Normal view

Received before yesterday

மக்கள் எனப்படுவது

26 January 2019 at 08:05

தொழிலாளர்கள் போராட்டமோ…
ஆசிரியர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். சொல்வார்:
.
“மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.”
.
அதாவது 1977 ல் ஆட்சிக்கு வந்த பின்பு
.

விவசாயிகள் போராட்டமோ…
மாணவர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் கருணாநிதி சொல்வார்:
.
“இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்.”
.
அதாவது 1969 ல் ஆட்சிக்கு வந்த பின்பு
.

நெசவாளிகள் போராட்டமோ…
சாலைப் பணியாளர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் ஜெயலலிதா சொல்வார்:
.
“எதிர்க்கட்சிகளது தூண்டுதலை சந்திப்போம்”
.
அதாவது 1991 ல் ஆட்சிக்கு வந்த பின்பு.
.

அதற்காக ராஜகோபாலாச்சாரியாரோ –
பக்தவச்சலமோ
சவால் விடாதவர்களோ..
விடத் தெரியாதவர்களோ அல்ல.
.
அவர்களும் செய்தார்கள் அதை.
.

ஆக இன்றைய நொடிவரை எனக்குப்
புரியாத புதிர் ஒன்றே ஒன்றுதான்.
.
அது: மக்கள் எனப்படுவது யார்…?
.
மொத்தத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களது
போராட்டமும் முடிவுக்கு வந்து விட்டது.
அவர்களது போராட்டம் மட்டுமில்லை…
நெசவாளிகள்… விவசாயிகள்…
போக்குவரத்துத் தொழிலாளர்கள்… சாலைப் பணியாளர்கள் …
என சகலரது போராட்டமும்தான்.
.
எது ஆளுகிறது…?
எது ஆதரிக்கிறது…? என
எதுவும் புரிபடாத நிலையில் உழைக்கும் உலகம்.
.
அதுசரி…
ஏனிந்தப் போராட்டங்கள் அனைத்துமே
ஏறக்குறைய நீர்த்துப் போயின?
.
விவசாயிகள் போராட்டமா…?
மருத்துவர்களுக்கு கவலையில்லை.
.
நெசவாளிகள் போராட்டமா…?
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குப் பிரச்சனை இல்லை.
.
மாணவர்கள் போராட்டமா…?
அரசு ஊழியர்களுக்கு சம்பந்தமேயில்லை.
.
சற்றே சிந்தித்தால்…
ஒருவருடைய போராட்டம்
மற்றவருக்குத் தேவையற்ற ஒன்று.

