Normal view

Received before yesterday

அபினுக்கு அப்பால்

By:Para
20 April 2025 at 01:36

Pa Raghavan

கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பொதுத் தலைப்பில் சீனி விசுவநாதன் பாகம் பாகமாக பாரதியின் படைப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளியான காலத்தில் உடனுக்குடன் ஒவ்வொரு பாகத்தையும் ஆர்வமுடன் வாங்கினேன். ஆயினும் எப்படியோ சில பகுதிகள் விடுபட்டுவிட்டன. இந்தக் காலவரிசைப்படுத்தலின் முக்கியத்துவம் என நான் கருதுவது, ஒரு கலைஞனின் சிந்தனை காலக்கட்டம் தோறும் எப்படி வளர்ந்து, இறுதியில் என்னவாக மலர்ந்து நிறைந்திருக்கிறது அல்லது வாடிச் சுருங்கியிருக்கிறது என்பதை அறிய முடிவதுதான்.

நேற்று, என்னுடைய புத்தக அடுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சீனி விசுவநாதன் பதிப்புகளை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன. கண்ணன் மீது, விநாயகர் மீது, முருகன் மீது, இதர பல தெய்வங்களின்மீது அவர் பாடிய எதுவும் ‘தேறித் தெளிந்தவனின்’ சொற்களாக அல்லாமல் உணர்ச்சிமயத்துக்கு அப்பால் வேறெதையும் அறியாத வேறொரு கவிஞனையே சுட்டிக்காட்டுகின்றன.

பாரதி சந்தித்த மூன்று சித்தர்களைப் பற்றிய குறிப்புகள் அவரது சுய சரிதையில் வருகின்றன. குள்ளச்சாமி என்றொரு சித்தர். கோவிந்தசாமி என்றொரு சித்தர். பிறகு யாழ்ப்பாணச் சாமி என்பவர்.

இதில் குள்ளச்சாமி, பாரதியை மிகவும் பாதித்தவர் என்று எண்ண முடிகிற விதமாக அவரைக் குறித்துச் சற்று நிறையவே எழுதியிருக்கிறார்.

‘சாமி, நீங்க யாருன்னு எனக்குப் புரியல. ஒரு பார்வைல பரமசிவனா தெரியறிங்க. இன்னொரு பார்வைல பைத்தியக்காரனாட்டம் தெரியறிங்க. சின்னப் பசங்களோட ரோட்ல திரியறிங்க. சொறிநாய்ங்க கூடல்லாம் விளையாடிட்டிருக்கிங்க. உங்கள கேடகரைஸ் பண்ண முடியல. நீங்களே சொல்லிடுங்க, யார் நீங்க?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்கிறார்.

சித்தர் அப்போது நல்ல மூடில் இருந்திருக்கிறார். சரி, வா என்று ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். புராதனமான, இடிபாடுகள் மிகுந்த, யாரும் வசிக்காத இடம். அங்கே ஒரு கிணறு இருந்திருக்கிறது. அதனருகே பாரதியை அழைத்து வரும் குள்ளச்சாமி, ‘மேல பாரு’ என்று சொல்லவும் பாரதி அண்ணாந்து பார்த்திருக்கிறார்.

‘என்னா தெரியுது?’

‘சூரியன்.’

‘குனி. அப்புடியே கிணத்துத் தண்ணியப் பாரு.’

பாரதி பார்க்கிறார்.

‘இப்ப என்னா தெரியுது?’

‘அதே சூரிய வெளிச்சம்தான் தண்ணில விழுது.’

‘அவ்ளதான் மேட்டர். போ.’

சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி எழுதுகிறார்:

தேசுடைய பரிதிஉருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தச் சித்தர் எப்போதும் சுமந்து வரும் அழுக்கு மூட்டை குறித்து பாரதி அவரிடம் கேட்டிருக்கிறார்.

‘எதுக்குங்க இந்த கப்படிக்கற மூட்டைய எப்பம்பாரு தூக்கிட்டுத் திரியறிங்க? சித்தர்னா இப்படித்தான் இருந்தாகணும்னு எதாச்சும் ரூல் இருக்குதா?’

அதற்குக் குள்ளச்சாமி சொல்கிறார், ‘டேய் நானாச்சும் வெளிய, முதுகுல தூக்கிட்டு சுத்தறேன். நீ உள்ளார இல்ல குவிச்சி வெச்சிருக்கற?’

புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தினுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ

– என்பது பாரதியின் விவரிப்பு. சம்பவங்களை, அவை நடந்த விதத்திலேயே கவிதையில் அவர் விவரிப்பதைப் படிப்பது பேரனுபவமாக இருக்கிறது.

பாரதி சந்தித்த இன்னொரு சித்தர், கோவிந்த சாமி. இவர் சற்று வேறு மாதிரி போலிருக்கிறது. கவிஞரை முதலில் திகைக்க அடித்துவிட்டு, அதன் பிறகுதான் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதாவது, பாரதியின் (மறைந்த) தாய் தந்தையின் உருவத்தைத் தான் ஏந்தி அவர்முன் காட்சியளித்திருக்கிறார்.

