Normal view

Received before yesterday

பார்ப்பன நூல்களில் பெண்ணடிமைத்தனம்

27 September 2020 at 02:08

வீட்டுக்கு வெளியே அடிமை சேவகம் செய்ய சூத்திரர்கள். வீட்டுக்கு உள்ளே அடிமை சேவகம் செய்ய பெண்கள். பார்ப்பனீயத்தின் அடிப்படை இதுதான். சுற்றி இருப்பவர்களை கடவுளின் பெயரால் அடிமைப்படுத்தி, தாங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்ற உணர்வே வராமல் தங்களுக்கு சேவை செய்ய வைப்பது.

அந்த வகையில், பெண்களை அடிமைப்படுத்தும் விதத்தில் பார்ப்பனர்கள் தங்கள் சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் என்னென்ன கருத்துக்களை புகுத்தினார்கள் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். 

குழந்தைத் திருமணம்

பெண் குழந்தைக்கு மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது, அவளை அடிமைப்படுத்த எளிமையான வழி. அவள் தனது வாழ்வில் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது. அந்த முடிவையே அவளிடமிருந்து பறிக்க என்ன வழி? தானே சிந்தித்து முடிவெடுக்கும் வயதை அவள் எட்டுவதற்குள், தங்கள் முடிவை அவள் மேல் திணிப்பது! யாராவது எதிர்த்தால் என்ன செய்வது? சாஸ்திரத்திலேயே இருக்கிறது என்று காட்டி விடலாம் என்று முடிவெடுத்த பார்ப்பனர்கள், அதை ஒன்று விடாமல் எல்லா சாஸ்திரங்களிலும் எழுதி வைத்தார்கள். எல்லா புராண கதைகளிலும் எழுதி வைத்தார்கள். அதிலிருந்து சிலவற்றை இப்போது பார்ப்போம்

பெண் குழந்தைகளை பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்று கவுதம தர்ம சாஸ்திரம், 18ஆம் அத்தியாயம்  21ஆம் சுலோகம் கூறுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் பெண்ணின் தந்தைக்கு பாவம் வந்து சேரும் என்றும் எச்சரிக்கிறது. அந்த பெண் குழந்தை, ஆடைகளை அணியும் வயதுக்கு வரும் முன்பே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்றும் கூறுகிறது.

பவுதாயன தர்மசாஸ்திரத்தின் 4ஆம் காண்டம், முதல் அத்தியாயம், 11ஆம் சுலோகமும் அவ்வாறே கூறுகிறது. பருவமடைந்த பிறகு பெண் குழந்தை வீட்டிலேயே வைத்திருக்க கூடாது என்று எச்சரிக்கிறது.

மனுஸ்ம்ரிதி சுலோகம் 9.94 இவ்வாறு கூறுகிறது. “30 வயது ஆண், 12 வயது பெண்ணை திருமணம் செய்யலாம். 24 வயது ஆண், 8 வயது பெண்ணை திருமணம் செய்யலாம்”

மகாபாரதம் அனுசாசன பர்வம், அத்தியாயம் 44, சுலோகம் 14: “30 வயது ஆண், 10 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். 20 வயது ஆண், 7 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்”

இந்த மொழிபெயர்ப்பு பாஜக கட்சி வலைத்தளத்தில் இருக்கிறது

Page 251: http://library.bjp.org/jspui/bitstream/123456789/229/2/Anusana%20Parva.pdf

தேவி பாகவதம், சுலோகம் 3.27.40: ஒரு தந்தை, தன் மகள் 10 வயதை தாண்டி விட்டதாகவும், திருமண வயதை கடந்து விட்டதாகவும் புலம்புவதாக வருகிறது 

ஸ்கந்த புராணம், சுலோகம் 3.3.18.4: மனைவியை இழந்த ஒரு பார்ப்பனருக்கு, தனது 12 வயது மகளை ஒரு தந்தை கொடுத்ததாக வருகிறது.

https://www.wisdomlib.org/hinduism/book/the-skanda-purana/d/doc423681.html

ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடக்கும் போது, ராமனின் வயது 12 என்றும், சீதையின் வயது 6 என்றும் சாஸ்திரிகள் இந்த காணொளியில் கூறுகிறார்.