ஆனால், தான் போராடும்போது மட்டும்
உலகமே தனக்குப் பின்னால் அணிதிரண்டு
நிற்க வேண்டும் என்கிற பேராசைக்கு
மட்டும் பஞ்சமில்லை.
.
பஞ்சப்படி உயர்வுக்காக தன் பின்னால்
விவசாயிகள்கூட அணி திரள வேண்டும் என
எண்ணுகிற அரசூழியன் விவசாயிகளது இலவச (?)
மின்சார பறிப்பிற்கு எதிராக தான் துணை நிற்க வேண்டும்
என ஒரு நொடிகூட சிந்தித்ததில்லை.
.
மருத்துவக் கல்லூரியின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக
அகிலமே அணிதிரள வேண்டும்
எனக் கனாக்காணுகிற ஒரு மருத்துவ மாணவன்..
அதிகபட்ச கல்விக் கட்டணங்களுக்குப் பலியாகும்
பிற மாணவரது போராட்டங்களில்
தன்னை இணைத்துக் கொள்வதில்லை.
.
எனக்கு ஜார்ஜ் குருஜிப் சொன்ன
ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
.
மலையில் வசித்த மந்திரவாதி ஒருவன்
தான் வைத்திருந்த ஆட்டு மந்தையில்
ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிட்டு வந்தபோது
சில ஆடுகளுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டதாம்.
.
தமது கூட்டத்தில் ஒவ்வொரு நாளும்
சில ஆடுகள் காணாமல் போவதாக…
சந்தேகப்பட்ட ஆடுகளில் ஒன்றை அழைத்து
மந்திரவாதி சொன்னது இதுதான்;
.
“உண்மையில் நீ ஒரு ஆடல்ல.
ஒரு சிங்கம்.
நான் சாப்பிடப்போவது ஆடுகளை மட்டும்தான்.
நீ தைரியமாக இரு”
.
அடுத்ததாக மற்றொரு ஆட்டை அழைத்து,
“நீ ஆடே கிடையாது அவர்கள்தான் ஆடுகள்.
சரியாகச் சொன்னால் நீ ஒரு புலி.
நான் கொல்லப் போவது ஆடுகளை மட்டும்…”
என இப்படி ஒவ்வொரு ஆட்டிற்கும்
ஒவ்வொரு விளக்கம் கொடுத்தானாம் அந்த மந்திரவாதி.
.
அந்த அப்பாவி ஆடுகள் ஒவ்வொன்றும்
தன்னை சிங்கமாகவும், புலியாகவும், கரடியாகவும்
கற்பிதம் செய்து கொண்டிருந்த வேளைகளில்
தனது கூட்டத்தில் இருந்தவர்கள்
ஒன்றன் பின் ஒன்றாக காணாமல் போனதை
உணரவேயில்லை.
.
மொத்தத்தில் அவை அனைத்துமே
அந்த மந்திரவாதியின் பசிக்கு இரையானதுதான்
அவர்களது அறியாமைக்குக் கிடைத்த விலை.
.
(விலை கிடக்கட்டும்…
இக்கதையின் மூலமாக தாங்கள் சொல்ல வரும் நீதி…?
என நீங்கள் முழங்கையை மடக்குவது புரிகிறது…

ஆடோ.. நாடோ… நரிகளிடம் நாட்டாமைக்குப் போனால்
கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்
என்பதைப் புரிந்து கொள்வது புத்திசாலித்தனமானது…
போதுமா சாமி!)
.
இதற்கும் இன்றைக்கு நடக்கிற
ஒவ்வொரு பிரிவினரது போராட்டங்களுக்கும்
எந்தவொரு வித்தியாசமும் புலப்படவில்லை எனக்கு.
.
ஏனெனில் உலகில் மக்கள் என்று எவரும் தனியாக இல்லை.
.
ஒரு மூதாட்டி ஒரு விவசாயினுடைய மனைவியாக இருப்பார்.
.
ஒரு முதியவர் ஒரு நெசவாளியினது கணவராக இருப்பார்.
.
இது எதுவும் இல்லாது இருப்பவர்…
பூமிக்குள் “பத்திரமாக” படுத்துறங்குபவராக இருப்பார்.
.
முதுமைக்குக்கூட ஓய்வையும்… நிம்மதியையும்,
நிம்மதியான சாவையும்கூட தந்துவிடாத
“மகத்தான” சமூக அமைப்பு நம்முடையது.
.
ஆக…
‘மக்களுக்குத் துன்பம்…’
‘மக்களுக்குப் பிரச்சனை…’
‘மக்கள் கவனித்துக் கொள்வார்கள்…’
என்றே வருகின்ற ஒவ்வொரு அரசுகளும் முழங்குகின்றனவே…
.
ஆனால்……..
.
தொழிலாளர்கள்…
விவசாயிகள்…
ஆசிரியர்கள்…
மாணவர்கள்…
நெசவாளிகள்…
உதிரிப் பாட்டாளிகள்.. என
இவர்களையும் தாண்டி
வேற்று கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
‘மக்கள்’ எனத் தனியாக
வேறு எவரேனும் உளரோ…?
.
நீங்களாவது கொஞ்சம் உளறுங்களேன்..
.
.
(“புலம்பல் பக்கம்” – தீராநதி – 2000.)

❌