Normal view

Received before yesterday

உங்களோடு..

1 May 2025 at 04:37

எல்லோருக்கும் வணக்கம்!

மாதத்தின் எல்லா நாட்களும் மெயிலில் ஒன்றிரண்டு படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. சில பி.டி.எப் என வருகின்றன. சில படைப்புகள் யார் எழுதியதென தெரிவிக்காமல் மொட்டைத்தாசன் குட்டையில் விழுந்தாப்லயும் வருகிறது. அனுப்பிய மெயிலில் ராமசாமி என்றிருப்பதாக வைத்துக்கொண்டால் அவர் புனைப்பெயரில்கூட எழுதலாம். அல்லது எனக்கு ‘ஜீம்பூம்பா’ மந்திரம் தெரியுமென அவர்கள் நினைத்திருக்கலாம். (ஏலே! கவிதையெ பாத்தாவெ தெரியாதாலே? நாமதா எழுதி அனுப்பியிருப்பம்னு? தமிழ்நாட்லெ என்னெத்தவுத்து யாருலே இப்புடி மணியாட்டம் கவிதெ எழுதிருவாய்ங்கெ?) இந்தமுறையும் படைப்பு நன்றாக இருந்தமையால் எடுத்து சேகரிப்பில் வைத்திருந்தேன். அவர்களிடம் புகைப்படமும், சுயவிபரக்குறிப்பும் கேட்டிருந்தேன். பத்து நாட்களுக்கும் மேலாகியும் எந்த பதிலுமில்லை. 

நடுகல் பதிப்பக வெளியீடாக ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களுடைய வெளியில் இதுவரை வராத, அதுவா? இதுவா?, காணாச்சுனை, புதுப்புனல் மூன்றையும் ஒரே புத்தகமாக வசதி கருதி கொண்டு வந்தோம். நிதானமான ஓட்டம் தான். சின்ன சோர்வு வந்ததென்னவோ நிஜம் தான் என்றாலும் மெதுவாய் செல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அடுத்ததாக அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றும், மொழிபெயர்ப்பு கதைகள் அடங்கிய மற்றொரு தொகுப்பையும் ஒரே தொகுப்பாக நடுகல் இந்த மாதம் கொண்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவு வேண்டும் தான். சிக்காத பொருளுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. குறைவான வாசகர்கள் வாசித்தாலே போதுமானது தான். மற்றபடி அகலக்கால் வைக்கவும் விருப்பமில்லை.

சென்ற மாத இதழில் வெளிவந்த இவரது மொழிபெயர்ப்பில் ‘மிருகம்’ கதை பலராலும் பாராட்டப்பட்டது மகிழ்ச்சி. இந்த இதழிலும் அண்ணாரது மொழிபெயர்ப்பில் ‘போஸ்டாபீஸ்’ என்கிற குஜராத்தி கதை வெளியாகியிருக்கிறது. தொகுப்பாக வரவிருப்பதால் மேற்கொண்டு இவரது மொழிபெயர்ப்பு கதைகள் இனி நடுகல் இதழில் வெளிவராது.

நடுகல் புத்தகப்பதிப்பு மற்றும் nadukal.in இணையத்திலும் மாதா மாதம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதால் என் எழுத்துப்பணிகளும் சற்று தொய்வுதான். இருந்தும் களமாட வந்திருக்கிறோம். இதுவும் பணிதானே! கொங்கு மண்ணின் மூத்த கிராமிய எழுத்தாளருக்கு நடுகல் செலுத்தும் ராயல் சல்யூட்டாக வைத்துக்கொள்வோம்.

’எதற்காக எழுதுகிறேன்?’ என்கிற கேள்விக்கான பதிலாய் ஆர்.ஷண்முகசுந்தரம் கூறுகையில். “நான் பிறந்து வளர்ந்த கொங்கு நாட்டு கிராமத்தையும், அங்கு நான் பழகிய கிராம மக்களையும் உள்ளது உள்ளபடி எழுத்தில் சித்தரிப்பது என்ற பேரார்வம் எனக்குள் துளிர்த்தது. அந்த ஜனங்களின் விருப்பங்கள், துயர்கள், வேடிக்கை விமரிசைகளை வனப்புடன் தீட்டிவிட திட்டமிட்டேன். ஒவ்வொரு சிறிய காரியத்தையும் நுட்பமாக கவனித்தேன். கவனிப்பது என்ன? என் இதயத்தில் வீற்றிருந்த வடிவுகளுக்கு உயிர் கொடுத்தேன்” என்கிறார்.

மொழிபெயர்ப்புக் கலை குறித்து :

”என் அனுபவம் மட்டுமல்ல. மொழிபெயர்க்கும் ஒவ்வொருவரின் அனுபவமும் இந்தக் கலையில் சற்று சிரமம் மிக்கது தான். தமிழில் எழுதிவிட்டால் மட்டும் அது தமிழாகிவிடாது. மொழிபெயர்ப்பும் ஆகிவிடாது”

’’மூல ஆசிரியரின் உள்ளக் கிடக்கை இன்னதென இனம் காணும் பண்பு இன்றியமையாதது. மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதுவாரானால் எப்படி எழுதுவாரோ அப்படி எழுத வேண்டும். கூடிய அளவுக்கு இருமொழிப் பண்புகளையும், வாழ்க்கை, இலக்கிய மரபுகளையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு நம் மொழி இடம் கொடுக்குமோ அந்த அளவுக்கு எழுதும் பக்குவம் வரவேண்டும். முதலில் எழுதும்போதே தப்பும் தவறும் இல்லாமல், அடித்தல், திருத்தல் இன்றி எழுதும் பக்குவம் கைவரப் பெற்றால் தான் சிந்தனைப் போக்கில் ஒருமையும் ஒழுங்கும் உண்டாகும்”

முதலாக கதைகளை தேர்ந்தெடுப்பதில் கூட ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கு பக்குவம் இருந்திருக்கிறது என்பது இந்தத் தொகுப்பில் உள்ள குறைவான கதைகள் நிரூபணம் செய்கின்றன. உருது, வங்காளி, ஹிந்தி, குஜராத்தி என்று கதைகள் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்தவர் வங்காளியில் மட்டும் மூன்று கதைகளை இணைத்திருக்கிறார்.

மீண்டும் சிரமத்திற்கிடையிலும் நடுகல் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது பயணிக்கிறது!

அன்போடே என்றும்

வா.மு.கோமு 1-5-2025

The post உங்களோடு.. first appeared on Nadukal.

ஜவான் ஒரு அசடு

1 May 2025 at 04:34

ஒரு குடியானவனுக்கு சைமன், தாரஸ், ஜவான் என்ற மூன்று பிள்ளைகளும் மார்த்தா என்ற ஓர் ஊமைப் பெண்ணும் இருந்தனர். சைமன் பட்டாளத்தில் சேர்ந்தான். தாரஸ் பட்டணத்தில் வியாபாரம் துவக்கினான், ஐவானும், தங்கையும் நிலத்தில் உழைத்துப் பெற்றோருக்கு உதவியாக இருந்தனர்.

சைமன் ராணுவத்தில் பெரிய பதவிக்கு உயர்ந்தான்; ஒரு பிரபுவின் மகளை மணந்தான். கைநிறையச் சம்பாதித்தான், இருந்தாலும் அவனுக்குக் கடன் அதிகமாகியது. ஏனென்றால் அவனுடைய மனைவி வரவுக்கும் அதிகமாகச் செலவு செய்தாள். சைமனுக்கு அரசர் நிலங்களை மான்யமாக அளித்திருந்தார். அவற்றில் பயிர்த்தொழில் செய்ய அவனுக்கு முன் பணம் தேவைப்பட்டது.

சைமன் அப்பாவிடம் போய், ”அப்பா! உழவுக்கு ஏற்பாடு செய்ய அவசரமாக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. எனக்குச் சேர வேண்டிய பங்கைச் சொத்திலிருந்து பிரித்துக் கொடுங்கள்” என்று கேட்டான்.

”சைமன்! நீ சம்பாதித்த பிறகு வீட்டுக்கு ஒன்றுமே கொண்டு வரவில்லை. உனக்கு எதற்குப் பங்கு? ஜவானும் மார்த்தாவுமே உழைக்கின்றனர். நீ அவர்களுக்கு அநீதி இழைக்கலாமா? எதற்கும் அவனை ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன் என்று சொல்லி அவர் ஜவானை அணுகினார். “அப்பா! சைமனுக்கு என்ன வேண்டுமோ அவன் எடுத்துக் கொள்ளட்டுமே!” என்றான் ஜவான் தாராளமாக. தேவையான கருவிகளை எடுத்துக் கொண்டு சைமன் தன் நிலத்தில் உழவுக்கு ஏற்பாடு செய்தான்.

தாரசுக்கு வியாபாரத்தில் பெருத்த லாபம் கிடைத்தது. அவன் ஒரு வியாபாரியின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டான். வியாபாரத்தை வளர்க்க அவனுக்குப் பணம்’ தேவைப்பட்டது. அப்பாவிடம் போய்த் தன் பங்கைக் கேட்டான். அப்பா ஜவானிடம் கேட்டார். ஜவான் தாராளமாக ஒப்புக் கொண்டான். கிடங்கில் இருந்த தானியங்களையும், ஒரு நல்ல குதிரையையும் தாரஸ் எடுத்துக் கொண்டான். நிலமும் ஒரு கிழட்டுக் குதிரையும் மட்டுமே மிஞ்சின. ஜவானும், மார்த்தாவும் அவற்றை வைத்துக் கொண்டு உழவைக் கவனித்தனர். பெற்றோரையும் காப்பாற்றினர். ‘பிழைக்கத் தெரியாதவன்’, ‘அசடு’, ‘முட்டாள்’- போன்ற பட்டங்களையும் ஜவான் சம்பாதித்துக் கொண்டான்.

அந்த மூன்று பிள்ளைகளும் பாகப் பிரிவினையின் போது சண்டை போடுவார்கள் என ஒரு கிழட்டுப் பேய் எதிர்பார்த்தது. அதற்கு மாறாக அவர்கள் சந்தோஷமாகப் பிரிந்து போனதால், அது ஏமாற்றமடைந்தது. அவர்கள் மீது வஞ்சம்’ தீர்த்துக் கொள்ள எண்ணியது.

கிழட்டுப்பேய் தன் குழந்தைகளான மூன்று குட்டிப் பிசாசுகளையும் கூப்பிட்டு, “குழந்தைகளே! உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன். சைமன், தாரஸ், ஜவான் ஆகிய மூவரும் சகோதரர்கள். பாகப்பிரிவினை காரணமாக அவர்களுக்குள் சண்டை வந்திருக்க வேண்டும். ஆனால் ‘ஜவான் என்னும் முட்டாள் நல்ல மனத்தோடு விட்டுக்கொடுத்து என் திட்டங்களைக் கெடுத்து விட்டான். ஆகவே நீங்கள் உடனே அவர்களிடம் செல்லுங்கள். அவர்களுடைய அன்பையும், சந்தோசத்தையும் குலைத்து, விரோதத்தையும், துன்பத்தையும் வளர்க்க, வேண்டும். புறப்படுங்கள்!” என்று சொல்லி அனுப்பியது.

குட்டிப் பிசாசுகள் மூன்றும் கூடிப் பேசின. ஒவ்வொரு பிசாசும் ஒரு சகோதரனின் வாழ்வைக் குலைப்பது என்றும், முதலில் வேலையை முடிக்கும் பிசாசு மற்ற இரண்டுக்கும் உதவ வேண்டும் என்றும் தீர்மானித்தன.

குறிப்பிட்ட நாளில் மூன்று குட்டிப்பிசாசுகளும் கூடின. தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டன. சைமனிடம். போன பிசாசு முதலில் தன் கதையைக் கூறியது “நான். சைமனைத் தைரியசாலி ஆக்கி அரசனிடம் போகச் செய்தேன். அரசருக்காக அவன் இந்த உலகத்தையே ஜெயிப்பதாக வீரம் பேசினான். அரசர் அவனை ஒரு பெரிய படைக்குத் தளபதி ஆக்கி இந்தியாவைப் பிடிக்குமாறு அனுப்பினார். போருக்கு முதல் நாள் மழையை வரவழைத்தேன். சைமனின் வெடிமருந்துகள் நனைந்தன. மேலும், இந்தியப் படையில் நான் ஆட்களை அதிகரித்தேன். இரு படைகளும் மோதின. சைமனின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இயங்கவில்லை. சைமனின் வீரர்கள் பயந்து ஓடினர். இந்தியப் படை அவர்களைச் சின்னாபின்னமாக்கியது. அரசர் கோபமடைந்து சைமனைச் சிறையில் அடைத்திருக்கிறார். விரைவில் நான் அவனை வெளியேற்றி அவனுடைய அப்பாவிடம் அனுப்பப் போகிறேன். என் வேலை அதோடு முடிகிறது.. உங்களுக்கும் விரைவில் உதவுவேன்.”

இரண்டாவது குட்டிப் பிசாசு பேசியது “நான் தாரசைத் தொடர்கிறேன். அவனுடைய மனத்தில் பேராசையை எழுப்பியிருக்கிறேன். எதைப் பார்த்தாலும் வாங்குகிறான். கையிலிருந்த ரொக்கத்தை எல்லாம் செலவழித்து விட்டான். ‘பணம், பணம்’ என்று அலைகிறான். நாலா பக்கங்களிலிருந்தும் அவனை அழுத்துகிறது. கடன் என்னும் பள்ளத்தில் கீழே கீழே போய்க் கொண்டே இருக்கிறான். அவன் கடன்களை அடைக்கத் துவங்குவதற்குள் நான் அவனுடைய சரக்குகளை அழித்து விடுவேன். இன்னும் ஒரே வாரத்தில் தாரஸ் வியாபாரத்தை விட்டுவிட்டு ஓடி விடுவான்.”

கடைசியில் மூன்றாவது குட்டிப் பிசாசு தன் கதையை மொழிந்தது- நான் அறிவில்லாத ஜவானிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். முதலில் அவனுக்கு நான் வயிற்று வலியை உண்டாக்கினேன். அந்த முட்டாள் வலியை லட்சியம் செய்யாமல் வழக்கம்போல வழக்கம் போல் வேலைக்கு வந்து விட்டான். கலப்பையைப் பிடித்துக் கொண்டு உழுதான். நான் வயலின் மண்ணைக் கெட்டிப்படுத்தினேன். கலப்பையை ஒடித்தேன். பலவித தொல்லைகளை கொடுத்தேன். அவன் எதற்கும் மசியவில்லை. அவன் புதிய கலப்பையைக் கொண்டு வந்து, வெறி பிடித்தவன் போல உழுதான். ஜவான் மாடு போல உழைக்கிறான். அவனை முறியடிப்பது கடினமாக இருக்கிறது. நீங்களும் வந்து உதவினால்தான் முடியும்.”

கூட்டம் முடிந்ததும் குட்டிப்பிசாசுகள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றன.

ஜவான் உழுவதற்கு இன்னும் ஒரு சின்னத் துண்டு நிலமே பாக்கி இருந்தது. அதில் ஏர் நகர மறுத்தது. ஏரின் அடிப்பாகத்தை யாரோ பிடித்து நிறுத்துவது போல இருந்தது. ஜவான் மண்ணுக்கு அடியில் கையை விட்டு ஏதோ ஒன்றைப் பிடித்து வெளியே இழுத்தான். சிறிய அளவில் கன்னங் கரேலென்று நீண்ட வாலுடன் குட்டிப்பிசாசு ஒன்று காட்சி அளித்தது.

தனக்குத் தொல்லை அளித்த பிசாசை ஜவான் கொல்லப் போனான். ”கொல்லாதே! என்னை விட்டுவிடு. செய் நீ கேட்கும் உதவியைச் செய்கிறேன்”, என்று பிசாசு கெஞ்சியது. ”என் வயிற்று வலி தீர வேண்டும்”, கேட்டான். என்று ஜவான்.

உடனே பிசாசு பூமிக்குள் சென்று மூன்று வேர்களை எடுத்து ஜவானிடம் கொடுத்தது. ‘”இதில் ஒன்றைச் சாப்பிட்டால் எல்லா வலிகளும் தீரும்” என்றது. ஐவான் ஒரு வேரைச் சாப்பிட்டான். வலி நீங்கியது. மற்ற இரண்டு வேர்களைப் பத்திரமாக வைத்துக்கொண்டான். குட்டி பிசாசு பூமிக்குள் பாய்ந்து மறைந்தது.

மாலையில் ஜவான் வயலிலிருந்து திரும்பினான். சிறையிலிருந்து தப்பித்த சைமன் தன் வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். சைமன் ஜவானிடம், ‘எனக்கு வேலை போய் விட்டது. மறுபடியும் வேலை கிடைக்கும் வரை நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கேட்டான். ஜவான் ஒப்புக் கொண்டான்.

சைமனின் குட்டிப் பிசாசு தன் வேலையை முடித்துக் கொண்டு ஜவானின் குட்டிப் பிசாசுக்கு உதவி செய்ய வந்தது. ஆனால், அதைக் காணவில்லை. ஏதோ ஆபத்து வந்து அது மறைந்திருக்க வேண்டும் என்று ஊகித்தது. ஜவானைத் துன்புறுத்தும் பணியை அது மேற்கொண்டது.

ஜவானுடைய வேறொரு நிலத்தில் பயிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஜவானும், தங்கையும் கதிர்களை அறுக்க ஆரம்பித்தனர். பயிரின் மறைவில் ஒளிந்து கொண்டு குட்டிப் பிசாசு அரிவாளை ஒழுங்காக நகர விடாமல் தொந்தரவு செய்தது. ஜவான் புதிய அரிவாளை எடுத்து ஒரே மூச்சில் அறுவடையை முடித்தான். வண்டியில் ஏற்றுவதற்காகக் கதிர்களைச் சிறுசிறு கட்டுகளாகச் செய்து அடுக்கினான்.

பிசாசு கட்டுகளின் இடையே புகுந்து கொண்டு அவற்றை அழுகச் செய்தது. ஜவான் ஒரு முள் கரண்டியால் அதைக் குத்தி வெளியே எடுத்தான். *மறுபடியும் வந்து விட்டாயா?” என்று கோபத்தோடு கேட்டுக் கொண்டே அதைக் கொல்லப் போனான். தன்னை விட்டுவிடும்படி பிசாசு கெஞ்சியது. பதில் உதவியாக அது வைக்கோல் கட்டுகளைப் போர் வீரர்களாகவும், வீரர்களைப் பழையபடி வைக்கோல் கட்டுகளாகவும் மாற்றச் செய்யும் இரு அரிய பாடல்களை ஜவானுக்குக் கற்பித்தது. பிறகு பூமிக்குள் ஓடி மறைந்தது. வீரர்கள் சேர்ந்து வழங்கும் வேடிக்கை யான இசையைக் கொண்டு தன் ஊர் மக்களை மகிழ்விக்கலாம் என்று ஜவான் எண்ணினான்.

களத்து மேட்டிலிருந்து ஜவான் வீடு திரும்பினான். கடன்களை அடைக்க முடியாத தாரஸ் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தான். ஜவான் இன்முகத்தோடு அவர்களை வரவேற்றுத் தன்னோடு தங்கும்படி கேட்டுக் கொண்டான்.

தாரசின் குட்டிப் பிசாசு தன் பணியை முடித்துக்கொண்டு ஜவானின் குட்டிப் பிசாசுகளைத் தேடியது. காணவில்லை. ஏதோ ஆபத்து வந்து மற்ற இரண்டு பிசாசுகளும் மறைந்திருக்க வேண்டும் என்று அது ஊகித்தது. ஆகவே ஜவானின் நலன்களைக் கெடுக்கும் பணியை அது மேற்கொண்டது.

சகோதரர்களுக்கு ஜவானின் வீட்டில் இடம் போதவில்லை. பட்டணத்து நாகரிகத்தில் முழுகியிருந்த அண்ணிகள் இருவருக்கும் பட்டிக் காட்டு ஐவானின் தோற்றமும், செய்கைகளும் அறவே பிடிக்கவில்லை. ஒரு புதிய இல்லம் கட்டும்படி அவர்கள் ஆலோசனை கூறினர். இல்லத்திற்கு மரம் கொண்டுவர ஜவான் காட்டிற்குப் போனான். உயரமான மரங்களின் கிளைகளை வெட்டினான். வெட்டப்பட்ட கிளைகள் கீழே விழவில்லை. மேலேயே சிக்கிக் கொண்டன. மரத்தின் உச்சியில் அந்தக் குட்டிப் பிசாசு அமர்ந்து கொண்டு பல விதங்களிலும் அவனுக்கு இடைஞ்சல் விளைவித்தது. களைப்பு மேலிட ஜவான் மரத்தடியில் உட்கார்ந்தான். அன்றைக்கு அவனுடைய வேலையைத் தடுத்து நிறுத்தி விட்டதாகக் குட்டிப் பிசாசு எண்ணிக் குதூகலித்தது.

ஜவான் திடீரென எழுந்தான். ஒரே மூச்சில் அநேக மரங்களை வரிசையாக வெட்டிக் கீழே சாய்த்தான். கீழே விழுந்த மரத்தின் அடியில் குட்டிப் பிசாசு சிக்கிக் கொண்டது. அதனால் எழுந்திருக்க முடியவில்லை. ஜவானின் பார்வை தற்செயலாக அதன் மீது விழுந்தது. பழைய குட்டிப் பிசாசு என்று நினைத்து அதைக் கொல்வதற்காகக் கோடரியை ஓங்கினான். ”என்னைக் கொல்லாதே! உனக்கு ஒரு உதவி செய்கிறேன்”, என்று சொல்லி, ஓக் மரத்தின் இலைகளைத் தேய்த்துப் பவுன் காசுகள் வரவழைக்கும் வித்தையை அது அவனுக்குக் கற்பித்தது. குழந்தைகள் உருட்டி விளையாடப் பொற்காசுகள் உதவும் என்று ஜவான் கருதினான். மூன்றாவது குட்டிப் பிசாசும் பூமிக்குள் பாய்ந்து மறைந்தது.

ஐவானும்,சகோதரர்களும் தனித் தனியே வீடு கட்டிக் கொண்டு வசித்தனர். அறுவடை முடிந்ததும் ஜவான் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான். தொழிலாளர்களின் விருந்து தங்களுக்குப் பிடிக்காது என்று சொல்லி மூத்த சகோதரர்கள் இருவரும் ஒதுங்கினர். ஊரார் அனைவரும் உற்சாகமாக அதில் கலந்து கொண்டனர். விருந்தில் உணவிற்குப் பிறகு பாட்டு, ஆட்டம் எல்லாம் நிறைய இருந்தன.

“என்னைப் பற்றி பாடுங்கள்; பரிசு தருகிறேன்”, என்று ஜவான் பெண்களிடம் கூறினான். அவர்கள் பாடினர். ஜவான் காட்டுக்குள் ஓடி ஒரு கூடை நிறைய பொற் காசுகளைக் கொண்டு வந்து இறைத்தான். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.

இன்னொரு அதிசயத்தையும் ஜவான் அவர்களுக்குச் செய்து காட்டினான். வைக்கோல் கட்டிலிருந்து வீரர்களை வரவழைத்தான். அவர்கள் இனிமை யாகப் பாடி இசைக் கருவிகளை வாசித்தனர். விருந்தினர் கேட்டு மனம் மகிழ்ந்தனர்.

அடுத்தநாள் ஜவானைத் தேடிக் கொண்டு சைமன் வந்தான்; ”உன்னிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்களாமே? எனக்கு ஒரு படையைக் கொடுத்தால் நான் ஒரு நாட்டை வெல்லுவேன்” என்றான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஜவான் உடனே வைக்கோல் கட்டுகளை வீரர்களாக மாற்றிக் கொடுத்தான். சைமன் அவர்களுக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றான்.

சிறிது நேரங்கழித்து ஜவானைத் தேடித் தாரஸ் வந்தான்; “உன்னிடம் நிறையப் பொற்காசுகள் இருக்கிறதாமே? எனக்குக் கொஞ்சம் கொடுத்தால் நான் இந்த உலகத்தையே விலைக்கு வாங்குவேன்” அதைக் கேட்டு வியப்புற்ற ஜவான் ஒக் மரத்தின் இலைகளைக் காசுகளாக மாற்றிக் கொடுத்தான். தாரஸ் அவற்றைப் பெற்றுக்கொண்டு பட்டணத்தில் மறுபடியும் வியாபாரம் தொடங்கினான்.

சைமன் ஒரு நாட்டை வென்று அரசன் ஆனான். ஆனால் வீரர்களைக் காப்பாற்ற அவனிடம் போதிய பவுன் காசுகள் இருக்கவில்லை. வியாபாரம் செய்த தாரஸ் பொற்காசுகளைக் குவித்தான். ஆனால் அவற்றைப் பாதுகாக்க அவனிடம் போதிய வீரர்கள் இருக்கவில்லை. சைமனும் தாரசும் மேலும் பணத்தையும் படைகளையும், வாங்கி வர ஜவானிடம் போயினர். ”எனக்கு இன்னும் கொஞ்சம் வீரர்கள் வேண்டும்” – ஜவானிடம் சைமன் கேட்டான்.

“இனிமேல் உனக்கு வீரர்களைத் தர முடியாது”, என்று உறுதியாக ஜவான் மறுத்துவிட்டான்.

