Normal view

Received before yesterday

புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம்

          பொழுது விடிந்ததும் வாசல் தெளித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் நினைவில் மார்கழி மாதக் குளிர் தாண்டி மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. 


என்ன செய்வது….  என்ன செய்வது….  என ஓயாது மனம் புலம்பிக் கொண்டிருந்தது.
         

முகக் குறிப்பறிந்து…. என்னாச்சசு மல்லிகா?  எனக் கேட்ட கணவனின் கேள்விக்குப் பதில் தராது தண்ணீர் தெளிப்பதை  இன்னும் வேகப்படுத்தினாள். 
         

என்னாச்சாம் …  என்னாச்சு… இவர் சரியாக இருந்தால் இந்தக் கவலை இருக்குமா?
         

தன் ஆற்றாமையை வெளிப்படுத்த  தண்ணீர் தீர்ந்த ஈயக்குண்டாவைத்  தூர வீசினாள் மல்லிகா.
         

வீசிய வேகத்தில் குளிருக்கு ஒடுங்கிப் படுத்திருந்த நாய் மீது பட்டவுடன் அது வள்ளென்று குரைத்து வலியில் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.
         

சோறாக்க அடுப்புப் பற்ற வைத்த கரும் புகையுடன் இவள் கண்ணீரும் கலந்து முகத்தை மேலும் கருப்பாக்கியது.  
         

வழக்கம் போல்  என்ன செய்வது..?  என்ன செய்வது..?  என வாலருந்த பல்லியாய் மனது துடிதுடித்தது.
         

மகளுக்குத் திருமணமாகி இதோ முதல் பண்டிகையாய் பொங்கல் வருகிறது.
         

என்ன செய்வது?
         

ஆடு மாடு விற்றும் அடுப்பில் இருந்த அண்டாவையும் அடகு வைத்துக் கல்யாணம் செய்தாயிற்று. இனி சீருக்கு என்ன செய்வது? மகளுக்கு இல்லையென்றாலும் மருமகனுக்காவது ஏதாவது செய்ய வேண்டுமே!
         

பொன் வைக்கும் இடத்தில் பூ வை என்பார்கள்.  இன்று பூ வாங்குவதற்குக் கூட காசு இல்லாதவளாய் ஆனேனே!
         

யோசித்து யோசித்து எதுவும் செய்ய வழியின்றியும் பொறுப்பற்ற கணவனை நினைத்தும் அடுப்பங்கரையில் வெந்து கிடந்தாள் மல்லிகா.
         

பணம் நம்மளோட பிரச்சனை. அதுக்காகப் பொங்கலுக்கு மகளக் கூப்பிடாம இருக்க முடியுமா? என்றது மனது.
         

பெரியாசுபத்திரியில் மருத்துவம் பார்க்கும் தனக்குத் தெரிந்த டாக்டர் வரச்சொல்லி அழைப்பு வந்ததால் தன்னினைவை அடுப்பங்கரையிலிலேயே இறக்கிவைத்து விட்டு ஓடினாள்.
         

இதோ பொங்கலுக்கு அழைக்க மகள் வீட்டுக்குப் புறப்பட்டாள் மல்லிகா


பாரதி….. மகளைக் கூப்பிட்டவாறே கதவு திறந்து உள்ளே சென்றாள்.


எதிர்பாராத  வரவால் மகிழ்ச்சியில் தாயை அனைத்துக்கொண்டு அப்பா வரலை…. எனக் கேட்டதுக்குப் பதில் தராது
நல்லாயிருக்கியா? மாப்பிள்ளை எங்கே? எனக் கேட்டவாறே  கண்களால் தேடிக்கொண்டிருந்தாள்..


இல்லம்மா? இன்னக்கி  நேரத்திலேயே ஆபிஸ் கிளம்பிட்டாங்க. நீ வருவேண்ணு சொல்லியிருந்தா இருந்திருப்பாங்கம்மா…
மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கவலை முகத்தோடு இருப்பதைக் கவனித்த பாரதி.,

ஏம்மா எனக் கேட்க..
ஒன்னுமில்ல என வறண்ட பதில் தரும்போதே கண்கள் நீர்க்குளமானதைப் பார்த்ததும் பதறிப் போனாள் பாரதி.

ஏம்மா? என்னாச்சு? என அடுக்கிய கேள்விக்கு
பண்டிகைக்கு நேரமா வந்திடுங்க!  மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிரு .
முன்னாடி நாளே வந்திருங்க எனச் சொல்லிக் கொண்டே கையில் சுருட்டி வைத்திருந்த பணத்தை நீட்ட 

பணம் எப்படிம்மா கிடைச்சுது? யார் தந்தாங்க? எவ்வளவு வட்டிக்கு வாங்குன? எனக் கேள்வியால் தொடர…..


பதறாத பாரதி அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. பிரசவத்துல நிறைய ரத்தம் போகும் போது அவங்களுக்கு ரத்ததானம் செய்வேனில்லையா? இப்போ ஐம்பதாவது முறையா கொடுத்ததப் பாராட்டி இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க. வச்சுக்கோ என கைகளில் தினித்தாள் மல்லிகா.
அம்மாவின் சேவையையும் பொங்கலுக்கான பணத்தையும் கண்டு தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகளின் கண்ணீரைக் கண்டதும் தன் கண்களிலிருந்து தானாகவே வழிந்த கண்ணீரில் திருப்தியும் அன்பும்  வழிந்தது.


இந்த இருவருக்காக பொங்கலின் விடியலும் காத்துக் கொண்டிருந்தது பெருமையாக!


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப் பேராசிரியர்,
 

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர் கல்லூரி),
 

திண்டல், ஈரோடு.

 

The post புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான்

    கொஞ்சும் குளிர் காற்று தரையில் படர்ந்தது. பறவைகள் விடியல் மகிழ்வில் ஒலி எழுப்பி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.


இரவுப்பொழுதில் ஆட்டோ ஓட்டிய களைப்பில் அல்லாபகஷ் மாமு கண் விழிக்க முடியாமல் காலை பஜர் தொழுகைக்கு எழுந்தார். மாமு எழுந்த அரவம் கேட்டு ஜெய்த்தூன் மாமியும் கண் விழித்தாள்.
 

சுபஹுத் தொழுகையை நிறைவு செய்து மாமு அஸ்ஸலாமு அலைக்கும்….. என்று கூறி வீட்டில் நுழைந்தார். ஏல நல்லா சூடா பால் காய்ச்சி எடுத்துட்டு வா! என்று மாமியிடம் சொன்னதும் மாமி இதோ கொண்டுவருகிறேன் என்று மாமு வரும் முன்பே  பால் காய்ச்ச தொடங்கியவள் ஆவி பறக்க
பால் செம்பினைக் கொடுத்தாள்.
 

ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்தவர் மாமு. சிறுவயதில் மதுரையில் கோரிப்பாளையத்தில்
குடியிருப்பைக் கொண்டவர். ஆதரவற்ற நிலையில் தன் உடன் பிறப்புகளான சகோதரிகளை நம்பி வாழ்க்கை நிலையை  திருச்சிக்கு நகர்த்தினார்.


