Normal view
நீ யார்? -7
நீ யார் - 6
நீ யார்? - 5
சார்ஜ் ஷீட் 42/2021- 8ம் அத்தியாயம்
பணி ஓய்வை நிறுத்தம் செய்த உத்தரவுக்கு தடை என்றால் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் தடை என்றே அர்த்தம். மிஸ்டர் ஜெயக்குமார் 7.6.2021 தேதியிட்டு அனுப்பிய விசாரணக்கான உத்தரவுக்கும் ( Enquiry Order ) தடையாகி விடும். மேற்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது. நாமக்கல் மேலாளர் மிஸ்டர் சந்திரனிடமிருந்து இனி கடிதம் வராது. அடுத்ததாக எனது ஓய்வு காலச் சலுகைகள் வழங்கப்படாது என்று செஷேஷன் ஆர்டரில் சொல்லப்பட்டதற்கும் தடை விதிக்கப்பட்டதாகவே அர்த்தம். பென்ஷன், கிராஜுவிட்டி உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
”இனி என் மீது விசாரணை நடத்தக் கூடாது என்றும், ”எனக்குரிய ஓய்வுகாலச் சலுகைகளை வழங்க வேண்டும்” எனவும் ஹைகோர்ட் ஆர்டரை இணைத்து நிர்வாகத்திற்கு 30.6.2021 அன்று கடிதம் எழுதினேன்.
தொடர்ந்து சங்கத்தின் நடவடிக்கைகள் இருந்து கொண்டிருந்தன. கிராம வங்கியின் பங்குகளில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், ஸ்பான்ஸர் வங்கிகள் 35 சதவீதத்தையும், மாநில அரசுகள் 15 சதவீதத்தையும் வைத்திருந்தன. ஸ்பான்ஸர் வங்கிகள், மாநில அரசுகளின் பங்குகளை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு, அனைத்து கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து தேசீய கிராமப்புற வங்கி அமைக்க வேண்டும் என்பதே அகில இந்திய சங்கம் ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏவின் கோரிக்கையாய் இருந்தது. மத்திய அரசோ தன்னிடமிருக்கும் 50 சதவீத பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஜூலை 9ம் தேதி சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி தலைமையலுவலகத்தின் முன்பு தர்ணா நடத்த திட்டமிடப்பட்டது.
அன்று காலை 6 மணிக்கு சாத்தூரிலிருந்து நானும் சங்கரும் காரில் புறப்பட்டோம். ஓய்வுபெற்று 70 நாட்கள் கழித்து மீண்டும் சேலத்திற்கு பயணம். வலதுபுறத்தில் மரங்கள், கட்டிடங்களுக்கு மேல் சூரியன் வந்து கொண்டிருந்தது. சில பறவைகள் ஒன்று போல் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அத்தனை நாளும் வீட்டில் அடைந்து கிடந்தவனுக்கு விரிந்து பரந்த வெளி பேரனுபவமாய் இருந்தது. இளகிப் போனது மனமும் உடலும். வழியில் தோழர்கள் இம்ரான், அருண்பாண்டியன், ராஜராஜன், ஆறுமுகப்பெருமாள், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். மாறி மாறிப் பேசி கலகலப்பாயிருந்தது. போகும் வழியில் கோவிட் தொற்றையொட்டி அங்கங்கு காவல்துறை தடுப்புகள் இருந்தன. கெடுபிடிகள் அவ்வளவாக இல்லை.
சங்கங்களின் மீது நிர்வாகத்திற்கு இருந்த வன்மத்தையும் வெறித்தனத்தையும் பற்றி பேச்சு வந்தது. சங்கங்களுக்கு உறுப்பினர்கள் சந்தா செலுத்தும் செக்-ஆப் முறையை ரத்து செய்ததையும், ஊழியர்களிடையே பயத்தை விதைத்து இருப்பதையும் பற்றி அவர்களின் கவலையும் கோபமும் வெளிப்பட்டது.
எப்போதெல்லாம் சங்கங்களின் மீது நிர்வாகத்திற்கு பயம் வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடும் என்பதை விளக்கினேன். 2009ம் ஆண்டில் பாண்டியன் கிராம வங்கியில் மிஸ்டர் சுந்தர்ராஜ் சேர்மனாய் இருக்கும்போதும் இதுபோல் செக்-ஆப் ரத்து செய்யப்பட்டதையும், நீதிமன்றம் சென்று அதற்கு சங்கம் தடையுத்தரவு வாங்கியதையும் குறிப்பிட்டேன். ’நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது, நாம் அதைத் தாங்கிக்கொண்டு நம் போராட்டக் குணத்தை இழந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதையும், எதிர்த்து நிற்பதையும் செய்து கொண்டே இருக்க வேண்டும். நிர்வாகம் ஒரு கொடிய மிருகம். அடங்கிப் போகாத நம் சிந்தனைகளாலும் தளராத நம் நடவடிக்கைகளாலும் அதனை நம் வழிக்கு பழக்க வேண்டும். அநீதியை எதிர்க்கும் நம் போக்கை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும்’ என்றேன்.
ஏ.ஐ.பி.ஓ.சி ( AIBOC ) சங்கத்துக்கு மிஸ்டர் செல்வராஜும், மிஸ்டர் ஜெயக்குமாரும் ஆதரவளித்துக் கொண்டிருப்பதையும் தோழர்கள் பேச்சில் புரிந்து கொண்டேன். போர்க்குணம் அற்ற, எப்படியாவது காரியம் சாதித்தால் போதும் என கொள்கையற்ற தலைவர்களை நிர்வாகத்துக்கு எப்போதுமே பிடிக்கும். அவர்கள் மீது மோசமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் நிர்வாகம் கண்டு கொள்ளாது. நம்மைப் போன்ற போர்க்குணமிக்க சங்கங்களின் வளர்ச்சியைத் தடுக்க அந்த சங்கத்தை பயன்படுத்தும். அவர்களும் அதில் குளிர் காய்வார்கள். ஒரு தொழிற்சங்கத்தின் இயல்பு கொஞ்சம் கூட ஏ.ஐ.ஓ.பி.சிக்கு கிடையாது என்றேன். சக தொழிற்சங்கத்துடன் கொள்கையில், நடைமுறைகளில் அதற்கு கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக சக தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது குறைந்த பட்சம் கண்டிக்கவாவது செய்ய வேண்டும். அதுதான் வர்க்க குணம். இங்கே நம்மீது நிர்வாகம் தொடுக்கும் தாக்குதல்களை அந்த சங்கம் கொண்டாடுவதைப் போல அவமானகரமானது இல்லை என்றேன்.
பேச்சின் ஊடேயும், பேசாமல் இருந்த சமயங்களிலும் போகும் வழியில் பார்வை சென்று கொண்டிருந்தது. ஒன்றரை வருடங்களாய் இதே வழியில் எத்தனையோ முறை பயணம் செய்திருந்தேன். இதே போல் காலைகளில் இருட்டு விலகி, பொழுது ஆரம்பிக்கும் நேரங்களில் வண்டியோட்டி இருக்கிறேன். பழக்கமான, கவனத்தில் பதிந்த இடங்களைப் பார்க்கும்போது மனம் புன்னகை பூத்தது. நாமக்கல்லைத் தாண்டியதும் நினைவுகள் அடர்ந்தன. காலை பத்து மணிக்கு எதிரே உயரத்தில் பாலம் தெரியும் ஜனநடமாட்டம் அடர்ந்த சீலநாயக்கன்பட்டியை நெருங்கினோம். இடதுபக்கம் உயர்ந்திருக்கும் அந்த மலையைப் பார்த்தேன். சேலத்தின் வாழ்ந்த நாட்களை அதுதான் அடைகாத்துக் கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த சங்க அலுவலகத்திலிருந்தும் அந்த மலையைப் பார்க்க முடியும். கூடவே இருந்த மலை.
நேரே அஸ்தம்பட்டியில் இருக்கும் தலைமையலுவலகம் சென்றோம். அந்த வளாகத்தின் முன்பகுதியில் அடர்ந்து இருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாய் நின்றன. எதையோ இழந்தது போலிருந்தது. வெயில் பளீரென்று அடித்துக் கிடந்தது. தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், பரிதிராஜா, அண்டோ, தங்கமாரியப்பன், லஷ்மி நாராயணன் மற்றும் பெஃபி தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.ராஜேந்திரன் போன்ற தோழர்கள் ஏற்கனவே வந்து இருந்தார்கள். உற்சாகத்துடன் வரவேற்று நலம் விசாரித்தார்கள். ”நீ எதுக்கு வந்தே மாது? இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே” என காரைக்குடியில் இருந்து வந்திருந்த தோழர் சோலைமாணிக்கம் அக்கறையினால் கடிந்து கொண்டார்.
முற்றிலும் புதிய தலைமையும், புதிய தோழர்களும் சங்கமாய் திரண்டிருக்கும் அந்த காலக்கட்டத்தில், முன்வந்திருக்கும் கோரிக்கை குறித்த வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் தர்ணாவில் சொல்ல வேண்டும் என்றுதான் கலந்து கொண்டேன். அதுவரை ஸ்பான்ஸர் வங்கியின் எதேச்சதிகாரத்தை, அத்துமீறல்களை, அடாவடித்தனத்தையெல்லாம் சங்கம் பேசியிருந்தாலும் முதன் முதலாக ’கிராம வங்கிகளை ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து துண்டிக்க வேண்டும்’ என ஒரு கோரிக்கை அப்போதுதான் எழுந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நூறு தோழர்கள் போல கலந்து கொண்டனர்.
1975ல் ஆரம்பிக்கப்பட்ட கிராம வங்கிகள் குறித்து ஒரு தெளிவான திட்டமும் வரையறையும் எப்போதும் மத்திய அரசுக்கு இருந்ததில்லை. 1981ல் அமைக்கப்பட்ட சிவராமன் கமிட்டியின் அறிக்கை, ‘வணிக வங்கியின் கிராமப்புற கிளைகளை கிராம வங்கிகளோடு இணைக்க வேண்டும்’ என்றது. வணிக வங்கி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அது நடைமுறைப்படுத்த முடியவில்லை. 1985ல் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி, ‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கிராம வங்கி’ என பரிந்துரை செய்தது. அதனை அமல்படுத்தும் விதமாக மே.வங்கத்தின் கௌர் கிராம வங்கியை இரண்டாக பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கௌர் கிராம வங்கியில்தான் ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ பொதுச்செயலாளர் தோழர் திலீப்குமார் முகர்ஜி ஏரியா மேலாளராக இருந்தார். சங்கத்தின் கடுமையான எதிர்ப்பினால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு கமிட்டி அறிக்கைகள் வெளிவந்தன. 2005ல் ஒரு மாநிலத்தில் இருக்கும் ஒரே ஸ்பான்ஸர் வங்கியைக் கொண்டிருந்த கிராம வங்கிகள் இணைக்கப்படும் என அரசு அறிவித்தது. அப்படித்தான் தமிழ்நாட்டில் வள்ளலார் கிராம வங்கியும் , அதியமான் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியாக ஒன்றிணைக்கப்பட்டன. 2014க்குப் பிறகு ஒரு மாநிலத்தில் உள்ள கிராம வங்கிகள் ஒன்றிணைக்கப்படும் என அறிவிப்பு வந்தது. அதன்படிதான் 2019ல் பாண்டியன் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாக ஒன்றிணைக்கப்பட்டன. இனி அனைத்து மாநில கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து ‘தேசீய கிராமப்புற வங்கி’ அமைக்க வேண்டும் எனஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. மத்திய அரசின் பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளுக்கும் கொடுப்பது என்பது கிராமப்புற மக்களுக்கும், கிராம வங்கி ஊழியர்களுக்கும் முற்றிலும் எதிர்மறையான நடவடிக்கையாக இருக்கும் என்பதை எல்லாம் விவரித்தேன்.
”ரொம்ப அவசியமான, தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கீங்க அண்ணே” என்று அண்டோ கால்பர்ட் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
தர்ணா முடிந்ததும் தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், அண்டோ கால்பர்ட், பரிதிராஜா ஆகியோர் தலைமையலுவலகத்திற்குள் சென்றனர். சேர்மன் செல்வராஜிடம் மெமொரெண்டத்தை கொடுத்திருக்கின்றனர். அவரும் அமைதியாக வாங்கிக் கொண்டு இரண்டு வார்த்தை பேசி அனுப்பி இருக்கிறார். இதுபோல் 1.3.2021 அன்றும் மிஸ்டர் செல்வராஜ் நடந்துகொண்டிருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. உள்ளே சென்ற ஓய்வு பெற்ற தோழர்களை மரியாதையில்லாமல் நடத்தியதில்தானே எல்லாப் பிரச்சினையும் என்று பேசிக்கொண்டோம்.
மதிய உணவு முடித்துவிட்டு சங்க அலுவலகம் சென்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சங்கத்தின் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். 2021 ஜனவரி 7ம் தேதி சேலத்தில் நடந்த மாநாட்டில் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி உதவித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஓய்வு பெறும் வரை சங்கப் பொறுப்பில் இருக்கலாம் என்பதை ஒரு விதியாகக் கொண்டிருந்தோம். அதையே நடைமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வந்தோம். ஓய்வு பெற்ற பிறகும் ஒருவர் சங்கப் பொறுப்பில் இருப்பது அடுத்த தலைமையை வளர்க்காது. பணி ஓய்வு பெற்று இரண்டு மாதங்களாகி விட்டன. அதற்கு மேலும் பொறுப்பில் இருப்பது சரியல்ல என்றேன்.
சார்ஜ் ஷீட் விவகாரம் முடிந்து, ஓய்வுகாலச் சலுகைகளை பெறுகிற வரை சங்கப் பொறுப்பில் இருக்க வேண்டுமென தோழர்கள் வலியுறுத்தினர்.
“அப்படியானால் நிர்வாகத்தின் ‘பணி ஓய்வு நிறுத்தம்’ ( Cessation ) ஆர்டரை நாம் ஒத்துக் கொள்கிறோமா?” என்று சிரித்தேன். தோழர்களும் சிரித்தனர்.