“எவ்வளவு பேர் வேண்டுமானாலும் தருகிறேன் என்று முன்பு சொன்னாய். இப்போது முட்டாள் தனமாக முடியாது என்று சொல்கிறாயே! என்ன காரணம், தம்பி!”என்று சைமன் கேட்டான்.

இந்த ஊர்ப் பெண்ணின் கணவனை உன் வீரர்கள் யுத்தத்தில் கொன்று விட்டனர். அவள் துக்கம் தாங்காது அழுது கொண்டிருக்கிறாள். வீரர்கள் என்றால் இனிய இசை வழங்கி மக்களை மகிழ்விப்பார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் இரக்கம் இல்லாமல் கொலை செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது. வீரர்கள் வேண்டும் என்று மறுபடியும் கேட்காதே!” என்று தீர்மானமாகச் சொன்னான் ஜவான்.

அடுத்து தனக்குப் பொற்காசுகள் வேண்டும் என்று தாரஸ் கேட்டான். அதற்கும் ஜவான் மறுத்து விட்டான். தாரஸ் காரணம் கேட்கவே,

“மைக்கேலின் பெண்ணிடம் ஒரு பசு இருந்தது. குழந்தைகள் அந்தப்பாலைப் பருகி வந்தனர். ஒருநாள் உன் கணக்குப் பிள்ளை சில பொற்காசுகளைக் கொடுத்து அந்தப் பசுவை ஓட்டிச் சென்று விட்டான். குழந்தைகள் பால் இல்லாமல் பசியால் தவிக்கின்றனர். பொற்காசுகளை வைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் விளையாடுவாய் என்று நினைத்தேன். ஆனால் அவர்களுடைய பசுவைப் பறித்துக்கொண்டு அவர்களைப் பட்டினி போட்டு விட்டாயே! இனிமேல் என்னிடம் காசு கேட்காதே!” என்று கோபத்தோடு கூறினான் ஜவான்.

சைமனும், தாரசும் தங்கள் உடைமைகளில் ஒரு பாதியை மற்றவருக்கு வழங்கி, இருவரும் அரசர் ஆயினர். இன்பமாக வாழ்ந்தனர். ஜவானும், அவன் ஊமைத் தங்கையும் வழக்கம் போல் வயலில் உழைத்துத் தங்கள் பெற்றோரை அன்போடு காத்தனர்.

ஒருசமயம் ஜவானின் நாய்க்கு நோய் கண்டது. அவனிடமிருந்த வேர்களில் ஒன்றைத் தற்செயலாக அது விழுங்கியது. உடனே அதற்கு நோய் தீர்ந்தது. அதேசமயம் அந்நாட்டு அரசகுமாரி நோயுற்றாள். மருந்துகள் பலிக்கவில்லை. திருமணம் ஆகாத ஆண்மகன் யாராவது அவளுடைய நோயைத் தீர்த்தால், அவனுக்கு அரசகுமாரியை மணம் செய்வதாக மன்னர் அறிவித்தார்.

பெற்றோர்கள் தூண்டவே, அபூர்வ வேரை எடுத்துக் கொண்டு அரசகுமாரியைக் குணப்படுத்த ஜவான் புறப்பட்டான். வழியில் நோயாளியான ஒரு பிச்சைக்காரியைக் கண்டான். அவள் மீது இரக்கப்பட்டுத் தன்னிடமிருந்த ஒரே வேரை அவளுக்குக் கொடுத்தான். பிச்சைக்காரி நோய் நீங்கி அவனை வாழ்த்திச் சென்றாள்.

அரசகுமாரிக்காகவும் ஜவான் இரங்கினான். தன்னிடம் வேர் இல்லாவிட்டாலும் அவளைக் காண்பதற்காக அரண்மனைக்குப் போனான். ஜவான் அவளுடைய அறையில் நுழைந்ததும் அவள் குணமடைந்தாள்! மன்னர் ஜவானைப் பாராட்டி, அரசகுமாரியை அவனுக்கு மணம் முடித்தார். சில தினங்களில் மன்னர் இறக்கவே. ஜவான் அந்த நாட்டு அரசன் ஆனான்.

மூன்று குட்டிப் பிசாசுகளிடமிருந்தும் செய்தி வராமல் போகவே, கிழட்டுப் பேய் அவற்றைத் தேடிப் போயிற்று. எங்கும் காணவில்லை. அவை மாயமாக மறைந்திருந்தன. சைமனும், மற்ற இரு சகோதரர்களும் அரசர்களாகி அன்போடு வாழ்ந்தனர். அதைக் காணச் சகிக்காத கிழட்டுப் பேய் தானே முன் நின்று சகோதரர்களுக்கிடையே விரோதத்தை உண்டாக்கி அவர்களை அழிக்கத் தீர்மானித்தது.

கிழட்டுப் பேய் ஒரு பெரிய ராணுவ அதிகாரியாக வேடமணிந்து கொண்டது. அந்த அதிகாரி சைமனிடம் வேலைக்கு அமர்ந்தார். அவருடைய ஆலோசனையைக்’ கேட்ட சைமன் இளைஞர்களுக்குக் கட்டாய ராணுவ சேவையைக் கொண்டு வந்தான். பயங்கரச் சேதத்தை விளைவிக்கும் குண்டுகளைத் தயாரித்தான். அண்டை நாடுகளைப் பிடிக்க ஆசைப்பட்டான்.

இந்திய அரசனைத் தாக்கும்படி சைமன் தளபதிக்குக் கட்டளையிட்டான். இந்திய அரசன் பெண்களையும் சேர்த்துப் பெரும் படை திரட்டியிருந்தான். அவனிடம் பறக்கும் குண்டுகள் இருந்தன. போரில் இந்திய அரசன் வென்றான். சைமன் தோல்வியுற்று நாட்டை விட்டு ஓடினான். கிழட்டுப் பேய் ஒரு வியாபாரியாக வேடத்தை மாற்றிக் கொண்டது. அந்த வியாபாரி தாரசின் நாட்டுக்குச் சென்று தொழிலைத் துவக்கினார். அவர் அகப்பட்ட பொருள்களை எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவற்றைப் பதுக்கி வைத்தார். நாட்டில் பணம் பெருகுகிறது. பொருள்கள் அரிதாயின. நாளடைவில் தாரஸ் அரசனின் தேவைக்குக் கூட எதுவும் கிடைக்கவில்லை. வரிகள் மட்டும்தான் கிடைத்தன. தாரஸ் கோபமடைந்து புதிய வியாபாரியை நாடு கடத்தினான். அவர் எல்லைக்கு வெளியே சென்று கடையைத்திறந்தார். வியாபாரத்தைத் தொடர்ந்தார். அவர் தந்த அதிக விலைக்கு ஆசைப்பட்ட மக்கள் உற்பத்தியை எல்லாம் வழக்கம் போல அவருக்கே விற்றனர். தன்னிடம் இருக்கும் அளவற்ற செல்வத்தால் அவர் தாரஸ் அரசனைக்கூட விலைக்கு வாங்க முடியும் என்று மக்கள் பேசினர்.

தாரஸ் அரசனுக்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. அவன் பசியால் தவித்தான். சைமன் அந்தச் சமயத்தில் தாரசிடம் ஓடிவந்து உதவி கேட்டான். தாரஸ் கையை விரித்தான்.

சைமனையும், தாரசையும் சீரழித்த கிழட்டுப் பேய் மறுபடியும் ஒரு ராணுவத் தளபதியாகத் தோற்றம் எடுத்தது. அந்தத் தளபதி ஜவானிடம் சென்று, ”அரசே! ராணுவமே இல்லாமல் இந்தப் பெரிய நாட்டை ஆளுகின்றீர்களே! அனுமதி கொடுத்தால் ஒரு பெரிய படையைத் திரட்டிப் பயிற்சி அளிக்கிறேன்” என்றான்.

“அப்படியே செய்.. ஆனால், போர் வீரர்கள் நன்றாகப் பாடவேண்டும்” என்று கட்டளையிட்டான் ஜவான்.

புதிய தளபதி ஊர் ஊராகச் சென்று கூட்டம் போட்டான்; பிரச்சாரம் செய்தான்; முதலில் நயமாகவும், பிறகு பயமாகவும் பேசி மக்களைப் படையில் சேரத் தூண்டினான். அவர்கள் உழைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வாக இருந்தது. அவர்கள் படையில் சேர மறுத்து விட்டனர். முயற்சிகளில் தோல்வியுற்ற தளபதி மக்களைப் பழிவாங்க விரும்பி அண்டை. நாட்டு மன்னனிடம் போனான்; ‘ஐவான் நாட்டில் படைகளோ, பாதுகாப்போ இல்லை. ஆடு மாடுகளும், தானியங்களும் ஏராளமாக இருக்கின்றன. நாம் படையெடுத்து, அவற்றை எளிதில் கைப்பற்றுவோம்” என்று கூறினான். மன்னன் இசைந்தான். போர் முரசு முழங்கியது. ஐவான் நாட்டில் அந்நியர் புகுந்தனர். கால்நடைகளையும், தானியங்களையும் அவர்கள் கவர்ந்து சென்றனர்.

எதிரிப் படைகள் கிராமம் கிராமமாகப் புகுந்தன. அவர்களை வேடிக்கை பார்க்க மக்கள் திரளாக வந்தனர். ஆனால் ஒருவராவது எதிர்க்கவில்லை. மாறாக இரக்கம் காட்டினர். “நீங்கள் மிகுந்த கஷ்ட நிலையில் இருப்பது போலத் தோன்றுகிறது. எங்கள் நாடு. வளமான நாடு. எங்களுடனேயே தங்கி விடுங்களேன்” என்று சொல்லி அன்பைப் பொழிந்தனர். எதிர்ப்பு இல்லாத ஊரில் வீரர்கள் போர் செய்ய விரும்பவில்லை. ‘முட்டாள்கள் ‘ என்று மக்களைத் திட்டிக் கொண்டே வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

படை பலத்தால், கிழட்டுப்பேய் ஐவானையும், அவனுடைய மக்களையும் அசைக்க முடியவில்லை. அடுத்து பண பலத்தால் அவர்களைச் சோதிக்க முயன்றது. அதற்காக அது ஒரு பணக்காரப் பிரபுவாக உருவெடுத்தது. ஐவானிடம் சென்று நவீன வியாபார முறைகளை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க அனுமதி பெற்றது.

அந்தப் பிரபுவிடம் ஏராளமான பொற்காசுகள் இருந்தன. அந்தக் காசுகளைத் தாராளமாகச் செலவழித்து அவர் ஒரு மாளிகை கட்டத் தொடங்கினார். அப்படியே ஜவானையும், அவனுடைய மக்களையும் தன் காசுக்கு அடிமையாக்கத் திட்டமிட்டார்.

ஜவானுடைய நாட்டில் பண்ட மாற்று முறைதான் இருந்தது. பணப்புழக்கம் இருக்கவில்லை. பிரபுவின் பொற்காசுகளை அவர்கள் அதிசயத்தோடு நோக்கினர். பிரபுவின் மாளிகைக்கு வேண்டிய பொருள்களையும், உழைப்பையும் கொடுத்துப் பதிலுக்கு அவருடைய பொற்காசுகளை முதலில் பெற்றனர். அவற்றை ஒரு நூலில் கோத்துப் பெண்கள் மாலையாக அணிந்தனர். அதைச் சக்கரமாகப் பாவித்துச் சிறுவர்கள் அதைத் தெருவில் உருட்டி விளையாடினர். அவர்களுக்குப் பொற்காசு அலுத்து விட்டது. பிரபுவிடமிருந்து அதை ஏற்க மறுத்தனர். பொற்காசுகளைத் தவிர, தங்களுக்குத் தேவையான வேறு ஏதாவது பொருளையோ அல்லது உழைப்பையோ அவர்கள் எதிர்பார்த்தனர்.

கையில் காசை வைத்துக்கொண்டு பிரபு வீடு வீடாகச் சென்று உணவு கேட்டார். அந்த நாட்டில் கடனும் இல்லை. வரியும் இல்லை. மக்கள் காசை லட்சியம் செய்யவில்லை. தங்கள் வழக்கப்படி பண்டமாற்று முறை அல்லது உழைப்புக்கு மட்டுமே உணவு கொடுக்கச் சம்மதித்தனர். பாவம், பிரபு பசியால் வாடினார்.

பிரபுவின் நிலைக்கு இரங்கிய மக்கள் ஜவான் அரசனிடம் சென்று அறிவுரை கேட்டனர். ”ஒவ்வொரு நாளும் பிரபு ஒரு வீட்டிற்குச் சென்று ஏதாவது ஒரு சிறிய வேலையைச் கழிந்தன. செய்ய வேண்டும். அந்த வீட்டார் உணவு அளிக்க வேண்டும்” என்று ஜவான் உத்தரவிட்டான். வேறு வழியில்லாமல் பிரபு வீடு வீடாகச் சென்றார். சிறு வேலைகளைச் செய்தார். அதே மாதிரி ஒருநாள் ஜவானின் மாளிகைக்கும் சென்றார். மாளிகையின் சாப்பாட்டு அறையை ஜவானின் ஊமைத் தங்கை நிர்வகித்து வந்தாள். அவள் உண்ண வருவோரை எல்லாம் முதலில் கைகளை நீட்டச் சொன்னாள். உழைத்து உரமேறிய கரங்களுக்கே முதலில் உணவிட்டாள். அவர்கள் உண்ட மிச்சம், மீதியை மற்றவர்களுக்குக் கொடுத்தாள். உழைப்பு விஷயத்தில் அவள் மிகவும் கண்டிப்பாக இருந்தாள்.

ஒருநாள் சாப்பிட வந்தவர்களின் கைகளை வழக்கம் போல் அவள் பார்வையிட்டாள். பிரபுவின் கைகள் மென்மையாகவும், சுத்தமாகவும் இருந்தன. உடனே, “உங்களுக்கு இந்தப் பந்தியில் உணவு கிடையாது. கடைசியில்தான்” என்று சைகை மூலம் அவள் தெரிவித்தாள், பிரபுவுக்குப் பசி ஒருபக்கம், கோபம் ஒரு பக்கம். “இதென்ன முட்டாள்தனமான சட்டமாக இருக்கிறதே! கைகளால்தான் ஒரு மனிதன் வேலை செய்ய முடியுமா என்ன? தலையினாலும் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியாதா? சொல்லப் போனால் தலையால் வேலை செய்வதுதான் ரொம்பக் கஷ்டம். சில சமயம் தலையே வெடித்து விடும்” என்று பிரபு ஆத்திரத்தோடு கூச்சலிட்டார்.

’’தலையால் வேலையைச் செய்யும் கலையை என் மக்களுக்குச் சொல்லிக் கொடுங்களேன். அது உபயோகமாக இருக்கும்”, என்று பணிவோடு ஜவான் வேண்டினான். பிரபு ஓர் உயர்ந்த கோபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதில் ‘அநேக படிக்கட்டுகள் இருந்தன. பிரபு அவற்றில் ஏறி உச்சியை அடைந்தார். அவர் செய்யப் போகும் புதுமையைக் காண மக்கள் கீழே திரளாகக் கூடினர்.

“உழைக்காமலே வாழ்வது எப்படி?” என்று பிரபு உரை ஆற்றினார். உழைப்பு ஒன்றையே உன்னதமாகக் கருதிய அந்த மக்களுக்கு அவருடைய வாய்ச் சொற்கள் புரியவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்தனர். அப்படி மக்கள் கூடுவதும், கலைவதுமாகச் சிலநாட்கள் கழிந்தன.  ஒருவராவது பிரபுவுக்கு உணவு அளிக்கவில்லை. தலையால் உழைக்கும் மனிதன் உணவையும் அப்படியே தயாரிக்க முடியும் என்று நம்பினர்.

பிரபுவுக்குப் பசி அதிகரித்தது. கண்கள் இருண்டன. தலைசுற்றியது. அவர் கீழே சரிந்தார். உச்சியிலிருந்து தரையை நோக்கி உருளத் தொடங்கினார். ஒவ்வொரு படியிலும் அவருடைய தலை ‘டங், டங்’ என்று இடித்துக் கொண்டு வந்தது.

அதைக் கண்ட மக்கள் ஜவானுக்குச் செய்தி அனுப்பினர். ஜவான் விரைந்தான். ஒவ்வொரு படிக்கட்டிலும் தலையை முட்டிக் கொண்டு உருண்டு வந்த பிரபு, கடைசியில் பூமியிலும் முட்டிக் கொண்டார். பூமி திடீரெனப் பிளந்தது. பிரபுவின் உருவில் இருந்த கிழட்டுப் பேய் அதற்குள் பாய்ந்து மறைந்தது. பெரிய ஒரு ஓட்டை மட்டும் காட்சி அளித்தது!

(Leo Tolstoy ரஷ்ய மொழியில் எழுதிய ‘The Story of Ivan The Fool)

சைகை என்ற கதையின் சுருக்கமே இது.)

000

The post ஜவான் ஒரு அசடு first appeared on Nadukal.

போஸ்டாபீஸ்

1 May 2025 at 04:30

தூமகேது (குஜராத்தி)

பின்னிரவின் மங்கிய ஆகாயத்திலே மனித வாழ்க்கையின் இன்ப நினைவுகள் சுடர் விடுவது போல் நட்சத்திரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. குளிர் காலமானதால் பனிக்காற்றின் கொடுமையிலிருந்து தப்புவதற்காக ஒரு பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டு ஒரு கிழவன் நகரத்தின் மத்தியிலிருந்து வந்து கொண்டிருந்தான். சுதந்திர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அநேக வீடுகளிலிருந்து மணியின் இனிய நாதத்துடன் பெண்களின் மெல்லிய குரலோசை கலந்து வருவது அந்த இரவில் அவனுக்குத் துணை செய்ய வருவது போலிருந்தது. நாய்கள் குரைப்பதும், அதிகாலையில் எழுந்து விட்டவர்களின் காலடி ஓசையும், அகாலத்தில் எழுந்துவிட்ட பறவையின் சிறகடிப்பும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தன. இவைகளைத் தவிர நகரத்தில் பூரண அமைதி குடிகொண்டிருந்தது. மக்கள் இன்ப நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். குளிர் கால இரவானதால் நேரம் வளர்ந்து கொண்டிருப்பது போலிருந்தது. சொல்லும் செயலும் வேறுபட்டிருக்கும் குணம் படைத்த மனிதனைப் போல குளிர்காலக் காற்றும் உடலைத் துளைத்துக் கொண்டிருந்தது. கிழவன் குளிரில் நடுங்கிக் கொண்டு அமைதியாக நடந்து நகரின் வெளிப்புற வாயிலை அடைந்தான். பிறகு தன் பழைய கைத்தடியை ஊன்றிக்கொண்டு பாதை வழியே நடந்தான். சாலையின் ஒரு புறத்தில் அடர்ந்த மரங்களிருந்தன. மறுபுறத்தில் நகரத்தின் பூங்கா அமைந்திருந்தது. இங்கு குளிர் அதிகமாக இருந்தது. இருளும் மைபோலப் படர்ந்திருந்தது. சுக்ர நட்சத்திர ஒளியும் பூமியில் பனிபோலப் படர்ந்திருந்தது. பூங்காவின் கடைசியில் ஒரு புது மாதிரியான கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. மூடியிருந்த ஜன்னல்கள் வழியாக வெளிச்சம் உள்ளிருந்து வந்து கொண்டிருந்தது.

பக்தன் கோபுரத்தின் சிகரத்தைக் கண்டதும் ஆனந்தம் அடைவதுபோல இந்தக் கிழவனும் அந்தக் கட்டிடத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். வெளிப்புறச் சுவரில் ’போஸ்ட் ஆபீசு’ என்ற போர்டு காணப்பட்டது.

கிழவன் போஸ்ட் ஆபீசின் வெளிப்புறத் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டான். உள்ளே வேலை செய்து கொண்டிருந்த நாலைந்து பேர்களுடைய சத்தம் தான் வெளிவந்து கொண்டிருந்தது. இதைத் தவிர வேறு எவ்வித சத்தமும் கிடையாது.

‘போலீஸ் சூபரின்டெண்ட்’ என்று உள்ளிருந்து குரல் கேட்டது. கிழவன் திடுக்கிட்டான். பிறகு அமைதியடைந்து உட்கார்ந்து கொண்டான். ஆசையும் அன்பும் இந்தக் குளிரில்கூட அவனுக்கு உஷ்ணத்தை அளித்து வந்தன.

உள்ளிருந்து குரலுக்கு மேல் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சார்ட்டர் விலாசத்தைப் படித்தபடி தபால்காரனிடம் கடிதங்களை வீசிக்கொண்டிருந்தார்.

கமிஷனர், சூபரின்டெண்ட், லைப்ரேரியன் என்று பல விலாசங்களைப் பார்த்து சார்ட்டர் கடிதங்களை வேகமாக வீசிக் கொண்டிருந்தார்.

இதற்குள் உள்ளேயிருந்து ஒரு விநோதமான குரல் கேட்டது.

”கோச்வான், அலிபாபா!”

கிழவன் எழுந்து நின்று கொண்டான். பக்தியுடன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தான். பிறகு முன்னே எழுந்து வந்து கதவின்மீது கையை வைத்தான்.

”கோகுல்!’’

“யார்?”

‘’எனக்குக் கடிதம் இருக்கிறதா?….நான் வந்திருக்கிறேன்.”

பதிலுக்கு கர்ண கடூரமான கேலிச் சிரிப்புத்தான் வெளிப்பட்டது.

“பாபுஜி! இவன் ஒரு பைத்தியக்காரக் கிழவன். இவன் எப்போதும் தன் தபாலைப் பெற்றுப் போக வந்து கொண்டிருக்கிறான்.”

இவ்விதம் சார்ட்டர் போஸ்ட் மாஸ்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்குள் கிழவன் தன் பழைய இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். ஐந்து வருஷமாக இந்த இடத்தில் உட்கார்ந்து கிழவனுக்குப் பழக்கமாகி விட்டது.

முதலில் அலி ஒரு வேட்டைக்காரனாக இருந்தான். அபினி சாப்பிடுபவன் அபினி இல்லாமல் வாழ முடியாததுபோல அலியும் வேட்டையாடாமல் இருக்க முடியாத நிலையை அடைந்து விட்டான். கௌதாரி போன்ற பறவைகளை அலி பார்த்து விட்டால் அடுத்த கணமே அவை அவன் கைக்கு வந்துவிடும். முயல் பதுங்கியிருக்கு மிடத்தைச் சுலபமாகக் கண்டு கொள்வான். வேட்டை நாய்களால் காதுகளை உயர்த்திக்கொண்டு அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் முயல்களைக் கண்டு கொள்ள முடியாது. ஆனால் அலி அவை இருக்குமிடம், போகும் வழி முதலியவைகளை எல்லாம் எளிதில் புரிந்துகொள்வான். சில சமயங்களில் மீன்களிடம்கூட உறவு வைத்துக் கொள்வான்.

ஆனால் வாழ்க்கையின் அந்திமப் பருவம் நெருங்க நெருங்க அவனுடைய வேட்டைத் தொழிலும் வேறு திசையில் திரும்பியது. அவனுடைய ஒரே ஒரு மகளான மரியமும் கலியாணம் ஆகிக் கணவன் வீடு சென்றுவிட்டாள். அவளுடைய கணவன் ராணுவத்தில் வேலை பாத்து வந்ததால் பஞ்சாபில் ஏதோ ஒரு இடத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டான். யாருக்காக வாழ்ந்து வந்தானோ அவளிடமிருந்து அலிக்கு இந்த ஐந்து வருடமாக ஒரு கடிதம்கூட வரவில்லை. அலிக்கு இப்போதுதான் அன்பு, பிரிவு என்பதெல்லாம் நன்கு புரிய ஆரம்பித்தன. முன்பெல்லாம் கௌதாரிக் குஞ்சுகள் பயத்துடன் வேகமாக ஓடுவதைப் பார்த்து அலி சிரிப்பான். இது வேட்டைக்காரனுடைய ஆனந்தம்.

வேட்டையில் உள்ள ஆனந்தம் அவனுடைய ஒவ்வொரு நரம்புகளிலும் நிறைந்திருந்தது. ஆனால் மரியம் அவனை விட்டுப் பிரிந்த உடனே வாழ்க்கையே அவனுக்கு சூன்யமாகப்பட்டது. அன்றிலிருந்து வேட்டைத் தொழிலை விட்டு விட்டு பயிர் பச்சைகள் நிறைந்த வயல் பக்கம் அவன் திருஷ்டியைச் செலுத்தினான். அலி வாழ்க்கையில் முதல் முறையாக அன்பின் சிருஷ்டி பிரிவு என்னும் கண்ணீர்தான் என்பதை உணர்ந்தான். அதற்கப்புறம் அலி ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு வாய் விட்டு அழுதான். அன்றிலிருந்து காலையில் நான்கு மணிக்கு எழுந்து இந்தப் போஸ்ட் ஆபீசுக்கு வருவான். அவன் பெயருக்குக் கடிதம் வருவதில்லை. ஆனால் மரியத்திடமிருந்து ஒரு நாளைக்குக் கடிதம் வரும் என்று பக்தனுடைய வைராக்ய சித்தத்துடன் தினமும் காலையில் வந்து கொண்டிருந்தான்.

