Normal view

Received before yesterday

நினைவில் நிறுத்துவோம் : சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்

சிக்கனம் – தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.
ஒவ்வொரு பைசாவையும் யோசித்துச் செலவிட்ட பெரியார், அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றபோது, அவர் பிழைத்து நலமுடன் வரவேண்டும் என்பதற்காக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருந்தார்.
கொள்கை பரப்ப, பத்திரிகைகள் நடத்துவதில் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆதரவற்ற, எளிய பிரிவுப் பிள்ளைகளுக்குக் கல்வியும், உணவும், இருப்பிடமும் கிடைக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுக் கல்வி நிலையங்களும், விடுதிகளும் அமைத்தார்.

இங்குதான் பிஞ்சுகள் சிக்கனம் என்றால் என்ன என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்குச் செலவு செய்ய வேண்டும். அதைத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும். தேவைக்குக் கூட செலவு செய்யாமல் முடிந்து (சேமித்து) வைத்தால் அதற்கு கஞ்சத்தனம், கருமித்தனம் என்று பெயர்.
சிக்கனம் வேறு; கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் வேறு. தேவைக்குச் செலவு செய்ய வேண்டும் என்னும் போது நாம் விருப்பப்படுவதற்கெல்லாம் செலவு செய்தல் என்று பொருள் அல்ல. ஒரு மனிதனின் ஆசை, விருப்பங்கள் அளவற்றவை. ஒன்று நிறைவேறினால் இன்னொன்று வரும். அதுவும் நிறைவேற்றப்பட்டால் மற்றொன்று வரும். ஆசைக்கு அளவில்லை; விருப்பங்கள் எல்லையற்றவை.

சரியானதைத் தேர்வு செய்தல்:
எண்ணற்ற விருப்பங்கள், தேவைகள் நமக்கு இருப்பினும் அதில் எது சரியானது, எது தப்பானது என்று முதலில் முடிவு செய்ய வேண்டும். பழம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் சரியானது, உடலுக்கு நலம் தருவது. புகைபிடித்தல், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் தப்பானது, தீயது, உடலுக்குக் கேடு தரக் கூடியது. எனவே, நல்லதைத் தேர்வு செய்தால் நமக்கு நன்மை கிடைப்பதோடு செலவும் குறையும். இது சிக்கனத்தைக் கடைப்பிடிக்கப் பின்பற்றும் வழிகளில் ஒன்று.
விரயம் (வீண்) செய்யாமல் இருத்தல்:
உணவு, உடை, நீர், இயற்கை வளங்கள் எதுவாயினும் அவற்றை ஒரு சிறு அளவு கூட வீணடித்தல் கூடாது. தண்ணீர்தானே என்று அதைக் கண்டபடி, தேவைக்கும் அதிகமாகச் செலவிடுவது குற்றம்; இந்தச் சமுதாயத்திற்கு நாம் செய்யும் கேடு.

திட்டமிடல்:
திட்டமிட்டுச் செய்தால் எதுவும் வீணாவதைத் தடுக்க முடியும். எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன், அதை எந்த அளவிற்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று திட்டமிட்டுப் பயன்படுத்தினால் அது வீண் ஆகாது. திட்டமிடாமல் பயன்படுத்தினால் வீண் ஆகும். 5 பேருக்குச் சமைக்கிறோம் என்றால் அதற்கு ஒவ்வொரு பொருளையும் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று கணக்கிட்டுப் பயன்படுத்தினால் வீணாகாது. கணக்கிடாமல் பொருளைப் பயன்படுத்தினால் சமைத்தவை மிகுந்து பாழாகும்.

நேரச் சிக்கனம்:
பொருள்களைச் சிக்கனமாகச் செலவிடுவது போலவே நேரத்தையும் சிக்கனமாகச் செலவிட வேண்டும். அதற்கு நேர மேலாண்மையும், திட்டமிடலும் கட்டாயம். படிக்கின்ற மாணவர்களுக்கு நேரச் சிக்கனம் கட்டாயம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். விளையாடுவதற்கு எவ்வளவு நேரம், தொலைக்காட்சி பார்க்க எவ்வளவு நேரம், குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசி மகிழ எவ்வளவு நேரம், உறங்க எவ்வளவு நேரம் என்று கணக்கிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நேர வீணடிப்பு நிகழாது. இல்லையென்றால் நேரம் பற்றா நிலை ஏற்படும். விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் அதிக நேரம் செலவிட்டு விட்டு, படிக்க நேரம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவது நேரக் கணக்கீடும், ஒதுக்கீடும் செய்யாததால் வரும் விளைவாகும்.

எழுத்திலும் பேச்சிலும் சிக்கனம்:
எந்தவொன்றையும் எவ்வளவு சுருக்கமாகவும் விளக்கமாகவும், ஆழமாகவும், செறிவாகவும் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். மாறாக, தேவையற்ற பேச்சும் எழுத்தும் சலிப்பை ஏற்படுத்துவது போலவே, வெறுப்பையும் ஏற்படுத்தும். இன்றைக்குச் சமூக ஊடகங்களில் கூட இரண்டு நிமிடம், அய்ந்து நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்வது – பின்பற்றப்படுவது இந்த உண்மை அறிந்து தான். வள்ளுவர் அறிவார்ந்த, ஆழமான, செறிவான கருத்துகளை இரண்டு அடிகளில் கொடுத்துள்ளதைப் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டும். சொற்சிக்கனத்தில் உலகிலேயே சிறந்தவர் வள்ளுவர் தான். அவரை மாணவர்கள் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

சிக்கனமின்மையின் பாதிப்பு:
திட்டமின்றி, சிக்கனமின்றிச் செலவு செய்வதால் இழப்பு மட்டும் அல்ல; பாதிப்பும் ஏற்படும். அய்ந்து வரிகளில் பதில் எழுத வேண்டிய வினாவிற்கு 20 வரிகளில் பதில் எழுதினால் நேர வீணடிப்பு, உழைப்பு வீணடிப்பு மட்டுமல்ல, தேர்வு எழுதும் மாணவனுக்குப் பாதிப்பு ஏற்படும். அய்ந்து வரியில் எழுத வேண்டிய பதிலுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டு விட்டதால், விரிவான விடை எழுத வேண்டிய கேள்விகளுக்கு நேரம் போதாமல் போகும். அதனால் மதிப்பெண் இழப்பு ஏற்படும். எனவே சிக்கனமின்மை இழப்பை மட்டும் தராது, பாதிப்பையும் தரும்.
எனவே, எந்தவொன்றிலும் சிக்கனமாக (தேவையான அளவு) பயன்பாடு இருக்க வேண்டியது கட்டாயம். இதைப் பிஞ்சுகள் இளம் வயதில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

வருவாய் அறிந்து செலவு
சிக்கனம் பற்றி நாம் அறியும்போது இக்கருத்தையும் ஆழமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணக்கார வீட்டுக் குழந்தை அதிகம் செலவிடுவதைப் பார்த்து, ஏழை வீட்டுக் குழந்தை அதிகம் செலவு செய்யக் கூடாது.
பணக்காரப் பையன் மாதுளை, ஆப்பிள் சாப்பிடுகிறான் என்றால், ஏழையும் செலவு செய்ய முடியாது. அப்போது கீரை, நெல்லிக்காய், சப்போட்டா, கம்பு, கேழ்வரகு போன்ற விலை மலிவான, ஆனால் சத்தான உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக நன்மை பெற முடியும்.
சிக்கனம் செய்வதே பின்னாளில் எந்த அவசியத் தேவைக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ளத்தான்.
சிக்கனத்தில் மிக முதன்மையாக நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியது, வருவாய் குறைவு என்று கவலைப்படாது, செலவை வருவாய்க்குள் செய்யத் திட்டமிட வேண்டும் என்பது தான். இதையே வள்ளுவர்,
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
என்றார். சிந்தையில் கொள்ளுங்கள்.

The post நினைவில் நிறுத்துவோம் : சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம் appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

அடிமைத்தளை மனித இனத்துக்கு எதிரானது, அதை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை முதலில் ஆங்கிலேயர்களுக்குத்தான் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. 1772இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வழக்கொன்றில் அந்த மண்ணில் வசிக்கும் அடிமையின் உரிமைகள் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது. 1778இல் ஸ்காட்லந்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் 1772ஆம் ஆண்டின் வழக்குத் தீர்ப்பை முன்னோடியாகக் கொண்டு வேறொரு ஆப்பிரிக்க அடிமைக்கு விடுதலை வழங்கப்பட்டது.

1787ஆம் ஆண்டு மே 22ஆம் நாளில் அடிமை வாணிக ஒழிப்புச் சங்கம் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குவேக்கர்கள் என அழைக்கப்பட்ட சமூகத்தின் நண்பர்கள் என்ற கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். அமைதியான முறையில் எந்த வன்முறையுமின்றிப் பணியாற்றிய இந்தச் சங்கம் பின்னாளில் தோன்றிய மற்ற இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அடிமை வாணிகத்தின் தீமைகள் குறித்தும் ஆப்பிரிக்க மக்களின் துயர நிலை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் சொன்னது. சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகத்தைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

1806ஆம் ஆண்டில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் அடிமைகளுக்கு மறுவாழ்வளிக்கவேண்டும் என்று எண்ணம்கொண்டன. அடிமை வர்த்தகத்தோடு தங்கள் நாடுகளுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அறிக்கை வெளியிட்டன. அதையொட்டி பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகச் சட்டத்தை 1807ஆம் ஆண்டு இயற்றியது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கண்காணிப்புப் படைகளையும் அமைத்தது. ஆங்கிலேயப் பேரரசு தன்னுடைய காலனி நாடுகளில் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் அடிமைத்தளையை மட்டுப்படுத்தவும் காலப்போக்கில் ஒழிக்கவும் 1823இல் சங்கமொன்று அமைக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில் அடிமைத்தளையை ஒழிக்கும் சட்டத்தை 1833இல் இயற்றியது. இந்தியாவில் அடிமைப்படுத்தல் தொன்றுதொட்ட வழக்கமாக நிலவியதால் 1838ஆம் ஆண்டில்தான் அடிமைத்தளையை ஒழிக்கும் பணியை நிறைவேற்ற முடிந்தது. இந்திய அடிமைச் சட்டத்தை 1843இல் நிறைவேற்றியது.

உலகளவில் நடைபெற்ற அடிமை வாணிகத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு 41% வரை இருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பு நடவடிக்கைகளினால் அடிமை வாணிகம் பெரும்பின்னடைவைச் சந்தித்தது. காலனி நாடுகளுடன் தான் கொண்டிருந்த அரசியல் உறவின்மூலம் அடிமை வாணிகத்தை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது இங்கிலாந்து. ஒப்பந்தத்தை மீறும் கப்பல்களைத் தடைசெய்யும் உரிமையையும் பெற்றது.

0

அடிமைத்தளை ஒழிப்பில் முக்கியப் பங்கு வகித்த எளிமை, சமத்துவம், அமைதி, சமூக நீதியைக் கடைபிடிப்பதில் உறுதியாகச் செயல்பட்டனர். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றுவதற்கான தூண்டுகோலாகச் செயல்பட்டனர். இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே 1670களில் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பார்படோஸ் தீவில் அடிமைகளை நல்லவிதமாக நடத்தவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். 1688இல் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட புதிய பிரிட்டிஷ் காலனியான பென்சில்வேனியாவில் நிலவிய அடிமைத்தளையை வெளிப்படையாக எதிர்த்தனர். ஜெர்மன்டவுன் என்ற ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் அடிமைத்தளைக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

அடிமைத்தளையை மறுத்து அமெரிக்காவில் பொதுவெளியில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கை இதுதான். உலகளவில் மனித உரிமையை வரையறுத்த முதல் ஆவணமும்கூட. அந்தக் காலகட்டத்தில் இந்தச் செயல்பாடு பரவலாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும் அடிமைத்தளை அறத்தின்பால் சார்ந்ததா என்ற கேள்வியை பென்சில்வேனியாவைச் சேர்ந்த குவேக்கர்களிடையே எழுப்பியது. அடிமை ஒழிப்பு குறித்த எழுத்துக்களும் செயல்பாடுகளும் தீவிரமடைந்தன.

1740ஆம் ஆண்டு முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த குவேக்கர்கள் அடிமை வாணிகத்துடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர். 1775இல் பென்சில்வேனியா அடிமை ஒழிப்புச் சங்கம் உருவானது. அடிமை வாணிகத்தில் ஈடுபடுவது ஒழுக்கக்கேடான செயல் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தினர். வட கரோலினா மாகாணத்தில் அடிமைகளை விடுவிப்பது தடை செய்யப்பட்டிருந்ததால் அங்கே வசித்த குவேக்கர்கள் வேறு மாகாணங்களுக்குச் சென்று அடிமைகளை விடுவித்தனர்.

அடிமைகள் தப்பிச் சென்று விடுதலைபெற உதவும் ’நிலத்தடி இருப்புப்பாதை’யை அமைத்து அதை வழிநடத்துவதில் குவேக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். வட கரோலினாவில் வசித்த லீவை காஃபின் இளம்பருவ முதலே தப்பியோடும் அடிமைகளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார், பின்னாளில் ஒஹையோ-இண்டியானா மாகாணங்களின் நிலத்தடி இருப்புப்பாதையின் தலைவராக விளங்கினார். ஹாரியட் டப்மனும் இந்த நிலத்தடி இருப்புப்பாதையைப் பயன்படுத்திப் பல அடிமைகள் தப்பிச்செல்ல உதவினார்.

ஈலையஸ் ஹிக்ஸ் என்ற குவேக்கர் ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால் உருவான பொருள்களைப் பற்றிய நூலொன்றை 1811இல் எழுதினார். அப்படித் தயாரிக்கப்பட்ட பொருட்களை விலைகொடுத்து வாங்குவது தவறு என்று வலியுறுத்தினார். இவர்களைப்போல பல குவேக்கர்கள் அடிமைகளின் மேன்மைக்காகத் தன்னலமின்றி உழைத்தனர். இதனால் கோபமடைந்த அடிமை உரிமையாளர்கள் குவேக்கர்களைக் கொல்லவும் தயங்கவில்லை. குவேக்கர்கள் உயிருக்குப் பயந்து அமெரிக்காவின் மேற்குப் பகுதிக்குக் குடிபெயரவேண்டியிருந்தது.

0

என்லைட்டன்மெண்ட் எனப்படும் அறிவொளிக் காலம் தொடங்கி அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை அமெரிக்கர்களிடையே மேலோங்கியது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மஸசூஸெட்ஸ் மாகாணம் அடிமை வாணிகம் சட்டத்துக்குப் புறம்பானது என 1772இல் அறிவித்தது. 1764 முதல் 1774 வரையில் மஸசூஸெட்ஸ் மாகாண நீதிமன்றத்தில் சுமார் 17 அடிமைகள் தங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள்.

இதற்கிடையில் 1775இல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 13 அமெரிக்க மாகாணங்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடின. அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்கியது. 1783 வரையில் நடைபெற்ற இந்தப் போரின் முடிவில் பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து 13 மாகாணங்களும் விடுதலை பெற்றன. எல்லா மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவானது. அதன் முதல் அதிபராகப் பதவியேற்றார் ஜார்ஜ் வாஷிங்டன்.

1794இல் அமெரிக்கக் கப்பல்களை அடிமை வாணிகத்துக்குப் பயன்படுத்துவதும் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அடிமைகளைக் கொண்டுசெல்வதும் தடை செய்யப்பட்டன. ஆனால் இதை நடைமுறைப்படுத்த எந்த முன்னெடுப்பும் இல்லை என்பதால் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவருவது தொடர்ந்து நடைபெற்றது. அடிமை ஒழிப்புக் குழுவினரின் இடைவிடாத முயற்சியினால் 1804இல் அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் அனைத்திலும் அடிமை வாணிகத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. குறிப்பிட்ட வயதையடைந்ததும் அடிமைகள் ஒப்பந்தக்கூலிகளாக மாறிவிடுவர்.

1808இல் அமெரிக்கப் பாராளுமன்றம் அடிமைகள் இறக்குமதி தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால் உள்நாட்டில் அடிமைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து அதில் எதுவும் சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அடிமைத்தளை தொடர்ந்து நடைமுறையிலிருந்ததால் அடிமைகளில் பலர் கனடாவுக்குத் தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 1812இல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லையென்றாலும் அமெரிக்கர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தித் தேசப்பற்றை விதைத்தது.

1793, 1850ஆம் ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தப்பியோடும் அடிமைகள் சட்டம் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்க முயலும் அடிமைகளைச் சிறைப்பிடித்து மீண்டும் உரிமையாளர்களிடமே சேர்ப்பிக்கவேண்டும் என்றது. இதை அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் கடுமையாக எதிர்த்தன. தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைகள் வடக்கு மாகாணங்களுக்கும் அங்கிருந்து கனடாவுக்கும் தப்பிச்செல்ல முயன்றனர்.

அமெரிக்காவிலிருந்த அடிமைகளின் மொத்த எண்ணிக்கை 40 லட்சம். அவர்களில் 95 சதவீதத்தினர் தெற்கு மாகாணங்களில் வசித்தனர். அடிமைத்தளையை ஆதரிக்கும் சட்டங்களையும் செயல்களையும் தெற்கு மாகாணங்கள் பின்பற்றின. அடிமை ஒழிப்பு இயக்கத்தினால் தங்களின் விவசாயத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பின. அடிமை ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்த 11 தெற்கு மாகாணங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து தாங்கள் பிரிந்துசெல்வதாக அறிவித்தன. ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதை ஏற்கவில்லை. அந்தப் பிரிவை எதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861 முதல் 1865ஆம் ஆண்டு வரையில் நடந்தது. தெற்கு மாகாணங்கள் தோல்வியடைந்து மீண்டும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்டன. அடிமைத்தளையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

0

அமெரிக்காவின் விளைநிலங்களும் பண்ணைகளும் அடிமைகளின் உழைப்பை நம்பியிருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்தது. கிழக்குக் கடற்கரையில் வசித்த ஆப்பிரிக்க அடிமைகள் பால்டிமோர், நியூ ஆர்லியன்ஸ் போன்ற மேரிலாண்டின் மற்ற பகுதிகளுக்கும் லூசியானா, கெண்டகி, மிஸ்ஸிசிப்பி போன்ற தெற்கு மாகாணங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் விற்பனையாளர்களும் இடைத்தரகர்களும் ரொக்கமாகப் பணம்கொடுத்து அடிமைகளை வாங்கிச் சென்றனர். அடிமைகள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர்.

‘10 முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் அடிமைகள் 50 முதல் 100 பேர் வரை தேவை. சந்தை விலைக்கும் அதிகமாக உடனடி ரொக்கம் கொடுக்கப்படும்.’

லூசியானாவைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 12 முதல் 25 வயது வரையிலான அடிமைகளுக்கு நல்ல விலை தருவதாக விளம்பரம் செய்தார். கெண்டகியைச் சேர்ந்த ஜேம்ஸ் காக்ஸ் 6 மாதம் முதல் 31 வயது வரையிலான 38 குழந்தைகள், பெண்கள், ஆண்களை ஜான் ஹேன்ஸிடமிருந்து 6610 அமெரிக்க டாலருக்கு வாங்கினார். குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து விற்கும் அவலமும் நிகழ்ந்தது. இதுதவிர சிறிய நில உரிமையாளர்களும் நேரடியாகத் தாங்களே வந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். நேரடியாக வாங்கினால் 400 டாலர் என்றால் தரகர்மூலமாக விற்பனைக்கு வரும் அடிமைகளுக்கு 800 டாலர்வரை விலைகொடுக்க நேரிடும்.

அடிமை உரிமையாளர்களில் சிலர் தங்களின் கோட்டத்தைத் தாண்டியோ மாகாணத்தைத் தாண்டியோ விற்பதற்குத் தயங்கினர். தங்களின் அடிமைகளுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என்ற எண்ணமும் இரக்க குணமும் காரணம். மேலும் உறவுகளைப் பிரிந்து தூரமான இடங்களுக்குச் செல்லும் அடிமைகள் துயரத்துக்கு ஆளாவர்கள், அவர்களின் உழைப்புத்திறன் குறையும் என்று நினைத்ததும் காரணம்.

அடிமைகளை விற்பது தெரிந்தால் ஊருக்குள் தங்கள் பெயர் கெட்டுப் போய்விடுமென நினைத்து அடிமைகள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற பொய்யைக் கசியவிட்டார்கள் சிலர். ஆனால் சத்தமில்லாமல் அடிமைகளையும் கூடவே அடிமையல்லாதவர்களையும் சேர்த்தே வேறு இடங்களில் விற்றார்கள்.

எட்வர்ட் ப்ராடஸுக்கு குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது. பென் ராஸ் குடும்பத்தினரும் அவர்களின் உறவினர்களில் பலரும் ஏலத்தில் விடப்பட்டனர் அல்லது மற்ற வியாபாரிகளுக்கு விற்கப்பட்டனர். செலவுகளைச் சமாளிப்பதற்காக ஹாரியட்டின் மூத்த சகோதரியான மரியா ரிட்டியும் சகோதரன் ஜேம்ஸும் வேறொருவருக்கு விற்கப்பட்டனர். ஏற்கெனவே தந்தை பென் ராஸிடமிருந்து பிரிந்து வாழ்ந்த குழந்தைகள் இப்போது தாயிடமிருந்தும் உடன்பிறந்தவர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டனர்.

அடுத்து லீனா, சோஃப் என்ற ஹாரியட்டின் இன்னும் இரண்டு சகோதரிகளை வேறு மாகாணத்துக்கு விற்றார் எட்வர்ட். வீட்டைத் திரும்பிப்பார்த்து அழுது அரற்றியபடி அவர்களிருவரும் அழைத்துச்செல்லப்பட்ட காட்சி சிறுமி மிண்டியின் மனதில் பதிந்துபோனது. பொதுவாக அடிமைகளை விற்கும்போது நீதிமன்றத்தில் புதிய உரிமையாளரின் பெயருக்கு அவர்களைப் பதிவுசெய்வது நடைமுறை. ஆனால் எட்வர்ட் வரி கட்டாமல் இருப்பதற்காக அதைச் செய்யவில்லை.

மிண்டியின் இன்னொரு சகோதரிக்குத் திருமணம் முடிந்து இரண்டு மாதக் கைக்குழந்தையோடு இருந்தாள். அவளையும் ஜியார்ஜியா மாகாணத்துக்கு விற்க ஏற்பாடு செய்தான் எட்வர்ட் ப்ராடஸ். அந்தச் சகோதரியின் கணவன் தனக்குத் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த மனிதரும் உன் மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை, பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் சகோதரி வந்துசேர்ந்ததும் அந்தப் பெரிய மனிதர் எட்வர்டுக்குத் தகவல் சொல்லிவிட்டார். எட்வர்டும் தாயை மாத்திரம் பிரித்து ஜியார்ஜியா மாகாணத்துக்கு அனுப்பிவிட்டான்.

ரிட் ராஸுக்கு தன் குடும்பத்தினரைப் பிரித்த எட்வர்டின் மேல் கோபமிருந்தாலும் அப்போதைக்கு எதுவும் செய்யமுடியவில்லை. சில ஆண்டுகள் கழித்துத் தன்னுடைய இளைய மகன் மோசஸை விற்பனைசெய்தபோது அதைத் தடுக்க முயற்சி செய்தார். மோசஸை வாங்கியவர் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அவனை அழைத்துச் செல்வதற்காக எட்வர்டின் பண்ணைக்கு குதிரை வண்டியில் வந்தார். வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மோசஸை குதிரையைப் பிடித்துக்கொள்ள கூப்பிட்டான் எட்வர்ட். ஆனால் மோசஸை விற்கப் போகிறார்கள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு மகனுக்குப் பதிலாக ரிட் வந்தார்.

உரிமையாளர் பணத்தை எண்ணுவதைப் பார்த்த ரிட் பையனை எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டார். எட்வர்ட் பதிலேதும் சொல்லாமல் குடிக்கத் தண்ணீர் எடுத்துவரச் சொன்னான். ரிட் போனதும் மீண்டும் மோசஸை உரத்த குரலில் கூப்பிட்டுக் குதிரையை வண்டியில் பூட்டுமாறு சொன்னான். மறுபடியும் மகனுக்குப் பதில் ரிட் வந்து என்ன வேண்டுமெனக் கேட்டார். உன்னைக் கூப்பிடவில்லை மோசஸைத்தான் கூப்பிட்டேன் என்று சொன்னான் எட்வர்ட். மூன்றாவது முறை மோசஸைத் தேடி தானே விவசாய நிலத்துக்கு வந்தான் எட்வர்ட். ஆனால் ரிட் தன்னுடைய உறவினர்களின் உதவியுடன் அவனை யாருக்கும் தெரியாத இடத்தில் சுமார் ஒரு மாத காலத்துக்கு ஒளிந்துகொள்ளச் செய்தார்.