சிரித்துக் கடந்தாலும், சீக்கிரம் சங்கப் பொறுப்பில் இருந்து விடுபட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன். தேவைப்பட்டால் ஆலோசனைகள் சொல்வது வேறு, கூடவே இருந்து ஒவ்வொன்றிலும் தலையிடுவது வேறு.
ஜூலை 14ம் தேதி சென்னை சென்று இரண்டு நாட்கள் தங்கி பெஃபி தலைவர்கள் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், ராஜகோபால் தோழர்களோடு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து நம் கோரிக்கைகளை கொடுத்து பேசுவது என்று திட்டமிடப்பட்டது. தோழர்கள் என்னையும் அழைத்தனர். ஒப்புக்கொண்டேன்.
சேலத்திலிருந்து சாத்தூருக்குத் திரும்பும்போது சீலநாயக்கன்பட்டியில் அந்த மலையைப் பார்த்தேன். ‘மீண்டும் வருவேன்..” என சொல்லிக் கொண்டேன். நிர்வாகத்திற்கு நான் எழுதிய கடிதமும் நிர்வாகத்தின் மௌனமும் மனதிற்குள் ஒடியது. இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த சென்னை ஹைகோர்ட் வழக்கை எப்போது விசாரிக்கும் என்று தெரியவில்லை. வருடக்கணக்கில் இழுத்தடித்தால்… என யோசனையாய் இருந்தது. சென்னைக்குச் செல்லும்போது அட்வகேட் கீதா மேடம், தோழர்கள் சி.பி.கே, ராஜகோபால் ஆகியோரிடம் ஆலோசிக்க வேண்டும்.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
4ம் அத்தியாயம் 5ம் அத்தியாயம் 6ம் அத்தியாயம்
சார்ஜ் ஷீட் 42/2021- 7ம் அத்தியாயம்
“30.3.2021 தேதியிட்ட சார்ஜ் ஷீட்டிற்கு மிஸ்டர் மாதவராஜ் அனுப்பிய கடிதம் என் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. சார்ஜ் ஷீட்டில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளையும், அந்த குற்றச்சாட்டிற்கு அடிப்படையான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படித்தேன். குற்றச்சாட்டுகளையும் அதற்குரிய பதிலையும் ஆராய்ந்து பார்த்ததில், அந்த பதில் ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை. எனவே தமிழ்நாடு கிராம வங்கி பணியாளர் விதிகளின்படி, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்.”
முதலில் குற்றச்சாட்டுகளே ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லையே. சார்ஜ் ஷீட் என்பது குழப்பமில்லாமல் தெளிவாகவும், தேவையான விபரங்களோடு இருக்க வேண்டும் என்பதுதான் விதி. (In Disciplinary proceedings, a charge sheet should not be vague. It should be clear and specific with all relevant details.) அப்படி எந்த விபரங்களும் சார்ஜ் ஷீட்டில் இல்லை.
முதலாவதாக, 1.3.2021 அன்று ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிலரோடு நான் தலைமையலுவலகத்தில் முரட்டுத்தனமாகவும் அநாகரீகமாகவும் நுழைந்ததாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் நுழைந்தார்கள் என்ற விபரம் இல்லை. யார் யார் என்று பெயர்கள் இல்லை. முரட்டுத்தனமாக என்றால் எப்படி? யாரையாவது தள்ளிவிட்டு அல்லது எதையாவது போட்டு உடைத்துவிட்டு நுழைந்தோமா? அது குறித்த விபரம் இல்லை. அப்புறம் அநாகரீகமாக என்றால்? சட்டை கிட்டை போடாமலா உள்ளே நுழைந்தோம்? குழப்பமாக இருக்கிறதா இல்லையா?
இரண்டாவதாக, அலுவலகத்திற்குரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் நிறுவனத்தின் கண்ணியத்தை சீரழித்து விட்டீர்கள் என்று குற்றச்சாட்டு. என்னய்யா அந்த அலுவலகத்திற்குரிய ஒழுக்கம்? அதை முதலில் சொல்ல வேண்டாமா? அதில் எதை கடைப்பிடிக்கவில்லை, எப்படி மீறினார்கள் என்று சொல்ல வேண்டாமா? ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லாமல் நிறுவனத்தின் கண்ணியத்தை குலைத்து விட்டீர்கள் என்றால் எப்படி புரிந்து கொள்வது?
மூன்றாவது தலைமையலுவலகதிற்குள் சத்தம் போட்டு, சேர்மன் கேபின் முன்னால் சலசலப்பை ஏற்படுத்தினோம் என்று குற்றச்சாட்டு. என்ன சொல்லி சத்தம் போட்டார்கள், என்ன வார்த்தைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்பட வேண்டாமா? அந்த விபரங்களைச் சொன்னால்தான் மனிதர்களைக் குறிப்பதாக அர்த்தம். வெறுமனே சத்தம் போட்டார்கள், சலசலப்பை ஏற்படுத்தினார்கள் என்றால் உள்ளே சென்றவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?
கடைசியாக தலைமையலுவலகத்தில் சேர்மன் வெளியே செல்லும்போது வழி விடாமல் தடுத்தீர்கள் என்றும் தலைமையலுவலக ஊழியர்களின் நடமாட்டங்களுக்கு இடையூறு செய்தீர்கள் என்றும் குற்றச்சாட்டு. வழி விடவில்லை என்றால் எந்த வழி என்று குறிப்பிட வேண்டும். யார் யாரெல்லாம் வழிவிடவில்லை என பெயர்களை தெரிவிக்க வேண்டும். எந்த தலைமையலுவலக ஊழியர்கள் நடமாடமுடியாமல் இடையூறு செய்யப்பட்டார்கள் என்று அவர்களது பெயர்களையும் தெரிவிக்க வேண்டும். எல்லோரும் பெயரற்ற அநாமதேயங்களா?
இதையெல்லாம் விட மிகப் பெரிய கூத்து ஒன்றும் நடந்திருந்தது. ’கீழ்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவைகளை இங்கே இணைத்திருக்கிறோம்’ என்று சார்ஜ் ஷீட்டோடு இரண்டு ஆவணங்களை இணைத்திருந்தார்கள். ஒன்று, இதே குற்றச்சாட்டுகளோடு நிர்வாகத்திலிருந்து 10.3.2021 அன்று எனக்கு விளக்கம் கேட்டு பொதுமேலாளரிடம் இருந்து வந்த கடிதம்! இரண்டாவது, அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து 16.3.2021 அன்று நான் எழுதிய பதில் கடிதம்! அவைகளா அடிப்படை ஆவணங்கள் (basic documents)? எதாவது அடிப்படை அறிவு இருக்கிறதா இதில்?
1.3.2021 அன்று தலைமையலுவலகத்தில் நடந்த விஷயங்கள் குறித்து யாராவது புகார் அளித்திருந்தால் அந்த ஆவணத்தை இணைக்கலாம். அல்லது எதாவது விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அப்படியொரு விசாரணை நடந்திருந்தால் அதன் அறிக்கையை ஒரு அடிப்படை ஆவணமாக இணைக்கலாம். அதை விட்டு விட்டு ஏற்கனவே விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பிய கடிதத்தையும், அதற்கு நான் கொடுத்த பதிலையுமே அடிப்படை ஆவணங்களாக தாக்கல் செய்வதெல்லாம் ’செக்குன்னு தெரியாம, சிவலிங்கம்னு தெரியாம நக்குன நாய்’ கதைதான்.
இப்படியெல்லாம் சட்ட விதிகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கை நெறிமுறைகளுக்கும் முற்றிலும் விரோதமாக குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு, ’கவனமாக படித்தேன்’, ’எல்லாவற்றையும் ஆராய்ந்தேன்’, ‘பதில் ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லை’ என்று யோக்கிய சிகாமணியாய் எழுதுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். நாடி நரம்பெல்லாம் பொய்யும் பித்தாலாட்டமும் நிறைந்தவர்களால்தான் அது முடியும்.
நான் ரிடையர் ஆவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் தலைமையலுவலகத்தில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிந்த தோழர்கள் வரதராஜப் பெருமாளும், சௌந்திர நாகேஸ்வரனும் பணி ஓய்வு பெற்றார்கள். மார்ச் 28, ஞாயிறு அன்று அவர்கள் இருவரும் தலைமையலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மதிய விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பாண்டியன் கிராம வங்கியிலிருந்தே நல்ல பழக்கம் என்பதால் என்னையும் அழைத்து இருந்தார்கள். இருவரின் அன்பிற்காக கலந்து கொண்டேன். சேர்மன் உட்பட அனைவரும் வந்திருந்தனர். நம் சங்கத் தோழர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது மிஸ்டர் ஜெயக்குமார் என்னருகில் வந்து ”அடுத்த மாதம் உங்கள் பணி ஓய்வையும் கொண்டாடிவிடுவோம்” என்று சிரித்தார். அதற்கு இரண்டு நாள் கழித்து 30.3.2021 அன்று எனக்கு சார்ஜ் ஷீட் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார். அப்பேர்ப்பட்டவர் அவர்!
மீண்டும் கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என் மீது விசாரணை நடத்த, அப்போதைய நாமக்கல் மண்டல மேலாளர் மிஸ்டர் சந்திரனை விசாரணை அதிகாரியாக (Enquiry Officer) நியமித்திருந்தார். நிர்வாகத்தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கும் அதிகாரியாக (Presenting Officer) மிஸ்டர் திருமூர்த்தியை நியமித்திருந்தார்.
இனி மிஸ்டர் சந்திரனிடமிருந்து விரைவில் ஒரு கடிதம் வரும். எந்த தேதியில் எங்கு வைத்து விசாரணை என்பதைக் குறிப்பிட்டு அதில் அழைப்பு விடுக்கப்படும்.
நமது இரு சங்கத் தலைமைக்கும், பெஃபி தமிழ்நாடு தலைவர்கள் தோழர் சி.பி.கிருஷ்ணன், தோழர் ராஜகோபால் ஆகியோருக்கும் தெரிவித்தேன். அட்வகேட் கீதா அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுக்க அஃபிடவேட் நகலை கீதா மேடம் மெயிலில் அனுப்பி்யிருந்தார்கள். அதை இறுதிப்படுத்தியாகி விட்டது. ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆன்-லைனில்தான் ஹியரிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விரைவில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றொரு பேச்சு எழுந்து கொண்டிருந்தது. அப்போது ஆன்–லைனில் வழக்கு நடைபெறுமா எனத் தெரியவில்லை. 2020ல் இருந்ததை விடவும் 2021ல் தொற்று தீவீரமாக இருப்பதாக டிவிகளில் கவலையோடு பகிர்ந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட்ட தெரிந்தவர்கள் அனைவருக்கும் தொற்றின் பாதிப்பு வந்து போய்க்கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள், நம்மோடு பணிபுரிந்த தோழர் வேதமுத்து, தோழர் அந்தோணி மரியராஜ், தற்காலிக ஊழியர் பிரசாத், ஆகியோரின் உயிரிழப்புகள் சூழலின் தீவீரத்தை உணர்த்தின. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் லீவு கிடைக்காமல் வேலை பார்த்து இறந்து போன புதுவை பாரதியார் கிராம வங்கி ஆபிஸர் சங்கத்தைச் சேர்ந்த 37 வயதனான தோழர் நாகலிங்கத்தின் சிரித்த முகம் இன்னும் எதையோ சொல்லிக்கொண்டே இருக்கிறது. துயரங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் முடங்கிப் போயிருந்த காலம். எப்போது மனிதர்களின் முகங்களை மீண்டும் புன்னகையோடு பார்க்கப் போகிறோம் என ஏக்கங்கள் அடர்ந்தன.
நிர்வாகம் வழக்கம் போல் ஈவிரக்கமில்லாமல் இருந்தது. ஊழியர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தாமல் பழிவாங்கும் போக்கை தீவீரப்படுத்திக் கொண்டிருந்தது. 1.3.2021 அன்றைய சம்பவத்திற்காக நிர்வாகம் ஓய்வு பெற்ற தோழர்கள் மீதும் பாய்ந்திருந்தது. சோலைமாணிக்கம், கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோருக்கும் குற்றச்சாட்டுகளை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. பென்ஷனை நிறுத்த வேண்டும் என்ற வெறி சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்துக்கு இருந்திருக்க வேண்டும். தோழர்கள் சோலைமாணிக்கமும், கிருஷ்ணனும் அதற்கு பதில் கொடுத்து விட்டனர். உடல்நலம் இல்லாத உறவினரைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர் சுப்பாராமன் உரிய நேரத்தில் பதில் அளிக்கவில்லை. அவருக்கு மாறி மாறி கடிதங்களை நிர்வாகம் அனுப்பிக் கொண்டிருந்தது. தங்கள் பாதுகாப்பு கருதி கிளைகளில் இருந்து ஊழியர்கள் அனுப்பும் கடிதங்களின் மீது உரிய நேரத்தில் பதில் அளிக்காத நிர்வாகம், பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டும் வேகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.
