Normal view

Received before yesterday

பூச்சிகளின் தேசம்

பூச்சி இனங்கள் குறித்துத் தெரியாத பல தகவல்களைச் சொல்லும் இந்நூலுக்குச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அதில் “இவ்வுலகில் அதிக எண்ணிக்கையில் வாழும் உயிரினம் பூச்சியினம் தான்.  ஒரு தோராயமான கணக்கில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சுமார் 10 லட்சம் பூச்சிகள் இருக்கின்றன. பூச்சிகளைத் தோழமையோடு பார்க்கச் சொல்லித் தரும் ஒரு தனி நூலைப் ‘பூச்சிகளின் தேசம்’ என்ற தலைப்பில் தந்திருக்கிறார் கோவை சதாசிவம்.  தமிழின் பசுமை இலக்கியத்தில், இது ஒரு முதன்மை முயற்சியாகும்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

உலக வனப்பாதுகாப்பு ஆண்டையொட்டி மாணவிகள் சிறப்பு கானுலா செல்வது போலவும், பயண வழியில் உரையாடல் வழியே பூச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்வது போலவும் இந்நூல் அமைந்துள்ளது. கட்டுரையாக இல்லாமல் கேள்வி பதிலாகவும், உரையாடலாகவும் இந்நூல் அமைந்திருப்பதால் வாசிக்க எளிதாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. கானுலா குழுவினரோடு வேட்டை தடுப்புக் காவலராகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மான்பன் என்பவரும் இணைந்து கொள்கிறார். இடையிடையே பூச்சிகள் பற்றிய பழங்குடி மக்களின் அனுபவ அறிவை அவர் பகிர்ந்து கொள்வது சிறப்பு.

கரையான் பற்றிய கட்டுரையில், மலைவாழ் மக்களின் வீடுகட்டும் முறையைப் பற்றி இவர் விளக்குவது ஓர் எடுத்துக்காட்டு:-

“மலைவாழ் மக்களின் ஒரு பிரிவினர் கட்டும் வீடுகளில் மூங்கில் தப்பைகள் தான் சுவர்.  மூங்கில் தப்பைகளின் மீது கரையான் புற்றிலிருந்து எடுத்து வரும் மண்ணைத் தப்பைகள் மறைய பூசி விடுவார்கள். சின்ன சந்து கூட இருக்காது. ஆனால் காற்றோட்டமும் மித வெப்பமும் சமச் சீராக இருக்கும்..”

17ஆம் நூற்றாண்டில் டார்வினுக்கு முன்பாகவே பூச்சிகள் பற்றியறிய தென்னமெரிக்காவுக்குப் கப்பல் பயணம் மேற்கொண்ட ‘மரியா சிபெல்லா மேரியான்’(Maria Sibylla Merian) என்ற பெண்மணி தாம் ‘பூச்சியியலின் மூதாய்’ என்று கருதப்படுகிறார்.

கரையான் புற்று பற்றியும், கரையான்களின் வாழ்வியல் பற்றியும் மழைக்காலத்தில் கரையான் புற்றைச் சுற்றிக் காளான் முளைப்பதற்கான காரணம் பற்றியும் பல வியப்பான செய்திகள் இந்நூலில் உள்ளன.   கரையான்கள் காய்ந்த புற்களைத் துண்டுகளாக்கிப் புற்றிலுள்ள சுரங்கத்தில் அடுக்குமாம். அப்புற்கள் சில நாட்களில் பூஞ்சையடைந்து, கரையானின் விருப்ப உணவான காளானாய் மாறிவிடுமாம். இந்த நிகழ்வை ஆசிரியர் ‘பூஞ்சைத் தோட்டமாகவும், எறும்புகள் நேராக ஊர்ந்து போவதை உயிருள்ள வாக்கியமாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்.

கரையான் கட்டிடக்கலையின் தொழில்நுட்பத்தை நம்மிடையே புழங்கும் நாட்டுப்புறக்கதையோடு இணைத்துச் சொன்னது ரசிக்க வைக்கிறது. பணிக் கரையான்கள் மிதமான வெப்பம், மிதமான குளிர் நிலவும் சூழலைக் கண்டறிந்து தம் வாழ்விடங்களைத் தீர்மானிக்கும் என்பதும், 4000 ஆண்டுகளாக ஓரு கரையான் புற்று நீடித்து நிலைத்திருக்கிறது என்பதும் இயற்கையின் அதிசயங்கள்.    