அடிமைகளை வாங்கவரும் வாணிகர்கள் அந்த ஊரிலேயே ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து மொத்தமாகப் பல அடிமைகளை வாங்கிய பிறகு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்புவது வழக்கம். அதற்குள் எப்படியும் மோசஸைக் கண்டுபிடித்து ஜியார்ஜியாவுக்கு அனுப்பிவிடலாம் என்று முடிவுசெய்து வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் இருந்தான் எட்வர்ட். ஆனால் ரிட்டும் அவருடைய சமூக வலைப்பின்னலைச் சேர்ந்தவர்களும் மோசஸை இப்படி ஒளித்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

எட்வர்டிடம் விசுவாசமாக இருக்கும் இன்னொரு வேலையாள் மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் மோசஸ் ஒளிந்திருப்பதாகத் தகவல் சொன்னான். மோசஸைப் பிடிப்பதற்காக அங்கே சென்றபோது சிறுவன் தப்பிச்சென்றுவிட்டான். மீண்டும் இன்னொரு வெள்ளைக்காரரை ரிட்டின் குடியிருப்புக்கு அனுப்பிவைத்தான் எட்வர்ட். வாசலில் நின்றபடி சுருட்டைப் பற்றவைக்க நெருப்பு கேட்ட அந்த வெள்ளைக்காரரைப் பார்த்ததும் எதற்காக வந்திருக்கிறார் என்பது ரிட்டுக்குத் தெரிந்துவிட்டது. என் மகனைப் பிடிப்பதற்கு யாராவது வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தால் மண்டையைப் பிளந்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர்களும் பயந்து ஓடிப்போயினர். இப்படியே பல உத்திகளைச்செய்து அந்த ஜியார்ஜியா வாணிகர் ஊர்திரும்பும் வரையில் மோசஸைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

தன்னுடைய உரிமையாளரையும் அந்தப் பகுதியின் பெரிய மனிதர்களில் ஒருவரையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்றார் ரிட். தனது குழந்தைகளை ஒவ்வொருவராக இழந்த துயரத்தில் உயிரையும் பணயம் வைத்துத்தான் இதைச் செய்தார். இருந்தாலும் தானும் தன் குடும்பத்தினரும் எட்வர்டின் சொத்துகள் என்பதும் தங்களை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதும் தெரிந்திருந்தது.

சிறுமி மிண்டியையும் மற்ற குழந்தைகளையும் அவ்வப்போது வேறு உரிமையாளர்களின் வீட்டில் பணிசெய்ய அனுப்பிவைத்து அதற்கான விலையைப் பெற்றுக்கொள்வான் எட்வர்ட். தன்னருகில் இருக்கும் வரையில்தான் ரிட்டினால் மிண்டியைப் பாதுகாக்க முடிந்தது. பணியாற்றி இடத்தில் மிண்டியைச் சிலர் சாட்டையால் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். அவளது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாகக் கொடூரமாக நடந்துகொண்டனர்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

வனத்துறையில் கால்நடை வைத்தியர் வேலைக்கு டாக்டர் கே விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரிதான் என்று நாம் பார்த்தோம். இந்தச் சூழ்நிலையில், நாம் கம்பத்தில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லாமல் விட்டால் இந்தப் பகுதி நிறைவடையாது. ஏனென்றால், போன வருடம் பாந்தவ்கரில் நிகழ்ந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் நடந்த நிகழ்வுகளின் நிழல்போலவே இருந்தது.

சில வருடங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கருக்கு ஒரு யானைக் கூட்டம் இடம்பெயர்ந்தது. அதுவரை மத்திய பிரதேசத்தில் யானைகள் கிடையாது. அதுதான் முதல் நிகழ்வு. அந்த யானைக் கூட்டத்தால் ஆரம்பத்தில் பெரிய பிரச்னைகள் ஏதும் வரவில்லை. ஓரிரு இடங்களில் விவசாய நிலத்தில் சேதங்கள் ஏற்பட்டதைத் தவிர. மக்களுக்கும் அவற்றால் பெரிய தொல்லை இல்லை.

நான் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் பாந்தவ்கர் போயிருந்தபோது ஒரு கொம்பனையும் சில பெண் யானைகளையும் புலிகள் சரணாலயத்தை அடுத்து பார்த்தேன். அன்று இதுபோல ஒரு சம்பவம் நிகழும் என்று நானும் எண்ணவில்லை. 2024 அக்டோபர் மாத இறுதியில், கிட்டத்தட்ட 15 யானைகள் அறுவடை செய்த வரகு போன்ற சிறுதானியத்தைத் தின்ற பின் நினைவிழந்து விழுந்து இறந்துபோயின. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. காரணம், தானியத்தைத் தின்று ஒரு தாவர உண்ணி இறக்குமா என்ற கேள்விதான். யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது என்றும், அதுகுறித்து டாக்டர் கே எழுதி உள்ளார் என்றும் தெரியவந்தது. உடனே அதுபற்றி அறிய, சில வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதரைத் தொடர்புகொண்டனர். ஸ்ரீதர், டாக்டர் கேயின் மகன். அவரிடம் டாக்டர் கேயின் பழைய ஆவணங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்பு கொண்டனர். அப்போதுஅவர்களுக்கு டாக்டர் கேயின் பழைய விஞ்ஞானக் கட்டுரை ஒன்று கிடைத்தது. கஜா (Gajah) என்ற விஞ்ஞான சஞ்சிகையிலும், மதராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியின் பிளாக் பக் (Black Buck) சஞ்சிகையிலும் அந்தக் கட்டுரை இடம்பெற்றிருந்தது.

யானைகளுக்கு வரும் துதிக்கை வாதம் (trunk paralysis) எனும் தாற்காலிக நிலைக்கு இதுபோன்ற தாவரங்களை உண்பதும் ஒரு காரணம் என்று டாக்டர் கே அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இந்தத் துதிக்கை வாதம் ஒரு அறிகுறி தானே தவிர, இறப்புக்கு காரணம் அதுவல்ல. பின் இறப்புக்குக் காரணம்தான் என்ன? வரகு (சிறுதானிய) கட்டுகள் மழையில் நனைந்து பூஞ்சணம் பிடித்துப்போனதே.

அந்தப் பூஞ்சணம் யானைகளின் வயிற்றுக்குள் சென்று பல வேதிப்பொருட்களாகி அவை இறக்க வழி செய்துவிட்டன. பூஞ்சணம், மணமில்லாமல் போனதும் ஒரு காரணம். சற்றே வாடை இருந்திருந்தால் யானைகள் அவற்றைத் தின்றிருக்காது.

1933-ம் வருடம் டிசம்பரில், கம்பம்- குமுளி வழியில் அமைந்திருக்கும் காட்டில், வண்ணாத்திப் பாறை என்ற இடத்தில் 14 யானைகள் இதேபோல வரகு பயிரைத் தின்று இறந்ததாக சி. மோரிஸ் என்ற காப்பித் தோட்ட முதலாளி, பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க குறிப்பேடுகளில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக உள்ளூர் மக்கள் இந்தப் பயிரை ‘கிறுக்கு வரகு’ என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1933-ம் ஆண்டு நிகழ்ந்த அந்த நிகழ்வு அத்துடன் நின்றுவிடவில்லை. 1970-ம் ஆண்டும் இதேபோல 17 யானைகள் கண்டமனூர் பள்ளத்தாக்கில் (கம்பத்தின் ஒரு பகுதி) மர்மமாக இறந்ததும், வழக்கம்போல டாக்டர் கே அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர அனுப்பப்பட்டார். அப்போதுதான் அவர் மேற்சொன்ன கட்டுரையை எழுதினார்.

டாக்டர் கே எழுதிய அந்தக் கட்டுரையில், ‘1970-ம் ஆண்டில், கண்டமனூர் பள்ளத்தாக்கில் ஒரு குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகளின் இறப்பு குறித்து மதுரை மாவட்ட வன அலுவலரிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. பல்வேறு வயதையும் பாலினத்தையும் சேர்ந்த 17 யானைகள் இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தினை பயிர்களை உட்கொண்டதால் பாஸ்பால்வ்ன் ஸ்க்ரோபிகுலாட்ரான் என்ற எர்கோட் (Ergot) இன்ஃபெக்ஷன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது.

பெரும்பாலான விலங்குகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நினைவின்றி இருந்த பிறகு இறந்தன. இந்த யானைகள் பலவற்றில், (தும்பிக்கை முடக்கம்) துதிக்கை வாதம் காணப்பட்டது. 1952-ம் ஆண்டில் மதுரை மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுருளிப்பட்டி கிராமத்திற்கு அருகில் 6 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், ‘வரகு’ என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஒரு வகையான தினை, ஆனால் எர்காட் பாதிக்கப்பட்ட தாவரத்தை உட்கொண்டதன் விளைவாக இறந்தன. இந்தப் புல்லை மொத்தமாக உட்கொள்ளும் விலங்குகள் (தண்டு முடக்கம் உட்பட) நோயுற்ற அறிகுறிகளைக் காட்டுவதால், இந்த தாவரம் உள்ளூரில் ‘கிறுக்கு வரகு’ (பைத்தியக்காரத்தனத்தை ஏற்படுத்தும் தினை) என்று அழைக்கப்படுகிறது. தடயவியல் ஆய்வக கண்டுபிடிப்புகள் இந்த விலங்குகளின் நோய்க்கான காரணத்தை எர்காட் விஷம் (கிளாவிசெப்ஸ் பர்பூரியா) காரணமானது என்று உறுதிப்படுத்துகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப் பல கள ஆய்வுகளில் டாக்டர் கே முன்னோடியாகத் திகழ்ந்தார். என்ன, அவரது 1970-ம் ஆண்டு உடற்கூராய்வு அறிக்கை கிடைத்திருந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கலாம். மிகப் பழைய காலத்தது என்பதால் அது கிடைக்கவில்லை. இந்தக் காலத்தில் இதுபோன்ற ஆய்வுகளை எளிதில் செய்ய இயலும். அந்த அளவு உபகரணங்களும் பரிசோதனை வசதிகளும் பெருகி விட்டன; முன்னேறி விட்டன. 1970-ல் திசு பரிசோதனைக்குக் கூட சென்னை வர நேரிடும். பரிசோதனைக் கூடங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இருக்கும். திசு மாதிரிகளை அவ்வளவு எளிதில் அனுப்ப முடியாது. இப்படிப் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையில் நேர்த்தியான பணியைச் செய்தார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். உள்ளார்ந்த ஈடுபாடும், செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனோபாவமும்.

இதுபோன்ற பயிரை மேயும் விலங்குகளால் மோதல்கள் ஏற்படுவது நமது நாட்டுக்கோ அல்லது மாநிலத்திற்கோ புதிது அல்ல. மலை படு கடாம் காட்டும் வாழ்க்கையைக் கண்டால், அன்றும் இன்றும் ஒன்றுதான் என்று நினைப்போம். உதாரணமாக,

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை . . . .[205]

உரை: விளைநிலங்களில் குறவர்கள் பரண் மீது ஏறி விளைச்சலைத் தின்ன வரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர்.

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் . . . .[300]

உரை: யானை ஒலி – தன் கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை, கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் ஒலி சங்கூதுவது போன்றது.

இந்த மலை படு கடாம், சங்க கால நூலான பத்துப் பாட்டில் ஒன்று. அன்றே யானைகள் விளை நிலங்களில் புகுந்து தொல்லை தந்தன என்றால், இன்று அவை அவ்வாறே செய்வதில் வியப்பென்ன? காலம் காலமாக மனிதனும் விலங்கும் இயைந்து வாழ்பவை என்பதைப் புரிந்து கொண்டால், அது தொல்லையாகத் தெரியாது. எப்படித் தடுக்கலாம்? எப்படிச் சேதத்தைக் குறைக்கலாம் என்று புரியும். எனவே, யானைகள் தினையை உண்ண வந்ததில் எந்த வியப்பும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, பூஞ்சண நச்சால் இறந்ததுதான் சோகம். இன்றும், டாக்டர் கேயின் குறிப்புகள் வழிகாட்டியாக உள்ளன என்பது மேலும் ஒரு சிறப்பு.

இதேபோல, ஹெய்தி என்கிற மேல் நாட்டு கால்நடை வைத்தியருக்கு டாக்டர் கே உதவியது, அவரது ஆளுமையைப் பறைசாற்றும் மற்றொரு நிகழ்வு. திருமதி ஹெய்தி ரிடில், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆசிய யானைகள் குழுவின் உதவித் தலைமைப் பொறுப்பாளர். அவர் தனது கடிதத்தில், ‘நன்றி ஐயா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் ஏற்கெனவே பதிலளித்து விட்டேன் என்று நினைத்தேன். இந்த ஆய்வுக் கட்டுரை என் நினைவை மீண்டும் கிளறுகிறது. ஆசிய யானைகளில் முடங்கிய (முழு அல்லது பகுதி) தும்பிக்கைகள் தொடர்பான அவரது அனுபவத்தைப் பற்றி பேராசிரியர் சுகுமார் மூலம் உங்கள் தந்தையிடம் கேட்டிருந்தேன். 1994-ம் ஆண்டு பகுதியளவு முடங்கிய தும்பிக்கையுடன் (துதிக்கை வாதம் அல்லது முடக்கம்) ஒரு யானை எங்களுக்குக் கிடைத்தது. அப்போது அவளுக்கு (அந்த யானைக்கு) 40 வயது இருக்கும். சர்க்கஸில் இருந்த யானை. அவள் முதலில் இந்தியாவிலிருந்து வந்த யானை. இந்த முடக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக வளர்ந்தது. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை. அவள் 2020-ல் 63 வயதில் காலமானாள். மற்றபடி அவள் வாழ்நாள் முழுவதும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தாள்.

வட அமெரிக்காவில் பகுதியளவு அல்லது கிட்டத்தட்ட முழு தும்பிக்கை முடக்கம் கொண்ட பிற யானைகள் இருந்தன. நாங்கள் கவனித்தது என்னவென்றால், அவை அனைத்தும் பெண் ஆசிய யானைகள். அவற்றில் பெரும்பாலானவை சர்க்கஸில் வரலாற்றைக் கொண்டு இருந்தன. பாலினம், இனங்கள் ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை விளக்க எந்த உறுதியான தொடர்பும் அடையாளம் காணப்படவில்லை. உங்கள் தந்தையின் தகவல் (இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி) மிகவும் சுவாரஸ்யமானது. வடக்கு அமெரிக்கச் சூழலில், அதற்கான காரணம் என்ன/எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தும்பிக்கை முடக்கம். ஒருவேளை ஏதோ ஒரு வகையான காயங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மலைப்பாங்கான நாட்டில் உள்ள யானைகளில், வளர்ப்பு, காட்டு யானைகள் இரண்டிலும் காணப்பட்டது என்பதையும், உங்கள் தந்தை அதற்குப் பல விளக்கங்கள் வைத்திருந்தார் என்பதையும் அறிந்து கொண்டது மிகவும் உதவியாக இருந்தது. யானைகளின் உடல்நலப் பிரச்னைகள் குறித்த தகவல்களின் அற்புதமான ஆதாரமாக அவர் இருந்தார்!’ என்று எழுதுகிறார்.

இந்தச் சம்பவம் நடந்தது பெங்களூருவில் இருந்த இந்திய அறிவியல் கழக வளாகத்தில். முனைவர் சுகுமாரின் அழைப்பின் பேரில் டாக்டர் கே சென்றிருந்தார். அப்போது திருமதி ஹெய்தி, சுகுமாரிடம் இந்தத் துதிக்கை வாதம் குறித்துக் கேட்கும்போது, அவர், ‘டாக்டர் கேவும் இங்குதான் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள்’ என்று தொலைபேசியை டாக்டர் கேயிடம் கொடுத்துள்ளார். டாக்டர் கே, உடனே துதிக்கை வாதம் குறித்து அவரது அனுபவங்களை விவரமாக எடுத்துரைத்துள்ளார். இதில் நாம் பாராட்ட வேண்டிய விஷயம், எந்தக் குறிப்பும் இல்லாமல், நினைவில் இருந்து பழைய சம்பவங்களையும், இந்த நோயின் தன்மையையும் மருத்துவ ஆலோசனையையும் தனிச்சையாக கூறினார் என்றால், எந்த அளவிற்கு டாக்டர் கேவுக்குத் தன் தொழிலின் மேல் ஈடுபாடு இருந்தது என்று அறியலாம். மூச்சே யானைகளின் நலம்தானோ என்று வியக்கும் அளவிற்கு அவர் எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது. இந்த ஈடுபாடுதான் அவரைக் கம்பம் பகுதியில் இத்தனை எளிதாகப் பணி செய்ய வைத்தது என்று நினைக்கிறேன்.

கேரளத்தின் புகழ் பெற்ற கால்நடை மருத்துவர் சீரன்,’ எனக்கு டாக்டர் கேவை அறிமுகப்படுத்தியது ஈஆர்சி தாவிதர். அப்போது தாவிதர் சொன்னது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. யானைகளைப் பற்றி முழுவதும் அறிந்தவர் டாக்டர் கே. யானைகளைப் பற்றி அவர் அறியாத தகவல்கள் உண்டெங்கில், அவை அறிய லாயக்கற்றவை என்று புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிடச் சிறந்த ஒரு சான்றித்ழை யாராவது தர இயலுமா? அப்படி அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் (1953 -2002) யானைகள் பராமரிப்பில் தலை சிறந்து விளங்கினார். அந்த ஈடுபாட்டில் ஒரு 20 சதவிகிதமேனும் இன்றுள்ளவர்களுக்கு இருந்தால் நிலைமை இப்படி இருக்காது. இதேபோல தகுந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளின் முக்கியத்துவம் எவ்வளவு உபயோகமானவை என்பதும் புரியும். கூகுள் இல்லாத காலத்திலும், அறிவியல் சஞ்சிகைகள் இவற்றை வெளியிட்டதால் இன்று நம்மால் அவற்றை மேற்கொள் காட்ட இயலுகிறது. இல்லை என்றால் டாக்டர் கேயின் பல அற்புதமான செயல்கள் மறக்கப்பட்டு இருக்கும்.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம் appeared first on கிழக்கு டுடே.

விடுதி நடைமுறைகள்

26 May 2025 at 06:08

விடுதியில், நாள்தோறும் காலை ஐந்து முப்பது மணிக்கு எழும்ப வேண்டும்.  காலை 5:45க்கு காலை ஜெபம். Almighty god my loving father என்று ஆரம்பிக்கும். ஆறு மணிக்குத் திருப்பலி. அதற்குச் சென்றே ஆக...

The post விடுதி நடைமுறைகள் first appeared on Her Stories.

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம் பெற்றவுடன் பயணம் தொடர்ந்தது.

நிகோலோ குழுவினரின் வருகை ஒற்றர்களின் மூலமாக குப்ளாய்கானுக்குத் தெரிவிக்கப்பட்டது. வழியில் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும்படி அந்தந்தப் பகுதி ஆட்சியாளர்களுக்கு குப்ளாய்கான் உத்தரவிட்டிருந்தார்.

பெரிய மலைகளை எல்லாம் கடந்து திபெத் பகுதிக்குள் நிகோலோ குழுவினர் சென்றனர். திபெத், எட்டு ராஜ்ஜியங்களையும், ஏராளமான நகரங்களையும் உள்ளடக்கிய பெரிய பரப்பளவாக இருந்தது. இந்தப் பகுதி முழுமையும் ‘கிரேட் கான்’ என்றழைக்கப்படும் குப்ளாய்கானுக்கு உரிய பகுதியாக இருந்ததால் எவ்வித சிரமும் இன்றி அவர்களுடைய பயணம் தொடர்ந்தது.

திபெத் பகுதி மக்கள் சிலை வழிபாடுகளில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்ந்தனர். அதிகமான வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்து வணிகத் தொழிலில் சிறந்து விளங்கினர். மலைகளால் சூழப்பட்ட இப்பகுதியைக் கடந்து மங்கோலிய அரசனைக் காண நிகோலோ குழுவினர் பயணப்பட்டனர்.

மங்கோலிய சாம்ராஜ்ஜியம் குறித்தும், செங்கிஸ்கான் வழிவந்த குப்ளாய்கான் பற்றியும், நிகோலோ தனது மகன் மார்க்கோ போலோவுக்கு எடுத்துரைத்தார். மங்கோலியப் பேரரசு, இராஜ்ஜியம் அமைத்த வரலாற்றைக் கேட்கத் தொடங்கினார் மார்க்கோ போலோ.

வெற்றி பெற வேண்டும் என ஓடத் தொடங்கியவர்களில் பாதிப் பேர், பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே விட்டுவிடுகின்றனர். மீதிப் பேர் ஓடினாலும் வெற்றி என்பது எதிராளியை வீழ்த்தியவருக்குத்தான் கிடைக்கிறது. அப்படி வெற்றி பெற்றவரின் பூமியில் நாம் நடந்துகொண்டிருக்கிறோம் என்றபோது மார்க்கோ போலோ ஆர்வமுடன் கேட்கலானார்.

இன்றிலிருந்து சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் மங்கோலிய அரசை உருவாக்கிய செங்கிஸ்கான் பிறந்தார். செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. பல நாடோடிக் கூட்டங்களாக மங்கோலிய மக்கள் சிதறி வாழ்ந்து வந்தனர். இதனால் பல எதிரிக்கூட்டங்கள் மங்கோலிய நாடோடி மக்களைத் தாக்கி வந்தனர்.

நாடோடி குழுக்களின் சண்டையில், செங்கிஸ்கானின் தந்தையும் நண்பர்களும் கொல்லப்பட்டனர். 12 வயதிலேயே போருக்குத் தயாரானார் செங்கிஸ்கான். நாடோடி மக்கள் குழுக்களை ஒருங்கிணைத்து, ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்று செங்கிஸ்கான் கனவு கண்டார். தமது கனவுக்குச் செயல் வடிவம் அளிக்கப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்.

செங்கிஸ்கான் மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றிணைத்து, மங்கோலியப் பேரரசைக் கட்டமைத்தார். வலிமையான இராணுவத்தை உருவாக்கி, வட சீனாவின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார். இப்போது நாம் நடந்து செல்லும் பாதைகளை, நகரங்களை செங்கிஸ்கான் கைப்பற்றி மிக வலிமையான தேசமாகக் கட்டமைத்தார்.

உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகளை வென்றெடுத்து ஆட்சிபுரிந்த ஆசிய மன்னன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் செங்கிஸ்கான். ஐரோப்பாவின் சில பகுதிகளையும் செங்கிஸ்கான் தனது மங்கோலியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றார்.

தனது தந்தை கூறிவரும் மங்கோலிய அரசின் வெற்றிகளை ஆர்வமுடன் கேட்டு வந்த மார்க்கோ போலோ, இவ்வளவு பரந்த நிலப்பகுதியை எவ்வாறு வென்றெடுத்தார் என்று தந்தையிடம் கேட்டார்.

செங்கிஸ்கானின் மங்கோலிய அரசின் வெற்றிக்கு முக்கியக் காரணம், ராணுவத்தைக் கையாளும் முறை என்று தந்தை நிகோலோ கூறினார். செங்கிஸ்கான் மூன்று பிரிவாக இராணுவத்தை வைத்திருந்தார். ஒரு பிரிவு சண்டையிட்டால் இன்னொரு பிரிவு ஓய்வெடுக்கும். இன்னொரு பிரிவு மோதலுக்குத் தயாராக இருக்கும். எதிரிப் படைகளின் முழுமையான பலத்தை அறிந்து அவர்கள் சோர்வடையும்போது மிகத் தீவிரமாகத் தாக்கும் உத்தியை மங்கோலிய வீரர்களுக்கு செங்கிஸ்கான் பயிற்றுவித்தார்.