‘செத்துப் போன உன் அப்பன் ஆத்தாள பாத்துக்க.’

இது எப்படி சாத்தியம்? பாரதியின் பெற்றோரை சித்தருக்குத் தெரியாது. அவர்கள் வாழ்ந்தது வேறு காலம். இறந்தவர்களின் உருவைத் தன் முகத்தில் ஏந்தி, அவர்களது பிள்ளைக்கு ஒரு மனிதன் காட்டினால் அவன் சுருண்டு காலில் விழுந்துவிட மாட்டானா?

அதுதான் நடந்திருக்கிறது.

… இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான் பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி உடையனென்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.

இதில் ‘மரணபயம் நீங்கினேன்’ என்கிற சொற்கள்தாம் சாரம். எதுவும் அழிவதில்லை; உடலைத் தவிர என்கிறது கீதை. இந்த சாமி அதை பாரதிக்குப் புரிய வைத்த விதத்தில் சிறிது மேஜிக் கலந்திருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாகச் சென்று சேர்ந்துவிட்டதுதான் முக்கியம்.

யாழ்ப்பாணச் சாமி என்ற மூன்றாவது சித்தரைக் குறித்து எழுதும்போது, தங்கத்தால் இழைத்துக் கோயில் கட்டி, லிங்கப் பிரதிஷ்டை செய்து நீங்கள் கும்பிடுகிறீர்கள். எனக்கு இவன் கண்கள் போதும். இவனைப் பார்ப்பதும் சிவனைப் பார்ப்பதும் எனக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிடுகிறார்.

பாரதியின் சித்தர் தொடர்புகளைத் தொட்டால் உடனே நம் நினைவுக்கு வருவது குள்ளச்சாமி அவருக்கு அபின் கொடுத்தார் என்கிற விவரம்தான். அதைத்தான் பல ஆய்வறிஞர்கள் விரித்து விவரித்துக் களித்திருக்கிறார்கள். வ.உ. சிதம்பரம் பிள்ளைகூடத் தனது புத்தகம் ஒன்றில் இது குறித்து மிக விரிவாகச் சொல்லி, அந்தக் கருமத்தை விட்டுத் தொலையப்பா என்று நண்பருக்கு அக்கறையுடன் அறிவுரை சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

குள்ளச்சாமியிடம் பாரதி பெற்றது அபின் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பாரதியின் வாழ்வில் அந்தக் கட்டத்தைத் தோண்டி எடுத்து நாம் பெறுவது அது ஒன்றைத்தான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

I have the streets - Ashwin

சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் 100 டெஸ்ட் ஆடுவது என்பது சாதரண விஷயம் இல்லை என்று பேசியிருந்தார். அவர் பேசியது இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றி. ஸ்ரீகாந்த் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் பல நிலைகளில் இருந்தவர். ஆட்டக்காரர், தேர்வு கமிட்டி தலைவர், வர்ணனையாளர், பயிற்சியாளர். பல உள் விவகாரங்களை அறிந்தவர் என்பதால் அந்த கூற்றிற்கு பல வண்ணங்கள் இருக்கலாம்.  

நூறு டெஸ்ட் போட்டிகள் 500 விக்கெட்கள், உலககோப்பை. ஆஸ்திரேலியாவை கலக்கியவர். சயன்டிஸ்ட் அஷ்வினின் குட்டி ஸ்டோரிஸ்தான் இந்த புத்தகம். 

இந்த புத்தகம் அஷ்வினின் வாழ்க்கை வரலாறு என்று எல்லாம் கூறி அவரை வயதானவராக்க வேண்டாம். புத்தகமும் அப்படி எல்லாம் இல்லை. இந்த புத்தகம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் பேசுகின்றது. அவரது தொழில்முறை கிரிக்கெட் இல்லை. அவது வீட்டு கிரிக்கெட், தெரு கிரிக்கெட், க்ளப் கிரிக்கெட். 

சென்னை வெஸ்ட் மாம்பலம் ராமகிருஷ்ணாபுரத்தில் திரிந்த ஒரு சிறுவன் எப்படி தொழிற்முறை கிரிக்கெட் ஆட்டக்காரராக மாறினார் என்பதை படு சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார். அஷ்வின் என்னும் சிறுவனைப் பற்றிதான் நிறைய உள்ளது. 

தெருவில் கிரிக்கெட் ஆடிய பலருக்கும் மிகவும் நெருக்கமாகத் தோன்றும், என்னடா நம்ம கதை மாதிரியே இருக்கு என்று. எனக்கு கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் பிடிக்கும். ஆடியது எல்லாம் விடுமுறையில் சென்னை வரும் போது மொட்டை மாடியில் ஆடுவது மட்டும். அதுவும் அதிகம் கிடையாது, பள்ளியிலும்  விளையாட்டு நேரத்தை எப்படியாவது அமர்ந்தே ஓட்டுவதுதான் வழக்கம். சோம்பேறி. இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.

