Normal view

Received before yesterday

கங்கைகொண்ட சோழபுரம்

 

நம் தமிழ்நாட்டின் முக்கியப் பெருமைகளில் ஒன்று என்றால் அது நம் வரலாற்றுச் சின்னங்களும், பிரம்மாண்டமான பழமையான ஆலயங்களும்தான். அந்த வகையில் 1090 ஆண்டுகள் பழமையான  கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனெசுகோ பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இக்கோவில் சோழர் கட்டிடக்கலையின் ஒரு அற்புத அடையாளம்.
இராசராச சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவன் மதுராந்தகன் என்ற இராசேந்திர சோழன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்று “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றவன்.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, பெரிய சிவலிங்கத்தையும் நந்தியையும் உருவாக்கியவன் தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீசுவரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டியுள்ளான். தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து கும்பத்திற்கு அபிசேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. புனித நன்னீராட்டு நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன்மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தவன், கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக்கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வது வழக்கமாம். இக்கோவில் முழுவதும் வெண்மையாகக் காட்டியளிப்பதற்குக் காரணம் கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். 250 ஆண்டுகள் சோழர் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த கோயில், பிரமாண்டமான கலை, சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றான இக்கோவில் ஐராவதேசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில் எனப் போற்றப்பட்டு யுனெசுகோவின் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதன் பிரம்மாண்டமான கோபுரத்தின் உயரம் 55 மீட்டர், அதாவது 180 அடி. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அழகான முற்றம் உள்ளது. பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக நின்று அருள்பாலிக்கிறார். கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.

60 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி . பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.

அண்மையில்தான் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது.
முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம்  இக்கோயிலில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த  முதலாம் குலோத்துங்க சோழனால் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும், தக்கயாகப்பரணியிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணமுடிகின்றது.  சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ள இக்கோவிலில், இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற பற்பல கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால்   ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சரசுவதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரசுவதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர்.
9 வயது சிறுமியின் வடிவில் புன்னகைத்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிடாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். மிக அபூர்வமான இக்கோலத்தைக் கொண்டவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சி. அதேபோல் 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.
கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  “வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வட கைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும். செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி, விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியவை இங்கிருந்து பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் இக்கோவில்தான்.
கங்கைகொண்டசோழீசுவரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் சயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவிலின் பல பகுதிகளில், குறிப்பாக, பிரதான மண்டபத்தில் அற்புதமாகச் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்ளன.

ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பல இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிற்பங்கள் இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

 

 

ஜி.டி.நாயுடு பற்றி அறிஞர் அண்ணா பேச்சு

1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஜி.டி.நாயுடு 75ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

❌