மாமுக்கு சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டம்.  அல்லல் பட்ட பாடு.ரிக்ஷா ஒட்டுவதிலிருந்து தியேட்டர்ல டீ காப்பி விக்கிறது வரைக்கும் எல்லா வேலையும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நெறஞ்சமனசுசோட செய்தவர் மாமு. மாமுக்கு கோழி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். ஆடு, கோழி, வாத்து என்று ரகரகமாக  வளர்த்தார். மாமு வீட்டில் மீன் குழம்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் விரால் மீன், தேளி மீன் போன்றவற்றை வாங்கி வந்து ஓரிரு நாட்கள்  வளர்த்து அதை குழம்பிற்கு பயன்படுத்துவார். அப்படிப்பட்ட வகையில் இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர். நாச்சுவை கருதி உண்பதில் கெட்டிக்காரர்.
 

வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து கஷ்டத்தை பார்த்து வாழ்ந்த மாமு திருச்சிக்குத் திரும்பினார்.
மாமுவின் அக்கா அவள் தோழி  வீட்டிற்குச் செல்வது வழக்கம். அப்பொழுது அவர்  முதன் முதலாக  ஜெய்தூன் மாமியை ஒரு வேங்கை மரத்தடியில் கண்டதும் இருவருக்கும் காதல் வயப்பட்டது. மாமுவிற்கு வயது 16. மாமிக்கு வயது 14. இப்படிப்பட்ட பருவ காலத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.


காதலில் பல்வேறு தடைகள் வந்தபோதும் மாமு  ஒருபோதும் கைவிடுவதாக இல்லை அப்படிப்பட்ட பலமானதாக இருந்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல். பல சிக்கல்களுக்கு அப்பால் 50 ரூபாய் சீதனமும் ஒரு அண்டா சீரும் கொடுத்து மாமியை திருமணம் செய்து கொடுத்தார் மாமியின் தந்தை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் மாமி. சோளம், கடலை,கம்பு,நெல், வாழை என்று பருவங்களுக்கு ஏற்ப விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவள். மாமியின் தந்தை ஏதோ ஒரு சூழலில் தன் நிலங்களை இழந்து ஏழ்மை நிலைக்கு ஆளானார். உடனே, துவரங்குறிச்சியில் இருந்தவர்கள் திருச்சியை நோக்கி குடிபெயர்ந்தனர்.


இருவரும் வேறு வேறு ஊரைச் சார்ந்துதான் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் கிருபை திருச்சியில் வைத்து இருமனதையும் ஒருமனமாக்கின்னான்.


காலப் பெருவெளி ஓட்டத்தில் மாமிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.  தன்னுடைய அக்கா பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் நினைத்து பாதுகாத்து அரவணைத்து ஒற்றுமையுடன் வளர்த்து வந்தாள் மாமி.


ஒவ்வொரு மகன்களும் ஒவ்வொரு நிலைக்குச் சென்று வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை கடந்து வாழ்ந்து வந்தனர்.
 மாமு மிகவும் துடிப்பானவர். குடிப்பழக்கம் இல்லாத உத்தமர். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். திரையில் வெளியிடப்படும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு திரைப்படத்தை 10 முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பதைப் போல் அனுபவம் கொள்பவர் மாமு.


எத்தனையோ தொழில்கள் செய்து லாப நட்டங்களை அடைந்து பின் ஆட்டோ வாங்கி ஓட்டினார். தினமும் மாமிக்கும் மாமுக்கும் ஒரே அன்பு சண்டைதான் வீட்டில் நடக்கும்.
 ஒருநாள் மாமுக்கு காலை 11 மணியளவில் ஆட்டோ சவாரி வந்தது அலைபேசியில். அவரும் வெளியே கிளம்பத் தயாரானார்.


ஏ மாமு! நில்லுயா!


என்னடி!


ஏய் பால் வாங்க காசு குடுயா!


ஒரு நாளைக்கு எத்தனை தடவைடி கேட்ப?
 

உனக்குத்தான் பால் வாங்குறோம் நாங்களா குடிச்சுக் கொண்டே இருக்குறோம்!


காலையில மதியம் சாயங்காலம் நைட் என 4 நேரம் நீதான் டீ கேக்குற..
 இதுல தயிர் வேற கேட்கிற!


இந்தா ஐம்பது ரூபாய் புடி இன்னு 50 ரூபாய் கொடு!


இல்ல முடியாது 50 ரூபாய் வைத்து எல்லாத்தையும் வாங்கு!


என்று சொல்லிவிட்டு மாமு சவாரிக்கு கிளம்பினார். அன்புச் சண்டைக்குப் பஞ்சமே இல்லை வீட்டில். வீட்டிற்கு வரும் பேரப்பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு தான் இவர்களின் சண்டையைப் பார்த்து. மாமு விற்கு மொத்தம் பத்துப் பேர பிள்ளைகள். அதில் நான்காவது பெயரன் சென்னையில் புகழ் மிகு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். மாமிக்கும் மாமுக்கும் அந்தப்பெயரன் என்றாலே தனிப் பிரியம் தான். சொல்லும் வேலைகளை தட்டாமல் முகம் சுளிக்காமல் செய்வதால் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்.
காலங்கள் ஓட ஓட மாமாவிற்கு எழுபத்தி ஆறு வயதை நெருங்கிக் கொண்டே மூப்பருவம் அடைந்தார். இருப்பினும் மனதில் மட்டும் ஊக்கத்திற்கும் மன உறுதிக்கும் அளவே இல்லை. 76 வயதிலும் ஆட்டோ ஓட்டி தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டார். காப்பாற்றினார். தன் பிள்ளைகளிடம் சென்று காசு கேட்க அவருக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் மாமு. ஒருநாள் காலையில் மாமு தயிர் வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தார். செப்பலை தத்தித்தத்திக் கொண்டு நடந்தார். அவ்வழியே காய்கறி வாங்க வந்த அவரின் நான்காவது பெயரன்  தன் பாட்டியாகிய ஜெய்த்தூன் மாமியிடம் 300 ரூபாய் கொடுத்து நல்ல செருப்பு மாமுவை வாங்கி   போடச்சொல்லு என்று சொல்லி விட்டு அவனும் சென்னைக்குப் புறப்பட்டான்.


15 நாட்கள் கடந்தன. ஒருநாள் திடீரென  மாமுவின் கண்கள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது. மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தில் மாமுவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. நாட்டு மருந்து குடிக்கச் சென்றார். குடித்தும் பயனில்லை. எண்ணைய் தேய்த்துக் குளித்தும் பயனில்லை.  அடுத்த நாள் காலையில் திடீரென மயக்க நிலையை அடைந்து தலையை நிலத்தில் சாய்த்தார்.


“மாமு…..மாமு…. என்னாச்சு  மாமு….. மாமு… என்று மாமி அலறினாள்.


கையில் காசு இல்லாத கடுமையான சூழலில் கூட மாமுவின்  மகன்கள் தனியார் மருத்துவமனையில் வைத்து
மருத்துவம் பார்த்தனர்.


மருத்துவர்களோ இருபத்தி நான்கு மணி நேரம் கழிந்தால் தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கைவிரித்து விட்டனர்.


ஆறு மணி நேரம் சென்ற பிறகு மாமாவிற்கு விழிகள் திறந்தது. இயல்புநிலை அடைந்து வார்த்தைகள் குழறியது. இருப்பினும் ஓரிரு வார்த்தைகளை தெளிவாகவே பேசினார்.


காமாலையின் முதிர்ச்சி என்பது மூளையை அடைந்தது என்பதால் அன்றிரவே மாமு இயற்கை எய்தினார். ஊர் கூடி வீடு அழுதது. எங்கு நோக்கினும் அழுகை சத்தம் தான்.