பந்து தொலைந்தால் அவுட், மாடியிலிருந்து பந்தை கீழே அடித்தால் அவுட். லெக்ஸைட் இடம் கிடையாது அதனால் ஆஃப்ஸைட் மட்டுமே ஆடவேண்டும், ஒன் பிட்ச் கேட்ச் அவுட்,  கிடைப்பது எல்லாம் பேட், ஒரு கிரவுண்டுக்குள் பதினைந்து டீம் கிரிக்கெட் ஆடுவது, இது எல்லாம் அனைத்து சிறுவர்களும் செய்வது, அது அவர்களது கிரிக்கெட்டை எவ்வாறு மாற்றும் என்பது கொஞ்சம் நுணுக்கமானது. தூக்கி அடித்தால் அவுட் எனும் போது தரையோடு ஆடி பழக்கம் வரும், ஆப்ஸைட் மட்டுமே ரன் என்றால் அந்தப்பக்கம் திறமை வளரும். ஆனால் அதை எப்படி தொழிற்முறை கிரிக்கெட்டில் பயன்படுத்துகின்றார்கள் என்பதுதான் அவரவர்க்கான திறமை. ஸ்ட்ரீட் கிரிக்கெட் எப்படி தொழிற்முறை கிரிக்கெட்டை செம்மைபடுத்தியது என்பது இப்புத்தகத்தின் ஒரு திரி. 

இதுநாள் வரை எனக்கு தெரியாத இன்னொரு உலகத்தையும் காட்டியுள்ளது. எனக்கு தெரிந்த கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட், ஐபில், டிஎன்பில் போன்ற போட்டிகள், ரஞ்சி, துலீப், போன்று மாநில அளவிலான கிரிக்கெட். ஆனால் இதைவிட மாநில அளவில் ஏகப்பட்ட க்ளப்கள், அதற்கான பயிற்சி முகாம்கள், க்ளப்களுக்கு இடையிலான போட்டி இது எல்லாம் புதிது எனக்கு. 

ஒரு ஒப்பனிங் பேட்ஸ்மேனாக ஆரம்பித்து பல போட்டிகளில் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்யப்பட்டு ஒரு பேட்ஸ்மேனாக போக வேண்டிய அஷ்வின் பெளலரானது அவரது கர்மா என்றுதான் கூறவேண்டும். அஷ்வினின் பயணம் ஒரு வகையில் பலருக்கு ஒரு தைரியத்தையும் தரும். சிறுவயதில் உடல்நிலை பிரச்சினை, ப்ரைமரி காம்பெள்க்ஸ், ஆஸ்த்மா அட்டாக் பிரச்சினைகள் இருந்தும் பேட்ஸ்மேனாக மாறும் போது முதுகுவலி. கிரிக்கெட் ஆடமுடியாத நிலை. மீண்டு வந்தாலும் உடனே ஆடமுடியாது, உடலை மிகவும் வருத்தி கொள்ளாமல் செய்யலாம் என்று ஆரம்பித்த ஆஃப்ஸ்பின், இன்று அவரை உலகில் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக மாற்றியதை கர்மா என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு திறமையான நாவல் போல ஒவ்வொரு பாத்திரங்களையும் மிகவும் நெருக்கமாக உணர வைத்துள்ளார். அஷ்வினின் அப்பா, அம்மா, தாத்தா ஒவ்வொருவரை பற்றி அவர் பேசும் போது அவர்கள் நம்முள் எழுந்து வருகின்றார்கள்.  காவலர்கள் வணக்கம் வைக்கும் தோற்றம் கொண்ட, நண்பர்கள் வீட்டிற்கு சென்று நோட்ஸை எழுதிவரும், அப்பா, சர்வதேச போட்டிகளில் எப்படி பந்துவீசியிருக்க வேண்டும் என்று ஐடியா தரும், அம்மா, தானே சமைத்து உண்டு, பேரனை கோச்சிங்கிற்கும், வெளியூர் போட்டிகளுக்கு அழைத்து செல்லும் தாத்தா, நண்பர்கள் அனைவரையும் மிகவும் தெரிந்தவர்கள் போல ஆக்கிவிட்டார். 

மாம்பலத்து தெருக்களில் இருக்கும் சாதரணர்களையும் உயிரோடு பார்க்க முடிகின்றது. அஷ்வினின் இன்றைய நிலைக்கு காரணம் அவரது அப்பா. எந்த அப்பா ஸ்கூலை கட்அடித்து விட்டு டெஸ்ட் மேட்ச் பார்க்க பையனை அழைத்து போவார், அவர் செய்திருக்கின்றார். அஷ்வினின் அப்பாவும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக இருந்துள்ளார்.  அவரால்  முடியாததை பையனை சாதிக்க வைத்துவிட்டார். 

வழக்கமான சுயசரிதைகளில் பல பிரபலர்களைப் பற்றி அதிகம் இருக்கும். அதுவும் அஷ்வின் தனக்கு தெரிந்த பிரபலங்களை பற்றி எல்லாம் விலாவரியாக எழுதியிருக்கலாம். தோனியை பற்றி ஒரு ஐம்பது பக்கம் எழுதியிருந்தால் போது புத்தகம் இன்னமும் பரபரப்பாகியிருக்கும். ஆனால அது எல்லாம் இல்லை, பிரபலங்களைப் பற்றி எவ்வளவு தேவையோ அவ்வளவே இருக்கின்றது. சச்சின், தோனி, ஷேவாக், யுவராஜ், கங்கூலி, ட்ராவிட், கார்த்திக் என பலரைப் பற்றி பல சுவாரஸ்ய குறிப்புகளாகவே வருகின்றன.