போஸ்ட் ஆபீசு உலகத்திலே ஒரு சுவையற்ற இடம்தான். இருந்தாலும் அவனுக்கு அது தர்ம க்ஷேத்திரமாக இருந்தது. ஒரே இடத்தில் ஒரே மூலையில் அவன் வழக்கமாக உட்கார்ந்து கொள்வான். அவன் நிலையை அறிந்து கொண்டு அனைவரும் வேடிக்கை செய்தனர். சில சமயங்களில் அவன் பெயரைக் கூப்பிடுவார்கள். அதைக் கேட்டு அலி போஸ்ட் ஆபீசு கதவு வரையிலும் விரைந்து ஓடுவான். அதைக் கண்டு சிரித்து மகிழ்ந்தனர். எல்லையற்ற நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் தினமும் வருவான். வெறுங் கையுடன் திரும்பிப் போவான்.

அலி உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொருவராகக் கடிதம் வாங்கிப் போக வந்து கொண்டிருந்தனர். அநேகமாக நகரத்திலுள்ள ஆபீசுகளிலிருந்துதான் கடிதம் வாங்கப் போக வேலைக்காரர்கள் வருவார்கள். சிலர் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். இன்னும் சிலர் பளபளக்கும் பூட்ஸ்கள் அணிந்திருப்பார்கள். இப்படிப் பலவிதமாகத் தங்கள் தோற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதற்குள் கதவு திறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் எதிரில் நாற்காலியில் சதா கவலை தோய்ந்த முகத்துடன் போஸ்ட் மாஸ்டர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் எந்தவிதமான களையும் தென்படவில்லை.

அலி தன் இடத்தை விட்டு நகராமலிருந்தான்.

“போலீஸ் கமிஷனர்” என்ற குரல் எழுந்தது. ஒரு வாலிபன் எழுந்து போய் தபாலை வாங்கினான்.

”சூபரின் டெண்ட்”

வேறொரு மனிதன் எழுந்து முன் சென்றான். இவ்விதம் எல்லாப் பெயர்களும் படிக்கப்பட்டன. விஷ்ணு பக்தன்போல அந்த சார்ட்டர் தினசரி இந்தப் பெயர்களைப் பாராயணம் செய்தாக வேண்டும்.

கடைசியாக அனைவரும் சென்று விட்டனர். அலியும் எழுந்து போஸ்டாபீசை வணங்கி விட்டுச் சென்று விட்டான். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த அப்பாவி பாவம்!?”

“அவன் பைத்தியக்காரனா?” என்று போஸ்ட் மாஸ்டர் கேட்டார்.

‘’யாருங்கோ? அலியா? ஆமாம். ஐந்து வருஷமாகத் தினமும் கடிதம் வாங்கிப்போக வருகிறான். மழை காற்று- குளிர் எக்காலமாக இருந்தாலும் சரி, இவனுக்கும் ஏதாவது கடிதம் வருமாம்’ என்று குமாஸ்தா சொன்னார்.

‘’சுத்த ஏமாளியாக இருக்கிறானே! யார் கடிதம் எழுதப் போகிறார்கள்?”

“பாபுஜி! இவன் மூளை கெட்டுவிட்டது. முதலில் பெரிய அக்ரமக்காரனாக இருந்தான். ஒரு சமயம் இவன் ஏதோ தெய்வக் குற்றம் செய்து விட்டான். அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்” என்று தபால்காரர் சொன்னார்.

”ரொம்ப விசித்திரமான பைத்தியமாக இருக்கிறதே!”

”ஆமாம். அகமதாபாத்தில் நான் ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தேன். அவன் நாள் முழுதும் புழுதிகளைக் குவித்துக் கொண்டிருப்பான். வேறு ஒன்றும் செய்ய மாட்டான்.

“இன்னொரு பைத்தியக்காரன் மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்குப் போய் கல்லின்மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பான்.”

”வேறொரு பைத்தியக்காரன் சதா இங்குமங்கும் சுற்றிக் கொண்டேயிருப்பான். இன்னொரு பைத்தியக்காரன் ஆனந்தமாகப் பாட்டுப் பாடிக்கொண்டிருப்பான்.  ஒரு பைத்தியக்காரனுடைய வேடிக்கையைக் கேளுங்கள். அவன் தன் உடலிலுள்ள தோலைத் தானே பிய்த்துக்கொண்டு வேறு யாரோ காயப்படுத்தி விட்டதாக அழுவான்.’’

இன்று தபாலாபீசில் பைத்தியங்களின் கதா காலட்சேபம் நடந்தது. எப்போதும் இப்படித்தான் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொஞ்ச நேரம் ஆனந்தம் அனுபவித்து வந்தார்கள். இது வேலை செய்பவர்களின் பழக்கம், குடிப்பழக்கம் போல. கடைசியாகப் போஸ்ட் மாஸ்டர் எழுந்து நின்று கொண்டு, “இந்தப் பைத்தியங்களுக்கும் ஒரு உலகம் உண்டு. நம்மை அவர்கள் பைத்தியம் என்று நினைப்பார்கள். இவர்களுடைய சிருஷ்டியும் கவியின் சிருஷ்டியைப் போலத்தானிருக்கும்” என்றார்.

கடைசி வார்த்தையைக் கூறிவிட்டுப் போஸ்ட் மாஸ்டர் சிரித்துக்கொண்டே போய்விட்டார். ஒரு குமாஸ்தா நேரம் கிடைக்கும்போது கவி எழுதுவது உண்டு. அவரை அனைவரும் கேலி செய்வார்கள். போஸ்ட் மாஸ்டரும் கடைசி வார்த்தைகளைச் சொல்லும்போது அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டுதான் சொன்னார். போஸ்டாபீஸ் முன்போல அமைதி அடைந்தது.

ஒரு தடவை அலி இரண்டு மூன்று நாள் வரையிலும்கூட வரவில்லை. அலியின் இதயத்தைப் புரிந்துகொள்ள அனுதாப மனம் படைத்தவர் யாரும் போஸ்டாபீசில் இல்லை. ஆனால் அவன் ஏன் வரவில்லை என்பதை அறிய அனைவரும் ஆவலுடனிருந்தார்கள். கடைசியில் அலியும் வந்தான். ஆனால் அன்று அவன் இருமிக் கொண்டிருந்தான். அவன் முகத்திலே வாழ்க்கையின் இறுதிக் குறிகள் தென்பட்டன.

இன்று அவன் பதட்டத்துடன் போஸ்ட் மாஸ்டரிடம், “பாபு சாகப்! என் மரியத்திடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.

போஸ்ட் மாஸ்டர் அன்று ஊருக்குப் போகும் அவசரத்திலிருந்தார். இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுமை அவரிடத்திலில்லை.

“நீ யாரென்றே தெரியாதே!”

“என் பெயர் அலி” என்று பதிலளித்தான்.

”சரிதான். உன் மரியத்தின் பெயரை இங்கு யாராவது எழுதி வைத்திருக்கிறார்களா?”

”எழுதிக் கொள்ளவில்லையா? ஒருவேளை கடிதம் வந்து நான் வராமல் போனால் உங்களிடத்திலேயே வைத்திருங்கள்.”

வாழ்நாள் முழுதும் வேட்டையாடியே கழித்த ஒருவனுக்கு மரியத்தின் பெயர் அவளுடைய தந்தையைத் தவிர மற்றவர்களுக்குச் செல்லாக் காசு என்பது எப்படித் தெரியும்?

போஸ்ட் மாஸ்டர் கோபமடைந்தார். பைத்தியமா உனக்கு? வெளியில் போகமாட்டாய்? உனக்குக் கடிதம் வந்தால் யாரும் தின்றுவிட மாட்டார்கள்” என்றார்.

போஸ்ட் மாஸ்டர் அவசரமாக அங்கிருந்து போய்விட்டார். அலி மெதுவாக அங்கிருந்து வெளியேறினான். வெளியில் போகும்போது போஸ்டாபீசை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். இன்று அவன் அனாதையைப் போலக் கண்ணீர் வடித்தான். ஆவல் இருந்தது. ஆனால் நம்பிக்கை இழந்துவிட்டான். ஐயோ ! இனி மரியத்தின் கடிதம் எப்போது வரும்?

ஒரு குமாஸ்தா அவன் பின்னால் வருவது தெரிந்தது. அலி அவரைத் திரும்பிப் பார்த்தான்.

”ஐயா!”

குமாஸ்தா திடுக்கிட்டுப் போனான். ஆனால் அவன் நல்ல மனிதன்.

”ஏன்?”

“இதோ பாருங்கள். இவை தான் என்னிடமிருக்கின்றன” என்று கூறிவிட்டு ஒரு சிறிய தகர டப்பியைத் திறந்து ஐந்து தங்க நாணயங்களை எடுத்தான். குமாஸ்தா ஆச்சரியப்பட்டான்.

“ஆச்சரியப்பட வேண்டாம். இது உங்களுக்குப் பிரயோஜனப்படும். இனி எனக்கு இவைகளால் பிரயோஜனமில்லை. எனக்கு ஒரு காரியம் செய்வீர்களா?” என்றான்.

”என்ன?”

“மேலே என்ன தெரிகிறது?” என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டினான்.

”ஆகாயம்!”

“மேலே அல்லா இருக்கிறான். அவன் சாட்சியாக உனக்கு இந்தத் தங்க நாணயங்களைக் கொடுக்கிறேன். என் மரியத்திடமிருந்து கடிதம் வந்தால் என்னிடம் சேர்ப்பித்து விடுகிறாயா?”

குமாஸ்தா திகைத்துப் போய், “எங்கே? எங்கே சேர்ப்பிக்க வேண்டும்?” என்றான்.

“என் சமாதியில்.”

“சேச்சே!”

“உண்மையாகச் சொல்கிறேன். இதுதான் எனது கடைசி நாள். ஆமாம். அந்திம நாள்தான். மரியத்தையும் சந்திக்கவில்லை! கடிதத்தையும் பார்க்க வில்லை”.

அலியின் கண்களிலே ஒருவிதமான வெறி பளிச்சிட்டது. குமாஸ்தா மெதுவாக அங்கிருந்து போய் விட்டான். அவனுடைய ஜேபியில் தங்க நாணயங்கள் இருந்தன.

**

அலி அதற்கப்புறம் தென்படவேயில்லை. அவனைத் தேடுவார்களுமில்லை. ஒரு நாள் போஸ்ட் மாஸ்டர் கொஞ்சம் சோகத்துடனிருந்தார். அவருடைய மகள் உடல்நிலை சரியில்லாமல் ஊரிலிருந்தாள். அவளைப் பற்றித் தகவல் அறிய வேண்டி சோகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

தபால் பை வந்தது. கடிதங்கள் குவிந்து கிடந்தன. ஒரு கவரைத் தன்னுடையது என்று நினைத்துக் கொண்டு போஸ்ட் மாஸ்டர் அவசரமாக அதைக் கையிலெடுத்தார். ஆனால் அந்தக் கவரில் “கோச்வான் அலிபாபா” வினுடைய விலாசம் எழுதப் பட்டிருந்தது.

அவர் தீயை மிதித்தவர்போல் கோபமடைந்து கவரைக் கீழே வீசி எறிந்தார். கொஞ்ச நேரத்திற்குள் அவருடைய கடின சித்தம் மாறுதலடைந்தது. மனித குணம் தலையெடுத்தது. உடனே அவருக்கு இது அந்தக் கிழவனுடைய கடிதமல்லவா என்ற நினைவு வந்தது. ஒருவேளை அவனுடைய மகள் மரியம் எழுதியிருக்கலாம்.

”லட்சுமிதாஸ்!” என்று போஸ்ட் மாஸ்டர் அழைத்தார்.

அலி அன்று தங்க நாணயம் கொடுத்த மனிதனுடைய பெயர்தான் லட்சுமிதாஸ்.

”சொல்லுங்கள்.”

இது உங்களுடைய கோச்வான் அலியினுடைய கடிதம். இப்போது எங்கே அவனைக் காணோம்?”

“தேடிப் பார்க்கிறேன்.”

அன்று போஸ்ட் மாஸ்டர் மகளிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. இரவு முழுவதும் தூக்கமின்றிக் கழித்தார். அடுத்த நாள் மூன்று மணிக்கு அவர் ஆபீசில் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான்கு மணிக்கு அலி வருவான். அவனிடம் கடிதத்தைக் கொடுத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

அலி பாபாவின் நிலையை இப்போது போஸ்ட் மாஸ்டர் புரிந்து கொண்டார். இன்று காலை தபாலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து வருஷம் வரையிலும் இம்மாதிரி விடியா இரவுகள் எத்தனையைக் கழித்திருக்கவேண்டும் என்று எண்ணிப் பார்க்கவே போஸ்ட் மாஸ்டர் மனத்திலே இரக்க உணர்ச்சி பிறந்தது. ஐந்து மணிக்கு யாரோ கதவைத் தட்டினார்கள். இன்னும் தபால்காரன் வரவில்லை. ஆனால் அலிதான் கதவைத் தட்டுகிறானோ என்ற பிரமை ஏற்பட்டது. போஸ்ட் மாஸ்டர் எழுந்தார். தந்தையின் மனோ வேதனையை உணர்ந்த அவர் வேகமாக எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

‘வாப்பா அலி! இந்தா உன்னுடைய கடிதம்.’

கதவோரத்தில் ஒரு கிழவன் தடியை ஊன்றிக் கொண்டு குனிந்தபடி நின்று கொண்டிருந்தான். கண்ணீர் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. முகத்திலுள்ள சுருக்கங்களில் உணர்ச்சியற்ற தன்மை வெளிப்பட்டது.

அவன் போஸ்ட் மாஸ்டரைப் பார்த்தான். ஆனால் போஸ்ட் மாஸ்டர் திடுக்கிட்டுப் போனார். கிழவனுடைய கண்களிலே மனித ஒளியில்லை.

”அது யார் பாபுஜி? அலியா?” என்று கேட்டுக் கொண்டு உள்ளேயிருந்து லட்சுமிதாஸ் அருகில் வந்து நின்று கொண்டார்.

போஸ்ட் மாஸ்டர் அதைக் கவனியாமல் வாயிற் பறமே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அங்கே யாரும் தென்படவில்லை. ஆச்சரியத்துடன் அவர் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். வெளியில் யாருமில்லையே! இது என்ன ஆச்சரியம்? அவர் லட்சுமிதாஸ் பக்கம் திரும்பினார்.

”ஆமாம், அலிபாபாதான்….அடே! நீயா?’’

”அலிபாபா இறந்து விட்டான். ஆனால் அவனுடைய கடிதத்தை என்னிடம் கொடுங்கள்.”

”அடடா! எப்போது காலமானான்? உண்மையா, லட்சுமிதாஸ்?’’

”ஆமாம். அவன் இறந்துபோய் மூன்று மாதமாகிறது” என்று அங்கு வந்த தபால்காரன் சொன்னான்.

போஸ்ட் மாஸ்டர் திகைத்துப் போய்விட்டார். மரியத்தின் கடிதம் அங்கேயே கிடந்தது. அலிபாபா கடைசி நாளன்று சொன்ன விஷயத்தை லட்சுமிதாஸ் சொன்னான். அவருடைய கண்ணெதிரில் அலி நிற்பது போலிருந்தது. அவர் மனம் குழப்பமடைந்து விட்டது. ‘நான் அலியைப் பார்த்தேனா அல்லது பிரமையா?’

வழக்கம்போல வேலை ஆரம்பமாகியது. ‘போலீஸ் கமிஷனர்’, ‘சூபரின்டெண்ட்’ என்று சார்ட்டர் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் போஸ்ட் மாஸ்டர் அந்த ஒரேயொரு கடிதத்தையே துடிக்கும் உள்ளத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். கவர் பதினைந்து பைசா, கார்டு ஐந்து பைசா என்ற எண்ணமே அவர் மனத்தில் எழவில்லை.

மனிதன் தன் கண்ணோட்டத்தை விட்டுவிட்டுப் பிறர் கண்ணோட்டத்தில் பார்த்தானானால் உலகில் அமைதி நிலவும்.

அன்று மாலை போஸ்ட் மாஸ்டரும் லட்சுமிதாசும் அலியின் சமாதிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மரியத்தின் கடிதம் அவரிடம்தான் இருந்தது. சமாதி மீது கடிதத்தை வைத்து விட்டு போஸ்ட் மாஸ்டரும் லட்சுமிதாசும் திரும்பினார்கள்.

“லட்சுமிதாஸ்! இன்று காலை நீதான் எல்லோருக்கும் முன் வந்தாயா?”

”ஆமாம்.”

‘நீதான் அலிபாபா என்று சொன்னாயா?”

‘’ஆமாம்.”

ஆனால்.. ஒன்றுமே.. புரியவில்லையே….”

“என்ன?”

”சரிசரி! ஒன்றுமில்லை” என்று போஸ்ட் மாஸ்டர் பேச்சை மாற்றினார். போஸ்டாபீசுக்கு அருகில் வந்ததும் போஸ்ட் மாஸ்டர் தனியாகப் போய்விட்டார். அவருடைய தந்தை உள்ளத்தால் அலியைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற வேதனை அடைந்தார். இன்று வரையிலும் அவருடைய மகளைப்பற்றிய ஒரு தகவலும் தெரியவில்லை. இதே கவலையுடன் இரவைக் கழித்தார். பச்சாதாபம், கவலை, இரக்கம் முதலிய உணர்ச்சிகளுடன் அவர் ஆபீசில் உட்கார்ந்து கொண்டிருந்தார். . அருகிலிருந்த அடுப்பிலிருந்து புகையும் நெருப்பும் வெளி வந்து கொண்டிருந்தன.

000

The post போஸ்டாபீஸ் first appeared on Nadukal.

பொன்னாயா

1 May 2025 at 04:26

‘’வா சாமி! தாரு கண்ணாயா புள்ளெ ரெச்சுமி தான நீயி! இந்தப்பேரெழவு புடிச்ச கண்ணு பொட்டக்கண்ணாப்போச்சு சாமி! எம்பட ஊட்டுக்குள்ளார தாரு வர்றாங்க.. தாரு போறாங்கன்னு ஒன்னும் நெகா சிக்கறதில்லயாயா! அப்புறம் உங்கோயா நல்லாயிருக்காள்ளோ? அவ ஊட்டுக்காரம் பொன்னுச்சாமி தான் பாவம் உங்களையெல்லாம் பொழைக்க வைக்க அம்புட்டு பாடு பட்டானாக்கும்! பீடியக் குடிக்காதடான்னு ஊரே சொல்லுச்சு! லொக்கு லொக்குனு விடியக்காத்தால மூனு மணிக்கி இரும ஆரம்பிச்சான்னா விடிஞ்சி மணி ஏழானாலும் இருமீட்டே ஊட்டுத்திண்ணையில உக்காந்திருப்பான். அப்பயும் பீடிக்குடியை உட்டானா அவன்? விடியறதுக்குள்ள பத்துப்பாஞ்சி பீடிகளை பத்தவெச்சு ஊதித்தள்ளிடுவான். ஆனா உங்கொப்பன் நல்ல பாட்டுக்காரனாயா! காத்தாலயும் பொழுதோடயும் பனெமரம் ஏறி தெளுவு எறக்கி கொண்டாருவான். அவனே பாவுகாச்சி, அவனே அச்சுல ஊத்தி கருப்பட்டி எடுப்பான். நாலு மரத்துல அவன் குடிக்கிறதுக்கு கள்ளு போட்டுக்குவான். ஆளு கரும்பூதமாட்டல்ல இருந்தான் அப்பொ! ஆனா இருமி இருமி ரத்தம் கக்கீட்டு செத்தான் சிவாசி கணேசன் எதோ சினிமாப்படத்துல கக்குனாப்புல! தே ரெச்சுமி.. உங்கோயா இப்ப நல்லாத்தான இருக்கா? தே ஒன்னும் பேசமாட்டீங்கறே?”

“ஏனாயா அழுவுறே? உங்கோயா கண்ணாயா செத்துப்போன விசயமே நீ சொல்லித்தான் எனக்குத் தெரியுது பாத்துக்குவே! நாந்தான் இந்த ஊட்டோடயே கெடக்குறேனே வருசக்கணக்கா! எத்தன வருசமாச்சுன்னே தெரியில! எம்புள்ளெ சீதாரெச்சுமியத்தான் காங்கேயத்துக்கு கட்டிக்குடுத்துட்டம்ல! உனக்குத்தெரியுமா தெரியாதா? ஆமாம் பாரு.. நீங்க ரெண்டுபேருந்தான புதூரு பள்ளிக்கோடத்துக்கு ஒட்டுக்கா சோடி போட்டுட்டு போயி அஞ்சாப்பு வரெக்கிம் படிச்சீங்க! என்னாயா பண்ணுறது.. வயசாவ வயசாவ ஒன்னும் நெனப்புல இருக்குறதேயில்ல!”

“எம்பட ஊட்டுக்காரரு தான் என்னேரமும் சொல்லீட்டே இருப்பாப்ல! ரெச்சுமியும் நம்ம புள்ள மாதிரித்தான்னு! உன்னைய எந்தூருக்கு உங்கோயா கட்டிக்குடுத்தா? தென்னமோ பாளையம்னு வருமேடி! சொல்லு! ஆங்.. செந்தாம்பாளையம். செந்தாம்பாளையத்துல எனக்கொரு சக்காளத்தி இருந்தா தெரியுமா? அந்தக்கதெ உனக்குத்தெரியாதே! எம்பட ஊட்டுக்காரரு தான் ஆட்டு ஏவாரியாச்சே! செந்தாம்பாளையத்துல பெரியூட்டுக்காரரு ஆடுக ஏவாரத்துக்கு வருதுன்னு போனவரு.. ஏவாரத்தை முடிச்சிக்குடுத்துட்டு பொட்டாட்ட வரனுமுல்ல! அங்க அந்த பெரிய ஊட்டுக்காரரு சம்சாரத்தோட என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது இந்த மனுசனுக்கு? அவ அதையும் இதையும் சொல்லி இந்த மனுசனுக்கு சிரிப்பாணியை கூட்டியிருக்கா! அப்புறம் சோறும் போட்டிருக்கா அவ! சோறுன்னா இந்தாளு எவத்திக்கி வேணாலும் சம்மணம் போட்டுருவாரு! அவ பேரு என்னமோ ஆயா.. எல்லாம் சடக்குனு நெனப்புல வருதா ஒன்னா! சோத்துல வசிய மருந்தை வச்சுட்டா அவ. அப்புறம் பாரேன்.. என்னேரமும் இந்த மனுசனுக்கு அவ நெனப்புத்தான். தொட்டதுக்கெல்லாம் ’செந்தாம்பாளையம் போறேன்.. செந்தாம்பாளையம் போறேன்’னு இந்த மனுசன் வெள்ளையுஞ் சொள்ளையுமா கிளம்பங்காட்டித்தான் ஆளு வெச்சு இந்தாளு வண்டவாளத்தை கண்டு புடிச்சனாக்கும்! அப்புறம் நெடச்சிலாபாளையம் மந்திரிக்கிறவரு ஊட்டுக்கு இந்த மனுசனை இழுத்துட்டு போயி தண்ணி மருந்து ஊத்தியுட்ட பின்னாடி தான செந்தாம்பாளையத்தையே மறந்து தொலைச்சாரு! அப்பேருப்பட்ட பூலவாக்குக்காரனாயா எம்பட ஊட்டுக்காரன்!”

“ஆமா உன்னையத்தான் கட்டிக்குடுத்தாச்சுல்லொ! அப்புறமும் ஏன் நீயி நம்மூருக்குள்ளயே சுத்தீட்டு இருக்குறே? குடும்பமுன்னு இருந்தா சண்டெ சச்சரவு வராமயா இருக்குமாயா? நாம தான் உட்டுக்குடுத்து காலத்தை ஓட்டோனும் பாத்துக்க! உங்கோயா உசுரோட இருந்திருந்தாலாச்சிம் உனக்கு நாலு புத்திமதி சொல்லி தாட்டி உடுவா! ஆமா உங்கோயா ஆஸ்பத்திரி போயா செத்தா? நீயி என்ன சொல்றேன்னு எம்பட காதுல உழுவலயாயா! செரி உடு எப்பிடியோ நேரம் வந்து போயிச்சேர்ந்துட்டா! இப்ப என்னையப்பாரு..நாலு சனம் வந்து பாக்கக்கூட நாதியில்லாம நடு ஊட்டுல கெடக்கேன்.

