Normal view
கல்லில் எழுந்த நாயகர்கள்- தாமரைக்கண்ணன் புதுச்சேரி
![]() |
தில்லை காளி கோவில்லுள்ள அரிகண்ட வீரர்- படம் வே. பார்த்திபன் |
தமிழ் பண்பாட்டில், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் நெடிது பேசப்பட்ட ஒரு மரபு நடுகல்லுக்கானது. கல்நாட்டும் மரபு தொல்பழங்காலத்திலிருந்து துவங்குகிறது. வீர கதை மரபு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. என் தலைவன் முன்பு வரவேண்டாம் பகைவர்களே அப்படி பகை நின்றவர்கள் எல்லாம் இப்போது நடுகற்களாகி நிற்கிறார்கள் என்கிறது படைச்செருக்கு அதிகாரத்தின் குறள் ஒன்று. ஆரம்ப காலத்தில் குத்துக்கற்களாக இருந்த இந்த ஈமச்சின்னங்கள் கற்களில் எழுத்துப்பொறிப்பு பெற்றன, பின்னர் இறந்த வீரனின் உருவத்தோடு வடிக்கப்பெற்றன. பல அடுக்கு சிற்பங்களாகவும் அழகியல் ரீதியாக இவை வளர்ச்சி பெற்றன.
தனித்துவமான எழுத்தும் தளராத உழைப்பும்
பொற்பாதை
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்
தமிழ் நாவல்கள் 2025
ஐவர் – தமிழின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள்
முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் அடையாள சக்தி
மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்

'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.
காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.
தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.
அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\
2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்

பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
- வைகறை
'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்
25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...
பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.
“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.
“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது
பாரதி கேட்டார்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”
இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?
3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி

அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....
தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....
.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.
இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...
இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.
மேலதிக தகவல்களுக்கு..
வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091
மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்

'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள்.
காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம் என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....
\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது.
தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு.
அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும். இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\
2.அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்

பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர். எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.
- வைகறை
'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள். கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள்
- கோவி.லெனின்
25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...
பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்.
“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”
என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார்.
“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”
என்று வ.ரா சொன்போது
பாரதி கேட்டார்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”
இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?
3.சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி

அழகிய பெரியவனின் நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள் என்ற முன்னுரையின் சில பகுதிகள்....
தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....
.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள் நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.
இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...
இம் மூன்று புத்தகங்களும் இன்று மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன.
மேலதிக தகவல்களுக்கு..
வைகறை
சாளரம்
2/1758, சாரதி நகர்
என்ஃபீல்டு அவன்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை - 600091
நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்


‘பாரதி யார்’ @ பாஸ்டன்
அகழ் : நூல் அறிமுகங்கள்
நீங்களும் ஐன்ஸ்டீன்தான் – ஆதி. கமலேஷ் பிரகாஷ்
பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்
சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து
அதிகாரத்தைக் கண்டும் விலக மறுக்கும் உண்மைகள் – இ.பா.சிந்தன்
கிஷ்கிந்தா காண்டம் – நினைவெனும் இருட்குகையின் இரகசிய வெளிச்சம்
கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வனப்பகுதியை ஒட்டி வாழும் குடும்பம் ஒன்றின் கதை. ஒவ்வொன்றிலும் கச்சிதம் எதிர்பார்க்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அப்பு பிள்ளா (விஜயராகவன்). அவருடைய மகன் அஜய் சந்திரன் (ஆசிப் அலி). மனைவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன மகனும் இன்றி நிர்க்கதியாக நிற்கிறார் அஜய் சந்திரன். அவருடைய வாழ்வில் புது நம்பிக்கையாக மறுமணம் நிகழ்கிறது. அவருடைய குடும்பத்தில் நம்பிக்கையும், கனிவும் ததும்ப கலக்க முயல்கிறார் மனைவி அபர்ணா (அபர்ணா பாலமுரளி).
வனத்தை ஒட்டிய அவர்கள் வீட்டைச்சுற்றி குரங்குகளின் நடமாட்டம். திடீரென்று துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் கிடைக்கிறது. அப்பு பிள்ளாவின் துப்பாக்கி காணாமல் போனது தெரிய வருகிறது. அப்பு பிள்ளாவிற்கு ஞாபக மறதி இருப்பது படிப்படியாக தெளிவாகிறது. அவர் நினைவில் இருப்பது என்ன, அவர் மறந்துவிட்டது என்ன என்பது இருட்குகை. அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களின் உலகம் அது.