கிரிக்கெட் தொழில்நுட்ப விவரங்களும் இருக்கின்றன, அவரது ஸ்பெஷல் சொடுக்கு பாலின் வரலாறு, சில பல பிரபல போட்டிகள் பற்றிய குறிப்புகள், சில பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகள்.

வெகு சுலப நடை, பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் தாரளமாக படிக்கலாம். ஒரு புன்னகையோடு படிக்க முடிகின்ற புத்தகம். ஒரு ஃபீல் குட் படம் என்பார்களே அது மாதிரி . அஷ்வினுடன் சித்தார்த் மோங்கா பெயரும் ஆசிரியர் பெயரில் வருகின்றது, எடிட்டர் போல. சித்தார்த் மோங்கா என்பவரை பற்றி தேடினால் திரைக்கதை ஆசிரியர் என்று வருகின்றது. சுவாரஸ்யத்தை கூட்டுவதில் அவர் பங்கு இருந்திருக்கலாம்.

என்னை பொறுத்தவரை இது ஒரு பகுதிதான், இன்னமும் அவரது தொழிற்முறை கிரிக்கெட் பற்றி எழுதவேண்டும், ஓய்வு பெற்றபின் எழுதலாம். பிரச்சினை இல்லாமல் இருக்கும். 


பனி உருகுவதில்லை - அருண்மொழி நங்கை

பெரும்பாலான எழுத்தாளர்களின் குடும்பம் பற்றி நமக்கு பெரிதும் தெரியாது, மிக நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் பல கட்டுரைகளில் அவரது குடும்பத்தைப் பற்றி வெகு விரிவாக எழுதியிருக்கின்றார். அவரது தாய், தந்தை, அண்ணன், மனைவி, குழந்தைகள் அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் போல ஆகிவிட்டனர். அவரது மாமனார் கூட தெரிந்தவர் போல ஆகிவிட்டார். இந்த புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு மிகத் தெரிந்த ஒருவரின் எழுத்தை படிக்கப் போகின்றோம் என்பது போலத்தான் இருந்தது. அவரது மனைவி மிகச் சிறந்த வாசகி என்பது நன்கு தெரிந்தது. 

ஜெயமோகன் தளத்தில் அருண்மொழி நங்கை எழுதிவரும் தளத்தின் இணைப்பை ஒரு கட்டுரையில் கொடுந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன், இரா. முருகனின் தளம் மிக மோசமாக வடிவைக்கப்பட்டது என்று எழுதியிருந்தார், அதற்கு போட்டி போடும் அளவிற்கு இதுவும் இருந்தது. அந்த இணைய தளத்தில் அமைப்பு என்னை ஏனோ படிக்கும்படி செய்யவில்லை. ஒரு இணைய பக்கத்தில் ஒரு பக்கம் மட்டும் அதிக வெற்றிடம் இருக்கும்போது அது கவனத்தை பெரிதும் சிதறடிக்கும். 

கட்டுரை, முகப்பு படம், தலைப்புகள், பதிவு வகைகள் போன்றவைகள் எல்லாம் கோடு போடாத பேப்பரில் எல்லாப்பக்கமும் எழுதி வைத்தது போல இருந்தது. தற்போது பெரும்பாலான தளங்கள் ஸ்மார்ட்  போனில் படிப்பதற்கு ஏதுவாகவே அமைக்கப்படுகின்றது. என்னைப் போல கம்ப்யூட்டர் ப்ரெளசரில் படிப்பவனுக்கு கஷ்டம். தளத்தின் பின்புல வண்ணமும் ஒரு மாதிரியாக இருந்ததால் படிக்க முடியவில்லை. படிப்பவனுக்கு உள்ளடக்கம்தானே முக்கியம், வடிவம் எல்லாம் எதற்கு என்று கேட்டால் அது அப்படித்தான் தொழில் புத்தி. ஜெயமோகன் தளத்தில் பதிவுகள் நடுவில் இருக்கும், பதிவுச் சுருக்கம் அளவாக இருக்கும், மற்ற பகுதிகள் சிறிய கோடு அல்லது தலைப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். அது படிக்க எளிதாக இருக்கும். சரி எப்படியும் புத்தகமாக வரும் படித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

ஜெயமோகன் ஒரு கட்டுரையில் "உன்னை மாதிரியே என்னாலும் எழுத முடியும் தெரியுமில்ல" என்று அவர் மனைவி சொன்னதாக எழுதியிருந்தார், அது உண்மையோ, புனைவோ தெரியாது, ஆனால் அருண்மொழி நங்கை ஜெயமோகன் போல எழுதவில்லை, அவருக்கென்று ஒரு தனி நடையை உண்டாக்கி கொண்டுள்ளார். பலர் அருண்மொழியை பற்றி கூறும் போது ஜெயமோகனின் பாதிப்பு அவரிடம் இல்லை என்பதை முக்கியமாக கூறியிருந்தனர். அவர் ஜெயமோகனை படிப்பதற்கு முன்பே பல எழுத்தாளர்களை படித்திருக்கின்றார், ஜெயமோகனை சந்திக்கும் முன்பே அவரிடம் ஒரு எழுத்தாளர் உருவாகியிருப்பார் போல. 