இந்த தகவல், வால்மீகி இராமாயணத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை. இரண்டு இடங்களில் சொல்லப்பட்ட தகவல்களை வைத்து, திருமணத்தின் போது அவர்களின் வயது என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். முதலில், ஆரண்ய காண்டம், 47ஆம் சர்கம், 4ஆம் சுலோகத்தில், தான் அயோத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்ததாக சீதை சொல்வது வருகிறது.

அடுத்ததாக, 10 மற்றும் 11ஆம் சுலோகங்களில், அயோத்தியை விட்டு காட்டுக்கு செல்லும் போது, ராமனுக்கு 25 வயது என்றும், தனக்கு 18 வயது என்று சீதை கூறுகிறாள். 

12 ஆண்டுகள் அயோத்தியில் வாழ்ந்ததாகவும், 18 வயதில் அயோத்தியில் இருந்து காட்டுக்கு கிளம்பியதாகவும் சீதை சொல்வதை வைத்து, அவள் 6 வயதில் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தாள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலே உள்ள சுலோகங்களை இந்த வலைப்பக்கத்தில் காணலாம் https://valmikiramayan.net/utf8/aranya/sarga47/aranya_47_frame.htm

அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் என்ற வரிகளை கேட்கும் போது, நாம் இருவரையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக கற்பனை செய்திருப்போம். ஆனால் ஒரு 12 வயது சிறுவனும், 6 வயது சிறுமியும் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அசிங்கம்.

ஸ்ரீமத் பாகவதத்தில், கிருஷ்ணன் ருக்மணியை கடத்தி சென்று திருமணம் செய்த நிகழ்வு வருகிறது. அதிலும் இதே கதைதான். கடத்தி செல்லப்படுவதற்கு முன்பு, ருக்மணியின் அழகை வர்ணிக்கும் வரிகளில், அவர் பருவ வயதை கூட எட்டவில்லை என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.

12 வயது கூட நிரம்பாத ஒரு பெண் குழந்தையை கடத்தி சென்று திருமணம் செய்ததை வீரதீர சாகசம் போல கதாகாலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த சிறுமியின் அழகில் மயங்கி சுற்றி நின்றவர்கள் அவளை ஆசையோடு பார்த்ததாக 53ஆம் சுலோகம் கூறுகிறது.

56ஆம் சுலோகத்தில், சுற்றியிருந்த ஓநாய்களிடமிருந்து தன் இரையை பிடிங்கி செல்லும் சிங்கத்தை போல, ருக்மணியை கிருஷ்ணன் திருடி சென்றான் என்று இருக்கிறது. 

மேலே பகிரப்பட்ட புத்தகத்தை இந்த வலைப்பக்கத்தில் படிக்கலாம் https://archive.org/details/in.ernet.dli.2015.142278/page/n223/mode/1up

இதுவரை பகிரப்பட்ட தரவுகளின் மூலம், குழந்தை திருமணம் என்பது ஏதோ சமூகத்தில் ஒரு சிலர் அறியாமையால் செய்த தவறு அல்ல என்பதும், அது தர்ம சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின் மூலம் சமூகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சமூகம் அதை ஆதரித்தது, இப்போது யார் அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இன்னமும் அதை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். 

இந்த காணொளியில் பிரம்மஸ்ரீ பரணீதர சாஸ்திரிகள் 8 வயதில் பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் நூலில், எப்படி சிறுவர்களுக்கு 8 வயதில் உபநயனம் என்கிற பூணூல் அணிவிக்கும் சடங்கை செய்கிறோமோ, அதே போல பெண் குழந்தைகளுக்கு 7 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். திருமணமே பெண்களுக்கான உபநயனம் என்கிறார்.

இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்தான் அதிர்ச்சிகரமானது. பெண்கள் சிந்தித்து கேள்வி கேட்கும் வயது வருவதற்கு முன்பே ஒருவனை காட்டி “இவன்தான் உன் குரு. இவன்தான் உன் தெய்வம்” என்று மனதில் பதிய வைத்து விட வேண்டுமாம். வளர்ந்த பிறகு அவர்கள் சிந்திக்க துவங்கி விட்டால் அதை செய்வது கடினமாகி விடுமாம்!