ஏன் துப்பாக்கி காணாமல் போனது? அவரின் பேரன் எங்கு போனான்? ஏன் அவர் கதவை எப்போதும் அடைத்துவைத்துக் கொள்கிறார்? முன்னாள் நக்சல் இயக்கத்தினரை ஏன் சந்திக்கிறார்? குரங்குகள் மட்டும் சாட்சியாக நிற்க அவர் ஏதேனும் குற்றம் புரிந்தாரா? அப்பு பிள்ளாவின் நினைவு திரும்புமா? துப்பாக்கியும், தொலைந்துபோன குண்டுகளும் திரும்பக்கிடைக்குமா?
கடந்து போன காலத்தின் உண்மையைக் கண்டறிய சிசிபஸ் போல அப்பு பிள்ளா முனைகிறார். உண்மையின் உச்சியை அடைந்ததும், தெளிவை விட குழப்பங்களும், கவலைகளும் வந்தடைகின்றன. மீண்டும் முதலில் இருந்து உண்மையைத் தேடுகிறார். சளைப்பும், சலிப்பும் அவரை நிறுத்த முடியவில்லை. ஏன்?

கிஷ்கிந்தா காண்டம் த்ரிஷ்யம் படத்தைப் போன்ற சாயலை சற்றே கொண்டது. ஆயினும், இக்கதையின் முதன்மைக் கதை மாந்தர்கள் புத்திசாலிகள் இல்லை. அழுகை, நோய்மை, இயலாமை அவர்களைப் பீடிக்கிறது. அரவணைப்பின்றி நெருக்கும் உலகத்தின் ஊடாக அவர்களால் பத்திரமாக மீண்டுவரும் முயற்சி என்னானது என்பதே கதை. இத்தனை மனதுக்கு நெருக்கமான, உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ்ச்சியான திரைப்படத்தைப் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது. மறக்காமல் பாருங்கள்.
வைகறை வாசகன் பதிவுகள் – கனிவான கலங்கரை விளக்கம்
டாக்டர் சங்கர சரவணன் குறித்து எழுதுகையில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை. எனக்கும், பல நூறு மாணவர்களுக்கும் வாழ்வளித்த ஆசிரியர் அவர். நான் எட்டாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது, சுட்டிவிகடனுடன் தரப்பட்ட இணைப்பிதழில் பல்வேறு பல்சுவை, பொது அறிவுக்குறிப்புகள் வரிசை கட்டிநின்றன. அவை எனக்கிருந்த மிகக்குறைந்த வாசிப்பிற்கு அப்பாற்பட்டதாகத் தெரிந்தது. 90% செய்திகளை முதன்முறையாக அப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்கிற அளவுக்கு நிலைமை. ஆசிரியரான என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாள் கோடை விடுமுறையில் என்னை ஓயாமல் அந்த ‘கையளவு களஞ்சியத்தை’ படிக்க வைத்தார். மீண்டும், மீண்டும் கேள்விகள் கேட்டு பயிற்றுவித்தார். இத்தனை வதைகளுக்கும் விதை போட்ட அந்த நூலின் ஆசிரியரை தேடினேன், ‘டாக்டர் சங்கர சரவணன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் கடுமையான கோபம் இருந்தாலும், அந்நூல் என்னைப் புடம் போட்டது. அறிவுத்தாகத்தை வளர்த்தெடுத்தது. சுட்டி விகடனின் ‘சுட்டி குவிஸ் விஸ்’ போட்டிகளில் இருமுறை அரையிறுதி போகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. வேறெந்த தயாரிப்பும் இல்லாமல், ஒரே ஒரு கையளவு களஞ்சியத்தைக் கொண்டு வாள் சுழற்றி தோற்றுத் திரும்பினோம்.