ராஜநடை கொண்டு இறுதி ஊர்வலம் திருச்சி துருப்பு  பள்ளியில் நல்லடக்கம் செய்தனர்.


மாமு மாமியை காதல் திருமணம் செய்தவர். இவர்களின் அன்பு என்பது ஒரு பரஸ்பரம் கலந்தது. மாமு இறந்த அன்று முதலாக புலம்புவதை நிறுத்தவே இல்லை மாமி.


மாமுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மகன்கள் சிறப்பாக செய்தனர். காலவோட்டத்தில் மாமிக்கு மாமு போனதை நினைத்து உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த நேரமும் அவரின் சிந்தனைதான்.  அவரைப் பற்றியே எந்நேரமும் பேச்சு. உண்ணும் சோறு உடலில் ஒட்டவில்லை. மாமியின் பிள்ளைகள் மாமியை கவனிக்காத கவனிப்பே இல்லை. இருப்பினும் அவள் மனமும் உடைந்து. அவர் இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை.


மாமு இறந்த நான்கே மாதங்களில் உண்ணாது, உறங்காது அவளும் இயற்கை  மரணம் அடைந்தாள்.மாமுவின் குடும்பத்தினர் மனதால் அடையாத துக்கமே இல்லை. ஒரு இழப்பு இருந்த இடத்தில் இரு இழப்பானது.  மாமி  இறந்தப் பின்பு அவளின் கண்கள் மட்டும் மூடாமல் இருந்தது. இமைகள் திறந்து கொண்டே இருந்தது. யாரைக் காணவேண்டும் ஆசை இருந்தது என்று யாராலுமே அறிய முடியவில்லை. மாமிக்கு எப்போதுமே குடும்பத்தில் பிடிவாதம் அதிகம். தன் எந்த ஒரு குழந்தையும் விட்டுத் தரமாட்டாள். தன்னுடைய வீட்டில் மீன் குழம்பு,கறி குழம்பு என்று ஏதேனும் ஒன்று செய்தாலும் கூட நான்கு பிள்ளைகளுக்கும் பங்கு போட்டு அனுப்பிவிடுவாள். இப்படிப்பட்ட பிள்ளை அன்பு கொண்டவள் இந்த மாமி.


மருமகள்மார்களை மகள் போல் அனுசரிக்கும் அன்பு கொண்டவள். இதைப் பார்த்து பொறாமைப்படும் பெண்களோ அத்தெருவில் ஏராளம். குடும்ப உறவுகளை நேசிக்கும் தன்மை கொண்ட மாமியும் மாமாவும் இனி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்சில் கைகோர்ப்பார்கள்.


காலகட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மறுமை நாள் நெருங்கி கொண்டே இருக்கின்றது. அர்ஷின் நிழலைத் தேடி……

சிறுகதையின் ஆசிரியர்

திரு.  மு. முகமது ருக்மான்,


உதவிப்பேராசிரியர்,


முதுகலைத்தமிழ் & ஆய்வுத்துறை,


புதுக்கல்லூரி (தன்னாட்சி ),
சென்னை – 14.

 

The post லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா

       திகாலை 4.30 மணிக்கு அலாரம் அடிக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தவர் போல் எழுந்து அலாரத்தை அணைத்துவிட்டு, நடுங்கும் குளிரிலும் எழுந்து அரிசியை ஊற வைத்துவிட்டு பருப்பை வேக போட்டு, காப்பியுடன் மனைவியை எழுப்புகிறார் வீட்டுத் தலைவர் சரவணன்.
        

            சமையலுக்கு உதவி செய்துவிட்டு,  மனைவிக்கு குளிக்க சுடுநீர் போட்டு கொடுத்து, மதிய உணவை கட்டிக் கொடுத்து 6.10 மணி பேருந்துக்கு வண்டியில் ஏற்றி, பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பி சற்றே அமர்ந்தார். இளைய மகள் இனியாள் எழுந்துவிட்டால் தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு காப்பி தயாராக இருந்தது.
       

            மீதமிருக்கும் பாத்திரத்தை கழுவி விட்டு சற்றே அமர்கையில் இனியாளின் குரல் ‘போலாமா அப்பா? ‘  இனியாளுக்கும் நேரத்துடன் கிளம்புவதற்கும் ஏழாம் பொருத்தம் பேருந்துடன் ஓட்டப்பந்தயம் வைத்து தான் சென்று வருவாள். திரும்பி வந்து சரவணனுக்கும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட தலை சுற்று 10 மணிக்கு மேல் வெயில் வந்துவிடும் தலை சுற்றலுக்கு மருந்தாய் ஒரு காபி குடித்துவிட்டு மனைவி மகளுடைய துணிகளை எடுத்துக் கொண்டு மாடி சென்று துவைக்கிறார்.
          

       அந்நேரத்தில், பக்கத்து வீட்டு சுந்தரம் ‘என்ன சரவணன் வேலையா ?’ சரவணனோ ‘ஆமாம்பா  வெயிலுக்கு முன்னாடி துவைக்கணும்ல  என்று சொல்வதைக் கேட்டு சுந்தரம் , ‘உண்மையில் நல்ல மனுஷன்யா நீ’ சிரித்தபடியே சென்றார். ‘சரியான இளிச்சவாயனா இருக்கான் சரவணன் எனக்கு எல்லா வேலையும் பொட்டச்சி மாதிரி பண்ணிட்டு இருக்கான்’  தன் மனைவியிடம் சொல்ல,  சுந்தரத்தின் மனைவியோ ‘ஆணாதிக்கவாதி’ என்னும் சொல் அறியாதவளாய் ‘ஆமாங்க’ என்று சொல்லி நகர்ந்தாள்.


            சில நேரம் கழித்து நியாயவிலை கடைக்கு சென்றார் சரவணன் ஆளே இல்லாத ஆண் வரிசையில் நின்று பொருள் வாங்கிக் கொண்டு திரும்புகையில், மங்களத்தின் குரல். ‘நல்ல ஆம்பளைக்கு அழகு வேலைக்கு போறதில்லையா?  பொட்டச்சி கணக்கா வரிசையில் நின்னு பொருள் வாங்கிட்டு நிக்கிறான் பாரு ‘  என்று தங்களுக்கென தள்ளப்பட்ட வேலையை செய்தபடியே சொன்னாள்.
       

     சரவணனுக்கு இது எதைப் பற்றிய கவலையும் இல்லை. இன்றா, நேற்றா ? எட்டு வருடங்களாக சமைக்கும்போதும், வாசல் கூட்டும் போதும்,  கடைக்கு செல்லும் போதும், துணி காய வைக்கும் போதும் என எத்தனையோ குரல்கள் அவர் காதுகளுக்கு பரீட்சையம் திருப்பிபப் பேச துளியும் விருப்பமில்லை.
 

    திடீரென்று ஒரு நாள்,  ‘சரவணன் நல்லவன் பா. அவன் தனியான நின்னு இந்த குடும்பத்தையே காப்பாற்றினான்’ என்ற  சுந்தரத்தின் குரல்.
 ‘ பின்ன… மூத்ததை கட்டிக் கொடுத்து , இரண்டாவத படிக்க வைத்து வேலைக்கு சேர்த்து,  பையனையும் படிக்க வைத்திருக்கிறார் என்றால் சும்மாவா..? ‘ என்று மற்றொரு ஆண்.
 ‘இந்த பிள்ளைகளுக்கு மட்டும் ரெண்டு அம்மா, அப்படித்தானே பாத்துக்கிட்டாரு சரவணன் ? ‘ என்று மங்களம்.
 ‘சரவணன் போல ஒரு தகப்பன் இந்த உலகத்துல இருக்கவே முடியாது. இந்த குழந்தைக எல்லாம் புண்ணியம் பண்ண குழந்தைங்க ‘மனதார கூறினாள் ஒரே ஒரு பெண்.
 