கணுவாய் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த தற்காலிக ஊழியர் முத்து லட்சுமியின் மரணம் தாங்க முடியாத துயரத்தைத் தந்தது. கோவிட் தொற்று தீவீரமாய் இருந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி அவரை வேலைக்கு வர வேண்டாம் என அந்தக் கிளையின் மேலாளர் வெளியே அனுப்பி விட்டார். சங்கத்திலிருந்து மிஸ்டர் ஜெயக்குமாரிடம் பேசினோம். கண்டு கொள்ளவே இல்லை. நாம் ரீஜினல் லேபர் கமிஷனரிடம் முறையிட்டோம். சேலத்தில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. நானும் தோழர் அறிவுடைநம்பியும் சங்கத்தரப்பில் சென்றோம். மிஸ்டர் ஜெயக்குமார் நிர்வாகத்தரப்பில் வந்தார். ”இந்த கொரோனா நேரத்தில் வெளியே அனுப்பினால் அந்த ஊழியர் என்ன செய்வார், அவரை பணிக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்” என ரீஜினல் லேபர் கமிஷனர் சொல்லிப் பார்த்தார். மிஸ்டர் ஜெயக்குமார் கேட்கவே இல்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதன் மீது மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்து லேபர் கோர்ட்டில் விசாரணை ஆரம்பிக்க சாதாரண காலங்களிலேயே நான்கைந்து மாதங்கள் ஆகும். கொரோனா நேரத்தில் கேட்கவா வேண்டும்? தோழர் முத்து லட்சுமி அவ்வப்போது போன் செய்து கேட்பார்கள். நான் எதாவது நம்பிக்கையளித்து பொறுமையாய் இருக்கும்படிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். நெஞ்சடைத்துப் போய் ஒருநாள் அவரும் காலமானார். ”மாதவராஜ் சார்” என அழைக்கும் அந்தக் குரல் நினைவிலேயே இருந்தது. நம்பிக்கையான செய்தி என்னிடம் இருந்து வரும் என காத்திருந்து காத்திருந்து காணாமலேயே போய்விட்டது. நிர்வாகத்துக்கும், மிஸ்டர் ஜெயக்குமாருக்கும் அந்த வலி என்னவென்று தெரியுமா?
யோசித்துப் பார்க்கும்போது உலகில் எல்லோருமே தங்களுக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பது போலவே தெரிந்தது.
எனக்கு அந்த நாள் 2021 ஜூன் 24ம் தேதியாக வந்தது போலிருந்தது.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
4ம் அத்தியாயம் 5ம் அத்தியாயம் 6ம் அத்தியாயம்
சார்ஜ் ஷீட் 42/2021- 6ம் அத்தியாயம்
அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் அப்படியொரு அசதி. கணகணவென்றிருந்தது. இட்லியைக் கூட சாப்பிட முடியவில்லை. ஒரு வேகத்தோடு திமிறி உட்கார்ந்து அட்வகேட் கீதா கேட்டிருந்த ஆவணங்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.
1.3.2021 தர்ணாவுக்கு நான் அனுப்பிய லீவு லெட்டர், 10.3.2021 அன்று பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பிய கடிதம், 16.3.2021 அன்று நான் விளக்கம் அளித்து அனுப்பிய பதில் கடிதம், 30.3.2021 அன்று ’எனது பதில் திருப்திகரமாக இல்ல என்று நிர்வாகம் அனுப்பிய சார்ஜ் ஷீட், 12.4.2021 அன்று நான் அனுப்பிய சார்ஜ் ஷீட்டிற்கான பதில், 30.4.2021 அன்று மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் மாலை 5 மணிக்கு “ஓய்வு பெறுவதாக’ நான் கொடுத்த கடிதம், 30.4.2021 அன்று அதே நாள் மாலை 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயில், 3.5.2021 அன்று ஓய்வுகாலச் சலுகைகள் கேட்டு பொது மேலாளருக்கு நான் எழுதிய கடிதம், 15.5.2021 அன்று செஷேஷன் செல்லும் என்றும் விரைவில் என்கொயரி நடக்கும் என்றும் பொது மேலாளரிடம் இருந்து வந்த கடிதம், தமிழ்நாடு கிராம வங்கி ஸ்டாஃப் ரெகுலேஷன்ஸ் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நிர்வாகத்தின் பொய்களும், பித்தலாட்டமும் அந்த ஆவணங்களில் இருந்து கீழே உதிர்ந்து கொண்டிருந்தன.
9.3.2021 அன்று நாமக்கல் ரீஜினல் மேனேஜர் சந்திரன் மின்னம்பள்ளி கிளை மேலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ‘1.3.2021 அன்று ஓய்வு பெற்றோர் சங்கம் நடத்திய தர்ணாவில் நான் கலந்து கொண்டதாகவும் அதனால் ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ (No work, No Pay) என்னும் விதியின் அடிப்படையில் 1.3.2021 அன்று என் லீவு மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். சார்ஜ் ஷீட் அனுப்பப்பட்ட ஆறு தோழர்களுக்கும் இதுபோல தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாத ஊதியத்தில் பிடிக்கவும் செய்திருந்தார்கள். அப்படிச் செய்தது முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் முதல் கோணல் அதுதான்.
ஒரு ஊழியருக்கு ஊதிய வெட்டு அல்லது சம்பளப்பிடித்தம் செய்ய வேண்டுமென்றால், முதலில் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் எழுத்து பூர்வமாக தகுதி வாய்ந்த அதிகாரி (competent authority) விளக்கம் கேட்க வேண்டும். அவர் பதில் அளித்த பின்பு, தகுந்த காரணங்களோடு அதை மறுத்து, ஊதிய வெட்டு செய்யப்போவதை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். நிர்வாகம் அப்படிச் செய்யவில்லை. செய்தது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது.
முதலில் ரீஜினல் மேனேஜர் அந்த ‘தகுதி வாய்ந்த அதிகாரி’ இல்லை. ஹெச்.ஆர் துறையின் முதன்மை மேலாளர் மிஸ்டர் ஜெயக்குமார்தான் ‘தகுதி வாய்ந்த அதிகாரி’.
இரண்டாவது சம்பந்தப்பட்ட ஊழியருக்கு தெரிவிக்கவே இல்லை. கிளை மேலாளருக்குத்தான் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது, ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்னும் விதியின் கீழ் ஊதிய வெட்டு அமல்படுத்துவதாய் இருந்தால், ’1.3.2021 தர்ணா சட்டவிரோதமானது, அதில் ஊழியர்கள் கலந்து கொண்டால் ஊதிய வெட்டு அமல்படுத்தப்படும் ‘ என தொழில் தகராறு சட்டத்தின்படி முன்கூட்டியே நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தர்ணாவை அப்படி வகைப்படுத்தவும் முடியாது.
செய்ததையெல்லாம் குளறுபடியாகவும், தான்தோன்றித்தனமாகவும் செய்து விட்டு சார்ஜ் ஷீட்டில் முழுப் பூசணிக்காயை நிர்வாகம் மறைத்திருந்தது.
’1.3.2021 அன்றைய லீவு என்பதை ‘தகுதி வாய்ந்த அதிகாரியிடம்’ முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, முறைப்படி அவரிடம் அனுமதி பெறவில்லை. அதிகார பூர்வமற்ற முறையில் தர்ணாவில் கலந்து கொண்டீர்கள்’ என்றுதான் முதல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது!
No work No Pay, மண்டல மேலாளரின் கடிதம், ஊதிய வெட்டு என்று நடந்த நிகழ்வுகளுக்கு முற்றிலும் மாறாக வேறு ஒரு கதையை ஜோடித்திருந்தது. அதாவது சொல்லாமல் கொள்ளாமல் சங்கத் தலைவர்கள் 1.3.2021 தர்ணாவில் கலந்து கொண்டார்களாம்.
’No work No Pay’ என்று தாங்கள் முதலில் ஜோடித்த கதையைச் சொன்னால், தங்கள் செவிட்டிலேயே ஹைகோர்ட் ஓங்கி அடிக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சேர்மன் ரூமில் உட்கார்ந்து ’திட்டம் இரண்டை’ கையிலெடுத்திருக்க வேண்டும். முதன்மை மேலாளர் ( Chief Manager) ஜெயக்குமாரின் மூளை அபாரமான ஆற்றல் கொண்டது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அவர்.
அந்த பித்தலாட்டமும் செல்லாமல் போயிருந்ததுதான் சுவாரசியம்.
தர்ணா நடந்த 1.3.2021 அன்றைக்கு மட்டும் ஒருநாள் லீவு என நான் கேட்டிருக்கவில்லை. அடுத்தநாள் 2.3.2021க்கும் சேர்த்து இரண்டுநாள் கேஷுவல் லீவு கேட்டிருந்தேன். 2.3.2021 அன்று சென்னையில் ரீஜினல் லேபர் கமிஷனர் முன்பு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை இருந்தது.
ஆனால் 1.3.2021க்கு மட்டும்தான் மார்ச் மாதத்தில் எனக்கு சம்பளவெட்டு செய்யப்பட்டு இருந்தது. 2.3.2021க்கு ஊதியம் கொடுக்கப்பட்டு விட்டது. சார்ஜ் ஷீட்டில் கூறியுள்ளபடி முன்கூட்டி லீவு தெரிவிக்கப்படவில்லை, உரிய அனுமதி பெறவில்லை என்றால், நான் அனுப்பிய ஒரே கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் இரண்டு நாட்களுக்கும் லீவு மறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் ஒருநாளுக்கு ஊதிய வெட்டும், இன்னொரு நாளுக்கு ஊதியமும் எப்படி கொடுக்க முடியும்? ஒரே கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் லீவில் ஒருநாள் அதிகாரபூர்வமற்றதாகவும் அடுத்தநாள் அதிகாரபூர்வமானதாகவும் எப்படி கருத முடியும்?
அந்த காய்ச்சல் நேரத்திலும் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. ஒருவேளை என்கொயரி நடந்தால் நம் கேள்விகளுக்கு எங்கு போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள் என நினைத்துப் பார்த்தேன். அட்வகேட் கீதா அவர்களிடம் என் லீவு லெட்டர் பற்றி குறிப்பிட்டேன். அவர்களும் சிரித்துக் கொண்டே, “சட்டத்தைப் பத்தியெல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல மாது. எதாவது செஞ்சு உங்களை தண்டிக்கணும், உங்களுக்கு வலிக்கணும். ஆனா நீங்க இப்படி சிரிக்கிறீங்க. என்றார். அந்த லீவு லெட்டர் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அனுப்பி வைக்கச் சொன்னார். எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து மெயில் பண்ணிவிட்டுத்தான் எழுந்தேன்.
டாக்டரைப் போய் பார்க்கச் சொன்னாள் அம்மு. பிரியா கார்த்தியிடம் போனில் சொன்னேன். அப்போதுதான் கொரோனாவில் அவதிப்பட்டு அவனும் சரியாகி இருந்தான். ஆனாலும் வீட்டுக்கு வந்து விட்டான். ”இரண்டு வேள பாரசிட்டாமல் மாத்திரயப் போட்டு பாருங்க, அப்படியும் காய்ச்சல் இறங்கலன்னா, டாக்டரைப் பாத்துருங்க” என்று மாத்திரைகளை வாங்கித் தந்து விட்டுப் போனான். மாடியில் இருந்த அறையில் போய் படுத்துக் கொண்டேன். அந்த இரவே கடும் பாடு பட்டேன்.
அடுத்த நாள் காலையில் அம்முவுக்கும் காய்ச்சல் வந்திருந்தது. மறைந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் மகன் டாக்டர் அறத்தை பார்க்க இருவரும் சென்றோம். ஆஸ்பத்திரியில் மனிதர்கள் கசங்கிப் போய் நிறைந்திருந்தார்கள். எல்லோரும் முகக் கவசம் மாட்டிக் கொண்டு இருந்தார்கள். மனிதர்களின் கண்கள் கதிகலங்கிப் போயிருந்தன. நர்ஸ்களும், டாக்டர்களும் உடல் முழுக்க பிளாஸ்டிக் கவுன் மாதிரி ஒன்று மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்கள். யாரிடமும் புன்னகையைக் காண முடியவில்லை.
சோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு, ‘கொரோனாதான்’ என்பதை டாக்டர் உறுதி செய்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா எனக் கேட்டார். நான் போடவில்லை. அம்மு போட்டிருந்தாள். ’அண்ணே, நீங்களும் போட்டிருக்கலாமே” என்ற வார்த்தையில் அக்கறையும், ‘ஏன் இந்த அலட்சியம்’ என்ற தொனியும் இருந்தது. மாத்திரைகள் எழுதித் தந்தார். எதையெல்லாம் சாப்பிடலாம் என அறிவுறுத்தினார்.
வீட்டின் கதவைத் திறந்த போது, இந்த வீட்டை இனி மனிதர்கள் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். நானும் அம்முவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டோம். அத்திப்பழம், பிஸ்கட், வால் நட் போன்றவற்றை வாங்கித் தருமாறு தோழர் சங்கரிடம் போனில் சொன்னேன். சங்கத்தின் உதவித் தலைவராயிருந்தான். பக்கத்தில் படந்தால் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தான். வாங்கி வந்து பூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே இருந்து போன் செய்தான். சுவற்றில் வைத்து விட்டு போகுமாறு சொன்னேன். ’சும்மா வெளியே வாங்கண்ணா’ என்றான். எப்போது பார்த்தாலும் அவனை ’வாப்பா’ ஆரத்தழுவிக் கொள்வேன். அன்று தள்ளி நின்று அவனை வைத்து விட்டு போகச் சொன்னேன். அவன் என்னைப் பார்த்த விதம் கலங்க வைத்தது.
இப்படி ஒரு காலம் வரும் என ஒரு வருடத்திற்கு முன்னால் அறிந்திருக்கவே இல்லை. இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் இடைவெளிகளை மனிதர்களிடையே இருந்து அகற்றுவது, அவர்களை ஒன்றுபடுத்துவது , போர்க்குணத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பது என்று இயங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் சமூக இடைவெளியே அப்போது ஒரு ஒழுங்காகி விட்டிருந்தது.
டிவி, ஃபேஸ்புக் எங்கு சென்றாலும் தொற்று குறித்தும், நோய்கள் குறித்துமே செய்திகளாய் இருந்தன. வெறுமையும், அவநம்பிக்கையும் சூழ்ந்த நாட்கள். தெருக்களில் அமானுஷ்ய அமைதி நிறைந்திருந்தது. பறவைகள், நாய்களின் சத்தங்கள் கூட விநோதமாய் கேட்டன. எதுவும் பிடிக்காமல் போயிருந்தது.
இரண்டு மூன்று நாட்களில் அம்முவுக்கு தொற்று குறைந்து, உடல்நலம் திரும்ப ஆரம்பித்திருந்தது. ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. “நீங்களும் தடுப்பூசி போட்டிருக்கலாம்” என்று சொன்னாள்.
