அமிழ்து|கவிதை|நவநீதனா ச
4 May 2025 at 10:55
மாநகர் மண்டபத்தின்
மாமணி வடிவுடையாய்!
மயிலினங்கள் இடையூடே,
ஆழித்தேர் ஒப்புடையாய்!
வர்ணத்துப் புவியூடே,
வளை மெலிந்த சுடரழகே!
வானத்துவெளி உறைந்த,
பூதத்து மிகையுணர்வே!!…
நாட்டியத்துச் சபை நளிந்த,
இடையழகே! கேளாயோ?!!
வேலுடையான் விரலமர்ந்த,
குளிர்நிலவே! இன்னுயிரே!
கிளியினங்கள் கொஞ்சுகின்ற,
மீனவளின் கடைக்கண்ணாய்!
சடையேற்ற அண்ணானின்,
உடலேற்ற வெளிர்நீறாய்!
நாணத்து மாடத்திலே,
நகைப்போங்கும் பொன்முகிலே!!…
கன்னத்தின் குழியழகு, அது
சீனத்து இலக்கணமோ?!
பாசுரப் பெண்ணவளே,
அவள் சிரமாடும் முத்துடையாய்!
மார்கழிக் குளிரிடையே,
மையலுற்ற இசையழகே!
வெப்பத்தின் சீற்றத்தூடே,
மைவிழியே! வனப்புற்றாய்!!…
மசையுற்றாள் கருவுடைய,
மாசற்ற ஒளியுடையாய்!
அம்பலத்தில் ஆடிடுவான்,
மரகதமே! முகமணிந்தாய்!!…
பெயரிலே பூட்டி வைத்தாய்!
அடீ! இரத்தினச் சுருக்கமடீ!!
புவியுடையார் உரைக்கையிலே!
பூங்குயிலே!! மேனியுமே சிலிர்க்குதடீ!
விண்ணுடையார் இசைக்கையிலே!
சிற்றிதழே! குருதியுமே உருகுதடீ!!
விழியளித்த நீரினிதாம்!
தாயளித்த பிறப்பினிதாம்!
நின்றன் பெயராலே,
அ
வை அமிழ்தன்றோ?!
நனிச்சுவையன்றோ?!…
அழிழ்துடையாய்!
நீ இரத்தினச் சுருக்கமன்றோ?!
என்றன் உயிருடையாய், கேளாயோ?!…
கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச
கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
கோவை.
The post அமிழ்து|கவிதை|நவநீதனா ச appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.