Normal view

Received before yesterday

போண்டு

வெள்ளிக்கிழமை காலை இப்படிக் கலவரமாக விடியும் என்று செல்வி நினைத்திருக்கவில்லை. ஆறு மணிக்கெல்லாம் சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது. எட்டு மணிவாக்கில் ஒருவர் நாய்க்குட்டி கொண்டு வருவார் என்றும்  ‘வாங்கி வைத்துக்கொள்’ என்றும் கட்டளையாகச் சொன்னாள். ‘அதெல்லாம் என்னால முடியாது’ என்று  வேகமாகச் சொல்லியும் சுடர் கேட்கவில்லை.

‘சொல்லி வெச்ச குட்டி இப்பத்தான் கெடச்சிருக்குதும்மா. வேண்டாம்னா அப்பறம் இதுமாதிரி எப்பக் கெடைக்குமோ தெரியாது. பெரிய கஷ்டமில்லம்மா. என்ன செய்யணும்னு நாஞ் சொல்றன்’ என்றாள் சுடர்.

‘உங்கொப்பனும் இல்லாத நேரத்துல இந்தக் கருமாந்தரத்த எதுக்குக் கொண்டாரச் சொன்ன?’

‘கருமாந்தரம் அதுஇதுன்னு பேசாதம்மா. மொதல்லயே சொல்லி வெச்சிருந்ததுதான். குட்டி வந்திருக்குதுன்னு ராத்திரித்தான் சொன்னாங்க. நீ தூங்கியிருப்பன்னுதான் எழுப்பல. இது அடிக்கடி கெடைக்காது, ரேர் குட்டின்னு அப்பவே பணங்கூட அனுப்பீட்டம்மா. கெடைக்கறப்ப வாங்கிக்கோணும். நீ ஒன்னும் பண்ண வேண்டாம். வாங்கிக் கூண்டுக்குள்ள உட்டுட்டுப் பால் மட்டும் ஊத்தி ஊத்தி வெய்யி போதும்.’

‘உங்கப்பனுக்குச் சொன்னயா?’

‘சொல்லீட்டம்மா. அவரு உனக்குத்தான் பயப்படறாரு. நீயே உங்கம்மாகிட்டச் சொல்லுங்கறாரு. அவரு வர்ற வரைக்கும் பாத்துக்கிட்டாப் போதும்.’

‘மகாராசா ஒருமாசம் வனவாசம் போயிருக்கறாரு. அப்பறமில்ல வருவாரு. ரண்டு பேரும் சேந்துக்கிட்டு என்னய ஏன்டி இமுசு பண்றீங்க. ஊட்டுக்குள்ளயெல்லாம் உட மாட்டம் பாத்துக்க.’

அம்மா இறங்கி வருவது தெரிந்ததும் சுடர் உற்சாகமாகி ‘அதெல்லாம் வேண்டாம். வெளியிலயே இருக்கட்டும். செரி, எனக்குக் கெளம்போணும்’ என்று சொல்லித் துண்டித்துவிட்டாள்.

ஒருமாதப் பணியிடைப் பயிற்சிக்காக முருகேசு கிளம்பிப் போய் இரண்டு நாள்தான் ஆகிறது. தேர்வு முடிந்து சுடர் வீட்டுக்கு வரக் கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகும். ஒற்றை குழந்தை என்று சிறுவயது முதலே செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவு இது. அங்கிருந்து கொண்டு கட்டளை போடுகிறாள். கோபமும் குழப்பமும் சேரக் குமுறலுடன் எதுவும் செய்ய இயலாமல் அப்படியே உட்காந்தார். இதில் அப்பனும் பிள்ளையும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். எப்போதும் அப்படித்தான். தனிமையில் நிற்பது தான்தான் என்று தோன்றவும் அவரை அறியாமல் அழுகை வந்தது. பிடிக்காதவற்றை எல்லாம் பிள்ளைக்காகப் பொறுக்கவும் சகிக்கவும் வேண்டியிருக்கிறது. காலையில் எழுந்ததும் அழ வேண்டியிருக்கிறதே என்று நினைக்க அழுகை கூடியது. 

‘நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும்’ என்பது செல்வியின் ஆழ்ந்த நம்பிக்கை. சிறுவயதிலிருந்தே நாயைக் கண்டால் பிடிக்காது. குழந்தையாக இருந்தபோது பிரியத்தோடு தொத்துக்கால் போட்டு ஏறிய நாயைக் கண்டு ஏற்பட்ட பயம் போகவேயில்லை என்று அவர் அம்மா சொல்வதுண்டு. அதுதானோ என்னவோ நாயைப் பார்த்தால் தன்னையறியாமல் உடல் சிலிர்த்துக் கொள்ளும். எந்த நேரமும் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக்கொண்டு திரியும் அருவருப்பான ஜீவன் இது என்று மனதில் தோன்றும்.

நாய்க்கு மூக்கு எதற்கு இருக்கிறது? பூப்போல மூச்சுவிட வேண்டாமா? ங்கெஸ் ங்கெஸ் என்று உடலே அசையும்படி வாயால் மூச்சு வாங்கிக்கொண்டு நிற்கிறது. இதைப் போய் எப்படித்தான் கட்டித் தழுவுகிறார்களோ என்றிருக்கும். முருகேசுவுக்கு அப்படியில்லை. மனைவி இல்லாமல் வாழ்ந்துவிடலாம், நாய் இல்லாமல் வாழ முடியாது என்று நினைப்பவர். கிராமத்தில் ஆடுகளும் பட்டி நாய்களும் எனத் திரிந்தவர். அரசு வேலை கிடைத்து நகரத்துக்குக் குடிவந்த பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. சுடர் பிறந்து ஐந்து வயதான போது அவளைத் தூண்டிவிட்டு நாய் வளர்ப்புக்குச் செல்வியைச் சம்மதிக்கச் செய்துவிட்டார். அப்போதும் ‘வீட்டுக்குள் விடமாட்டேன்’ என்று நிபந்தனை போட்டுத்தான் செல்வி ஒத்துக்கொண்டார்.

மூவாயிரம் சதுர அடி மனையில் பாதிகூட வீடு இல்லை. சுற்றிலும் இடமிருந்தது. தோட்டம் போட்டிருந்தார்கள். முன்பகுதியில் நாய்க்கூண்டு ஒன்றைக் கட்டி அதிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அந்த நாய்க்குப் பீம் என்று சுடர் பெயரிட்டாள். பதின்மூன்று வருசம் உடனிருந்து ஆறுமாதத்திற்கு முன்தான் உயிர்விட்டது. அதன் இறப்புக்குச் சுடர் வர மறுத்துவிட்டாள். அது ஓடித் திரியும் காட்சியே மனதில் இருக்கட்டும், ஓய்ந்து கிடக்கும் உடலை என்னால் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டாள். அதன் தாக்கத்திலிருந்து மகளைத் தேற்ற ‘இன்னொரு நாய்க்குட்டி எடுத்துக்கலாம்மா’ என்று முருகேசு உறுதி கொடுத்திருந்தார். இருவரும் இந்த இனம், அந்த இனம் என்று பேசி இப்போது புதிதாக ஒன்று வரப் போகிறது.

பதின்மூன்று வருசம் வீட்டில் வாழ்ந்தாலும் பீமோடு செல்விக்கு எந்த நெருக்கமும் இல்லை. உணவு கொடுப்பது, கூண்டைச் சுத்தம் செய்வது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, காலையில் நடைக்குக் கூட்டிப் போவது என எல்லா வேலையையும் முருகேசுவே செய்தார். சுடருக்கு அதுதான் விளையாட்டுத் தோழன். அதற்கான வேலைகளிலும் சிறுசிறு உதவி செய்வாள். பத்து வயதுக்குப் பிறகு அப்பா வெளியில் போயிருக்கும் போது அவளே முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் அளவுக்குப் பழகிவிட்டாள். குழந்தையிலிருந்து பழகியதால் சுடர் மேல் பீமுக்கு அப்படிப் பாசம். அவள் என்ன செய்தாலும் பீம் பொறுத்துக் கொள்வான். தூரத்திலிருந்து செல்வி திட்டுவதோடு சரி.

‘ஏம்மா…அவனத் திட்டற? பிரியமாப் பேசும்மா’ என்று சுடர் சொல்வாள்.

‘நாய்கிட்டக் கொஞ்சறதெல்லாம் எனக்கு வராது’ என்பதுதான் செல்வியின் பதில்.

நாயைப் பற்றிப் புகார் சொல்லும்போதோ திட்டும்போதோ செல்வியின் வாயை அடைக்க ஒருமந்திரம் வைத்திருந்தார் முருகேசு.

‘சுடரோடு வெளையாட இன்னொரு கொழந்த பெத்துக்கலாம்னு சொன்னன். நீ எங்க கேட்ட? ஒன்னே போதும். அத ஒழுங்கா வளத்து ஆளாக்குவம்ன. இப்ப ஓரியா அவ எப்படி வெளையாடுவா? இப்பனாலும் இன்னொன்னுக்குச் செரின்னு சொல்லு. நாய ஆருக்காச்சும் குடுத்தர்றன்’ என்று சிரித்தபடி சொல்வார்.

அது விளையாட்டுக்கு இல்லை என்று செல்விக்குத் தெரியும். ஒருகுழந்தையோடு நிறுத்தியதில் இருவீட்டாருக்கும் வருத்தம்தான். முருகேசு தன் வருத்தத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் ‘ஓரியாவா கொழந்தய வளப்பாங்கன்னு அம்மா கேக்குது செல்வி’, ‘என்னருந்தாலும் வாரிசுன்னு ஒருபையன் வேண்டாமான்னு ஊர்ல கேக்கறாங்க செல்வி’ என்று யார் மீதாவது போட்டுச் சொல்வார். யார் எப்படிச் சொன்னபோதும் ஒருகுழந்தை போதும் என்பதிலிருந்து செல்வி பின்வாங்கவில்லை. இரண்டு குழந்தைகள் இருந்திருந்தால் இப்படி ஒருமனை வாங்கி வீடு கட்டியிருக்க முடியாது. சுடரை நினைத்த பள்ளியில் படிக்க வைத்திருக்க முடியாது. முருகேசு அரசு ஊழியர் என்றாலும் ஒருகுழந்தையை வளர்க்கத்தான் ஊதியம் போதுமானது என்னும் தெளிவு திருமணமான புதிதிலேயே செல்விக்கு வந்துவிட்டது அவளுக்கே ஆச்சரியம்தான்.

பீம் இருந்த போதே படிப்புக்கெனச் சுடர் வெளியூர் போய்விட்டாள். பீம் இறந்ததும் இனி நாய்த்தொல்லை இல்லை என்று செல்வி நம்பியிருந்தாள். அப்பனும் மகளும் சேர்ந்து இப்படித் திட்டம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது முருகேசு என்ன சமாதானம் சொல்வார்? மகளுடன் விளயாட இன்னொரு குழந்தை கேட்பாரா? இருவரும் இல்லாத சமயத்தில் வரப்போகும் நாய்க்குட்டியை நினைத்து வேலையே ஓடவில்லை. அதைக் கையில் எப்படி வாங்குவது, என்ன வைப்பது, கத்தினால் என்ன செய்வது என்பதை எல்லாம் நினைக்க நினைக்கப் பதற்றமாக இருந்தது.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியே போய்ச் சுற்றுச்சுவர் கதவைத் திறந்தார். இடப்பக்க நாய்க்கூண்டுக்குப் பார்வை திரும்பியது. பீமை அருகில் விடவில்லை என்றாலும் வீட்டுக்கு வெளியே எப்போதும் ஓராள் நடமாடும் உணர்வு இருக்கும். அவன் போன பிறகு தான் மட்டும் தனியாக இருக்கையில் ஒரு வெறுமை சூழும். அது பீம் இல்லாததால்தானோ என்று தோன்றியது. தனியாக இருக்கும்போது அந்தக் கதவைத் திறக்கவே தோன்றாது. திறக்க வேண்டிய தேவையும் இல்லை. கதவைத் திறக்காமலே சிலநாள் கழிந்துவிடும். ஓராளுக்கு என்ன பெரிதாகச் செய்ய?

கதவைத் திறந்து வாசலைப் பார்த்தார். இரண்டு நாட்களாகக் கூட்டாமல் இலைகளும் பூக்களுமாய் நிறைந்திருந்தது. தெருவோரக் கொன்றையில் இருந்து பூக்கள் பறந்து வந்து வாசலை நிறைத்திருந்தன. மஞ்சளைக் கரைத்துப் பூக்களின் வடிவில் தெளித்து விட்டது போலிருந்தது. அப்படியே இருக்கட்டும் என்று தோன்றியது. நாய்க்குட்டி கொண்டு வருகிறவன் வாசலைப் பார்த்துவிட்டு ஆளில்லை என்று திரும்பிப் போய்விட்டால்? விளக்கமாற்றை எடுத்துக் கூட்ட ஆரம்பித்தார். லேசாக நீர் தெளித்துச் சிறுகோலமும் போட்ட பிறகு எதையோ சாதித்த மாதிரி இருந்தது.

இஞ்சி தட்டிப் போட்டு மணம் கமழத் தேநீர் போட்டுத் தனக்குப் பிடித்தமான கோப்பையில் எடுத்துக்கொண்டு வந்து முற்றத்து நாற்காலியில் உட்கார்ந்தார். அதில் எப்போதும் முருகேசுதான் உட்கார்வார். மிகச்சிறு முற்றம். ஒருநாற்காலிதான் போட முடியும். யாராவது வந்தால் அவர் எழுந்து உள்ளே வந்துவிடுவார். அந்த நாற்காலியில் அமர்ந்ததும் ஏதோ பலம் வந்த மாதிரி தோன்றியது.  குட்டிநாய் தானே, என்ன செய்துவிடும், பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் சொன்னது. ஒவ்வொரு மிடறு தேநீர் உறிஞ்சும் போதும் பார்வை வாசலுக்குப் போய் மீண்டது. பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் சத்தம் கேட்டது. முருங்கையில் வந்தமர்ந்த கிளிகள் வறண்ட காய்களைக் கொத்திக்கொண்டு கத்தின. குப்பை வண்டியின் மணியோசை தொலைவில் கேட்டது.

அப்படியே சற்று நேரம் இருந்தவர் ஆழ்ந்த பெருமூச்சோடு எழுந்து உள்ளே சென்றார். உணவுக்கு என்ன இருக்கிறதென்று கண்ணை மூடி யோசித்தார். கொஞ்சம் பழங்கள் இருந்தன. தோசை மாவு இருந்தது. பழைய குழம்புகளும் சட்னிகளும் இருப்பதும் நினைவு வந்தது. ரொம்பவும் பழையதாகிப் போனவற்றை வெளியே கொட்டிவிட வேண்டும். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றார். குட்டிநாய் வர போகிறது, நாய்க்கூண்டு எப்படி இருக்கிறதோ என்று நினைவோடியது. பீம் இறந்த பிறகு அதை முருகேசு கழுவி விட்டது ஞாபகம் வந்தது. அதற்கப்புறம் எப்போதாவது கூட்டியிருப்பாரா என்று தெரியவில்லை. காலை நடைக்குக் கிளம்பும்போது அப்படியே நின்று கூண்டை ஏக்கமாகப் பார்ப்பார். தலையைக் குனிந்தபடி போய்விடுவார். மகளுக்குப் பிறகு அந்த நாயைத்தான் மகனாக நினைத்தாரோ என்னவோ.

விளக்கமாற்றை எடுத்துக்கொண்டு கூண்டுக்குப் போனார் செல்வி. சுற்றுச்சுவரின் இருபக்க மூலைகளையும் இணைத்து அட்டை வேய்ந்த கூரை. ஒருபுறம் அதே அட்டையால் அடைப்பு. அதில் ஒரு சதுரம் வெட்டி வெளிச்சத்திற்கு ஜன்னல். முன்பக்கம் முழுக்கத் திறப்புதான். உள்ளே வேறெதுவும் இல்லை. பீம் படுக்கவென்று கால்மிதி போன்ற எதையோ வாங்கி விரித்திருந்தார்கள். அதை வெளியே கொண்டு வந்து தட்டிப் போடும்போது பார்த்ததுதான். காரை போட்டிருந்த தரையில் சங்கிலி கட்டுவதற்காகப் பதித்திருந்த இருவளையங்கள் இருந்தன. சங்கிலியைக் காணோம். தோட்டத்தில் தான் பீமைப் புதைப்பதாக முருகேசு சொன்னார். செல்விக்கு அது பயமாக இருந்தது. அதைச் சொன்னதும் ‘சரி’ என்று சொல்லி ஒருஆளைக் கூட்டி வந்து வண்டி முன்பக்கத்தில் வைத்து எடுத்துச் சென்றார். புதைத்த இடத்தில் பீமுக்குரிய பொருள்களையும் போட்டுப் புதைத்திருப்பார்.

கூண்டுக்குள் தொங்கிய ஒட்டடைகளை அடித்துச் சுத்தமாக்கினார். தரையைக் கழுவிவிட்டார். முன்பக்கம் திறந்திருக்கிறதே நாய்க்குட்டி எப்படி உள்ளே நிற்கும் என்று சந்தேகம் வந்தது. இந்தப் பக்கத்திலும் பாதியளவு அடைத்திருக்கலாம். குட்டிநாயைக் கட்டிப் போட முடியாது. எவ்வளவு பெரிதாக இருக்குமோ தெரியவில்லை. பால்தான் கொடுக்கச் சொல்லியிருக்கிறாள். அப்படியானால் பூங்குட்டிதான். தோட்டத்தில் பழைய பலகைகள் கிடப்பது நினைவு வந்தது. வீடு கட்டும்போது சில இடங்களில் அட்டாலிக்குப் பலகைதான் வைத்திருந்தார்கள். பிறகு அதை மாற்றிவிட்டுத் தளம் அமைத்தபோது பலகைகளைச் சுவரோரம் சாத்தினார்கள். அவ்வப்போது கரையானைத் தட்டிப் பாதுகாத்திருந்த பலகைகள் இப்போது உதவுகின்றன. தூக்க முடியாமல் தடுமாறி ஒன்றைக் கொண்டு வந்து கூண்டின் முன்பக்கம் நீளவாக்கில் வைத்தார். ஓராள் உள்ளே புகும்படி சந்து இருந்தது. கூரியரில் ஏதோ வாங்கியபோது வந்து சேர்ந்த மரப்பெட்டி கிடந்தது. அதை அந்த இடத்தில் வைத்ததும் சரியாகப் பொருந்தியது.

எல்லாம் போதுமா என்று ஒருமுறை பார்த்தார். அது படுத்துக்கொள்ள ஏதாவது போட வேண்டும். வீட்டுக்குள் போய் எதற்காவது ஆகும் என்று கட்டைப்பை ஒன்றிற்குள் போட்டு வைத்திருந்த நூல்புடவைகளை எடுத்தார். சாயம் மங்கிய ஒன்றை இரண்டு துண்டாகக் கிழித்தார். நான்காக மடித்து வைத்துப் பார்த்தார். மெத்தென்றிருந்தது. வெறுந்தரையில் விட்டாலும் ஒன்றுக்குப் போகும். புடவையைப் போட்டால் அதை நனைத்துவிடும். எடுத்துத் துவைக்க வேண்டும். பிறந்த குழந்தைக்குச் செய்வது போல ஏராளம் வேலைகள் இருக்கும் போல. புடவையை விரித்துவிடலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. சுடருக்குப் பேசிக் கேட்கவும் சங்கடம். அவள் இன்னும் கூடுதல் வேலைகளைச் சொல்லக் கூடும்.

கூண்டுக்குள் ஓரிடத்தில் துணியை விரித்து அதன் மேல் கூடை எதையாவது போட்டு இரவில் மூடிவிடலாம். ஒரே இடத்தில் படுத்திருக்கும். இன்னொரு புடவையையும் எடுத்துக் கிழித்து வைத்தார். மாற்றி மாற்றிப் போடலாம். துணி அலசுவதற்காக வாங்கி இப்போது தோட்டத்துக் குப்பை அள்ளப் பயன்படும் நெகிழி அன்னக்கூடை நினைவுக்கு வந்தது. பின்னால் போய்க் கூடையை எடுத்துத் தட்டித் துடைத்துக் கொண்டு வந்து கூண்டுக்கு முன்னால் வைத்தார். இந்த நாய்க்கு எத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று சலிப்பாக இருந்தது. மணியைப் பார்த்தார். எட்டே கால் ஆகியிருந்தது. நாய்க்குட்டியைக் கொண்டு வருபவனை இன்னும் காணவில்லையே.

கதவைத் திறந்துகொண்டு போய் வாசலில் நின்று பார்த்தார். கிளம்பிச் செல்லும் சிலர் பேச நேரமில்லாததால் சிறுசிரிப்பைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். குழந்தைகளை அவசரமாகப் பள்ளிப் பேருந்துக்குக் கூட்டிச் செல்வோர் நேரம் இது. தெருவுக்குள்ளிருந்து வெளியேறுவோர் மட்டுமே இருந்தனர். உள்நுழைவோரைக் காணவில்லை. சுடரை அழைத்துக் கேட்கலாமா என்றிருந்தது. நாயை ஆவலாக எதிர்பார்க்கிற மாதிரி ஆகும். வந்தால் நல்லது. வராவிட்டால் ரொம்ப நல்லது. வீட்டுக்குத் திரும்பிப் பழங்களை அரிந்து மிளகுத்தூளைத் தூவி எடுத்துக்கொண்டு முற்றத்து நாற்காலியில் உட்கார்ந்தார். நன்றாகச் சாய்ந்து வயிற்றை ஒட்டிப் பழத்தட்டை வைத்து ஒவ்வொன்றாக எடுத்துத் தின்றார். ஆடும் நாற்காலியாக இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி ஓய்வாக உண்பது ஆனந்தமாக இருந்தது.

பாதித் தட்டு காலியாவதற்குள் வாசலிலிருந்து ‘மேடம் மேடம்’ என்று அழைப்பு கேட்டது. தட்டை அப்படியே வைத்துவிட்டுப் போய்க் கதவைத் திறந்தார். கல்லூரி மாணவன் போலத் தெரிந்த பையன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்கூட்டரில் வந்திருந்தான். அதன் முன்பகுதியில் இருந்த ஒயர்ப்பைக்குள் இருந்து நாய்க்குட்டியை ஒருகையில் தூக்கி வந்து ‘இந்தாங்க மேடம்’ என்று நீட்டினான். அவன் கையில் பெரும்புழு ஒன்று முன்னும் பின்னும் நெளிந்தது. அருவருப்பில் கண்கூசச் சிலிர்த்துப் பின்வாங்கினார். ‘புடிங்க மேடம்’ என்றான் அவன். தடுமாறிக் கதவை நன்றாகத் திறந்து ‘அந்தக் கூண்டுக்குள்ள உட்ரு’ என்று சொன்னார். கால்களை உதைத்து நெளியும் குட்டியையே பார்த்துச் சிரித்து ‘இன்னமே இதுதான் உன்னூடு. பாத்துப் பத்தரமா இருந்துக்க’ என்று சந்தோசமாகச் சொன்னான். சட்டென்று தலைக்கு மேலே தூக்கி அதன் நெற்றியில் பச்சென்று முத்தம் கொடுத்தான்.  ‘ச்சீய்’ என்று உதட்டைச் சுழித்துத் திரும்பிக் கொண்டார் செல்வி.

‘மொட்டுக்குட்டிப் பயலே, அம்மாவப் பாக்க முடியாது போ. இவுங்கதான் இன்னமே உனக்கு அம்மா. பாத்துப் பதனமா இருந்துக்க. செல்லப்பயலே, செவந்த பயலே, கண்ணுப்பயலே, கருவாய்ப் பயலே…’

குட்டியை முகத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு அப்படிக் கொஞ்சியபடி கூண்டை நோக்கி நடந்தான் அந்தப்பையன். கடித்துத் தின்றுவிடுவானோ என்றிருந்தது. தூக்கத்தில் லயித்திருந்த குட்டி முருகிக்கொண்டு அவன் காதுக்குள் பேசுவது போல முனகியது. தடுப்பை எட்டிக் கூண்டுக்குள் விட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் அதையே பார்த்து நின்றான். பிறகு ‘டாட்டாடா தம்பிச்செல்லம், முத்துக்குட்டி… வரட்டுமா?’ என்று விடைபெற்றுத் திரும்பியவன் செல்வியைப் பார்த்து ‘இப்பத்தாங்கம்மா தாய்கிட்ட நல்லாப் பால் குடிச்சிருக்குது. ரண்டுமணி நேரம் தூங்கும். அப்பறமாப் பால் குடுங்க. தங்கமான குட்டிம்மா… நல்லாப் பாத்துக்கங்க’ என்று சொல்லிக்கொண்டே வண்டியை நோக்கிச் சென்றான்.

அவன் குட்டியைத் தூக்கியதும் முத்தம் கொடுத்ததும் அதனிடம் பேசியதும் வியப்பாக இருந்தன. அவன் வண்டி நின்ற இடம் வெறுமையாய்த் தெரிந்தது. முருகேசும் சுடரும் நாயிடம் பேசுவார்கள். எப்படி, என்ன பேசுவார்கள் என்பதைச் சரியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டோமோ? அவன் சட்டென்று கிளம்பிவிட்டான். இன்னும் சிலவற்றைக் கேட்டிருக்கலாம் என்று பட்டது. அவன் குரலிலும் சிரிப்பிலும் பெருகிய அன்பில் குட்டி நன்றாக நனைந்திருக்கும். இன்னும் இரண்டு வார்த்தை அவனைப் பேசவிட்டுக் கேட்டிருக்கலாம்.  பராமரிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. நாய்க்கூண்டு இருப்பதால் ஏற்கனவே நாய் வளர்த்த அனுபவம் இருக்கும் என்று நினைத்திருப்பான். செல்பேசி எண்ணையாவது வாங்கியிருக்கலாம். அவன் போன வழியையே பார்த்துக் கொண்டு சற்றே நின்றிருந்துவிட்டுப் பிறகு கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தார்.

நாய்க்குட்டியிடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. கூண்டுக்கு அருகே போய் மெல்ல எட்டிப் பார்த்தார். வெறுந்தரையில் ஊர்வது போல உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தது. லேசான பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். நீட்டியிருந்த வாய்ப்பகுதி அடர்கறுப்பு. மூடியிருந்த கண் தலைக்கு மேலே ஒட்ட வைத்தது போலிருந்தது. தொங்கிய காது மடல்களை முகத்திற்குப் போர்வையாகப் போர்த்தியிருந்தது. மெலிந்த உடம்புதான். தாய் நிறையக் குட்டிகள் போட்டிருக்குமோ? பால் போதாமல் இருந்திருக்கும். உடலில் தலை மட்டும் பெருத்திருந்தது. வெளியிலிருந்து பார்க்க லேசாகச் சிவந்த போண்டாவைப் போலத் தெரிந்தது. ‘போண்டாத் தலையன்’ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டார்.

தரையோடு ஒட்டியிருந்த வாய் ஏதோ முனகியது. உடல் மெல்ல அசைந்தது. கழுவிக் கொஞ்ச நேரமே ஆன  வெறுந்தரை சில்லென்று இருக்கும். அதுதான் அசைந்து நெளிகிறது. முற்றத்தில் வைத்திருந்த புடவைக் கிழிசல் ஒன்றை எடுத்து வந்தார். வழியைத் தடுத்திருந்த பெட்டியை  நகர்த்தி ஒருபுறத்தில் துணியை விரித்தார். குட்டியைத் தூக்கித் துணிமேல் வைக்க வேண்டும். கை நீளவில்லை. அந்தப் பையன் நடுவில் பிடித்துத் தூக்கிக்கொண்டு வந்தான். நெஞ்சோடு ஒட்டிய கையை வற்புறுத்திப் பிரித்துக் குட்டியைச் சட்டென்று தூக்கித் துணி மேல் எறிவது போலப் போட்டார். பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டது போலிருந்தது.

தடுப்பை வைத்துவிட்டு எட்டிப் பார்த்தார்.  துணிச்சூட்டை அனுபவித்துக் குட்டி படுத்திருந்தது. தன்கையை நீட்டி ஒருமுறை பார்த்தார். முதன்முதலாக நாய்க்குட்டியைத் தொட்டுத் தூக்கிய கை. ஒருநொடியில் தூக்கிப் போட்டுவிட்டாலும் குட்டியின் தொடுதல் நன்றாக வெந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் போலத்தான் இருந்தது. சுவரோரம் இருந்த குழாயைத் திறந்து கைகளைக் கழுவினார். சோப்புப் போட்டுக் கழுவினால் நல்லது. மிருகத்தைத் தொட்டுவிட்டு அப்படியே வைத்திருக்க முடியாது. வெளியில் இருந்த குளியலறைக்குச் சென்று சோப்புப் போட்டு நன்றாகக் கழுவினார்.

மீதமிருந்த பழத்தை உண்ணும்போதும் மதிய உணவுக்குக் கொஞ்சம் சோறு மட்டும் வைத்தால் போதுமென்று ஏற்பாடு செய்த போதும் பாத்திரங்களைத் துலக்கிய போதும் நாய்க்குட்டியே நினைவில் இருந்தது. பீமுக்கு வைத்திருந்த பாத்திரங்கள் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் எங்கே போய்ப் போட்டார் என்று தெரியவில்லை. இன்னொரு நாய்க்குட்டி வாங்க எண்ணமிருந்தால் அதையெல்லாம் அப்படியே வைத்திருந்திருக்கலாம். வீட்டிலிருந்த தட்டுக்களை எல்லாம் பொறுக்கி நோட்டம் விட்டுக் குழிவாகவும் விளிம்பு வெடித்துமிருந்த இரண்டை எடுத்தார். கழித்துக்கட்ட மனமில்லாமல் வைத்துக் கொண்டிருக்கும் ஏனங்கள். இப்போதைக்கு இவை போதும்.

அந்தப் பையன் சொன்னது போல இரண்டு மணி நேரம் ஆனதும் மெல்லப் போய்க் கூண்டுக்குள் பார்த்தார். துணிமேல் குட்டியைக் காணோம். கூண்டின் இன்னொரு மூலைக்கு நகர்ந்து போய் வாயைக் குவித்து ஊட்ட முயன்று கொண்டிருந்தது. பசி எடுத்துவிட்டது போல என்று உடனே வீட்டுக்குள் ஓடித் தட்டையும் பாலையும் கொண்டு வந்து ஊற்றி வைத்தார். ‘த்தா… வா… வந்து குடி’ என்று சொல்லிப் பார்த்தார். கண்களை நன்றாக விழித்திருந்தது. அண்ணாந்து மேலே பார்க்காமல் தரையிலேயே தவழ்ந்து தாய்முலையைத் தேடியது.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு குட்டியைத் தூக்கி அதன் வாயைத் தட்டுப் பாலில் வைத்தார். வாயில் பால் சுவை தெரிந்ததும் சுறுசுறுப்பாகி வெறும்வாயைச் சப்பியது. வீச்வீச்சென்று கத்தவும் தொடங்கியது. தாய்முலையில் பாலூட்டிப் பழக்கம், இன்னும் தனியாகக் குடித்ததில்லை போல. குழந்தைக்குப் பால் கொடுக்கும் பாட்டில் வாங்கி வைத்திருக்கலாமோ? அதற்கு இன்னும் நேரமாகும். அப்படிக் கொடுத்துப் பழகினால் அதை மாற்ற நாளாகும். அதன் கழுத்தைப் பிடித்துப் பாலில் வாய் படுவது போல வைத்தார். நாக்கை நீட்டிச் சப்பியது. நக்கிக் குடிக்கத் தெரியவில்லை. லேசாக அழுத்தினார். மூக்குவரை பாலில் புதைந்து செருமியது. அடடா… புரையேறிவிடுமே என்று துணியால் வாயைத் துடைத்தார். குழந்தைக்குப் பழக்கும் கைப்பக்குவம் வந்திருந்தது. மூக்கு அழுந்தாமல் வாய் மட்டும் பாலின் மேல்மட்டத்தில் படும்படி வைத்துப் பிடித்தார். சப்புவது மாதிரியும் நக்குவது மாதிரியும் நாக்கை நீட்டிக் குடிக்கத் தொடங்கியது. அப்படியே கொஞ்ச நேரம் பிடித்ததும் தட்டில் இருந்த பால் முழுதும் காலியாகிவிட்டது. மெல்ல உடலைத் தூக்கி நின்று மண்டது.

‘உள்ள போனதும் வெளிய வருதா உனக்கு?’ என்று சிரித்தார்.

உள்ளேயே விட்டுவிட்டுக் குளியலறைக்குப் போய்க் கைகளைக் கழுவினார். வெளியே வந்தபோது பெருமிதச் சிரிப்பு கட்டுப்படுத்த முடியாமல் வந்தது. தன் வாழ்வில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்திவிட்ட மாதிரி இருந்தது. சுடரை அழைத்துப் பேச வேண்டும் என்றிருந்தது. இந்நேரம் வகுப்பில் இருக்கக்கூடும். உணவு நேரத்தில் அழைக்கலாம். குட்டியை இன்னொரு முறை பார்க்கலாம் என்று கூண்டுக்குப் போனார். துணியைச் சுருணையாக உருட்டி அதன் மேல் படுத்துக்கொண்டிருந்தது. கண்கள் விழித்திருக்க வாசலைப் பார்த்தது. செல்வியின் அசைவு தெரிந்ததும் உருமலோடு மென்மையாக ‘லொள்’ என்றது.

‘பாலுக் குடிச்ச கொழுப்புல என்னயவே பாத்து ஒலைக்கிறயாடா?’ என்று சிரித்தபடி கேட்டார்.

செல்வியின் குரல் பழக்கமானது போல உடல் முருக லேசாக அண்ணாந்து பார்த்தது.

‘எங்கொரலு அதுக்குள்ள உனக்குத் தெரிஞ்சிருச்சாடா செல்லக்குட்டி?’ என்று கேட்டார்.

அந்தப் பையன் பேசியது போலவே பேசினால் குட்டிக்குப் புரியும் என்று நினைத்தார்.

‘சரி சரி… தூங்குடா முத்துக்குட்டி’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனார்.

உடல் பரவசம் கொண்டு துள்ளியது. மணியைப் பார்த்துக்கொண்டே ஏதேதோ வேலைகள் செய்தார். இரண்டாம் முறை குட்டியைப் பால் குடிக்கச் செய்தார். இப்போது நன்றாகவே குடித்த மாதிரி தெரிந்தது. தூக்கி வயிற்றைப் பார்த்தார். ஒட்டித்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் வைக்கலாம் என்று ஊற்றினார். ஆனால் குடிக்கவில்லை. வாயை அழுத்தினால் இருபுறமும் ஆட்டி வேண்டாம் என்று சொல்வதாகப் பட்டது. ‘நல்ல அறிவாளிதான்’ என்று பாராட்டிச் செல்லமாகத் தலையில் தட்டினார். செல்பேசி அழைப்பது கேட்டு ஓடிவந்து எடுத்தார். சுடர்தான்.

‘என்னடி இப்பிடி மாட்டி உட்டுட்டு ரண்டு பேரும் போயிட்டீங்க?’ என்று எடுத்ததும் கேட்டார்.

அம்மாவின் பேச்சில் குற்றம் சாட்டும் தொனி இருந்தாலும் அது பொய் என்பதையும் குரலில் சந்தோசம் கொப்பளிப்பதையும் சுடர் தெரிந்துகொண்டாள். அம்மாவைப் பேசவிட்டுக் கேட்டாள். அந்தப் பையன் வந்ததிலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக விரிவாகச் சொன்னார்.

‘ஒடம்பெல்லாம் ஒருபுடிக்குள்ள அடங்கீரும். தலதான் போண்டாவாட்டம் பெருத்து நிக்குது’ என்றார்.

‘இதுக்குத் தலை அவ்வளவு பெருசா இருக்காதே’ என்றாள் சுடர்.

‘நீ கண்டயா? நான் பாத்துட்டுத்தான சொல்றன். போண்டாத் தலையந்தான்’ என்றார் செல்லமாகக் கோபித்துக்கொள்ளும் குரலில்.

‘செரி, போண்டான்னே பேரு வெச்சரலாமா?’ என்றாள் சுடர்.

‘அதுக்குன்னு போண்டான்னா பேரு வெப்ப? கேக்க நல்லா இருக்க வேண்டாமா? பீமு மாதிரி எதுனா வெய்யி’ என்றார் செல்வி.

‘பீமு மாதிரியா? போண்டா… போடா… போண்… போடு… போண்டு… போண்டு… செரிம்மா போண்டுன்னு வெச்சரலாம். போண்டான்னு தெரியாது. வித்தியாசமா இருக்கும்’ என்றாள் சுடர்.

அவள் குரலில் நல்ல பெயர் கிடைத்துவிட்ட குதூகலம் ஒலித்தது. ‘போண்டு போண்டு’ என்று செல்வி சொல்லிப் பார்த்தார். நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பெயரையும் ஐந்தாறு முறை சொல்லி அழைத்துவிட்டால் நாக்குக்குப் பழகிவிடும்.

‘நல்லாத்தான்டி இருக்குது’ என்றார் செல்வி.

‘செரி. அதயே வெச்சுக்கலாம். போண்டு போண்டுன்னு சொல்லிக் கூப்புடு. அப்பத்தாம்மா பழக்கமாகும்’ என்று சொன்ன சுடர் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று வைத்துவிட்டாள்.

பேசியை வைத்ததும் நாய்க்கூண்டுக்கு ஓடி ‘டேய் போண்டு… போண்டு’ என்று அழைத்துப் பார்த்தார். அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். ‘கொழந்ததான். பால் குடிக்கறது, மல்லறது, தூங்கறது இதுதான் வேல’ என்று அவனைக் கோபிப்பது போலத் திட்டிக்கொண்டு வந்து சாப்பிட்டார். உறங்கி எழுந்து மணியைப் பார்த்ததும் பதற்றமானார். நான்கு பத்து. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போண்டுவுக்குப் பால் கொடுக்க வேண்டுமே. இப்படியா மறந்து போவது? பாலைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடினார்.

கூண்டுக்குள் இரண்டு இடத்தில் ஆய் இருந்து வைத்துவிட்டுத் துணிமேல் உடலை நீட்டி வாசல் பக்கம் பார்த்துப் போண்டு படுத்திருந்தான். செல்வியின் அரவம் கேட்டதும் எழுந்து தலையை நிமிர்த்திக் கத்தினான். இந்தக் கத்தல் கெஞ்சுவது போலிருந்தது. பசி பொறுக்க மாட்டாமல் பாலுக்குக் கெஞ்சுகிறானோ? ரொம்ப நேரம் தூங்கியிருக்கக் கூடாது. அடைப்பை எடுத்ததும் வெளியே ஓடி வந்தான். உள்ளிருந்து தட்டை எடுத்து வந்து பாலை ஊற்றி வெளியிலேயே வைத்துக் குடிக்க வைத்தார். இது மூன்றாவது முறை. நாக்கை நீட்டி நக்கிக் குடிப்பதில் தேர்ச்சி வந்திருந்தது. கழுத்தை லேசாகப் பிடித்திருந்தாலே போதும். விட்டுவிட்டால் அண்ணாந்து கத்துகிறான். ஓரிரு நாளில் பால் தட்டைப் பார்த்து அவனே குடித்துக்கொள்வான் என்றிருந்தது.

குடித்ததும் வெளியிலேயே விட்டார். போண்டு மெல்லச் செடிகளுக்குள் நடந்தான். உள்ளே போய்த் துண்டை எடுத்து வந்து மூக்கை மூடிக் கட்டிக்கொண்டு போண்டு போயிருந்த ஆயின் மேல் மண்ணைத் தூவிக் காயவிட்டு அள்ளினார். செடிக் கழிவுகளுக்கென வெட்டியிருந்த சிறுகுழியில் அதைப் போட்டார். கோப்பையில் தண்ணீர் எடுத்துப் போய் அந்த இடங்களைத் துடைத்தது போலக் கழுவினார். கழிப்பறையில் இருக்கும் பழைய பிரஷை இதைக் கழுவவென வைத்துக்கொள்ளலாம். அங்கே வைக்கப் புதிதாக வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஒருமாதத்திற்கேனும் உள்ளேயே மல்லுவதையும் ஆய் போவதையும் தடுக்க முடியாது. அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும். அதற்குள் முருகேசு வந்துவிடுவார்.

பிறந்த குழந்தையைக் கவனித்துக் கொள்வது போலத்தான் இவனையும் பார்க்க வேண்டும் போல. செடிகளுக்கு இடையிலிருந்து வீச்வீச்சென்று சத்தம் வந்தது. இந்தக் கத்தல் வேறுமாதிரி. ஆபத்தில் சிக்கிக்கொண்ட குரல். செடிகளை விலக்கி  உள்ளே போனால் செம்பருத்தியின் இருகிளைகளுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான். காயம் பட்டிருக்குமோ என்று மெல்ல விடுவித்து மேலே தூக்கிப் பார்த்தார். ஏதுமில்லை. வீட்டுக்கும் சுற்றுச்சுவர் கதவுக்கும் இடையில் நடைபாவாடை விரித்தது போலப் போட்டிருந்த நீளக் காரையின் மேல் விட்டார். ‘இங்கயே வெளையாடு. செடிக்குள்ள போனயின்னா சிக்கிக்குவ பாத்துக்க’ என்றார். அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடும்படி சுடர் சொன்னது ஞாபகம் வந்தது. ‘போண்டு… டேய் போண்டு… போண்டுப் பயலே’ என்று தொடர்ந்து அழைத்தார்.

பக்கத்து வீட்டு மல்லிகா அவர்கள் வீட்டுச் சுவரை ஒட்டி வந்து நின்று ‘என்னக்கா  புதுநாயா?’ என்று கேட்டாள். சுவருக்கு மேல் மல்லிகாவின் தலை மட்டும் தெரிந்தது.

‘ஆமா மல்லிகா. இன்னக்கித்தான் கொண்டாந்து குடுத்தாங்க. ரண்டு பேருமே இல்லயா, எனக்குத்தான் இமுசா இருக்குது’ என்று சிரிப்புடன் சொன்னார்.

குட்டியைத் தூக்கி மல்லிகாவுக்குக் காட்டினார்.

‘ஒடம்பு நல்லா நெடிக்கமா வருமாட்டந் தெரீது. இப்பிடி நாயி நல்லா வேட்ட புடிக்கும்’ என்றாள் மல்லிகா.

‘அப்படியா சொல்ற? உனக்கு நாய்வ கூடப் பழக்கமிருக்குது. நாய்னாவே எனக்கு ஆவாது. இப்பப் பாரு இதோட அல்லாடிக்கிட்டுக் கெடக்கறன்’ என்றார்.

‘பிள்ளையும் வெளியூரு போயிட்டா. அண்ணனும் வேலைக்கிப் போயிருவாரு. அப்பறம் என்ன, உங்களுக்குத் தொணையா இருக்கட்டுமே. நாம திங்கற சோத்துல ரண்டு வாயி போட்டாப் போவுது’ என்று மல்லிகா சொன்னாள்.

‘அட நீ வேற. நாய்க்கின்னு என்னென்னமோ வாங்கிப் போடுவாங்க. செலவக் கேப்பன்னு எங்கிட்டச் சொல்ல மாட்டாங்க.’

‘அப்படித்தான் போடட்டுமே. என்ன செலவாயிருது? ஊட்டுல இன்னொரு ஆளிருந்தாப் போட மாட்டமா?’

மல்லிகாவுக்கு இரண்டு குழந்தைகள். தனக்கு ஒன்றே ஒன்று என்பதைத்தான் மறைமுகமாகச் சுட்டுகிறாளோ என்று எண்ணிச் செல்வி முகம் சுருங்கினார். மல்லிகா அதை உணரவில்லை.

‘என்னுது ரண்டும் இன்னம் அஞ்சாறு வெருசத்துல ஒன்னொன்னா வெளியூருக்குப் படிக்கப் போயிருங்க. அப்பறந்தான் நானும் ஒருநாய் வாங்கோணும். ஊர்ல எப்பவும் ரண்டு நாயி இருக்கும். இவருகிட்ட இப்பக் கேட்டாப் பிள்ளைவள ஒழுங்காப் பாருன்னு பேசறாரு. என்னமோ ஒழுங்காப் பாக்காத மாதிரி.’

போண்டுவின் மேல் கண் வைத்தபடி மல்லிகாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. லேசாக இருட்டு பரவ ஆரம்பித்துவிட்டது. போண்டுவைக் கூண்டுக்குள் விட்டுவிட்டுப் போய் விளக்கைப் போட்டார். இருளில் போண்டு பயந்துகொள்வானோ என்றிருந்தது. பால்காரரிடம் கூடுதலாகக் கால்படி சேர்த்து வாங்கினார். காலையிலும் வேண்டும் என்று சொன்னார். இந்தப் போண்டுவுக்குத் தினமும் அரைப்படி பால் வேண்டும். மனம் பணக்கணக்குப் போட்டது. இந்தக் கணக்கு எதற்கு என்றும் தோன்றியது.

போண்டுவுக்குப் பால் வைத்தார். முருகேசுவும் சுடரும் பேசினார்கள். இருவரையும் திட்டுவது போலவே பேசினார். அவர்கள் கெஞ்சுவது போலப் பேசிப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்கள். நடந்த எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னார். அடிக்கடி  ‘போண்டு போண்டு’ என்றார். அந்தப் பெயர் முருகேசுவுக்கும் பிடித்திருந்தது. நாய்க்குட்டியைப் படம் எடுத்து அனுப்பச் சொன்னார்கள். படம் எடுத்துவிடலாம், அதை எப்படி அனுப்புவது என்று தெரியாது. யாராவது அனுப்பினால் பார்க்க முடியும். சுடரிடம் கேட்டு நன்றாகத் தெரிந்திருக்கலாம். நாளைக்குச் சுடருக்கு விடுமுறைதான். அவளிடம் கேட்டால் அங்கிருந்தே சொல்லித் தருவாள்.

எப்போதும் ஓரிரு நிமிடத்தில் முடிந்துவிடும் பேசியுரையாடல் இன்று கால்மணி நேரத்திற்கும் மேல் நீண்டது. இருவரிடமும் பேசிவிட்டுப் பார்த்தால் நேரம் கடந்திருந்தது. வழக்கமாகப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர் முடிந்திருக்கும். சரி, நாளைக்குப் பார்த்தாலும் கதை தெரிந்துவிடும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு அடுத்ததைப் பார்க்க உட்கார்ந்தார். இடையில் தோசை ஊற்றிச் சாப்பிட்டார். பத்துமணிக்குப் பால் கொண்டு போய்ப் போண்டுவுக்கு வைத்தார். தலை மேல் மென்மையாகக் கையை வைத்துக்கொண்டார். அவன்பாட்டுக்கு நக்கிக் குடித்தான். கைப்பிடி சோற்றை மிக்சியில் அடித்துப் பாலோடு கலந்து வைத்தால் அவனுக்குப் பசி கட்டும். அடிக்கடி பால் ஊற்ற வேண்டியிருக்காது. திடவுணவு செரிக்கும் அளவு நாளாகியிருக்குமா? நாளைக்கு இதையெல்லாம் சுடரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.

பத்துமணிக்கெல்லாம் படுத்துவிடுவது வழக்கம். அரைமணி நேரம் கூடிவிட்டது. படுத்ததும் வந்துவிடும் தூக்கம் இன்று எங்கோ ஒளிந்துகொண்டது. புரண்டு புரண்டு படுத்தார். எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியே போய் விளக்கைப் போட்டுப் போண்டுவைப் பார்த்தார். புடவைக்குள் சுருண்டிருந்தவன் அரவம் கேட்டு எழுந்தான். ‘தூங்கு தூங்கு’ என்று சொல்லிவிட்டு வந்தவர் விளக்கு எரியட்டும் என்று அப்படியே விட்டார். வந்து படுத்தவர் எந்நேரம் தூங்கினார் என்று தெரியவில்லை. நள்ளிரவில் திடுமென விழிப்பு வந்தது. இருளில் தடுமாறி எழுந்தார். வரவேற்பறை விடிவிளக்கு வெளிச்சம் பனிபோலப் படர்ந்திருந்தது. போண்டுவுக்கு இப்போது கொஞ்சம் பால் வைக்க வேண்டும். கழிப்பறை போய்விட்டு வந்து தண்ணீர் குடித்தார். வெளியில் இடிச்சத்தம் கேட்பது போலிருந்தது.

பாலோடு வெளியே வந்தவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஈசானி மூலையில் மின்னல் கொடி ஒன்று ஓடியது தெருவிளக்கு வெளிச்சத்திலும் தெரிந்தது. வானம் கருகும்மென இருண்டு கிடந்தது. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியிருந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் எல்லாம் இருந்தன. பாலைக் குடித்ததும் போண்டுவைத் தூக்கிச் செடியோரம் விட்டார். அவன் கால்களை அகட்டி மண்டான். செம்பருத்தி மொக்குப் போன்ற நாக்கை நீட்டி வாயைத் துடைத்துக்கொண்டான். ‘புத்திசாலிதான்’ என்றவர் சட்டென்று அவனைத் தூக்கிக்கொண்டார்.

‘போண்டுப்பயலே, மழ வந்தாப் பயந்துக்குவியா? இடி இடிச்சா அழுவியா? அத்தன பயமா உனக்கு? பயப்படாத நானிருக்கறன்’ என்று கொஞ்சிப் பேசிக்கொண்டே வீட்டுக்குள் போய்ச் சோபா மேல் அவனை விட்டுவிட்டுக் கதவைத் தாழிட்டார்.

The post போண்டு first appeared on கனலி.

சீனிச்சேவு

ரே ஆகாதது எனச் சொன்னாலும், அந்த வடக்குப் பார்த்த வீட்டில் இருந்து வெளியேற அம்மாவிற்கு மனசே இல்லையென்பது முருகனுக்குத் தெரியும். வேலிப் படலைத் தாண்டுகிற வாடைக் காற்று வீட்டிற்கு அடைகொடுத்திருத்திருந்த மரக் கதவின் இடுக்குகள் வழியாக உள்நுழைகையில், அரிசிச் சாக்கைப் போர்த்திக் கொண்டு, அப்பாவின் நெஞ்சில் கால்போட்டுத் தூங்கிய காட்சி மறுபடி அவனது நினைவில் எழுந்தது. அப்பாவின் உடல்சூட்டை அவனது உடல் இன்னமுமே ஞாபகம் வைத்திருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்த அதேவேளையில், வெகுசீக்கிரமே அந்த உடற்சூட்டில் இருந்து தன்னை அவர் விலக்கி வைத்ததற்கான காரணத்தை அறியவும் துடித்தான்.

தூரத்தில் இப்போது அதேமாதிரிச் சுருண்டு தூங்கும் தங்கைகளைப் பார்த்த போது, அவனுக்குள் துக்கம் நுரைப் பாலெனப் பொங்கியது. அதிலும் மூத்தவளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறேனோ எனத் தந்தையின் இடத்தில் தன்னை வைத்து யோசித்தான். மூத்தவள் லட்சுமிக்கு ஏழே வயதாகியிருந்த போதிலும், தலைமுடி எல்லாம் செம்பட்டை பாவி, நரைப்பிற்கும் கருமைக்கும் நடுவாந்திர நிலையில், கடுங்காப்பியைத் தலையில் ஊற்றிய கணக்காய், முதிய பெண்ணொருத்திக்கு இருப்பதைப் போலவே ஆகிவிட்டது. அப்படித் தலையில் சிக்குப் பிடித்து அலைகிற பைத்தியக்காரி ஒருத்தியையுமே சந்தையில் கண்டிருக்கிறான் முருகன். பள்ளிக்கூடத்தில் உடன்படிக்கிற பிள்ளைகள் ஏகடியம் பேசுகிறார்கள் எனச் சொல்லிப் போகவே மறுத்து விட்டாள் லட்சுமி.

அப்பா இருந்தபோது பக்கத்து ஊர் மருத்துவமனைக்கு அவளைச் சுமந்து கொண்டு போய்க் காட்டினார். முருகனுமே அப்போது உடன் போயிருந்தான். “லட்சத்தில ஒருத்தருக்கு வர்ற குறைபாடு இது. யாராலயும் இதை குணப்படுத்த முடியாது. நல்லா படிச்சு சம்பாதிச்சா வெளிநாட்டில விக்கற விலைகூடின சவுரிமுடி வாங்கி மாட்டிக்கலாம். அதனால பள்ளிக்கூடத்துக்கு போகணும். என்ன பாப்பா? டாக்டர் தாத்தா சொல்றதை கேட்டுக்கிட்டீயா?” என்றார் அங்கிருந்த முதியவர். மாட்டேன் என மாட்டைப் போலத் தலையை அசைத்தாள் லட்சுமி.

வெறும்கையோடு அனுப்பக்கூடாது என்பதால், ”இதை தவறாம சாப்பிட்டா முடி கருகருன்னு வந்திரும் என்ன?” எனச் சொல்லி நான்கைந்து நிறத்திலிருந்த சத்து மாத்திரைகளை மட்டும் கைநிறைய அள்ளிக் கொடுத்துத் திருப்பி அனுப்பினார். அழுகிற குழந்தைக்குக் கையில் ஒட்டிவிடப்படுகிற சவ்வு மிட்டாய் அதுவென்பதை மூன்றுபேருமே அறிந்திருந்தனர்.

அங்கிருந்த கடையொன்றில் போய், அப்பா மூன்று சீனிச்சேவு பொட்டலங்களை வாங்கி வந்தார். பின்னர் சைக்கிளில் அவளை முன்னே அமர வைத்து, முருகன் பின்னே தொற்றி ஏறிக் கொள்ள எதிர்க்காற்றைக் கிழித்துத் தள்ளாடியபடியே மிதித்துக் கொண்டு ஏரிக்கரையோரமாக வந்து நிறுத்தினார். “பாப்பா முடி இல்லாட்டி என்ன? மனுஷங்க வாழ்றதுக்குத்தான் பொறந்திருக்கோம். எந்த எதிர்காத்தையும் எதுத்து வாழக் கத்துக்கணும். அப்பா இருக்கறவரைக்கும் நீ வெறும் லட்சுமி இல்லை. மஹாலட்சுமி” என்றார் அப்பா.

பாப்பாவைச் சமாதானப்படுத்தத்தான் அப்பா அவ்வாறு சொல்கிறார் என முருகன் முதலில் நினைத்தான். ஆனால் அப்பா தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைச் சொன்னதைப் போல உணர்ந்தான். அதுவரை மூஞ்சியைத் தூக்கிவைத்திருந்த பாப்பா, அப்பா சொன்னதைக் கேட்டு மலர்ந்து சிரித்தாள். இரண்டுபேரும் எந்தக் கவலையும் இல்லாமல், வீட்டில் இருக்கிற மற்ற இருவரைப் பற்றிக்கூட யோசிக்காமல், ஏரிக்கரையில் அமர்ந்து சீனிச் சேவை ஒன்றொன்றாய் எடுத்துத் தின்னத் துவங்கினார்கள். ஒவ்வொரு கடிக்கும் ஒவ்வொரு மாத்திரையாகத் தூக்கி ஏரிக்குள் எறிந்து இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிற காட்சியை முருகன் விநோதமாகப் பார்த்தான்.

அதிலிருந்த கெளுத்தி மீன்கள் அம்மாத்திரைகளை எடுக்கப் போட்டி போடுகிற காட்சியை நுணுக்கமாகப் பார்த்தபடியே இருந்தான் முருகன். வீட்டிற்கு வந்தவுடன் இடுப்பில் சின்னவளைச் சுமந்து கொண்டிருந்த அம்மாதான் ஒருபாடு அழுது தீர்த்தாள். “இந்த மனுஷனை வச்சுக்கிட்டு என்னதான் பண்ண போறேனோ? அறிவிருக்கிற எந்த மனுஷனாவது டாக்டரு தந்த மாத்திரையை ஏரிக்குள்ள வீசுவானா? இவளை கட்டிக் கொடுக்க நாந்தான் படாதபாடு படவேண்டி இருக்குமே? பெரிய துரையானே என் வாழ்க்கையில விடிவே இல்லையா?” எனத் துவங்கினாள்.

மிதமான சாராய போதையில் அவள் அழுவதைச் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. அப்பாவின் குலதெய்வம் பெரிய துரையான் என்றால் அம்மாவிற்கு, மாமனார் முறைமாதிரி. ஒண்டிக்கொள்ள உறவு என எதுவுமே இல்லாத அம்மா, அப்பா குறித்த மனச் சங்கடங்களை அந்தத் திசை நோக்கியே எப்போதும் ஒப்புவிப்பாள். கண்ணிருக்கிற சாமியான பெரிய துரையானைத்தான் அவள் பெரிதும் நம்பினாள். ஆனால் அந்தக் கோவிலில் வைத்துத்தான் அப்பாவிற்குமே சாவு நேர்ந்தது.

பெரியதுரையான் கெடாவெட்டில் சாராயம் குடித்து விட்டு, பக்கத்திலுள்ள கிணற்றில் விழுந்த பூனையைக் காப்பாற்ற முயன்று, குப்புற விழுந்து தலைக் கல்லில் மோதிச் செத்தார் அப்பா. அவரது உடலைத் தூக்குவதற்காகப் போன போது, “ச்சீய் நீயெல்லாம் ஒரு மனுஷனா? உனக்கெல்லாம் கண்ணே இல்லையா? ஏழை பாழைகளோட நிக்காத நீயெல்லாம் சாமின்னு எதுக்கு இருக்கணும்? இதுக்கு நீயெல்லாம் பீயை திங்கலாம்” எனச் சொல்லிவிட்டுக் காறியுமிழ்ந்த அம்மா, இனி வாழ்நாளில் அந்தக் கோவிலின் படியைக்கூட மிதிக்க மாட்டேன் எனச் சபதம் போட்டுத் திரும்பினாள். பிள்ளைகளிடமுமே அங்கே வைத்தே சத்தியமும் வாங்கினாள். ஒருதடவை அதைமீறி முருகன் அங்கே கெடா வெட்டிற்குப் போய்விட்டுப் பின்னர் மனம்கேட்காமல் கைநனைக்காமலேயே திரும்பி வந்து, அதைப் பற்றி வெளியே சொல்லாமல் கமுக்கமாக இருந்து கொண்டான்.

அப்பாவின் சாவு காரியத்திற்கு வந்த சொந்தங்கள் அவர்களது குல முறைப்படி, அரிசி பருப்பு காய்கறிகளைத் தானமாகக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அடுத்த ஒருமாதத்திற்கு இருப்பு வரலாம் எனக் கணக்குப் போட்டான் முருகன். அப்பாவின் பழைய சட்டையையும் கைலியையும் எடுத்து அணிந்து கிளம்பிய அவனை வாசலில் அமர்ந்து பாத்திரம் தோய்த்துக் கொண்டிருந்த அம்மா நிமிர்ந்து பார்த்தாள். சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவரைப் போலவே அவன் துள்ளி ஏறியமர்ந்ததையுமே பாதி தோய்த்த ஈயக்கரிப் பாத்திரத்தைக் கையிலேந்தியபடி கவனித்தாள். “மொளைச்சு மூணு எலை விடறதுக்குள்ளயே என்னை மாதிரி பாவனை பண்ண ஆரம்பிச்சிட்டான். ஒடம்பாலையும் மனசாலையும் வயசை மீறி நிக்கறவனை கொஞ்சம் கண்டிஷனாதான் வச்சிக்கணும்” என அவளது புருஷன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அரைக்கைச் சட்டையையே பெரிதாக இருக்கிறது என்பதால் சுருட்டி விட்டிருந்தான். ஆனாலும் ஓரளவிற்கு அவனுக்குப் பொருந்திப் போயிருந்தது அச்சாயம் போன சட்டை.

பள்ளி வாத்தியாரின் முன்நின்ற முருகன், “சார் படிச்சா நல்லா வரலாம்ணு எனக்கு நல்லா தெரியுது? ஆனா முடியாட்டி என்ன பண்றது? படிக்காதவங்க எல்லாம் முன்னேறலீயா என்ன? அதனால வேலைக்கு போகலாம்ணு முடிவு பண்ணிட்டேன். என் மேல அக்கறை கொண்டவரு நீங்க. அதான் சொல்லிட்டு போகலாம்ணு வந்தேன்” என்றான். தன்முன் இவ்வளவு தீர்மானமாக நிற்கிற அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனை ஆதரவோடு பார்த்த வாத்தியார், “படிப்புங்கறதே இந்த வாழ்க்கையை வாழக் கத்துக்கிறதுதான். வாழ்றதுக்குத்தான் எல்லாமும். பொருளீட்டறதுக்கு முன்னாடி எந்த ஞாய தர்மத்துக்கும் இடமே இல்லைதான். பொருளில்லாதவங்களுக்கு இந்த பூமி இல்லைங்கறதை ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தர் சொல்லிவச்சிட்டு போயிட்டார். அதுக்காக பொருள் மட்டுமே வாழ்க்கையும் இல்லை பார்த்துக்கோ. அது உனக்கு ஒருநாள் புரியவும் செய்யும். என்னைக்காச்சும் தோணறப்ப வந்து பாரு” என்றார்.

பிறகு என்ன நினைத்தாரோ, உள்ளே போய் பையிலிருந்து காசை எடுத்துக் கொண்டு வந்து, அவன் மறுத்தபோதும் விடாமல் வற்புறுத்திப் பையில் திணித்தார். முதல் சம்பாத்தியமே பிச்சையைப் போல அமைந்துவிட்டதே என மனதிற்குள் முருகன் குமைந்தாலும், அவரது ஆதரவான செய்கையை நினைத்துத் தன்னைச் சமாதானமும் செய்து கொண்டான். ஏரிக்கரையில் போய்நின்று ஒவ்வொரு நோட்டாய் உருவி வீசலாமா? என்றுகூட நினைத்தான்.

அம்மாவிடம் அவன் அனுமதியெல்லாம் கேட்கவில்லை. “இங்க பொழைக்க எந்த வழியும் இல்லை. விருதுநகருக்கு போயிடலாம். சித்தப்பா அங்க இருக்காருல்ல. அவர் வீடுபிடிச்சு விடறேன்னு சொல்லி இருக்கார். நான் வேலைக்கு போறேன். நீ பாப்பாக்களை பார்த்துக்கோ” என்றான். “அவரை போலவே இவனும் சொல்பேச்சு கேட்காம கோட்டி பிடிச்சு திரியறானே” எனச் சொல்லித் துவங்கிய அம்மா, வெகுதீர்மானமாய் நிற்கிற அவனைப் பார்த்துவிட்டு, அழுகையை அடக்கிச் சரியென்பதைப் போலத் தலையை அசைத்தாள். தன் முடிவிற்குக் கட்டுப்பட்ட விதத்தில் அவள் தலையாட்டிய காட்சி முருகனிற்குள் உத்வேகத்தைக் கிளர்த்தியது. அவ்வுணர்வைக் கொண்டே மிச்சப் பயணத்தையும் கடந்து விடலாம் எனவும் நம்பிக்கை கொண்டான்.

அப்படித்தான் அதுவரை அவர்கள் இருந்த ஊரைவிட்டுக் கிளம்பலாம் என முடிவு செய்தார்கள். தங்கைகளை எழுப்பி கடுங்காப்பிப் போட்டுக் கொடுத்தாள் அம்மா. வழக்கமாக எதையாவது தொணதொணவெனப் பேசிக் கொண்டே இருக்கிறவள், அன்றைக்கு ஒருசொல்கூட உதிர்க்கவில்லை என்பதையும் உணர்ந்தான். எல்லோரும் கிளம்பி வாசலுக்கு வந்து நின்ற போது, அம்மா தெற்கே திரும்பி பெரியதுரையான் இருக்கிற திசையையே பார்த்துக் கொண்டு கொஞ்சநேரம் நின்றாள். அவள் மனதிற்குள் வேண்டுகிறாளோ? ஆனால் அவளது முகக்குறி கொண்டு எதனையுமே கணிக்க முடியவில்லை அவனால். அதன்பிறகு அம்மா கணிக்கவே முடியாதவளாகவும் மாறிப் போய்விட்டாள்.

பிறகு முருகனை நோக்கித் திரும்பிய அவள் போகலாம் என்பதைப் போலச் சிறு அசைவைக் காட்டினாள். சைக்கிளின் பின்னே மூட்டை முடிச்சுக்களைக் கட்டியிருந்தான். கூடவே நடந்து வந்த ஒரு ஆடு, ஒரு நாய், மற்றும் அந்த நால்வரோடு ஒரு நடைபயணம் துவங்கியது. அவர்களுக்கு எதிரே ஒற்றையடிச் செம்மண்பாதை விரிந்து கிடந்தது. அப்போது வாகை மரத்தில் அமர்ந்திருந்த தனித்த செம்போத்தொன்று கூவி மழையறிவிப்பு செய்தது. அந்தக் கூவலைக் கேட்ட அம்மா கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பாப்பாக்களுமே அச்செய்கையைப் போலச் செய்தார்கள்.

ஏரிக்கரையோரமாக அன்றைக்கு அப்பாவோடு அமர்ந்திருந்த இடத்திற்குப் பக்கமாய் வந்த போது முருகன்தான் அந்தக் காட்சியைப் பார்த்தான் முதலில். கருவேல மரமொன்றினடியில் குத்தவைத்து அமர்ந்திருந்தான் அந்தப் பையன். லட்சுமியை விட ஒரு அங்குலம் உயரமாக இருப்பான். முகத்தைக் கோணி வைத்துக் கொண்டு அழுகிறவனைப் போல அமர்ந்திருந்தான். அம்மா அவனைக் கவனிக்கவில்லை என்பதையும் நோட்டமிட்டான். அவனைக் கடந்து நடந்த போது, திரும்பிப் பார்த்தான். எழுந்து நின்ற அந்தப் பையன் பின்னாலேயே நடந்து வந்தான்.

குறுகுறுப்பு ஒண்ணுக்கு வருவதைப் போல முட்டவே, சிறிதுநேரம் கழித்து மறுபடி திரும்பிப் பார்த்தான் முருகன். காலில் முள்தைத்திருப்பதாலோ என்னவோ, நொண்டியபடியே வந்த அந்தப் பையன், அம்மாவைப் பின்புறமாக வந்து கட்டிப் பிடித்துக் கொண்டவுடன், அவள் திரும்பிப் பார்த்து, “யார் சாமி நீயி? எங்கருந்து வர்ற? என்னாச்சு உனக்கு?” எனப் பதறினாள்.

அவன் அம்மாவின் பின்புறத்தில் முகம் பதித்து விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான். எரிச்சல் முட்டவே முருகன், சைக்கிளை நிறுத்தி விட்டு ஒருகையால், அவனது சட்டையைப் பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயலுகையில், “எதுக்கு சின்ன புள்ளைகிட்ட இவ்வளவு வன்முறையா நடந்துக்கிற?” என்றாள். அவள் அப்படி எதிர்த்துச் சொன்னது முருகனுக்கு எரிச்சல் மூட்டியது.

அவனைப் பிரித்தெடுத்து முன்பக்கம் கொண்டு வந்த அம்மா, “ஏன் சாமி? எங்கருந்து வர்ற? அம்மாளை தொலைச்சிட்டீயா? வேற எங்காச்சும் தேடிப் பாரு. நானில்லை உன் அம்மா” என்றாள். அவன் அதையெல்லாம் புரிந்துகொள்ளாத தன்மையுடன் முகத்தை வைத்துக் கொண்டு நின்றான். முகத்தைக் கோணிக்கொண்டு இருப்பதுதான் பிறவி இயல்போ? அவனுக்குப் பிறவியிலேயே பேச்சே வரவில்லையோ? என நினைத்தான் முருகன். அம்மா மேலும் முன்னோக்கி எட்டுவைத்து நடக்கையில், மறுபடி வந்து அவளது சேலையைப் பற்றிக் கொண்டான்.

அம்மா தன் பார்வையை அந்தத் தொலைவானம் வரைக்கும் வீசினாள். அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லையங்கே. அவள் புரிந்து கொண்டதைப் போலவொரு பாவனையை முகத்தில் கொண்டு வந்தாள். பிறகு சேலைத் தலைப்பால் அவனது முகத்தை, கன்ணிலிருந்த இளமஞ்சள் நிறப் பீளையை, அவன் வாயில் வழிந்த கோழையை அழுத்தித் துடைத்துவிட்டு, கையால் அவனது கலைந்து கிடந்த தலைமுடியைச் சரிசெய்தாள்.

பிறகு யாரை நோக்கியோ சொல்வதைப் போல, “தரித்திரத்தை சுமந்துகிட்டுதான் நாங்க போறோம். வழித்துணையா உன்னை யாரோ அனுப்பி வச்சிட்டாங்க போல. நீயும் வா சாமி. நாலு உசிர்களுக்கு சமைக்கிறேன். நீ ஐஞ்சாவதா இருந்துட்டு போ” என்றாள். அந்தக் கணத்தில் முருகனுக்கு உள்ளுக்குள் உலை கொதித்தது. அம்மா ஒரு வார்த்தையைப் பூமியின் பாதத்தில் வைத்துவிட்டால், அதைப் பின்னால் எடுத்துக் கொள்ளவே மாட்டாள், கைதவறிச் செய்தால்கூட என்பது முருகனுக்குத் தெரியும். தன்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி அந்த முடிவை எடுத்தாள்? என்கிற கேள்வி அவனுக்குள் முளைவிட்டது. உடனடியாக மறுக்க வேண்டுமென எண்ணம் உதித்த போதும், அதை வெளிப்படுத்த முடியவில்லை அவனால்.

அக்கேள்வியை உள்ளத்துள் தேக்கி அவளை உற்றுப் பார்த்த போது, “அய்யோ பாவம், வாயில்லா ஜீவன். இவனும் இந்த நாயும் ஆட்டுக்குட்டியும் ஒண்ணுதான். இனிமே இவனுமே உங்க உடன் பிறப்புதான். என் வார்த்தையை யாரும் மீறமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. சொத்தா இங்க இருக்கு? கிடைக்கிற சோத்தில நாலு பருக்கை இவனுக்கும் கெடைச்சிட்டு போகட்டுமே?” எனச் சொல்லிவிட்டு, பெரியதுரையான் இருக்கிற பக்கமாய்த் திரும்பி நின்று பார்த்தாள்.

அந்தக் கணத்தில் முருகன் பெயரறியாத அந்தச் சிறுவனை அடியாழத்தில் இருந்து வெறுத்தான். தன்னிடம் அனுமதி கேட்காமல் அதை அவள் செய்திருக்கக்கூடாது, அப்புறம் தன்னிடத்திற்கு என்ன மரியாதை? என்பதைக் கடைசிவரை உள்ளுக்குள் வைத்து உழற்றிக் கொண்டே இருந்தான். மேற்கொண்டு தடத்தைப் பார்த்து நடக்கையில், “உன் பேரு என்ன சாமி?” என்றாள் அம்மா. அவன் ஒன்றுமே தெரியாதவனைப் போல விழிக்கையில், “பேரு என்ன பெரிய பேரு? பேர் வச்சா போதுமா? சோறு போடணுமே? இனிமே உன்பேரு விக்னேஷூ. என் மூத்தவனுக்கு இதைத்தான் வைக்க நெனைச்சேன். அப்ப முடியலை. இப்ப வச்சிட்டேன்” எனச் சொல்லிவிட்டு ஒரு குழந்தையைப் போலச் சிரித்தாள். அவளோடு சேர்ந்து கொண்டு பாப்பாக்கள் இருவருமே சிரித்தபடி அவனை ஒரு பொம்மையைப் போலக் கவ்விக் கொண்டார்கள். எப்படிப் பெருந்துக்கத்தை உடனடியாக மறந்தார்கள்? தள்ளி நின்று அம்மூவரையுமே பார்த்தான் முருகன். விக்னேஷூமே கோணப் பயலாய் கோழை வழியச் சிரித்தான்.

அந்தக் கணத்தில் அந்நால்வரிடம் இருந்தும் மனதார விலகினான் முருகன். அதற்குப் பிறகு அவன் பொறுப்புணர்வு என்பதை மட்டும், இடுப்பில் எப்போதும் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிற சூரிக் கத்தியைப் போலச் சொருகிக் கொண்டான். புதிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்த பிறகு, முருகன் நினைத்த மாதிரி எல்லாம் வாழ்க்கை அத்தனை எளிதாக இருக்கவில்லை. பட்டுத் துணியைத் தெருவில் விரித்து அதன்மீது நடக்கச் செய்யும் அதுவென்பதைப் போலக் கற்பனையில்தான் இருந்தான். மாறாக அது அவனை வாழைக் கறைபடிந்த வேட்டியை, படிகாரம் போட்டுக் குளத்து மேட்டுக் கல்லில் ஓங்கியறைந்து வெளுப்பதைப் போலக் கசக்கிப் பிழியத் துவங்கியது.

சித்தப்பாவின் சிபாரிசின் பேரில் சந்தையில் பழமண்டியொன்றில் எடுபிடி வேலை கிடைத்தது. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் தேனியில் இருந்து லோடு வந்துவிடும் என்பதால், எந்நேரமும் எங்கேயும் நகராமல் அந்த மண்டியின் பழம் அழுகிக் கசங்கிய மணத்திற்குள்தான் படுத்துக் கிடக்க வேண்டும். வாழைக்கறை பட்டு நமநமவென அரிக்கும் உடலை வறக்வறக்கெனச் சொறிந்தபடி படுத்துக் கிடக்கும் முருகன், முகத்தில் லாரியின் மஞ்சள் விளக்கொளி பட்டதும் படக்கென விழித்துக் கொள்வான்.

சாலையில் படுத்துக்கிடக்கிற லோடுமேன்கள் அந்த ஒளி முகத்தில் பட்டதும் துடித்துக் கொண்டு எழுந்து லாரியை நோக்கி ஓடுவதையும் முதல்நாள் பார்த்தான். வாழ்க்கை அதன் போக்கில் எல்லோருக்குமே புதிய பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுத்துவிடுகிறதோ? அந்தச் சமயத்தில் அப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என ஒரு நினைப்பு வந்த போது, அதை விடாமல் நாயைக் கல்லாலடித்து விரட்டுவதைப் போலத் துரத்தியடித்தான். தனியாகவே அந்த ஒளியைத் துரத்திப் போய்விட முடியும் என்கிற வைராக்கியமுமே பிறந்தது அவனுக்கு.

“இந்த வேலை அந்த வேலைன்னு இல்லை. முதல்ல ஒரு வேலையில உக்கார குண்டி பழகணும். அப்படி உக்காந்து பழகிட்டா அப்புறம் எங்க போனாலும் பிழைச்சிக்கலாம். அதனால ஒழுங்கு மரியாதையா மனச அலையவிடாம இங்கேயே இரு” எனச் சொல்லித்தான் சித்தப்பா அங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டார். பல்லைக் கடித்துக் கொண்டு அதன்பேரிலேயே அந்த வேலையில் இருந்தான் முருகன். ஆனால் வாழ்க்கை இரண்டு வருடங்களாக அந்த மண்டிக்குள்ளேயே, தின்று கொழுத்த பெருத்த எலியொன்றைப் போலச் சுருட்டிப் பதுக்கி வைத்துக் கொண்டது.