காவிரிக்கரையின் இசைப் பற்றி எழுத ஆரம்பித்து அவரது சிறுவயது நினைவுகளைத் தொடர் கட்டுரைகளாக எழுதியுள்ளார். அனைத்து கட்டுரைகளும் சிறுகதை வடிவில் கச்சிதமாக அமைந்துள்ளன, ஒரு நாவலின் பகுதியாகவும் கொள்ளலாம். அதற்கு காரணம் அங்கங்கு தோன்றும் சிறுசிறு புனைவு தருணங்கள். இது போன்ற வாழ்க்கை குறிப்புகள் எப்பொழுதும் எனக்கு பிடித்தமானவை. புனைவு கலந்து இருந்தாலும் அதுவும் சுவாரஸ்யமானதுதான். எது புனைவு என்பதை கண்டறிவது கூட சுவாரஸ்யமானது. 

திருச்சியை தாண்டி காவேரி பாயும் ஊர்க்காரர்களுக்கு இசை ரசனை என்பது இயல்பாக இருக்கும் போல. அங்கு வாழ்ந்தால் மட்டுமே வரும் என்று நினைக்கின்றேன். உறவினர்களில் தஞ்சாவூரிலிருந்து வந்தவர்களுக்கு அந்த இசை ரசனை இருக்கும், திருமணமான பின் அல்லது  தொழில் நிமித்தம் வேறு எங்கோ இருக்க வேண்டியிருக்கும். அதில பலருக்கு அவர்களின்  அடுத்த தலைமுறைக்கு அந்த ஞானம் இருப்பதில்லை. மரபணு வழியாக வரும் இசை ரசனை போல, இது மண்ணும், நீரும் வழியாக வருவது போல. கட்டுரையில் ஏழு வயது முதல் பத்து வயது வரை கேட்கும் இசை நம் மனதில் பதிவாகின்றது என்கின்றார். உண்மைதான், என் பக்கத்து வீட்டு பாட்டி தஞ்சாவூர். நன்றாக பாடவும் செய்வார்கள். அவர்கள் வீட்டில் நான் கேட்ட, மகாராஜபுரம் சந்தானமும், பாலமுரளி கிருஷ்ணாவின் ராமதாச கீர்த்தனைகளுமே என்னுடைய இசை ரசனைக்கு அடிப்படை. அருண்மொழியின் இசை ரசனை, ஒரு தஞ்சாவூர் அய்யரிடம் இருந்து ஆரம்பிக்கின்றது. அருண்மொழியின் ரங்கண்ணா. 

ஒவ்வொருவருக்கும் ரசனைகள் என்பது அவர்களது சிறுவயது சூழலில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக வளரும். சிலரின் ரசனை மேலே எழுந்து செல்லும் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று. சிலருக்கு தேங்கிவிடும். அருண்மொழியின் இசை, இலக்கியம், சினிமா ரசனைகள் எப்படி ஆரம்பித்து, எப்படி வளர்ந்தது என்பதை அழகாக எழுதியுள்ளார். பலருக்கு இதில் அனைத்திலும் தேங்கிப் போகும் அபாயம் உண்டு. எனக்கு சினிமா இசையில் இளையராஜாவை விட்டு வேறு எதையும் கேட்கப் பிடிப்பதில்லை. இந்துஸ்தானி சுத்தம். கர்நாடக இசையும் ஒரு குறிப்பிட்ட பாடகர்கள் என்றே நின்று விட்டது. இருந்தும் சில சமயம் திடீரென்று புதிதாக யாரையாவது தொடர்ந்து கேட்கத் தோன்றும். பண்டிட் பீம்சேன் ஜோஷியின் கன்னடப்பாடல்கள், வெங்கடேஷ் பண்டிட், ஜஸ்ராஜ் பண்டிட்டின் ஸ்லோகங்கள் என்று ஒரு இரண்டு மாசம் ஓடும். ஆனால் படிப்பதில் தடை ஏதுமில்லை. என்ன சிலரின் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவதில்லை, ஓசியில் கிடைத்தால் படிப்பது இல்லை விடுவது. 