அடுத்தமுறை ஆஸ்பத்திரி சென்றபோதும் தொற்று குறையவில்லை என்றே ரிப்போர்ட்டும் டெஸ்ட்டும் காட்டின. சங்கரையும், அவன் மனைவியையும் அங்கே பார்த்தேன். சங்கர் பேசும்போது மூச்சிறைத்தது. டாக்டரிடம் அவனைப் பற்றி விசாரித்தேன். தொற்று அதிகமாய் இருக்கிறது. அட்மிட் ஆக வேண்டும் என்றார். சங்கரிடம் சொன்னபோது மறுத்தான். ‘இரண்டு நாள்ள சரியாயிரும்’ என்றான். சத்தம் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது தலையெல்லாம் விண் என்று இருந்தது.
அட்வகேட் கீதா போன் செய்தார்கள். அஃபிடவேட் தயார் செய்து விட்டதாகவும், மெயிலில் அனுப்புவதாகவும் சொன்னார்கள். நாம் எப்போது ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வோம் என கேட்டேன். ”கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டும். இந்த நிலமையில் கோர்ட் நடக்குமா எனத் தெரியவில்லை. ஒருவேளை ஆன்லைனில் ஹியரிங் நடக்கலாம்” என்றார்கள்.
உடல் மீதான பிரக்ஞை, நோய் குறித்த பதற்றம், சுற்றிலும் செய்திகள் தந்த துயரம் எல்லாவற்றையும் மீறி, நிர்வாகம் தோற்று நிற்கும் காட்சியை எப்படியும் காண வேண்டும் என்பது மட்டும் அந்த நேரத்தில் வைராக்கியமாய் இருந்தது.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
சார்ஜ் ஷீட் 42/2021- 5ம் அத்தியாயம்
”காலச் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் ஆடுகிறார்கள்” என்று நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தோழர் ரவீந்தரன் அந்த நேரத்தில் விமர்சித்து பதிவு செய்திருந்தார். அப்போதைய புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அவர். அந்த வார்த்தைகளின் பின்னணியில் ஒரு வரலாறே இருந்தது.
பாண்டியன் கிராம வங்கியில் 1988ம் ஆண்டு நடத்திய 44 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை ஒரு இதிகாசம் போல சென்ற தலைமுறைத் தோழர்கள் கிளைகளில் இன்றைய தலைமுறைக்கு கடத்தி இருந்தனர்.
2009ல் தோழர்கள் அண்டோவையும், காமராஜையும் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த போது பெரும் எண்ணிக்கையில் தோழர்கள் தலைமையலுவலகத்தில் திரண்டு சேர்மனை முற்றுகையிட்டனர். ஆறு மணி நேரத்துக்கு சேர்மன் எங்கும் செல்ல முடியாத, சேர்மனை யாரும் சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறை வந்து சங்கத் தலைவர்களிடம் சமாதானம் பேசிய பிறகே சேர்மன் வீட்டுக்குச் செல்ல முடிந்தது.
2010ம் ஆண்டில் நிர்வாகத்தின் புகாரின் பேரில் சங்கத் தலைவர்கள் சோலைமாணிக்கத்தையும், செல்வகுமார் திலகராஜையும் காவல்துறை கைது செய்தபோது அதை எதிர்த்து அடுத்தநாளே மின்னல் வேகத்தில் (Lightning Strike) வேலைநிறுத்தம் நடந்தது.
அந்தப் போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலும் படர ஆரம்பித்திருந்தது. அதே தலைமையலுவலக வளாகத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு, நடத்திய தர்ணாப் போராட்டம் அவ்வளவு எழுச்சியோடும், பெரும் திரளோடு நடந்திருந்தது.
எங்கே தலைமையலுவலகம் இருக்கிறதோ அங்கே சங்கத்தின் தலைவர்கள் இருந்து சங்கப் பணி ஆற்றுவதுதான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்து வந்தது. பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் இணைந்து தமிழ்நாடு கிராம வங்கியாக உருவெடுத்தவுடனே, நமது இரண்டு சங்கங்களிலிருந்தும் பொதுச்செயலாளர்களுக்கு சேலத்துக்கு டிரான்ஸ்பர்கள் கேட்கப்பட்டன. டிரான்ஸ்பர்கள் போடாமல் நிர்வாகம் இழுத்தடித்தது. முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து 2019 ஆகஸ்ட் 8ம் தேதி தர்ணாப் போராட்டத்தை அறிவித்தது. தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலிருந்து தர்ணாவுக்கு தோழர்கள் தயாராக ஆரம்பித்தனர். தர்ணாப் போராட்டத்திற்கு கலந்து கொள்ள லீவு மறுக்கப்பட்டது. மண்டல மேலாளர்கள் மூலம் ஊழியர்கள் பயமுறுத்தப்பட்டனர். தர்ணாவுக்கு முந்தைய நாள் அங்கங்கு கிளைகளிலேயே உடல்நலம் சரியில்லை என சில தோழர்கள் சுருண்டு கொண்டனர். அதுவே ஒரு போராட்ட வடிவமாக மாறியது. பின்னர் அந்தத் தோழர்கள் மெடிக்கல் லீவில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அடுத்தநாள் அறுநூறுக்கும் மேலான தோழர்களின் உரத்த கோஷங்கள் தலைமையலுவலகத்தை அதிரச் செய்தன. நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றியது ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்சயலாளராக நானும் ஆபிஸர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராக அறிவுடைநம்பியும் அப்படித்தான் சேலத்திற்கு சென்றிருந்தோம்.
அந்தப் போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலிருந்து புதுவை கிராம வங்கிக்கும் பரவ ஆரம்பித்தது. சேலத்தில் தர்ணா நடந்த இரண்டு வாரங்களுக்குள் 2019 ஆகஸ்ட் 23ம் தேதி புதுவையில் கிராம வங்கித் தலைமையலுவலகம் முன்பு ஆவேசத்துடன் அடுத்த போராட்டம் நடைபெற்றது. எந்த வங்கியிலும் நடைபெறாத கொடுமை அங்கு நடந்து கொண்டிருந்தது. கிளைகளில் உள்ள பணம் , நகைகள் வைத்திருக்கும் பெட்டகத்தின் சாவிகளில் ஒன்றை ஆபிஸரும் இன்னொன்றை கேஷியரும் வைத்திருப்பதுதான் நடைமுறை. தேவையான ஆட்களை பணிக்கு எடுக்காததால், ஐந்து கிளைகளில் ஆபிஸர்களே கிளர்க்குகளின் வேலைகளை பார்க்க வேண்டி இருந்தது. ஒரே ஆபிஸரே பெட்டகத்தின் இரண்டு சாவிகளையும் கையாள வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல, இல்லாத கேஷியருக்கு பொய்யாக ஒரு பாஸ்வேர்டு உருவாக்கி அதை ஆபிஸர்களே கம்ப்யூட்டரில் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் செய்ய நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுத்தது. மிக மோசமான, ஆபத்தான பணிச்சூழல் அங்கு இருந்தது. அதனை எதிர்த்து புதுவை பாரதியார் கிராம வங்கி சங்கத் தோழர்களுடன் தமிழ்நாடு கிராம வங்கி சங்கத் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடியாக கிளர்க்குகளுக்குரிய சாவியையும் பாஸ்வேர்டையும் கிளர்க்குகளே வைத்திருக்கும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும், இல்லையென்றால் கிளர்க்குகளின் சாவிகளைக் கொண்டு வந்து தலைமையலுலகத்தில் சேர்மனிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுப்போம் என அந்த தர்ணாவில் அறைகூவல் விடுக்கப்பட்டது. இரண்டே நாட்களில் சங்கத்தின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றியது.
தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி இரண்டிற்கும் ஸ்பான்ஸர் வங்கியாக இருந்த இந்தியன் வங்கி நிர்வாகத்திற்கும் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தின் மீது வன்மம் இருந்திருக்க வேண்டும். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் ரவீந்திரன் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.
உண்மைதான். போக்குவரத்து தடைசெய்யப்பட்ட, சமூக இடைவெளி என்பது விதியாக்கப்பட்ட கொரோனா காலத்தில் தோழர்களைத் திரட்டி நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஜனநாயகச் சூழல் இல்லை. வீரம் செறிந்த போராட்டங்களே வரலாறாகவும், போர்க்குணமே இயல்பாகவும் கொண்டிருந்த மகத்தான தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சோதனையான காலச்சூழல்தான் அது.
தேசம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் 2020 மார்ச் 23ம் தேதி இரவு 6 மணிக்கு தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள முன்னணித் தோழர்களுக்கு மட்டும் கீழ்கண்ட எச்சரிக்கையை வாட்ஸ்-அப் மூலம் தெரிவித்திருந்தேன்.
“வரும் நாட்கள் நம் வாழ்நாளில் மிகவும் நிதானத்துடனும், உறுதியுடனும் கடக்க வேண்டியவை என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். சாதாரண காலங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்வதைப் போல இப்போது முடியாது, கூடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு குழப்பமான சூழல் இது. முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்களும், ஸ்தம்பிப்புகளும் ஏற்படலாம். அவரவர் நிலைகளில் கொந்தளிப்புதான் நிலவும். அதே மனநிலையோடு நாம் பிரச்சினைகளை அணுக முடியாது.
நாம் சமூகத்தில் பொறுப்பு மிக்கவர்களாக சிந்திக்கவும், செயல்படவும் பக்குவம் பெற்றாக வேண்டும்.
சங்கத்தின் முன்னணித் தோழரான உங்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். சொல்லலாம்தானே?”
பொறுப்பு மிக்க ஒரு சங்கத்திற்கு இருந்த இந்த பிரக்ஞையும், நிதானமும் துளி கூட நிர்வாகத்திடம் இல்லை. தொழிற்சங்க இயக்கத்தை ஒடுக்குவதற்கும், முடக்குவதற்கும் உற்ற நேரம் அதுவென வெறி கொண்டிருந்தது.
3.5.2021 அன்று ஓய்வுகாலச் சலுகைகள் கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு நிர்வாகத்திடம் இருந்து பதில் ஒரு வாரத்திற்கு மேலாகியும் வரவில்லை. சங்கத் தோழர்கள் தொடர்ந்து என்னிடம் தகவல் வந்ததா என கேட்டுக் கொண்டு இருந்தனர்.
2020 நவம்பரில் கொஞ்சம் குறைந்திருந்த கொரோனா தொற்று 2021 மே மாதத்தில் மீண்டும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அம்முவுக்கு மீண்டும் பள்ளி விடுமுறை விட்டிருந்தார்கள். டி.வி செய்திகள் பதற்றத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தன. தெரிந்தவர்களின் உயிரிழப்புகளும், யாருமற்று அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதும் தாங்க முடியாததாய் நினைவுகளில் பாரமாகி கனத்தது. ஒரு கொடுங்காலத்தின் வெறுமையும், வேதனையும் எங்கும் சூழ்ந்திருந்தது.
10.5.2021 தேதியிட்ட நிர்வாகத்தின் கடிதம் 14.5.2021 அன்றுதான் வந்தது. முழுக்க முழுக்க செஷேஷனை (பணி ஓய்வு நிறுத்தம் ) உறுதி செய்து வந்த கடிதம்.
நான் பணி ஓய்வு பெற்ற 30.4.2021 அன்று நாமக்கல் மண்டல் மேலாளர் மூலம் செஷேஷன் குறித்த தகவலைப் பெற்று மின்னம்பள்ளி கிளை மேலாளர் என்னிடம் அதை தெரிவித்து விட்டதாக கடிதத்தின் முதல் பாரா. நாமக்கல் மண்டல மேலாளர் மின்னம்பள்ளி கிளை மேலாரிடம் செஷேஷன் பற்றி கூறியதும் வாய்மொழிதான் போல. மிகப் பெரிய வேடிக்கை இது. செஷேஷன் பற்றி முடிவெடுத்து அறிவிக்க வேண்டியவர் அதற்கென அதிகாரத் தகுதி (competent authority) பெற்றவர்தான். கிளர்க்குகளுக்கு அந்த தகுதி படைத்தவர் பொதுமேலாளர் (General Manager). எதுக்கு குறுக்கே நாமக்கல் மண்டல் மேலாளரை சைக்கிள் ஓட்ட விட்டிருக்கிறார்கள் என்று சிரிப்புத்தான் வந்தது.
வங்கியிலிருந்து முறையான கடிதம் பெற்ற பிறகுதான் நான் பணி ஓய்வு பெற முடியும் என இரண்டாவது இரண்டாவது பாரா. நிர்வாகம் முறையான கடிதம் கொடுக்காததுதானே மொத்தப் பிரச்சினையும்!
தமிழ்நாடு கிராம வங்கி ஸ்டாஃப் சர்வீஸ் ரெகுலேஷன்ஸ் பிரகாரம் – ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டால், அவரது பணி ஓய்வு நாளன்று அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்படும் என மூன்றாவது பாரா. யார் இல்லையென்றது? சார்ஜ் ஷீட்டிற்கு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை, எனவே உங்களது பணி ஓய்வை நிறுத்தி வைத்து ஒழுங்கு நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட இருக்கிறது என முறையான கடிதம் நிர்வாகம் கொடுக்காத போது எப்படி ஓய்வு நிறுத்தம் செல்லும் என்பதுதானே நமது கேள்வி?
எனவே, என் மீது விரைவில் தொடங்க இருக்கும் என்கொயரியில் பங்கு கொள்ள வேண்டும் என கடைசி பாரா. எவ்வளவு தெனாவெட்டு. அதிகாரத் திமிர்!
சங்கத் தோழர்களுக்கும், பெஃபி தலைவர்களுக்கும், அட்வகேட் கீதா அவர்களுக்கும் தகவல் தெரிவித்தேன். கூகுள் மீட்டில் கலந்தாலோசித்தோம்.