நாடோடி இனக்குழுவை இராணுவமாக மாற்றி, மங்கோலிய அரசை உருவாக்கி, மிகச் சிறந்த ஆட்சி அளித்த செங்கிஸ்கான், ஒரு போரில் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வரலாறு கூறுவதை நிகோலோ தனது மகனுக்குக் கூறினார்.

செங்கிஸ்கானுக்குப் பிறகு அவரது மகன்களில் ஒருவரான ஒக்தாயி என்பவர் மங்கோலிய அரசின் தலைமையை ஏற்று அவர் வழியிலேயே பல இராஜ்ஜியங்களை மங்கோலிய எல்லைக்குப்படுத்தினார். ஒக்தாயி, செங்கிஸ்கானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் என்பதால் எவ்விதச் சிரமமும் இன்றி இராணுவத்தை வழிநடத்தி செங்கிஸ்கானின் கனவுக்குத் துணை நின்றார்.

ஒக்தாயி ஒரு பெரிய படையெடுப்புக்கு ஆயத்தமான நிலையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வழிவந்த தற்போதைய ககான் குப்ளாய்கான் மங்கோலிய அரசை வழிநடத்தி வருகிறார். சமவெளிகள், பாலைவனங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள் என அனைத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வலிமையான அரசனாக குப்ளாய்கான் திகழ்கிறார்.

செங்கிஸ்கான் சீனாவின் ஒரு பகுதியை வெல்ல, அவரின் வாரிசுகள் அடுத்தடுத்த பகுதிகளை வெல்ல, குப்ளாய்கான் ஒட்டுமொத்தச் சீனாவையும் வென்று தன் மங்கோலிய அரசின் கீழ் கொண்டு வந்தார். உலகின் மிகச் சக்தி வாய்ந்த மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் தூதுவர்களாக நாம் இப்போது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற முறை நாங்கள் மங்கோலியப் பயணம் வந்தபோது நூறு கிறிஸ்தவ அறிஞர்களையும், இயேசுவின் புனிதக் கல்லறை எண்ணெய்யையும் கொண்டு வாருங்கள் என்று கேட்டதற்காக நாம் மீண்டும் குப்ளாய்கானைச் சந்திக்க வந்துள்ளோம்.

செங்கிஸ்கான் உருவாக்கிய மங்கோலிய அரசின் கனவை நனவாக்கி முழுமையான சீனாவையும் ஆட்சி புரியும் குப்ளாய்கானை நாம் காணச் செல்கிறோம் எனச் சொல்லி முடித்தார்.

வளமும் செல்வங்களும் நிறைந்த மங்கோலிய அரசனைக் காண மார்க்கோ போலோ சென்ற வழிகளில் நிறைய மரங்கள் நடப்பட்டுப் பேணப்பட்டு வந்ததை மார்க்கோ போலோ கண்டார். குப்ளாய்கான் ஆணையால் அடுத்த ஒரு மாதம் தங்களின் பயணம் இனிமையாக இருக்கும் என்று போலோக்கள் எண்ணினர்.

கிழக்கு நோக்கிய பயணத்தில் சரசென்ஸ், சாகன் ஆகிய நகரங்களைக் கடந்து ஷாங்டு என்ற நகரத்தை போலோ குழுவினர் அடைந்தனர். அந்த நகரத்தில்தான் தற்போது குப்ளாய்கான் இருப்பதாக வீரர்கள் கூற, நிகோலோ குழுவினர் மிக மகிழ்வோடு பயணித்தனர்.

மிக நீளமான அழகான அரண்மனையைக் கண்டு ரசித்துக் கொண்டே சென்றார் மார்க்கோ போலோ. பதினேழு வயதில் பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ தற்போது இருபத்தியோர் வயது இளைஞராகத் தன் தந்தையுடன் குப்ளாய்கானைச் சந்திக்க அரண்மனை மதிலுக்குள் நுழைந்து அரசவையை அடைந்தார்.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற செயல்கள் அங்கு சர்வ சாதாரணம். சில சமுதாயத்தினரை வெள்ளையர்கள் அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பானவர்கள் (outlaws) என்று முத்திரை குத்தி இருந்தது. காடுகள் கேட்பாரின்றி வெட்டப்பட்டன; வன விலங்குகள் வேட்டை சர்வ சாதாரணமாக நடைபெற்றது. வனத்துறை அலுவலர்கள், தாணாக்காரர்கள் எல்லாம் பெரும் பயத்துடனேதான் பணி செய்து வந்தனர்.

குத்து, வெட்டு, கொலை என்பதெல்லாம் தினமும் நடக்கும். பெரியகுளத்தில் இருந்து கம்பம் அல்லது குமுளி வரையிலான பெரிய நிலப்பரப்பு அன்று மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. சின்னமனூரைச் சேர்ந்த பெரியவரிடம் பேசும்போது, அதற்கான காரணத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். ‘அய்யா, அன்று மக்கள் படித்திருக்கவில்லை; மேலும், சரியான வாழ்வாதாரங்கள் கிடையாது; வெள்ளையர்களின் ஆளும் முறையில் ஒரு சில சமூகத்தினர் புறந்தள்ளி வைக்கப்பட்டனர்; இவற்றுக்கு இடையில் சாதிப் பிரிவினைகள் வேறு. எனவே, இது போன்ற நடவடிக்கைகள் வெகு சாதாரணமாக இருந்தன. தினமும் ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதிவாகும். அரசாங்க வேலைக்காரர்கள் தவிர யாரும் திருட்டு பயமின்றி இருக்க இயலாத நிலை; வழிப்பறிக் கொள்ளைகள் சர்வ சாதாரணம். மாலையில், ஏழு மணிக்குப் பின் வீடு திரும்புதல் ஆபத்தான வேலை. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் போலீஸ் வேலைக்கோ, வனத்துறை வேலைக்கோ வரத் தயங்குவார்கள். காரணம், சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று தெரியாத மக்கள். என்று பிரசங்கம் செய்தார். இந்த இடத்திற்குத்தான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் வந்து சேர்ந்தார் டாக்டர் கே.

அந்தக் காலத்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள, மதுரை ஜில்லா கெஜட்டியரை நான் படித்தேன். ஏனென்றால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை. எண்பது வயதான ஒரே ஒரு கால்நடை மருத்துவர், அதுவும் கம்பத்துக்காரர், கிடைத்தும் பயனில்லை. காரணம், அவர் பெரிய அளவில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்ததனால், டாக்டர் கேவைப் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தக்கால காடுகளைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. அவர் அங்கு வாழ்வது எப்படி ஒவ்வொரு நாளும் பெரும் சவாலாக இருந்தது என்பதை மட்டும் சொன்னார். அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று வெளி உலகே தெரியாமல் வாழ்ந்த கதையைத்தான் சொன்னார்.

கெஜட்டியர், பழனி மலையிலும், பெரியகுளத்தில் இருந்து குமுளி வரை படர்ந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தாவர வளத்தையும், வன உயிரின வளத்தையும், வேட்டையாடிகளையும் ஓரளவு நன்றாகவே விளக்குகிறது. வெள்ளையர்கள் இந்தக் காடுகளை வியாபார ரீதியில் எப்படி அணுகினார்கள், மரங்களை எப்படி வளர்க்கலாம், வளர்த்த மரங்களை எப்படி அறுவடை செய்யலாம் என்றெல்லாம் சிந்தித்தார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது. இங்கிலாந்தின் மரத் தேவையை எப்படி இந்தக் காடுகள் பூர்த்தி செய்தன என்றும் அறிய முடிகிறது. முக்கியமான விஷயம், இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெரும்பாலான காடுகள் அன்று பல நிலச்சுவான்தாரர்களின் கைகளில், பல குட்டி ராஜாக்களின் சொந்த சொத்தாக இருந்தன என்பதுதான். எந்தக் கட்டுப்பாடும் மேற்பார்வையும் இல்லாமல் பல காலங்களாக அவை பராமரிப்பின்றிக் கிடந்ததே வேட்டையாடுதல் அதிகரித்ததற்கும், மற்ற குற்றங்கள் பெருகியதற்கும் மற்றொரு முக்கியக் காரணம்.

இந்தச் சூழலில், டாக்டர் கே. கம்பத்தில் இருந்த ஆடு வளர்ப்புப் பண்ணைக்கு கால்நடை மருத்துவராகப் பணி ஏற்றார். அந்தக் குறுகிய கால (1953-56) வாழ்க்கையைப் பற்றி எழுத, டாக்டர் கிரிஸ் வெம்மரின் குறிப்புகள்தான் எனக்குப் பெரிதும் உதவின. அவருக்கு வயது 80க்கும் மேல். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இருந்தாலும், நானும் ஸ்ரீதரும் இணைந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனே பதிலளித்தது மட்டுமல்லாமல், அவரும் டாக்டர் கேவைப் பற்றி எழுத உள்ளதாகத் தெரிவித்தார். அவரது பெருந்தன்மையும் ஆர்வமும் நாங்கள் தொடர்பு கொண்ட சிலரிடம் இல்லையே என்று நான் வருத்தப்பட்டது உண்மைதான். இத்தனைக்கும் அவர்கள் டாக்டர் கேவினால் பயனடைந்தவர்கள். அது அடிநாக்கில் தங்கிய கசப்பைப்போல ஒரு வெறுப்பைத் தந்தது. படிப்பும் பதவியும் பொருளும், வாழ்வில் நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தியது.

வழக்கமாக டாக்டர் கே-வின் நாள் காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் தொடங்கும். அந்த ஆடு வளர்ப்புப் பண்ணை கம்பத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. டாக்டர் கே. சைக்கிளில் போவார். அங்கு உள்ள ஆடுகளுக்கு வைத்தியம் பார்க்க நேரிட்டால் (சிறு காயங்கள், உடல் நலக் குறைவு போன்றவற்றிற்கு), வைத்தியம் பார்ப்பார். அங்குள்ள ஆடுகளின் நலனை மேற்பார்வை செய்வார். இரண்டு மணி நேர உணவு இடைவேளைக்குப் பின் வேறு அலுவலகக் கோப்புகள், பொது மக்களின் கால்நடைகளுக்கு வைத்தியம் என்று பொழுதுபோகும். மாலை ஆறு மணிக்கு இரண்டு மூன்று மெய்க்காவலர்கள் துணையுடன் வீடு திரும்புவார். இல்லையேல் பாதுகாப்பு கிடையாது. ஆயினும், டாக்டர் கே அந்த ஊர் மக்களிடம் எளிதில் நல்லுறவு கொண்டுவிட்டார். காரணம், அவரது கடமை உணர்வு. அன்புடன் பழகும் தன்மை, யாரையும் கடிந்து பேசாத குணம், உதவத் தயங்காத மனம். ஆயினும், தேவையற்ற ரிஸ்க் எடுக்காமல், பிரசவத்திற்கு அவர் மனைவியைப் பிறந்த இடத்திற்கே அனுப்பி வைத்தார்.

யானைகளின்பால் அவர் ஈர்க்கப்பட்டதற்கு இந்தக் கம்பம் வாழ்க்கையும் ஒரு காரணமானது. அன்றைய நடைமுறைப்படி, காட்டில் இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்த பின்னரே புதைக்க வேண்டும் என்று அரசாங்க ஆணை. யானைகள் பாதுகாப்பு சட்டம் 1876-ன் படி, இறந்த யானைகள், வேட்டையாடப்பட்ட யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய வேண்டும். அந்தப் பணி கால்நடை மருத்துவரைச் சார்ந்தது என்பதால், டாக்டர் கே அங்கு இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இப்படியாக, யானைகளுடன் அவர் தொடர்பு தொடங்கியது. கம்பம் காடுகளில் வண்ணாத்திப் பாறை, சுரங்கனாறு, குதிரையாறு போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம். வேட்டையாடிகள், அந்தப் பகுதிகளில்தான் பெரும்பாலும் யானைகளைத் தந்தத்திற்கு வேட்டையாடுவார்கள். பல நேரங்களில், இறந்த யானையை, வெகு தாமதமாகத்தான் கண்டுபிடிப்பார்கள். காரணம், உயிரைப் பணயம் வைத்து காட்டில் ரோந்து போக எந்த வனத்துறை ஊழியர் முன் வருவார்? டாக்டர் கே சொல்வதுபோல, பல சமயங்களில், காட்டில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தான் இது போன்ற வன உயிர் இறப்பை துறைக்குத் தெரிவிப்பார்கள். பல நேரங்களில் யாரும் அறியாமல் போவதும் நிகழும். அப்படி வேட்டையாடப்பட்ட யானைகளின் உடல், பெரும்பாலும் அழுகிய நிலையில்தான் இருக்கும். மாமிசப் புழுக்கள் நிறைந்து உடல் முழுவதும் அப்பிக் கிடக்கும். தந்தங்களை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, உடலை அப்படியே விட்டுச் சென்றிருப்பார்கள். ஜெயமோகனின் யானை டாக்டர் கதை நினைவில் வருகிறதா? அதன் வேர் இங்கேதான்.

இதைப் பற்றி டாக்டர் கே, வெம்மெரிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘பெரும்பாலான இறந்த யானைகளின் உடல்கள் (பிணங்கள்) சேதமில்லாமல் அப்படியேதான் இருக்கும். தந்தங்கள் இருக்கும் கடைவாய் பகுதி தவிர. ஏனெனில், அவை வேட்டையாடப்படுவது தந்தங்களுக்காக மட்டுமே. எத்தனை நாட்களாக அழுகிப் போயிருந்தாலும், நாம் ஒரு நல்ல பிணக்கூராய்வு செய்யலாம். என்ன, அப்பிக் கிடக்கும் மாமிசப்புழுக்களை ஒரு துடைப்பம் கொண்டு பெருக்கித் தள்ளிவிட்ட பின், கிருமிநாசினி தெளித்த பின், கால்நடை மருத்துவர் பணியைத் தொடங்க வேண்டும். அது கால்நடை மருத்துவருக்கு அவரது திறமைக்கான சோதனை. அவருக்கு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பணி செய்யும் திறனும், மிகுந்த மன உறுதியுடன் கடினமான வயிறும் வேண்டும். வாந்தி வராமல் இருக்கணுமே!

சில சரகர்கள், பணியாட்களுக்கு வாசனை திரவங்கள், ஊதுபத்தி, ஏன், சந்தனக் கட்டைகளைக்கூடத் தருவார்கள், அந்தக் கொடூர நெடியில் இருந்து விடுபட. எப்படி இருந்தாலும், ஒரு சில புழுக்கள் மேலே ஏறி விடும்; நெடி இரண்டு மூன்று நாட்களுக்கு நம் உடலை விட்டு விலகாது!’. இங்கு ஓய்வு பெற்ற டி.எஃப்.ஓ பத்ரசாமியின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘டாக்டர் கே ஒரு சைவ மதத்தினர். மேலும் பிராமணர். ஆனாலும், அவரைப்போலப் பிணக்கூராய்வு செய்த ஒரு கால்நடை மருத்துவரை நான் என் 40 வருட சர்வீசில் பார்த்ததில்லை. அனாயாசமாக, யானையின் பிணத்திற்கு உள்ளே நின்றுகொண்டு முக்கியப் பாகங்களின் பகுதிகளை வெட்டி எடுப்பார். அங்கேயே நின்றுகொண்டு டீயும் பருகுவார். அவரைப் பொறுத்தவரை அது அவர் கடமை. விருப்பு வெறுப்புக்கு இடமில்லை!’ Anglia Productions ஆவணப்படம் யானையின் வயிற்றுக்குள் டாக்டர் கே இருக்கும் காட்சியுடன்தான் தொடங்கும்.

இதுகுறித்து மேலும் விளக்கும் டாக்டர் கே, ‘பிணக்கூராய்வு, வனத்துறையைப் பொறுத்தவரை, இறந்த யானை ஆணா, பெண்ணா என்று அறியவும், ஏதாவது தொற்று நோயால் இறந்ததா என்று அறியவும்தான் செய்யப்படுகிறது. குறிப்பாக ஆந்த்ராக்ஸ் நோய் (சிலர் அடைப்பான் என்றும் சொல்கின்றனர்) உள்ளதா என்பதுதான் பெரும் கவலை. ஏனெனில் அது ஓர் உயிர்க்கொல்லி நோய் மட்டுமல்ல, விரைவில் மற்ற மிருகங்களுக்கும் பரவக் கூடியது. இதற்காக, இறந்த உடலின் சில பாகங்களையும் திசுக்களையும் எடுத்த பின், பிணக்கூராய்வு முடிவடையும்.

ஒரு ஆழமான பிணக்கூராய்வு செய்ய குறைந்த பட்சம் 6 மணி நேரம் தேவை. தந்தங்களை எடுக்க வேண்டும் என்றால், மேலும் 2 மணி நேரம் தேவைப்படும். காரணம், அவற்றை எடுக்க மண்டை ஓட்டை ஒரு குறிப்பிட்ட முறையில் பிளந்து, தந்தங்களை அவற்றின் பற்குழியில் இருந்து சிதையாமல் எடுக்க வேண்டும். வேட்டையாடிகளைப்போல கோடரியால் தாடையில் வெட்டி எடுத்தால், முழுத் தந்தமும் கிடைக்காது. யானையின் மேல் தோலை அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களால் கிழித்து ஒரு பாதை உண்டாக்குவார்கள். பின், நான் எனது உபகரணங்களைக் கொண்டு சில உடல் பாகங்களை அறுத்து எடுப்பேன்’ என்கிறார்.

டாக்டர் வெம்மர், அந்தப் பழங்குடி மக்களுக்கு நியாயமான சம்பளம் கிடைத்ததா என்றும், அவர்களுக்கு இந்த வேலைகளைச் செய்ய மது வழங்கப்பட்டதா என்றும் கேட்கும்போது டாக்டர் கேவின் பதில் அவரது பரந்த உள்ளத்தையும், பழங்குடிகளின் பால் அவருக்கிருந்த கரிசனத்தையும் வெளிக்காட்டுகிறது.

‘அவர்களை வரவழைப்பது சரகரின் வேலை. ஒரு சிலர் மது வேண்டும் என்று கேட்கலாம்; ஆனால் நான் அதை ஆதரிப்பதில்லை. தேவைப்பட்டால், யுடிகோலோன், யார்ட்லி போன்ற வாசனைத் திரவியங்களோ அல்லது சந்தனக் கட்டையை எரிக்கவோ பரிந்துரைப்பேன். அவர்கள் பெரும்பாலும் உடலில் விளக்கெண்ணெய்யைத் தடவிக் கொண்ட பின்தான் வேலையைத் தொடங்குவார்கள். கத்தியில் படியும் கொழுப்பை வெங்காயம் கொண்டு அகற்றுவார்கள். அதேபோல, அவர்களுக்கு சம்பளம் சற்று தாராளமாகக் கொடுங்கள் என்று சொல்வதோடு, கொடுக்கிறார்களா என்றும் உறுதிப்படுத்திக் கொள்வேன். ஆயினும், சரகர்களும் வன ஊழியர்களும் அவர்கள் என்ன பிணக்கூராய்வா செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புவார்கள். அவர்கள் செய்வது ஒரு நன்றி மறந்த வேலை. என்ன செய்ய? நான் என் வரையில் அவர்களுக்கு நல்ல வகையில் எல்லாம் கிடைக்க முயற்சி செய்வேன். அவர்களை நல்ல முறையில் நடத்துவேன்’ என்று டாக்டர் கே கூறுகிறார். ஆயினும், இன்றும் இந்த சமுதாயத்தில், கடைநிலை ஊழியர்களை நடத்தும் விதம் பெரிதாக மாறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்த நிலை சற்றே முன்னேறி உள்ளது என்றாலும், போதாது.

டாக்டர் கே பிணக்கூராய்வு பற்றி மேலும் கூறுகையில், ‘பெரும்பாலும் நான் பிணக்கூராய்வை நெஞ்சுப் பகுதியில் இருந்துதான் தொடங்குவேன். அதன்பின் வயிற்றுப் பகுதி, குடல், சீகம் அல்லது பெருங்குடல் வாய், பெருங்குடல், பின்னர் கல்லீரல் என செல்வேன். அதன் பின் தோராக்ஸ் பகுதியும் கபாலமும். சில நேரங்களில், இறங்கி, வயிற்றினுள் நுழைய வேண்டி வரும். அதற்கு இந்த முறைப்படி போக இயலாது. சில நேரங்களில், தலையில் இருந்து தொடங்கி ஆசனவாய், பிறப்புறுப்புகள் வரை பிறழ் முறையில்போக வேண்டி வரும். அந்தந்த நேரத்திற்கு ஏற்றாற்போல் நம் தேவையை ஒட்டி பிணக்கூராய்வு நடக்கும். கிட்டத்தட்ட 18 இறந்த யானைகளை நான் கம்பத்தில் இருந்தபோது பிணக்கூராய்வு செய்திருக்கிறேன். அவற்றில் 12க்கும் மேற்பட்டவை வேட்டையாடிகளால் தந்தத்திற்காகக் கொல்லப்பட்டவை. அவற்றில் ஒரே ஒரு யானையின் தந்தத்தை மட்டும் மீட்க இயன்றது. மற்றவை எல்லாம் திருடப்பட்டு விட்டன. இதற்கு முன் இரண்டு சர்க்கஸ் யானைகளுக்கு வைத்தியம் பார்க்க நேர்ந்தது. இந்தப் பிணக்கூராய்வுகள், யானைகளைப் பற்றிய என் அறிவை மேம்படுத்தின. இவற்றுடன் வேறு சில காட்டு விலங்குகளையும் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இவ்வாறு பணி சுறுசுறுப்பாக இருந்தாலும், எனக்கு வேலையில் ஒரு திருப்தி இல்லாமல்போனது. காரணம், என்னுடைய மேலதிகாரி ஒரு முசுடு. குறையை மட்டுமே கண்டுபிடிக்கும் இயல்பு கொண்டவராக இருந்தார் என்பதுதான்’ என்கிறார்.

மருத்துவர் கே இவ்வாறு இயங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், வனத்துறையில் வேலை பார்க்க கால்நடை வைத்தியர்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியானது!

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை appeared first on கிழக்கு டுடே.

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு முன் வரையில் ஆப்பிரிக்கர்களில் அடிமையல்லாதவர்களுக்கும் சொத்து வைத்திருப்பவர்களுக்கும் வாக்குரிமை இருந்தது. 1802 முதல் அந்த உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் சொத்துக்களற்ற வெள்ளையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1796 முதல் அடிமையல்லாத ஆப்பிரிக்கர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

அடிமைகளை விடுவிக்கவேண்டும், அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என வலியுறுத்திய மெதாடிஸ்ட் சமயப் பிரிவும் பழைமைவாதத்துக்குத் திரும்பியது. அடிமை உரிமையாளர்களான பிரமுகர் குழுவின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்காக ஆப்பிரிக்கர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 1800ஆம் ஆண்டு முதல் பல சமூக, வர்த்தக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த ஆண்டு அடிமைகள் திட்டமிட்டிருந்த ஆயுதமேந்திய புரட்சியொன்று தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு நசுக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளையர்களைக் கொல்வதற்காகச் சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு ஆப்பிரிக்கர் தூக்கிலிடப்பட்டார். அடிமை ஆப்பிரிக்கர்கள் விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கை பொய்யானது.

1810களில் மேரிலாண்டின் வர்த்தகமும் பொருளாதாரமும் பல்வேறு காரணங்களால் நலிவடைந்தன. டார்செஸ்டரின் முன்னணிக் குடும்பங்கள் பின்னடைவைச் சந்தித்தன. பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்த நிலங்களுக்கும் பல அடிமைகளுக்கும் உரிமையாளரான ஆண்டனி தாம்சன் கடனாளியானார். கடனைத் திருப்பித் தரமுடியாததால் 1817இல் சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் தன்னுடைய பண்ணையில் விவசாயம் செய்வதையும் மர அறுப்புத் தொழிலையும் நிறுத்தவில்லை.

இன்னொரு புறம், மேரிலாண்டைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அடிமைகளை விடுவிப்பதற்குப் பதிலாக அலபாமா, மிஸ்ஸிசிப்பி, லூசியானா, ஃபிளோரிடா, டெக்சஸ் போன்ற மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு விற்றனர். இதனால் பல அடிமைக் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. இது அடிமைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஹாரியட்டின் பெற்றோரும் தங்கள் குடும்பத்தில் யாரை எப்போது எங்கே விற்பார்கள் என்ற பதற்றத்துடன் இருந்தனர்.

