்கக் கூடும். ஆனால் காலம் அந்த மனிதனுக்கு வேறு நோக்கங்களை வைத்திருந்தது. தென்கிழக்காசியாவின் ஒரு மாபெரும் மனிதனாக, தலைவனாக அந்த இளைஞனை நிலைநிறுத்திவிடும் நியதி காலத்துக்கு இருந்தது. அதற்கேற்ற சிந்தனைத் துளிகள் அந்த இளைஞனுக்குள் விளைந்தன. அவை வளர்ந்து உறுதி பெறத் தொடங்குவதற்குள்ளாகவே பல சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆகஸ்ட் 9, 1965-ல்

நேர்ந்த பிரிவினை அறிவிப்பு, அந்தச் சிந்தனைத் துளிகளுக்கு நேர்ந்த மாபெரும் சவாலாக, அப்போது தோன்றியது. ஆனால் அந்தச் சிந்தனையின் உறுதி பேருருவாக வளர்ந்த அந்தக் கணத்தில், அந்த இளைஞனுக்கு இந்தப் பிரிவினையைப் போன்ற பல மடங்கு பிரமாண்டமான பல சவால்களைப் பிற்காலத்தில் பார்க்கப் போகிறோம் என்பதோ, அவற்றைக் காற்றை ஊதித் தள்ளுவதுபோலத் தனது உறுதியின் பேருரு ஊதித் தள்ளப் போகிறது என்பதோ உறுதியாகத் தெரிந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக இருந்தது.

அது, அந்த உறுதியின் பேருரு பின்னெப்போதும், எதிலும் பின்வாங்கப் போவதில்லை என்பது!

நவீன சிங்கப்பூரின் வரலாற்றின் உறை கணங்களில் ஒன்று, கலங்கி நின்ற அந்தக் கணத்திலிருந்து லீ க்வான் யூ மீண்டெழுந்த அந்த உறுதிப் பேருரு வெளிப்பட்ட கணம்!

0

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 19-ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைப் பிரிட்டனும் நெதர்லாந்தும் (டச்சு) காலனியாகப் பிடித்து வைத்திருந்தன என்பது வரலாறு. தொடக்கத்தில் தமது வியாபாரத்துக்காகத்தான் இந்த நாடுகளின் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆசியப் பகுதிகளுக்குள் நுழைந்தன. அவ்வாறு நுழைந்தவர்களுக்கு ஒரு மாபெரும் நிலப்பகுதியாக மாட்டியது இன்றைய இந்தியா, அன்றைக்கு இருந்த பல நாடுகளின் (56 தேசங்களின்) கூட்டமைப்பு. வசமாக அவர்கள் இன்றைய கொல்கத்தாவில் 18-ம் நூற்றாண்டில் காலூன்றினார்கள்.

கிழக்கிந்தியக் கம்பெனி, தனது இந்திய, சீன, தென் கிழக்காசியப் பகுதிகளின் வியாபார நோக்கங்களுக்காக பினாங்குப் பிரதேசத்தை இன்றைய மலேசியாவின் கெடா பகுதியின் சுல்தானாக இருந்த கெடா சுல்தானிடமிருந்து 1786-ல் வாங்கியது. கூடவே சுமத்ரா பகுதிகளையும் பிடித்தது. போலவே டச்சுக்காரர்களும் தென்கிழக்காசிய, இந்தியப் பிரதேசங்களில் தத்தமக்கு அகப்பட்ட பிரதேசங்களை விலை கொடுத்தோ, ஆக்கிரமித்தோ, நயந்தோ கைப்பற்றித் தனது வியாபாரக் கேந்திரங்களை ஆங்காங்கே முக்கியமான இடங்களில் நிறுவினர். அவ்வாறுதான் அவர்கள் மலாக்கா பிரதேசத்தை வாங்கியதும். பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனிக்கு மலாக்கவின் மேலும் ஒரு கண் இருந்தது. இந்தோனேசியா, சுமத்ரா பகுதியைவிட மலேசிய மலாக்கா பகுதியின் கேந்திர முக்கியத்துவம் கண்ணிலடித்தது. ஆனால் முதலில் அப்பகுதியில் காலூன்ற வேண்டும், என்ன செய்யலாம்?