பெண்களுக்கு மட்டும்தான் 8லிருந்து 12 வயதுக்குள் மணம் முடித்து விட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால், ஆண்களுக்கு அவர்கள் உபநயனம் முடிந்து, குருகுல கல்வி முறையில் பிரம்மச்சரியத்தை கடை பிடிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரங்கள் கூறுகிறது. ஆகவே ஆண்களுக்கு திருமணம் பெரும்பாலும் 16 வயதுக்கு மேலேயே நடந்து வந்தது. எடுத்துக்காட்டாக, ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது 23ஆம் வயதில், 5 வயது சாரதா தேவியை மணம் முடித்த செய்தி அவரது வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்ட The Gospel Of Sri Ramakrishna என்ற நூலில் இருக்கிறது.

அப்படியென்றால் ஆண்கள் மட்டும்தான் குருகுலத்தில் சென்று கல்வி கற்க அனுமதி இருந்ததா? பெண்களுக்கான கல்வி எப்படி இருந்தது?

பெண்களுக்கு கல்வி கூடாது! சுதந்திரம் கூடாது!

பார்ப்பனர்களை பொறுத்தவரை கல்வி என்பது வேதக்கல்வி மட்டுமே. அந்த வகையில், சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்கு வேதக்கல்வி கூடாது என்று ஆதிசங்கரர் எழுதிய தைத்திரிய உபநிஷத் உரையில் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு நூலின் 462ஆம் பக்கத்தில் காணலாம்.

இந்த நூலை தரவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1WmXyoxFuHBikEbADn4MqJjY1ggGkZyZW/view

இந்த வலைப்பக்கத்தில் இருந்தும் படிக்கலாம் https://www.wisdomlib.org/hinduism/book/the-taittiriya-upanishad/d/doc79819.html

பெண்களை படிக்க வைத்தால் அவர்களது மார்க்கம் மாறிப் போய் விடும் என்று வேத விற்பன்னர் ஒருவர் கூறுகிறார் கேளுங்கள்.

பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் சட்டம். அவர்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது, வேலைக்கு சென்று சம்பாதிக்க கூடாது, ஆணுக்கு அடிமையாக வீட்டில் இருக்க வேண்டும் என்பதே இவர்கள் விருப்பம். இதை காஞ்சி சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.

மேலே குறிப்பிட்ட பகுதியை காஞ்சி சங்கர மடத்தின் வலைத்தளத்தில் படிக்கலாம் http://www.kamakoti.org/tamil/3dKK52.htm

இன்னும் ஒரு படி மேலே சென்று, “சித்த விகாரங்களை தூண்டி விடுகிற சூழ்நிலையில்” பெண்களை பெற்றோர் வேலைக்கு அனுப்புகிறார்கள் என்றும், அவர்களுக்கு “குளிர் விட்டு விட்டது” என்றும் “விவஸ்தை கெட்டு விட்டது” என்றும் கூறுகிறார்.

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் இன்னொருவரை நம்பியே வாழவேண்டும் என்பதுதான் சாஸ்திரங்களும், புராணங்களும், மடாதிபதிகளும் கூறும் நீதி. பெண் திருமணத்துக்கு முன் தன் தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகு கணவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும், கணவனுக்கு பிறகு மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று அனைத்து பார்ப்பன நூல்களும் கூறுகிறது. அவர்களை பொறுத்த வரையில் பெண் என்பவள் ஒரு பொருள்தான் என்பது இந்த கருத்தின் மூலம் விளங்கும். நாங்கள் பெண்ணை பாதுகாக்கிறோம் என்று அவர்கள் திரும்ப திரும்ப கூறுவது பெண் தன்னை பாதுகாத்துக்கொள்ள வலிமையில்லாதவள் என்ற கருத்தை வலியுறுத்தவே.

இந்த காணொளியில், பெண்கள் தங்கள் பெயரில் வங்கிக்கணக்கு கூட வைத்துக்கொள்ளக் கூடாது என்று இவர் கூறுவதை கேளுங்கள். 

இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா, அதே கருத்தை வலியுறுத்துகிறார். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கூடாது என்பதுதான் இவர்கள் அனைவரின் கருத்தும்.

