Normal view

Received before yesterday

இலட்சியவாதிகள் இன்று எங்கே?

23 February 2025 at 08:09

காந்திகளிடமிருந்து ஒரு விருது

அன்புள்ள ஜெ,

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் கையால் நீங்கள் விருது பெறும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு இணையச் சூழலில் அடிக்கடி காதில் விழும் சொற்றொடர் ஒன்று உண்டு. அந்தக்காலத்தில் மாபெரும் தியாகவாழ்க்கை வாழ்ந்த ஆளுமைகள் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது இல்லை, இனிமேல் வரவே போவதில்லை, வாய்ப்பே இல்லை என்றெல்லாம் எழுதுகிறார்கள். இலட்சியவாதமே இல்லை என்று சொல்வது ஒரு பெரிய வழக்கமாகவே உள்ளது. ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக ஓர் இலட்சியவாத உலகையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று இருக்கிறார்களா?

ராஜி சாம்பசிவம்

அன்புள்ள ராஜி,

இந்தப் பேச்சை முன்வைப்பவர்கள் எவர் என்பதே முக்கியம். அவர்கள் உண்மையில் இலட்சியவாதத்தை பார்ப்பவர்கள் அல்ல. இருட்டை மட்டும் பார்ப்பவர்கள். இருட்டை முன்வைக்கவே அவர்கள் இலட்சியவாதத்தை இழந்தவர்களாகவும், அதை எண்ணி ஏங்குபவர்களாகவும் பாவனை செய்கிறார்கள்.

அவர்கள் ஏன் இருட்டையே பார்க்கிறார்கள். இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்களிடமுள்ள உளச்சோர்வு, சலிப்பு. இரண்டு, அவர்கள் தங்களுடைய சொந்த இருட்டை நியாயயப்படுத்த முயல்கிறார்கள். ‘இப்பல்லாம் யார் சார் யோக்கியன்’ என்பவனே உண்மையான அயோக்கியன். அவனுக்கு தன் அயோக்கியத்தனம் ஒன்றும் அரிதானதல்ல, எல்லாரும்தான் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்று நிறுவவேண்டியுள்ளது.

இலட்சியவாதம் என்பது ஓர் இயல்பான மனநிலை. எப்படி தன்னலமும், தீமைநாட்டமும் இயல்பாக மானுடரிடம் உள்ளதோ அதைப்போல இதுவும் உள்ளது. சிலரிடம் தன்னலமும் தீமைநாட்டமும் ஓங்கியிருக்கும், சிலரிடம் இலட்சியவாதமும் தியாகநோக்கும் ஓங்கியிருக்கும். அவர்கள் அதில்தான் இன்பத்தையும் நிறைவையும் கண்டடைய முடியும். அவர்களால் அப்படித்தான் இருக்கமுடியும். இரு சாராரும் என்றுமிருப்பார்கள், இரு தரப்பினிடையே போராட்டமும் என்றுமிருக்கும்.

தன்னலம் ஓங்கி இலட்சியவாதம் பின்னடைவு கொள்ளும் காலங்கள் உண்டு. இலட்சியவாதம் ஓங்கி தன்னலம் பின்னடைவு கொள்ளும் காலங்களும் உண்டு. காந்தியைப்போல ஒருவர் முன்னெழுந்து வந்து ஓர் அரசியல் – மெய்யியல் பேரியக்கத்தை முன்னெடுக்கையில் ஒட்டுமொத்தமாகவே இலட்சியவாதம் மேலோங்கியிருக்கும். ஆனால் அப்போதும் தன்னலமும் தீமையும் சற்றுக் குறைவான விசையுடன் இருந்துகொண்டேதான் இருக்கும். அதேபோல தன்னல யுகத்திலும் சற்றுக் குறைவான வீச்சுடன் இலட்சியவாதம் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆனால் மானுட வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அல்லது ஒட்டுமொத்தமாக நம் சமூகச்சூழலைப் பார்த்தால் மானுடனின் உயர்விழுமியங்களும் இலட்சியவாதமுமே ஓங்கியிருக்கின்றன என்பதைத்தான் காணமுடிகிறது. மெய்யாகவே அறங்கள் அற்றுப்போன ஒரு காலகட்டத்தில் நாம் சில நாட்கள்கூட வாழமுடியாது. ஒவ்வொரு கணமும் நாம் சகமனிதனின் அறவுணர்வை நம்பியே வாழ்கிறோம். ஒட்டுமொத்தமாகச் சமூகம் கொண்டுள்ள நீதியுணர்வை நம்பியே நாம் உயிருடனிருக்கிறோம்.