காலங்கள் உருண்டோடின. குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனாக முதல் முறை மோசமான முறையில் தோற்றுப்போய் இருந்தேன். துவண்டு போய், திக்கற்று அமர்ந்திருந்த காலம். என்னுடைய ஏதோவொரு கட்டுரையை படித்துவிட்டு டாக்டர் சங்கர சரவணன் சார் என்னோடு பேச விரும்புவதாக சொன்னார்கள். தமிழிலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்த எனக்கு உற்ற ஆசிரியராக அவரே இருப்பார் என்று அதிகாரிகள் வழி சொன்னார்கள். அவரின் உதவி நாடி சென்றேன். என்னைப்பற்றி ஓரளவிற்கு கேட்டுத் தெரிந்து கொண்டார். வினாடி வினா வல்லுநரான இவர் நம்மை கேள்விகளால் துளைக்கப்போகிறார் என்று அஞ்சினேன். அதற்கு மாறாக, அப்படியே அரவணைத்துக் கொண்டார்.


ராணிப்பேட்டையில் ஆராய்ச்சி அலுவலராக இருந்த அவர், காலையில் எனக்கு மட்டும் தனியாக தமிழ் இலக்கிய வகுப்புகள் எடுப்பார். பின்தங்கியிருந்த என்னை கைதூக்கி விடுவதற்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் ஒவ்வொரு நாளும் 6:30 மணிக்கு காலையில் வகுப்பெடுப்பார். சில மாதங்கள் இப்படியே சென்றது. பின்னர் அவருடைய பொதுவான தமிழ் வகுப்புகளில் என்னை மாணவனாக இணைத்துக்கொண்டார். ஒருநாள் கூட கட்டணம் என்று ஒரு ரூபாயை கூட அவர் கேட்டதில்லை. கைம்மாறு கருதாத கடப்பாடு என்பதன் உண்மைப்பொருளை அவரிடமே கண்டேன்.
உடல்நலம் குன்றி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் நிலையில்லாமல் நேரடியாக கேட்டதையும், நினைவில் இருந்ததைக் கொண்டும் தேர்வை அணுகினேன். தமிழ் விருப்பப்பாடம் முதல் தாளினை இயன்றவரை எழுதி முடித்திருந்தேன். 50 மதிப்பெண்களுக்கான பதில்களை தரமுடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். நான் எழுதிய வெவ்வேறு பதில்கள் தவறானவை என்பதை பிறரோடு நிகழ்த்திய உரையாடலில் புரிந்துகொண்ட போது அழுதுகொண்டே தேர்வை எழுத வேண்டாமென தோன்றியது. சரியாக சார் அழைத்தார். என்னுடைய மனநிலையைப் புரிந்து கொண்டார். சற்றுகூட கடுமை காட்டாமல், நான் தவறாக எழுதிய பதில்களையும் சரியென நம்பவைத்து இறுதிக்கோட்டை தொட்டுவிட்டு வா என ஊக்கப்படுத்தினார். அவர் அன்றைக்கு பேசிய அந்த அரைமணி நேரம் என் வாழ்வின் திருப்புமுனை. இன்றைக்கு நான் ஆட்சிப்பணியில் இருப்பதற்கு முழு முதன்மையான காரணம் அவரன்றி வேறு யாருமில்லை.
டாக்டர் சங்கர சரவணன் சாரோடு வெவ்வேறு காலங்களில், பணிகளில் அருகே இருந்து கற்றுக்கொள்ளும் பேறு கிடைத்திருக்கிறது. ‘பிரமிப்பு’ என்பது கூட போதுமான சொல் அன்று. விகடன் இயர் புக்கை எந்த பொருட்பலனும் எதிர்பாராமல் போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று ஒற்றை மனிதராக பல ஆண்டுகள் இயற்றி அளித்தார். உறக்கமின்றி, இற்றைப்படுத்தி மிக நேர்த்தியாக, மாணவர்களின் தேடலுக்கு தீனி போடும் வண்ணம் அப்படைப்புகள் இருக்கும். இளைஞர், மூத்தோர் பட்டாளம் உடன் இவரே தனி மனித இராணுவம் போல பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை வரைவார். போட்டித்தேர்வு சார்ந்து தேர்வு பாகுபாடு இன்றி பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார். உலகத்து செல்வமெல்லாம் தமிழிற்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் பணிகள் தமிழ் அறிவியக்க வரலாற்றில் தன்னேரில்லா பக்கங்கள். உருவான பல்வேறு நூல்களின் மொழியாக்கம், செம்மையாக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரின் பங்கு அளப்பரியது. தமிழ்மொழியின் பழமைக்கும், நவீனத்துக்கும் என்று இரண்டுக்கும் ஈடுகொடுத்து அவரளவிற்கு கற்றறிந்தவர்கள் இல்லை என்றே துணிந்து எழுதுவேன். கால்நடை மருத்துவராக இருப்பது தாஜ்மகாலின் முதல் கதவு போலத்தான். உள்ளே செல்ல செல்ல அவரின் ஆளுமை பரந்து, விரிந்து கொண்டே சென்று ஆச்சரியப்படுத்தும்.