சுந்தராம் பொண்டாட்டி மயிலாத்தா இருக்காள்ல.. அவ தான் எனக்கு காத்தால போசீல கஞ்சி கொண்டாந்து குடுக்குறா! பொழுதோடவும் கஞ்சிதான். மகராசி.. எதோ ஊட்டுக்கும் பக்கத்துல இப்பிடி சாவ மாட்டாம ஒரு கெழவி கெடக்காளேன்னு துளி கஞ்சி ஊத்துறா! ஆமா உங்கூட்டுல இன்னிக்கி கறிச்சாறா ஆக்குனீங்க? முன்னெல்லாம் எம்பட ஊட்டுக்காரரு ஞாயித்துக்கிழமெயாச்சுன்னா ஓடிப்போயி வெள்ளாட்டுக்கறி எடுத்தாந்து குடுத்துடுவாப்ல! அதைய ஆக்கி குண்டால போட்டுக் குடுக்கறதுக்குள்ள பறவா பறப்பாரு! ’ஆச்சா? ஆச்சா?’ன்னு குட்டி போட்ட பூனையாட்டம் ஆசாரத்துக்கும், சோறாக்குற ஊட்டுக்கும் நடையா நடப்பாரு. ஆனாலும் புள்ளைய சாப்புடறப்ப கூப்புடுவாரு! ‘சீத்தாரெச்சுமி! வா சாமி சோறு உங்கலாம்! கையை வாசல்ல இருக்குற முட்டித்தண்ணியில கழுவீட்டு ஓடியா சாமி!’ அப்பிடின்னு கூப்புட்டு புள்ளைய பக்கத்துல சம்மணங்காலு போட வச்சி உக்காத்தி வச்சிக்குவாரு. கறியில ஈரலு இருந்துச்சுன்னா எடுத்து அவுளுக்கு ஊட்டி உடுவாரு! ஆமா உங்கூட்டுல இன்னிக்கி கறிச்சாறாரி? இருந்தா கிண்ணத்துல ஒருதுளி கொண்டாந்து குடு. உள்ளார கறித்துண்டு போட்டு எடுத்துட்டு வந்துறாதேடி.. அதைய எவொ சப்பீட்டே கெடக்குறது! வெறுங்கொழம்பு மட்டும் ஊத்தியா!”

“இப்பத்தான ஆயா வந்தே! அதுக்குள்ள போறேன் போறேங்குறியே! இந்தப்பொக்கவாயி கெழவிகூட என்ன நாயம் வேண்டிக்கெடக்குதுன்னு நினைச்சுட்டியாடி? சேரி நீ போ. போயி நேரங்காலமா சோறாக்கி புள்ளைங்களுக்கு குடு. ஆடுக வெச்சிருக்கிறியா? எத்தன உருப்படிக நிக்குது ஊட்டுல? போயிட்டியாடி.. கெரகம் இந்தக்கண்ணு நொள்ளக்கண்ணெ வெச்சுட்டு ஒரே சீரழிவு எனக்கு. பேழ மோள ஊட்டுக்கும் பொறவுக்கு போவக்கூட நெதானத்துல போவேண்டீதா இருக்குது. சீக்கிரமா போயித்தொலஞ்சா நல்லாயிருக்கும். ஆராயா? இப்பத்தான் ரெச்சுமி எம்பட வாசலைத்தாண்டிப்போயிருப்பா.. அதுக்குள்ள நீயி வந்திருக்கே! ஆமா என்ன கெழவி போயிட்டாளான்னு உங்கோயா பாத்துட்டு வரச்சொன்னாளா? அட என்னோட கட்டித்தங்கமே! எத்தனாப்பு சாமி படிக்கிறே நீயி? டவுனுக்கு போயி நீயெல்லாம் இங்கிலிபீச்சுல படிப்பே.. அட தே ஓடுறே? பாத்து மெதுவாப்போ சாமி! வாசல்ல கல்லுங்க கெடக்கும். எம்பட வாசலைக்கூட்டி எத்தனை வருசமாச்சுன்னே நெனப்பில்ல!”

“வரிசியா ஊருக்காரிங்க தெனமும் பவல்ல வந்துட்டே இருப்பாளுங்க.. இன்னிக்கி ஏனோ எவளையுங் காணோம். எல்லாரும் எங்க தெறிச்சுட்டாளுங்களோ.. நானும் வெகு நேரமா எவளாச்சிம் இந்த பொன்னாயா கெழவிகிட்ட சித்தநேரம் குக்கி நாலு பழமெ பேசீட்டு போவ எவளாச்சிம் வருவாளான்னு பாக்கேன்.. எல்லாருக்கும் சோலி இருக்குமாட்ட இருக்குது. உள்ளூருல மாரியம்மன் கோயல் விஷேசமோ என்னமோ தெரியிலயே! அப்பிடின்னா நம்ம புள்ள சீத்தா வந்திருப்பாளே! ஆமா அவளுக்கு என்னாச்சுன்னே தெரியில. அவளையும் இந்த ரெண்டு வருசமா ஊட்டுப்பக்கமே காணமே! சரி.. எப்பிடியோ புள்ளெ நல்லா இருந்தாச்செரி. நாலு சனம் ஊட்டுக்கு வந்தா உக்காத்தி வெச்சு ஆக்கிப்போட நமக்கு கையாலாகாமப் போயிருச்சு! யாரு வருவாங்க எம்பட ஊட்டுக்கு?”

”பொழுதாயிப்போச்சாட்ட இருக்குது! ஊட்டுல இருந்த கரெண்டயும் அத்து உட்டுட்டு போயிட்டானுங்க! வெளக்கு பத்தவெக்க கூட ஆளில்லெ! சுந்தராம் பொண்டாட்டி மயிலா வந்தாள்னா பொழுதோட சித்தங்கூரியம் வெளாக்காச்சிம் பத்தவச்சு உடுன்னு சொல்லோணும்! தாரோ வாறாங்களாட்ட அசம்பல் ஆகுது! யாரா இருந்தாலும் பேரைச்சொல்லுங்க சாமி! கொஞ்சம் சத்தமாச் சொல்லுங்க! ஒரு காலத்துல டம்ளரு உழுந்தாக்கூட அண்டா உழுந்தாப்புல கேட்டுத்தொலச்சிது! எம்பட வலதுபக்க காது சுத்தமாப்போச்சாட்ட இருக்குது. எடதுபக்க காது கொஞ்சமா கேக்குது. கேக்குற வரைக்கிம் கேக்கட்டும். இதுக்கெல்லாம் மிசினு இருக்குதாமா! குழிக்கு போற காலத்துல மிஷினு மாட்டீட்டு என்ன பண்ணுறது? அவ்வளவுதான். பொறந்து, வளர்ந்து, வாழ்க்கப்பட்டு இந்தூருக்கு வந்து, புள்ளையொன்னு பெத்து, புருசனை மண்ணுக்கு தின்னக்குடுத்துட்டு நாளை எண்ணீட்டு குக்கீட்டு இருக்கேன். யாரு..? சுந்தரானா? இப்பிடி எம் பக்கத்துல வந்து உக்கோருடா கட்டீத்தின்னி! ஏண்டா தெனமும் குடி என்னடா குடி உனக்கு? ரெண்டு புள்ளெக்காரன்னு நெனப்பு இருக்குதா? ஏண்டா சம்பாதிக்கிற காசைக்கொண்டி இந்த மல்லைக்குடிக்க செலவு பண்டீட்டா மயிலா ஒருத்தி என்னடா பண்டுவா? குடிச்சாப்போச்சாது.. மயிலாவை ஏண்டா அந்த மொத்து மொத்துறே? ஊருக்குள்ள நீயே பாரு.. குடிகாரன் இருந்த ஊடெல்லாம் இன்னிக்கி எந்த நெலமையில இருக்குதுன்னு! என்னது? நீயி சுந்தரானில்லியா! அதான பாத்தேன்.. அந்த கட்டியத்தின்னி எங்கடா அதிசீமா என்னைப் பாக்க வந்திருக்கானேன்னு. நானு உசுரோட இருக்கப்ப அவங்கீது என்னை பாக்க எம்பட ஊட்டுக்குள்ளார வந்துட்டான்னா அன்னிக்கே வெடிய வெடிய மழெ பெஞ்சு இந்த ஊரே வெள்ளத்துல அடிச்சுட்டுப் போயிடாது!”

“அட நீயி சின்னக்குண்டண்ணன் சம்சாரம் மணியாளா? நாங்கூட ஆம்புளையாக்கும்னு நெனச்சிட்டேன் போ! உம்பட பையனை எப்பிடியோ ஊருக்குள்ளயே கட்டிக்குடுத்துட்டே! இப்ப பேத்திக்கும் கலியாணம் பண்டி அவுளும் புள்ளை பெத்துட்டாளாமே! பாரு.. நீ கூட ஊருக்குள்ள கவ்வக்கோலு ஊனீட்டு நடமாட்டம் போடுறே! எனக்கு அதுக்கும் கையாலாகுல! மனுசன்னா உம்பட ஊட்டுக்காரந்தாண்டியேய்! ஊருல ஒரு ஊடு பாக்கியில்லாம பொழுதுக்கும் தண்ணி சொமந்து கொண்டி ஊத்தீட்டே இருந்தாப்புல! எம்பட ஊட்டுக்கும் வெளியில கெடக்குற ரெண்டு பெரிய தாழிகளையும் ரொப்பிடுவாப்ல! எந்த நேரத்துல வந்து ஊத்தி ரொப்பீட்டு போறாப்லைன்னே தெரியாது. அப்பத்தான் நாமெல்லாம் காட்டு வேலைக்கி மையம் பறந்துட்டு ஓடுனமே! கொத்து வேலையின்னா இங்கிருந்து நாலு மைலு தொட்டிபாளையம் வரைக்கிம் நடந்தே போயிட்டு வந்தோம். இன்னிக்கி அவ்ளோதூரம் யாரு நடக்குறாங்க? தொட்டதுக்கெல்லாம் புட்டுர் பைக்கில போயிடறாங்க! அப்பெல்லாம் சின்னக்குண்டண்ணன் ஊட்டுக்கு வாரத்துக்கு ஒருக்கா ரெண்டு ரூவா வாங்குவாப்ல! ஒரு பீடிக்குடியோ, வெத்தலபாக்கு மெல்லுறதோ, பொயிலக்குச்சி அதக்குறதோ.. ஒரு பழக்கமும் அண்ணனுக்கு இல்ல! அண்ணன் இருந்தப்ப அப்பிடி தப்பாம மழெ பெஞ்சுது! நல்ல மனுசங்க அல்லாரும் போனாப்புல புடிச்சு மே மாசம் கூட பேயுது. ஆனா வெதைக்கிற காலத்துல மழை இல்ல! எல்லாம் தலைகிழுதா மாறிப்போச்சு போ! ஆமா.. சோறு உனக்கு உம்பட மருமக ஊத்தீடறாளா? ஊத்தலீன்னா நீயி உடவா போறே? நேரா சோத்துச்சட்டியை போயி ஒதச்சே போடுவியே! சின்னப்பொன்னாம் பொண்டாட்டிய சண்டையப்ப கல்லெடுத்து வீசி மண்டையை ஒடச்சவதானே நீயி அந்தக்காலத்துலயே!  இதென்னுது? கையில என்னத்தையோ திணிக்கிறியே..இரு மோந்து பாக்குறேன்.. தூக்கருமம்! பொயிலக்குச்சியவா திணிச்சே? இந்தக்கெரகத்தை எவொ வாயில போட்டு அதக்குறது? சித்தங்கூரியத்துல தலை சுத்தி மல்லாந்துருவேன் நானு! நீயே புடி.. எங்கிட்ட பொயிலக்குச்சியை நீட்டுறா இவொ! நாங்கூட முட்டாயி கிட்டாயி குடுக்கறாள்னு நெனச்சிட்டேன். முட்டாயா இருந்தா சித்த நேரம் சப்பீட்டு இருப்பேன். ஆமா சின்னக்குண்டண்ணன் தூக்கு மாட்டீட்டு தான செத்தாரு?

என்னளே கேட்டுப்போட்டேன் நானு.. வர்ரு வர்ருன்னு கத்துறே? சீக்குப்படுத்து போனாரா? தெரியாமத்தான கேக்கேன். ஏளே.. செத்துச்சுண்ணாம்பாப்போன மனுசனை எப்பிடிப் போனான்னு கேக்கேன்.. பேசுறாளான்னு பாரு! எம்பட கூட சண்டெக்கட்டுறதுக்கு ஏறீட்டு வந்தியாளே நீயி! உங்கூட சண்டெக்கட்டுற நெலமையிலயா நாங்கிடக்கேன்? நீயே பாக்குறீல்லொ.. இங்க வந்து கத்தட்டம் போடாதேயாமா! போயி உங்கூட்டுல உக்கோந்துட்டு ஊரே கேக்குறமாதிரி கத்து! சித்த எந்திரிச்சு போ ஆயா நீயி! அப்புறம் இப்பச்சொல்றேன் கேட்டுக்கோ.. இங்கெங்காச்சிம் பொன்னாயா போயிட்டாள்னு சேதிகேட்டு குச்சி ஊனீட்டு வந்து எம்பட வாசல்ல வந்து எழவு காங்குறேன்னு நின்னுக்காதே! இத்தோட செரி.. போ இங்கிருந்து! ளேய்! இந்த கவ்வக்கோலை எடுத்துட்டு போயிருளே.. ரோசத்துக்கு ஒன்னுங்கொறச்சலே இல்ல போ உனக்கு! கவ்வக்கோலை இங்க போட்டுட்டு போறா திமுரு!”

“உசுரெ இன்னும் வெச்சிட்டிருக்கேன்னு கெழவி என்னேரமும் தன்னை யாரோ பாக்க வந்தாப்புல ’லொட லொட’ன்னு பேசீட்டே ஊட்டுக்குள்ளார கெடக்குமேடி மயிலா.. இன்னிக்கி காத்தால இருந்து கெழவி சத்தத்தவே காணமே.. ஒரெட்டு கெழவி போயிருச்சான்னு போயிப்பாரு.. இன்னிக்கி செவ்வாச்சந்தைக்கி வேற போவணும்.. ஊட்டுல ஒரு சாமானில்லே.. இது போயிருச்சுன்னா எங்கீம் போமுடியாதேடி!” என்று எதிர்வீட்டு செண்பகம் மயிலாத்தாள் வீட்டைப்பார்த்து பேசினாள்.

“அதெல்லாம் ஒம்போது மணிக்கி கஞ்சி கொண்டோயி குடுக்கலாம்னு போனப்பவே போயிடுச்சு கெழவி.. சாமத்துலயே போயிருச்சாட்ட.. சோறு உண்டுட்டு இருக்கேன்.. இனிமேத்தான் ஊருக்குள்ள போயிச்சொல்லோணும்டியேய்!” என்றாள் மயிலாத்தாள் வீட்டினுள்ளிருந்தபடி.

000

The post பொன்னாயா first appeared on Nadukal.

அருணகிரி

1 May 2025 at 04:24

-என்னக்கா நைட்டுக்குள்ள முடிஞ்சுருமா,

-எனக்கு என்னடி தெரியும். ஆனா பாவம்டி அந்த பையன் வாழு வேண்டிய வயசு. என்ன பண்றது?

-சரி விடுக்கா நடக்கிறது தான் நடக்கும். விடிஞ்சா தெரிய போகுது.

-ஆமாடி அவங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க. அப்ப முடிஞ்சிருக்கும். பார்க்கலாம்.

-அந்த சர்வசக்தி மாரியம்மா எதுல கொற கண்டாளோ அவங்க கிட்ட?

அந்த வீட்டைச் சுற்றியும் கண்ணீர் துளிகள். வீட்டிலிருந்து கண்ணீர் தொடரோட்டம் ஒடியது. எவ்வளவு கொட்டினாலும் விழுங்குகின்ற கடல் போல தீராத கண்ணீருடன் அழுது கொண்டிருந்தாள் தனம். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ கண்களை நிரந்தரமாக மூடப் போகிறான் அருண் (எ) ஒன்ற (எ) அருணகிரி. புற்றுநோய் தன்னிருப்பை காட்டிக் கொள்ள அவன் உடம்பு முழுவதும் பரவியிருந்தது.

விடியல் இருளை விரட்டி கொண்டிருந்தது சேவலின் பொறுப்பை தனம் ஏற்றுக் கொண்டாள்.

-ஐயோ………..  அருணே…………. என்ன விட்டுட்டு போயிட்டியேடா உன்னை இப்படி தூக்கி கொடுக்கவாடா பெத்து போட்டு மணி மணியா வளத்தேன்.

எங்கவீட்டு குல சாமி போயிட்டியேடா.

என்று அவள் வயிற்றிலும் மாரிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுததை கண்டு இருள் எல்லா இடத்திலும் இருந்து ஓடி அவள் வீட்டை மட்டும் சூழ்ந்து விட்டது.

     பொழுது விடிய விடிய ஊர் முழுவதும் அருணகிரியின் மரண செய்தி தலைப்பு செய்தியானது. அனைவருடைய பரிதாபத்துக்கும் ஆளானான் அருணகிரி. புற்று நோயால் நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்த தன் மகன் எப்போது வேண்டுமாலும் நம்மை விட்டு பிரிந்து விடுவான் என்பதை நினைத்து நினைத்தே ராஜா மிகவும் மனதளவில் உடைந்து போயிருந்தார். இருந்த போதிலும் நடக்க போகும் துன்பத்தை எதிர் கொள்ள தயாராக இருந்தார். அவனின் இறுதி மூச்சு அவரின் கண் முன்னே நின்றதும் பின் மண்டையை சுவரில் முட்டி முட்டி அழுது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சிறு குழந்தையை போல தேம்பி தேம்பி அழுதார் .

பந்தல் போடும் “பிரபு”க்கு மாது செல்போனில் அழைத்து தகவலை சொன்னான். மிகவும் வருத்ததுடன் ’வருகிறேன்’ என கூறினார். பந்தல், அமரும் சேர் சகிதம் அருணகிரியின் வீட்டிற்கு வந்தடைந்தார். பந்தல் போடுவதை கண்ட பெண்கள் கூட்டம் கல்யாண பந்தல் போடற வயசுல சாவு பந்தல் போட வெச்சுடானேனு பேசி கொண்டார்கள்.

        ஊர் முழுவதும் அருணகிரியின் மரண செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில் அவனுடைய வயது இருபத்தைந்து. திருமணம் ஆகாதவன். அவனுடைய திருமணமே பரபரப்புக்கு முக்கிய காரணமானது.

     அந்த ஊர் வழக்கு படி ஒரு ஆண் திருமணமாகாமல் இறந்தால், அவனுக்கு வாழை மரத்துடன் திருமணம் செய்து வைப்பது வழக்கம். அவ்வூரில் புதிதாக திருமணம் செய்து கொண்டு வந்த பெண்களும், புதிதாக குடி வந்தவர்களும் அத்திருமணத்தை நேரில் பார்க்க ஆர்வமுடன் இருந்தனர்.

    தனத்தின் அழுகையை காணும் ஒவ்வொரு கண்களும் களங்கும். அவளின் கதறலை பொறுக்க முடியாமல் நிறையபேர் வீட்டை விட்டு தள்ளி நின்றனர்.

-கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி தருவ அதுங்க பீ  மூத்தற துணிய தொவைப்பனு கனவு கோட்ட கட்டுனனேன். அத எட்டி ஓதச்சு இடிச்சு போட்டியேடா அருணகிரி……

-அருண கூப்பிடுங்க பெரியம்மா” அருண விளையாட வர சொல்லுங்கனு கேட்பானுகளே அவங்களுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன். டேய் பையா வந்துடுடா, அம்மாவால முடியலடா! நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.

-கயிறு மட்டும் போட்டுருக்க ஆறு பவுனில் கொடி எடுத்து தரமுன்னு சொன்னியேடா அருணகிரி. அருணகிரி… டேயப்பா எப்படிடா அம்மாவ விட்டுட்டு போக உனக்கு மனசு வந்துச்சு.

     தனத்தின் புலம்பல்களின் நடுவில் வீட்டின் முன்னே பந்தல் போடப்பட்டது. அருணகிரியின் அப்பா ராஜாவும் அருணகிரியின்  அண்ணன் மாதுவும் ஊர் பெரியவர்களுக்கு இறப்பு செய்தியை சொல்லிவிட்டு வீடு திரும்பினர்.

     பந்தலை பார்த்துவிட்டு பேப்பர் போடும் சிறுவன் சைக்கிளை தூரமாக நிறுத்திவிட்டு வந்து பேப்பரை அமர்வதற்க்கு போடப்பட்டிருந்த அடுக்கி வைத்திருந்த சேரில் வைத்துவிட்டு ராஜாவின் முகத்தை பார்க்க முடியாமல் பார்த்தான். மௌனமாக கண்களின் வழியே அஞ்சலி செய்து விட்டு சைக்கிளை அடுத்த வீட்டை நோக்கி உருட்டினான்.

     அருணனின் வீடு முதல் தெருவிலேயே தொடக்கத்திலே இருக்கும். ஆகையால் வியாபாரிகள் அனைவரும் தெருவில் நுழையும் போது விடும் வியாபாரக் கூவலை பந்தலை கண்டதும் நிறுத்தினார்கள். பின் அடுத்த தெருவில் இருந்து வியாபாரத்தை தொடங்கினர்.

     அருண் புதன்கிழமை இறந்தான். புதன்கிழமை தோரும் தேங்காய் புட்டு விற்றுக்கொண்டு ஒருவர் வருவார். அருணுக்கு மட்டும் அதிக தேங்காய்ப்பால் ஊற்றுவார். செய்தி தெரிந்ததும் கையில் ஒரு தேங்காய் புட்டை காகிதத்தில் சுருட்டி கொண்டு பந்தலை நோக்கி நடந்து வந்தார் . அருண் சாயலில் அவரின் மகன் இருப்பான். விளையாடும்போது கிணற்றில் விழுந்து இறந்துவிட்டான். அதனால் அவன் மேல் தனி கரிசனம். தனம் அவரை கண்டதும் போட்ட கூப்பாடு தெருவையே உலுக்கிவிட்டது.

     அருணின் முகம் காண முடியாமல் அவனை கும்பிட்டு விட்டு அருகே இருந்த மேஜை மேல் தேங்காய் புட்டை வைத்து விட்டு சென்று விட்டார்.

     தனத்தின் அண்ணன் வழக்கமாக பார்க்கும் ஜோசியரிடம் ஜோசியம் பார்க்கச் சென்றார்.

          “நல்ல நேரத்தில் இருந்திருக்கிறான்“

          “எல்லோருக்கும் நல்லா இருக்கு “

          “நல்ல சாவு தான்” ஆயுள் முடிந்துவிட்டது என ஒவ்வொன்றாக சொன்னார். பின் வாழை மரத்துக்கு திருமணம் செய்து குப்பற கிடத்தி புதைக்குமாறு சொன்னார்.

   கல்யாணம் ஆகாததால் கொட்டு மேளம் போடவில்லை. அதற்கு பதிலாக தனத்தின் அழுகையும் கத்தலும், ஊர் முழுதும் ஒட்டிருந்த போஸ்டர்களும் இறப்பை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

     பந்தலில் ஊர் பெரியவர்களும் ஊர் நிர்வாகிகளும் கூடினார் .”மாமா மூன்றைக்கு மேல நாலரைக்குள்ள எடுக்கறது நல்லதுன்னு ஜோசியர் சொன்னார்” ஊர் நிர்வாகி ஒருவரிடம் மாது சொன்னான்.

‘குழி வெட்ட கூலி கொடுத்தாச்சா, சாங்கியம் செய்ய மதல வந்துட்டானா, சொந்தக்காரங்ககிட்ட  எல்லாம் சொல்லியாச்சா?’ என பல்வேறு கேள்விகளை ஊர் நிர்வாகிகள் ராஜாவிடமும் மாதுவிடமும் கேட்டனர்.

     சொந்தக்காரர்கள் மாலையோடு வரத் தொடங்கினர். அவனோடு விளையாட போகும் நண்பர்கள் பெரிய மாலையுடனும் அழுகையுடனும்  வந்தனர்.

   சொந்தக்காரர்கள் வருகை தனத்தின் கண்ணீரை சேந்தி சேந்தி ஊற்றிக் கொண்டே இருந்தது.

   தாளாத  வயதில் “அட அருணு  பையோனு” “என் சாமி“ என்றெல்லாம் கத்திக்கொண்டு இருவர் தாங்க தனத்தின் தாய் பாக்கியம் வந்தார்.

 “வரமாட்டேன் வரமாட்டேன்னு சொன்னியே அருணகிரி உன்ன எப்படிவர வச்சுட்டான் பாத்துட்டியாம்மா”  என்று வெடித்தாள் தனம். ’இதுக்கு தான் வரணும்னு எனக்கு எழுதி இருக்கா’ என அவரும் வெடித்த அழுத்தார்.

மணி இரண்டை நெருங்கியது. பந்தலின் நடுவே கவுத்து கட்டில் போட்டனர். அழுது கொண்டே மாது அருணை  தூக்கினான். உறவினர்களும் அருணை தூக்கிக் கொண்டு கட்டிலுக்கு சென்றனர்.

“இனி இந்த ஊட்டு வாசப்படிய மிதிக்க மாட்டியா”

                                                                        “சோறு போடுமான்னு கேக்க மாட்டியா”

                                                                                            “மருந்து மாத்திரை வாங்க போக மாட்டியா”

                                                                                    -ஐயோ ……. அருணே ……. ஊட்ட வுட்டு போறானே . மாது  உன் தம்பிய எங்கடா எடுத்துட்டு போற?. அவளின் அழுகையை கடக்க முடியாமல்  கடந்து சென்றனர்.

        பந்தல் முழுவதும் மனித தலைகளால் நிரம்பியது. அருணின் தாய்மாமன் அருணுக்கு பட்டு சட்டை பட்டு மற்றும் வேட்டி கட்டி விட்டார். நெற்றியில் செம்பு பட்டம் கட்டி விட்டு காலில் மெட்டி போடும்போது அவன் கால்களை முகத்தில் வைத்து வெடித்து அழுதுவிட்டார்.