நிர்வாகம் எப்படியாவது என்கொயரி நடத்தி, காலத்தை இழுத்தடிக்க துடிப்பதை எல்லோரும் அறிந்திருந்தோம். சட்டத்திற்கு புறம்பாக 5 மணிக்குப் பிறகு செசேஷன் கொடுத்தது தவறு என சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு கேட்பது என முடிவு செய்தோம்.
அதற்கான பேப்பர்கள் தயார் செய்து அட்வகேட் கீதா அனுப்பச் சொன்னார்கள். நான் அந்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.
சரியாக அடுத்த இரண்டாவது நாள், மே 16ம் தேதி மதியம் அசதியும் காய்ச்சலும் என்னை படுத்த ஆரம்பித்து. வைரஸ் என்னையும் கவ்விக் கொண்டு விட்டது என்பதை அன்று இரவு உணர்ந்து கொண்டேன்.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
சார்ஜ் ஷீட் 42/2021- 4ம் அத்தியாயம்
“நீங்க விட்டாலும் மேனேஜ்மெண்ட் உங்கள விடாது போல…” என்று சொல்லி அவரும் சிரித்தார்.
சன்னல் வழியாக தெருவிளக்கின் வெளிச்சம் அறைக்குள் கசிந்திருந்தது. முதன்முதலாய் சாத்தூரில் வேலைக்குச் சேர்ந்து மணி சங்கர் லாட்ஜில் தங்கியிருந்தபோது இப்படியொரு தெரு விளக்கின் வெளிச்சம் அந்த அறைக்குள்ளும் இருந்தது. தூங்கும் வரை கூடவே ஒரு துணை போல இருக்கும். தூங்கி கண் விழித்த மாதிரிதான் இருக்கிறது. முப்பத்தேழு வருடங்கள் ஓடி சேலத்தில் இருந்தேன். எவ்வளவு எவ்வளவோ நடந்து முடிந்து விட்டிருந்தன.
தொழிற்சங்கம், அதன் லட்சியங்கள், நடவடிக்கைகள் எல்லாம் பிடித்திருந்தாலும், மிக நெருக்கமாய் உணர்ந்தது இலக்கியம்தான். புத்தகங்கள் வாசிப்பதிலும், எழுதுவதிலும் அவை குறித்து நண்பர்களோடு உரையாடுவதிலும் கிடைக்கும் அனுபவமும் சுகமும் தனி. சில கவிதைகளும், கதைகளும் எழுதி அந்த ருசியில் லயித்திருந்தேன். மணிசங்கர் லாட்ஜில் ஒருநாள் வந்து தங்கிய தோழர் சோமசுந்தரம் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைப் படித்து பேசியதிலிருந்துதான் அவரோடு பழக்கமானேன். கிருஷ்ணகுமாரின் பேச்சிலும் எழுத்திலும் தென்பட்ட இலக்கியம்தான் என்னை வசீகரித்து அவரிடம் பழக வைத்தது. சங்கத்திற்கு ’அக்கினிக்குஞ்சு’ என்று பத்திரிகை ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியராய் கிருஷ்ணகுமார் என்னை முன்மொழிந்ததற்கு முக்கிய காரணம் என்னிடம் தென்பட்ட இலக்கிய ஈடுபாடாகவே இருந்திருக்க வேண்டும். அப்படி ஆரம்பித்த உறவுகளோடு தொழிற்சங்கப் பணிகள் காலப்போக்கிலும், சூழல்களாலும் ஒட்டிக்கொண்டன.
1986ல் தோழர் கிருஷ்ணகுமார் தனக்கு உடல்நலம் இல்லையென்று, காரைக்குடிப் பக்கம் டிரான்ஸ்பர் கேட்டு தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அனுபவம் வாய்ந்த சோமசுந்தரம் பரமசிவம், கணேசன், போன்ற தோழர்களும் பொறுப்பில் இல்லை. நெருக்கடியான சூழலில் பெரும்பாலும் புதிய தோழர்கள் அடங்கிய ஒரு செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பொதுச் செயலாளராய் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகுமார் என்பவர் சில மாதங்களிலேயே காணாமல் போய் விட்டார். தோழர் சோலைமாணிக்கம், சங்கரலிங்கம் போன்றவர்கள் உதவிப் பொதுச்செயலாளர்களாய் இருந்தனர். நானும் காமராஜும் முதன்முதலாய் செயற்குழு உறுப்பினராயிருந்தோம். பெஃபி ( BEFI ) சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கோதண்டராமன் வழிகாட்டினார். திருச்செந்தூர் அருகில் உள்ள பூச்சிக்காட்டு கிளைக்கும் சாத்தூருக்குமாய் பயணங்கள், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள், எழுதி அனுப்பும் சர்க்குலர்கள், உறுப்பினர்கள் சந்திப்புகள் என சதா நேரமும் தொழிற்சங்கப் பணிகளால் நிறைந்தன. நிர்வாகத்துக்கு எதிராய் ஊழியர்களைத் திரட்டி 1987 டிசம்பர் மாதம் முடிக்க வேண்டிய ஆண்டுக்கணக்கையே முடிக்காமல் நிறுத்தி வைத்ததெல்லாம் நடந்தது. (1987 வரை டிசம்பர் மாதத்தில்தான் ஆண்டுக்கணக்கு முடிக்கும் வழக்கம் இருந்தது.)
1988ல் கிருஷ்ணகுமார் மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார். 1990ல் மீண்டும் தன் குடும்பச் சூழல்கள் காரணமாக பொதுச்செயலாளர் பொறுப்பில் தொடர முடியாது என்றார். ஒருநாள் விடிகாலையில் அவரும் தோழர் செல்வகுமார் திலகராஜும் காரில் பூச்சிக்காடு வந்தனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பு மனுவில் என்னைக் கையெழுத்திடும்படி கேட்டுக் கொண்டார். அனுபவம் குறைந்த நான் தயங்கினேன். அப்போதுதான் திருமணமாயிருந்தது. அம்மா வருத்தப்பட்டார்கள். நான் சங்கத்தின் பொதுச்செயலாளராகி சாத்தூருக்கு வந்தேன்.
இரண்டு வருடங்களில் மீண்டும் கிருஷ்ணகுமார் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார். பிறகு சில வருடங்களில் திரைப்படத்துறை மீது அவரின் கவனம் சென்றது. இயக்குனர் பாரதிராஜாவோடு நெருக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கிராம வங்கியின் வேலையை ராஜினாமா செய்து விட்டு பாரதிராஜாவின் இணை இயக்குனரானார். சங்கப் பணியில் தோழர்கள் முழுமையாக ஈடுபட வேண்டியிருந்தது. 2001ல் தோழர் சோலை மாணிக்கம் பொதுச்செயலாளரானார். நான் சங்கத்தின் செயற்குழுவில் துணைத்தலைவராக இருந்து கொண்டு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் சென்றேன். . 1993க்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தேன். ஆறு புத்தகங்கள் வெளிவந்தன. இரண்டு முக்கிய ஆவணப்படங்கள் எடுத்தேன். தீராத பக்கங்கள் என்னும் வலைத்தளம் உருவாக்கி தொடர்ந்து எழுதி வந்தேன். தோழர் சோலைமாணிக்கத்தால் அவை சாத்தியமாயின என்று நினைத்துக் கொள்வேன்.
2013ல் தோழர் சோலைமாணிக்கம் பணி ஓய்வு பெற்றார். நான் மீண்டும் சங்கத்தின் பொதுச்செயலாளரானேன். அதற்கு முன்னர் நான் பொறுப்புக்கு வந்த சூழலுக்கும் அப்போது இருந்த சூழலுக்கும் இருந்த வித்தியாசம் முக்கியமானது. முன்னர் அனுபவம் பெற்ற சக தோழர்களின் கூட்டுத்தலைமையில் சங்கம் செயல்பட்டது. 2013ல் பெரும்பாலும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வேகமாக பணி ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தனர்.
அந்த நேரங்களில் எனது சிந்தனையிலும் துடிப்பிலும் இருந்தது ஒன்றே ஒன்றுதான். பணி ஓய்வு பெறுவதற்கு இருந்த எட்டு ஆண்டுகளுக்குள் சங்கத் தலைமைக்கு இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான் அது. எனக்கு நானே விதித்துக் கொண்டது. இந்தக் காரியத்தில் எனக்கு உறுதுணையாக இருந்ததும், வழிகாட்டியதும் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், தோழர் போஸ்பாண்டியன், சோமசுந்தரம் ஆகியோர்.
2021ல் பணி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் இலக்கியத்தின் பக்கம் முழுசாகச் செல்லலாம் என்றிருந்தேன். நிர்வாகம் அதை விரும்பவில்லை போல. விடாது கருப்பு என சார்ஜ் ஷீட் கொடுத்து பிடித்து வைத்திருந்தது.
காலையில் தோழர்கள் அண்டோ கால்பர்ட், சங்கர், காமராஜ், தங்க மாரியப்பன், லஷ்மிநாராயணன் ஆகியோருடன் புறப்பட்டு சேலத்திலிருந்து சாத்தூர் வரை நினைவுகளோடுதான் பயணம் செய்து வந்தேன். அம்மு சிரித்துக் கொண்டே வாசலில் ஆரத்தியோடு தயாராய் இருந்தாள். சிறிது நேரம் பேசிவிட்டு தோழர்கள் விடைபெற்று அவர்கள் வீடுகளுக்கு சென்றனர்.
வீடு அமைதி கொண்டிருந்தது. ”அப்புறம்..” என அம்மு சிரித்துக் கொண்டே என் தோளைத் தட்டியபடி அருகில் உட்கார்ந்தாள். ஆசுவாசமாய் இருந்தது.
*
1.5.2021 மற்றும் 2.5.2021 இரண்டு நாட்களும் சனி ஞாயிறு. தோழர்களிடமும் அட்வகேட் கீதா அவர்களிடமும் நான் அடுத்து கொடுக்க வேண்டிய கடிதம் குறித்து கலந்தாலோசித்தோம்.
30.4.2021 அன்று 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயிலில் இரண்டு முக்கிய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
முதலாவது, 4.30 மணிக்கு மேலாளர் என்னிடம் செஷேஷன் குறித்து தகவல் (intimation) சொன்னதாக மட்டும் கூறப்பட்டு இருந்தது. அந்தத் தகவல் எழுத்துபூர்வமானதா, வாய்மொழியானதா என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வாய்மொழித் தகவல்கள் சட்டப்படி செல்லாது.
இரண்டாவது, செஷேஷன் ஆர்டரில் ஓய்வு கால சலுகைகள் என்கொயரி முடிந்த பிறகு கொடுக்கப்படும் என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது. செஷேஷன் கொடுப்பதாய் இருந்ததால், பென்ஷன் விதிகளின்படி என்கொயரி நடைபெறும் காலத்தில் தற்காலிக ஓய்வூதியம் (provisional Pension ) வழங்கப்படும் என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும்.
நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவும், சொல்லும் சட்டத்திற்கு புறம்பானது என்பதை புரிந்து கொள்வதறாகத்தான் இதனைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, செஷேஷனே செல்லாது என்பதே நமது நிலைபாடாய் இருக்கிறபோது, அனைத்து ஓய்வுகாலச் சலுகைகளையும் கேட்க வேண்டுமே தவிர, ஏன் தற்காலிக ஊதியம் தருவதாய் சொல்லவில்லை என கேட்பது சரியாய் இருக்காது. அதன் அடிப்படையில் நிர்வாகத்துக்கு கீழ்கண்டவாறு கடிதம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
30.4.2021 அன்று 5 மணி வரை நிர்வாகத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. எனவே, மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் எனது பணி ஓய்வுக்கான கடிதத்தைக் கொடுத்தேன். அவரும் அதனை பெற்றுக்கொண்டதை உறுதி செய்து கடிதம் கொடுத்தார்.
பின்னர் நிர்வாகத்திலிருந்து அனுப்பப்பட்ட மெயில் கிடைத்தது. அதில் கிளையின் மேலாளர் என்னிடம் செஷேஷன் ( cessation) குறித்து தெரிவித்ததாகச் சொல்லப்பட்டு இருந்தது. அத்தோடு செஷேஷனுக்கான கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி எந்த தகவலையும் மேலாளர் எழுத்துபூர்வமாக என்னிடம் தெரிவிக்கவில்லை.
மேலும் 30.4.2021 அன்று 5 மணியோடு நிர்வாகத்துக்கும் எனக்குமான முதலாளி – தொழிலாளி உறவு முடிந்து விட்டது. அதன் பின்னர் நிர்வாகம் எனக்கு அனுப்பிய செஷேஷன்னுக்கான கடிதம் சட்டப்படி செல்லாது.
எனவே எனக்கு ஓய்வுகாலச் சலுகைகளான கிராஜுவிட்டி, லீவு சரண்டர், பென்ஷன், கம்யூட்டேஷன் அனைத்தையும் உடனடியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3.5.2021 அன்று கடிதத்தை மெயிலிலும், பதிவுத் தபாலிலும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்கு அனுப்பினேன்.
சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்தின் இயல்பை கடந்த கால அனுபவம் தெளிவாய் காட்டியிருந்தது.
தோழர் அண்டோ கால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்த போது அதனை எதிர்த்து சங்கம் ஹைகோர்ட்டில் தடையுத்தரவு பெற்றது. அதை சேர்மன் செல்வராஜ் மதிக்கவில்லை. பின்னர் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ( contempt petition) தொடுத்தோம். ”முதலில் கோர்ட் உத்தரவை மதித்து அண்டோ கால்பர்ட்டை உள்ளே எடு” என்று சொன்ன பிறகே அவரை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியது.
செல்வராஜ் சட்டத்தை முடிந்தவரை மதிக்க மாட்டார். நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பார். நிச்சயமாய் நிர்வாகம் நான் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஓய்வுகாலச் சலுகைகளைத் தந்துவிடும் என்று நம்பிக்கையெல்லாம் இல்லை.
