257. நீர்ப்பழி
சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 6
இன்று போல் அல்லாமல் அரசியல் தொழில்நுட்பத்துடன் சினிமா முரண்டு பிடித்துக் கொண்டிருந்த காலம் அது. உள்ளே எந்த அந்நிய வஸ்துவின் பூர்விகமே இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக தலைப்பு தமிழில் தான் இருக்க வேண்டும் என்று முழங்கிய காலத்தில் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என்ற பெயருடன் ஒரு தமிழ்ப்படம் வந்தது. திருட்டு விசிடிகளில் இருந்து தப்பிக்க, தமிழில் இரண்டாவது டிஜிட்டல் திரைப்படம் என நினைக்கிறேன். திருச்சி மீனா திரையரங்கில் பார்த்தேன். இன்றும் நான் அடிக்கடி யூடியூப்பில் பார்க்கும் திரைப்படம் அது. Black comedy வகை நகைச்சுவை புரியாமை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் கொஞ்சம் கருப்படித்த காட்சிகள், உலக தரத்தில் கலவியைக் காட்டும் கதாநாயகன் கதாநாயகியைக் கட்டி கூட பிடிக்காத ஏமாற்றம் என பல காரணங்களால் அப்படம் தோல்வி. தமிழர்கள் சிரிக்காத சிடுமூஞ்சிகளாகி விட்டார்கள் என ஒரு பிரபல எழுத்தாளர் ஒரு பிரபல வார இதழில் எழுதினார்.
இன்று அரசியல் தொழில்நுட்பத்துடன் சினிமா கைகோர்த்து செல்லும் காலம். வாழை என்ற பெயரில் தமிழிலும் மலையாளத்திலும் இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ஓடின. நான் தமிழில் பார்த்து வந்துவிட்டேன். ஒரு சாதாரண திரைப்படம். பள்ளி வீடு தெரு வரப்பு லாரி என வாழைத்தொழில் பற்றி யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஒரு சாதாரண வாசகன் நுழைய முடியாத பகுதியைச் சினிமா என்ற காட்சி ஊடகம் காட்ட வேண்டும். பிச்சைக்காரர்கள் வாழ்விடம் காட்டிய ‘நான் கடவுள்’ மிகச் சிறந்த உதாரணம். நம்மால் செல்ல முடியாத இடம் வாழைத்தோப்பு. தோப்புக்குள் சொல்லப்படாத கதை, தென்னை மரம் என தலைப்பிட்டு மாட்டின் பெருமைகளைச் சொல்லி, கடைசியில் அப்பெருமைகள் மிக்க மாட்டைத் தென்னை மரத்தில் கட்டிப்போட்டது போல. யூடியூப்பில் பார்த்தால், தமிழின் ஆகச்சிறந்த காவியம், கண்ணீர் வடிக்காதவன் மனிதநேயம் இல்லாதவன் என்ற வகையில் கருத்துகள். அந்த நேரத்தில் தனது படம் வெளிவர வேண்டிய மற்றவர்கள் எல்லாம் மாற்றி மாற்றி அழுகிறார்கள். நான் சிடுமூஞ்சி இல்லாதவனும் இல்லை, மனிதநேயம் இல்லாதவனும் இல்லை என்று யாராவது கேட்டால் எப்படி நிரூபிப்பது?