        ஊரே ஆவலில் கூடியது. ஏனென்றால் இது போன்ற சடங்குகள் நடப்பது அரிது. திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்களையும் அருணுக்கு முறையாகின்ற முறை பெண்களையும் அவர்கள் அவரவர் வீட்டிற்கு போக சொன்னார்கள் ஊர் நிர்வாகிகள்.

      சடங்கு செய்யக்கூடிய “மதலைமுத்து” என்ற “முதல” இரண்டடி உயரம் உள்ள வாழை மரத்தை சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். அப்போது தனம் “டேய் அருணு பொண்ணு வந்துட்டாடா எப்பேர்பட்ட பொண்ணு பாருடா” என ஓங்கி அழுதாள்.

    பொண்ணு வீட்டாரராக இருக்க ஒரு நிபந்தனை உண்டு. அவர்கள்  வீட்டில் ஆண் பிள்ளைகள் மட்டுமே பிறந்து இருக்க வேண்டும். அருணுக்கு முறைமாமன் பெரியசாமி என்று ஒருவர்  இருந்தார். அவருக்கு நாலு பசங்க மட்டும் தான்.

     ஊர் பெரியவர்கள் பெரிய சாமியிடமும் பேசினர். அவர் ஒத்துக் கொண்டார். வாழை மரத்துக்கும் நெற்றியில் செம்பு பட்டம் கட்டி விட்டார்கள். புது மாப்பிள்ளை வேடத்தில் கிடக்கிறான் அருணகிரி. அப்போது தனத்தை அழுக வேண்டாம் என சொன்னார்கள். தனமும் ராஜாவும் பெண் கேட்டனர் பெரியசாமி – காவேரி தம்பதியினரிடம் .

அழுது கொண்டே இருவரும் ’எங்க பையனுக்கு உங்க பொண்ண தர சம்பந்தமா?’ என கேட்டனர்.

 “மனப்பூர்வ சம்மதம்ங்க”

   பெரியசாமியும் அவனின் மனைவியும் அழுது கொண்டு சம்மதம் சொன்னார்கள்.

       ஊர் நிர்வாகிகள், ’அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிடலாம்’ என சொன்னார்கள். அருளின் தாய் மாமன் தன் பேண்ட் பையிலிருந்து லட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற பர்சை எடுத்தார். அதில் நிஜ திருமணத்தில் கட்டுவது  போன்ற தாலி ஒன்று இருந்தது. அருணகிரிக்கு அக்கா முறை உள்ள ஒருவர் அவன் தலைமாட்டில் நின்று கொண்டாள். தாலி எடுத்து அருணகிரியில் கை விரல்களின் இடையே வைத்தனர். வாழை மரத்தை அவன் முன்னே காட்டினார்கள். தலைமாட்டில் இருந்த அக்கா ஒரு முடிச்சை அருணகிரியே போடுவது போல் போட வைத்தாள். பின் இரண்டு முடிச்சுகளை அவளே போட்டாள். தனத்தின் அழுகை சத்தம் பந்தலை பிரித்து எறிந்து விடுவது போல் இருந்தது. நீண்ட அழுகைக்கு பின் அருணின் கையில் அறிவாள் கொடுத்து வாழை மரத்தை வெட்ட வைக்கிறார் சடங்கு செய்பவர். சடங்கு முடிந்தது திருமணமும் முடிந்தது. இனி அருணகிரி திருமணம் ஆனவன் தான். ’மொய் எழுத எத்தனை தல வந்திருக்கு பாருடா அருணகிரி’ என்று ராஜாவும் கதறி அழுதார்.

    பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் “சொர்க்க ரதம்” தெருவுக்கு முன்னே வந்து நின்றது. அருணகிரியின் நண்பர்கள் மற்றும் அவன் வீட்டின் அருகே இருக்கும் சிறுவர்கள் அனைவரும் அவனுக்கு போடப்பட்டிருந்த மாலைகளை எல்லாம் பொறுக்கி எடுத்துக்கொண்டு சொர்க்க ரதத்தை நோக்கி நடந்தனர். ராஜா இறுதியில் என்ன நினைத்தார் என தெரியவில்லை “பையன கையிலே தூக்கிட்டு போலாம்” என சொன்னார். அனைவரும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு அருணகிரியை பாடையில் ஏற்றி தோள்களில் சுமந்து சொர்க்க ரதம் முன்னே செல்ல சுடுகாடு வரை நடந்தே சென்றார்கள்.

      பாடையில் பிணம் ஏற்ற மணப்பெண்ணான வாழை மரமும் உடன்கட்டை ஏறிக்கொண்டது. சுடுகாட்டு முனையில் பெண்கள் நிறுத்தப்பட்டனர். ஆண்கள் அருணகிரியை  மண்ணில் புதைக்க நடை போட்டனர்.

         “பட்டுத்துணி  நீயுடுத்தி பாடையில போகறயே”

         “வந்த சனம் வவுறு  நெறைய சோறு போடாம போகறயே”

         ”பொண்ணு வீடு பாக்கல

         மாப்பிள்ளை வீடு பாக்கல

         பத்திரிக்கை அடிக்கல

         பந்தக்கால் நடல

         அச்சத போடல

         கல்யாணம் மட்டும் முடிஞ்ச போச்சே!

         இப்பேர்ப்பட்ட கல்யாணம் செய்ய 

         நானென்ன புண்ணியம் செஞ்சன்னு தெரியலையே.!”

சுடுகாட்டு முனையில் முட்டி போட்டு தனம் அழுது கொண்டே ஒப்பாரி வைத்தாள். வெளியே அழுவதை தடுக்க முடியும். வேகும் வரை உள்ளே அழுவாளே அதை யார் தடுப்பார் என தன் மனைவி அழுவதை பார்த்துக்கொண்டே ராஜா சுடுகாட்டை அடைந்தார்.  

00

கார்த்திக் வாசன்.

சேலம் மாவட்டத்தில் GST Practitioner ஆக பணி புரிந்து கொண்டிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே வாசிப்பின் மேல் ஏற்பட்ட சிறு ஆர்வம் என்னை கடந்த 2016 – ல் இருந்து நிரந்தர வாசிப்பாளனாக மாற்றி இருக்கிறது. மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களிலும் நான் வாசிக்கும் புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதமாக அறிமுக கட்டுரைகளையும் பதிவு செய்து  கொண்டிருக்கிறேன். தீவிர வாசகனாக இயங்கி கொண்டே சிறுகதை, கவிதை, சிறார் கதைகள் போன்றவற்றை எழுதி கொண்டிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

The post அருணகிரி first appeared on Nadukal.

சன்னதித் தெரு கீழ வீதி!

1 May 2025 at 04:22

இன்று சிதம்பரம் தெற்கு வீதி நுழைவாயில் வழியாக சென்று தாயுமான சுவாமியையும், மூலவரையும், பின்னர் ஊர்த்துவ தாண்டவரையும் தரிசித்து விட்டு இறுதியாக மடைப்பள்ளி அருகேயுள்ள அன்னபூரணியை வணங்கிவிட்டு நாலுகோபுமும் தரிசனம் செய்யும் இடத்திலிருந்து மீண்டும் தெற்கு வீதி வழியாக வெளியேறினேன்.

சிதம்பரம் வந்தபின் இந்த மூன்று ஆண்டுகளில் இதுநாள் வரை கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் போனதில்லை.

வெயில் மண்டை காயவைத்தது. என்ன செய்வது என சில நிமிடங்கள் நிழலோரம் நின்று இளைப்பாறிவிட்டு வாகனத்தை எடுத்தேன். இன்று மகாவீரர் ஜெயந்தி என்பதால் கீழவீதி செல்லும் வழியில் ஜெயின் சமூகத்தினர் நீர்மோர் பந்தல் அமைத்து எல்லோருடைய தாகத்தையும் தணித்து கொண்டிருந்தனர். நாவறட்சி அதிகரித்துக் கொண்டிருந்தது. ஜிலுஜிலு வென மோரும், வெள்ளரியும் சற்று தாக்கத்தை தணித்தது. அமிர்தம் என்பார்களே அப்படியொரு பதத்தில் நீர்மோர் இருந்தது. அங்கேயும் சில நிமிடங்கள் உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டு கீழவீதி வழியாக வண்டியை  மெல்ல செலுத்னேன்.

அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. கீழவீதி கோடியில் ஒரு பழைய புத்தகக் கடை ஒன்று உள்ளது போய் பாருங்கள் என்று ஆசிரிய நண்பர் ஒருவர் சொன்னார். சரியாக கடைக்கு அருகில் போய் வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தேன்.

பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தெரு கீழவீதியில் நகைக் கடைகள், பேக்கரிகள், லாட்ஜுகள் என இருக்க ஒரு வீடு மட்டும் பாழடைந்த நிலையில் இருந்தது. அவ்வீட்டின் முன் கடைவீதியின் நடையிலிருந்து சாலையின் வாகன நிறுத்தம் வரை ஒரு பக்கமாக பழைய ஆன்மீக புத்தகங்கள் பைண்டிங் செய்யப்பட்டும், சில வெள்ளைத் தாள் ஒட்டப்பட்டுமேலே தலைப்புகள் எழுதப்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஊடுபாவாய் கண்களை ஓட்டினேன். பிள்ளையார் ஸ்லோகம், திருவாரூர் தல வரலாறு, என ஒருபகுதியும், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என சுஜாதாவும், நெற்றி நிறைய சந்தனமும் வெள்ளை தாடியுடன்  புன்னகையுடன் பாலகுமாரன் -ன் நூல்களும், தமிழ்வாணனின் மர்மநாவல்களும் என ஒரு பக்கமும், நடுப்பகுதியில் திருத்தி எழுதிய தீர்ப்புகள், இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் என வைரமுத்து ஈர்க்கும் கருவிழிகளோடு கையில் ஒரு ஃபெளன்டைன் பேனாவுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவைகளுக்கு மத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கண் பழைய நூல்களின் தூசிகளுக்கு இடைய நுழைந்து நுழைந்து புத்தகங்களைத் தேடி சிலவற்றை எடுத்து உள்ளே புரட்டிப்  பார்த்துக் கொண்டிருந்தது. க.நா.சு கவிதைகள், கி.ரா வின் கதவு, ஆகியவை நல்ல தரத்தில் கிடைத்தன.

நகுலனை தேடிய கண்கள் ஏமாந்து போயின. அப்போது மனதில் ஏனோ சுசீலா என்கிற பிம்பம் நடராஜன் கோவிலில் உள்ள மகிஷாசுரமர்த்தினி ரூபமாய் காட்சி கொடுத்து மறைந்தது. தொடர்ந்து டி.கே.துரைசாமி சந்திக்க வேண்டுமென மனம் சொல்லிக் கொண்டது. நகுலனுக்குப் பிறகு டி.கே.துரைசாமியை சந்தித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என தோன்றியது.

மெளனயின் இறுதிக்காலம் மனம்முழுவதும் தோன்றி மறைந்தது. மெளனியும் பிடிபடவும் இல்லை. கிடைக்கவும் இல்லை.

கடைக்காரர் மும்முரமாய் ஹிஜாப் அணிந்த தன் பீவியோடு முகப்பு அட்டை கிழிந்த புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் எடுத்த புத்தகங்களைக் காட்டி “விலை சொல்லுங்க” என்றேன். அவைகளை வாங்கி உள்ளும் புறமும் பார்த்து சற்று நிதானித்து ‘நூறு குடுங்க’ என்றார். நீங்க தான் முதல் ஆள் என லேசாக புன்னகைத்து விட்டு மீண்டும் தம் முகப்பு அட்டை ஒட்டும் பணியில் மூழ்கினார். சட்டைப் பயில் இருந்த நூறை தந்துவிட்டு கிளப்பபுகையில்

“இனி ரெகுலரா கடை போடுவீங்களா என்றேன்”.

“அப்பா இறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு. நானும் இரண்டு வருஷம் சவுதி அங்க இங்கனு வேலை பார்தேன். செரி அப்பாவோட பழைய புத்தக வியாபாரம் போதும்னு திரும்பவும் இப்போ நான் கடைய போடுறேன்.” என்றார்.

அப்போது தனது திரைச்சீலை சரிசெய்தபடி புத்தகங்களை துடைத்து பரப்பிக் கொண்டிருந்தாள் சிறுமி!. அவளது பதினாலு வயது தம்பி கலைந்து போன புத்தகங்களை வரிசையாக அடுக்கியபடி இருந்தான்.

இறுதியாக புறப்படும் முன் “உங்க பேரு” என்னான்னு கேட்டேன். ” சாகுல்” என்றார்.

என் உதடுகளில் இருந்து ஒரு நட்பார்ந்த புன்னகை வெளிப்பட்டிருக்க வேண்டும்.

திரும்பவும் அடிக்கடி வருவேன். வந்து பாக்குறேன். என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தேன்.

எதிரில் நாலு வீதிகளையும் சுற்றிவிட்டு மூலவர் தேர் மல்லாரி நடையோடு நாயன ஓசையுடன் தெரு வாசலுக்கு வந்து நின்றது.!

யாரோ ஒரு யாத்ரீகன் கண்ணத்தில் போட்டுக் கொண்டு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது.

00

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ‘மிருகத்தின் வாடை’ என்கிற கவிதைத்தொகுதி நடுகல் வெளியீடாக சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ளது.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

The post சன்னதித் தெரு கீழ வீதி! first appeared on Nadukal.

                      சீவகன் கவிதைகள்

1 May 2025 at 04:20

1.  கடவுள்

வெட்கம் கெட்ட கடவுள்

எங்கும்

எதிலும் இருக்கிறார்

உடைகளைக் களைய

கொஞ்சம்

கூச்சமாகத்தான்  இருக்கிறது.

2. மரியாதைக்குரிய கடவுள்

எப்போதும் போல்

தியானத்தின் பெயரில் 

துயிலும் கடவுளார்

எதற்கும்

செவிக் கொடுக்கமாட்டார்

நீ தேவிடியா பயலே

என்றாலும்கூட.

3.  உரையாடல்

எம்பெருமான்

சக்தியுடன் கலவி கொண்டிருக்கிறார்

வேண்டிய வரத்தை என்னிடம் கேளும்

என்றான் கடவுளின் சீடன்

,

நான் சக்தியை

அடைய வேணும்

முதலில்

உண்ண சோறு போடுமய்யா.

4.  அவன் செயல்

எங்கு தேடியும்

அகப்படாத

சிவலிங்கம் பிள்ளை

வீணையின் நரம்பில்

மதுவோடு

அமர்ந்திருப்பதாகச்

சொன்னார்கள்

தெருவின் முச்சந்தி

குழாயடியில்

சக்காளத்தி சண்டையில்

தலைவிரித்து

ஆடிக் கொண்டிருந்தாள்

பராசக்தி

,

நாறின குடும்பத்தில்

பிறந்ததெண்ணி

நோஞ்சான் குமராண்டி

சில்வர் தட்டில்

தண்டோர

அடிக்கலானான்

யாமிருக்க பயமேன்.

00

The post                       சீவகன் கவிதைகள் first appeared on Nadukal.

சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள்

1 May 2025 at 04:16

1) சிறுமலைப்பயணம்

———————————————-

நான் அத்தனை அசிங்கமாக

மண்ணில் வீழ்ந்தபோதும்

உன் கண்களில் துளி

வெறுப்புப் படரவில்லை

அதற்கு முதல் நாளைப் போலவே

நீ என்னை அம்மு என்றழைத்தாய்

என் குறை வயிறு குறித்துக்

கவலைப்பட்டாய்

நல்ல பதத்தில் வெந்த

ஊன்சோறு ஊட்டிவிட்டாய்

கன்னத்தில் படிந்திருந்த

தூசியைத் தட்டிவிட்டாய்

தோளில் இடமளித்தாய்

நீராவியில் வெந்த கப்பக்கிழங்கும்

பொடி உப்புடன் மிளகாய்த்தூள் சேர்த்த

மாங்காய்ப் பிஞ்சும் வாங்கித் தந்தாய்

எல்லாவற்றுக்கும் மேலாக

சிறிய பெட்டிக்குள் பொதியப்பட்ட

பொன்னைப் போல பதனமாக

என்னைப் பழனிக்கு அனுப்பி வைத்தாய்

மொத்த இயலாமையையும்

முழுதாகச் சுகித்து

தற்கொலை முனையில் நின்ற

முதல் கையாலாகாதவனின்

நீண்ட பெருமூச்சுடன்

பேருந்து நிலையத்தில் இறங்குகிறேன்

உன் வாட்டம் உணர்ந்தும்

நீர் வார்க்க இயலாத என் கைகளை

கொள்ளி வைத்துக் கருக்கத் துணியாத

சுயநலவாதி நான்

மன்னித்துவிடு என்று கேட்கமாட்டேன்

இனிமேல் நான் உன் கண்களை

சந்திக்கக் கூடாது அவ்வளவு தான்.

2) அடைமழை

——————————

தேயிலை கொதிக்கும்

டீக்கடை பாய்லரின்

பட்டறைக்கு அடியில்

கதகதப்பாகப் படுத்துக்கொண்டு காலையிலிருந்தே விடாது பெய்கிற

இந்த மழையை வெறித்துக்

குரைத்தபடி இருக்கிறது நாய்

தென்கிழக்கு மூலையில்

கும்மரிச்சம் போட்டிருக்கும் கருமேகங்கள்

என்னையும் நாயையும் பிறகு அந்த

டீக்கடை பாய்லரின் பட்டறையையும்

விழுங்கிவிடத் துடிக்கின்றன

இவற்றிற்கு அப்பால்

உலகம் மற்றுமொரு பொன்விடியலுக்கான

பணிகளுக்கு தங்களைத்

ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.

3) ஒருத்தி

———————–

விட்டுப் பிரியும்போதெல்லாம்

கண்ணில் நீர் கோர்க்க

நெஞ்சோடு சேர்த்து

அணைத்துக் கொள்ளும்

அவளை உங்களுக்குத் தெரியுமா?

ஆம் எனக்கு அவள் நன்கு பரிச்சயம்

ஆலமரத்தைப் போல

மண்ணுக்கு மேலும் தன் வேரை

மனதாரப் பரப்பியிருப்பவள்

தண்டு முறிந்து வதங்கிப் போய்

வாழ்வின் அந்திமத்தில் இருக்கும்

சிறு தாவரத்தின் உயிருக்கு

உள்ளங்கையில் கொஞ்சம்

மழை கொண்டு வருபவள்

மேலும் உள்வாங்கிய போதும்

ஓயாத கடல் அலையைப் போல

அவள் மரணமில்லாதவள்!

4) பிரெட் ஆம்லெட்

———————————

மூணாறு மலைச்சாலையும்

மாட்டுப்பட்டி அணையும்

என் அடிவயிற்றுக் குமட்டலும்

நினைவுக்கு வருகின்றன

வழக்கம் போலவே

ஒன்றன்பின் ஒன்றாக

கும்பல் என்னை விட்டு

விலகிச் சென்றது அல்லது

நான் என்னைத் தனித்து

உருவிக் கொண்டேன்

பிரதமர் என் நண்பரென்று

பிதற்றிக் கொண்டிருக்கும்

முதியவரைச் சூழ்ந்து

அலைக்குமிழென சிரிப்புச் சப்தம்

பொங்கியெழுந்து கொண்டிருக்கிறது

கருத்த மேனியில்

அளவெடுத்தாற் போன்ற

காட்சிக்கு உகந்த

அங்கங்களோடு சிரிக்கும்

பிரெட் ஆம்லெட் கடைக்காரியின் மீது மேய்கின்றன

போதையில் மினுங்கும்

லாட்டரிச் சீட்டுக்காரனின் கண்கள்

சூடு குறைந்த எலுமிச்சைத் தேநீரை

என் கையளித்துவிட்டு உள்ளோடி

ஒளிந்து கொள்கிறாள்

கடைக்காரியின் மகள்

பிரதமரின் நண்பனாகும் சாத்தியம்

மிகுந்த தேசத்தில்

பிரெட் ஆம்லெட் கடைக்காரியின்

மகளாக வாழ்வது தான்

பெரும் சிரமம்.

5) ஆதுரமும் ஆண் மனமும்

—————————————————–

நீ அவன் நெஞ்சில் சாய்ந்து

ஆடியதை நான் பார்த்தேன்

பொய் சொல்லாதடி திருடி

முன்னெப்பொழுதோ நெஞ்சில் விழுந்த

நேசவிதை எத்தனை தான்

மண்ணைப் போட்டு மேவினாலும்

கிழித்துக்கொண்டு மேலெழும்பும் என்பதை

அறியாதவனா நான்?

ஆனால் ஒன்று

அந்தக் கணத்தில்

நான் ஆம்பளையாக இல்லை

என்பது பூரணமான உண்மை

ஒப்புக் கொள்கிறேன்.

( திண்டுக்கல் – கரூர் சாலையிலுள்ள

  கோவிலூர் மண்ணுக்கு)

00

சு. ராம்தாஸ்காந்தி

பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்

அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன

The post சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள் first appeared on Nadukal.

அமீபா (வடிவம் அற்றது)

1 May 2025 at 04:13

தேசிய நெடுஞ்சாலையில் இடது பக்கம் வலது பக்கம் நடுவில்  சிமெண்டில் கட்டப்பட்டு இருக்கும் சென்டர் மீடியன் கட்டைகளுக்கு கருப்பு வெள்ளை பெயிண்டை அடித்துக் கொண்டிருந்தான் வேணு.

உச்சி வெயிலில் அவன் கட்டியிருந்த சரத்தில் உப்பு பூத்து வெள்ளை கோடுகளாக அங்க அங்கே இந்திய வரைபடத்தில் இருப்பது போல வரைந்திருந்தது. மேல் சட்டையும் வேர்வையில் ஊறி தோளோடு தோளாக ஒட்டிபோயிருந்தது. வேகமாக குனிந்து நிமிர்ந்தால் சட்டையின் முதுகுபகுதி நேராக கோடு விழுந்து கிழிந்து விடக்கூடும், நிதானத்தில் வேணு கவனமாக வேலை செய்து கொண்டிருந்தான். இந்த நிதானமும் இதுபோன்று இரண்டு சட்டைகள் கிழிந்த பின்பு தான் பெற்றிருந்தான்.

சாலையில் அவனை பொருட்படுத்தாத வாகனங்கள் இடது புறமும் வலது புறம் பறந்த வண்ணம் இருந்தது. குனிந்து பெயிண்ட் அடித்து அடித்து இடுப்பு கடுத்தது.  சிறுநீர் கழிப்பது போல சென்று ஏதாவது மரநிழலில் சில நிமிடங்கள் கழித்தால் நன்றாக இருக்கும் . சிறுநீர் கழிக்க சாலையை கடந்து தூரத்தில் இருக்கும் மரத்தை நோக்கி சென்றான்.  சிறுநீர் வெளியேற்ற முயற்சி செய்ய  சில வினாடிகள் வருவது போல் உணர்வில் காத்திருந்து சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்தது.  சிவம்பும் மஞ்சளும் கலந்து வெளியேறியது. புங்க மரத்தின் நிழல் கடும் வெயிலுக்கு மாற்றாக குளிர்ச்சியை அளித்தது.

வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. நாளை மறுநாள் முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் சாலையில் இருபுறம் கட்டையை ஓட்டி உள்ள மண்களை அள்ளுவதும் சாலையில் அங்கங்கு காணப்படும் பள்ளங்களை பஞ்சர் ஒட்டி  தற்காலத்திற்கு சரி செய்து கொண்டிருந்தனர்.

ஜட்டி பாக்கெட்டில் இருந்த ஹான்ஸை எடுத்து கையில் கொட்டி, கட்டை விரலை வைத்து நன்றாக கசக்கி, உருண்டையாக்கி உதட்டை திறந்து உள்ளே வைத்த ஆசுவாசபடுத்திக் கொண்டிருந்தான் வேணு. மரத்தின் நிழலும், ஹான்ஸின் மதமதப்பும் அந்த நேரத்தில் நிம்மதியை அளித்தது.

தூரத்தில் இருந்து சூப்பவைசர் கையால் சைகை காட்டி அழைப்பது தெரிந்தது. இன்றுடன் சாலைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்துவிடும் என்பதால் எப்பொழுது மாலை ஆகும் என்று நினைத்து கட்டைகளுக்கு மீண்டும் பெயிண்ட் அடிக்கத் துவங்கினான்.

மாலை ஆறு மணிக்கு சம்பள பணத்தை வாங்கி அவனும் அவனின் நண்பனும் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த ஓயின் ஷாப்க்கு சென்று 135 ரூபாய் டைமண்ட் ரம் வாங்கி யாரோ குடித்து வைத்துவிட்டு போன பிளாஸ்டிக் கப் இரண்டை எடுத்து இருவருக்கும் சமளவில் பகிர்ந்தனர். இருவரின் நடவடிக்கைகளை கவனித்த மற்றொரு குடிகாரர் அவரிடம் மீதி இருந்த தண்ணீரை அவனிடம் கொடுத்தார்.  போலி புன்னைகையோடு வாங்கி கொண்டு தேவையான அளவு தண்ணிரை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தார்கள்.