நினைத்தது போலவே அடுத்த நாள் நிர்வாகத்தின் முடிவு தெரிந்தது, 4.5.2021 அன்று வங்கியின் இண்ட்ரா நெட்டில் எனக்கு செஷேஷன் வழங்கப்பட்டு உள்ளது என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எப்படி செஷேஷன் செல்லும் என்பதற்கும் ஏன் ஓய்வுகால சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதில்லை என்பதற்கும் ஒரு காரணம் சொல்ல வேண்டுமே. அது என்னவாயிருக்கும் என்பது நிர்வாகத்திடமிருந்து கடிதம் வந்த பிறகுதான் தெரியும்.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
சார்ஜ் ஷீட் 42/2021 – 3ம் அத்தியாயம்
“நாலு முப்பதுக்கே மேனேஜர் மூலமா செஷேசன்னு தகவல் கொடுத்ததா கூசாமச் சொல்றாங்க. எங்க கொடுத்தாங்க. நாம எல்லாரும் அங்கத்தானே இருந்தோம்”
“அப்ப அஞ்சு மணி வரைக்கும் நிர்வாகத்துட்டயிருந்து எந்தக் கடிதமும் வரலன்னு நாமக் கொடுத்த கடிதத்தை வாங்கி எதுக்கு மேனேஜர் அஞ்சு பத்துக்கு அக்னாலட்ஜ் பண்ணாரு?”
“அடேங்கப்பா என்னா உருட்டு உருட்டுறாங்க?’
கோபமாய், கிண்டலாய் தோழர்கள் பேசிக்கொண்டாலும், நிர்வாகம் பிரச்சினையை முடிக்காமல் தொடர முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்தது.
நிர்வாகத்திடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றதும், சங்கத்திலிருந்து தலைமையலுவலகத்தில் சேர்மனிடம் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்களிடம் 1.3.2021 அன்று தர்ணாவின்போது தலைமையலுவலகத்தில் அத்து மீறி நடந்து கொண்டதற்கு மாதவராஜை வருத்தம் தெரிவித்து எழுதித் தரச் சொல்லுங்கள், சில இன்கிரிமெண்ட்களை குறைத்து ஆர்டர் கொடுக்கிறோம், பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் எனச் சொல்வதற்கு தயாராய் இருந்திருக்க வேண்டும். எனது பணி ஓய்வை நானே அறிவித்து கடிதம் கொடுத்துவிட்டு சென்று விடுவேன் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு முடிவு எடுத்து வைத்திருந்தது அங்கிருந்த சில தோழர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கடிதம் கொடுத்ததை மேலாளரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிர்வாகத்திடம் கேட்டுவிட்டு கையெழுத்திடலாம் என்ற யோசனையும்கூட அவருக்கு அந்த நேரத்தில் வந்த மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை மறுத்திருந்தால் என்ன செய்வது என்பது வரைக்கும் திட்டமிட்டிருந்தோம்.
திட்டமிடுவதும், அதை நிர்வாகத்துக்கு தெரியாமல் வைத்திருப்பதும் ஒரு அமைப்புக்கு மிக முக்கியம். சங்கத்திற்குள் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள நிர்வாகம் மெனக்கெடுவதும், நிர்வாகம் என்ன செய்கிறது எனத் தெரிந்து கொள்ள சங்கத்தரப்பில் முயற்சிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நிர்வாகம் ஊழியர்களைத் தாக்குவதற்கும், சங்கம் ஊழியர்களை தற்காத்துக் கொள்வதற்கும் தகவல்களை சேகரிக்கின்றன. கிடைக்கும் சின்னச் சின்னத் தகவல்களில் இருந்து அடுத்து என்ன அசைவு என்பதை ஊகித்தறிய முடியும். அதற்கான வாய்ப்புகளைக் கொடுக்காமல் இருப்பது முக்கியமானது. எனவேதான் தொழிற்சங்கத்தின் பொறுப்புக்கு வருகிறவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பது முதன்மையான தகுதியாகிறது.
ஆக, நிர்வாகம் தகவல் கிடைக்காமல் இந்தச் சுற்றில் நிலைதடுமாறிப் போயிருப்பதை, அந்த மெயில் உணர்த்தியது. தோழர்கள் சி.பி.கிருஷ்ணன், ராஜகோபாலன், அட்வகேட் கீதா ஆகியோருக்குத் தெரிவித்தோம்.
மாறி மாறி தோழர்களிடமிருந்து போனில் அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. சாத்தூரிலிருந்து தோழர் காமராஜ் பஸ்ஸில் பயணம் செய்து களைப்போடு வந்து சேர்ந்தார். முந்தினநாள் தங்கமாரியப்பன், லஷ்மிநாராயனன், சங்கரோடு வருவதாக இருந்தவர். அடுத்த மாதம் பணி ஓய்வு பெற இருந்தார். அன்றிரவே சாத்தூருக்குக் கிளம்பாமல், அடுத்த நாள் விடிகாலையில் கிளம்பிச் செல்வதாக முடிவு செய்தோம்.
வீட்டில் அம்முவுக்குப் போன் செய்து எல்லாவற்றையும் சொன்னேன். ”இருக்கட்டும் வாங்க. பாத்துக்கலாம்” அவளுக்கே உரிய சிரிப்போடு சாதரணமாகச் சொல்லிவிட்டு ”காலைலயா வர்றீங்க. பாத்து நல்லபடியாய் வாங்க” என முடித்துக் கொண்டாள். எப்பேர்ப்பட்ட பெண் அவள்! முழு விவரங்கள் தெரியா விட்டாலும், பணி ஓய்வு பெறப்போகும் நேரத்தில் என்னைப் பழிவாங்குவதற்கு வேண்டுமென்றே நிர்வாகம் சார்ஜ் ஷீட் கொடுத்திருக்கிறது என்று தெரிந்திருந்தாள். “நீங்களும் உங்க சங்கமும் அவங்கள விடவாப் போறீங்க” என்பதுதான் அவளிடமிருந்து முதலில் வந்த வார்த்தைகள். இந்த தொழிற்சங்கத்தின் மீது அவளுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை.
இரவில் எல்லோரும் சங்க அலுவலகத்தின் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சேலத்திலிருந்த பத்தொன்பது மாதங்களில் ஆறு மாதங்கள் போலத்தான் இயல்பான வாழ்வு காலம். மீதி பதிமூன்று மாதங்களும் கொரோனாக் காலம்தான்.
நிர்வாகம் அதுதான் சமயம் என்று தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது. நோய் குறித்த அச்சமும், போக்குவரத்து அற்ற சூழலும் அப்பியிருந்த நாட்களில் கூட நிர்வாகம் ஊழியர்கள் பக்கம் நின்று யோசிக்கவில்லை. ”லீவுக்கு ஊருக்கு வந்தோம், இப்போது லாக் டவுன் அறிவித்து விட்டார்கள். நாங்கள் எப்படி கிளைக்குச் செல்வது” என பெண் ஊழியர்கள் பதறினார்கள். தினமும் இருநூறு கி.மீக்கும் மேலே பல ஆண் ஊழியர்கள் பைக்கில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. ”பேங்க்கில் வேல செய்றீங்க, கொரோனாவை கூட்டிட்டு வந்துராதீங்க” என்று வேலை பார்த்த இடங்களில் வாடகைக்கு இருந்த ஊழியர்களை வீட்டின் சொந்தக்காரர்கள் காலி செய்யச் சொன்னார்கள். ஊழியர்களின் போன் அழைப்புகளில் வலியும் வேதனையுமே இருந்தது. நிர்வாகத்திடமிருந்து எந்த அசைவும் ஆதரவும் தென்படவில்லை. அப்போது நான் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராய் இருந்தேன். சங்கத்திலிருந்து பெரும்பாலும் ஹெச்.ஆர்.எம்முக்கோ, ஜி.எம்முக்கோதான் பேசுவோம். ரொம்ப அவசியமாக இருந்தால் மட்டும் சேர்மனுக்கு போன் செய்வோம். ஒரு பெண் ஊழியர் ஸ்கூட்டியில் வங்கிக்கு வரும்போது, அந்தப் பகுதியை ’கண்டெய்ன்மெண்ட் ஜோன்’ என அறிவிக்கப்பட்டதாகக் கூறி அவரை போலீஸார் திருப்பி அனுப்பி் இருக்கிறார்கள். அந்த பெண் ஊழியர் சம்பந்தப்பட்ட மண்டல மேலாளருக்குத் தெரிவித்திருக்கிறார். மண்டல மேலாளரோ ”அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்கள் பிராஞ்ச்சுக்கு போயாக வேண்டும்” என சொல்லியிருக்கிறார். அந்தப் பெண் ஊழியர் அழுதுகொண்டே எனக்கு போன் செய்தார். மிஸ்டர் செல்வராஜ் தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மனாக வந்தபிறகு அன்றைக்குத்தான் முதல் முறையாக போன் செய்து பேசினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பிரச்சினையைச் சொன்னேன். ”அதுக்கு உடனே எங்கிட்ட பேசணுமா சார்? நா என்ன சும்மாவா இருக்கேன்?” என எடுத்தவுடன் எரிச்சல் பட்டார். நான் நிதானமாக “இந்த மூன்று மாதங்களில் ஒருதடவை கூட உங்களிடம் நான் போனில் பேசியதில்லை. இப்போது அவசரம் என்பதால் பேசுகிறேன்” என்று சொன்னேன். ”சரி, பார்க்கிறேன்” என்று வேண்டா வெறுப்பாய்ச் சொல்லி போனை வைத்துவிட்டார்.
சேர்மன் செல்வராஜின் குரலும், தொனியும் வித்தியாசமாய்ப் பட்டது. முதன்முறையாக பேசும் ஒருவரிடம் எதற்கு இத்தனை வெறுப்பும் அலட்சியமும்? எனது தொழிற்சங்க வாழ்வில் நான் பார்க்கும் பதினேழாவது சேர்மன் அவர். யாரிடமும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை.
அதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு தோழர், “நம் சங்கத்தைப் பற்றியும் உங்களைப் பற்றியும் முன்கூட்டியே நிறைய ஏத்திவிட்டுத்தான் செல்வராஜை இந்தியன் பேங்க்லயிருந்து இங்கு சேர்மனாக அனுப்பியிருக்காங்கன்னு பேசிக்கிறாங்க. முந்தைய சேர்மன் தன்ராஜ் நம்ம சங்கத்துக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டாராம். இந்த பேங்க்ல நம்ம ரெண்டு சங்கமும் வச்சதுதான் சட்டமாயிருக்காம். நம்ம சொல்றதத்தான் மெம்பர்கள் கேக்காங்களாம். ரீஜினல் மேனேஜர்லாம் நம்மைப் பாத்து பயப்படுறாங்களாம். பழைய அதியமான் பேங்க் கேங் ஒன்னு லாபி பண்ணிட்டு இருக்காங்க. அந்த லாபில வந்தவர்தான் இப்போ ஹெச்.ஆர். எம்மா இருக்கும் ஜெயக்குமார். அவருக்கு நம்ம யூனியன்னாலே ஆகாது.” என்று அவருக்கு கிடைத்த தகவல்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.
கொரொனாக் காலங்களில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அவர் சொன்னதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தன. கூட்டமாய்ச் சேருவதும், இயக்கம் நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழலில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டவையாகவேத் தெரிந்தன.
அண்டோ கால்பர்ட்டை சஸ்பெண்ட் செய்ததில் நிர்வாகத்தின் தாக்குதல் படலம் ஆரம்பித்தது. கோவிட் தொற்று காலத்தில் ஊழியர்களின் நலனில் நிர்வாகத்தின் அலட்சியத்தை சங்கம் அம்பலப்படுத்தியது. தோழர் ஸ்ரீனிவாசனின் மரணம் வங்கியையே உலுக்கியது. வங்கிக்கு வருவதும் செல்வதுமே பெரும் நெருக்கடியாக இருந்த அந்த நேரத்தில் காலை 10 மணிக்கு சரியாக கம்ப்யூட்டரில் வருகையைப் பதிவு செய்யும் முறையை நிர்வாகம் அமல்படுத்தியது. சங்கம் விமர்சனம் செய்தது. சேர்மன் செல்வராஜ்க்கு பொத்துக்கொண்டு வந்துவிட்டது. சங்கத்தோடு பேச மாட்டேன் என்று அடம்பிடித்தார். 21.7.2020 அன்று சங்கத்திலிருந்து ஜி.எம்மை சந்தித்துப் பேசினோம். பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது. அந்த நேரத்தில் வெளியே நின்றிருந்த தோழர்கள் அண்டோ கால்பர்ட், சந்தான செல்வம் போன்றவர்கள் கைகளை தூக்கியபடி ஒரு செல்பி எடுத்து சங்கத்தின் பிரத்யேக வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டிருந்தனர். அதை எடுத்து வைத்துக் கொண்டு தோழர் அண்டோ கால்பர்ட் தலைமையலுவலகத்திற்குள் ஆரப்பாட்டம் செய்ததாகவும், வங்கியின் ஒழுக்க நெறிகளை மீறி விட்டதாகவும் சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம். கோவிட் நேரத்திலும் நம் சங்கங்கள் தலைமையலுவலகத்தின் முன்பும், மண்டல அலுவலகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அண்டோவின் சஸ்பென்ஷனை எதிர்த்து தடையுத்தரவு பெற்றது. மூக்குடைபட்ட நிர்வாகம் அண்டோவை தூத்துக்குடியிலிருந்து கடலூர் அருகில் டிரான்ஸ்பர் போட்டு தன் ஆத்திரத்தை விடாமல் காட்டியது.
யோசித்துப் பார்க்கும்போது தலைமையலுவலகத்தில் சங்கத்தின் தலைவர்கள் நடமாடுவதே நிர்வாகத்துக்கு பொறுக்க முடியாமல் இருந்திருக்கிறது. இப்போது எங்கள் ஆறு பேருக்கு கொடுத்த சார்ஜ் ஷீட்டிலும் தலைமையலகத்தில் நுழைந்து வன்முறையாக நடந்து கொண்டதாகத்தான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. எப்போது ஒரு நிர்வாகம் ஒரு சங்கத்தின் மீது வன்மமும், வெறுப்பும் கொண்டிருக்கிறதோ, அப்போது இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடும். தன்பயத்தில் இருந்து உருவாகும் நடவடிக்கைகளாகவும் இருக்கும்.
