Normal view

Received before yesterday

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3  – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3                        வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

சங்ககாலம்: இலட்சிய கனவு சமூகவெளி

அண்மையில் எல்லி க்ரிஃப்ஃபின் (Ellie Griffin) எனும் அமெரிக்க எழுத்தாளர் தன்னுடைய நியூஸ்லெட்டரில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்.  தற்காலச் சூழலில் அச்சுப்புத்தகங்கள் பதிப்பிப்பதன் சிக்கல்களைப் பற்றியதொரு நீண்ட கட்டுரை.  அதில் இருக்கும் பல சிக்கல்கள் நமக்குப் புதியனவை அல்ல.  புத்தக பதிப்பித்தல் என்பது ஒரு சில நிறுவனங்களின் தொழிலாக இருந்ததிலிருந்து, இன்றைய ஃபேஸ்புக் டிஜிட்டல் கண்டென்ட் காலம்வரை, வெற்றிப்பெற்ற புத்தகங்கள் என்பது மாயமானைத் துரத்துவது போன்றதொரு சவாலான செயல்தான்.  தற்காலத்தில், பெரும்பாலும் வம்புகளும், வல்லடிகளும், திரிபுவாதங்களும் நிறைந்த இணைய திரட்டில், அறிவுத்தளத்தில் நின்றோ, படைப்பூக்கம் மிகுந்த பித்துநிலை கொண்டோ, பக்கசார்புகளற்ற விவாதக் களங்களைக் கொண்டோ, காலத்தில் நின்று எதிர்செல்லும் வல்லமை கொன்ண்ட படைப்புகளை கண்டறிவது மிகவும் கடினமானது.  

மொழியைக் கையாள்வதற்கான திறன், எழுதுவதற்கான தளம், வாசகரிடம் கொண்டு சேர்வதற்கான நுட்பம், கருத்து பரிமாற்றங்களுக்கான வேகம் என்று பல சாதக அம்சங்கள் கொண்ட இக்காலத்தில் ஒரு படைப்பை உருவாக்குவது சுலபம்.  அது நிலைபெற்று நிற்பதில்தான் சவால்கள் அதிகம்.  

ஒரு 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு மொழியைக் கற்றுத்தேர்வதற்கே கடினமான சூழல் இருந்திருக்கின்றது. மொழித்திறன், கவித்துவம், இசைக்கலை, இலக்கியம் போன்ற தளங்கள் ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு முதன்மையானதாக இருந்ததில்லை.  ஓரளவிற்கு பதிப்பகத் தொழில் பரவலாக பயனிற்கு வந்ததே பொயு 13ம் நூற்றாண்டு எனலாம்.  அதற்கு முன்பாக படைப்பிலக்கியம் என்பது பெரும்பாலும் பக்தி சார்ந்த போற்றுதல்களுக்கும், அரசு சார்ந்த ஆவணங்களுக்குமாகத்தான் இருந்திருக்கிறது.  ஆனால் பொயு முதலாம் இரண்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக சொல்லப்படும் சங்கத் தமிழ் இலக்கியத் திரட்டு என்பது அறம், பொருள், காதல், அரசு முறைமை, மக்கள் பயன்பாடு என்று பலவகையில் அன்றைய காலத்தை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.  இது தமிழ்மொழிக்கான ஒரு பெருமைமிகு அடையாளம் என்பதை நாம் மறுக்கவியலாது.

பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம் மற்றும் கொடையைப் பற்றி விரித்து சொல்லப்படும் சித்திரங்கள் புறநானூற்றில் சிறு சிறு தொகுப்புகளாக நமக்குக் கிடைக்கின்றன.  இதில் புலவர் பெருஞ்சித்திரனார் என்பவர், பாடாண் திணையில், முதிர மலைநாட்டு தலைவன், குமணனைப் பற்றிப் பாடிய சில பாடல்கள் நமக்கு, வள்ளல்தன்மை சார்ந்த அரசு முறைமைப் பற்றி ஒரு பார்வையை அளிக்கின்றது.  



பரிசில் கடாநிலை:

இந்தப் பாடல்கள், 'பரிசில் கடாநிலை' துறையைச் சார்ந்தன என தமிழ்ச்சான்றோர்கள் வரையறுக்கின்றனர்.  காவுதல் என்றால் சுமத்தல்.  தூக்குதல். பெறுதல் எனலாம்.  'கா'வுதலிலிருந்து பிறந்த சொல்தான் காவடி.  அது போல, 'கடாவுதல்' என்றால் கோருதல். இரத்தல் என்று பொருள்.  புறம் 158வது பாடலில், தமிழ் சங்கத்திரட்டில் குறிப்பிடப்படும் கடையெழு வள்ளல்களைப் பற்றி ஒரு முழுமையான குறிப்பை அளிக்கின்றார்.  பறம்பு மலையின் கோமான் பாரி.  கொல்லி மலை கோமான் வல்வில் ஓரி,  மலையமான் திருமுடிக் காரி,  தகடூர் தலைவன் அதியமான் அஞ்சி என்னும் எழினி, பொதினி அரசன் பேகன், மோகிப் புலவர் பாடிய ஆய், வள்ளல் கோன் நள்ளி, முதலான வள்ளல்கள் மாய்ந்து போன பின்னர், தன்னைப் போன்ற புலவர்கள் தேடி வருவது முதிரமலை அரசனைத்தான் எனப் பாடுகிறார்.