சோ. தர்மன் அவர்களின் சிறுகதை ஒன்றுதான் வாழை திரைப்படம் என்றொரு குற்றச்சாட்டு. அவரின் கூகை புதினம் ஏற்கனவே படித்திருக்கிறேன். தனது ‘நீர்ப்பழி’ சிறுகதை தொகுப்பில் ‘வாழையடி’ என்ற இரண்டாவது சிறுகதை அப்படியே திரைப்படத்தில் இருக்கிறது என்று அவரும் பேட்டியளித்தார். நான் அப்போது படித்துக் கொண்டிருந்த புத்தகங்களில் நீர்ப்பழியும் ஒன்று. ஐந்து கதைகளுக்கு மேல் படித்திருந்த எனக்கு, அக்கதை இத்திரைப்படத்தை நினைவுபடுத்தவே இல்லை. ஒரு சாதாரண கதைதான். மொத்தம் 68 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் முதல் 8 கதைகள் ஒட்டவேயில்லை. வேறோர் ஆசிரியராக இருந்தால் அத்தோடு நிறுத்தியிருப்பேன். சோ.தர்மன் அவர்களை உங்களில் பலருக்கு அறிமுகப்படுத்தும் பதிவாகட்டும்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: நீர்ப்பழி
ஆசிரியர்: சோ. தர்மன்
வெளியீடு: அடையாளம்
முதல் ஈடு: 2020
பக்கங்கள்: 557
விலை: 500 ரூபாய்
படித்த இடங்கள்: எனது அறை, இரயில், பேருந்து, Jurong East, Woodlands, Bedok, Choa Chu Kang, Serangoon நூலகங்கள்
—————————————————————————————————————————————————————————————————————————
பிடித்த கதைகள்: குருத்து, உதிரப்பூ, தவம், மாடுகள், மருந்து, ஊழ், அவஸ்தை, சாபம், நீர்ப்பழி, நிழல் பாவைகள், ராஜமாதா, இரவின் மரணம், மனுஷம், சார் போஸ்ட், மனம், சிகிச்சை, வலைகள், மிதவை, நாசி
பிடிக்காத கதைகள்: (அறிவியலுக்குப் புறம்பான) அழுக்கு, (ஏமாற்றுபவன் பெண்டிரை ஏமாற்றலாம் எனும்) கோணல்கள், பார்த்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சம், அன்பின் சிப்பி, வாதை
பிடிக்காத சில பகுதிகளை வெட்டினால் பிடிக்கும் கதைகள்: சங்கிலி, மையல் சிப்பி, சத்தியங்கள்
சுயேச்சை இறந்தால் தேர்தல் ரத்தாகாது; காவல்துறையில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் ஏலம்விடுவது தடை. இவ்விரு அறிவிப்புகளை வைத்து பின்னப்பட்ட இரு கதைகள் அருமை. இறந்து போன ஒரு சிறுவனைக் காசில்லாமல் இரவுப் பேருந்தில் மறைத்து கொண்டு போகும் இரு பெண்கள், உடன் பயணிக்கும் நீங்கள் கண்டுபிடித்தால் என்ன செய்வீர்கள்? பிள்ளைகளை விட்டுவிட்டு காதலனுடன் ஓடிப் போனவளின் வம்சம் அவளைக் கடவுளாகக் கும்பிட காரணம் என்ன இருக்கக் கூடும்? சோகவனம், அவஸ்தை, சாபம், நடப்பு, வதை போன்ற கதைகள் சொல்லப்பட்ட விதம் அருமை. வேட்டாபிஸ், கால்நடை மேய்ப்பவர்கள், மண்வெட்டிகள், சவரக்காரர் என வேலை செய்யும் இடங்களில் இருக்கும் சிக்கல்களை அவ்வேலைகளுக்கே உரிய சொல்லாடல்களுடன் சொல்லும் சிறுகதைகள் இத்தொகுப்பின் சிறந்த கதைகள். பருவம் திறந்து உதிரம் வெளியேறியது கூட தெரியாமல் சாயப்பட்டறையில் வேலை செய்யும் சிறுமி. வாழை திரைப்படம் சொல்லாத வாழை சுமப்பவர்களைச் சுரண்டிய வில்லை (டோக்கன்). குழந்தைகளின் கால்முட்டி தேயும் தீப்பெட்டி தொழிற்சாலைகள்.
தேனீக்களின் கொட்டு வாங்காமல் நல்ல பாம்பு தேன் குடிக்கும் என்பது எனக்கு இத்தொகுப்பில் ஒரு கதையில் படித்துதான் தெரியும். இத்தொகுப்பின் தலைப்பான ‘நீர்ப்பழி’ என்ற கதை போல, நீதியைச் சிதைப்பவர்களை விதி தண்டித்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்! நீங்களும் படித்துப் பாருங்கள்.
– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)