வீட்டிற்கும் அவனுக்குமான போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய ஆரம்பித்ததும் அக்காலத்தில்தான். ஆரம்பத்தில் அந்தக் கோணை முகத்தானைக் கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் பிரயத்தனப்பட்டான் முருகன். அப்பா செய்வதைப் போலவே வீட்டிற்குள் நுழைந்ததும் கைகால் கழுவி விட்டு, பையில் இருக்கும் பணத்தை எடுத்து அம்மாவின் பார்வை படுகிறபடி ஒரு இடத்தில் வைத்தபிறகு வெளியே போய்க் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொள்வான்.

தூரத்தில் இருந்து அங்கே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பான். அங்கே அம்மா அந்த மூவரோடு கரைந்து அமிழ்ந்து கிடப்பதைப் பார்க்கப் பார்க்க வெறியாக இருக்கும் முருகனுக்கு. அப்போதெல்லாம் மூத்தவளும் இளையவளுமே கூட முருகனை நெருங்கி வர புதுசாய் அச்சப்பட்டார்கள். அந்த நால்வரும் தன்னைத் தவிர்த்துவிட்டு தனியாய் புத்தம் புதுவாழ்வொன்றைத் துவங்கி விட்டதாகவும் நினைத்தான் முருகன். அம்மாவுமே குறைந்த சொற்களோடுதான் அவனோடு புழங்கிக் கொண்டு இருந்தாள். இதைப் பற்றியெல்லாம் தன்சக லோடுமேன் ஒருத்தனிடம் சொன்ன போது, “வெளிச்சத்தை நோக்கி நீதாம்லே நெருங்கி போகணும். ஒருநாள்ள சாகிற விட்டில் பூச்சிக்குக்கூட இந்த உண்மை தெரிஞ்சிருக்கு. மனுஷனுக்குப் புரியலையா? விலகி விலகி போயிட்டு இருட்டா இருக்குன்னு புலம்புனீன்னா எப்படி?” என்றான்.

ஆனால் முருகனால் அந்தப் புதிய உருப்படியுடன் நெருங்கிப் போகவே முடியவில்லை. எந்நேரமும் முகத்தைக் கோணி இளித்தபடி நடக்கும் அந்த உயிர் அவனது தன்னிருப்பைக் குலைத்தபடியே இருந்தது. அதெப்படி ரேஷனரிசிச் சோற்றைப் போல வெந்து சாகிற தன்னிடம் அனுமதி கேட்காமல் அம்மா அதைச் செய்தாள் என்று அப்போதுமே நினைத்தான். இந்த மாதிரி எண்ணங்களை எல்லாம் விரட்டக் கொஞ்சமாய்ச் சாராயம் குடிக்கவும் பழகிக் கொண்டான். உடலில் ஒட்டியிருக்கிற பழமண்டி மணம் எனச் சொல்லிக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையும் பிறந்தது.

வீட்டிற்குப் போவதற்கு முன்பு சந்தையின் மூத்திரச் சந்திற்குப் பக்கத்தில் இருக்கிற கொய்யா மரத்தில் இருந்து கொழுந்து இலைகளை மென்றுவிட்டுப் போவான். தவிர, தூரத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கிற அவனை நெஞ்சோடு ஆரத் தழுவி உச்சந்தலையில் அம்மா முத்தம் கொடுக்கப் போகிறாளா? இல்லை, தங்கைகள்தான் மடியில் புரண்டு விளையாடப் போகிறார்களா? என்கிற விட்டேற்றித்தனமும் இணைந்துகொண்டது அவனிடம்.

அப்படியொரு நாள் கொஞ்சம் கூடுதலாகக் கண் சிவந்து கிடக்கிற மாதிரித் தோரணையில் வீட்டிற்கு அரைக்கிலோ ஆட்டுக்கறியை எடுத்துக் கொண்டு போனான். அவன் போய் அமர்ந்த தோதை ஓரக் கண்ணால் அம்மாவுமே பார்த்தாள். வட்டிலில் நாலைந்து கறித் துண்டுகளை பார்த்ததுமே முருகனுக்குள் கோபம் கொப்பளித்தது. வட்டிலை மண் தரையில் வீசியெறிந்த அவன் எதிரே நின்றிருந்த அம்மாவை பார்த்து, “கொஞ்சமாச்சும் கருணை இருக்கா உனக்கு? உழைச்சு களைச்சு வர்றவனுக்கு நாலு துண்டுதானா? இருக்கற கஷ்டத்தில எதுக்கு ரோட்டில போற நாயை எல்லாம் நடுவீட்டில வச்சு பொங்கிப் போட்டு சாவடிக்கிற. நாய் நாலு பருக்கையா தின்னுது? அது கறியும் சோறும்ல கேட்குது” என்றான். சொன்னபிறகே அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்பதும் உறைத்தது.

இடுப்பில் சேலையைச் சொருகிக் கொண்டு அவனை நோக்கி அம்மா நடந்துவந்த போது, சின்னப் பையனைப் போல அவனுக்குள் நடுக்கம் வந்தது. அடிக்கப் போகிறாளோ? அவனது கண்ணைப் பார்த்து, “எம்புருஷன் என்னோட படுத்துக் கிடந்த பவிசுக்காக என்னன்னாலும் பேசுவான். நானும் பொறுமையா கேட்டுக்குவேன். உசுர் வாழ என்ட்ட பாலைக் குடிச்சிட்டு படுத்துக் கிடந்த பயல் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டீயா? மரியாதையா பேசு இல்லாட்டி நாக்கை இழுத்து வச்சு அறுத்திருவேன். உன் காசும் வேண்டாம் மயிரும் வேண்டாம். நான் கல்லுடைச்சாவது எம்புள்ளைகளை காப்பாத்திக்குவேன்.” என்றாள் தீர்மானமாய்.

அப்போது தூரத்தில் தங்கைகளோடு அந்த நாயும் வாயைக் கோணிக் கொண்டு சிரித்தபடி நின்று அக்காட்சியைப் பார்த்தது. தங்கைகளின் முகத்தில் கலவரம் தெரிந்தது. அந்த நாய்க்கு அங்கே என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை. ஆங்காரம் பெருக்கெடுத்துப் பக்கத்தில் இருக்கிற கட்டையை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி அடிக்கப் பாய்ந்தான் முருகன். அப்போது அவனுக்கு எதிரே அரிவாள்மனையைக் கையில் ஏந்தி நின்ற அம்மா, “அவம் மேல கைபட்டிச்சு உன் சங்கை அறுத்திருவேன் பார்த்துக்கோ. ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவது?” என்றாள். அவனது போதையெல்லாம் அந்தக் கணத்தில் அக்னி வெயிலைக் கண்ட குட்டை நீரைப் போல வற்றியடங்கி, அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். உடனடியாகவே சுருக்கெனப் பதிலுக்கு ஏதாவது அம்மாவை நோக்கிப் பேசவேண்டுமென எழுந்த உணர்வை அடக்கிக் கொண்டான் முருகன்.

எவனோ ஒருத்தனுக்காகச் சொந்தப் பிள்ளையை அப்படிச் சொல்வாளா? என்கிற கேள்வி அவனுள் ஓடியது. அந்தப் பயல் இல்லாத நாடகம் போட்டு அவர்களிடம் பரிதாபத்தை வென்றுவிட்டான் என்றும் தோன்றியது. ஒன்றும் பேசாமல் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு சைக்கிளைத் தள்ளியபடிச் சந்தைக்குக் கிளம்பினான் முருகன். மூவரில் யாராவது தன்னை வீட்டிற்கு அழைப்பார்கள் என அந்த நேரத்திலும் எதிர்பார்த்தான். ஆனால் யாரும் அழைக்கவில்லை, அம்மாவின் சொல்தான் அங்கே இறுதியாயிற்றே?

அம்மா சொன்ன மாதிரியே கல்லுடைக்கிற வேலைக்குக் கிளம்பிப் போனாள். அவளிடம் போய் நின்று பேசமுயற்சித்த போது, “நாய் நரி பறவைன்னு எல்லா உசுருமே தான் சோத்துக்கு தானேதானே உழைக்குது? நான் மட்டும் என்ன செறப்பு? இனியாச்சும் எவர் கையையும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறேன். உனக்கு ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சுன்னா அந்த மூணு உசிர்களுக்கும் சேர்த்து செய்யு. என்னை என் வழியில விட்டிரு. ஒரு அம்மாவா கடைசியா இதைத்தான் உண்ட்ட கேட்கிறேன்” என்று அவள் சொன்ன போது அவளது கண்கள் கலங்கி இருந்ததை முருகன் பார்த்தான். ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்த போது, தூரத்தில் மூன்று பேரும் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டு இருந்தார்கள். தங்கைகளை மட்டும் தனியாக எப்படி அழைப்பது? என்கிற யோசனையில் எதுவுமே கொடுக்காமல் வெளியேறினான் முருகன்.

அதற்குப் பிறகு வீட்டிற்குப் போவதைச் சுத்தமாகக் குறைத்துக் கொண்டான். அம்மா இல்லாத நேரங்களில் மட்டும் போய் சாமி படத்திற்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு வருவான். அந்தப் பணம் எடுக்கப்படாமலேயே குவிந்து சேர்ந்து கொண்டிருப்பதையும் பார்த்தான். ஆனால் தன் கடமையில் இருந்து வழுவிவிடாத செயலைத் தவறாமல் மேற்கொண்டான். அப்போது அப்பாவைத் தன்னுள் இருத்தி நினைத்தும் கொண்டான்.

அம்மாவென்கிற அங்குசம் மனதளவில் இல்லாமல் போனபிறகு அவனுக்குள் தினவெடுக்கத் துவங்கி விட்டது. சந்தையில் தினவிற்கான அத்தனை வாய்ப்புகளும் காய்கறி மூட்டைகளைப் போலவே குவிந்தும் கிடக்கின்றனதானே? அம்மாவால் விளைந்த வெறுப்பு அவனுள் வெம்பின பழத்தின் புழுக்க மணத்தைப் போலப் பெருகி நிறைந்தது. எந்தச் சமாதானத்தினாலும் அதைத் துடைத்தழித்து ஈடுகட்ட முடியவில்லை.

எங்காகிலும் உள்ளுக்குள் திரளும் அவ்வெறுப்பை இறக்கி வைக்க அவனையறியாமல் துடித்தான். எதிரே தட்டுப்படுகிற உயிர்களின் மீது அதை இறக்கி வைக்கத் துவங்கினான். யாரையுமே மனதளவில்கூட அடித்திராத அவன், காரணமே இல்லாமல் சந்தையில் கேட்பாரில்லாமல் திரியும் ஆட்களை மட்டுமல்ல, மாடுகளைக்கூட அடித்துத் துன்புறுத்தத் துவங்கினான். அப்படிச் செய்கையில் உள்ளுக்குள் இருக்கிற வெறியடங்கி மனம் சமாதானம் அடைவதாகவும் தோன்றியது அவனுக்கு. ரத்த ருசி கண்டவுடன் பிறகு அதுவே பழக்கமாகவும் ஆகிவிட்டது.

அம்மா பற்றிக் கொள்ளச் சொன்ன அதைவிடுத்து குடி, சோக்கு, சீட்டு என மற்ற மூன்றைச் சேர்ந்து கொண்டான். இதைப் பற்றியெல்லாம் தயங்கிச் சொன்ன அவனுடைய சித்தப்பாவிடம், “ஆட்டமெல்லாம் கழுத்துக்குக் கத்தி வர்ற வரைக்கும்தான்” என்று அம்மா சொன்னது அவன் காதிற்குமே வந்து சேர்ந்தது.

ஆள் ஓங்குதாங்காக இருந்ததாலும், சண்டைக்குண்டான கைப்பழக்கம் வந்துவிட்டதாலும், சந்தையில் மற்ற வியாபாரிகள் தங்களுக்குள் நடக்கிற சில்லரைச் சண்டைகளுக்காக அவனைப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினர். அவன் சந்தையில் யாரைப் பார்த்தாலும் கையை ஓங்கிக் கொண்டு, நாக்கைத் துருத்துகிறவனாக மட்டுமே அறியப்படத் துவங்கினான். இதன் காரணமாகவே கையில் காசுபணமும் புரளத் துவங்கியது. அது கூட்டாய் வருகையில் கண்ணடியும் சேர்த்துத்தானே வரும்? “ஏசு நாதர் மாதிரி கல்லடிகூட வாங்கிடலாம்ப்பா. ஆனா ஊர் மக்களோட கண்ணடி மட்டும் வாங்கிரக் கூடாது. அது நின்னு கொல்லுற சனியன்” என்றார் மூத்த வெங்காய வியாபாரி ஒருத்தர்.

”இன்னைக்கு மீசை மொளைச்சவன் அதிகாரம் பண்றதை நாம பாத்துக்கிட்டு இருக்கணுமா? நாம என்ன பொண்டுக பயல்களா? நாம செஞ்சோம்ணா சந்தையில தேவையில்லாத பிளவு வந்துடும். வெளியூர் ஆட்களை வச்சு காதும் காதும் வச்ச மாதிரி சீக்கிரமே செஞ்சி விட்டிரலாம்” எனச் சந்தையில் அவனுக்கு எதிரான ஆட்களும் சேரத் துவங்கினர்.

அந்தக் கூடுகை குறித்த செய்தி முருகனின் காதுகளையுமே வந்தடைந்தது. “பார்றா. அவனுக செய்றதுக்கு நாம என்ன ராமசாமி தியேட்டர் சந்தில நின்னு காசுக்காக வாவாவான்னு காலை விரிச்சுக்கிட்டு கூப்பிடறவளா? வரட்டும். ஆட்டை அறுக்கிற மாதிரி கழுத்தை அறுத்து சந்தை வாசல்ல எலுமிச்சம்பழம் கருப்புக் கயிறு கட்டி தொங்க விடறேனா இல்லையான்னு பாரு” என்று மார்தட்டினான். சந்தை அவனுக்குப் பகலில் இருப்பதைப் போல இரவிலுமே பரபரப்பாகவே இருந்தது அப்போதெல்லாம்.

இடையில் நாலைந்து தடவை மட்டுமே வீட்டிற்குப் போய்விட்டு வந்தான். மூத்தவளைப் பார்த்து, கேரளாவில் இருந்து ஒருத்தர் கொண்டுவந்து தந்த தலைக்குத் தேய்க்கிற எண்ணெயைக் கொடுத்த போது, “தேய்க்கிறேண்ணே. ஆனா தம்பி வந்த பெறகு முடியெல்லாம் ஒரு விஷயமான்னு தோண ஆரம்பிச்சிருச்சு. அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்திருச்சுண்ணே” என்றாள் பெரிய மனுஷி மாதிரி. “ஆமா தொம்பி” என எதுவோ சொல்லத் துவங்கிப் பின் வாயை அடக்கிக் கொண்டான். அதெல்லாம் புரியாத மாதிரி மற்ற இருவரும் தூரத்தில் அமர்ந்திருந்தனர்.

அந்தக் கோணப்பயல் மட்டும் குறுகுறுவென முருகனையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் உடனடியாகவே வீட்டில் இருந்து வெளியேறினான். எதிரே அம்மா நடந்து வந்த போது அவனும் நடையைத் தளர்த்தினான். “ஒரு உசுரை வளர்க்குறது அதுக நல்லா வாழ்றதுக்குத்தான்” எனச் சொல்லிவிட்டு அம்மா வீட்டை நோக்கிப் போனாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் எனக் கொஞ்ச நேரம் நின்று பார்த்தான் முருகன்.

வருஷநாடு போய் நல்லதாய் இரண்டரை அடிக்கு ஒரு அருவாளை அடித்துக் கொண்டு வந்து, அதுவே துணையெனப் படுக்கத் துவங்கினான் முருகன். அம்மா சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதேசமயம் முன்வைத்த காலை பின்வைக்க முடியாது என்பதையும் உணர்ந்தான். எந்த நேரமும் அவனைச் சுற்றி ஆட்கள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டான். அப்போது, “ஒருத்தன் கூட்டம் சேர்க்கிறான்னா, தனிச்சு நிக்கிற மனசை விட்டுட்டான்னு அர்த்தம்” என்றார் ஒருத்தர், அவன் காதுபடவே.

அவரை ஓங்கி அறையலாம் எனத் தோன்றிய கணத்தில், கூடவே வேண்டாமென்கிற எண்ணமும் வந்தது முருகனுக்கு. ஆனாலும் ஆட்கள் உடனில்லாமல் இருப்பது நல்லதல்ல என்கிற முடிவிற்கே வந்து சேர்ந்தான். பொதுவாய் இதுமாதிரி ரௌடி வாழ்வில், வீரியத்தைவிட காரியம்தான் பெரிசு என்பதை அனுபவத்தில் கற்றும் கொண்டிருந்தான். உண்மையில் முகத்தில் நைச்சியத்தைத் தேக்கி நடிகன்மார்கள் மாதிரியும் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும் இந்தத் தொழிலில்.

உள்முகம் வெளுத்துவிடுமோ என்கிற கவலையை உதறி, முகத்தில் அச்சத்தைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி சந்தையில் வளைய வந்தான் முருகன். சந்தையில் கால்வைத்த போது இருந்ததைப் போல, விடக்கூடாது இந்த வாழ்வை என்கிற வைராக்கியத்தைத் தனக்குள் திரட்டிக் கொள்ளப் போராடினான்.

எவ்வளவு கவனமாக அலைந்தாலும், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தபோது, பழக்கமான குடும்பப் பெண்ணொருத்தியைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போகையில் நிதானம் தவறிவிட்டான் முருகன். வெளியூரில் இருந்து வந்த மூவர் கொண்ட குழு அவனைச் சுற்றுப் போட்டது. பளபளக்கிற அரிவாள்களைக் கண்டதும் அந்தப் பெண், “சாமி சாமி என்னை விட்டிருங்க. படுத்தா நாலு காசு கெடைக்கும்ணு வந்த தேவிடியா நானு” என்றாள்.

உயிரென்றதும் சடக்கென அவள் மாறிய விதம்தான் முதலில் அவன் முகத்தில் அறைந்தது. அடுத்ததாய் அவனுக்குள் இருந்த நாய் விழித்துக் கொள்ளவே எழுந்து ஓடத் துவங்கினான். பின்னாலேயே அவர்கள் அவனை விரட்டிக் கொண்டு ஓடினார்கள். சந்தையின் வெளி விளிம்பில் ஓடியவனுக்குள் மேற்கொண்டு எங்கே ஓடுவது? என்கிற கேள்வி எழுந்தது.

மாடு நுகத்தடியைப் போட்டதும் பழக்குவிக்கப்பட்ட தன் தடத்தை நோக்கி நடைபோடுவதைப் போல வீடு இருக்கும் திசை நோக்கி வெறிகொண்டு ஓடத் துவங்கினான். முருகனின் ஓட்டத்திற்கு வந்தவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதலில் ஒருத்தன் தவங்கிப் போய் நின்று கொண்டான். அடுத்ததாக இன்னொருத்தனும். கடைசியாக இருந்தவன் முருகனை விட வீச்சுடையவன் என்பதால் விடாமல் விரட்டிக் கொண்டு ஓடினான்.

அந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் பொருளீட்ட முடியாது என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. வீட்டை நெருங்கின சமயத்தில் கால்தடுமாறி பெருஞ்சப்தமெழுப்பி விழுந்தான் முருகன். நெஞ்சில் காற்று கட்டிக் கொண்டு பேரிளைப்பு வந்தது. மல்லாக்கப் படுத்த அவனை நெருங்கி அரிவாளோடு நின்றான் அவன். வெட்டுவது குறித்துத் திட்டமிடுகிற தருணத்தில் அவனது காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட உருவத்தைக் குனிந்து பார்த்தான்.

முருகனுமே பார்த்தான் அக்காட்சியை. கோணப் பயல் அவனது காலைக் கட்டிக் கொண்டு ஏங்கியேங்கி அழுதான். முகத்தைக் கோணி வாயினோரம் கோழை சுனையைப் போல வழிய, உள்ளத்தை உருக்குகிற மாதிரி அழுதான். அரிவாளோடு நின்றவன் அவனையே கூர்மையாக உற்றுப் பார்த்தான். இடையில் கையெடுத்துக் கும்பிட்டுக் காட்டிக் கோணப் பயல், மீண்டும் அவனது காலைப் பிடித்து அழுதான். கருணை என இத்துணூண்டாவது மனதில் இருக்கிற எந்த மனுஷனையும் கலங்கடித்து விடுகிற காட்சியாக இருந்தது அது.

வெட்ட வந்தவன் என்ன நினைத்தானோ, திரும்பித் தான் வந்த திசையில் ஓடத் துவங்கினான். அமர்ந்த நிலையிலேயே முருகன் சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு எழுந்து நின்றும் வேறு யாராவது இருக்கிறார்களா? என நோட்டமிட்டான். இளைப்படங்கி தனது முழங்காலைக் கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்து கோணப்பயலையே குறுகுறுவெனப் பார்த்தான்.

வழிந்த கோழையைச் சட்டையைக் கொண்டு துடைத்துவிட்டு, கண்களில் மிச்சமிருக்கிற நீர்பொங்க மலர்ந்து சிரித்தான் அவன். சற்றுமுன்னரான பெருந்துயரத்தைச் சட்டென எப்படிக் கடந்தான்? அப்போது தனக்குப் பின்னே அம்மாவின் நிழலாடிய காட்சியும் தெரிந்தது. அம்மா தன்னைக் கவனிக்கிறாள் என்பதை உள்ளூர உணர்ந்த பிறகு சுருக்கென அதைச் சத்தமாகச் சொன்னான் முருகன்.

“ஆனாலும் நல்லா நடிக்கிறடா நீயி”.

முருகனுக்குச் சீனிச்சேவு திங்க வேண்டும் போலவிருந்தது அப்போது.

The post சீனிச்சேவு first appeared on கனலி.

சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

23 December 2024 at 05:53

”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள்.

சென்னையின் பரபரப்புகள் பாதிக்காத ஆழ்வார்பேட்டையின் டி.டி.கே சாலையில் மேலும் ஆழ்ந்த அமைதியுடன் நாடக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்திருந்த அந்தச் சபாவின் பெரிய காலியான அரங்கை எதிர் நோக்கியிருந்த சூர்யா அவளைப் பார்க்காமலேயே சோர்வாக “அந்த நாடகத்த அப்படியே போடலாமே. இன்னைக்கும் பெரிய மாற்றம் தேவைப்படாது” என்றான். அவர்கள் இருவரின் குரல்களும் அரங்கை மோதித்தெறித்து எதிரொலித்தது.

“இல்ல. எனக்கு அப்படித்தோணல. இருபத்தி மூனு வயசுல அதை நடிச்சப்ப பரவசமாவும் புரட்சிகரமானதாவும் இருந்துச்சு. இப்போ முப்பத்திரண்டு வயசுல அப்படித் தோணலடா”

“ம்”

“கத ஞாபகம் இருக்கா உனக்கு”

கையை நீட்டி சோம்பல் முறித்தபடி,“ஓ! இருக்கே. ஆண்மையில்லாத அரசன். கன்னிமையோடு இருக்கும் அரசி சீலவதி. வேற அரசனோட இரவைக் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்வாங்க. அந்த நிகழ்வுல கலந்துக்கிட்டு அவளோட ஒரு இரவைக் கழிக்கும் காதலன்.” அவள் முகத்தைப் பார்த்து “நீயும் வினோத்தும் நடிச்சீங்க அதுல” ஏதோ கசப்பை உணர்ந்தவனாக மேலும் இடைவெளி விட்டு ”ஆனா நாடகம் எதிர்பார்த்த அளவுக்கு போகலயே. அதுவும் நினைவிருக்கு” என்றான்.

“நாடகம் சரியாப் போறத பத்தியெல்லாம் என்னைக்கு நாம யோசிச்சிருக்கோம்” என மாயா அவன் சொல்வதைப் பொருட்படுத்தாத தொனியில் சொன்னாள்.

“சுரேந்திர வர்மா சார் கிட்ட பெர்மிஷன் வாங்கனும். தமிழ்ல மொழிபெயர்ப்பு வந்திருக்கு பதிப்பகத்துகிட்டயும் அனுமதி வாங்கனும்” என்றான்.

“நான் சொல்றத மொதல்ல காதக் குடுத்து கேளு. அந்த ப்ளேயை நான் அப்படியே போடப்போறதில்ல. அது முடியற இடத்திலிருந்து இன்னொரு நாடகத்த எழுதிருக்கேன். அதத்தான் போடனும்னு சொல்றேன்”

“ஓ! அதான் முடிவு பண்ணிட்டியே”

“நான் என்ன எழுதிருக்கேன்னு கேக்கனும்னு தோணல இல்ல”

”அது கிரேட் ப்ளே. அப்படியே எடுக்கலாம். இன்னும் ரெலவன்ஸ் இருக்கு”

அவனை நோக்கி இருக்கையை முழுமையாகத் திருப்பி நேராக உட்கார்ந்து அவன் கண்களைப் பார்த்தவாறு “உனக்கு நான் சொல்றது புரியலன்னு நினைக்கிறேன். சுரேந்திர வர்மா எடுத்தது பெண்ணியச் சாயலோட இருக்கு. இன்னைக்கு இன்னும் அதே பிரச்சனை இங்க இல்ல.” என்று கூறி சற்று நிறுத்தினாள். அடுத்து அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று புரிந்தவன் போல் சூர்யா உடலைத் தளர்த்தினான்.

 ”கட்டுக்கடங்காத சுதந்திரம். குற்றவுணர்ச்சியில்லாததன்மை.” கலைந்து கலைந்து பேசினாள். சற்று நிமிர்ந்து உட்கார்ந்து ”நாம சுதந்திரம்னு நினைச்ச எதுவும் அத்தனை மகிழ்ச்சிகரமானதா இல்லயோன்னு தோணுது.” என்றாள்.

“எனக்கு ஒட்டுமொத்தமாவே இந்த ப்ளே மேல இண்ட்ரஸ்ட் இல்ல. மார்டன் தியேட்டர்ஸ்ல இந்தமாதிரி பழைய புராணங்கள நாடகமா நிகழ்த்தறத பத்தி வினோத் விமர்சனம் செய்யறதக் கேட்டிருக்கேன். எனக்கும் கூட அவன் கருத்துல ஒரு சாய்வு உண்டு. புராணம். இதிகாசம். புல்ஷிட்” என முகத்தைச் சுழித்தான்.

மாயா எரிச்சல் அடைவது தெரிந்தது. அதை அடக்கியவளாக “நீ காதாப்பாத்திரங்கள பற்றி மட்டும் யோசிக்கற. நான் அது வழியா வர்ற கேள்விகள பாக்கறேன். அது காலத்துக்கும் மாறாது. பதில் வேணும்னா ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறும்”

“நான் அதப்பத்தி மட்டும் சொல்லல.”

“தெரியும். ஆனாலும் கூட இரு.”

அவன் தன் கனத்த சுருள் மண்டையை உதறியவனாக ” நீ சொன்னா அந்த செண்ட் தாமஸ் மெளண்ட்ல இருந்து கூட தலைகீழா குதிப்பேன் மாயா. சரி சொல்லு. எங்க இருந்து ஆரம்பிக்கப் போற?” என்றான்.

புருவத்தை உயர்த்திக் கோணலாகச் சிரித்தபடி மேலும் நிமிர்ந்து உட்கார்ந்து,”மேடை அமைப்புல இருந்தே ஆரம்பிக்கனும். மேடை அரங்கத்த இரண்டா பிரிக்கனும். ஒரு பாதி, குறிப்பா இடது பக்கம் எனக்குத் தண்மையை அளிக்கக்கூடிய ஒரு காட்சியமைப்பை உருவாக்கனும். அடர்ந்த நீலமும், வெள்ளையும் பிரதானமா இருக்கனும். வலது பக்கம் இருக்க வேண்டியது ஒரு பிரம்மாண்டமான படுக்கை. கதகதப்பும், ஏகாந்தமும் தெரியும்படியான சிவப்பு ஒளி கொடுக்கனும். சிவப்பு நிறத்தோட பல வேரியண்ட்ஸ்ல..” என்று சொல்லிவிட்டு முன்னால் திரும்பி மேடையை வெறித்துப் பார்த்தாள்.

”சிவன்-சக்தி மாதிரி கற்பனை பண்றியா?”

“ரொம்ப மண்டைய அலைய விடாத. ஒரே ஆளுக்குள்ளயே இந்த ரெண்டு தன்மையும் இருக்கு. அதோட உறவாட்டம் தான் இங்க எல்லாமும்னு தோணும் எனக்கு.” என்றாள். “நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்” என சற்று நக்கலாகச் சொன்னாள்.

“போடி. பின்ன நான் நடிக்க மாட்டேன் பாத்துக்க”

“நீ தான் பிரதோஷனா நடிக்கனும்” என்று இயல்பாகச் சொன்னாள்.

அவன் அதிர்ச்சி அடைந்ததை மறைக்க முயல்பவனாக “இது ஏற்கனவே இருக்கற ஒரு நாடகத்தோட தொடர்ச்சினா முதல்ல அந்த நாடகத்துல என்ன நடந்ததுன்னு சொல்லனும் இல்ல?”

“மறந்துட்டேன் பாரேன். நரேட்டர் கட்டாயமா வேணும். நரேந்திரனுக்கு கால் பண்ணிடு. நான் பிரகாஷ் சார், பாலா கிட்ட பேசிடறேன்”

*

 நாள்: செப்டம்பர் 7, 2021. மாலை 6.30-7.30

 நாடகம்: சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்

இடம்: ஆழ்வார்பேட்டை ட்ரீம் நாடக சபா.

பாத்திரங்கள்: அரசன்: ஒக்காக் (பிரகாஷ்ராஜ்), தலைமைச்சேடி: மகத்தரிக்கா (பாலா), அரசி சீலவதி (மாயா), காதலன் பிரதோஷன் (சூர்யா)

இசைக்கருவிகள்: ஹார்மோனியம், சிதார், மிருதங்கம்

கட்டியங்காரன் நரேந்திரன் திறக்கப்படாத மேடைக்கு முன் வருகிறான். அவன் வெண்பட்டு ஜிப்பாவும் கணுக்கால் தெரியுமளவு வெள்ளை கால்சட்டையும் அணிந்திருக்கிறான். பொன்பட்டு நிறத்தில் இடப்பக்கத் தோளில் தொங்கும் சால்வை மறுபக்கம் வலக்கையில் தொங்குகிறது. தங்கநிற வேலைப்பாடு நிறைந்த காலணி மேடையின் கறுப்பான தரையில் மின்னுகிறது. வைரக் கடுக்கன் ஜ்வாலிப்பாக அவன் அசைவுகளில் மின்னி மறைகிறது. கைகளில் பெரிய கங்கணங்களும், க்ரிம்சன் சிவப்புக்கல் பதித்த மோதிரம் ஒரு கையிலும், டீல் பச்சைக்கல் பதித்த மோதிரம் மறு கையிலும் மின்னப் பொலிந்து எழுந்தவன் போல முகம் நிறையப் புன்னகையுடன் உள்ளே வருகிறான். கைகளை அரங்கை நோக்கி விரித்து…

”அரங்கில் குழுமியிருக்கும் நாடக ரசிகர்களுக்கு வணக்கம். இது மாயா எழுதிய நாடகம். இந்தி நாடக ஆசிரியர், வாத்தியார் சுரேந்திர வர்மாவின் ”சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக்” அதாவது“சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை” என்ற புகழ்பெற்ற நாடகத்தை அறிந்திருப்போம். அதிலிருந்து அடுத்த கட்ட நகர்வான ”சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்” நாடகம் இப்போது, இங்கே நிகழவிருக்கிறது.

முதல் கதையின் எளிய சுருக்கம் இதோ உங்களுக்காக…

மாலவத்தின் அரசர் ஒக்காக் திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் அரசி  சீலவதியை கருவுறச் செய்ய இயலாமல் இருந்தார். அரசி கருவுறுவதற்காக கடமைப்பாவையாகி நியோக முறைப்படி மூன்று முறை பிற ஆணுடன் கூடியிருக்கலாம் என்றும், அந்த ஆணை அவளே தேர்ந்தெடுக்கலாம் என்றும் முடிவுசெய்யப்பட்டது. தன் இணையை அரசி தேர்ந்தெடுக்கும் அந்த நிகழ்வுக்கு எதிர்பாராமல் வந்த அவள் காதலன் பிரதோஷனுக்கு அவள் மாலை அணிவிக்கிறாள். அவனுடனான முதல் இரவில் முதல் முறையாக ஒரு ஆணுடன் முழுமையாகக் கூடியிருப்பதன் இன்பத்தை அவள் அறிகிறாள். அது கொடுக்கும் எழுச்சி இந்த உலகையே வேறொன்றாக அவளுக்குக் காட்டுகிறது. ஒக்காக் இந்த இன்பத்தைத் தனக்கு ஐந்து வருடமாக மறைத்து வைத்திருப்பது துரோகம் என்று அவள் கருதுகிறாள். ஒக்காக்கிடம் மட்டுமல்ல ராஜகுரு, முதல் மந்திரி என யாவரிடமும் அவள் தான் அனுபவித்த அந்த இன்பத்தின் உச்சியிலிருந்து உரையாடுகிறாள். மீதமிருக்கு இரு வாய்ப்பையும் பயன்படுத்தி தன் வாழ்நாளில் தான் அனுபவிக்கச் சாத்தியமான இரு இரவுகளையும் அடைய விரும்புவதாகச் சொல்கிறாள். ஒரு பெண்ணுக்குச் சமூக இடம், பௌதீக வசதி, உணர்ச்சி நிறைவு, உடல் சுகம் என பல்வகை காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் தேவை உள்ளதாக ஒக்காக்கிடம் சீலவதி சொல்வதோடு நாடகம் முடிகிறது. அடுத்த வாரத்திற்கான நிகழ்வுக்கான தண்டோரா சத்தத்துடன் கூடிய அறிவிப்போடு சுரேந்திர வர்மாவின் நாடகம் முடிகிறது. மாயாவின் நாடகம் இரண்டாவது இரவைப் பற்றியது.”

கட்டியங்காரன் மேடையின் மறைவுப்பகுதிக்கு சென்றுவிடுகிறான்.

(மேடை முழுவதும் திறக்கப்படுகிறது. உள்ளே வலது இடது எனப் பிரிக்கப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிறத் திரைகள் போடப்பட்டுள்ளன. வலப்பக்கம் இருக்கும் வெள்ளைத்திரை மட்டும் திறக்கப்படுகிறது. முழு நிலவு மேலெழுந்துள்ளது. வெண்மையும் அடர் நீலமும் கலந்த ஒளி வலப்பக்க மேடையை நிறைத்துள்ளது. அரசர் ஒக்காக் வெண்பட்டு ஆடையையும், தென் நாட்டின் முத்துக்களையும் அணிந்திருக்கிறார். தலைமைச் சேடியான மகத்தரிக்கா அடர் நீல நிறத்தில் சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டியிருக்கிறாள். அவள் காலில் கறுப்பு நிறக்கயிறும், காதிலும், கழுத்திலும், கைகளிலும் வெள்ளியாலான தடித்த வளைய ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள்.)

காட்சி 1

(கட்டியங்காரன் குரல்: அரசரான ஒக்காக் அமர்ந்திருக்கிறார். அரங்கில் பணிப்பெண்ணான மகத்தரிக்கா மதுக்கோப்பைகளைத் துடைத்தபடி அவர் அருகில் நின்று கொண்டிருக்கிறாள்.)

மகத்தரிக்கா: அரசே அகிபீனா கொண்டு வரட்டுமா? தூங்குவது நல்லது.

ஒக்காக்: வேண்டாம். நான் பழகிவிட்டேன் மகத்தரிக்கா. மதுகூட தேவைப்படாது. நான் விழித்திருக்க விரும்புகிறேன். உலகின் எத்தனை கோடி உயிர்கள் இந்த இரவு உடலின்பத்தில் மூழ்கி திழைத்துக் கொண்டிருக்கும் இல்லயா?

ம: ம்…

ஒ: இன்று உன் அருகாமை கூட எனக்கு அவசியமில்லை. நீ நிஜமாகவே வீட்டுக்குப் போகலாம். உன் கணவன் ஊரில் இருக்கிறான் தானே. எனக்காக உங்கள் இனிய இரவை நீங்கள் பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம்.

ம: (சிரிக்கிறாள்…)நீங்கள் சங்கோஜப்படவில்லையானால் ஒன்று சொல்லட்டுமா.

ஒ: அழகே மகத்தரிக்கா! நாம் சங்கோஜப்பட்டுக்கொள்ள இனி என்ன இருக்கிறது. என் அனைத்துப் பலவீனங்களையும் அறிந்தவள் நீ. என்ன வேண்டுமானாலும் சொல்.

ம: இன்று நான் வீட்டுக்கு விலக்காயிருக்கிறேன். எனக்கு இரண்டாவது நாள்.

ஒ: (வாய்விட்டு சிரிக்கிறார்…) மகத்தரிக்கா.. இந்த மாதிரி நேரத்தில் தானே உன் கணவனின் அரவணைப்பு தேவை? நீ வீட்டுக்குச் சென்று ஓய்வெடு.

ம: அரவணைப்பா. அவர் என் அருகே கூட வரமாட்டார். ஆயிரம் வேலைகள் அவருக்கு. நான் சூதப்பெண் என்பதால் இந்த நாட்களிலும் வேலை இருந்தால் செல்லத்தான் வேண்டும். அவர் இரவு படுக்கைக்கு அழைக்க முடியாத எரிச்சலில் வேறு இருப்பார். அவரையும் குற்றம் சொல்வதிற்கில்லை. கடும் உடலுழைப்பு செய்யக் கூடியவர். நான் இங்கேயே இருக்கிறேன்.

ஒ: சீலவதிக்கு இரண்டு நாட்கள் தான் மாதவிலக்கு ஆகும். முதல் நாள் துடிதுடித்துப் போவாள். முதல் முறை அவளை அப்படி பார்த்தபோது நான் பதற்றமடைந்துவிட்டேன் மகத்தரிக்கா. அவள் அருகிலேயே இருப்பேன். இந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு மாதமும் அவளை விட நானே அவளுக்கு தேதியை நினைவூட்டுவேன். (இடைவெளி)

ம: அரசே! ஒன்று சொல்லட்டுமா

ஒ: நீ என் பாங்கியாகிவிட்டாய் இந்த இரவுகளின் வழி. தயங்காமல் சொல் மகத்தரிக்கா.

ம: (புன்னகைத்துக்கொண்டே…)

அரசே… நீங்கள் எல்லாப் பெண்களும் கனவுகளில் விரும்பும் சிறந்த காதலர். கணவனாக்கிக் கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்பக்கூடியவர்.

ஒ: இந்த இரவில் அவளுக்கு ஒரு கணம் கூட என் நினைவு வர வாய்ப்பில்லை என்பதையே சென்றமுறை அவள் உறவு முடிந்து வந்து பேசிய பேச்சில் உணர்ந்தேன். அந்த அளவுக்கு இந்த உடல் பந்தம் பெரிய பிணைப்பை உருவாக்குமா மகத்தரிக்காக? நான் வாழத் தகுதியற்றவன் போல உணர்கிறேன். இந்த ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளும் நான் தற்கொலை செய்வதைப் பற்றியே யோசித்தேன். இயற்கைக்கு முரண் எனில் பல கோடி விந்துகளில் என்னை ஏன் என் அன்னை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்? நான் பிறந்திருக்க வேண்டாம் மகத்தரிக்கா.

மது வேண்டும். எடுத்து வருகிறாயா?

ம: எடுத்து வருகிறேன் அரசே! (மகத்தரிக்கா கோப்பைகளைத் துடைத்து மதுவையும், பழங்களையும் எடுத்து வைக்கிறாள். முதல் கோப்பையை ஊற்றியதுமே உடனடியாகக் காலி செய்துவிட்டு அவளைப் பார்க்கிறான் ஒக்காக்.)

ஒ: சொல். நான் பிறந்திருக்கவேண்டாமே?

ம: எனக்குச் சரியாகத் தெரியவில்லை. எந்தக் காரணகாரியமும் இன்றி ஒரு நிகழ்வு நிகழ்வதில்லை என அன்னை நம்புவாள். அதையே நான் என் வாழ்க்கைக்கும் எடுத்துக் கொண்டேன்.

உடல் என்பது கணவன் – மனைவி உறவில் ஆரம்பக்காலப் பிணைப்பை எளிதில் உருவாக்கக்கூடியது என்பது மறுப்பதற்கில்லை. இளமையின் கனவுகள் அதனால் நிறைந்தவை. உடலின் மாற்றங்கள், வனப்புகள் என நம் கண் முன் அவை நீண்டு கொண்டிருக்கையில் அவை புறந்தள்ளமுடியாதது தான். இளவயதில் புறமாகவே ஒருவர் நம்மை ஈர்க்கிறார் முதலில். ஆனால்… அதன்பின் வாழ்வு அதை மட்டும் சார்ந்ததல்ல.

ஒ: மகத்தரிக்கா. உடல் உறவு இல்லாமல் ஒருவர் இன்னொருவருடன் இணக்கமாக வாழ்ந்துவிட இயலும் என்கிறாயா?

ம: சிந்தித்துப் பாருங்கள் அப்படி எத்தனை உறவுகள் நம்மிடம் உள்ளன. அன்னை, ஆசிரியர், நண்பர்கள், பிள்ளைகள் இன்னும் எத்தனையோ.

ஒ: ஆனாலும் மகத்தரிக்கா… குடும்பம் என்ற அமைப்பின் அடித்தளமாக உடலுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும் தானே இருக்கின்றனர்.

ம: உண்மைதான். நீங்கள் பெரும்பான்மை பற்றிப் பேசுகிறீர்கள். வரலாற்று நெடுகிலும் சிறுபான்மைச் சமூகம் ஒன்று பிறந்து வாழ்ந்து, மடிந்து கொண்டுதான் இருக்கிறது. யாருடைய பொருட்படுத்தலுக்கும் ஆளாகாமல். சமூக ஏற்பும் மறுப்பும் அரசியல், சட்டம், பொருளாதாரம் எனப் பல காரணிகளால் முடிவு செய்யப்படுகின்றன. நாளையே அவை மாறலாம். ஆனால் உயிர்-இயல் அதைக் கடந்தது.

ஒ: இயற்கைக்கு முரண் என நீ நினைக்கவில்லையா?

ம: இயற்கை பேரன்னையின் வடிவம் என்று என் அன்னை சொல்வாள். வலுத்தது வாழும் என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமாக இந்த வரலாற்று வீரர்கள் முதிர்ச்சியின்றிப் பிதற்றிக் கொண்டது என்று சொல்வாள். அவர்களே அங்ஙனம் வீர வசனம் பேசி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாய்ந்து போவதைக் கால நெடுகிலும் பார்த்த பேரன்னைகளின் சாட்சியாய் அவள் சொன்ன வரி அது. போரில் மாண்டு போகிறவர்களைக் குறிப்பிட்டு இயற்கைக்கு எந்த ஆற்றலை அழிக்க வேண்டும் என்பது தெரியும் என்பாள். கனிவும், கருணையும் இல்லாதவைகளே அழிகின்றன அரசே!

ஒ: (கண் கலங்குகிறான்.) இந்தப் பொழுதில் நான் என் தந்தையிடம் பேரன்பு வைத்திருந்த ஆணிலியை நினைத்துக் கொள்கிறேன். நான் சீலவதியைக் காதலிக்கிறேன் மகத்தரிக்கா. (மேலும் ஒரு கோப்பை மதுவை அவனே விரைவாக ஊற்றி அருந்துகிறான்.)

ம: அதற்கிணையாகவே பெண்ணிலிகளும் உண்டு அரசே! நீங்கள் செய்ய வேண்டியது அரசியைக் கனிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே. அவள் அந்தச் சக்தி பீடத்திலிருந்து தணிந்து வரும்வரை அவளுக்காக நீங்கள் இந்தக் காலகட்டத்தின் எந்த மதிப்பீடுகளும் இன்றி காத்திருக்க வேண்டும். அவள் அங்கிருந்து இறங்கி வந்து விரிந்த கரத்துடன் உங்களை சிறுமகவாக்கி அன்னையாக ஆகலாம். இல்லையெனில் அவளே சுருங்கிக் குழைந்து உங்கள் கைகளில் சிறுமகவாக ஆகலாம்.

இந்த இரண்டும் நிகழவில்லையெனினும் நீங்கள் இந்த வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் அரசே! உங்கள் மக்களுக்காக, இந்த நாட்டுக்காக உங்கள் கடனை முடிந்து நிறைவெய்த வேண்டும். பாண்டு மகாராஜாவுக்குக் கிடைத்த மாத்ரி போல உங்களுக்கு ஒருவள் கிடைப்பதன் பொருட்டு நீங்கள் காத்திருக்கலாம்.

ஒ: (கைகளால் முகத்தைப் பொத்தி அழுகிறார். மீண்டும் ஒரு கோப்பை மதுவை எடுத்துச் சிந்தியவண்ணம் பாதியை மட்டும் குடிக்கிறார்.) அவையெல்லாம் காவியத்தில் மட்டுமே நிகழக்கூடியது. பொய்கள். மகாவியாசரை நான் வெறுக்கிறேன்.

ம: கதைகள் விண்ணிலிருந்து மட்டும் முளைவிடுவதில்லை அரசே. அவை பெரும்பாலும் மண்ணுக்குரியதே.

ஒ: (அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறான்) இந்த ஆறு நாட்கள் ஒவ்வொரு இரவும் நான் உறக்கமில்லாமல் தவித்தேன் மகத்தரிக்கா. கடந்து போன ஒரு இரவில் அவள் பிறனுடன் கொண்ட உறவை நினைத்தும், வரவிருந்த இந்த இரவை நினைத்தும் நான் வாழாவிருந்தேன்.

ம: அரசே! முன்னைய இரவை விட நீங்கள் பதற்றம் தணிந்திருக்கிறீர்கள். முன்பு மணல் கடிகாரத்தைத் துளித்துளியாக எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். எந்தத் துன்பமும் அப்படித்தான். மெல்ல நம்மை இலகுவாக்கி அதை நம் வாழ்வோடு பிணைத்து ஏற்றுக் கொள்ளச் செய்யும். நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் உங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வை.

ஒ: (புன்னகைத்து அவள் கண்களைக் கனிவுடன் நோக்குகிறார்) தனித்திருக்கும் இந்த அல்லி இன்று என்னை உளம் விரியச் செய்கிறது மகத்தரிக்கா. நானே இன்று அந்த சக்கரவாகப் பறவைக்குத் தாமரைத்தண்டின் சாற்றை அளிக்கிறேன்.

ம: (புன்னகைக்கிறாள்) அது நித்தமும் உணவளிக்கும் அரசியை உங்களில் இன்று கண்டு கொள்ளலாம்.

ஒ: (எழுந்து மாடத்தின் முனியில் நின்று குளத்தை நோக்கி கைகளை விரிக்கிறார். குளத்தின் முனையிலிருந்த மரத்தில் சக்கரவாகப் பறவை வந்து தனியே அமர்கிறது. அவர் தாமரைத்தண்டின் சாற்றைக் கைகளில் ஏந்தியதும் அவர் தோள்களில் வந்து அது அமர்கிறது.)

(மென்மையாக) இந்த இரவு யாவருக்கும் இனிமையாகுக!

(ஹார்மோனியம்…)

(திரை மூடப்படுகிறது)

காட்சி 2

கட்டியங்காரன்: அரசி சீலவதியும், இந்த இரவில் அவளுடன் உறவு கொள்ள அவள் தேர்ந்தெடுத்த காதலன் பிரதோஷனும் மஞ்சத்தில் இருக்கிறார்கள்.

(இடப்பக்கத் திரை மூடப்பட்டு வலப்பக்கத் திரை திறக்கப்படுகிறது. இளஞ்சிவப்பும் அடர் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒளியூட்டப்பட்ட அரங்கு. சீலவதி பிரதோஷனின் மார்பில் சாய்ந்திருக்கிறாள். அடர் ரத்தச் சிவப்பு நிற வெல்வெட் போர்வையை இருவரும் போர்த்தியிருக்கிறார்கள்)

சீலவதி: பிரதோஷ்ஷ்…

பிரதோஷன்: ம்…

சீ: மகிழ்ச்சியாக இருக்கிறாயா?

பி: ஓ…

சீ: (அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.) ஆறு நாட்கள் முழு நிலவு தேயும் ஒவ்வொரு இரவையும் கடத்த நான் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா?

பி: (உத்தரத்தைப் பார்த்துக் கொண்டே எதையோ யோசித்தபடி)ம்.

சீ: (அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி…) உனக்கு அவ்வாறு இல்லயா? வேறு பெண்கள் நிறைய இருக்கிறார்களா? ஏன் பேசவே மாட்டேன் என்கிறாய்.

பி: எல்லாப்பெண்களுக்கும் ஒரே கேள்வி. (புன்னகைத்தவாறு எழுந்து அமர்கிறான்)

சீ: எல்லாப்பெண்களும் நானும் ஒன்று இல்லை (சிணுங்கியவாறு சொல்கிறாள்)

பி: ஐந்து வருடங்களுக்கு முன் என்னை நீ இக்கேள்வியைக் கேட்டிருந்தால் இதை விட உணர்ச்சிகரமாகப் பல இனமொழிகளைச் சொல்லியிருப்பேன் சீல். நீ திருமணமாகிச் சென்ற இரவு ஒவ்வொரு மணித்துளியையும் கடத்தச் சிரமப்பட்டேன். அதன் பின் மெல்ல அதிலிருந்து விலகவே வணிகத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டேன். மறுக்கப்பட்டவர்களே உலகின் அனைத்து இன்பங்களையும் தேடி அடைவார்கள். செல்வத்தைத்தவிர எனக்கு எந்த ஒன்றும் பெரிதாக இல்லை. அனைத்தையும் அது அளித்தது. எந்தப் பெண்களையும் நான் விலைக்கு வாங்கிக் கொள்ளவில்லை. ஓரிரவுக்கே அழகிகளை என்னால் தேவைப்படும்போதெல்லாம் தேடிக் கொள்ள முடிந்தது. கடல் கடந்து சென்ற எத்தனை இடங்கள். எத்தனை அழகிகள். பெரும்பாலும் மறந்துவிட்டன.

சீ: (முகம் மிகவும் ஏமாற்றமும் ஏக்கமும் கோபமும் கொள்கிறது. அதை மறைக்க முயற்சித்துக் கொண்டே அவள் ஒரு சிவப்பு நிறச் சால்வையை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தவாறு கேட்கிறாள்) பின் ஏன் இங்கு வந்தீர்களாம்? ஒரு பொய்யாவது சொல்லியிருக்கலாம் (சலித்துக் கொள்கிறாள்)

பி: (அவன் அவளைப் பார்க்கிறான்) அந்த எல்லாப் பெண்களிலும் உன்னைத்தான் தேடினேன் சீல். அதனால் தான் ஐந்து வருடங்களுக்குப் பின்னும் இந்த செய்தி கேள்விப்பட்டதும் உன்னைச் சந்திக்க வந்தேன். ஆனால்…

சீ: என்ன ஆனால்?

பி: இன்று இந்த அறையில் உன் இந்தத் தாபப் பார்வையில் நான் என்னை இதே போல நோக்கி அறிவழிந்து கண்ணீர் விட்ட வேறுசில பெண்களின் முகத்தையும் காண்கிறேன்.

சீ: (சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனை அந்நியன் போல் பார்க்கிறாள்.) பிரதோஷ்! உண்மையாகவா?

பி: இந்த ஐந்து வருடத்தில் என்னை நீ நினைத்ததுண்டா?

சீ: ஆரம்பத்தில் எப்போதாவது. பின்னர் ஒவ்வொரு இரவிலும் அவரின் குளிர்ந்த தேகத்தை அணுகி அனலாக்கி வெறுமையோடு திரும்பி வரும்தோறும் நீ என்னிடம் கெஞ்சி மன்றாடியதை நினைத்து அழுதிருக்கிறேன்.

பி: (சிரிக்கிறான்) அரசர் இயல்பாக இருந்திருந்தால்?

சீ: (கோபமாக) தெரியவில்லை. வணிகர்களுக்கே உரிய குறுக்குப்புத்தி.

பி: சீலவதி. உன்னைக் கடக்கவே முடியாது என்று நினைத்தேன். ஆனால் இன்று உணர்கிறேன். நீ என்பது எனக்கு ஒரு நிமித்தம் மட்டுமே. எத்தனை காதல்களை உதாசீனப்படுத்தியிருக்கிறேன்? அதுவும் இது தான். (அரங்கத்தை வெறிக்கிறான்..)

சீ: உன்னுடைய கணக்குகளையும் அறிவையும் கழற்றிவைத்து விட்டு இந்த ஒரு இரவாவது என்னுடன் முழுப்பைத்தியமாக இருக்கக்கூடாதா?

பி: முதிர்வில்லா காதலில் அது சாத்தியம் தான் சீல். ஆனால் நான் சென்றபின் இதை மிகவும் கனப்படுத்தி நீ உன் வாழ்க்கையைத் தொலைத்து விடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். மேலும் நான் முழு வணிகன். வணிகன் நல்ல காதலனாக உண்மையில் இருக்க முடியாது. நடிக்க வேண்டுமானால் முடியும். என்னால் உணர்வு மேலான இடத்தில் அதைச் செய்ய இயலவில்லை. அப்படிச் செய்வது இந்தப் பாதையிலிருந்து பிய்த்துச் சென்று என்னைப் பைத்தியமாக்கிவிடும். அதை விரும்புகிறாயா?

சீ: இல்லை. அப்படி இல்லை. உங்களுக்கு என்மேல் காதல் இல்லை. அவ்வளவுதான். அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்.

பி: (அவன் மிகவும் சோர்வாக) அது நீ கற்பனை செய்து கொள்வது. உன் தாழ்வுணர்ச்சியிலிருந்து வருவது.

சீ: சீ! நீயும் ஒரு ஆண்மகனா? எது தாழ்வுணர்ச்சி சொல்? உன் விஷத்தைக் கக்கிவிடு

பி: (எதையோ உணர்ந்தவனாக.) இது இப்படித்தான் முடியும் என்பதை அறிந்திருந்தேன்.

சீ: (ஏளனமாக) அனுபவசாலி இல்லயா?

பி: இப்போது என்னைத் தாக்க ஆரம்பித்துவிட்டாய். அனுபவசாலி என்பதை இரு இரவுகளில் அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன். இல்லையெனில் மூன்றாவது இரவில் வேறொருவனுடன் உறவு கொண்டு ஒப்பிட்டுப்பார்.

சீ: (தலையில் அடித்துக் கொள்கிறாள்) சீ! சீ! என்னை அருவருப்பாக உணர்கிறேன்

பி: இதற்குமேல் இங்கிருக்க வேண்டாம் என நினைக்கிறேன். அது இருவருக்குமே நல்லது. நான் செல்கிறேன் (எழுந்து உடைகளை மாற்ற ஆரம்பிக்கிறான்)

சீ: (எழுந்து மேலும் இறுக்கமாகச் சால்வையைச் சுற்றிக் கொண்டு பதற்றத்துடன் பிரதோஷனின் கால்களைப் பாய்ந்து பற்றி..) வேண்டாம். செல்ல வேண்டாம். இன்னும் சூரியனின் முதல் கிரணம் நம்மை வந்து தொடவில்லை. செல்லாதீர்கள் (கதறி அழுகிறாள்.)

பி: என்னைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்காதே.

சீ: என்னை விட்டுப்போகாதே. (அவள் மேலும் இறுக்கமாகப் பற்றி அழுகிறாள். பிரதோஷன் உறைந்து போய் நின்று முகத்தில் பரிதவிப்பையும், பதற்றத்தையும் கடந்து மெல்ல ஏளனத்தைக் கொண்டு வருகிறான். அவன் அவளை உதறி அவ்வாறே கிளம்பிச் செல்வதைக் கையறு நிலையுடன் சீலவதி துடித்தபடி பார்க்கிறாள். அவன் சென்றபின் அந்த அரங்கம் அதிரும்படி கதறி அழுகிறாள். பலதரப்பட்ட சிவப்பு விளக்குகள் அதிர்வுடன் அவள் மேல் பாய்ச்சி ஒளியூட்டப்படுகிறது. வலுவிழந்து அவள் படுக்கையில் சரிகிறாள்)

(மிருதங்கம், சிதார், ஹார்மோனியம்)

(திரை மூடப்படுகிறது.)

காட்சி 3

கட்டியங்காரன்: தண்மையின் வலப்பக்கத் திரை திறக்கப்படுகிறது. அரசர் ஒக்காக் அமர்ந்திருக்க மகத்தரிக்கா நிற்கிறாள்.

மகத்தரிக்கா: அரசே! பிரதோஷன் வெளியே சென்றுவிட்டார்.

ஒக்காக்: அதற்குள்ளாகவா? இன்னும் சூரியனின் முதல் கிரணம் தொடவில்லையே. இன்னும் இரு நாளிகைப் பொழுதுகள் இருக்கிறதே. எத்தனை நீண்ட காலம்.

ம: (புன்னகைக்கிறாள்)

ஒ: நான் சென்று இப்போது அரசியைச் சந்திக்கலாமா?

ம: இல்லை. வேண்டாம். அவர்களாகவே இங்கே வருவார்கள்.

(ஒக்காக் கலவையான எண்ணத்துடன் இருக்கையில் சாய்ந்தவாறு அமர்கிறான்.

இப்போது வெம்மையின் திரையும் திறக்கப்படுகிறது. இரண்டு அரங்கும் ஒன்றை ஒன்று தொடும் புள்ளி நாடக மேடையின் மையத்தில் ஒளி நிரம்பியதாக உள்ளது.

கட்டியங்காரன் குரல் மட்டும்: “சூரியனின் முதல் கிரணம் வந்து மண்ணைத் தொடுகிறது. பிரதோஷனுடனான முதல் இரவிற்குப் பின் குளிக்க மறுத்து அறையில் நிரம்பியிருக்கும் மதன வாசனையில் திழைக்கவிருப்பதாகச் சொன்னவளுக்கு அறையின் அந்த வாசனை அருவருப்பைக் கொடுத்தது இப்போது. அதை உடலில் வெளிப்படுத்தியவளாகச் சிவப்பு நிற ஆடையை எடுத்து உடலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு எழுந்து அமர்கிறாள். தலைமைச்சேடியான மகத்தரிக்கா அவளை நோக்கி மெல்லச் செல்கிறாள்.

ம: அரசி. குளிப்பதற்கு ஏற்பாடு செய்யட்டுமா?

சீ: (தீர்க்கமாக)ஆம். உடனடியாக. விரிவான தலைக்குளியல் செய்யவிருக்கிறேன். அந்தப்புரத்தின் என் அணுக்கமான அனைத்துப் பெண்களையும் அழைப்பாயாக.

ம: ஆகட்டும் அரசி.

சீ: மகத்தரிக்கா. இந்தக் கட்டிலில் புரண்டு அழுத இரண்டு நாளிகைப் பொழுதுகளும் உன் சொற்களையே நினைவுகூர்ந்தேன்.

ம: எதை அரசி (அவள் புன்னகைத்தாள்)

சீ: உன் புன்னகையிலேயே அதை நீ உணர்ந்தது தெரிகிறது. நடிக்காதே. உன் சூதப்புத்தி நானே சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறதல்லவா?

ம: (பணிவாக. தலையைத் தாழ்த்திக் கொண்டு) இல்லை அரசி.

சீ: (பெருமூச்சுடன்) இனி அவமானப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது. நீ இந்த ஆறு நாட்களாக கூறிக் கொண்டிருந்தாயே, ”நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்படுமளவு அப்படி ஒன்றும் இது பெரிய விஷயமில்லை” என. அதை உணர்ந்தேன். போதுமா.

ம: (சிரிக்கிறாள்) வாழ்வில் முதிர்ச்சியின் கணங்கள் அவ்வாறு தான் “இவ்வளவுதானா” தருணங்களின் தொகையே அவை. அதை அறியாமல் சென்று கொண்டே இருப்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். எல்லாவற்றிலும். நன்று. நீங்கள் விரைவில் உணர்ந்து கொண்டீர்கள்.

சீ: மகத்தரிக்கா… (அவள் கைகளைப் பற்றிக் கொண்டு) உன்னை ஒன்று கேட்கலாமா? உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்.

ம: கேளுங்கள் அரசி

சீ: எனக்கே தெரியும். இருந்தாலும் கேட்கிறேன். நான் அழகாக இருக்கிறேனா?

ம: அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?

சீ: சொல்லடி

ம: நீங்கள் பேரழகி

சீ: அந்த வணிகக் கீழ்மகன் என்னை உதறிச் செல்லும்போது என்மீதே எனக்கு அருவருப்பாக இருந்தது மகத்தரிக்கா.

ம: புரிகிறது அரசி. காதல் இல்லாத இடத்தில் உறவு கொள்வதில் வரும் அருவருப்பு அது. நல்லது.

சீ: (முகத்தைப் பொத்தி அழுகிறாள்) எனக்கு மட்டும் ஏன் இப்படி. எல்லாம் சரியாக இருந்திருக்கக் கூடாதா? சாதாரணமாக இருந்திருக்கக் கூடாதா?

(அரங்கு முழுவதும் இருட்டாகிறது. சீலவதியின் முகத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. அரங்கை மாயா வெறித்துப் பார்க்கிறாள்.)

மகத்தரிக்கா… மாலவத்தின் எல்லையில் இருக்கும் மிக எளிய கிராமம் இந்த்ரி. ஓர் ஏழைக் குடும்பத்தில் ஆறு சகோதரிகளுடன் ஏழாவது பெண் மகவாகப் பிறந்தேன். சிறுவயதிலிருந்தே தந்தையின் அரவணைப்பை அறிந்ததில்லை. முழு வயிறு நிரம்பி நான் தூங்கியதாக ஒரு நாளும் நினைவில் இல்லை எனக்கு. அக்காக்களின் திருமணங்கள், அவர்களின் பாடுகளையும் பார்த்திருக்கிறேன். என் முதல் காதலும் முதல் தித்திப்புமானவன் இந்த பிரதோஷன். அது முறிந்தபோதும் ராணியாக இந்த வாழ்வில் நிறைவு காணவே விழைந்தேன். மிகுந்த கவனத்துடன் என் கன்னிமையைப் பாதுகாத்து அரசனுக்காக எடுத்து வந்து ஏமாற்றம் அடைந்திருந்தேன். பிரதோஷனுக்காக அதை மீண்டும் அளிக்க இந்தப் பிரபஞ்சம் எனக்கு வழிவிட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். எல்லாம் மீண்டு விட்டதாக நினைத்தேன். ஆனால் அவன் வெறுமையை ஏற்றி விட்டு இன்று செல்லும்போது மனம் பதறுகிறது. நான் வேறொன்றை எதிர்பார்த்தேன். என் ஆசை நாயகனாக எப்போதும் அவன் இருப்பான் என. அவனுக்கு எல்லாப் பெண்களும் நானும் ஒன்று என அவன் உணர்ந்ததை அருகிருந்து பார்த்தபோது நொடிந்துவிட்டேன் மகத்தரிக்கா. ஏன் இப்படி நடக்க வேண்டும். ஏன் எனக்கு எதுவும் எப்போதுமே சரியாக நடக்க வில்லை. இந்த ஒரு முறையும் கூட.

(வெளிச்சம் மாத்தரிக்கவின் மேலும் பாய்ச்சப்படுகிறது…)

ம: அரசி… நாம் சரி என்று நினைக்கும் எல்லாமும் எப்போதும் சரியாக இருப்பதில்லை. நமக்கு நடப்பதைத் தவிரப் பிற சாத்தியங்கள் கற்பனையானவை. அதில் நமக்கு எவ்விதத்திலும் கட்டுப்பாடும் கிடையாது. கண் முன் நடப்பவற்றைக் கொண்டு மட்டுமே நம்மால் ஏதாவது முடிவுக்கு வர இயலும்.

ஒருவேளை நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்த யாவும் நடந்திருந்தால் கூட நீங்கள் முழுமையாக மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. அப்போதும் இதே உணர்வையே தான் அடைந்திருப்பீர்களோ என்னவோ.

சீ: (அரசி அவளை நிமிர்ந்து பார்க்கிறாள்..) எல்லாமும் இத்தனை விரைவாகத் தெரிந்து கொண்டிருக்கத்தேவையில்லை. இன்னும் சற்று.. (செல்லமாக அவளைக் கட்டிக் கொள்கிறாள்.)

ம: இதுவே தாமதம் தான். (கண் சிமிட்டுகிறாள்)

சீ: போடி

ம: அரசரைச் சந்திக்க விரும்புகிறீர்களா?

சீ: (எதையோ உணர்ந்தவளாக அவள் தோளிலிருந்து பிரிந்து) இந்த இரு நாளிகைப் பொழுதும் அவரையும் அவர் அரவணைப்பையும் தான் முதலில் நினைவுகூர்ந்தேன் மகத்தரிக்கா. சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின் உலகம் வேறாக இருக்கிறது. அங்கு அவரைத் தவிர என்னால் வேறு யாரையும் சிந்திக்க முடியாத அளவு இந்த ஐந்து வருடமும் அவரே நிரம்பியிருக்கிறார்.

மகத்தரிக்கா எனக்கு மட்டும் ஏன்? உள்ளமும் உடலும் ஒருங்கிணைந்த ஒருவன் கிடைத்திருக்கக்கூடாதா?

ம: (உணர்ச்சிகள் இல்லாமல்) அதுதான் நடக்கவில்லையே. நடந்திருந்தால் இத்தனை உளநாடகங்களை நீங்கள் நடித்துப் பார்த்திருக்க முடியாது. யாருக்கும் கிடைக்காத அனுபவம்.

சீ: ம்.

ம: அரசரும் இதே கேள்வியைத் தான் கேட்டார். நீங்கள் இருவரும் சேர்ந்து அதற்கான விடையைக் கண்டுபிடிக்கலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடி முழுகப்போவதில்லை.

சீ: குடி! ம்.

ம: அரசரைப் பார்க்க விழைகிறீர்களா?

சீ: ம். (எழுந்து நிற்கிறாள்..)

ம: இதோ அமர்ந்திருக்கிறார். உங்கள் வசை மொழிகளைக் கேட்பதற்கென்றே. சென்ற முறையைப் போலவே. ஆனால் இம்முறை குற்றவுணர்வுடன்.

(அரங்கம் முழுவதும் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. சீலவதி வெம்மையான இடத்திலிருந்து நடுவிலிருக்கும் ஒளி நிரம்பிய பகுதியைக் கடந்து மெல்ல தண்மையான பகுதியை அடைகிறாள். உடன் சிதார் இசை மென்மையாக இசைக்கப்படுகிறது.)

ஒக்காக்: (எதுவும் பேசாமல் மெளனமாக எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கிறான். மெல்ல அவன் சீலவதியின் கண்களைச் சந்திக்கிறான். அவனையறியாமல் தவிப்பு வெளிப்பட்டு கண்கள் நிறைகிறது. சீலவதி அவன் மடியில் குழந்தையைப் போல ஓடிச் சென்று சுருங்கிக் கொள்கிறாள். அடக்கி வைத்திருந்தவன் போல அவள் மேல் படிந்து அவனும் கதறி அழுகிறான்)

ஒ: ஓ சீலவதி! என் நினைவு உனக்கு இன்னும் உள்ளதா?

சீ: ம்.

ஒ: உனக்குத் தவறிழைத்துவிட்டேன் இல்லயா?

சீ: (முனகலான குரலில்.) தெரியவில்லை.

ஒ: ஆம். தவறிழைத்துவிட்டேன்.

சீ: இல்லை. அப்படியில்லை.

ஒ: நான் மட்டும் உனக்கு இந்த வாழ்க்கைக்குப் போதும் என்று நினைக்கிறாயா? நீ முழுமையடைவாயா?

சீ: (நிமிர்ந்து அமர்கிறாள்)நான் குழம்பியிருக்கிறேன் அரசே. முழுமையடைவதைப் பற்றி என்னால் இப்போது எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் அதற்கு இன்னொருவர் தேவையில்லை என்பதை மட்டும் நம்புகிறேன். உங்கள் அருகமைவில் மட்டுமே என்னால் மகிழ்ச்சியாக எந்தப் பாவனையும் இல்லாமல் இருக்க முடிகிறது. என்னிடமிருக்கும் அனைத்து வெப்பத்தையும் இந்த வாழ்க்கையில் உங்களுக்குக் கொடுக்க சித்தமாயிருக்கிறேன். உங்களிலிருந்து தண்மையின் இனிமைகளைப் பகிர விழைகிறேன். ஒன்றுக்கும் மேற்பட்ட உடலைப் புணர்வது பற்றிய சிந்தனை ஆன்மாவைக் கத்தியால் பிளந்து கூறுபோடுவதைப் போல் இருக்கிறது. நான் என் ஆன்மாவைக் கண்ணுக்குத்தெரியாத துண்டங்களாக ஆக்க விரும்பவில்லை. உடல்களைத் தேடிச் செல்லும் அந்தப்பாதையின் இறுதியை என்னால் இன்று தரிசிக்க முடிந்தது ஒக்காக். நான் உங்களுடன் உங்கள் காதலில் இந்த அணைப்பிற்குள்ளேயே இருக்க விரும்புகிறேன்.

ஒ: சீலவதி! (இறுக்கமாக அணைத்துக் கொள்கிறான்.)

(திரை மூடப்படுகிறது. முன்னால் தண்டோராக்காரன் வருகிறான். தண்டோராச் சத்தம் முழக்கப்படுகிறது.)

“மல்ல நாட்டின் குடிமக்கள் யாவருக்கும் தெரியப்படுத்தும் செய்தி என்னவென்றால் அரசருக்கும் அரசிக்கும் புதல்வனாக நம் அரசரின் தமையன் ஓரியின் புதல்வன் சிபி தத்தெடுக்கப்பட்டு பட்டத்து இளவரசராக முடிசூடும் விழா வரும் வெள்ளியன்று நடக்கவிருக்கிறது. நாட்டு மக்கள் விழாவுக்குக் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்புச் செய்யுமாறு அரசர் ஒக்காக்கும், அரசி சீலவதியும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்”

(தண்டோரா சத்தத்துடன் திரையில் இருள் கவிகிறது)

***

The post சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின் first appeared on கனலி.

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் கவனத்தை ஈர்க்க, நின்றேன். அவற்றுக்குப் பின்னாலிருந்த வெள்ளைப் பலகையில் அவற்றின் கூரிய நிழல்கள் தெள்ளந்தெளிவாய்த் தெரிந்தன. எனவே பனிக்கூரிகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் நிழலும் பார்க்கக்கூடியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. மேற்கூரை வெளிப்பக்கம் அதிக தூரம் நீட்டிக்கொண்டிருப்பதால் இருக்கலாம் அல்லது நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம் அல்லது சரியான பனிக்கூரிலிருந்து விழும் சரியான துளியை நான் பார்க்காது தவறவிட்டிருக்கலாம். கண்கட்டு வித்தை போல, கூர்முனைகளில் நீர்த்துளிகள் மாறி மாறிச் சொட்டுவதில் காணப்பட்ட லயம், என்னை ஏமாற்றிப் பரிகசிப்பதுபோல் தோன்றியது. அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மேற்கூரை முனைகளில் தொங்கும் பனிக்கூரிகளைப் பார்வையிடும் ஆர்வம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டு கெல்லி சாலையில், சரியாக, சில வருடங்களுக்கு முன்பு டி. குடியிருந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்தது. நான் பணிபுரியும் அதே பெண்கள் கல்லூரியில் பயிற்றுநராக அவன் பணியாற்றிய காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தான்.

அந்த வீட்டை ஒட்டியிருந்த கார் நிறுத்தத்தின் கூரை முகப்பில் நீலவண்ண நிழற்பின்னணியில் தெள்ளந்தெளிவான பனிப்படிகக் கூம்புகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, என் தேடலுக்கான பரிசாக ஒரு காட்சி கிட்டியது. ஆச்சர்யக்குறியின் அடிப்புள்ளி அதன் இடத்திலிருந்து சற்றுக் கீழே சறுக்கியது போல் – இளகிச் சொட்டும் துளியை முந்தும் நோக்கோடு அவசரகதியில் ஓடியது போல் – இருந்தது. அந்த இரட்டை மினுமினுப்பு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மாறாக, ஒளி மற்றும் நிழல் சார்ந்த என் தேடலுக்கான பசியைக் கூடுதலாகத் தூண்டிவிட்டது. என் ஒட்டுமொத்த இருப்பும் உலகக் கிண்ணத்துக்குள் உருளும் ஒற்றை விழிப்பந்தாக என்னை மாற்றிவிட்டதைப் போன்ற உணர்வுநிலையில் நான் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தேன்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புற வளைவில் தகதகக்கும் கதிரொளியின் வைரப் பிரதிபலிப்பைக் கண்ணுற்றேன். இளகும் பனி காரணமாக, அனைத்துப் பொருட்களிலும் தெள்ளிய சித்திரத் தோற்றம் தென்பட்டது. ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருந்த பனித் தோரணங்களிலிருந்து உருகிய நீர், சரிவான தெருவில் சிற்றோடை போல் ஓடி மெதுவாக அடுத்தத் தெருவுக்குத் திரும்பியது. கட்டிடங்களுக்கு இடையில் எப்போதும் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத குறுகிய நடைபாதைகள் இப்போது செங்காவி மற்றும் அடர்சிவப்பு வண்ணப் பொக்கிஷங்களைத் திறந்துகாட்டிக்கொண்டிருந்தன. வரிவரியாய் இருந்த பள்ளங்களில் பனி படர்ந்து அலங்கரித்திருந்த குப்பைத்தொட்டியையும், அதன் மூடியின் மையத்தில் தொடங்கி விளிம்பு வரை பரவியிருந்த உறைபனியின் அலைவரிகளையும் முதன்முறையாகப் பார்த்தேன். கடந்த வெள்ளிக்கிழமை பனி அகற்றும் வாகனத்தின் உலோகத் தடுப்பால் ஒதுக்கிவைக்கப்பட்ட பனிக்குவியல்கள், சாலையோரங்களில் வரிசைகட்டி நிற்கும் இளம் பெங்குவின்களைப் போன்று தோற்றமளித்தன.