அன்றைய முதிரமலை இன்றைய பழனியைச் சார்ந்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.  பலா மரங்கள் செறிந்த அந்த மலையில், முள் தோல் போர்த்திய அந்தப் பழங்களை அகழ்ந்து, அதன் இனிய சுளைகளை சுவைக்கும் கடுவன்கள் (ஆண் குரங்கு),  அதைத் தன் துணைக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்கிறார்.  ஒரு வள்ளலைப் போற்றிப் பாடத் தொடங்கும்போது, அங்கிருந்த நிலத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகங்களை உருவகமாக ஏற்றிச் சொல்வது குறிப்பிடத்தக்கது.  

முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
(புறநானூறு - 158)

கொள்ளேன்! கொள்வேன்!

அடுத்தடுத்து பாடல்களில் தன்னுடைய வறுமைநிலையை பலவாறாக எடுத்து வைக்கிறார் பெருஞ்சித்திரனார்.  வறிய தோற்றத்தில் இருக்கும் அன்னை, பிள்ளைகளுக்கு பாலூட்ட இயலாது வாடிய நிலையில் மனைவி என்று குறிப்பிடுபவர், அரசனிடம் இருந்து தான் பரிசு பெறுவதற்கென ஒரு கடப்பாடும் முன்வைக்கிறார்.

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
(புறநானூறு - 159)

உயர்ந்திருக்கும் தந்தங்களைக் கொண்ட,  (கொல்லும்) வலிமையுடைய யானையைப் பெற்றாலும், நீ பாராமுகமாக அளிப்பாயானால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  மனம் உவந்து சிறிய (குன்றி) அளவில் பரிசு அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்கிறார்.  

இந்தப் பாடலின் பொருளுக்கு ஒரு பின்னணி கதையும் இருக்கிறது.  குமணன் போன்ற மற்றொரு அரசன் வெளிமான் என்பான், பெருஞ்சித்திரனாரிடம் மனம் நோகும்படி நடந்து கொண்டு விட்டிருக்கிறான்.  பெரியதாக ஒன்றுமில்லை.  பெருஞ்சித்திரனார், வெளிமானிடம் பரிசில் வேண்டிச்  சென்ற போது, அவருக்கு சரியாக முகங் கொடுக்காமல், தன் இளவலை (தம்பி) விட்டு பரிசுளித்துவிட்டான்.  மோப்ப குழையும் அனிச்சம் மலர் போல, புலவர், வெளிமானின் புரத்தலை மறுத்து திரும்பிவிடுகிறார்.

இன்மை துரத்த, வள்ளமை வரவேற்க

புலவரின் வீட்டு நிலையோ வறுமையில் மிகவும் மோசமாக இருக்கின்றது.   அடுத்த பாடலில் அதை விரிவாக விவரிக்கின்றார்.
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழுஞ் சோறுங் கடைஇ யூழின்
உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு
மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும்
நொந்தனளாகி நுந்தையை யுள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்
(புறநானூறு - 160)

அன்னையிடம் பெற பாலில்லை. அடுக்களை பாத்திரத்தில் கூழும் இல்லை.  பசியில் அழும் பிள்ளையை, 'புலி வந்து அடித்து விடும்' என மிரட்டியும், 'அம்புலி பார்' என்று வேடிக்கைக் காட்டியும் நொந்து போயிருக்கிறாள்.  எதற்கும் மசியாத அக்குழவியிடம், 'உன் தந்தையை எண்ணி, கோப முகம் காட்டுவாயே, பார்க்கலாம்" என்கிறாளாம், அவருடைய இல்லாள். 

அதற்கு மேல் வறுமை துரத்த, குமணனின் வள்ளமைப் பற்றிய புகழ் அவரை ஈர்க்க, காடு மேடு கடந்து, பலகாலம் பயணித்து முதிர மலைக்கு வருகிறார்.

வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
(புறநானூறு - 161)

தன் திறனும் வலிமை மிக்கது அல்லது குறைந்தது என்றாலும், தன் திறன் அளவை விட  குமணனது (வள்ளமைத்) திறனுக்கு ஏற்ற பரிசில், அவன் அளிக்க வேண்டும்.  பிற அரசர் நாண, பெரும் யானை மீது நீ அளித்த செல்வத்தைக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்கிறார். 