டாக்டர் சங்கர சரவணன் சாரிடம் எனக்கும், பலருக்கும் நெருக்கத்தை தருவது அவரின் பாகுபாடுகளற்று பழகும் பண்பு. மேலும், நம்மை கனிவாக, நேர்மையாக ஆற்றுப்படுத்தும் ஆளுமை. உழைப்பிற்கும், வாசிப்பிற்கும், அறிவு ஊக்கம் மிக்க ஆக்கங்களுக்கு அஞ்சாத ஆள்வினை உடைமை. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறளின் மீது பெரும்பற்று கொண்ட வைகறை வாசகர்.
சாரின் இணையர் உஷா அம்மா என்னைப்போல் பலருக்கு இன்னொரு அம்மா. சாரின் பொருள் நாடா அறவாழ்விற்கு அருந்துணை. எனக்குத் தெரிந்து போட்டித்தேர்விற்குத் தயாராகும் மாணவருக்காக வீட்டின் மேல்பகுதியை ‘எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்து படிக்கட்டும்’ எனச்சொல்கிற உஷா அம்மாவின் ஒப்புரவிற்கு இணையுண்டா? மாணவர்களுக்காக தன் நேரம் அனைத்தையும் தரும் டாக்டர் சங்கர சரவணன் சாரிற்கு அம்மாவை விட உற்ற துணை யாருமில்லை.
பல்வேறு பார்வைகளை ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ காலத்தில் வைகைறைப்பொழுதில் எழுதிய அவரின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ 2k kids-ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது. ஒரே மூச்சில் படித்தல் ஒரு சுவை. எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொரு கட்டுரையும் சுருக்கமும், நெருக்கமும் மிக்கவை. போலியான பிம்பங்கள், முகமூடிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தது, தன்னை பீடித்தது என்று அனைத்தையும் அள்ளித்தருகிறார்.