பேருந்து நிலையத்தில் உள்ளிருந்த ஸ்வீட் கடையில் மனைவிக்கும் பிடித்த அசோகா 100கிராம் வாங்கி கொண்டு மூதாட்டியிடம் ஒரு முழம் முல்லை பூ வாங்கி ஊருக்கு செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான் வேணு. அவன் கை விரல்களில் தொங்கிய கேரி பையில் இருந்த பூவும் அசோகவும் காற்றில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது. சாரத்தை மடித்து கட்டியிருந்த கால்களில் கொசு கடித்து கொண்டும் காதுகளின் பக்கத்தில் ரீங்காரம் பாடிக் கொண்டு இருப்பதை பெருட்படுத்தாமல் மரத்து போன கால்களில் நின்று பேருந்து வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.

என்றும் இல்லாத அளவுக்கு வேணுவின் வருகைக்கு காத்திருந்த புவனா அவன் மீது அளவு கடந்த அன்பை வெளிக்காட்டியபடி ஆச்சிர்யத்தை ஏற்படுத்தினாலும், வேணு வெளிகாட்டாமல் பூவையும் அசோகவையும் கொடுத்துவிட்டு குளிக்க சென்றான். திறந்த வெளியில் குளிக்க பெயிண்ட் வாளியில் இருந்து தண்ணீரை தலையில் ஊற்றும் போது புவனா இதற்கு முன் தன்னை கரப்பான் பூச்சியைபோல அணுகுவது ஞாபகத்திற்கு வந்து போனது. இன்றுமட்டும் அப்படி என்ன ஆகிவிட்டது. என்றும் போல மண் சுவரில் கட்டிய சுதை சுவர் அதிக மழைக்கு வீடே நனையும்.  பாதி கரையான் அரித்த கீற்று கல்யாணத்தின் போது வாங்கிய நனைந்து போன பாய்.  எண்ணெய் பிசுபிசுப்பு ஏறிய தலையணை. எதனால் புவனாவிடம் இன்று மட்டும் மாற்றம் என யோசித்தபடியே குளித்து முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

நெத்திலி கருவாட்டு குழம்பு வாசனை குடிசையை நிரப்பி பசியை தூண்டியது. சுடச்சுட வடித்த சோற்றை தட்டில் போட்டு நெத்திலி குழம்பை ஊற்றி பரிமாறினாள்.  சோற்றில் இருந்து மேலே எழும் ஆவி மூக்கிற்கு இதமாக இருந்தது. ஆசையாக சில வார்த்தைகளை தொட்டு தொட்டு பேசி அந்த இரவு அவனது இளமை காலத்தை மீட்டுகொடுத்தது. கீரியும் பாம்புமாக இருந்த புவனாக்கு இன்று ஒரு நாளில் என்னதான் நடந்துவிட்டது.  பாயில் படுத்து கொண்டு நாளைய பொழுதை எதிர் கொள்ளுவதை யோசித்து அவன் அருகில் நெருங்கி படுத்திருந்தவள் வலது கையை மார்பு மீது போட்டுக் கொண்டு அவன் தலையை விரல்களால் வருடி விட்டு அவள் ஆழ்மனதில் உள்ள கோரிக்கைகளை முன் வைக்க தயார் ஆனாள்.

-யோ… வேணு

-என்ன…

-நா ஒன்னு சொல்லட்டுமா?

-என்னத சொல்ல போற,சொல்லு?

-வெளிநாட்டு வேலைக்கு போறியா?

-உங்க கொப்பன்னா வானு திறந்து வச்சியிருக்கான்

கெஞ்சும் குரலில், ’இல்ல சித்திரகுடில கட்டிகொடுத்த மாமா பொண்ணு வீட்டுகாரரு வெளிநாட்டுல வேலை செய்யுறாறம்.  நம்ப மாதிரி இருந்தவ இப்ப பார்க்குறேன் ஆளே அடையாளம் தெரியல. வீடு கட்டி நகையலாம் போட்டு ராணி மாதிரி இருக்கா’.

-வெளிநாட்டுக்கு வேலைக்கு போகுறது அவ்வளவு ஈசியா? பணம் கட்டி போகணும் . அவ்வளவு பணத்துக்கு எங்க போகுறது?

-இல்லயா அவள்ட்ட சும்மா பேச்சுவாக்குல கேட்டேன். டவுன்ல ஒரு ஏஜெண்ட் ஆபிஸ் இருக்காம் அங்க போய் விசாரிக்க சொன்னா. நாளைக்கு போயிட்டு பார்த்துட்டு விசாரிக்கலாம்.

-நா போயிட்ட நீ மட்டும் தனிய இருந்துப்பியா?

-எங்க அம்மா வீட்டுலயும், இங்கையும் மாறி மாறி இருந்துப்பேன். நீயும் ஒரு மூணு வருசத்துல சம்பாரிச்சிட்டு வந்த இங்கயே சுயமா ஒரு கடைய வச்சி வாழ்க்கைய ஓட்டிக்கலாம்.

-சரி. எனக்கு தூக்கம் வருது

-நாளைக்கு போயிட்டு வந்துருவோம் சரியா?

-பார்ப்போம்…

கண்களை இறுக மூடிக்கொண்டான்.

புவனா எதிர்நோக்கி இருந்த அந்த விடியல் விடிந்தது.

 இருவரும் முதல் வேலையாக டவுனுக்கு சென்று, ஏஜெண்ட் ஆபீஸ் காலை பத்து மணி கடந்தும் திறக்காமல் இருந்ததால் காத்துக் கிடந்தனர். அதற்கு இடையில் புவனா காவல் காத்த அய்யனாரை ஐம்பது முறையாவது வேண்டியிருப்பாள். வேணு ஹான்ஸை மூன்று முறை போட்டு துப்பியிருந்தான். ஆபிஸ்க்கு வெளியே ஒட்டிருக்கும் விளம்பர பலகையில் இருக்கும் விமானத்தை நிமிடத்திற்கு ஒரு முறையாவது புவனா பார்த்திருப்பாள்.

புவனாவின் மனதிற்குள் வேணு வெளிநாடு போயிவிட்டது போல் கை நிறைய சம்பாதிப்பது போல  கற்பனையை ஓடவிட்டுட்டு இருந்தாள். ஷட்டர்  திறக்கும் சத்தத்தை கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். வெள்ளை சட்டை,  வெள்ளை பேண்ட் அணிந்த அந்த நபர் நெற்றியில் இருக்கும் சந்தனப்பொட்டு அவருக்கு எடுப்பாக இருந்தது. அவரின் முகம், தோற்றமும் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

-உங்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பத்து நிமிடம் மட்டும் பொறுத்து கொள்ளுங்கள்.  ஆபீஸை கூட்டிவிட்டு சாமி கும்பிட்டுவிடுகிறேன்.

அவரின் தெய்விக அடக்கமான பேச்சு நம்பிக்கை இல்லாத வேணுக்கும் நம்பிக்கை விதைத்தது.

தயங்கி தயங்கி பேசிய புவனாவின் கோரிக்கையை புரிந்து கொண்ட ஏஜெண்ட் பெயிண்டர் வேலைக்கு துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும்,  விசா டிக்கெட் தனக்கான கமிஷன் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு லட்சத்து  ஐம்பது ஆயிரம் வரும் என்று தெளிவு படுத்தினார். பணத்தை தயார் செய்துவிட்டால் இரண்டு மாதத்தில் துபாய்க்கு அனுப்புகிறேன்.

-எதாவது குறைத்து கொள்ள முடியுமா? புவனா கேட்டாள்.

-என் கமிஷன்ல வேணும்னா  கொஞ்சம் குறைச்சிக்க முடியும்.  வேற ஒண்ணும் பண்ண முடியாது.

-சம்பளம் எவ்வளவு சார் வரும்?

-நாப்பது ஆயிரம் ரூபாய் வரும்.  போகப்போக சம்பளம் அதிகப்படுத்துவாங்க. முதல்ல பாஸ்போர்ட் அப்ளை செய்து வாங்குங்க. அதுக்கு அப்பறம் பணத்த ரெடி பண்ணிட்டு சொல்லுங்க.

வேணுக்கு பணத்தை தயார் செய்ய முடியும் நம்பிக்கை துளியும் இல்லாமல் வெளியே வந்தான்.  எப்படியும் தயார் செய்துவிட  முடியும் என்ற நம்பிக்கையில்  ஆபிஸில் இருந்து வெளியே வந்த புவனா மீண்டும் அய்யனாரை நினைத்தாள்.

முழு வீச்சில் இருந்த புவனா எல்லா உறவினர்களிடம் பணத்தை கடனாக கேட்டு பார்த்தாள். அவளுக்கு பதிலாக வந்தது எந்த உதவியாக இருந்தாலும் பணத்தை தவிர வேற உதவி வேண்டும் என்றால் கேளு, இந்த பதில் அவளுக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் கேட்டு வைப்போம் என்று கேட்டு வைத்தாள். இந்த காலத்துல பணம் உதவின்னா மட்டும் தான் மத்தவன தேடி வராங்க.  ஜாடைமடையாக சொல்லுவது அவள் காதில் விழவும் செய்தது.

வேணு கேட்டு பார்த்ததில் அந்த ஊரில் பணம் படைத்தவன் இதையே தொழிலாக கொண்டவன் வட்டிக்கு  பணம் தருவதாக சொன்னான்.

வேணுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, கடன் தருவதாக ஒப்புக் கொண்டவன் வேணுக்காக தரவில்லை. புவனாக்காக தருகிறான்.  அதும் ஐம்பது ஆயிரம் தருவதாக ஐந்து காசு வட்டி. சரியான நேரத்தில் வட்டியை கொடுக்கணும் அழுத்தமாக சொல்லியிருந்தான்.

புவனாவிடம் தெரிவித்தான். அவனை பற்றி அரசபுரசலாக புவனா கேள்விப்பட்டு இருந்தாலும் முதலில் பணத்தை வாங்கு, மீதி பணத்துக்கு என்ன செய்ய போகிறோம். கடைசி முடிவாக யோசித்து வைத்திருந்ததை புவனா சொன்னாள்.  மீதி பணதுக்கு வீட்டு பட்டாவை பேங்கில் அடகு வைத்துவிடலாம்.

முதலில் தயக்கியவன் புவனா தொடர்ந்து அழுத்தம் தந்ததில் சரி என ஒப்புக் கொண்டான்.

வேணு பாஸ்போர்ட் ஆபீஸ் சென்றிருந்த நேரத்தில் ஐம்பது ஆயிரம் பணத்தை எடுத்து வந்து வீட்டு வாசலில் வந்து நின்றான்.  வீட்டினுள் குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தவள் வாசலில் அவன் நிற்பதை பார்த்து அவசர அவசரமாக புடவையை சுற்றி வெளியே வந்தாள். குளித்த தலை மூடியில் இருந்து சிந்திய நீர் பின் முதுகில் சொட்டு சொட்டாக வழிந்து ஜாக்கெட்டை நனைத்தது.

அவன்  மேனியின் மீது வந்த நறுமணம் புவனாவின் மூக்குக்கு இதத்தை கொடுத்,தாலும் அவனின் பார்வை புவனாவின் மார்பகத்தை,  இடையை உடல் முழுவதும் பரிசோதிப்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிரித்த முகத்துடன், ’பணத்தை கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன்’. பணத்தை எடுத்து கொடுக்கும் போது அவனின் ஆள்காட்டி விரல் அவளின் சுண்டு விரலை தொட்டு பார்த்தான்.

ஏதோ பேச அவன் முற்பட பணத்தை வாங்கி கொண்டவள் நன்றியை தெரிவித்துவிட்டு வீட்டினுள் வேகமாக சென்றாள்.

அவனின் கூர்மையான பார்வை அவளின் மேனியை ஆராய்ந்ததை கை விரல் தன் விரலை தொட்டதையும் சில வினாடி மனதில் காட்சிகளாக வந்து போனது. பணத்தை பார்த்து எண்ணி பார்க்கையில் மனதில் ஓடிய காட்சிகள் கரைந்தது.

அடுத்த நாள் ஏஜெண்டை பார்த்து முன்பணமாக நாற்பது ஆயிரம் கொடுத்துவிட்டு துபாய் செல்லுவதற்கான வேலைகளை ஆரமிக்கும்படி சொல்லிவிட்டு வந்தார்கள். மீதி இருந்த பத்து ஆயிரம் ரூபாயில் கடனுக்கு வட்டியாக இரண்டு மாத பணம் ஐந்து ஆயிரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டு பட்டாவை  தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சத்து இருபது ஆயிரத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றனர்.

வேணு வெளிநாடு செல்லயிருக்கும் சேதியை உறவுகாரர்களுக்கும் நண்பர்களிடம்சொல்லி புவனா பெருமை அடைந்தாள்.

முதல் மாத வட்டி பணத்தை ஊர் கடன்காரனிடம் கொடுத்துவிட்டு வந்தான் வேணு.

ஏஜெண்டுக்கு  முழுமையான பணத்தை கொடுத்து பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். மருத்துவ பரிசோதனையும் முடிந்து பயணம் சொல்லுவதற்கான தேதி நிர்ணக்கபட்டது.

தினந்தோறும் டிக்கெட்டை பார்த்து மகிழ்ச்சி கொண்டிருந்தாள் புவனா.

வேணு பயணம் செய்யும் வரையிலும் வீட்டின் உள்கதவு பூட்டிய வண்ணமேயிருந்தது. வேணுவை வெளியே எங்கேயும் அனுப்பாமல் வீட்டுலே இருக்கும்படியும் அவனுக்கு பிடித்தமான உணவை தினந்தோறும் சமைத்து கொடுத்து ஒரு நாளுக்கான வேலையாக உணவு உண்ணுதல், கலவி கொள்ளுதலே வேலையாக மாற்றியிருந்தார்கள். தன் மனதிற்குள் முடங்கி கிடந்த வர்ணனை வார்த்தைகளை இருவரும் மாறி மாறிபேசி அன்பை வெளிபடுத்தி கவலையற்று துன்பங்கள் மறந்து இருவரும் ஒரு தொட்டிலில் பிறந்த குழந்தைகளாய் வீட்டின் பாயினில் கிடந்தனர்.

நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு துபாய் அடைந்தான்.  துபாய் நேரப்படி மாலை நான்கு ஆகியிருந்தது. ஜனவரி மாசம் என்பதால் குளிர் காற்று அளவுக்கு அதிகமாக இருந்தது. வேணுவை அழைத்து செல்ல கம்பெனி ஆள் காத்திருந்து வரவேற்று அறிமுகப்படுத்திக் கொண்டான். சொகுசாக இருந்த காரில் ஏறி  துபாயில் உள்ள தேரா பகுதிக்கு அழைத்து சென்று இருப்பிடத்தில் அறையில் இருந்த  பாகிஸ்தான் பங்களதேஷ் நேப்பாள் சேர்ந்தவர்களை அறிமுக செய்தான். ’நாளை காலை ஆறு மணிக்கு அழைத்து செல்ல வண்டி வரும் அதற்குள் சாப்பிட்டு தயார் நிலையில் இருக்கவும். ஜெபல் ஜெய்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.  இங்கிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்’ கேரளத்தான் சொல்லிவிட்டு போனான்.

பயண அசதியில் நல்ல உறக்கத்தில் இருந்தான். விடியகாலையில் ரூம் பரபரப்பாக காணப்பட்டது.  பாகிஸ்தானை சார்ந்த அந்த நபர் தட்டி எழுப்பினார்.  திடுக்கிட்டு எழுந்து பணிக்கு கிளம்ப வேண்டும் என கடிகாரத்தை காட்டி செய்கை செய்தான். அரை தூக்கத்தில் எழுப்பி வெளியில் காத்திருந்த வாகனத்தில் ஏறியதும் கடும் குளிரில் மங்கலாக இருந்த சாலையில் முகப்பு ஒளி வெளிச்சத்தில் வாகனம் இயங்கியது.

மலைகள் நிறைந்த பகுதியின் உச்சத்தை அடைந்ததும் வாகனத்தின் இயக்கம் நின்றது.  தூக்கத்தில் இருந்த அனைவரும் உடல் முறுவலுடன் கிழே இறங்கினார்கள். குளிரும் காற்றும் உடலை உலுக்கிய வண்ணமாயிருந்தது.

அங்கு இருந்த கேரளத்தை சார்ந்த மேல் அதிகாரி அவர்களுக்கான வேலைகளை பிரித்து கொடுத்து கொண்டிருந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலை என நினைத்தான். அங்கு பெய்ண்ட் அடிக்கும் சாத்திய கூறுகள் இல்லாத இடம். 

முழுவதும் மலைகளும் பள்ளதாக்குகளுமாக இருந்தது. சில மணி துளிகளிலே அவனால் என்ன வேலை என யுகிக்க முடிந்தது.  சாலை போடும் பணி நடைபெறப்போகிறது. அதில் அவனுக்கும் ஏர் கம்பெரேசர் கொடுத்து மண் தரையில் அடித்து புழுதிகளை வெளியேற்ற வேண்டும். மேல் அதிகாரியிடம் வேணு போய் எனக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு அனுப்புவதாக அங்கு இருக்கும் ஏஜெண்ட் சொல்லி அனுப்பினார் .

கேரளத்து அதிகாரி சிரித்து கொண்டு காண்ட்ராக்ட் வேலையில் எல்லா விதமான வேலைகளும் இருக்கும். பில்டிங் கட்டும் போது பெயிண்ட் அடிக்கும் வேலை இருக்கும். இப்ப நமக்கு ரோடு போடும் வேலை வந்திருக்கு. போன மாசம் பெயிண்ட் அடிக்கும் வேலை இருந்தது.

வேலைகள் வேகமாக நடைபெற தொடங்கியது.

வேணுக்கான வேலைகளை ஒருவன் முன்மாதிரியாக செய்து காட்டிவிட்டு வேலையை அவன் பொறுப்பில் ஒப்படைத்தான். மண் தரையில் ஏர் கம்பரேசரை வைத்து அடிக்கையில் தரையில் இருந்து  மேலே கிளம்பும் புழுதிகளும்,காற்றில் இருந்துஅடித்து கொண்டு வரப்படும் புழுதிகளும் உடல் முழுவதும் புழுதியாகி நாசியின் வழியாக நுரையிரலுக்குள் புழுதிகள் தஞ்சம் அடைய தொடங்கியது. அடையாளம் தெரியாத அளவுக்கு  தூசியில் மூழ்கியிருந்தான்.

நகர முடியாத அளவுக்கு வேலை கண்காணிப்புடன் நடைபெற்றது.  டீ குடிக்கும் இடைவெளியில் அருகில் இருந்த கார் கண்ணாடியில் முகத்தை பார்த்துபோது  யாரும் கண்டு பிடிக்காதபடி தோற்றம் மாறியிருந்தது

டீயை வேகமாக குடித்தான் மேலும் இன்னொரு டீ குடித்தால் நல்லா இருக்கும். கேட்க அவனுக்கு  தயக்கம். அவனின் ஆவலை உணர்ந்துக் கொண்ட கேரளத்து அதிகாரி மேலும் டீயை வாங்கிக் கொடுத்தான்.

வேலை இயந்திரம் போல் இயங்கியது. காலில் போட்டிருக்கும் செருப்பு உருககி போகும் அளவுக்கு மதிய வெயில் அடித்தாலும் ஹான்ஸ் இல்லாமல் வேலை செய்வது சலிப்பை ஏற்படுத்தி வேலையை செய்ய விடாமல் மண்டைக்குள் வலி கொடுத்தது.

கொதிக்கும் தார் தரையில் தெளித்து சுட சுட தாரை தரையில் பரப்பி வாகனத்தை ஓட்டி மட்டபடுத்தும் போது வீசும் அனல்காற்றின் வெக்கையில் நெஞ்சு முடியை பொசுங்கிவிடும் அளவுக்கு இருந்தது. இந்த நாளை கடந்துவிட்டால் போதும், அருகில் இருந்தவனிடம் நேரத்தை கேட்டு மீதி வேலை செய்யும் நேரத்தை கேட்டு கணக்கிட்டான்.

முதல் நாள் வேலை வெற்றிகரமாக முடித்து வாகனத்தின் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து காலணிகளை கழட்டி குதிங்காலை பார்த்தால் அடிபாதம் சிவந்து கொப்பளித்து எரிச்சலை கொடுத்தது. இந்த எரிச்சலோடு நாளைக்கு வேலை செய்தால் சதை பிஞ்சி காயம் பெரிதாகிவிடும். ரூமிற்கு போய் மஞ்சளில் பத்து போட்டு நாளை காலைக்கு கால்களை சரியாக்க வேண்டும் என்று நினைத்தான்.

மாலையில் கடும் குளிருக்கு இடையில் மலையில் இருந்து வாகனம் கீழே இறங்கி சமதள சாலையில் சென்று ரூமை அடைந்தது. முகங்கள் துவண்டு போயிருந்தது.  சுடுதண்ணீரில் குளித்துவிட்டு வந்து முதல் வேலையாக உறவினர்களுக்கு போன் பேசி சிரித்து மகிழ்ந்தனர். சாப்பாடு நேரம் வரும் வரைக்கும் அந்த  ரூமமே சிரிப்பு சத்ததோடும், பல மொழிகளில் பேசிக்  கலகலப்பாயிருந்தது.

கை வைத்தியம் செய்துவிட்டு படுத்தவனுக்கு, படுத்தவுடன் விடிந்து விட்டது போல் தூக்கம் கலையாமல் அசதியோடு விழித்தான். காலின் எரிச்சல் அதிகமாகயிருந்தது. தரையில் கால்களை கீழே ஊன முடியாதபடி வேதனையை அளித்தது. துணியை இரு கால்களிலும் சுற்றி அடுத்த நாள் வேலைக்கு தயார் ஆனான்.

நீண்ட நேரம் ஆகியும் அழைத்து செல்லும் வாகனம் வரவில்லை. காத்திருந்த சில பேர் உட்கார்ந்த வாக்கில் தூங்க செய்தனர். காரின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த கூட்டம். காரில் இருந்து இறங்கி கேரளாத்து அதிகாரி வெளியே வந்தான். பல மொழிகள் பேச கூடிய ஆளுமையும் அவர் பேசும் தமிழ் மொழி கேட்க இனிமையாகவும் இருக்கும்.

அதிர்ச்சியான தகவல் சொல்ல ஆரமித்தான்.  ’நம்ப கம்பெனி ஓனர்ங்ககுள்ள பிரச்சனை. அதுனால வேலைகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு. பிரச்சனை முடிவுக்கு வந்து மீண்டும் நிலைமை திரும்ப கொஞ்ச காலம் எடுக்கும். அது வரைக்கும் இங்கே வேலையும் இல்ல சம்பளமும் இல்ல. இருப்பவங்களுக்கு என்னால கம்பெனில பேசி மூன்று வேலை சாப்பாடு மட்டும் தர ஏற்பாடு செய்ய முடியும். அவங்க அவங்க நாட்டுக்கு போகணும் நினைச்சா போறதுக்கு டிக்கெட் போட்டு அனுப்புறேன். போனா திரும்ப வேலை ஆரமிக்கும் போதும் கூப்பிடுகிறேன்’.

சில நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வேலை நிரந்தரமாக இருக்காது ஊருக்கு போயி வேற வேலைக்கு தயார் செய்வதுதான் நல்லது என பலர் முடிவு எடுத்தனர். அவர்கள் நீண்ட காலமாக இந்த கம்பெனியில் வேலை செய்பவர்கள். ’திரும்ப வேலை ஆரம்பிக்க எவ்வளவு காலம் ஆகும்?’ என்று வேணு கேட்டான்.

கேரளாத்தான் உதட்டை பிதிக்கி தெரியாது என தெரிவித்தான்.

ஊருக்கு செல்ல முடிவு செய்தனர் வேணுவை தவிர.

சில நாட்கள் இங்கேயும் அம்மா வீட்டில் சில நாட்களும் இருந்து புவனா நாட்களை ஓட்டினாள். உறவுகள் ஊர்காரர்கள் முன்னே கணவர் வெளிநாட்டில் வேலை செய்வது பெருமையாக உணர்ந்தாலும். தானும் எதாவது துணி கடைக்கோ மளிகை கடைக்கோ வேலைக்கு  போனால் என்ன யோசித்து முடிவு செய்து நகரத்தில் உள்ள பெரிய துணிகடையில் வேலைக்கு கேட்டு சேர்ந்தாள்.

சில நாட்களாக சமாளிக்க முடிந்த வேணுக்கு அங்கு  உள்ள நிலைமையை புவனாவிடம் விவரித்தான். நீண்ட நாட்களாக வேலை இல்லை சம்பளம் இல்லாமல் உணவு மட்டும் மூன்று வேலை கிடைப்பதாக என்னோடு ரூமில் இருந்தவர்கள் ஊருக்கு போயிவிட்டர்கள். நான் மட்டுமே இருக்கிறேன். புவனாவிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகளுக்கு பதிலாக அழுத்தமான ம்ம்ம்… ஒலியை வெளிகாட்டி போனை வைத்தாள்.

வேலை முடிந்து இரவு பேருந்துக்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள். எண்ண ஓட்டம் முழுவதும் தன் சம்பளத்தை கடன்காரன்களுக்கு வகுத்து பார்த்தால் கடனை கட்டவே மேலும் சில ஆயிரங்கள் தேவைப்பட்டது. பேருந்தில் ஏறியவளுக்கு வீடு வந்தது தெரியாமல் யோசனையில் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்து வந்தாள். மனம்,கடனை எப்படி அடைப்பது பற்றியே இருந்தது.