சினிமாவை பற்றி ஒரு கட்டுரையில் ஜாலியான சினிமாவிலிருந்து எப்படி சீரியஸான சினிமாவிற்கு மாறினார் என்பதை பற்றி எழுதியிருக்கின்றார். இலக்கியம். ஜெயமோகனின் ஐயாயிரம் புத்தகம் என்னும் புனைவை நம்பியவர்க்கு 500 புத்தகங்கள் பரவாயில்லை தானே. ரஷ்ய இலக்கியங்களைப் பற்றி வெகுவிரிவாக எழுதியுள்ளார். சிறுவயது புரட்சி நம்பிக்கைகளைப் பற்றி எழுதும் போது ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்கின்றார்களே என்று தோன்றியது. அருண்மொழி நங்கை என்னை விட பன்னிரெண்டு வயது மூத்தவர். அவர் குறிப்பிடும் அந்த வயதில் எங்களுடைய ரசனைகள் எல்லாம் மாறியிருந்தன. புரட்சி எல்லாம் பக்கம் ஒதுங்கி கழகங்கள் ஒரு பக்கம், சினிமா ஒரு பக்கம் என்று மாறிவிட்டது. நான் வளர்ந்தது எல்லாம் துக்ளக் படித்து.  ஒரு பத்தாண்டு பெரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. 

அவரின் ரசனைகள் பற்றிய கட்டுரைகள் தவிர்த்த கட்டுரைகள் அவரது குடும்பத்தாரைப் பற்றியும் அவரின் ஊரார் பற்றியும். அவரது குடும்பம் பற்றிய அழகான சித்திரத்தை நமக்குள் உருவாக்குகின்றார். திராவிடர் கழக பற்று கொண்ட அப்பா, அதை கண்டு கொள்ளாமல் கோவிலுக்கு செல்லும் பாட்டி. அந்த பாட்டி ஜாலியான பாட்டி போல, இரவில் தலையணையை செட் செய்து விட்டு பேத்தியோடு திருவிழாவில் படம் பார்க்க செல்லும் பாட்டி எல்லாம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த பெண்பார்க்கும் படலம் கட்டுரை பிரமாதம், ஒரு சிறுகதைக்கான திருப்பங்களை கொண்டது. நிஜவாழ்வில் நடக்கும் பல சம்பவங்கள் கற்பனைக்கும் எட்டாது. அரசி என்னும் தலைப்பில் வரும் கட்டுரையில் வரும் பாட்டியும், மற்ற கட்டுரைகளில் வரும் பாட்டியும் ஒன்றா என்று தெரியவில்லை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு என் பாட்டி நினைவுதான் வந்தது. அந்த தலைப்பு என் பாட்டிகும் பொருந்தும். என்றாவது என் பாட்டியை பற்றி எழுதினால் அதுதான் தலைப்பு. 

இந்த கட்டுரைகளில் ஒன்றிரண்டு இடங்களைத் தவிர அந்த வயதிற்கு எது தோன்றுமோ அவ்வளவே காட்டப்பட்டுள்ளது. சிறுவயது சம்பவங்களை எழுதும் போது எழுதுபவரின் வயது தரும் கற்பனை புதிய கோணங்களைத் தந்துவிடும். அது பெரும்பாலும் இல்லை. அதுதான் இக்கட்டுரைகளில் அந்த போலியான ஏக்கத்தை இல்லாமல் செய்திருக்கின்றது. தீபாவளி, பொங்கல் போன்ற நல்ல நாட்களில் அனுப்புவதற்கு என்றே ஒரு டெம்ப்ளேட் இருக்கும், நாங்க சின்னப்புள்ளையா இருந்தப்ப எப்படி கொண்டாடினோம் இப்ப பாரு என்ற புலம்பல், படிக்கும் போதே ஒரு எரிச்சல்தான் வரும். அதற்கு காரணம் அதில் தொனிக்கும் அந்த போலித்தனமான ஏக்கம். இந்த கட்டுரைகளில் அது சுத்தமாக இல்லை. 

சில சொற்பிரயோகங்கள், வரிகளைப் படிக்கும் போது அவை எழுதப்பட்டவை போல எனக்கு தோன்றவில்லை. வாய்மொழியாக கதை சொல்லும் போது வரும் ஏற்ற இறங்கங்களுடன் படிக்கும் போதுதான் அதுபோன்ற வரிகள் வரும். அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எனக்கு. அந்த வயது பெண் சொல்வது போன்றும் வைத்துக் கொள்ளலாம். பழகிய ஊரை விட்டு செல்வது என்பது மிக கடுப்பான விஷயம், அதையும் வெகு இயல்பாக யார் மீதும் குற்றம் சொல்லாமல், புலம்பாமல் அந்த சோகத்தை சில பாராக்களில் கடத்துகின்றார். 

இது போன்ற கட்டுரைகள் நம்முடைய இளமை பருவத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கும். நம்முடைய அனுபவங்களை இந்தப் பக்கங்களோடு உரசிபார்த்து கொள்ளலாம். சிறுவயதில் நமக்கு புரியாத பல விஷயங்கள் இன்று புரியலாம். 

அருண்மொழி நங்கையைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் முதல் புத்தகம் என்று முன்னுரையில் சொன்னதை வைத்துதான் நம்ப வேண்டியிருக்கும். அனைத்து பாத்திரங்களையும் குறைவான வர்ணனைகள் மூலமே நம்முள் வரைகின்றார். காலை ஐந்து மணிக்கே எழுந்து சமைக்கும் அம்மா, பல் பொடி டப்பாவில் தேதி குறிக்கும் அப்பா, அருண்மொழியின் அடிப்பொடி, மனோகர் வாத்தியார், ராவுத்தர், பட்டாணி, சாமியார். குறைவான வர்ணனைகள், உரையாடல்கள் மூலம் ஓவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டும் திறமை பலருக்கு கிடையாது. 