1984ம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கியில் கிருஷ்ணகுமார், சோலைமாணிக்கம், சோமசுந்தரம் போன்ற தோழர்கள் தலைமையில் போராட்டக்குணம் கொண்ட சங்கம் உருவெடுத்தபோதும் இதே நிலைமை இருந்தது. தலைமையலுவலகத்தில் சங்கத்தலைவர்கள் காலடி எடுத்து வைத்தாலே சூழல்கள் இறுக்கமாகும். சேர்மனின் அறைக்குள் ரெட் லைட் எரிந்து விடும். தோழர் கிருஷ்ணகுமாரோடு மெம்பர்கள் தலைமையலுவலகத்தில் வைத்து பேசவே பயந்தார்கள். தலைமையலுவலகச் சுவரில் சங்கம் ஒட்டிய போஸ்டரை ஒரு சூப்பிரண்டட்டே ( டிபார்ட்மெண்ட் ஹெட்) வெளியே வந்து கிழித்தார். அதையெல்லாம் மீறித்தான் சங்கம் வளர்ந்தது.
அந்தக் கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். சுற்றிலும் மலைகள் நிழல் உருவங்களாய் நின்றிருந்தன. மெல்லிய காற்று வீசியது. தேய்பிறை ஆரம்பித்து மூன்று நாட்களே ஆகியிருந்தன. முழு நிலவின் மேலே கொஞ்சம் காணாமல் போயிருந்தது. அடுத்து வளர்பிறை வரத்தானே செய்யும்.
எல்லோரும் கீழே வந்து படுக்க ஆரம்பித்தோம். இந்த கொரோனாக் காலத்திலும் குறைந்தது பத்து முறைக்கும் மேலாக இந்த சங்க அலுவலகத்தில் இருபது இருபத்தைந்து பேர் வந்து தங்கி இப்படியெல்லாம் பேசியிருந்தோம். முக்கிய காரியங்களில் ஈடுபட்டிருந்தோம்., நடு இரவில் எழுந்து பார்த்தால் அறைகளெங்கும் இளம் தோழர்கள் அசையாமல் மூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்த சங்கத்தின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கை தந்த நாட்கள் அவை. நிர்வாகத்தின் அடிமடியில் வெடி வைத்த நாட்களும்தான். கொஞ்ச காலம் எடுக்கலாம். ஒவ்வொன்றாக நிச்சயம் வெடிக்க ஆரம்பிக்கும்.
அருகில் படுத்திருந்த தோழர் அறிவுடைநம்பி, “அடுத்து நீங்க லெட்டர் கொடுக்கணும்ல” என்று கேட்டார்.
“ஆமா தோழர். ஞாயித்துக்கிழமைக்குள்ள நாம் முடிவு பண்ணிருவோம். திங்கக் கிழமை கொடுத்துருவோம்” என்றேன்.
“ம்… இனும எப்போ வருவீங்க தோழர்?” என்றார். அந்தக் குரலில் அன்பும், பிரிவும் அடர்ந்திருந்தது.
(தொடரும் )
சார்ஜ் ஷீட் 42/2021 – 2ம் அத்தியாயம்
ஒருவேளை நிர்வாகம் பணி ஓய்வு குறித்து எந்தத் தகவலையும் எழுத்து பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டு இருந்தோம். அட்வகேட் கீதா, பெஃபி (BEFI) மாநிலத் தலைவர்களில் முக்கியத் தோழர் சி.பி.கிருஷ்ணனையும் கலந்தாலோசித்து முடிவெடுத்திருந்தோம்.
”எனது வங்கிப்பணி இன்று 5 மணியோடு நிறைவடைகிறது. பணியிலிருந்து விடையனுப்புவது குறித்து எந்தத் தகவலும் நிர்வாகத்திடமிருந்து 5 மணி வரைக்கும் வரவில்லை. எனவே, நான் வங்கிப்பணியிலிருந்து 5 மணிக்கு நான் விடுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது” என ஆங்கிலத்தில் டைப் செய்து தயாராக வைத்திருந்த கடிதத்தின் இரண்டு நகல்களை கிளையின் மேலாளர் கதிர்வேலுவிடம் கொடுத்தேன்.
தோழர்கள் அண்டோ, அறிவுடைநம்பி, அஸ்வத், சங்கர் போன்ற தோழர்கள் எங்கள் அருகில் வந்து நின்றார்கள். மற்றவர்கள் கவுண்டருக்கு அந்தப் பக்கம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். கனத்த அமைதி.
மேலாளர் படித்துவிட்டு இரண்டு நகல்கள் எதற்கு என்பது போல என்னைப் பார்த்தார்.
“ஒரு காப்பி உங்களுக்கு. இன்னொரு காப்பில நீங்க எனக்கு (acknowledge) அக்னால்ட்ஜ் செஞ்சு தரணும்” என்றேன்.
திரும்பவும் கடிதத்தை ஒருமுறை படித்தார். வங்கியின் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தார். எதுவும் சொல்லாமல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக எழுதி, கையெழுத்திட்டு கீழே 5.10 என்று நேரத்தையும் குறிப்பிட்டுத் தந்தார்.
என் கையில் அவர் தந்த கடிதம் எவ்வளவு மதிப்பு மிக்கது. அந்த காகிதம் பேசும் வார்த்தைகளை நீதிமன்றங்கள் புறந்தள்ளவே முடியாது. அதையெல்லாம் கதிர்வேலு அறிந்திருந்தாரா என்று தெரியாது. நேர்மையாக பாரபட்சமில்லாமல் நடந்து கொண்டார் என்பது தெரிந்தது.
எனக்காகவோ அல்லது நிர்வாகத்துக்காகவோ அவர் செயல்படவில்லை. எது உண்மையோ அதை எழுதியிருந்தார். பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த நேர்மை மிக முக்கியமானது. உண்மைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டால், இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. உண்மைகள் பதிவு செய்யப்படாமல் போகும்போது நீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடும்.
”மிக்க நன்றி” அவரது கைகளைப் பற்றிச் சொன்னேன். மேலாளரும், கிளர்க்கும், அங்கிருந்த அப்ரைசர், தற்காலிக ஊழியரும் சேர்ந்து ஒரு நினைவுப்பரிசை வழங்கினர். தோழர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.
விடைபெறும்போது, “சார் உங்களோடு இந்த பிராஞ்ச்சில் வேல பாத்தத மறக்க மாட்டேன். நீங்களும் நினைவில் வச்சுக்கங்க” என்றார் சிரித்துக் கொண்டே.
”எப்படி உங்கள மறப்பேன்” என்று ஆரத் தழுவிக் கொண்டேன்.
சேலத்தில் இருக்கும் சங்க அலுவலகத்திற்குத் திரும்பினோம். பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு 2019 அக்டோபரில் இருந்து இந்த கிளையில் பணியாற்றி வந்தேன். இதே சாலையில் தினமும் பைக்கில் வந்து போய் இருந்தேன். சங்கக் கூட்டங்கள் இல்லாத சனி ஞாயிறு கிழமைகளில் சாத்தூருக்கு ரெயிலில் போய் வந்தேன். 2020 மார்ச்சில் கொரோனா பரவிய பிறகு, போக்குவரத்து வசதிகள் இல்லாமல் போயின. நிர்வாகத்திடம் சாத்தூர் அருகில் பணியாற்ற சங்கத்தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. அப்படியொரு ஏற்பாட்டை அந்த நெருக்கடியான தருணத்தில் செய்து கொடுக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
சேர்மன் செல்வராஜ் மறுத்துவிட்டதாக ஹெச்.ஆர்.எம் ஜெயக்குமார் சொன்னார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதிகாலை ஐந்தரை மணிக்கு சாத்தூரில் இருந்து தனியாகக் காரில் கிளம்பி 320 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளி கிளைக்கு சரியாக 10 மணிக்கு வருவேன். கோயம்புத்தூரிலிருந்து ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி சேலம் வருவார். நாங்கள் சமைக்க ஆரம்பித்தோம். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். எவ்வளவோ பேசியிருந்தோம். பெரும்பாலும் சமூகம், அரசியல், தொழிற்சங்கம்தான். பத்தொன்பது மாதங்கள் நினைவுகளாகி ஓடிக்கொண்டு இருந்தன.
இடப்பக்கம் மலைக்குன்றுகளும், அதற்கு ஊடே ஓடிய பாதைகளும் மங்கிய சாயங்கால வெயிலில் ’அப்பாடா’ எனத் தெரிந்தன. அடிவாரத்தில் சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கொய்யா, ஏழலைக் கிழங்கு விற்கும் வயதான அம்மா அப்போதும் அந்த மரத்தடியில் தனியாக உட்கார்ந்திருந்தார். ஒவ்வொரு இடமும் பழக்கமானவை. எல்லாம் பின்னால் போய்க்கொண்டு இருந்தன.
“அண்ணே, மேலாளர் கையெழுத்து போட்டுட்டாரே. இன்னேரம் மேனேஜ்மெண்ட் அவரப் படுத்தி எடுத்திருப்பாங்களே” என்றான் அண்டோ. ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆபிஸர்ஸ் அசோஷியேஷன் செயல் தலைவராய் இருந்தான் அண்டோ. ’அண்ணே” என்று அழைத்து நெருக்கமாக பழகுகிறவர்களை தம்பி என்று அழைக்கத் தொடங்கி அது நாளடைவில் ’அவன்’ , ‘இவன்’ என்று தன்னிச்சையாக அழைக்கும்படி ஆகிறது. தோழர் என அழைக்கப்படும்போது ‘அவன்’, ‘இவன்’ என்று பெரும்பாலும் வருவதில்லை.
”மேனேஜர் சாயங்காலம் நாலு மணியிலயிருந்து யார்ட்டயோ மாறி மாறி போன் செஞ்சுக்கிட்டு இருந்தார். நாமக்கல் ரீஜினல் மேனேஜர்ட்ட பேசியிருக்கணும். இல்ல, ஹெச்.ஆர்.ல ஜெயக்குமார்ட்ட பேசியிருக்கணும். அவங்க சேர்மன்ட்ட கேட்டிருப்பாங்க. எல்லாம் அவர்தான. என்ன சொன்னாரோ?” என்றான் ஒர்க்கர்ஸ் யூனியன் உதவித் தலைவராயிருந்த சங்கர்.
”ரெண்டு நாளைக்கு முன்னால ஏப்ரல் 28ம் தேதி யூனியனுக்கு மெம்பர்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்க விடாம செக் ஆப் வசதியை நிறுத்துறாங்க. நம்ம சங்கத்து மேல மேனேஜ்மெண்ட வச்சிருக்கிற வன்மம் அப்பட்டமாத் தெரியுது. அதனால நாங் கூட நெனைச்சேன். இன்னிக்கு காலையிலேயே உங்களுக்கு ரிடையர்மெண்ட் கொடுக்காம நிறுத்தி செஷேஷன் (cessation) ஆர்டர் கொடுத்துவாங்கன்னு. ஆனா எதுவும் கொடுக்கல?” அண்டோ கேட்டுக்கொண்டே யோசித்தது தெரிந்தது.
அவன் கேட்டது சரிதான். சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகம் கடுமையான வன்மத்தோடு மூர்க்கத்தனமாக கடந்த இரண்டு மாத காலமாக தாக்குதல்கள் நடத்தி கொண்டு இருந்தது. ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுத்தது. ரிடையர் ஆன தோழர்கள் சோலைமாணிக்கம், கிருஷ்ணனுக்கு பென்ஷனை நிறுத்தப் போவதாக மிரட்டல் கடிதம் அனுப்பியது. சேர்மன் செல்வராஜே தரம் இறங்கி சங்க நடவடிக்கைகளை சிறுமை படுத்தி, ”இவர்களிடம் எந்த மொழியில் பேசுவது என்று தெரியும்.” என 20.4.2021 அன்று இண்ட்ராநெட் சர்க்குலரில் ஊழியர்களிடம் தொடைதட்டி கொக்கரித்திருந்தார். அந்த சர்க்குலர் முழுவதும் பொய்யும், அவதூறுகளும்தான். எந்த வங்கியின் உயரதிகாரியும் அப்படி ஒரு தொனியை பயன்படுத்தி இருக்க மாட்டர்கள். அந்த சர்க்குலர் வெளியிட்ட சில நாட்களில் சங்கத்தின் செக்-ஆப் நிறுத்தப்பட்டது.
அப்படி இருக்கும்போது ஏன் இன்று எனக்கு செஷேஷன் ஆர்டர் கொடுக்கவில்லை? நிர்வாகத்தின் முன்பு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருந்தன. அதை சங்கமே தெளிவாகவே முன்வைத்திருந்தது.
மொத்தம் ஆறு தோழர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டதும் சங்கத்திலிருந்து அட்வகேட் கீதா, பெஃபி சங்கத் தலைவர்களோடு விவாதித்தோம். சார்ஜ் ஷீட்டிற்கு சென்னை ஹைகோர்ட்டில் தடையுத்தரவு வாங்குவது என யோசனை வந்தது.