மழை, வெள்ளம் வரப்போவதை எறும்புகள் முன்பே அறிந்து தற்காத்துக் கொள்ளும் என்பதும், எறும்புகள் மண்ணிலுள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற மணற்சத்துக்களைச் சிதைத்துப் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை என்பதும், உலகில் கிட்டத்தட்ட 22000 எறும்பு இனங்கள் இருக்கின்றன என்பதும் வியப்பான அறிவியல் உண்மைகள். “பூமியில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களின் எண்ணிக்கையை விடக் கரையான்களின், எறும்புகளின் எண்ணிக்கை இருபது விழுக்காடு அதிகம்” என்கிறது ஓர் அறிவியல் உண்மை.  

நத்தை பற்றிய கட்டுரையில் நத்தைகள் உடல் பருமனுக்கேற்ப ஓடுகளைப் பெரிதாக்கி கொள்வதால் மேல் ஓட்டில் வளையங்கள் தோன்றுகின்றன; வெள்ளை மற்றும் மரப்பட்டை நிறத்தில் இருக்கும் ஓட்டின் மேல் வரிகள் நம் உள்ளங்கை ரேகை போல ஒவ்வொரு நத்தைக்கும் வேறுபடும் என்பவை பலருக்கும் தெரியாத செய்திகள்.

கண் கொத்திப்பாம்பு என்று சொல்லப்படும் பச்சைப் பாம்பு பற்றி மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் விளக்கத்தை ஓர் அத்தியாயம் பேசுகிறது. எல்லாப் பாம்புகளைப் போலவே பச்சைப் பாம்புக்கும் காதுகளில்லை என்கிறார் ஆசிரியர். மகுடி இசைக்குப் பாம்பு ஆடுவதாகப்  பாம்பாட்டிகள் காட்டும் பித்தலாட்ட வித்தைக்கும் வேட்டு வைத்துள்ளார். பாம்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு உதவும் விதமாக ‘ரோமுலஸ் விட்டேகர்’ எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ புத்தகத்தை ஆசிரியர் பரிந்துரை செய்துள்ளது சிறப்பு! 

தொட்டாச்சுருங்கி செடியை அடிப்படையாகக் கொண்டு எந்திர மனிதர்களின் தொடுதிறனை அதிகப்படுத்த மேலை நாடுகளில் நடக்கும் அறிவியல் ஆய்வு பற்றிய சிறு குறிப்பையும் ஆசிரியர் ஒரு கட்டுரையில் குறிப்பிடத் தவறவில்லை.

உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் முதன் முதலாகப் பறந்த பூச்சியினங்களில் தும்பியும் ஒன்று. சுமார் 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற படிநிலை வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது தும்பி என்ற வியத்தகு செய்திகளைத் தும்பி பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

“தும்பியின் தலைமுழுதும் அதன் கண்கள் பரவியுள்ளன; பறக்கும் போது பல திசைகளிலும் பார்வையைச் செலுத்த முடியும்; பூச்சி இனங்களில் தும்பிக்குத் தான் கூர்மையான பார்வை; அதன் இரண்டு பெரிய கண்ணுக்குள் 30000 சிறிய கண்கள் உள்ளன” என்ற அறிவியல் தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை.

‘அடர்வனமும் ஒளிரும் பூச்சிகளும்’ என்ற அத்தியாயத்தில் மின்மினியை ‘வன நட்சத்திரம்’ என்று ஆசிரியர் சிலாகித்துச் சொல்வது, அழகான பொருத்தமான உவமை! இப்பூச்சிகள் பற்றிப் பல தெரியாத செய்திகள்  இக்கட்டுரையில் உள்ளன. மின்மினிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் தன்மை கொண்டவை; மண்புழுவும் நத்தையும் வளர்ந்த மின்மினியின் விருப்ப உணவு; மின்மினி அரிவாள் போன்ற கொடுக்கால் குத்தி இரையை மயக்கமடையச் செய்து செரிமான நொதிகளைச் சேர்த்துக் கூழாக மாற்றி ஜூஸ் குடிப்பது போலக் குடிக்கும்; மின்மினி உடல் நச்சுத்தன்மை வாய்ந்தது போன்ற பல தகவல்கள் வாசிக்க மிகவும் சுவாரசியமாகவும், வியப்பாகவும் இருந்தன.

