Normal view

Received before yesterday

சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை

மொத்தம் 30 தலைப்புகளும் 109 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் ஒரு மோட்டிவேஷன் வகை சார்ந்த புத்தகம் என்று சொல்லலாம். இதில் சொல்லப்பட்டு இருக்கும் உள்ளடக்கம் என்ன என்பதை பார்ப்போம் .

எப்படி பிளான் பண்ண வேண்டும் : புத்தகத்தின் முதல் தலைப்பு இது தான் எந்த ஒரு செயலை செய்யும் முன் எப்படி திட்டம் இட வேண்டும் அந்த திட்டம் தோற்கும் போது அதை எப்படி மாற்றி கொள்ள வேண்டும் என்பதை 10 வழிமுறைகள் உடன் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

எண்ணங்கள் சீரானால் பழங்கங்கள் செம்மையாகும் : புத்தகத்தின் இரண்டாவது தலைப்பு இது பொதுவாக ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதற்கு எப்படி தீர்வு வரும் என்பதை யோசிக்கிறோம் அதற்கு ஆசிரியர் ஜர்னலிங் என்ற முறையை சொல்லி 10 வழி முறைகளையும் சொல்லி இருக்கிறார்.

நீங்களும் சி.இ.ஓ . ஆகலாம் புத்தகத்தின் நான்காவது தலைப்பு இது உண்மையில் எனக்கு இந்த தலைப்பு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது, ஒரு பிரச்சனை நமக்கு வருகிறது என்றால் அதை மற்றவர்கள் மீது பழி சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று 10 வழி முறைகள் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

ஏன் எதற்கு என்ற கேள்வி கேளுங்கள் : பொதுவாக சில சமயங்களில் தெளிவு இல்லாத போதும் தெரிந்த மாதிரி கேள்வி கேக்காமல் கடந்து செல்வோம் அப்படி செய்ய கூடாது என் சொல்கிறார் ஆசிரியர். அது மட்டும் இல்லமல் கேள்வி கேக்க சில வழி முறையை பற்றியும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை வரவேற்க்க தோல்வி அவசியம் : புத்தகத்தின் 11 தலைப்பு இது பொதுவாக தோல்வி ஒரு அவமான செயலாகவே பார்க்கப்படுகிறது தோல்வி அடைந்து விட்டால் அன்று நாள் ஒரு இருண்ட நாளாகவே பார்க்கிறோம் நான் பள்ளி படிக்கும் பொது 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை சொல்லலாம். அன்று தேர்வில் தோல்வி அல்லது நினைத்த மதிப்பெண்ணை அடைய முடியாமல் போகும் மாணவர்களின் தவிப்பு சொல்ல முடியத ஒன்று. ஆனால் ஆசிரியர் சொல்லி இருப்பது தோல்வி என்பது இன்னொரு முயற்சி தான் தவிர அது அவமான அல்ல என்பதை சொல்லி இருக்கிறார்.

வேண்டாம் என்று சொல்லி பழகுங்கள் : உண்மையில் 13 தலைப்பாக வரும் இந்த விஷயம் எல்லாருக்கும் நடக்கும் ஒரு விஷயம் தான் பொதுவாக ஒரு வேலை அல்லது அளவுக்கு மீறிய வேலை கொடுக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு மன உள்ளச்சளுக்கு ஆளாகிறோம். இந்த புத்தகத்தில் ஆசிரியர் சொல்லும் விஷயம் சில விஷயங்களுக்கு நோ இல்லை என்று சொல்லி பழக வேண்டும் என்கிறார்.

முன்னேற்றத்தை தடுக்கும் காலம் தாழ்த்துதல்: புத்தகத்தின் 17 தலைப்பு இது பொதுவாக ஒரு செயல் செய்யும் போது யோசித்து செய்வது என்பது வேறு ஆனால் அதை காலம் தாழ்தி செய்வது ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.அப்படி காலம் தாழ்த்துவதால் என்ன சிக்கல் வரும் அதை எப்படி சரி செய்வது என சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியை ஈர்க்க வேண்டும் துரத்த கூடாது : புத்தகத்தில் 21 தலைப்பு இது வெற்றி என்றால் என்ன அது பயணமா அல்லது முடிவா அல்லது இலக்கா என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.இதை படிக்கும் போது வெற்றி பற்றி ஓரளவு புரிதல் வரும்.

செயல்களை ரகசியம் ஆக்குவோம் : இந்த தலைப்பு யாருக்கு பொருத்தி போகுதோ இல்லையோ கண்டிப்பாக எனக்கு பொருந்தும் ஒரு விஷயம் உண்மையில் நம் செயல் திட்டத்தை ரகசியமாக செய்யாமல் எல்லாருக்கும் அறிவித்து விட்டு செய்து பிறகு அதில் ஏமாற்றம் அடைகிறோம்.உண்மையில் இதை மாற்ற என்ன வழி என்பதை சொல்லியும் இருக்கிறார்.