தன்வரலாற்று பக்கங்களாக சில கட்டுரைகள் அமைகின்றன. அவற்றில் மென்மையான நகைச்சுவையும், சமயங்களில் அழவைக்கும் சோகமும் இழையோடுகிறது. வயது வந்தோருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையை குறுக்கெழுத்துக்காக தந்தையிடம் கேட்டறிந்ததை சொல்லும் கட்டுரை ஒரு சான்று. அதுவரை குலுங்க, குலுங்க சிரிக்கும் நம்மை ஒரே வரியில் சோகமயமாக மாற்றிவிட்டுப் போய்விடுகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மீது சத்தியம் செய்து சில செய்திகளை சொல்கிறார். கீர்த்தி சுரேஷின் அன்னை குறித்து தேடுகிறார். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் வரும் ‘சின்ன c ஆ, பெரிய C ஆ’ ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு இந்நூலில் சார் நிகழ்த்தும் ‘C’ மாயத்தை நீங்கள் படித்துதான் பரவசமடைய முடியும்.
‘கலைச்சொல்லாக்கம்’ குறித்த ஏழு கட்டுரைகள் தமிழால் முடியும் என்பதை ஆழமாகவும், தர்க்கப்பூர்வமாகவும், தெளிவோடும் எடுத்து வைக்கும் கட்டுரைகள். ‘Mutation’ என்பதற்கு இணையான கலைச்சொல்லை கண்டடைய கந்த சஷ்டி கவசம், தாவரவியல் நூல்கள், நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை விரைவு என வைகறை வாசகன் நிகழ்த்தும் தேடல் நெகிழவைக்கிறது. ஆலங்குடி வங்கனாரும், ஆண்டன் செக்காவும் ஜெர்மனியில் ஜோதிகா, அதிதி ராவை சந்தித்த கதை இந்நூலில் நமக்காக காத்திருக்கிறது.
இந்நூலில் தோல்வியில் துவண்டு, நைந்து போகிறவர்களை கரைசேர்க்கும் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்கள் அணிவகுக்கின்றன. இலக்கிய படைப்பாளிகள் குறித்து வெவ்வேறு சிந்தனைச் சிதறல்களை அள்ளி வழங்கும் ஆசிரியரிடம் குறுங்குழு மனப்பான்மையோ, தூய்மைவாத கண்ணாடியோ இல்லாமல் இருப்பது நிறைவளிக்கிறது.
அம்மா குறித்த பதிவுகள் ஆன்மாவில் இருந்து எழுதப்பட்டவை. மகளிர் உரிமைத்தொகை ஆனது உரியவருக்கு சென்று சேர வேண்டும், தகுதியில்லாதவர்கள் பயன்பெற்றுவிடக்கூடாது, விடுபட்டுப்போனவர்களின் குறைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று சங்கர சரவணன் சாரின் அம்மா காட்டும் அக்கறை அம்மாக்களுக்கே உரியது. சமயங்களில் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ஏங்க வைக்கும் வண்ணம் சில பதிவுகள் நின்றுவிடுகின்றன.
திருக்குறள் குறித்து நூலில் வழங்கிவருபவை கண்மூடித்தனமான வழிபாட்டுப் பரணிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, மாறிவரும் அறிவுக்கு அழுத்தம் தராமல், மாறாத மெய்யறிவுக்கு அதிக அழுத்தம் தந்து இலக்கியல், இயங்கியல் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதியதால் தான் குறள் காலம், இடம் ஆகிய பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக இருக்கிறது என்கிற வா.செ. குழந்தைசாமியை கருத்தை நினைவுக்கூர்வது ஒரு சான்று. திருக்குறளில் நேர்நிலை இயல், இருத்தல் இயல், பின்நவீனத்துவம், பெண் விடுதலை, மரண தண்டனை, நிர்வாகத்தில் ரகசிய காப்பு ஆகியவை பல்சுவைக்கதம்பம் மட்டுமல்ல, பன்முகப்பார்வையும், புதுமை நோக்கும் கொண்டவை.

இந்நூலின் ஆகப்பெரிய வெற்றி என்பது, “எனக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது பார்!” என்கிற பெருமிதப் பூச்சு எங்கும் இல்லவே இல்லை. ‘அன்புத்தோழமையே! உன்னோடு பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுவைகூட்டி பரிமாற சங்கதிகள் உண்டு. மனதோடு உரையாட நூல்கள் சில கண்டேன். பிடித்திருந்தால் சேர்ந்து தேடுவோம். கண்டடைவதை எனக்கும் தெரிவிக்கவும். அறிவுக்கடல் எங்கும் அன்போடு மூழ்கி முத்தெடுப்போம்’ என்கிற நெருக்கமும், பிணக்கமும், அறிவினை விரிவு செய்யும் பொதுமை நோக்கும் மிளிர்கிறது. வைகறை வாசகனின் பதிவுகள் விடியல்களை நமக்களிக்கும் அறிவுப் பெருவிருந்து.
வைகறை வாசகன் பதிவுகள்
விகடன் பிரசுரம்
முதல் பதிப்பு
பக்கங்கள் : 352
விலை : 375 ரூபாய்

‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்
‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல்.

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.
இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம்.

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன. சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட.