காஞ்சி சங்கர மடத்தின் பரணீதர சாஸ்திரிகள், பெண்கள் சுதந்திரமாக எப்போதும் இருக்கக்கூடாது என்று கூறும் காணொளி.

மனுஸ்ம்ரிதியின் சுலோகம் 9.3: பெண்கள் பருவ வயதை எட்டும் வரை தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். திருமணத்துக்கு பிறகு கணவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். முதுமை அடைந்த பிறகு மகன்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது.

கணவனுக்கு அடிமையாக இருப்பது மட்டுமல்ல… படுக்கையில் வேசியாகவும் இருக்க வேண்டுமாம். சுலோகத்தை சொல்கிறார் கேளுங்கள்

ஆன்மீக விஷயங்களிலும், தத்துவ ஞானத்திலும் ஆண்களுக்குத்தான் விருப்பம் இருக்கும். சமையல் மற்றும் சாப்பாட்டு விஷயங்களில்தான் பெண்களுக்கு விருப்பம் இருக்கும் என்ற சுலோகத்தை இந்த காணொளியில் விளக்குகிறார்.

பெண்களுக்கு எந்த பொறுப்போ பதவியோ கொடுக்க கூடாது என்று சாணக்கியர் கூறியதாக இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா மேற்கோள் காட்டுகிறார்

கணவனை இழந்த பெண்களின் நிலை என்ன?

கணவன் மறைந்த பிறகு பெண்கள் பின்வரும் மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்

  1. உடன்கட்டை ஏறுதல்
  2. கைம்பெண்ணாக வாழ்நாளை கழிப்பது
  3. நியோகம்

உடன்கட்டை ஏறுதல் 

பராசர ஸ்ம்ரிதியின் 4ஆம் அத்தியாயத்தின் 32ஆம் சுலோகம், தன் கணவனோடு உடன்கட்டை ஏறும் மனைவி சொர்க்கத்துக்கு செல்வாள் என்று கூறுகிறது.

அக்கினி புராணத்தின் 222ஆம் அத்தியாயத்திலும் அதே கருத்து இருக்கிறது

பிரம்ம புராணம் 4ஆம் பாகம், சுலோகம் 10.75

கணவன் இறந்த உடன் தானும் உயிர் விடுவதே மனைவியின் கடமை ஆகும். அதுவே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

https://archive.org/details/dli.bengal.10689.20270/page/n59/mode/1up

தசரதன் இறந்த பிறகு கோசலை, கைகேயி, சுமத்திரா தவிர அவரது 60 ஆயிரம் மனைவிகளும் உடன் கட்டை எறியதாக அடுத்து வரும் காணொளியில் குறிப்பிடுகிறார்.

மகாபாரதத்தில், பாண்டுவின் இரு மனைவிகளில் ஒருவரான மாத்ரி உடன்கட்டை ஏறிய செய்தி, ஆதி பர்வம், 95ஆம் அத்தியாயம், 64ஆம் சுலோகத்தில் இருக்கிறது

பெண்களை வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்று எதிலும் கூறப்படவில்லை. ஆனால், அந்த செயலை ஒரு உயர்ந்த செயல் போல புனிதப்படுத்தி, கணவன் இறந்த பிறகு உயிரோடு இருக்கும் பெண்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் விதத்தில் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது.

தெய்வத்தின் குரல் நூலில், சங்கராச்சாரியார் உடன்கட்டை ஏறுதலை “உயர்ந்த உணர்ச்சி” என்றும் இந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் உடன்கட்டை ஏறுவது “ரொம்ப விசேஷம்” என்றும் புனிதப்படுத்துகிறார்.

மறுமணம் கூடாது

உடன்கட்டை ஏறாமல், கைம்பெண்ணாக வாழ்வை தொடரும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்கள் மிக கடுமையானவை. 

அக்கினி புராணத்தின் 222ஆம் அத்தியாயம், கைம்பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தை கூறுகிறது.

பவுதாயன தர்ம சாஸ்திரத்தின் சுலோகம் 2.2.4.7 கூறுவது: “கைம்பெண்கள் தரையில் படுத்து உறங்க வேண்டும்”

கைம்பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது என்பதை ஏராளமான பார்ப்பன நூல்கள் வலியுறுத்துகின்றன.

