Normal view

Received yesterday — 7 June 2025

நான் தொலைத்தேன்


இன்னும் விடியாத

கருங்குமென்ற

இருட்டு.

வைகாசி விசாக நாளில்

கோடாகத் துலங்கத் தொடங்கி

தாமிரபரணி

மெலிந்து

குறுக்குத்துறை படித்துறையில் ஓடிக்கொண்டிருந்தாள்.

தங்கச்சிப் பாப்பாவுக்கு

என்னைக் காவலிருக்க வைத்துவிட்டு

பாலுக்கும் காலை டிபனுக்கும்

சில்லறைக் காசுகளை

எனது டிரவுசர் பையில் நிரப்பி

பத்திரமென்று சொல்லி

அம்மா குளிக்கப் போனாள்.

வெள்ளென விடியத் தொடங்க

அவள் இட்ட கட்டளையை

மீறி

கரையில் துணிவிரித்து

படுக்கவைக்கப்பட்டிருந்த

தங்கையை விட்டுவிட்டு

ஆற்றுக்குள் இறங்கித் திளைத்து

டிரவுசரில் உள்ள காசுகளை எல்லாம்

தொலைத்தேன்.

நல்ல நாளன்று பிச்சையெடுக்க

விட்டு விட்டாயே

அம்மா திட்டியபடி

ஆத்திரம் தீர

என்னை வழியெங்கும்

அழ அழ

திருவிழாக் கூட்டத்தினூடாக

வீட்டுக்கு அழைத்துவந்தாள்.

ஆற்றின் அலாதி அழகைப் பார்த்து

என்னை மறந்து

கடமையை மறந்து

அன்று காசுகளைத் தொலைத்தேன்

மந்திராலய பிராகாரத்தின் ஏகாந்த அழகில் லயித்து

என் குட்டிமகளை ஒருநாள் தொலைக்க இருந்தேன்

ஆர்ப்பரித்து மடிந்து பாதங்களில் வந்து விளையாடிய

கடல் அலைகளில் திளைத்து

வீட்டின் சாவியை இன்று தொலைத்தேன்

நடுவே நண்பர்களை

காதலியை மனைவியை தொலைத்து விட்டேன்.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

Received before yesterday

காசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

June 06, 2025 புதிய காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள் கம்பிவேலிகளால் நெறிக்கப்பட்டு காயப்பட்ட உடலென நின்றிருக்கும் ஞானவாபி மசூதியின் மேல் எப்போதும் ஒரு கருப்புச் சூரியன்.

அதிரன்/ஜூன் 2

வண்ண வண்ண சீருடை அணிந்து
முதுகில் ஒரு மூட்டை சுமந்து
சிறகில்லாம் பறந்து செல்கிறது
சின்ன பட்டாம்பூச்சி ஒன்று

அதை டாட்டா காட்டி
வழியனுப்பி வைக்கிறது
ஒரு பெரிய பட்டாம்பூச்சி

சசிகலா விஸ்வநாதன்/ஒரு மிடறு

ஒரு மிடறு நீர் போதும்
என் விடாய் தணிந்து விடும்.

ஒரே ஒரு சொல் போதும்
என் வெறுமை களைய,

ஒரே ஒரு பார்வை போதும்
என் உயிர் துளிர் விட,

ஒரே ஒரு தொடுகை போதும்
என் நம்பிக்கை நீள,

நீ நீயாக இருந்தால் மட்டும்.

ஓர் இரவு


அகங்கை கொண்டு மூணுபிடி

புறங்கை கொண்டு மூணுபிடி

அருணாசலத்தாச்சி பாடத் தொடங்க

காவேரிப் பெரியம்மாவின் மடியில்

உறங்கிக்கொண்டிருந்த நான் திடுமென்று விழித்தேன்.

கண் திறந்துபார்த்தால்

கண் அவிந்துபோய்விடுமென்று

சொல்லித்தான்

அம்மா அங்கே அழைத்துவந்து படுக்க வைத்திருந்தாள்.

அப்பாவோ இரவுப்பணிக்குப் போயிருந்தார்.

மார்புக்குக் குறுக்காக

சேலை ஒன்றை மட்டுமே சுற்றி

கூடத்தில் அலையும்

எங்கள் வளவு வீடுகளைச் சேர்ந்த

அத்தைகள்.

அம்மா பின்கட்டிலிருந்து

குளித்த தலையுடன்

பாவாடையை மேலேற்றிக் கட்டிக்கொண்டு

நுழைந்தாள்.

சில்வர் பாத்திரத்தில்

வெள்ளைக் கொழுக்கட்டைகள்

குழு குழுவாக அமர்ந்திருந்த பெண்களால்

உருவங்களாகத் தட்டி உருட்டி

அடுக்கப்பட்டன.

நோஞ்சலான

கிழவிகள்

கிழவர்கள்

கை கால்

மண்டையோடு

பாடை

அகல் விளக்கு

எனக்குத் தெரிந்த உருவங்கள்

தெரியாத உருவங்களும்

கொழுக்கட்டைகளாக

அவரவர் சட்டிகளில் விழுந்துகொண்டிருந்தன.

சூடன், சாம்பிராணி

புகையில்

பளீர் குழல் விளக்கு வெளிச்சத்தில்

ஆவிகளாய்

என் அம்மாவும்

அத்தைகளும்

மறைந்து இருந்து

உருக்கள்

மாறித் தோன்றிய

அந்த ஔவையார் நோன்பு

நடுநிசியை

நிஜம்தானென்று

இன்று ருசுப்படுத்த

அருணாசலத்தாச்சி இல்லை

அம்மாவோ போய்விட்டாள்

தெய்வானை அத்தையையோ

அம்மாகுட்டி அத்தையையோ

இனி தேடிப் போகவும் இயலாது

எனக்கோ கண்கள் கூர்மையாகிக் கொண்டே வருகின்றன.