     இப்போதும் சரவணனுக்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை அவர்களை எல்லாம் ஏதாவது கேட்டு விட வேண்டும் போல் இருந்தது .
     

       அதற்குள் ஒரு குரல்,  நேரமாச்சு சொல்லிட்டீங்கனா பொனத்தை எடுத்துடலாம்.
  ஆண் தேவதை செல்லும் நேரம் வந்துவிட்டது.


சிறுகதையின் ஆசிரியர்

ச.அபர்ணா,


உதவிப் பேராசிரியை,


KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி,


அரசூர்.

 

The post ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

கடைக்குட்டி|சிறுகதை|முனைவர் சு.சோமசுந்தரி

      காலை வெயில் தலையில் சுள்ளென்று விழும் பொழுதில் அக்காக்குருவிகளின் அக்கூவ் என்ற சத்தம் காதுகளில் ரீங்காரமிட்டது. கார்த்திக் சன்னமான கோபத்துடன்  அம்மாவிடம் கத்திக்கொண்டிருந்தான்.

“ஏம்மா என்னம்மா சமையல் பண்ணியிருக்க. சாம்பாருக்குப் போய் தொட்டுக்க கூட்டு வச்சிருக்க. இத யாரு தின்பா? நாய் கூடத் திங்காது இந்தச் சோத்த. எத்தனை தடவ சொல்லிருக்கேன் நான். சாம்பார் வச்சா பொறியல் ஏதாவது வையின்னு”

“டேய் இருக்கத தானடா வைக்கமுடியும். துரை அப்படியே சம்பாத்தியம் பண்ணி போட்டு முடிச்சிட்ட. உனக்கு வகைவகையாய் வச்சுக்குடுக்கணும் பாரு. பொங்குனது தின்னுடா”

“எனக்கு ஒண்ணும் வேணாம். நீயே கொட்டிக்க” என்று மூஞ்சியை வலித்துவிட்டுச் சென்ற கார்த்திக்குக்கு வயது இருபதாகிறது. இளங்கன்று பயமறியாது என்று பெரியவர்கள் சொல்லுவதற்கேற்ப பர்வதம் அம்மாளுக்கு மத்த எல்லாப்பிள்ளைகளையும் சமாளித்து விடுவாள். ஆனால் இந்தக் கார்த்தியைச் சமாளிப்பது பெரும்பாடுதான். அவன் இஷ்டத்துக்குச் சமைக்கவேண்டும், கேட்கும்போது காசு கொடுக்கவேண்டும். இல்லையென்றால் கோபத்தில் வீட்டிலிலுள்ள பொருள்களைப் போட்டு உடைப்பான். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து, அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு,

“அம்மா சாரிம்மா. நீ ஏன் எனக்குப் பிடிச்சதைச் சமைக்கமாட்டேன்கிற. சமைச்சிருந்தா நான் சாப்பிட்டுருப்பேல்ல”

என்று அம்மாவைச் சமாதானப்படுத்திக் கொஞ்சுவான். அவளும் உச்சிகுளிர்ந்து போவாள். அவன் செய்த சேட்டைகள் மறந்துபோகும். அவளும்,

“என் ராசா. நாளைக்கு நீ கேட்டதையே சமைக்கிறேன்டா” என்று பதிலுக்குக் கொஞ்சவும், அதைப் பார்த்த அவன் தங்கை வான்மதிக்கு எரியும்.

“அவன் என்ன பண்ணாலும். ஒன்னும் சொல்லாத. என்னைய மட்டும் திட்டு. ஒரு நாளைக்குப் பெரிசா ஏதாவது பண்ணிட்டு வந்து நிப்பான். அப்ப பாக்குறேன். என்ன பண்றன்னு”
என்று திட்டுவாள். அம்மாவும் மகனும் அதைக் கண்டுகொள்வதே இல்லை.

“போடி பெரிய இவ பாரு. பொறாமை புடிச்சவ” என்று திட்டுவான்.

இப்படித்தான் கார்த்திக்கும் அவன் அம்மாவுக்குமான கொஞ்சல்கள் தொடர்கதையாகிப் போயின. மற்ற இவனது அண்ணன்களுக்கும் தங்கைக்கும் இவர்களது குணம் தெரிந்து கண்டுகொள்ளமாட்டார்கள். இவன் சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும் தொடர்கதையாகிப் போனது. கார்த்திக் மற்ற பிள்ளைகளை விட புத்திசாலி. ஆனால் படிக்கவைக்க சரியான வசதியில்லை. இருந்தும் டிப்ளமோ சேர்ந்து தொழில்கல்வியைக் கற்றிருந்தான். தனது தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கு நிறைய நண்பர்களும் இருந்தனர். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் போய் நிற்பான். இதனால் எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். ஆண், பெண் பாகுபாடின்றி அக்கா, தங்கையாக பழகுவான். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தான் நினைத்ததைச் சாதிக்க நினைப்பான். அது சரியான விசயமாகத்தான் இருக்கும். அந்தப் பிடிவாதம்தான் எல்லா முயற்சியிலும் வெற்றி பெறவும் வைத்தது. வீட்டின் கடைக்குட்டியாக இருந்ததால் அம்மாவுக்கு கார்த்திக் என்றால் உயிர்தான். எவ்வளவு சண்டை போட்டாலும் அம்மாவைச் சமாதானம் பண்ணி அவள் கையாலேயே சோறு ஊட்ட வைத்துவிடுவான். மற்றவர்கள் செய்கின்ற சேட்டைகளை மன்னிக்காத அம்மா, இவன் என்ன செய்தாலும் சமாதானமாகிக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவாள். ஏனென்றால் கார்த்திக் மீது அம்மாவுக்குக் கொள்ளை பிரியம்.

ஒரு நாள் அதிகாலையிலேயே கார்த்திக்கின் நண்பன் வீட்டிற்கு வந்தான்.

“டேய் கார்த்திக் அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலடா. உன் கையில காசு இருக்குமா? இல்ல யார்கிட்டயாவது வாங்கித்தர முடியுமா? என்றான். உடனே பதறிப்போன கார்த்திக்,

“இருடா. பார்க்கிறேன்” என்று வீட்டிற்குள் சென்றவன்,

“அம்மா ஏதாவது காசு வச்சுருக்கியா. சுரேஷ் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலையாம். பாவம்மா” என்றவனிடம்,

“என் கிட்ட ஏதுடா காசு. போய் உன் அண்ணன்கள்ட்ட கேளு” என்றாள்.