அது போல ‘உயிருடன் ஓர் வானவில்!’ என்ற பொருத்தமான தலைப்பில் அறிமுகம் செய்யப்படும் வண்ணத்துப்பூச்சி குறித்த அத்தியாயத்தில்    

“உதிர்ந்த இலை

கிளைக்குத் திரும்புகிறதோ

வண்ணத்துப்பூச்சி”

என்ற அருமையான ஜப்பானிய ஹைக்கூ கவிதையும் இடம்பெற்று, வாசிப்பை ரசிக்க வைக்கிறது.   

மருத்துவத் துறையில் மிக நுண்ணிய பகுதியில் போடும் தையலுக்கும் பேண்டேஜ் துணி தயாரிப்புக்கும் சிலந்தியின் நூலிழை பயன்படுத்தப்படுகின்றது; நவீன தொழில் நுட்பத்தில் சிலந்தியின் நூலிழையைக் கொண்டு செயற்கைத் தோல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது என்ற அறிவியல் செய்திகள் ஆச்சரியமளிப்பவையாக உள்ளன. தேனியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் சொன்னதை ஆசிரியர் தேனீக்கள் பற்றிய கட்டுரையில் கொடுத்திருக்கிறார்:-

“உலகில் தேனீக்கள் மறைந்துவிட்டால் மனித குலத்தின் ஆயுட்காலம் வெறும் நான்காண்டுகளில் முடிந்துவிடும். தேனீக்கள் மறைந்தால் மகரந்த சேர்க்கை மறையும்; செடி,கொடிகள் மறையும்; மனிதனும் மறைந்து விடுவான்.”

இன்னும் 86 விழுக்காடு உயிரினங்கள் உலகில் கண்டறியாமல் இருக்கின்றன என்கிறார்கள் உயிரியியலாளர்கள்.  இவைகளைக் கண்டறிந்து பெயரிட பல ஆண்டுகள் ஆகும்….அடர்ந்த காடுகள், ஆழ்கடல் போன்ற இடங்களில் என்னென்ன விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத ஒரு வியப்பூட்டும் ரகசியம்” என்கிறார் ஆசிரியர். அப்படியென்றால் வெறும் 14% உயிரினம் மட்டுமே இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் உண்மை!

வண்ணத்துப்பூச்சி முதல் கரப்பான் பூச்சி வரை பூச்சிகளைப் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகள் இந்நூலில் உள்ளன. உயிரியல் மாணவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்க்கும், சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவர்க்கும் பெரிதும் பயன்படும் நூல்.

வகைசூழலியல் கட்டுரைகள்
ஆசிரியர்கோவை சதாசிவம்
வெளியீடு:-குறிஞ்சி பதிப்பகம், திருப்பூர். +91 99650 75221
விலை:-ரூ 120/-.

The post பூச்சிகளின் தேசம் first appeared on சுட்டி உலகம்.

சின்னஞ்சிறு பெண்

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில்  வெளிவந்துள்ளது. மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன் இதனைச் சிறார் வாசிக்கக் கூடிய எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார்.

சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் வரும்  பெண்கள் பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இதை ‘யங் அடல்ட்’ என்ற சொல்லப்படும் இளையோர் நாவல் வகையில் சேர்க்கலாம்.

இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது. ஏனெனில் லூயிசா வீட்டிலும் நான்கு பெண்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான இரண்டாவது பெண் ஜோ எழுத்தாளர். கோபம், துடுக்குத்தனம், முரட்டுத்தனம் ஆகிய குணங்களைக் கொண்டவர், புத்தகம் வாசிப்பதில் அதிகம் நாட்டமுள்ளவர். கதாசிரியர் லூயிசாவின் மறு வார்ப்பாகத் தான் இந்த ஜோ கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.   