பாவை என்று சொல்லாதே என்னை!

2 June 2025 at 18:14

சந்திரவதனா செல்வகுமாரனின் கவிதைத்தொகுப்பு – வ.ந.கிரிதரன்

Paavai Entru Sollathe Ennai – Kavithaikal

எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின்   கவிதைத்தொகுப்பு “பாவை என்று சொல்லாதே என்னை” – மனஓசை வெளியீடு.  72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  புகலிடத்  தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன்.  எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின்  (செல்வி  சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி.  இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் இணைந்து, போராடி மறைந்தவர்கள். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.

ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்) பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள்,  யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்  பெற்றுள்ளன.

தொகுப்பின் ‘என்னுரை’ சந்திரவதனாவின்  எழுத்துலகப் பயணத்தைச் சுருக்கமாக விபரிக்கின்றது. இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைக்கு இவர் அனுப்பிய கவிதை அந்நாளில் பிரபல ஒலிபரப்பாளராக விளங்கியவர்களில் ஒருவரான இராஜேஸ்வரி சண்முகத்தின் பாராட்டைப் பெற்று ஒலிபரப்பானதாக (1981) ‘என்னுரை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரி பெண்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில்தான் அந்த ‘வயல்வெளி’ என்னும்  கவிதை ஒலிபரப்பானது.  நன்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளர்கள் பலரின் அடித்தளமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இருந்திருக்கின்றது.  இவரது சகோதரி சந்திரா இரவீந்திரனின் எழுத்துலகப் பயணமும் 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையிலேயே  ”ஒரு கல் விக்கிரகமாகிறது”  என்னும் சிறுகதை மூலம் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதை அவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதியிருந்தார்.

அதே சமயம் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டியவர் இவரது தந்தையாரான தியாகராஜாவே என்பதையும் ‘என்னுரை’ எடுத்துக்காட்டுகின்றது. சிறுவயதிலேயே தியாகராஜா அவர்கள் நாட்குறிப்பேடொன்றினைச் சந்திரவதனாவுக்கு வழங்கி அவரது அன்றாட அனுபவங்களை எழுதும்படி தூண்டியிருக்கின்றார். அதுவே பின்னர் அவரது எழுதுலகப் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இச்சமயத்தில் வீடெங்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள்,  நூல்களால் நிறைத்திருந்த என் தந்தையாரின் நினைவுகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவே என் எழுத்தார்வத்துக்கும்  தீனி போட்டது.

இத்தொகுப்பின் “பாவை என்று சொல்லாதே என்னை” என்னும்  பெயரைப் பார்த்ததும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிதைகளை மையமாகக் கொண்டு இத்தொகுப்பு அமைந்திருக்குமென்று எண்ணினேன். தொகுப்பு அதனைப் பொய்ப்பிக்கவில்லை. பல கவிதைகள் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கின்றன.  இத்தொகுப்பு பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதோடு, நனவிடை தோய்தல்களாகவும் அமைந்திருக்கின்றன. அந்நினைவிடைத் தோய்தல்கள் சந்திரவதனா தன் வாழ்வில் சந்தித்த பல்வகை அனுபவங்களை, இழப்புகளை, அவற்றால் எழுந்த  நீங்கா நினைவுகளை  வெளிப்படுத்துகின்றன. அவரே ‘என்னுரை’யின் இறுதியில் கூறுவதுபோல் அவரது  ‘உணர்வுகளின் வடிகால்கள்’ அவை.

தொகுப்பின் தலைப்புக் கவிதை “நான் ஒரு பெண்“. இதன் வரிகளே ‘பாவை என்று சொல்லாதே என்னை’  

‘பாவை என்று
சொல்லாதே என்னை
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை!’

இக்கவிதை வரிகள் அனைத்தும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவை.

‘வீணை என்று
சொல்லாதே என்னை.
நீ மீட்டுகையில் நாதமிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மெளனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை!’

‘பூ என்று
சொல்லாதே என்னை
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை!’

இவ்விதம் ஆணாதிக்க சமுதாயமொன்றில் விடுதலைக்காக ஏங்கும் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதையின் இறுதி வரிகள் அன்புடன் கூடிய மென் உறவுக்காக ஏங்கும் ‘பெண் என்று மட்டும் எண்ணு என்னை, அது போதும் எனக்கு!’ என்று  முடிகிறது.

நாற்குணம்” என்னும் கவிதையில் பெண்ணை அடிமையாக்கியோர் நாணப் போராடுகின்றார்கள் தமிழீழ விடுதலைப்புலிப் பெண் போராளிகள். இருந்தும்,
‘சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை.
ஆணாதிக்கமும் அடக்குமுறையும்
முற்றாக ஒழியவுமில்லை!’

தொலைக்காதே உன்னை”  என்னும் கவிதை
‘பெண்ணே! நீ, கிளர்ந்தெழு!
அழுவதை மறந்திடு.
போரிடவும் துணிந்திடு!’
என்று பெண்களை நோக்கி  அறைகூவல் விடுக்கிறது.