மகாபாரதம் ஆதி பர்வம் 160ஆம் அத்தியாயம் 36ஆம் சுலோகம் சொல்லும் செய்தி: ஆண்கள் பல பெண்களை மணக்கலாம். ஆனால் பெண்கள் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது!

Page 465: http://library.bjp.org/jspui/bitstream/123456789/229/3/Mahabharata%20-%20Adi%20Parva.pdf

வாமன புராணம் 12ஆம் அத்தியாயம் 35ஆம் சுலோகம்: கைம்பெண்ணை மணம் செய்தவன் கையால் ஸ்ரார்த்தம் வாங்கி உண்பவர்கள் புழு பூச்சிகளையும் எறும்புகளையும் தின்பவர்கள் ஆவார்கள் 

இந்த காணொளியில் “ரெண்டாவது கல்யாணத்துக்கு மந்திரமே கிடையாது.. தெரியுமா?” என்று குண்டை தூக்கி போடுகிறார் அருளமுதம் ரா. பார்த்தசாரதி.

மேலும் “ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெச்ச வாத்தியாரும் நரகத்துக்கு போவார். அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்த அப்பா அம்மாவுக்கும் நரகம் கிடைக்கும். புனர் விவாகம் (கைம்பெண் மறுமணம்) பண்ணக்கூடாது… சாஸ்திர விரோதம்!!” என்று கூறுகிறார்

ஸ்கந்த புராணத்தில் இருக்கும் வரிகள். 

“இரண்டாவது திருமணம் செய்த கைம்பெண்ணின் மகளை தவிர்க்க வேண்டும். அவள் ஒரு தாழ்ந்த பிறப்பு”

யஜ்னவாக்கிய ஸ்ம்ரிதியின் 3ஆம் அத்தியாயம் 52ஆம் சுலோகம் ஒருவன் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதில் “இதற்கு முன் வேறொரு திருமணம் செய்திராத பெண்ணை மணம் புரிய வேண்டும்” என்று கூறுகிறது.

அந்த சுலோகத்தின் விளக்க நூல், கைம்பெண் மறுமணம் கூடாது என்று தெளிவாக குறிப்ப்பிடுகிறது

நியோகம்

ஒரு பெண் அவள் தன் கணவனோடு உடலுறவு கொள்வதற்கு முன்னால் கணவன் மறைந்து விட்டால், அவள் தன் கணவனின் தம்பியோடு சேர்ந்து கொள்ளலாம் என்று மகாபாரதம் கூறுகிறது. (அனுசாசன பர்வம் 44ஆம் அத்தியாயம் 52ஆம் சுலோகம்)

இதில் நாம் கவனிக்க வேண்டியது, “திருமணம் செய்து கொள்ளலாம்” என்று கூறவில்லை. “unite herself” என்று மட்டுமே கூறுகிறது 

குழந்தை இல்லாத கைம்பெண் தனது கணவனின் இளைய சகோதரனுடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மனுஸ்ம்ரிதி சுலோகம் 9.59 கூறுகிறது.

இப்படி கணவனின் சகோதரனோடு சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதை “நியோகம்” என்கிறார்கள்.

மகாபாரதத்தில் பாண்டு, திருதிராஷ்டிரன் மற்றும் விதுரன் இந்த முறையில்தான் பிறந்ததாக ஆதி பர்வத்தின் 105ஆம் அத்தியாயம் கூறுகிறது. சத்தியவதி என்ற பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு பராசர முனிவரோடு ஏற்பட்ட உறவில் பிறந்தவர் வியாசர். சத்தியவதி பின்னர் சாந்தனு என்கிற அரசனை திருமணம் செய்து பட்டத்து ராணி ஆகிறாள். அவளுக்கு பிறந்த விசித்திர வீரியன் திருமணத்துக்கு பிறகு இறந்து விடுகிறான். அவனுக்கு வாரிசு இல்லாததாலும், திருமணத்துக்கு முன்பு தனக்கு பிறந்த வியாசர், விசித்திர வீரியனுக்கு அண்ணன் என்பதாலும், வியாசரை அழைத்து தனது மருமகள்களோடு உறவு கொண்டு அவர்களுக்கு குழந்தை வழங்குமாறு கேட்கிறாள்.