பல நேரங்களில் அடிமைக் குடும்பங்களைத் தண்டிப்பதற்காகவும் இப்படிச் செய்தனர் வெள்ளையர்கள். பெற்றோரும் குழந்தைகளும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டதால் அடிமைகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் அவதிப்பட்டனர். மூன்றில் ஒருவரின் மணவாழ்வு பாதிக்கப்பட்டது. அப்படிப் பிரிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இறந்துபோனதும் நடந்தது.

அடிமைத்தளையில் சிக்கிய ஆப்பிரிக்கர்களுக்குத் திருமணம் என்ற பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சாத்தியமில்லை என்பது தெரிந்திருந்தது. ‘இந்தப் பெண்ணை அல்லது இந்த ஆணை மரணம் அல்லது தூரம் பிரித்து வைக்கும் வரையில் உங்கள் இணையராக ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என மணமக்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகூட மாற்றிச் சொல்லப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட சொற்களின் பொருளைப் புரிந்துகொண்ட இணையர்கள் மணமுடித்த பிறகு வாழ்க்கையை நடுக்கத்துடனும் அச்சத்துடனும் நடத்தினர். தங்களின் மணவாழ்வைப் பேணுவதற்கு எதிர்கொள்ளவேண்டிய இடர்களை நன்றாக அறிந்திருந்தனர். என்றாலும் தங்களுக்கென ஒரு குடும்பமிருந்தால் அடிமை வாழ்வின் கடுமையைக் குறைக்கும், இணையர், குழந்தைகள், உறவுகளின் அருகாமை ஆறுதலைத் தரும் என நம்பினர். எனவே, மணவாழ்வு நீடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

திருமணம் என்பது சமயச் சடங்கு மட்டுமல்ல, குடிமுறை உரிமையும்கூட. ஆனால் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே உரித்தான உரிமை. சமூகத்தில் எந்தவிதமான உரிமையுமற்ற அடிமைகள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடமுடியாது. அதனால் அவர்களின் திருமணங்களும் சட்டத்தாலோ கிறிஸ்தவ சமயத்தினாலோ அங்கீகரிக்கப்படவில்லை, புனிதமானதாகக் கருதப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையைக் கடத்தினார்கள்.

ஆப்பிரிக்கர்களைத் தங்களின் மற்ற உடைமைகளைப்போலத்தான் வெள்ளையர்கள் நடத்தினர். அவர்கள் வாழ்வின் எல்லா முடிவுகளையும் வெள்ளை உரிமையாளர்கள்தான் எடுத்தனர். திருமணம் செய்துகொள்ளலாமா, எப்போது செய்யலாம், யாரைச் செய்யலாம் என்று அனைத்தும் அவர்கள் கையில்தான் இருந்தது. பல நேரங்களில் மனமொவ்வா ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயத் திருமணம்செய்து வைத்தனர். அடிமைகளாக இருக்கும் கொடுமையோடு பல வாழ்வியல், உள, உணர்வுச் சிக்கல்களுக்கும் ஆளாகினர் ஆப்பிரிக்கர்கள். அதிலும் அந்த ஆணோ பெண்ணோ வேறொருவரை விரும்பியிருந்தால் அவர்களின் வாழ்வே சீர்குலைந்துபோனது.

பணத்தேவையிருந்தால் இணையரில் ஒருவரை விற்கும் முடிவை எடுப்பதற்கும் தயங்கவில்லை வெள்ளை உரிமையாளர்கள். அடிமைகளின் மனைவியருடன் தங்களின் விருப்பத்துக்கேற்பப் பாலுறவுகொண்டனர். அவர்களைத் தங்களின் பல மனைவியரோடு ஒருவராக இருக்கச் செய்தனர். அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினரோடு வசிக்கவிடாமல் தடுத்தனர். அல்லது அவர்களை மீண்டும் அடிமைகளாக்கும் உத்திகளைச் செயல்படுத்தினர்.

ஒரு புறம் ஆப்பிரிக்கர்களை வெள்ளையர்களுக்குக் கீழ்நிலையிலும் விலங்குகளுக்குச் சற்று மேலேயும் இருப்பவர்கள் எனச் சொன்ன கிரேக்கப் படிமத்தை நம்பியதால் அவர்களுக்கு உணர்ச்சியோ சலனமோ கிடையாது, அதனால் நெருங்கிய உறவுகளைப் பிரிவது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறினார்கள். மற்றொரு புறம் உரிமையாளர்கள் அடிமைகளை இரக்கத்துடன் நல்லவிதமாக நடத்தினார்கள், உணவும் உடையும் தங்குமிடமும் தந்தனர் என்று சொன்னார்கள். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் அந்த இரண்டு கூற்றுகளிலும் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அடிமைத்தளை ஆப்பிரிக்க குடும்பங்களைச் சிதைத்து மக்களின் உடலையும் உள்ளத்தையும் எப்படியெல்லாம் காயப்படுத்தியது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தங்களிடமிருந்து பிரித்து வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உறவினர்களைத் தேடி ஆப்பிரிக்கர்கள் எழுதிய கடிதங்களையும் நாளிதழ்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் விளம்பரங்களையும் சேகரித்து அவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அந்தக் கடிதங்கள் அடிமைகள் அடிமை உரிமையாளர்களுக்கு எழுதியவை. நாளிதழ் விளம்பரங்களை அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக வெளியிட்டனர். இவற்றோடுகூட ஆப்பிரிக்கர்களுக்கிடையே அமைந்த தகவல்தொடர்பு வலைப்பின்னலின் வழியே உறவுகளைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முயன்றனர்.

அடிமையல்லாதவர்களோ விடுவிக்கப்பட்டவர்களோ இன்னமும் அடிமைகளாக இருக்கும் தங்களின் இணையரையோ குழந்தைகளையோ விடுவிக்கவேண்டும் எனக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்களில் தங்களின் பிரிவுக்குக் காரணமானவர்களின்மீது பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. கோரிக்கையாகவும் கட்டளையாகவும் இறைஞ்சலாகவும் விலைகொடுத்து வாங்கும் வணிகமாகவும் எனப் பல வழிகளில் அணுகுவதையும் பார்க்கமுடிகிறது.

பெரும்பாலான ஆப்பிரிக்கர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதால் கடிதங்களையும் அறிவிப்புகளையும் எழுதுவதற்கு வெள்ளையர்களின் உதவி தேவை. அதற்காக அவர்களைப் பற்றி நல்ல வார்த்தை சொல்லிப் புகழவேண்டியிருந்தது. பல மாகாணங்களில் விடுதலை பெற்றவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் அல்லது அங்கே தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அடிமைத்தளையில் இருப்பவர்கள் தப்பிக்க உதவிசெய்வது சட்டத்துக்கு எதிரானது என்பதால் அவர்களின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி உறவினர்களோடு மீண்டும் இணையவேண்டும் என்ற உள்ளார்ந்த உந்துதலால் அந்தச் சவால்களையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.

பிரிக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் முயற்சியில் இறங்கிய அடிமைகளில் சிலர் கிறிஸ்தவ சமயத்தின் கோட்பாடுகளை எடுத்துச்சொல்லி வெள்ளை உரிமையாளர்களின் உதவியைப் பெறுவதற்கு முயன்றார்கள். அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் பயன்பட்ட அதே மதம் அவர்கள் தங்களின் தன்மதிப்பு, தன்னியக்கம், எதிர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள உதவியது. அவர்கள் எழுதிய கடிதங்களில் கடவுள், சொர்க்கம், மறுமை ஆகியவற்றில் தங்களுக்குள்ள நம்பிக்கையை முன்னாள் உரிமையாளர்களிடம் எடுத்துச்சொல்லித் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு முயற்சிசெய்தார்கள்.

ஜாக் ஹன்னிபல் என்ற ஆப்பிரிக்க அடிமை முன்னாள் உரிமையாளருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய குடும்பத்தினர் எங்கே உள்ளார்கள் என்று சமயத்தை முன்னிறுத்திக் கேட்கிறார். ‘வடக்கு கரோலினாவில் இருந்தபோது நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த அதே கடவுளுக்கு உண்மையானவனாக இருக்கிறேன். மெதாடிஸ்ட் தேவாலயத்தின் உறுப்பினராக இருக்கிறேன்.’

1867இல் டெக்சஸைச் சேர்ந்த ஃபேனி என்பவர் தன்னுடைய சகோதரிக்கு கடிதம் எழுதினார். தன் குழந்தைகளை வேறொருவருக்கு விற்ற ப்ரூடஸ் ஸ்லேட் என்ற மனிதரிடம் ‘என்னுடைய குழந்தைகளைப் பிரிவதற்கு அவரே காரணம். அதற்காக அவர் கடவுளிடம் முழுமையாகப் பிரார்த்தனை செய்யவேண்டும். ஆனால், என் குழந்தைகளைக் கண்டுபிடிக்க உதவினால் கடவுள் அவர் செய்த பாவங்களை மன்னிக்கக்கூடும்.’

அர்கன்சஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஈஸ்டர் வேர் என்ற பெண் தன்னுடைய தந்தையான ஜேம்ஸ் வேர் என்பவரைத் தேடி நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டார். ‘தகவல் தேவை – அலபாமா டல்லேடேகா மாவட்டத்தில் என் தந்தை ஜேம்ஸ் வேருடன் 14வது வயது வரையில் வசித்தேன். பிறகு என்னுடைய எஜமானர் ஜிமிஸ் வேர் அவரை பென் ஆவரி என்பவருக்கு விற்றார். அவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் அவருடைய மகளிடம் தெரிவியுங்கள்.’

*

அட்ஹவ் பேட்டிசனைப்போலவே ஆண்டனி தாம்சனும் அவருடைய நண்பர்களும் அடிமைகளை விடுவிக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அதே சமயம் உடனடியாகச் செயல்படுத்தாமல் படிப்படியாக நிறைவேற்றினர். 1830ஆம் ஆண்டில் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஆண்டனி தாம்சனிடம் 39 அடிமைகள் இருந்ததாகப் பதிவாகியுள்ளது. 1836இல் தான் இறப்பதற்கு முன்னர் தன்வசமிருந்த அடிமைகளை விடுவிக்கும் உயிலொன்றை எழுதினார். அதன்படி ஹாரியட்டின் தந்தை பென் ராஸ் 1840ஆம் ஆண்டு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார். அவருடன் ஜெரி மனோகீ என்ற அடிமையும் விடுவிக்கப்பட்டார். இருவருக்கும் தலா 10 ஏக்கர் நிலத்தையும் வழங்கினார் ஆண்டனி தாம்சன். இவர்களைத் தவிர மற்ற அடிமைகளையும் எப்போது விடுவிக்கவேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார். குழந்தைகளை 44 வயதாகும்போது விடுதலை செய்யலாம் என்று எழுதினார்.

அவர் பண்ணையைச் சேர்ந்த பெண் அடிமைகள் அருகிலிருந்த மற்ற பண்ணைகளில் வேலைசெய்த அடிமைகளையோ அடிமையல்லாதவர்களையோ மணந்தனர். சில நேரங்களில் கணவனும் மனைவியும் ஒரே உரிமையாளரின் பண்ணையில் வேலைக்கமர்த்தப்படுவதுண்டு. மனநிறைவோடு குடும்ப வாழ்க்கை நடத்தும் அடிமைகளை விளைநிலத்துக்கு அருகிலேயே குடிவைத்தால் நன்றாக வேலைசெய்வார்கள் எனச் சில உரிமையாளர்கள் நம்பியதுதான் இதற்குக் காரணம்.

இப்படி அருகருகே அமைந்த பண்ணைகளைச் சேர்ந்த அடிமைகள் மணவாழ்வில் இணைந்ததால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் வாய்ப்பு அதிகரித்தது, அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. வெள்ளை உரிமையாளர்களின் குடும்பங்களோடு சமூக, பொருளாதாரப் பரிமாற்றம் நடந்து அதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையே தொடர்பு வலுப்பட்டது.

*

ஆண்டனி தாம்சனை இரண்டாவதாக மணந்துகொண்ட அட்ஹவ் பேட்டிசனின் பேத்தியான மேரி பேட்டிசன் ப்ராடஸ் தாம்சன் எதிர்பாராதவிதமாக 1810இல் இறந்துபோனார். மேரியின் மகன் எட்வர்டையும் அவருக்குச் சொந்தமான சொத்தையும் அடிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஆண்டனி தாம்சன் ஏற்றார். அதே காலகட்டத்தில் தாம்சனின் பண்ணையில் வசித்த பென் ராஸ், ரிட் அடிமைத் தம்பதியினருக்கு அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பிறந்தன. அரமிண்டா என்னும் மிண்டி என்னும் ஹாரியட் 1822இல் பிறந்தார்.

எல்லா அடிமைகளையும்போலவே ஹாரியட் பிறந்த தேதியும் யாருக்கும் தெரியாது. அறுவடைக் காலம், பழங்களைப் பறிக்கும் காலம், இலையுதிர் காலம் என்று பருவங்களைக் கணக்கில்கொண்டு பிறந்த சமயத்தைக் குறிப்பிடுவதுதான் வழக்கம். 1822ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஹாரியட் க்ரீனின் மகப்பேற்றுக்காக ஆண்டனி தாம்சன் மருத்துவச்சிக்கு 2 டாலர்கள் கொடுத்ததாகக் கணக்குப் புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தக் குறிப்பின் உதவியோடுதான் ஹாரியட்டின் பிறந்த தேதியையும் ஆண்டையும் கணக்கிட்டனர் வரலாற்றாளர்கள்.

ஹாரியட் பிறந்த அதே வருத்தில் எட்வர்ட் ப்ராடஸுக்கு 21 வயது முடிந்தது. அதுவரையில் மாற்றாந்தந்தையின் பாதுகாப்பிலிருந்த தன்னுடைய சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றான். தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமையைப் பெற்றான். தாயின் அடிமைகள் இப்போது எட்வர்டின் உடைமைகளாயினர். அடுத்த ஓரிரு வருடங்களில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் குடிபோனான் எட்வர்ட். பிறகு எலிசா ஆன் கீன் என்ற பெண்ணை மணந்துகொண்டான்.

1830இல் எட்வர்டிடம் ஒன்பது அடிமைகள் இருந்தனர். ரிட்டையும் அவரது குழந்தைகளையும் மட்டும் பத்து மைல் தொலைவில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் கூட்டிச்சென்றான் எட்வர்ட் ப்ராடஸ். பென் ராஸ் ஆண்டனி தாம்சனின் பண்ணையில் வேலைசெய்தார். எட்வர்டுக்கு ரிட்டின் எல்லாக் குழந்தைகளையும் பராமரிப்பதில் நாட்டமில்லை. ரிட்டையும் அவர் குழந்தைகளையும் அக்கம்பக்கத்துப் பண்ணைகளுக்கு வேலைசெய்ய அனுப்பிவைத்துக் கூலியைப் பெற்றுக்கொண்டான் எட்வர்ட். அத்தோடு நிற்காமல் ரிட்டின் மூத்த மகள்களைச் சட்டத்துக்குப் புறம்பாக மிஸ்ஸிசிப்பியைச் சேர்ந்த நில உரிமையாளருக்கு விற்றான். நிலைத்தன்மையோடு அமைதியாக இருந்த ராஸ் குடும்பத்தினரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன, குடும்பம் சிதறுண்டது. இளவயதில் தாயை இழந்த எட்வர்டை வளர்ப்பதில் ரிட்டின் பங்கும் இருந்திருக்கும். எனினும் ரிட்டின் குழந்தைகளை அவரிடமிருந்து பிரிப்பதில் எட்வர்டுக்கு எந்த வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை.

சிறுமியான மிண்டியின் உள்ளத்தில் இந்த நிகழ்வுகள் பெரும்தாக்கத்தை உண்டாக்கின. ‘கண்ணை மூடினால் குதிரைகளின் குளம்படிச் சத்தமும் பெண்கள், குழந்தைகளின் அலறலும் அழுகையும்தான் மனதில் தோன்றி அச்சுறுத்தும்,’ என்று பின்னொரு காலத்தில் சொன்னார் ஹாரியட் டப்மன்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள் appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு முக்கியமான சங்கம், பிளினியன் சங்கம். 1823-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 1826-ம் ஆண்டு டார்வின் இணைந்தார்.

பிளினியன் சங்கத்தில் ஏராளமான சுயேட்சை ஆய்வாளர்கள் இருந்தனர். பலர் தன்னிச்சையாக உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர், ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்.

கிரான்ட், டார்வினைவிடப் பதினாறு வயது மூத்தவர். பன்னிரண்டு ஆண்டுகள் மருத்துவராக இருந்துவிட்டு, கடல் உயிரிகளை ஆராய வேண்டும் என்பதற்காகப் பாதியில் வந்தவர். கிரான்டுக்கு அறிவியல், சமூகம் இரண்டிலும் ஆர்வம் இருந்தது. சமூகத்தின் பல சிக்கல்களுக்கு அறிவியல்தான் பதிலளிக்கும் என நம்பினார்.

இந்த கிரான்டைச் சந்தித்ததுதான் டார்வினின் வாழ்வில் பெரும் திருப்புமுனை. கிரான்ட்தான் முதன் முதலில் உயிரினங்களைப் பற்றியும் அவற்றின் தோற்றத்தைப் பற்றியும் பல கேள்விகளை டார்வினின் மனதிற்குள் விதைத்தார்.

0

கிரான்ட் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். பரிணாமக் கொள்கையை முன்வைத்து ஏராளமான ஆய்வுகளைச் செய்துவந்தார்.

உண்மையில் உயிரினங்கள் எப்படித் தோன்றின என்கிற கேள்வி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒருபக்கம் கடவுள்தான் உயிர்களைப் படைத்தார் என்ற எளிமையான பதில் சொல்லப்பட்டு வந்தாலும், அனாக்ஸிமேண்டர், அரிஸ்டாட்டில் தொடங்கி பல சிந்தனையாளர்கள் உயிரினங்களின் தோற்றத்திற்குப் பின் இருக்கும் அறிவியலை ஆராய முற்பட்டனர். இவ்வளவு ஏன், டார்வினின் தாத்தா எராஸ்மஸ்கூட எல்லா உயிர்களும் ஒரே மூதாதையரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்கிற பார்வையைத் தனது நூலில் முன்வைத்திருக்கிறார். இப்படித் துண்டுத் துண்டாகப் பல விளக்கங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் இணைக்கும் விதமாக முழுமையான பரிணாமக் கொள்கையை முன்மொழிந்தவர் பிரெஞ்சு அறிவியலாளர் ஜீன்-பாப்டிஸ்ட் லாமார்க். இவரைத்தான் கிரான்ட் தன் ஆதர்ச நாயகனாகக் கருதினார்.

லமார்க்கின் புரட்சிகர சிந்தனை, பிரெஞ்சு உலகில் கொண்டாடப்பட்டது. ஆனால் இங்கிலாந்திலோ பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக, திருச்சபை அதிகாரிகள் லமார்க்கின் பரிணாமக் கொள்கையை ஆபத்தானதாகக் கருதினர். அறத்திற்குப் புறம்பானதாக, சமூகத்தை அச்சுறுத்தும் கருத்தாகப் பார்த்தனர்.

பரிணாமக் கொள்கை, மனிதர்களும் விலங்குகள் வழி வந்தவர்கள் என்று சொல்லும் அதே நேரத்தில் கடவுள் மனிதனைத் தனது சாயலில் படைத்தார் என்கிற கிறிஸ்தவத்தின் அடிப்படையான கூற்றை மறுக்கிறது அல்லவா? இதுதான் பிரச்னை. அதேபோல கடவுள் மேலே, திருச்சபை ஊழியர்கள் நடுவே, சாமானியர்கள் கீழே என அதிகாரம் உருவாக்கி வைத்திருந்த சமூகப் படிநிலையையும் பரிணாமக் கொள்கை கேள்வி எழுப்பியது.

இதனாலேயே திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்த கல்விநிலையங்களில் பணியாற்றி வந்த பல அறிவியலாளர்கள், இயல்பாகவே பரிணாமக் கொள்கையை ஏற்காமல் அமைதி காத்தனர். கிரான்டைப் போன்ற சில தன்னார்வ இளைஞர்கள்தான் லமார்க்கின் சிந்தனையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆய்வுகளைத் தன்னிச்சையாக முன்னெடுத்தனர்.

கிரான்ட், ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பரிணாமக் கொள்கையை விவாதித்தார்.

இறுதியாக எடின்பர்க் திரும்பிய அவர், தாவரங்கள் – விலங்குகளுக்கு இடையேயான தொடர்பை ஆராய வேண்டி, கடற்பஞ்சுகள் (Sea Sponges) என அறியப்பட்ட உயிர்களை ஆராய்ந்தார். இந்த ஆய்வுக்கு அவர் தேர்ந்தெடுத்த உதவியாளர்தான் டார்வின். டார்வினுக்கும் கிரான்டின் கருத்துக்கள் மீது ஈர்ப்பு இருந்தது. அவருடன் சேர்ந்து பயணிப்பதை விரும்பினார்.

கிரான்ட், டார்வினை கடலுக்கு அழைத்துச் சென்றார். கடற்கரையில் ஆய்வுகள் குறித்து ஏராளமாக உரையாடினார். பல விஷயங்களை டார்வினுக்குப் போதித்தார். எப்படி ஆய்வைத் தொடங்க வேண்டும், எந்த மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும், கண்டறிந்த விஷயங்களை எப்படி ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும் என ஆய்வின் அடிப்படைகள் அனைத்தும் டார்வினுக்கு கிரான்ட் வழங்கியதுதான்.

கிரான்ட், எடின்பர்க்கில் இருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் ஒரு கடற்கரை வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு ஓதநீர்க் குட்டைகளைக் கண்டறிந்து அதிலிருந்து கடற்பஞ்சுகளையும், கடலிறகுகளையும் (Sea-Pens), பவளப்புழு இனம் அமைக்கும் தட்டைப் பாறைகளையும் (Sea mat) சேகரித்தார். அந்த உயிரிகள் முட்டையில் இருந்து எப்படி வளர்கின்றன என்பதை நுண்ணோக்கிகளைக் கொண்டு ஆராய்ந்தார்.

தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் இருபது ஆய்வுக்கட்டுரைகளாக எடின்பர்க் ஆய்விதழில் வெளியிட்டார். இதுவே கிரான்டுக்கு ஐரோப்பா முழுவதும் பெரிய புகழைப் பெற்றுத்தந்தது.

கிரான்டின் வழிகாட்டலுடன் டார்வினும் கடல் உயிர்களை ஆராயத் தொடங்கினார். எடின்பர்க் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வெர்னியன் இயற்கை வரலாற்று சங்கம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அங்கு சென்று உரைகள் ஆற்றுவது கிரான்டின் வழக்கம். இந்தக் கூட்டங்களுக்கு டார்வினையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார் கிரான்ட். சங்கக் கூட்டங்களில் பொதுவாக மாணவர்கள் உரையாற்ற அனுமதி கிடையாது. ஆனால் விருந்தினராகக் கலந்துகொள்ளலாம். இந்தச் சங்கத்தில் கடற்பஞ்சுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்த கிரான்ட், தனது கண்டுபிடிப்புகளில் டார்வின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இதுதான் டார்வினுக்கு பொதுவில் கிடைத்த முதல் அங்கீகாரம். அங்கே எழுந்த கரகோஷம் அவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே பூரித்துப்போனார். அப்போது, என் தந்தை சொன்னதுபோல் நான் உபயோகமற்றவன் இல்லையா? என்னாலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? டார்வினுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. மேலும் புதிய விஷயங்களைத் தேடினார். தனியாக ஓர் ஆய்வை நிகழ்த்தத் திட்டமிட்டார்.

ஆனால் எந்த ஓர் ஆய்வும் அதற்கு முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் இல்லையா? அதனால் கிரான்ட் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, கடற்பாசி வகையைச் சேர்ந்த Flustra எனும் உயிரியை டார்வின் ஆராயத் தொடங்கினர். அதன் உடலில் உள்ள முடிபோன்ற (Cilia) அமைப்பைக் கண்டறிந்தார். தன் கண்டுபிடிப்பை வெர்னியன் இயற்கை வரலாறு சங்கத்தில் சமர்ப்பித்தார். இதுதான் டார்வினின் முதல் கண்டுபிடிப்பு.