வழக்கம்போல் அடுப்படிக்குள்”  என்னும்  கவிதை
‘அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற் நினைப்பை
கொளுத்தி எறிந்தவள் மாலதி’

என்று சமையற்காரியாய், போகப்பொருளாய் இருப்பதுதான் பெண்ணின் வரைவிலக்கணம் என்னும் நிலையை மாற்றியவள் பெண் போராளியான மாலதி என்று கூறும் கவிஞை கவிதையைக் கீழுள்ளவாறு முடிக்கின்றார்.

‘…கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்..
அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல..!’

மாலதி போன்ற பெண் போராளிகளின் இருப்புக் கூட  சமுதாயத்தில் பெண்ணின் நிலையை மாற்றவில்லையே என்று இங்கு கவிஞை வேதனைப்படுகின்றார்.  

களிக்கும் மனங்களே கசியுங்கள்” என்னும் கவிதையை இயக்கத்துக்கு உதவும்படி  வேண்டும் பிரச்சாரக் கவிதையாகக் கருதலாம்.

புற்று நோய்”  என்னும் கவிதை அலுலகத்தில் கூட பணி புரியும் பெண்ணொருத்திக்கு புற்றுநோய் காரணமாக அவளது மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க இருக்கின்றார்கள். அப்பெண்ணுக்கு அது தரும் வேதனையை எடுத்துரைக்கும் கவிதை. அக் கவிதை ஆணாதிக்கச் சமுதாயத்தில் மார்பகத்தை வெறும் உறுப்பாக உணராமல், போகப்பொருளாகக் கருதும் நிலையும் அப்பெண்ணின் துயரத்துக்குக் காரணம் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது. இதன் மூலம் இக்கவிதையும் பெண் விடுதலைக்கவிதைகளில் ஒன்றாக இனங்காணப்பட முடியும்.

உனக்காய் வாழ்‘ என்னுங் குறுங்கவிதையும்
‘பெண்ணே!
ஊருககாய் வாழாதே!
உனக்காய் வாழ்!’
என்று பெண்ணை எழுச்சி கொள்ளக் கோரிக்கை விடுக்கிறது.

இன்னுமொரு குறுங்கவிதை “உனதாய்” அது
‘உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்!’
என்று அறிவுரை கூறுகிறது.

உனக்கு விடுதலை வேண்டும்‘ கவிதை
‘பெண்ணே!
உனக்கு விடுதலை வேண்டும்!’
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது.
கலாச்சாரம், பண்பாடு, அம்மா, அம்மம்மா வழிமுறையில், சமூகச் சங்கிலியை உடைத்தெறிய முடியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணுக்கு முதலில் அவளிடமிருந்து விடுதலை வேண்டும் என்கின்றது.

ரணம்” கவிதை
‘உனக்காக
என் சுயத்தை எல்லாம் இழந்தது
போதும்…
இழப்பதற்கு என்னிடம்
இனி எதுவுமே இல்லை!’
என்று தன்னை உணர்ந்து சுயபரிசீலனை செய்த பெண்ணொருத்தியின் உளநிலையினை வெளிக் காட்டுகிறது.

பால்வினை” என்னும் இன்னுமோர் குறுங்கவிதை
ஏழ்மையினால், மனிதர்களின் இச்சையினால், சூழ்ச்சியினால், பால்வினைக் கிணறுகளுக்குள் தள்ளப்பட்டு, உடல்களுடன் உள்ளங்களும் ஊனமான பெண்களைப்பற்றி வருந்துகிறது.

உன் பலம் உணர்ந்திடு” குறுங்கவிதை தாயகத்தில் ‘வெண்கலத்துடன் போராடிய பெண்களின் கைகள் சுடுகலன்கள் ஏந்தி நிற்கையில், புகலிடத்திலோ தமிழ்ப்பெண்கள் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் ஒளிந்திருந்து தம் வலிமை உணராமல் கண் கலங்குகின்றார்கள்’ என்று விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

பெண்ணே நீ இன்னும் பேதைதானே!” கவிதை
‘மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்!….
நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்.
பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் என்ன சொல்வார்?’ என்று கேள்வி கேட்கிறது.

இவ்விதம் தொகுப்பின் பல கவிதைகள், தொகுப்பின் தலைப்புக்கேற்பப் பெண் விடுதலையை வலியுறுத்துபவையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சுதந்திரம்” இலங்கையின் சுதந்திரம் தமிழ் மக்களுக்குச் சுதந்திரத்தைத் தரவில்லை. மாறாக 1958 தொடக்கம் 1983 வரையில் இனரீதியிலான வன்முறைகளைத்தாம், அடக்குமுறைகளைத்தாம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்க முடியாது அந்நியநாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற கோழைகள் என்று தன்னை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார் சந்திரவதனா.

கொழும்பு றோட்டில்” போர்ச்சூழலில் தாயகம் திரும்பிய பெண் ஒருத்திக்கு அங்கு நிலவிய பாதுகாப்புரீதியிலான அடக்குமுறைகள் ஏற்படுத்தும் பொலிஸ் ரிப்போர்ட், திடீர் சோதனைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்… என்று பல இடர்களை விபரிக்கிறது.

உயிரோடு திரும்புவேனா” புகலிடமான ஜேர்மன் நாட்டில் குழந்தைகளை விட்டு விட்டு, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தந்தையைப் பார்க்கச் செல்லும் பெண்ணொருத்தி, தாய் மண்ணில் நிலவும் அனர்த்தங்கள் கண்டு தளராமல் செல்வதை எடுத்துரைக்கும் கவிதை.