மேட்டில் ஏறி, இறக்கத்தில் இறங்கி, மெதுவாய் மங்கிக்கொண்டிருக்கும் தொடுவானம் நோக்கி நேராக என நான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தேன். என் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த விஷயங்களின் தொடர்நிகழ்வு, இறுதியில் என்னை, வழக்கமாக நான் உணவருந்தும் இடத்தை விட்டு வெகு தொலைவில் அழைத்துச் சென்றிருந்தது. எனவே ஊர் எல்லையிலிருந்த, இதுவரை நான் உணவருந்தியிராத ஒரு உணவகத்தில் இரவுணவை முடிக்க முடிவு செய்தேன். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது எந்த ஆரவாரமும் இன்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது.

ஈரப்பனித்தரையின் மீது விழுந்திருந்த வாகனத் தரிப்பிட மானி[2]யின்  மெலிந்து நீண்ட நிழல், விநோதமாய் ஒளிரும் சிவப்பு வண்ணத்தோடு, ஒல்லிப் பிசாசைப் போலத் தோன்றியது. நடைபாதை மீது ஒளிர்ந்துகொண்டிருந்த உணவகத்தின் அடையாள விளக்கின் சிவப்பு நிற ஒளி தெறித்துதான் அந்தத் தோற்றம் எனப் புரிந்தது. அதே போன்றதொரு விநோத நிழலை நீல நிற ஒளியில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதே இடத்திலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டி. போலியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இறங்கினான். ஆல்பனியிலிருந்து பாஸ்டன் செல்வதாகவும் போகும் வழியில், தான் முன்பு குடியிருந்த அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

ஒருவருக்கு ஒரு ஊரில் வலியும் வேதனையும் தரக்கூடிய, துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்து, பிறகு அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அவர் அந்த ஊருக்கு வரும்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேதனை தருவதாக இருக்கும். பழைய நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் தங்களது மீள்வருகையின் போது எதுவுமே நடக்காதது போல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அங்கு வளைய வருபவர்களைப் பார்க்கும்போது எனக்கு வலியும் வேதனையும் உண்டாவதோடு தனிப்பட்ட முறையிலும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை என் வாழ்க்கையில் பல தடவை கண்டிருக்கிறேன்.   

அவன் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். சற்று முன்பு நான் போன அதே உணவகம். மேம்போக்கான நல விசாரிப்புக்குப் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் கடுமையான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காக, அவன் சம்பந்தா சம்பந்தமின்றி சொன்னான், “சிந்தியா வேய்னின் இதயத்தில் பிரச்சனை இருக்குமென்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அவள் போன வாரம் இறந்துவிட்டதாக என்னுடைய வழக்கறிஞர் சொன்னார்.”

2

அவன் இப்போதும் இளமையோடும், அதே திமிரோடும் அதே கபடத்தோடும் காணப்பட்டான். சிந்தியாவின் தங்கை சிபிலுடன் அவனுக்கு இருந்த மிக மோசமான உறவையோ, சிந்தியா என்னை அழைத்து பாஸ்டனுக்குச் சென்று டி.யைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் மன்றாடியதோ, சிபிலை அவன் சந்திப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும், எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் அவனைக் கல்லூரியை விட்டே துரத்தவேண்டும் என்று சொன்னதோ, எதுவுமே அறியாத, அழகும் மென்மையும் கொண்ட அதே மனைவியோடும் அவன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தான். மிகையுணர்வுக்கு ஆளான சிபிலின் வெறித்தனமான பேச்சின் பரிமாணம் அவன் மனைவியை ஒரு அடங்காப்பிடாரியாக சித்தரித்திருந்தது. நான் அவனை உடனடியாகவே மடக்கிவிட்டேன். அவனோ, எங்களைக் கவலைப்படவேண்டாம் என்றும், சிபிலை விட்டு தான் போய்விட முடிவு செய்துவிட்டதாகவும், கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு ஆல்பனிக்குச் சென்று அவனுடைய அப்பாவின் பண்ணையில் வேலைபார்த்துப் பிழைத்துக் கொள்ள இருப்பதாகவும் சொன்னான். சிக்கலான பிரச்சனையாக உருமாறி வருடக்கணக்காக இழுபறியாக இருக்கக்கூடும் என்று அச்சுறுத்திய அந்த விஷயம், எங்களுடைய தொடர்ச்சியான இரகசியக் கலந்துரையாடலால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பிரெஞ்சு இலக்கியத்துக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வகுப்பறையில் நான் என்னுடைய உயர்மேஜையில் அமர்ந்திருந்தேன். சிபில் உயர் குதிகாலணி அணிந்து கையில் பெட்டியுடன் வகுப்பறைக்கு வந்தாள். மற்ற மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருக்கும் மூலையில் பெட்டியை வைத்தாள். தனது மெலிந்த தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிட்டிருந்த ரோம அங்கியை அவிழ்த்து மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று மாணவிகளோடு சேர்ந்து என்னிடம் வந்து தேர்வு முடிவுகளை நான் எப்போது அவர்களுக்கு அனுப்புவேன் என்று கேட்டாள். எல்லா விடைத்தாள்களையும் வாசித்துத் திருத்த, ஒரு வார காலம் எடுக்கும் என்று சொன்னேன். டி. எடுத்திருந்த முடிவைப் பற்றி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பானா என்று நான் சந்தேகப்பட்டதும் கூட நினைவுக்கு வந்தது. கடமை தவறாத என்னுடைய இந்தச் சின்னஞ்சிறு மாணவியை எண்ணி எனக்குப் பெரும் வருத்தமும் கவலையும் உண்டாயின. தேர்வு நடைபெற்ற இரண்டரை மணி நேரமும் நான் மீண்டும் மீண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் போன்று இறுக்கமாக அணிந்திருந்த சாம்பல் வண்ண ஆடை, அலையலையாக சுருட்டிவிடப்பட்ட கருங்கூந்தல், அப்போது பிரபலமாக இருந்த, சல்லாத்துணி மறைப்புடன் கூடிய, சிறிய, பூப்போட்டத் தொப்பி, அதற்குக் கீழே நவீன பாணி ஓவியம் போன்று தோல்நோயால் உண்டான தழும்புகளோடு கூடிய முகம், தோல்நோய் சிகிச்சைக்கான செயற்கை விளக்கொளியால் கருத்த தேகம் என அழகைக் குலைக்கும் அனைத்து அம்சங்களும் அவளிடம் காணப்பட்டன. எனவே செக்கச் செவேலென்று வெடித்துக்கிடக்கும் உதடுகளுக்கிடையில் வெளிறிக் காணப்பட்ட ஈறும் பற்களும், கருத்த இமைகளுக்குக் கீழே தென்பட்ட நீர்த்த மை நிற நீல விழிகளும் மட்டுமே அவளுடைய அழகை எடுத்துக்காட்டக் கூடியனவாக இருந்தன.

அடுத்த நாள், கன்னாபின்னாவென்று இருந்த நோட்டுப்புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்கிவைத்து, குளறுபடியான கையெழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எப்படியோ தவறுதலாக வரிசை மாறி முன்னால் வந்துவிட்ட வாலேவ்ஸ்கி மற்றும் வேய்ன் இருவரின் நோட்டுப்புத்தங்களையும் கையிலெடுத்தேன். முதலாவது வெளிப்பகட்டு காட்டும் மிகத் தெளிவான கையெழுத்துடன் அழகாக இருந்தது. ஆனால் சிபிலுடையது எப்போதும் போல ஏகப்பட்டக் கிறுக்கல்களோடு பற்பல சாத்தான்களின் பிடியில் அகப்பட்டது போல கொடுமையாக இருந்தது. அவள் முதலில் வெளிறிய கடினமான பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தாள். அழுத்தி அழுத்தி எழுதியதில் தாள் முழுவதும் கருப்பு நிறமானதோடு பின்பக்கமும் அச்சு படிந்திருந்தது. நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே பென்சிலின் கூர் உடைந்துபோனது போலும். அடுத்து அவள் அழுத்தமாகவும் மொத்தமாகவும் எழுதக்கூடிய, கிட்டத்தட்ட கரிக்கட்டை போன்ற பென்சிலால் எழுதியிருந்தாள். அவ்வப்போது அதன் மழுங்கிய முனையை வாயில் வைத்து வைத்து எழுதிய காரணத்தால் காகிதத்தில் உதட்டுச்சாயக் கறையும் சேர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் அவளுடைய விடைத்தாள் மிக மோசமாக, அடிக்கோடுகள், வரிசை மாற்றுகள், தேவையில்லாத அடிக்குறிப்புகள் என அவநம்பிக்கையின் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி, அவளால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாகச் செய்துமுடிக்க முயற்சி செய்ததைப் போன்று இருந்தது. அடுத்து அவள் மேரி வாலெவ்ஸ்கியின் மைப்பேனாவை இரவல் வாங்கி பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்து இவ்வாறு எழுதியிருந்தாள்: ‘இந்தப் பரிட்சை முடிந்ததும் என் வாழ்க்கையும் முடிந்துவிடும். விடைபெறுகிறேன், பெண்களே! மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, தேர்வில் ‘டி’ வாங்குவதை விடவும் மரணம் சிறந்ததல்ல, ஆனால் டி. இல்லாத வாழ்க்கையை விடவும் மரணம் சிறந்தது என்று நான் சொன்னதாக என் அக்காவிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.’

நான் உடனடியாக சிந்தியாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாக – காலை எட்டு மணிக்கே எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னாள். நான் அங்கு வரும்போது சிபில் எழுதியிருந்த குறிப்பை எடுத்துவரச் சொன்னாள். வழியும் கண்ணீரோடு குறிப்பை வாசித்த அவள், பிரெஞ்சு இலக்கியத் தேர்வோடு, சிபில் தன்னைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்த ஒப்புமை வரிகளில் இருந்த புத்திசாலித்தனத்தை வியந்தாள். சிபிலின் நோட்டுப் புத்தகத்தைக் கீழே வைக்காமலேயே இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பினாள். சோடா நீரோடு கண்ணீரும் சேர்ந்து தெறிக்க, மீண்டும் அந்தத் தற்கொலைக் குறிப்பை வாசிக்கலானாள். அப்போது அதிலிருந்த இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். சிபில் ‘பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரெஞ்சு வார்த்தைக்கு ‘வேசி’ என்ற பொருளும் இருப்பதால், மாணவிகள் தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்த நேரிடும் என்று அமெரிக்க அகராதிகளில் ‘பெண்’ என்றே அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டேன். சுவாரசியமற்ற அந்த அற்ப விஷயங்கள் சிந்தியாவை துக்கத்தின் அடியாழத்திலிருந்து பெரும் திணறலோடு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சற்றே இலகுவாக்கின. பிறகு தொய்ந்துபோன அந்த நோட்டுப் புத்தகத்தை, சொர்க்கத்திற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு போல கையில் இறுக்கமாகப் பிடித்தவாறு, மாடியில் இருந்த சிறிய குளிர்ச்சியான படுக்கையறைக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த இரண்டு காலி மாத்திரைப் புட்டிகளையும், ஆதி முதல் அந்தம் வரை டி. அறிந்திருந்த அழகிய இளம் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, கீழே கவிழ்ந்து கிடந்த படுக்கையையும் ஒரு  போலீஸ்காரரிடம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பான அயர்லாந்துக்காரரிடம் காட்டுவது போல் என்னிடம் காட்டினாள்.  

3

சிந்தியாவின் தங்கை இறந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, சிந்தியாவை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் நான் பொது நூலகத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அவளும் அப்போது அங்கு குடிபெயர்ந்திருந்தாள். ஏதோ ஒரு விநோதக் காரணத்துக்காக (கலையுணர்வு காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய தெளிவற்ற யூகம்) குளிர்நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத மக்கள் வசிக்கும் ‘குளிர்ந்த நீர் குடியிருப்புகள்’ என்று சொல்லப்படுகிற, நகரத்தின் குறுகிய தெருக்களின் கீழ்த்தளக் குடியிருப்புகளுள் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள்.

வெறுப்பூட்டும் அவளுடைய நடவடிக்கைகளோ, மற்ற ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் அவளது தோற்றமோ என்னைத் துளியும் ஈர்க்கவில்லை. அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் பெரிய நீலநிறக் கண்கள். அவளுடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு இடைப்பட்டப் பகுதியும் மூக்குத்துவாரத்தின் இருபக்கப் புடைப்புகளும் எப்போதும் மினுமினுவென்று காணப்பட்டன. அவளுடைய தோல் சொரசொரவென்று ஆண்களுடையதைப் போன்று இருந்தது. வண்ணமீன் தொட்டியைப் பார்ப்பது போன்று குறுகுறுவென்று அவள் நம்மைப் பார்க்கும்போது அந்த ஓவியக்கூடத்தின் துல்லியமான விளக்கொளியில் அவளுடைய முப்பத்திரண்டு வயது முதிர் முகத்தின் குழிகளைக் காணமுடியும். அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் பெரும் விருப்பம். ஆனால் அதில் அவ்வளவு நேர்த்தி இருக்காது. அசிரத்தை காரணமாக அவளுடைய பெரிய முன்பற்களில் உதட்டுச்சாயத்தின் சிவப்புக் கறை படிந்திருக்கும்.

அவள் வசீகரமான அடர்நிறத்தில் இருந்தாள். மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஓரளவு நன்றாகவும் விதவிதமாகக் கலந்துகட்டியும் உடுத்தினாள். நல்ல உடல்வாகு என்று சொல்லும்படியும் இருந்தாள். ஆனால் யாவற்றிலும் ஏனோதானோவென்ற ஒரு அலட்சியம் இருந்தது. அவளுடைய மெத்தனத்தை நான் அரசியலில் இடதுசாரிக் கோட்பாடுகளோடும், கலையில் மேம்பட்ட கொச்சைத்தன்மையோடும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தினேன். எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய சுருள் கேசத்தை நடுவகிடு எடுத்து ஓரளவு படியவைத்து பின்னால் சிறு கொண்டையாக உயர்த்தி முடிந்திருக்காவிட்டால், பார்ப்பதற்கு பரட்டையாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். அவள் பளீரென்ற நிறத்தில் விரல் நகங்களில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ஆனால் நகங்கள் மிக மோசமாகக் கடிக்கப்பட்டிருந்ததோடு தூய்மையாகவும் இல்லை.

மிகவும் அமைதியான சுபாவமுடைய, திடீரென்று சிரிக்க ஆரம்பித்திருந்த ஒரு இளம் புகைப்படக் கலைஞனும், தெருவில் சிறிய அச்சுக்கூடம் வைத்திருந்த, வயது மூத்த இரண்டு சகோதரர்களும் அவளுடைய காதலர்களாக இருந்திருக்கின்றனர். கண்ணாடிக்குக் கீழே படியவைக்கப்பட்டிருக்கும் பொருளின் அறிவியல் துல்லியத்துடன், வெளிறிய முழங்கால்களுக்குக் கீழே மெல்லிய நைலான் காலுறையின் ஊடே காணப்படும் கரடுமுரடான கருப்பு முடிகளைப் பயமும் பதற்றமுமாக இரகசியப் பார்வை பார்க்கும்போது அல்லது அவளுடைய ஒவ்வொரு அசைவின்போதும், அவள் பூசியிருக்கும் மட்டமான வாசனைத் திரவியங்கள் மற்றும் களிம்புகளோடு, குளிக்காத அவள் உடலிலிருந்து வீசும் மோசமான வாடையை நுகர நேரும்போது, அவளுடைய காதலர்களின் ரசனையை எண்ணி எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவளுடைய அப்பா, அவர்களுக்கென்று இருந்த ஓரளவு சொத்தில் பெரும்பகுதியை சூதாடித் தொலைத்தவர். அவளுடைய அம்மாவின் முதல் கணவர் ஸ்லாவ்[3] வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றபடி சிந்தியா வேய்ன் ஒரு நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இன்னும் பின்னோக்கி ஆய்ந்தால் ஏதேனும் தீவாந்தரத்தின் அரசர் அல்லது கணியர் வம்சத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்பது என் யூகம். புதிய உலகத்தில், அற்புதமான இலையுதிர் மரங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பில் காலூன்றிய அவளது வம்சத்தின் ஆரம்ப கட்டத்தில் தூய திருச்சபைகளை நிறைத்தனர் விவசாய பக்தர்கள். அவர்களைத் தொடர்ந்து வியாபாரத்தில் கைதேர்ந்த வியாபாரிகளும், கல்வியிற் சிறந்தவர்களும் உருவாயினர். லெக்சிங்டன் நீராவிப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரும், சிந்தியாவின் சுழல்மேஜைக்கு அடிக்கடி வருகை தருபவருமான டாக்டர் ஜோனாத்தன் வேய்ன் (1780-1839) அவர்களுள் ஒருவர்.

நான் எப்போதும் மரபியல் வரிசையைத் தலைகீழாகப் பார்க்கவே முனைவேன். இங்கு வேய்ன் பரம்பரையை ஆராயும் வாய்ப்பு கிடைத்தபோது கடைசி வாரிசான சிந்தியா மட்டுமே கவனத்துக்கு உரியவளாக இருந்தாள். அதாவது, அவளுடைய கலைத்திறன், அற்புதமான, அழகான ஆனால் அவ்வளவாக விலைபோகாத, அவளுடைய நண்பர்களின் நண்பர்கள் எப்போதாவது வாங்கும் ஓவியங்கள், முக்கியமாக அவளுடைய வரவேற்பறையை அலங்கரித்த அற்புதமான மற்றும் கவித்துவமான ஓவியங்கள் அவளுடைய இறப்புக்குப் பிறகு என்னவாகும் எங்கே போகும் என்று தெரிந்துகொள்ள பெரிதும் விரும்பினேன். மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருந்த உலோகப் பொருட்களின் ஓவியங்களுள் எனக்கு மிகவும் பிடித்தது, வாகன முகப்புக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஏடு போல் படிந்திருக்கும் உறைபனியும், கற்பனையான வாகனக் கூரையிலிருந்து வடிந்தோடும் நீர்த்துளிகளும், தெளிவான மறுபக்கத்தின் வழியாக நீலச்சுவாலை போல் ஒளிரும் வானமும் பச்சையும் வெள்ளையுமான தேவதாரு மரங்களும் தீட்டப்பட்டிருந்த, ‘வாகன முகப்புக் கண்ணாடி வழியே’ என்ற ஓவியம்.  

4

சிபிலின் காதலை சிந்தியாவும் நானும் சேர்ந்து முறியடித்துவிட்டது தற்போது சிபிலுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் சிபில் தன்மீது கோபமாக இருப்பதாகவும் சிந்தியாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொல்வழக்கப்படி சிபிலின் ஆன்ம சாந்திக்கான சில பரிகாரங்களை (சிபிலுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு) அவள் செய்யத் தொடங்கினாள். சிபிலின் கல்லறையை குறைந்த வெளிச்சத்தில் படம்பிடித்து அந்தப் புகைப்படங்களை டி.யின் அலுவலக முகவரிக்கு ஒழுங்கற்ற கால இடைவெளியில் அவ்வப்போது அனுப்பிவைத்தாள். சிபிலின் தலைமயிரைப் போன்றே இருக்கும் தன்னுடைய தலைமயிர்க் கற்றையை நறுக்கி அதைத் தபாலில் அவனுக்கு அனுப்பினாள். அக்டோபர் 23-ம் தேதி, நண்பகல் வேளையில், இளஞ்சிவப்பும் பழுப்புமான வனாந்திரத்தின் சாலையோர விடுதியொன்றில் டி.யும் சிபிலும் தங்கியிருந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக நியூ இங்கிலாந்து மாகாணத்தின் வரைபடத்தில் அவ்விடத்தை குறுக்குவெட்டுக் கோடுகளால் குறிப்பிட்டு அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பினாள். பாடம் செய்யப்பட்ட ஸ்கங்க்கை[4]  இரண்டு முறை அனுப்பினாள்.

எதையும் தெள்ளந்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசத் தெரியாமல் வளவளவென்று உரையாடக்கூடியவளான அவளால், தனக்குள் வியாபித்திருக்கும் விநோதமான ஆன்ம ஒளிவளையத்தைப் பற்றி முழுமையாக விவரிக்க இயலவில்லை. உண்மையில் அது தனிப்பட்ட வகையில் அவளுக்கு மட்டும் நேரும் புதிய விஷயமல்ல. பொதுவாகவே, ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆன்மா, அமைதியான ஆவியுலகில் ஏற்கனவே இறந்துபோனவர்களின் ஆன்மாவோடு போய் சேர்ந்துகொண்டு, அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும். இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இயல்பான அந்த நுண்பொருள் கோட்பாட்டியலுக்குள் சிந்தியா சில விநோதமான நடைமுறைக் கூறுகளைப் புகுத்தினாள். 

அநாதையாய்த் திரியும் பூனைக்குட்டியை பள்ளிச்சிறுமி ஒருத்தி தூக்கி, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொஞ்சி, தன்னோடு எடுத்துச் சென்று, ஏதாவதொரு புறநகர்ப் பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக விட, அதை அந்த வழியாகச் செல்லும் யாரோ ஒருவர் எடுத்து, அன்போடு தடவிக்கொடுப்பதைப் போலவோ அல்லது இளகிய மனம் படைத்தப் பெண்மணி யாராவது, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுசெல்வதைப் போலவோ, தன் விதியை இறந்துபோன நட்புகளின் ஆன்மாக்களே வழிநடத்துகிறார்கள் என அவள் உறுதியாக நம்பினாள்.

சில மணிநேரம் அல்லது தொடர்ந்து பல நாட்கள், சில சமயம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் மாதக் கணக்காகவோ, வருடக் கணக்காகவோ சிந்தியாவுக்கு ஏற்படும் எதுவும், இறந்துபோன நட்பு அல்லது உறவின் பழக்க வழக்கம் மற்றும் மனநிலை சார்ந்தது என்பது சிந்தியாவின் எண்ணம். அந்த நிகழ்வு ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அசாதாரணமாக இருக்கும் அல்லது ஒருவரது வழக்கமான நாளில் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து, நாளடைவில் ஒளிவளையம் மங்கி மறைய, அற்ப விஷயமாக மாறிவிடக்கூடிய, சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். விளைவு நல்லதோ, கெட்டதோ, ஆனால் மூல ஆன்மா எதுவென்று கட்டாயம் அடையாளங்காண முடியும். ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வதைப் போன்றது அது என்றாள் சிந்தியா.

எல்லாராலும் எல்லா ஆன்மாக்களையும் அடையாளங்காண இயலாது என்பதால் அவளால் அவளைத் தொடர்பு கொள்ளும் சரியான ஆன்மாவைக் கண்டறிவது சாத்தியமில்லை என வாதிட்டு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். கையொப்பம் இடப்படாத கடிதங்களையும் கிறிஸ்மஸ் பரிசுகளையும் யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ‘வழக்கமான நாள்’ என்று சிந்தியா குறிப்பிடுவது பலவீனமான ஆன்ம ஒளிவளையங்களின் கலவையாக இருக்கலாம் அல்லது காவல் தேவதையின் வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கலாம். கடவுளைப் பற்றி என்ன சொல்வது? சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியை மண்ணில் வெறுக்கும் மக்கள், சொர்க்கத்திலும் அதே போன்ற ஒருவரை எதிர்பார்ப்பார்களா? மேலும் போர்கள் பற்றி? எவ்வளவு பயங்கரமான விஷயம்! இறந்த போர்வீரர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்களா? தள்ளாடும் வயோதிகர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கைப்பற்ற ஆவிக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்குமா?

ஆனால் சிந்தியா பொதுவிதிகளுக்கும் தர்க்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தாள். ‘தளபுள’ என்று கொதிக்கும் சூப்பைப் பார்த்தால் “ஐயோ, அது பால் (Paul)” என்பாள். அறக்கொடை நிறுவனத்தின் லாட்டரியில் அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட, நல்ல தரமான வாக்யூம் க்ளீனர் கிடைத்தால், “அன்புக்குரிய பெட்டி பிரவுன் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்” என்பாள். 

என்னுடைய பிரெஞ்சு மூளையை அதிகம் எரிச்சலடைய வைத்தது எதுவென்றால் பெட்டி பிரவுனும் பாலும் உயிரோடு வாழ்ந்த காலத்துக்கே அவள் மானசீகமாகச் சென்றுவிடுவதுதான். நல்ல எண்ணத்துடன் அவர்கள் தனக்கு விதவிதமான, விநோதமான, ஏற்றுக்கொள்ள இயலாத பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்கள் என்றும் மூன்று டாலர் காசோலையுடன் கூடிய பழைய பர்ஸை தெருவில் கண்டெடுத்து, அதை உரியவரிடம் (இங்குதான் நடக்க இயலாத, முதிய பெண்மணி பெட்டி பிரவுன் வருகிறார்) சேர்ப்பித்ததில் ஆரம்பித்து, தன்னுடைய முன்னாள் காதலன் (இங்குதான் பால் வருகிறான்) அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் தத்ரூபமான ஓவியங்களாய்த் தீட்டுவதற்கான நியாயமான தொகைக்கு பதில் அடிமட்டத் தொகை பேசி அவமானப்படுத்தியது வரை சொல்வாள். இவை எல்லாமே சிந்தியா குழந்தையாய் இருந்தபோது, எடுத்ததெற்கெல்லாம் அறிவுரை கூறி அவளைப் பாடாய்ப்படுத்திய திருமதி பேஜ் என்னும் நல்ல மனம் படைத்த முதிய பெண்மணியின் மரணத்துக்குப் பிறகே ஆரம்பித்தன. 

சிபிலின் குணாதிசயங்கள், வானவில்லின் விளிம்பைப் போல தெளிவற்றவை என்றாள் அவள். சிபிலை நான் கொஞ்சமாவது புரிந்து வைத்திருந்தால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சிந்தியாவின் வாழ்வில் சின்னச் சின்ன நிகழ்வுகளாக, அவ்வப்போது அவளைச் சூழ்ந்துகொள்ளும் அந்த ஒளிவளையத்தில் சிபிலின் ஆன்மா இருப்பதை என்னால் எளிதில் உணர்ந்துகொண்டிருக்க முடியும் என்றாள்.

சிந்தியாவின் அம்மா இறந்ததிலிருந்தே, அவளும் சிபிலும் தங்களுடைய பாஸ்டன் வீட்டை விட்டுவிட்டு, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட விரும்பினார்கள். நியூயார்க்கில் சிந்தியாவின் ஓவியங்களுக்கு நல்ல விலையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய பழைய வீடு தன் மென்கரங்களால் அவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிபில் தன் மரணத்துக்குப் பிறகு, அந்த வீட்டை சுற்றுப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தினாள். வீடு என்ற உணர்விலிருந்து அது சிதைந்து அழியத் தொடங்கியது. குறுகிய தெருவின் எதிர்ப்பக்கம் சாரங்களால் சூழப்பட்டு, இரைச்சலுடன், எரிச்சலூட்டும் ஒரு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வருடம் வசந்த காலத்தில் அந்தப் பகுதியில் பிரசித்தமான இரண்டு நெட்டிலிங்க மரங்கள் பட்டுப்போய் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு போல நின்றன. அறுபது வயதில் ஓய்வு பெற்ற, கால் நூற்றாண்டு காலத்தை நத்தைகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த திரு. லீவர் அவர்களின் காலைநேர நடைக்குப் பழகிய, ஏப்ரல் மாத மழையில் நனைந்து வித்தியாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், அழகிய செஞ்சாந்து நிற நடைபாதைக் கற்கள் பணியாட்களால் பெயர்த்தெடுத்து அகற்றப்பட்டன. முதியவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இறப்புக்குப் பிறகு, உயிரோடு இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் ஆதரவும் இடையூறும் சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிந்தியா ஒரு தடவை, போர்லாக் என்ற கிறுக்குத்தனமான நூலகரோடு நட்பாக இருந்தாள். அவர் ‘hither’ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது h-க்கு பதிலாக i என்பது போல் விநோதமான எழுத்துப்பிழைகளோடு அச்சாகியிருந்த பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே, தூசு படிந்த தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கழித்தார். சிந்தியாவுக்கு மாறாக, தெளிவற்ற யூகங்களால் உண்டாகும் புளகாங்கித உணர்வால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர் தேடியவையெல்லாம் திட்டமிட்டதைப் போல் தோன்றும் தற்செயல்கள் மற்றும் இடைவெளிகளைப் போல் தோற்றமளிக்கும் பிளவுகள் போன்ற முரண்விநோதங்களை மட்டுமே. ஒழுங்கற்ற அல்லது இலக்கண விதிகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்ட வார்த்தைகள், சிலேடைகள், மாற்றெழுத்துப் புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் இன்ன பிறவற்றில் விடாப்பிடியான ஆர்வக்கோளாறுடன் இருந்த சிந்தியா, அந்த பரிதாபத்துக்குரிய கிறுக்கு நூலகருக்கு உதவுவதற்காகக் கொடுத்த உதாரணங்களை, நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தபோது, சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவே எனக்குத் தோன்றியது.

நூலகர் இறந்துபோன மூன்றாம் நாள், அவள் ஒரு சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அழியாக் கவிதையொன்றின்[5]  (மற்ற அப்பாவி வாசகர்களைப் போலவே அவளும் அதை உண்மையிலேயே கனவில் இயற்றப்பட்டக் கவிதையென நம்பினாள்) வரிகளைக் கண்ணுற்றதாகவும், அதிலிருந்த ‘Alph’ என்னும் வார்த்தை, Anna Livia Plurabelle (மற்றொரு கற்பனைக் கனவிற்குள் ஓடும் அல்லது அதைச் சுற்றிக்கொண்டு ஓடும் மற்றொரு புனித நதியின் பெயர்) என்பதன் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு தீர்க்கதரிசனம் காட்டுவதாகவும் அதில் கூடுதலாக இருக்கும் h என்ற எழுத்து, திரு.போர்லாக்கை வசியம் செய்திருந்த அந்த வார்த்தைக்கு வழிகாட்டும் அறிகுறி போல இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

எனக்கு சரியாக நினைவில்லை, ஏதோ ஒரு புதினமோ, சிறுகதையோ (யாரோ ஒரு சமகால எழுத்தாளருடையதுதான் என்று நினைக்கிறேன்), அதன் ஆசிரியரே அறியாத, கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை சிந்தியா முறைப்படுத்தினாள். அவளுடைய பொருள்விளக்கப்படி, அது அவருக்கு, இறந்துபோன தாயாரிடமிருந்து வந்திருந்த செய்தி.

5

துரதிர்ஷ்டவசமாக, சிந்தியா இந்த சாதுர்யமிக்கக் கற்பனைகளில் திருப்தியுறாமல் ஆவியுலகக் கோட்பாட்டின் மீது முட்டாள்தனமான வேட்கையைக் கொண்டிருந்தாள். கட்டணம் பெற்றுக்கொண்டு ஆவியுலகோடு தொடர்பு கொள்பவர்களின் அமர்வுகளுக்கு நான் அவளோடு செல்ல மறுத்தேன். மற்ற ஆதாரங்களின் மூலம் இதுபோன்ற விஷயங்களை அவர்களை விடவும் சற்றுக் கூடுதலாகவே நான் அறிந்திருந்தேன். எனினும், சிந்தியாவும், அச்சுக்கூடத்தைச் சேர்ந்த, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத முக அமைப்புக் கொண்ட, அவளுடைய இரு நண்பர்களும் நடத்தும் கேலிக்கூத்துகளில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.

அவர்கள் பொறுமைசாலிகளாகவும், கண்ணியமாகவும், வயதில் மூத்தவர்களாகவும் அதே சமயம், சற்றே அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சினாலும் நாகரிகமான நடத்தையினாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சிறிய கனமில்லாத மேஜையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். மேஜையில் எங்கள் விரல்நுனி பட்டதுமே அது கிடுகிடுவென அதிர்ந்து நடுங்கத் தொடங்கும். தங்களைப் பற்றி ஆர்வத்துடன் மளமளவென்று சொல்ல முன்வந்த பற்பல ஆவிகளோடு நான் உரையாடினேன். இருப்பினும், நான் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவ்வளவுதான், அவை மேற்கொண்டு தங்களை வெளிப்படுத்த மறுத்துவிடும். ஆஸ்கார் வைல்ட் வந்து, வேகமாகவும் தப்பும் தவறுமாகவும் பிரெஞ்சுமொழியில், வழக்கமான ஆங்கிலவாத வார்த்தைகளோடு, எதற்காகவோ சிந்தியாவின் இறந்துபோன பெற்றோரைக் குற்றம் சாட்டினார். சுருக்கெழுத்தில் அதை ‘கருத்துத்திருட்டு’[6] எனக் குறிப்பிட்டேன். குறுக்கே புகுந்த ஒரு ஆவி, ஜான் மோர் என்ற பெயருடைய தானும், வில் என்ற தன் சகோதரனும் சுரங்கத் தொழிலாளிகள் என்றும் 1883-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலராடோவில் ‘க்ரெஸ்டட் பியூட்டி’ என்ற இடத்தில் ஏற்பட்ட சுரங்கச் சரிவில் மாண்டதாகவும், நாங்கள் கேட்காமலேயே முன்வந்து தகவல் சொன்னது. இந்த விளையாட்டில் அனுபவசாலியான ஃப்ரடரிக் மையர்ஸ் நான் ஓரளவு எழுதியிருந்த கவிதையை வேகவேகமாக ஒப்பித்தான். (சிந்தியா இயற்றும் சிறு பாடல்களைப் போன்று விசித்திரமான ஒற்றுமை இருந்தது)

என்ன இது? சாதுர்யமான கண்கட்டு வித்தையா?

அல்லது குறைபாடுள்ள ஆனால் மெய்யான ஒளிக்கீற்றா?

எது இந்த ஆபத்தான வழக்கத்தை உடைத்து

துன்புறுத்தும் கனவைக் கலைக்கக்கூடும்?

இறுதியாக, பயங்கரமான உறுமலுடன், மேஜை தடதடக்க, லியோ டால்ஸ்டாய் எங்கள் குழுவிற்கு வருகை புரிந்தார். அது அவர்தானா என்று மண்ணுலகில் அவரது தினசரி வாழ்வின் தனித்துவ அம்சங்களால் அவரை உறுதிப்படுத்தச் சொன்னபோது, ரஷ்யாவின் மரக் கட்டுமான வகைகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதோ (பலகையில் உருவங்கள் – மனிதன், குதிரை, சேவல், மனிதன், குதிரை, சேவல்) எழுத்தால் எளிதில் எழுத இயலாத, புரிந்துகொள்ளக் கடினமான, சரிபார்ப்பு சாத்தியமில்லாத சில சிக்கலான விவரணைகளைத் தந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் பங்கேற்றேன். எல்லாமே முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ரசிக்கவும், சிந்தியாவின் இத்தகு கொடுமையான வீட்டுக் கொண்டாட்டங்களின்போது தரப்படும் மதுவை அருந்தவும்தான் (போட்ஜியும் புட்ஜியும் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவர்கள்) நான் அவற்றில் கலந்துகொண்டேன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவளுடைய வீட்டின் வரவேற்பறை எப்போதும் அழுக்காக, கழுவப்படாத பழைய, வண்ணக்கலவைத் தட்டைப் போல இருந்தது. எனவே அவள், அவளுடைய வீட்டை அடுத்த, திரு.வீலரின் வசதியான வீட்டில், அவளுக்கே உரிய மையவிலக்கு மனோபாவத்துடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். 

பண்பற்ற, நாகரிகமற்ற, சுகாதாரமற்ற, கேவலத்திலும் கேவலமான வழக்கமாக, விருந்தினர்கள் அப்போதுதான் அவிழ்த்த, உடற்சூடு இன்னும் குறையாத அவர்களது மேல் கோட்டுகள், அமைதியான, வழுக்கைத் தலையரான பாப் வீலரால், அவரது தூய்மையான, அந்தரங்கமான படுக்கையறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரும் அவர் மனைவியும் படுக்கும் படுக்கையின்மீது குவித்துவைக்கப்பட்டன. மேலும் விருந்தினர்களுக்கான மதுபானங்களைக் கோப்பைகளில் அவர் ஊற்றிக் கொடுக்க, இளம் புகைப்படக் கலைஞன் அவற்றைப் பரிமாற, சிந்தியாவும், திருமதி வீலரும் ரொட்டிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தாமதமாக வருபவர்கள், ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையிலான நீலச்சாம்பல்நிறக் கூடத்தில் தேவையில்லாமல் கூடிக் கூச்சலிடும் ஒரு கூட்டத்தையே பார்ப்பார்கள். சிந்தியா வழக்கமாக அழைப்பு விடுக்கும் பெண்மணிகள் அனைவருமே, திருமணமானவர்களோ, இல்லையோ, ஆனால் அலைபாயும் நாற்பதுகளில் இருந்தார்கள். ஒருவேளை, அங்கு இருப்பவர்களிலேயே தான்தான் இளையவளாக இருக்கவேண்டும் என்று சிந்தியா விரும்பியிருக்கலாம். சிலர் அவர்களுடைய வீட்டிலிருந்தே டாக்சிகளின் மூலம் வரவழைக்கப்படுவார்கள். வரும்போது முழுமையான ஒப்பனையுடனும் அழகான தோற்றத்துடனும் காணப்படும் அவர்கள், நிகழ்ச்சியின் முடிவில் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். 

வார இறுதிக் கொண்டாட்டங்களில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சிநேகபாவம் மிக்க குடிகாரர்கள், தங்கள் அனுபவத்தால், உடனடியாகவும், மிகத் துல்லியமாகவும் போதையின் பொதுப்பகுவெண்ணைக் கண்டறிந்து, அதன் அடுத்தக் கட்டத்துக்கு முன்பு அனைவரும் ஒருவருக்கொருவர் பூரண விசுவாசத்தோடு ஒன்றிணைந்து கூட்டாக இறங்குவது, என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

இணக்கமாகப் பேசிய பெண்மணிகளின் பேச்சில் தெனாவெட்டும், இறுக்கமான ஆண்களிடத்தில் சூலுற்றப் பெண்மையின் நாணமும் தென்பட்டன. வந்திருந்தவர்களுள் சிலர் ஏதாவது ஒரு வகையில் கலையோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். எனினும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் இல்லை, மலர்க்கீரீடம் அணிந்த தலைகள் இல்லை, முக்கியமாக, குழலூதும் பெண்கள் இல்லை.

ஒன்றிரண்டு இளைஞர்களோடு, வெளிறிய தரைவிரிப்பின் மீது கரையொதுங்கிய கடற்கன்னியைப் போன்ற தோரணையோடும், வார்னிஷ் பூசியது போல பளபளவென்று, வியர்வை பூத்த முகத்தோடும் அமர்ந்திருக்கும் சிந்தியா, ஏதேனும் ஒரு கட்டத்தில் பருப்புகள் அடங்கிய தட்டை ஒரு கையில் கவனமாக ஏந்தியவாறே ஊர்ந்து சென்று, மறு கையால் வெண்சாம்பல் நிற சோபாவில் உற்சாகமும் துடிப்புமான இரண்டு பெண்மணிகளுக்கு நடுவில் வசதியாக அமர்ந்திருக்கும் காக்கரன் அல்லது கார்க்கரன் எனப்படுகிற கலைப்பொருள் விற்பனையாளரின் திடகாத்திரமான காலில் பட்டென்று தட்டுவாள். அடுத்த கட்டத்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் வரம்பு கடந்து பெரும் களேபரமாக வெடிக்கும். கார்க்கரன் அல்லது காரன்ஸ்கி, சிந்தியாவை அல்லது அந்தப் பக்கமாகப் போகும் வேறு ஏதாவதொரு பெண்ணை தோளைப் பற்றி, அறையின் மூலைக்கு அழைத்துச் சென்று, பல் இளித்தபடி, ஆபாசமான நகைச்சுவைகளையோ, அந்தரங்கமான கிசுகிசுக்களையோ சொல்வான். அவளும் தலையாட்டிச் சிரித்தபடி அங்கிருந்து அகன்று செல்வாள். அதற்குப் பிறகு அங்கு பால்பேதமற்ற நெருக்கங்களும், கோமாளித்தனமான சமரசங்களும் சுழன்றடிக்கும். ஒருத்தியின் கணவனை (அவன் அறையின் நட்ட நடுவில் நின்றுகொண்டிருப்பான்) இன்னொருத்தியின் கொழுத்த கை வளைத்திருக்கும் அல்லது யாரோ யாரிடமோ செல்லக் கோபம் காட்டுவார்கள் அல்லது யாரோ யாரையோ விளையாட்டாய்த் துரத்துவார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பாப் வீலர் அமைதியான அரைப் புன்னகையோடு, நாற்காலிகளுக்குக் கீழே காளான் முளைத்ததுபோல் ஆங்காங்கே, விருந்தினர்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் காலி மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டிருப்பார்.

அதுபோன்றதொரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சிந்தியாவுக்கு, சாதாரணமாக, ஆனால் நல்ல மாதிரியாக ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய விருந்தினர்கள் சிலரைப் பற்றி அதில் விளையாட்டாய்க் கேலி செய்திருந்தேன். மேலும் அவளுடைய விஸ்கியைத் தொடாததற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன். பிரெஞ்சுக்காரனாகிய எனக்கு தானியத்தை விடவும் திராட்சையே பெரும் விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, பொது நூலகத்தின் படிக்கட்டில் அவளைச் சந்தித்தேன். மேகமூட்டத்துடன் லேசான தூறலும் இருந்தபோது, கக்கத்தில் இரண்டு புத்தகங்களை இடுக்கிக்கொண்டு, அவளுடைய அம்பர் வண்ணக் குடையை விரிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அந்த இரண்டு  புத்தகங்களையும் நான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆசுவாசம் அளித்தேன். ஒன்று ராபர்ட் டேல் ஒவன் எழுதிய ‘இன்னொரு உலகின் எல்லையில் காலடித்தடங்கள், மற்றொன்று ‘ஆவியுலகும் கிறிஸ்தவமும்’ போல் ஏதோ ஒன்று.

என் தரப்பிலிருந்து எந்தத் தூண்டுதலும் இல்லாமல், திடீரென்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன், வக்கிரமான, விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவள் பாட்டுக்கு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். நான் ஒரு போலி பகட்டுக்காரன் என்றும் நயவஞ்சகன் என்றும் வெளித்தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டே மனிதர்களை எடைபோடுகிறேன் என்றும், அந்த கார்க்கரன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் இருவேறு கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பேரைக் (தற்செயல் ஒற்றுமையாக இருவரது பெயருமே கார்க்கரன்) காப்பாற்றியவன் என்றும், கூச்சலும் கும்மாளமுமாய் இருந்த ஜோன் வின்டருக்கு பார்வைக் குறைபாடுள்ள சிறிய பெண் குழந்தை இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அவள் முற்றிலும் பார்வை இழந்துவிடுவாள் என்றும் நான் அன்று காரணமின்றி அவமானப்படுத்திய பச்சை உடையணிந்து, மார்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருந்த பெண்மணி, 1932-ஆம் ஆண்டு தேசிய அளவில் அதிக விற்பனையான புதினத்தை எழுதியவள் என்றும் சொன்னாள்.

என்னவொரு விநோதமான சிந்தியா! யாரை அவள் அதிகம் நேசிக்கிறாளோ, யார் மீது மரியாதை வைத்திருக்கிறாளோ, அவர்களிடம் அவள் மிகக் கடுமையாக நடந்துகொள்வாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் இருவருக்கும் இடையில் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது அவசியம். ஏற்கனவே அவளுடைய ஆர்வக்கோளாறான ஒளிவளையங்களைப் பற்றியும் மற்ற முட்டாள்தனங்களைப் பற்றியும் ஓரளவு நான் அறிந்திருந்ததால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதை முற்றிலும் கைவிட்டேன்.

6

சிந்தியா இறந்துவிட்ட தகவலை டி. என்னிடம் தெரிவித்த அன்று இரவு பதினொரு மணிக்குப் பிறகு நான் வசித்த, இரண்டுதளக் குடியிருப்புக்குத் திரும்பினேன். ஒரு தளத்தில் நானும் மற்றொரு தளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் விதவை மனைவியும் குடியிருந்தோம். தாழ்வாரத்தை அடைந்ததும், தனிமைப் பயம் பீடிக்க, அடுத்தடுத்து இருந்த இரண்டு ஜன்னல்களின் ஊடாக இரண்டு வகையான இருட்டைக் கண்டேன். ஒன்று இல்லாமையின் இருண்மை. மற்றொன்று தூக்கத்தின் இருள். 

முதலாவது இருட்டைப் போக்க என்னால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் இரண்டாவது குறித்து எதுவும் செய்ய இயலவில்லை. என்னுடைய படுக்கை எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை. அதன் சுருள்வில் அதிர்வுகள் என்னை மேலும் நடுக்கமுறச் செய்தன. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களுள் மூழ்க முனைந்தேன். முட்டாள்தனமாக என் கவனமெல்லாம் பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டு அவை உருவாக்கும் சங்கேத வார்த்தைகள் என்னென்ன என்ற தேடலில் ஈடுபட்டது.

70-ஆம் பாவில் FATE, 120-ஆம் பாவில் ATOM, இருமுறை 88 & 131-ஆம் பாக்களில் TAFT[7] என்ற வார்த்தைகளும் என் கண்களுக்கு அகப்பட்டன. என் அறையிலிருந்த பொருட்களின் தன்மையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். திடீரென்று அங்கே ஒரு வெடிகுண்டு விழுந்தால் கூட, சூதாட்டக்காரனின் ஆர்வக்களிப்பை விடவும் அதிகமாகவே அதை நான் எதிர்கொள்வேன் (அது எவ்வளவு பெரிய நிம்மதி) என்றும் அதே சமயம், என் அறையின் அலமாரிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய புட்டி, துளி அங்குலம் நகர்ந்தால் கூட என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் என்றும் நினைக்கும்போது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

எங்கிருந்து வருகிறது என்று அறியவியலாத நுட்பமான ஒலி கூட பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில், யாரோ வேண்டுமென்றே பின்னணியில் உருவாக்கியதைப் போன்று சந்தேகத்துக்கிடமான வகையில், அறையின் அமைதி மிக அடர்த்தியாக இருந்தது. போக்குவரத்து சந்தடிகள் ஓய்ந்துபோயிருந்தன. பெர்கின்ஸ் தெருவில் ஏதேனும் கனரக வாகனம் செல்லும் சத்தத்துக்கான என் பிரார்த்தனையும் பயனின்றிப் போயிற்று. மேல்தளத்தில் வசிக்கும் பெண்மணி வழக்கமாய், பெரிய குதிகால் காலணியை அணிந்துகொண்டு டொக் டொக் என்று நடக்கும்போது அந்தச் சத்தம் என்னை எரிச்சலடையச் செய்யும். (அவள் குள்ளமாய் குண்டாய் எப்போதும் சோகம் இழையோடும் முகத்துடன் பார்ப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட சீமைப் பெருச்சாளியைப் போன்று காணப்படுவாள்) ஆனால் இன்று, கழிவறைக்குச் செல்லும் பொருட்டு இப்போதும் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் அவளை ஆசீர்வதித்திருப்பேன். விளக்கைப் போட்டும் அணைத்தும், தொண்டையைச் செருமியும், எனக்கு நானே பல முறை சத்தமெழுப்பிக் கொண்டேன். தொலைதூர வாகனம் ஒன்றில் மனக்கண்ணால் ஏறிப்  பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், கண்கள் சொக்கும் முன்பே அதிலிருந்து இறங்க நேர்ந்துவிட்டது. திடீரென்று ஏதோ காகிதம் கசங்கும் சத்தம் (இறுக்கமான இரவுப்பூவொன்று மலர்வதைப் போன்று கசங்கிய தாள் விரிவதாக கற்பனை செய்தேன்) குப்பைக் கூடையிலிருந்து கேட்டது. என்னுடைய படுக்கையை ஒட்டிய மேஜையில் சின்னதாக டிக் என்ற சத்தமும் கேட்டது. சிந்தியாவின் ஆவி, தன்னுடைய மட்டமான விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. நான் சிந்தியாவை எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்.

1848-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹைட்ஸ்வில் என்னும் உட்கிராமத்தில் தட்டுதல் மூலம் இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் தொடங்கி, கேம்ப்ரிட்ஜ்ஜின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கோரமான தோற்றப்பாடுகள் வரை நவநாகரிக யுகத்தின் ஆவி மற்றும் அமானுஷ்யம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதுக்குள் மதிப்பாய்வு செய்தேன். கணுக்கால் எலும்புகளையும் இன்ன பிற மூட்டுகளையும் பயன்படுத்தி ஆவிகளோடு தொடர்பு கொண்ட (பஃபல்லோ பல்கலைக்கழக அறிஞர்களின் கூற்றுப்படி) ஃபாக்ஸ் சகோதரிகள்; பண்டைய பெரு நாட்டில் ஏற்பட்டது போலவே எப்வர்த் அல்லது டெட்வர்த்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்டான ஒரே மாதிரியான மர்மமான மனநோய்[8]; புனிதமான இசையொலிக்கு ரோஜாக்கள் வீழும், அக்கார்டியன் இசைக்கருவிகள் மிதக்கும் விக்டோரியா காலத்து வெறியாட்டங்கள்; எக்டோபிளாசத்துக்கு[9]  பதிலாக ஈரமான பாலாடை வடிகட்டும் சல்லாத்துணியைப் பயன்படுத்தும் தொழில்முறை மோசடிப் பேர்வழிகள்; ஆவியுலக ஊடகப் பெண்மணி ஒருவரின் மதிப்புக்குரிய கணவரும், சோதனைக்கு உட்படுத்தியபோது, தான் அழுக்கான உள்ளாடை அணிந்திருந்ததைக் காரணமாய்க் கூறி சோதனைக்கு உடன்பட மறுத்தவருமான திரு.டங்கன்; பாஸ்டனில் ஒரு ஓய்வுநேரப் பிரார்த்தனையின்போது, வெற்றுக்கால்களும் துளையிடப்படாத காதுமடல்களுமாய் கண்முன் நின்ற வெள்ளை உருவத்தை, திரைச்சீலை இடப்பட்ட மூலையில் சற்று முன்பு தான் பார்த்தபோது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, கருப்பு உடையும் இறுக்கமான பாதணிகளும், தோடுகளும் அணிந்திருந்த பணிப்பெண் மிஸ் குக்தான் என்பதை நம்ப மறுத்த அப்பாவி இயற்கை ஆர்வலர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்; யூசாப்பியா[10]  என்ற பெரிய, பருத்த உருவம் கொண்ட, சகிக்கவியலாத, வீச்சம் அடிக்கும் முதிய பெண்மணியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபோதும் கூட, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட, குள்ளமாகவும், நோஞ்சானாகவும், ஆனால் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருந்த இரண்டு புலனாய்வாளர்கள்; குளியல் அங்கி அணிந்திருந்த நிலையில், கண்ணை மூடிக்கொண்டு, இடப்பக்கக் காலுறையைத் தடவிக்கொண்டே தொடைவரை செல்லுமாறு இளம்பெண் மார்கரியின் இனிமையான குரல் வழியே அவரை வழிநடத்திய ஆவி மூலம் அதைச் செய்து, கதகதப்பான தொடை மீது கொழகொழப்பான குளிர்ச்சியான, சமைக்கப்படாத பச்சை ஈரலைத் தொட்ட உணர்வடைந்த, அவமானத்துக்கு ஆளான, ஆவியுலக நம்பிக்கையற்ற மாயவித்தைக்காரர் என வரிசையாக நினைவுகூர்ந்தேன்.

7

உடலற்ற என் இருப்புக்கான சாத்தியத்தை மறுக்கவும் தோற்கடிக்கவும் என் சதைப்பிண்டத்திடம்[11], அதன் குற்றங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். ஐயோ! இந்த உச்சாடனங்களே சிந்தியாவின் அமானுஷ்யத்தன்மையின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்தன. விடியற்காலையில் மீண்டும் பழைய அமைதி திரும்பி, நான் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஜன்னல் வழியாக செம்பழுப்பு நிறக் காலைக் கதிரொளி, சிந்தியாவால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் கனவை ஊடுருவித் துளைத்தது. 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பகல் வெளிச்சம் என்னும் பாதுகாப்பான கோட்டைக்குள் இருக்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் கனவு நீடித்திருக்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பிரகாசமான, மிகத் துல்லியமான ஓவியங்களை வரையக்கூடிய சிந்தியா இப்போது அவளே உருவற்றவளாக, தெளிவற்றவளாக இருக்கிறாள். படுக்கையில் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, நான் கண்ட கனவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

மனிதர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்து, பின்னோக்கி ஓடவிட்டால் கீச் கீச் என்று சத்தம் கேட்பது போல, ஒருவேளை இந்த சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து பின்னோக்கி ஓடவிட்டால், மனிதர்களின் பேச்சு போல, வார்த்தைகளை வெளிப்படுத்துமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய கனவை மறுபடி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினேன். முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், குறுக்குவாக்கில், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என பல பரிமாணங்களில், சிந்தியாவைப் போன்ற ஏதாவது ஒன்று, விநோதமாக, விசித்திரமாகத் தென்படுகிறதா என்று கடும் பிரயத்தனத்தோடு அதற்குள் தேடினேன்.        

என்னால் கொஞ்சம்தான் ஆராய முடிந்தது. மஞ்சள் நிறத்தில் மேகமூட்டம் போல் சூழ்ந்து என்னை எதையும் யோசிக்கவிடாமல் செய்தது. எல்லாமே தெளிவற்று மங்க ஆரம்பித்தன. சிந்தியாவுடைய கத்துக்குட்டித்தனமான வார்த்தை விளையாட்டுகள், பசப்பும் பாசாங்குமான ஏமாற்றுவித்தைகள், ஆன்மீக வெறியாட்டங்கள் என நினைவடுக்கில் வந்த யாவும் ஏதோ மர்மமான பொருளைத் தருவதுபோல் தோன்றின. எல்லாமே மஞ்சளாகி, மங்கி, மாயமாகித் தொலைந்து போயின.

பின்குறிப்பு – மூலக்கதையான ஆங்கிலத்தில் கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது ‘பனிக்கூரிகள் சிந்தியாவால், தரிப்பிட மானி என்னால் – சிபில்!’ என்பதாக இருந்தது அது.


[1] பனிக்கூரிகள் (icicles) – கூரையின் மேற்பரப்பிலிருந்து உருகிச் சொட்டும் நீர்த்தாரைகள் உறைந்த நிலையில் ஒன்றிணைந்து, கூரான கத்திகளைப் போன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

[2] வாகனத் தரிப்பிட மானி – Car parking meter

[3] ஸ்லாவ் மக்கள் – மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழி ஸ்லாவோனிக் மொழி.

[4] ஸ்கங்க் (skunk) – தமிழில் முடைவளிமா எனப்படும் கருப்பு வெள்ளை நிற விலங்கு. ஆபத்து நேரத்தில் எதிரியின் மீது அது பீச்சும் திரவத்தின் முடை நாற்றம் கடுமையாக, சகிக்கமுடியாததாக இருக்கும்.

[5] அழியாக் கவிதை – கனவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘குப்ளா கான்’ (அல்லது கனவுக்காட்சி) என்ற கவிதையை எழுதியவர் கவிஞர் சாம்வேல் டெய்லர் கோல்ரிட்ஜ். 1797-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு தூங்கும்போது (அபின் போதையில் இருக்கும்போது என்றும் சொல்லப்படுகிறது) கவிஞருக்கு இக்கவிதை வரிகள் தோன்றியதாகவும் மறுநாள் அவ்வரிகளை நினைவிற்கொண்டுவந்து கவிதையை இயற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரான போர்லாக்கிலிருந்து எதிர்பாராமல் வந்த ஒருவரால் எழுத்து தடைபட்டு பிறகு வரிகள் நினைவுக்கு வராமல் கவிதை முற்றுப்பெற இயலாமலேயே போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விறுவிறுப்பானப் படைப்பாற்றலுக்கு இடையூறு தருபவர்களை ‘போர்லாக்கின் ஆள்’ அல்லது ‘போர்லாக்’ என்று அங்கதமாகக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.

[6] கருத்துத்திருட்டு – ஆஸ்கார் வைல்ட் எழுதி 1890-ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ‘The Picture of Dorian Gray’. சிபில் வேய்ன் என்ற கதாபாத்திரம் அதில் இடம்பெற்றுள்ளது.

[7] வில்லியம் ஹோவார்ட் டஃப்ட் – ஐக்கிய அமெரிக்காவின் 27-வது குடியரசுத் தலைவராக 1909 முதல் 1913 வரை பதவி வகித்தார். பின்னாளில் 1921-1930 வரை ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதியாக இருந்தார். இரண்டு பதவிகளையும் வகித்த ஒரே ஆளுமை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

[8] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னமெரிக்காவை (கொலம்பஸால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கா) இன்கா பழங்குடிப் பேரரசு ஆட்சி புரிந்தது. இன்கா மக்கள் அனைவருக்கும் பொதுவான, காரணம் புலப்படாத மனநோய் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இன்கா மக்களை மட்டுமன்றி அரச குடும்பத்தையும் இந்நோய் பீடித்ததாகத் தெரிகிறது. தாவரங்களும் தாதுக்களும் அதற்கான சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

[9] எக்டோபிளாசம் – அமானுஷ்யக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிசுபிசுப்பான, அருவருப்பான, மர்மமானப் பொருளைக் குறிக்கும்.

[10] யூசாப்பியா பல்லாடினோ – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆவியுலகத் தொடர்பாளர். அவரது அமானுஷ்ய நிகழ்வுகள் யாவும் ஏமாற்றுவித்தைகளே என்று நிரூபிக்க முயன்ற பல மாயவித்தைக்காரர்களும் தந்திரவாதிகளும், இறுதியில் யூசாப்பியா ஒரு புத்திசாலி தந்திரி என்ற முடிவுக்கு வந்தனர். 

[11] தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். – பரிசுத்த வேதாகமம், கலாத்தியர் அதிகாரம் 6.8

மூல ஆசிரியர் குறிப்பு:

விளாதிமிர் நபகோவ் (1899-1977)

ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், மற்றும் பூச்சியியல் வல்லுநர். முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகளும் உலகளாவிய வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பும் இன்றும் விஞ்ஞானிகளால் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. இவர் தன் எழுத்து மூலம் கிடைத்த வருவாயை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

1919-ஆம் ஆண்டு அவரது குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. நபகோவ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவிக் மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பட்டம் பெற்றார். அதன்பின் குடும்பம் பெர்லினில் குடியேறியது. ஒரு பதிப்பகத்தாரின் வேண்டுகோளின்படி ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புதான் இவருடைய முதல் படைப்பு.

இவரது ‘லோலிடா’ நாவல் மிகப் பிரசித்தமானது. ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை அளித்துள்ளார். விளாதிமிர் சிரின் என்பது இவரது புனைபெயர். 

1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வேய்ன் சகோதரிகள்’ கதையை New Yorker பத்திரிகை வெளியிட மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. நபகோவ் அதன் எடிட்டருக்கு அக்கதையின் கட்டமைப்பைப் பற்றியும் மறையெழுத்துப் புதிர் பற்றியும் விளக்கி எழுதினார். கடைசி பத்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு கதையின் முடிச்சை அவிழ்ப்பது, ‘இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு The Hudson Review பத்திரிகையில்தான் முதன் முதலாக இக்கதை வெளியானது. 1961-ஆம் ஆண்டு நபகோவும் அவர் மனைவியும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியூ நகருக்குச் சென்று தங்கினர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அங்கேயே எழுத்திலும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியிலும் கழித்த நபகோவ், தனது 78-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

The post வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ் first appeared on கனலி.

நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்

நிலைய அதிகாரிகளைச்1 சபிக்காதவர்கள் யாராவது உண்டா? அவர்களோடு சர்ச்சையில் ஈடுபடாதவர்கள் எவராவது உண்டா? ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று, அவர்களுடைய அராஜக நடவடிக்கை, திமிர், அலட்சியப்போக்கு போன்றவற்றைப் பற்றி, ஒன்றுக்கும் உதவாத புகார்களைப் பதிவு செய்வதற்காக, அவர்களிடமே புகார்ப் புத்தகத்தைக் கோராதவர்கள் யாராவது உண்டா? பழங்காலத்து நீதிமன்றக் காரியதரிசிகளைப்போல அல்லது குறைந்தபட்சம் முரோம் காட்டின் கொள்ளையர்களைப்போல அவர்களை மனிதகுலத்தின் சாபக்கேடு எனக் கருதாதவர்கள் யார்?

சரி, நாம் இப்போது நியாயத்தின் பக்கம் நின்று பார்ப்போம். நம்மை அந்த நிலைய அதிகாரியின் இடத்தில் பொருத்தி, இன்னும் சற்றுப் பரிவோடு அவர் நிலையைப் பரிசீலிப்போம்.

நிலைய அதிகாரி என்பவர் யார்? சமூகத்தின் கடைக்கோடி வகுப்பைச் சேர்ந்த ஒரு உண்மைத் தியாகி. உடல்ரீதியான தாக்குதல்களிலிருந்து அவரைத் தற்காக்க உதவும் கேடயம்தான் அந்த அதிகாரப் பதவி. ஆனால் எல்லா நேரமும் அது உதவும் என்றும் சொல்லிவிட முடியாது. (வாசகர்களின் மனசாட்சிக்கு இந்த இடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்).

அந்தச் சர்வாதிகாரியின், ஆம், இளவரசர் வாஸம்ஸ்கி2 அவர்களை அப்படித்தான் வேடிக்கையாகக் குறிப்பிடுவார், அந்தச் சர்வாதிகாரியின் பணிதான் என்ன? கப்பலின் கீழ்த்தளத்தில் அடைபட்டுக் காலமெல்லாம் துடுப்பு வலிக்கும் வாழ்நாள் அடிமையைப் போன்றவன் அல்லவா அவன்? அவனுக்கு இரவும் பகலும் ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது.

அலுத்துக் களைத்துவரும் பயணிகள் தங்கள் பயணத்தின் ஒட்டுமொத்த சலிப்பையும் நிலைய அதிகாரியின் மீதுதான் இறக்குவர். சாதகமற்ற வானிலையாகட்டும், மோசமான சாலையாகட்டும், சொல்பேச்சை மதியாத வண்டியோட்டியாகட்டும், சண்டித்தனம் பண்ணும் குதிரையாகட்டும் – எதுவாக இருந்தாலும் பழி என்னவோ நிலைய அதிகாரியின் மேல்தான். நிலைய அதிகாரியின் எளிய வீட்டிற்குள் நுழைந்த கணமே பயணியின் கண்களுக்கு நிலைய அதிகாரியைப் பார்த்தால் எதிரி போலவே தோன்றும்.  எதிர்பாராத விருந்தாளியாய் வந்திருக்கும் பயணிக்கு மாற்றுக் குதிரையைக் கொடுத்து எவ்வளவு விரைவாக அவரை அங்கிருந்து அனுப்பிவைக்கிறாரோ அவ்வளவு பாக்கியசாலி அந்த நிலைய அதிகாரி. கைவசம் மாற்றுக் குதிரைகள் இல்லையென்றால்… கடவுளே! என்ன மாதிரியான வசவுகளும், மிரட்டல்களும் அவர் மீது சரமாரியாகப் பாயும்!

அடைமழை, ஆலங்கட்டி மழையென எதையும் பாராமல் அவரைக் குதிரை லாயத்துக்கு ஓடவைப்பார்கள். எந்நேரமும் சிடுசிடுப்பும் ஆத்திரமுமாக ஏவிக் கொண்டிருக்கும் பயணிகளிடமிருந்து சற்றே விடுபடும் பொருட்டு, நடுங்கவைக்கும் உறைபனிக் குளிரிலும், பனிப்புயல் வீசும் தருணங்களிலும்கூட வீட்டின் முன்பக்கத் தாழ்வாரத்தில் சற்றுநேரம் நின்று ஆசுவாசம் பெற்றுத் திரும்புவார் பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரி.

ஒரு ராணுவ ஜெனரல் வருகிறார். நிலைய அதிகாரி பயந்து நடுங்கியபடி அவர் வசமிருந்த கடைசி இரண்டு குதிரைகளை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அவற்றுள் ஒன்று அஞ்சல் அலுவலருக்கானது. ஜெனரலோ, ஒரு நன்றிகூட சொல்லாமல் குதிரைகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார். ஐந்து நிமிடங்கள் கழித்து வாசலில் அழைப்பு மணி! அஞ்சல் அலுவலர் அஞ்சல் குதிரைகளைப் பெறுவதற்கான ஆணையை மேஜைமீது விசிறியடிக்கிறார். நடந்தவற்றை மனத்தராசில் நிறுத்திப் பார்த்தால் நிலைய அதிகாரியின் மீது ஆத்திரம் வருவதற்குப் பதிலாக கழிவிரக்கம்தான் உண்டாகும். இன்னும் கொஞ்சம் சொல்கிறேன், கேளுங்கள்.

இருபதுவருட காலம் ரஷ்யாவிற்குள் குறுக்கும் நெடுக்குமாகக் கிட்டத்தட்ட எல்லா திக்குகளிலும் பயணம் செய்திருக்கிறேன். நிலையங்கள் இருக்கும் எல்லா சாலைகளையும் கிட்டத்தட்ட அறிவேன். பல தலைமுறைகளைச் சார்ந்த வண்டியோட்டிகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டு. நிலைய அதிகாரிகளைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமில்லாதவர்கள் வெகு சிலரே. வியாபார நிமித்தமாகத் தொடர்பில் இல்லாதவர்கள் சிலர். பயணத்தின்போது நான் குறிப்பெடுத்து வைத்திருக்கும், என்னுடைய கவனத்தைக் கவர்ந்த சுவாரசியமான விஷயங்களைக் கூடிய விரைவிலேயே பிரசுரமாக்குவேன் என்று நம்புகிறேன்.   

இப்போதைக்கு நான் சொல்வது ஒன்றுதான், பொதுமக்களின் பார்வைக்கு, நிலைய அதிகாரிகளின்மீது தவறான வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அவப்பெயருக்கு ஆளான அந்த அலுவலர்கள் உண்மையில் அமைதியான சுபாவத்தினர், உதவும் இயல்பினர், சமுதாய ஒப்புரவு மிக்கவர்கள், பணிவு காட்டுவதில் தேர்ந்தவர்கள், பணத்துக்கு அதிகம் ஆசைப்படாதவர்கள். அவர்களுடனான (பயணிக்கும் பெரும்பாலான கனவான்கள் காரணமே இல்லாமல் வெறுக்கக்கூடிய) உரையாடல்கள் சுவாரசியமாகவும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அரசு அலுவல் நிமித்தம் பயணிக்கும் ஆறாம் வகுப்பு3 அலுவலர்களின் உரையாடல்களை விடவும் இவர்களுடனான உரையாடல்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவ்வளவையும் நான் சொன்ன காரணத்தால் எனக்கு மதிப்புக்குரிய நிலைய அதிகாரிகளுள் பலர் நண்பர்கள் என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். இருப்பினும், அவர்களுள் ஒருவரைப் பற்றிய நினைவுகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. சூழ்நிலை ஒருமுறை எங்களை ஒன்று சேர்த்தது. என்னுடைய அன்பான வாசகர்களுக்கு நான் இப்போது அவரைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

1816-ஆம் ஆண்டு மே மாதம் நான் அந்த மாகாணத்தின் வழியே பயணம் செய்ய நேர்ந்தது. இப்போது அந்தச் சாலை இல்லை. முற்றிலும் சிதைந்துவிட்டது. அப்போது நான் கீழ்மட்டப் பதவியில் இருந்தேன். நிலையங்களுக்குச் சென்று இரண்டு குதிரைகளைக் கட்டணம் செலுத்திப்பெற வேண்டும். உயர்பதவியில் இல்லாத காரணத்தால் நிலைய அதிகாரிகள் மத்தியில் எனக்குப் போதிய வரவேற்போ கவனிப்போ கிடைக்காது. அதனால் எனக்கு உரிமையானது என்று என் மனதுக்குத் தோன்றுவதை வலிந்து எடுத்துக்கொள்வதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். ஒருமுறை ஒரு நிலைய அதிகாரி, எனக்கென்று தயார் செய்யப்பட்டக் குதிரைகளை, அப்போது வந்த உயர் அதிகாரிக்குத் தந்துவிட்டார். இளமைத்துடிப்பும் உணர்வுவேகமும் கொண்டிருந்த நான் அவரது கயமையையும் கோழைத்தனத்தையும் கண்டு ஆத்திரம் கொண்டேன். அதெல்லாம் பழைய கதை. கவர்னருடைய விருந்தில் கலந்துகொள்ளும்போது பரிமாறுபவன் வரிசைக்கிரமமாகப் பரிமாறாமல் எனக்குப் பிரத்தியேகமான கவனிப்பை வழங்குவதை இயல்பாய் நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்தவை. இப்போதெல்லாம் முன்னிறுத்தப்படுவதும் பின்தள்ளப்படுவதும் அதனதன் இயல்பிலேயே நடப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

‘பதவிக்கு மரியாதை’ என்ற பொதுவிதிக்குப் பதிலாக ‘மனதுக்கு மரியாதை’ போன்ற மாற்று விதி ஏதேனும் புழக்கத்துக்கு வருமானால் நம்முடைய நிலைமை என்னாகும்? என்னென்ன பிரச்சினைகள் எழும்? விருந்தின்போது பணியாட்கள் யாருக்கு முன்னுரிமை தருவார்கள்?

இப்போது நான் சொல்லவந்த கதைக்கு வருவோம். 

அன்று வெயில் மிகக் கடுமையாக இருந்தது. அடுத்த நிலையம் சுமார் இரண்டு மைல் தூரத்திலிருந்தபோது மழை தூறத் தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழையாக அடித்துப் பெய்தது. நான் முழுக்க நனைந்துவிட்டேன். நிலையத்துக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய உடைகளை மாற்றினேன். அடுத்து, கொஞ்சம் தேநீர் கேட்டேன்.

“ஏ, தூன்யா! தேநீர்ப் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு கொஞ்சம் க்ரீம் எடுத்துக்கொண்டு வா” நிலைய அதிகாரி உரத்தக் குரலில் கத்தினார்.

தடுப்புக்குப் பின்னாலிருந்து வெளியே வந்த சுமார் பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுமி வீட்டின் முன்பக்கம் ஓடினாள். அவளுடைய அழகு என்னை மிரளவைத்தது.

“உங்கள் மகளா?” நான் நிலைய அதிகாரியிடம் கேட்டேன்.

“ஆமாம், என் மகள்தான். கெட்டிக்காரி, சமர்த்து, இறந்துபோன அவளுடைய அம்மாவைப் போலவே” அவர் பெருமிதம் தொணிக்கச் சொன்னார்.

பிறகு அவர் என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யத் தொடங்கினார். நான் அவருடைய அந்த எளிய இல்லத்தில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஓவியங்கள் ‘வழிதவறிய மைந்தன்’ கதையைப் பிரதிபலித்தன.

முதல் ஓவியத்தில் அமைதியிழந்த இளைஞன், தளர்வாடையும் இரவுக் குல்லாயும் அணிந்திருந்த முதிய தந்தையிடமிருந்து ஆசியையும் பை நிறைய செல்வத்தையும் அவசரமாகப் பெற்றுக்கொண்டு விடைபெறும் காட்சி. இரண்டாவது ஓவியம் அவனுடைய கீழ்த்தரமான வாழ்க்கையை விதவிதமான வண்ணங்களில் சித்தரித்தது. போலியான நண்பர்களும் கூச்சநாச்சமற்றப் பெண்களும் சூழ்ந்திருக்க, அவன் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தான். மூன்றாவது ஓவியத்தில் மிகவும் நொடித்துப்போன நிலையில் கந்தலும் முக்கோண மூலைத் தொப்பியும் அணிந்திருந்த அந்த இளைஞன் பன்றிகளை மேய்த்துக்கொண்டு, அவற்றின் உணவைப் பகிர்ந்துண்ணும் காட்சி. அவனுடைய முகத்தில் ஆழ்ந்த துயரும் தவறை உணர்ந்ததால் உண்டான கழிவிரக்கமும் வெளிப்பட்டன. கடைசி ஓவியம், அவன் தந்தையைத் தேடிவரும் காட்சியைக் குறித்தது. அதே தளர்வாடையுடனும் அதே இரவுக் குல்லாயுடனும் காட்சியளிக்கும் அந்த நல்ல மனிதர், மகனை எதிர்கொண்டு அழைக்க ஓடுகிறார். ஊதாரி மைந்தன் அவரெதிரில் மண்டியிட்டிருக்கிறான். தொலைவில் சமையற்காரர் விருந்து ஏற்பாட்டிற்காகக் கொழுத்த கன்றைக் கொல்கிறார். மூத்த மகன் எல்லோருடைய திடீர் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று பணியாட்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு ஓவியத்தின் அடியிலும் பொருத்தமான ஜெர்மானிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றையும் அவற்றோடு அன்று நான் அவ்வீட்டில் கண்ட பால்சம் பூத்தொட்டிகள், புள்ளிபோட்ட திரைச்சீலை, படுக்கை என என்னைச் சுற்றிலும் இருந்தவற்றை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அடுத்து நான் அந்த நிலைய அதிகாரியைப் பார்த்தேன். உற்சாகமும் உறுதியும் வாய்ந்த, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் மேலங்கியில் மங்கிப்போன ரிப்பன்களோடு கூடிய மூன்று பதக்கங்கள் காட்சியளித்தன.

என்னுடைய பழைய வண்டியோட்டியின் கணக்கைக் கிட்டத்தட்ட சரிபார்த்து முடிக்கும்போது தூன்யா தேநீர்க் குவளையோடு வந்தாள். மதர்ப்புடன் காணப்பட்ட அந்தச் சின்னஞ்சிறு பெண் தன்னைப் பற்றிய என் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விழைவதுபோல் என்னை ஏறிட்டாள். பிறகு தன் விழிகளைத் தழைத்துக்கொண்டாள். நான் அவளிடம் பேசத் தொடங்கினேன். எல்லாம் தெரிந்த பெரிய மனுஷிபோலத் துளியும் தயக்கமின்றி என் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள். நான் அவளுடைய அப்பாவுக்கு ஒரு கோப்பையில் மதுவை நிரப்பிக் கொடுத்தேன். பிறகு அவளுக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்துவிட்டு நானும் எனக்கு எடுத்துக் கொண்டேன். பிறகு நாங்கள் மூவரும் ஏற்கனவே பழக்கமானவர்களைப்போலச் சரளமான உரையாடலில் ஈடுபட்டோம்.