இயலாமை அதிகம் ஆகும் போது கோபம் ஏற்படுகிறது. கோபத்தை வேணு மீது நூறு சதவிகிதம் கொட்டி அந்த நேரத்தில் பாரத்தை குறைத்தாலும்,மாதம் மாதம் கடன்காரன்களின் தொல்லையும் அதிகமாகியது.

ஒவ்வொரு நாளும் கடன்காரர்களின் பார்வையும் வார்த்தையின் வெளிப்பாடும் புவனாவை இழிவுபடுத்தி சிறைபடுத்தியது.

இரவில் தூக்கம் இழந்து விடியலுக்கு பயந்து வீட்டின் ஒரு மூலையில் குத்துகாலிட்டு உட்கார்ந்து இருப்பாள்.

உள்ளூர் கடன்காரன் தூரத்தில் வருவது அவன் மேனியில் இருந்து வரும் நறுமணத்தை வைத்து வீட்டின் உள்ளே இருந்து அறிந்து கொள்ளுவாள். சில நாட்கள் தள்ளி வட்டியை தருவதாக கூறினாள். அதை அவன் நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்பாக எடுத்து இடை இடையில் கர்ச்சனையாக பேசுவதாக சில ரெட்டை அர்த்த வார்த்தைகள் பேசி அவள் செய்கைகாக கிளம்ப மனமில்லாமல் காத்திருந்து ஆமை போல் நகருவான்.

ஒருவரிடம் இருந்து வாங்கப்படும் பணம் தர முடியாத பட்சத்தில் அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. சில நேரம் யோசித்தால் இதே பெண்களிடம் கடன் வாங்கியிருந்தால் அவர்கள் என்னலாம் செய்துயிருப்பார்கள். அவள் மானத்தையும் அவளின் அம்மாவின் மானத்தையும் ஊரு முழுக்க கூறு போட்டு விற்று வேசியாக்கி ஒழுக்கமற்ற குடும்ப வரலாறை உருவாக்கி சமுகத்தின் பார்வையை அவள் மீது செலுத்தி அருவருக்க செய்துயிருப்பார்கள். ஒரே பாலினம் என்ற இரக்கம் கூடயில்லாமல். அதற்கு ஆண்களே எவ்வளவோ மேல்.

கடன் தொல்லையால் வேணு மீது இருந்த ஈர்ப்பு குறைந்து அவன் செத்தால் கூட கவலையில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள்.

அவனிடம் இருந்து வரும் அழைப்பை எடுக்காமல் தவிர்த்தால் ஒருவேலை போனை எடுத்தால் -என் போனை எடுக்கமாட்டேன்குற -கடையில வேலை. -போனை எடுத்து பேசுனா ஓனர் சம்பளம் தருவானா? -கடன்ன கட்ட வேணா?

போனை கட் செய்தாள்.

வீட்டு பட்டாவை அடமானம் வைத்திருந்த ஃபைனாஸ்காரன் ஒருநாள் காலையில் வீட்டு வாசலில் உட்கார்ந்து கடனை கட்டினால் தான் நகர்வேன் என்று பைக்கை நடு ஸ்டாண்ட் போட்டு உட்கார்ந்தான். ஒரு வாரத்தில் கட்டிவிட்டுவதாக கெஞ்சியும்,காலில் விழுந்து சொல்லியும் எடுபடவில்லை. பிடிவாதமாக கடனை இன்னைக்கு கட்டினால் போவேன் என்று தீர்மனமாக சொல்லிவிட்டான்.

செய்வது அறியாது புவனா உள்ளுரில் கடன்கொடுத்தவனை தேடி செல்ல அவன் வயலில் இருந்தவனிடன் நிலையை எடுத்து கூறி பணத்தை பெற்று அன்றைய தவணையை கட்டினாள்.

உறவுகாரர்கள் ஊர்காரர்கள் இவள்படும் பாடுகளை அறிந்தும் உதவி செய்யவோ பேசவோ தவிர்த்தனர். இவளை எதேச்சையாக பார்த்தாலும் பணம் எதும் கேட்டுவிட போகிறாள் என்று முன்கூட்டியே அவர்களும் பணக்கஷ்டங்கள் அதிகமாக இருப்பது போல கட்டிக் கொண்டனர்.

பசி,அவமானம்,கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் மனம் உடைந்து ஒருநாள் இரவில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து எறும்பு மருந்தை கலக்கி குடித்துவிட்டு படுத்தாள். கண்கள் சொக்குவதாக உணர கண்களை மூடினாள்.

வேணுவிற்கும் வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் வேலை மட்டுமே கிடைந்தது. கிடைக்கும் பணம் அங்க இருக்கும் செலவுக்கே சரியாகயிருந்தது.  நாட்கள் இப்படியே கடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.

ஓனரின் பிரச்சனைகள் ஒரு தீர்வுக்கும் வந்து இனி முப்பது நாட்களும் வேலை இருக்கும் என்று கேரளத்து மேல் அதிகாரி தெரிவித்தார். அந்த அதிகாரிக்கு வேணு எல்லா விதமான எடுபிடி வேலைகள் செய்து நற்பெயரை பெற்றான். அவர் அதிகமாக பெண்கள் போதை லாட்டரி விஷயங்களில் பணத்தை இழந்தார். அருகில் இருக்கும் மாசாஜ் செண்டரில் இருந்து இவரது வாட்ஸ் ஆப்க்கும் புகைபடங்கள் வரும் புகைபடத்தை பெரிதுபடுத்தி பார்த்து அதில் ஒன்றை தேர்வு செய்வார். வேணுவிடமும் புகைபடத்தை காட்டி உனக்கு எது பிடித்திருக்குதுனு பாரு டா போனை கொடுப்பார்.போட்டோவை பார்த்துவிட்டுஆர்வம் இல்லாதவன் போல் கொடுப்பான். போதையில் இருக்கும் போது ஆன்லைனில் லாட்டரி வாங்குவார்.  அதிக அளவில் லாட்டரியில் இழந்த பணமே அதிகம்.

காலையில் புவனா வழக்கம் போல எழுந்தாள் .இரண்டு மூன்று முறை உடலை கிள்ளிபார்த்தாள். எறும்பு மருந்து குடித்து சாகவில்லையே யோசித்தாள். வயிறு கலக்குவது போல தெரிந்து கருவைகாட்டிற்கு சென்று உபதைகளை கழித்துவிட்டு வந்தாள் அன்று தொடந்து நான்கு ஐந்து முறை போயிருந்தாள். உடல் தளர்ந்து போய் வேலைக்கு லீவு சொல்லிவிட்டு வீட்டில் படுத்து இருந்தாள்.

தலைக்கு அருகில் இருந்த போன் கத்தும் சத்தம் கேட்டு போனை காதில் வைத்து ஹாலோ…தளர்ந்த குரலில் சொன்னாள். வேணுவிடம் வந்த அழைப்பு ,இனி மூப்பது நாட்களுக்கு வேலையிருக்கும் நம்ப கஷ்டங்கள் தீரப்போகிறது என்று சொன்னதை கேட்ட புவனாவுக்கு மேலும் ஒருமுறை அடிவயிற்றை கலக்கி எழுந்து மேட்டு கருவை காட்டுக்கு போக வேண்டியதாயிற்று.

தமிழ்நாட்டை விட இங்கே வேலை கஷ்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேணு பெற்றான். படிபடியாக தொடர்ந்து வேலைகள் தினந்தோறும் கிடைத்தது.  சம்பள நாளில் மொத்தமாக பணத்தை பார்த்த குஷியில் ஒரு நாள் மட்டும் கேரளத்தனாக தன்னை பாவித்து மாசாஜ் சென்டர்க்கு சென்று விருப்பப்பட்ட பெண்களோடு இருந்து முழு போதையில் ரூமிற்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தான். இன்றைய ஒருநாள் வாழ்க்கையில் இருந்த சுகம் பிடித்தது. பொறுப்புகள் இல்லாமல் யாருக்கும் பதில் சொல்லாமல் கேரளத்தான் எவ்வளவு பெரிய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிறான்.

 அப்படியே சரிந்து விழுந்து தூங்கியவன் அரை போதை தெளிந்த விடியகாலையில் எழுந்து எல்லா பணத்தை செலவு செய்துவிட்டோமே என்று கதிகலங்கி புவனா பற்றிய கவலைகள் உள்ளுக்குள் காய்ச்சலாய் கொழுத்தியது. ஒருநாள் ஆசைக்கு புவனாவை கஷ்டத்தில் மூழ்க அடித்துவிட்டோமே என்று தன்னை தானே வெறுத்துக் கொண்டான்.

சம்பளத்தை கேட்ட புவனாவிடம்  இன்னம் போடல. கொஞ்சம் லேட் ஆகும் என்றான்.

உள்ளூர் கடன்காரன் புவனாவிடம் தினந்தோறும் தொந்தரவு செய்வது, புவனாக்கு அவன் கடனை கேட்டு தொந்தரவு செய்வதை விட அவன் அவள் மேனியை அங்குலம் அங்குலமாக பார்க்கும் பார்வை சேலைக்குள் ஊரும் அட்டை பூச்சியை போல் அருவருப்பாக உணர்ந்தாள். பேச்சுவாக்கில் கையை தொடுவதும் அவளுக்கும் இதில் இருந்து ஒவ்வொரு நாளும் சமாளித்து தப்பிப்பது பெரும்பாடாய் போயிற்று.

இரவு காலை சாப்பிடாத பசியில் கண்கள் பங்குவது போல கால்கள் வெட வெட என நடுங்க துணிகடையில் வாடிகையாளகளுக்கு சேலைகளை எடுத்து காண்பித்தாள்.  சற்று நேரம் உட்கார்ந்தால் தேவலை போல் இருந்தது.  இந்த வாடிக்கையாளரை முடித்துவிட்டு பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு அங்க சிறிது நேரம் உட்கார முடிவு செய்திருந்தாள். அவளின் நிலைமையை அறியாத வாடிக்கையாளர்கள் அடுக்குகளில் இருந்த சேலைகளை ஒவ்வொன்றாக எடுக்க சொல்லி நிதானமாக பார்த்தார்கள். ஒரு சேலையை எடுத்தார்கள். சேலையை பில் போட அனுப்பி சேலைகளை அடுக்கி வைத்துவிட்டு தளர்ந்த உடலுடன் பாத்ரூம்மை நோக்கி சென்று அங்கு இருந்த படிகட்டின் சுவரில் சாய்ந்தவாரு உட்கார்ந்தாள்.

காலையில் வரும் டீக்கும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. சற்று நேரம் கண்ணை மூடி சாய்ந்து இருப்பது உடலுக்கு சமாதானத்தை அளித்தது.

அவள் மார்பில் வைத்திருந்த கைப்பேசி சைலன்டில் அதிர்ந்து கொண்டிருந்தது.  அந்த அதிர்வு மார்புக்கு சுகத்தை கொடுத்தது.

 மூன்று முறை முழுமையாக அடிக்கவிட்டு நான்காவது முறை அடிக்கும் போது மார்புக்குள் கையைவிட்டு போனை எடுத்தாள். அதிகமுறை போனை எடுக்காமல் இருந்தவள், கடன்காரனின் போன்களாக இருக்கும் என்று. அரை மயக்கநிலையில் ஆன் செய்து காதில் வைத்தாள்.

காதே கிழிந்து விடும் சத்ததில் வேணுவின் குரல். -இரண்டு கோடியே  மூப்பத்தி ஐந்து இலட்சம் லாட்டரியில் பரிசாக விழுந்து இருக்கு.

-இன்னோரு வாட்டி சொல்லு என்று நிதானமாக அவள் கேட்க அவனும் பொறுமையாக லாட்டரியில பரிசு விழுந்திருக்கு .

கேட்டவுடன் அவளுக்கும் பசி மயக்கம் எங்கே போனது என்று தெரியவில்லை.

 -எப்ப வாங்குன.

இவ்வளோ நாளாக சம்பளம் வரவில்லை என சமாளித்தவன் உண்மையே சொன்னான். ஒருநாள் வாங்கிய சம்பளத்தை குடித்து செலவு செய்தேன் அன்னக்கி இரவு போதையில ரூம்க்கு வந்து  நற்காலியில உட்கார்ந்து கேரளத்துகாரன் எப்பவும் லாட்டரி வாங்குவான். அவன் எப்படி வாங்குவானு பார்த்திருக்கேன். அதே மாதிரி போதையில போன் மூலமா லாட்டரி வாங்கியிருக்கேன். அன்னைக்கு எனக்கே தெரியல பரிசு விழுந்திருக்குனு மெசேஜ் வந்த போதுதான் தெரிந்தது.

-யோ… இனி நம்பளும் கோடீஸ்வரனா,எப்ப பணம் தருவாங்க?

-முப்பது நாளுக்குள்ள தருவாங்க.

யாரோ வருவது போல் தெரிந்து ’வீட்டுக்கு போயிட்டு பேசுறேன்’.

டீ ரெடியாக இருந்தது. இவள் மட்டும் தனியாக சிரித்தாள். வேற லோகத்தில் இருப்பதாக உடல்மொழியை காட்டினால் உடன் வேலை பார்பவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்தது.

 இன்றுடன் இந்த வேலைக்கு முடக்கு போட்டுவிட முடிவு செய்தாள்.வேலை மீது ஏரிச்சல் ஏற்பட்டது. இதலாம் ஒரு வேலையா காலைல இருந்து இரவு வரைக்கும் நின்னுகிட்டு இருக்கனு. மனதுக்குள் ஆதங்கப்பட்டு இனி இந்த சல்லி மக்களிடன் சவகாசம் வைக்கவே கூடாது.

அன்று முழுவதும் வேலையில் கவனம் செலுத்தாமல் கர்வத்தில் இருந்தாள். கூட வேலை செய்பவர்களும் இவளுக்கு ஏதோ பேய் எதும் பிடித்துவிட்டதா என்ற சந்தேகத்தில் புவனாவை அணுகினார்கள்.

அவளிடம் இருந்து ஒரு வார்த்தைகள் கூட வெளிவரவில்லை

பரிசு விழுந்த விஷயம் துபாய் நாளிதழில் செய்தியாக வந்தது

புகைப்படத்துடன் தகவலும் இடம் பெற்றிருந்தது.

செய்தியை பார்த்த கேரளத்தான் ஓடி வந்து வேணுவிடம் விசாரித்தான்.

வேணு இவனுக்கு தகவல் தெரிய கூடாது என்று எச்சரிகையாக இருந்தான். அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

 செய்தி நாளிதழில் தகவல் வந்திருப்பது பரிசு விழுந்ததாக பட்டும்படாமல்  தலையை ஆட்டி வைத்தான். அவன் வாயில் இருந்து வரும் பதிலை ஏற்று கொள்ள முடியாத கேரளாத்தான் இவனுக்கு போயி இவ்வளவு பணம் விழுந்துயிருக்கே எரிச்சலுடன் பரிசு வந்ததும் எனக்கு பத்து லட்சம் கொடு என்று அதிகாரமாக கட்டளையிட்டான்.

சமையலுக்கு காய்கறி வெட்டிட்டு இருந்த வேணு கோபத்துடன் ’அதல்லாம் ஒரு பைசா கூட தரமுடியாது’.

முதல் முறையாக எதிர்த்து பேசுவதை பார்த்த கேரளாத்தானுக்கு தலைக்கு மேல் கொம்பு வளர்ந்தது மாதிரி தோன்றி வேணுவை அடித்து கீழே தள்ளினார்.

பதிலுக்கு வேணுவும் அடித்து மல்லுகட்டிக் இருவரும் புரண்டனர். தெருவில் இரு வெறிபிடித்த நாய்கள் குலைத்து சண்டையிடுவதை போல அவன் மீது ஏறி நெஞ்சில் உட்கார்ந்த வேணு முகத்தை பார்த்து நான்கு குத்து விட்டான்.

 அதில் ஒரு குத்து தரையில் விழுந்து விரலுக்கு அதிக வலியை கொடுத்தது. சண்டையில் இருவரின் சட்டை கிழிந்து எழுந்து மாறி மாறி முறைத்து கொண்டு பணத்தை எப்படி எடுத்துட்டு போகுறனு பார்க்குறேன்டா என்றான் கேரளத்தான்.

அந்த நாளைக்கு பின் புவனா வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டாள். சில நாட்களில் ஊருக்குள் எப்படியோ தகவல் தெரிந்தது. அம்மா குடும்பம், உறவினர்கள்,ஊரில் உள்ளவர்கள் அனைவரும் தன் மீது அதீத அக்கரை காட்டுவதும் அவளை பார்த்தால் புன்சிரிப்பு வெளிகாட்டி கடந்து சென்று நலம் விசாரிப்பவர்களாகவும் இருந்தனர் . அவர்களின் எதிர்பார்ப்புக்கு பிடி கொடுக்காமல் விலகி செல்லவே முயன்றாள்.

புவனாவை பார்க்கும் பலர் அவர்களின் பணக்கஷ்டங்களை எவ்வளவு வலி மிகுந்த கதையாக சொல்லி எவ்வளவு சோகத்தை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு சொன்னார்கள்.

 எதற்கும் மசியாமல் தனக்கு கீழ் இருக்கும் அடிமைகளை போல் கடுமையான சொற்களை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் தன்னை அணுகமுடியாதபடி பார்த்துக் கொண்டாள்.

தினந்தோறும் உள்ளுக்குள்  பய உணர்வோடும் இரவில் தூங்கமால் யாராவது என்னை கொலை செய்ய போகுகிறார்கள் என்ற அச்சத்தில் தூங்கமே இல்லாத ஆந்தையாக மாறியிருந்தான்.

அவனை யார்வது சாதாரணமாக பார்த்தால் அவன் அந்த இடத்தில் நகர்ந்து புதிய இடத்தை நோக்கி செல்வான். எதிரே வரும் வாகனத்தை பார்த்தால் தன் மீது மோத வருவதாக நினைத்து பயத்தின் உச்சத்திற்கே போயிவிடுவான். ரூமில் தனியாக இருக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை ரூமமை நோட்டம் விட்டு கதவை பூட்டிவிட்டு எதோ யோசனையில் இருப்பான்.

மனம் மரண பயத்தில் எதை பார்த்தாலும் அதற்கு கதை உருவாக்கி மனநோயாளியாக மாற்றி அவன் இயல்பில் இருந்து விடுபட்டு போனான்.

அவனின் நம்பிக்கை பாத்திரமாக புவனாயிருந்தாள். அவளிடம் மட்டுமே பேசினான். லாட்டரி பணத்தில் யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க கூடாது நினைத்திருந்தான்.

 அதை உறுதி செய்வது போல புவனாவும் ஆதரித்தால்.அப்ப அப்ப ஒரு சந்தேகம் அவளுக்குள் தோன்றுவதை கேட்டாள்.

பரிசு பணத்தை ஏமாத்திர மாட்டங்களே?

இது இங்க உள்ள அரசாங்கம் நடத்துறாங்க அப்படியலாம் பண்ண மாட்டாங்க எனக்கு பரிசு விழுந்துயிருப்பத இங்க இருக்கும் நியூஸ்ல வெளி வந்துயிருக்கு.

இந்த லாட்டரில எப்படி பரிசு விழுந்தது தெரியும்?

அப்படிலாம இல்ல ஒரு லாட்டரி வாங்கணும்னா நம்ப ஊர் காசுக்கு 1600 ரூபாய் பரிசு விழும். அன்னக்கி ஒரு கண்ணாடி குடுவைல  பால் மாதிரி மாசத்திற்கு முப்பத்தி ஒரு நாள் இருக்க அதுல முப்பத்தி ஒரு நாளுக்கான முப்பத்து ஒண்ணு பால் இருக்கும் ஒன்னுல இருந்து மூப்பத்தி ஒன்று நம்பர் எழுதி.அந்த குடுவைல மெசின் மாதிரி இருக்குறதுல பால் எல்லாம் கொஞ்ச சுற்றும் அதுல இருந்து ஒரு பால் உள்ள நம்பர் மேலே தனியா தூக்கி வரும் .அது மாதிரி ஆறு தடவ சுற்றி ஆறு நாள்க்கான பாலுல உள்ள நம்பர் தெரியும். அப்பறம் மாசம் பனிரெண்டு ஒன்னுல இருந்து பனிரெண்டு நம்பர்ல இருக்குற பால்ல ஒரு நம்பர் பால் அது மாதிரி சுற்றி மேலே வரும்.

-மொத்தம் மேல வந்த ஏழு  பால்ல ஏழு நம்பர் இருக்கும் யார் சரியா அந்த நம்பர தேர்ந்து எடுத்திருக்கோ அவங்களுக்கு பரிசை அறிவிப்பாங்க.

-அப்ப அதே நம்பர் ரெண்டு பேர் எடுத்துயிருந்தா?

-பரிசு பணத்த ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுப்பாக.

பரிசுக்கான நிகழ்ச்சியில் கலந்துகிட்ட வேணுக்கு பணத்தை அவனது துபாயில் இருக்கும் பாங்க் அக்கவுண்டுக்கு வரவு வைக்கப்பட்டது. துபாய் அக்கவுண்டில் இருந்து இந்தியா பேங்க் அக்கவுண்டுக்கு வரவு வைக்க மூப்பது சதவிதம் வரி பிடித்தது போக வரவு வைக்கப்பட்டது.

வேணுவின் கைபேசிக்கு புது புது நம்பர்களில் இருந்து அழைப்பு வந்துக் கொண்டேயிருந்தது.

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பண உதவி செய்யும்மாறு அவங்க கஷ்டங்களை சொல்லி வழியுறுத்தினார்கள்.

நண்பகள் உறவினர்கள் தொல்லை தாங்க முடியாமல் கொஞ்ச நாட்களில் நம்பரை மாற்றிவிட்டு ஊருக்கு கிளம்பினான்.

புவனாவையும் சென்னைக்கு வரும்படி சொல்லியிருந்தான்.

இருவரும் சென்னைக்கு வந்து அங்குள்ள லெமன் ட்ரீ ஹோட்டலில் ரூம் போட்டு இரண்டு நாட்கள் தங்கி அமைதியாக தூங்கி எக்மோர் இரயில் நிலையத்திற்கு சென்று அந்த நேரத்தில் வடக்கு நோக்கி செல்லும் ரயிலுக்கு டிக்கெட் வாங்கி கண்ணுக்கு தெரியாத அறிமுகம் இல்லாத மொழி தெரியாத ஊரில் குடியேறினார்கள்.

புவனாவின் கைபேசி சிம்கார்டும் எக்மோர் இரயில் நிலையத்தில் புதிய நம்பராக மாற்றபட்டிருந்தது…

                                                                      புது ஒளி

                                                      புது காற்று

                                                      புது நிலம்

                                                      புது சமூகம்

                                                      ********

தமிழ் கணேஷ்

தஞ்சையில் வகிக்கிறார். தொடர்ந்து சிறுகதை எழுதுகிறார். வாசக சாலை, சொல்வனம்,  நடுகல் இணைய இதழில் வெளிவந்த இருக்கின்றது.

மற்ற பதிவுகள்

The post அமீபா (வடிவம் அற்றது) first appeared on Nadukal.

மூன்று அரசியல் குறுங்கதைகள்

1 May 2025 at 03:08

1. ஆட்சி சாதனைகள்

     தென்னிந்தியாவின் அனானிமஸ் மாநில முதலமைச்சர் பிரம்மாண்டமான மாநாட்டு மேடையில் பெருமிதம் பொங்க முழங்கிக்கொண்டிருந்தார்.

     “கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளோம். அவற்றை உங்கள் முன் பட்டியலிட்டு நினைவுபடுத்த விரும்புகிறேன்…”

     மக்கள் கூட்டத்தில் ஆவல் நிறைந்த அமைதி நிலவியது.

     முதலமைச்சர் கர்ஜித்தார்:

     “மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி; வேறெந்தக் கட்சிகளையும் விட ஊழல்களில் தலை சிறந்தவர்கள் நமது கட்சியினரே என்பதை நாம் தொடர்ந்து நிரூபித்துள்ளோம். அதோடு, நம் ஊழல்களை, அராஜகங்களை, அட்டூழியங்களை எதிர்ப்பவர்களை அதிகார துஷ்ப்ரயோகங்களால் அடக்கி ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் வல்லமை நம் அரசுக்கு உண்டு என்பதை நாடே அறியும். எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது, கை கால்களை முறிப்பது என்பதையெல்லாம் நாம் திறம்பட செய்திருக்கிறோம். நம் கட்சித் தலைவர்களைக் கண்டால் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள்; அரசியல் விமர்சகர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சமூக வலைத்தளங்களில் நம் ஆட்சிக்கு எதிராக எவரேனும் உண்மை பேசினால் குண்டர் தடுப்பு சட்டத்தோடு பாய்கிறோம்…”

     கட்சிக் கரைத் துண்டு – வேட்டி, சேலை – ரவிக்கைத் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

     “அரசுத் திட்டங்களில் உள்ள குறைகளைச் சொல்பவர்களை, இலவசப் பொருட்களின் தரமின்மை பற்றிக் கேள்வி கேட்பவர்களை நாம் சிறையில் அடைக்கிறோம்; சித்திரவதை செய்கிறோம். கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை பெருகியுள்ளது. கள்ளச் சாராயத்தால் சில நூறு ஆண்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துள்ளோம். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், கொடூரக் கொலைகளும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நம் மாநிலத்தில் 435% உயர்ந்துள்ளது. இவை யாவும் நமது மகத்தான சாதனைகள்…”

     இளைஞர் அணிகள் கரவொலியிலும், மகளிர் அணிகள் சீழ்க்கையிலும் ஆர்ப்பரித்தன.