தனியாகப் பார்க்கும்போது இது ஒன்றும் அத்தனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்று தோன்றலாம். ஆனால் கிரான்ட் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

கிரான்ட் நிறுவ நினைத்தது இதுதான். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஓர் இணைப்பு இருக்க வேண்டும். தாவரங்கள் பாசி வகையில் இருந்து வந்துள்ளன. பாலூட்டிகள் குழாயுடலி (polyps) எனப்படும் கடல் உயிர்களிலிருந்து தோன்றி இருக்கின்றன. இவை இரண்டின் முட்டைகளை ஆராய்ந்தால் ஒற்றுமை இருப்பது தெரியும். இவை இரண்டையும் இணைக்கும் பொது மூதாதையர் இருக்க வேண்டும். அந்த மூதாதையரைப் பின் தொடர்ந்து சென்றால் ஒருமைப் புள்ளி ஒன்று இருக்க வேண்டும். இந்த ஒருமைப்புள்ளிதான் உயிரற்ற பொருட்களையும் உயிர்களையும் இணைக்கும் புள்ளி. அதில் இருந்துதான் இன்றைய சிக்கலான உயிரினங்கள் பரிணமித்து வந்திருக்க வேண்டும். இதுதான் கிரான்ட் நிறுவ நினைத்தது. இந்தக் கருத்தை இப்போது டார்வினின் ஆய்வும் வலுப்படுத்தியது.

டார்வின் ஆராய்ச்சி செய்த ஃப்லஸ்ட்ரா எனும் உயிரி, பிரையோசோவா (bryozoa) என அறியப்பட்ட பாசி போன்ற உயிரினத்தின் பிரிவைச் சேர்ந்தது. அந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் தாவரம் என்றே கருதி வந்தனர். ஆனால் டார்வின் அதன் உடற்பாகங்களை ஆராய்ந்து சிலியா எனும் பாகத்தைக் கண்டறிந்தது மூலம் அது விலங்கினத்தைச் சார்ந்தது என நிரூபித்தார். காரணம், அந்தக் குறிப்பிட்ட பாகம் பொதுவாக விலங்குகளுக்கே உடையது.

இதையடுத்து ஒட்டுமொத்த பார்வையில் பார்க்கும்போது அந்தக் குறிப்பிட்ட உயிரினம், தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் புள்ளியாக இருக்கலாம். இதுபோன்ற உயிரினங்களில் இருந்து பிரிந்துதான் தாவரங்கள் தனியாக, விலங்கினங்கள் தனியாக பரிணமித்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவரது ஆய்வு முன்வைத்தது.

டார்வினின் கண்டுபிடிப்பைக் கேட்டறிந்த கிரான்ட், அகம் மகிழ்ந்துபோனார். எழுந்துவந்து டார்வினைக் கட்டி அணைத்துக்கொண்டார். டார்வினின் கண்டுபிடிப்பு பரிணாம கொள்கை குறித்த ஆய்வுகளுக்கு எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது என்று விளக்கினார்.

‘ஒவ்வொரு விலங்கும் தனித்தனியாக படைக்கப்பட்டுள்ளது என்பது தவறு. இதனை உயிரினங்களுக்கு இடையேயான உடல் அமைப்புகளில் உள்ள ஒற்றுமையைப் பார்த்தாலே அறிந்துகொள்ளலாம். மனிதர்களில் இருந்து சிறிய நுண்ணுயிர்கள் வரை ஒரே வகையான உறுப்புகள்தான் இருக்கின்றன. இதனால் நாம் அறிவது ஒன்றுதான். எல்லா விலங்குகளுக்கும் தொடர்புண்டு. எல்லாம் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. நுண்ணியிர்களிடம் எளிமையான உறுப்பாக இருப்பது, மனிதர்களிடம் சிக்கலான வடிவில் இருக்கிறது. அவ்வளவுதான். இதனால் நாம் கண்டடையும் உண்மை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் தொடர்ச்சி இருக்கிறது. லமார்க் சொல்வதுபோல் உயிர்கள் ஒவ்வொன்றும் முந்தைய உயிரில் இருந்து பரிணாமம் அடைந்துதான் வந்துள்ளன. இதுதான் உண்மை.’ என்று கூறினார்.

டார்வின் கிரான்டின் உரையைக் கேட்டு மெய்மறந்து நின்றார். அவரால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கிறது என்று நம்பவே முடியவில்லை. அண்டம் விடுத்துள்ள மிகப் பெரிய மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்கப் பங்காற்றி இருக்கிறோம் என்ற எண்ணமே டார்வினைத் துள்ளிக் குதிக்கச் செய்தது. அவர் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பி இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை.

கிரான்ட் தன் உரையை முடித்தவுடன் பிளினியன் சங்கத்தில் உறுப்பினராக இருந்த பிரவுன் என்பவர் எழுந்து, ‘இந்தக் கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களை படைக்கவில்லை என்பதை நிறுவுகிறது’ என்று கூச்சலிட்டார். அவ்வளவுதான். கொஞ்ச நேரத்தில் அங்கு கலவரமே வெடித்துவிட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த திருச்சபை அமைச்சர்கள் பிரவுனின் மேல் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பிரவுன் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கிழிக்கவும் முற்பட்டனர். டார்வினின் கண்களுக்கு முன்னாலேயே பிரவுனின் கண்டுபிடிப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. இனிமேல் இப்படியான ஆய்வுகள் வெளிவந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றும் திருச்சபை ஊழியர்கள் கூச்சலிட்டனர்.

நடப்பதைக் கண்டு டார்வின் அதிர்ந்துபோய் நின்றார். டார்வினுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. அண்டம் குறித்தான ஒவ்வொரு பதிலுக்கும் நேர்மறை விளைவுகள் மட்டுமல்ல, எதிர்மறை விளைவுகளும் உண்டு. அதையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அது.

டார்வின் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார்.

(தொடரும்)

 

______

படம்: ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்

The post டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு appeared first on கிழக்கு டுடே.

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர்.

படாசன் நகரத்தைக் கடக்கவே பதிமூன்று தினங்களை போலோ குழுவினர் செலவிட நேர்ந்தது. படாசன் நகரை ஆண்ட மன்னர் பரம்பரை, அலெக்சாண்டரில் இருந்து தொடங்குவதாக எண்ணி தங்கள் அரசை நடத்தி வருகின்றனர் என்றும், அந்தப் பகுதி அரசர்கள் சுல்கர்னைன் என்ற பட்டத்தைத் தங்கள் பெயருக்கு முன் சூடிக் கொள்கின்றனர் என்றும் போலோ அறிந்துகொண்டார்.

படாசன் என்ற நகரம் இயற்கையான கணவாய்களையும் கோட்டைகளையும் கொண்டு திகழ்வதால் இந்தப் பகுதியை மாற்று அரசுகள் படை எடுத்துத் தாக்குவது மிகவும் சிக்கலானது என்று நிகோலோ போலோ விளக்கினார்.

படாசன் நகரைக் கடக்கும்போது மார்க்கோ போலோ கடுமையான காய்ச்சலால் துன்புற நேர்ந்தது. ஏற்கெனவே இந்தப் பாதையில் நிகோலோ பயணித்திருந்ததால், அந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று தனது மகனின் காய்ச்சலுக்குத் தகுந்த மருத்துவ உதவியைப் பெற்றார்.

மார்க்கோ போலோவின் காய்ச்சல் குணமானவுடன் நிகோலோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். கடுமையான நிலப்பகுதிகளைக் கடந்து அடுத்ததாக அவர்கள் சென்றடைந்த பகுதி, காஷ்மீர். காஷ்மீரில் சிலை வழிபாடு மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. இந்தப் பகுதி மக்கள் தங்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட எதையும் செய்வதில்லை என்று மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார்.

வெனிஸ் நகரத்தில் இருந்து பல பொருட்களை, பட்டுப்பாதை வழியாக வணிகர்கள் மூலம் காஷ்மீரத்து மக்கள் பெறுகின்றனர் என்ற செய்தியும் மார்க்கோ போலோவுக்கு வியப்பைத் தந்தது. காஷ்மீரிலிருந்து பயணித்ததால் சில நாட்களில் பெருங்கடலை அடையலாம் என்ற தகவலையும் மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார். இந்தப் பகுதியை ஆட்சி செய்யும் அரசர்கள் துறவிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதை மார்க்கோ போலோவின் உறவினர் மாப்பியோ விளக்கினார்.

காஷ்மீரில் வசிக்கும் மக்கள் விலங்குகளைக் கொல்வதில்லை. மாறாக விலங்குகளைத் தங்களின் வழிபாட்டு நிலையில் வைத்து வணங்குகின்றனர். கெஷ்மீர் என்றழைக்கப்படும் இப்பகுதியில் வாழும் மக்கள் அரிசி, பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பகுதி அதிகமான குளிரும் இல்லாமல், அதிகமான வெயிலும் இல்லாமல் இதமான தட்பவெப்பத்தைக் கொண்ட பகுதியாக இருக்கிறது எனப் பல விஷயங்களை மார்கோ போலோ தெரிந்துகொண்டார். வெனிஸிலிருந்து புறப்பட்டு சில ஆண்டுகள் பயணித்து, பல நகரங்களை மார்க்கோ போலோ குழுவினர் கடந்திருந்தனர்.

மார்க்கோ போலோவின் குறிப்புகளைக் கொண்டு காஷ்மீர் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், அவருடைய சில குறிப்புகள் காஷ்மீரின் பதின்மூன்றாம் நூற்றாண்டை ஓரளவு வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிடுவது இங்கு பதியத்தக்கது.

இதற்கடுத்து காஷ்மீர் நகரிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்காமல், வடகிழக்குப் பாதையில் நிகோலோ போலோ குழுவினரின் பயணம் தொடங்கியது.

காஷ்மீரிலிருந்து பன்னிரண்டு நாட்கள் மலைகளுக்கு இடையே பயணித்து, படாசன் நகரை ஆட்சி செய்யும் அரசனின் சகோதரரால் ஆளப்படும் வகான் என்ற நகரை இக்குழுவினர் அடைந்தனர். அந்நகரில் மூன்று நாட்கள் பயணித்து, உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகளைக் கடந்து, கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் பயணம் தொடர்ந்தது. போலோர் நகரைக் கடந்து காஷ்கர் என்னும் பகுதியை நிகோலோ குழுவினர் அடைந்தனர். இந்தப் பாதைகளில் சில நாட்கள் குதிரைகளுக்கு உணவுகூட இல்லாமல் பயணிக்க நேர்ந்தது.

காஷ்கர், சீன ஆட்சிக்குட்பட்ட மேற்குப் பகுதி. ஒரு காலத்தில் காஷ்கர் தனித்த ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது குப்ளாய்கானின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

காஷ்கர் பகுதி மக்கள் பல வகையான வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை வணிகரான போலோவின் தந்தை விளக்கினார். மேலும், காஷ்கர் பகுதியில் முகமது கடவுளை வழிபடும் மக்களும், கிறித்தவக் கடவுளை வழிபடும் மக்களும் வாழ்வதை அறிந்துகொண்டார். இப்படிப் பல அனுபவங்களையும், நிலவியலால் பல தடுமாற்றங்களையும் கடந்து சமர்கண்ட் என்ற பகுதியை அடைந்தபோது நிகோலோ குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர்.

சமர்கண்ட் பகுதியை ஆட்சி புரிந்த சகதை என்பவர், கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய அரசராக ஆட்சி புரிந்தார். சமர்கண்ட் பகுதியின் காவலர்கள் நிகோலோ குழுவினரை சகதை முன் அழைத்துச் சென்றபோது அரசன் மிகவும் மகிழ்ந்துபோனார். கிறிஸ்தவம் செழிப்பாக இருக்கும் நிலப்பகுதியில் இருந்து வந்திருந்த நிகோலோ குழுவினர் மிக மரியாதையாக அங்கு நடத்தப்பட்டார்கள்.

உலகின் சக்தி வாய்ந்த அரசனைச் சந்திக்கப் போகும் கனவில் தனது தந்தையுடன் பயணத்தைத் தொடர்ந்த மார்க்கோ போலோ, வழியில் பல சிரமங்களைக் கடந்து உடல் நலிவுற்று ஒருவழியாக அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில் appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்!

பதினாறு வயதில் டார்வின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலச் சென்றார். அவரது தந்தை ஏற்கெனவே சில நாட்கள் தன்னுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பயிற்சிகள் எல்லாம் கொடுத்துதான் அனுப்பி வைத்தார். டார்வினும் தந்தைக்குச் செய்த சிறுசிறு உதவிகளை எல்லாம் எண்ணி பல்கலைக்கழகம் தனக்குப் பிடித்த இடமாக இருக்கும் என்று நம்பிச் சென்றார். ஆனால் அங்கே எல்லாம் இவர் நினைத்ததற்கும் தலைகீழாக இருந்தது.

எடின்பர்க் பல்கலைக்கழகம் முழுக்கவும் அதிகாரத்தின் கோரப்பிடியில் இருந்தது. அப்போதைய ஐக்கிய ராஜ்ஜியம் இரண்டு பெரும் கட்சிகளாகப் பிரிந்திருந்தது. ஒரு கட்சியினர் விக்குகள் (Whigs) என அறியப்பட்டனர். இன்னொரு பிரிவினர் டோரிக்கள் (Tories) என அழைக்கப்பட்டனர். இதில் டோரிக்கள் பாரம்பரிய, பழமைவாத நம்பிக்கை கொண்டவர்கள். திருச்சபை ஆதாரவாளர்கள். முடியாட்சி, சமூக ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள். அதிகாரத்தின் சலுகையை அனுபவித்து வந்தவர்கள். இவர்களுடைய எதிர்த்தரப்பினர், விக்குகள். இவர்களும் அரசரை ஏற்பவர்கள்தாம். ஆனால் அரசருக்கே சர்வ அதிகாரமும் என்று இல்லாமல், தனிநபர் சுதந்திரம், பாராளுமன்ற அரசியல், அனைவருக்கும் சம உரிமை ஆகியவற்றை வேண்டியவர்கள்.

இந்த இரு கும்பலும்தான் எலியும் பூனையும்போல அடித்துக்கொண்டன. இதில் டார்வினின் குடும்பம் விக்குகளை ஆதரித்தது. இதற்குக் காரணமும் இருந்தது. 50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் டோரிக்கள் பல்கலைக்கழகத்தையே நாசமாக்கி வைத்திருந்தனர்.

குறிப்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் இல்லாமல், உள்ளூர் டோரிக்களின் சபையே கட்டுப்படுத்தியது. பேராசிரியர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரை டோரிக்கள் சபைதான் தேர்ந்தெடுத்தது. அவர்களுக்குக் கல்வித் தகுதி இருக்கிறதா என்பதைவிட அரசியல் தகுதி இருக்கிறதா என்பதையே ஆராய்ந்தது.

திருச்சபை விசுவாசிகளே பணியிடங்களை நிரப்பினர். குடும்பச் செல்வாக்கைப் பயன்படுத்தி, தந்தை, மகன், பேரன் என வாரிசுகளே அங்கு பேராசிரியர்களாக இருந்தனர்.

இதுவே அவர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் நிலவ காரணமாக இருந்தது. பேராசிரியர்கள் யாரும் மாணவர் நலனில் அக்கறையெடுத்துப் பாடம் நடத்துவதுபோல தெரியவில்லை. வகுப்பறையில் இருப்பதைவிட மதுவிடுதிகளில்தான் அதிகம் நேரம் செலவழித்தனர். அங்கிருந்தே பாடத்திற்கான குறிப்புகளைக் கொடுத்தனுப்பினர். மாற்றுக் கருத்துக்கள் கொண்ட மாணவர்களை வஞ்சிக்கவும் செய்தனர். பல்கலைக்கழகத்தின் பெருமை எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பளபளத்தது. உள்ளே நிர்வாகம் அழுகிக்கொண்டிருந்தது.

இதனாலேயே மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்தைத் தாண்டிச் சுற்றியுள்ள கல்வி விடுதிகளில் பாடம் பயின்றனர். அப்போது எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சுற்றி ஏராளமான சிறிய தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. நிறுவனங்கள் என்று சொல்வதைவிட விடுதிகள் என்றால் சரியாக இருக்கும்.

ஒரு சிறிய வகுப்பறை. ஒரு சோதனைக்கூடம். இதுதான் கட்டமைப்பு. அங்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் எனப் பலரும் கட்டணம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர். இவர்களிடம் கற்பதைத்தான் மாணவர்களும் விரும்பினர். இந்தப் புதிய சிந்தனையாளர்கள் பேசிய அரசியல், மரபார்ந்த விழுமியங்களின் மீதான அவர்களது தாக்குதல் இளம் வயதினரை இயல்பாகவே ஈர்த்தது.

டார்வினுக்கோ வகுப்பில் இருக்கவும் பிடிக்கவில்லை. வெளியே படிக்கவும் விருப்பமில்லை. யார் வம்புக்கும் செல்லாமல், தனி அறையில் அமர்ந்து தனாகப் படித்துக்கொண்டிருப்பார். பல்கலைக்கழகம் சென்று நூலகத்திலிருந்து எல்லாப் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார். இரவு பகலாக உட்கார்ந்து படிப்பார். அதன்பிறகுதான் தூக்கம், சாப்பாடு எல்லாமே.

ஆனாலும் டார்வினுக்கு மருத்துவப் படிப்பு உவக்கவில்லை. காரணம், பாடப்புத்தகத்தைத்தாண்டி அவர் செய்ய வேண்டி இருந்த உடற்கூராய்வு சோதனைகள்.

டார்வினுக்கு ரத்தத்தைப் பார்த்தாலே பயம். குறிப்பாக அறுவை சிகிச்சையை அவர் வெறுத்தார். அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு என்று தனித்தனி அறுவை சிகிச்சைக் கூடங்கள் இருந்தன. அங்கே பிணங்கள் கொட்டிக் கிடந்தன. உடல் அறுபட்டு, கைகள் ஒருபக்கம், கால்கள் ஒருபக்கம் துண்டுத் துண்டாக விரவி கிடந்தன. பிணத்தின் வாடை குமட்டலை ஏற்படுத்தும். அந்த அறையில் இருப்பதே டார்வினுக்கு மூச்சு முட்டும்.

அறுவை சிகிச்சை செய்யும் முறையும் அப்போது குரூரமானதாக இருந்தது. மயக்க மருந்துகள் புழக்கத்தில் வராத காலகட்டம் அது. இதனால் உடல் பாகங்களை வெட்டி எடுக்கும்போது நோயாளிகள் வலி தாங்க முடியாமல் கத்துவர். கேட்கவே கோரமாக இருக்கும். அதேபோல உடல் பாகங்களை வெட்டுவதற்குப் பழைய அழுக்கடைந்த துருப்பிடித்த கத்திகள்தான் பயன்படுத்துவார்கள். கைகளைச் சுத்தம் செய்வதற்குக்கூட வழி கிடையாது. உடலை வெட்டி அதிலிருந்து பீறிட்டு வரும் ரத்தத்தை வாளியில் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கேட்கவே குரூரமாக இருக்கும் இத்தகைய காட்சிகளை டார்வினால் கல்வி நிலையங்களில் அனுபவிக்க முடியவில்லை. மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்வதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருமுறை குழந்தை ஒன்றுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. குழந்தை கதறுவதைப் பார்க்கச் சகிக்காத, டார்வின் அறையை விட்டு ஓடிவிட்டார். இனிமேல் அறுவை சிகிச்சைக் கூடத்திற்கு வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அந்தக் காட்சியே வாழ்க்கை முழுவதும் அவரை அச்சுறுத்தியது. இதனாலேயே அவர் மருத்துவத்தை வெறுத்தார்.

இந்த அவலமான நாட்களில் டார்வினுக்கு இருந்த இரண்டே ஆறுதலான விஷயங்கள், வேதியியலும் கடற்கரையும். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களில் வேதியியல் சோதனைகளை மட்டுமே டார்வின் ஆர்வமுடன் செய்தார். அதேபோல மாலை நேரங்களில் கடற்கரையில் அலைந்து திரிந்து கணவாய், நத்தை, கடல் எலி, கடல் அட்டை ஆகியவற்றைச் சேகரித்தார்.

பறவைகள் மீதும் டார்வினுக்கு ஆர்வம் வந்தது. பறவைகளை உற்று நோக்கக் காற்றுக்கொண்டார். அவற்றின் நடத்தைகளை, வாழ்விடங்களைப் புத்தகத்தில் குறித்து வைத்தார். வேட்டையாடிய பறவைகளைப் பாடம் செய்தார்.

பாடம் செய்யும் செயல்முறையை டார்வினுக்குக் கற்றுக்கொடுத்தது, சார்லஸ் வாட்டர்டன் எனும் முன்னாள் கறுப்பின அடிமை. அடிமையாக இருந்து தனியார் ஆசிரியராக மாறிய அவர், தான் சந்தித்த அனுபவங்களை, பயணித்த நிலங்களை விவரிப்பார். குறிப்பாகத் தென் அமெரிக்க மழைக்காடுகளில் சந்தித்த மிருகங்களை, அவற்றின் வாழ்வியலைச் சுவைபடக் கூறுவார். இந்தக் கதைகளைக் கேட்கவே டார்வினுக்குப் பிடிக்கும். இதற்காகவே தவறாமல் அவரது வகுப்பிற்குச் சென்றுவிடுவார். நேரம் போவது தெரியாமல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருப்பார். இதன் காரணமாகவும் டார்வினுக்குப் பயணத்தின் மீதான ஆர்வம் துளிர்விட்டது.

பல்கலைக்கழகத்தில் அவர் கடைபிடித்துவந்த மற்றொரு பழக்கம், தவறாமல் தனது சகோதரிகளுக்குக் கடிதம் எழுதுவது. தினசரி அனுபவங்களை, கற்றறிந்த விவரங்களைச் சகோதரிகளுக்கு விளக்குவார். அதேபோல அனுபவிக்கும் இன்னல்களையும் விவரிப்பார். அவர்களோ டார்வினுக்கு ஆறுதல் சொல்லி, அவரை ஊக்கப்படுத்தி பதில் கடிதம் எழுதுவர்.

டார்வினின் சகோதரி சூசன், ‘உன் கஷ்டம் புரிகிறது சார்லஸ். ஆனால் வாழ்க்கை என்பதே கடினமானதுதான். அதில் நீ தேடி கண்டடையும் ஞானமே உனக்கு மகிழ்ச்சியைத் தரும்’ என்று எழுதுவார். இன்னொரு சகோதரி கரோலின், டார்வினுக்கு ஆன்மீக ஊக்கங்களை வழங்குவார். ‘நீ பயிலும் மருத்துவம் அருள் வாய்ந்தது. நீ இறந்தபின் சொர்க்கத்திற்குச் செல்லத் தேவையான அருளை உனக்குப் பெற்றுத்தர வல்லது’ என்பார். இப்படியாகச் சகோதரிகளின் அன்பான வார்த்தைகளே டார்வினை இயக்கின.

ஆனாலும் டார்வினால் மருத்துவப் படிப்பில் முழுதாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. வகுப்புகளில் கவனம் இல்லாமல் இருந்தார். இதை ஒரு பேராசிரியர் கவனித்துவிட்டு டார்வினின் தந்தைக்குத் தெரியப்படுத்தவே, அவர் கோபமாக ‘நீ படிப்பில் கவனம் செலுத்தாமல் சோம்பேறியாகச் சுற்றிக்கொண்டிருந்தால் ஒன்றுமில்லாமல் போவாய்’ என்று கடிதம் எழுதினார்.

டார்வினுக்கு அச்சம் பிறந்தது. பிடிக்காத பாடம். பிடிக்காத சூழல். எதிலுமே ஆர்வம் வரவில்லை. எதிர்காலம் என்னவாகப்போகிறது? தந்தை சொன்னதுபோல ஒன்றுமில்லாமல் முடிந்துவிடுவோமா?

ஆனால் அப்போதே மற்றொரு எண்ணமும் வந்தது. இல்லை, என் தந்தை ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும்கூட நிராதரவாக நிற்கும் நிலை ஏற்படாது. இதுபோதும். பார்த்துக்கொள்வோம்.

இந்த எண்ணமே அவருக்குத் துணிச்சலைக் கொடுத்தது. விரும்பியதுபோல வாழ முடிவெடுத்தார். வகுப்புகளுக்குச் செல்வதையே முற்றிலுமாக நிறுத்தினார்.