உள்ளே சென்று அண்ணனிடம் கெஞ்சிக்கூத்தாடி அவனிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைப் பிடுங்கி தனது நண்பனிடம் கொடுத்து அனுப்பினான். இந்த உதவும் குணத்துக்காகவே கார்த்திக்கைக் கொண்டாடுவார்கள் நண்பர்கள். ஆறு மாதத்திற்குப் பின் தீவிரமான முயற்சியில் கார்த்திக்கு நல்ல வேலையொன்று சென்னையில் அமைந்தது. அம்மாவையும் நண்பர்களையும் பிரிந்து சென்னைக்கு சென்றான். கைநிறைய சம்பளத்துடன் அந்த வேலையும் கார்த்திக்குப் பிடித்துப்போனது. முதல் மாத சம்பளத்திலேயே அம்மாவுக்கு டிரெஸ், அண்ணன் குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான் என வாங்கிக் கொண்டுபோய் பார்த்துவிட்டு வந்தான். அம்மாவுக்கு மனம் மகிழ்ந்தாலும் கார்த்திக்கை பிரிந்திருப்பது மிகுந்த வேதனையைத் தந்தது. இரண்டு ஆண்டுகளில் பர்வதம் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள். கார்த்திக்கிற்கு அம்மாவின் இறப்பு மிகுந்த வேதனையைத் தந்தது. அதிலிருந்து மீண்டுவரவே ஒரு வருடம் ஆனது. கார்த்திக்கு திருமணம் செய்யவேண்டும் என அண்ணன்கள் முடிவுசெய்தனர். அவன் பெரியப்பா மகள் ஜெயசுதா அக்காவிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கார்த்திக்கு அவள் பார்ப்பது பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான்.

மறுவாரமே ஒரு வரன் அமைந்திருப்பதாகவும் பொண்ணு பார்க்க கார்த்திக்கை வரச்சொல்லி போன் செய்தார்கள். கார்த்திக் கருப்பு நிறம்தான் என்றாலும் களையான முகத்தை உடையவன். பெண்ணைப் போய் பார்த்த கார்த்திக்கிற்கு பெண்ணைப் பிடிக்கவில்லை. அதைத் தனது அக்காவிடம் கூறினான். பெண் மிகச்சுமாராக இருந்தாள். அவளுக்கு மூன்று தங்கைகள் வேறு.

“பெண் சுமாராக இருந்தாலும் நல்ல குடும்பம்டா. பெண்ணுக்கு என்ன குறைச்சல்? நீயும் கறுப்பாகத்தானே இருக்கிறாய்?” என மட்டம் தட்டினாள் ஜெயசுதா அக்கா.

கார்த்திக்கிற்கு என்னதான் இருந்தாலும் தன் தாய் உயிரோடு இருந்திருந்தாலோ, தனது உடன்பிறப்புகள் என்றாலோ தனது எண்ணங்களுக்கு மதிப்பளித்திருப்பர். இவள் அடுத்தவள்தானே? அதனால்தான் தனது கருத்தையே வலியுறுத்துகிறாள் என்று எண்ணினான். எனவே,

“அக்கா இப்போதைக்கு எனக்குத் திருமணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்கா” என்றான்.

“சரி நீ ஊருக்குப் போ. பார்ப்போம்” என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஜெயா. இருப்பினும் கொஞ்ச நாள் கழித்து இவனிடம் பேசிப்பார்ப்போம் என மனதில் எண்ணிக் கொண்டாள். அவள் ஒன்று நினைத்தால் அதை நடத்திக்காட்டவேண்டும் என்ற பிடிவாதம் அவளிடம் உண்டு.

கார்த்திக்கின் வீட்டிலோ அம்மா இறந்தபிறகு அவனைப் பற்றிக் கவலைப்பட ஆளில்லாமல் போனது. அண்ணன்களுக்கு அவர்கள் குடும்பமும் தங்கைக்கு அவள் குடும்பம் பற்றியே சிந்திக்கவும் நேரம் போதவில்லை. இதில் அவன் விருப்பமறிந்து செயல்படுவதற்கு ஏது நேரம் என நினைத்துக் கொண்டனர். அவன் பெண்ணைப் பிடிக்கவில்லை எனச் சொன்னபோது,

“வேறு பெண் அமையுதா என்று பார்ப்போம்டா” என்று சொன்னதோடு அண்ணன் தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணினார். ஆறு மாத காலத்திற்குப் பின் ஜெயசுதா அக்கா ஏற்கனவே பார்த்த சுப்புலட்சுமியை முடிப்போம் எனச் சொன்னபோது, கார்த்திக் வேண்டாம் எனத் தடுத்தும் அண்ணன்,

“வயது ஏறிக்கொண்டே போகுதடா. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்ப. எங்க கடமைய நாங்க முடிக்கணுமில்ல. அம்மாவும் உயிரோடு இல்ல” என்றார். வேறு வழியில்லாமல் அண்ணனின் பேச்சுக்கு மதிப்பளித்து ஒரு நல்ல நாளில் சுப்புலட்சுமியைக் கரம்பிடித்தான் கார்த்திக். உறவுகளை விட ஏராளமான நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்துகொண்டான் கார்த்திக்.

அவன் ஆரம்ப காலத் திருமணவாழ்க்கை கொஞ்சம் சிரமப்படாமல் கழிந்தது. சுப்புலட்சுமியின் குடும்பத்தாரும் அவனிடம் பாசமாகவே இருந்தனர். ஆனால் சுப்புலட்சுமியின் குணம்தான் அவனுக்குப் பிடிபடாமல் போனது. திருமணத்திற்குப் பின் கார்த்திக் தனது அண்ணன்களுக்கோ, அவர்கள் பிள்ளைகளுக்கோ எதுவும் செய்யவிடாமல் சண்டைபோட்டாள். தனது நண்பர்கள் யாருக்கேனும் பணஉதவி செய்தாலும் அன்று சண்டைதான். நாளுக்கு நாள் சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைபோடும் சுப்புலட்சுமியின் போக்கு கார்த்திக்கிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் நிமிடத்துக்கு ஒரு சண்டை. என்னடா வாழ்க்கை இது என வெறுத்துப்போனான் கார்த்திக். இதற்கிடையில் ஓராண்டில் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தையின் மீதிருந்த பாசத்தாலும் சுப்புலட்சுமிக்குக் கீழ் மூன்று தங்கைகள் இருந்ததாலும் அவளைப் பெற்றவர்கள் வீட்டிற்கு அனுப்பவும் இயலாது போராடித் தோற்றான் கார்த்திக். நாளுக்கு நாள் சுப்புலட்சுமியின் பிடிவாதம் வலுத்துக் கொண்டே போனது.

அவனுக்குச் சோறு போட்ட அண்ணிகள் கூட,“ என்ன கொழுந்தனாரே ஒரு நாள்கூட உங்கள் வீட்டிற்குக் கூப்பிடமாட்டீங்களா?” என்று கேட்கும்போது தனது மனைவியின் குணமறிந்து கூப்பிடமுடியாமல் உள்ளுக்குள் புழுங்கிப் போனான் கார்த்திக். இயல்பிலேயே எல்லோரிடமும் பாசம் காட்டும் கார்த்திக்கின் உள்ளம் குறுகிப்போனது.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் கார்த்திக்கின் அண்ணனுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. பிரித்துப் படித்தவர் மயக்கம் போடாத குறைதான்.

“டேய் என் தங்கமே ஏண்டா இப்படிப் பண்ண” என்று கதறிய அண்ணனின் குரலில் அண்ணியும் கார்த்திக் இறந்துபோனான் என்ற தந்திச் செய்தியைக் கேட்டுக் கதறினாள். வீட்டின் கடைக்குட்டி செல்லமாய் வளர்ந்த கார்த்திக் திருமணமான நான்கு ஆண்டுகளில் தனது வாழ்வை முடித்துக்கொண்டான். இறப்பிற்குப் போய் வந்த குடும்பத்தார் அவன் எப்படி இறந்தான்? என விசாரித்தனர். நீண்ட நாளைக்குப் பிறகு ஒருவரும் அறியாமல் சென்னை சென்ற அண்ணன், தன் தம்பி தனது மனைவியின் கொடுமை தாங்காது விஸ்கியில் விசம்கலந்து குடித்து இறந்தான் என்ற செய்தியில் துடித்துப்போனார். அம்மா போன பிறகு, தான் பார்த்து தம்பிக்கு வாழ்க்கை அமைத்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என மறுகினார். துடித்துப் போனது அவர் மட்டுமல்ல நிம்மதியிழந்த கார்த்திக்கின் ஆன்மாவும்தான்.

சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் சு.சோமசுந்தரி,

புனைபெயர் : மதியழகி

ஆய்வறிஞர்,
உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை.

 

The post கடைக்குட்டி|சிறுகதை|முனைவர் சு.சோமசுந்தரி appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

கரை சேரா கப்பல்|முனைவர் த. தினேஷ்

      திருமணமான கையோடு எல்லா பெண்களையும் போல பல்வேறு கனவுகளுடன் மகிழ்ச்சியாத் தன் வாழ்க்கையை நகர்த்தப் புகுந்தவீட்டில் அடியை எடுத்து வைத்தாள் கலா. பெற்றோர்களின் கட்டாயத்தாலும் ஏழ்மையின் காரணத்தாலும் தனக்குப் பிடிக்காத; வயதில் மூத்தவரை நிர்ப்பந்தத்தின் பேரில்  திருமணம் செய்து கொண்டு மெல்ல தன் வாழ்க்கையை நடத்தத் தொடங்கினாள் கலா. ஆரம்பம் முதலே கசப்பான வாழ்வினை தொடங்கிய அவளுக்குக் கடைசிவரை அது கசப்பாகவே நீண்டது.

          முனைவர். த. தினேஷ்ஆமை போல் நாட்கள் மெல்ல நகர்ந்தது, கலாவின் கணவனின் உடல்நிலையில் பல்வேறு  மாற்றங்கள் நிகழ்ந்தன. பிறகுதான் தெரிந்தது ஒரு புற்றுநோயாளிக்குத்தான் வாக்கப்பட்டுள்ளோம் என்று.  தனது இயலாமை மற்றும் வறுமையின் காரணமாகத்தான் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை எண்ணி ஒவ்வொரு நாளும் மனம் வெதும்பினாள். சமூக திருப்திக்காக இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்.  கலாவின் கணவர் திடீரென ஒருநாள்  கடுமையான நோய்த்தாக்கத்தினால் அவதிப்பட்டு வலி தாங்காமல் உயிரிழந்தார்.  இருபத்தி மூன்று வயதைக் கடப்பதற்குள் விதவைக் கோலம் பூண்ட  கலாவின் நிலையைக் கண்ட அவளது தாய் மரகதமும் மன அழுத்தத்தால்  ஓரிரு மாதங்களில் கலாவை விட்டுப் பிரிந்தார். 
         
           தனது மாமனார் மாமியாரின் கடுமையான அரவணைப்பில் வளர்ந்துவந்த  கலா  காட்டிற்குச்  சென்று சுள்ளி விறகைப் பொறுக்கியும் கடைகளுக்குப் பூக்களைக் கட்டிக் கொடுத்தும் தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்தாள்.  தன் இரு பிள்ளைகளையும் கரைசேர்க்க வழி அறியாது துடித்துக் கொண்டு இருந்தாள்.  ஒரு காலத்தின் அவ்வூரின் முன்சீப்பாக இருந்த கலாவின் மாமனார் ஆறுமுகம் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு  வந்து கலாவை அண்டை வீட்டாருடன்  தவறாக இணைத்துப் பேசி சண்டைபோட்டுக் கொண்டே இருந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவளது பொறுப்பற்ற மாமியாரும் தன் பங்கிற்குக் கணவனுடன் இணைந்து கலாவை நோகடித்துக் கொண்டே இருந்தாள். என்ன செய்யக்  கணவனையும் தாயையும் இழந்து ஆதரவின்றி தவித்த கலாவின் வாழ்க்கை இப்படியே கிடுக்குப்பிடியாகச் சென்று கொண்டிருக்க  மற்றொரு புறம் தன் கணவனின் சகோதரர்கள் இவளது சொத்துக்களை அபகரித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பத் திட்டம் போடுகின்றனர்.

        இதனை அறிந்த கலாவின் மாமனார் தன் இளைய குமாரர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக அவர்களைக் கண்டிக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரின் இருமகன்களும் ஒருகட்டத்தில் தனது தந்தையான ஆறுமுகத்தை ஊரின் பொது முற்றத்தில் வைத்துத் தாக்கிவிடுகின்றனர்.  ஊர் மக்கள் முன் பெரிதும் அவமானம் அடைந்த ஆறுமுகம் அந்த மனவருத்திலேயே சிறிது நாளில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். கணவர் இறந்த சோகத்திலிருந்து மீளாத கலாவின் மாமியாரும் அடுத்த மாதத்திலேயே இறந்துவிடுகிறார். தன்  இருபிள்ளைகளுடன் இந்த சமுதாயத்தில் கலா நிர்க்கதி ஆக்கப்படுகிறாள்.   முன்னமே ஏற்பட்ட சொத்து தகறாரில் இவளது உறவினர்களும் இவளை ஏற்க மறுக்கின்றனர். பிறந்தது முதல் தன் வாழ்வின் கடைசிக் காலம் வரை மகிழ்ச்சி என்றால் என்னவென்றே அறியாதவள் இவள். தன் வாழ்வின் அனைத்து சுகதுக்கங்களையும் 25 வயதிற்குள் உணர்ந்தவள் இவள். இருப்பினும் தன்னம்பிக்கை எனும் கைத்தடியுடன் தன்  இரு பிள்ளைகளுக்காக நடைப்பிணமாக வாழ்வை மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தாள் தினமும் அரை வயிற்றுக் கஞ்சியோடு கரை சேராது தத்தளிக்கும் கப்பலைப் போல்..,

சிறுகதையின் ஆசிரியர்
முனைவர். த. தினேஷ்

தமிழ் உதவிப் பேராசிரியர்

வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திண்டல், ஈரோடு


 

The post கரை சேரா கப்பல்|முனைவர் த. தினேஷ் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

தித்திக்கும் தீபாவளி! தத்தளிக்கும் தீபாவளி|இரா.சுபாஷினி

       ன்று தீபாவளி, காலை விடியலில் காரிருளை, இளஞ்சூரியன் கதிர்களை வீசி கண்களைக் கூச செய்தான். எல்லா திசைகளில் இருந்தும் இடி முழக்கம் போன்ற பட்டாசு சத்தம் அதனிடையே அம்மாவின் குரல் எப்போதும் போல, தித்திக்கும் தீபாவளியிலும் திட்டிக்கொண்டே என்னையும் தம்பியையும் எழுப்பினாள். ’எந்திரிங்க மணி 6 ஆச்சி  இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க, சீக்கிரம் எந்திரிங்க சாமி கும்பிடணும்.’ என அம்மா திட்ட  எங்களுக்கு அது இசைஞானியின் தாலாட்டுப் போல இன்னும் தூக்கம் சொக்கிக் கொண்டு வந்தது.
         