குதிரைகள் ஏற்கனவே தயாராகிவிட்டன. ஆனாலும் நிலைய அதிகாரியையும் அவருடைய மகளையும் விட்டுப்பிரிய எனக்கு மனமே வரவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் விடைபெற்றேன். தந்தை என்னுடைய பயணம் இனிதாக அமைய வாழ்த்தினார். மகள் வண்டிவரை வந்து வழியனுப்பினாள். தாழ்வாரத்தைக் கடக்கும்போது நின்று, அவளை முத்தமிட அனுமதி கேட்டேன். தூன்யா சம்மதித்தாள். அதன் பிறகு எத்தனையோ அற்புதமான முத்தத் தருணங்களை என்னால் கணக்கிட இயலும் எனினும் நினைவில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் அதைப்போன்ற மிக இனிமையான ஒன்றை இதுவரை நான் பெற்றதில்லை.

வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையில் மறுபடியும் சூழ்நிலை என்னை அதே சாலை வழியே அதே இடத்துக்குக் கொண்டு சென்றது. முன்பிருந்த நிலைய அதிகாரியின் மகளை மீண்டும் சந்திக்கப்போகும் நினைவு மகிழ்ச்சியை அளித்தது. “ஆனால்… அதே நிலைய அதிகாரி இப்போதும் அங்கேயே இருப்பாரா? இல்லையேல், பணிமாற்றம் பெற்றிருக்கலாம். தூன்யாவுக்கும் திருமணமாகியிருக்கலாம்” பல சிந்தனைகள் எழுந்தன. இருவரில் ஒருவர் இறந்துபோயிருக்கலாம் என்ற எண்ணம்கூட இடையிடையே மின்னல் போல் வெட்டியது.

நான் குறிப்பிட்ட அந்த நிலையத்தை முன்கணிப்போடும் வருத்தத்தோடும் நெருங்கினேன். அந்தச் சிறிய நிலையத்துக்கு முன்னால் குதிரைகள் நிறுத்தப்பட்டன. அறைக்குள் நுழைந்தவுடனேயே ஊதாரி மைந்தன் ஓவியங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மேஜையும் படுக்கையும் அதே இடத்தில் இருந்தன. ஆனால் ஜன்னல் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பால்சம் பூந்தொட்டிகளைக் காணவில்லை. மேலும் அந்த இடம் முழுவதும் அழுக்கடைந்தும் சிதிலமடைந்தும் காணப்பட்டது. நிலைய அதிகாரி தன்னுடைய ரோம அங்கிக்குள் புதைந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். என்னுடைய வருகைச் சத்தம் அவரை எழுப்பிவிட்டது. அவர் எழுந்து உட்கார்ந்தார். நிச்சயமாக அவர் சிமியோன் விரின்4தான். ஆனால் எவ்வளவு வயதானவராகக் காட்சியளிக்கிறார்!

என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது நான் அவரைப் பார்த்தேன். நரைத்தத் தலைமயிர், நீண்ட காலமாகச் சவரம் செய்யப்படாத முகம், அதிலிருந்த அளவுக்கு அதிகமான சுருக்கங்கள், கூன் விழுந்த முதுகு எனக் காட்சியளித்த அவரைப் பார்த்தபோது திடமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த ஒருவரை மூன்று நான்கு வருட கால இடைவெளி அதற்குள் இவ்வளவு பலவீனமான முதியவராக எப்படி மாற்றியது என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. .

“உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? நாம் ஏற்கனவே பழக்கமானவர்கள்” என்றேன்.

“இருக்கலாம், இது ஒரு நெடுஞ்சாலை. இங்கே பல பயணிகள் வருவார்கள், போவார்கள்” என்றார் அவர் சுரத்தில்லாமல்.

“உங்கள் மகள் தூன்யா நன்றாக இருக்கிறாளா?” நான் தொடர்ந்தேன்.

முதியவர் வெறுப்புடன் முகத்தைச் சுழித்தார். பிறகு “கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார்.

“அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதோ?” நான் கேட்டேன்.

நான் கேட்டது காதில் விழாததுபோல் அவர் என்னுடைய பயண அனுமதிச் சீட்டைப் பார்வையிட்டு அதிலிருக்கும் விவரங்களை மெல்லிய குரலில் வாசித்தார். அவரைக் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, குடிக்க ஏதாவது வேண்டுமென்று கேட்டேன். தூன்யாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் என்னைத் தூண்டியது. ஒருவேளை மதுவருந்தும் நேரத்தில் அவர் தன்னுடைய இறுக்கத்தைத் தளர்த்தி என்னோடு பழையபடி உரையாடுவார் என்று நம்பினேன். நான் கணித்தது தவறாகவில்லை. நான் அவரிடம் மதுக்கோப்பையை கையளித்தபோது அவர் மறுக்கவில்லை. மது அவருடைய துயரார்ந்த மௌனத்தைக் கலைப்பதை நான் அவதானித்தேன். இரண்டாவது கோப்பையின்போது அவர் பேச ஆரம்பித்தார். அவருக்கு என்னை ஞாபகம் வந்துவிட்டது அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. அப்போது அவர் சொன்ன கதை ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அதே சமயம் என்னை ஆழமாகப் பாதிப்பதாகவும் இருந்தது.

“அப்படியென்றால் உங்களுக்கு என் மகள் தூன்யாவைத் தெரியும்?” அவர் ஆரம்பித்தார். “ஆனால் தூன்யாவை யாருக்குதான் தெரியாது? ஆ… தூன்யா, தூன்யா! எப்படிப்பட்டப் பெண் அவள்! இந்த வழியாகப் போகும் எல்லோருமே  அவளைப் பாராட்டுவார்கள். அவளைப்பற்றித் தவறாக ஒருவரும் ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. பெண்கள் அவளுக்குக் கைக்குட்டை, கம்மல் என ஒன்று மாற்றி ஒன்று பரிசாகத் தந்துகொண்டே இருப்பார்கள். கனவான்கள் பகலுணவுக்கோ இரவுணவுக்கோ நிறுத்துவதுபோல் வேண்டுமென்றே இங்கே நிறுத்துவார்கள். அவளை அப்போதுதான் நீண்டநேரம் பார்த்து ரசிக்க முடியும் என்பதுதான் உண்மை. கடுங்கோபத்தில் இருப்பவர்கூட அவள் முன்னால் அமைதியாகி என்னிடம் அன்பாகப் பேசுவார். நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ, விரைவஞ்சல் ஊழியர்களும் வழக்காடுமன்றத் தகவற்தூதர்களும் தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவளிடம் அரைமணிநேரம் கூட நின்று பேசுவார்கள்.

இந்த வீட்டை நேர்த்தியாகப் பராமரித்தவள் அவள்தான். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைப் பேணுவாள். எல்லாப் பொருட்களையும் தயாராக வைத்திருப்பாள். எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக்கொண்டாள். ஆனால் நான்? கிழட்டு முட்டாள் மாதிரி, அவளை அன்பாகப் பார்த்துக்கொண்டேனே தவிர, அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. நான் என் மகளை நேசிக்கவில்லையா? நான் அவளுக்குச் செல்லம் கொடுக்கவில்லையா? மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரவில்லையா? ஆனால்… முடியாது, யாராலும் கெடுவினையிலிருந்து தப்ப முடியாது. என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து நழுவ முடியாது.”

அவர் கடந்துபோன துயரத்தை என்னிடம் விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலைப்பொழுது. நிலைய அதிகாரி புதிய பதிவேட்டைத்  தயார் செய்துகொண்டிருந்தார். மகள் தடுப்புக்குப் பின்னால் அமர்ந்து ஏதோ தைத்துக்கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. மென்கம்பளிக் குல்லாயும் ராணுவச் சீருடையும் அணிந்து கழுத்துக்குட்டை சுற்றிய ஒருவன் உள்ளே நுழைந்தான். குதிரைகள் வேண்டுமென்று கேட்டான்.  அப்போது குதிரைகள் எதுவுமே நிலையத்தில் இல்லை. எல்லாக் குதிரைகளும் வெளியில் போயிருந்தன. அதைச் சொன்னவுடனேயே அவனுடைய குரலோடு சேர்ந்து சாட்டையும் உயர்ந்தது. இம்மாதிரியான சூழல்களுக்குப் பழக்கப்பட்டுப்போன தூன்யா சட்டென்று தடுப்புக்குப் பின்னாலிருந்து ஓடிவந்து, பயணியைப் பார்த்துக் கனிவோடு ‘உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏதாவது கொண்டுவரவா?’ என்று கேட்டாள். தூன்யாவின் வருகை வழக்கமான மாற்றத்தை உண்டாக்கியது. பயணியின் கோபம் குறைந்தது. அவன் குதிரைகள் வரும்வரை காத்திருக்கச் சம்மதித்ததோடு இரவுணவையும் கோரினான். நனைந்திருந்த குல்லாயையும், இராணுவ உடையையும், கழுத்துக்குட்டையையும் களைந்த பிறகு, அந்த இளம் வீரன் உயரமாகவும், மெலிந்த உடல்வாகுடனும் கன்னங்கரு மீசையுடனும் காட்சியளித்தான். அவன் நிலைய அதிகாரியுடனும் அவர் மகளுடனும் இயல்பாகவும் இனிமையாகவும் உரையாடத் தொடங்கினான். இரவுணவு பரிமாறப்பட்டது. அதற்கிடையில் குதிரைகள் வந்துவிட்டன. நிலைய அதிகாரியின் உத்தரவின் பேரில் பயணியின் கிபிட்காவில்5 குதிரைகளுக்குச் சேணம் பூட்டப்பட்டன. தீவனம் வைக்கப்படாமலேயே அவை தங்களுடைய அடுத்தப் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தப்பட்டன. குதிரைகள் தயாராக இருப்பதை அறிவிப்பதற்காக, நிலைய அதிகாரி அறைக்குள் நுழைந்தபோது அவ்விளைஞன் கிட்டத்தட்ட சுயநினைவு இல்லாமல் விசிப்பலகைமேல் கிடப்பதைக் கண்டார். அவன் சுகவீனமாக இருந்தான். தலைவலிப்பதாகச் சொன்னான். இந்த நிலையில் அவனுடைய பயணத்தைத் தொடர்வது சாத்தியமில்லை என்றானது. இப்போது என்ன செய்வது? நிலைய அதிகாரி தன்னுடைய படுக்கையில் அவனைப் படுக்க வைத்தார். நோயாளி மறுநாள் காலைக்குள் குணமாகவில்லை என்றால் அடுத்த ஊரில் உள்ள மருத்துவரை அழைக்க முடிவு செய்தார்.

மறுநாள் இளைஞனின் நிலைமை இன்னும் மோசமானது. அவனுடைய வேலையாள் மருத்துவரை அழைக்கச் சென்றான். வினிகரில் தோய்த்த கைக்குட்டையை இளைஞனின் தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுவிட்டு, தையல் வேலை செய்தபடி தூன்யா அவன் பக்கத்திலேயே இருந்தாள். நிலைய அதிகாரி பார்த்தபோது அவன் மூச்சுவிடத் திணறினான். மிகவும் கஷ்டப்பட்டு சில வார்த்தைகளை உச்சரித்தான். ஆனால் இரண்டுமுறை காஃபி குடித்தான். முணகியபடி இரவுணவு கோரினான். தூன்யா அவனை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. அவன் தொடர்ச்சியாகக் குடிப்பதற்கு ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தான். தூன்யா தானே எலுமிச்சைகளைப் பிழிந்து சாறு தயாரித்துக் குவளை நிறைய அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

நோயாளி அவ்வப்போது கொஞ்சம் பழச்சாறு அருந்தி உதடுகளைச் சற்றே ஈரப்படுத்திக்கொள்வான். பிறகு தூன்யாவிடம் குவளையைத் திருப்பிக் கொடுக்கும்போதெல்லாம் தன் நன்றியைத் தெரிவிப்பதுபோல் அவளுடைய கையை அழுத்திப் பிடிப்பான். மருத்துவர் இரவுணவு சமயத்தில் வந்தார். அவர் நோயாளியின் நாடியைப் பரிசோதித்துவிட்டு அவனுடன் ஜெர்மன் மொழியில் உரையாடினார். பிறகு நிலைய அதிகாரியிடம் ரஷ்ய மொழியில், ‘நோயாளியின் தற்போதைய தேவை ஓய்வு மட்டுமே. இரண்டுநாள் ஓய்வுக்குப் பிறகு அவர் பயணத்தைத் தொடரலாம்’ என்றார். ராணுவ வீரன் மருத்துவரின் வருகைக்கான கட்டணமாக இருபத்தைந்து ரூபிள் கொடுத்துவிட்டு, இரவுணவையும் அவர் தங்களோடு சேர்ந்து உண்ணுமாறு அழைப்பு விடுத்தான். மருத்துவர் சம்மதித்தார். இருவரும் அருமையான இரவுணவை உண்டுமுடித்தனர். ஒயின் குடித்தனர். பிறகு முழு திருப்தியோடு ஒருவருக்கொருவர் விடைகொடுத்தனர்.

மற்றுமொருநாள் போனது. ராணுவ வீரன் முழுவதுமாகக் குணமடைந்துவிட்டான். அவன் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டான். நிலைய அதிகாரியிடமும் தூன்யாவிடமும் மாறி மாறி தொடர்ச்சியாகக் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்தான். ஏதேதோ பாடல்களைச் சீட்டியடித்தான். வந்துபோகும் பிற பயணிகளோடு அளவளாவினான். அவர்களுடைய வருகைப் பதிவை பதிவேட்டில் பதிந்தான். எந்த அளவுக்கு நிலைய அதிகாரியின் மனதைக் கவர்ந்திருந்தான் என்றால் மூன்றாம்நாள் அவன் புறப்படும்போது இப்படியொரு அற்புதமான விருந்தாளியை வழியனுப்ப மனமில்லாமல் அவர் வருந்தினார். 

அன்று ஞாயிற்றுக்கிழமை. தூன்யா ஞாயிறு பூசைக்குத் தேவாலயம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். ராணுவ வீரனின் கிபிட்காவும் தயாராகிவிட்டது. அவன் நிலைய அதிகாரியிடம் அவருடைய உபசரிப்புக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி கூறினான். தூன்யாவிடம் விடைபெற்றுக்கொண்டதோடு, அவள் விரும்பினால், ஊரின் எல்லையில் உள்ள தேவாலயம் வரையிலும் தன்னோடு வரலாம் என்றும் அழைப்பு விடுத்தான். தூன்யா தயங்கினாள்.

“நீ எதற்காகப் பயப்படுகிறாய், தூன்யா? மேன்மைக்குரிய இவர் ஒன்றும் ஓநாய் அல்லவே. உன்னைத் தின்றுவிடமாட்டார். தேவாலயம் வரையிலும் அவரோடு சென்றுவா, மகளே” நிலைய அதிகாரி மகளிடம் சொன்னார்.

தூன்யா கிபிட்காவில் ஏறி ராணுவ வீரனின் அருகில் அமர்ந்துகொண்டாள். பணியாள் படக்கென்று குதித்தெழுந்து வண்டியோட்டிக்கு அடுத்தாற்போல் அமர்ந்துகொண்டான். வண்டியோட்டி விசில் அடித்ததும் குதிரைகள் பெரும் பாய்ச்சலுடன் புறப்பட்டன.

பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரிக்குத் தான் எந்த நம்பிக்கையில் தன் மகளை முன்பின் அறிந்திராத ராணுவ வீரனோடு செல்ல அனுமதித்தோம் என்பது புரியவே இல்லை. எது அவர் கண்ணைக் கட்டிவிட்டது? எது அவரை யோசிக்கவிடாமல் தடுத்தது? அரைமணி நேரம் கழிவதே பெரும்பாடானது. நேரம் செல்லச் செல்ல அவர் உள்ளத்தில் அமைதியின்மையும் அலைக்கழிப்பும் உண்டாயின. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க இயலாமல் உள்ளுக்குள் உண்டான உறுத்தல் காரணமாக மகளைத்தேடி அவரே தேவாலயத்துக்குப் புறப்பட்டார். ஆலயத்தை வந்தடைந்தபோது, ஏற்கனவே பூசை முடிந்து மக்கள் கலைந்துவிட்டிருந்தனர். தூன்யாவை ஆலயத்தின் முகப்பிலும் வளாகத்திலும் தேடினார். எங்கும் காணவில்லை. ஆலயத்தின் உள்ளே பதற்றத்தோடு ஓடினார். பாதிரியார் திருப்பலிபீடத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார். உதவியாளர் மெழுகுத்திரிகளை அணைத்துக்கொண்டிருந்தார். இரண்டு முதிய பெண்மணிகள் ஒரு மூலையில் இன்னமும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தூன்யா அங்கு இல்லை.

தளர்ந்துபோயிருந்த அத்தந்தை பெரும் பிரயத்தனத்துடன் தன் சக்தியை ஒன்றுதிரட்டி, அந்த உதவியாளரிடம், தன் மகள் தூன்யா பூசைக்கு வந்திருந்தாளா என்று கேட்டார். உதவியாளர் அவள் வரவில்லை என்று சொன்னார். என்ன செய்வதென்று புரியாத நிலைய அதிகாரி நடைபிணமாகத் திரும்பினார். அவருக்கு ஒரே ஒரு நம்பிக்கை எஞ்சி இருந்தது. தூன்யா இளவயதுப் பெண்களுக்கே உரிய துடுக்குத்தனத்தோடு அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அடுத்த ஊரில் இருக்கும் அவளுடைய ஞானத்தாயைப் பார்க்கச் சென்றிருக்கலாம் என்னும் எண்ணம்தான் அது.

உள்ளுக்குள் வதைக்கும் வேதனையோடும் குழப்பத்தோடும் மகளை எந்தக் குதிரை வண்டியில் வழியனுப்பி வைத்தாரோ அந்தக் குதிரைவண்டி திரும்பி வருவதற்காகக் காத்திருந்தார். வண்டி வரவில்லை. மாறாக, தூன்யாவும் ராணுவ வீரனும் இருந்த அந்த வண்டி அடுத்த ஊரைக் கடந்து சென்றுவிட்டது என்ற பயங்கரச் செய்திதான் வந்தது. அன்று மாலை அவர் தனியாகவும் மிதமிஞ்சிய போதையோடும் விடப்பட்டார். அந்த முதிய தந்தையால் தன்மகள் தன்னை விட்டுச் சென்றுவிட்ட துயரத்தைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. வீட்டுக்குள் நுழைந்த கணமே தன் படுக்கையில், முந்தைய தினம் அந்த ஏமாற்றுக்கார இளைஞன் படுத்திருந்த அதே படுக்கையில் விழுந்தார். நடந்தவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்தபோது, அவன் நோய்வாய்ப்பட்டதாகச் சொன்னது எல்லாமே நாடகம் என்ற முடிவுக்கு வந்தார்.

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலைய அதிகாரி, அடுத்த ஊருக்கு அனுப்பப்பட்டார். அவர் திரும்பிவரும்வரை அவருடைய இடத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டார். ராணுவவீரனைப் பரிசோதித்த அதே மருத்துவர்தான் நிலைய அதிகாரியையும் பரிசோதித்தார். ராணுவவீரனைத் தான் பரிசோதித்தபோது அவனுக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும் ஏதோ கெட்ட எண்ணத்துடன்தான் அவன் அப்படி நடிக்கிறான் என்பதையும் தான் சந்தேகித்ததாகவும், அவனுடைய சாட்டை அடிக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்ததாகவும் மருத்துவர் உறுதியாகச் சொன்னார். அந்த ஜெர்மானிய மருத்துவர் உண்மையைத்தான் சொல்கிறாரா அல்லது தன்னுடைய கூர்மதியைப் பறைசாற்ற விரும்பி அவ்வாறு சொல்கிறாரா என்பது தெரியவில்லை என்றாலும் அவரது கூற்று, அந்தக் கையாலாகாதத் தந்தையை எந்த விதத்திலும் ஆற்றுப்படுத்தவில்லை. ஓரளவு உடல்நிலை தேறியதும், அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் இரண்டு மாத விடுப்பு பெற்றுக்கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல், மகளைத்தேடி தானே புறப்பட்டார் தந்தை. பதிவு செய்யப்பட்டிருந்த அனுமதிச் சீட்டைக்கொண்டு கேப்டன் மின்ஸ்கி6 ஸ்மோலன்ஸ்கிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றிருப்பதை அறிந்துகொண்டார். தூன்யா தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே செல்வதாகத் தெரிந்தபோதிலும் வழி நெடுக அழுதுகொண்டே சென்றதாக அவர் பயணித்த வண்டியின் வண்டியோட்டி சொன்னார்.

“முடியுமானால்… தொலைந்துபோன என் ஆட்டுக்குட்டியைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கொண்டுவருவேன்” நிலைய அதிகாரி நினைத்துக்கொண்டார்.

அதே நினைவோடு அவர் பீட்டர்ஸ்பர்க்கை அடைந்தார். இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளத்தின்7 ஓய்வுபெற்ற கடைநிலை வீரரும் நிலைய அதிகாரியின் பழைய நண்பருமான ஒருவரின் குடியிருப்பில் தங்கித் தன் தேடுதலைத் தொடங்கினார். கேப்டன் மின்ஸ்கி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்தான் இருக்கிறான் என்பதையும் டிம்யூத் ஹோட்டலில் தங்கியிருக்கிறான் என்பதையும் விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டார். அவனைச் சந்திக்க முடிவு செய்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு கேப்டன் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். நுழைவுக்கூடத்தில் நின்றபடி, மேன்மைக்குரியவரைக் காண்பதற்காக ஒரு முதிய ராணுவவீரன் வந்திருப்பதாகச் சொல் என்று அங்கிருந்த ராணுவ சேவகனிடம் அறிவித்தார். பூட்ஸ்களைத் துடைத்துக் கொண்டிருந்த அவன், தங்கள் எஜமானர் இன்னமும் உறங்கிக்கொண்டிருப்பதாகவும் காலை பதினொரு மணிக்கு முன்னால் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் கூறினான். நிலைய அதிகாரி திரும்பிச் சென்றுவிட்டு, சேவகன் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் வந்தார். இரவுநேரத்துத் தளர்வாடையும் சிவப்புநிறக் குல்லாயும் அணிந்திருந்த மின்ஸ்கி தானே வெளியில் வந்தான்.

“உங்களுக்கு என்ன வேண்டும், நண்பரே?” அவன் கேட்டான்.

முதிய தந்தையின் இதயம் துடித்தது. கண்ணீர் பெருகியது. நடுங்கும் குரலில் அவர் சொன்னார், “மேன்மைக்குரியவரே! தாங்கள் எனக்கொரு பேருதவி செய்ய வேண்டும்…”

மின்ஸ்கி அவரை உற்றுப் பார்த்தான். சற்றுக் குழம்பியவனாய், அவரைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டான்.

“மேன்மைக்குரியவரே! போனது போய்விட்டது. என் மகள் தூன்யாவையாவது என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவளை உங்களுடைய விளையாட்டுப் பொம்மையாக ஆக்கிவிட்டீர்கள். மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் அழித்து அவளை நாசமாக்கிவிடாதீர்கள்”

“நடந்து முடிந்த எதையும் மாற்ற முடியாது” அவன் கிட்டத்தட்ட குழம்பிய நிலையிலிருந்தான். “உங்கள் முன்னால் நான் குற்றவாளியாக நிற்கிறேன். உங்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தூன்யாவை விட்டுவிடுவேன் என்று மட்டும் நினைக்காதீர்கள். அவள் மகிழ்ச்சியாக இருப்பாள், நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் எதற்காக அவளை மீளப் பெற நினைக்கிறீர்கள்? அவள் என்னை நேசிக்கிறாள். இனி அவளால் அவளுடைய முந்தைய வாழ்க்கையை வாழ முடியாது. நடந்தவற்றை முற்றிலும் மறந்துவிட அவளாலும் முடியாது. உங்களாலும் முடியாது.”

அவன் எதையோ அவருடைய சட்டைக்கை மடிப்பினுள் திணித்துத் தள்ளியபடி, அறைக் கதவைத் திறந்தான். என்ன ஏது என்று புரிந்துகொள்வதற்குள்ளாகவே தெருவில் நின்றிருக்கக் கண்டார். அதிர்ச்சியில் உறைந்தவராய் வெகுநேரம் அவர் அப்படியே அங்கேயே நின்றிருந்தார். பிறகுதான் தன்னுடைய சட்டைக்கை மடிப்பில் ஏதோ தாள்சுருள் இருப்பதைக் கவனித்தார். வெளியில் எடுத்துப் பார்த்தபோது ஐந்தும் பத்துமாய்ப் பல ரூபிள் தாள்கள் சுருட்டிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மீண்டும் அவர் கண்களில் கண்ணீர் தளும்பியது. இம்முறை கொந்தளிக்கும் ஆத்திரத்தின் கண்ணீர்! அவர் பணத்தாள்களைக் கசக்கிப் பந்தாக்கி தரையில் வீசியெறிந்தார். பூட்ஸ் கால்களால் அதை ஆத்திரம் தீரும்வரை மிதித்தார். பிறகு அங்கிருந்து விலகி நடந்தார்.

சற்று தூரம் சென்றதும் என்ன நினைத்தாரோ, நின்றார். மீண்டும் அந்த இடத்துக்குத் திரும்பினார். ஆனால் பணச்சுருள் அங்கே இல்லை. நன்கு உடையணிந்த வாலிபன் ஒருவன் அவர் திரும்பிவருவதைப் பார்த்து, அவசரமாக அங்கிருந்த நான்கு சக்கரக் குதிரைவண்டியில் தாவி ஏறி, வண்டியோட்டியிடம், “சீக்கிரம் போ” என்று கத்தினான்.

நிலைய அதிகாரி அவனைப் பின்தொடரவில்லை. அவர் தன்னுடைய ஊருக்கே திரும்பிவிட முடிவுசெய்தார். ஆனால் போவதற்கு முன்பு ஒரு முறையாவது தூன்யாவைப் பார்த்துவிட விரும்பினார். அதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். தங்கள் தலைவர் யாரையும் பார்க்க மாட்டார் என்று சொன்ன சேவகன் அவரைப் பலவந்தமாய், நுழைவுக்கூடத்துக்கு வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு, கதவை அறைந்து மூடினான். நெடுநேரம் கதவுக்கு வெளியே காத்திருந்துவிட்டு, பிறகு அங்கிருந்து வெளியேறினார் நிலைய அதிகாரி.

அன்றையதினம் மாலை அவர் தூய அடைக்கல அன்னை ஆலயத்தின் பூசை முடிந்து லிட்டெனியா சாலைவழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு அழகான நான்கு சக்கரக் குதிரைவண்டி வேகமாக அவரைக் கடந்துபோனது. அது மின்ஸ்கியின் வண்டி என்பதை உடனடியாக நிலைய அதிகாரி அடையாளம் கண்டுகொண்டார். அந்த வண்டி அங்கிருந்த மூன்றுமாடிக் கட்டடத்தின் முன்னால் அதன் வாசலை ஒட்டி நின்றது. கேப்டன் மின்ஸ்கி படிக்கட்டில் ஓட்டமாக ஏறி ஓடினார். நிலைய அதிகாரியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் உதயமாகி மகிழ்ச்சி பரவியது. அவர் வண்டியோட்டியை அணுகி, “இது யாருடைய வண்டி, நண்பரே? மின்ஸ்கியுடையதுதானே?” என்றார்.

“அவருடையதேதான். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றான் அவன்.

“உங்கள் முதலாளி அவருடைய தூன்யாவுக்கு ஒரு கடிதம் தரச்சொல்லி என்னிடம் கொடுத்திருந்தார். ஆனால் தூன்யாவின் முகவரியை நான் தவறவிட்டுவிட்டேன்.” என்றார்.

“அவள் இங்கேதான் இரண்டாவது தளத்தில் குடியிருக்கிறாள். ஆனால் நீங்கள் உங்கள் கடிதத்தோடு தாமதமாக வந்துவிட்டீர்கள். இப்போது அவரே அவளுடன்தான் இருக்கிறார்.”

“அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை” நிலைய அதிகாரி படபடக்கும் இதயத்தோடு பதில் சொன்னார். “உங்களுடைய தகவலுக்கு நன்றி. என்னுடைய பணியை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று நான் அறிவேன்” அவர் சொல்லிக்கொண்டே படிகளில் ஏறினார்.

கதவு தாழிடப்பட்டிருந்தது. அவர் அழைப்புமணியை அழுத்தினார். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் வலி நிறைந்ததாக இருந்தது. ஒரு வழியாகச் சாவி திருகப்படும் சத்தத்தைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது. இளவயதுப் பணிப்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

“அவ்தோட்யா செமியோனோவ்னா8 இங்குதானே வசிக்கிறார்?” அவர் கேட்டார்.

“ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்?” அவள் கேட்டாள்.

நிலைய அதிகாரி பதில் எதுவும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தார்.

“நீங்கள் உள்ளேபோக முடியாது. நீங்கள் உள்ளேபோக முடியாது” பணிப்பெண் அவர் பின்னாலேயே கத்திக்கொண்டு வந்தாள், “அவ்தோட்யா செமியோனோவ்யா இப்போது ஒரு விருந்தினரோடு இருக்கிறார்.”

அவளுடைய கத்தலைப் பொருட்படுத்தாமல் நிலைய அதிகாரி நேராக உள்ளே சென்றார். முதலிரண்டு அறைகளும் இருட்டாக இருந்தன. மூன்றாவது அறையில் விளக்கு எரிந்தது. திறந்திருந்த அந்த அறைக்கதவின் முன்வந்து நின்றார். அறைகலன்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்த அவ்வறையில் மின்ஸ்கி ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தான். மிகவும் நளினமாக நவநாகரிக உடையணிந்திருந்த தூன்யா, சேணத்தின்மீது அமர்ந்திருப்பவளைப் போல் நாற்காலியின் கைப்பிடிமீது அமர்ந்திருந்தாள். மின்ஸ்கியை மிகுந்த கனிவோடு பார்த்தபடி, அவனுடைய கன்னங்கரிய சுருள்முடிக் கற்றையைத் தன் அழகிய விரல்களால் சுருட்டிக்கொண்டிருந்தாள்.

பாவம் அந்த நிலைய அதிகாரி! தன் மகளை இதுவரை இவ்வளவு அழகாகப் பார்த்ததே இல்லை. தன்னுடைய விருப்பத்துக்கு மாறாய் அவள் அழகை உள்ளுக்குள் வியந்தார்.

“யார் அங்கே?” நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் கேட்டாள்.

அவர் அமைதியாக இருந்தார். பதில் ஏதும் வராமல் போகவே, அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவ்வளவுதான். அலறியபடி மயங்கிக் கீழே விழுந்தாள். அதிர்ச்சியோடு அவளை அவசரமாகத் தூக்கச் சென்ற மின்ஸ்கியின் பார்வையில் அறை வாசலில் நின்றிருந்த முதியவர் தென்பட்டார். அவன் தூன்யாவை அப்படியே விட்டுவிட்டு, ஆவேசத்துடன் அவரைநோக்கி வந்தான்.

“உங்களுக்கு என்னதான் வேண்டும்?” பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான். “எதை அபகரிப்பதற்காக திருடனைப்போல என் பின்னாலேயே சுற்றுகிறீர்கள்? அல்லது என்னைக் கொல்ல நினைக்கிறீர்களா? இங்கிருந்து போய்த் தொலையுங்கள்” வலிமை மிகுந்த கரத்தால் அவருடைய கழுத்துப்பட்டியை முரட்டுத்தனமாகப் பிடித்திழுத்து படிக்கட்டில் கீழே தள்ளினான்.

முதிய தந்தை தங்குமிடத்துக்குத் திரும்பினார். மின்ஸ்கியின் மீது புகார் மனு அளிக்கும்படி அவருடைய நண்பர் அறிவுறுத்தினார். ஆனால் நிலைய அதிகாரி மறுத்துவிட்டதோடு, இனி இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை என்றும் கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் பீட்டர்ஸ்பர்க்கை விட்டுப் புறப்பட்டு ஊருக்குத் திரும்பிச்சென்று தனது வழக்கமான நிலையப் பணிகளில் ஈடுபடலானார்.

அவர் கதையின் முடிவுக்கு வந்தார். “இது மூன்றாவது வருடம். தூன்யா இல்லாமல், அவளைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்றாவது வருடம் இது. அவள் உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. பயணிகளாக வரும் பொறுக்கிப்பயல்கள் மயக்கி வசப்படுத்தி, கொஞ்சநாள் அனுபவித்துவிட்டு பிறகு நிர்க்கதியாக விட்டுவிடும் பெண்களுள் அவள் முதல் பெண் கிடையாது. கடைசிப் பெண்ணும் கிடையாது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர்களைப்போல ஏராளமான முட்டாள் பெண்பிள்ளைகள் உண்டு. இன்றைக்கு சாட்டினும் வெல்வெட்டும் உடுத்தியிருப்பார்கள். நாளை சாராயக்கடைகளின் தெருக்களில் மோசமான குடிகாரத் தறுதலைகளோடு திரிந்துகொண்டிருப்பார்கள். தூன்யாவும் அவர்களுள் ஒருத்தியாகக் கெட்டுச் சீரழிந்துவிடுவாளோ என்று நினைக்கும்போது, எனக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை, அவள் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே செத்துப்போய்விடவேண்டும் என்று விரும்புகிறேன்.”

நிலைய அதிகாரியான என் நண்பர் சொன்ன கதை இதுதான். கதையின் நடுநடுவே பல தடவை கசியும் கண்களை மேலங்கியின் நுனியால் நாசுக்காகத் துடைத்தபடி சொன்னார். கதையைச் சொல்லும்போது கூடவே உள்ளேபோன ஐந்து கோப்பை மதுவும் துக்கத்தை அதிகமாகத் தூண்டிவிட்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் கதை என்னுடைய மனதின் அடியாழத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அவரிடமிருந்து விடைபெற்று வந்த பிறகும் வெகுகாலம் நிலைய அதிகாரியின் நினைவு என் மனதை விட்டு அகலவில்லை. அதைப் போலவே அந்தப் பாவப்பட்ட பெண் தூன்யாவையும் வெகுகாலம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்தச் சிறிய ஊரின் வழியாக என் பயணம் அமைந்தது. சட்டென்று எனக்கு என் பழைய நண்பரின் நினைவு வந்தது. அவர் நிர்வகித்துவந்த நிலையம் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன். ‘அந்த முதிய நிலைய அதிகாரி இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என்ற என் கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் கிடைக்கவில்லை. நானே நேரில் சென்று விசாரித்து அறிந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்து பக்கத்து ஊரில் குதிரைகளை இரவல்பெற்று அவருடைய ஊருக்குக் கிளம்பினேன்.

அது ஒரு இலையுதிர்காலம். சாம்பல்நிற மேகங்கள் வானை மூடியிருந்தன. அறுவடை முடிந்த வயல்களினூடாகக் குளிர்க்காற்று வீசியது. உதிர்ந்த சிவப்பு மற்றும் மஞ்சள் இலைகள் காற்றோடு கலந்திருந்தன. நான் அந்தச் சிற்றூரை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது.

நான் நேராக நிலையத்துக்குச் சென்றேன். தாழ்வாரத்தில், முன்பொரு நாள் தூன்யா என்னை முத்தமிட்ட அந்த இடத்தில் ஒரு பருத்தப் பெண்மணியைச் சந்தித்தேன். என்னுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், நிலைய அதிகாரி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும் இப்போது அந்த வீடு தேறல் வடிப்பகமாக இருப்பதாகவும், தான் தேறல் வடிப்பவரின் மனைவி என்றும் சொன்னார். தேவையில்லாமல் ஏழு ரூபிள்களைச் செலவு செய்துவிட்டோமே, இங்கு வந்தது உபயோகமில்லாமல் போயிற்றே என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

“எதனால் அவர் இறந்துபோனார்?” நான் அப்பெண்மணியிடம் கேட்டேன்.

“குடிதான். வேறென்ன? பாவப்பட்ட தகப்பன்!” அவர் சொன்னார்.

“அவருடைய கல்லறை எங்குள்ளது?”

“ஊருக்கு வெளியே.. அவருடைய மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில்”

“யாராவது எனக்கு அந்த இடத்தைக் காட்ட முடியுமா?”

“தாராளமாக. ஏ, வான்கா! பூனையோடு விளையாடியது போதும். இதோ, இந்தப் பெரிய மனிதரை கல்லறைத் தோட்டத்துக்கு அழைத்துச்சென்று, நிலைய அதிகாரியுடைய கல்லறை இருக்குமிடத்தைக் காட்டிவிட்டு வா!”

அப்பெண்மணியின் அழைப்பைக் கேட்டு, கந்தலாடையோடு செம்பட்டைத் தலைமயிரும் மாறுகண்ணுமாய் இருந்த சிறுவன் ஓடிவந்து கல்லறைத் தோட்டம் இருக்கும் திசையில் எனக்கு முன்னால் நடக்கத் தொடங்கினான்.

“இறந்துபோனவரை உனக்குத் தெரியுமா?” போகும் வழியில் அச்சிறுவனைக் கேட்டேன்.

“எனக்குத் தெரியுமாவா? அவர்தான் எனக்கு ஊதுகுழாய் செய்வதற்குச் சொல்லிக்கொடுத்தார். சாராயக்கடையிலிருந்து அவர் வெளியில் வரும்போது நாங்கள் எல்லோரும் அவர் பின்னால் ஓடிச்சென்று, “தாத்தா… தாத்தா… கொஞ்சம் பருப்பு கொடுங்க” என்று கேட்போம். அவரும் நாங்கள் கொறிப்பதற்குக் கொஞ்சம் பருப்புகளை அள்ளிக் கொடுத்துவிட்டுப் போவார். அவர் எப்போதும் எங்களோடு விளையாடுவார்.”

“இந்த வழியாகப் போகும் பயணிகள் யாராவது அவரைப் பற்றிக் கேட்கிறார்களா?”

“இப்போதெல்லாம் குறைவான பேர்தான் இந்த வழியாகப் போகிறார்கள். வரிவிதிப்பவர் எப்போதாவது இந்தப் பக்கமாகப் போவார். ஆனால் இறந்துபோனவர்களைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படமாட்டார். போன கோடைக்காலத்தில் இந்தப் பக்கமாகப்போன ஒரு சீமாட்டி பழைய நிலைய அதிகாரியைப் பற்றி விசாரித்தாள். பிறகு அவருடைய கல்லறைக்குப் போனாள்.”

“அவள் எப்படி இருந்தாள்?” நான் ஆர்வத்தோடு கேட்டேன்.

“மிகவும் அழகாக இருந்தாள். ஆறு குதிரைகள் பூட்டிய கூண்டுவண்டியில் வந்திருந்தாள். அவளோடு மூன்று குழந்தைகளும், ஒரு தாதியும் வந்திருந்தார்கள். கூடவே ஒரு சிறிய கருப்பு நாயும் இருந்தது. நிலைய அதிகாரி இறந்துவிட்டார் என்று சொன்னதுமே அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். பிறகு அந்தக் குழந்தைகளிடம், ‘இங்கேயே அமைதியாக உட்கார்ந்திருங்க. நான் கல்லறைக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று சொன்னாள். நான் வழிகாட்டுகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவள், ‘எனக்கு வழி தெரியும்’ என்று சொல்லிவிட்டு, எனக்கு ஐந்து கோபெக் கொடுத்தாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!”

நாங்கள் கல்லறைத் தோட்டத்தை அடைந்தோம். திறந்தவெளியாக குறைந்தபட்ச மறைப்புமின்றி இருந்த அந்த இடத்தில் ஆங்காங்கே மரச்சிலுவைகள் நடப்பட்டிருந்தன. நிழலுக்கு அங்கே ஒரு மரம் கூட இல்லை. என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மோசமான கல்லறைத் தோட்டத்தை நான் பார்த்ததே கிடையாது.

“இதுதான் நிலைய அதிகாரியின் கல்லறை” குவித்துவைக்கப்பட்டிருந்த மணல்மேட்டின் மீது தாவிக் குதித்தபடி சொன்னான் சிறுவன். மணல்மேட்டில் கருப்பு நிறத்தில் செப்பு உருவம் பொறிக்கப்பட்டிருந்த சிலுவை நடப்பட்டிருந்தது.

“இங்கேதான் அந்த சீமாட்டி வந்தாளா?” நான் கேட்டேன்.

“ஆமாம். நான் தூரத்திலிருந்து பார்த்தேன். அவள் இங்கேதான் இந்த மணல்மேட்டின் மீது படுத்துக்கிடந்தாள். ரொம்ப நேரம் அப்படியே கிடந்தாள். பிறகு அவள் ஊருக்குள் போய் பாதிரியாரை வரச்சொன்னாள். அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டாள். எனக்கு ஐந்து கோபெக்கும் கொடுத்துவிட்டுப் போனாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!” வான்கா சொன்னான்.

நானும் அவனுக்கு ஐந்து கோபெக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன். என் பயணத்தைக் குறித்தோ, ஏழு ரூபிள் செலவானதைக் குறித்தோ இப்போது என்னிடம் எந்த வருத்தமும் இல்லை.

1 நிலைய அதிகாரி (Station master or Postmaster) – 19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நெடுந்தொலைவு
பயணத்துக்கு குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருந்தன. ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும்
பயணிகள் அந்த ஊரின் நிலையத்தில் பதிவு செய்த பிறகே பயணத்தைத் தொடரவேண்டும்.
பயணிகளுக்கு முறையான பயண அனுமதிச்சீட்டு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதும், அதை
பதிவேட்டில் பதிவு செய்வதும், தேவைப்படுபவர்களுக்கு முக்கியமாக அரசு அதிகாரிகளுக்கு மாற்றுக்
குதிரைகளை ஏற்பாடு செய்வதும், பயணித்துக் களைத்தக் குதிரைகளுக்கு ஓய்வும் தீவனமும் அளித்து
அடுத்தப் பயணத்துக்குத் தயாராக வைத்திருப்பதும் நிலைய அதிகாரியின் பொறுப்பு. நிலைய அதிகாரி
24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பதால் நிலையமே அவருடைய வீடாக இருக்கும்.


2 இளவரசர் வாஸம்ஸ்கி (1792-1878) – ரஷ்யாவின் பண்டைய ரூரிக் அரசவம்சத்தைச் சேர்ந்த
இளவரசரும், அற்புதமான கவிஞரும் ஆவார்.

3 ரஷ்யாவின் அரசு அலுவலர்கள் 14 வகுப்புகளாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். பதினான்காவது
வகுப்புதான் கடைநிலை வகுப்பு.


4 சிமியோன் விரின் – கதையின் நாயகனான நிலைய அதிகாரியின் பெயர்.


5 கிபிட்கா – ரஷ்யாவில் குதிரைகள் இழுக்கும் கூண்டு வண்டியின் பெயர்


6 கேப்டன் மின்ஸ்கி – ராணுவ வீரனின் பெயர்


7 இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளம் – ரஷ்யப் பேரரசின் காலாட்படையைச் சேர்ந்த முதல்நிலை
பாதுகாப்புப் படைப்பிரிவின் ஒரு பகுதி.


8 அவ்தோட்யா செமியோனோவ்னா – தூன்யாவின் இயற்பெயர்.

*********

அலெக்ஸாண்டர் புஷ்கின் (1799 – 1837)

ரஷ்ய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமையான இவர் சிறந்த கவிஞர், நாடகாசிரியர் மற்றும் நாவலாசிரியர். அலெக்ஸாண்டர் புஷ்கின் நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடி என்று பெருமையோடு குறிப்பிடப்படுகிறார். உரைநடைக் கவிதை, வர்ணனைக் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது தனித்துவமான எழுத்தோட்டமும் யதார்த்தமான கண்ணோட்டமும் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. சொந்தப் பகை காரணமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரியான ஜார்ஜஸ் டியாந்தஸ் உடன் இவரே ஏற்பாடு செய்த ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கிச் சண்டையில் படுகாயமுற்று தனது 37-வது வயதிலேயே இறந்தார்.

புஷ்கினின் ‘நிலைய அதிகாரி’ சிறுகதை திரைப்படமாகவும் நாடகமாகவும் பலமுறை மறுவாக்கம் பெற்றுள்ளது.

 

The post நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின் first appeared on கனலி.

சல்பாஸ்

முருகேசன் தன்னுடைய சகா சொன்னபடி காதை, மூப்பு யானையின் தும்பிக்கையைப் போலவிருந்த, தென்னை மரத்தின் கறுத்த தண்டில் அழுத்தி வைத்து, உள்ளுக்குள் ஓடுகிற சத்தத்தைக் கேட்டான். “ஏயெப்பா கரெண்ட் அடிக்கிற மாதிரி விசுக்குன்னு கேட்குதே? சொய்ங்க்னு ஏதோ காந்த சக்தி உள்ளுக்குள்ள இழுக்குது. சல்பாஸ் மாத்திரைக்கு அம்புட்டு பவரோ?” என்றான் வியந்தபடி. தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் அந்த மாத்திரையின் வீரியத்தைப் பற்றித்தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அது காலம்காலமாக அங்கே இருக்கிறதுதான். ஆனாலும் அன்றைக்குச் செவலைபட்டியின் முக்கியப் பேசுபொருளாக அது ஆகியிருந்தது.

வானை முட்டுகிறளவிற்கு வளர்த்தியாய் பல தலைமுறைகள் கண்ட மரமென்றாலும், சுண்டுவிரல் நகக்கண்ணிற்கும் சிறியதான அளவிலிருக்கிற இத்துனூண்டு காண்டாமிருக வண்டு உள்ளுக்குள் குடிபுகுந்து விட்டால் போட்டுத் தள்ளிவிடும். ஆற அமர உள்ளுக்குள் குடியிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து மரத்தின் அடிவேரையே தின்று சாய்த்து விடும். ”தம்மாத்துண்டு வண்டுதான். ஆனாலும் சனியன் உள்ளார புகுந்திருச்சுன்னா கோட்டையையே சாய்ச்சுரும்” எனச் சொல்லி அளவைக் காட்டிலும் வீரியமே முக்கியம் என்பதை உணர்த்துவார்கள். மச்சு வீட்டுக்காரச் சுப்பையாவின் பேரிலேயே குடைவையும் உடைவையும் குறித்த அந்த ஆராய்ச்சி நடந்தது.

சிவனருந்திய ஆலகால விஷத்தைத் தின்றவனைக் கூடக் காப்பாற்றி விடலாம். ஆனால் அந்த மாத்திரை தின்றவனை அந்தச் சிவனே வந்தாலும் காப்பாற்ற ஏலாது என்பது ஊருக்கே தெரியும். அதனால்தான் பொம்பளையாட்கள் மூக்கைக் கசக்கிக் கொண்டு போய் நின்றால், மருந்துக் கடைக்காரர்கள் தரமுடியாதெனத் துரத்தி விடுவார்கள். ஆனால் சுப்பையாவிற்கு அது எப்படிக் கிடைத்திருக்கும் என்கிற சிறுபிள்ளைத்தனமான பேச்சும் அங்கே நிலவியது. “ஏப்பா படிச்சவருன்னாலும் அவருமே சம்சாரிதானப்பா? ஒருகாலத்தில நிலபுலன்னு வாழ்ந்த குடும்பம்தானே? சம்சாரி போயி நின்னு கேட்டா மருந்துக்கடைக்காரன் இல்லைன்னு சொல்ல முடியுமா? அவரு வீட்டிலயே நாலு தலைமுறை கண்ட மரமெல்லாம் நிக்குதேப்பா” என்றார் சம்சாரியான ஆவுடையப்பன்.

வெளியூர் வேலைக்குப் போன ஆட்களைக்கூட வரச் சொல்லி விட்டார்கள். மச்சுவீட்டின் கடைசிக் குட்டியை நன்றாக வழியனுப்பி விடவேண்டும் என்கிற பரிதவிப்பு ஊர்த்தலைவருக்கு இருந்தது. முதலில் விஷயம் அவருக்குத்தான் தெரியவந்தது. மச்சுவீட்டின் கடைசியாய் மிச்சமிருக்கிற ஏழரை ஏக்கரா கரிசல் பூமியில் சுப்பையா குப்புற விழுந்து கிடப்பதாகச் செய்தி கிடைத்ததும் ஓட்டமும் நடையுமாய்ப் போனவர் அவர்தான்.

“போயி ஒடம்பை தொடறேன். தீக்கங்கை தொட்டாப்பில சூடு. கையை படக்குன்னு பின்னாடி இழுத்துட்டேன் என்னையறியாமலேயே. சத்தம் போட்டு பருத்தி காட்டில இருந்து ஆட்கள் ஓடி வந்து என்னோட சேர்ந்து தூக்கறாங்க. தூக்க முடியலை. உச்சி சூரியன் மாதிரி உடம்பில இருந்து சூடு எங்க கையில இறங்குது. தின்னது அந்த மாத்திரைச் சனியந்தான்னு முடிவே பண்ணிட்டேன். இடையில பொத்துன்னு சூடுதாங்காம கீழே வேற போட்டுட்டோம். மண்ணில விழுந்து அவரு புரண்டதை பார்க்கையில மனசே அத்துப் போச்சு” எனப் பார்க்க வந்தவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஊர்த்தலைவர்.

மருந்தடித்த உடம்பு என்பதால் சீக்கிரம் தூக்கிக் காடு சேர்த்துவிட வேண்டும் எனப் பேசிக் கொண்டார்கள். “போலீஸ்காரங்களுக்கு தகவல் தெரிவிக்கணுமா? நாளைப் பின்னே சிக்கல் வந்துறக் கூடாதுல்ல?” என்றார், பலதையும் புகையிலையைப் போல வாயில் வைத்து நமுட்டிக் கொண்டிருக்கிற பழக்கமுடைய நமச்சிவாயம். “அதெல்லாம் வேண்டாம்பா. வெகுபாடுபட்டு தூக்கி வளர்த்த செல்ல குட்டி. அதோட ஒடம்பை கூறு போட்டா நல்லா இருக்குமா? எனக்கும் மருமவன் முறைதானே? நாளைப் பின்னே என்ன வந்தாலும் நான் பார்த்துக்குறேன். சாகுற வயசா இது? அப்படியென்ன மனத்தாங்கல் அவனுக்கு?” என வெட்டவெளியை வெறித்துப் பார்த்துச் சொன்னார் ஊர்த்தலைவர்.

மச்சுவீட்டுச் சுப்பையாவைப் பூப்பல்லக்கில் வைத்து ராஜமரியாதையுடன் சுடுகாட்டிற்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. மச்சுவீட்டின் வாசலை அடைத்த மாதிரி ஓலைப்பந்தல் போட்டார்கள் உடனடியாகவே. அண்டா கணக்காய் இருந்த லோட்டாவில் கடுங்காப்பியும் பைநிறையக் காராச்சேவும் முனியாண்டி கடையில் இருந்து குட்டியானையில் வந்திறங்கியது. அந்த மோட்டார் வண்டிக்குக் குட்டியானை என ரசனையாகப் பெயர்வைத்தவன் எவனோ என்கிற பேச்சுமே ஓடியது. சுப்பையா இருந்திருந்தால், படித்தவர் என்பதால் அதற்கு மிகச் சிறந்த விளக்கம் சொல்லியிருப்பார், அப்படி ஒவ்வொன்றைப் பற்றியுமே கருத்தாகப் பேசக்கூடிய ஆள்தான் என்றுமே ஒருத்தர் சொன்னார். காராச்சேவை மென்று, கடுங்காப்பியை ஊதி உறிஞ்சிக் குடித்தபடி ஒருமுழுவாழ்வை அசைபோட்டது ஊர்.

சுப்பையாவின் கொள்ளுத்தாத்தா நவரத்தினம்தான் அந்த ஊருக்கு முதன்முதலாய் வழிநடையாய் வந்து சேர்ந்தவர். அதுநடந்து நூறு வருஷங்களுக்கு மேலே இருக்கலாம் என்பார்கள். அவர் கிளம்பி வந்த கதையை ஆயிரம் தடவையாவது அவர் வாழ்ந்த காலத்தில் சொல்லி இருப்பார். பிறகு அவருடைய தலைமுறையும் அந்தக் கதையைச் சொல்லிக் கொண்டே இருந்தது. வயது முதிர்ந்த ஊர்ப் பூவரச மரத்தைக் கேட்டால்கூட மென்மையாய்த் தலையாட்டிச் சொல்லி விடும் அந்தக் கதையை. ஏனெனில் அதுவே அந்த ஊரின் பெரும்பாலான பேருக்குப் பூர்வீகக் கதையாகவும் இருந்தது. அந்தக் கதையும் காலமும் மறுபடி அந்தவூரைப் போர்த்திய நிலவொளியைப் போலப் பரவி மீள நிகழ்ந்தது.

நவரத்தினத்திற்கு தான் வாழ்ந்தவூரில் ஏதோ மனச்சடைவு. தன்னுடைய பொண்டாட்டி பிச்சையம்மாளை  அழைத்துக் கொண்டு, கையில் இருக்கிற சொர்ணத்தைப் பத்திரம் பண்ணிக் கிளம்பத் தீர்மானித்து விட்டார். வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் குறித்த அச்சமும் அப்போது ஊருக்குள் நிலவியது. அதுமட்டுமா காரணம்? அவருக்குமே வழித்துணைக்கென ஆட்கள் தேவைப்பட்டார்கள் அப்போது. அவரது மனம் கூட்டாய் அக்காரியத்தைச் செய்ய விரும்பியது. வழியில் தலைச்சுமையை இறக்கி வைக்க ஒரு தாங்குகல்லைத் தேடுவதைப் போலப் பரபரப்பாக இருந்தது மனம்.

அவருடைய வீட்டிற்கு வெளியே குடிசைபோட்டுத் தங்கியிருந்த குடியானவன் முத்துராசாவை நோக்கிப் போனார். அவனுக்குக் கடந்த ஐப்பசியில்தான் கல்யாணம் முடிந்து இருந்தது. புதுப் பொண்டாட்டியோடு படுத்துக் கிடக்கிறவனை எழுப்பலாமா? என்கிற யோசனையும் வந்தது நவரத்தினத்திற்கு. குடிசையின் வாசலில் சற்றுநேரம் அமைதியாய் நின்றார் நவரத்தினம். ஆனால் அசைவைக் கண்ட சாரைப் பாம்பைப் போல உள்ளிருந்து, “சாமி என்ன வேணும்? ஏதும் அவசரமா?” எனக் குரல் வந்துவிட்டது. அவனது கூருணர்வு குறித்து அந்த நேரத்திலும் மெச்சிக்கொண்டார் நவரத்தினம்.

அவனுடைய பொண்டாட்டி பேச்சியுமே கண்ணைக் கசக்கிக் கொண்டு தவழ்ந்த முந்தானையைச் சரிசெய்தபடி வெளியே வந்து நின்றாள். அவள் உடையைச் சரிசெய்யும் பொருட்டு பார்வையைத் தூரத்தில் சிறிதுநேரம் தளர்த்தி பின்னர் அதைமீட்டு, “வேற ஊருக்கு போயிடலாம்ணு கெளம்பிட்டோம். நீங்களும் கூட வர்றீங்களா?” எனக் கேட்டார் நவரத்தினம். மொத்தமாய்க் கேட்டதுதான் என்றாலும், கேள்வி அவளது மடியிலேயே விழுந்தது. நிறைந்த பௌர்ணமி ஒளியில் அவளுடைய கண்கள் மினுக்கின. அவள் தயக்கமே இல்லாத குரலில், “சொந்த மண்ணை விட்டு எதை நம்பி கிளம்பி வர்றது சாமி?” என்றாள். முத்துராசா அவளை முடிவெடுக்கவிட்டு ஒதுங்கி நின்றதை நவரத்தினம் உணர்ந்து கொண்டார்.

“பறவைக்கு புழுபூச்சி தானியம் கெடக்குற எல்லா மண்ணும் சொந்த மண்தான் தாயீ. ஆயுசுக்கும் உங்களைக் கைவிடமாட்டேன். ஒங்களுக்கு மட்டுமில்லை. இனிமே வரப் போற உங்க தலைமுறைக்கும் சேர்த்து நல்லது கெட்டதுக்கு தாய்மாமன் சீரை தந்திடறேன். வார்த்தையை நம்பி கெளம்பி வாங்க” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவெனத் தனது வீட்டை நோக்கிப் போனார். திரும்ப வருகையில் பிச்சையம்மாளுமே உடன் பின்னால் நடந்து வந்தாள்.

அதற்குள் அவ்விருவரும் மனதளவில் கிளம்பத் தயாராக நின்றனர். அந்த நிலவொளியைச் சாட்சியாக வைத்துக் கொடு என்பதைப் போலத் தலையை அசைத்தார் நவரத்தினம். தன்னுடைய சுருக்குப் பையிலிருந்து வெள்ளிக் காசொன்றை எடுத்து அவளிடம் கொடுக்க முயன்றாள் பிச்சையம்மாள். அப்போது அவளது கையைப் பிடித்துக் கொண்டு நவரத்தினம், “எம் பேரே ரத்தினம்தான். ரத்தினமெல்லாம் நிறைஞ்சு கொட்டிக் கிடந்தாலும் இந்தப் பூமிக்கு ராசாங்கறது சொர்ணம்தான். இந்தப் பூமியே மஞ்சள் பூத்து நிறை சுமங்கலியா ஜொலிக்குது இல்லையா? அதனால சொர்ணத்தை மட்டும் கொடு. இது என் கட்டளை” என்றார் பூமியதிர்கிற மாதிரியான சத்தத்துடன். அவர் அப்போது யானைமேல் வீற்றிருக்கிற அய்யனாரைப் போலவே பிறரது கண்களுக்குத் தெரிந்தார்.

தன்னுடைய பையில் இருந்து மின்னுகிற மஞ்சள் சொர்ணத்தை எடுத்து அவளது கையில் கொடுத்தாள் பிச்சையம்மாள். அதன்பிறகு அவள் வாழ்நாள் முழுவதும் சொர்ணத்தை அக்குடும்பத்தின் கைகளுக்குக் கடத்தியபடியே இருந்தாள். சொர்ணத்தையும் அதற்கு நிகரான சொல்லையும் வழித்துணையாக வரித்து, அந்நால்வரும் நிலவொளியை ஊடுருவி தானியங்கள் சிதறிக்கிடக்கிற மண்ணைத் தேடிக் கிளம்பினார்கள்.

வந்துசேர்ந்த செவலைப்பட்டியில் சொர்ணத்தைப் பண்டமாக்கி இருபது ஏக்கர் கரிசல் பூமியை வாங்கிச் சீர்திருத்தினார்கள் எல்லோரும் சேர்ந்து. சிதறிக் கிடக்கிற தானியங்களைப் பொறுக்கவந்த வலசை போகிற பறவைகள்தான் என்ற போதிலும், அப்பூமி அள்ள அள்ளக் குறையாத தானியங்களை அவர்களது குதிருக்குள் பண்டமாற்றாய்ச் சேர்த்து நிறைத்தது. “கொழுத்தவனுக்கு கொள்ளு. எளைச்சவனுக்கு எள்ளு” எனச் சொல்லி முதன்முதலில் எள்தான் விதைத்தார் நவரத்தினம். ஆனால் கொழுத்துப் போகிற அளவிற்குத்தான் அப்புறம் அவர்களுக்கு விளைச்சல் இருந்தது.

அவர்களது வைராக்கியத்தைக் கண்டு ஊரே வியந்தது. “வேற வழியே இல்லைன்னு அதோட காலைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டு பாடுபடறவன் சொல்பேச்சைத்தான் நிலம் நல்லா கேக்குதுப்பா” எனப் பேசிக் கொண்டார்கள். நவரத்தினத்திற்கு ஆணிரண்டு மகவு ஒன்றென மூன்று குழந்தைகள். போட்டியாய்ப் பேச்சியுமே அதேமாதிரி மூன்று குழந்தைகளைப் பெற்றுப் போட்டாள். கூலிக்குப் பேசிக் கூட்டிக் கொண்டு வந்தவர்கள்தான் என்ற போதிலும் முத்துராசா குடும்பத்தை உறவைப் போலக் கருதி, எந்த விலக்கமும் காட்டவில்லை நவரத்தினம். அதனால் பேச்சியின் குதிருமே மனதாரக் குளிர்ந்தது.

சொன்னசொல் மீறாமல் பேச்சியின் குழந்தைகளுக்குக் காதுகுத்தில் துவங்கி கல்யாணம் வரை அத்தனைக்கும் தவறாமல் செய்வதெற்கென ஒரு முறையையும் வகுத்து வைத்திருந்தார் நவரத்தினம். பனை ஓலைப்பட்டி நிறையக் கருப்பட்டியைக் குவித்து அதன் உச்சியில் மினுக்குகிற சொர்ணத்தை வைத்துக் கிழக்குப் பார்த்து நின்று கையளிப்பது. அப்படியான முறையை அந்தவூரும் முதன்முறையாக அதிசயம் போலக் கண்டது.

வெவ்வேறு மாதிரி அதைக் குறித்துப் பேசிக் கொண்டார்கள். “அந்தக் காலத்தில ராசாக்கமார் இப்டீத்தான் தன் குடியானவங்களுக்கு தருவாங்களாம். ஆயிரம் சாமி இருந்தாலும், சொன்ன சொல்லை காப்பாத்துறவந்தான் இந்தப் பூமிக்குச் சாமி. அந்தவகையில நவரத்தினம் தான் பேருக்குத் தகுந்தாப்பில நடந்துக்கிறாரு” எனச் சொல்கிறவரிடம், “அவரு இருக்கறவரைக்கும் நடக்கும்யா. சொல்லை விட்டவன் போய்ச் சேர்ந்த அன்னைக்கு அந்தச் சொல்லுமே செத்து போயிரும் கேட்டீயா? அதுதான் ஒலக வழக்கம்” என்பார் இன்னொருத்தர்.

எல்லோருமே நவரத்தினம் சாவதற்காக அல்லாமல், அந்தச் சொல் எதிர்காலத்தில் என்னவாக மாறப் போகிறது என்பதைக் காணக் காத்திருந்தார்கள். பிள்ளைகள் நிலத்தில் பருவம் பார்க்கத் துவங்கிய காலத்தில் நவரத்தினம் நடமாடமுடியாமல் சுணக்கமானார். முத்துராசாவுமே வீட்டிற்குள்தான் ஒண்டிக் கிடந்தார். அதற்கு முன்னே பேச்சி ஊருக்குள் புதிதாய்த் தட்டுப்பட்ட காலரா நோய் தாக்கிச் செத்துப் போயிருந்தாள்.

நவரத்தினத்திற்கு இழுத்துக் கொண்டு படுக்கையில் படுத்துக் கிடந்தபோது, ஊர்க்காரர்களின் அறிவுரைப் படி இன்னொரு பக்கம் படுக்கையில் கிடந்த முத்துராசாவைத்தான் அழைத்துக் கொண்டு வந்து பாலூற்ற வைத்தார்கள். கைகள் நடுங்க முத்துராசா கடைசிப் பாலை அவரது வாயில் விட்டார். இறுதியாய் அவரது கரத்தைப் பற்றிக் கொள்ள முத்துராசா முயன்ற போது அதனுள் ஒரு சொர்ண நாணயத்தைக் கண்டார். நவரத்தினம் செத்த அடுத்த வாரத்திலேயே முத்துராசாவையும் காடு வாவென அழைத்துக் கொண்டது.

“ரெண்டு பேருமே வைராக்கியமானவங்க. ஆண்டான் அடிமை மாதிரியா நடந்துக்கிட்டாங்க? கூட பொறந்த பொறப்பு கணக்கா நடந்துக்கிட்டாங்களே? அடுத்தடுத்து நிறைவா போய் சேர்ந்திட்டாங்க பாரு” எனப் பேசிய ஊர், அந்த முறைகுறித்துக் காணத் துடித்தது. முத்துராசாவின் குடும்பத்திற்குமே பிள்ளை குட்டிகள், பேரன்கள் எனவுயிர்ச் சங்கிலி வளர்ந்திருந்தது தனியே. நவரத்தினத்தின் மூத்த மகன் சிவனேசன் ஊருக்கே அறிவிக்கிற மாதிரி, முத்துராசாவின் மகன் வயிற்றுப் பேத்திக்கு அந்த முறையைச் செய்தார்.

அவர் ஊரின் அரசல்புரசலான பேச்சுக்களை அறிவார். தன்னுடைய தந்தையை மீறித்தாண்டி சிவனேசன், இரண்டு பனையோலைப் பெட்டிகள் நிறையக் கருப்பட்டியும் சொர்ணமும் எனப் புதிய முறையைத் துவக்கி வைத்தார். “சொல் போட்டா சொல்தான் விளையும்ப்பா” என்றது ஊர் அதைப் பார்த்து. சிவனேசன்தான் அந்தவூரில் முதன்முறையாக மச்சு வீடு கட்டினார். அதன் பேரிலேயே அக்குடும்பம் மச்சுவீட்டுக் குடும்பமென அழைப்படலாயிற்று.

அந்த வீட்டிலிருந்த தானியங்களை நிறைத்து வைக்கிற குதிரைக் காணவே ஜனங்கள் முண்டியடித்தார்கள். “அடேயப்பா முத்துன யானை ஒண்ணு அதுக்குள்ளாற ஒளிஞ்சுக்கலாம். அப்படி ஒரு குதிரு. ராசாக்கமரு குதிரு. வத்தாத சீவநதி” என அதைப் பார்த்த ஜனம் வியந்தது. சிவனேசனின் கூடப் பிறந்த இளையவன் பருவங்களைப் பார்ப்பதற்கு முன்னமே ஜன்னி கண்டு சீக்கிரமே செத்துப் போனான். தங்கையை அசலூர்க்காரச் சம்பந்தத்திற்குத் திருமணம் செய்து வைத்தார். அவளுடைய திருமணம் ஊரே வியக்கிற மாதிரி ஐந்து நாட்கள் நடந்தது. அந்த ஐந்து நாளுமே ஒரு வீட்டில்கூடச் சமைக்கக்கூடாது எனத் தலையாரியை விட்டுத் தமுக்கடிக்க வைத்தார்கள். அப்படியும் யாராவது மனம் கோணி விடுபட்டு விடக்கூடாது என்பதால், ஊர்க் கோவிலின் முன்நின்று துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பொதுக் கும்பிடு போட்டார் சிவனேசன்.

”ஆயிரம்தான் பணம் வந்தாலும் மனுசண்ட்ட அந்த பண்பு கொறையல பாத்தீயா? மனசாரக் கொடுக்கணும்னு நினைக்கறவனோட கை எப்பவுமே தணிஞ்சுதான் போகும்” என்றார் அப்போது ஊர்த் தலைக்கட்டாக இருந்த ராசவேலு. அந்த ஐந்து நாட்களுமே பந்தல் போட்டுப் பந்தி விரித்து ஊருக்கே சோறு பொங்கிப் போட்டார்கள். வடக்கே இருந்து சமையல்காரர்களை அழைத்துவந்து, அதுவரை அந்த ஊர் பார்த்தேயிராத விதம்விதமான இனிப்புகளைச் சுட்டு இலையில் பரப்பினார்கள்.

இறுதியாய் நாக்கிற்கு எந்தக் குறையும் வைத்து விடக்கூடாது என்பதற்காக, மங்கலநாண் ஏறி பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு, நூறு கெடாக்களை வெட்டிக் கறிவிருந்தும் போட்டார்கள். அப்படியொரு திருமணம் நடந்தது அந்த ஊரில் அதுவே கடைசி. அந்தத் திருமணம் குறித்த கதைகள் வழிவழியாய்ச் செவிகளுக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருந்தன.

ஊருக்கே ஓடியோடிச் செய்கிற மனசிருந்தாலும் சிவனேசனுக்குப் பிறந்தது ஒற்றைப் பிள்ளைதான். அதைப் பெற்றதுமே அவருடைய மனைவிக்கு மேலுக்கு முடியாமல் போய்விட்டது. மேலும் குழந்தைகளுக்காக வேறு கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்திய போதும் விடாப்பிடியாக மறுத்து விட்டார் சிவனேசன். ஆனால் அந்தப் பக்கம் முத்துராசாவின் குடும்பம் வாகை மரத்தைப் போலத் தலைவிரித்துப் பெருகி வளர்ந்தது. எங்கெங்கு காணினும் பிள்ளைகள் பல்கிப் பெருகினர்.

சிவனேசனுக்குப் பிறந்த சீனிவாசன் தன்னுடைய தந்தையைப் போலவே கொடுத்து உதவுகிற உள்ளம் படைத்தவனே. ஆனால் அவனுக்குக் குடும்பத்துச் சொத்தான உழைப்பு ஈடேறவில்லை. சிவனேசனின் மனைவி காமாட்சி நல்லமாதிரியாக இருக்கையிலேயே, முடித்துவைத்துவிட வேண்டுமென சீனிவாசனுக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைத்தார்கள்.

அசலூர்க்காரியான அந்த வந்தவளுக்குமே புருஷனை உருட்டி மிரட்டி வேலை வாங்கத் தெரியவில்லை. அந்தப் பருவத்தில் அவர்களது நிலத்தில் பருத்தி குழிக்கு நான்கு மூட்டைகள் மட்டுமே வந்தது. அந்தக் கணக்கைக் கேட்டதும் சிவனேசனால் தாள முடியவில்லை. எழுந்து உடல் சொல்வதைமீறி ஏர் பிடிக்கலாம் என உள்ளம் எண்ணியது. பதினொரு மூட்டைகள் எடுக்கிற நிலத்தில் வெறும் நான்கு மூட்டைகளா? எனத் திகைத்துப் போனார். அந்த மச்சு வீட்டின் எதிர்காலம் எதுவென அவருக்கு நன்றாகப் புரிந்து போனது.

ஆனால் மகனோடு அப்போது பேச்சுவார்த்தையைக் குறைத்துமிருந்தார். மனைவி இருந்திருந்தாலாவது அவள் வழியாகப் புத்தி புகட்டியிருக்கலாம். அவளுமே சீனிவாசன் குறித்த கவலையினாலே சீக்கிரம் போய்ச் சேர்ந்தாள். புழுங்கின அரிசியைப் போலத் தனக்குள் குமைந்து ஆள் குற்றுயிரும் குலையுயிருமாக மாறிப் போனார். “மீனாட்சி கல்யாணத்துக்கு வந்து நின்ன கள்ளழகர் மகசாரா கணக்கா இருந்தவரோட நிலைமையை பார்த்தீயா? தர்மம் தலைகாக்கும்ணு எல்லாம் சும்மா சொல்லி வச்சதுப்பா. அதுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை” என்றனர் அவருடைய சேக்காளிகள்.

தனக்கு முடிவு நெருங்கி விட்டதை சிவனேசன் உணர்ந்தார். மச்சு வீட்டின் மாடியில் வாடைக் காற்றுக்கு இதமாய்க் கம்பளியைப் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்த அவர், கீழே நடந்து போன சீனிவாசனை நோக்கி முடியாமல் குரல் கொடுத்தார். நிமிர்ந்து பார்த்த சீனிவாசன் துடித்துக் கொண்டு மாடிப் படிகளேறி ஓடினார். அங்கே சீனிவாசனை நிறுத்திவைத்து இறுதியாய், “இங்க பாரு. உன் ஏழு ஜென்மத்துக்கும் உக்காந்து சாப்பிடற அளவுக்கு சேர்த்து வச்சிட்டேன். ஆனா ஒண்ணு உக்காந்து நொறுக்கி தின்னா குன்றா இருந்தாலுமே சீக்கிரமே காணாம போயிடும். அதை மனசில வச்சிக்கோ. என்னைக்குமே எங்கப்பாரு சொன்ன சொல்லை மட்டும் காப்பாத்தி குடுத்திடு. உனக்குப் புண்ணியமா போகும். ஒரு தகப்பனா உண்ட்ட நான் கேட்கிற கடைசி யாசகமாகூட இதை எடுத்துக்கோ” என்றார்.

அப்பாவின் மறைவிற்குப் பிறகு சீனிவாசனுமே அந்தச் சொல்லை மீறவில்லை. ஆரம்பத்தில் எதிர்த்த தன் மனைவியிடம், “என்னைக்கூட வகுந்து போட்டிரு. ஆனா அந்த முறையில மட்டும் கையை வச்சீன்னா, உன்னைக் கொன்னு போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்” எனத் தெளிவாகச் சொல்லி விட்டார். பாரியாளின் நெருக்கடி காரணமாக, அவருடைய காலத்தில்தான் நேரில் போய்ச் செய்வது என்பது மாறி, முத்துராசாவின் குடும்பம் மச்சு வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் முறை என மாறியது.

காதுகுத்து, சடங்கு, கல்யாணம் எனப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு மச்சு வீட்டின் வாசலில் வந்து நின்று மிருதங்கம் வாசிப்பார்கள். அந்த இசையினூடே வீட்டின் மேல்மாடியில் இருந்து சீனிவாசன் கையில் ஒரு பனையோலைப் பெட்டியுடன் இறங்கி வருவார். அதுவொரு தெய்வ வாக்குச் சொல்லும் சடங்கைப் போலவே நிகழ்ந்தது. ஏற்கனவே மனதளவில் மேனாமினுக்கியான சீனிவாசனுக்குமே மரியாதை கிடைக்கிற அந்தச் சடங்கு பிடித்திருக்கவும் செய்தது. பனையோலைப் பெட்டியைப் போலவே சொர்ணத்தின் அளவும் சுருங்கிக் கொண்டே வந்தது.

கொடுப்பதற்கான மனம் சுருங்கவில்லை சீனிவாசனிடம். மாறாகத் தன்னிடம் இருப்பதைப் பெருக்குவதற்கான உழைப்பு அவரிடமிருந்து விடுபட்டுப் போயிருந்தது. அவருக்குமே ஒத்தை பிள்ளைதான் பிறந்தது. “மூத்த ராசா ஊர்ல இருந்து கெளம்பறப்பயே ஏதாச்சும் சாபத்தை வாங்கிக் கட்டிக்கிட்டு வந்திட்டாரான்னு தெரியலையே?” என அவர் காதுபடவே பேசினார்கள். இரண்டாவதாக வைப்பாட்டி ஒருத்தியை வைத்தும் பார்த்தார். ஒன்றுமே அதற்கெடுத்து பேரவில்லை அவரது வட்டிலில். அப்பா தந்துவிட்டுச் சென்ற குதிருமே கொஞ்சம் கொஞ்சமாய் இளைக்கத் துவங்கியது.