28 தலைப்பு நேரமும் பொன்னும் ஒன்றல்ல : நேர நிர்வாகம் என்று சொல்ல படுவது உலகில் உள்ள அனைவருக்கு 24 நேரம் தான் ஆனால் சில பேர் அதில் வெற்றி பெற்றவர்களாக இருக்க காரணம் நேர திட்டமிடல் இதை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

வெற்றியின் முதல் படி : புத்தகத்தின் கடைசி தலைப்பு இது தான் ஒருவர் வாழ்வில் வெற்றி பேர் வேண்டும் என்றால் பிறர் என்ன சொல்வார்களோ என்று நினைக்காமல் அல்லது பிறர் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேணும் . அதற்கு தடையாக எது இருக்கிறதோ அதற்கு நோ சொல்ல பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
மிகவும் சிறிய புத்தகம் என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவுக்கு தகவல் இருக்கிறது.

Boje Bhojan

The post சக்ஸஸ் ஃபார்முலா – போஜன் மதிப்புரை appeared first on Naseema Razak.

வேண்டாம் என்று சொல்லிப் பழகுங்கள்! – சக்ஸஸ் ஃபார்முலா – 13

வரும் ஞாயிற்றுக்கிழமை நானும் சச்சுவும் படத்துக்குப் போக வேண்டும், ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும், ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று பல திட்டங்களைப் போட்டு வைத்திருந்தோம்…

நீண்ட நாள்களுக்குப் பின் இந்த ஏற்பாடு என்பதால் இருவரும் ஆர்வமாகக் காத்திருந்தோம். சனிக்கிழமை இரவு ஆன்லைனில் படத்துக்கு டிக்கெட் புக் செய்து விட்டோம். ஞாயிறு வந்தது. சச்சுவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

“சொல்லுங்க சார். அப்படியா சார்.. உம்… ஓகே” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார். அவர் முகம் வாடி இருந்தது.

“என்ன ஆச்சு சச்சு??”

“மேனேஜர்தான் கால் பண்ணார் நஸீ. அவசரமா ஏதோ வேலையாம். கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னார்.”

“நீ என்ன சொன்ன?”

“முடியாதுன்னு சொல்ல முடியுமா? சரின்னு சொல்லிட்டேன்.”

“அதைத் தவிர்த்து இருக்க முடியாதா? ரொம்ப நாள் கழித்து ப்ளான் பண்ணோமே… இன்னைக்கு லீவுதானே?”

எதையும் காதில் வாங்காமல் லேப்டாப் எடுத்தார். வேலையை ஆரம்பித்தார். மூன்று மணி நேரம் கழிந்தது. வேலையும் முடிந்தது. ஆனால், பல நாள் திட்டத்தை மேனேஜர் சொத்தப்பிவிட்டார் என்று சச்சுவுக்குக் கோபமும் எரிச்சலும் வந்தது.

சச்சு மட்டுமல்ல, நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். ‘வேண்டாம்’, ‘இல்லை’, ‘முடியாது’ என்று நமக்குச் சொல்லத் தெரிவது இல்லை. இதனால் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறோம் என்பதை உணர்வதும் இல்லை.

‘இல்லை’ என்று சொன்னால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? தவறாக நினைத்துவிட்டால்? மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டால் என்று பல குழப்பங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன.

https://tinyurl.com/SuccesssFormula

வெற்றியாளர்களாக ஆக வேண்டுமென்றால், ‘என்னால் முடியும்’ என்று சொல்வது எவ்வெளவு முக்கியமோ, அதைப் போல் ‘முடியாது’ என்று சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கான பத்துச் சுலபமான வழிகள்.

1. உங்களுடைய நிலைமையை மற்றவர்கள் புரிந்து கொள்வதைவிட, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, என்னால் மூன்று ப்ராஜெக்டில் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியும்.

2. உங்கள் திட்டங்களை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவில் யாராவது புதிதாக ஒரு வேலையை உங்கள் மேல் திணித்தால் ‘இல்லை’ என்று சொல்ல மனத்தைத் தயார்ப்படுத்த வேண்டும்.

3. ‘இல்லை’ என்று சொல்ல வேண்டும் என்றால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று காரசாரமாகவும் இருக்க வேண்டியதில்லை.