இழந்த மண்ணின், இனிய இறந்த காலத்து நினைவுகளால் எழும் கழிவிரக்கத்தை வெளிக்காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் சில உள்ளன. அவற்றிலொன்று “சுகமான நினைவு“. சிறிது நீண்ட கவிதை. வாசிக்கையில் வாசகருக்கும் சுகமான இனியதோர் உணர்வினைத்தரும் மொழி கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது.
‘செங்கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவ, செம் மஞ்சட் கதிர்களை கதிரவன் வீச, பறவையினம் சிறகடிக்க, வண்டினங்கள் ரீங்கரிக்க, குயிலினங்கள் இசைபாட, மெல்லென விடிந்தது அங்கெனது காலை’ என்று இழந்த காலத்து நனவிடைதோய்தலின் இனிமையில், அதனால் விளைந்த கழிவிரக்கத்தில் மூழ்கிக்கிடக்கும் உளத்தை இக்கவிதை விபரிக்கின்றது.

நிமலராஜனே!” ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை பற்றிப் பேசும் கவிதை. பேச்சுரிமையற்ற சூழலில் நினைவாகிப் போன ஒருவராக அவரை விபரிக்கின்றது.

சந்திரவதனா செல்வகுமாரனின் அண்ணன், தம்பியர் இருவர் ஈழ விடுதலைப் போராளிகளாகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். ஒரு குடும்பத்துக்கு இது மிகப்பெரிய இழப்பு. காலத்தால் அழிக்க முடியாத பெருந்துயரம். தொகுப்பின் முதல், இறுதிக்கவிதைகள் இவ்விதம் போராட்டத்தில் அமரத்துவம் அடைந்த சகோதரர்களைப்பற்றி நினைவு கூர்கின்றன. இறுதியாக அவர்கள் நினைவுகளில்தாம் இருக்கின்றார்கள். தொகுப்பின் முதற் கவிதையான “நினைவுகள்” மூத்தக்கா என்றழைக்கும் தம்பியைப்பற்றியும், சின்ன வார்த்தைகளால் சீண்டும் அண்ணனைப்பற்றியும் நினைவு கூரும். இறுதிக்கவிதை “தம்பிமார்”, “அண்ணா!”, “தம்பியர்” பற்றிய நினைவுகளின் வெளிப்பாடு. ஒரு வகையில் இத்தொகுப்பை அவர்களுக்கான் அஞ்சலித் தொகுப்பாகவும் கருதலாம். தொகுப்பைத் தொடங்கும், முடிக்கும் வாசகர் ஒருவருக்கு அவர்களை நினைவூட்டும் வகையில் இந்த ஒழுங்கமைப்பு அமைந்திருக்கின்றது.

இவை தவிர மனம், காதல்… என மானுட வாழ்வின் முக்கியமான ஏனைய விடயங்களைப் பற்றிய கவிதைகளும் தொகுப்பிலுள்ளன.

புயலடித்துச் சாய்ந்த மரமொன்றின் குரல் “புயலடித்துச் சாய்ந்த மரம்“. அதன் இளமைப்பருவத்தில் மரத்தை அல்லும் பகலும் தழுவிக் கிடந்த தென்றல் அதன் முதுமையில் புயலாக மாறிச் சீர்குலைத்தது ஏன் என்று கேட்கின்றது. ‘கனிதரும் காலம் போய்விட்டாலும், நீ களைப்பாக வரும்போதெல்லாம் இளைப்பாற இடம் தந்திருப்பேனே, வேரோடு சாய்த்து விட்டாயே! என்று அது வேதனையுறுகின்றது. இது மரத்தின் கவிதை மட்டுமா? அல்லது மானுடர் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கும், விமர்சிக்கும் ஒரு குறியீட்டுக் கவிதையா? அர்த்தங்கள் பலவற்றை அறிந்து கொள்ள வைப்பவை எழுத்துகள். இதுவும் அவ்வகை எழுத்துகளில் ஒன்று.

சந்திரவதனா செல்வகுமாரனின் “பாவை என்று சொல்லாதே என்னை” கவிதைத்தொகுப்பு பெண் விடுதலை, பெண் போராளிகளின் மேன்மை, சமூகத்தில் தீர்க்கப்படாமலிருக்கும் சீதனம் போன்ற ஆணாதிக்கச் சின்னங்கள், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதுகாப்புரீதியிலான பிரச்சினைகள், காதல் போன்ற தனி மனித உணர்வுகள்… என்று பல்வேறு விடயங்களைக் கருப்பொருட்களாகக் கொண்ட, அவை பற்றிய அவரது நினைவுகளின் திரட்டு. எளிமையான, இதயத்தை இழுத்துப் பிடிக்கும் மொழி நடை அவரது முக்கிய பலம். உருவகங்கள் அதிகமில்லாவிட்டாலும், ஆங்காங்கே உவமைகள் சில உள்ளன. எதுகை, மோனைகள் நிறைய உள்ளன. கவிதையின் அடிநாதமாய் இருப்பது அது வெளிப்படுத்தும் உணர்வு. கவிதைகள் அனைத்துமே கவிஞையின் உண்மை உணர்வுகளின் வெளிப்பாடுகள். போலித்தனமான வறட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அல்ல. அதனால் வாசிக்கையில் நெஞ்சைத் தொடுகின்றன. வாழ்த்துகள்!