சீனிவாசனின் பையன் ரத்தினம் தலையெடுத்த காலத்தில் பாதிச் சொத்துக்கள் எங்கே போனதெனத் தெரியாமலேயே, எள்ச் செடிமீது படிந்திருந்த பங்குனிப் பனித் துளிபோலக் காணாமல் போயிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் மனதிலிருந்து மச்சு வீடு குறித்த கதைகளும் மறையத் துவங்கின. மச்சு வீட்டின் பழம்கதைகளைத் தெரிந்தவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்த பிறகு, அடுத்து வந்த தலைமுறைக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லாமல் போனது. பனையோலைப் பெட்டிச் சடங்கெல்லாம் அந்தவிரு வகையறாக்களுக்கு மத்தியில் காதுவைத்த மாதிரி நடக்கிற சிறு சடங்காகச் சுருங்கி விட்டது. அவர்களுமே கொட்டடிக்கிற காரியத்தை எல்லாம் நிறுத்திவிட்டு, கல்யாணம் காய்ச்சி என வந்தால் பத்திரிகையைக் கொண்டு போய் நீட்டுவார்கள். பனையோலைப் பெட்டி இருக்கிறதோ இல்லையோ, ஆனால் தவறாமல் சொர்ணத்தைத் தந்துவிடுவார்கள்.

அள்ள அள்ளக் குறையாமல் இருந்த குதிர் காசநோய் பீடித்தவனின் உடலைப் போல மேலும் சுருங்கவும் துவங்கியது. ரத்னத்திற்குப் பிறந்த பையன்தான் சுப்பையா. அவனுக்கு அடுத்து மகளொன்று பிறந்து கடுங்காய்ச்சல் கண்டு ஏழுவயதிலேயே இறந்து விட்டாள். சுப்பையாவிற்கு அவனுடைய கொள்ளுத்தாத்தா நவரத்தினத்தின் முகச்சாடை. அந்தக் காலத்தில் தான் சிறுபையனாக இருக்கையில் அவனுடைய தாத்தாவை பார்த்திருந்த முதியவர் ஒருத்தரே அதைக் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். அந்த வகையில் அந்த வம்சத்துத் தொடர்ச்சியை நினைத்து மெச்சிக் கொண்டார் ரத்தினம்.

ரத்தினம் இருப்பதை வைத்து முட்டி மோதிப் பார்த்தார். அவரால் பெருக்க முடியவில்லை, ஆனாலும் கூடுமான வரை பெருங்காயத்தைக் கொண்டு போய் ஆற்றில் கரைக்காமல் பார்த்துக் கொண்டார். ரத்தினத்தின் மனைவியுமே கடுமையான உழைப்பாளிதான் என்ற போதிலும், போட்ட உழைப்பிற்கான பலன் கைக்கு வராமல் தட்டிப் போனது கண்டு புழுங்கியே கிடந்தனர், கோடையிடி கண்டு வெம்பிய மாங்காயைப் போல. இருப்பதை யாருக்கும் தெரியாமல் விற்று, சுப்பையாவை சென்னைக்குப் படிக்க அனுப்பினார்கள். அவனுமே நன்றாகத்தான் படித்து முடித்து ஊர் திரும்பினான்.

பக்கத்து நகரத்தில் தொழில் துவங்குகிறான் எனச் சொல்லிச் சில சொத்துக்களை அவன்பேரில் விற்கவும் செய்தார்கள். அவனுக்குமே ஒன்றும் துலங்கி வரவில்லை. அவன் தன்னுடைய தாத்தாவை போலவே மேனாமினுக்கியாக இருந்ததை ஊரில் சிலர் அடையாளம் காணவும் செய்தார்கள். ஆனால் குணமென்று வருகையில் தங்கப்புள்ளை எனச் சான்றிதழும் தருவார்கள்.  அவனுக்கு பெண் தரலாம் என வண்டியில் வந்து இறங்குகிறவர்களிடம், “பையன் செம்பு கலக்காத அசல் தங்கம். ஆனா பாருங்க உங்க பிள்ளைத்தான் உழைச்சு அவனை காப்பாத்தணும்” என ஊர்க்காரர்கள் சொல்வதுமே நடந்தது.

அதன்காரணமாகவே அவனுக்கு நடக்கவிருந்த திருமணங்கள் தட்டிப் போய்க் கொண்டுமிருந்தன. அந்தக் கவலையிலேயே ரத்தினமும் அவர் பொண்டாட்டியும் சீக்கிரமே சர்க்கரை முற்றிச் செத்துப் போனார்கள். வரிசையான சாவுகள் தந்த மனவழுத்தத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனான் சுப்பையா. பொழுதிற்கும் மச்சு வீட்டில் தனியாக மேலே அமர்ந்திருப்பான். கீழே போகிறவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துக் கையில் ஏதாவது காசைக் கொடுத்து விடுவான்.

“அப்படியே உங்க தலைமுறையோட ஈகை கொணம் உங்களுக்கும் வந்திருச்சு சாமி” என அவர்கள் புகழ்வதைக் காதுகுளிரக் கேட்டுத் திருப்தியடைந்து கொள்வான். முத்துராசாவின் வழிவழி வேர்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதெல்லாம் தன்னுடைய தாத்தாக்கள் குறித்த கதைகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொள்வான். அக்காலக் கதைகளைக் கேட்கையில் அவனுக்குப் புல்லரித்து அடங்கும். சொத்துக்களை விற்று தன் செலவு போக, மற்றவர்களுக்குக் கொடுத்து, தம்பழைய சடங்கை பேணி என உள்ளுக்குள் ஒரு வாழ்க்கை வாழ்ந்ததில் அவனுக்குமே நாற்பத்தைந்து வயதாகி விட்டது. மச்சு வீட்டின் சுவர்களில் சில இடங்களில் காரையும் பெயர்ந்திருந்தது.

முதல் தலைமுறையின் பெண்வழி உறவினர்கள் வந்து மிச்சமிருக்கிற சொத்துக்களைப் பிரித்துக் கொண்டும் போனார்கள். மச்சு வீட்டைக் குறித்துப் பேச்சு வார்த்தை நடந்த போது இப்போது இருக்கிற ஊர்த்தலைவர்தான், “இங்க பாருங்க. அது வெறும் மச்சு வீடு மட்டுமில்லை. அது இந்த ஊரோட அடையாளம். ஒரு சொல்லோட அடையாளம். அப்புறம் அவன் இருக்கறதுக்குன்னு ஒரு எடம் வேணும் இல்லையா? தயவு செஞ்சு அதுமேல மட்டும் கையை வைக்காதீங்க. நீங்களும் இப்ப நல்லாத்தானே இருக்கீங்க. கோர்ட்டு கேஸூன்னு அலையறது ஒரு பெரிய குடும்பத்துக்கு அழகா?” எனத் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதன்பேரிலேயே அந்த வகையினர் அந்த மச்சு வீட்டையும் சுப்பையாவையும் தனியாய் விட்டு விட்டுக் கிளம்பிப் போனார்கள். சுப்பையாவின் மீது உண்மையான அன்பிருப்பவர்கள் மட்டும் அந்த இருண்ட வீட்டினுள் படியேறிப் போய்ப் பார்த்து விட்டு வருவார்கள். மற்றபடி அவனே பொங்கியுண்டு தனியாக ஒரு வாழ்க்கையை நகர்த்தினான். அவனுடைய முந்தையை தலைமுறை குறித்த கதைகளை மட்டும் கதகதப்பாய் வைத்துக் கொண்டு, மழையில் ஒடுங்கிய பறவையையொத்த நினைவுகளைச் சிறகுகளைப் போல ஆட்டி மச்சுவீட்டின் உச்சியில் தனித்து அமர்ந்திருந்தான்.

அப்படி அமர்ந்திருந்த ஒருநாள் வாசலில் யாரோ வந்து நிற்கிற சத்தம் கேட்டது. மேலிருந்து குனிந்து கீழே பார்த்த போது தாம்பூலத் தட்டோடு நாலைந்துபேர் நிற்கிற காட்சி தெரிந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான் சுப்பையா. முகத்தைக் கழுவித் துடைத்து, நெற்றியில் விபூதியைச் சாற்றிச் சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கிப் போனான். முத்துராசா வம்சாவழியினரில் ஒருத்தர் தன்னுடைய பேத்திக்கு காதுகுத்து வைத்திருப்பதாக பத்திரிகை கொண்டு வந்திருந்தார்.

அவர்களைத் தாழ்வாரத்தில் நிற்கச் சொல்லி விட்டு வீட்டிற்குள் போய் ஒன்றரை ஆள் உயரத்திற்கு நின்ற பழைய மரப்பீரோவைத் திறந்து துழாவினான். துணிகளை எல்லாம் எடுத்துத் தரையில் போட்டுத் தேடிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாய்ப் பரணில் இருந்த பழைய பெட்டி ஒன்றை இறக்கி, பூட்டை உடைத்துத் திறந்து தரையில் கவிழ்த்துப் பார்த்தான். அதில் கடைசியாய் ஒரு சொர்ணக் காசு மட்டுமே மஞ்சள் துணியில் சுற்றிய நிலையில் மிஞ்சியிருந்தது. எந்தத் தாத்தா? என்ன வேண்டுதலுக்காக? அதை அங்கே வைத்து இருப்பார் என்கிற யோசனையும் அப்போது அவனுக்குள் எழுந்தது.

அழுக்குப் படிந்திருந்தாலும் சொர்ணத்தின் மஞ்சள் முகம் மின்னத் தவறவில்லை. இருந்தும் அதை நன்றாக மல்லுவேட்டித் துணி கொண்டு துடைத்தான். வீட்டில் இருந்த சில்வர் தட்டில் நாலைந்து பழங்களை அடுக்கி அதன் மீது அந்தச் சொர்ணத்தை வைத்துக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்தான். வந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்த மகிழ்ச்சி உண்டானது. அக்கூட்டத்தில் ஒருத்தர் அதைக்கண்டு வியப்பான முகக்குறியைக்கூடக் காட்டினார். அப்போது கிளம்புவதற்கு முன்பு வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாத மாட்டைப் போல நின்ற பெண்ணொருத்தி சுப்பையாவை நோக்கிச் சிறுபிள்ளை மாதிரி வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி,

“அண்ணே இன்னும் ரெண்டு மாசத்தில இந்தா இந்த வயித்தில பொறக்கிற பிள்ளைக்குச் செய்முறை வேணும்ணு வந்து நிப்பேன். தங்கச்சி மனசு குளிர கொடுக்கணும் அன்னைக்கு” என்றாள் விளையாட்டுக் காட்டும் குரலில்.

அந்தக் கணத்தில்தான் சுப்பையா சல்பாஸ் மாத்திரை தின்னத் தீர்மானித்தான்.

The post சல்பாஸ் first appeared on கனலி.

முதிரா இரவு – சுருளி காந்திதுரை

காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு… உடல் உபாதையை முடிச்சுட்டு… செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பொட்டை நாயிக்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து நாப்பது பேருக்கு மேல் இருக்கும். நடந்தார்கள். வயது, வயிறு, உடைகள், மேக்கப்பு… பேச்சுத் தோரணை… இதில சுமார் இருபதுக்கு மேல, பட்டதாரிகள். மத்திய மாநில அரசிடம் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள்… அதில் பென்ஷன் பெறுபவர்கள் பெரும்பான்மையானோர்.

சாப்பாட்டுக்கு மொத்தமா பேசிக் காசக் கொடுத்துட்டா, இப்ப சாப்பாட்டுப் பிரச்சனையில்லன்னு மனஆறுதல் இவர்களுக்கு.

கால, மால இருவேளையும் நடக்க வேண்டியது. பேச்சு ஊர்ப் பேச்சு. உலகப் பேச்சு… சரியா ஏழரைக்கு வீட்டுக்குப் போயிக் குளிச்சிட்டுச் சாப்பிட வேண்டியது; பேப்பர மேய, பிறகு தொலைக்காட்சி சேனல மாத்தி மாத்தி ரிமோட் பட்டன் தேய்ஞ்சு போயிருச்சு. ஏதாவது போடுறாங்களான்னு தோணும். என்ன செய்ய வர்றதுதான் டிவியில வரும்.

வெளியில இருந்து பாக்கிறவுகளுக்கு, ஊர் உலகத்துக்கு பெருசுகளுக்கு என்ன கவல? பிள்ளைக நல்லா வைச்சுக்கிறாங்கன்னு பேச்சு.

மக்கமாரு, ராஜா மாதிரி வச்சுருக்காங்கன்னு போற வர்ற மக்க மனுசார் பேசுவாங்க. உறவுகளும் அப்படித்தான் நெனைக்கும்.

ஆனா, வீட்ல பெத்தப்பெருமாள் மாதிரியா இருக்கிற பெருசுகளுக்குத்தான் தெரியும். ஒரு நா என்பது ஒரு யுகம் மாதிரி போகும். மகன், மகள்… வீட்ல இருக்கிற பொருள பாதுகாக்கத் ‘திருடனுக்குப் பயந்து அப்பாவ முழுநேர வீட்டு வாட்ச்மேனா அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்காங்கன்னு…?’ வெளிய சொல்ல முடியுமா?”

தொனைக்கி நாயி வேற. அத வேற மேய்க்கனும். பெத்த பெருமாள் ரோட்ல படுத்திருக்கிற நாயிக்கு இருக்குற சுதந்திரம் நமக்குயில்ல?ன்னு முனங்கினார் பல நேரம்.

யோவ், பெத்த பெருமாள்… என்ன பலத்த யோசனை. உனக்கு எப்படி அப்படித்தான் இங்க இருக்கிற எல்லாத்துக்கும்… நாங்களும் அப்படித்தான் இருக்கோம்னு புரியணும்.

வா… வா… நம்ம எல்லார் கதையும் ‘ஒரே மாவுலச் சுட்ட இட்லி’ போலத்தான்னு புலவர் சந்தானம் சொல்லவும் எல்லோரும் தன்னை மறந்து சிரித்தார்கள்.

நடையில வேகமில்ல. கால்கள் மட்டுமல்ல மனங்களும் தளர்ந்து போயிருந்தன.

அறுபத்தைக்கும், எண்பதுக்கும் இடைப்பட்டவர்கள். ‘நம்ம ஒண்ணாத்தான் இருக்கம். இடையே நம்ம பிள்ளைக உலகம் வேறு, பாவம் அம்மாக்கள். நமக்கு என்ன கவல? ராஜேந்திரன் சொல்லுயா’ன்னு அய்யனாரைக் கேட்க.

‘பகவான் இருக்கும்போது எனக்கு என்ன கவல?’

‘போயிம் போயிம் அய்யனார்ட்டக் கேட்டா. அப்படித்தான் சொல்லுவார்!’ ஒரே சிரிப்பொலி….. எதிரொலித்தது.

***

பலத்த ஹாரன் சத்தத்துடன் சென்னையில இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் கூடல்நகர் ஜங்சனைக் கடந்து அதேவேகத்தில் நிக்காம போனது. பிள்ளைகளில் ஆண், பெண் இருவருமே ஒரே மனநிலையில் இருப்பதைப்போல ரெண்டு பக்கமும் பிளாட்பாரம் மிக அருமையா மேடு பள்ளமில்லாம சமதளமாக இருந்தது.

இங்க வாக்கிங் போகும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம். மாலைநேரம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நாகமலைக்கு மேலே மஞ்சள் வெயில் மறையத் தொடங்கியிருந்தது. மழை பெய்வதற்கானச் சாத்தியக்கூறு, இதமான தென்றல் காத்து வீசியது. ஜங்சன் பாதையில் இருபக்கமும் வேப்பமரக் குளுமை. நேத்துச் சாயங்காலம் நல்ல மழை. மண் மனமும், தென்றல் காத்தும், கனமான இதயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு போனது. எல்லோரையும் ஆரத்தழுவி ஆனந்தமாக்கியது.

என்ன? இவுங்கள இளைஞர்கள்ன்னு சொல்லுறேன்னு நினைக்க வேணாம். ‘இளமை திரும்புகிறது.’ அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நகைகள், கடிகாரங்கள், செல்போன்கள், கேன்வாஸ்… எல்லாமே நல்ல வசதிக்கான அடையாளம். வாழும் காலத்தில் பல்ல கடிச்சுக்கிட்டு சுகத் துக்கங்களை மறைத்து, மறந்து பிள்ளைகளே உலகமுன்னு வாழ்ந்தவர்கள்.

பிள்ளைகள நல்லபடியா கரையேற்றிவிட்டாங்க. ஆனா பெத்தவங்க ‘தனிமைக் குளத்தில்’ தவிக்கிறார்கள். வீட்ல தனிமை? மெல்ல மெல்ல மனித நடமாட்டத்தை நாடி நடக்க வந்துவிடுகிறார்கள்.

ஜங்சன் இருக்கு. ஆனால், ரயில்கள் நின்னு போகல. அப்படித்தான் இவர்களின் வாழ்க்கையும். எல்லாமே இருக்கு. எதுவுமே இல்ல?

ஆஸ்தி, அந்தஸ்து, காசு, பணம், நகை நட்டு, காரு, பங்களா, வேலைக்கு ஆட்கள், காவலுக்கு ரெண்டு நாய் இவ்வளவும் இருந்தும், என்ன பயன்?

எல்லோருக்கும் எல்லாம் இருக்கு. பிள்ளைகளின் வாழ்க்கை முறை வேறு, இவர்களின் உலகம் இலையுதிர் காலத்து மரம் போல… எல்லாருக்கும் மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள்… என ‘உறவுகள்’ இருக்கிறார்கள். ‘கோலார் தங்கச் சுரங்கம் போல.’ ஆனால், மனிதனின் வாழ்க்கை பலத்த காற்றில் ‘குருவியின் கூடு பறந்து போனதைத் தேடும் குருவி போல…’ உறவுகளைத் தேடுகிறார்கள். இன்னும் தொலைத்த இன்பங்களைத் தேடியே… யாருக்காக வாழ்றோம்னு எதுவும் தெரியாது… இளைப்பாறுதல் இல்லா மனநிலையில்…? முதியோர்களின் பயணம்…

என்ன இருதயராஜ்… இந்த ஆண்டு ஜுன் மாசம் காவிரியில இருந்து தண்ணி வருமா? ஏன்ட்ட ஏன் கேட்குறீங்க…

நீ தானே பி.டபிள்யூ.டி. இஞ்சினியர்…

சும்மா இருக்க மாட்டீங்க புலவரே?

அவுக என்னைக்கி நமக்குத் தண்ணி கொடுத்தாங்க…

கேரளாவும், கர்நாடகாவும்… நல்ல பாம்பு அது; விரியன் பாம்பு இவுக.

நமக்கு பெரியாறிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குக்கும் காவேரில இருந்து தஞ்சை டெல்டாப் பகுதிக்குத் தேவைப்படும்போது தண்ணியத் தர மாட்டாங்கா? ஆனா, அங்க மழை பெய்யட்டும்…! மழை ச்சக்கப்போடு போடட்டும்…! அய்யோ “டேமப் பாதுகாக்கிறோம்ன்னு” “டேம் உடைகிற” மாதிரியா வரும்போது சத்தமில்லாம போன் பண்ணிட்டுத் தண்ணிய திறக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனால், தண்ணியத் தொரந்துட்டுதான் போன் பண்ணுவாங்க.

புலவரே, ஆனா, பட்டம் தப்பி விடுற தண்ணி நமக்கு விவசாயத்துக்குப் பயன்படாது. நேராக் கடலுக்குத்தான் போகும். இங்க ரெண்டு பக்கமும் அதே நிலமதான்.

என்ன இஞ்சினியர் சார். நம்ம, “ஆம்பளப் பிள்ளையும், பொம்பளப் பிள்ளையும்… கேரளாவும் கர்நாடகாவும் ஒன்னுதான்னு சொல்லுங்க?

எத எதுலக் கொண்டாந்து பொருத்துறீங்க.

என்ன வம்புள மாட்டி விடுறீக. இதயராஜ் சொல்லவும்,

பெத்த பெருமாள், புலவர் சொல்லுறது சரிதான். ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் இருக்காங்க. அவுக நிலை. இது நம்ம நிலைமை. கால்கள் நடந்தன. மனங்கள் இறுகிப்போனது. நடந்தார்கள் நீண்டநேரம். மௌனத்தை உடைத்தார் அய்யனார். நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன் நாளைக்கி. யாராவது வர்றிங்களா?

யோவ், எப்பப்பாரு கோயில் கோயில்…

அய்யனார் போயிட்டு வாங்க. கடவுள்ட்ட எங்கள காப்பத்த வேண்டான்னு வேண்டிக்கங்க! மாணிக்கம்.. நம்ம விதியை நொந்துக்கறாத விட்டு; அய்யனார் நீங்கப் போயிட்டு வாங்கன்ன… முடித்தார்.

என்ன எல்லாப் பிள்ளைகளுக்கும், அம்மாவைப்பி டிக்கிது. அடப்போங்கப்பா! அம்மா அடுப்படி வேலைக்குப் பிள்ள தூக்கும். அவுகளுக்குப் பிள்ள வளர்ற வரைக்கும் மகனும் மகளும் அம்மாவத் தாங்குறாங்க. இல்ல அம்மான்னு பாசத்திலத் தொங்குறாங்க.

இது தெரியாத அம்மாக்க, பிள்ளைகதான் பெருசுன்னு புருஷன விட்டுட்டுப் போய் மக வீட்ல மகன் வீட்ல இருந்துக்கிறாக. புரியும்போது அம்மாக்கள் புலம்புவாங்க.

பிள்ளைக திருமணம் முடிச்சாப் பத்தாநாள் தனிக்குடித்தனம்.

பாம்பு தன்னுடைய தோலக் கழட்டுற மாதிரி… தானா விலகிறவுகளும் இருக்காங்க. “முதுமை கஷ்டமாயிருக்கு எல்லாத்துக்கும்.”

பொஞ்சாதியின் துணையில இருந்துட்டு, இருந்த கணவன்களைத் திடீர்னு பொஞ்சாதி விட்டுட்டுப் போனாப் பலர் பித்துப்பிடித்துப் போய் டென்சன், பிரசர், எமோசன், சுகர்ன்னு மனநோயாளியாகவும் கணவன்மார்கள் போயிர்றாங்க. அத மறந்து பேச்சில காலத்தக் கடத்துவதாகவே வாக்கிங் கூட்டதில் சேர்வதும் அங்கப் பெரும் பேச்சு. நோயும், மாத்திரையும் டாக்டருமாத்தான் இருக்கு. ‘மருந்து’ நோய்க்கு மருந்தா? இல்ல மனசுக்கா?… மாத்திரைக்கும் டக்டருக்கும் வெளிச்சம்.

எல்லார்ட்டையும் புன்னகையோடு பேசினாலும்… சிரிப்ப வில கொடுத்து வாங்குவாங்கன்னு சொல்லுறது மாதிரிதான் இருப்பாங்க. “அவுககிட்டக் காசு இருக்கு. சிரிப்பு வாங்குவாங்க.. ஆனா, சிரிப்பு வரணுமே..

மதுரை திண்டுக்கல் பேசஞ்சர் ரயில் மெதுவாகக் கூடல்நகர்ல நின்னுபோனது.

மாதா கோயில் மணி அடித்தது. நேரம் சரியாக ஆறுமணி. “எல்லோரும் சுகமாக இருக்க கர்த்தருக்கு தோத்திரம்… உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன். (யாத்தி.23-26). ஆமேன்… ஆமேன்…

பேசஞ்சர் ரயில் மெல்ல தன் ஹாரன் ஒலியை எழுப்பியது. மூன்றாவது ஹாரன் ஒலி எழுப்பய உடனே கிளம்ப சிக்னல் கிடைச்சுருக்குப் புறப்பட ஆரம்பித்தது… மீண்டும் ஹாரன் சத்தம்…ஸ்ஸ்… டைசக்கு டைசக்கு டைசக்கு ரயில் புறப்பட்டுவிட்டது.

அய்யனார் சார், என்னய்யா, மணி ஆறாச்சு இன்னும் கிளம்பள. நாங்க இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கேம். அய்யா, கதிரவன் நீங்க போயிட்டு வாங்க.

பழைய பி.ஆர்.சி.யில செக்கார இருந்தவர் பெத்த பெருமாள்.

சுந்தரம், வீட்ல இருந்து எத்தன வாட்டி கடிகாரத்தையும் செவுத்தையும் பார்க்கிறது.

எவ்வளவு நேரம் பகல்லப் படுத்துக் கிடக்கிறது. உங்களுக்கு… என்ன?

ஜங்சனை விட்டுக் கிளம்பவே மணி ஏழரையாகும்.

நான், என்னங்க சார் கொசு கடிக்காதான்னு கேட்டேன்.

அமூட்டுதான் குறுக்கிட்ட சக்திவேல் சார்.

பேரப்பிள்ளைக தராத முத்தத்தக் கொசுவாவது கொடுக்கட்டும்னு சொல்லவும். எல்லோரும் கொல்லுன்னு சிரிக்க எனக்கு ஏன்டாக் கேட்டோம்ன்னுப் போச்சு.

டியூப்லைட் வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. கருக் கொண்ட மேகம் இவர்கள் மனம் போலவே அமைதியா இருக்கு.

மழை பெய்யவா? வேண்டாமான்னு யோசித்தது. பிள்ளைக வயதான அப்பா, அம்மாவ வெளியே கூட்டிட்டுப் போவம்மா, வேண்டாமான்னு பொஞ்சாதிகிட்டக் கேட்ட மாதிரி… மழை காத்தக் கேட்டு இருக்கு.

காத்து வேகமா அடித்தது. மழைக்குணம் மாறி மேகக்கூட்டம் கலைந்து போனது. இப்படித்தான் பல வீடுகளிலும் பேச்சுகள் தடுமாற்றத்தால் கூட்டுக் குடும்ப உறவுகள் கலைந்து போயின.

பெத்த பெருமாள் குடும்பத்தத் தெருவே பேசும். அவுகள மாதிரியா அண்ணன் தம்பி, தங்கை ஒண்ணாயிருக்க முடியாதுன்னு… கூட்டுக்குடும்பம்.

நல்லது கெட்டதுன்னா அவுக வீட்டு ஆளுக போதும். இப்ப வீட்டைப்பாரு, ‘மனுச வாடை அத்துப்போயிக்கிடக்கு’. வீடு மட்டுமே பெருசா? மனித மனங்கள் காஞ்சு போன வாழை இலை சுருண்ட மாதிரி சுருங்கிப்போச்சு.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில… வாழ்க்கை; பழச மறக்க முடியாம, புதுச ஏத்துக்கு முடியல. முதியவர்கள் மனதளவில் போராடுகிறார்கள்.

ரெண்டு தண்டவாளம் போல, சேருமா? சேராது. ரயில் சேரணும்… ஆனா, சேராது. தண்டவாளம். தவளையும் ஓந்தியும் காதலர்கள். ஆனா, பார்வைக்கு ஒரே மாதிரியா இருக்கும். எங்கூட வான்னுத் தவளைத் தண்ணிக்குள்ளக் கூப்பிட, ஓந்தி இல்ல வா மேட்டுக்குன்னுத் தவளயக் கூப்பிட. இப்படியே ரெண்டு குளத்தம் கரைமேல நட்புச் சண்டை நடக்க, மேலே இருந்து பார்த்த பருந்து ரெண்டையும் சேத்து தூக்கிட்டுப் போயிருச்சு.

“தண்ணி தவளைக்கும் ஓந்தி மேடுக்கும் கதைதான் நம்மக் குடும்பங்களின் கதையும்.”

 “தயிர்பானையில விட்ட மத்தாட்டம். எல்லோர் நாவும் உறவுகளை உச்சரிக்கத் தொடங்கினா? ஆனால், யாரு வெண்ணை எடுக்கல…” வெயில் ஏறிப் போனால் மோர் பானையில வெண்ண திரளாது. அப்படித்தான் உறவுகளிடம் சுயநலம், கர்வமும், பணத்தாசையும் வரும்போது வெறும் நீர்மோராக உறவுகள் மாறிப்போயின…

மக வீட்டுக்குப் போன அப்பாக்கள், தன்னை மாமனார்ன்னு நினைக்காம.. மருமகன மகனா நினைச்சு ரெண்டு ஒரு வார்த்தை பேசிட்டாப் போச்சு. வெறும்பயலா இருந்தாலும் மருமகன், அவனுக்குப் பெண்ணும் கொடுத்து.. ஆண்டவன் அறுபதும் சீதனமாக் கொடுத்திருப்பாரு. மாப்பிள்ள, எதாயிருந்தாலும் ஆத்துலப் போட்டாலும் அளந்து போடுங்க இதுதான் சொல்லியிருப்பாரு… இங்க வந்தமா சாப்பிட்டமான்னு போகச்சொல்லு… எனக்கு புத்தி சொல்ல வர்றாரு… என்ன அவ்வளவு அறிவாளியா உங்க அப்பா? எங்க அப்பா பேச்சையே நான் கேட்டதில்ல மருமகன் எகிறுவாக.

மக வேப்பில இல்லாம சாமியாடுவா?

யம்மா, உம் புருஷன் வந்த வாயா வச்சுட்டு சும்மா இருந்தாத்தானே… என் விட்டுக்காரர்ட்ட என்னத்தயாவது சொல்ல. அவர் மனுசன், என்னை ராத்திரி கொண்டு எடுக்கிறார். தூங்கவிடாமா?

இதெல்லாம் நமக்கு எதுக்குங்கன்னா கேட்டாத்தானே அவரு அம்மா.

அம்மாவும்… மகளும்… அப்பனுக்கு குற்றப்பத்திரிகை வாசிக்க? வரட்டும் அவருக்குத் தேவையா? வந்தம்மா இருந்தம்மான்னு இருந்துட்டுப் போறத விட்டுட்டு…

வந்தமா பேசுனமா? இருந்தம்மானு போகவேண்டியது தானே. எதையாவது சொல்ல வேண்டியது. போயி, உங்க மருமகட்டச் சொல்லி பாக்கச் சொல்லும்மா உம் வீட்டுக்காரர? அங்க உங்கப் பருப்பு வேகாது. யார் அப்புராணி எம் புருஷன்தானே கிடைச்சாரா?

ஏன்டி, மரியாதையில்லாம பேசுற? நாங்க எல்லாம் அப்படியில்ல.

யம்மா, உங்க காலக்கதைய யார் கேட்டா? ஏதாவது கேட்ட மட்டும் பேசுங்க? தேவையில்லாம பேசாதீங்க.

அந்த மனுசன் இன்னும் உலகமே தெரியாம இருக்காரு…

சரிம்மா, நா போனு போடும் போதுச் சொல்லி வைக்கிறேன்.

இப்படிப் பலரும் பல நினைவுகளை அசைபோட்டு வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா.

டிபன் கேரியர்ல நாலு எருவாட்டியச் சப்பாத்தின்னு இருக்கும்.

பணம் கட்டியாச்சு, அவன் வைக்கிறதச் சாப்பிட்டாகனும்.

“வாய்க்கும் வௌங்காது, வந்தாரச் சிந்தாது.” தின்னதுபோக மிச்சத்தத் தூக்கி நாய்க்குப் போட்டா?

“நாய் மோந்து பாத்துட்டு… காலத் தூக்கிட்டுப் போகும்.”

மாணிக்கத்தின் மனத்திரையில் வந்துபோனது. எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து உக்காந்து, பேரன் பேத்தி எல்லாட்டையும் பேசிச் சிரிச்சு… சாப்பிட்ட நாட்கள் இனி வருமா, வரும்? ஏதாவது விசேஷகக் காலம்ன்னா?

வீட்ல போயி என்னத்தச் சாப்பிட.. அய்யோ கடவுளே! காலாகாலத்தில காப்பாத்துட்டா…! இந்த தனிமையில இருந்து காப்பாத்து உனக்குப் புண்ணியமா போகட்டும்…

பெத்தப்பெருமாள் மாதிரியான மனிதர்கள் எல்லாம் இருந்தும் எதுவுமில்லா மனநிலையில் பூமியைத் தேடிப் பூ நாளும் வாடிக் கிடக்கின்றனர். ஒவ்வொரு இரவும் முதிரா இரவாக…. ஆயிரம் பெத்தப் பெருமாள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். முதுமையை,

“கரையான் கட்டுனப் புத்துலக் கருநாகம் குடியேறுனது கணக்கா…” மெத்தையிலப் படுத்தாத் தூக்கம் வரமாட்டேன்னுது நாம வாங்கிய வரம்…

இராத்திரி ஒம்பது மணிக்குப் படுத்துப் பெறண்டு பெறண்டு படுத்தே தூக்கம் வர எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகும். ஆனா, டான்னுக் காத்தால மூன்றரைக்கு முழிப்பு வந்திரும். அதுக்கு மேலத் தூக்கம் பிடிக்க மாட்டேங்குது.

வெருக்கு வெருக்குன்ன ஒத்தக் கொரங்கா இருக்க வேண்டியிருக்கு.

இரவு நீண்ட இரவாப் போச்சுன்னு பெத்த பெருமாள் தனக்குத் தானே மெல்ல மனசுக்குள் பொலம்புறார்……

[email protected]

The post முதிரா இரவு – சுருளி காந்திதுரை appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

பெயராடல் – அசோக்

என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால் ஒருவரின் பெயரை ‘பெயர்’ என்ற அடையாளத்துடன் நிறுத்த விருப்பமில்லை. கூடவே அதில் ஒரு மஜாவும் இருக்கிறது. நான் அப்படி அழைக்கையில் அவர்களுக்கு நிறைய பெயர்கள் என ஆகி விடுகிறது. எப்போதும் வலது கையால் முகம் கழுபவரா நீங்கள்? இம்முறை இடக்கையால் கழுவிப் பாருங்கள். புது முகம் சிக்கும். ஒவ்வொரு முறையும் உங்கள் ஒரிஜினல் தவிர மற்ற அனைத்து நாமத்தாலும் அழைப்பேன். ‘ஹலோ.. இல்லயில்ல. என் பேரு முருகேசன்ங்க’ என நீங்கள் என்னைத்திருத்தும்போது ஒரு புன்சிரிப்புடன் எதிர்கொள்வேன். மாறாக நீங்கள் சீற்றம் கொண்டால் அதில் உள்ள வேடிக்கையை இழப்பீர்கள்.

இதை நான் என் நட்பு வட்டாரத்தில் எனக்கான தனிக்குணமாகவே வைத்து இருந்தேன். கில்லி படத்தில்கூட பிரகாஷ்ராஜ் ‘சிவசுப்பிரமணியன்’ என்ற போலிசின் பெயரை ‘கோயிந்தசாமி’ என விளிப்பார். அவர் கோபம் கொள்ள, “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ ஏன் சொல்ற?“ என்பார். அது என்னுள் ஆழ விதைந்துவிட்டதோ என்னவோ? அப்படி அடிக்கடி நான் பயன்படுத்தும் பெயர்கள் பார்த்தசாரதி, மகா கணபதி, திருச்செல்வம், யோகராஜ் போன்றன.

தமிழ் என்றொரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் தமிழரசன். சற்று பெருத்த உடல். முழுக்கை சட்டை மட்டுமே அணிவான். உளுந்து மூட்டையை மேலும் ஒரு சாக்கு கொண்டு சுற்றியது போல் இருப்பான். அவனை நிறைய பேர் உருவக்கேலி செய்வார்கள். நான் அப்படியில்லை. அவனுக்கு இதன்பால் என்னிடமும், என் இந்த பெயராடல் விசயத்திலும் பெரிய அன்பு மற்றும் கிரேஸ் இருந்தது. அவனின் நண்பர்களை நான் விசாரிக்கும்போதும் அவ்வாறே செய்தேன்.

‘ஒஹ்ஹ் நம்ம ராஜேஷா?’ என்பேன். உண்மையில் அவன் பெயர் சரவணனாக இருக்கும்.

‘ஜீ இப்ப நம்ம செல்வம் வருவான்,எதாச்சும் பேர் போட்டுவிடுங்க’ என வாலண்டியராக குதூகலிப்பான் தமிழ்.

சரி. இப்போ அதுக்கு என்ன? என்றால் ஒருமுறை எங்கள் சொந்த ஊர் சென்றபோது சுப்புராஜ் மாமா என்னை பார்த்து ‘என்னப்பா பாண்டி? என்ன பண்ற?’ என்றார். சொல்லில் ஒரு நக்கல். நானோ கிராமத்தில் கார்கோ க்ராக்ஸ் என கெட்டப்பில் இருந்தேன். சுற்றிலும் பார்த்து என்னைத்தான் சொல்கிறார் என்பதை தெரிந்து கொ ண்டேன்.திக் என்று இருந்தது. நம்மை அடிக்க சில விபூதிகள் காத்துக்கொண்டுதான் இருக்கும்போல்.

‘சொன்னேன் – எம் பேரு அசோக்கு.’

‘திருப்பரங்குன்றத்துல குளத்துல தவறி விழுந்த பின்னால நைட்டு நைட்டு எந்திரிச்சி எங்காச்சும் ஒடபோறேன் ஒடபோறேனு அரட்டிகிட்டே இருப்ப. வெளக்கமாத்தால ரெண்டு போட்டதுக்கு அப்புறம்தான் தூங்குவ. அப்ப உங்க தாத்தா வச்ச பேருதான் பாண்டி. பாண்டி சாமியோட பேரு. அந்த பேரு கொஞ்ச நாள்ல காணாமப் போயி வந்ததுதான் இந்த சோக்கு எல்லாம்’ – நீண்ட விளக்கம் கொடுத்து சுப்புராஜ் மாமா பீடியை காலால் போட்டு அமத்தையில் என் மஜா எல்லாம் அணைந்துவிட்டது போன்ற ஒரு நெருடல். ஆனாலும் இந்த பாண்டிக்கு முருகேசன்கள் எல்லாம் திருச்செல்வம்கள்தாம். யோகராஜ்கள்தாம். பெயரில் என்ன இருக்கிறது?

தமிழ்தான் ஒருமுறை கேட்டான் – ‘ஏன்ஜி என்ன மட்டும் அப்படி பேர் மாத்தி கூப்பிட மாட்றீங்க?’

‘செவ்வாழைகள் கிட்ட நா வச்சிக்கிறது இல்ல’ – என்றேன். ‘கூடவே இருக்கிற’ என்பதைப் போட்டு புரிந்து கொண்டான் தமிழ் என்கிற பரிகாசன். சின்னஞ்சிறு விசயங்களில் கூட பகடி தேடுவான். சில சமயங்களில் தானே ஒரு பகடியாக மாறுவான்.

‘ஜி, இந்த கேஸ்க்காரன் வேற இன்னைக்கு என்னப் பாக்க வாரானாம்’ -தமிழ்

‘எதுக்கு?’ – நான்

‘வேற எதுக்கு கேஸ் போடத்தான்’ – தமிழ்

மேலும், ‘நேத்துதான் அஞ்சு லட்சம் செக் பாஸ் பண்ணேன். ஒத்த ரூவாகூட கைல இல்ல’ – என புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவான். அவனின் பீடிகையைப் புரிந்து கொண்டு எனக்குள்ளும் ஜிபேயிலும் ஒரு பரிமாற்றம் நிகழும்.

‘யோவ் கேஸ்க்கு கொடுக்க காசு வேணும்னு கேக்கலாம்ல?’ என்றால், ‘அதுல ஒரு ஜாலி இருக்காது ஜி’ என்பான். பின்பு ஒருமுறை பார்க்கையில், ‘ஜி, அன்னைக்கு கேஸ்க்காரன் வந்தானா, அவன பார்த்தவுடன் உங்க ‘பிட்ட’ போட்டேன்’

புரியாமல் ‘என்ன?’ என்றேன். ‘ரெண்டு மாடி ஏறி களப்பா வந்து எறக்கி வச்சான். வச்ச அடுத்த செக்கண்டு என்ன பூங்குன்றன் இந்த வாட்டி லேட்டுன்னேன்.அவன் சிரிச்சிட்டே சொன்னான்.என் பேர் கண்ணன் ஸார். ஓ அப்டியான்னேன். களப்புலாம் கலைஞ்சி போன மாதிரி தெரிஞ்சான் ஜி அவன். அந்த நேரத்துல அவன் ஒருவாட்டியாச்சும் பூங்குன்றனா இருந்திருப்பான்லஜி?’

தமிழுக்கு இனமறியா குதூகலம். ‘ஆஆ…கண்டிப்பா’ என்றேன். கண்ணன்கள் பூங்குன்றன்கள் ஆவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிடப் போகிறது?

‘நீங்க அங்க இருந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க?’ என்றான். ‘அந்த நேரத்துல மனசுக்குள் என்ன தோணுதோ அதுதான் சொல்லியிருப்பேன்’ என்றேன்.இதை திட்டம் போட்டு செய்ய முடியாது. அது ஒருவித வன்முறை. ஒருவரின் பெயர் தங்கள் பெற்றோர்களால் ருசித்து வைக்கப்பட்டது. எனக்கெல்லாம் என் அப்பா அசோக் லேலண்டு லாரியில் பார்த்து ‘குமார்’ சேர்த்து வைத்தாராம். அதை உடைத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரின் சாம்ராஜ்யத்தையே தகர்ப்பது போன்றது. சிறு போர் போன்றது. அந்த போருக்கு ஒரு சிறு நகைச்சுவை உணர்வும், கடந்து செல்லும் குணமும், சிறு கணமும் போதுமானது. ஒரு பாலகனிடம் இருக்கும் மிட்டாயை படக்கென பறித்து அதே நொடியில் படக்கென இன்முகத்துடன் திருப்பி அவனிடமே கொடுப்பதைப் போன்றது. சிறுவனுக்கும், அதனைப் பிடுங்கிய நமக்கும் ஏற்படும் ஒரு சிறு மனமாற்றம்தான் அந்த போரின் வெற்றி. நிறைய இடங்களில் பார்த்து இருப்போம்.

ஒருவரின் பெயரை மற்றவர்கள் எழுதுகையில் தவறு இருப்பின் அதை செவ்வனே திருத்தும் நபர்கள் உண்டு. கார்த்திக்கை ‘கார்த்தி‘ என்று எழுதினாலே குற்றம். பெயர் ஒரு அடையாளம். பெயருக்குள் ஒரு நபரின் உடல், குணம், அங்கீகாரம், நகை நட்டு, ஜாதி மதம், முடியில் எடுக்கும் வகுடு முதற்கொண்டு கலாச்சாரம், கத்திரிக்காய் என எல்லாமே அடங்கும். பெயரே அவராக இருக்கிறார்.

தமிழை சொல்லாமல் இக்கதை முடியாது. சில வருடங்கள் அவனைக் காண முடியவில்லை. ஓடும் பேருந்தின் இருபுறமும் சிதறும் செத்த இலைகள்தானே நாம். ஒருநாள் ஓர் இரவில் சர்ச் அருகில் வரச்சொன்னான். சீரான படுக்கைப்பட்டைகள் இருந்த புளு நிற ட்ஷிர்ட் போட்டிருந்தான். முழுக்கைச்சட்டைகள் எங்கே போயின? ஆனால், அதே உடல்.

சூடான இரவு. ஆனாலும், சூடான டீ குடித்தோம். ஏனோ மனுஷனுக்கு சூட்டில்கூட சூடுதான் கேட்கிறது. வினோதமானது மனசு மட்டும்தான்.

கழுத்தில் ட்ஷர்ட் மறைவில் ஒளியும் சிலுவை, சர்ச் வாசல் என இருந்தவனை கேட்டேன்.

‘ஆமா ஜி ஒன்னும் முடியல, இந்தப் பக்கம் வந்துட்டேன். ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. அம்மா உள்ளதான் வேல செய்றாங்க’ என சர்ச்சைக் காட்டினான். அந்நேரம் மணி ஒலித்தது. நிறைய பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்சம் கேட்டுக் கொண்டே இருந்தேன். பேச்சுக்கள் எங்கே இருந்து உற்பத்தி ஆகிறதோ அந்த இடமே உடலின் புனித ஸ்தலம். வாய்ல இருக்கு வார்த்த – என சொல்வாள் கோட்டையூரில் மெஸ் நடத்தும் மாமி.

‘ஜி, ஒன்னு தெரியுமா… இந்த ஏரியால நான்தான் இப்போ குட்டி அசோக். அதான்ஜி நீங்க. இங்க வந்த புதுசுல பெக்கேன்னு வேலை வீடு காசுன்னுதான் இருந்தேன். காசு இல்லாதப்ப போர் அடிக்கல. இப்போ காசிருக்கு. ஆனா, ஒரு துடிப்பே இல்ல. அதான் பார்த்தேன். உங்க ‘பிட்ட’ போட்டேன். ஒரு மாதிரி வொர்க் அவுட் ஆச்சி. ரெண்டு பொண்ணுங்களையே இப்போ கரெக்ட் பண்ணிருக்கேன் ஜி’ என்றானே பாருங்க தமிழ் என்னும் ‘டைசன் சேவியர்’.

ஆளையும் வாழ்வையும் மாற்றியிருக்கிறது பெயர். அப்படியென்றால் பெயரில் என்னதான் இருக்கிறது தேவையை விடவும்? என்றே எனக்குத் தோன்றியது. போரில் தோற்பவனும் வெற்றியை பெறுகிறானோ? எது தேவையோ அதுவே தர்மம் – என்று அச்சிட்ட காலண்டரை முன்பு ஒருமுறை தமிழ் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அதில் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு இருந்தார். இங்கே பின்புறம் மாதா அழகிய புன்னகையுடன் நிற்கிறார். இருவரின் சிரிப்பையும் எந்தப்பெயர் பிரிக்கும்?

பேசிக்கொண்டே இருக்கையில் கடந்து செல்லும் ஒருவனை பார்த்து தமிழ் சொன்னான். ‘என்ன செந்தூரப்பாண்டி,வேளைக்கு வர நேரமா இது?. அவனோ, ‘யோவ்.. போய்யா!’ என சிரிப்பளித்தான்.

‘அவர் சர்ச் வாட்ச்மேன் ஜி. பேரு ஆரோன். அவருக்கு நா டெய்லி இப்டி ஏதாச்சும் சொல்லி கூப்டனும். அப்படியே சிரிச்சிட்டே உள்ள போவாரு.’ என்றான் தமிழ். எப்போதும் தமிழ்தான் எனக்கு.

பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு, ‘சரி ஜேக்கப்… வரட்டுமா?’ என்றேன்.

‘ஜீஈஈஈஈஈ..!’ என்றான்.

குளிர்ந்து மாறியது இரவு.

[email protected]

The post பெயராடல் – அசோக் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கன்னக்குழி – ஜெயநதி

மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள். அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின் பொருட்டு…

தானிழைத்த பெரிய தவறுக்காக ஒரு மன்னிப்பைக் கோரி நின்றவளை தாய் மன்னித்து வீட்டில் சேர்த்திருக்கலாம். ரதியும் படிப்பை தொடர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

தொலைபேசி எண்ணை ஆன் செய்ததும் தொடர்ச்சியாய் தவறின அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து விழுந்தவண்ணமிருக்கிறது.

வந்தவைகளில் மஞ்சுவின் குறுஞ்செய்திதான் அதிகம். மஞ்சுநாதனை அழைத்தாள்.

‘”என்ன?” என்றாள்.

“எனக்குத் தெரியும் ரதி. மூனு   நாளைக்கு தொந்திரவு பண்ணக் கூடாதுன்னு.. ராஜ்மதன்னு புதுசு. நீதான் வேணும்னு காத்திட்டிருக்கான். இன்னைக்கு முடியுமா?”

“ம்ஹூம், முடியாதுப்பா…!” என்றாள்

“அப்ப நாளைக்கு.?….

“ம்..”

அந்தப் பக்கம் அவன் இளிப்பது தெரிந்தது.

காரைக் கிளப்பினாள். கண்ணாடியில்       முகம் பார்த்தாள். சாயமில்லாத உதடு வெளிறி இருந்தது. ரெடிமேட் மூக்குத்தி முகத்தின் வாட்டத்தை மறைத்து மின்னியது.

குதிரைவால் பின்னலை வளைத்து கொண்டையாக மாற்றியிருந்தாள். இளமையின் மீது விழுந்த நகக்கீறல்களாய் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய். இன்னும் மெலிதான இரத்தப் புள்ளிகள் நாப்கினை நனைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு சரியாகிவிடும்.

அப்புறம் கனஜோராய் தொழில் ஆரம்பித்து விடும். விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து நுகர்வதும், கசங்குவதும், கசப்பதுமான இடிபாடுகளிடையே நொறுங்கிவிடாது

நகர்ந்து வருவது பெரும்பாடு.

ஏதாவது ஒரு முகம்

ஏதாவது ஒரு தருணம்

அழுவாச்சிக் காட்டி ஆட்டத்தைக் கலைக்கப் பார்க்கும். ஆனால், சென்டிமெண்ட்டெல்லாம் தொழில் தர்மமில்லையே!

காரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்தாள்.

உலகத்தை எத்தி எத்தி பின்தள்ளி

முன் நகர்கிற இந்த தள்ளாட்டம் அவளுக்கு சுகமோ சுகம்..

வீட்டினுள் நுழைந்து கதவடைத்தாள்.

செருப்பைக் கழற்றியதும் அவளுக்காக காத்திருந்த பூனைக்குட்டி மெத்தென்று உரசி கால்களை நக்கியது.

எங்கிருந்தாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவது அவனுக்காகத்தான்..

“ச்சிலியோப்பா”… சீட்டா, லியோ, பேன்தர் மூன்றையும் கலந்து வைத்த பெயர்…அவள்பாட்டிலைத் திறக்கிற கண்ணாடி கோப்பைகள் உரசுகிற சத்தம் கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் ஆஜராகி விடும்.. அதற்கு மதுவை நக்குகிற பழக்கம்… அவளுடன் கட்டிலில் மல்லாந்து விடும். அவளுக்கு மனசு சுணங்கியிருக்கும்போது அதற்கு எப்படியோ தெரிந்து விடும். அவளை விட்டு விலகாது உரசிக்கொண்டு கூடவேஇருக்கும்…

“குட்நைட்…ச்சிலியோப்பா”…..என்றாள்.

வாயிலிருந்து குழறலாய் பனிப்புகை கிளம்பியது.

ஜெர்மனியின் பனிச் சூழ்ந்த மரப்பலகை வீட்டின் படுக்கையறை

ஹீட்டரில் கதகதப்பாயிருந்தது.

இந்த கசிகிற மெல்லிய வெளிச்சத்தில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருப்பது நன்றாய்த்தானிருக்கிறது.

சில மெழுகுவர்த்திகள் நின்று எரிகிறது. சீக்கிரத்தில் அணைவதில்லை. அதன் தடிப்பு குறைவதுமில்லை….

அரக்கு ஒழுக்கி ஒட்டிய கடிதத்தை முனை கிழியாமல் பிரிப்பதும், அதில் ஏதும் சுவாரஸ்யம் இருக்குமாவென படித்துப் பார்க்கையில் ஒரு மண்ணுமில்லை என கசக்கிப் போடுவதுமாய்

வாழ்க்கை….!

“போங்கடா”….

நொறுங்கிவிடாது இவ்வளவு தூரம் வந்திருப்பதே விஷயம்தான்…

கொஞ்சம் வீறல்…

கொஞ்சம் விரிசல்…

ஆனாலும் எதை ஊற்றினாலும் கசிய விடாத

கண்ணாடிக் குவளை.

இன்னும்

மவுசு இருக்கிறது. போகிறவரை போகட்டுமே….

மறுநாள் விடுதியை அடைந்தபோது வாசலிலேயே மஞ்சு நின்றிருந்தான். வாயெல்லாம் பற்கள்.. சட்டைப்பை நல்ல கனத்திலிருந்தது. பெரியவருமானமாய் இருந்தால் மஞ்சு நேரிலேயே வந்துவிடுவான். இல்லையெனில் அலைபேசியிலேயே வியாபாரத்தை முடித்துவிடுவான். இன்று நல்ல வேட்டைதான்போல..

அறைக்கதவை தட்டிக்கொண்டு போனபோது, உள்ளே இருந்தவர் கதவோரம் இருந்த இருக்கையிலேயே அமரும்படி சைகை செய்துவிட்டு வீடியோ காலில் அசையாமல் “ம்” கொட்டிக் கொண்டிருந்தார். அப்படியென்றால் எதிரில் பேசிக்கொண்டிருப்பது அனேகமாய் மனைவியாய் இருக்கக்கூடும்.

இந்த ஆண்களுக்கு மனைவியிடம் நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி..

பேசி முடித்ததும் அருகில் வந்து அமரும்படி சைகைசெய்தார்.

“நேர்ல இன்னும் அழகாஇருக்கே…!”

சிரித்தாள்..

“ஒகே…கே…நான் நிஜத்தை சொன்னேன்…!” அவரும் சிரித்தார்.

“ஏதோ இருக்கு உன்கிட்டே… புகைப்படத்தைப் பாத்தப்பவே கணிச்சேன்.. இன்னைக்கு ஊர்ஜிதமாயிடுச்சு.. உன்கிட்ட ஏதோ வசியம் இருக்கு…ஹா…ஹா…”

“பெரிய மனுஷ தோரணையெல்லாம் படுக்கையில உதவாது.வா..வந்து இங்க உட்கார்” என்றபடி தொடர்ந்து, “ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” எனக் கேட்டார்.

“ம்.”..

“என்ன சொல்லட்டும்?”

“ஷாம்ப்பெய்ன்.. சப்பாத்தி.. மட்டன் கசண்டி”…- என்றாள்.

“ஆஹா ஜோர்…எனக்கும் இது ரசிக்கும். முதல்ல சாப்பிட்டு சவகாசமா பேசிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்…” என்றார்.

ரசனைக்காரன் தான்.

இன்று எல்லாப் பசிக்கும் தீனி கிட்டலாம்..

“ரதி…ஏதாவது பேசேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன்?”

என்ன கன்றாவிடா இது…

ஏதாவது கவிஞன் எழுத்தாளனிடம் வந்து சிக்கிக்கொண்டுவிட்டேனா என்ன?…

வேலை முடிந்ததா அனுப்பி வைப்போமா என்றில்லாது, பைத்தியக்காரன்

“அதுவந்து”..

அவரே பேசினார்..

“எனக்கும் அலுப்பாயிருக்கு… நிறைய பாத்தாச்சு.. இன்னைக்கு அமைதியா பிடிச்சத சாப்பிட்டுக்கிட்டு, பேசிகிட்டு, ரூமுக்குள்ளேயே கதகதப்பா இருக்கத் தோணுச்சு. பாத்த போட்டோக்கள்ல நீதான் இதுக்கு சரியா வருவேன்னுபட்டுச்சு. அதுவும் இந்த சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ விழுகிற கன்னக்குழி….”

ஆழமாய் பார்த்தார்.

வெகுநேரம் ஓடிக்கொண்டிருக்கிறபோது மிகப் பிடித்த இடத்தைக் கடக்கையில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைப்போல

திரில்லாக இருந்தது ரதிக்கு..

வித்தியாசமானவனாய் இருக்கிறான்.

“ம்… என்ன கேட்டீர்கள்? சரியாக கவனிக்கவில்லை” என்றாள்.

“காதலைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன? நீ லவ் பண்ணியிருக்கையான்னு கேட்டேன்?”

காதலன் இருந்தான். அவன்தான் காதலைச் சொல்லி படிப்பதிலிருந்து காதலுக்கு நகர்த்தி.. காதலிலிருந்து கர்ப்பத்திற்க்கு நகர்த்தி.. பின் கருக்கலைப்புக்கு நகர்த்தி.. ஆயிரம் சத்தியம் செய்து மறுபடியும் இன்னுமொரு கர்பத்திற்கு நகர்த்திவிட்டு ஒருநாள் அவனுக்கே அத்தனை சத்தியங்கள் சலித்திருக்கும் போல… ஓடிவிட்டான்.. திருட்டு ராஸ்கல்….இதுவரை எந்தத் தகவலுமில்லை.இவளும் தேடவில்லை..விட்டது சனியன் என்று..

இவனிடத்தில் எதற்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்…

“அது வந்து… காவியக் காதல் பண்ற அளவுக்கு யோக்கியமானவனை இதுவரைக்கும் நான் பாக்கவுமில்ல. காவியக் காதலியா இருக்கிற யோக்கியதை எனக்குமில்ல… பத்தொன்பது வயசுலயே இந்த லைனுக்கு வந்துட்டேன். சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்ல..

அப்புறம் ஒரு கால்கேர்ள் கிட்ட காதலைப் பத்தி விசாரிக்கிறிங்கன்னா நீங்க சுவரஸ்யமான ஆள்தான்.. காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?….”

கூர்மையானாள்.

“எனக்கு இப்ப வயசு அறுபத்தி ரெண்டு. இருபத்தி மூனு வயசுல ஒருத்திய பாத்தேன். ப்ரபை அவளுடைய பெயர். அவளாக வைத்துக் கொண்ட பெயர். தமிழ்நாட்ல ஒரு நூலக வாசல்ல… யாருக்கோ காத்திட்டிருந்தா..அப்பப்ப என்னைப் பாத்துசிரிச்சா.. கன்னக்குழிவிழ… எனக்கு முதல் பார்வையிலயே ரொம்ப பிடிச்சிருச்சு..போய்ப் பேச பயம்.. ஒரு கார் வரவும் கிளம்பிப்போயிட்டா. மறுநாள் அதே நேரத்துக்கு அந்த நூலகத்துக்கு போய் ரொம்ப நேரம் காத்திருந்திட்டு ஏமாந்து திரும்பி வந்தேன். அவ கன்னக்குழி சிரிப்ப மறக்க முடியல.சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ குழி விழுகிற சிரிப்பு… மனசு எதுலயும் ஒட்டல. அதன்பிறகு எதேச்சையா ஒருநாள் ஒரு உணவகத்துல பார்த்தேன். முன்பைவிட இன்னும் அழகாயிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கிட்டிருக்கிறதை கவனிச்சு அவளே என்கிட்ட வந்து லேண்ட்லைன் எண்ணைத் தந்துவிட்டு மறைஞ்சுட்டா.

அந்த எண்ணுக்கு கூப்பிட்டபோது.. ரேட் இவ்வளவு என்று பேசினாள். எனக்கு முதலில் அதிர்ச்சியாய் இருந்தாலும் அவளை மறக்கமுடியாமல் திரிஞ்சேன். சில தினங்களுக்குப் பிறகு என் காதலைத் தாங்க முடியாமல் சொன்னபோது திக்குமுக்காடினாள்… குதூகலித்தாள். நிறைய பேசினோம். அவள் அதிபுத்திசாலி. கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஜான்மில்டன் பற்றி பேசுவாள். ஷெல்லி பற்றி பேசுவாள். பாரதியைப் பற்றியும் பேசுவாள். வரலாறு, புரட்சி எதைப்பற்றியும் பரவலான அறிவிருந்தது அவளிடம். முக்கியமாய் பரதம்…. சுழன்றாடினாள்…

என்னை ஸ்திரமாய் நம்பினாள்.

நம்பவைத்தேன்.

சில நாட்களில் என் அண்ணனுக்கும் பின் அம்மாவுக்கும் எல்லாமும் தெரிஞ்சு போனது.. அம்மா அடித்துக் கொண்டு அழுதாள். அரிவாள் மனையை கழுத்தில் அழுத்திக் கொண்டு அறுத்துக் கொள்ளப் போவதாய் மிரட்டினாள்.

வேற வழியில்லாம அவளை தவிர்த்தேன். பாவம் ப்ரபை.. ஆனால், அதிபுத்திசாலியல்லவா.. நான் கைவிட்டதை புரிந்து கொண்டாள்.

பின்னாளில் எனக்கு கல்யாணமும் முடிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு அவளை ஒரு ரெஸ்ட்ராண்ட்டில் பாத்தேன். ஒரு ஆணுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே

என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என்னை மன்னித்துவிட்டதாய் காட்டிக் கொண்டாள்… குற்ற உணர்வுடன் நான் திரும்பி விடக் கூடாதென்கிற அக்கறையோடு கன்னக்குழி விழ சிரித்துக்கொண்டே கடந்து போனாள். மனதாலும் அவ்வளவு அழகானவளை அப்புறம் பார்க்க நேராததுதான் அவளோடு இணைந்திருந்து குறுகிய நாட்களை அற்புதமான கவிதை வரியாக மாற்றியிருந்தது வாழ்வு.. ஜிகினா காகிதத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான பழுப்புக் கவிதை .

ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

உணவகத்திலிருந்து வெளியே வந்த போது மிக மெல்லிய காற்றுக்கே அங்கிருந்த போகன்வில்லா மரம் காகிதப்பூக்களை என் மீது ரோஸ் நிற வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றி மொய்க்கச் செய்தது.

அவள் மன்னித்துவிட்டாள்.

தெருவோரப் பைத்தியக்காரி ஒருத்தி என் முகத்தில் ஆசையாய் தடவிய விரல்களை அழுக்கு உதட்டில் வைத்து முத்தினாள்.

சத்தியமாய் ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை உணர்ந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இன்றுவரை எனக்கு மன்னிப்பே கிடைகக்கவில்லை…

பிறகு மனம் நோகிற போதெல்லாம் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்துவிடுவேன்… இரண்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.

இன்று அவளை லைப்ரரியில் முதன்முதலில் பார்த்த தினம்..

அதைக்கொண்டாட அவளைப் போலவே ஒரு விலைமாதைத் தேடினேன்.  

எனக்கு வந்த புகைப்படங்களிலேயே நீதான் பழைய இடதுக் கன்னக் குழியோடு புது சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தாய்!”

[email protected]

The post கன்னக்குழி – ஜெயநதி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்

மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில் நிறுத்தலாமென்றால், ரோட்டில் இருந்த மரத்தையெல்லாம் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டியதால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரங்களே இல்லை.

முதல் கேட்டினுள்ளே நுழைந்தால் வலது புறம் பெரிய ஆலமரம், விழுதுகள் ஊன்றி நிழல் அளித்ததைக் கண்டு அதன் எல்லையில் நிறுத்தினான் திருப்பதி, அதற்குள்ளாக செல்போன் அழைப்பு நின்றிருந்தது.

செல்போனை எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தால் புதிய எண்ணாக தெரிந்தது. இதற்கு முன்பு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக நினைவில் இல்லை. பொதுவாக அழைப்புகள் வரும் எண்களையும் பேசுபவர்கள் குரலையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவது வழக்கம். அந்த எண்ணிற்கு அழைத்தான் பிசியாக இருந்தது. சரி காத்திருப்போம் என அமேசானில் உலாவி புதியதாக வந்திருக்கும் டூல்ஸ்களை பார்வையிட்டான். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“சார், அதிர்ஷ்டம் கடையில ஒங்க நம்பர் கொடுத்தாங்க. நீங்க திருப்பதிதான? வாசிங் மிஷினுக்கு சரியா தண்ணீ வரமாட்டேங்குது. தொவக்க லேட்டாவுது. வந்து என்னான்னு பாக்க முடியுமா? இப்போ வர முடியுமா?”

“ஓகே பத்துடலாம். டேங்குல தண்ணீ ஃபுல்லா இருக்கா?”

“பார்த்துட்டேன் சார். மோட்டார போட்டு தண்ணிய ஃபுல்லா ஏத்தியும் பாத்துட்டேன். ரெம்ப கம்மியா வருது போல. தொவக்க ரெம்ப நேரம் ஆவுது. இதுக்கு முன்னாடி இது மாறி ஆனதில்ல. கொஞ்சம் சீக்கிரம் வாங்க. வெளிய போகனும்”

“சரி, அட்ரச சொல்லுங்க. வந்துர்றேன்.”

“அருளானந்த அம்மாள் நகர், புஷ்பம் காலனி, ஆறாவது தெரு, மொத மாடி வீடு, கத்தரி பூ கலர்ல பெயிண்ட் பண்ணது.”

“மெடிக்கல் காலேஜ் ரோட்டுல இருக்கேன். நேரா அங்கதான் வரனும் வந்துர்றேன்.”

தினமும் தஞ்சாவூரையே சுற்றி வருவதால் முகவரி நன்றாகத் தெரிந்தது. மனதிற்குள் அதற்குள் போக வேண்டிய பாதை வரைபடமாக விரிந்து வழிகாட்டியது. ஞாபக அடுக்குகளில் தெரு, கடைகள், திருப்பங்கள் எல்லாம் எப்படி பதிகிறது.. திரும்பவும் எடுக்கப்பட்டு பயன்படுகிறது என மனதின் வன்மையை நினைத்து வியப்படைத்தான்.

வாகனத்தை மெதுவாக இயக்கி பண்ணிரெண்டு நிமிடத்தில் புஷ்பம் காலனி ஆறாவது தெருவையடைந்தான். வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. தெருவின் முதல் வீடே அவர்களதுதான், வாகனத்தை நிறுத்திவிட்டு டூல்ஸ் பையுடன் கேட்டின் கதவருகே நின்று உள்புறமாக அழைத்தான்.

“சார், சார். வீட்டுல நாயிருக்கா?”

“இதோ வர்றேன் சார்” – என்றபடி முப்பத்தியைந்து வயதுடைய பெண் நைட்டியில் வந்தார்.

“வாங்க சார், நாய் கிடையாது. பயப்படாம வாங்க.”

“ஒகே, ஒகே. ரெண்டு மூனு தடவ கடி வாங்கி ஊசி போட்டதுல கொஞ்சம் பயம். அதான் கேட்டுக்கிட்டேன். வாசிங் மிஷின் எங்க இருக்கு?

“மொதல் மாடியில் இருக்கு. வாங்க காட்றேன்”

போர்டிகோவை ஒட்டி ஏறிய மாடிப்படியின் வழியே முதல் மாடியில் வலது புறம் இருந்த மிகப்பெரிய அறையைக் காட்டினார். “இதுல இருக்கு. நீங்க பாருங்க. நா காலேஜ்க்கு போவனும். டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றவருக்கு நல்ல திருத்தமான முகம். மேக்கப் இல்லாமலே அழகாக இருந்தார். நன்றாகப் படிய வாரிய தலைமுடி பின்னால் பின்னி இடுப்புவரை தொங்கியது. நைட்டியிலேய உடலின் வளைவுகளும் திண்மையும், இளமையும் தெரிந்தது. சாந்தமான முகமும் புன்னகையும் ஒரு முறை பார்த்தவர்கள் மறக்க முடியாத வன்னமிருந்தது. கழுத்தில் தாலியும், காலில் மெட்டியுமில்லை. கற்பனையில் மனம் பறந்தது.

வாசிங் மிஷின் அறையில் உள்ளே அதன் அட்டாச்சுடு பாத்ருமை ஒட்டி நன்றாக வழிவிட்டு வெளியே இருந்தது. முதலில் மிஷினுடன் இணைந்த  குழாயின் வால்வை மூடிவிட்டு ஹோசை கழற்றினான். மீண்டும் வால்வைத் திருகினான். தண்ணீர் நன்றாக வேகமாக வந்தது. ஹோசின் மறுமுனை, மிஷினின் பின்புறம் இருந்ததைக் கழற்றிப் பார்த்த போது, சிறிய வலையில் அதிக அளவில் காய்ந்த தேக்குமரப் பூக்கள் நிறைய வடிகட்டும் வலையில் சிக்கி அடைத்திருந்தால் தண்ணீர் கொஞ்சமாத்தான் செல்லும். சுத்தமாக சிறிய வட்ட வலையை கழுவி சரியாகப் பொருத்தி பழையபடி ஹோசை மாட்டிவிட்டு வால்வைத் திறந்த போது நல்ல வேகமாகத் தண்ணீர் வந்தது. மிஷினை ஆன் செய்து பார்த்தான்.

தண்ணீர் உடனே வேகமாகப் பாய்ந்ததால் மிஷின் பழையபடி வேலை செய்தது. இப்போது விரைவாகத் துணிகளை துவைத்துவிடும் . பாத்ரூமில் கைகால்களை கழுவி வெளிவந்து டூல்ஸ்பையை எடுத்து சரிபார்த்து அறைக்கு வெளிய வந்தான்.

மேலும் ஐந்து நிமிடத்திற்கு பிறகே அழைத்த பெண் மாடிக்கு வந்தார்.

மிகப்பிரகாசமான ஒளிபரவ குறுகிய கால எளிய மேக்கப்பில் ஜொலித்தார். நெருங்கிய உறவினரைப் பார்பது போல தெரிந்தது. பெண்ணுக்கேயுரிய உடல் அமைப்பும் அதற்கேற்றார் போல உடையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

“என்ன சார், சரியா இருக்கா இப்ப? என்னாச்சி என்ன காரணம் தண்ணீ சரியா வராததுக்கு?”

மேல இருக்குற தண்ணீர் டேங்க்குல, காஞ்ச தேக்குமர பூ கொட்டுறது உள்ள விழுந்து கீழ வர்ற பைப்பு வழியா வந்து, வாசிங் மிஷின்ல பில்டர்ல அடைச்சிகுது. அதுனால தண்ணீ உள்ள வேகமா வராம துணிய தொவைக்க ரெம்ப லேட்டாவது. அதான் காரணம்.”

“ஓ அப்டியா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? மாடியில இருக்கும் டேங்க்க பார்த்துட்டு சொல்லுங்க. சுத்தப் படுத்திடலாம்.”

ஒரு வினாடி யோசித்தவன், “சரி, ஏறி பாத்துடுவேன். ஆனா, கிளீன் நா பண்ண மாட்டேன்.”

“ம். ஓகே சார்.”

மொட்டை மாடியில், வீடு கிழக்கு பார்த்த வாசல் என்பதால் இடது புறம் மூலையில் டேங்க் சிமெண்ட் செங்கல் , கலவையில் கட்டப்பட்டிருந்தது. பின் கட்டில் இடமிருந்ததால். நிறைய தேக்குமரங்கள் இருந்தன, இரண்டு மாடி தாண்டி வளர்ந்தவை. டேங்கின் மேல் ஏறிப் பார்த்தான். பிளாஸ்டிக் மூடியாததால் உடைந்திருந்தது. பாதிக்கும் மேல் திறப்பாக இருந்த பகுதி வழியே பூக்களும் இலைகளும் விழுந்து தண்ணீரில் குப்பையாக, அழுக்காக இருந்தது. கீழே வந்து. அப்பெண்ணிடம், “டேங்க் மூடி ஒடஞ்சிருக்கு. அத மாத்தனும், தொட்டிய சுத்தம் செய்யனும். ஒடஞ்ச பக்கமா தேக்குமர பூவும் இலையும் கொட்டி குப்பையா இருக்கு” என்றான்.

“ஒரு உதவி செய்யுங்க. நீங்க கிளீன் பண்ணிட்டு அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்கோங்க” என்றார்.

“ஸாரி, அந்த வேலை என்னால முடியாது. வேற தெரிஞ்ச ஆள் இருக்கு நம்பர் அனுப்புறேன். சொன்னீங்கன்னா வந்து கிளீன் பண்ணிட்டு மூடியும் புதுசா போட்டு குடுத்துட்டுப் போவாரு. இந்த தடவ இரும்பு மூடியா போட்டுங்க.” என்றபடி நம்பரை அனுப்பினான்.

“சரிங்க நம்பர் தாங்க. பேசிக்குறேன். உங்களுக்கு ஜீபே இருக்கா? இருந்தா நல்லது. உடனே பணம் அனுப்பிடுவேன். கேஷ் வச்சிகிறது இல்ல, ஸாரி” என்றார்.

“அதபத்தி பேசுனா அரசியலாய்டும். பொதுவா நா பணம்தான் வாங்குவேன் .முடியலன்னா ஜீ பே பண்ணுங்க. உங்க பேர சொல்லுங்க. பணம் வந்துட்டா செல்லிர்றேன்” என்றபடி கூலித் தொகையையும் சொன்னான்.

“ஒகே, நீங்க நோட் பண்ணிக்குங்க. எம்பேரு அனுஸ்ரீ” என்று சொல்லியடி போனிலிருந்து பணம் அனுப்பினார்.

கேட்ட தொகையை அனுப்பியிருந்தார்.

“பணம் வந்துடிச்சிங்க. தாங்க்ஸ். அனுப்பின நம்பர்ல கூப்பிட்டு தொட்டிய பாத்துட்டு ,கூலிய பேசிட்டப்புறம் வேலை பாக்க சொல்லுங்க. அதான் நல்லது. சரி நா கெளம்புறேன்.”

“ஓகே, நானும் காலேஜிக்கு போனும்” என்று கீழிறிங்கினார். திருப்பதியும் பின்னால் இறங்கினான். ஏதோ உறுத்தலாகவே உணர்ந்தான். வீட்டின் வாசலில் வைத்த வாகனத்தை எடுக்கும் போது சிமெண்ட் கலர் குவாலிஸ் அர்பன் குருஸ்னர் வந்து நின்றது. அதிலிருந்து மாநிறத்தில் குள்ளமான நபர் இறங்கி திருப்பதியை பார்தபடி வீட்டினுள் போனார்.

“யாரு வந்துட்டுப் போறது? நா இல்லாத போது கண்ட ஆளெல்லாம் கூப்புடாதேன்னு எத்தன தடவ சொல்றது?” என்ற சப்தமாகப் பேசுவது கேட்டது. லேசாக மனதிற்குள் வெம்மையை உணர்ந்தான்.

“வாசிங்மிஷின் ரிப்பேர்னு சொல்லி ஒரு வாரமாவுது. நீங்க பாக்குற மாறி தெரியல. அதான் அதிர்ஷ்டம் கடையில் அவரோட நம்பர குடுத்தாங்க. வரச் சொல்லி சரி பண்ணினேன். அதுக்கு இப்ப என்னா? நீங்க செய்ய மாட்டீங்க.. செஞ்சா குத்தம் சொல்றது. சரி, எனக்கு நேரமாவுது” என்ற கோபக் குரலும் கேட்டது. ‘இது குடும்ப வெவகாரம். நாம தலையிடக் கூடாது’ என ஒன்றும் பேசாமல் புறப்பட்டுவிட்டான் திருப்பதி.

மூன்று நாட்களுக்கு பிறகு அனுஸ்ரீ போன் செய்தார்.

“சார், நீங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணேன். சிவானந்தம்னு வந்தாரு. டேங்க்க நல்லா சுத்தம் பண்ணதோட, புது இரும்பு மூடிய வாங்கிட்டு வந்து சிமெண்டால பூசி குடுத்துட்டுப் போனாரு. ரெம்ப தேங்க்ஸ்” என்றார்.

“அதுக்கு ஏங்க தேங்க்ஸ்? எங்க வேலையில் அதுவும் ஒன்னு.. அவ்ளோதான். உங்களுக்கு திருப்தினா சரிதான்”

“ஒகே சார். வச்சிடுறேன் பை” என்றார்.

அப்போதே  வாட்சப்பில் பூங்கொத்தும், ஸ்மைலியும் , ஹார்ட்டும் தேங்க்ஸும் வந்தது. அன்றிலிருந்து  தினமும் காலை வணக்கமும் , இரவு வணக்கமும் பத்து நாட்களுக்கும் மேலாக அனுப்பியிருந்தார். திருப்பதிக்கு உறுத்தலும், தவிப்பும் ஏற்பட்டு ஒரு மாதிரியானான். பதிலுக்கு எதுவும் அனுப்புவதில்லை.