“இப்போது என் கையில் மூன்று ப்ராஜெக்ட்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் சொல்லும் வேலையை என்னால் செய்ய இயலாது .நீங்கள் காத்திருக்க முடியுமா?” என்று கேட்கலாம். இங்கு ‘இல்லை’ என்றுதான் சொல்கிறோம், ஆனால் கேட்பவர் நம் நிலைமையைப் புரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவாகச் சொல்கிறோம்.

4. அதிகமாக விளக்கங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ‘இல்லை’ என்று சொல்வதற்குச் சங்கடப்படுகிறீர்கள் என்கிற பிம்பத்தைக் கொடுக்காது. தெளிவற்றவர்களாகவே உங்களைக் காட்டும்.

5. ‘முடியாது’ என்று சொல்ல வேண்டும், அதே நேரத்தில் உதவ வேண்டும் என்றால், மாற்று யோசனையை அல்லது வேறு நபரிடம் அவர்களை அனுப்பலாம்.

6. ‘முடியாது’, ‘வேண்டாம்’ என்று சொன்னால் மற்றவர்கள் புண்படுவார்கள் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்று உங்கள் மேல் நல்ல அபிப்ராயத்தை உண்டு பண்ணும். புரிந்து கொள்ளாதவர்களை அப்போதைக்கு விட்டுவிட வேண்டும். அவர்கள் தெளிவாக அவகாசம் கொடுங்கள்.

7. ‘இல்லை’ என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. அப்படிச் செய்வதால் உங்களை நீங்களே தவறானவர்களாகக் காட்டுகிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும். ஆனால், பலர் இதைப் புரிந்து கொள்ளாமல் ஏமாந்துவிடுகிறார்கள். ‘இல்லை’, ‘முடியாது’ என்று சொல்வதைவிட, ‘இப்போது முடியாது. உங்கள் புரிதலுக்கு நன்றி’ என்று சொல்வது சாலச் சிறந்தது.

8. நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னதற்குப் பின் இருக்கும் உங்கள் மனநிலையைக் கூர்ந்து கவனியுங்கள். சொல்லும் போது கடினமாக இருந்தாலும், அதற்குப் பின் லேசாக இருப்பதை உணர்வீர்கள்.

9. சின்ன சின்ன சந்தர்ப்பங்களில் இல்லை என்று சொல்லும் சூழல் அமைந்தால், சொல்லிவிடுங்கள். பெரிய குழப்பமான சூழ்நிலைகளில் அந்தப் பழக்கம் கை கொடுக்கும்.

10. ‘இல்லை’ என்று சொல்வதாலோ, ‘முடியாது’ என்று விலகுவதாலோ நீங்கள் மோசமானவர்கள் என்று அர்த்தம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.

சச்சு கதைக்கு மீண்டும் வரலாம். அவர் செய்திருக்க வேண்டிய விஷயம், மானேஜரிடம், “சார், இப்போது வேலையாக வெளியே கிளம்புகிறேன். நாளை அலுவலகம் வந்தவுடன் முதல் வேளையாக நீங்கள் சொல்லும் வேலையை ஆரம்பித்துவிடுகிறேன்.”

அப்படிச் செய்திருந்தால் மேனேஜருக்கும் அவர் எல்லை என்ன என்று புரிந்திருக்கும்.
அன்றைய பொழுதைத் திட்டமிட்டபடி கொண்டாடியும் இருக்கலாம். மறு நாள் வேலையையும் நிம்மதியாகக் கவனமாகச் செய்திருக்க முடியும்.

The post வேண்டாம் என்று சொல்லிப் பழகுங்கள்! – சக்ஸஸ் ஃபார்முலா – 13 appeared first on Naseema Razak.

வெற்றியை வரவேற்க, தோல்வி அவசியம்

வெற்றி பெற்றவர்கள் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் யாரும் வெறும் தோல்வியை அல்ல, படு தோல்விகளைச் சந்தித்திருப்பார்கள். இப்போது சட்டென்று எனக்கு ஜாக் மா கதைதான் ஞாபகம் வருகிறது. அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங் பலருக்குத் தெரியும். அமேசான் என்கிற பெரிய சாம்ராஜ்யத்திற்கு நிகரா அலிபாபாவைச் சொல்லலாம். அதை ஆரம்பித்தவர் ஜாக் மா.