வ.ந.கிரிதரன்
19.05.2025

கல் ஆந்தை



மகா கருணை

மகா அமைதி

மகா பரிவு

பங்களா வீட்டின் மேல்மாடத்தில்

புத்தராய் மாறி வெறிக்கும்

கல் ஆந்தை.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

நான்ஸி


ஒருகை குறைய

துரியோத்தின் இளம் மனைவி நான்ஸி

முதல்முறையாக அவன் நண்பர்களுடன்

ரம்மி ஆட அமர்கிறாள்

இதுவரை கேட்காத உற்சாகச் சிரிப்பொலிகளை

மூன்று மாதங்களில் இடிக்கப்படவுள்ள

பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு

கேட்கத் தொடங்குகிறது.

ராஜா ராணி அதிகம் சேர்ந்தாலும் தரித்திரம்தான்

திவாகர் உதடு பிதுக்குகிறான்.

ஜோக்கர் இருப்பவன் இல்லாதவன்

இரண்டு பேர் முகத்திலும் வித்தியாசமே காணமுடிவதில்லை

நள்ளிரவிலும் புழக்கமற்ற பால்கனிகளில் தங்கியிருக்கும்

புறாக்களின் முனகல் நிற்பதில்லை

சலிக்கிறான் துரியோத்.

ஒழுங்கா அடுக்கத் தெரியாதவனும்

நான்காவது ரவுண்டிலேயே ரம்மியில் ஜெயிக்கிறான்

ரம்மியைப் பொறுத்தவரை உள்ளேயும்

வெளியேயும்

ஜோக்கர்கள் கண்ணுக்குப் புலப்படாமல்

கைமாறுகிறார்கள்

சீட்டுகளை நெஞ்சோடு மறைத்து

சிரத்தையோடு விளையாடுபவனும்

ஜெயிக்கிறான்

எல்லாரும் பார்க்க

சீட்டுகளை முறையற்று விரித்து விளையாடுபவனும்

ஜெயிக்கிறான்

பரஸ்பர நிதி ஆலோசகன் தர்மராஜின் ஆரூடம்.

ஜோக்கராகவே இருந்தாலும்

தேவையில்லாத நேரத்தில்

கூடுதலாக ஏறக்கூடாது

ராஜாவும் ராணியும் அமைச்சரும்

படம்கொண்ட பாம்புகள்

ஜோக்கரோ சீட்டின் எல்லையைத் தாண்டி நெளிபவன்

புறாக்கள் தங்கத் தொடங்கும் கட்டிடங்களில்

பூனைகள் விபரீதமான

காரியங்களைச் செய்யத் தொடங்குகின்றன

சமையலறைகளுக்குள்

கடிபட்ட தலைகளை

பட்டுவாடா செய்துவிடுகின்றன.

டிக் என்று சொல்லி

யாரும் எதிர்பாராத வேளையில்

உபரிச் சீட்டை இறக்கி

ஆட்டத்தைப் பெருமிதத்துடன்

முடித்தாள்

நான்ஸி.

சபாஷ் என்று நான்ஸி தொடையில்

தட்டுகிறான்

அருகில் விளையாடிக்கொண்டிருந்த

அம்பலவாண தேசிகன்.

அஸ்தினாபுரம் என்ற பெயர் கொண்ட

அந்தப் பழைய குடியிருப்பு வீடு

இன்னொரு நிசப்தத்தை விழுங்கியது.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

மிஷிமாவின் சௌந்தர்ய கிளிகள்

ராஜஸ்தானின் பளீர் வெயில், நடுமுற்றத்தில் பட்டு ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட ஜோத்பூரின் தங்கும் விடுதி அது. வெளிநாட்டு ஓரினப் பாலுறவாளர்கள் தேடித் தங்கும் அந்த விடுதியின் உணவுக்கூட மூலை அலமாரியில்தான், யாரோ விட்டுச்சென்ற, யூகியோ மிஷிமாவின் ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவலைப் பார்த்தேன். சாமுராய்களின் உடல் வலிமை, வீரம், ஆண்தன்மை மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கதாநாயகனுக்கு கவர்ச்சி தொடங்கி அதுதொடர்பிலான குழப்பம், பயம், இரட்டைத் தன்மை, அதை மறைப்பதற்கான பாவனை எல்லாம் அலைக்கழிக்க, ஒரு யுவதியின் காதலையும் வலியுடன் கடக்கும் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். ஊர்திரும்பிக் கொண்டிருந்த ரயில், சூரிய காந்தி வயல்களினூடாக கர்நாடக மாநிலத்தில் எங்கோ ஒரு பிரதேசத்தில் விரைந்துகொண்டிருந்தது. மிஷிமா கொடுத்த பெருமூச்சுடன், மழைக்காக மூடியிருந்த ஜன்னலைத் திறந்து வெளியை வெறித்தபோது சரட்டென்று கிளிகள் சூரியகாந்தி வயல்களிலிருந்து கூட்டமாக மேலே பறந்தன. சிறுவன் மிஷிமா அதுவரை அணிந்திருந்த முகமூடியை வலியுடன் உரித்து அகற்றியபோது உண்டான அழகு….பச்சைப்பசேல் வயலில் விருட்டென்று எழுந்து பறந்த கொக்கின் வெள்ளையில் மயங்கிய ராமகிருஷ்ண பரமஹம்சர்…குற்றாலம் பிரதான அருவியை, தேவியின் விரிகூந்தலாகப் பார்த்து நெஞ்சில் அறைந்துகொண்ட லா.ச.ராமாமிர்தம் பார்த்த அழகு.