கடையிலும், வெளியிலும் வேலையில்லாத நேரம். அம்மாதிரியான காலத்தில் புத்தகம் படிப்பதில் இறங்கும் பழக்கம். நாஞ்சிலாரின் இடமோ வலமோ தொகுப்பை படிக்கத் தொடங்கினான் திருப்பதி,

தவசிப்பிள்ளை, கும்பமுனியை வைத்து நகைச்சுவையுடன் நிதர்சனமான உண்மையைக் கலந்து தரப்பட்ட பதிவுகள். பாதிக்கும் மேல் படித்துவிட்டான். முகம் முழுவதும் புன்னகையுடனும் மனமும் நிறைத்திருந்தது. செல்போன் அழைப்பு வந்தது , சற்றே சலிப்புடன் போனை எடுத்தான். அழைத்தது அனுஶ்ரீ. மணி பன்னிரெண்டாகியிருந்தது

“சொல்லுங்க , என்னாச்சி?”

“வீடு முழுக்க எல்லா பைப்பிலும் தண்ணீர் வர மாட்டேங்குது. கொஞ்சம் அவசரம். உடனே வர முடியுமா?”

“எல்லா பைப்பிலும் வரலியா? பத்து நாளுக்கு முன்னாலதானே சுத்தம் பண்ணோம். திடீர்னு வரலயா?” என்றான்.

“ஆமாங்க காலையில கூட பாத்திரம் கழுவினேன். அப்பல்லாம் வந்ததே! வாசிங் மிஷின்ல துணிய தொவச்சி மாடியில காயப்போட்டேனே.” என்றார்.

“சரிங்க. ஒடனே வர்றேன்”

டூல்ஸ் பையுடன் வாகனத்தில் ஏறி உடனே அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டான்.

வீட்டை நெருங்கி வாகனத்தை சுற்றுச் சுவரின் அருகே பெரிதாக வளர்ந்திருந்த புங்க மரத்தினடியில் நிறுத்தி பூட்டினான். புங்க மரத்தின் நிழலும், பசுமையும், பச்சை வாசனையும் அற்புதமான குளுமையுடன் பரந்து விரிந்திருந்தது. தெருவில் நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. ஹாலைக் கடந்து இடது புறமிருக்கும் படுக்கையறைக்கும் சாமி அறைக்கும் நடுவில் நின்று மீண்டும் அழைத்தான். பதிலில்லை, படுக்கையறையிலிருந்து பிளாஸ்டிக் வாளியை நகர்த்தும் சப்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது.

மீண்டும் குரல் கொடுத்தான்.

படுக்கையறைக் கதவை மெதுவாக தயக்கத்துடனே தள்ளித் திறந்தான். அறையில் யாரும் இல்லை. பெரிய அறை. அலங்காரமான தேக்கு கட்டிலும் தலைப்பக்கம் விளக்குகள் வைத்து பிளஸ்டிக் பூக்களால் அலங்கரித்து அழகுடன் இருந்தது. ஒரு அடி உயரமுள்ள ஸ்பிரிங் மெத்தை மேலே காட்டன் போர்வையால் போர்த்தியிருந்தது. படுக்கையின் எதிரே ஐம்பத்தி மூன்று இஞ்ச் டிவியும் மரத்தால் அழகுற வடிவமைக்கப்பட்ட மையத்தில், முன்னும் பின்னும் இழுத்தும் ,சுவரில் சமமாக வைக்கும் விதத்தில் மாட்டியிருந்தனர். அறையின் இடது புற சுவரின் நடுவில் ஏசியும், மூன்று புற சுவரின் நடுவில் வண்ணமயமான விளக்குகளும் , வித்தியாசமான வடிவமைப்பில் சீலிங் பேனும் இருந்தது. வலது மூலையில் பாத்ருமின் கதவு லேசாகத் திறந்திருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

மேலும் உள்ளே நுழைவதற்குள் பாத்ரும் கதவு திறக்கப்பட்டு முழங்கால் மூட்டு தெரிய தூக்கி மார்புப் பகுதி வரை கட்டியிருந்த உள் பாவாடையும், தோள் மேல் போர்த்தியிருந்த பெரிய தேங்காய் பூ துண்டுடன் அனுஸ்ரீ வெளியே வந்தார். திருப்பதியை பார்த்ததும் புன்னகைத்து, “வாங்க, பாதி குளிக்கும் போது திடீர்னு தண்ணீ வரல.. அதான் போன் பண்ணேன்” என்றார்.

வெட்கமும் பதற்றமுமடைந்த திருப்பதி திகைத்தான்.

“ஸாரி, கூப்பிட்டு பார்த்தேன். பதிவில்லை. அதான் உள்ளார வந்துட்டேன்.”

“அது பராவாயில்ல. என் தப்புதான். வெளியே இருந்துக்கனும். நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல”

“வேலையில்லாம சும்மா புத்தகம் படிச்சிட்டிருந்தேன். அதான் உடனே வந்துட்டேன்.”

“புத்தகமெல்லாம் படிப்பீங்களா?”

“ம் , படிப்பேன். சரி, வந்த வேலைய பாக்கலாமா?”

கலகலவென சப்தமாகச் சிரித்தார்.

“ஓ..சாரி. வாங்க.. வந்த வேலைய பாருங்க” என்று பாத்ரூமுக்கு வழி விட்டார்.

பாத்ருமிற்குள் புகுந்து குழாய்களைத் திருகிப் பார்த்தால் சுத்தமாக தண்ணீரே வரவில்லை. சரி மாடி டேங்கில் தான் பார்க்க வேண்டுமென முடிவுக்கு வந்து திரும்பும் போது, தேங்காய்ப்பூ துண்டில்லாமல், மார்புப் பகுதியில் கைவைத்து முடிச்சிட்ட பாவடையை அவிழ்த்து கால்கள் வழியே நழுவ விட்டு அனுஸ்ரீ நிர்வாணமாக நெருங்கினார். சாதாரணமாக நல்ல உடையணிந்தாலே அழகாகத் தெரிவார். உடையில்லாமல் தினசரி பயிற்சி செய்த உடல் வனப்புடனும் ஈர்ப்புடனும் இருந்தார். எந்த ஆண்மகனும் தடுமாறும் நிலையில் மாசு மருவற்ற துல்லியமான, அருவருப்பில்லாத முழு உடல். சட்டென்று முதல் நாள் வேலைக்கு வந்த போது உறுத்தலாக உணர்ந்தது ஞாபகம் வந்தது. கண்கள் இரண்டும் வெகு ஆழமான, உறுதியான, சோகம் கலந்த அழைப்பு விடுத்ததை மனம் அறிந்தது வெளிப்பட்டது.

அந்நிலையில் திருப்பதியை கட்டிப் பிடித்தார்

ஒரு கணம் சபலம், மறுகணம் பதற்றமும் பயமும் தொற்றியது , திண்மையான மதர்த்த உடலின் அருகாமையும், ஹாமாம் சோப்பும் ஒருவித உடலின் வாசனையும் கலந்து தினறடித்தது, கைகளில், உடலின் உணர்ச்சியின் எழுச்சியால், உணர்ந்த திண்மையால் பாலுணர்வு தூண்டப்பட்டாலும் சில நொடிகளில் மனதை கட்டுப்படுத்தினான்

“விடுங்க.. என்ன இது? இப்படி உங்க வீட்டுக்காரர் பாத்தாருன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம். எனக்கு கெட்டபெயரும் வந்துடும். கடைக்குத் தெரிஞ்சா வேலைக்கும் ஆபத்து, விட்டுங்க” என உதறினான். உதறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. நல்ல பலமான பிடியாகத் தெரிந்தது. கைகளை உயர்த்தி விட்டுவிடும் படி கெஞ்சினான். ஒரு நிமிடம் வரை அவரின் இறுகிய பிடி விலகாமலிருந்தது. கையைத் தூக்கியபடியே திருப்பதியும் வெகு அமைதியாக நின்றான்.

என்ன நினைத்தாரோ சட்டென்று முற்றிலும் விலகியவர், கண்ணீருடன் பெரும் குரலெடுத்து அப்படியே பாத்ரும் தரையில் அமர்ந்து உடல் குலுங்க தலை குனிந்து அழுதார்.

“பிளிஸ்.. எனக்கு உதவி செய்யுங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!” என அழுதபடி இருந்தார்.

வெளியே போகலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினான் திருப்பதி . வெளியே வந்தவன் ஒரு முடிவெடுத்தான். போர்வையை எடுத்துக கொண்டு பாத்ருமிற்குள் நுழைந்து அனுவை முழுக்க போர்த்தி எழுப்பி ஆறுதலாக தட்டிக் கொடுத்து படுக்கையறைக்குள் மெத்தையில் அமரவைத்து, “நா வெளியே ஹால்ல சேர்ல உக்காத்திருக்கேன். டிரஸ் போட்டுகிட்டு வாங்க” என படுக்கையறையை விட்டு வெளியேறி ஹாலில் சேரில் அமர்ந்து என்னவாயிருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடத்திற்குள் பெரிய பூப்போட்ட இறுக்கமான நைட்டியில் முகத்தை துடைத்தபடி வெளிவந்தவர், “உங்களுக்கு டீ யா, காபியா?” என்றார்.

“இப்பவா.. ம், சரி காபி போடுங்க. ப்ளாக் காபியா போடுங்க. சக்கரை பாதியா இருக்கட்டும்” என்றான்.

ஹாலிலிருந்து சமையலறை தெளிவாகத் தெரியும்படி கட்டப்பட்டிருந்தது. காபி போடுவதற்காக ஆயத்தம் செய்து கொதிக்கும் நீரை மௌனமாக உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஆவி பறந்து முகத்தில் படிவதும் சில் அவுட் ஆக போட்டோ ப்ரேம் போலத் தெரிந்தது. ஆவி பறக்கும் காபியோடு வந்து முன்னாலிருந்த டீபாயில் வைத்து எனக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தார்.

“எனக்கும் ப்ளாக் காபியா போட்டுகிட்டேன். இன்னிக்கு குடிச்சி பாக்குறேன். டேஸ்டு எனக்கு ஓகேன்னா இனி ப்ளாக் காபிதான்” என்றார்.

சங்கடமான புன்னகையுடன், “கொஞ்சம் கசப்பாக இருக்கும். பழகிட்டம்னா நல்ல பலன் தரும். பால் கலக்காத காபி ரெம்ப நல்லது” என்றான்.

சற்றே கலகலப்பான சூழ்நிலை உருவானது . மெல்ல பேச ஆரம்பித்தார்

“நீங்க நெனக்கிறது போல அவர் என்னாட புருஷன் இல்ல. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறோம். அஞ்சி வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில சென்னையில வேலை பாத்தோம். புடிச்சி போய் எங்களுக்குள்ள பேசி ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். கல்யாணம், குழந்தைங்க வேணாம். சேர்ந்து வாழலாம். நமக்குள்ள தோனுனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேருக்கும் சென்னை புடிக்கல. வேலை நேரமும் முன்னாடி பின்னாடி இருந்திச்சி. அவரோட சொந்த ஊர் மன்னார்குடி. இங்க தஞ்சாவூர்ல அவருக்குத் தெரிஞ்சவங்க காலேஜ்ல எனக்கு வேலையும், அவரு ஒர்க் ப்ரம் ஹோமும் வாங்கிகிட்டு மூனு வருசத்துக்கு முன்னாடிதான் தஞ்சாவூர் வந்தோம்.

வந்த புதுசுல ஒன்னும் பிரச்சன இல்ல. நல்லாத்தான் இருந்தாரு. இப்ப கொஞ்சநாளா எம்மேல சந்தேகப்படுறாரு. கல்யாணமும் , குழந்தையும் வேணாம் கடைசி வரை இப்படியே இருப்போம்ன்னு சொல்றதோட, சில சமயம் கடுமையா செயல்படுறாரு. வர வர நம்பிக்கை இழந்துட்டேன். நீங்க வேலைக்கு வந்துட்டு போன நாளா என்னோட போன எடுத்து பாக்குறாரு. அன்னக்கும் எனக்கும் அவருக்கும் சண்டை. சொல்லிப் பாத்தேன். நம்பவே இல்ல. நா என்னா பண்றது? அப்பா அம்மாவ விட்டுட்டு இவர நம்பி வந்துட்டேன். ரெம்ப கஷ்டம். இவரோட இனி இருக்க முடியுமான்னு தெரியல. அவரு பாக்கனும்னுதான் தெனம் உங்களுக்கு மெசேஜ் போட்டேன். சென்னைக்கு போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும்.”

“சரி, அதுக்கு எங்கிட்ட ஏன் இப்படி நடத்துக்கனும்? போன்ல கேட்டுருக்கலாம், வாட்சாப்புல மெசேஜ் போட்டுருக்கலாம்” என்றான்.

“செஞ்சிருக்கலாம். ஆனா, நீங்க வந்துட்டு போனதும் ஏற்பட்ட சண்டையும் , நீங்க எங்கிட்ட நடந்துகிட்ட விதமும் புடிச்சிப் போச்சி. பத்து நாளா உங்களப் பத்தி விசாரிச்சேன். உங்க வயசு, வீடு, பொண்டாட்டி , புள்ளங்க எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். உங்க முழு விவரமும் இப்ப எனக்குத் தெரியும். பழைய கம்பெனிக்கும் பேசிட்டேன் வேலை தர்றேன் சொல்லிட்டாங்க. அவருக்குத் தெரியாம ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

அதுக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தன்னு யோசிக்கிறது தெரியுது.

நா உங்ககிட்ட கேக்க போறது ஒன்னே ஒன்னுதான். கொஞ்ச நாள்ல வெளியூர் போய்டுவேன். உங்கள உட்பட யாருக்கும் தெரியாத ஊருக்கு. எனக்குத் தேவை வாழ்க்கையில ஒரு நல்ல பிடிப்பும் வாழ வேண்டிய உத்வேகமும் தர்ற நல்ல விஷயம். சரி, புருவத்த சுருக்கி மண்டை காய வேண்டாம். பத்துநாளுக்கு மேலா யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். உங்க மூலமா எனக்கு குழந்தை வேணும், குழந்தை உருவானவுடனே நா கெளம்பிடுவேன். அப்புறம் ஒங்க கண்ணுலயே படமாட்டேன். இது உறுதி. ஒரு தடவ பண்ண தப்ப இன்னொரு தடவ செய்ய மாட்டேன். உங்களயும் பிரச்சனையில இழுத்து வுடமாட்டேன்” என்றார். பெருமூச்சு விட்டபடி சேரில் சாய்ந்து ஆசுவாசமாக தளர்ந்து கண்ணை மூடினார். மனதிலிருந்தவைகளை கொட்டியதால் முகம் மேலும் பிரகாசமாக ஒளிர்ந்தது. எதிர்பார்ப்புடன் நிறைவாக, புன்னகையுடன் இருந்தது.

ஆழ்ந்து அனுவை பார்தபடி காபியை குடித்து முடிந்து டீபாயில் வைத்து கைளை கோர்த்து நெற்றியில் தட்டிக் கொண்டவன், பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒன்றுமே சொல்லாமல் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை ரசித்துப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.

மெல்ல தலை நிமர்ந்தவன் அனு அவனயே பார்த்தபடி இருந்ததை கண்டு வெட்கமடைந்து எழப்போனான்.

“இருங்க.. எங்க கெளம்புறீங்க? ஒடனே பதில் சொல்லனும்னு இல்ல. ரெண்டு நாள் கழிச்சி சொன்னாலும் போதும். சமயத்த பயன்படுத்தாத ஆண்பிள்ள நீங்கதான். வேற யாராவது இருந்தா இந்நேரம் வேல முடிஞ்சி போயிருப்பாங்க. உங்க திடமான மனசும் உடலும் எனக்கு ஒரே ஒரு தடவை போதும். வாழ்நாள் முழுக்க வாழ்த்துடுவன். நல்ல முடிவா சொல்லுங்க. மூணு நாள் காத்திருப்பேன். அப்புறம் நீங்க நெனச்சாலும் என்ன பாக்க முடியாது..!”

“சரி, நா கெளம்புறேன்” என்றபடி டூல்ஸ் பையுடன் வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்து மணி பார்த்தான். இரண்டரை ஆகியிருந்தது. பசியே அப்போதுதான் தெரிந்தது. மனதின் யோசனையாலும் அனுவின் பேச்சைக் கேட்டதாலும் ஒடுங்கியிருந்தது முழு வீச்சாய் கிளம்பியது. வீட்டிற்கு வண்டியைத் திருப்பி வந்து சாப்பிட்டான். மனம் மட்டும் போராட்டத்தில் இருந்தது. மனைவி கூட, “என்ன பலமான யோசனை.. சாப்பிடுங்க” என்றாள்.

என்ன சொல்வது, எப்படி சொல்வது புரியாமல் தவித்தான். இரண்டு நாட்கள் இருக்கிறதே பார்ப்போம் என்று நினைத்தான்.

மூன்று மாதம் கழித்து அனுவிடமிருந்து போன் வந்தது. “வெளியூர் கிளம்புறேன். என்னால தெந்தரவு நிச்சயமா இருக்காது. குழந்தை பிறந்ததும் நல்லா வளர்த்து படிக்க வைப்பேன். நீங்கதான் அப்பான்னு சொல்ல மாட்டேன். உங்க மனவிக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். அவங்களோட சம்மதம்தான் எனக்கு ஆசிர்வாதம். இந்த நம்பர் இனி வேல செய்யாது. பை”

ஆழ்ந்த மெளனத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தான், அதுவும் நல்லதே என மனதை திடப்படுத்த ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான் திருப்பதி .

[email protected]

The post கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்

ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் கிரிதர்.

“எங்க அம்மா அப்பாவுக்கு இந்த பித்தளை டபரா டம்ளர் செட் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே ராதா தள்ளிக் கொண்டிருந்த வண்டியில் அந்த பொருட்களைச் சேர்த்தார் கிரிதர். சற்று நேரம் பொறுத்து, “யார்ட்லி பவுடர் எடுத்திருக்கேன். போன முறை அப்பா நம்ம வீட்டுக்கு வந்தபோது நல்லா இருக்குன்னு சொன்னாரு” என்று ஒரு டப்பாவையும், “என்சூர் எடுத்திருக்கேன். எங்க அம்மாவுக்கு முட்டி வலி இருக்குல்ல, இது குடிச்சா நல்லதாம்” என்று மற்றுமொரு டப்பாவையும் அந்த வண்டியில் சேர்த்தார்.

“ஏம்பா, அவங்க கல்யாண நாளுக்கு ஏற்கனவே புடவை வேஷ்டி எடுத்தாச்சு, இதெல்லாம் எதுக்கு? சரி, என்சூர், யார்ட்லி பரவாயில்லை, அவங்க வீட்டுல இல்லாத டபரா டம்ளரா?” என்று கேட்டார் ராதா.

“இதோ பாரு, அவங்க கிட்ட இருக்கா இல்லையாங்கறது பிரச்சனை இல்ல, நம்ம அவங்களுக்கு நிறைய செய்யுறோமா என்பதுதான் அவங்க எதிர்பார்ப்பு. உனக்கு அது புரியாது” என்று கிரிதர் ராதாவிடம் விளக்கினார். அவர்கள் திருமணமான புதிதிலிருந்து அம்மா அப்பாவின் ஆசைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார் கிரிதர். அவருக்குத் திருமணமாகி இருபது வருடம் ஆகப்போகும் தருவாயில், இன்றும் ஒரு சிறிய குழந்தை போல, மதர்ஸ் டே துவங்கி, ஆங்கிலப் பிறந்த நாள், நட்சத்திர பிறந்த நாள், திருமண நாள், என்று அனைத்திற்கும் வாழ்த்துகளும் பரிசுகளுமாய் போய் நிற்கிறார் கிரிதர்.

“டேய் ரகு, நாங்க போய் தாத்தா பாட்டிய பார்த்துட்டு வந்துடறோம். ரெண்டு நாள்தான். உனக்கு எக்ஸாம் இருக்கறதால உன்ன இங்க விட்டுட்டுப் போறோம். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணக் கூடாது என்ன?”

“சரிம்மா, நான் பார்த்துக்கறேன். கவலைப்படாம போயிட்டு வாங்க! நான் என்ன குழந்தையா? அம்மா, ஹாவ் ஃபன்” என்று ராதாவை அணைத்து வழியனுப்பி வைத்தான் ரகு. கல்லூரிக்குச் செல்லும் மகன் இருந்தும், மாமியார் மாமனார் வீட்டிற்கு செல்வதென்றால் ராதாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சேர்ந்திருந்த அவர்கள், கிரிதருக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தனர். பல வருடங்கள் கழித்து சென்னை வந்த போது, மாமனார் வீட்டருகில், அதே சுற்றுவட்டாரத்தில், வேறு ஒரு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகள் முன்னதாக, திருச்சியில், ஓய்வூதியர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் சகல வசதிகளுடன் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே சென்று விட்டனர் ராதாவின் மாமியாரும் மாமனாரும்.

திருச்சியில் அவர்களைச் சந்தித்து அவர்கள் திருமண நாளன்று வாழ்த்து கூறி ஆசிகள் பெற கிரிதரும் ராதாவும் திருச்சியை நோக்கி காரில் பயணித்தனர்.

“குட் மார்னிங் மா! திருச்சி போயிட்டு இருக்கோம். ரகு தனியாதான் இருக்கான். அடச்சே… மறந்தே போயிட்டேன் பாரேன். ஹேப்பி பர்த்டே மா!” என்று தனது அம்மாவை வாழ்த்தினாள் ராதா.

“ஆண்டி பர்த்டேவையே மறந்துட்டியா நீ? வழக்கமா பொண்ணுங்கதானே இதெல்லாம் மறக்காம இருப்பாங்க? நீ ஏன்தான் இப்படி இருக்கியோ!” என்றார் நக்கலாக கிரிதர்.

“இதுல கூட ஆம்பளை, பொம்பளையா? நான் மறந்தா என்ன, என் அம்மாவே என்னை கால் பண்ணி உரிமையா அவங்க வாழ்த்தை வாங்கிக்கிட்டாங்க. உங்க அம்மா மாதிரி அடுத்த நாள் ஃபோன் பண்ணி திட்டல. அது என்ன உங்க அம்மா அப்பாவுக்கு கல்யாண நாளா இருந்தாலும் நம்மதான் முதல்ல வாழ்த்து சொல்லணும், நமக்கு கல்யாண நாளா இருந்தாலும் நாமளே கால் பண்ணி ஆசி வாங்கணும்? இந்த லாஜிக் எனக்குப் புரியல!”

“பெரியவங்களுக்கு, குறிப்பா, ஆண் குழந்தைகளை பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மேல அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அவங்கள நாங்க எப்போதும் தாங்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எல்லா இடங்களிலும் அவங்கள முதன்மைப் படுத்தணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எப்படி நம்ம பிள்ளையாரை எல்லா பூஜைகளிலும் முதன்மையா வெச்சு வழிப்படறோமோ அந்த மாதிரி. என் அம்மா அப்பாதானே, செய்துட்டு போறேன் விடு!”

“அது இல்லைங்க… நீங்களும், உங்க அண்ணனும், உங்க பெத்தவங்களுக்காக எவ்வளவோ செய்யறீங்க! இருந்தாலும், அவங்க இன்னும் செய், எங்களுக்கு பாத பூஜை பண்ணு, இது உன் கடமை அப்டிங்கறது மாதிரி மிடுக்கா இருக்காங்க. அவங்களுக்கு பொருளாதார ரீதியா சுதந்திரம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பென்ஷன் நிறைய வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா, தன் சொந்த பசங்க, பேரன் பேத்தி மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாம எப்படி இப்படி அவங்களால இருக்க முடியுது? அப்பப்போ வந்து ஐநூறு, ஆயிரம்னு பாக்கெட் மணி கொடுத்தா போதுமா?”

“இதெல்லாம் ரொம்ப யோசிக்காத ராதா! என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு நான் செய்துட்டுதான் இருப்பேன். என் வருத்தமே, அவங்க உரிமையா என்கிட்ட எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க அப்டிங்கறதுதான். நீ இப்போ இப்படி பேசற, நாளைக்கு ரகு கிட்ட எப்படி நடந்துக்கப் போறேங்கறத நானும் பார்க்கத்தானே போறேன்.”

“நான் ரகுவை இப்போ எப்படி நடத்தறேனோ அப்படியேதான் அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நடத்துவேன். ஒரு வருத்தம்னா உடனே பேசித் தீர்த்துப்பேன். மனசுலயே வெச்சு புழுங்க மாட்டேன். அன்பையும் எப்போதும் போலதான் காட்டுவேன். ஐம்பது வயசானாலும் ரகு என் புள்ளதானே? என் புள்ள ஆறு வயசுல அவன் கைப்பட செய்து ஒரு பர்த்டே கார்டு கொடுத்தான், அதை இன்னும் நான் பத்திரமா வெச்சிருக்கேன். அஞ்சு வருஷம் கழிச்சு அவன் எனக்கு வைரத்தோடு போட்டா சந்தோஷப்படுவேன்.. இல்லன்னு சொல்லல. ஆனா, குறைந்தபட்சம் என் பிறந்த நாளை அவன் ஞாபகம் வெச்சுகிட்டு ஒரு ஃபோன் கால் பண்ணினாலும் சந்தோஷப்படுவேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் அவன் கிட்ட கிடையாதுங்க. ”

“ரொம்பப் பேசற… எல்லாத்தையும் நானும் பார்க்கத்தான் போறேன். சரி, சரி, வீட்டுக்கு வந்துட்டோம், அவங்க என்ன சொன்னாலும் நீ எதுவும் பேசாத, நான் பேசிக்கறேன். அமைதியா இரு!” என்று வழக்கம்போல அறிவுரைகள் கொடுத்துவிட்டு, ஒரு திரை விழுந்தது போல தன்னை உள்ளிழுத்துக் கொண்டார் கிரிதர்.

வீட்டிற்கு சென்றவுடன் இருவருக்காகவும் வாங்கியிருந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து ராதாவும் கிரிதரும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்தனர். “அம்மாவுக்கு அபிவாதயே சொல்லுடா! புள்ள அம்மாவுக்கு சொல்லலாம், உனக்கு தெரியும்ல?” என்று அபிவாதயே கேட்டு வாங்கிக் கொண்டார் கிரிதரின் அம்மா . “இந்த என்சூர் ரொம்ப நல்லதாமே, எனக்கு மாசா மாசம் ஒண்ணு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக் கொடுத்திடு,” என்று சற்று உரிமையாக அவரது தாயார் கேட்டவுடன் கிரிதருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘எங்க அம்மா எப்படி கேட்கறாங்க பார்த்தியா!’ என்பது போல ராதாவைப் பார்த்துச் சிரித்தார் கிரிதர். “அடேங்கப்பா, நல்ல வாசனைடா இந்த பவுடர்!’ என்று அப்பாவும் அவர் பங்கிற்கு பவுடரை எடுத்து போட்டுக்கொண்டார். அதே சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பித்தளை டபரா டம்ளர்களில் சூடாக காபி எடுத்து வந்தார் கிரிதரின் அம்மா.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்க, “ராதா, உன் தம்பி சேகர் லண்டன்லதானே இருக்கான்? எப்படி இருக்கான் அவன்?” என்று ஆரம்பித்தார் கிரிதரின் அம்மா.

“நல்லா இருக்காம்மா. PR வேற கிடைச்சிடுச்சு அவனுக்கு.”

“ம்… ஆமாம், நீ எப்போ லண்டன் போற?”

“நான் ஏன் லண்டன் போகப் போறேன்?”

“யார் கிட்ட பொய் சொல்ற? நீ கூடிய சீக்கிரம் லண்டன் போயிடுவ, கிரிதர் உன்ன கூட்டிட்டுப் போயிடுவான். கல்யாணம் ஆன அன்னிக்கு உன் பக்கம் சாஞ்சவன்தானே அவன்? இன்னும் நிமிரவே இல்லயே! நீ ஆசைப்பட்டா என்ன வேணும்னாலும் செய்வான் அவன்” என்றார் கிரிதரின் அம்மா.

ராதா அதிர்ந்து போனாள். இன்றும் அவளை புதிய மருமகள் போல அவர்கள் நடத்துவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் உன் பக்கம் சாஞ்சுட்டான் போன்ற வார்த்தைகள் மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது.

“என்னம்மா இது.. உன்கிட்ட சொல்லாம லண்டன் போவேனா என்ன? இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத பேசற?” என்று இடைமறித்தார் கிரிதர்.

“எனக்குத் தெரியும். நீங்க தாஜ் மகால் பார்கல? ஜெய்பூர் போகல? உங்க ஹனிமூனுக்கு கொடைக்கானல் போகல? என்ன உங்க கூட கூட்டிட்டு போனீங்களா என்ன? எனக்கு எல்லாம் தெரியும், நான் என்ன லூசா?” என்று திடீரென பல நாள் தேக்கத்தை வெளியே கொண்டு வந்து சீறினார் கிரிதரின் அம்மா.

“அம்மா, ஹனிமூனுக்கு உன்ன கூட்டிட்டு போக முடியுமா என்ன? சரி, அதை விடு, நீ கூட சிங்கப்பூர், மலேசியா, ஶ்ரீலங்கா , கைலாஷ் எல்லாம் போயிருக்க, என்ன கூட்டிட்டு போனியா என்ன? அண்ணா கூட நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கார், அவன ஏதாவது கேட்டியா?” என்றார் கிரிதர் சற்று பொறுமையிழந்து.

“நாங்க ரிடயர் ஆகி எங்க பணத்துல போயிட்டு வந்தோம். நீ ஒண்ணும் எங்கள அழைச்சுட்டு போகல! இப்போ உன் அண்ணனைப் பத்தி பேசாத, நான் உன் கூடதானே பேசிட்டு இருக்கேன்!” என்றார் காட்டமாக கிரிதரின் அம்மா.

“அது எப்படி பேசாம இருக்க முடியும்? நாங்க லோக்கல்ல டிரிப் போனா உங்களுக்கு கோபம் வருது. அவர் வெளிநாடு போனா கூட உங்களுக்கு கோபம் வர மாட்டேங்குது, என்ன நியாயம் இது?” என்று தன்னையும் மீறி கேட்டார் ராதா.

“கொஞ்சம் சும்மா இருக்கியா லட்சுமி! இத பத்தி பேசற நேரமில்லை இது!” என்று கிரிதரின் அப்பா சற்று குரலை உயர்த்தவும், மற்ற மூவரும் கூட்டத்தை கலைத்து நகர்ந்தனர். ராதாவிற்கு படபடப்பு அடங்கவில்லை. அந்த குடியிருப்பின் கீழ்தளத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் அலைபேசியில் ரகு அழைத்தான்.

“ரகு, பாருடா, எதிர்பார்த்த மாதிரியே உங்க பாட்டி பிரச்சனை பண்ணிட்டாங்க!” என்று நடந்ததை ரகுவிடம் கூறினார் ராதா.

அவன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, “உன்ன நான் போகாதன்னு அப்பவே சொன்னேன். நீ கேட்கல. அப்பா மட்டும் போயிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது தெரியுமா?” என்றான்.

“அப்பா வருத்தப்படுவாருன்னுதான் போனேன். அவங்க அப்படி பேசினது கூட எனக்கு கஷ்டமா இல்ல ரகு. அப்பா மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் சொல்லு? அதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல. ஒரு கொழந்தை மாதிரி, எங்க அப்பாவுக்கு, எங்க அம்மாவுக்குன்னு பார்த்து பார்த்து வாங்கினார். கிட்ட தட்ட நானூறு கிலோ மீட்டர் வண்டி ஓட்டிட்டு வந்த அந்த மனுஷன் எதிர்பார்க்கறது எல்லாமே ஒரு அங்கீகாரம்தானே ரகு? அது கூட கிடைக்காட்டி எப்படி சொல்லு?”

“அம்மா, இப்படி யோசி, நம்ம படிச்ச ஸ்கூல்ல இருக்கற டீச்சர்ஸ்க்கு எல்லாம் நம்ம மேல ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு இருபது வருஷம் கழிச்சு, அந்த ஸ்கூலுக்கு அவங்க எதிர்பார்க்காத ஒரு துறைல சாதிச்சுட்டு போனா அதை அவங்களால ஏத்துக்க முடியுமா சொல்லு? அப்படியே அவங்க ஏத்துக்கிட்டாலும், அந்த சாதனையை மனசார அங்கீகரிக்க முடியுமா? நிச்சயமா முடியாது.

அது மாதிரிதான் உங்க உறவும். கல்யாணம் ஆன புதுசுல அவங்க உன்னை எடை போட்டு வெச்சிருப்பாங்க. இருபது வருஷத்துல நீ என்ன தான் மாறினாலும் அவங்ககிட்ட இருந்து அங்கீகாரம் கிடைக்கிறது சிரமம். அதை முதல்ல நீ புரிஞ்சுக்க. அப்புறம், அப்பாவ நினைச்சு ரொம்ப கவலைப்படாத, ஹீ வில் பீ ஆல்ரைட். நீயும் நானும் போடாத சண்டையா? அதனால நான் என்ன மனசுடஞ்சா போயிட்டேன்? அப்பா இப்போ பாட்டி கையால தோசை சாப்டுட்டு இருப்பார். நீயும் பக்கத்துல உள்ள கிருஷ்ணா பவன்ல சாப்டுட்டு, கோபமா ராத்திரி படுத்துட்டு, சந்தோஷமா கார்த்தால எழுந்துக்கோ,” என்று தொண்டுக் கிழவன் போல அசாத்தியமான அறிவுரை கூறினான் ரகு.

அப்போது அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்க, “கடவுளே! அவர் அம்மா அப்பா கிட்டேயிருந்து கிரிதர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அவருக்கு சீக்கிரம் கிடைக்கட்டும்!” என்று ஒரு பிராத்தனையை வைத்த வண்ணம் கிருஷ்ணா பவனை நோக்கி முகமலர்ச்ச்யோடு நடந்தார் ராதா.

[email protected]

The post அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

நிகழ்வுகளை மாற்றி அமைப்பவன் : குமாரநந்தன்

May 04, 2025 அவர் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார். “நேத்து அப்படி எதுவும் இங்க நடந்த மாதிரி தெரியலையே” என்றார். வேறு யாரிடமாவது கேட்கலாமா என்று பார்த்தான். ஆனால், இதை ஏன் நான் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டும்? அப்படி எதையும் துருவித் துருவி ஆராய்ந்தால் நடந்ததற்கு மட்டுமல்ல நடக்காத விஷயங்களும் கூட நடந்திருக்கக் கூடும் என்பதைப் போல ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம்

          பொழுது விடிந்ததும் வாசல் தெளித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் நினைவில் மார்கழி மாதக் குளிர் தாண்டி மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. 


என்ன செய்வது….  என்ன செய்வது….  என ஓயாது மனம் புலம்பிக் கொண்டிருந்தது.
         

முகக் குறிப்பறிந்து…. என்னாச்சசு மல்லிகா?  எனக் கேட்ட கணவனின் கேள்விக்குப் பதில் தராது தண்ணீர் தெளிப்பதை  இன்னும் வேகப்படுத்தினாள். 
         

என்னாச்சாம் …  என்னாச்சு… இவர் சரியாக இருந்தால் இந்தக் கவலை இருக்குமா?
         

தன் ஆற்றாமையை வெளிப்படுத்த  தண்ணீர் தீர்ந்த ஈயக்குண்டாவைத்  தூர வீசினாள் மல்லிகா.
         

வீசிய வேகத்தில் குளிருக்கு ஒடுங்கிப் படுத்திருந்த நாய் மீது பட்டவுடன் அது வள்ளென்று குரைத்து வலியில் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.
         

சோறாக்க அடுப்புப் பற்ற வைத்த கரும் புகையுடன் இவள் கண்ணீரும் கலந்து முகத்தை மேலும் கருப்பாக்கியது.  
         

வழக்கம் போல்  என்ன செய்வது..?  என்ன செய்வது..?  என வாலருந்த பல்லியாய் மனது துடிதுடித்தது.
         

மகளுக்குத் திருமணமாகி இதோ முதல் பண்டிகையாய் பொங்கல் வருகிறது.
         

என்ன செய்வது?
         

ஆடு மாடு விற்றும் அடுப்பில் இருந்த அண்டாவையும் அடகு வைத்துக் கல்யாணம் செய்தாயிற்று. இனி சீருக்கு என்ன செய்வது? மகளுக்கு இல்லையென்றாலும் மருமகனுக்காவது ஏதாவது செய்ய வேண்டுமே!
         

பொன் வைக்கும் இடத்தில் பூ வை என்பார்கள்.  இன்று பூ வாங்குவதற்குக் கூட காசு இல்லாதவளாய் ஆனேனே!
         

யோசித்து யோசித்து எதுவும் செய்ய வழியின்றியும் பொறுப்பற்ற கணவனை நினைத்தும் அடுப்பங்கரையில் வெந்து கிடந்தாள் மல்லிகா.
         

பணம் நம்மளோட பிரச்சனை. அதுக்காகப் பொங்கலுக்கு மகளக் கூப்பிடாம இருக்க முடியுமா? என்றது மனது.
         

பெரியாசுபத்திரியில் மருத்துவம் பார்க்கும் தனக்குத் தெரிந்த டாக்டர் வரச்சொல்லி அழைப்பு வந்ததால் தன்னினைவை அடுப்பங்கரையிலிலேயே இறக்கிவைத்து விட்டு ஓடினாள்.
         

இதோ பொங்கலுக்கு அழைக்க மகள் வீட்டுக்குப் புறப்பட்டாள் மல்லிகா


பாரதி….. மகளைக் கூப்பிட்டவாறே கதவு திறந்து உள்ளே சென்றாள்.


எதிர்பாராத  வரவால் மகிழ்ச்சியில் தாயை அனைத்துக்கொண்டு அப்பா வரலை…. எனக் கேட்டதுக்குப் பதில் தராது
நல்லாயிருக்கியா? மாப்பிள்ளை எங்கே? எனக் கேட்டவாறே  கண்களால் தேடிக்கொண்டிருந்தாள்..


இல்லம்மா? இன்னக்கி  நேரத்திலேயே ஆபிஸ் கிளம்பிட்டாங்க. நீ வருவேண்ணு சொல்லியிருந்தா இருந்திருப்பாங்கம்மா…
மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கவலை முகத்தோடு இருப்பதைக் கவனித்த பாரதி.,

ஏம்மா எனக் கேட்க..
ஒன்னுமில்ல என வறண்ட பதில் தரும்போதே கண்கள் நீர்க்குளமானதைப் பார்த்ததும் பதறிப் போனாள் பாரதி.

ஏம்மா? என்னாச்சு? என அடுக்கிய கேள்விக்கு
பண்டிகைக்கு நேரமா வந்திடுங்க!  மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிரு .
முன்னாடி நாளே வந்திருங்க எனச் சொல்லிக் கொண்டே கையில் சுருட்டி வைத்திருந்த பணத்தை நீட்ட 

பணம் எப்படிம்மா கிடைச்சுது? யார் தந்தாங்க? எவ்வளவு வட்டிக்கு வாங்குன? எனக் கேள்வியால் தொடர…..


பதறாத பாரதி அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. பிரசவத்துல நிறைய ரத்தம் போகும் போது அவங்களுக்கு ரத்ததானம் செய்வேனில்லையா? இப்போ ஐம்பதாவது முறையா கொடுத்ததப் பாராட்டி இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க. வச்சுக்கோ என கைகளில் தினித்தாள் மல்லிகா.
அம்மாவின் சேவையையும் பொங்கலுக்கான பணத்தையும் கண்டு தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகளின் கண்ணீரைக் கண்டதும் தன் கண்களிலிருந்து தானாகவே வழிந்த கண்ணீரில் திருப்தியும் அன்பும்  வழிந்தது.


இந்த இருவருக்காக பொங்கலின் விடியலும் காத்துக் கொண்டிருந்தது பெருமையாக!


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப் பேராசிரியர்,
 

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர் கல்லூரி),
 

திண்டல், ஈரோடு.

 

The post புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான்

    கொஞ்சும் குளிர் காற்று தரையில் படர்ந்தது. பறவைகள் விடியல் மகிழ்வில் ஒலி எழுப்பி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.


இரவுப்பொழுதில் ஆட்டோ ஓட்டிய களைப்பில் அல்லாபகஷ் மாமு கண் விழிக்க முடியாமல் காலை பஜர் தொழுகைக்கு எழுந்தார். மாமு எழுந்த அரவம் கேட்டு ஜெய்த்தூன் மாமியும் கண் விழித்தாள்.
 

சுபஹுத் தொழுகையை நிறைவு செய்து மாமு அஸ்ஸலாமு அலைக்கும்….. என்று கூறி வீட்டில் நுழைந்தார். ஏல நல்லா சூடா பால் காய்ச்சி எடுத்துட்டு வா! என்று மாமியிடம் சொன்னதும் மாமி இதோ கொண்டுவருகிறேன் என்று மாமு வரும் முன்பே  பால் காய்ச்ச தொடங்கியவள் ஆவி பறக்க
பால் செம்பினைக் கொடுத்தாள்.
 

ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்தவர் மாமு. சிறுவயதில் மதுரையில் கோரிப்பாளையத்தில்
குடியிருப்பைக் கொண்டவர். ஆதரவற்ற நிலையில் தன் உடன் பிறப்புகளான சகோதரிகளை நம்பி வாழ்க்கை நிலையை  திருச்சிக்கு நகர்த்தினார்.


மாமுக்கு சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டம்.  அல்லல் பட்ட பாடு.ரிக்ஷா ஒட்டுவதிலிருந்து தியேட்டர்ல டீ காப்பி விக்கிறது வரைக்கும் எல்லா வேலையும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நெறஞ்சமனசுசோட செய்தவர் மாமு. மாமுக்கு கோழி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். ஆடு, கோழி, வாத்து என்று ரகரகமாக  வளர்த்தார். மாமு வீட்டில் மீன் குழம்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் விரால் மீன், தேளி மீன் போன்றவற்றை வாங்கி வந்து ஓரிரு நாட்கள்  வளர்த்து அதை குழம்பிற்கு பயன்படுத்துவார். அப்படிப்பட்ட வகையில் இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர். நாச்சுவை கருதி உண்பதில் கெட்டிக்காரர்.
 

வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து கஷ்டத்தை பார்த்து வாழ்ந்த மாமு திருச்சிக்குத் திரும்பினார்.
மாமுவின் அக்கா அவள் தோழி  வீட்டிற்குச் செல்வது வழக்கம். அப்பொழுது அவர்  முதன் முதலாக  ஜெய்தூன் மாமியை ஒரு வேங்கை மரத்தடியில் கண்டதும் இருவருக்கும் காதல் வயப்பட்டது. மாமுவிற்கு வயது 16. மாமிக்கு வயது 14. இப்படிப்பட்ட பருவ காலத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.


காதலில் பல்வேறு தடைகள் வந்தபோதும் மாமு  ஒருபோதும் கைவிடுவதாக இல்லை அப்படிப்பட்ட பலமானதாக இருந்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல். பல சிக்கல்களுக்கு அப்பால் 50 ரூபாய் சீதனமும் ஒரு அண்டா சீரும் கொடுத்து மாமியை திருமணம் செய்து கொடுத்தார் மாமியின் தந்தை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் மாமி. சோளம், கடலை,கம்பு,நெல், வாழை என்று பருவங்களுக்கு ஏற்ப விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவள். மாமியின் தந்தை ஏதோ ஒரு சூழலில் தன் நிலங்களை இழந்து ஏழ்மை நிலைக்கு ஆளானார். உடனே, துவரங்குறிச்சியில் இருந்தவர்கள் திருச்சியை நோக்கி குடிபெயர்ந்தனர்.


இருவரும் வேறு வேறு ஊரைச் சார்ந்துதான் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் கிருபை திருச்சியில் வைத்து இருமனதையும் ஒருமனமாக்கின்னான்.


காலப் பெருவெளி ஓட்டத்தில் மாமிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.  தன்னுடைய அக்கா பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் நினைத்து பாதுகாத்து அரவணைத்து ஒற்றுமையுடன் வளர்த்து வந்தாள் மாமி.


ஒவ்வொரு மகன்களும் ஒவ்வொரு நிலைக்குச் சென்று வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை கடந்து வாழ்ந்து வந்தனர்.
 மாமு மிகவும் துடிப்பானவர். குடிப்பழக்கம் இல்லாத உத்தமர். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். திரையில் வெளியிடப்படும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு திரைப்படத்தை 10 முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பதைப் போல் அனுபவம் கொள்பவர் மாமு.


எத்தனையோ தொழில்கள் செய்து லாப நட்டங்களை அடைந்து பின் ஆட்டோ வாங்கி ஓட்டினார். தினமும் மாமிக்கும் மாமுக்கும் ஒரே அன்பு சண்டைதான் வீட்டில் நடக்கும்.
 ஒருநாள் மாமுக்கு காலை 11 மணியளவில் ஆட்டோ சவாரி வந்தது அலைபேசியில். அவரும் வெளியே கிளம்பத் தயாரானார்.


ஏ மாமு! நில்லுயா!


என்னடி!


ஏய் பால் வாங்க காசு குடுயா!


ஒரு நாளைக்கு எத்தனை தடவைடி கேட்ப?
 

உனக்குத்தான் பால் வாங்குறோம் நாங்களா குடிச்சுக் கொண்டே இருக்குறோம்!


காலையில மதியம் சாயங்காலம் நைட் என 4 நேரம் நீதான் டீ கேக்குற..
 இதுல தயிர் வேற கேட்கிற!


இந்தா ஐம்பது ரூபாய் புடி இன்னு 50 ரூபாய் கொடு!


இல்ல முடியாது 50 ரூபாய் வைத்து எல்லாத்தையும் வாங்கு!


என்று சொல்லிவிட்டு மாமு சவாரிக்கு கிளம்பினார். அன்புச் சண்டைக்குப் பஞ்சமே இல்லை வீட்டில். வீட்டிற்கு வரும் பேரப்பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு தான் இவர்களின் சண்டையைப் பார்த்து. மாமு விற்கு மொத்தம் பத்துப் பேர பிள்ளைகள். அதில் நான்காவது பெயரன் சென்னையில் புகழ் மிகு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். மாமிக்கும் மாமுக்கும் அந்தப்பெயரன் என்றாலே தனிப் பிரியம் தான். சொல்லும் வேலைகளை தட்டாமல் முகம் சுளிக்காமல் செய்வதால் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்.
காலங்கள் ஓட ஓட மாமாவிற்கு எழுபத்தி ஆறு வயதை நெருங்கிக் கொண்டே மூப்பருவம் அடைந்தார். இருப்பினும் மனதில் மட்டும் ஊக்கத்திற்கும் மன உறுதிக்கும் அளவே இல்லை. 76 வயதிலும் ஆட்டோ ஓட்டி தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டார். காப்பாற்றினார். தன் பிள்ளைகளிடம் சென்று காசு கேட்க அவருக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் மாமு. ஒருநாள் காலையில் மாமு தயிர் வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தார். செப்பலை தத்தித்தத்திக் கொண்டு நடந்தார். அவ்வழியே காய்கறி வாங்க வந்த அவரின் நான்காவது பெயரன்  தன் பாட்டியாகிய ஜெய்த்தூன் மாமியிடம் 300 ரூபாய் கொடுத்து நல்ல செருப்பு மாமுவை வாங்கி   போடச்சொல்லு என்று சொல்லி விட்டு அவனும் சென்னைக்குப் புறப்பட்டான்.


15 நாட்கள் கடந்தன. ஒருநாள் திடீரென  மாமுவின் கண்கள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது. மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தில் மாமுவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. நாட்டு மருந்து குடிக்கச் சென்றார். குடித்தும் பயனில்லை. எண்ணைய் தேய்த்துக் குளித்தும் பயனில்லை.  அடுத்த நாள் காலையில் திடீரென மயக்க நிலையை அடைந்து தலையை நிலத்தில் சாய்த்தார்.


“மாமு…..மாமு…. என்னாச்சு  மாமு….. மாமு… என்று மாமி அலறினாள்.


கையில் காசு இல்லாத கடுமையான சூழலில் கூட மாமுவின்  மகன்கள் தனியார் மருத்துவமனையில் வைத்து
மருத்துவம் பார்த்தனர்.


மருத்துவர்களோ இருபத்தி நான்கு மணி நேரம் கழிந்தால் தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கைவிரித்து விட்டனர்.


ஆறு மணி நேரம் சென்ற பிறகு மாமாவிற்கு விழிகள் திறந்தது. இயல்புநிலை அடைந்து வார்த்தைகள் குழறியது. இருப்பினும் ஓரிரு வார்த்தைகளை தெளிவாகவே பேசினார்.


காமாலையின் முதிர்ச்சி என்பது மூளையை அடைந்தது என்பதால் அன்றிரவே மாமு இயற்கை எய்தினார். ஊர் கூடி வீடு அழுதது. எங்கு நோக்கினும் அழுகை சத்தம் தான்.


ராஜநடை கொண்டு இறுதி ஊர்வலம் திருச்சி துருப்பு  பள்ளியில் நல்லடக்கம் செய்தனர்.


மாமு மாமியை காதல் திருமணம் செய்தவர். இவர்களின் அன்பு என்பது ஒரு பரஸ்பரம் கலந்தது. மாமு இறந்த அன்று முதலாக புலம்புவதை நிறுத்தவே இல்லை மாமி.


மாமுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மகன்கள் சிறப்பாக செய்தனர். காலவோட்டத்தில் மாமிக்கு மாமு போனதை நினைத்து உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த நேரமும் அவரின் சிந்தனைதான்.  அவரைப் பற்றியே எந்நேரமும் பேச்சு. உண்ணும் சோறு உடலில் ஒட்டவில்லை. மாமியின் பிள்ளைகள் மாமியை கவனிக்காத கவனிப்பே இல்லை. இருப்பினும் அவள் மனமும் உடைந்து. அவர் இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை.


மாமு இறந்த நான்கே மாதங்களில் உண்ணாது, உறங்காது அவளும் இயற்கை  மரணம் அடைந்தாள்.மாமுவின் குடும்பத்தினர் மனதால் அடையாத துக்கமே இல்லை. ஒரு இழப்பு இருந்த இடத்தில் இரு இழப்பானது.  மாமி  இறந்தப் பின்பு அவளின் கண்கள் மட்டும் மூடாமல் இருந்தது. இமைகள் திறந்து கொண்டே இருந்தது. யாரைக் காணவேண்டும் ஆசை இருந்தது என்று யாராலுமே அறிய முடியவில்லை. மாமிக்கு எப்போதுமே குடும்பத்தில் பிடிவாதம் அதிகம். தன் எந்த ஒரு குழந்தையும் விட்டுத் தரமாட்டாள். தன்னுடைய வீட்டில் மீன் குழம்பு,கறி குழம்பு என்று ஏதேனும் ஒன்று செய்தாலும் கூட நான்கு பிள்ளைகளுக்கும் பங்கு போட்டு அனுப்பிவிடுவாள். இப்படிப்பட்ட பிள்ளை அன்பு கொண்டவள் இந்த மாமி.


மருமகள்மார்களை மகள் போல் அனுசரிக்கும் அன்பு கொண்டவள். இதைப் பார்த்து பொறாமைப்படும் பெண்களோ அத்தெருவில் ஏராளம். குடும்ப உறவுகளை நேசிக்கும் தன்மை கொண்ட மாமியும் மாமாவும் இனி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்சில் கைகோர்ப்பார்கள்.


காலகட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மறுமை நாள் நெருங்கி கொண்டே இருக்கின்றது. அர்ஷின் நிழலைத் தேடி……

சிறுகதையின் ஆசிரியர்

திரு.  மு. முகமது ருக்மான்,


உதவிப்பேராசிரியர்,


முதுகலைத்தமிழ் & ஆய்வுத்துறை,


புதுக்கல்லூரி (தன்னாட்சி ),
சென்னை – 14.

 

The post லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா

       திகாலை 4.30 மணிக்கு அலாரம் அடிக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தவர் போல் எழுந்து அலாரத்தை அணைத்துவிட்டு, நடுங்கும் குளிரிலும் எழுந்து அரிசியை ஊற வைத்துவிட்டு பருப்பை வேக போட்டு, காப்பியுடன் மனைவியை எழுப்புகிறார் வீட்டுத் தலைவர் சரவணன்.
        

            சமையலுக்கு உதவி செய்துவிட்டு,  மனைவிக்கு குளிக்க சுடுநீர் போட்டு கொடுத்து, மதிய உணவை கட்டிக் கொடுத்து 6.10 மணி பேருந்துக்கு வண்டியில் ஏற்றி, பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பி சற்றே அமர்ந்தார். இளைய மகள் இனியாள் எழுந்துவிட்டால் தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு காப்பி தயாராக இருந்தது.
       

            மீதமிருக்கும் பாத்திரத்தை கழுவி விட்டு சற்றே அமர்கையில் இனியாளின் குரல் ‘போலாமா அப்பா? ‘  இனியாளுக்கும் நேரத்துடன் கிளம்புவதற்கும் ஏழாம் பொருத்தம் பேருந்துடன் ஓட்டப்பந்தயம் வைத்து தான் சென்று வருவாள். திரும்பி வந்து சரவணனுக்கும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட தலை சுற்று 10 மணிக்கு மேல் வெயில் வந்துவிடும் தலை சுற்றலுக்கு மருந்தாய் ஒரு காபி குடித்துவிட்டு மனைவி மகளுடைய துணிகளை எடுத்துக் கொண்டு மாடி சென்று துவைக்கிறார்.
          

       அந்நேரத்தில், பக்கத்து வீட்டு சுந்தரம் ‘என்ன சரவணன் வேலையா ?’ சரவணனோ ‘ஆமாம்பா  வெயிலுக்கு முன்னாடி துவைக்கணும்ல  என்று சொல்வதைக் கேட்டு சுந்தரம் , ‘உண்மையில் நல்ல மனுஷன்யா நீ’ சிரித்தபடியே சென்றார். ‘சரியான இளிச்சவாயனா இருக்கான் சரவணன் எனக்கு எல்லா வேலையும் பொட்டச்சி மாதிரி பண்ணிட்டு இருக்கான்’  தன் மனைவியிடம் சொல்ல,  சுந்தரத்தின் மனைவியோ ‘ஆணாதிக்கவாதி’ என்னும் சொல் அறியாதவளாய் ‘ஆமாங்க’ என்று சொல்லி நகர்ந்தாள்.


            சில நேரம் கழித்து நியாயவிலை கடைக்கு சென்றார் சரவணன் ஆளே இல்லாத ஆண் வரிசையில் நின்று பொருள் வாங்கிக் கொண்டு திரும்புகையில், மங்களத்தின் குரல். ‘நல்ல ஆம்பளைக்கு அழகு வேலைக்கு போறதில்லையா?  பொட்டச்சி கணக்கா வரிசையில் நின்னு பொருள் வாங்கிட்டு நிக்கிறான் பாரு ‘  என்று தங்களுக்கென தள்ளப்பட்ட வேலையை செய்தபடியே சொன்னாள்.
       

     சரவணனுக்கு இது எதைப் பற்றிய கவலையும் இல்லை. இன்றா, நேற்றா ? எட்டு வருடங்களாக சமைக்கும்போதும், வாசல் கூட்டும் போதும்,  கடைக்கு செல்லும் போதும், துணி காய வைக்கும் போதும் என எத்தனையோ குரல்கள் அவர் காதுகளுக்கு பரீட்சையம் திருப்பிபப் பேச துளியும் விருப்பமில்லை.
 

    திடீரென்று ஒரு நாள்,  ‘சரவணன் நல்லவன் பா. அவன் தனியான நின்னு இந்த குடும்பத்தையே காப்பாற்றினான்’ என்ற  சுந்தரத்தின் குரல்.
 ‘ பின்ன… மூத்ததை கட்டிக் கொடுத்து , இரண்டாவத படிக்க வைத்து வேலைக்கு சேர்த்து,  பையனையும் படிக்க வைத்திருக்கிறார் என்றால் சும்மாவா..? ‘ என்று மற்றொரு ஆண்.
 ‘இந்த பிள்ளைகளுக்கு மட்டும் ரெண்டு அம்மா, அப்படித்தானே பாத்துக்கிட்டாரு சரவணன் ? ‘ என்று மங்களம்.
 ‘சரவணன் போல ஒரு தகப்பன் இந்த உலகத்துல இருக்கவே முடியாது. இந்த குழந்தைக எல்லாம் புண்ணியம் பண்ண குழந்தைங்க ‘மனதார கூறினாள் ஒரே ஒரு பெண்.
 

     இப்போதும் சரவணனுக்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை அவர்களை எல்லாம் ஏதாவது கேட்டு விட வேண்டும் போல் இருந்தது .
     

       அதற்குள் ஒரு குரல்,  நேரமாச்சு சொல்லிட்டீங்கனா பொனத்தை எடுத்துடலாம்.
  ஆண் தேவதை செல்லும் நேரம் வந்துவிட்டது.


சிறுகதையின் ஆசிரியர்

ச.அபர்ணா,


உதவிப் பேராசிரியை,


KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி,


அரசூர்.

 

The post ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

தலை துண்டிக்கப்பட்ட கோழி

31 May 2025 at 23:25

      – ஹொரேஷியோ குய்ரோகா ( உருகுவே)

மாஸினி பெராஸ் குடும்பத்தின் மூளை வளர்ச்சி குன்றிய நான்கு பையன்களும் உள்முற்றத்தில் அடைந்து கிடந்த பெஞ்சிலேயே நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அவர்களின் நாக்குகள் எப்போதும் உதடுகளுக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும். கண்கள் கலங்கியும் தலையைத் திருப்பும்போது வாய்கள் பிளந்து கொண்டும் இருக்கும்.

    மண்தரை,  மேற்புறம் செங்கற் சுவரால் மூடப்பட்டு இருந்தது அந்த உள் முற்றம். சுவருக்கு இணையாக  ஐந்து அடி தள்ளி இருந்த அந்தப் பெஞ்சில்தான் நான்கு பேரும் அமர்ந்து சலனம் இல்லாமல் சுவரையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுவருக்குப் பின்னால் சூரியன் மறைந்த பிறகு அவர்களுக்கு உற்சாகமாகிவிடும். மங்கிய விளக்கு ஒன்றுதான் அவர்களின் கவனத்தை முதலில் ஈர்க்கக் கூடியது. அப்போது அவர்களின் கண்களில் மெலிதாக ஓர் ஒளி தோன்றும்‌. இறுதியில் எல்லாரும் சேர்ந்து பெருங்குரலுடன் உரத்துச் சிரிப்பார்கள். நால்வருக்கும் உவகை தொற்றிக் கொள்ளும். உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் அப்போது ஓர் உணவுப் பண்டமாக தோன்றும் அவர்களுக்கு.

    சில நேரங்களில் பெஞ்சில் வரிசையாக அமர்ந்து கொண்டு மணிக் கணக்கில் தள்ளு வண்டியின் ஓசையை நகலாக்கி முணுமுணுத்துக் கொண்டு இருப்பார்கள். பிறகு சத்தத்தை உயர்த்திக்கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டும் பூனைக் குரலெடுத்தும் முற்றத்தைச் சுற்றி சுற்றிச் சுற்றி ஓடுவார்கள். ஆயினும் முட்டாள்களுக்கே உரிய மந்தத்தன்மை மேலிட அந்த நாளின் மீதத்தைப் பெஞ்சில் அமர்ந்தே கழிப்பார்கள். கால்கள் அசையாமல் இருக்கும்.கோழை வழிந்து கால் சட்டைகளையும் நனைக்கும்.

     மூத்தவனின் வயது 12. இளையவனுக்கு 8.  அழுக்கும் அருவருப்பும் கொண்ட அவர்களின் தோற்றமே அவர்களது தாயின் அலட்சியத்திற்குச் சான்று தருவதாக இருக்கும்.

     ஆனாலும் ஒரு காலத்தில் பெற்றோருக்கு அவர்கள் மகிழ்வைத் தந்தவர்கள் தான். மாஸினி – பெர்த்தா தம்பதிக்கு ஆண் பெண் மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான தன்னலம் மேலிடும் எதிர்பார்ப்பு ஒன்றும் இருந்தது : மகன்.

நோக்கம் எதுவும் இல்லாத, இழிந்த தன்னலத்தில் இருந்து விடுபட்ட பாசத்தை விட அன்பு கொண்ட இருவருக்குப் பெரும் மகிழ்ச்சியை எது தந்துவிடும். காதலை விடத் தீதானது எது.? அதிலும் புதுப்பிக்க வாய்ப்பு இல்லாத காதலை விட..?

     பதினான்கு மாதங்களில் மகன் வந்தடைந்தான். மகிழ்ச்சியின் எல்லையை அடைந்ததாக அவர்கள் நினைத்தார்கள். ஒன்றரை ஆண்டுகளில் அழகும் வளமும் பெற்று விளங்கியது குழந்தை. ஆனால் இருபதாவது மாதத்தின் இரவொன்றில் பயங்கரமான நடுக்கத்துடன் அதன் உடல் சீர்குலைந்தது. காலையில் தனது பெற்றோரைக் கூட அதனால் அடையாளம் காண இயலவில்லை. டாக்டர் தனது மருத்துவ அறிவைக் கொண்டு, பெற்றோரின் உடல் வலிமையில் உள்ள சமநிலைக் குலைவு காரணமாய் இருக்கலாம் எனக் கண்டு கொண்டார்.

     சில நாட்களில், சூம்பிக் கிடந்த பையனின் கைகள் இயல்புக்குத் திரும்பின. ஆனால் அந்தக் குழந்தையின் அறிவுத்திறன், ஆன்மநலம், அகத் தூண்டுதல் எல்லாம் நிரந்தரமாகக் காணாமல் போனது. அவன் எப்போதும் தனது தாயின் மடியில் கிடந்தான். பிதற்றிக் கொண்டிருந்தான். நொண்டி நடந்தான். குணமாகும் எல்லா வாய்ப்புகளும் வீணாயின.

     ‘என் மகனே.. என் அன்புச் செல்வமே..’ என்று தனது முதல் குழந்தையின் பரிதாப நிலை குறித்துத் தேம்பிக் கொண்டிருந்தாள் அவனது தாய்.

     வெளியே தனித்திருந்த தகப்பனிடம் மருத்துவர் சொன்னார் : ‘உங்களுக்கு மட்டுமே நான் சொல்ல முடியும். இதைக் குணப்படுத்துவது சிரமம். குழந்தையின் அறிவு மட்டும் உதவினால் கொஞ்சம் முயன்று பார்க்கலாம். அவ்வளவுதான்.’

     ‘சரி. சரி.. ‘ மாஸினி இணங்கினான். ‘எனக்கு ஒன்றைத் தெளிவு படுத்துங்கள்.  இது பரம்பரை வியாதியா.. அல்லது..?’

     ‘இது பற்றி உங்கள் குழந்தையைப் பார்த்த போது நான் நினைத்ததை உங்களிடம் கூறி விட்டேன். தந்தை வழியில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ‌தாயைப் பொறுத்தவரை அவளது நுரையீரலில் இருந்து ஒலி சீராக வெளிப்படுவதில்லை. வேறொன்றுமில்லை. ஆனால் அவளின் சுவாசம் ஏறுக்கு மாறாக இருக்கிறது. அதையும் சரியாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.’

     மன உறுத்தல் தந்த தொந்தரவால் மாஸினி தன் மகன் மீதான பாசத்தைப் பெருக்கிக் கொண்டான். அந்த மூடக்குழந்தை தனது மூத்தோரின் அறிவுத் திறனைத் திருப்பித் தந்து விடுகிறது. அதே நேரம் மனைவி பெர்த்தாவின் இளம் தாய்மையின் தோல்வி குறித்து ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில் அவன் இருந்தான்.

     இயல்புக்கு ஏற்றவாறே, தமது அடுத்த குழந்தை மீதான எல்லா நம்பிக்கைகளையும் திரட்டி வைத்துக் கொண்டனர் அந்தத் தம்பதியினர். இன்னொரு மகன் பிறந்தான். அவனது மழலைச் சிரிப்பும் ஆரோக்கியமும் அவர்களது துயரைத் துடைத்து மகிழ்ச்சியை மீளக் கொண்டு வந்தது.  ஆனால் 18 மாதங்களில் முதல் குழந்தையின் நிலையே திரும்பியது. தொடர்ந்து விடிந்த காலையில் அதுவும் முட்டாளாகவே விழித்தது.

     பெற்றோர் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களின் இரத்தம், அன்பு எல்லாம் பழிக்கு ஆளானதே. குறிப்பாக அவர்களின் காதல்..! அவனுக்கு வயது இருபத்தெட்டு. அவளுக்கு இருபத்திரண்டு. இளமையும் பேரார்வமும் இயல்பான வாழ்வுக்குரிய ஓர் உயிர் அணுவை உற்பத்தி செய்ய முடியவில்லையே. அழகோ அறிவோ கொண்டிருந்தாக வேண்டுமென்று தமது முதல் மகனையே நினைக்கவில்லையே. இப்போதோ அதைப்போலவே இன்னொன்று.

இரண்டாவது பேரிழப்புக்குப் பின்னர் அவர்களின் காதல் இன்னும் ஒரு பைத்தியக்காரத்தனத்தை மீளக்கொணர்ந்தது. தம் இளமை மீதான புனிதமான நம்பிக்கை அது. அதன் பயனாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.‌ ஆனால் முந்தைய பிள்ளைகளுக்கு நேர்ந்த கதிதான் அவற்றிற்கும்.

     தொடர்ந்த தோல்விகள் தந்த கசப்பினால் பெற்றோரின் இரக்க சிந்தை மீண்டது. நான்கு பிள்ளைகளின் காவல் விலங்குக்குரிய தன்மையைத் தம் உள்ளுணர்வால் எதிர்கொண்டனர். பையன்களால் உணவை விழுங்கத் தெரியாது. நகரவோ உட்காரவோ கூட முடியாது. இறுதியில் எழுந்து நடக்கத் தொடங்கினர். தம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் இருப்பதைத் தெரியாமல் அவற்றைத் தாக்கினர். குளிக்க வைக்கும் போது முகத்தைக் கழுவி விடும் வரை கோழையை உமிழ்ந்து கொண்டும், குரல் எழுப்பிக் கொண்டும் இருந்தனர். உணவோ, கண்ணைப் பறிக்கும் நிறமோ, இடிச் சத்தமோ மட்டுமே அவர்களை கிளர்வுறச் செய்தன. பிறகு அவர்கள் உரத்துச் சிரிப்பார்கள். ஏதோ கோளாறில் கொந்தளிப்பார்கள். நாக்கைத் துருத்திக் கொண்டு உமிழ்நீரைக் கடலாய்க் கொட்டுவார்கள். அதே நேரம் சிலவற்றைப் போலச் செய்யும் திறமையையும் அவர்கள் ஈட்டிக் கொண்டனர். அதைத்தவிர வேறொன்றுமில்லை.

     மரபு வழியிலான அச்சுறுத்தல் எல்லாம் அந்த இரட்டையரோடு முடிந்துவிட்டது என எண்ணினர். ஆனால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தணிக்க அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே இன்னொரு குழந்தையைப் பெற விருப்பம் வந்து விட்டது அவர்களுக்கு.

     நம்பிக்கைகள் திருப்தி தரவில்லை. அதன் காரணமாக நிராசையும் எரிச்சலும் தோன்றி கணவன் மனைவிக்குள் தீராக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்குள் தமது குழந்தைகளின் அப்போதைய நிலைமைக்கான பொறுப்பை யார் பகிர்ந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்து விட்டது. தாம் பெற்றுவிட்ட நான்கு விலங்குகளுக்கும் செய்ய வேண்டிய பரிகாரம் ஏதுமில்லை எனத் தெரிந்தவுடன் ஒருவருக்கொருவர் பழி சுமத்தத் தொடங்கிவிட்டனர்.

     அந்த மாற்றம் இப்படித் தொடங்கியது : ‘உனது பிள்ளைகள்..’ அதனாலேயே தம்மில் ஒருவரை விழ வைத்தும் பழிதூற்றியும் குற்றம் சுமத்திக் கொண்டனர்.

     ‘எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்..’

  அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த மாஸினி கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டு பெர்த்தாவிடம் சொன்னான் ‘நீ குழந்தைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..’

     அவன் சொன்னதைக் கேட்காமல், எதையோ படித்துக் கொண்டிருந்தாள் அவள்.

     ‘இதுதான் முதல் தடவை..’  சிறு மௌனத்திற்குப் பிறகு சொன்னாள் ‘நீ உன் பிள்ளைகள் நிலை பற்றிய அக்கறையைச் சொல்கிறாய்.’

     தலையை அவன் பக்கம் திருப்பி, வலிந்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் மாஸினி சொன்னான் : ‘நம்முடைய பிள்ளைகள் என்று நினைக்கிறேன்..’

     ‘சரிதான். அவை நமது பிள்ளைகள் தான். இதைச் சொல்லத்தான் நீ விரும்புகிறாயா?.’ கண்களை உயர்த்திக் கொண்டே கேட்டாள்  அவள்.

     மாஸினி தெளிவாகச் சொன்னான் : ‘நிச்சயமாக நான் தான் இதற்குக் காரணம் என்று நீ சொல்ல மாட்டாய் இல்லையா.?’

     வெளுத்த புன்னகையுடன் ‘இல்லை.. ஆனால் நானும் இல்லை என்று தான் நினைக்கிறேன். அது தான் எனக்குத் தேவை’ என்று முணுமுணுத்தாள் பெர்த்தா.

     ‘என்னது. என்ன தேவை உனக்கு..?’

      ‘குற்றத்தை என் மீது மட்டும் சுமத்த முடியாது என்பதை நினைத்துப் பாருங்கள். அதைத்தான் சொன்னேன்.’

     ஒரு கணம் அவளைப்  பார்த்தான். காயப்படுத்தும் விருப்பம் கூட தோன்றியது.

     ‘சரி. விட்டுவிடலாம்..’ இறுதியாகச் சொல்லிவிட்டுக் கைகளைத் துடைத்துக் கொண்டான்.

    ‘உன் விருப்பப்படியே. ஆனால் நீ சொல்வது..?’

    ‘பெர்த்தா..’

    ‘உன் விருப்பம் தான்..’ இதுதான் அவர்களின் முதல் மோதல். பிறகு அதைத் தொடர்ந்து கொண்டார்கள். தவிர்க்க முடியாத சமரசத் தீர்வை நோக்கி அவர்கள் திரும்பும் போது இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆர்வம் இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வருடத் துயர்மிகு நாட்களுக்குப்பிறகு இன்னொரு பேரிடருக்கு அவர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை. நன்றாகவே பிறந்தது குழந்தை. தமது ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் புதிய மகளின் மீது செலுத்தினர். அவர்களின் தொல்லையைச் சாதகமாக எடுத்துக்கொண்டு அது மோசமாக நடந்து கொள்ளத் தொடங்கியது. அதன் பிறகான ஆண்டுகளிலும் தனது நான்கு பையன்களை நன்றாகக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஆயினும் பெர்டிடா (மகள்) பிறந்தபின் அது குறையத் தொடங்கியது என்றானது. அவர்களைப் பற்றிய நினைவே அவளை அச்சமடையச் செய்தது. கட்டாயமாகச் செய்ய வேண்டிய சில காரியங்கள் கொடுங்கனவாய் ஆயின. மாஸினிக்கும் இதே நிலைதான். ஆனால் சிறிய அளவில்.

     இருவர் மனதிலும் நிம்மதி இல்லை. மகளின் முரண்டு, பிடிவாதம் இப்போது கட்டவிழும் நிலைக்கு வந்துவிட்டது. அவளை இழந்து விடுவோம் என என்று நினைவே அவர்களுக்குப் பயங்கரத்தைத் தந்தது.  திடமற்ற தமது மரபுக் கோளாறு ஏற்படுத்திய கசப்பு அவர்களைச் சுட்டது. மகளின் குடற்கொடி வீங்கியும், பித்தநீர் அதிகமாகத் தேங்கியும் காணப் பட்டது. மெதுவாக தொட்டாலே அது நஞ்சு போல் வழிந்து சிதறியது.

     அன்றைக்குத் தோன்றிய மோசமான கருத்து வேறுபாடு ஒருவரை ஒருவர் அவமதித்துக்கொள்ளும் நிலைக்குப் போனது. இதயங்களைக் குரூரத்தால் நிறைத்துத் துன்புறுத்திக் கொண்டனர். அதன் முன்னர் தமது தோல்விகளால் கட்டுண்டு கிடந்தவர்களிடம் குடிகொண்டு இருந்த தனிக் குணம் வெற்றிகரமாக வெளிவந்துவிட்டது. இயல்பு பிசகிப் பிறந்த நான்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு வெறுப்பை உருவாக்கி அடுத்தவரைத் துன்புறுத்தியது.

     இந்த உணர்வினாலேயே அந்த நான்கு பையன்கள் மீதும் அவர்களுக்குப் பாசம் தோன்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. வேலைக்காரிதான் அவர்களைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, உணவு ஊட்டி, உறங்கச் செய்தாள். எல்லா முரட்டுத்தனங்களையும் சகித்துக் கொண்டு தாய் அவர்களை ஒருநாளும் குளிப்பாட்டியது இல்லை. ஒரு நாளின் பெரும் பகுதியை அவர்கள் சுவர்களைப் பார்த்தே கழித்தார்கள். பெற்றோரின் அன்பும் சீராட்டும் அறவே கிட்டவில்லை அவர்களுக்கு.

     மகள் பெர்டிடாவுக்கு நான்காவது பிறந்தநாள். அவளுக்குக் கொடுத்த  ஏராளமான இனிப்பு வகைகளை அவர்களால் தடுக்க முடியவில்லை. அவற்றை உண்ட மகள் குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டாள். குழந்தை இறந்து விடுவாளோ அல்லது அவளின் நான்கு சகோதரர்களைப் போல புத்தி பேதலித்துத் திரிவாளோ என்ற அச்சம் தோன்றிக் கவலையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு

     மூன்று மணி நேரமாக அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. பிறகு மாஸினியின் வழக்கமான அவசரமே ஓர் உரையாடலுக்கு உந்திச் செலுத்தியது.

     ‘ஓ.. கடவுளே. இதைவிட உன்னால் மெதுவாகக் கால் வைத்து நடக்க முடியாதா..?  எத்தனை தடவை உனக்கு..?

      ‘சரி.  மறந்து விட்டேன். திருத்திக் கொள்கிறேன். வேண்டுமென்றே நான் அதைச் செய்யவில்லை’

       ஏளனமாகப் புன்னகைத்தாள்.