பொழுதுகளை வீணாகக் கழித்தார். அவர் எண்ணம் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது. அப்போதுதான் அவருக்கு மாணவர் சங்கங்களுடனான தொடர்பும் ஏற்பட்டது. விளையாட்டாக அவர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்து, அங்கே கிடைத்த அனுபவங்கள்தான் டார்வினின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.

(தொடரும்)

The post டார்வின் #4 – வேண்டாம் மருத்துவம்! appeared first on கிழக்கு டுடே.

மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

பட்டுப் பாதையில் பயணத்தைத் தொடங்கிய நிகோலா போலோவும், அவரது உறவினர் மாப்பியோ போலோவும் செங்கீஸ்கானின் பேரன் குப்ளாய்கானைச் சந்தித்தனர்.

மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் நன்மதிப்பைப் பெற்ற நிகோலோ போலோ, அரசனின் தூதராகச் சில செய்திகளைப் போப் தலைவரிடம் கொண்டு செல்லும் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். அதன்படி கிறித்தவ அறிஞர்கள் நூறு பேரையும், இயேசுவின் கல்லறையில் இருக்கும் புனித எண்ணெய்யும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வெனிஸ் நகரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

வெனிஸ் நகரத்தில் மகனையும் உறவுகளையும் சந்தித்து குப்ளாய்கானின் தூது பணிக்காக அடுத்த பயணத்தைத் திட்டமிட்டபோது தனது மகன் மார்க்கோ போலோவும் உடன் வர, பெரும் பயணம் தொடங்கியது. தனது தந்தையுடன் பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ பல நிகழ்வுகளைக் கண்ணுறும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து குப்ளாய்கானின் தூது பணிக்காக எல்லோரும் போப் தலைவரைச் சந்திக்கச் சென்றனர்.

1269-ல் போப் தலைவர் போப் க்ளெமென்ட் மரணமடைய, புதிய போப் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதை அறிந்த மார்க்கோ போலோவின் தந்தை, தனக்கு நெருக்கமான கிறித்தவ ஆலயத்தின் தலைவர் கிரிகோரி எக்ஸ் என்பவரைச் சந்தித்து மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் செய்திகளைக் கூறினார். இதற்குப் பதிலளித்த கிரிகோரி எக்ஸ், கார்டினல்கள் இன்னும் புதிய போப் யாரையும் தெரிவு செய்யவில்லை எனப் பதிலளித்தார்.

1269 முதல் 1971 வரை புதிய போப் தேர்ந்தெடுப்பதில் கடுமையான சிக்கல்களைக் கத்தோலிக்க திருச்சபை சந்தித்தது. கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிட்டத்தட்ட 33 மாதங்கள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படாத நிலை இந்தத் தேர்தலில்தான் நீடித்து வந்தது.

உலகின் சக்தி வாய்ந்த அரசன் குப்ளாய்கானின் நட்பைக் கைவிட விரும்பாத போலோக்கள், தம் மகன் மார்க்கோ போலோவையும் அழைத்துக் கொண்டு ஏக்ரே என்ற நகரத்தை மீண்டும் அடைந்தனர். அங்கு ஏற்கெனவே சந்தித்த கிரிகோரி எக்ஸ் என்ற திருச்சபைத் தலைவரைச் சந்திக்கக் காத்திருந்தும் அவரைச் சந்திக்க இயலவில்லை.

புதிய போப்பும் தேர்வாகவில்லை என்ற செய்தி கிடைக்க, வேறு வழியில்லாமல் ஆசியாவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்க இருந்த நேரத்தில் அவர்களை ஒரு தூதர் சந்தித்தார். அவர்களுக்கு ஆச்சரியமூட்டும் ஒரு செய்தி கிடைத்தது.

புதிய போப் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்றும், 2 வருடம் ஒன்பது மாதங்களாக நடைபெற்ற தேர்தலில் நிகோலோவின் நண்பரான கிரிகோரி எக்ஸ்தான் இப்போது போப் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்து அது. இதைக் கேட்டதும் போலோக்கள் மகிழ்ந்தனர்.

போப் தங்கியிருக்கும் அரண்மனைக்குச் சென்று, புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிகோரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின் சில நாட்கள் கழித்து மங்கோலிய அரசன் குப்ளாய்கான் கேட்ட சில விபரங்களைப் புதிய போப்பிடம் தெரிவித்தார். உடனே அவரும் புனித எண்ணெய்யை ஒரு குடுவையில் அளித்தார்.

அதே சமயம் குப்ளாய்கான் கேட்ட நூறு கிறிஸ்தவ அறிஞர்களை உடனடியாக அனுப்ப இயலாது என்றும், சிறிது காலத்திற்குப் பின்னர் அனுப்புவதாகவும் கூறிய கிரிகோரி, இப்போதைக்கு இரண்டு கிறித்தவ அறிஞர்களை மட்டும் போலோக்களுடன் அனுப்புவதாகக் கூறினார். இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு போலோக்களும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களது பயணத்தில் இடையூறு ஏற்பட்டது. போலோக்களுடன் வந்த இரண்டு கிறித்தவ அறிஞர்களும் மங்கோலியர்களைப் பற்றி அறிந்து, அங்கு சென்றால் உயிர் வாழ்வது சிரமம் என அஞ்சினர். இதையடுத்து போலோக்களுக்குத் தெரியாமலேயே தப்பிச் சென்றனர். இது தெரிந்தவுடன் போலோக்கள் திகைத்துவிட்டனர்.

ஆனால் வேறு வழியின்றி மீண்டும் பயணத்தைத் தொடங்கிய நிகோலோ, மார்க்கோ போலோவுக்கு பயணங்களின் நிலைகளையும், மங்கோலிய அரசு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் எடுத்துக்கூறினார்.

புதிய போப் தேர்வு செய்வதற்கு எவ்வாறு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனதோ அதேபோல மார்க்கோ போலோ குழுவினரின் பயணமும் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளைக் கடந்தது. போலோக்கள் தங்களின் பயணத்தின் வழியில் கடுமையான பாலைவனங்களைக் கடக்க மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

வழியில் குளிர்காலங்களையும், கடும் கோடைக் காலங்களையும், மழைக்காலங்களையும் அவர்கள் சந்தித்தனர். ஆனாலும் மங்கோலிய அரசனைக் காண வேண்டும் என்ற முனைப்பில் அவர்களது பயணத்தைத் தொடர்ந்தது. பல நகரங்களைக் கடந்து வந்த போலோக்கள், வழியில் பாக்தாத் என்ற நகரை அடைந்தனர்.

வழியில் பார்த்த அழகிய நகரங்களில் அனைத்திலும், மிக முக்கிய நகரமாக பாக்தாத்தைக் குறிப்பிடும் மார்க்கோ போலோ, பாக்தாத் நகரத்தின் நடுவில் பாயும் நதி இந்தியப் பெருங்கடலுக்கு அழைத்துச் செல்லும் பயண நதியாகவும் திகழ்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

பாக்தாத் நகரிலிருந்து கடலுக்குப் பயணிக்கச் சுமார் 18 நாட்கள் ஆகின்றன என்றும், இந்தப் பகுதியில் சுவையான பேரிச்சம் பழங்கள் கிடைக்கின்றன என்றும் பதிகிறார்.

பாக்தாத் பற்றி வியப்பாகப் பல செய்திகளைக் கூறினாலும், குறைவான செய்திகளையே மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். பாக்தாத் நகரை அடுத்து வழியில் ஈரானின் தப்ரீஸ் நகரை அடைந்தபோது சிறிய இளைப்பாறுதலை மார்க்கோ போலோ குழுவினர் அடைந்தனர்.

தப்ரீஸ் நகரில் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்து பெர்சியா சென்றனர். அங்கிருந்து மிக அழகியக் குதிரைகள், நிலப்பகுதி வழியாக இந்திய அரசர்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதையும் போலோ பதிவு செய்துள்ளார்.

பெர்சியாவுக்கு அடுத்து அவர்கள் பயணப்பட்ட நகரம் யாஸ்ட். யாஸ்ட் என்பது ஈரானில் உள்ள ஒரு பழமையான நகரம். இது யாஸ்ட் மாகாணத்தின் தலைநகராகத் திகழ்ந்தது.

யாஸ்ட் என்பதற்கு ‘தூய்மையானது’ மற்றும் ‘புனிதமானது’ என்று பொருள். இந்நகரத்தை ‘நல்ல மற்றும் உன்னத நகரம்’ என்று மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். (2017-ம் ஆண்டு யுனெஸ்கோ இந்த நகரத்தை உலகின் மிகப் பாரம்பரிய நகரம் என்று அடையாளப்படுத்தியும் உள்ளது).

யாஸ்ட் நகரம் பாரசீக ஈரானையும் கெர்மானையும் இணைக்கும் நகராக விளங்கியது என்று மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். தப்ரீஸ், யாஸ்ட் நகரங்களில் பல்வேறு அனுபவங்களைப் பெற்ற போலோ குழுவினர், தங்களின் பயணத்தை அதே பாதையில் மீண்டும் ஒரு கோடைக் காலத்தில் தொடர்ந்தனர்.

இத்தாலியிலிருந்து பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ குழுவினர், சில நகரங்களில் இளைப்பாறுதலை ஏற்படுத்திக் கொண்டு ஈரான் நாட்டின் தென் கிழக்கு மூலையில் உள்ள கெர்மான் நகரை அடைந்தபோது கடுமையான கோடைக் காலத்தின் நிலையை இயல்பாகவே உணர்ந்தனர்.

கெர்மான், மலைகளால் சூழப்பட்டு ஆனால் மழையை ஆண்டுக்கணக்கில் காணாத நகராகவே இருந்தது. கெர்மன் நகரத்தின் சரிவுப் பகுதியில் மட்டும் கடும் குளிர் இருந்ததை மார்க்கோ போலோ பதிவு செய்கிறார்.

கெர்மான் நகரில் ஹார்முஸ் என்ற சமவெளிப் பகுதி, நீண்ட பாதைகளைக் கொண்டது. அதில் கொள்ளையர்களின் ஆபத்தும் உள்ளது என்பதை மார்க்கோ போலோ பதிவு செய்து, அந்நகரில் துறைமுகம் ஒன்று உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறார். அந்தத் துறைமுகத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்று தந்தை நிகோலோ மூலம் அறிந்தார்.

தனது தந்தை நிகோலோவுடன் பல ஆண்டு பயணத்தை நிதானமாகக் கடந்த மார்க்கோ போலோ, உலகின் பல அதிசயங்களைக் கண்டார். கெர்மான் நகரில் பல சிறு நகரங்களைக் கண்ணுற்று தமது குழுவுடன் பயணித்த நிகோலோ குழுவினர், அடுத்துச் சில நாட்களுக்கு மிகக் கடுமையான நீர் அறவே இல்லாத ஒரு நிலப்பகுதியைக் கடக்கும் பயணத்தைத் தொடங்கினர்.

வழியில் ஏழாம் நாளில்தான் அந்தக் குழுவினருக்குப் பருக நீர் கிடைத்தது. அந்தப் பாதைகளைக் கடந்து குஹானன் நகரைக் கடந்து பல நிலங்களின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார் மார்க்கோ போலோ.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும் appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #3 – ஒழுக்கமற்றவன்

சார்லஸ் டார்வினுக்கு ஐந்து வயதில் வீட்டில் கல்வி தொடங்கியது. டார்வினின் அக்கா கரோலின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டார்வினுக்கு அடிப்படை ஆங்கில எழுத்துகளைப் பயிற்றுவித்தார். பாடல்கள் பாடிக் காட்டினார். சொற்களுக்குப் பொருள்களை விளக்கினார். டார்வினுக்கோ சகோதரி பயில்விக்கும் பாடங்களில் ஆர்வம் கிடையாது. படு சுட்டியாக இருப்பார். வம்பு தும்புகளில் ஈடுபடுவார். கண்ணாடிகளை உடைப்பார். பொருட்களைத் திருடிச் சென்று வழியில் காணும் சிறுவர்களுக்குத் தானம் செய்வார்.

டார்வினுடைய தந்தை ராபர்ட் பெரிய நூலகம் வைத்திருந்தார். அதில் சென்று வரைபடங்களையும் கலைக்களஞ்சியங்களையும் புரட்டிப் பார்ப்பார். வீட்டைச் சுற்றியுள்ள தோட்டமே டார்வினின் பிரதான வசிப்பிடம். அவரது தாய் வளர்த்து வந்த புறாக்களுடன் விளையாடுவார். மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து உண்பார். அருகே ஓடும் ஆற்றில் மணிக்கணக்கில் அமர்ந்து மீன் பிடிப்பார்.

டார்வினுக்கு அப்போதே சிற்றுயிர்களைச் சேகரிப்பதில் ஆர்வம் இருந்தது. நத்தை, சிப்பி ஆகியவற்றின் ஓடுகள், பறவை முட்டை என ஒவ்வொன்றையும் எடுத்துவந்து வீட்டில் குடுவையில் அடைத்து வைப்பார். பூக்களைப் பறித்துவந்து நோட்டுப் புத்தகங்களுக்குள் பதுக்குவார். அவற்றின் பெயர்களைத் தாயிடம் கேட்டு எழுதிக்கொள்வார்.

டார்வினின் எட்டாவது வயதில் வீட்டின் அருகேயுள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கேயும் அவருக்கு வகுப்பறை உவக்கவில்லை. பள்ளிக்கு வெளியேயுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகளை வேடிக்கை பார்ப்பது, பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது என நேரம் கழிப்பார். விலங்குகளையும் தாவரங்களையும் சேகரிப்பதுடன், அவற்றைப் பற்றி நண்பர்களிடம் விவரிப்பது டார்வினுக்கு இன்னமும் பிடிக்கும். குறிப்பிட்ட விலங்கையோ, தாவரத்தையோ எங்கே பார்த்தேன், அவற்றின் தோற்றம் எப்படி இருந்தது, அவற்றை எப்படிப் பிடித்தேன் என உண்மையுடன் கொஞ்சம் புனைவையும் கலந்து அடித்துவிடுவார். நண்பர்களும் அவர் சொல்லும் கதைகளை வாய்பிளந்து கேட்பர். இப்படியாக டார்வினுக்கு அறிவியலை எப்படிச் சலிப்பில்லாமல் சொல்ல வேண்டும் என்ற கலை அப்போதே கைகூடி இருந்தது.

0

சிறார் பருவம் இப்படியாக நகர, திடீரென்று ஒருநாள் டார்வினின் தாய் சூசானா காலமானார். வயிற்றுக் கட்டியால் படுக்கையில் இருந்தவர் மறைந்துபோனார். தாயின் மரணம் டார்வினை உலுக்கியது. நீண்ட நாட்கள் தனிமையிலேயே இருந்தார். சூசானாவின் மரணத்திற்குப் பிறகு டார்வினின் சகோதரிகள் வீட்டுப் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். டார்வினின் தந்தை ராபர்ட்டோ குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளத் தொடங்கினார். வெளியில் அன்பான மனிதராக இருந்தாலும் வீட்டில் சிடுசிடுவென இருப்பார். தான் சொன்ன வேலைகளை உடனே செய்து முடிக்க வேண்டும் எனக் கெடு விதிப்பார். எல்லாமும் சரியாக இருக்க வேண்டும். ஒழுங்கில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

பதிமூன்று வயதில் டார்வினை ஷ்ரூஸ்பரி அரசுப் பள்ளியில் சேர்ந்தார் ராபர்ட். அந்தப் பள்ளியும் டார்வினுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வீட்டின் கடுமையான சூழலுக்கு பள்ளியையே தாங்கிக்கொள்ளலாம் என்றிருந்தார்.

டார்வினுடைய அண்ணன் எராஸ்மஸும் அதே பள்ளியில்தான் படித்தார். டார்வினுக்கு எராஸ்மஸ்தான் எல்லாம். இருவரும் சகோதரர்கள் என்பதைவிட நல்ல நண்பர்கள். எந்நேரமும் சேர்ந்தே பொழுதைக் கழிப்பர். இருவரும் சேர்ந்து புத்தகங்களை வாசிப்பர். கதைகளைப் பகிர்ந்துகொள்வர்.

டார்வினுக்குச் சாகசக் கதைகள் பிடிக்கும். அவற்றில் வரும் வினோத மிருகங்கள் பிடிக்கும். நிறையக் கதைகளைப் படித்ததில் அந்த வயதிலேயே உலகம் முழுக்கம் சுற்ற வேண்டும் என்ற விருப்பம் டார்வினுக்கு வந்தது. தீவுகளிலும், தென் அமெரிக்கக் காடுகளிலும் சாகசப் பயணம் மேற்கொள்வதுபோல் பகல் கனவு காண்பார். அதேபோல் கடல்கள் என்றாலும் டார்வினுக்கு அலாதி பிரியம். கடற்கரைகளுக்குச் சென்றால் நீண்ட நேரம் அலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பார். அங்கே காணும் தாவரங்களை, கரை ஒதுங்கும் உயிரினங்களை வீட்டிற்கு எடுத்து வருவார். அது என்ன என்று கேட்டறிந்து வகைப்படுத்தி எழுதி வைப்பார். இப்படி எழுதி வைப்பது அவருடைய தாய் சொல்லிக்கொடுத்த பழக்கம். உயிரினங்களைச் சேகரிப்பதையும் வகைப்படுத்துவதையும் இப்படித்தான் கற்றுக்கொண்டார்.

உயிரினங்களைப் போல வேதியியலிலும் டார்வினுக்கு ஆர்வம் இருந்தது. இதற்குக் காரணமும் சகோதரன் எராஸ்மஸ்தான். இருவரும் சேர்ந்து தோட்டத்தில் சோதனைக்கூடம் ஒன்றை உருவாக்கி, தன் தந்தையின் மருந்துகளை எடுத்து வந்து பல்வேறு சோதனைகள் செய்வர். குறிப்பாக அந்தக் காலகட்டம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி இருந்ததால் வளர் பருவத்தினருக்குப் பெற்றோர்களே வேதியியல் பரிசோதனைகளை ஊக்குவித்தனர். டார்வினும் எராஸ்மஸும் தந்தையின் சட்டைப் பையிலிருந்து காசுகளைத் திருடிச் சென்று கண்ணாடிக் குடுவை, சிறிய அடுப்பு, ரசான கரைசல்கள் என என்னென்னவோ வாங்கி வருவர்.

ஆனால் இவை அனைத்தும் எராஸ்மஸ் பதினேழு வயதை எட்டியவுடன் முடிவுக்கு வந்தது. பள்ளிப் படிப்பை முடித்த எராஸ்மஸ், மருத்துவம் பயில்வதற்காக கேம்பிரிட்ஜ் கிறிஸ்து கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். டார்வினின் கூட்டுச் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. சகோதரன் இல்லாத வீடு, சகோதரிகளின் கட்டுப்பாடுகளாலும் தந்தையின் கடுமையாலும் வாழ வழியற்ற இடமாகத் தெரிந்தது.

வீட்டில் இருப்பதையே வெறுத்தார். அப்போது டார்வின் பதினைந்து வயதை எட்டியிருந்தார். வேட்டையாடுவதில் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. பள்ளிக்குச் செல்லாமல் தந்தையின் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்து காடுகளிலும் ஏரிகளிலும் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் தேடித் திரியத் தொடங்கினார்.

ஆனால், துப்பாகி வேட்டைக்கு அரசின் அனுமதி வேண்டும். இருப்பினும் டார்வினுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. தன் தந்தை உள்ளூரில் பிரபல மருத்துவர் என்பதால், உள்ளூர் பிரமுகர்களிடம் தந்தையின் பெயரைச் சொல்லிவிட்டு வேட்டையாடக் கிளம்பிவிடுவார். நேரம் காலம் தெரியாமல் வேட்டையாடுவது, ஊர் சுற்றுவது என நாட்கள் கழிந்தன. திடீரென ஒருநாள் டார்வினின் தந்தைக்கு உண்மை தெரியவந்தது. ராபர்ட் கடும் கோபத்தில் கொந்தளித்தார். வீட்டிற்குத் திரும்பிய டார்வினை இடைமறித்து, ‘நீ நாய் சுடுவதற்கும், எலி பிடிப்பதற்கும் தவிர எதற்கும் லாயக்கில்லாதவன். நீ, நம் குடும்பத்திற்கே அவமானம்’ எனக் கத்திவிட்டார்.

தந்தை கண்டிப்புடன் நடப்பார் என்பது டார்வினுக்குத் தெரியும். ஆனால் தன்னைப் பற்றி இப்படி ஓர் எண்ணத்தை வைத்திருப்பார் என்பதை டார்வினால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அழுதேவிட்டார். டார்வினை ஒழுக்கமற்ற நிலையிலிருந்து வெளிகொண்டு வருவதற்கு ஒரு வழிதான் ராபர்ட்டுக்கு இருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் மிச்சம் இருக்கும் நிலையிலும், அவரது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு, கல்லூரிக்கு அனுப்புவது. அவருக்கான வாழ்க்கைப் பாதையைக் காட்டுவது. மருத்துவம் பயிலவைப்பது. இவை எல்லாம் டார்வினை நல்வழிப்படுத்தும் என்று நம்பினார். இதற்காக இரண்டு தேர்வுகளை டார்வினுக்கு முன்னால் வைத்தார்.

ஒன்று, ஸ்காட்லாந்துக்குச் சென்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில வேண்டும். பிறகு லண்டனில் தனக்குத் தெரிந்த மருத்துவமனையில் உதவியாளராகச் சேர்ந்து மருத்துவராக உயர வேண்டும்.

இல்லை என்றால், இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலோ சேர்ந்து கிறிஸ்தவ நெறியியலைக் கற்க வேண்டும். ராபர்ட் இவ்வாறு கருதியதற்குக் காரணம் இருந்தது. அந்தப் பல்கலைக்கழகங்கள் திருச்சபையுடன் இணைப்பில் இருந்தன. திருச்சபை வலியுறுத்தும் ஒழுக்க நெறிகளை மாணவர்களுக்குப் போதிப்பதே அவற்றின் தலையாயக் கடைமையாக இருந்தது. அங்கே பயில்வது அறிவை இல்லாவிட்டாலும் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என ராபர்ட் கருதினார். சொல்லப்போனால் ஆக்ஸ்போர்டும் கேம்ப்ரிட்ஜும் வகுப்புவாதத்தைச் சமூகத்தில் நிலைக்க வைத்திருக்கும் கல்விக்கூடங்களாகவே இருந்தன. ஒருவேளை டார்வினுக்கு ஆர்வம் இருந்தால் அங்கேயே மருத்துவமும் பயின்று ‘உயர்குடி’ நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவராக உயரலாம் என்பதற்காகவும் இந்த ஏற்பாடு.

டார்வினுக்கு இரண்டிலும் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழி தெரியவில்லை. சலிப்பூட்டும் சமயக் கொள்கைகளைப் பயில்வதற்கு மருத்துவராகிவிடலாம் என முடிவு செய்து எடின்பர்க் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்தார்.

(தொடரும்)

The post டார்வின் #3 – ஒழுக்கமற்றவன் appeared first on கிழக்கு டுடே.

கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2

மேரிலாண்ட் மாகாணத்தின் கிழக்குக் கரையில் வசித்த வெள்ளைக்காரர்களின் நிலவுடைமை, தொழில் தேர்வு, தங்கும் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஆப்பிரிக்கர்கள் இடமாறிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம். ஆனாலும் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வசிக்க நேர்ந்த தங்கள் குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் ஆப்பிரிக்கர்கள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

மேற்கு மத்திய ஆப்பிரிக்காவிலிருந்தும் பயஃப்ரா வளைகுடா பகுதியிலிருந்தும் பெருமளவில் அமெரிக்கா வந்த ஆப்பிரிக்க இனத்தவர்களுக்கிடையேயான உறவுக்கண்ணி தொடர்ந்து வலுப்பெற்று நுட்பமான வலைப்பின்னலொன்று உருவானது. அவர்களின் குடும்ப, சமூக உறவுகளும் மொழியும் கலாசாரமும் அறுந்துவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைகளில் தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இடமாற வேண்டிய கட்டாயம் அந்த வலைப்பின்னல் உறுதியாக இருக்க உதவியது என்றுதான் சொல்லவேண்டும்.