வியாசர் அதற்கு ஒப்புக்கொள்கிறார். அப்படி பிறந்தவர்கள்தான் பாண்டு, திருதிராஷ்டிரன் மற்றும் விதுரன்.

இந்த கதைகளின் மூலம், பெண் என்பவள் வெறும் குழந்தை பெற்றுக்கொடுக்கும் உணர்ச்சிகளற்ற எந்திரம் போல நடத்தப்பட்டது புரியும். கணவனின் மறைவுக்கு பிறகு இன்னொருவனை முறையாக திருமணம் செய்து தங்கள் விருப்பப்படி வாழும் வாழ்வை பார்ப்பனீய சாஸ்திரங்கள் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகும்.

பெண்கள் குறித்த சாணக்கிய நீதியின் பார்வை

சாணக்கிய நீதி என்கிற புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் பெண்களை பற்றி என்ன கருத்துக்கள் கூறப்பட்டிருக்கிறது என்பதை இந்த பகுதியில் பார்ப்போம்.

ஒரு பெண் தான தர்மங்களை செய்வதை விடவும், விரதங்களை கடைப்பிடிப்பதை விடவும், புனித தலங்களுக்கு செல்வதை விடவும், கணவனின் கால்களை கழுவி அந்த நீரை குடிப்பதே அவளை தெய்வ பக்தியுள்ளவள் ஆக்கும் என்று சாணக்கிய நீதியின் 60ஆம் சுலோகம் சொல்கிறது.

பெண்கள் தெளிவற்ற சிந்தனை உடையவர்கள் என்று 477ஆம் சுலோகம் கூறுகிறது.

57ஆம் சுலோகம்: பெண்களுக்கு ஆண்களை விட 8 மடங்கு காம இச்சை இருக்கும்

58ஆம் சுலோகம்: பெண்கள் இயல்பிலேயே பொய் பேசுபவர்கள், ஏமாற்றும் குணம் உடையவர்கள், பேராசை கொண்டவர்கள், கொடூரமான எண்ணம் கொண்டவர்கள்

359ஆம் சுலோகம்: பெண்களை நம்பக்கூடாது

360ஆம் சுலோகம்: பெண்கள் சமூக ஒழுங்குகளை அறியாதவர்கள்

274ஆம் சுலோகம்: எப்படி ஏமாற்றுவது என்பதை பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

62 ஆம் சுலோகம்: பெண்கள் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொருவனின் மீது பார்வை வீசுவார்கள். அப்படியே மூன்றாவதாக ஒருவனை விரும்புவார்கள். ஒருவனை மட்டும் முழு அர்ப்பணிப்போடு விரும்ப அவர்களால் முடியாது

386 ஆம் சுலோகம்: ஆண் குழந்தைகள் இல்லாதவனுக்கு சொர்க்கத்தில் அனுமதி கிடையாது

387 ஆம் சுலோகம்: ஆண் குழந்தைகளை பெறுபவளே உண்மையான மனைவி 

388 ஆம் சுலோகம்: தனக்கு ஆண் வாரிசை அளித்த அரசியாரிடமே அரசன் செல்ல வேண்டும் 

391 ஆம் சுலோகம்: ஆண் குழந்தைகளை பெற்றெடுப்பதே பெண்களின் வேலை 

336 ஆம் சுலோகம்: கணவனின் விருப்பத்துக்கு ஏற்பவே மனைவி நடந்து கொள்ள வேண்டும் 

510 ஆம் சுலோகம்: கணவனை விட உயர்ந்த தெய்வம் மனைவிக்கு வேறு எதுவும் இல்லை

சாணக்கிய நீதிக்கு BK சதுர்வேதி எழுதிய இந்த மொழிபெயர்ப்பை இந்த லிங்கில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 

https://drive.google.com/file/d/1_UDRB9mQ9sn7x_XAqHBuYppxrDsgKJL6/view

பெண்களின் மீதான வன்முறை 

ப்ரிகதாரண்யக உபநிஷத்தின் சுலோகம் 6.4.7 சொல்லும் செய்தி: அவள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவளை சம்மதிக்க வைக்க வேண்டும். எவ்வளவு முயன்றும் அவள் ஒப்புக்கொள்ளாவிட்டால், பிரம்பாலோ கையாலோ அடிக்க வேண்டும்