பெரும்பாலான கட்டுரைகள் சிறுவயது நினைவுகளில் ஆரம்பித்து மெதுவாக வளர்ந்து ஒரு சிறுகதைக்கான முடிவுடன் முடிகின்றது. மொத்த கட்டுரையின் சாரத்தையும் ஒன்றிரண்டு வரிகளில் கொண்டு வந்து முடிக்கின்றார். பனி உருகுவதில்லை என்னும் வரி, ருஷ்ய இலக்கியத்திலிருந்து, புரட்சி வேகம், ரஷ்யாவின் உடைவு என்று பலவற்றை இணைக்கின்றது. அந்த முடிவு வரிகளிலிருந்து, கட்டுரையை ஒரு புதிய கோணத்தில் வாசிக்க முடியும். கண் கவர் பூக்களும், சுவையான கனிகளும் இல்லை என்றாலும் அரச மரம் எழுந்து நின்றால் அதுதான் ஊரின் மையம் என்ற பொருளில் முடியும் கட்டுரை பேசுவது பட்டாணி என்பவரைப் பற்றி, ஒன்றிரண்டு துணி மூட்டைகள், சில பாத்திரங்கள், கண் தெரியாத மனைவி. ஊரில் கூலியாக தரும் உணவாலும், ஒன்றிரண்டு ரூபாய் கூலியாலும் வாழும் பட்டாணியின் கதை.   

அடுத்து ஒரு நாவல் எழுதப்போவதாக படித்தேன். தஞ்சாவூர் கதையாக இருக்கட்டும். இதுவே ஒரு முன்னூறு பக்க புத்தகம். நாவல் அதை விட பெரிதாக இருந்தாலும் துணிந்து வாங்கலாம். 


எனது நாடக வாழ்க்கை - அவ்வை சண்முகம்

இந்த பெருந்தொற்று அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்து இருக்கும் நேரத்தில் நமக்கு உதவுவது தொழில்நுட்பம். பிழைப்பிற்கும், பொழுதுபோக்கிற்கும். பொழுதுபோக்கு இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கையில் வேண்டிய திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள். தூங்கும் நேரம் தவிர பார்த்தால் கூட பல வருடங்கள் பார்த்து கொண்டே இருக்கலாம். கொஞ்சம் பின்னால் சென்றால் டீவி தொடர்கள், திரைப்படங்கள், நாடகங்கள், தெருக்கூத்து. இவற்றில் தெருக்கூத்து அழிவின் விளிம்பில் இருக்கின்றது. நாடகங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாடகங்களும் விதவிதமாக மாறியிருக்கின்றன. இன்று நாடகம் என்றவுடன் பட்டென்று நினைவிற்கு வருவது க்ரேஸி மோகனும், எஸ்.வி.சேகரும். துணுக்கு தோரணங்களால் கட்டப்பட்ட நாடகங்கள். பார்க்க கூட வேண்டாம். கேட்டாலே போதும். இன்னும் சில சீரியஸ் நாடகங்களும் நடக்கின்றன. பொன்னியின் செல்வன் எல்லாம் நாடகமாக வருகின்றது. பரிக்‌ஷா மாதிரியான குழுக்கள் வேறுவிதமான நாடகங்களை நடத்துகின்றன. பெங்களூரில் பலர் வீதி நாடகங்களை நடத்துவதுண்டு. 

ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன? எப்படி நாடகங்கள் வளர்ந்தன? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல், இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலை தருகின்றது.  

டி.கே.எஸ் ப்ரதர்ஸ், நாடக உலகில் மிகவும் பிரலமானவர்கள். டி.கே.எஸ் சண்முகம் , அவ்வை சண்முகம் என்று அழைக்கப்பட்டவர். இவரது தம்பி டி.கே.எஸ்.பகவதி. பல திரைப்படங்களில் நடித்துள்ளவர். சம்பூர்ண ராமாயணத்தில் ராவணேஸ்வரனாக நடித்தவர். அவ்வை சண்முகத்தின் நினைவாகத்தான் கமல் தன் படத்திற்கு அவ்வை சண்முகி என்று பெயர் வைத்தார், மற்றொரு முக்கிய நாடக உலக பிரமுகர் பம்மல் சம்பந்தம் பெயரை மற்றொரு படத்திற்கு வைத்தார்.

அக்கால நாடகங்கள் முழுவதும் பாடல்களால் நிறைந்தவை, பாடல்கள் பாட தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. எம்.ஆர்.ராதாவே மிகச்சிறந்த பாடகர் என்றால் நம்புவது கடினம்தான். அந்த குரலில் பாடலை கேட்பதை நினைக்கவே முடியவில்லை. சண்முகம், மிகச்சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவரின் நாடக வாழ்க்கை, ஐம்பது வருடங்களுக்கு மேலாக போகின்றது. அவர் நாடகத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது அவரது இரண்டு மூத்த சகோதரர்களும் ஏற்கனவே நாடகத்தில் நடித்து கொண்டிருந்திருக்கின்றர். அவரின் தந்தை பாடகராக இருந்துள்ளார். 