பெரும்பாலான நேரங்களில், அடிமைக் குடும்பங்களின் உறுப்பினர்களில் சிலரை உரிமையாளர்கள் விற்றுவிடுவார்கள். வெள்ளைக்காரக் குடும்பங்கள் குத்தகைக்கோ விலைக்கோ வாங்கும் பண்ணை நிலங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுதொலைவில் பல மைல் தூரத்திலிருக்கும். இதனால் ஒரு பண்ணையில் வேலைசெய்பவர்களில் சிலரை வேறு இடத்துக்கு அழைத்துச்செல்வார்கள். வருடத்தின் சில மாதங்கள் ஒரு இடத்திலும் மற்ற நேரங்களில் வேறு இடத்திலும் தங்கியிருந்து வேலைசெய்வார்கள். புதிய நிலமாக இருந்தால் அதைச் சீர்ப்படுத்தி விவசாய நிலமாக மாற்றுவதற்குப் பல வருடங்கள் அங்கேயே வசிக்க நேரிடும். இப்படிப் பல காரணங்களால் அடிமைக் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. வெவ்வேறு இடங்களில் மாறிமாறி வேலை செய்ததால் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பிலிருப்பது அவசியமானது. இதனால் சிக்கலான ஆனால் ரகசியமான, நம்பிக்கைக்குரிய தகவல்தொடர்பு, பயண வலையமைப்பொன்று உருவாகித் தொடர்ந்து செயலாற்றியது.

அடிமைகள், சுதந்திரமானவர்கள் என இரண்டு வகை ஆப்பிரிக்கர்களையும் கொண்ட இந்த வலையமைப்புதான் ஹாரியட்டின் துணிகரமான மீட்புப்பணிகளுக்கு உதவியாக இருந்தது. வெள்ளையர்களும் குவேக்கர் சமயத்தைச் சேர்ந்தவர்களும் உதவினாலும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரம் வசித்த ஆப்பிரிக்கர்களின் துணிகரமான பங்களிப்பு அளப்பரியது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அச்சமிகுந்த இருண்ட நாட்களில் ஹாரியட்டுக்குத் தேவையான பாதுகாப்பையும் ஆதரவையும் உணவு, உறைவிடத்தையும் தகவல் தொடர்பையும் தடையின்றி வழங்கியது இந்த வலையமைப்புதான்.

0

ரிட், அதாவது ஹாரியட்டின் தாய், அட்ஹவ் பேட்டிசன் என்ற வெள்ளை நில உரிமையாளரின் உடைமையாக இருந்தார். ரிட்டும் அவருக்குப் பிறக்கும் குழந்தைகளும் 45 வயதாகும் வரையில் தன்னுடைய பேத்தி மேரி பேட்டிசனின் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று உயிலெழுதி வைத்தார் அட்ஹவ் பேட்டிசன். அதற்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திரமாக வாழலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடக்க முதலே மேரிலாண்டில் வசித்த உரிமையாளர்கள் அடிமைகளை விடுவிக்கும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அடிமைகளின் வாழ்வில் முக்கியம்வாய்ந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு கோட்டத்தின் நில ஆவணத்திலும் முறைப்படி பதிவுசெய்யப்பட்டது. அடிமைகளே பணத்தைச் சேமித்துத் தங்களின் விடுதலையை விலைகொடுத்து வாங்கும் வழக்கமும் இருந்தது. சில அடிமைகள் நீதிமன்றத்தில் தங்களின் அடிமைத்தளை செல்லாது என வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்கள். இப்படி அடிமைகளை விடுதலை செய்வதில் வெள்ளை உரிமையாளர்களின் சுயநலமும் அடங்கியிருந்தது.

இதைத் தடுப்பதற்காக 1752இல் மேரிலாண்ட் மாகாணம் முக்கியமான சட்டமொன்றை இயற்றியது. அதன்படி, உடலும் மனமும் நலமாக இருந்து பணிசெய்யும் திறனும்கொண்ட 50 வயதுக்கு மேற்படாத அடிமைகளை உரிமையாளர் விடுவிக்கமுடியாது. உடல்நலிவுற்ற ஓய்வுபெற்ற அடிமைகளைப் பராமரிக்கும் கடமையிலிருந்து உரிமையாளர்கள் தப்பிப்பதைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம். உரிமையாளரின் இறுதிக்காலத்தில் அடிமைகளை விடுவிப்பதற்காக எழுதப்படும் ஆவணம் சட்டத்துக்குப் புறம்பானது. அல்லது அடிமைகளை விடுவித்த காரணத்தால் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் போனாலும் அது செல்லாது. காலமுழுவதும் தங்களுக்காக உழைத்த அடிமைகளை உரிமையாளர்கள் பராமரிப்பதைக் கட்டாயமாக்க இந்தச் சட்டம் உதவும் என நம்பப்பட்டது.

ரிட்டின் பணிக்காலத்தைக் குறைத்தது பேட்டிசன் குடும்பத்துக்கு லாபகரமான செயலல்ல என்றாலும் அந்தக் காலகட்டத்தில் நிலவிய மனப்போக்கையொட்டியே அந்த முடிவை அட்ஹவ் எடுத்தார். 1790களில் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் அடிமைத்தளை நியாயமான செயலல்ல, அடிமைகள் விடுதலைபெறவேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் கிளர்ந்தது. குவேக்கர் போன்ற புதிய சமயங்களும் மெதாடிஸ்ட் போன்ற கிறிஸ்தவ சமயத்தின் பிரிவுகளும் அடிமைத்தளையை எதிர்த்தன. அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்பதற்கு இறைநம்பிக்கை மட்டுமின்றிச் சமயச்சார்பற்ற சிந்தனை வலுப்பெற்றதும் காரணமாக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சியின் தன்னுரிமை, விடுதலையுரிமை ஆகிய முழக்கங்களும் இன்னொரு காரணம். இங்கிலாந்தில் எழுந்த அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற எதிர்ப்புக்குரல் அமெரிக்காவின் கிழக்குக் கரையில் எதிரொலித்தது. இதனால் 1790இல் மேரிலாண்ட் மாகாண பொதுச் சபையில் அடிமைகளை இறுதி உயிலின்படியும் விருப்ப ஆவணத்தின்படியும் விடுவிக்கலாம் என மாற்றியெழுதப்பட்ட சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் நில உரிமையாளர்களின் தொழில்முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. வருடமுழுவதும் உழைப்பைக் கோரிய புகையிலையைப் பயிர்செய்வதற்குப் பதிலாக கோதுமையையும் மற்ற தானியங்களையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்தனர். மரம்வெட்டும் தொழிலிலும் கவனத்தைச் செலுத்தினர். இந்தப் பணிகளுக்கு ஆண்களே அதிகம் தேவைப்பட்டனர். அடிமைகளை விலைகொடுத்து வாங்கி நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொள்வதைவிடவும் தேவைப்படும்போது கூலிக்கு வேலை வாங்குவது லாபகரமாக இருந்தது. இதனால் வெள்ளை நில உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த அடிமைகளில் பலரை விற்கும் நிலைமை நிலவியது.

அதே நேரம், மேரிலாண்ட் மாகாணத்தின் அடிமை உரிமையாளர்களில் பலர் அடிமைத்தளை ஒழிப்பைக் கடுமையாக எதிர்த்தனர். அடிமைகள் விடுதலை பெற்றால் பொருளாதார, அரசியல், சமூக இயக்கவியல் அதிகாரம் தங்களின் கைவிட்டுப்போய்விடும் என்ற அச்சத்தின் விளைவு. அடிமைகளின் விடுவிப்பை ஆதரித்தவர்களும் உடனடியாகச் செயல்படுத்தாமல் எதிர்காலத்தில் விடுவிக்கிறோம் என உயிலெழுதினர். அடிமைகளின் உழைப்புத் திறன் அதிகமாக இருக்கும் இளவயதில் முடிந்த அளவுக்குப் பயன்பெற்ற பிறகு உழைப்புத் திறன் குறைந்த நேரத்தில் விடுவித்தனர். சில உரிமையாளர்கள் அடிமைகளை விற்கும்போது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விடுவிக்கவேண்டும் என்று ஆவணத்தில் எழுதினர். இதனால் அடிமைகளுக்காகச் செலவிட்ட தொகை கைக்கு வந்துசேர்ந்ததோடு விடுவிப்பை ஆதரித்தது போலவும் ஆயிற்று. எதிர்காலத்தில் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையினால் அடிமைகள் விசுவாசத்தோடு இருப்பார்கள் எனவும் உரிமையாளர்கள் நம்பினர்.

0

1790 மக்கள் கணக்கெடுப்பு பட்டியலில் அட்ஹவ் பேட்டிசனின் வீட்டில் மொத்தம் ஏழு அடிமைகள் இருந்தது பதிவாகியுள்ளது. அவர் பண்ணையின் ஆடு, மாடு, குதிரைகளைப்போல அவர்களும் உடைமைகள் என்பதால் பெயர்கள் எதுவும் பதிவாகவில்லை. 1791இல் அட்ஹவ் எழுதிய உயிலிலும் ரிட்டின் தாய் மாடஸ்டியின் பெயரைக் குறிப்பிடவில்லை. ரிட் 1780களின் பிற்பகுதியில் அட்ஹவ்வின் பண்ணையில் பிறந்தாரென்பதால் அவருடைய தாயும் நிச்சயம் அங்கேதான் இருந்திருக்கவேண்டும். சொல்லப்போனால் அட்ஹவ்வின் அடிமைகள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கும் வாய்ப்பு அதிகம். உயிலில் தன்வசமிருந்த அடிமைகளைத் தன்னுடைய வருங்கால சந்ததியினருக்குப் பிரித்துக்கொடுத்தார் அட்ஹவ். கூடவே அவர்கள் விடுதலை பெறும் காலத்தையும் குறிப்பிட்டார்.

அட்ஹவ்வின் பேத்தி மேரி பேட்டிசன் 1800இல் மணந்துகொண்ட ஜோசப் ப்ராடஸ் ஓரிரு வருடங்களில் திடீரென இறந்துபோனார். வெள்ளையராகவும் நிலவுடைமையாளராகவும் இருந்தாலும் ஒரு பெண்ணால் தனியாக வாழமுடியாத சமூகச் சூழல். கைக்குழந்தையான மகனுடைய சொத்தையும் தாத்தாவின் சொத்திலிருந்து கிடைத்த வருவாயையும் பாதுகாக்கவேண்டிய கட்டாயம். அடுத்த வருடமே ஓரளவுக்கு நிலம் சொத்துடன் சமூகத்தில் நல்ல நிலையிலிருந்த ஆண்டனி தாம்சனை இரண்டாவதாக மணந்துகொண்டார் மேரி. ஆண்டனியின் முதல் மனைவியும் உயிரோடில்லை என்பதால் அவருக்கும் அது இரண்டாம் திருமணம். முதல் மனைவி மூலம் பிறந்த மகன்கள் மூவரும் பதின்பருவத்தினர். ஆண்டனியின் இல்லத்துக்கு இடம்பெயர்ந்த மேரி மகன் எட்வர்டோடு தன்னுடைய தனிப்பட்ட அடிமையான ரிட்டையும் இன்னும் நான்கு ஆண் அடிமைகளையும் கூடவே அழைத்துவந்தார்.

ஆண்டனியின் ஒன்பது அடிமைகளில் பென் ராஸும் ஒருவர். திறமையான பணியாளர். ஆண்டனியின் மரங்களடர்ந்த நிலத்தில் மரங்களை ஆய்வுசெய்யும் ஆய்வாளராகவும் மேற்பார்வையாளராகவும் வேலைசெய்தார். மேரி ஆண்டனியை மணமுடித்ததால் ரிட்டும் பென்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அடிமைகளாகினர். இருவரும் 1808இல் திருமணம் செய்துகொண்டனர். 1810இல் தாம்சன் பண்ணையில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. மேரியோடு வந்த அடிமைகளோடு பென், ரிட் தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகளும் சேர்ந்துகொண்டது காரணமாக இருக்கலாம்.

18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மேரிலாண்ட் பகுதிக்கு சுமார் 18000 அடிமைகள் வந்துசேர்ந்தனர் என்பதை வரலாற்றுப் பதிவுகள் உறுதிசெய்கின்றன. ஹாரியட் டப்மனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் புத்தகமாக எழுதிய ஃபிராங்க்ளின் சான்பார்ன் ‘ஹாரியட்டின் உடலில் வெள்ளையர் ரத்தம் ஒரு சொட்டுக்கூட கலக்கவில்லை’ என்று உறுதிபடக் கூறினார். நாளிதழ் நிருபர் ஒருவர் எழுதிய கட்டுரையில் ‘நீ அஷாந்தி இனத்தைச் சேர்ந்தவள் என்பதில் சந்தேகமேயில்லை’, என்று மற்ற ஆப்பிரிக்கப் பெண்கள் கூறியதாக எழுதினார்.

பின்னொரு நாளில் இன்னொரு நிருபரிடம் ஹாரியட் தன்னுடைய பாட்டி ஆப்பிரிக்காவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டதாகவும் தன்னுடைய தாய் ஒரு வெள்ளையரின் மகளென்றும் சொன்னதாகப் பதிவாகியுள்ளது. பென் எந்தக் கலப்படமுமற்ற முழுமையான ஆப்பிரிக்கர். அவருடைய உறவினர்கள் டார்செஸ்டர் கோட்டத்தில் வசித்தனர், ஆனால் அவருடைய பெற்றோர், உடன்பிறந்தவர்களின் பெயர் தெரியவில்லை. அவர்களில் பலர் அடிமைகள் என்றாலும் சிலர் சுதந்திரமானவர்களாக இருந்தனர்.

அஷாந்தி இனத்தவர்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது என்ற நம்பிக்கை நிலவியது. அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களுக்கு அடிபணிய மறுத்தனர், பெரிய இடைஞ்சலாக இருந்தனர். அஷாந்தி பேரரசு காலனியாதிக்கத்தை அண்டவிடாமல் போரிட்டு மற்ற ஆப்பிரிக்கப் பேரரசுகளைவிடவும் அதிக காலம் தாக்குப்பிடித்தது. அண்டை நாட்டினருடன் தொடர்ச்சியாக நடந்த கலகங்கள் பேரரசை நலிவடையச் செய்தன. அதனால் தனிநபர்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாக விற்பதைத் தடுக்கமுடியவில்லை.

அஷாந்தி இனத்தவர்களின் திடகாத்திரமான உடலமைப்பினாலும் வெவ்வேறு பணிகளைச் செய்யும் திறமையினாலும் வெள்ளை நில உரிமையாளர்கள் அவர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு விலைக்கு வாங்கினர். அஷாந்தி இனம் தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் பெருமளவில் விவசாய சமூகமாகவே இருந்தது. நிலத்தையும் நீரையும் புனிதமாகக் கருதினர். பெண் முன்னோர்களின் அளப்பரிய ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு இயங்கிய சமூகமும்கூட. பெண்களை ஆலோசகர்களாகவும் தலைவர்களாகவும் ஏற்றுக்கொண்ட சமூகம்.

காடுகளில் வாழ்ந்தவர்கள் நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்து கிராமங்களையும் சிற்றூர்களையும் அமைத்து அங்கே வசிக்கத் தொடங்கினர். இயற்கை வேளாண்மையின் பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றி மண்வளத்தை மேம்படுத்துவது குறித்த அறிவைப் பெற்றவர்கள். மண் அரிப்பைத் தடுக்கும் முறைகளைப் பின்பற்றினர். சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை எனப் பலவகைப் பயிர்களை வளர்த்தனர் என்று ஐரோப்பிய பார்வையாளர்கள் எழுதிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தத் திறன்களால்தான் அஷாந்தி இனத்தவரையும் தற்போதைய கானா நாடு அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்களையும் வேலைக்கு அமர்த்துவதில் வெள்ளை நில உரிமையாளர்கள் நாட்டம்கொண்டனர். செல்வத்தைத் திரட்டுவதற்கும் பெருக்குவதற்கும் முக்கியத்துவமளிக்கும் அஷாந்தி இனத்தவர்களின் சமூக, கலாசார செயல்முறைகளையும் வெள்ளை உரிமையாளர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.

இயற்கை உலகுக்கும் ஆன்மிக உலகுக்கும் பாலமாக இருக்கும் தெய்வங்கள் நீரிலும் நிலத்திலும் இருப்பதாக நம்பியது அஷாந்தி இனம். நிலம் இறந்துபோன முன்னோர்களுடன் தொடர்புகொள்ள உதவுவதாக எண்ணினர். இதனால் வாழும் நிலத்திலிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்காளாகி முற்றிலும் புதிய இடத்தில் கரும்பு, புகையிலைத் தோட்டங்களில் வசிப்பது மிகுந்த மனவேதனை அளித்தது. புதிய உலகம் எனப்படும் அமெரிக்காவுக்கு வந்தபின்னரும் தங்களுடைய கலாசாரச் செயல்பாடுகளை இடைவெளியின்றித் தொடர முற்பட்டனர். இபோ, மிங்கோ, வின்னெபார், சிண்டா, சூக், பினா போன்ற ஆப்பிரிக்கப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அங்க அடையாளங்களைக் குறிப்பிட காதில் வளையம் அணியும் துளை உள்ளது என்றும் தாடையில் பச்சை குத்தப்பட்டுள்ளது என்றும் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் வெவ்வேறு பகுதிகளையும் இனங்களையும் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அதனால் கலாசார வழக்கங்களைத் தொடர்ந்திருக்க முடியாது என்று ஒரு காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்தனர். ஆனால் தற்போது நடந்துவரும் ஆய்வு முடிவுகள் அந்த எண்ணம் தவறு என்பதை உறுதிசெய்துள்ளன. பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நாடுகளிலிருந்துதான் அடிமைகள் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

அடிமை விற்பனையாளர்கள் அடிமைகளை வாணிகம் செய்ய வருகையில் செஸபீக் வளைகுடாவைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி அடிமைகளை வாங்குவது வழக்கம். பெரும்பாலும் ஒரே இன, கலாசாரப் பின்னணி கொண்டவர்களை மொத்தமாக விலைகொடுத்துப் பெற்றனர். இதனால், அடிமைகளுக்கிடையே ஒத்துணர்வு நிலவும் புதிய இடம் குறித்த அச்சம் விலகி வஞ்சிக்கப்பட்ட கோபம் குறையும் என நம்பினார்கள்.

1720 முதல் 1770 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5300 அடிமைகள் இந்தப் பகுதிக்கு வந்தனர் என்கிறது புள்ளிவிவரம். 1783ஆம் ஆண்டு முதல் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது. மேரிலாண்டைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அடிமைகளை கடத்திச் செல்வது, உள்நாட்டிலேயே விற்பது, அடிமைகளுக்குப் பிறந்த குழந்தைகளை அடிமைகளாக வைத்திருப்பது எனப் பல வழிகளில் அடிமைகளுக்கான தேவைகளை நிறைவுசெய்துகொண்டனர்.

1790இல் சுமார் 5300 ஆப்பிரிக்க அடிமைகளும் 500 அடிமைப்படாதவர்களும் மேரிலாண்டில் இருந்தனர். 1800இல் அடிமைப்படாதவர்களின் எண்ணிக்கை 2300ஆக உயர்ந்தது. அடிமைகளின் எண்ணிக்கை 2300ஆகக் குறைந்தது. வெள்ளையர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. எண்ணிக்கை அதிகமானதால் ஆப்பிரிக்கர்களின் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சொல்லப்போனால், அவர்களின் அரசியல் உரிமைகளையும் பொருளாதார, சமூகத் தேர்வுகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றி ஒடுக்கினார்கள் வெள்ளையர்கள்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #7 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் – 2 appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

டாக்டர் கே இப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில், பெர்டி டிசூசா கல்வித் தலைவராகவும், மந்திரமூர்த்தி முதல்வராகவும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் டாக்டர் கே-வை மிகவும் பிடித்துப்போனது. காரணம், அவர் குதிரைகளைக் கையாண்ட விதம். கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல் பாடம் மிருகங்களை எவ்வாறு கையாள்வது என்பதுதான். குறிப்பாக, குதிரைகளை எப்படிக் கையாளச் சொல்லிக் கொடுப்பார்கள். குதிரைகளை நல்ல முறையில் கையாள அவர்கள் பரிந்துரைப்பதாவது:

1. எப்போதும் குதிரையின் பக்கவாட்டிலிருந்து தான் அணுக வேண்டும்.

2. கையாள்பவர் நிதானத்துடன், தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

3. முதலில் குதிரையை நமது கையை முகர அனுமதிக்க வேண்டும். அதற்குக் கையை நீட்டி முகரச் செய்ய வேண்டும்.

4. குதிரைகளிடம் மென்மையான தொனியில் பேச வேண்டும்.

இப்படிப் பல வழிமுறைகள் சொல்லித் தரப்படும். டாக்டர் கே இந்த வகையில் அனாயாசமாகக் குதிரைகளைக் கையாளுவதைக் கண்டு மேற்கண்ட இருவரும் அவர் சிறந்த கால்நடை மருத்துவர் ஆவார் என்று உணர்ந்தனர். அதன் காரணமாக அவர் மேல் அதிகப் பிரியம் வைத்திருந்தனர். அங்கு இருந்த எல்லோருமே அவரை டார்ஜான் என்று செல்லப் பெயரால் அழைத்தார்கள்.

முன்பே சொன்னதுபோல அவரது சித்தப்பா ஹரிஹரன் வீட்டிலிருந்துதான் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் இருந்தது புரசைவாக்கத்தில். ஹரிஹரன் பணி புரிந்தது எம்.சி.டி. முத்தையா பள்ளியில். அன்று அந்தப் பள்ளியில், சாம் என்ற ஆசிரியரும் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் குத்துச் சண்டையில் தேர்ந்தவர். இளைஞர்களுக்குக் குத்துச் சண்டைப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் தாக்கத்தால், டாக்டர் கே-வும் குத்துச் சண்டை பயின்றார். ஆனால், லைட் வெயிட் பிரிவில்.

பல கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் டாக்டர் கே பதக்கங்கள் வாங்கி, கிட்டத்தட்ட சார்பட்டா ரேஞ்சுக்கு இருந்தார் என்றுகூடச் சொல்லலாம். அன்று புரசைவாக்கம் சென்னையின் குத்துச்சண்டை வீரர்களின் கோட்டையாக இருந்தது. முக்கியக் காரணம், ஆங்கில-இந்தியர்கள் அதிகம் வாழ்ந்த இடம் என்பதால் அதன் தாக்கம் கண்கூடாக இருந்தது. மகாகவி பாரதி, சுரேந்திர ஆர்யாவை புரசைவாக்கத்தில் சந்தித்ததை செல்லம்மா விவரித்திருப்பார்- எப்படி ஆரியாவின் வீட்டில் வெள்ளைக்காரத் தோரணையில் உணவு பரிமாறப்பட்டது, அவர் எப்படிக் கிறிஸ்தவர்களைப்போல மாறியிருந்தார் என. அப்படி, வெள்ளையர்களின் விளையாட்டுகளும், நடையுடை பாவனைகளும் மிகுந்திருந்த இடத்தில் கே-வும் இருந்ததனால், அவற்றில் சில அவரிடம் படிந்தன.

அடுத்து, வெள்ளையர்களின் விளையாட்டான கிரிக்கெட். டாக்டர் கே. அதிலும் சிறந்து விளங்கினார். சென்னை முதல் பிரிவு (பர்ஸ்ட் டிவிஷன்) அணியில் விளையாடினார். நல்ல தொடக்கப் பந்து வீச்சாளர். லெக் ஸ்பின்னர். இவருடன் அன்று விளையாடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்– ஜெமினி கணேசன், ஆர்.டி. பார்த்தசாரதி, பாலு அழகண்ணன், சி.டி.கோபிநாத், கண்ணாயிரம் போன்றோர். சிலர் இவருக்கு எதிர் அணியில் இருந்தனர். சிலர் இவர் அணியில் இருந்தனர். கால்நடை மருத்துவக் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் தலைவராக டாக்டர் கே இரண்டு மூன்று வருடங்கள் இருந்தார்.

இவர் ஒரு சவுத் பா. அதாவது, இடது கை ஆட்டக்காரர். என்ன, தொடர்ச்சியாக விளையாடிப் பெயர் பெற முடியாமல், யானைகளின் பால் அவர் கவனம் திரும்பிவிட்டது. இது மட்டுமில்லாது, தடகளப் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். தொலைத்தூரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என அவர் கால் படாத விளையாட்டே இல்லை எனலாம். படிப்புடன், இதுபோன்ற திறமைகளும் கொண்ட அவருக்கு நல்ல பெயர் இருந்ததில் வியப்பில்லை. குறிப்பாக மந்திரமூர்த்தி, இவரிடம் பெரும் அன்பு கொண்டிருந்தார். பின்னாட்களில், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக இருந்தபோதும் நல்ல அணுக்கத்துடன் பழகி வந்தார்.