கொல்கத்தாவில் இருந்த தலைமையகத்திலிருந்து ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்து வட்டாரத்தைச் சுற்றி அலசிப் பார்த்து வரும்படி அனுப்பியது கிழக்கிந்திய கம்பெனி. கம்பெனி தேர்ந்தெடுத்த நபர் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் (Sir Stamford Raffles). 1781-ல் சமைக்கா தீவுகளின் துறைமுகத்தில் பிரித்தானியக் கப்பற்படை வீரருக்கு மகனாகப் பிறந்த ராஃபில்ஸ் இந்தச் சம்பவங்கள் நடந்த 1800களின் முற்பகுதியில் கம்பெனியின் ஆளுநர் பதவியில் இருந்தார். 1819-ம் ஆண்டு பிப்ரவரி வாக்கில் மலாக்கா நீரிணைப் பகுதியில் சுற்றி வந்த ராஃபில்ஸ், சிங்கப்பூர் பகுதியைக் கண்டு பிடித்து அந்தப் பிரதேசம் எவர் பொறுப்பில் இருக்கிறது என்று விசாரித்தார். அன்றைய யோகர் (Johar) சுல்தானாகிய உசைன் சா’வின் ஆளுமைக்குள் இருந்த சிங்கப்பூர் பகுதியை வருடத்திற்கு ஐயாயிரம் வெள்ளி குத்தகைப் பணத்துக்கு கம்பெனிக்காக வாங்கினார். அந்த ஆண்டு 1819.

மலாக்கா நீரிணைப் பகுதியில் சிறு பகுதியான சிங்கப்பூரில் காலூன்றியாகிவிட்டது; பினாங்கு இன்னொரு மூலையில் இருக்கிறது; எனவே மலாக்காவையும் கைக்கொள்ள இதுவே நேரம். டச்சுக்காரர்களிடம் பேசிப் பார்த்தார்கள் பிரித்தானியர். ‘மலாக்காதானே, எங்களுக்கு வேறொரு பகுதியை அப்பிரதேசத்தில் தந்தால் அது பற்றி யோசிக்கிறோம்’ என்றது அம்மாஞ்சி டச்சு. இந்தா பிடி என்று, கம்பெனி 1824-ல் சூட்டோடு சூடாக இரண்டு ஒப்பத்தங்களைச் செய்தது. ஒன்று இந்தோனேசிய சுமத்ரா பகுதிகளை டச்சுக்காரர்களிடம் தள்ளிவிட்டு, மலாக்காவைப் பண்டமாற்றில் வாங்கியது. இன்னொன்று, குத்தகை ஒப்பந்தத்தில் இருந்த சிங்கப்பூரை முற்றுமுழுதாக கைப்பற்றியது. யோகர் சுல்தானிடம் மேலும் பணத்தை அளித்து 1824-ல் முழுதாகச் சிங்கப்பூரை வாங்கினார்கள்.

இப்போது வட்டம் முழுமையடைந்து விட்டது. வட்டாரத்தின் ஒரு முனையான பினாங்கு, கிட்டத்தட்ட மத்தியப் பகுதியான மலாக்கா, இன்னொரு முனையான சிங்கப்பூர்! மலாக்கா நீரிணையில் பிரித்தானியாவின் விரிந்த குடியேற்றப் பகுதி இவ்வாறு திறமாக உருவானது.

இதற்கெல்லாம் தொடக்கப் புள்ளியை மறந்துவிடக்கூடாது. சிங்கப்பூர்!

ராஃபில்ஸ் எவ்வாறு சிங்கப்பூரின் கேந்திர முக்கியத்துவத்தை ஏறத்தாழ இருநூறாண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்தார் என்பது அத்தனை வியப்பானது. பிரித்தானியக் கேந்திரக் குடியேற்றமாக மாறிய சிங்கப்பூர் அதன் பிறகு ஏற்றம், ஏற்றத்தின் மீதான ஏற்றம் என்றுதான் வரலாற்றில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனது 45 வயதில் எதிர்பாராமல் இறந்துபோன ராஃபில்ஸின் சாதனையாக, வரலாற்றின் சருகுகளிலிருந்து சிங்கப்பூரை நவீனத்துக்குள் தள்ளிவிட்ட இந்தக் கொள்முதலை எளிதில் கருதலாம்.

அந்த 1819-ம் ஆண்டின் பிப்ரவரி 6-ம் நாள்தான் சிங்கப்பூரின் இன்னொரு வரலாற்றுக் கணம்![2]

0

இந்த இரண்டு உறைந்த கணங்களிலிருந்து கிளைத்துப் புறப்படுகிறது சிங்கப்பூர். அது வரலாற்றின் நிழலிருந்து நவீனத்துக்குள் நுழைந்ததும், பின்னர் நவீன சிங்கப்பூரின் வரலாறாகப் பரிமளித்ததும் அவ்வாறுதான். அந்த மலர்வைச் சிறிது சிறிதாக நாமும் அறிவோம்.

(தொடரும்)

__________

(1) இந்த யூட்யூப் இணைப்பில் வாசகர்கள் அந்த உறைந்த கணத்தை மீளுருவாக்கிப் பார்க்கலாம். https://youtu.be/UET6V4YnAwc?feature=shared&t=55

(2) சிங்கை நூலக வாரியத்தின் Straits Settlements பற்றிய ஆதாரக் குறிப்புகளில் இருந்து. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=b0d91ecc-3de3-4e79-a132-b2d0d886bb98

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #1 – உறைந்த கணங்கள் இரண்டு appeared first on கிழக்கு டுடே.

❌