      ‘இல்லை. இல்லை.. நானும் உன்னை நினைத்துச் சொல்லவில்லை..’ என்றாள்.

       ‘உன்னைப்போல நானும் அதை நம்ப மாட்டேன். உனக்கு அழிவு காத்திருக்கிறது..’

    ‘என்ன.. என்ன சொன்னாய்..?

     ‘ஒன்றுமில்லை..’

      ‘அப்படியா..?  எதையோ நீ சொல்வதை நான் கேட்டேன். அது என்ன என்பது எனக்குத் தெரியாது. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். உனக்குப் போலவே இன்னொரு தந்தையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.’

     வெளிறிப் போனான் மாஸினி.

     ‘கடைசியாக..’ பற்களை இறுகக் கடித்துக் கொண்டே சொன்னான். கடைசியில் நீ ஒரு வஞ்சகியாகி விட்டாய். செய்ய விரும்புவதை நீயே சொல்லிவிட்டாய்..’

     ‘ஆம். நான் வஞ்சகிதான். ஆனால் எனக்கு ஆரோக்கியமான பெற்றோர் இருக்கிறார்கள். என்ன கேட்கிறதா.. ஆரோக்கியமான பெற்றோர். என் தந்தை பைத்தியமாகிச் சாகவில்லை. மற்றவர்களைப் போலவே எத்தனையோ பிள்ளைகளை நான் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். இதோ இவர்கள் எல்லாம் உன்னுடைய பிள்ளைகள். அதாவது அந்த நான்கு பேர்.’

     திரும்பிப் பார்த்து வெடித்தான் மாஸினி. ‘பேரழிவுக்குரியவளே. இப்படித்தான் உன்னை அழைக்க நினைத்தேன். அதையே சொல்கிறேன். நீ போய் மருத்துவரைக் கேள் – நான்கு பையன்கள் இப்படி இருக்க யார் காரணம் என்று. மூளைக் கோளாறு யாருக்கு..? என் தந்தைக்கா அல்லது உன் அழுகிப்போன நுரையீரலுக்கா..? சொல் பார்ப்போம்.’

     வன் சொற்கள் உயர்ந்தன. பெட்ரிடா விடமிருந்து வெளிப்பட்ட ஒரு முனகல் ஒலி அவர்களின் வாயை அடைத்தது. அதிகாலையில் மகளின் அஜீரணக் கோளாறு சரியாகிவிட்டது. புதிதாக மணமான தம்பதிகளுக்கு இதுபோன்ற சண்டை சச்சரவுகளும் சமாதானமும் தவிர்க்க இயலாதே, அதைப்போல.

     ஆரவாரமான நாள் ஒன்று விடிந்தது. பெர்த்தா படுக்கையில் இருந்து எழுந்த போதே இரத்த வாந்தி எடுத்தாள். அவளது உணர்ச்சிப் போக்கும், பயங்கரமான முந்தைய இரவும் தான் சந்தேகத்துக்கு இடமில்லாத காரணம். மாஸினி அவளை நெடுநேரம் தழுவி அணைத்துக் கொண்டான். அவள் தேம்பிக் கொண்டிருந்தாள். இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

     பத்து மணிக்கு, மதிய உணவுக்கும் பிறகு வெளியே சென்று வர முடிவு செய்தார்கள். ஒரு கோழியை அடித்துச் சமைக்கவும் வேலைக்காரிக்கு உத்தரவிட்டனர்.

     அந்த ஒளி மிகுந்த நாள் நான்கு பையன்களையும் ஒருசேர பெஞ்சுக்கு வரவழைத்துவிட்டது. சமையலறையில் வேலைக்காரி கோழியின் கழுத்தை வெட்டும்போது இரத்தம் சிறிதளவே வெளியேறச் செய்து கொண்டிருந்தாள். ( இது பெர்த்தா தனது அம்மாவிடம் கற்றுக் கொண்டது. பயனுள்ள வழிமுறை. கறி வாடாமலே இருக்கும் ). வேலைக்காரி தனக்குப் பின்னால் ஏதோ மூச்சு விடுகிற ஒலியைப் போல் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது அந்த நான்கு பையன்களும் தோள் மீது தோள் வைத்துச் சாய்ந்து வியப்புக்குரிய அந்த செயலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிவப்பு.. சிவப்பு நிறம்..

      ‘அம்மையீர். பையன்கள் இங்கே சமையலறைக்குள் வந்து விட்டார்கள்.’

       உடனடியாக அங்கே வந்தாள் பெர்த்தா. உணவுத் தயாரிப்பை அவர்கள் பார்ப்பதை அவள் விரும்புவதில்லை. மறதி, மன்னிப்பு, மற்றும் மகிழ்ச்சியை மீட்க எனத் தொடர்ந்த அந்தச் சில மணி நேரத்தில் இதுபோன்ற பயங்கரக் காட்சியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இயல்பாகவே கணவன், மகள் மீதான அன்பின் உச்சம், அந்த நான்கு ராட்சசர்களின் மீதான வெறுப்பு ஆகியவை இதற்குக் காரணம்.

     ‘அவர்களை வெளியே அனுப்பு மரியா.. துரத்தி விடு..’

      நெருக்கிக் கொண்டும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் போய்த் தமது பெஞ்சில் அமர்ந்தனர். விலங்குகள் போன்ற அந்த நான்கு பேரும்.

     மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் வெளியே சென்று விட்டார்கள். வேலைக்காரி பியூனஸ் அயர்சுக்குப் போயிருந்தாள். தம்பதியினரும் குழந்தையும் அண்மையில் இருந்த கிராமத்து வீடுகள் வழியாக நடந்து கொண்டிருந்தனர். சூரியன் மறையும் நேரம் திரும்பினர். எதிர்ப்படும் அயலாரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு வர பெர்த்தாவுக்கு விருப்பம். அவளது மகளோ வேகமாக ஓடி வீட்டிற்குப் போனாள்.

     இதற்கிடையில் அந்த நான்கு பையன்களும் நாள் முழுவதும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்கள். சூரியன் இப்போது சுவர்களுக்கு அப்பால் மறையத் தொடங்கியது. வழக்கத்தை விடவும் நெடுநேரம் அவர்கள் சுவரையே தொடர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களது பார்வைக் கோட்டிற்கும் சுவருக்கும் இடையில் ஏதோ ஒன்று வந்துவிட்டதைக் கண்டனர். அவர்களது சகோதரி. ஐந்து மணி நேரம் பெற்றோருடன் நடந்து சோர்ந்து போனவள் அந்த இடத்தையே சுற்றுமுற்றும் பார்ப்பது தெரிந்தது. சுவருக்குக் கீழ் நின்று கொண்டு யோசித்தவாறு அதன் உச்சியை பார்த்தாள் அவள். அதன் மேல் ஏறிவிட ஆசை தோன்றியது. இறுதியாக அங்கே கிடந்த ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு ஏற முயன்றாள். ஆனாலும் அதன் உச்சியை அவளால் அடைய முடியவில்லை. பிறகு ஒரு மண்ணெண்ணெய் டப்பாவை எடுத்து வந்து நாற்காலியின் மேல் செங்குத்தாக வைத்து ஏறினாள். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டாள்.

     நான்கு பையன்களும் தமது சகோதரி எப்படிப் பொறுமையாகக் காலூன்றி, சமநிலை குறையாமல் சுவர் மீது ஏறி, அதன் உச்சியில் கழுத்தைத் தனது சோர்ந்து கைகளால் தாங்கிக் கொண்டு நிற்கிறாள் என்பதைப் பார்த்தார்கள். அவள் கால் விரல்களை ஊன்றிக்கொண்டு இன்னும் மேலேற முயல்வதும் அவர்களுக்குத் தெரிந்தது.

     அவர்களின் வெறித்த பார்வைகள் கிளர்வு கொண்டன. அத்தனைக் கண்களும் பளிச்சிட்டன. முன்னே இருக்கும் சகோதரி ஒரு பேருணவாகத் தெரிந்தாள் அவர்களுக்கு. மெதுவாகச் சுவரை நெருங்கினர். அந்தச் சிறு பெண் சுவரின் மேல் இருபுறமும் கால்களை அகட்டிப் போட்டுக் கொண்டு இருந்தாள். எந்நேரமும் அடுத்த பக்கத்தில் அவளால் விழுந்து விட முடியும். ஆனால் ஒரு காலை யாரோ இழுத்துப் பிடிப்பதை உணர்ந்தாள். கீழே இருந்து உறுத்துப் பார்க்கும் எட்டுக்கண்களும் அவளைப் பயமுறுத்தின.

     ‘விடுங்கள்.. நான் போக வேண்டும்..’ கால்களை உதறிக் கொண்டு கதறினாள். ஆனால் ஒரு கணத்தில் முழுமையாக பிடிபட்டு விட்டாள்.

     ‘அம்மா..ஆ.. அம்மா..  அப்பா..’ உரக்கக் கத்தினாள். இன்னும் அவள் சுவரின் உச்சியைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் மெல்ல மெல்லப் பிடி விலகிக் கீழே இழுக்கப்பட்டுத் தரையில் விழுந்தாள்.

      ‘அம்மா.. ஓ. அம்..’ தொடர்ந்து குரல் எழுப்ப முடியவில்லை. அவர்களில் ஒருவன் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இறக்கை போல் இருந்த காது முடிச்சுருளை விலக்கி விட்டான்.  மற்ற மூவரும் அவளது ஒரு காலைப் பிடித்து இழுத்துக் கொண்டே சமையலறை நோக்கிப் போயினர். காலையில் அங்கு தான் ஒரு கோழி தன் இரத்தத்தைச் சிந்தியிருந்தது. இறுகப் பிடிக்கப்பட்ட அவளது உடலில் இருந்து உயிர் நொடிக்கு நொடி பிரிந்து கொண்டிருந்தது.

     திரும்பும் வழியில் மாஸினிக்குத் தன் மகளின் குரலை தூரத்திலிருந்து கேட்டது போல் தோன்றியது.

     ‘உன்னைக் கூப்பிடுகிறாள் என்று நினைக்கிறேன்..’ பெர்த்தாவிடம் சொன்னான்.

     கவனித்தார்கள். அசௌகரியமாக உணர்ந்தார்கள். குரல் ஏதும் கேட்கவில்லை. உடன் உரையாடிக் கொண்டிருந்தவர்களிடம் குட் பை சொல்லிவிட்டுத் தொப்பியைத் தலையில் மாட்டிக் கொண்டாள் பெர்த்தா. மாஸினி வேகமாக வீட்டுக்குள் போய் உள் முற்றத்தை அடைந்தான்.

     ‘பெர்டிடா..!’

     பதில் இல்லை.

     ‘பெர்டிடா..!’  குரலை உயர்த்திக் கூப்பிட்டான்.

     அந்த மௌனம் ஏதோ ஒரு கெட்ட நிமித்தமாக நெஞ்சில் நுழைந்து ஓடி முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது.

     ‘மகளே. என் மகளே..!’ வெறிபிடித்தாற்போல் வீட்டின் பின்பக்கமாக ஓடினான். சமையலறையைக் கடக்கும் போது தரை முழுவதும் இரத்தம் கொட்டியிருப்பதைப் பார்த்தான்‌. பாதி மூடியிருந்த கதவை ஓங்கித் தள்ளினான். பயங்கரமான குரல் அவனிடமிருந்து எழுந்தது.

      ஏற்கனவே ஓடத் தொடங்கி விட்ட பெர்த்தா தனது கணவனின் அபயக் குரலை கேட்டுக் கதறிக்கொண்டே வீட்டில் நுழைந்தாள். சமையலறையை நெருங்கும் போது மரணத்தில் வெளிறிக் கொண்டிருந்த உடலுடன் மாஸினி வழியை மறித்துக் கொண்டு நின்றான். நெருங்கிய அவளைப் பின்னுக்கு இழுத்தபடியே ‘உள்ளே போகாதே. போகாதே..!’ என்று கூச்சலிட்டான்.

     இரத்தச் சகதி கொண்ட தரையைப் பார்த்தாள் பெர்த்தா. கம்மிய குரல் ஒன்று மட்டுமே அவளிடம் இருந்து வெளிப்பட்டது. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கணவன் மீது சாய்ந்தபடியே மெதுவாக தரையில் வீழ்ந்தாள்.

000

ஹொராசியோ சில்வஸ்தர் குயிரோகா போர்தஸா*

( 1978 – 1937 )

உருகுவேயில் பிறந்து அர்ஜென்டினாவிற்குக் குடி பெயர்ந்தவர்.

இலத்தீன் அமெரிக்கப் படைப்புகளுக்கேயுரிய பூடக, மாயத் தோற்ற வகை எழுத்துகளின் முன்னேர் இவர்.

முதல் புதினம் எழுதிய எட்கர் அலன் போ-வின் பாதிப்பில் தொடங்கி சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் எனப் பயணித்தவர்.

இயற்கை – மனித முரண் மீது தன் படைப்பு மனத்தைத் திருப்பியவர். அடர் வனங்களில் வாழ முயன்றவர்

திகில், நோய், மனப்பிறழ்வு எனப் பல இயல்புகளை எழுத்தாக்கினார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள் :

Feather Pillow

The Wild

The Slaughtered

Anaconda

Exiles

Drifting

000

அவைநாயகன்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சூழலியல் செயல்பாட்டாளர்.

சூரியச் செதில்கள், காடுறை உலகம் இவரது கவிதை நூல்கள். ஞானப் பறவை (ரிச்சர்ட் பாக்) கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது (மாயா ஏஞ்சலோ) இந்தியா அழைக்கிறது (ஆனந்த் கிரிதர் தாஸ்) டெர்க் உஸாலா (விளாதிமிர் கே ஆர்சென்யேவ்) ரஷோமோன் திரைக்கதை (அகிரா குரஸாவா ஷினோபு ஹஷிமோட்டோ) ஆகியவை மொழிபெயர்ப்புகள்.

The post தலை துண்டிக்கப்பட்ட கோழி first appeared on Nadukal.

பி ற் ப க ல்

31 May 2025 at 23:20

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான். மூடிக் கொண்டிருக்கும் கதவிடுக்கின் வழியே உள்ளே வராந்தாவில் இவன் வெளியே போகிறதைப் பார்த்தபடி சமையலுக்கு உதவி செய்யும் ரூப் தல்வார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பத்துவருடங்கள் பழகிய இடத்தைவிட்டுப் போகும்போது ஏற்படும் மனத்தவிப்பில் அவனால் எதையும் சரியாக யோசிக்க முடியவில்லை. மிக நெருங்கிய மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக வந்து நினைவைப் பின்னிழுத்தன. அவர்கள் உறவினர்கள் போலாகிவிட்டனர்.

கதவுகளுக்கு சற்றுத்தள்ளி வெளியே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த சிறைக்காவலன் இளித்தான். “முபாரக் ஹோ”(வாழ்த்துக்கள்). பச்சன் சிங் கையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தான், இப்போது அவன் புன்னகைத்தான். பிச்சை எடுத்தே பழகிய கைகள். முன்னால் பரந்துகிடந்த வெட்டவெளிப் பொட்டலில் சூரிய ஒளி மிக அதிகமாக இருந்ததால் கண்கள் கூசின. நிறம் மங்கிய செம்மண் நிலத்தில் சிறிது தூரத்திற்கு புல் பூண்டு கூட இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. வெய்யிலின் சூடு முகத்தில் எரிந்தது. சற்றுத் தள்ளி நின்ற ஒரே வேப்ப மரத்தடிக்குச் சென்றான். ‘அப்பாட’ என்றிருந்தது. மரத்தடியில் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்த கிழவி அவனைப் பார்த்தாள். இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான்.

யாரையுமே காணவில்லை. பரோலில் வெளிவரும் நாட்களில் கூட்டமாக இருக்கும். கிழவி அவன் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் சொன்னாள் ”இன்னைக்கு மூணு மணிக்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள்”. பின்னர் சற்றுத் தயங்கியபடி குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “இப்பத்தான் வெளியே விட்டாங்களா?” “ஹூம்” என்று தலையசைத்தான்.

என்ன செய்வது? தன்வீர் சிங் ஏன் வரவில்லை?. கிழவியைப் பார்த்துச் சொல்வதுபோல் “வர்ரேன்” என்று சொல்லிவிட்டு துணிப்பையை தோளில் போட்டு நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மெயின்ரோடு சற்று தூரத்தில் தெரிந்தாலும் நடக்க நடக்க போய்க்கொண்டே இருந்தது.

அம்மா உயிரோடிருந்தால் இந்தக் கிழவிபோல் இருப்பாளோ? இவளைவிட வயது அதிகம். தன்வீர் சிங் எங்காவது கண்ணில் படுகிறானா என்று அவ்வப்போது சுற்றும்முற்றும் பார்த்தான். யாரையுமே காணவில்லை. வெய்யில் தலையிலும் முகத்திலும் உக்கிரமாக எரித்தது.

சிறைக்கூண்டுக்குள் வெக்கை அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் வெய்யில் முகத்திலோ உடம்பிலோ விழாது. வெகுதூரம் நடக்கக் கஷ்டமாக இருந்தது. நடக்கிற பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாகி விட்டது. ஆறு கிலோமீட்டர் நடந்து வாராவாரம் சினிமா பார்த்தவன். இப்போது சுத்தமாக நடக்கமுடியவில்லை. எங்கே போவது? என்று யோசித்தான். அம்மா போன வருடம் வரை இருநதாள். வீட்டிற்குப் போகலாம். அங்கிருந்து பல வருடங்களாகி விட்டன. அது யாரோ வேறொருவருடைய வீடுபோல் நினைவில் நின்றது. வேறு வழியில்லை. அங்கேதான் போகவேண்டும்.

சித்திமகன் தன்வீர் சிங் பக்கத்து வீடான இவன் வீட்டிலும் இருக்கிறான். சின்னதாக இரண்டு அறைகள்தான். “நீ வரும்வரை” என்று அவன் சொன்னது தெளிவாக நினைவு வந்தது. அவன் தன்னைக் கண்டு பயப்படக்கூடும். இருந்தாலும் பாசம் உள்ளவன். முடிந்தபோதெல்லாம் சிறைக்கு வந்து பார்ப்பான். கையைவிட்டுப் போகாதிருந்த மீதி நிலத்தில் விவசாயம் பார்த்தான். அது கட்டுபடியாகாததால் மற்ற நேரங்களில் டிரைவர் வேலை, சுண்ணாம்பு அடிப்பது, பைப் ரிப்பேர் என்று ஏதாவது செய்து பிழைத்துக் கொண்டிருந்தான்.

மெயின் ரோட்டில் இரைச்சல் காதை அடைத்தது. கார்களும் பஸ்களும், ஆட்டோக்களுமாக சாலையை நிறைத்து வழிந்து போய்க்கொண்டிருந்தன. உலகத்திலே தன்னந்தனியாக விட்டதுபோல் உணர்ந்தான். இடப்பக்கம் திரும்பி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தான். எல்லோரும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டிலும் கூட்டமாக இருந்தது. நடக்க வலுவில்லையோ? எல்லோர் கைகளிலும் மினுங்கும் தோல்பைகள், சின்ன பிரிஃப்கேஸ்கள். இப்போது யாரும் துணிமூட்டையைத் தூக்குவதில்லையோ?. அது தோளை அழுத்தியது.

ஒரு வழியாக பஸ்பிடித்து கிராமத்திற்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மேலானது. தெருவுக்குள் ஒன்றிரண்டு பெண்கள் இவனைக் கண்டதும் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு பார்த்தார்கள். அடையாளம் தெரிந்ததோ இல்லையோ? அவனது வீட்டை தூரத்திலிருந்து கவனித்தான். மிக மோசமான நிலையில் இருந்தது. சுவர்களில் காரை பெயர்ந்தும் வெள்ளையடிக்காமலும், இது ஒரு வீடா? சிறையில் புதுசாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்கும். அரசாங்கச் செலவில் ரிப்பேர் பார்ப்பார்கள். வீட்டை நினைத்து வெறுப்பாக இருந்தது. இனி இதில்தான் இருக்கவேண்டும். யாராவது சிமெண்ட் பூசி ரிப்பேர் பார்க்கக்கூடாதா? தன்வீர் சிங் மேல் கோபம் வந்தது. அவனுக்கென்ன வருமானம் என்று யோசித்த போது அவனும் பாவம் என்ன செய்வான் என்று தோன்றியது.  நிலையான வருமானம் கிடையாது. அவன் வீடும் இடிந்து விழுவது மாதிரிதான் இருக்கிறது. அவன் ஒருவன் தான் நெருங்கிய சொந்தக்காரன்.

லொடலொட என்று ஆடிக் கிடந்த கதவைத்தள்ளித் திறந்து உள்ளெ நுழைந்தான். யாரும் வீட்டில் இல்லை. ஒரு தரைவிரிப்பும் கால் உடைந்து போன ஒரு நாற்காலியும் தண்ணீர்க் குடமொன்றும் இருந்தன. வெளியே வந்து குட்டித்திண்ணையில் உட்கார்ந்தான். வீட்டை ரிப்பேர் பார்ப்பது அப்புறம். அடுத்தவேளைச் சாப்பாடு? தன்வீர் சிங் எத்தனை நாளுக்குப் போடுவான். சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டியதுதான். அது எத்தனை நாளுக்குத் தாங்குமோ? சிறையில் மணியடித்தால் தட்டைத்தூக்கிக் கொண்டு போகலாம். இப்போது எங்கே போவது?

படிப்பு மண்டையில் ஏறாததால் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்கூடம் போகவில்லை. வாடகைக்கு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தான். பிறகு கடனுக்கு டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

வெளியில் போயிருந்த தன்வீர் சிங்கின் மனைவி அவசரம் அவசரமாக வந்தாள். அவனைப் பார்த்து திடுக்கிட்டு விருட்டென்று முந்தானையால் மூடிக் கொண்டாள். “நமஸ்தேஜி. அவங்க உங்களைப் பார்க்கத்தான் போனாங்க இன்னும் வரலை. உங்களைப் பார்க்கலையா?

“இல்லை” என்று தலையசைத்தான்.

“அப்ப திரும்பி வந்திட்ருப்பாங்க. நான் ‘சாய்’ போட்டு வரேன்” சொல்லிவிட்டு அடுத்திருந்த அறைக்குள் போனாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். அவன் தங்கை இப்படி பெரிய பெண்ணாக அழகாக இருந்திருக்கக் கூடும். சின்ன வயதில் கண்மண் தெரியாத கோபத்தில் அப்படிச் செய்துவிட்டான். அவர்களுக்குப் பதின்மூன்று வயதிருக்கும். இப்போது நினைத்தாலும் துக்கம் மனதைக் கவ்வியது. நினைந்து நினைந்து வருந்தி மனதில் கல்லில் செதுக்கியது போலாகி விட்டது.

சிறையில் அவனும் என்னென்னவொ செய்தான். அவனுக்கும் ஏதேதோ நிகழ்ந்தது. சட்டப்படி அதெற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் அவன் வெளியே வந்திருக்கவே முடியாது.

அசதியாகயிருந்தது. உள்ளே போய் விரிப்பில் படுத்துத் தலையை மடித்த வலது கையில் வைத்தபடி கண் அசந்தான். சோனம் ‘சாய் கொண்டுவந்து அவனைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனாள்.

தன்வீர் சிங் வந்திருக்க வேண்டும். “ப்ச்சன் சிங் வந்துவிட்டானா?” சோனத்திடம் அவன் கேட்டது இவன் காதிலும் விழுந்தது. அசந்து தூங்கியிருந்தான். மேலெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் வைத்திருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.

உள்ளே வந்த தன்வீர் வருத்த்ததுடன் களைத்துப் போன குரலில் சொன்னான் “நமஸ்தேஜி.. பஸ் கிடைக்காமல் போய்ச்சேர நேரமாகிவிட்டது. அதற்குள் நீங்க கிளம்பீட்டீங்க. சிறைக்காவலன் சொன்னான்” அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவனைத் தேடி வரவும் ஆள் இருக்கிறது. சீக்கிரம் வந்தும் என்ன செய்வது? ஒன்றுமில்லை” விரக்தியில் அவன் பேசுவதைப் புரிந்துகொண்டு தன்வீர் இதமாக தொடங்கினான் “இருந்தாலும்…..” தொடர முடியவில்லை. தன்வீர் சிங் சோனத்தைக் கூப்பிட்டுக் கேட்டான் “சாப்பாடு தயார் பண்ணிட்டியா? …. ஒன்றே முக்காலாகிவிட்டது. எனக்கும் பசிக்கிறது.”

“நீங்க குளிச்சிட்டு வந்திருங்க”என்று தன்வீர் சொன்னதும் பச்சன் சிங் குளிக்கப் போனான்.

சாப்பிடும் போது பச்சன் வீட்டைக் கவனித்தான். எளிமையாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. மனைவி நச்சரித்திருப்பாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். கைகளில் வளையல்கள் குலுங்கின. அவள் வரும்போதெல்லாம் ஏதோவொரு வாசனை வந்தது. சாப்பிடும் போது நடு நடுவில் பெருமூச்சு விட்டான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”

“ஒரு பொண்ணு இரண்டு பையன்கள். மூத்தவன் ஏழாவது இன்னொரு பையனும் பொண்ணும் மூன்றாவது. இரட்டைப் பிள்ளைகள்”

“உன் அண்ணன் மான்சிங் எங்கே?”

“அவன் பாம்பே போய்ட்டான். அங்கெ நல்ல சம்பாத்தியம். ஆனா பிள்ளைகள் இல்ல” வருத்தப்பட்டான். பிள்ளைகள் பிறப்பது கடவுள் கொடுக்கும் வரம்… வச்சு வளக்றது ரொம்பக் கஷ்டம்.” சடக்கென்று. நிறுத்திக் கொண்டான்.

சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு தன்வீர் சொன்னான் ”ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் கடைவரைக்கும் போய்ட்டு வர்ரென்”.

”கடைவேற வச்சிருக்கயா?” என்று ஆச்சரியத்துடன் பச்சன்சிங் பார்ப்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்தான். “இந்தக் கிராமத்ல என்ன கடை. எல்லோரும் அப்படியே சொல்லி பழக்கம் ஆயிடிச்சு. தெருக்கடைசியில கூரை போட்டு டெய்லரிங் மெஷின் வச்சிருக்கேன். கூட ஒரு சின்னப் பையன் இருக்கான்…. ஹூம்”… பெருமூச்சுவிட்டுத்தொடர்ந்தான் “ பன்டி இறந்து போய்ட்டான்ல அவன் பையன்” ஏதோ அரைகுறையாய் கேள்விப்பட்டிருந்தான் .

“பன்டி எப்படி இறந்தான்?”

”யாரோட  பைக்கையோ எடுத்திட்டு மெயின் ரோட்ல போயிருக்கான். லாரிக்காரன் அடிச்சிட்டுப் போய்ட்டான். லைசென்ஸ் இல்லாததால கேஸும் ஒண்ணும் ஆகல. ஒரு பைசா கிடைக்கல”.

பச்சன்சிங்கிற்கு என்னவோ போலிருந்தது. சிறைக்குப் போவதற்கு முன்னால் இருவரும் ஒன்றாக அலைந்தவர்கள்.

“அவன் பெண்டாட்டி?”

“இன்னொருத்தன் கூட இருக்கா. எப்பவாவது இந்தப்பக்கம் வருவா. பன்டியப் பத்திப் பேச்செடுத்தாலே ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிருவா.”

“பையன் எங்க இருக்கான்?”

“அவகூடத்தான்”

ஜீரணிக்க முடியவில்லை எதையும். பன்டி பெண்களைப் பற்றிக் கறாறாக பேசுவான். ஆண்கள் எப்படியிருந்தலும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அவன் மனைவியும் பிள்ளையும் யார் வீட்டிலோ?” தலைவிதி. உலகமே தலைகீழாக மாறிவிட்டது. பத்துவருடத்துக்குள்.

தன்வீர் தொடர்ந்தான் “அவ பாவம் என்ன செய்வா? தனியா இருக்கிற பொம்பளைய யாரு விடுவா? சாப்பாட்டுக்கு…? சரி நான் இதோ வர்ரேன்” அவன் வெளியே போய்விட்டான்.

இரண்டு நாட்களுக்குள் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தெருவில் நடந்தால் எல்லோரும் அவனையே பார்த்தாலும் யாரும் பேசவில்லை. முகங்கள் தெரிந்த மாதிரியிருந்தாலும் சரியாக இனங்காண முடியவில்லை. மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. நான் ரொம்ப நல்லவன் என்று எல்லோரிடமும் சொல்லவேண்டும். ஆனால் சொல்லமுடியவில்லை.

தன்வீரின் குழந்தைகள் மூன்றும் அவனிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்களிடம் பேசும் போதும் விளையாடும் போதும் மனம் லேசானது. ஒன்றிரண்டு முறை தன்னை அறியாமலேயே புன்னகைத்தான். குழந்தைகளின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையாக இருக்குமா? தங்கைகள் கையில் ராக்கி கட்டியது நினைவு வந்தது. கைகள் மிகமென்மையாக இருந்திருக்கும். இப்போதும். பெண்களின் கைகள் எப்பவும் மென்மையாக இருக்குமாம். இன்னும் தொட்டதில்லை. சிறையில் ‘ஆஸாராம்’ என்ற ஹரியானா பயில்வான் முதல்முறை அவன் கையைப்பிடித்து பெண்களின் கைபோல இருப்பதாகச் சொன்னான். பச்சன் சிங்குக்கு அப்போது வயது பதினெட்டு.

சிலநாட்கள் வீட்டை நினைத்து இவன் அழும்போது கன்னத்தையும் தலையையும் ஆஸாராம் வருடிக் கொடுத்தான். பச்சன் சிங்குக்கு இதமாக, ஆறுதலாக இருந்தது. கைதிகளை உலவவிடும் போது இவனை அழைத்து பிரியாணி கொடுத்தான். கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பலகாரம் கொடுத்தான். சில நாட்கள் கழித்து ஜெயிலரிடம் சொல்லி தன் கூண்டுக்குள்ளேயே பச்சன் சிங்கையும் வைத்துக் கொண்டான். ஆஸாராமை நினைத்தால் அழுகை வந்தது. அவனைப் போல் அமைதி கொடுத்தவன் யாருமில்லை. விடுதலையாகி வரும் போதும் அவ்வளவு பெரிய பயில்வான் சின்னக் குழந்தை போல அழுதான். சிறுவனுக்காக இவ்வளவு பெரிய ஆள் அழுவதை எல்லோரும் பார்த்தார்கள். சிலர் ஆறுதல் சொன்னார்கள் சிலர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர். இவனுக்கும் கண்ணீர் முட்டியது. அடக்கிக்கொண்டான். நடந்ததை எல்லாம் யாரிடமும் சொல்லமுடியாது. இன்பமும் துன்பமும் சேர்ந்தே வந்தன. சேர்ந்தே போய்விடுமா?

பதினைந்து வருடங்களுக்கு முன் இரு தங்கைகளும் குடும்பத்தின் மானத்தைக் கப்பலேற்றி விட்டார்கள். பதினெட்டு வயது கிஷனுடன் கோயிலுக்குப் போனவர்கள் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்கள். பையன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். இருவரையும் பார்க்கப் பார்க்க பச்சன் சிங்குக்குக் கோபம் ஏறிக் கொண்டே இருந்தது. ஒரு கிறுக்கனைப் போல் தலையில் கிர்ரென்று ஏதோ ஏறியது. சிறுவனாக இருந்தாலும் முடிந்தமட்டும் தங்கைகளைக் கன்னத்திலும் கைகளிலும் அடித்தான். அவ்வப்போது உதைத்தான். அப்பா வந்தபிறகு ரகளை அதிகமாகிவிட்டது. அப்பாவும் சித்தப்பாவும் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட்டனர். அம்மாவையும் சித்தியையும் விட்டு விட்டு மாறி மாறி அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். வீட்டைச்சுற்றி ஓரே கூட்டம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் காதில் எல்லாம் விழுந்தாலும் எதுவும் பதியவில்லை. அவனும் அப்பாவும் சித்தப்பாவும் கெட்ட வார்த்தைகளை கூவிக் கொண்டு, தங்கள் கோபத்தைக் கிளறிவிட்டு உள்ளே போய்த் தங்கைகளை உதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாமே கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருந்தது.

இரு தங்கைகளையும் அப்பா ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்துவிட்டார். இதே அறைதான். இப்போது வேறு அறையாகத் தோன்றியது. அன்று கலகலத்த வீடும் குடும்பமும் இன்று இல்லை. பெண்கள் ஒப்பாரி வைத்துபோல் அழுது கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு ஏற்பட்ட களங்கம் எப்படிப் போகும்? மற்றப் பெண்களுக்குத் திருமணம் வாய்க்குமா? யார்யாரோ என்னவெல்லாமோ கேட்டார்கள். இனிமேல் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பார்களே? வன்மம் அவனுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அது தணிய வழியில்லை. அப்பாவும் சித்தப்பாவுமே தங்கைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. திடீரென்று அடிகளும் அழுகையும் ஓலமும் கேட்டன. மூன்றாம்நாள் ராத்திரி பதினொருமணிக்கு அப்பா அவனைக் கூப்பிட்டார். சித்தப்பாவையும் அவனையும் இரண்டு பெண் தங்கைகளின் கை கால்களைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி கயிறு வைத்துக் கட்டினார். இரண்டு பெண்களும் சாப்பாடு தண்ணீரில்லாமல் அழக்கூடச் சக்தியின்றி முனகினர். கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. பயத்திலும் வெட்கத்திலும் கூனிக் குறுகி முடிந்தமட்டும் அரைமயக்கத்தில் இரைஞ்சினர். “இனிமே பண்ணமாட்டோம்ப்பா…அப்பா ஒரு தடவை மன்னிச்சிடுங்க …சாச்சா இனிமே பண்ணமாட்டோம்.. வீட்டைவிட்டே வெளியே போமாட்டோம். பர்தா (முகத்திரை) போட்டுட்ருப்போம். கட்டிப் போட்டிருந்தாலும் துடித்துத் துள்ளின பிள்ளைகளை கட்டுப்படுத்த குடியவில்லை. அவனும் ஏதோ ஒரு வெறியில் அழுத்திப் பிடித்தான். சித்தப்பாவும் கால்களை அழுத்திப் பிடித்தார். அப்பா போய் அரிவாளை எடுத்து வந்தார். தங்கைகள் ஓ வென்று அலறினர். மூச்சிரைக்க அப்பாவும் இருவரைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் சொன்னார் “கழுத்தை அறு” அவ்வளவு நேரம் அடக்கிப்பிடித்த் வெறியும் கோபமும் அவனிடம் ஜிவ்வென்று ஏறியது. அறுத்ததும் ரத்தம் கழுத்திலிருந்து சளசளவென்று கொப்பளித்து, உடல் துடிக்கத் துடிக்க வெளியேறியது.

அந்த நேரத்திலும் தங்கைகளின் கைகள் மிருதுவாகத்தான் இருந்திருக்கும். அப்போது அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து இற்று விழத்தயாராக இருக்கும் கரையான் அரித்துப் போட்ட இதே அறைதான். இப்போது ரத்தக்கறை இல்லை. ஆனால் மனதில் புழுவாக தான் செய்த குற்றம் அரித்துக் கொண்டிருந்தது.

பச்சன் சிங் பாயிலிருந்து எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். இந்த அறையும் அடுத்த அறையும் குடும்பத்துக்குள் இருக்கிறது. மற்றதெல்லாம் கேஸிலும் மற்றச் செலவுகளிலும் கரைந்து விற்றாகிவிட்டது.

பத்தாண்டுகளுக்கு மேல் ஆஸாராமும் போலிஸும், ஜெயிலர்களும் அவனை என்னென்னவோ பாடாய்ப் படுத்தினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.

இரண்டு வாரம் போயிருக்கும் பச்சன்சிங்கிற்கு காய்ச்சல் வந்தது விடவேயில்லை. இடைவிடாத வலி. நேராக உட்கார முடியவில்லை. ஆசனவாயில் புண். பரவிவிட்டிருந்தது. டாக்டர் சிறையில் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்தார். டாக்டர் வேறு ஏதோ கேட்க முனைந்தபோது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை.

இன்னொரு நாள் டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது டாக்டரின் வயதான உதவியாளன் இவன் முதுகுக்குப் பின்னால் அவரிடம் சொன்னது காதில் விழுந்தது. “குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிட்டான். பூராப் பழியையும் தானே ஏற்றுக் கொண்டான். இப்போதுதான் விடுதலையாகி வந்திருக்கிறான்.

பச்சன் சிங்குக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. உடம்பு வலி, காய்ச்சல், நோய், தீராத மன உளைச்சல், சிதிலமடைந்த வீடு, நிம்மதியின்றிச் செத்துப் போன அம்மா, அப்பா, சித்தப்பா, தங்கைகள். சிறையில் தான் பட்ட அவமானங்கள், கொடுமைகள். மானம் என்றால் என்ன என்பது இப்போது அவனுக்குப் புரிவது மாதிரி இருந்தது. இத்தனைபேர் அனுபவித்த துயரங்களை தவிர்த்திருக்கலாமோ? டாக்டரின் உதவியாளனுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.

000

வேலு இராஜகோபால்

இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.

மற்ற பதிவுகள்

The post பி ற் ப க ல் first appeared on Nadukal.

வெக்கை தணிந்தது…

31 May 2025 at 23:18

வெயிலின் கோரம் உச்சமடைந்துவிட்டுருந்தது. வெளியில் தலைக்காட்டினால் தலைமயிர்களைப்  பொசிக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னுமளவிற்கு வெப்பம். மயிரில்லா சொட்டையாகவோ, மொட்டையாகவோ இருக்குமாயின் மூளையைக் கரைத்து நீராவியாக்கி தன்வசம் உறிஞ்சிக்கொள்வது போல கதிரவன் அனல்களைக் கக்கிக்கொண்டிருந்தது. வேர்க்க விறுவிறுக்க அக்கம் பக்கம் பங்காளி முறைக்காரர்கள் எல்லாரது வீடுகளிலும் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாமியானா பந்தல் போடுபவனுக்கு இந்தச் சமயத்தில் கிராய்க்கி ஜாஸ்த்தி. “கட்டுப்படி ஆகாதுங்கண்ணோவ், இந்த ரேட்டுனா பண்ணிக்கலாமுங்க” என்று கிராய்க்கு பண்ணுவார்கள். எப்படியும் முப்பதிற்கும்  மேற்பட்ட பங்காளி வகையராக்கள் வீடுகளிலும், காட்டு கொட்டாய்களிலும் சாமியானா பந்தல்களும் அதற்குப் போட்டியாக தென்னங்கீற்று பந்தல்களும், சீரியல் லைட்டுகளும் திருவிழாவின் பிரம்மாண்டத்தைக் கண்களுக்கு காட்டிக்கொண்டிருந்தன. ஆம்பளை ஆட்கள் தலையில் துண்டையும், பொம்பளை ஆட்கள் முந்தானையை முக்காடாகவும் வெயிலின் வெப்பத் ததும்பல்களைத் தாங்க முடியாமல் தலையில் போட்டுக்கொண்டு தார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர் சேந்தமங்கலத்தின்  ஒரு கிராமத்தை நோக்கி.

மொட்டை வெயிலென்றும் பார்க்காமல் உறவுக்காரர்களைப் பார்க்க, தனக்காக அவ்வளவு தூரம் வந்து அழைத்ததற்கு மரியாதை செலுத்த, பங்கு பங்காளிகளின் அழைப்பை ஏற்காமால் போனால் உறவில் பிசகு ஏற்படுவதைத் தடுக்க, மாமன் மச்சான்களின் அழைப்பை ஏற்று குடும்பத்தோடு வந்து அவர்களை கௌரவிக்க, பொண்ணுக் கொடுத்த வீட்டிற்கு சம்பந்திங்களும், தங்கையை அக்காளை கட்டிக் கொடுத்த வீட்டிற்கு அண்ணன்களும் தம்பிகளும் சீர் செய்ய, நண்பனின் அழைப்பை ஏற்காமல் போனால் தங்களுக்காக வாங்கி வைத்த குவாட்டர் வீணாகிவிடுமே என்ற கவலையின் காரணமாக, அத்தைப் பெண்ணை வம்பிழுக்க, எப்பொழுதோ பார்த்த மாமன் மகனை ஆசை ஆசையாய்ப் பார்க்க, கொழுந்தியாளின் அன்பான அழைப்பிற்காக, நங்கையா கூப்பிட்டுப் போகவில்லை என்றால் முகத்தினை சுழித்துக் கொள்வாள் என்பதற்காக, பேரன்களையும், பேத்திகளையும் கண்டு ஆரத் தழுவுவதற்காக முக்கு ரோட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றனர் பலர்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை சாமி செய்து கல்யாணத்துக்கு அழைப்பு விடுக்கிற மாதிரி பஸ் ஏறி, பஸ் இல்லா ஊருக்கு நடையோ நடவென்று நடந்து ஒரு சொந்தக்காரர்கள் விடாமல் அனைவரிடமும்  “தெவத்துக்கு வந்தரணும் கண்டிப்பா, அல்லாரு வந்தரணு, நம்ம ஊட்டுக்குத்தான் மொதல்ல வரோணும்” என்று நான்கைந்து அழைப்புகள் ஒரு ஊரிலிருந்து வந்துவிடுவதன் பொருட்டு நம்ம வீட்டில்தான் முதலில் சாப்பிட வேண்டும் என்று வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்துவிட்டு வருவார்கள். கல்யாணவிழா தோற்றுப்போகும். சாமி செய்து கிடா விருந்து வைத்து, சம்பந்தி வீட்டாரிடம் சீர் வாங்குவதில் இருபத்தைந்து முதல் அறுபது வரை உள்ள மாப்பிள்ளைமார்களுக்கு அப்படி ஒரு பெருமிதம். சீர் செய்யவில்லை என்றாலும் என் மாமனார், என் மச்சான், என்று முன் வந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். குறைந்தபட்சம் தேங்காய் பழத்தடட்டாவது சீராக எடுத்துக்கொண்டு முன்வந்து நிற்கவேண்டும் மரியாதை செய்ய. அதற்கும் பங்கம் வந்துவிட்டால் பிணக்கு ஏற்பட்டுவிடும் உறவுகளில்.

சின்னசாமியும் அவரின் அண்ணன் பையனும்  நேற்று இரவு பஸ்ஸை பிடித்து வந்து சேருவதற்கும் பூஜை முடிந்து கிடா வெட்டுவதற்கும் சரியாக இருந்தது. அக்காள் கணவரின் குணம் தெரிந்தே சின்னசாமி “ராத்திரியே நாம போய்டலாம்” என்று கல்லூரி முடித்துவிட்டு வேலைத் தேடி கொண்டிருக்கும் தனது அண்ணன் மகன் ‘அருளை’ அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு வந்தார். ஒரு வெள்ளை வேட்டி,வெள்ளைத் துண்டு, தேங்காய் பழம் பூ என்று தாம்பூலத் தட்டில் வைத்துக் கொடுத்தார் சின்னசாமி. இரவின் சீரியல் செட் வெளிச்சத்திலும் அக்காள் கணவரின் முகம் கருத்தது. பணமில்லா இடத்தில் மனிதர்களின் பிரியம் வற்றி வரக் கிணறாகத்தான் இருக்கும் என்பதற்கு அவரது நடவடிக்கைகள் ஒரு சாட்சி. அங்குதான் அலட்சியம் அதிகமாகி குப்பைகள் மட்டுமே கொட்டப்படும். ‘வாங்க’ என்று  ஒரு வாய் கூப்பிடவில்லை அக்காள் கணவர். மாமான் ‘பொங்கப் பொங்க’ சீர்வரிசை கொண்டு வந்திருக்க வேண்டும், ஒரு நாள் முன்னாடி வந்து வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்பார். மனிதனின் எதிர்பார்புகளை, கிடாய்களைக் காணிக்கையாகப் பெறும் அந்தக் கடவுளாளையே சரிவர நிறைவேற்ற முடியாது. சாமாணியனால் எப்படி நிறைவேற்ற முடியும்?

“ஊட்டுல ரண்டு பேரும் வரலையா” மரகதம் அக்காள் கேட்க.

“எங்க கடைய எடுத்து வச்சிட்டு இந்நேரத்துக்கு பொறப்பட வச்சி கூட்டியார நேரமாயிடும், அதான் நானும் அருளும் ஓடியாந்தோம், காத்தால நேரமே வரச்சொல்லியிருக்கேன்” சின்னசாமி பதிலளித்து விட்டு அருளைப் பார்த்தார்.

“உங்கப்பன் என்ன பன்றான், வரமாட்டானே மினிஸ்டரு” என்றாள்.

அவ்வளவு நேரம் இருக்கமாக இருந்த அருளின் முகம் அத்தையின் முகத்தைப் பார்த்ததும், அவள் வாயில் இருந்து சொற்கள் உதிர்ந்ததும் கொஞ்சம் தளர்வு பெற்று சிரித்தது. மாமன் எவ்வளவு அலட்சியம் அவமரியாதை பண்ணினாலும் அத்தை தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று நினைத்தே எதையும் பெறுத்துக்கொள்வான். அத்தையிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது பற்றற்று பற்றுதலாய் இருப்பான்.

சின்னசாமியின் அண்ணன் பெரியசாமிக்கு மாமனை அறவே பிடிக்காது, இது போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்து விடுவார். தாமரை இலையும் தண்ணீருமாய் இருப்பார். அவரின் குணம் அறிந்தே அத்தை  பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரைத் தெரிந்த யாருக்கும் தவறாக எடுத்துக்கெள்ள மனம் இராது. இப்படி சொந்தங்கள் கூடி கொண்டாடும் நிகழ்ச்சியை பெரியசாமி தவிர்ப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. பொருளாதார நிலையை வைத்து ஏளனங்கள் எக்காளமிடும். புத்திமதிகள் நாலாபுறமும் அம்புகளாய் வந்து குத்திக் கிழிக்கும். அலட்சியம், அசட்டை எலக்காரம் என எல்லா வகைகளிலும் தன்மானத்தை சீண்டிய வண்ணமே மாமன் மச்சினன் வீடுகளில் நடக்கும். பெரியசாமியைத் தவிர குடும்பத்தில் மற்றவர்கள் இவற்றை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மரியாதை செலுத்தியவண்ணம் பொறுமையாக இருப்பார்கள்.

“இந்தா புடிங்க ஆளுக்கு அர பவுனு எடுத்து வைங்க, நல்ல நாளு அதுவுமா முனுமுனுத்துட்டே இருப்பான் அந்தாளு கருமம்” என்று சின்னசாமியிடம் பணத்தைத் திணித்தாள், மரகதம் போனமுறை வீட்டின் கிரகபிரவேஷம் விஷேசத்திற்கு சீர் செய்வதற்காக.

“மிச்ச காசுல ரெண்டு பேரையும் நல்ல சேலையா எடுத்துக்க சொல்லு” என்று தம்பி மனைவிகளின் மீது பச்சாதாபம் பட்டாள். அவ்வளவு நெருக்கம் காட்டுவாள் பெற்ற வீட்டாரிடம் மரகதம். அவளுக்காகவே அவமரியாதைகளைப்  பொறுத்துப் பொறுத்து அதுவே கட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் போலாயிற்று.

பெரியசாமி, சின்னசாமி மற்றும்  மரகதம் செங்கோட்டு வேலவர் குடியிருக்கும் ஊரில் பிறந்தவர்கள். மலை அடிவாரத்தில் சின்னசாமியும் அவரது மனைவியும் பூக்கடை நடத்தி வயிற்றைக் கழுவி வருகிறார்கள். பெரியசாமியின் மனைவி அடிவாரத்தில் பழக்கடை வைத்திருக்கிறாள். விஷேச நாட்களில் வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் வெறுங்கைதான் முழம் போடும். எல்லா நாட்களுமே விஷேச நாட்களாக இருந்துவிடாதா என்பது இவர்கள் போன்ற அடிமட்ட வியாபாரிகளின் ஏக்கம். பெரியசாமிக்கு டிரைவர் வேலை. தத்தளிக்கும் கடலில் மரக்கலம் அங்கலாடுவது போல இவர்களது வாழ்க்கையும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

“நானும் போய் பொண்ணெடுத்துருக்கறன் பாரு, எல்லாரு ஊட்டுலயும் பாரு சம்பந்தி ஊட்டாருங்க என்னென்ன மொற செய்யறாங்க, இங்க ஒரு சீலத்துணிக்குக் கூட நா காங்கமாட்டிக்கறன்” என்று கெடாவெட்டின் போது அவ்வளவு கூட்டத்திலும் பொறு பொறுவென்றிருந்தார் மாமன்காரன். மரகதம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாள் “என்னத்தையாவது ஒளரிக்கிட்டு இரு” என்று அவரை அசட்டையாகக் கையாளுவாள்.

கிடா வெட்டு முடிந்து இரவு கூறுபோடும் வேலைகள் நடந்த வண்ணம் இருந்தது.

சின்னசாமியும் அருளும் அதில் பங்கு கொண்டனர். சின்னசாமி குடலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அலசோ அலசோவென அலசி சுத்தப்படுத்தி பாங்கு செய்து கொண்டிருந்தார். அருள், சித்தப்பா சொல்லும் வேலைகளைச் செய்த வண்ணம் உதவியாய் இருந்தான்.

“என்னா உந்தம்பி ஊட்டுகாரிகள காணம்”

“ஆமா காணம், வேல வெட்டி இல்ல பாரு, காத்தால வந்துருவாங்க”

“அதென்ன காத்தால, வந்து கூடமாட வேல செஞ்சாதான ஆவும் போவும்”

“சின்னசாமி புள்ளைக்கு தெரட்டி வச்சாங்களே, அப்ப என்ன பண்ண நீயி வேணும்னே லேட்டு பண்ணி லேட்டு பண்ணிதான கூட்டிப்போன, நீ போயி கூடமாட வேல செஞ்சியா இல்ல என்னதான் செய்யவுட்டியா”

“நானென்னத்துக்கு வேல செய்யோனு, மொய்யி மட்டு இருவதாயிரம் வச்சன், அவ்ளோ மொய்யி ஆரு வச்சாங்க”

“இருவதாயரம் மொய்ய வச்சிட்டு அத நாப்பதாயர தடவ சொல்லி காமிச்சுப்புட்ட, ஊரெல்லாம் சிரிக்குது”

“ஆமா சொல்லோணும், சேந்தமங்கலத்துக்காரனோட அரும தெரியவாண்டாமா?”

“சோத்தாங்கையி கொடுக்கறது நொட்டாங்கைக்கு தெரிய கூடாது, இப்படி நீயே போய் பீத்திகரத போய் அரும எருமனு பெனாத்திக்கிட்டு இரு”

“ஏ உங்கப்பன் செத்தப்ப காரிய செலவுக்கு தடுமாறிட்டு இருக்கும் போது, நாந்தான கொடுத்தேன், நா மட்டும் கொடுக்கலனா அன்னிக்கி பொணத்தோட சேந்து எழவு ஊடு நாறிப்போயிருக்கும்”

“எங்கடா இத சொல்லலியேனு பாத்தேன், இப்புடி கொடுத்துப்புட்டு அவிங்கள அசிங்கப்படுத்துறதுக்கு நீ கொடுக்காமலே இருந்திருக்கலாம், அப்படி எழவெடுக்க கூட நாதியில்லாம போய்டல அங்க, பெரும மசுருக்கு நீயே கொண்டோயி நீட்டிட்டு, வியாக்கானம் பேசுறியா, இந்த லச்சணத்துல ஊருல நியாயம் பேசுற பெரிய மனுசன். உன் நாயத்துல கொண்டோயி பொட்ட நாய உடு” என்றாள் மரகதம் கோவமாக.

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று, அவளின் பதில்களுக்குப் பதிலடி கொடுப்பது அவரது நோக்கமல்ல. அவள் வீட்டாரை மட்டம் தட்டியாயிற்று. மரகதத்தை வெறுப்பேற்றியாயிற்று. அது போதும் அவள் திரும்ப பேசியதைப் பற்றிக் கவலையேதும் இல்லை அவருக்கு. அவ்விடம் விட்டு நகர்ந்து சமையல் வேலைகளைப் பார்க்க சென்றார்.

இரவு முதல் இப்பொழுது விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரை அனைவரிடமும் நன்றாக குசலம் விசாரித்தார். முகம் மலர்ந்து வரவேற்றார். விழுந்து விழுந்து உபசரித்தார் மச்சினனையும், மச்சினன் பையனையும் தவிர.

சின்னசாமியின் மனைவி மற்றும் மகளும், பெரியசாமியின் மனைவியும் வேகாத வெயிலில் செருப்பு தேயத் தேய நடந்து வந்து கொண்டிருந்தனர். பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீர் பத்தவில்லை. பேருந்தை உருட்டி எடுத்துவிட்டான். பேருந்து பாதி வழியில் வந்துகொண்டிருந்த போதே தண்ணீர் தீர்ந்துவிட்டது. தண்ணீர் தாகம், பாட்டிலில் உள்ள கடைசி சொட்டினை உறியும்படி இருந்தது.

வரும்பொழுதே ஊரின் அனைத்து வீட்டுக்கும் வரும் விருந்தினர்களைக் காண நேர்ந்தது. அவர்களுடன் ரெண்டு வார்த்தை கலந்துகொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் மேலும் இரண்டு வீடுகளில் அழைப்பு இருந்தது.

“வா செத்த நேரம் உக்கோரு” என்று பெரியசாமியின் மனைவி சொல்ல சாலையின் ஒரு வேப்பமர அடியில் சிறிய கல்லுக்கட்டு இருந்த இடத்தில் உட்கார்ந்தார்கள்.

“மதிய நேரத்துக்கு இங்கேயே அல்லாரும் சாப்புட்டுருவம். மரகதக்கா ஊட்டுக்காரரு அவ்வளவுதான் பேசியே கொன்னுருவாரு அல்லாரும் சாப்படாம போனா. இங்க தின்னுட்டு பொழுதோடயா போயி ஆளுக்கொரு ஊட்ல தலைய காட்டிட்டு கொஞ்சமா சாப்புட்டு  வந்துருவோம்” பெரியசாமியின் மனைவி அவரின் குணமறிந்து கூறினாள்.

அந்த வேப்பமரம் வெக்கையைக் கொஞ்சம் தணித்து, லேசாக காற்றினை கொடுக்க அது அவர்களின் வியர்வையை ஆவியாக்கி குளிர்காற்றாய் உடல்களைத் தழுவியது. சின்னசாமியின் பெண்  துவண்டு போய்விட்டாள். அங்கேயே அம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டாள். அவளின் விலகிய தாவணியைச் சரிசெய்துவிட்டாள் அவளின் அம்மா. மூவருக்கும் அங்கேயே அப்படியே தூங்கிவிடலாம் போலிருந்தது.

“என்னா பூக்காரமூடும், பழக்காரமூடும், களச்சி போயிட்டிங்களாட்டம். வாங்க வாங்க கறி தீந்துபோயிட போவுது, பந்திக்கு முந்தரதில்லியா” என்று அவர்களை ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு விருந்திற்கு மக்கள் நடந்து போய்கொண்டும், ஆங்காங்கே மரத்தடியில் நின்று கொண்டும் இருந்தனர்.

“இப்பவே லேட்டு, போனதுமே உங்கப்பன் சிடுசிடுங்கும், எந்திரி” என்று பிள்ளயை எழுப்பினாள்.

“புள்ளைக்கு பூவு வச்சூடலாம்ல, வெறுந்தலையா போட்டு கூட்டியார, நானும் இப்பதான் பார்க்கறேன்”

“ரெண்டா நேரமா இருக்குது, காத்துகீத்து அடிச்சிரும்னுதான் வைக்கல, ஆனா வூனா பொசுக்குனு காச்சல்ல உழுந்துருது, பையில வச்சிருக்கேன் அங்க போய்ட்டு வச்சூடறேன்”

“நல்லா சாப்புடு புள்ள, எலும்பா இருந்தீனா எப்புடி” என்று பெரியம்மாவின் புத்திமதிகளை கேட்டவாறு எழுந்து நடந்தாள். மீண்டும் வெயிலின் பிள்ளைகள் போல் நடக்க ஆரம்பித்தனர்.

மரகதத்தின் வீட்டை எட்டும் முன்னே ஐந்தாறு வீடுகள் கடந்து வருகையில் கறிக்குழம்பின் வாசம் மூக்கை துழைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் பசியை அதிகமாக்கிக் கொண்டே இருந்தது. என்னென்ன வகைகள் இருக்கும் என்று தங்களுக்குள் அவர்கள் யோசிக்காமல் இல்லை. தாகத்தின் நினைப்பு தப்பிப்போய் அசைவத்தின் நினைவலைகள் சூழ்ந்துகொண்டன. சுமார் இரண்டு கிலோ மீட்டர் பாதங்கள் நடந்து தேய்ந்த களைப்பு சட்டென கலைந்தது. அசைவத்தின் ருசியை ருசிக்க எண்ணங்கள் ஆர்பரித்துக்கொள்ள, வீட்டின் முன் போடப்பட்டுள்ள பந்தலின் உள் நுழைந்தனர்.

சின்னசாமியும், அருளும் பந்தி பரிமாறுவதில் மும்மரமாக இருந்தனர். முகம் வாட்டமுடையதாகவே இருந்தது இருவருக்கும். இரவு சரியாக தூங்கியிருக்கமாட்டார்கள் என்று நினைத்தார்கள். கண்கள் மரகதத்தைத் தேடின. நாத்தனார் மிடுக்கு சிடுக்கெல்லாம் இல்லாமல் கூடப் பிறந்தவள் போல் பாசம் காட்டுபவளைக் கண்கள் காண ஆவலுடன் இருந்தன. இருவரும் இயல்பாக அக்கா என்றே அழைக்க விருப்பப்பட்டனர் ஆரம்பத்திலிருந்தே.

இவர்களைக் கண்டதும் புன்னகை பொங்க ஓடோடி வாந்தாள் மரகதம். 

“வாங்க வாங்க நேத்தே வந்துருக்கலாம்ல, சரி வாங்க” என்று இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டாள்.

கொண்டுவந்த பூவையும் பழங்களையும் மரகத்திடம் கொடுத்தனர். மரகதம் ஆசை ஆசையாய் பொறந்த வீட்டு சீராக நினைத்து உரிமையோடு வாங்கிக்கொண்டாள்.

தாகத்தில் நாக்கு வறன்டவர்களுக்கு செம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஒரே மொடக்கில் தாகம் தீர தீர தண்ணீரைக் கண்டு பல நாள் ஆனது போல பருகினார்கள். ‘வெயில்ல வந்தது ரொம்ப தாகம் போல’ என்று திரும்பவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

இரண்டு பேரும் பசி மறந்து போய் சற்று முன் இருந்த அசைவத்தின் மீதான ஆர்ப்பரியம் மறந்தவர்களாக, தாகம் தீர்ந்தவர்களாகப் பந்தி பரிமாறுதலில் பங்கு கொள்ள எண்ணி  புது உற்சாகமுடன் ஈடுபட முற்பட்டனர்.

“அட உக்காருங்க செத்த நேரம், அதலாம் அவுங்க பாத்துக்குவாங்க, வெயில்ல களச்சி போய் வந்துருப்பிங்க” என்று தடுத்தாள் மரகதம்.

“இல்லக்கா சாப்புட்டுக்கலாம் பொறுமையா” என்று உற்றார் உறவினர் வீட்டு வேலைகளில் விஷேசங்களில் பங்குகொள்ளும் நாகரீகத்தினைப் பொருட்டு வேலையில் மும்மரமாகினர்.

பிள்ளை ச்சேரில் உட்கார்ந்து கொண்டாள். மிகவும் களைப்புற்று காணப்பட்டாள். ச்சேரில் தலையை ஒருபுறமாக சாய்ந்தவாறு அமர்ந்து இருந்தாள். 

வந்தவர்களை வா என்று ஒரு வார்த்தை கூப்பிடவில்லை மரகதத்தின் கணவர். முகத்தினைக் கூட அவர்கள் பக்கம் தப்பித் தவறி திருப்பிவிடக் கூடாது என்று கவனமாக இருந்தார். அதுவரை வந்திருந்த அனைவருக்கும் பார்த்து பார்த்து வரவேற்று சாப்பிட வைத்து, நல்லபடியாக பேசிக்கொண்டிருந்தவர், தேவையில்லாத, அநாவசியமான கோபத்தை வழியன தன்னுள் புகுத்திக் கொண்டவராகக் காணப்பட்டார். இவர்களுக்குத் தண்ணீர் தெளிக்காது வாடிப்போன பூ போன்று பொக்கென்று முகம் வாடிப்போயிற்று.

பந்தி  பரிமாறுவதில் மும்மரமாகத் தங்களை இணைத்துக்கொண்டனர். தண்ணீர் மட்டுமே போதுமென எண்ணிக் குடித்து குடித்து வியர்வையாய் வெளியேற்றிக் கொண்டிருந்தனர். கூட்டம் கனமென பெய்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வரும் தூறல் மழைப் போல ஒன்றிரண்டு பேராக வருவதும் போவதுமாக இருந்தனர்.

மரகதம் “சாப்புட சொன்னா  சாப்புட மாட்டனு பண்றிங்க” என்று மிகவும் சலித்துக்கொண்டாள். 

வேலை ஓரளவு முடிந்து மிகவும் சோர்வுடையவர்களாக ச்சேரினை பந்தலின் ஒரு பக்கமாக போட்டு உட்கார்ந்தனர். சின்னசாமிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. உட்கார்ந்தவாறே தூங்க ஆரம்பித்தார். மரகதம் மிகவும் கோபம் கொண்டவராகவும், தம்பிகள் வீட்டினை அவமானப்படுத்துவதை எண்ணி வருத்தமாகவும், விருந்தாளிகள் வந்து போகும் வேளையில் வெளிப்படையாக எதையும் பேசமுடியாமல் வாயைக் கட்டிக்கொண்டாள். ஊமையாகத் தோற்றமளித்தாள்.

இந்த இடம், பொருள், ஏவல் எல்லாம் அவளுக்குத்தான் அவளின் கணவருக்கு இல்லை. ஊர் நியாயம் பேசும் பெரிய மனுசன் என்றுதான் பெயர். வீட்டு காரியங்களில் சின்னப்பிள்ளைகள் தேவலாம் போல் இருக்கும். ஓலைக் கொட்டாயின் மீது விழுந்த மழையாய் பேச்சு படபடவென்று பேசுவார். அதனால் மற்றவர்களின் மனம் வாடுவதெல்லாம் நினைத்துப் பார்க்காத மண்ட கணம் உடையவராய் வாயிலே ஆட்டம் கட்டிக்கொண்டிருப்பார்.

பந்தியே முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு வார்த்தை அவர்களைச் சாப்பிட சொல்லவில்லை. சின்னசாமியும் அருளும் காலையிலிருந்தே சாப்பிடவில்லை. மரகதம் கேட்டதற்குச் சாப்பிட்டுவிட்டோம் என்று கூறிவிட்டனர். மிகவும் சோர்வடைந்தவர்களாய்க் காணப்பட்டனர். இன்னும் சிலபேர் சாப்பிட்டுக் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை மரகதம் கவனித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் பொறுக்கமாளாது என்பது போல, நியாயத்தை இப்பொழுதே கேட்டாங்க வேண்டும் என்னும் உத்வேகத்தில் அவர்கள் அருகே வந்து தனக்கென ஒரு சிம்மாசனமாக ஒரு ச்சேரை நகர்த்தி அமர்ந்தார் மரகத்தின் கணவர்.

“நேத்திக்கே வராம அப்புடி என்ன வேல,  நா நீங்க வருவிங்க வருவிங்கனு பாத்துக்கிட்டு கெடக்கேன், அவுங்களும் பூச முடிஞ்சதும்தான் வராங்க” என்று ஆரம்பித்தார்.

“அப்புடி என்னத்த சம்பாரிச்சு, என்னத்த நப்பி வச்சுட்டிங்க, இல்ல எங்களுக்குத்தான் சீரு செனத்தினு செஞ்சுபுட்டிங்களா” அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைக்க ஆயத்தமாகிவிட்டார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவரின் பேச்சுக்கள் கேட்காமல் இல்லை. மரகதம் அவ்வப்போது மிதமான எதிர்வினையாற்றினாள். இருந்தும் நிறுத்தின பாடு இல்லை. நாமும் சத்தம் போட்டால் பெரிய சண்டையாகி விடும், அனைவரின் முன்பும் எதற்கு சங்கடம் என்று இதழ்களைப் பிரிக்காமல் இறுக்கமாக ஒட்டிக் கொண்டாள்.

‘ஊர் நாயம் பேசும் பெரிய மனுசன் அவரப்போயி நாம என்னனு பேசுறது. என்னதான் சொல்லி காமிச்சு அசிங்கப்படுத்தினாலும் ஆத்திர அவசரத்துக்குனா அக்காவிடம்தானே கையேந்துகிறோம். நம்ம நிலைமையைதான் நாம் நொந்துக்கனும்’ என்று அவமானங்களை அமைதியாய் கடப்பதே சாலச்சிறந்த செயல் என்னும் தோரணையில் அவரின் பேச்சுக்களுக்கு எதிர்வினையோ, பதில்களோ தரமால் அமைதி காத்தனர்.

வெற்றிலை இரண்டினை எடுத்தான் அருள். நன்றாக பாங்கு செய்து சுண்ணாம்பு தடவி பாக்கினை வைத்து நான்றாக சுருட்டி கடவாய் பல்லில் திணித்தான். சாப்பிடாமலே வெற்றிலைப் பாக்கு போடுவதன் அர்த்தம் அவனுக்குத் தவிர அங்கு யாருக்கும் விளங்கவில்லை. நன்றாக ருசித்தவாறு அவசரம் இல்லாமல் மதிய நேர பசுவின் அசைப் போல் நிதானமாக மென்றுகொண்டே அவரின் பேச்சுக்களுக்குச் செவிக்கொடுத்திருந்தான்.

“என்னத்த பொழப்பு நடத்துறிங்க. சொந்த ஊருலதான இருக்கறிங்க ஒரு சென்டு நெலமாவது இருக்குதா? இப்புடியே இருந்தா எப்புடி? நா என் மச்சினமூடுனு பெருமையா சொல்லிக்க வாண்டாமா? ஒரு நல்ல நாளு பெரிய நாளுனு எதுனா செஞ்சு சப நெறஞ்சால பரவால, நான்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். திரும்ப எதுவும் வரக்காணம்” இடைவிடாது அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகளை மட்டும் அவர்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தார் அந்த உத்தமர். அவர்களும் செக்கில் விழுந்த மழைநீராய் ‘சிவனேனு’ பதிலளிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தனர்.

“உங்கூட்டுலையும் பொண்ணுருக்கு, எம்பையனுக்கு பொண்ணு கேக்க வரணும்னா நல்லா ஊடு கீடு கட்டி, பவுனலாம் சேத்தி வச்சி வசதி வாய்ப்பா இருந்தாதான பரவால” என்று கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் தன் மகனைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

சொன்னதுதான் தாமதம் வாயில் நிரம்பி இருந்த அடர் செந்நிற திரவத்தைப் பந்தலின் பந்தக்காலின் அடியில் ‘பொளிச்’ என்று  துப்பிவிட்டு, “அப்புடி வசதியா இருந்தாதான் பொண்ணெடுப்பனா, நீரு என்ன மசுருக்கு சொந்தக்காரனு இருக்கீரு, வசதியா இருக்கவங்கள மட்டும் விருந்துக்கு கூப்டவேண்டிதான, எங்கள என்ன வெளக்கெண்ணைய்க்கு கூப்டீங்க” என்று கோவமாகப் பேசி, இதுவரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்தியமைக்குப் பழிவாங்கியவனாய் திருப்தி அடைந்தான்.

“இன்னும் என்னா உக்காந்துக்கிட்டு இருக்கிங்க, வாங்க போலாம், ஏய் எந்திரிப்புள்ள” என்று தங்கச்சியும் உசிப்பிவிட்டு யாரையும் எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான்.

மாமன்காரன் வாயடைத்துப் போய்விட்டார். முகத்தில் ஈ ஆடவில்லை. இப்படி ஒரு பதிலையும், அதுவும் ஊமை போல அமைதியின் சொரூபமாய் இருக்கும் அவன் வாயிலிருந்து உதிர்ந்ததை அவரால்  இன்னும்  நம்ப  முடியவில்லை. விருந்தினர்கள் முன்பு அவருக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. மரகதத்திற்கும் திடுக்கென இருந்தது, நெஞ்சு படபடத்தாள். இருந்தும் மனதிற்குள் கொஞ்சம் ஆனந்தம்தான் ஒரே பேச்சில் கணவரின் வாயைக் கட்டிவிட்டான் என்று. மருமவன் சாப்பிடாமலே போறானே என்னும் மனக்குறையுமாய் இருந்தாள். இதற்கு மேலும் அவர்களை வற்புறுத்தி சாப்பிட சொல்வதில் அர்த்தம் இல்லை என்று அமைதியானாள்.

சின்னசாமியும், சித்தியும் அவனின் அம்மாவும் ‘என்ன இந்தப் பையன் இப்புடி பேசிப்புடிச்சி’ என்று பதற்றமானார்கள். அவனை ஏதும் சொல்வதற்கு வாய்பளிக்காமல், இன்னும் அங்கு நின்றால் பாவம் தன்னைப் பிடித்துக்கொள்ளும் என எட்டு வைத்து எட்டிப்போனான். இருந்தாலும் நமக்கில்லா ரோசம் அவனுக்காவது இருக்கே என்று அவன் பின்னே அவன் பாதத் தடத்தினை தங்களுக்கான பாதையாகப் பாவித்து அமைதியாய் அனிச்சையாக எழுந்து சென்றனர். மரகதம் அவர்களைத் தடுக்கவில்லை.

வெக்கை இன்னும் தாழ்ந்தபாடில்லை, முன்பிருந்த அதே காந்தல் தான். ஆனால் இம்முறை வெப்பம் வெளி உடலுக்கு மட்டுமே. உள்ளூர இருந்த காந்தல் குறைந்திருந்தது. மனதிற்குள் ஈரக்காற்று வருடிக் கொண்டிருந்தது. எல்லாரது மனதும் லேசாக ஆனது. தெரிந்த, பழக்கப்பட்ட வழிதான் என்றாலும் அவன் பாதங்கள் வழிகாட்ட பின் சென்றார்கள்.

வெக்கை தணிந்தது.

000

சொந்த ஊர் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். 2019 ல் இருந்து புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு புத்தகங்கள் வாசிக்கத் தெடங்கினேன். மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டம் 2022 முதல் நடத்தும் புத்தகத் திருவிழாவில் தன்னார்வளராக இணைந்து எனது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறேன். “புதுச் சட்டை” என்ற என் முதல் சிறுகதை திரு.பொன்குமார் அவர்கள் தொகுத்த நாமக்கல் மாவட்ட சிறுகதைகள் புத்தகத்தில் வெளியானது. 

The post வெக்கை தணிந்தது… first appeared on Nadukal.

செங்கொடி நிறத்தையொத்தது தக்காளியின் வண்ணம்

31 May 2025 at 23:15

கிணற்றை மேலிருந்து எட்டிப்பார்த்து “இனிமே கெணத்துக்குள்ள இந்த சோப்பு, ஷாம்பு  போட்டு குளிக்கிற சோலிய விட்டுப்போடுங்க. அப்படி குளிக்கிறதா இருந்தா -இந்த கெணத்துப் பக்கம் வராதிங்க” என்று மூஞ்சில அடிச்சாப்புல பேசினான் பழனி. 

   கிணற்றுக்குள் குளித்துக்கொண்டிருந்தவர்களின் சிலபேர் மனதில்  ’சோப்புப்போடக்கூடாது,மயிறு போடக்கூடாதுன்னு பேசுறான் -என்னமோ சொந்த தோட்டங்கெணக்கா.. ‘என்று நினைப்போடியது.

      “செரி மாமா ,இனிமே கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கமாட்டாங்கே” என்று வேகமாக சொன்னான் குளித்துக்கொண்டிருந்த பாண்டி.

      “ஆமா இதுமாதிரி முப்பத்துரெண்டு தடவை சொல்லிட்டிங்க. நீங்க இப்படி சொல்றத கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு..” என்று கோபமாக சொன்னான் பழனி.

சிறிதுநேர அமைதிக்குப்பிறகு..

    “பொழுதுபோகாம வெளையாட்டுக்கா சொல்றேன்….நீங்க கெணத்துக்குள்ள சோப்பு, ஷாம்பு போடுறத்தண்ணிய காய்கறிகளுக்கு மோட்டார் போட்டு பாய்ச்சினா காய்கறிக எல்லாம் ஏதோ ஒரு மாதிரி சூம்பி போயிதான் காய்க்கும். அதிகமா சூத்த உழுகும் – இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியுந்தானே…? நானே அடுத்தவங்க தோட்டத்தை சாவியத்துக்கு (குத்தகை) எடுத்து விவசாயம் பார்த்துக்கிட்டு இருக்கேன். அதப்புரிஞ்சுக்காம.. இப்படி பண்ணுறிங்களே” என்றான் எரிச்சலில் பழனி.

ஊரில் சாவியத்துக்கு வருகிற தோட்டங்கள் நாலஞ்சு இருந்தாலும்- இந்த தோட்டம்தான் பழனிக்கு கண்ணில்பட்டது. ஊரின் எதுப்பத்தில் இருப்பதால் நாலு எட்டில் வீட்டிலிருந்து வந்துவிடலாம். அதுவுமில்லாமல் கோடைகாலத்தில்கூட, இந்த தோட்டக்கிணற்றில் ஒரு குறுக்கமளவு பாய்ச்சுகிற தண்ணீர் ஊறும்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு(குத்தகை) எடுப்பவர்,வருஷத்துக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டணும் தோட்டத்து உரிமையாளருக்கு.

கட்டிட வேலைக்குப் போய்க்கொண்டிருந்த பழனி. ஒருநாள் வேலையின்போது சாரத்திலிருந்து விழுந்து காலில் வசமான அடிபட்டு ஆஸ்பத்திரிக்கும்,வீட்டுக்கும் அழைந்தபோதுதான் திடீரென்று பேசாம இனி கட்டிட வேலைக்குப் போறத விட்டுட்டு நாலு ஆட்டுக்குட்டி,ஒரு பசுமாடு வாங்கி -ஏதாவது தோட்டத்த சாவியத்துக்கு எடுத்து, காய்கறி,பயிர்,பருத்தி ஏதாவது போட்டு… ஆடுமாடுகளுக்கு எதாவது நாத்து, கீத்து விதைச்சு அப்படியே பொழப்ப ஓட்டவேண்டிதுதான் என்ற யோசனை வந்தது.