படு மோசமான வறிய நிலையிலும், தன்னுடைய கல்வித்திறன் மீது ஐயம் கொண்ட நிலையிலும், அவருக்கு அரசனது வள்ளல்த்தன்மை மீதான நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது.

இரவலர் உண்மையும், ஈவோர் உண்மையும்

பரிசில் கோரி வள்ளலைப் புகழ்ந்து பாடி, பெரும் செல்வம் பெற்றபின்னும், பெருஞ்சித்திரனார் தனக்கு ஒரு முக்கிய கடமை இருப்பதாக அடுத்த பாடலில் கூறுகிறார்.  முன்பு தன்னிடம் பாராமுகமாக இருந்த அரசன் வெளிமான் நாட்டிற்கு சென்று, அங்கே குமணன் தனக்கு அளித்த யானையை நிறுத்தி, 'இரவலரும், புரவலரும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும்" என்கிரார்.   

இரவலர் புரவலை நீயு மல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையுங் காண் இனி இரவலர்க்
ஈவோர் உண்மையுங் காண் இனி நின்னூர்

கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
கடுமான் தோன்றல், செல்வம் யானே
(புறநானூறு - 162)

தன்னுடைய வறுமைநிலையைப் போக்கக் கோரி, வள்ளலிடம் சென்று பாடல் பாடி இரப்போராக இருந்தாலும் அதற்கென கண்ணியமான கடப்பாடுகள் கொண்டிருப்பதையும், அந்த வள்ளல்களின் பெருமையைப் பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையையும் அக்கால புலவர்கள் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.  

 வல்லாங்கு வாழ்தும் என்னாது எல்லோர்க்கும் கொடுமதி

இந்த வள்ளல்கள்-புலவர்கள் பிணைப்பின் முக்கிய கண்ணியாக அடுத்த பாடல் காணப்படுகிறது.  தான் பெற்ற பரிசில் அத்தனையும் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையை உதறி, அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை நயமாக உரைக்கின்றார்.  

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,

கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,

இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.
(புறநானூறு - 163)

தன் மனைவியை நோக்கி, "நீ விரும்புபவர்க்கும், உன்னை விரும்புபவர்க்கும், வறுமையில் உதவி புரிந்தோர்க்கும், இன்னின்னார் என்றில்லாமல், என்னையும் கூட ஆலோசிக்க வேண்டியல்லாது, அரசன் குமணன் அளித்த இந்த செல்வங்களை, அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்கிறார். 

இந்தப் பாடல் தொகுப்புகளில், பண்டையக்கால தமிழ் அரசர்களின் கொடைத்திறன் பற்றி மட்டுமல்லாது, அந்த வள்ளல்தன்மை எவ்வாறு ஒரு நாட்டின் அரசு முறைமையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் காண முடிகிறது.  மக்களிடம் இருந்து வரிபெற்று ஆட்சி நடத்தும் வழக்கத்திற்கு, ஈடாக, அரசுக் கருவூலத்திலிருந்து கற்றோர் வழியே அதே மக்களுக்கு அந்தச் செல்வம் சென்று சேரும் ஒரு சுழற்சி பொருளாதாரத்தை, அதன் பயனாக வேந்தர்கள் மக்கள்பால் கனிவான அரசை செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை, மற்றும் கற்றறிந்த சான்றோர் தங்கள் நிலை தாழாது கண்ணியத்துடன் நடத்தப்படுவதை முதன்மை நோக்காக கொண்டிருந்தார்கள் என்பதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

புலவர் பெருஞ்சித்திரனாரின் பாடல் தொகுப்பிற்கு அடுத்து, பெருந்தலை சாத்தனார் என்பவரின் பாடல்களிலும் குமணனது வள்ளத்தன்மை போற்றப்பட்டிருக்கின்றது.  

தன்னுடைய அரசு பறிபோன நிலையிலும், தன் தலையைக் கொடுத்தாவது தன்னை நம்பி வந்தவர்களின் துயர்தீர்க்கும் பண்பு கொண்டிருந்தான் என்பது அந்தப் பாடல்களில் பாடப்பட்டிருக்கும் அரிய பண்பு.  இந்தப் பாடலை ஒட்டி இக்கால தமிழறிஞர் சிலர் குமணனின் வள்ளல் மான்பை நாடக இலக்கியமாக எழுதியிருக்கின்றனர்.

சங்கப்பாடல் திரட்டு என்பது இது போன்ற பண்டைக்கால வாழ்வியல் சித்திரங்களை நாம் ஒன்றுகூட்டி அமைத்துக் கொள்ளும் சிறப்பு கொண்டிருக்கிறது.  அதிலிருந்து ஒரு துளியை நாம் சுவைத்துப் பார்க்க, ஓர் உடோபிய சமூகத்தின் பெருவெளியாக அது நம்மிடையே விரிந்து பரவுகிறது.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

❌