பள்ளிக்குச் சென்றது முதல் ஜாக் மாவிற்குப் பரிசாகக் கிடைத்தது தோல்விகள் மட்டும்தான். ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறை தோற்றார். உயர்நிலைப் பள்ளியில் மூன்று முறை. கல்லூரியில் சேருவதற்காக எழுதிய நுழைவுத் தேர்வில் மூன்று முறை. காவல் துறையில் வேலை கிடைக்கவில்லை. தேர்வாகவில்லை. சரி, கே.ஃப்.சியில் எப்படியாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற கணக்கெல்லாம் கனவாகக் கலைந்து போனது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குப் பத்து முறை விண்ணப்பித்துத் தோற்றுப் போனார். இந்தப் பட்டியல் இதோடு முடியவில்லை. ஜாக் மா சோர்வடைந்தது உண்மை. ஆனால், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை, முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. அவரது விடா முயற்சியும் நம்பிக்கையும் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. சீன மொழி பெயர்ப்பாளராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

“அதற்குப் பின்னர் அவர் சீனா திரும்பி, ஆரம்பித்த முதல் ஆன்லைன் வர்த்தகத்தில் கூட்டாளியாகச் சீன அரசு நிறுவனம் இணைந்தது. சில மாதங்களில் அந்த நிறுவனத்தை அரசு கையில் கொடுத்துவிட்டு ஜாக் மா வெளியேறினார். தோல்வியும் துரோகங்களும் அவரை விரட்டிக் கொண்டே இருந்தன. மீண்டும் வேலை தேடும் படலம். அரசு வேலை. அமெரிக்கா பயணம். அதற்குப் பின்னர் ஆரம்பித்ததுதான் உலகம் அறிந்த அலிபாபா ஆன் லைன் ஷாப்பிங் இணையம்.

“ஜாக் மாவை விட, அதிகமாகத் தோற்றுப் போகும் சந்தர்ப்பங்கள் நமக்கு அமையலாம். அதற்கு வெற்றி அற்ற வாழ்க்கையை வாழ்வோம் என்று அர்த்தமில்லை. தோல்விகளைக் கையாள்வது லேசுபட்ட காரியம் அல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருப்பது போல் தோல்வியை எதிர் கொள்ளச் சில வழிகள் இருக்கின்றன.

1. தோல்விகள் என்றால் அவமானம் என்கிற எண்ணத்தைக் களைய வேண்டும். தோற்கிறீர்கள் என்றால் முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது வாய் வார்த்தைகளாக, எண்ணங்களாக மட்டும் இல்லாமல் செயலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள்.

2. நாம் அனைவரும் எப்பொழுதும் சரியான தேர்வைச் செய்வோம் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. தவறான முடிவுகளும் தேவையில்லாத வேலைகளும் குறுக்கிடும். அது சகஜம். சிறிதும் யோசிக்காமல் யூ டர்ன் போட்டு விடுங்கள்.

3. தோல்வி வந்தவுடன், உலகம் இருண்டுவிடும் என்று பயப்படுகிறோம். அது மூடி இருக்கும் கதவுகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4. தோல்வியைப் படிப்பினையாகப் பாருங்கள். தோல்வியைப் போல் சிறந்த ஆசான் வேறு எதுவும் இல்லை. அந்த ஆசானைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

5. தோல்வி மூலம் கிடைத்த அனுபவம் உங்கள் அடுத்த நகர்வுகளைச் சரி செய்யும் . திறமை மூலம் வெற்றி அடைந்தவர்களைவிட, தோல்வியை வரவேற்று கற்றுக் கொண்டவர்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

6. தோல்வி ஒரு முறை அல்ல எத்தனை முறை வந்தாலும், அடுத்து என்ன என்று யோசிக்க மனத்தைப் பழகுங்கள்.

7. தோல்விக்கு அடிநாதமாக இருக்கும் காரணங்களை ஆராயுங்கள். நோக்கங்களைச் சரி செய்து கொள்ள அது உதவும்.

8. எத்தனை முறை விழுகிறோம் என்பது தோல்வி அல்ல. ஜாக் மாவின் வாழ்க்கையில் ஒரு முறையும் தோல்வியைச் சந்திக்காமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. அவரது விடா முயற்சியை நாம் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

9. சமூகத்திற்குப் பயந்து, மற்றவர்களின் வசைக்குப் பயந்து எல்லாம் நாம் தோல்வியைப் புறக்கணிக்க வேண்டாம். அப்படிச் செய்தால் நான்கு நாள்களுக்கு மற்றவர்கள் வாய்க்கு அவலாக இருப்போம். ஆனால், தோல்வியை ஏற்று முன்னேறும் போது சரித்திரம் படைக்கும் சக்தி கிடைத்துவிடும்.

10. இறுதியாக ஒன்றை மனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனத்திற்கு வெற்றியைக் கொண்டாடத் தெரியாது.

ஜாக் மா மட்டும் அல்ல, வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியை விடத் தோல்விகளே நிறைந்திருக்கின்றன. தோல்வியைச் சரியாக ஏற்றுக் கொள்ளுங்கள், கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்.

The post வெற்றியை வரவேற்க, தோல்வி அவசியம் appeared first on Naseema Razak.

❌