அவனுக்கு விவசாயத்தில் ஏற்கனவே கொஞ்சம் அனுபவமிருந்தது. அப்பா இருக்கும்வரை அவருடன் சேர்ந்து கரிசக்காட்டில் கூடமாட விவசாயம் பார்த்தான். படிக்கும்போது விடுமுறை நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க காட்டுக்கு போவான்.

பழனியுடைய மூன்று அக்காகளின் திருமண செலவுக்காக – அவனுடைய அப்பா இரண்டு கரிசக்காடுகளை விற்ற பிறகு பழனிக்கும் விவசாயத்திற்கும் இடைவெளி அதிகம் ஆகிப்போனது.

அதுவுமில்லாமல் பழனி சோட்டுடைய வயதுக்காரர்கள் பெரும்பாலும் கல்கிடங்கு, கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும்- இவனும் அந்த மாதிரி வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.

தோட்டத்தை சாவியத்திற்கு எடுக்கிற விஷயத்தை பழனி தன் மனைவியிடம் வந்து சொன்னபோது சந்தோஷப்பட்டு சரி என்றாள். அதற்குப்பிறகு அவள் ‘யாரு தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்துப் பார்க்கப்போறிங்க’ என்று கேட்டாள். அதற்கு ‘குருசாமி தோட்டத்த எடுத்துப் பார்க்கப்போறேன்’ என்று பழனி சொன்னதும்,அவளுக்கு அந்த நொடியே எரிச்சல் வந்தது.

அவள் அப்படி எரிச்சல் படுவதற்கு காரணம் இருந்தது.

பழனி சாவியத்துக்கு எடுத்திருக்கும் தோட்டத்தின் வடக்குப்புறம் ஒரு காட்டைத்தாண்டி சுப்புச்சாமி காடு இருந்தது. 

சுப்புச்சாமியுடைய அப்பா பல வருஷத்துக்கு முன்னால் பழனியோட அப்பாவிடம் வாங்கிய கடனை அடைக்க  முடியாததால் தனக்குச் சொந்தமான காட்டை வாங்கிய கடனுக்காக வச்சுக்கிறச்சொல்லி தந்தார் .

இப்போது மாதிரி அப்போ உடனுக்குடன் பத்திரப்பதிவு செய்யும் பழக்கம் இல்லை. வாங்குனு துட்டுக்கு இந்தா இந்த காட்ட வச்சுக்கோ என்று கடன் வாங்கியவர் சொன்னால் போதும்- அடுத்த நொடியே கடன் கொடுத்தவருக்கு சொந்தமாகிவிடும் நிலம். அப்போதிருந்த மனிதர்கள் சொன்ன சொல்லுக்கு உண்மையாக இருந்தார்கள்- அதனால் அப்போது பத்திரப்பதிவு எதுவும் செய்யாமல் காட்டை பயன்படுத்த ஆரம்பித்தார் பழனியுடைய அப்பா. அதுவே பின்னாளில் வினனையாகிப்போனது.

பழனி கொஞ்ச வருடம் கழித்து காட்டை தன் பெயரில் பத்திரப்பதிவு செய்ய சுப்புச்சாமியை அழைத்தபோது காட்டு விலையின் மதிப்பு கூடியிருந்தது. அதனால் சுப்புச்சாமி ஒன்னுக்கு ரெண்டா மண்டக்கனமா ஏதாவது சொல்ல ஆரம்பித்தான்

”அந்தக் காலத்தில் எங்கப்பாவ எப்படியோ ஏமாத்திதான

காட்ட வாங்குனிங்க.. அவர மாதிர நானு ஏமாற ஆளில்ல”னு சொல்லி,  காட்டை ஏழுதித்தர மறுத்தான்.

அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு பக்னு ஆகிப்போச்சு பழனிக்கு.  கோபத்தில் “ஏன்டா இப்படி மாத்திப் பேசுற. உங்கப்பா

எங்கப்பாகிட்ட அன்னைக்கு வாங்குன காசு மதிப்புக்கு இந்த காட்டை வச்சுக்கிற சொன்னார். இன்னைக்கு இந்த காட்டோட மதிப்பு கூடியதுமே நீ ஏன் இப்படி பேசுற” என்றான் கோபத்தில்.

”அதெல்லாம் தெரியாது, எனக்கு இந்த காடு இன்னைக்கு எவ்வளவு மதிப்புப்போதோ அதத்தந்தா எழுதித்தாரேன்” என்றான் திமிறாக சுப்புச்சாமி. அவன் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டு படக்குனு மல்லுக்குப் பாய்ந்தான் பழனி.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரைப்போயி இறுதியில் தீர்ப்பு சுப்புச்சாமிக்குதான் சாதகமாய் வந்தது.  

அதிலிருந்து பெரும் பகையாகிப்போனது.

பழனி மனைவி பெரும்பாலும் மற்றவர்களுடன் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ நினைப்பவள்- அதனால்தான் சுப்புச்சாமி காட்டுக்கு பக்கத்திலிருக்கிற அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்க வேண்டாமென்றாள். அதையும் மீறித்தான் அந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்தான் பழனி.

மீண்டும் கிணற்றுக்குள் குளித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, திடீரென்று இனி இவெங்கள சொல்லி பயனில்லை.நாளைக்கு தக்காளிச் செடி காயெடுத்தப் பிறகு இவெங்க வாட்டுக்கு சோப்பு,ஷாம்பு போட்டு குளிப்பாங்கெ. அதுக்கு முன்னாடி நாம சுதாரிச்சு கெணத்துப் படியை வேலிமுள்ள வச்சு அடைச்சு வைத்துவிடுவதுதான் நல்லது. இல்லேனா நம்ம பொழப்பு கெட்டுப்பபோகும் என்று நினைத்துக்கொண்டே தக்காளி நட்டியிருந்த பாத்திகளைப் பார்த்தான் பழனி. அப்போது மூனு,நாளு ஆடுகள் தக்காளிச் செடிகளை கடித்துக்கொண்டிருந்தன.

 “ஏய்..ச்சூ ..”என்று அரட்டிக்கொண்டே கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்தான் உச்ச கோபத்தில்.

ஆடுகள் களைந்து ஓடின.அதன் பின்னாடியே வெளமெடுத்து விரட்டிக்கொண்டே  ஓடினான். “ஆடுகள கட்டிப்போட்டு வளர்ப்பாங்கெளா… பெரிய மயிரு மாதிரி அவுத்துவிட்டு வளர்க்குறாங்கே..இன்னோரு தடவ வந்திச்சினா.. வசமா ஏதாவது செஞ்சு போடணும். அப்பதான் ஆடுகள அவுத்து விடமாட்டாங்கெ.. அவன் அவன் கடன்வாங்கி கப்பவாங்கி வெவசாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்கே” என்று ஏதேதோ புலம்பிக்கொண்டு ஓடி களைத்துப்போயி நின்றான். ஓடியாந்ததால் சாரத்திலிருந்து விழுந்து அடிபட்ட காலு சுருக்சுருக்னு குத்தியது .

திரும்பி வந்து பாத்திகளைப் பார்த்தான். ஆடுகள் கடித்ததால் தக்காளிச்செடிகள் மொட்டக்கட்டையாக இருந்தன.

இதை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று நினைத்ததுமே நினைவு

பின்னோக்கிப்போனது பழனிக்கு.

தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததுமே முதல்வேலையாக திக்கம்திக்கம் முளைத்திருக்கும் மஞ்சனத்தி செடிகளை வாச்சாத்தால் தூர்வரை வெட்டி எடுத்தான் பழனி. பிறகு ஆங்காங்கே முளைத்திருக்கும் அருகுகளை மம்பட்டியால் கொத்தினான். தண்ணி ஓடும் வாய்க்கால்களின் இருபுறமும் நல்ல மேடுபடுத்தினான்.

இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுத்ததில் பழனி மனைவிக்கு ஆரம்பத்தில் கோபமிருந்தாலும், போகப்போக அவளும் பழனியோட சேர்ந்து தோட்டத்தில் வந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள் .

என்னதான் வேலை பார்த்தாலும் அவளுக்கு உள்ளூர ஒருவித பயம் இருக்கத்தான் செய்தது.

தோட்டத்தில் எப்பையாவது ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போது தற்செயலாக சுப்புச்சாமி காட்டை பார்க்கும்போதெல்லாம், படுபாவிப்பையன் வாங்குன காசுக்கு காட்டை எழுதித்தரமாட்டெனு சொல்லிட்டானே…என்று சுப்புச்சாமியை மனதுக்குள்ளே வைதாலும்-அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்.

    இதேமாதிரி எதோ ஒரு நினைப்பில் பழனி, சுப்புச்சாமி காட்டைப் பார்த்து கோபப்படும்போதெல்லாம் “இதுக்குதேன் இந்த தோட்டத்தை சாவியத்துக்கு எடுக்கவேண்டுமென்னு தலையில அடிச்சு அடிச்சுச் சொன்னேன். மண்ணோடு மனுஷன் மல்லுக்கட்டுன பெழைச்சுக்கலாம். மனுஷனோடு மனுஷன் மல்லுக்கட்டுனா பெழைக்கமுடியுமா..?” என்று கோபப்பட்டு சத்தமிடுவாள்.

    அப்படி ஒருநாள் அவள் வையும்போதுதான் பேச்சை மாற்றுவதற்காக “செரி செரி கொச்சுகொச்சுனு சொல்லாத தோட்டத்தில என்ன விதைக்கலாம்னு சொல்லு”என்றான் .

அவள் “தக்காளி நாத்து போடுவோம் ஒரு குறுக்கத்துக்கு.. மிச்ச ஒரு குறுக்கத்தில சோள நாத்து வெதைச்சிடுவோம் ஆடுமாடுளுக்கு”என்றாள் வேகமாக.

பழனி “தக்காளிக்குப் பதிலாக கத்தரி நாத்து இல்லேனா மிளாகச்செடி போடுவோமா..?”என்றான்.

அவள் விடாப்பிடியாக “தக்காளி நாத்தே போடுவோம்.. போனாவாட்டி இராமசாமி சின்னையா அவரு தோட்டத்துல தக்காளி நாத்து நட்டிதான் நல்ல விலைக்கு போட்டார்” என்றாள்

பிறகு என்ன நினைத்தானோ பழனி. அவள் சொல்வதற்கு சரி என்றான்

முதலில் தோட்டத்தை டிராக்டரின் சட்டிக் கலப்பை கொண்டு உழுதான். அதற்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வந்தது. பிறகு ஒரு மழைக்குப்பிறகு டிராக்டரின் கொற்கழுப்பை (பல்லுக்கலப்பை) கொண்டு உழுதான்.

உழுத கரிசமண் பொறித்த ஆட்டு(ஆடு) இரத்தம்போல காட்சியளித்தது .

விருதுநகர் விதைக்கடைகளில் தக்காளி விதை வாங்கிவந்து தோட்டத்தின் ஈசான மூலையில் பன்னிரெண்டுக்கு பன்னிரெண்டு அளவை மூன்று பங்காக பிரித்திருந்த பாத்திகளில் தக்காளி விதையை பாவி, தண்ணியை விட்டான் பழனி.

பிறகு உழுது போட்டதை முழுவதும் பாத்தி கட்டுவதற்கு மூன்று வேலை ஆட்களை ஏற்பாடு செய்தான் பழனி. ஒரு குறுக்கத்தை முழுவதும் பாத்திகட்ட அந்த மூன்று ஆட்கள் நாலு நாட்கள் எடுத்துக்கொண்டனர்.

தக்காளி நாத்து பிடுங்கி நட்டும் அளவு வளர்ந்தபிறகு பத்து வேலை ஆட்களைக்கொண்டு ஒரே நாளில் ஒரு குறுக்கத்திற்கு முழுவதும் நட்டி முடித்தான்.

தக்காளி நாத்து நட்டிய ஆரம்பத்தில் ஐந்து ஆட்கள்வீதம் என ஒரு குறுக்க பாத்தி முழுவதும் களையெடுக்க ஒருவாரம் ஆனது.அந்த ஒரு வாரத்தில் களை எடுத்த கூலி ஆறாயிரம் வந்தது.

இப்போதே இப்படியின்ன.. செடி பூவெடுக்கேல இன்னொரு களை எடுக்கனும்.. பிறகு செடி காய்வைக்கேல ஒரு களை எடுக்கனும்.. யப்பா என்று மனதுக்குள்ளே ஒருவித அயற்சி வந்தது பழனிக்கு.

இதனால் என்னவோ தக்காளி எப்படியாவது நல்ல விலைக்குப்போகணும் என்று அப்பைக்கப்ப வேண்டாத தெய்வமில்லை.

நாளாகநாளாக பாத்திமுழுவதும் பசேரென்று தக்காளி நாத்து வளர்ந்து வருவதைப்பார்க்க அவ்வளவு சந்தோஷமாகியிருந்து பழனிக்கும்-அவனது மனைவிக்கும்.

இனி கொஞ்ச நாளில் செடி காய் வைத்துவிடும் என்ற நினைப்பே அவனுக்கு சந்தோஷத்தை தந்தது.

அப்படிப்பட்ட சந்தோஷதத்தை அழிக்க வந்த அந்த ஆடுகளை இபபோது நினைக்கும்போது அவ்வளவு கோபம் வந்தது.

 பையிலிருந்த பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டே ஆடுகளால் கடிபட்ட இலையை தடவிக்கொண்டு தற்செயலாக சுப்புச்சாமி காட்டைப்பார்த்தான் பழனி.

 சுப்புச்சாமி அவனது காட்டில் ஏதோ வேலையில் மும்மரமாக இருந்தான். அப்போது அவனருகே உள்ள வேப்பமர நிழலில் காலையிலிருந்து மஞ்சனத்தி செடியில் கட்டிப்போடப்பட்டிருந்த அவனது ஆடுகள் அசைபோட்டுக்கொண்டிருந்தன.

      **********************************

       “சொன்னா கேட்டயா..? மானாங்கணியா அவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்க… இவங்க தக்காளி போட்டு நல்ல வெலைக்கு போட்டாங்கன்னு சொல்லி இப்படி மண்ணாக்கிட்டயே பொழப்ப.. இப்ப தக்காளி கிலோ ரெண்டு ரூபாயக்குதான் அருப்புக்கோட்டை, விருதுநகர் சந்தையில வாங்குறாங்கே.. இந்த ரெண்டு ரூபாய் புளுத்திக்குதேன் இத்தன நாளு தக்காளி நாத்து நட்டி இருபதாயிரத்துக்கு மேல முதல்போட்டு இப்படி நாயா ஒழச்சம்மா..வக்காளி நெனச்சாலே எரிச்சக்கூதியாயிருக்கு.. ஏதோ சொல்லுவாங்களே உன்னி புடிச்ச மாட்டையே (மாடு)உன்னி புடிக்கும்னு.. அதுமாதிரிதான் நம்ம நெலம ஆகிப்போச்சு.. மூசாம கத்திரிக்கா, மெளகாய் போட்டிருந்தாகூட நல்ல விலைக்கு போயிருக்கும்..தேவையில்லாம ஓம்பேச்சைக்கேட்டு.. ச்சேய் தோட்டத்துபக்கம் போகவே எரிச்சலாயிருக்கு.. என்னத்தான் செருப்பால அடிச்சிக்கிறணும்.. வெவசாயம் பார்த்து பெழைக்கிறதுக்கு பதிலா.. நாலுசுன்னியப் பார்த்து ஊம்பிட்டுப் போயிறலாம்”என்றான் கோபமாக பழனி.

     “இப்படி நடக்கும்னு நம்மளுக்கின்னா தெரியுமா.. எல்லாம் நம்ம தலையெழுத்து..“ என்று புலம்பினாள் பழனியோட மனைவி.

அதற்கு பதில் பேசாமல் பீடியை எடுத்து பற்ற வைத்தான் பழனி.

  “நடந்தது.. நடந்திருச்சு.. இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். நாளைக்கு வெள்ளைனையா அருப்புக்கோட்டைக்குப்போயி தக்காளியை போட்டுவாங்க”என்றாள்.

“ஆமா கிலோ ரெண்டு ரூபா புளுத்திக்கு அத பஸ்ஸில ஏத்தி அதுக்கு லக்கேஜ் எடுத்து நொட்டுறாங்கே..”

 “ச்சீ அப்படி பேசாதிங்க.. ரொம்ப நாளைக்குப்பிறகு நாம வெவசாயம் பார்த்து மொதமொத வெளஞ்சத.. அதப்போயி இப்படி எகத்தாளமா பேசணும்னா.. சாமி நமமளப் பார்த்து சிரிச்சடப்போகுது”

“அதேன் சாமி ஏற்கனவே நம்ம பொழப்ப பார்த்து சிரிச்சிருச்சே.. இனி புதுசா சிரிக்கணுமாக்கும்”

“மொத மொத வெளஞ்சது.. அதுக்காகனாச்சும்.. போயி சந்தையில போட்டுட்டு வாங்க.. இல்லேனா நான் போயி போட்டுட்டு வாறேன்” என்றாள் வேகமாக பழனியோட மனைவி.

அவள் அப்படிச்சொன்னதுமோ அரைகுறைமனதோட “செரி நானே போயிட்டு வாரேன்” என்றான் மனது நொந்து பழனி.

மறுநாள் காலை அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் தக்காளியை கொண்டு செல்வதற்கு  ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஆயுத்தமாக நின்றான் பழனி. அவனருகே இரண்டு பெட்டிகளிலிருந்த தக்காளிகள் புரட்சிக்கு பேர்போன செங்கொடி நிறத்தில் இருந்தன.

அந்தப்பேருந்து சாத்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்,கோட்டூர் குருசாமி கோவில் வழியே கடந்து வருவதால் ஏற்கனவே கூட்டமாக வந்தது. பஸ் வந்து நின்றதுமே கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போனான் பழனி.

பஸ்ஸின் சைடு டிக்கிகளில் ஏற்கனவே பூக்கள் மூடை காய்கறி மூடைகள் அடைத்துக்கிடந்தன. அதனால் அதுக்குள்ளே ஏற்றி அடைக்க முடியாது. ஏற்கனவே பஸ்ஸுக்குள் கூட்டமாக இருப்பதால் உள்ளேயும் ஏற்ற முடியாது. இந்த பஸ்ஸை விட்டால் இன்னும் ஒரு மணிநேரம் காத்துக்கிடக்கணும் என்று நினைக்கும்போது எரிச்சலாக வந்தது.அதனால் என்னவோ பழனி தக்கிமுக்கி தக்காளிப்பெட்டியை படியில் இருப்பவர்களை விலகச்சொல்லி உள்ளே ஏற்ற பார்த்தான்.

அதுக்குள்ள பஸ்ஸுன் நடத்துனர் எரிச்சல்பட்டு “ஏய் தக்காளிப்பெட்டியை உள்ள ஏத்தி எடஞ்சல் பண்ணாத..” என்றார்.

தக்காளிப்பெட்டியை சுமந்துகொண்டு வியர்த்து விறுவிறுக்க“பெறகு எங்க ஏத்த, ஒசக்கவா” என்றான் பதட்டத்தில்.

“ஆமய்யா..வேமா டாப்ல ஏத்துய்யா..” என்று எரிச்சல்பட்டு பேசினார் பஸ் நடத்துனர்.

பதினாலு கிலோ தக்காளிப்பெட்டியை தலையில் சுமந்து கொண்டே வேகமாக அரக்கப்பரக்க பஸ்ஸின் பின்புறமுள்ள ஏணிப்படிக்கட்டுகளில் ஏறி பஸ் மேற்கூரையில் போயி இறக்கி வைக்கும்போது கால் சுள்ளுனு வலித்தது பழனிக்கு. இந்த வலியில் இன்னொரு தக்காளிப்பெட்டியையும் பஸ்ஸின் உயரே ஏற்றினான்.

பஸ்ஸுக்குள் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட்டுவிட்டு மெட்டுக்குண்டு ஊர் வந்ததும் உள்ளிருந்து இறங்கி பஸ்ஸுன் மேற்கூரையில் உள்ளவர்களுக்கு டிக்கெட் போட ஏறினான் பஸ் நடத்துனர்.

  பழனி முப்பது ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட்கள் எடுத்தான். ஒன்று அவனுக்கு -மற்ற இரண்டு டிக்கெட் ,தக்காளிப்பெட்டி லக்கேஜ்களுக்கு.

எடுத்த டிக்கெட்டை சட்டையின் மேல்பையில் வைத்துவிட்டு, மனதுக்குள்ளே கணக்குப்போட ஆரம்பித்தான்

கொண்டுபோறது இருபத்தெட்டு கிலோ தக்காளி. ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்குத்தன் போகுது.மொத்தமா போட்டாக்கூட அறுபது ரூபாய்கூட வராது.. இதுக்கு லக்கேஜ் டிக்கெட், எனக்கு டிக்கெட்டு, டீ செலவு …ச்சீ நெனச்சாலே எரிச்சலாத்தான் வருது என்று நினைத்துக்கொண்டே பீடியை பற்ற வைத்து ஊத ஆரம்பித்தான் பழனி.

பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பாக கடந்து பாலவநத்தம் ஸ்டாப் வந்து நின்றதும் திடீரென்று பஸ்ஸில் டிக்கெட் செக்கர் (பரிசோதகர்) ஏறினார்.

கொஞ்ச நேரத்தில் பஸ்ஸூக்குள் டிக்கெட் பரிசோதித்துவிட்டு, பஸ்ஸின் மேற்கூரையில் பரிசோதனை பண்ண ஏறினார் பரிசோதகர். ஒவ்வொரு ஆளாய் பரிசோதித்து வந்தவர், பழனியிடம் வந்ததும்,தக்காளிப்பெட்டி லக்கேஜ் எல்லாம் கணக்குப்பண்ணி மூன்று டிக்கெட்டை எடுத்து காண்பிக்கச் சொன்னார்.

    டிக்கெட் எடுத்தாச்சே என்ற மிதப்பில் மேல்சட்டைப்பையிலிருந்து  டிக்கெட்டை எடுத்தான்.ஒரு டிக்கெட் குறைந்தது. அப்போது திறுதிறுனு முழித்தான். பீடி எடுக்கேல டிக்கெட் விழுந்திருச்சுபோல என்ற யோசனை ஓடியது பழனிக்கு.

“என்னய்யா.. ஒரு டிக்கெட் குறையுது. இப்படி ஏச்சுதான் இந்த தக்காளிப்பெட்டியை ஏத்திட்டு வாரயா.. லக்கேஜ் எடுக்காம ஒன்னும் எடுக்காம வர- இதுன்ன ஒங்கொப்பன் வீட்டு பஸ்ஸா.. ஒன்னமாதிர நாலுபேரு இப்படி பண்ணுனா புளுபுளுப்புனு இருக்கும்…ஒனக்கெல்லாம் அறிவில்ல…கட்டுய்யா  பைன்ன (அபராதம்)என்றார் டிக்கெட் பரிசோதகர்.

“சார் லக்கேஜ் டிக்கெட்டெல்லாம் எடுத்துட்டேன் சார்.. எப்படியோ டிக்கெட் கீழே விழுந்திருச்சு.. வேணும்னா கண்டெக்டர கூப்பிட்டு கேளுங்க ” என்றான் அத்தனேபேர் முன்னிலையில் பதட்டப்பட்டுக்கொண்டே பழனி.

பரிசோதகர் விசில் அடித்தார். பஸ் நின்றது. சில அழைப்புகளுக்கு பிறகே பஸ் நடத்துனர் பஸ்ஸின் மேற்கூரைக்கு வந்தார்.

பஸ் நடத்துனரைப் பார்த்து பரிசோதகர் “இந்தாளு தக்காளிக்கு லக்கேஷ் டிக்கெட் எடுத்தானா..? ”என்றார்.

அத்தனை கூட்டத்திற்கு டிக்கெட் கொடுத்திட்டு வந்ததால் நடத்துனருக்கு சரியாக ஞாபகமில்லை -அதனால் பழனி டிக்கெட் எடுத்தானா என்ற சந்தேகத்தில் பதில் சொல்லமுடியாமல் திறுதிறுனு முழித்தார் நடத்துனர்.

“என்னய்யா இப்படி முழிக்கிற.. நீயெல்லாம் என்னத்ததேன் இத்தன வருஷம் கண்டெக்டரா இருந்தயோ..”, என்றார் பரிசோதகர்.

பிறகு பழனியைப்பார்த்து “நீ டிக்கெட்டா எடுத்தயோ.. இல்லையோ எனக்குத்தெரியாது- ஆனா இப்ப ஓங்கிட்ட லக்கேஜ் டிக்கெட் இல்லை.. அதனால இப்ப நீ பைன் கட்டித்தான் ஆகணும்”என்றார் பரிசோதகர்.

“நான் டிக்கெட் எடுத்தேன் சார்” என்றான் பழனி கெஞ்சிய குரலில்.அப்போது எல்லோரும் அவனை அனுதாபமாக பார்த்தனர்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது  அபராதத்தைக்கட்டு”என்றார் பரிசோதகர் மண்டக்கணமாக.

கெஞ்சிப்பார்த்தான் பழனி. பரிசோதகர் விடுவதுமாதிரி தெரியவில்லை.

அப்போது கோபத்தில் தக்காளிப்பெட்டியை ஒரு பார்வை,பரிசோதகரை ஒரு பார்வை பார்த்த பழனி.

இந்த தக்காளிப்பெட்டிக்குத்தான லக்கேஜ் எடுக்குல.. இது இருந்தாதான பிரச்சனை என்று சொல்லிக்கொண்டே  தக்காளிப்பெட்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வலிகடுக்கும் கால்களால் எத்தி பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சரித்துவிட்டான் பழனி. அப்போது பதட்டத்தில் “ஏய் ஏய்”என்று கத்தம்போட்டார் பரிசோதகர்.

பஸ்ஸின் மேற்கூரையிலிருந்து சிவப்பு அருவிபோல கீழே கொட்டிய தக்காளிகள் சாலையெங்கும் உருண்டு பரவி திசைதிசைக்கு சிதறின. பரிசோதகர், கண்டெக்டர், பஸ்ஸில் இருந்தவர்கள் சாலையில் போவோர்  வருவோர் எல்லோருக்கும் அப்போது எப்படியோப்போனது.

சாலையில் சிதறிய தக்காளிகளைப் பார்த்ததும் ஆங்காங்கேயிருந்த பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன.

 கண்கலங்கிக்கொண்டே பஸ்ஸிலிருந்து படபடவெனு இறங்கி குதித்து  வெக்குவெக்குனு பஸ் போகிற எதிர்திசையில் நடையைக் கட்டினான் பழனி. அப்போது ரொம்பப்பேர் ஓடிப்போய் பழனி கையைப்பிடித்து இழுத்து தாஜா பண்ணினர். அவன் எல்லோர் கைகளையும் உதறிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

பழனி போவதையே  பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ‘ச்சே எல்லாம் என்னாலதான். ஒரு லக்கேஷ் எடுக்காததிற்குப்போயி இப்படி அவன பாடாய்படுத்திட்டமே..கொஞ்சம் பொறுத்துப்போயிருக்கலாமோ.. “ என்று தன்னையறியாமலே கண்கலங்கினார்.சிலநொடியில் விசில் சத்தம் கேடடதும் பஸ் நகர ஆரம்பித்தது. அப்போது டயர்களுக்கு அடியில் கிடந்த   தக்காளிகள் நசுங்கி தெரித்தன.

   வெறுப்பில் நடக்கநடக்க வியர்வை அதிகரித்தது பழனிக்கு. பீடியை எடுத்து பற்றவைத்தான். எப்போதாவது சரக்கு அடிக்கும் பழக்கம் கொண்டவன்- இன்று சாலையில் இடதுபுறம் ஒரு ஒயின்ஷாப் தட்டுப்பட்டதுமே ஒரு குவாட்டர் வாங்கப்போனான்.

   குவாட்டர் பாட்டிலில் போட்டிருந்த விலையைவிட, கமிஷனாக கூடுதலாக ஐந்து ரூபாய் கேட்டான் ஒயின்ஷாப்பின் சேல்ஸ்மேன்.

தன் சட்டைப்பையிலிருந்து ஜந்து ரூபா எடுத்து சேல்ஸ்மேனுக்கு கமிஷனாக கொடுத்தபோது, திடீரென்று பழையது ஒன்று ஞாபகம் வந்தது பழனிக்கு.

 அப்போது பழனி பன்னிரென்டு படித்துட்டு ஆறேழு வருஷம் நிலையான வேலையில்லாமல் அழைந்தபோது, தமிழக அரசு ஒயின்ஷாப்பு வேலைக்கு சேல்ஸ்மேன், சூப்பர்வைசர் பிரிவுகளில் ஆள் எடுத்தது.

    இந்த விஷயத்தை தெரிந்த பழனியுடைய பெரியப்பா மகன்

சேல்ஸ்மேன் வேலைக்கு பழனிக்கும், தனக்கும் சேர்த்து விண்ணப்பம் வாங்கி வந்தான்.

விண்ணப்பத்தை நிரப்பிய பழனி- அப்பாகிட்ட போயி “ஒயின்ஷாப்பு வேலைக்கு ஆள் எடுக்குறாங்க கவர்மென்ட். அதுக்குதான் இந்த விண்ணப்பம்.வேலைக்கு சேரணும்னா முன்கூட்டியே ஐம்பாதயிரம் ரூபா கவர்மெண்டுக்கு கட்டணுமாம்” என்றான்.

    விஷயத்தை புரிந்துகொண்ட அவர் “ஏன்டா.. சம்சாரி வீட்ல பொறந்திட்டு போயும் போயும் சாராயக்கடையில வேலை பார்க்கப்போறிங்கிற..“ என்று சொல்லிக்கொண்டே கோபத்தில் விண்ணப்பத்தை சரட்டுசரட்டென்று கிழித்தெறிந்துவிட்டார்.

இதை இப்போது நினைக்கும்போது அப்பாமேல் அவ்வளவு கோபம் வந்தது பழனிக்கு.

இப்போது ஒயின்ஷாப்பில் வேலை பார்ப்பது எவ்வளவு பெரிய கௌரவம். ஒயின்ஷாப்பில மட்டும் இன்னியாரம் வேலைக்கு சேர்ந்திருந்தா சம்பளத்துக்கு சம்பளம்.. குவாட்டருக்கு அஞ்சு ரூபாய் கமிஷன்னு.. நல்லா வாழ்ந்திருக்கலாம்.

தேவையில்லாம அப்பா செஞ்ச வேலையால, இப்ப இரண்டு ரூபாய்க்கு விக்கிற தக்காளியை தூக்கிட்டு ஊரெல்லாம் அசிங்கப்பட்டு தெரிய வேண்டியாதிருக்கு.. எல்லாம் என் தலையெழுத்து என்று எண்ணிக்கொண்டே விரக்தியில் குவாட்டர் பாட்டிலை திறந்து அப்படியே ராவாக வாயில ஊத்தினான்.

தக்காளி விலை சரிவு, பஸ்ஸில் பரிசோதகர் நடத்திய விதம் ஆகியவற்றால் நெஞ்சு வயிறெல்லாம் பழனிக்கு ஏற்கனவே எரிந்துபோனதால் -இந்த ராவான குவாட்டரின் எரிச்சல் அவ்வளவாக தெரியவில்லை. போதை  ஏறியதும் எல்லாம் அந்த முண்டையால வந்தது என்று மனதுக்குள்ளே தன் மனைவியை வைதான் பழனி.

சிலநொடியில் தோட்டத்தில் காய்த்து நிற்கிற தக்காளிதான் கண்முன்னே வந்து வந்து எரிச்சலைத் தந்தது.

   கொஞ்ச நேரத்தில் தோட்டத்திற்கு வெக்வெக்னு வந்த பழனி கையில் ஒரு மூங்கில் கம்பை எடுத்துக்கொண்டு சிவிரென்று காய்த்து தொங்குகிற தக்காளியையெல்லாம் அடித்து சாய்க்க நெருங்கினான்.

இவனுக்கு முன்னாடியே நாலைந்து ஆடுகள் தக்காளிகளை கடித்து மேய்ந்து நாசம் பண்ணிக்கொண்டிருந்தன.

நாம பண்ண நினைத்ததை இந்த ஆடுகள் பண்ணிக்கொண்டிருக்கே என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டே, -அதற்கு உறுதுணையாக பழனியும் கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால் விளைந்து கொழுத்திருந்த தக்காளிகளை சராமாரியாக அடிக்க ஆரம்பித்தான். அவன் வெறுப்பில் அடிபட்டு விழுந்த தக்காளியிலிருந்து சாறுகள் வெதுவெதுப்பாக வடிந்தன-அவனின் கண்ணீரைப்போல..!

அப்பொழுது பக்கத்து காட்டிலிருந்த சுப்புச்சாமி கட்டிப்போட்டிருந்த தன்னுடைய ஆடுகளை காணோமே என்ற பதட்டத்தில் பழனி சாவியம் பார்க்கிற தோட்டத்தை  நோக்கி  ஓடி வந்துகொண்டிருந்தான். அப்போது பழனி பக்கத்தில் சுப்புச்சாமியுடைய ஆடுகள் தக்காளிகளை மேய்ந்துகொண்டிருந்தன.

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

The post செங்கொடி நிறத்தையொத்தது தக்காளியின் வண்ணம் first appeared on Nadukal.

காது குத்து

31 May 2025 at 23:11

               மெத்தைக் கட்டிலின் ஓரத்தில் படுத்திருந்த மேனகாவை எழுப்ப அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் எழுப்பியே தீர வேண்டும். சின்னவன் சுகனை அவளுக்கு அண்டையில் படுக்க வைத்து அவள் தட்டிக் கொண்டிருக்கிறாள். அவன் தூங்கினாலும் கலைந்து நெளிந்தாலும் விளிம்பில் தவறிக் கீழே விழும் அபாயம் அதிகம். எழுப்பினால் இந்த இராத்திரியில் ஒரு போர்க்களம் நிச்சயம் என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் குட்டி போட்டப் பூனையாக கட்டிலையே சுற்றி சுற்றி வந்தான்.

கால்மாட்டில் போய் கொஞ்ச நேரம் நின்று அவளையே பார்த்தான். சற்று தள்ளி நடுக்கட்டிலில் தாராளமாய் படுத்துறங்கும் பெரியவள் ஷாலினியைப் பார்த்தான். மேனகா மீது ஆத்திரமாக வந்தது. அவன் மீதான கோபத்தில் வேண்டுமென்றே செய்கிற இந்த வினையை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியாமல் முழித்தான். மெல்ல கொலுசின் மீது கை வைத்து காலை உலுக்கினான். கண்களைத் திறக்காமலேயே கணநேரத்தில் உதைப்பது போலத் தூக்கிச் சொண்டிய கால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.

‘அட சனியனே முழிச்சிட்டுதான் படுத்துருக்கியா?’

வெளியறைக்குச் செல்வது போல பாசாங்கு காட்டி

“இந்த வெளையாட்டுலாம் காலையில வச்சிக்க.. புள்ளைய தூக்கி நடுவாக்குல போட்டுப் படு” என்றான் சத்தமாக.

“எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. நீ போய் தூங்குற வேலையப் பாரு” என அவளிடமிருந்து சன்னமாக பதில் வந்தது. அதன் பொருள் ‘தூங்கித்தான் பாரேன்’ என்பதென அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இயலாமையில் காலை தரையில் உதைத்துக் கொண்டான்.

“இப்ப என்ன? உன் குடும்பத்தையே கூப்பிடணும். அவ்வளவு தானே? சரி காலைல போய் நேர்லயே சொல்லிட்டு வர்றேன் போதுமா?”

“ஒண்ணும் தேவையில்ல.. உனக்குத் தேவை மடியில உக்கார வைக்க ஒரு மாமன் தான? என் தம்பிய கூட வர வேணாம்னு சொல்லிடுறேன். உன் சொந்தத்துல ஒரு மாமன ரெடி பண்ணு” அவளிடமிருந்து அலட்சியமாக பதில் வந்தது.

மனதுக்குள் நினைத்துக் கொண்டான். தனது சொந்தத்தை இழுக்கத் தொடங்கி விட்டாள்.

‘ரைட்.. சாமி இப்போதைக்கு மலை ஏறாது’

எதுவும் பேசாமல் மீண்டும் வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். சுகனது வலது கால் கட்டிலை விட்டு வெளியே நீண்டிருந்தது. இந்தக் கிறுக்கியை நம்பவும் முடியாது. அப்படியே தூங்கிப்போய் விடுவாள்.

தலைமாட்டிலிருந்த இரண்டுத் தலையணைகளை எடுத்து சத்தம் காட்டாமல் குனிந்து சுகனுக்கு நேராக தரையில் வைத்தான். பிள்ளை தவறினால் கீழே விழும் கோணத்தை ஆராய்ந்து தலையணையை நகர்த்தி நகர்த்தி அவன் வைத்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள். சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இன்னொரு பக்கம் பாவமாகவும் இருந்தது.

ஷாலினிக்கு முடி இறக்கும்போது அவன் தாத்தா தவறிவிட்டதால் விமரிசையாக செய்ய முடியவில்லை. சுகனுக்காவது விலாவாரியாக செய்யலாமென நினைத்தால் துட்டு தேறாதென தட்டிக் கழிக்கிறானென்ற எரிச்சல் அவளுக்கு.

உள்விளக்கை அணைத்துவிட்டு வெளியே வாசலுக்கு வந்து காற்றோட்டமாக அமர்ந்தவனின் முகத்துக்கு நேராக விட்டில்கள் பறந்தன. ச்சூ போ! எனத் தட்டிவிட்டான். ஒரு சுற்று அலைந்து வந்து மீண்டும் முகத்தை மேலும் கீழுமாய் அளவெடுத்துக் கொண்டிருந்தவற்றை விரட்டத் தோன்றாமல் விளக்கொளியிலிருந்து விலகிப்போய் அமர்ந்து மாமனார் வீட்டுக்கு செல்வது பற்றி யோசிக்கத்தொடங்கினான். பதினான்காம் நெம்பர் பஸ் தூரத்தில் செல்வது வெளிச்சப்புள்ளியாகத் தெரிந்தது.

அடுத்தநாள் மாமனார் வீட்டில் அவரது இரண்டு அண்ணன்களுக்கும் சொல்லியே ஆகவேண்டுமென கறாராக சொல்லிவிட்டார்கள். இவன் பாத்ரூம் போவது போல வெளியே வந்து மேனகாவை அழைத்தான்.

‘என்னடி இது? உங்க பெரியப்பாக்களுக்கும் சொல்ல சொல்றாங்க? இதுக்குத் தான் உன் தம்பி மட்டும் போதும்னு சொன்னேன். கேட்டியா நீ?’

மறுமுனையில் அவள் குரல் அலட்சியமாக ஒலித்தது.

‘நீதான் வெறும் சக்கரைப்பொங்கல்னு சொல்லிட்டியே? அப்புறம் என்ன வலிக்குது? நான் அரைப்படி சேத்துப்போட்டு பொங்க மாட்டனா?’

அவன் ஆபத்தான காலங்களில் பயன்படுத்தும் அஸ்திரத்தை எடுத்தான்.

‘பாப்பா… அங்கலாம் சொன்னா அப்புறம் எங்க சித்தப்பா வீட்டுக்கும் சொல்லணும். இல்லனா பாரு பொண்டாட்டி வூட்டு ஆளுங்கள மட்டும் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டான்னு பேர் வச்சிடுவாங்க.. ப்ளீஸ் பாப்பா’

அவள் அதற்கும் அசரவில்லை. ‘பரவால்ல சொல்லு. நான்தான பொங்கப் போறேன்? நீயா செய்யப்போற? கூட மாட எங்க அம்மா இருக்குல்ல.. வெறும் சக்கர பொங்கலுக்கு எதுக்குடா இவ்வளவு பொலம்பல்?’

கிடா வெட்டாததை தெளிவாக குத்திக் காட்டுகிறாள். தாளமுடியாத எரிச்சலை அடக்கியபடிப் பேசினான்.

‘இப்ப என்ன சொல்ல வர்ற? நீ சொல்ற ஆளுங்கள எல்லாரையும் அழைச்சிடுறேன். ஆனா நானு எக்கேடு கெட்டா உனக்கு என்ன வலிக்குது? கடன் நான் தான கட்டணும்?’

‘என்ன கடன் பண்றாங்க உனக்கு? இதுக்கே இப்படி.. இன்னும் கெடா வெட்டி விருந்து வச்சா வயிறு பொங்கிடும் போல..’

மீண்டும் அதையே… எதுவும் பேசாமல் போனை அணைத்தான்.

மனதுக்குள் எதையோ முணுமுணுத்துக் கூட்டினான்.

‘ரெண்டு ,மூணு ஒரு ஏழு மொத்தமா இருவது டிக்கெட் வரும். அதுக்கு தனியா ஒரு டிராவல்ஸ் பேசணும். சாமி சோறுன்னாலும் அதுக்குன்னு வெறும் சக்கர பொங்கலையேவா போட்டு கூட்டி வர்றது? முடியெறக்க ஆளு வர்றதுக்குள்ள பசிக்கிதுனு கதறுங்க.. ஒரு நாலு கிலோ ரவையாச்சும் கிண்டிப் போடணும். அதுக்கூட பெரிய செலவு இல்ல. ரிட்டர்ன் வர்றப்ப கண்டிப்பா ஒரு ஓட்டல்ல இறக்கித்தான் ஆவணும். சைவம்னு வச்சாக்கூட எம்பது ஒரு இருவது எட்டு ரெண்டு பதினாறு.. அங்க ஒரு ஆயிரத்தி அறுனூறு. வண்டிக்காசு ஒரு எட்டு பூஜ சாமான் ரெண்டாயிரம் எப்படிப் பார்த்தாலும் பன்னெண்டு பதிமூணு ஆயிடும் போலருக்கே’

சேகர் போன வாரமே வந்து சலித்துக்கொண்டது ஞாபகம் வந்தது. போர் போட்டபோது வாங்கிய தொகையில் இன்னும் இருபதாயிரம் பாக்கி நிற்கிறது. வடுகத்தம்பட்டி கனகு மாமாவுக்கு வேறு மாடு பிடித்தக் காசு இன்னும் தராமல் இருக்கிறான். எதையும் புரிந்து கொள்ளாமல் மேனகா செலவு இழுத்து விடுவதாகத் தோன்றியது.

தட்டைக் கழுவி ஊற்ற வெளியே வந்த அத்தையிடம் மற்ற வீடுகளில் சொல்லிவிட்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான்.

மறுநாள் காலை சித்தப்பா வீட்டுக்கு சொல்லப் போனபோது சித்தப்பா அவருடைய பங்கு நியாயத்தைச் சொன்னார்.

‘மொட்ட அடிக்கிற சரி.. உன் குடும்பத்தோட முடிஞ்சா பரவாயில்ல. பெரிய மாமனாருங்க வராங்க.. நான் வரேன்.. உன் மாமன் வேற வரான்னு சொல்ற.. இத்தன குடும்பத்த கூட்டிட்டு போயி வெறும் சக்கரப் பொங்கல போட்டு அனுப்புறது என்னா கதை?’

இவன் திக்கென நிமிர்ந்தான்.

‘அதுக்கு?’

‘அதுக்கு என்னானா என்ன சொல்றது? மேனகாவ பொண்ணு கேட்டுப் போனப்பவே கஞ்சப்பயகுடும்பம்னு உன் பெரிய மாமனாரு கேவலமா பேசுனாப்ல.. பாப்பாவுக்கு மொட்ட அடிச்சப்பவும் ஒண்ணும் செய்யல’

‘அது தாத்தா செத்ததால ஒண்ணும் செய்யாம வுட்டாச்சு’ என்றான் அவசரமாக.

‘ஆமாமா.. அதனால தான் சொல்றேன். இப்பவும் செய்யாம வுட்டா நல்லாருக்காதுல்ல. கோழியாவது புடிச்சிக்கலாம். ஒரு ரெண்டரை கிலோவுல நாலு நாட்டுச் சேவல் புடிச்சா போதும். நெறமா செஞ்சிப் போட்டுடலாம்’

‘அடச்சை..’ மனதுக்குள் சிரித்துக் கொண்டான். எருக்குழியை கிளறி நாசம் செய்கிறதென பக்கத்து காட்டுக்காரன் போட்ட சண்டையில் புரட்டாசி முடிந்த மறுநாளே இருபது உருப்படிகளை குஞ்சும் கோழியும் சேவல்களுமாக கொண்டு போய் டவுன் கடையில் விற்றுவிட்டு வந்திருந்தான்.

சித்தப்பா தன்மானத்தை வேறு தொட்டுக் காட்டிவிட்டார். இதற்கு மேல் மறுப்பு சொல்ல முடியாது. அவன் கடைக்குச் சென்றபோது மாலைக் கருக்கல் ஏறியிருந்தது. உள் நுழையும் முன்பே நிதானமாக கூண்டில் பார்வையை ஓட்டினான். பதினைந்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் கீழடுக்கிலும் ஐந்தாறு சேவல்கள் மேலடுக்கிலும் நின்றிருந்தன. அவற்றில் மூன்று சேவல்கள் தன்னுடையதைப் போலத் தோன்றியது. அவற்றையே பிடித்துக் கொள்ளலாமென விலை கேட்டான்.

‘உயிர் எடை கிலோ நானூறு வரும்ண்ணா..’

‘என்ன லோகு.. முந்நூத்தம்பதுக்கு தானே என்கிட்ட வாங்குன? அதுக்குள்ள விலை ஏறிடுச்சா? குறைச்சு சொல்லு’

‘கட்டுப்படியாவாதுண்ணா.. நோம்பி நேரம்.. இந்த வெலைக்கே கிடைக்கலண்ணு ஆளா பறக்குறாங்க’

‘கொடுமையா இருக்குது லோகு..’ தன் சேவல்கள் தன்னிடமே விலையேறி வருவதை நினைத்து சிரிப்பதா அழுவதா என யோசித்தான். காதுகுத்து முடித்து மொத்தமாக பார்த்துக் கொள்ளலாமென முடிவெடுத்துக் கொண்டு கோழிகளை வண்டியில் கட்டினான். மொத்தம் ஐந்து சேவல்கள். குடல், முடி நீங்கலாக பதிமூன்று கிலோ தேறுமென கணக்கு போட்டான். இது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை. இவனுக்கே கொஞ்சம் பக்குவம் தெரியும். மேனகாவின் தாய்மாமா மனைவி நன்றாக சமைப்பாள். வேறு வழியில்லை. அவர்களிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டியது. வண்டியை கிழக்காக தலைச்சங்காடு பக்கம் திருப்பினான்.

வண்டியை வாசலில் நிறுத்தியதும் மேனகாவின் தாய்மாமா ஓடிவந்து வரவேற்றார். களத்தில் கட்டிலைப் போட்டு அமர்ந்தார்கள். உள்ளறையில் சின்னத்திரையில் மிளிர்ந்த இனிமே தான் ஆரம்பம் சீரியல் வெளியிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.

‘அதெல்லாம்  பிரச்சினையில்ல. ஒரு இருவது இருவத்தஞ்சு டிக்கெட்டுனா நாமளே சமாளிச்சிடலாம். நான் வந்துடுறேன்..’ என டீயை ஆற்றியபடியே மேனகாவின் அத்தை சொன்னதும் இவனுக்கு நிம்மதியாக இருந்தது. டீயை ஊதிக் குடித்து எழும்பவும் மேனகாவின் சின்ன தாத்தா மகன் வண்டியை வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது. இவன் அந்த அந்தியிலும் வியர்த்துப்போய் நின்றான். அவர்கள் குடும்பத்தில் மூன்று பேர் அண்ணன்தம்பிகள்.

‘யாரு மருமகப்பிள்ளையா? வாங்க வாங்க.. காதுகுத்தாமே.. கேள்விப்பட்டேன். என்னைக்கு?’

‘நாளாறன்னிக்கு மாமா.. நாளைக்குத்தான் வந்து சொல்லலாம்னு இருந்தேன்’ என வழிந்தான்.

‘அதுக்கென்ன மாப்ள.. அதான் குத்துக்கல்லாட்டம் இங்கேயே நிக்கிறனே.. இங்க சொன்னா போதும்’ என அவர் மீசையை நீவியபடி சிரித்தார்.

‘இல்ல மாமா.. மத்த ரெண்டு மாமாவுக்கும் சொல்லணும்ல.. ‘ என இழுத்தான்.

‘அட.. என்கிட்ட சொன்னா என்ன? எந்தம்பிகளுக்கு சொன்னா என்ன? நீங்க தனியாளா சின்னப்படுறது தெரியாதா எங்களுக்கு? இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நீங்க மத்த வேலைய பாருங்க.. நாங்க கண்டிப்பா வந்துடுவோம்.. எனக்கும் டீ போடு கண்ணு’ என்றபடியே சேரில் அமர்ந்து கால்களை நீட்டி முறுக்கி கொட்டாவி விட்டவரை வெறித்துப் பார்த்தான். வரும் வழியில் எத்தனை பேரென எண்ணிக் கொண்டே வந்தான். இப்போது எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியிருந்தது.

நல்ல இருளில் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வாசல் விளக்கு வெளிச்சத்தில் மாட்டுக் கொட்டகை பைப்பில் யாரோ கிடாவை கட்டியிருந்தார்கள். அது புது இடத்தில் நிற்காமல் கத்திக் கொண்டே வட்டமாக மண் பறித்துக் கொண்டிருந்தது.

வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்த மேனகா அவனைக் கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டு களத்திலேயே நின்றாள். அந்த சிரிப்பில் விஷமத்தனம் இருப்பதாகப்பட்டது. கோழிகளை கீழே இறக்கி வைத்தபடி ‘யாருது ஆடு? அவுந்துக்கிட்டு வந்துடுச்சா?’ எனக் கேட்டவனை சிரிப்பை நிறுத்திவிட்டு பரிதாபமாகப் பார்த்தாள் அல்லது பரிதாபமாக பார்ப்பது போல நடித்தாளென்றும் சொல்லலாம். முகத்தை இயல்பாக வைக்க முயற்சித்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பதை கவனிக்கையில் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.

‘உன்னத்தான் கேட்குறேன்.. கெடா யாருது?’

‘நம்மளது தான்.. ‘ மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டே.

‘மேனகா.. ஏற்கனவே செம்ம டென்ஷன்ல வந்துருக்கேன். வேணாம் ப்ளீஸ்’

‘தெரியும்.. இப்பதான் மாமா போன் பண்ணார். சின்ன தாத்தா வீட்ல வந்துருந்தாங்களாமே..’

அவள் சிரிப்புக்கான காரணம் புரிந்தது.

‘அத விடு. கெடா யாருது?’

‘நம்மளது தான்..’

அவன் நேராக தொட்டிக்குப் போய் வாளித் தண்ணீரை எடுத்து தலைக்கு ஊற்றிக்கொண்டான். சத்தம் கேட்டு அவன் அம்மாவும் வெளியே வந்தாள்.

‘இப்ப சொல்லப் போறியா இல்லையா?’

‘நான் என்னப்பா பண்ணேன். உங்க மாமா சொன்னாருனு வெடிமூக்கன் தான் வந்து கட்டிட்டுப் போனாரு’

அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. ‘அவன் எதுக்கு இத வந்து கட்டிட்டுப் போனான்?’ அவளை வேகமாக நெருங்கியவனை குறுக்கே புகுந்து அம்மா தடுத்தாள்.

‘அவக்கிட்ட எதுக்குடா எகிறுற? உன் மாமனுக்கு போன் பண்ணிக் கேளு’

மாமா போனை எடுத்ததும் அடக்கிக் கொண்டு கேட்டான்.

‘மாமா.. அவன் கெடா எதுக்கு இங்க நிக்கிது?’

‘அட நீ சொன்னனு தானப்பா அவன் சொன்னான்..’

‘என்னனு?’

‘காதுகுத்துக்கு கெடா வேணும்னு தம்பி சொன்னாப்ல.. நம்மகிட்ட பதமா இருக்கு.. என்ன பண்றதுன்னு கேட்டான். சரி போய் வீட்ல கட்டிட்டு போன்னு சொன்னேன்’

‘நான் எங்க மாமா கெடா கேட்டேன்? கோழி மட்டுந்தான் சொல்லிட்டு இருக்கேன்..’

‘அப்படியா? ஊருல நீ கோழினு யாருகிட்டயாவது சொல்லியிருப்ப.. அவங்க கெடாவும்னு நினைச்சிருப்பாங்க. அதனால என்னடா இப்ப? செய்யறதே செய்யுற? கிடா வெட்டாம என்ன காதுகுத்து?’

‘காசு இருந்தா செய்ய மாட்டனா மாமா? ஏற்கனவே ரொம்ப டைட்ல போகுது? ஒண்ணுமே புரியல’

‘அடப்போடா.. எவன் இப்ப கடன் வாங்காம விசேசம் பண்றான்? அப்புறம் உன் மாமனார் வீட்ல வெறும் கோழிக்கறிய மட்டும் போட்டு வரும்படி வாங்கிக்கிட்டான்னு சொல்ல மாட்டாங்களா? அதெல்லாம் சீர் வரும்ல? அதுல சமாளிச்சிக்கலாம்’

‘என்னவோ போங்க.. என்னை கேட்காமலேயே எல்லாம் நடக்குது. இப்ப வெடிமூக்கனுக்கு எப்படி காசு தர்றது?’

‘அட அவன் ஒரு ஆளு.. அதெல்லாம் சொல்லியாச்சு. உடனேலாம் காசு தர வேண்டியது இல்லடா.. குவாட்டருக்கு மட்டும் கொஞ்சம் கவனிச்சு விட்டுடு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குடுத்துக்கலாம்’

அவன் எதற்கும் சமாதானமடையாமல் முனகியபடியே போனை அணைத்தான். ஓடிப்போய் மீண்டும் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டவன் தொட்டியின் மீதே அமர்ந்து கொண்டான்.

வெடிமூக்கனைப் பற்றி ஊருக்கே நன்றாகத் தெரியும். தண்ணி போடும் வரை குழைந்துப் பேசுவான். போதையேறியதும் நடு இரவில் வந்து நின்று கொண்டு சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவான்.

‘ஒரு குவாட்டர வாங்கி ஊத்திவுட்டு என் கிடாய லவட்டிக்கிட்ட பாத்தியா?’  என வில்லத்தனமாகச் சிரித்து மானத்தை வாங்கி விடுவான். இது போன்ற காட்சிகள் ஏற்கனவே ஊரில் நடந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் அண்டா, மானிய விலையில் வாங்கிய சொட்டு நீர் பைப்புகள், ஊன்றுவதற்காக வைத்திருந்த ஒட்டுரகத் தென்னங்கன்று என பொருட்கள் வேறு வேறாக இருந்தாலும் சத்தம் அதுவாகத் தான் இருக்கும்.

திரும்பி கிடாவைப் பார்த்தான். எப்படியும் பன்னிரண்டு கிலோ தேறும். பதமான இளங்குட்டி. அடுத்த ஒரு நாளுக்குள் தேடியலைய முடியாது. எதுவும் பேசாமல் எழுந்து வீட்டுக்குள் போனான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் மேனகா சமாதானம் செய்வதுபோல பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

‘ஒண்ணும் வேணாம். எல்லாம் சமாதானம் ஆகிட்டேன்..’ என நிமிர்ந்துப் பார்த்து சிரித்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

‘என்ன சங்கதி? நம்பவே முடியல..’

‘பின்ன? சாமி காரியம்ல.. சலிச்சிக்கிட்டா செய்ய முடியும்? ‘

என்றவனின் தலையை பரிவாகக் கோதிவிட்டவளை ஏக்கமாகப் பார்த்தான்.

‘ஆனா இதோட போதும்ப்பா.. இதுக்கு மேல பாடி தாங்காது’

மேனகா கலகலவென சிரித்தாள். இவன் அதை பயன்படுத்திக் கொண்டான்.

‘எப்படியும் கிடா விருந்துனு ஆகிடுச்சு. பங்காளிங்க ஊர்ல முக்கியமான ஆளுங்ககிட்ட போய் சொல்லிட்டு வந்துடுறேன்’

‘ஆமா.. நானே சொல்லணும்னு நினைச்சேன். காலைல மொத வேலையா அதப் பாருங்க.. ‘ என்றபடி சுகனிடம் நகர்ந்தவளை நிறுத்தினான்.

‘அப்படியே…’

அவள் என்னவென்பது போலப் பார்த்தாள்.

‘இல்ல.. எல்லாருக்கும் சொல்றதுனு முடிவாகிடுச்சு. அப்படியே மதிவதனிகிட்டயும் சொல்லட்டுமா?’

‘அதான பாத்தேன்..’ இதற்காகத் தானா உன் கோபம் காணாமல் போனதென்பது போலப் பார்த்தாள்.

மதிவதனியை அவன் ஒரு காலத்தில் காதலித்தான். தூரத்து உறவு முறை. மதிவதனியின் குடும்பம் வசதியாக இருந்ததில் இவனுக்கு பெண் தர மறுத்தது. இருவரும் ஊரை விட்டுப் போய் திருமணம் செய்து கொள்ளுமளவுக்குச் சென்று அடிதடியாகி கண்ணீரோடு பிரிந்ததெல்லாம் தனிக்கதை. அதன்பிறகு மதிவதனி ஓமலூருக்கு மேற்கே ஒரு வி.ஏ.ஓ.வை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டாள். திருமணமானப் புதிதில் அனைத்தையும் மேனகாவிடம் சொல்லி அழுதிருக்கிறான். அவன் நேர்மையை மேனகா நிரம்ப நேசித்தாள்.

இளையராஜாவின் ‘மாலை கருக்கலில் சோலைக் கருங்குயில்..’ பாடலை அவன் கேட்கும்போதெல்லாம் ‘ஓ… மதிவதனி ஞாபகமோ…’ என கூடவே கேலியாகப் பாடுவாள். மதிவதனியும் ஊருக்கு வரும்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வந்து பேசிவிட்டுப் போவாள். என்ன பேசினாலும் இனிமேல் ஒன்றும் நடக்காதென்ற ஏக்கப் பார்வைகள் இருவரிடமுமே எழுவதை அவள் சென்றபிறகு மேனகா கிண்டல் செய்வாள். அவனை ஒன்றும் தெரியாதது போல பம்மவிட்டு இரசிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.

‘ப்ளீஸ்ப்பா.. கூப்பிடுறேனே..’

ஏற்கனவே நொந்திருப்பவனை கெஞ்சவைக்க வேண்டாமென முதலிலேயே சம்மதம் தெரிவித்ததில் அவன் வெட்கம் கொண்டான்.

‘ஐயே.. வலியுது பாரு..’ என சிரித்தபடியே சுகனிடம் சென்று படுத்தாள்.

அவர்கள் அதிகாலையிலேயே கோயிலை அடைந்திருந்தார்கள். அவனது குலதெய்வம் திட்டக்குடிக்கு கிழக்கே அமைந்திருந்தது. எப்படியும் போய் வருவதற்குள் பொழுதாகிவிடுமென்பதால் இந்த அதிகாலை புறப்பாடு. சமையலுக்கு ஐந்தாயிரம் ரூபாயில் ஆள் பேசியிருந்தான். மாமாவிடம் வண்டி வாடகை இதர செலவுகளுக்கென கையிருப்பு போக இருபதாயிரம் கடன் வாங்கியாயிற்று. ஒரு மினி ஆட்டோ தனியாக தயார் செய்து கிடாவோடு சமையல் பாத்திரங்களை அதில் இட்டு நிரப்பியிருந்தார்கள். ஒரு டிராவல்ஸ் வாகனம் இரண்டாகியிருந்தது. அது மட்டுமின்றி பெரிய மாமனார் வகையறாக்கள் தனி வண்டி ஏற்பாடு செய்து வருவதாகச் சொன்னார்கள். அதற்கு தன்னிடம் காசு கேட்க மாட்டார்கள் என மேனகா உறுதியளித்தது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால் பிரச்சினை வேறு மாதிரியாக உருவெடுத்திருந்தது. பெரிய மாமனாரின் மகன்கள் வெடிமூக்கனோடு கூட்டு சேர்ந்திருந்தார்கள். ‘மாப்ள வீட்டு காதுகுத்துல கச்சேரி இல்லனா எப்படி? அதான் மாப்ளைக்கு சிரமம் வேணாம்னு நாங்களே செலவு பாத்துக்கிட்டோம். கடைசில கணக்கு சொல்றோம்’ என்பதை அவர்கள் ரொம்பவும் சீரியசான தொனியில் சொன்னார்கள்.  குவாட்டர் பாட்டில்கள் நிரம்பிய இரண்டு அட்டைப் பெட்டிகள் இறக்கப்பட்டு அருகிலிருந்த முள்காட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. அடிக்கடி கருப்பனாரை திரும்பிப் பார்த்து ‘அமைதி அமைதி’ என சொல்லிக் கொண்டான்.

பொங்கலிட்டு முடித்து கிடாய்க்கு மாலையிட்டு சாமி முன் நிறுத்தினார்கள். தீர்த்தம் விழுந்ததுமே துளிர்த்தல் நலம். ஆனால் உடனடியாக வாக்கு கிடைக்காதது கண்டு அனைவரும் பதட்டமடைந்தனர். மேனகா கீழே விழுந்து உருண்டு வேண்டினாள்.

‘சோதிக்காத சாமி.. எப்படியாவது என்னை காப்பாத்தி விடுப்பா..’ கொஞ்சம் விட்டால் அழுது விடுபவன் போல இவனும் மனமுறுகினான்.

கைமாற்றி தீர்த்தம் தெளித்தார்கள். மூன்றாவது முறையாக தெளிக்கச் சொன்னபோது பூசாரி மறுத்தார். ‘என்னமோ குறையிருக்கு.. பாத்து சரி பண்ணுங்க’ என்றார். அதற்குள் தகவல் பரவி கச்சேரியில் மையமிட்டிருந்தவர்கள் உட்பட கூட்டம் கூடிவிட்டது. ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். அவனது அம்மாவை வந்து வேண்டச் சொன்னார்கள். அவள் தெற்கு பார்த்து தூணில் பிடிவாதமாக அமர்ந்திருப்பதைக் கண்டு மாமா ஓடிப்போய் அழைத்தார்.

அவள் ஒரே திசையைப் பார்த்தபடி ‘அது எப்படிடா துளுக்கும்? நான் தான் ரெட்டக் கிடா வெட்டுறதா வேண்டியிருந்தேனே..’ என்றதும் கூட்டத்தில் சலசலப்பு பரவியது.

‘அடக் கொடுமையே.. இதென்னடா கூத்து?’ என்று யாரோ கூவினார்கள்.

இவன் முறைப்பதைப் பார்த்ததும் எழுந்து நின்று ‘இவன் தான் சக்கர பொங்கலோட போகட்டும் னு முனகிகிட்டே இருந்தான். அப்புறம் பொங்கல் கோழியாச்சு கோழி கிடாயாச்சு.. ரெட்டக் கிடானு சொல்லியிருந்தேன்னா என்னை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டான்? எப்படி முறைக்கிறான் பாரு..’ என கொண்டையை அவிழ்த்து முடிந்தாள்.

பூசாரி ஓடிவந்து ‘ஒண்ணும் தப்பில்ல.. நமக்கு தெரிஞ்ச இடத்துல பேசிட்டேன்.. இப்பவே போனீங்கன்னா இன்னொரு கிடா புடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.

அவன் கிடாவைத் திரும்பி பரிதாபமாகப் பார்த்தான். அது ஈரம் பரவிய சுகத்தில் நின்றபடியே கண்களை சொக்கியிருந்தது.

வெடிமூக்கனை அழைத்து தான் விசேஷங்களுக்கு மட்டும் அரிதாகப் போட்டுக்கொள்ளும் அரை பவுன் மோதிரத்தை கழட்டிக் கொடுத்தான். 

‘வடக்க போய் பாலம் ஏறி இறங்குனா டவுனு.. ஏதாவது ஒரு அடகுக்கடைய புடி. அப்புறம் வெரசா பூசாரி சொன்ன எடத்துக்கு போய்ட்டு வந்துடு’  எனக் கூறி உடன் ஒரு பங்காளியை வண்டியில் ஏற்றி அனுப்பினான். திரும்பி வந்து பெண்களோடு உற்சாகமாக நியாயம் பேசிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தான்.

‘ரெண்டு கெடாவையும் ஜோடியா நிறுத்தி தீர்த்தம் போட்டும் துளுக்காம இருக்கட்டும்… அப்புறம் இருக்கு உனக்கு..’ என மனதுக்குள் பொருமிக் கொண்டான்.

சரியாக ஒரு மணிநேரம் கழித்து வெடி மூக்கனும் பங்காளியும் கிடாயோடு வந்து சேர்ந்தார்கள். அதற்கும் குளிப்பாட்டி திருநீறு வைத்து இரண்டையும் ஜோடியாக நிறுத்தினார்கள். பூசாரி ஆகாயத்தை நோக்கி நெடுநேரம் வேண்டிவிட்டு,

‘சோதிக்காம வாக்கு குடுடா கருப்பா..’ என்றபடி தீர்த்தம் தெளித்த மறுநொடியில் இரண்டும் சொல்லி வைத்தாற்போல் தலையாட்டின.

பூசாரி வீச்சரிவாளை ஓங்கியிறக்க அவன் அம்மா அருள் வந்து ஆடத் தொடங்கியிருந்தாள். இவன் மேனகாவைத் தேடினான். அவள் உதடுகளை மடக்கி மீண்டும் சிரிப்பை அடக்கியவாறு தூணோரம் ஒளிந்தபடி நின்றிருந்தாள். இவன் கவனத்தை சாமி பக்கம் திருப்பி மீண்டும் அமைதி அமைதியென சொல்லிக் கொண்டான். மீண்டும் மேனகாவை பார்க்கையில் அவள் மதிவதனியை வரவேற்றுக் கொண்டிருந்தாள். இவன் தலையை சரிசெய்தபடியே அனைத்தையும் மறந்து அவளருகில் ஓடினான்.

காதுகுத்து முடிந்து சீர் நடக்கையில் மாமனார் போட்ட ஒன்றரை பவுன் சங்கிலியை கவனித்தான். தோடு ஒரு இரண்டு கிராம். அடகுக்கு வைத்தால் இந்தக் கடனை அடைத்துவிடலாம். மொய்ப்பணமாக எப்படியும் பத்தாயிரம் தேறுமென்ற நம்பிக்கையோடு சபையில் அமர்ந்திருந்தவனை மாமா வலுக்கட்டாயமாக எழுப்பி தனியாக அழைத்துப் போனார்.

‘என்ன மாமா?’

‘கூட்டத்த பாத்தியா? ‘

அவன் அப்போது தான் கவனித்தான். நினைத்ததை விட கூட்டம் ஜோராக வந்திருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டிலிருந்து பிள்ளைகளோடு மூன்று நான்கு பேர் கூட வந்திருந்தனர்.

‘என்ன மாமா இது? நூத்தியம்பது இலைக்குத் தான் சொல்லியிருந்தேன். முந்நூறுக்கும் மேல வரும் போலருக்கே..’

‘உள்ளூர்ல மேற்க ஒரு கிடாவிருந்து திடீர்னு கேன்சலாகிடுச்சுடா. அது நடந்துருந்தா இங்க குறைஞ்சிருக்கும்’

உள்ளூர்வாசிகளைத் தாண்டியும் முகம் தெரியாத வெளியூர்காரர்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். உற்று கவனித்தபோது நிறைய கரைவேட்டிகள் தென்பட்டன. பெரிய மாமனார் கட்சிக்காரர். சரக்கு கச்சேரி என்றவுடன் நிறைய கட்சியாட்களையும் அழைத்து வந்துவிட்டதை புரிந்து கொண்டான். அவனுக்கு ஏற்கனவே மேனகாவின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது.

‘இப்ப என்ன மாமா பண்றது?’

‘ஆளுக்கு நாலு துண்டு கூட வைக்கலன்னா மானக்கேடா போய்டும்டா’ மாமா கவலைப்பட்டார்.

‘அதுக்கு என்ன செய்றது? என்ன முடியுமோ அததான் செய்ய முடியும்..’

‘அதெல்லாம் சிறப்பா செஞ்சிடலாம். ஒண்ணும் கவலப்படாத..’ என்ற சித்தப்பா மகன் முத்துவின் குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.

‘எப்படி முத்து சரியாவும்?’

‘நம்ம மலையன் மவன் இப்பதான் ஊருல இருந்து கிளம்பியிருக்கான். என் கிடாய தூக்கி கார்ல போட்டுகிட்டு வரச் சொல்லியிருக்கேன்.. இந்த ரெண்டு கிடாயயும் துண்டு போடுறதுக்குள்ள அவன் வந்துடுவான். உடனே இதையும் உறிச்சு ரெடி பண்ணிடலாம். விடு’

அவன் எரிச்சலாக முத்துவைப் பார்த்தான். ‘எதுக்கு முத்து தேவையில்லாத வேல.. இருக்கிற செலவ எப்படி சமாளிக்கிறதுனே தெரியல.. என்கிட்ட சுத்தமா காசு இல்ல.. ‘ எனக் கத்தியவனை யாரோ ஓடிவந்து சமாதானம் செய்தார்கள்.

‘அட நீ ஒருத்தன்.. நான் காசா கேட்குறேன் உனக்கு. நான் உனக்கு தரவேண்டியது இருக்குல்ல. அந்த கணக்கு வழக்குல வச்சிக்கப்பா.. விசேசத்துல எது சரியில்லனாலும் சோறு தான் முக்கியம். அதுவும் கறி விருந்துனா சொல்லவே தேவையில்ல. நம்ம மாணிக்கம் மவன் வரதனுக்கு என்ன பேரு? துண்டுக்கறி வரதன்.. கிணறு வெட்டி தண்ணி வந்ததுக்கு கறிவிருந்து ஆக்கிப் போடுறேன்னு ஊரையே கூட்டிப்புட்டான். புடிச்சது ஒத்தக் கிடா. இலைக்கு ரெண்டு துண்டு கூட வைக்க முடியாம தடுமாறி தத்தளிச்சி பந்தியிலயே எனக்கு உனக்குனு பெரிய கைகலப்பாகிடுல..? அன்னைக்கு அமைஞ்ச பேரு துண்டுக்கறி வரதன்னு. அவன் பேரன் தலையெடுத்து வந்தும் இன்னும் அந்தப் பேரு போகல.. நீ பேசாம இரு. எல்லாம் நாங்க பாத்துக்கறோம்.’ என அலட்டிக் கொள்ளாமல் அவன் சொல்லிவிட்டுச் சென்றபிறகு இவனுக்கு எல்லாம் புரிந்தது.

இவனது பம்புசெட் மோட்டாரை மூன்று வருடங்களுக்கு முன்பு எடுத்துப் போனவன் அவன் கிணற்றிலேயே வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான். இவன் இப்போது மேல் மோட்டாரை விற்றுவிட்டு தண்ணி மோட்டார் போட்டுக் கொள்ளும் முடிவிலிருக்க  அவனிடமிருக்கும் தனது பழைய மோட்டாரையும் கொடுத்துவிட்டு மாற்றினால் தொகை கணிசமாகக் குறையுமென்ற நினைப்பிலிருந்தான். இப்போது முத்து தனது கிடாயை வைத்து அந்த நினைப்பைத் தான் முட்டித்தள்ளிவிட்டுப் போகிறான்.

மூன்றாவது கிடாயும் வந்திறங்கிய போது இங்கு கறி பாதி வெந்திருந்தது. கோழிக்கறியும் இன்னொரு பாத்திரத்தில் வறுவலாகத் தயார் நிலையிலிருந்தது. மூன்றாவது கிடாயை அரக்கப் பரக்கத் துண்டாக்கி தனிப்பாத்திரத்திலிட்டு வேக வைத்தார்கள். சீக்கிரம் வேக செவன் அப் ஊற்றி கொட்டாங்குச்சிகளை போட்டார்கள். அனைத்தையும் கலந்து சாமிக்கு படையலிட்டபோது மணி நான்காகி இருந்தது. பந்தி விரித்து முதல் இலைக்கு சுகனின் கையால் பரிமாறினாள் மேனகா.

விருந்து முடித்து ஒவ்வொருவராக விடைபெற்றுப் போக பாத்திரங்களைக் கழுவி ஆட்டோவில் ஏற்றினார்கள். எல்லோரும் வண்டியில் ஏறியப்பின் அவன் கருப்பனாரிடம் சென்று கைகளைக் கூப்பினான். குலுங்கியழுதப்படி பேசத் தொடங்கினான்.

‘என்னமோ என் சூழ்நிலை சாமி.. எங்கப்பனும் ஊர் பூரா கடன் வாங்கித்தான் செத்தான். தனியா போராடி வந்தேன். எம்மவனுக்கும் அந்த நெலம வந்துடக்கூடாதுன்னு தான் கொஞ்சம் மனசு கூசிப் போச்சு. கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு செஞ்சிட்டேன். எதுவும் நினைச்சிக்காத சாமி.. நீ நினைக்க மாட்ட.. உனக்குத்தான் என் பொழப்பு என்னானு தெரியுமே..’ என்றபடி விழுந்து கும்பிட்டான்.

வண்டியிலேறி கோயிலைக் திரும்பிப் பார்த்தான். சாமியிடம் அழுதுவிட்டப் பிறகு அனைத்தும் கரைந்திருந்தது.

வீடு திரும்பியதும் மேனகாவிடம் கிண்டலாகக் கேட்டான்.

‘எப்படியோ சக்கரப் பொங்கல கறி விருந்தா மாத்திட்ட.. அதுவும் மூணு கிடா. இப்ப சந்தோசமா?’

அவள் எதுவும் பேசாமல் டீ கொதிப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

‘அம்முக்கல்லி வாயத் திறக்குறாளா பாரு? மாமியாரும் மருமவளும் சேர்ந்துக்கிட்டு நல்லா தலைல மொளகா அரைச்சிட்டீங்க இல்ல..?’

அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள். முறைத்தது போலிருந்தது. ‘இப்போது நம் கைதானே ஓங்கியிருக்கிறது.. முறைக்க வாய்ப்பில்லையே’ என அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் டீயை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டே கேட்டாள்.

‘அதெல்லாம் இருக்கட்டும்.. நான் கவனிக்கலன்னு நினைச்சியா? அதென்ன மதிவதனி இலைக்கு மட்டும் ரெண்டு மூணு தடவ கறி போகுது.. தலைக்கறி வேற தனியா போகுது.. என்ன விஷயம்?’

பதில் வராததால் டீயை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

ஆளைக் காணவில்லை.

000

ந.சிவநேசன்.

சேலம் மாவட்டம் ஆரியபாளையம் சிற்றூர். ஆசிரியர் பணி. கவிஞர் மற்ரும் சிறுகதை ஆசிரியர். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதயங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை இவரது நூல்கள். தொடர்ந்து இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

The post காது குத்து first appeared on Nadukal.

❌