ஸ்ரீமத் பாகவத்துக்கு இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா எழுதிய விளக்க நூலில் அவர் தெரிவித்திருக்கும் கருத்து “பெண்களின் மீதான பாலியல் வன்முறையை சட்டம் அனுமதிக்காவிட்டாலும், அவ்வாறு செய்யும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்”

1184ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

நூலின் 1184ஆம் பக்கத்தில் இந்த வரிகள் இருக்கிறது. தரவிறக்கம் செய்ய https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

1185ஆம் பக்கம் இருக்கும் வரிகள்: “ஒரு பெண் பருவமடையும் வயதை அடைந்த உடன் அவள் பாலியல் ஆசைகளால் ஆட்கொள்ளப்படுகிறாள். அதனால் அந்த பெண்ணின் தந்தை அவளை பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த வயதில் அவளை பாலியல் உறவு மூலம் யார் திருப்தி படுத்துகிறார்களோ, அவன் யாராக இருந்தாலும் அவனை அவள் தனது வாழ்வின் இறுதி வரை விரும்புவாள்”

1185ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

இந்த வரிகள் ஏதோ ஆபாச புத்தகத்தில் இருக்கும் வரிகள் அல்ல. ஸ்ரீமத் பாகவத்துக்கு இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா எழுதிய விளக்க நூலில் இருக்கும் வரிகள்!!

129ஆம் பக்கம் இருக்கும் வரிகள். “பெண்கள் பொதுவாகவே பாலியல் உறவில் நாட்டம் கொண்டவர்கள். பெண்களின் பாலியல் ஆசை ஆண்களை விட 9 மடங்கு அதிகம் இருக்கும்” (சாணக்கிய நீதியில் சொல்லப்பட்ட அதே கருத்து. அதில் 8 மடங்கு. இதில் ஒரு படி மேலே சென்று, 9 மடங்கு என்கிறார்)

129ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

1184ஆம் பக்கம்: தனது மனைவியை உடலுறவின் மூலம் திருப்தி படுத்தி, அவளுக்கு தேவையான நகைகள், உடைகள் மற்றும் உணவு கொடுப்பவனுக்கு பெண்கள் அடங்கி நடப்பார்கள்

1184ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

1975ஆம் ஆண்டு சுவாமி பிரபுபாதா ஆஸ்திரேலியா சென்ற போது அளித்த பேட்டி prabhupadabooks.com வலைத்தளத்தில் இருக்கிறது. அதில் இருந்து ஒரு பகுதி. “பெண்கள் பாலியல் வன்முறையை எதிர்ப்பது போல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் அதை விரும்புகிறார்கள்”

நம்ப முடியவில்லையா? அந்த பேட்டி ஆடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது இந்த வலைத்தளத்தில் இருக்கிறது https://vanisource.org/w/index.php?title=750511_-_Morning_Walk_-_Perth

அதிலிருந்த குறிப்பிட்ட அந்த பகுதி மட்டும் இதோ 

முடிவுரை

இந்த கட்டுரையில் பகிரப்பட்ட தரவுகளின் மூலம், பெண்ணடிமைத்தனம் என்பது நமது நாட்டில் ஏதோ ஒரு சிலரால் செய்யப்படுவது இல்லை என்பதும், அது சாஸ்திரம் என்ற பெயரில் நூல்களில் எழுதப்பட்டு, புராணம் என்ற பெயரில் மக்களிடையே பரப்பப்பட்டு, தீவிர பிரச்சாரங்கள் மூலம் மக்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டது விளங்கும்.

நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகள் மூலம் இந்த பிரச்சாரம் இன்றளவும் தீவிரமாக நடைபெறுகிறது என்பதை இந்த கட்டுரையில் பகிரப்பட்ட காணொளிகளில் இருந்து தெரிந்து கொள்ளலலாம். இதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நாம் அமைதியாக இருந்தால், இந்த பெண்ணடிமைத்தன பிரச்சாரம் வெற்றியடையும் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.


PDF வடிவில் படிக்க https://drive.google.com/file/d/1zQDgCZufNJ01_1LHZiwAzL_r6GTldk8S/view

❌