உடைந்த பாலம்


கழிமுகம் கடல்

நீர் மணல் கரை

முயங்கிக் கலையும்

சம வெளி

எல்லாம் ஓயும்

படகு பாய் கொடி

தூண்டில் சூரியன் வலை

கைவிடப்பட்ட பொம்மைகள்

செருப்புகள் மதுக்குப்பிகள்

எல்லாம் ஓயும்

என்று ஆற்றுவித்து

கால்களை

உக்கிரமற்றுத் தழுவி

அமைதியாகத் திரும்பிச் செல்லும்

சின்னச்சிறிய சீரலைகள்.

களுக் களுக்கென தளும்பி

நீர் சொல்லும் ஒன்று எனக்கு

கேட்கத் தொடங்குகிறது.

ஜே. கிருஷ்ணமூர்த்தியின் காலத்தில்

எதையும் யாரையும்

இனி இணைப்பதில்லையென்று முடிவெடுத்து

ஏகாந்தத்தின் கழிமுகம் மீது

நின்றுகொண்டிருக்கும்

உடைந்த

பாலத்துக்கோ

களுக் களுக்கென நீர் சொல்லும்

அந்த ஒன்று

அப்போதே கேட்டுவிட்டது.


யுத்தத்துக்கும் சமாதானத்துக்குமிடையே

துள்ளி எழப்போகிற மீன்

கிடைக்கும்

தருணத்துக்கு சற்று முன்னால்.

நிசப்தத்தை

அலகில் நிறைத்தபடி

நீர்வெள்ளி சுடரும் பரப்பில்

மேயும்

கொக்குகளுக்கு கருநாரைகளுக்கு

ஏற்கெனவே சேதி சொல்லப்பட்டு விட்டது.

அருகிலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்

கடலின் ஆழத்தை

கேலிசெய்து

திளைத்துக் குளிக்கும்

காகங்களுக்கு குருவிகளுக்கு

எனக்கு முன்னால் கேட்டுவிட்டது

களுக் களுக்கென நீர் சொல்லும்

அந்த ஒன்று.

(அகழ் இணைய இதழ்)

கருப்பு



நேயக் கலவி

மயக்கத்தில்

குழந்தையிடம் பேசும் அதர்க்க மொழியில்

கொஞ்சி

தொட்டுத் தொட்டு நீ அகற்றிய

என்

உள்ளாடையின்

நிறம்

துயரக் கருப்பானது

தற்செயல்தானா

கோகிலமே!


உன் இருள் கேசம்

அந்தக் கேசத்தின் மையெடுத்துத் தீட்டிய

உன் புருவம்

திலகமிட்ட நெடிய நெற்றி

கூர்ந்த பிச்சிப்பூ மூக்கு

ஆராதித்து

உன் இடைக்கு முன்னால் மண்டியிட்டேன்

அரவப்படம்

உன்

அல்குல் என வர்ணித்து

முத்தத்தால்

உரித்த உன் உள்ளாடையும்

அதே துயரக் கருப்பானது

தற்செயல்தானா?

மரகதமே!


இப்போதும் அலமாரியில்

கையில் தட்டுப்பட்டு

அணியும்போதெல்லாம்

யாரை

எதை

எப்பொழுதைப் பழிக்க

அந்தக் கருப்பு உள்ளாடையின்

உட்புறத்தை மாற்றி அணிகிறேன்

ஞாபகமென்னும்

ஆலகால நஞ்சே!

(நன்றி : அகழ் இணைய இதழ்)

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

 


நான் அறிவேன்

அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை

வரையறுக்கப்பட்ட வருத்தங்களை

நான் அறிவேன்.

 

ஆனால்

நான் அவர்களைக் கவனிக்கிறேன்

அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன்.

அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை

நான் விரும்புகிறேன்

அதுவே ரொம்ப.

 

அவர்கள் புகார் சொல்கின்றனர்

ஆனால் கவலைப்படுவதில்லை.

அவர்களின் மிடுக்கு நடை 

ஆச்சரியகரமான கண்ணியம்.

மனிதர்களால்

சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில்

எளிமையாக

அவர்கள் உறங்குகின்றனர்.

 

நமது கண்களை விட

பூனைகளின் கண்கள் 

அபரிதமிதமான அழகு கொண்டவை.

அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில்

உறங்கமுடியும்

எந்தத் தயக்கமும்

குற்றவுணர்வும் இன்றி.

 

நான் சோர்வாக உணரும்போதெல்லாம்

எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர

வேறெதுவும் செய்வதில்லை.

எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.

 

நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன்

அவர்களே எனது ஆசிரியர்கள்.

(சுஜாவுக்கு)

குத்துவாள் - மிகெயில் லெர்மன்தோவ்


ஆமாம், நான் உன்னை நேசிக்கிறேன்

என் நம்பகம் வாய்ந்த குத்துவாளே

எனது கூட்டாளி நீ

உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்டவன்

மனம் முழுக்கப் பழிகொண்ட  கிரிகோரியனால்

உருக்கி வார்த்து உருவாக்கப்பட்டவன்

காக்கேசியன் ஒருவனால் போருக்காக கூர்மையாக்கப்பட்டவன்.


தூய்மையான கரமொன்றால் 

பிரிவின்போது 

நீ எனக்கு அளிக்கப்பட்டாய்.

நேசத்தின் கடைசி

நினைவுப் பரிசு நீ…

கசந்து பிரியும்போது 

ரத்தம் அல்ல

முத்தைப் போன்ற கண்ணீர் 

துயரமாக உனது கூர்முனையில் 

விழுந்தோடியது. 


எஃகாக இருக்கையில்

நடுங்கும் தீயில் உன்னை இட்டபோது

நீ ஒருகணம் மங்கி பின்னர் சுடர்ந்தொளிர்ந்ததைப் போல 

துயரம் தோய்ந்த மர்மக் கனவால்

நிறைந்த அவளிரண்டு கருவிழிகளும்

எனக்குள்ளேயே நிலைத்துறைந்தன.