     முதல்வர் கைகளை நீட்டி, பெருமையுடன் கூறினார், “வேறு எந்தக் கட்சியின் ஆட்சியிலாவது இவ்வளவு சாதனைகள் செய்ய இயலுமா? இதெல்லாம் அவர்களின் கனவிலும் நடக்காதே! ஆனால், நமது ஆட்சியில் இவை நிஜமாகியுள்ளன. இது வேறு எவராலும் ஒருபோதும் தொட இயலாத இமாலய சாதனை!” 

     ஜே – ஜே கோஷங்கள் மாநாட்டு மேடையையே குலுங்க வைத்துவிட்டன.

     முதலமைச்சர் கையை உயர்த்தி தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.

     “இன்னும் ஒரு விஷயம். அடுத்த முறையும் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த மாநிலத்தையே  சுடுகாடாக மாற்றிக் காட்டுவோம் என உறுதியளிக்கிறேன்…”

     மக்கள் கூட்டம் வெறித்தனமாகக் கை தட்டி ‘வாழ்க, வாழ்க’ கோஷமிட்டது.

2. அரசியல் பிரியாணி

தேவையான பொருட்கள்:

·    பாசுமதி அரிசி (வாக்குறுதிகள்) – 5 கிலோ: நைச்சியமானது, சுவை மிக்கது, தேர்தலின்போது மட்டும் காணப்படுவது.

·    மாட்டுக் கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி) – 3 கிலோ: ஜாதிய அடையாளமாக முன்னெடுக்கப்படும் புரட்சிகர இறைச்சி. 

·    ஆட்டுக்கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) – 1 கிலோ: மாட்டுக்கறியுடன் கலப்படம் செய்யப்படுவது.

·    வெங்காயம் (பொது மக்கள்) – 1/4 கிலோ: பல உள்ளடுக்குகள் கொண்டது, உரித்துக்கொண்டே இருந்தால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவது, கண்ணீர் வரவழைக்கக் கூடியது. 

·    தக்காளி (கட்சித் தொண்டர்கள்) – 1/2 கிலோ: கொழ கொழவென்று எந்த அழுக்கையும் தாங்கிக் கொள்ளும் குணம் கொண்டது. எளிதில் நசுக்கிப் பிழியலாம்.

·    பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) – 10 எண்ணிக்கை: காரம் ஏற்றக் கூடியது. தேர்தலுக்குத் தேர்தல் இதன் வீரியம் மாறும்.

·    இஞ்சி, பூண்டு விழுது (ஊழல்) – 200 கிராம்:  அரசியல் பிரியாணியின் மூலதனம்.

·    பிரியாணி மசாலா (கட்சிக் கொள்கைகள்) – 100 கிராம்:  அரசியல் பிரியாணியின் உயிர்நாடி. சிறுபான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும், பெரும்பான்மைக் கறிக்கு ஒரு மாதிரியும் பயன்படுத்தப்படுவது.

·    பட்டை, கிராம்பு (இன – மத – ஜாதிய வாதம்) – 50 கிராம்: சிறிது எனினும் காரம் மிக்கது. மெலிதான வாசனையும், வன் உணர்ச்சியைத் தூண்டுகிற தன்மையும் கொண்டது.

·    எண்ணெய் (பதவி) – 40 மில்லி: அரசியல்வாதிகளின் சகல கொழுப்புகளுக்கும் ஆதாரமாக இருப்பது.

·    நெய் (மாய்மாலப் பேச்சுகள்) – 80 கிராம்: நெஞ்சை உருக்கும் விதமான உறவு ரீதி அழைப்பு, பேச்சுகள் மூலம் மக்களை மயக்குவதும் மந்த புத்தி ஆக்குவதும்.

·    கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) – தலா 1 கட்டு: நாற்றத்தை மறைக்கப் பயன்படும் வாசனைப் பொருட்கள்.

·    உப்பு (கூட்டணிக் கட்சிகள்) – தேவையான அளவு: இது இருந்தால்தான் பிரியாணி மட்டுமன்றி எந்த அரசியல் சமையலும் ருசிக்கும்.

செய்முறை:

1. முதலில் வெங்காயத்தை (பொது மக்கள்) வாணலியில்  போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.  அவ்வப்போது நெய் (மாய்மாலப் பேச்சுகள்) சேர்க்கவும்.

2. பிறகு இஞ்சி – பூண்டு விழுதை (ஊழல்) கொட்டி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். ஊழல் நாற்றம் வெளியில் தெரியாத அளவுக்கு மசாலா சேர்த்துக் கிளறவும்.

3. தக்காளி (கட்சித் தொண்டர்கள்), பச்சை மிளகாய் (எதிர்க் கட்சிகள் மீதான தாக்குதல்) சேர்த்து வதக்கவும். தக்காளி மசிவது நாக்கில் எச்சில் ஊற வைக்கவும், மிளகாயின் கார நெடி மூக்கைத் துளைக்கவும் வேண்டும்.

4. பின்பு மாட்டுக்கறி (சிறுபான்மை ஓட்டு வங்கி), ஆட்டுக் கறி (பெரும்பான்மை ஓட்டு வங்கி) ஆகியவற்றைக் கொட்டிக் கலந்து வேகவைக்கவும்.

5. அரிசியை (வாக்குறுதிகள்) தனியாக வேக வைத்து எடுக்கவும். வதக்கிய மசாலாவில் அதை இட்டு, தேவையான அளவு உப்பு (கூட்டணிக் கட்சிகள்) சேர்த்து நன்றாகக் கிண்டவும்.

6. குறைந்த தீயில் வைத்து தம் போடவும். மேலே கொத்தமல்லி, புதினா (இலவசப் பொருட்கள், பணம்) தூவி அலங்கரிக்கவும்.

     சுவையான அரசியல் பிரியாணி தயார்.

     உண்பதற்கு முன் விருந்தாளிகளுக்கு மட்ட ரக குவாட்டரை (ஆபாசப் பேச்சாளர் – பேச்சாளினிகளின் சாக்கடைப் பேச்சுகள்)  குடிக்கக் கொடுக்கவும்.

     இந்த பிரியாணியை சாப்பிட்டு மயங்குபவர்கள் போடும் ஓட்டில், ஆட்டு மந்தை முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கொடி கட்டிப் பறக்கும்.

3. cuckold தங்கசிகாமணி கு.மு.க.

     கு.மு.க. எனப்படும் குடும்ப முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பிரமுகர்  தங்கசிகாமணிக்கு கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் கக்கோல்ட் சிகாமணி என்று காரணப் பெயர்.

cuckold என்ற சொல், மனைவி சோரம்போவதை ஏற்றுக்கொண்டு வாழும் கணவன் என்பதைக் குறிக்கும். இந்த இழிச் சொல்,  குயிலின் ஆங்கிலப் பெயரான cuckoo-விலிருந்து உருவானது. குயில்கள் தங்கள் முட்டைகளைப் பிற பறவைகளின் – குறிப்பாக, காக்கையின் – கூடுகளில் இட்டுவிட்டு விலகிவிடும். பிற பறவைகள் அல்லது காக்கைகள் அந்த முட்டைகளைத் தங்களுடையவையாகக் கருதி, குஞ்சு பொரித்து வளர்க்கும். இந்த அடிப்படையில், தனது மனைவி பிற ஆண்களுடன் சோரம் போய் அதன் மூலம் குழந்தைகள் பெற்றதை அறிந்தோ அறியாமலோ இருக்கிற கணவனுக்கும், மனைவி சோரம் போவதை அறிந்தும் அதற்கு ஆண்மையோடு எதிர்வினையாற்றாமல் ஏற்றுக்கொண்டிருக்கிற கணவனுக்கும் cuckold என்ற பெயராயிற்று.

சமூக, கலாச்சார நோக்கில் cuckold என்பது பேரவமானத்துக்குரியது. சில சமயங்களில் இது கணவனின் உடலியல் குறைபாடு, உளவியல் சிக்கல்கள் அல்லது விசித்திரமான பாலியல் ஆசைகளையும் வெளிப்படுத்தும். அதில் முக்கியமானது, மனைவியை இன்னொருவருடன் உடலுறவு கொள்ள வைத்து ரசிப்பது.

     கக்கோல்ட் தங்கசிகாமணியின் மனைவி பல ஆண்களுடன் தகாத உறவு கொண்டிருப்பவள். அவளது இரு மகன்களும் நிச்சயமாக தங்கசிகாமணிக்குப் பிறந்தவர்கள் அல்ல. எந்த ஆணுக்குப் பிறந்தவர்கள் என்பது அவளுக்கே தெரியாது. இதை தங்கசிகாமணியிடம் அவளே சொல்லியிருக்கிறாள். எனினும், தங்கசிகாமணி அந்தப் பையன்களைத் தனக்குப் பிறந்த பிள்ளைகள் என்பது போலவே வெளியுலகில் காட்டிக்கொண்டிருந்தார். புற உலகிற்கு இந்தக் கேவலம் தெரியாவிட்டாலும், வீட்டு வேலைக்காரர்கள், நெருங்கிய உற்றார் உறவினர்கள், நண்பர்களான கட்சிப் பிரமுகர்கள் ஆகியோருக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்குள் இது குறித்துப் பேசிச் சிரிக்கவும், அவரை இழிவுபடுத்திப் பேசவும் செய்வார்களே தவிர, அவரிடம் அது பற்றிப் பேசியதில்லை.

     தங்கசிகாமணிக்கு கட்சி செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டாடும் விதமாக நெருங்கிய கட்சிப் பிரமுக நண்பர்கள் ஐந்து பேருக்கு அன்று தனது சொகுசு பங்களாவில் மது விருந்து கொடுத்துக்கொண்டிருந்தார். விருந்துக்கூடத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. பிரமுகர்கள் மப்பும் மந்தாரமுமாக இருந்தனர்.

     முதியவர் கரு.எழில்குன்றம், “ஏப்பா,… உஞ் சம்சாரம் வேலி தாண்டி மேஞ்சு, பயிராகிட்டு* வந்து, ரெண்டு கெடேரிக் குட்டி போட்டுட்டா; ஒரு ஆம்பளையா இருந்துட்டு அதைய எப்புடியப்பா சகிச்சுட்டு இருக்கற?” எனப் பேச்செடுத்தார்.

     மற்ற நால்வரும் அவரைத் திகைத்துவிட்டு, சிகாமணியாரைப் பரிதாபித்தனர்.

     சிகாமணியார் அலட்டிக்கொள்ளவில்லை. மக்கள் அவரது முகத்தில் எருமைச் சாணியை  வீசி, அந்த ஒளிப்படமும், காணொளியும் வைரலானபோதே கிஞ்சித்தும் வெட்கப்படாதவர், பாதி ஊரறிந்த இந்த ரகசியம் பற்றியா அவமானப்படப் போகிறார்?

     “நம்மகிட்டயும் பல குத்தம் கொறைக இருக்கும். அதே மாற சம்சாரத்துகிட்டயும் இந்தக் கொறை இருக்குதுன்னு அனுசரிச்சுப் போயிட்டா, வாள்க்கை ஸ்மூத்தாப் போகும்ங்க…” அவர் சர்வ சாதாரணமாக சொன்னதைக் கேட்டு அனைவரும் துணுக்குற்றனர்.

“முளுக்க நனைஞ்சதுக்கப்பறம் முக்காடு எதுக்கு? உள்ளதைச் சொல்லீர்றனுங்க.  மேற்படி சமாச்சாரத்துல நான் கொஞ்சம் வீக்கு. சம்சாரத்துக்கோ அதுல அப்புடியொரு ஆசை, வெறி! 69, 77, 71-ன்னு வித விதமா அனுபவிக்க ஆசைப்படுவா. எனக்கு 69 மட்டும்தான் முடியும். மத்தது முடியாது…”

அதைக் கேட்டதும் எல்லோரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டனர்.

“அடப் பாவி…! இதனாலதான் உனக்கு அடிக்கடி நாக்கு உரிஞ்சுபோகுதா? நான் கூட, நாம கட்சி வளத்துன நாத்தம் புடிச்ச வரலாறையும், உன்னோட எச்சக்கலை நாயத்தையும் பேசிப் பேசித்தான் உனக்கு அப்புடி ஆகுதுன்னில்ல நெனைச்சேன்!” இராசஇராசசோழன் சொல்லவும் சிரிப்புகள் வெடித்தன.

“69 தெரியும். அது உலக ப்பேமஸாச்சே…! அதென்றா மாப்ள 77, 71 எல்லாம்?”  மு.சுடலையாண்டி வியப்போடு கேட்டார்.

“77-ங்கறது ஸ்பூனிங், மச்சா…! 71-ங்கறதும் ஸ்பூனிங்தான். அதுல எக்ஸ்ட்ராவா என்ன பண்ணணும்னா….” சிகாமணியார் விவரித்ததைக் கேட்டு கரு.எழில்குன்றத்துக்குக் குமட்டியது. எழுந்து ஓடிச் சென்று வாஷ் பேஷினில் வாந்தியெடுத்துவிட்டு வந்தார்.

ஆனால், அவர் வரும்போது மற்றவர்கள் அது குறித்து சிகாமணியாரைத் துருவித் துளைத்து விசாரித்துக்கொண்டிருந்தனர்.

“அட நாறப் பயலுகளா…! இப்புடியெல்லாமாடா பண்ணுவீங்க? இதுலயெல்லாமாடா சுகம் உங்குளுக்கு?”

எல்லோரும் ஆனந்தமாகச் சிரித்தனர்.

“பெருசு! நீங்க பளைய பஞ்சாங்கம். உங்குளுக்கு பஜனைல ஒரே பாட்டு, ஒரே ராகம்தான் தெரியும். எத்தனை ராகம் இருக்குது, எத்தனை தாளம் இருக்குதுன்னு தெரியுமா? டே, மாப்ள…! பெருசுக்கு சொல்லிக் குட்ரா…” என்றார் மு.சுடலையாண்டி.

சிகாமணியார் அதி உற்சாகத்தோடு மிஷனரி, டாகி, கௌகேர்ள் முதலான நிலைகளை விளக்கலானார்.

“இந்த மாற வித்தியாசமான பொசிஸனெல்லாம் எஞ் சம்சாரத்துக்கு நெம்பப் புடிக்கும். சும்மா சொல்லக் குடாதுங்க. இங்க்லீஷ் போர்னோக்காரிகளே அவகிட்டத் தோத்துத் தோப்புக்காரணம் போடோணும்…! அதுவும் கௌகேர்ள் பொசிஸன்ல பூந்து வெளையாடுவா! எனக்குத்தான் அந்தக் குடுப்பினை இல்லீன்னாலும், அவ கச்சேரிகள்ல ஒன் மேன் ஆடியன்ஸா பக்கத்துலயே இருந்து, கண் கொட்டாமப் பாத்து ரசிப்பேன்…”

அவர் புளகாங்கிதத்தோடு சொல்லிக்கொண்டிருக்க, கேட்டுக்கொண்டிருந்தவர்களில் மூவருக்கு ஏறியிருந்த போதை இறங்கிவிட்டது. இருவருக்கு, அரை பாட்டில் ப்ராந்தியை ராவாகக் குடித்த மாதிரி போதை ஏறியது.

“எஞ் சம்சாரம்கறதுக்காகப் பெருமையாச் சொல்லுலீங்க. பாலம், சேர் பொசிஸன், சிட்டிங், ஸ்டேன்டிங், நீலிங்னு பல வகைலயும் கலக்குவா…”

மற்றவர்கள் அது குறித்து ஆவலோடு விசாரிக்க, கரு.எழில்குன்றம் குறுக்கிட்டார்.

“கொஞ்சம் இரு, கொஞ்சம் இரு! ஆறு மாசம் முந்தி நீயி நம்ம பொதுக் கூட்டத்துல சொன்ன சிட்டிங் – ஸ்டேன்டிங் – நீலிங் கதை, அவுசாரி ஊட்ல நடந்ததில்லையா? உங்கூட்ல நடந்ததுதானா..???”

சிகாமணியிடமிருந்து உலக மகா கேவலமான இளிப்பு வெளிப்பட்டது.

*******

அடிக் குறிப்பு:

*பயிராகுதல் – கால்நடைகளின் சினைப்பிடித்தலுக்கு கொங்கு வழக்கு.


*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

The post மூன்று அரசியல் குறுங்கதைகள் first appeared on Nadukal.

வரலாறு என்பது கடந்தகாலம் மட்டுமல்ல – R.உமாமகேஸ்வரி

30 April 2025 at 18:44
R.உமாமகேஸ்வரி குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்; பத்திரிக்கையாளர். தமிழ்ப் பகுதியின் அரசியல் சமூகம் பண்பாடு சார்ந்த ஆய்வுகள் நிறைய ஆங்கிலத்திலேயே வெளியாகியிருக்கின்றன. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். இந்த வரிசையில் தமிழ்ப் பகுதி குறித்த கலாச்சார ஆய்வாளர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் உமாமகேஸ்வரி. ஆனால் இவர் தமிழ் பின்புலத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழகம் பற்றி எழுதியிருக்கும் ஆய்வுகளுள் சமகால அரசியல் அடையாளங்கள் பற்றியதே அதிகமாக இருக்கிறது. இப்பின்னணியில் விதிவிலக்காக கலாச்சார ஆய்வில் ஈடுபட்டவர் உமாமகேஸ்வரி. எனினும் இவர் பெயர் தமிழ்நாட்டு […]

நாட்டார் இசை ஆன்மிகமானது – தேஜாஸ்ரீ இங்கவ்லெ

30 April 2025 at 18:43
நாட்டார் இசை என்று சொன்ன உடனே நமக்கு மெல்லிய இசை நினைவுக்கு வருவது இல்லை. கட்டுப்படுத்தப்படாத நிலையில் வெளிப்படும் மனித உணர்வுகள் என்றவுடனும் நமக்கு முதலில் உக்கிரமான வன்மையான இசை கொண்ட பாடல்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நாட்டுப்புற இசை (கிராமம்), கானா பாடல்கள்(நகரம்) என இரு பிரிவு பாடல்களிலும் இத்தகைய தன்மையான பாடல்களே இன்று மக்கள் மத்தியில் பரவலாக கவனத்தில் உள்ளது. இந்திய நாட்டார் இசை மரபு, பக்தி இசை மரபு ஆகிய இரண்டையும் நோக்கினால் […]

💾

💾

💾

கணிதத் தர்க்கங்களின் கவிதாயினி -வெங்கட்ரமணன்

“தூய கணிதம், தனக்கேயான வழிகளில், தர்க்கபூர்வமான கருத்துகளால் ஆன கவிதை” -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்(எம்மி நூர்த்தெரின் இரங்கல் கடிதத்தில்) கணிதம் தர்க்கங்களினால் யாக்கப்பட்ட கவிதை என்றால் அதன் முதன்மை கவிதாயினி எம்மி நூர்த்தெர்-ஆகத்தான் இருக்கமுடியும்.  நூர்த்தெர் ஒரு முறை, “ஒருவர் முதலில் a ≤ b என்றும் பின்னர் b ≤ a என்றும் காட்டி a, b எனும் இரண்டு எண்களின் சமத்துவத்தை நிரூபித்தால், அவர் அவற்றின் சமத்துவத்தை நிரூபித்திருக்கவில்லை;  உண்மையில் சமத்துவம் என்பதற்கான ஒரு வரையறையை […]

ஆத்துக்குரி மொல்லா – எம். கோபாலகிருஷ்ணன்

(இராமயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி) ‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாறனதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதைக் குறித்து எழுதலாம், வாசிக்கலாம், நேசிக்கலாம்.’ * தெலுங்கில் புகழ்பெற்ற இராமாயண காவியங்கள் இரண்டு. முதலாவது, கவி அரங்கநாதா எழுதியது. இரண்டாவது, பாஸ்கரா என்பவரால் எழுதப்பட்டது. இவ்விரண்டுக்கும் அடுத்ததாக போற்றப்படுவது மொல்லா இராமாயணமே. தெலுங்கில் இன்று பரவலாகவும் குறைந்த விலையிலும் அதிகம் […]

தோற்கடிக்கப்பட்ட அன்னை – ஜெயமோகன்

30 April 2025 at 18:40
சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு ஐயம் இன்றைய வாசகனைக் குடையும். அன்றைய பாலியல் ஒழுக்கம் எத்தகையது: அன்று ஆண்பெண் உறவு மிக இறுக்கமற்று இருந்ததாகவே சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. களவு, உடன்போக்கு, பரத்தைமை என்ற மூன்று கருக்கள் இன்றைய தமிழ் ஒழுக்கச்சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமானவை. சங்க காலகட்டம் இருமுறை மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் சோழர்கால கட்டத்தில் ஒரு முறை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மறுமுறை. இரு தருணங்களிலும் அது விரிவான உரைகள் மூலம் மறுவாசிப்புக்கு […]

வசந்தத்தின் இரவில்மலரும் நிலா – பா.ரேவதி

30 April 2025 at 18:39
(இஷூமி ஷிகிபு கவிதைகள் குறித்து…) நம் பழந்தமிழ் இலக்கியங்களில் மிக தொன்மையானது சங்க  இலக்கியம். சங்க காலம் என்று வரையறுக்கப்படும் பொ.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. 4 ஆம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால கட்டத்தில் கிட்டத்தட்ட 475 கவிஞர்கள்  சங்கப் பாடல்களைப்  பாடியுள்ளனர். அதில் நாற்பதுக்கும் மேறபட்டவர்கள் பெண்பாற் புலவர்கள். வாழ்வியல் குறித்தும், கலை வெளிப்பாடு குறித்தும், பெண் கவிதை மொழி குறித்தும் அப்போது நிலவிய மதிப்பீடுகளை இவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. நம் சங்ககால […]

முனித்துறை முதல்வியர் – வீர. ராஜமாணிக்கம்

தை நீராடல் குறித்து நல்லந்துவனார் எழுதிய பரிபாடலில் வரும் பாடல் ஒன்று… கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்துஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்துமாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரைவிரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்பவெம்பா தாக வியனில வரைப்பெனஅம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்பனிப்புலர் பாடிப் பருமண் வருவியன்ஊதையூர் தர வுறைசிறை வேதியர்நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்றையன் மகளிர் ஈரணி புலர்த் தரவையை நினக்கு மடைவாய்த்தன்று.மையாடல் ஆடல் மழ புலவர் […]

பீலிபெய் சாகாடும்…? – சக்திவேல்

30 April 2025 at 18:37
(அனுராதா ஆனந்த் – மயிற்பீலி சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து) 1 கடைசியாக ஒரு கூழாங்கல்லை எடுத்து பார்த்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அதன் உறுதியும் மென்மையும் எடைமிக்கதுமான தன்மையை கைகளால் வருடி வியப்படைந்த தருணத்தை நினைவு கூர்கிறீர்களா? குழந்தைமை மாறாத சிறு வயதில் அப்படியான கூழாங்கற்களை ஆற்றங்கரையில் இருந்து பொறுக்கி வந்து சேர்த்து வைக்கும் பழக்கம் பல பிள்ளைகளுக்கு உண்டு. கூழாங்கற்கள் வியப்பில் ஆழ்த்துவது ஏன்? கற்கள் என்று நாமறிந்த வரையறைக்கப்பால் இருப்பதால். கூழாங்கற்களை முதல் முறை எடுக்கும் […]

வீதிகளில் பாடுபவர்கள் – மதுமிதா

30 April 2025 at 18:36
(குர்அதுல்ஐன் ஹைதரின் ‘லக்னோ வீதிகளில் பாடுபவர்கள் மற்றும் பிற கதைகள்’ என்ற தொகுப்பை முன்வைத்து) குர்அதுல்ஐன் ஹைதர் உருது மொழியின் தலை சிறந்த இலக்கியவாதி. அவருடைய பல ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்தவர். “River of Fire” (தமிழில் அக்னி நதி, ஆக் கா தரியா – உருது மூலம்) என்ற அவரது நாவல் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. கலாச்சார மாற்றங்களையும், கால மாற்றங்களையும், அவை மனித வாழ்வின் மீது செலுத்தும் தாக்கத்தையும், அதையும் தாண்டி மாறாமல் […]

மூடுண்ட சமூகங்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகள் – வயலட்

30 April 2025 at 18:35
பத்மபாரதியின் திருநங்கையர் சமூக வரைவியல் என்ற நூல் முதல் பதிப்பாக 2013இல் வெளியாகியிருக்கிறது. 2005இல் எழுதிய சிறிய ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட வடிவம் இது என்கிறார். 2007ஆம் ஆண்டு லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’ என்ற சுயசரிதை நூல் வெளியானது. தமிழ் இலக்கிய/சமூக பரப்பில் ஸ்மைலியின் இந்த நூல் பெருமளவு முக்கியமானது. அடையாளம் சார்ந்த பிரச்சினைகள், அனுபவங்கள் என்பதைக் கடந்து தமிழில் முதல்முறையாக ஒரு திருநங்கையின் குரல் தனிநபராக ஒலித்தது ஸ்மைலியின் நூலில் என்றே சொல்லலாம். எனவே […]
❌