        எப்போதும் இப்படிதான், ஒரு முறை அம்மா ஊருக்கு சென்று இருந்தாள்.  ஏதோ அவள் அண்ணன் மகனின் கல்யாணம் என்று நினைக்கிறேன். அன்று எப்போதும் 6 மணிக்கு மேல் எந்திருக்கும் நான் 4 மணிக்கே எந்திரித்து விட்டேன். எல்லாம் அவள் திட்டுகின்ற தாலாட்டு இல்லாமல்தான். சரி அப்பா என்ன செய்கிறார் என்று எந்திரித்து பார்த்தேன். அப்பா, அம்மா தந்த காபியைக் குடித்துக்கொண்டே செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார். மெதுவாக நானும் தம்பியும் எந்திரித்து எண்ணெய் வைத்து குளித்துவிட்டு. மிகவும் ஆசையுடன் வாங்கிய புத்தாடையை அணிந்து கொண்டு. தீபாவளி நாளில் எங்களுக்கு பிடித்த இனிப்பு செய்ய இருவரும் அம்மாவிற்கு உதவி செய்தோம்.
 

       அப்பா பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். நான் அப்பாவிற்கு உதவி செய்வதாகக்  கூறி இனிப்பு செய்யும் வேலையில் இருந்து தப்பித்து அவர் அருகே அமர்ந்து கொண்டேன். தம்பி, நீண்ட நேரம் அப்பா தீபாவளிக்காக வாங்கி வந்த பொருட்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அதில் குறிப்பாக தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அவன் அழுது அடம்பிடித்து வாங்கிய பட்டாசு பெட்டியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக தெரிந்தது. அம்மா! நான் போய் பட்டாசு வெடிக்கட்டுமா?’ என்று கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். சாமி கும்பிட்ட பிறகு வெடிக்கலா முதல்ல  இருக்கிற வேலையை செய்  என அம்மா கோவமாக பேசினாள். அம்மாவின் கோபத்தை பார்த்ததும். வேலை முடிந்தால் பட்டாசு வெடிக்காலம் என எண்ணி வாடிய முகத்துடன் விரைந்து  அம்மாவிற்கு உதவிகள் செய்ய விழைந்தான்.
         

       பட்டாசு வெடிக்க என்னலாம் செய்கிறான், பாருங்க! என தம்பியை கேலி செய்து கொண்டே நானும் அப்பாவும் பூஜைக்கு தேவையான வேலைகளை செய்தோம். அப்பா சிறுவயதில் இருக்கும்போது தீபாவளி நாளிற்காக  காத்திருந்த அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து தீபாவளி நாளை எண்ணிக்கொண்டு புத்தாடைகளை எடுத்துக்கொண்டு விடிய விடிய கால் கடுக்க டெய்லர் கடையின் முன் நின்று தைத்து அணியும் ஆனந்தம் இன்று இல்லாமல் போனது.  இன்று நாம் நினைத்தால் நினைத்த நேரம் காரணம் இல்லாமல் புத்தாடை எடுக்கிறோம். பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட புலனத்தின்(Whatsapp) வழியாகவே வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அன்று கொண்டாட்ட நாட்களில் மட்டுமே இட்லி சாப்பிட முடியும் என தந்தை கூறியதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
         

        இன்று நவீனத்துவம் பெருகி உள்ளது. இட்லி தினந்தோறும் நம் காலை உணவாக உள்ளது. இது இந்த தலைமுறைக்கு சாபமா? சந்தோஷமா? என தெரியவில்லை என்று அப்பா கூறிக் கொண்டிருந்தார். திடீரென  தம்பியின் முணுகள் சத்தம் கேட்டது. இல்லை, அது அவனது புலம்பல். நானும் அப்பாவும் அவன் புலம்பலை கவனித்தோம். ‘என்ன  பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புங்க, நானே பட்டாசு செஞ்சு வெடிச்சிக்கீறே’ நான் மட்டும் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு போயிருந்தா எனக்கு எவ்வளவு பட்டாசு கிடைச்சிருக்கும். பள்ளிக்கு செல்ல வேண்டாம். வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம். எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று முணங்கி கொண்டிருந்தான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அப்பா ஒன்றும் சொல்ல இயலாமல் மௌனமாக இருந்தார். அவன் சிந்தனை சரிதானா என சிந்திக்கத் தொடங்கினேன். பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுவர்கள் ஒருபோதும் பட்டாசு வெடிப்பதில்லை என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவன் இவ்வாறு பேசி இருக்க மாட்டான். பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டு, நண்பர்களுடன் விளையாடும் பாக்கியம் ஒருபோதும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் அவன் அறிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் இனிப்புகளுடன் பூஜை முடிந்தது. தம்பியின் முகத்தில் அத்தனை ஆனந்தம். ஒரு மாத காலமாக அவன் காத்திருந்த கனவு நினைவாக போகிறது.
           

        இதோ பட்டாசு பெட்டியை எடுத்துக்கொண்டு தெரு பக்கம் ஓடினான்.  அப்பா மீண்டும் தொடங்கினார்.தம்பி  ஆசையாக வாங்கிய பட்டாசுகளை  வெடிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு பட்டாசு வெடிக்கும் போதும் அவன் முகத்தில் அத்தனை ஆனந்தம். உலகத்தில் உள்ள மொத்த ஆனந்தத்தையும் ஒன்றாக பெற்றவனை போல குதூகலமாக இருந்தான். கிருஷ்ண பகவான் நரகாசுரனை கொன்ற போது மக்களும் தேவர்களும் அடைந்த ஆனந்தத்தை விட பன் மடங்கு ஆனந்தத்தை பட்டாசு வெடிக்கும்போது பெற்றிருந்தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது? எப்பொழுதில் இருந்து கொண்டாடப்படுகிறது? சிலர் கிருஷ்ண பகவான் நரகாசுரனை கொன்றதால் தீபாவளி பண்டிகை தோன்றியது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் விஷ்ணு பகவான், ராம அவதாரத்தில் சீதையைத் தூக்கி சென்ற ராவணனை கொன்றதால் தீபாவளி பண்டிகை தோன்றியது எனக் கூறுகின்றனர்.
         

       இவ்வாறு ராம அவதாரத்தில் தான் தீபாவளி பண்டிகை தோன்றியது என்பதனை நிறுவுவதற்காக வால்மீகி ராமாயணத்தின் குறிப்புகளை சான்றாக காட்டுகின்றனர். இதில் எது உண்மை, இதில் நாம் எதை ஏற்றுக் கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் தம்பியின் அழுகுரல் கேட்டு எல்லோரும் தெருவிற்கு சென்று பார்த்தோம்.   கையில் தீக்காயம் ஏற்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தான். அப்பா,  தம்பிக்கு முதலுதவி செய்தார். அம்மா தம்பியை அணைத்து கொண்டு அழுதாள். திடீரென தம்பியை திட்ட ஆரம்பித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அடிக்கடி என் அம்மா இவ்வாறு நடந்து கொள்வது உண்டு. ஒரு நாள் அப்பா இப்படி தான்,  ‘ஆபீசுக்கு  நேரமாச்சு  நா  ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்’ என்று வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். மறுநாள் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்தவரை  அம்மா மருத்துவரிடம் கூட்டி சென்றார். பின் வீட்டிற்கு வந்ததும்  ‘நேத்தே சொன்னேன் ஹோட்டல்ல எல்லாம் சாப்பிட வேண்டாம்னு கேட்டீங்களா‘ இப்போ பாருங்க வயிறு வலிக்குதுனு கஷ்டப்பட்டு  இருக்கீங்க என அப்பாவை திட்ட தொடங்கினாள். அன்பின் உருவமாய் சில நொடி, அடுத்த நொடியே அக்கறையின் வடிவமகிறாள் அம்மா. தம்பி, அம்மா திட்டியதால் மேலும் அழுதான். ‘இங்க தானே இருந்தீங்க, குழந்தையை பத்திரமா பாத்துக்க மாட்டீங்களா. நீங்க இருக்கீங்கனு  தானே நான் உள்ள இருக்கிற வேலையை பார்க்க போனேன்‘ என அனல் வாதத்தை அப்பாவை நோக்கி திருப்பினாள் அம்மா.
         