மானுடம் ஒவ்வொரு தலைமுறைக்கும் தன் அறவுணர்ச்சியை மேம்படுத்திக்கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்விலுள்ள நீதி, சுதந்திரம், நிகர்நிலை ஆகியவை செழுமைப்பட்டுக் கொண்டேதான் வருகின்றன. அதுதான் தன்னலம், தீமை ஆகியவற்றின்மேல் அறமும், இலட்சியவாதமும் அடைந்துகொண்டே இருக்கும் வெற்றிக்கான சான்று. மேலும் மேலும் முன்னகரும் கனவையே நாம் இலட்சியவாதமாகக் கொண்டிருக்கிறோம். இன்றைய சூழல்மேல் நமக்குள்ள மனக்குறையும் ஒவ்வாமையும்கூட மேலும் சிறந்த ஒன்றைநோக்கிச் செல்லும் விழைவின் விளைவே. அதுவும் இலட்சியவாதம்தான்.

எனில் இன்றைய சூழலில் இலட்சியவாதிகள் எங்கே? இன்று அவர்கள் ஏன் நம் கண்ணுக்குப்படவில்லை? இதைத்தான் எளிய உள்ளங்கள் அவ்வப்போது கேட்கின்றன.

அவர்கள் நம்மைச்சூழ்ந்து இன்றும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். பொதுநீதிக்காகப் போராடுபவர்கள், மக்கள் பணியாளர்கள், கொடையாளர்கள், தியாகிகள் எத்தனைபேர். கொஞ்சம் கவனித்தால் ஒவ்வொருநாளும் அவர்களைக் காணமுடியும். நாம் நமது அன்றாட வாழ்க்கையில் மூழ்கியிருப்பதனால் அவர்களை அறிவதில்லை. நம் அச்சங்களால் அவர்களை அறிந்தாலும் கண்களை மூடிக்கொள்கிறோம்.

சேவை மட்டுமல்ல தன்னலமே அற்று முழு அர்ப்பணிப்புடன் செய்யப்படும் அறிவுப்பணியும் இலட்சியவாதமே. கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன், பேரகராதியைத் தயாரித்த எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் இன்று உள்ளனரா? ஆம், நம்மைச்சுற்றி இன்றும் அத்தகைய அருஞ்செயல்கள் நடத்துகொண்டேதான் உள்ளன.

எனில் என்ன வேறுபாடு? சென்ற தலைமுறையினர் அறவோரை, தியாகிகளை, அறிவுத்தளத்தில் அருஞ்செயல் புரிந்தோரை மதித்தனர், அவர்களைத் தேடிச்சென்று அறிந்துகொண்டனர், அவர்களைப் போற்றினர். ஆகவே அவர்கள் அக்காலகட்டத்தின் முதன்மை ஆளுமைகளாகத் திகழ்ந்தனர். முன்னுதாரணங்களாக கருதப்பட்டனர்.

மாறாக நாம் இன்று அரசியல்வாதிகளால் தங்கள் அதிகார நோக்குடன் உருவாக்கப்படும் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஆளுமைகளை மட்டுமே அறிந்திருக்கிறோம். அவர்களே சாதனையாளர்கள் என்றும் அவர்களே நம்மை காப்பாற்றியவர்கள் என்றும் நம்புகிறோம். உண்மையான பணியாளர்கள் செய்த சாதனைகளின் விளைவை எல்லாம் அதிகாரம் உருவாக்கும் பிம்பங்கள் மேல் ஏற்றுகிறோம்.