அப்போது நான் என் கருத்தை முன்வைத்தேன். மற்ற ஐந்து தோழர்களும் இளம் தோழர்கள். அவர்களுக்கு பணிக்காலம் நிறைய இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்து, அது எவ்வளவு காலம் இழுத்தடித்தாலும் பிரச்சினை இலை. ஆனால் எனக்கு ஒரு மாத காலமே பணிக்காலம் இருக்கிறது. ஹைகோர்ட்டில் வழக்கு வருடக் கணக்கில் நடந்தால், அதுவரைக்கும் ஓய்வுகாலச் சலுகைகளும் நிறுத்தப்பட்டிருக்கும். எனவே நான் மட்டும் சார்ஜ் ஷீட்டிற்கு பதில் கொடுக்கிறேன். ஹைகோர்ட்டில் எனக்காக வழக்கு தொடர வேண்டாம். அப்போது நிர்வாகத்துக்கு இரண்டு ஆப்ஷன்கள்தான் இருக்கும். ஒன்று என் சார்ஜ் ஷீட் பதிலை ஏற்றுக்கொண்டோ அல்லது ஏற்றுக்கொள்ளாமலோ ஒரு தண்டனை கொடுத்து பணி ஓய்வுக் கடிதம் கொடுக்கும். அந்த தண்டனை ஏற்புடையதாக இல்லையென்றால் அப்போது நாம் கோர்ட்டுக்குச் செல்லலாம். இரண்டாவது ஆப்ஷன், நிர்வாகம் என் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் என்கொயரி நடத்தலாம். அப்படி நடத்தினால் அதை எதிர்கொண்டு நிர்வாகத்தை அம்பலப்படுத்தலாம். அத்தனையும் பொய்கள். அதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் கிடையாது. நிர்வாகம் அதனை நிரூபிக்க முடியாது.” என்றேன்.
அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என அன்புக்குரிய தோழர்கள் தயங்கினார்கள். அட்வகேட் கீதா அவர்களும், தோழர் சி.பி.கிருஷ்ணனும் அப்படியேச் செய்யலாம் என்றார்கள். அதன் அடிப்படையில் மற்ற தோழர்களுக்கு ஹைகோர்ட் சென்று சார்ஜ் ஷீட்டிற்கு அட்வகேட் கீதா தடையுத்தரவைப் பெற்றார்கள்.
நான் சார்ஜ் ஷீட்டிற்கு12.4.2021 அன்றே பதில் அளித்துவிட்டேன். அதன் மேல் முடிவெடுக்க நிர்வாகத்துக்கு பதினெட்டு நாட்கள் அவகாசமிருந்தது. ஒன்று எதாவது தண்டனை அளித்து என் ஃபைலை முடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் என்கொயரி நடத்தப் போவதாகக் கூறி செஷேஷன் ஆர்டர் தந்திருக்க வேண்டும்.
ஆனால் நிர்வாகம் இரண்டையுமே செய்யவில்லை. அதைத்தான் தோழர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
சங்க அலுவலகம் வந்ததும் இறங்கினோம். அருகில் உள்ள கிளைகளில் இருந்து சங்க உறுப்பினர்கள் வந்திருந்தனர். பணி ஓய்வுக்கு வாழ்த்தினாலும் உள்ளுக்குள் அவர்களிடம் எதோ வாட்டம் இருப்பதை உணர்ந்தேன். தோழர்கள் அறிவுடைநம்பி, அண்டோ, அஸ்வத், பரிதிராஜா எல்லாம் அவர்களுக்கு நம்பிக்கையளித்துப் பேசினர்.
“எனக்கு பணி ஓய்வு நிர்வாகம் கொடுத்திருக்க வேண்டும். தரவில்லை. நாமே பணி ஓய்வுக்கான கடிதம் கொடுத்து நாமே அறிவித்துக் கொண்டோம். அதுபோல நாமே பணி ஓய்வு சலுகைகளையும் எடுத்துக் கொள்ளும் நாள் வரும். எல்லாவற்றையும் நமது சங்கம் எனக்கு பெற்றுத் தரும்” என அந்தக் கூட்டத்தில் பேசினேன். என் தைரியமும் தெம்பும் அவர்களுக்கு நம்பிக்கையளித்திருக்க வேண்டும்.
கேக் வெட்டியதும் அந்தச் சூழல் கலகலப்பானது.
உள்ளுக்குள் ஒரு சந்தேகம் வரவும் என் லேப்டாப்பில் மெயிலைப் பார்த்தேன். ஹெச்.ஆரிலிருந்து மெயில் வந்திருந்தது.
”இன்று மாலை 4.30 மணிக்கு உங்கள் கிளை மேலாளர் மூலம் உங்கள் பணி குறித்து செஷேஷன் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 30.4.2021 அன்றிருந்து உங்கள் பணி செஷேஷன் ஆகிறது. 30.4.2021 முதல் உங்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. என்கொயரிக்கு பிறகு ஓய்வுகால சலுகைகள் எதேனும் இருந்தால் பின்னர் வழங்கப்படும்” என்று பொதுமேலாளர் மெயில் அனுப்பி இருந்தார்.
மெயில் அனுப்பப்பட்ட நேரத்தைப் பார்த்தேன். 7.36 என்று காட்டியது.
(தொடரும்)
சார்ஜ் ஷீட் 42/2021 – 1ம் அத்தியாயம்
-----------
“5 மணி வரை இருப்பேன். அதன்பின் ஒரு நிமிடம் கூட நான் இங்கு இருக்க மாட்டேன்.”
மேலாளர் கதிர்வேலுவிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன். கொரோனா முகக் கவசம் அணிந்திருந்த அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அப்போது நேரம் மாலை 4.25. நாள் 30.4.2021.
முப்பத்தேழு வருடங்களும், 5 மாதங்களும் பணிபுரிந்த தமிழ்நாடு கிராம வங்கியில் (2019 மார்ச் மாதம் வரை பாண்டியன் கிராம வங்கி) இருந்து ஓய்வு பெற மேலும் 35 நிமிடங்கள் இருந்தது.
சாத்தூர் தலைமையலுவலகம், பூச்சிக்காடு, சாத்தூர் கிளை, விருதுநகர், சங்கரலிங்கபுரம், திருத்தங்கல், சாத்தூர், சூலக்கரை மேடு கிளைகளில் பணிபுரிந்திருந்தேன். தொழிற்சங்கப் பணியின் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்த 600 கிளைகளில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுக்கு சென்றிருந்தேன். கடைசியாக சேலத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளி என்னும் அந்த சிறிய ஊரின் கிளையில் அமர்ந்திருந்தேன்.
1983, டிசம்பர் 1ம் தேதி, எனது 22ம் வயதில் இந்த வங்கியில் பணிக்குச் சேர்ந்தேன். வாழ்வின் பெரும்பகுதி இந்த வங்கியோடுதான். கூட்டங்கள், போராட்டங்கள், பயணங்கள் என காலமெல்லாம் தோழர்களோடும், வங்கியின் ஊழியர்களோடும் இருந்த நினைவுகள் அலைமோதிக் கொண்டு இருந்தன. தொழிற்சங்கப் பணிகளும் அதுகுறித்த சிந்தனைகளும், செயல்களுமாய் நிறைந்த அனுபவங்களால் நெஞ்சு விம்மிக் கிடந்தது.
அந்தக் கிளையில் தோழர்கள் அறிவுடைநம்பி, பத்மநாபன் அண்டோ கால்பர்ட், அஸ்வத், பரிதிராஜா, சங்கர், லஷ்மி நாராயணன், தங்க மாரியப்பன், பத்மநாபன், வினோத், ராஜராஜன் இன்னும் சில தோழர்கள் என்னோடு இருந்தார்கள். பா.கிருஷ்ணகுமார், சோலை மாணிக்கம், போன்ற தோழர்களோடு சாத்தூரில் ஆரம்பித்த பயணம் அது. விருதுநகர் வழியாக வந்து சேலத்தில் இளம் தோழர்களோடு தொடர்ந்திருந்தது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து கொண்டிருந்தது.
மேலாளர் கதிர்வேல் கிளையில் இருந்த போனில் யாரிடமோ பேசினார். பின்னர் மொபைலை எடுத்து வெளியே போய் பேசி வந்தார். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
கிளையில் இறுக்கமும் தவிப்பும் அப்போது நிறைந்திருந்தது இவ்வளவு காலமும் சங்கத்துக்காக உழைத்த தங்கள் அன்புக்குரிய தோழர் மாதவராஜை நல்ல முறையில் வழியனுப்ப இயலாதோ என்னும் வருத்தமும், கோபமும் அவர்களிடம் தெரிந்தது. ’அமைதியா இருங்க. நிதானமா இருங்க’ காலையிலிருந்தே சொல்லியிருந்தேன்.
”ஒரு தடவை நிர்வாகத்துடன் பேசிப் பார்ப்போம்” என்று ஆண்டோ சொல்லிப் பார்த்தான். வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டேன். எந்தத் தவறும் செய்யாதபோது நாம் எதற்கு இறங்கிப் போக வேண்டும் என்பதே என் கருத்தாக இருந்தது. தோழர் சோலைமாணிக்கம் என் மீது கொண்ட அக்கறையினாலும் அன்பினாலும் தனக்குத் தெரிந்த சில உயரதிகாரிகளோடு பேசியதாகச் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. சம்மதமும் இல்லை. ’எது நடந்தாலும் என்னிடம்தானே வந்து முடிய வேண்டும். பார்த்துக் கொள்ளலாம்” என்பதில் உறுதியாக இருந்தேன்.
2021 மார்ச் மாதம் 10ம் தேதி, எனக்கும் அறிவுடைநம்பி, அஸ்வத், தங்கமாரியப்பன், லஷ்மி நாராயணன், சங்கர் ஆகிய ஆறு தோழர்களுக்கும், நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதங்கள் (Explanation Letters) வந்தன. ஓய்வு பெற்ற தோழர்கள் சோலைமாணிக்கத்திற்கும், கிருஷ்ணனுக்கும் ஏன் உங்கள் பென்ஷனை நிறுத்தக்கூடாது எனவும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அப்போதே நிர்வாகத்தின் நோக்கத்தையும் தீவீரத்தையும் ஒரளவுக்கு ஊகித்திருந்தோம்.
2021 மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்றவர்கள் சங்கம் (TNGBRS) நடத்திய தர்ணாவின் போது நாங்கள் ஆறு பேரும் தலைமையலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், சேர்மன் (அப்போதைய சேர்மன் மிஸ்டர் செல்வராஜ்) கேபினுக்குள் ஒழுக்கமில்லாமல் கதவைத் திறந்து கொண்டு சென்றதாகவும், பின் சேர்மனையும் தலைமையலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களையும் வழிமறித்ததாகவும் , சத்தம் போட்டு வன்முறையாக நடந்து கொண்டதாகவும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அத்தனையும் ஜோடிக்கப்பட்டது. சங்கத்திலிருந்து 1.3.2021 அன்றே நடந்த விஷயங்களை TNGBOA பொதுச்செயலாளர் தோழர் அறிவுடை நம்பியும், TNGWU பொதுச்செயலாளர் அஸ்வத்தும் வாட்ஸ்-அப்பில் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.
நடந்ததே வேறு.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டு வந்த பிரிமியத் தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், பணி ஓய்வு பெற்று இறந்து போன ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய பென்ஷன் காலதாமதம் ஆவதை சுட்டிக் காட்டியும் TNGBRS சங்கத்திலிருந்து 1.3.2021 அன்று சேலத்தில் தர்ணா நடத்தினார்கள். போராட்டத்தை வாழ்த்தி, தார்மீக ஆதரவு கொடுப்பதற்காக TNGBOA-விலிருந்தும் TNGWU-விலிருந்தும் தோழர்கள் மாதவராஜ், அஸ்வத்,பரிதிராஜா, தங்க மாரியப்பன், சங்கர், லட்சுமி நாராயணன், அறிவுடை நம்பி, பத்மநாபன்,அண்டோ கால்பர்ட் ஆகியோர் சென்றிருந்தோம். கொரோனா நேரம் என்பதால் காவல்துறையிலிருந்து வந்த போலீஸார் மதியம் 1 மணிக்குள் தர்ணாவை முடிக்குமாறு வலியுறுத்தினார்கள். எனவே TNGBRS சங்கத்திலிருந்து சேர்மனைப் பார்த்து மனு கொடுப்பதற்காக தோழர்கள் சோலைமாணிக்கம், புளுகாண்டி, கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோர் சென்றனர். மெமொரெண்டத்தை வாங்கிய சேர்மன் அதை மேஜையில் தூக்கி எறிந்து விட்டு, அவரது அறையின் விளக்கை அணைத்தபடி வெளியே வந்திருக்கிறார். உள்ளே சென்றவர்கள் “ஏன் சார் இவ்வளவு அநாகரிகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்கிறீர்கள்” என கேட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அங்கு வாக்கு வாதம் நடந்தது. கேள்விப்பட்ட நான் அதன் பிறகு உள்ளே சென்று சமாதானம் செய்து தோழர்களை வெளியே அழைத்து வந்தேன்.
சங்கத் தரப்பில் எங்கள் மீது ஒரு தவறும், குற்றமும் கிடையாது. முறையற்று நடந்து கொண்டது முழுக்க சேர்மன் மிஸ்டர் செல்வராஜ். நடந்ததையெல்லாம் மறைத்து விட்டு, சங்கத் தலைவர்கள் மீது விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது நிர்வாகம். குற்றச்சாட்டை மறுத்து உரிய பதில்களை சம்பந்தப்பட்ட தோழர்கள் அனுப்பினர். அந்த பதில்களை மறுத்து நிர்வாகம் மார்ச் 30ம் தேதி சார்ஜ் ஷீட் கொடுத்தது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருந்தது.
ஆறு பேரில் என்னைத் தவிர எல்லோருமே இளம் தோழர்கள். எனக்கு ஓய்வு பெற சரியாக ஒரு மாதமே இருந்தது. அதைக் குறி வைத்துத்தான் எனக்கு சார்ஜ் ஷீட் நம்பர் 42/2021ஐக் கொடுத்திருந்தது. சார்ஜ் ஷீட் இருக்கும்போது 30.4.2021 அன்று எனக்கு நிர்வாகம் பணி ஓய்வை நிறுத்தி வைப்பதாக (cessation of service) கடிதம் கொடுத்தது என்றால், எனக்கு ஓய்வு காலச் சலுகைகள் நிறுத்தப்படும். எனவே தோழர் மாதவராஜ்க்காக சங்கம் தன்னிடம் இறங்கி வரும் என்பதுதான் சேர்மன் மிஸ்டர் செல்வராஜின் திட்டமும் நோக்கமும்.
அந்த 30.4.2021ல்தான் நாங்கள் அனைவரும் கிளையில் இருந்தோம்.
மணி சரியாக 5-ஐத் தொட்டது.