நூலின் பெரும்பாலான பக்கங்களில் அவர்களின் நாடக குழு சென்ற ஊர்கள், அங்கு கிடைத்த வசூல், அங்கிருந்து சென்ற ஊர் என்றே போகின்றது, எப்படி சென்றார்கள், என்ன கஷ்டம் வந்தது, யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு நடுவேதான் நாடக உலகை பற்றிய பல தகவல்களை நாம் படிக்க முடிகின்றது. 

நாடக நடிகர்களாக ஆரம்பித்து பிறகு சொந்தமாக நாடகங்கள் நடத்தி, சினிமாவிற்கு சென்று நடித்து, சினிமா தயாரித்து வெற்றி பெற்றவர்கள். முதல் பகுதிகளில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக குழுவில் அவர்களது அனுபவங்களை விவரித்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகின்றது. ஒரே இரவில் ஒரு நாடகம் முழுவதையும் எழுதும் திறன் படைத்தவராக இருந்திருக்கின்றார். 4 மணிநேரத்திற்கு மேலாக நடக்கும் நாடகம், அதற்கான காட்சிகள், பாடல்கள், வசனங்கள் அனைத்தையும் ஒரே இரவில் எழுதுவது அசாத்திய திறமைதான். பிற்பகுதிகளில் அவர்களது சொந்த நாடக குழுவைப் பற்றி விவரங்கள். அவர்கள் தயாரித்த நாடகங்கள் பற்றிய விவரணைகள்.

அனைத்து வியாபரங்களில் இருப்பது போலவே ஏமாற்றம், துரோகம், பண மோசடி, ஒரு குழுவை விட்டு இன்னொரு குழுவிற்கு ஓடுவது போன்றவை நாடக உலகிலும் மிக சகஜமானதாக இருந்திருக்கின்றது. காமேஸ்வய்யர் என்னும் சுவாரஸ்ய பாத்திரம், புத்தகம் நெடுக வருகின்றது. பண கையாடல், மோசடி என்று இருந்தாலும் அவரை விட முடிவதில்லை. மக்களிடையே ஒரு காலத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்த நாடக மோகம், சினிமா வந்தவுடன் மங்கலாகின்றது. ஆனால் அதுவே நாடகத்தை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றது. 

டி.கே.எஸ் சகோதரர்கள் நாடக உலகில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பார்த்திருக்கின்றனர்.ஒரே சமயம் வறுமையையும், செல்வத்தையும் கண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். மாத சம்பளம் என்று பார்த்தால் பெரிய பணம், ஆனால் சில சமயம் அது கைக்கு வராது. நஷ்டம் அதிகமாகி, குழுவையே மற்றொருவரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு சென்றிருக்கின்றனர், நாடக காட்சியமைப்பு பொருட்களை கொட்டைகையிலேயே விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். இருந்தாலும் நாடகத்தை விடவில்லை, சினிமாவில் கிடைத்த பணத்தையும் நாடகத்திலேயே முதலீடு செய்திருக்கின்றார்கள். அண்ணாத்துரை, ஈ.வெ.ரா, என்.எஸ்.கிருஷ்ணன், ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், எஸ்.ஜி.கிட்டப்பா, பாகவதர் போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களுடன் நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது. 

சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, நாவல்களை உரிமை பெற்று நாடகங்களாக்கி, நாடக ஆசிரியர்களுக்கு ராயல்டியும் வழங்கி கொண்டிருக்கின்றார்கள். பாவம் இன்றைய நாவலாசிரியர்கள். ஈ.வே.ரா , காசு விஷயத்தில் கறார் என்று பெயர் பெற்றவர், டி.கே.எஸ் குழுவினரிடம் தாரளமாக நடந்து கொண்டிருக்கின்றார், பாரதிதாசன் பாடல்களை பயன்படுத்த அனுமதி வேண்டி பல கடிதம் அனுப்பியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். நடிக்க தெரியாத தியாகராஜ பாகவதர், குழுவை விட்டு ஓடுபவர்கள் மீது போலிஸ் கேஸ் கொடுக்கும் நாடக முதலாளி, நாடக கொட்டைகளில் கலட்டா செய்யும் உள்ளூர் ரவுடிகள், மகரக்கட்டால் பாதிக்கப்படும் நடிகர்கள், பெண் வேடத்தில் பிரமாதப்படுத்திய ஏ.பி.நாகராஜன், சண்முகம் மறுத்த வேடத்தில் நடித்து புகழ் பெற்ற கிட்டப்பா, என்.எஸ்.கே உடன் பல சம்பவங்கள், ராஜா சாண்டோவுடனான சினிமா அனுபவங்கள். 

இது மாதிரியான நூல்களால் என்ன பயன் என்றால், சில புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம், ஒரு காலகட்டத்தைப் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கின்றது. நம் தாத்தா பாட்டி எல்லாம் எப்படி இருந்தனர் என்று தெரிந்து கொண்டு கொஞ்சம் வயிறெரியலாம் இல்லை சந்தோஷப்படலாம். 


❌