நிழல் மரங்கள் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்:
ஆசிரியர் குறிப்பு:
தமிழ்நாடு அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கணையாழியில் 1988ல் இருந்து தொடர்ந்து எழுதி முப்பத்தேழு வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு நாவல்களும் எழுதிய இவரது குறுநாவல்களின் தொகுப்பு இது
தொகுப்பிலுள்ள பிர்தவ்ஸ் கதைகள் எல்லாமே இஸ்லாமிய சமூகத்தை மையமாகக் கொண்டவை. தமிழ்நாட்டில் குறிப்பாகக் கோவையில் ஒரு முஸ்லீமாக இருப்பதன் இன்னல்கள், இஸ்லாமில் தூய்மைவாதம் என்ற பெயரில் நம் கலாச்சாரத்திற்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை வலியுறுத்துதல், மதத்தின் பெயரால் பணத்தைச் சுருட்டுதல், இஸ்லாமியக் குடும்பங்களின் உள்ளே இருக்கும் உறவுச்சிக்கல்கள் ஆகியவையே இக்கதைகளின் கருப்பொருட்கள்.
என்னளவில் நெருக்கமான கதைகள் மனச்சிடுக்கு & ஈர்ப்பு விசை இரண்டும். இரண்டிலும் பெண்களின் ஆழமான உணர்வுகள் பதிவாகி இருக்கின்றன. பெண்களில் முஸ்லீம், இந்து, கிறிஸ்தவர் என்று இருக்கிறார்களா என்ன? மும்தாஜின் தடுமாற்றங்களை உம்மா, மாமி இருவரும் உணராமல் போனாலும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. மணமான முஸ்லீம் பெண்களின் எதிர்காலம் குறித்த பாதுகாப்பில்லாத சூழலை பிர்தவ்ஸும் இக்கதையில் கொண்டு வந்திருக்கிறார். ஜெமிலாவைக் குறித்து என்ன சொல்ல? கோழையைக் காதலித்தது அவளது குற்றம். பாம்பு வந்தது என்று கண்காட்டிவித்தை காட்டும் ஜெமிலா, நகம் பதிய பிராண்டிய ஜெமிலா, பொறாமையில் தவித்த ஜெமிலா, கடைசியில் முதுகைத் தட்டும் ஜெமிலா என்று கதையில் அவளது விஸ்வரூபம்.
பிர்தவ்ஸ் இன்னும் பல கதைகளில் போதுமான அழுத்தத்தைச் சேர்க்க வேண்டும். கடைசிக்கதையில் அது நன்றாக வந்திருக்கிறது. பலகாலம் எழுதுபவருக்கு மொழிநடை தங்குதடையின்றி வந்திருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்குக் குரல் கொடுக்கும் கதைகள் இவை. தொடர்ந்து எழுதுங்கள்.
பிரதிக்கு:
இக்றா பதிப்பகம் 82206 58318
முதல்பதிப்பு 2024
விலை ரூ. 200