சாலைகளில் நீ எனக்கு நண்பன் – வார்த்தையற்ற நேசத்தின் நற்கொடை

ஒரு பயணிக்கோ – நம்பிக்கை வைக்கக்கூடிய கருவி:

நான் ஒருபோதும் மாறப்போவதில்லை

என் ஆன்மா 

உன்னைப் போல

உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்ட

உன்னைப் போல. 

அவள் பெயர்



அவள் பெயர் தான் இந்த உலகில் நான் கேட்ட ஒலிகளிலேயே அழகானது- இத்தனை துயரங்களை அந்தப் பெயர் கொண்டவள் அளித்தபிறகும். அவள் உருவம், உடை, குரல், அவளைப் பற்றி வரும் செய்திகள். எல்லாம் என்னைக் கழுமுனைக் கூர்மையில் இருத்துவதாக இருப்பினும், அவள் பெயரை வாயில் மெல்லும்போதெல்லாம், எனது கபாலச்சுவர்கள் எரிவது உண்மைதான். எனினும், அவள் பெயர்தான் இந்த உலகத்திலேயே இனிமையானது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

தின்னத் தெவிட்டாது வயிறும் கனக்காத தின்பண்டத்தின் தீராத மென்சுவை அவள் பெயர். கருத்தின் எடையில்லாமல் காற்றில் மயங்கிக் குழையும் இறகு அந்தப் பெயர். மென் குறில், மென் நெடிலாய் உணர்வுக்கு ஏற்பச் சுருக்கி விரிக்க இயலும் அந்தப் பெயர்.

அவள் என்னிடமிருந்து எத்தனையோ தொலைவு சென்றபின்னும் அவளை எண்ணும்தோறும்- சுயம், இழியும் வாதையாக என் மேல் ஒழுகும்போதும்- தித்திக்கின்றதே அவள் பெயர்.

இப்படிச் சொல்வதில் எனக்கு வெட்கமேயில்லை. அவள் பெயரைப் போன்ற ஒன்றை நான் இக்கணம் வரைக் கடக்கவில்லை. பகலின் விளிம்புகளில் பொன்னின் ஜரிகையாகச் சுடரும் பெயர். அந்தியின் செந்தைலம். கடற்கரை மணலோடு குழையும் போது என்னுடன் சேர்ந்து சேர்ந்து குழைந்தது அந்தப் பெயர்.

ஆனால், அந்தப் பெயரை என்னால் வெளிப்படுத்த முடியாது. அதை உரிமையோடு சத்தமாகச் சொல்ல முடியாது. அந்தப் பெயரை வெளியே கூறினால் நான் மரித்துவிடுவேன்.

(நன்றி : அகழ் இணைய இதழ்)

அம்மா நாணாவில் ஸ்ரீ தேவி


அம்மா நாணா சூப்பர் மார்க்கெட்டில்

அலாஸ்காவைச் சேர்ந்த

பதப்படுத்தப்பட்ட டூனா மீன் டப்பாக்களை

பார்வையிட்டுக் கொண்டிருந்தார்

ஸ்ரீதேவி.

பாலாடைக்கட்டி வாங்குவதற்காகப்

எப்போதாவது போகும் நான்

அங்கே

தற்செயலாய்

என் பிரிய தேவதையைப்

பார்த்து

வணக்கம் வைத்தேன்.


இறந்தபிறகு யாருக்கும்

நான் அடையாளம் ஆவதில்லை.

அதனால் பெரிதாகத் தொந்தரவும் இல்லை.

நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?

என்றார்.


இறந்தவர்களோடு உலவக்கூடியவன்

என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.


எதிரேயுள்ள அடையார் கேட் விடுதியில்

தங்க நேரும்போதெல்லாம்

இங்கே கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும்

வருவேன்.

தற்போது அதையும்

இடித்துவிட்டார்கள்

மும்பையில் குடியிருக்கச் சென்றபோது

நான் நீங்கிய சென்னை

முழுமையாக மாறிவிட்டது.

பெருமூச்செறிந்தார் ஸ்ரீ தேவி.


இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் நடித்தது தவிர

ரசிகனாக எனக்கு உங்கள் மேல் சிறுபுகார் கூட இல்லை

என்றேன்.


ஒடுங்கிய முகம், உடலுடன்

ஒரு யுவதியின் அம்மாவாக

நடித்ததில்

ராம் கோபால் வர்மாவுக்கும்

சங்கடமே!

என்ன செய்வது?

என்று அலமாரியைப் பார்த்தபடி சிரித்தார்.


மூன்றாம் பிறை படத்தில்

நீங்கள் வளர்த்த சுப்பிரமணி ஞாபகத்தில்தான்

எனது ப்ரௌனியை வளர்ப்பதாகச் சொன்னேன்.

சுடரும் பளிங்குக் கண்களில் ஆழம் கூடியது.


தண்ணீர் தொட்டியில் மூழ்கிய தருணத்தில்

வலி இருந்ததாவென்று கேட்டேன்.


சொல்லத் தெரியவில்லை

தெரிந்திருந்தால்

மீண்டும் பிறந்திருப்பேனே

என்று கையில் கூடையுடன் திரும்பி

விரைவாக மறைந்தார்.


அம்மா நாணா கடையில் நான் பார்த்த

ஸ்ரீ தேவி.

