Normal view

Received before yesterday

செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப்

whatsapp

வாட்சாப்பில் நிரம்பி வழியும் செய்திகளால் அவதிப்பட்டது உண்டா? முக்கியமான தகவல்களைப் பெற பல மணி நேர உரையாடல்களில் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை என்கிறது வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அம்சம்.

whatsapp

நம்மில் பலரிடம் வீட்டு ஜன்னல்களைக் காட்டிலும் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குழுக்கள் இருக்கும். முக்கியத் தகவல் பரிமாற்றம், அரட்டை, செய்திப் பகிர்வு, சமூக நல்லிணக்கம் என அனைத்தையும் நாம் அதன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சில குழுக்களை நாம் முதன்மையாக (Pinned) வைத்திருக்கிறோம், சிலவற்றை நிரந்தரமாக அமைதி (Mute) ஆக்குகிறோம். ஆனால் அவற்றிலிருந்து முக்கியத் தகவல்களை நாம் தேட நேர்ந்தால், பல செய்திகளைத் தொட்டு நகர்த்தித் துழாவ வேண்டியிருக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள வாட்சாப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

வாட்சாப்பின் செய்திச் சுருக்கம் 

பலநாள் திறக்கப்படாத உரையாடல்கள், குழுக்களில் ஒளிந்திருக்கும் முக்கியமான தகவல்களை இனி எளிதில் கண்டுபிடித்து விடலாம். செயற்கை நுண்ணறிவை அதற்காக மெட்டா நிறுவனம் பணியமர்த்தி இருக்கிறது. தேவையான தகவல் இருக்கும் என நினைக்கும் (அல்லது) படித்தறிந்து கொள்ள வேண்டிய குழுவின் செய்திகளை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாகப் படித்துவிட்டு, ஒரே செய்திச் சுருக்கமாக (summary) கொடுக்கும் அம்சம் வாட்சாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாட்சாப்பில் செயல்பாட்டில் இருக்கும் மெட்டா செயற்கை நுண்ணறிவுதான் இந்த வேலையை நமக்காகச் செய்து தருகிறது. இந்தப் புதிய அறிமுகம், அதிக செய்திகளைப் படித்தறிய நேரமில்லாதவர்களுக்குப் பயனளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எப்படி இயக்குவது? 

செய்திகளைச் சுருக்கும் அம்சம் இப்போதைக்கு ஆண்டிராய்டு வாட்சாப் முன்னோட்டப் (Android Whatsapp Beta) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு உரையாடலின் அடிப்பகுதியிலும் சிலருக்கு “மெட்டா உதவியுடன் சுருக்கவும்” (Summarize using Meta AI) என்ற அமைப்பு காட்டும். அதைச் சொடுக்கினால் நொடியில் நம் தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு சுருக்கிக் கொடுத்துவிடும். இது மேம்பட்ட தனியுரிமை (Advanced Privacy) அம்சத்தை வைத்திருக்கும் உரையாடல்களில் வேலை செய்யாது. இதை பயனர்களின் விருப்பப்படி இயக்கவோ முடக்கவோ முடியும்.

செய்திகளை மெட்டா படிக்குமா? 

மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதும், நமது செய்திகளை செயற்கை நுண்ணறிவு படிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்தது.  இது பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஆனால், செய்திகள் அப்படி வாசிக்கப்படாது என்று மெட்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவில் தனிப்பட்ட செயலாக்க முறைப்படி இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது. அது அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு முற்றிலும் குறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வகையில்தான் பரிமாறப்படும் என்றும், அதை யாராலும் வாசிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சுருக்கம் செய்யும் தகவல்களும் பாதுகாப்பான இடைமுகத்தில் செயல்படுகிறது என்று மெட்டா உறுதி அளிக்கிறது. 

எங்கும் செயற்கை நுண்னறிவு

இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் சுருக்க அம்சம் மூலம் தகவல்களை விரைவில் புரிந்து கொள்ள முடியும். பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பயன்பாடு அனுபவத்தை உயர்த்த முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை விரைவில் முடிக்க முடியும். தொழில்நுட்ப உலகின் புதிய தாரகச் சொல்லான “எங்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற நோக்கத்திற்கு இம்முயற்சி வலு சேர்க்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். 

  • விவேக்பாரதி

வாட்ஸ்ஆப் செய்திச் சுருக்கம் குறித்த செய்தி

The post செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப் appeared first on செல்லினம்.

ஐபோனில் இயல்பாகும் வாட்சாப்

whatsapp iphone

ஐபோன் பயனர்கள் இனி இயல்புநிலைச் செயலியாக வாட்சாப் மூலம் அழைப்பு விடுக்கலாம், தகவல் அனுப்பலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

whatsapp iphone

உலகம் முழுவதிலும் சுமார் நூறு கோடிக்கும் அதிகமானோர் ஐபோன் பயன்படுத்தி வருகின்றனர். திறன்பேசி சந்தையில் ஐபோன்கள் உச்சத்தில் உள்ள நிலையில், நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளைச் சீர்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் புதிய தொழில்நுட்பச் சந்தைச் சட்டத்தை (Digital Markets Act) கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் சுதந்திரத்தோடு சந்தைப் போட்டியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமே, ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய நெருக்கடியைக் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. 

ஆப்பிள் ஐபோனில் இதுவரை அழைப்பு மற்றும் தகவல் பகிர்வுகளுக்கு தன் சொந்த செயலியையே இயல்புநிலைச் செயலியாக (Default Apps) பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் மாற்றம் கொண்டு வரும் வகையில், திறன்பேசிகளில் இயல்புநிலை செயலிகளைப் பயனர்கள் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பச் சட்டம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதனால் வாட்சாப் செயலியையும் இயல்புநிலைக்குத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வாட்சாப்பின் புதுப்பிப்பு அம்சங்களில் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் ஐஓஎஸ் 18.2 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்த, வாட்சாப் செயலியை 25.8.74 பதிப்புக்குப் புதுப்பிக்க வேண்டும். பின்னர் ஐபோனின் கட்டமைப்புக்குள் நுழைந்து, இயல்புநிலை செயலியில் வாட்சாப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன்மூலம் ஐபோனில் உள்ள தொடர்புகளில், யாருக்கு அழைப்பு விடுத்தாலும் அது தானாகவே வாட்சாப் அழைப்பாக நிகழும். தகவல்களைப் பகிரும்போதும் இயல்பாகவே வாட்சாப் செய்தியாக அனுப்பப்படும். 

இந்த வசதி பயனர்களுக்கு தேர்வுகளும் சுதந்திரமும் வழங்குகிறது என்று கூறப்படும் நிலையில், கலவையான எதிர்வினைகளையும் பெற்றுள்ளது. பல பயனர்கள் ஐபோனின் இயல்புநிலைச் செயலியைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். வாட்சாப்பை இயல்புநிலைக்கு மாற்றுவதில் வெகுசிலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கிடையில் சிலர், வாட்சாப்பை இயல்பு நிலைக்கு மாற்றுவதால் வரும் அழைப்புகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படுவதாகவும் பதிவு செய்துள்ளனர். 

மொத்தத்தில், இந்த புதுப்பிப்பு ஐபோன் பயனர்களுக்கு அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதலில் அதிக சலுகையை வழங்குகிறது, மேலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயலிகளை அமைக்க உதவுகிறது.​

இந்த அம்சம் முதற்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளின் பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுக்கும் விரிவாக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஐபோனில் இயல்பாகும் வாட்சாப் appeared first on செல்லினம்.

❌