     இத்தனை நேரம் மௌனமாக இருந்த அப்பா  டிவில புதுப்படம் பாக்குறது முக்கியமான வேலையா? என வினாவினார். உடனே அம்மா  விடையாக அப்பாவின் மௌனம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார். தம்பி சிறிது நேரம் பட்டாசு வெடிப்பதை வெறுத்தான் முழுமையாக அல்ல. இரவு தூங்கப்போகும் வரை ஊதுவத்தியால் ஏற்பட்ட காயத்தை ஊதிக்கொண்டே இருந்தான். இரவெல்லாம் பட்டாசு வெடிக்கும் இரைச்சல் சத்தம். இவ்வாறு தித்திக்கும் தீபாவளியானது எங்கள் வீட்டில் தீக்காயத்துடன்  நிறைவடைந்தது. மறுநாள் காலை விடியல் 9 மணி வரை புகை மூட்டமாக காணப்பட்டது. செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அப்பா  சோகமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். என்ன சோகமா இருக்கீங்க? காபில சக்கரை இல்லையா? எனக்கேட்ட அம்மாவிடம் செய்தித்தாளை  காட்டி  அப்பா சொல்லத் தொடங்கினார். நேற்று நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பலர் தீக்காயம் அடைந்துள்ளனர்.
         

       குடிசை வீட்டில் இருந்த பலர்  இருப்பிடத்தை இழந்துள்ளனர். பட்டாசு வெடித்ததில் பறவைகளும் பாதிப்படைந்துள்ளன என அப்பா வருத்தத்துடன் கூறினார். உடனே அம்மா தீபாவளி பண்டிகை கொண்டாடவே கூடாதுனு சொல்றீங்களா? இல்ல(லை) இல்ல தீபாவளி பண்டிகையே வேணாம்னு சொல்லல ஆயிரம், இரண்டாயிரம்னு காசு செலவு பண்ணி பட்டாசு வாங்குறோம். அதனால யாருக்காச்சும் ஏதாவது ஒரு நன்மை இருக்கா? என அப்பா கேட்டு முடித்ததும். படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து சென்ற தம்பி அப்பாவிடம் பட்டாசு வெடிப்பதால் நம் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பறவைகள் எல்லாம் பாதிப்படைகின்றனர். பலர் தீக்காயம் அடைகின்றனர். ஒரு நாள் பட்டாசு வெடித்த எனக்கே காயம் ஏற்பட்டதே என சோகமாக கூறினான். ஒரு நாள் ஆசையாக பட்டாசு வெடித்த தம்பிக்கு தீக்காயம் ஏற்பட்டதே அதே போல பட்டாசு தொழிற்சாலையில் தினம்தோறும் என் தம்பியைப் போன்ற சிறுவர்களுக்கு எத்தனை காயங்கள் ஏற்பட்டிருக்கும். எத்தனை வெடி விபத்துகளை அவர்கள் சந்தித்து இருப்பார்கள்  பசி காரணமாகவும், குடும்ப சூழல் காரணமாகவும் குழந்தைகள் நாளெல்லாம் தன் சந்தோஷத்தை மறந்து, சுதந்திரத்தை இழந்து, உயிரை பணையம் வைத்து பணியாற்றுகின்றனர் என சிந்தனையில் ஆழ்ந்து இருந்த என்னை அப்பாவின் குரல் தட்டி எழுப்பியது.
         

      பலர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் வாழ்வை தொலைத்து விடுகின்றனர். அவர்கள் தீபாவளியின் போது புத்தாடை அணிவதில்லை, பட்டாசுகள் வெடிப்பதில்லை, இனிப்புகள் சாப்பிடுவதில்லை  என அப்பா கூறியதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் ஒரு உலகம் நமக்கு தெரியாமல் இருக்கிறதா? அதில் நம்மைப் போன்ற மக்கள் இன்னல்கள் பல அனுபவிக்கின்றானரா? என தம்பியும் கேட்டுக் கொண்டிருந்தான். அப்பா சொல்லி முடித்த உடனே தம்பி சொன்னான் அடுத்த தீபாவளிக்கு நாம் பட்டாசுகளை வாங்க வேண்டாம். வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம், மேலும் தம்பி தொடர்ந்தான். பட்டாசு வெடிப்பதால் காயம் ஏற்படுகிறது. பறவைகள் பாதிப்படைகின்றன. எனவே இனி பட்டாசு வாங்கும் பணத்தில் இனிப்பு, புத்தாடை  வாங்கி ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்றான். இவ்ளோ மக்கள் கஷ்டப்படுறாங்களே இந்த அரசாங்கம் பட்டாசு வெடிப்பதை தடை செஞ்சா என்ன? என வில்லம்பை போல அப்பாவை நோக்கி அம்மாவின் கேள்வி வந்து கொண்டிருந்தது. நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் வருடந்தோறும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமே அந்த காரணத்தினால் தான் அரசு பட்டாசு தொழிற்சாலைகளின் வளர்ச்சியை தடை செய்யாமல் இருக்கிறது. அரசாங்கம் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பட்டாசு தொழிற்சாலைக்கான விழிப்புணர்வு முகாம்கள், மக்கள் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், பட்டாசு வெடிப்பதற்கான நேரம் போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செய்து வருகிறது.  எல்லா தொழிற்சாலைகளிலும் இயந்திரங்களின் உதவியுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.ஆனால் இன்றும் கூட பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்கள் வெடி மருந்துகளை கைகளாலேயே எடுத்து பட்டாசுகளை தயாரிக்கின்றனர். இது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். எத்தனை குழந்தைகள் தனது அப்பா அம்மாவை வெடி விபத்தில் இழந்திருப்பார்கள். எத்தனை பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை இழந்திருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதம் என்பதே இல்லாமல் நம் ஒருநாள் சந்தோஷத்திற்காக தினந்தோறும் அவர்கள் தங்கள் சந்தோஷத்தை இழக்கின்றனர்.
         

          இவ்வாறு அப்பா கூறிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது. காரணம் அவர் வெடிவிபத்தில் உயிர் இழந்த பெற்றோர்களின் செல்லப்பிள்ளை என்பதே. அன்று, முதல் முதலில் உணர்ந்தோம் தித்திக்கும் தீபாவளி பலருக்கு தத்தளிக்கும் தீபாவளியாக உள்ளதை. இனி தத்தளிக்கும் மக்களின் தீபாவளியை தித்திக்க செய்ய வருடந்தோறும்  நாம் ஒரு நாள் சந்தோஷத்திற்காக பாடுபடும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் மக்களுக்கு புத்தாடை, இனிப்பு வகைகள், நம்மால் முடிந்த அளவு நிதி உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம்.


சிறுகதையின் ஆசிரியர்

இரா.சுபாஷினி MA.,NET

உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகம்,

காஞ்சிபுரம் – 631 501.

 

The post தித்திக்கும் தீபாவளி! தத்தளிக்கும் தீபாவளி|இரா.சுபாஷினி appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

❌