(நன்றி : அகழ் இணைய இதழ்)

யாசகன் - மிகெயில் லெர்மன்தோவ்


கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு இல்லம்

அதன் வாசலில்

ஒருவன் 

பசி, தாகம், வறுமையின் காரணமாக

நன்கொடை

கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் யாசகன்

குரூரமாய் ஒடுக்குதலுக்குள்ளானவன்.


அவன் ஒரு ரொட்டித் துண்டை மட்டுமே கேட்டான்

அவன் தோற்றத்தில் அத்தனை வேதனை

மெலிந்து, நலிந்து

அவன் நீட்டியிருக்கும் கரத்தில்

ஒரு கூழாங்கல்.


இப்படித்தான் நான் வீணே 

உன் நேசத்துக்காகப் பிரார்த்தித்தேன்

கசந்த கண்ணீர், ஏக்கம் மற்றும் உன்மத்தம் கொண்டு.

மகத்துவமாகச் செழித்திருந்த எனது புலன்கள் 

இப்படித்தான் 

உன்னால் என்றென்றைக்குமாகத் தண்டிக்கப்பட்டன.

அந்தரப்பட்டிணம்



பள்ளியெனவும் நூலகமெனவும் தொனித்த ஒரு பாழடைந்த மாளிகைக்குள் நுழைந்தேன். படிகளேயில்லாமல் நிர்மாணத்தில் உள்ள ஓர் அந்தரப்பட்டிணத்துக்கு ஏறிவந்து விட்டேன். பூமியில் உள்ள கட்டிடங்களை வாகனங்களை அலையும் மனிதர்களை எல்லாம் பார்க்கும் வகையில் கண்ணாடித் தளத்தில் அந்தரப்பட்டிணம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்தரப்பட்டிணத்தின் சுவர்கள் உயர்ந்துகொண்டிருந்தன. கல் தச்சர்கள், நவீன சிற்பங்களை தூசிப்புகை சூழ செதுக்கிக் கொண்டிருந்தனர். சிறு உணவங்கங்கள் அந்தரப்பட்டிணத்தில் மூலைகளில் தெரிந்தன. அந்தரப்பட்டிணத்துக்கு ஏறி வந்துவிட்டேன். ஆனால் இறங்கும் வழி தெரியவில்லை. கீழே குதிக்கும் அளவுக்கான உயரத்திலும் இல்லை. மதிய வெயில் ஏறியபோது மேற்பார்வையாளர்கள் கட்டுமானத்திலிருக்கும் அந்தரப்பட்டிணத்தைப் பார்வையிட வந்தனர். ஒரு தண்டனை போல, ஒரு திறந்த சிறையைப் போல அந்தரப்பட்டிணம் ஆகிவருவதை உணர்ந்தேன். அந்தரப்பட்டிணத்தின் தொழிலாளிகள் எல்லாரும் நேசபாவமின்றி அன்னியமாக அச்சமூட்டக்கூடியவர்களாகத் தெரிந்தனர். இருப்பதிலேயே சாமானியமாகத் தெரிந்த ஒரு தொழிலாளியிடம் தரையில் இறங்குவதற்கு வழி உண்டா என்று கேட்டேன். பீடி குடித்துக் கொண்டிருந்த அவரிடம் ரகசியத்தைக் கேட்கும் குழைவைச் சேர்த்தேன். இங்கே மேலேறி எளிதாக வந்துவிடலாம். எனக்குத் தெரிந்தவரை இறங்குவதற்கு வழியே இல்லை என்றார். வீட்டில் என் அம்மா தேடிக்கொண்டிருக்கும் ஞாபகம் உறுத்தலாக ஆரம்பித்தது. நான் அந்தரப்பட்டிணத்தில் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டேன். வீட்டுக்கு திரும்பிப் போகவேண்டும். அம்மா தூர தொலைவில் வீட்டில் என்னைக் கடிந்தபடி காத்திருக்கிறாள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிதொலைந்து போகும் கனவுகளை வேறுவேறு விதமாக கண்டுவருகிறேன். தொலைந்துபோகும் எல்லா கனவிலும் அம்மா வீட்டில் காத்திருப்பது மட்டும் மாறாமல் தொடர்கிறது.

(நன்றி: அகழ் இணைய இதழ்)

இனிய ஹென்றி மத்தீஸ்


இனிய

ஹென்றி மத்தீஸ்!

எப்போது

உன் மனைவி

அமேலி மத்தீஸின் முகம்

முகமூடியாக உனக்கு உருமாறியது?


இனிய

ஹென்றி மத்தீஸ்!

உன் மனைவி

அமேலி மத்தீஸின் கண்கள்

எப்போது

முகமூடியின் இரண்டு குழிகளாக

உனக்குத் தோன்றியது?


இனிய

ஹென்றி மத்தீஸ்!

உன் மனைவி

அமேலி மத்தீஸின் முகம்

வெறும் கபாலமாக

எப்போது

உன் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது?


எலும்புக்கும்

உடலுக்கும்

முகத்துக்கும்

கபாலத்துக்கும்

எத்தனை நூற்றாண்டுகள் தொலைவு?

இனிய ஹென்றி மத்தீஸ்!


(இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃபாவிய கலை இயக்கத்தின் முதன்மையான ஓவியர்களில் ஒருவராக கருதப்படும் பிரெஞ்சு ஓவியர் ஹென்றி மத்தீஸ். அவரது போர்ட்ரெய்ட் ஆஃப் மேடம் மத்தீஸ் புகழ்பெற்ற ஓவியம்.)

நன்றி: அகழ் இணைய இதழ்

❌