150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கேரக்டர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேசனாக இருக்கும்.

கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகை.

சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.  

அம்மாவும் மிகவும் நல்ல பெண்மணி. கிறிஸ்துமஸ் காலை உணவை ஆறு குழந்தைகள் உள்ள ஒரு ஏழை குடும்பத்துக்குக் கொடுக்கச் சொல்கிறார். சகோதரிகளுக்குப் பசி. ஆனாலும் அம்மாவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். காலை உணவை அந்த ஏழை தாய்க்குக் கொடுத்து விட்டு ரொட்டியும் பாலும் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இப்படி கொடுத்ததை அறிந்த பக்கத்து வீட்டு பணக்கார முதியவர் மனம் நெகிழ்கிறார். அன்று மாலை இவர்களுக்கு விதவிதமான கேக் வகைகள், ஐஸ்கிரீம், பூங்கொத்துகளை அனுப்புகிறார். இந்த நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்; மற்றவர்க்குப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை அவர்கள் அறியாமலே அறிந்து கொள்வார்கள்.

சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. கடைசிப் பெண் ஆமி. வெளியே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அக்கா ஜோ மேல் கோபப்படுகிறாள். அதற்குப் பழிவாங்க எண்ணி ஜோ கதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை எரித்துவிடுகிறாள். செய்தியறிந்து ஜோ ரொம்பவும் கோபப்படுகிறாள். “உன்னை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்” என்கிறாள். ஆனால் பனிச்சறுக்கு விளையாட்டின் போது உருகிய பனியில் மூழ்கிவிட்ட ஆமியைக் காப்பாற்றப் போராடுகிறாள். இதைப் போன்ற செவ்வியல் நாவல்கள் வாசிக்கும் குழந்தைகளின் மனம் பண்படும்; விசாலமாகும்.

மேலும் பெத் என்ற மூன்றாவது சகோதரிக்கு ஏற்படும் பரிதாபமான முடிவையும் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு இதில் மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.  இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுகிறது.

சிறுவர்களைக் கவரும் விதமாக மிக அழகான அட்டைப் படத்துடனும் சிறப்பான வடிவமைப்புடனும் சென்னை வானம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 13+ வாசிக்க ஏற்ற நாவல்.

வகை – மொழி பெயர்ப்புஇளையோர் நாவல்
ஆசிரியர் – ஆங்கிலம் –
தமிழாக்கம் –
லூயிசா மே ஆல்காட்
சுகுமாரன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89. +91 91765 49991.
விலைரூ 100/-

The post சின்னஞ்சிறு பெண் first appeared on சுட்டி உலகம்.

எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம்

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூலில் பழைய தமிழ்நாட்டு விளையாட்டுகளைக் கதை மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். டிஜிட்டல் மீடியாவிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடக்கும் இந்நாளைய சிறுவர்க்குக் கைபேசி இல்லாமல் மட்டுமல்ல, எந்த வித எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் இல்லாமலே கூட விளையாட முடியும் என்பதை இந்நூல் சொல்கிறது. 

எனக்கு ஃபோன் தர மாட்டேங்கிறான்” என்று அண்ணன் மீது புகார் சொல்லும் தமிழினிக்கு, அவள் அம்மா புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் ஒத்தையா?ரெட்டையா? என்ற விளையாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். தமிழ் மொழியுடன் நெருக்கமான இவ்விளையாட்டுகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும் என்று விளக்குகிறார் தமிழினியின் அப்பா.

தமிழினிக்கு ஆர்வம் அதிகமாக, கில்லா பிறாண்டி, எலி-பூனை விளையாட்டு போன்ற மற்ற விளையாட்டுகளையும் அம்மா கற்றுக் கொடுக்கிறார். கில்லா பிறாண்டி விளையாட்டின் போது பாடப்படும் பாட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பழைய பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யும் இந்நூல் 12-14 வயது சிறார்க்கானது.

 வகைசிறார் கதை
ஆசிரியர்‘பஞ்சு மிட்டாய்’ பிரபு
வெளியீடு:-தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை-06
விலைரூ 50/-

The post எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம் first appeared on சுட்டி உலகம்.

❌