சமகாலத்தில் நாம் செல்வமும் அதிகாரமும் கொண்டவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கும் பிம்பங்களையே மதிக்கிறோம். ஏனென்றால் இன்றைய ஊடகங்கள் முழுமையாகவே அரசியல்வாதிகள், செல்வந்தர்களின் கைகளில் உள்ளன.

இன்று ஏன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அறியப்படுவதில்லை? நம் கண்முன் தானே மாபெரும் மக்கள் பணியாளரான வி.ஜீவானந்தம் வாழ்ந்து மறைந்தார், வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் நாம் அவரை ஏன் அறிந்திருக்கவில்லை? கிருஷ்ணம்மாளிடமிருந்து நான் விருதுபெற்ற அந்நிகழ்விலேயே சிவராஜ், அன்புராஜ் என மக்கள்பணியாளர்கள் குறைந்தது இருபதுபேர் அரங்கு நிறைந்திருந்தனர். கிருஷ்ணம்மாளின் மகன் பூமிகுமாரும் மகள் சத்யாவும் கூட முற்றிலும் தனிவாழ்க்கையே அற்ற மாபெரும் மக்கள்பணியாளர்களே.

நேற்று வையாபுரிப்பிள்ளையும் தூரனும் இருந்தார்கள் என்றால் இன்று குடவாயில் பாலசுப்ரமணியனும் அ.கா.பெருமாளும் இருக்கிறார்கள். அத்தகைய அர்ப்பணிப்புள்ள அருஞ்செயலாளர் பலர் உள்ளனர். நாம் அவர்களைப் பற்றி அறிதலில்லாமல் இருக்கிறோம். பிரச்சினை இருப்பது நம்மிடமேநாம் அவர்களை அறியவில்லை, மதிக்கவில்லை என்பதனால் அவர்கள் சிறியவர்கள் ஆகிவிடுவதில்லை. நம் அறியாமை அவர்களை இல்லாதவர்களும் ஆக்கிவிடுவதில்லை.

அடிப்படையான பிரச்சினை ஒன்றே. சமகால அரசியல். அது அதிகாரவெறி கொண்டது. அதன்பின் ஒரு தரப்பை இன்னொரு தரப்பு கடித்துக்கிழித்துக் குதறுவது. சாதி, மதம், இனம், மொழி, வட்டாரம் என நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிடுவது. நாம் நம்மையறியாமலேயே அந்த வெறியில் கலந்து ஏதேனும் ஒரு பக்கத்தை சார்ந்துவிடுகிறோம். நம் பக்கத்து வெற்றுவேட்டுக்களை ஏற்கவும் நம்மை ஏற்காத எவரையும் வெறுத்து இழித்துரைக்கவும் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

இந்தச் சமகால அதிகார அரசியலென்பது ஒரு வகை ரேபீஸ். நாம் ஒருவரை ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் நோயுற்ற கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நம்மை மனநோயாளிகளாக்கி அதிகாரம் நோக்கிச் செல்லும் கூட்டம் நாம் என்ன சிந்திக்கவேண்டும் என சொல்கிறதோ அதை மட்டுமே சிந்திக்கிறோம். ஆகவே நமக்கு மெய்யான இலட்சியவாதிகள் தெரிவதில்லை. அந்த குருட்டுத்தனத்துடன் அவர்கள் இல்லவே இல்லை என சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

நாம் இலட்சியவாதம் மேல் உண்மையான ஆர்வம்கொண்டவர்கள் என்றால் இலட்சியவாதிகளை நாமே தேடிச்சென்று அறிவோம். அவர்களையே நம் காலகட்டத்தின் முகங்கள் என முன்வைப்போம். அது மட்டுமே நாம் செய்யக்கூடுவது.

ஜெ

❌