விளையாட்டில் அவருக்கிருந்த ஈடுபாடு காரணமாக டாக்டர் கே-வின் தலைமைக் குணங்கள் நன்கு வளர்ந்ததோடு, பலதரப்பட்ட மனிதர்களுடன் இணைந்து பணி புரியும் பாங்கைக் கற்றுக் கொடுத்தது. உதாரணமாக, குத்துச்சண்டை தனி வீரர் விளையாட்டு என்றாலும், அதில் பங்கேற்கும் வீரர்களின் நடையுடை பாவனைகள் கிரிக்கெட் வீரர்களைப்போல இருக்காது. சற்று முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால், போட்டியிடும் தீவிரம் ஒரே போலத்தான் இருக்கும். ஆனால், இருவரிடம் பழகும் விதம் மாறுபடும். இது வாழ்க்கையில் பல வித மனிதர்களைக் கையாள பயன்பட்டது. யானைகளைப் பிடிப்பது, பழக்குவது போன்ற வேலைகள் குழு முயற்சி. அதற்குப் பணியில் இருந்த அனைவரும் தங்கள் பணியை நன்கு அறிந்திருப்பதொடு, மற்றவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அதை டாக்டர் கேவால் எளிதில் செய்ய இயன்றதற்கு விளையாட்டில் அவருக்கு இருந்த திறமை பெரிதும் பயன்பட்டது.

இப்படி நான்கு வருடங்கள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கிய பின், டாக்டர் கே. ஆந்திராவில் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அவரது முதல் பணி நியமனம் கதிரியில். அது அவர் தந்தை வைத்தியனாதன் பணிபுரிந்த இடத்திற்கு அருகில் அமைந்திருந்தது, ஒரு தற்செயலான நிகழ்வே! அந்த இடம் ஆந்திரா, கர்நாடகா எல்லையருகே அமைந்திருந்தது. எப்படி சித்தூர் இருக்கிறதோ அதுபோல. அவரின் பன்மொழிப் புலமை இந்த நியமனம் காரணமாக மேலும் மெருகேறியது.

எல்லா வைதீகக் குடும்பங்களில் உள்ள வழக்கத்தைப்போல, இவர் வீட்டிலும், உடனே (1953-ல்) திருமண ஏற்பாட்டைச் செய்தனர். பையனுக்கு வேலை கிடைத்துவிட்டது, அடுத்தது கல்யாணம்தான் என்ற பழங்கால மரபுப்படி டாக்டர் கேவுக்கு லக்னோவில் குடிபெயர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்துப் பெண்ணை நிச்சயம் செய்தனர். அவர்கள் குடும்பம் அதற்கு முன் லஹோர், டெல்லி ஆகிய இடங்களில் இருந்தது. ஆக, டாக்டர் கேவின் மனைவியும் பல மொழிகள் தெரிந்தவர்தான். அவர் பெயர் சரஸ்வதி.

அதன்பின் மொழிவாரி மாநிலங்கள் காரணமாக, மதராஸ் ராஜதானி, நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, டாக்டர் கேவும் அவரது தந்தையாரும் மதராஸ் மாநிலத்தில் பணி நியமனம் பெற்றனர். டாக்டர் கே, மதுரை அருகே கம்பத்திற்கு 1953-ல் மாற்றப்பட்டார். கம்பத்திலும் தேனியிலும் அவர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். அதே ஆண்டு திருமணமும் நடைபெற்றது. இந்த இளம் தம்பதியர் தங்கள் திருமண வாழ்க்கையை இனிதே கம்பத்தில் தொடங்கினர்.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம் appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

மதச் சீர்திருத்தம், அரசியல் எழுச்சி, அறிவியல் புரட்சி. இவை மூன்றும் ஐரோப்பாவில் அறிவொளி யுகத்தைத் தொடங்கிவைத்தன. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருந்தது. இங்கிலாந்து, பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து தொழிற்சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. பிர்மிங்ஹாம் இந்தப் புதிய தொழில் உலகின் மையமாகத் திகழ்ந்தது. நீராவி இயந்திரங்களின் கூச்சல்களும் தொழிற்சாலைகளின் இரைச்சல்களுமே நகர வீதிகளை ஆக்கிரமித்திருந்தன.

புதிய செல்வந்தர்கள் வர்க்கம் உருவாகி வந்தது. அறிவையும் தொழில்நுட்பங்களையும் லாபத்தையுமே கருத்தில் கொண்டு எதிர்காலத்தை உருவாக்கும் முனைந்த வர்க்கம். இதில் பெரும்பாலானவர்கள் வணிகர்கள். பாரம்பரிய, நிலவுடைமைச் சமூகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிதாய் முளைத்து, சுயமாய் செல்வத்தைத் தேட முனைந்தவர்கள்.

இதில் ஒருவராக ஜோஷியா வெட்ஜ்வுட் இருந்தார். மண்பாண்டங்கள் செய்யும் தொழிற்சாலை வைத்திருந்தார். பிர்மிங்ஹம் வட்டாரத்தில் முக்கியப் புள்ளி. வெட்ஜ்வுட்டுக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் எராஸ்மஸ். மருத்துவர், கவிஞர், கண்டுபிடிப்பாளர் எனப் பல்துறை வித்தகர். இவரும் வெட்ஜ்வுட்டும் எலியும் பூனையும்போல.

எராஸ்மஸ் எல்லோரையும் கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் கிண்டலடிப்பார். குறிப்பாக மத நம்பிக்கைகளை, கிறிஸ்தவ நம்பிக்கைகளை. கிறிஸ்தவ மதம் அழிந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு அறிவு வந்துவிட்டது. கிறிஸ்தவத்தைக் கேள்வி எழுப்புகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க கிறிஸ்தவம் தன்னைச் சீர்திருத்திக்கொள்கிறது என்பார். ஜோஷியா வெட்ஜ்வுட்டோ கிறிஸ்தவர். ஆனால் பழைமைவாத, சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிப்போன கிறிஸ்தவர் கிடையாது. இவருடையது சீர்திருத்தக் கிறிஸ்தவம். இந்தக் கிறிஸ்தவம் பிதா, குமாரன், தூய ஆவி என்கிற பழைய திரித்துவ நம்பிக்கையை நிராகரித்தது. இறைவன் ஒருவனே என்கிற இறை ஒருமைவாதத்தை முன்வைத்தது.

இதைத்தான் கிறிஸ்தவம் பகுத்தறிவின் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள சீர்திருத்தத்தில் ஒளிந்துகொள்கிறது என்றார் எராஸ்மஸ். அவர் அறிவை நம்பினார். அறிவியலை நம்பினார். அறிவியலே எல்லாவற்றுக்குமான பதிலை வைத்திருக்கும்போது எதற்காக மதத்தின் பக்கம் ஒளிய வேண்டும்? பகுத்தறிவைக் கொண்டே வளமையான எதிர்காலத்தைக் கட்டமைப்போம் என்பதுதான் எராஸ்மஸின் வாதம். இதுதான் இருவருக்கும் அடிக்கடி மோதல் வருவதற்குக் காரணம்.

இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் 18ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தை உளமாற நேசித்தார்கள். கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டாடினார்கள். இந்தக் கண்டுபிடிப்பாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து லூனார் சமூகம் என்ற சங்கத்தை நிறுவினர். ஜேம்ஸ் வாட், மேத்யூ போல்டன், பெஞ்சமின் பிராங்ளின், ஜோசப் பிரிஸ்ட்லி போன்ற பெரும் அறிவியலாளர்கள் இந்தச் சங்கத்தில் இருந்தார்கள். அறிவியல், தத்துவம், சமூகம், தொழில், கல்வி, மருத்துவம் எனப் பலவற்றை விவாதித்தார்கள். இந்தச் சமூகம் பௌர்ணமி இரவு அன்றைக்கு மட்டுமே கூடும். அதனால் லூனார் சமூகம் என அழைக்கப்பட்டது. லூனார் என்றால் நிலவு என அர்த்தம். ஆனால் அரசு இவர்களை லூனாட்டிக் சமூகம் என்றது. லூனாட்டிக் என்றால் அறிவற்றவர்கள் என அர்த்தம்.

இந்த லூனார் சமூகம், பழமைவாத கருத்துகளை மறுத்தது. பழைய சமூக விழுமியங்களைப் புறக்கணித்து, புதிய விழுமியங்கள் தோன்றுவதற்கு வித்திட்டது. இதனால் அரசு இவர்களைக் கலகக்காரர்களாகப் பார்த்தது. அன்றைக்கு இங்கிலாந்து அரசியலில் பழைமைவாதத்தைப் போற்றும் ஆங்கிலிகன் திருச்சபை ஆட்களே இருந்தனர். இவர்கள்தான் கல்வி அமைப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தினர். அதிகார மட்டம் அனைத்திலும் இவர்களுக்கு மட்டுமே இடம் இருந்தது. இவர்களது அதிகாரத்தை லூனார் சமூக ஆட்கள் அச்சுறுத்தியதால் அரசு பயந்தது.

லூனார் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஜோசப் பிரிஸ்ட்லி. வேதியியலாளர். ஆக்சிஜன் வாயுவைக் கண்டறிந்ததில் முக்கியமானவர். இவருடைய ஆய்வுகளால் ஈர்க்கப்பட்ட எராஸ்மஸ், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது நோயாளிகளுக்கு ஆக்சிஜனைப் பரிந்துரைத்த முதல் மருத்துவர் எனக்கூடச் சொல்லலாம். வெட்ஜ்வுட்டும் பிரிஸ்ட்லியைக் கொண்டாடினார். அவரது பரிசோதனைகளுக்கு வேண்டிய நிதியையும் கருவிகளையும் தாராளமாக வழங்கினார்.

பிரிஸ்ட்லி அறிவியலில் மட்டுமல்லாமல் இறையியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கிறிஸ்தவத்தை எல்லோருக்குமான மதமாக மாற்ற முனைந்தார். அது என்ன அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் இறைவன் அருள் பாலிப்பார்? இயேசுவின் அருள் சாமானியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கேற்ற கொள்கைகளை வகுக்கத் தொடங்கினார்.

இதுதான் திருச்சபை அதிகாரத்தை அச்சுறுத்தியது. அது எப்படி பிரிஸ்ட்லி கடவுளை எல்லா வர்க்கத்தினருக்கும் சமம் என்று சொல்லலாம்? சடங்குகளை நிராகரிக்கலாம்? புனித ஆவியையும், மந்திர தந்திரங்களையும் மறுக்கலாம்? பிரிஸ்ட்லி மனிதர்களுக்கு மறு அவதாரம் கிடையாது என்கிறார். இயேசு உயிர்த்தெழுந்ததிற்குப் பின்னால் நாம் கண்டறியாத இயற்பியல் விதிகள் இருக்கலாம் என்கிறார். இது இப்படியே சென்றால் நமது எதிர்காலத்தைப் பாதித்துவிடும். மக்களிடம் இத்தகைய கருத்துக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதற்கு முன் இந்தக் கும்பலுக்கு மொத்தமாக முடிவுரை எழுத வேண்டும் என அரசு முடிவு செய்தது. அதற்கான சந்தர்ப்பம் அமைய காத்திருந்தபோதுதான் வந்தது, பிரெஞ்சுப் புரட்சி.

0

பிரெஞ்சுப் புரட்சியில் பழைய மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு புதிய மக்கள் அரசாங்கம் உருவானது. இதனை எராஸ்மஸ் கொண்டாடினார். மூளையற்ற முட்டாள் மன்னர்கள் வீழ்ந்து, மக்கள் அரசாளட்டும் என ஆராதித்தார்.

இங்கிலாந்து அரசு ஏற்கெனவே பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் இங்கிலாந்திலும் எதிரொலித்துவிடுமோ என அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் எராஸ்மஸ் போன்ற அறிஞர்கள் இப்படிப் பேச, லூனார் சமூக ஆட்கள் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனச் சொல்லி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

சமத்துவம் பேசிய லூனார் சமூகத்தின் ஆட்கள் சல்லடைப்போட்டு தேடப்பட்டனர். நாத்திகம் பேசியவர்கள் நசுக்கப்பட்டனர். ஜோசப் பிரிஸ்ட்லியின் வீடும், பிரார்த்தனைக் கூடமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அறிவாளிகளுக்கு இனி வேலை இல்லை. அரசரும் திருச்சபையுமே போற்றப்பட வேண்டியவர்கள் என்றது அரசாங்கம். லூனார் சமூகம் சிதைந்துபோனது. பிரிஸ்ட்லி அமெரிக்கா தப்பிச் சென்றார்.

எராஸ்மஸ் தன் உழைப்பை எல்லாம் செலுத்தி ‘ஸூனோமியா’ (Zoonomia) எனும் புரட்சிகர மருத்துவ நூல் ஒன்றை எழுதி இருந்தார். ஆனால் அதைக் கிழித்தெறிய வேண்டும் என்றது அரசாங்கம். அவருடைய மற்ற படைப்புகளும் ஆபாசம் எனத் தூற்றப்பட்டன. எராஸ்மஸ் பேசும் நாத்திகம்தான் பிரெஞ்சுப் புரட்சி போன்ற சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இறுதியில் லூனார் சமூகம் இழுத்து மூடப்பட்டது. அப்போது நிலவி வந்த சுதந்திரச் சிந்தனை எல்லாவற்றையும் தீக்கு இரையாக்கிவிட்டு, புதிய இங்கிலாந்தை மீண்டும் பழைமைவாதம் நோக்கிய, திருச்சபை விழுமியங்களைப் பாதுகாக்கும் தேசமாக மாற்றியது அரசு.

அறிவுஜீவிகள் தங்கள் நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டனர். வெட்ஜ்வுட் உடல்நலம் பாதிக்கப்பட்டார். தனது மகன்களுக்குச் சொத்துகளைப் பிரித்துக்கொடுத்துவிட்டு, மகள்களுக்குத் திருமணங்கள் செய்துவைத்தார். தனது மகள் சூசானாவை தனது நண்பர் எராஸ்மஸின் மகனான ராபர்ட்டுக்குத் திருமணம் செய்துவைக்க முன்வந்தார்.

எராஸ்மஸுக்கு 14 வாரிசுகள். மூத்தமகன் சார்லஸ். அவரும் மிகச் சிறந்த மருத்துவர். ஆனால் நோயாளி ஒருவரைக் குணப்படுத்த முயற்சி செய்து, அதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இறந்துபோனார். இரண்டாவது மகன்தான் ராபர்ட். எராஸ்மஸ், ராபர்ட்டையும் மருத்துவராக்க விரும்பினார்.

ராபர்ட் எடின்பர்க் பல்கலைக்கழகம் சென்றார். லெய்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். சொந்த ஊருக்குத் திரும்பி, மருத்துவர் பணியைத் தொடங்கினார். ராபர்ட்டுக்கு தனது தந்தையைப்போலவே மருத்துவ ஞானம் இருந்தது. அனைவரையும் அரவணைக்கும் நேசம் இருந்தது. இதனால் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார். ஆனால் தன் தந்தையைப்போலப் புரட்சிகர, நாத்திகவாதக் கருத்துக்களைப் பேசாமல், இங்கிலாந்து அரசுக்கு அடிபணிந்து ஷ்ரூஸ்பரி நகருக்கு வெளியே ஒரு பெரிய வீட்டைக் கட்டிக்கொண்டு குடிபுகுந்தார்.

இவருக்குத்தான் வெட்ஜ்வுட் தன் மகள் சூசானாவைத் திருமணம் செய்ய முன்வந்தார். ராபர்ட்டுக்கும் சூசானாவுக்கும் 1796-ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் அடுத்தடுத்து ஆறு குழந்தைகள் பிறந்தன. முதல் மூன்றும் மகள்கள். நான்காவது மகன். அவனுக்கு எராஸ்மஸ் எனத் தந்தையின் பெயரையே வைத்தார் ராபர்ட். இதன் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து பிப்ரவரி 12, 1809 அன்று இன்னொரு மகன் பிறந்தான். அவனுக்கு ராபர்ட், தன் குடும்பத்தின் மருத்துவப் பாரம்பரியத்தை நினைவூட்டும் வண்ணம், சார்லஸ் ராபர்ட் டார்வின் எனப் பெயரிட்டனர்.

சார்லஸ், ராபர்ட்டின் சகோதரர் பெயர். நோயாளியைக் குணப்படுத்தப்போய் இறந்தவர் எனப் பார்த்தோம் இல்லையா? அவரது பெயர். டார்வின் என்பது தனது தந்தை ‘எராஸ்மஸ் டார்வினின்’ வம்சாவளியை நினைவுபடுத்தும் குடும்பப் பெயர். இப்படியாக மருத்துவர்கள் வழிவந்த மகன் என்பதால் சார்லஸ் டார்வினும் சிறந்த மருத்துவராக வருவான் என ராபர்ட் எதிர்பார்த்தார். ஆனால் மகனுக்கோ மருத்துவத்தில் துளியும் ஆர்வமில்லாமல் இருந்தது.

(தொடரும்)

The post டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் நாம் இப்போது பயணிக்கிறோம். திரு.வைத்தியநாதன், டாக்டர் கேயின் தந்தை. ஒரு மாவட்ட விவசாய அதிகாரி. அந்தக் காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் கிடையாது. காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில், நான்கு ராஜதானிகள் மாத்திரமே உண்டு. கிழக்கு (கொல்கத்தா); வடக்கு (டெல்லி); மேற்கு (மும்பை); மற்றும் தெற்கு (மதராஸ்) என மொத்த இந்தியாவும் அடக்கப்பட்டுவிட்ட காலம். இதன் காரணமாக இந்த நான்கு பெரிய நகரங்களும் உயரிய இடத்தைப் பெற்றிருந்ததோடு, கல்வியிலும் சிறந்து விளங்கின.

திரு. வைத்தியநாதன், மதராஸ் ராஜதானியின் கீழ் அனந்தப்பூர், பெல்லாரி, பெனுகொண்டா, காதிரி, ஊட்டி, குன்னூர், கோவை, ஆடுதுறை, சாத்தூர் என மூன்று மாநிலங்களில் (தற்போதைய வரையறைப்படி) உள்ள ஊர்களில் பணி புரிந்தார். எனவே, டாக்டர் கேயின் பள்ளிப் படிப்பு பல இடங்களில் இருந்தது. ஓர் இடத்தில்கூட வெகு காலம் நிலைத்திருந்ததில்லை. காரணம், அவர் தந்தைக்கு அடுத்த மாற்றல் தயாராகிவிடும். அப்படி மாற்றல் நேரவில்லை என்றால், குடும்பச் சூழல் காரணமாக அல்லது மாற்றல் ஆன இடங்களில் பள்ளிகள் சரியான நிலையில் இல்லாததால், டாக்டர் கே, தன் மாமன், சித்தப்பா உள்ளிட்ட மற்ற உறவினருடன் தங்கிப் படிக்க நேரிட்டது.

மற்றொரு முக்கியக் காரணம், அன்று கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக நடைமுறையில் இருந்தன. இப்போதுபோல, தனிக்குடித்தனங்கள் கிடையாது. ஏனெனில், ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாகக் குறைந்தது நான்கிலிருந்து எட்டுக் குழந்தைகள் இருப்பர். அன்றைய நிலை அறிந்தவர்களுக்கு இது தெரியும். எனவே, அவர்களைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளப் பெரியவர்கள் தேவை. அதற்குச் செலவில்லாத வழிமுறை, கூட்டுக் குடும்பம்தான். எப்போது நாம் இறப்பை மருத்துவ வசதி கொண்டு தள்ளிப்போடத் தொடங்கினோமோ, அப்போதிருந்து மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இறப்பும் பிறப்பும், சம நிலையில் இருக்கும்வரை மக்கள் தொகைப் பெருக்கம் எல்லை மீறாமல் இருந்தது. சரி, அது வேறு கதை. இப்போது டாக்டர் கேயின் கதைக்கு வருவோம். அவரது வீட்டிலும் இதே நிலைதான். அவருடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். இவர்தான் முதல் குழந்தை. இவர் பிறந்த நாள் ஜூன் 6, 1929. எப்போதும் வீட்டில் திருவிழாபோலக் கூட்டம்தான். இதுவும் ஒரு காரணம், அவர் பிறர் வீட்டில் இருந்து படிக்க நேர்ந்ததற்கு. வீட்டுச் சூழ்நிலை சற்று முன்பின் இருக்கும்போது படிப்பைப் பாதிக்கக் கூடாது என்று அவரைப் பல இடங்களில் தள்ளியது.

இதனால் நேர்ந்த நல்ல விஷயம், டாக்டர் கேவுக்கு எல்லாத் தென்னிந்திய மொழிகளிலும் சிறந்த பாண்டித்யம் கிடைத்தது. அவருடன் பழகிய பலரும் இந்த உண்மையை மிகவும் சிலாகித்துச் சொல்வார்கள். ஓரளவு ஹிந்தியும் தெரிந்ததால், அவருக்கு எந்த வனத்துறை அதிகாரியிடமோ அல்லது வேறிடங்களிலோ, மொழியின் காரணமாகத் தடை இருந்ததில்லை. கிட்டத்தட்ட எல்லோரிடமும் அவரவர் தாய்மொழியில் பேசும் திறன் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதனால் ஓர் உடனடி அணுக்கம் அவருக்குக் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஆந்திராவில் குப்பம் என்ற இடத்தில் பயிர்ச் சேதம் செய்த யானைகளைப் பிடிக்கச் சென்றபோது மொழிப் பிரச்னை இங்கிருந்து (தமிழகத்திலிருந்து) சென்ற யாருக்கும் வரவில்லை. காரணம், டாக்டர் கேயின் சரளமான தெலுங்கு மொழிப் புலமைதான். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேசி, குறைகளைக் கேட்டறிந்து, அதை அதிகாரிகளிடம் சொல்லி இழப்பீட்டுக்குச் சிபாரிசு செய்தார். அதேபோல உடற்கூறு ஆய்வுக்கு வரும் ஹனுமந்துவிடம், எந்த உடலுறுப்பை எடுக்க வேண்டும், எப்படி எடுக்க வேண்டும் என்று கன்னடத்தில் பேசிக் காரியத்தை முடிப்பார். காரணம், ஹனுமந்துவின் தாய் மொழி கன்னடம்.

அதேபோலக் கூட்டுக் குடும்பக் காலத்தில், இவரது குடும்பம், மாறுதல்கள் காரணமாக ஒரு தனிக் குடித்தனமாகவே இருந்தது. ஏனெனில், பெரியவர்கள் வந்து தங்கும் அளவிற்கு ஓர் இடத்தில் தொடர்ச்சியாக இருந்ததில்லை. இதனால், இவர் தன் தாயின் பிரசவக் காலங்களில்கூட உடன் இருக்கும் சந்தர்ப்பங்களும் வாய்த்தன. பெரியவர்கள் வந்து உதவ இயலாத அல்லது தாயார் ஊருக்குப் போக இயலாத சமயங்களில், மூத்த மகனாக இவருக்குக் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு இருந்தது. அதனால் சமையல் போன்றவற்றை எடுத்துச் செய்யவும் நேர்ந்தது.

கிட்டத்தட்ட ஒரு second in charge போல! இதன் விளைவு, சமையலிலும் இவர் கை தேர்ந்து விளங்கினார். அவருடன் பணி புரிந்தவர்கள், டாக்டர் கேயின் நளபாகத்தைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை. முனைவர் ஏஜேடி ஜான் சிங் பல முறை என்னிடம் டாக்டர் கேயின் சமையல் கலை தேர்ச்சியைப் பற்றிக் கூறி இருக்கிறார். பல ஆராய்ச்சியாளர்கள் அவரது சமையலின் நேர்த்தியை வியந்து பாராட்டி இருக்கின்றனர். இப்படி ஒரு பின்னடைவை, சோர்வடையச் செய்யும் வேலையைக் கலையாக மாற்றும் திறன் டாக்டர் கேவுக்கு இருந்தது. ‘அவர் வைக்கும் சாம்பார் நம்மை அடிமை ஆக்கி விடும்’ என்று அஜய் தேசாய் அடிக்கடி சிலாகிப்பார்.

ஐந்தாம் வகுப்பு வரை பெற்றோர்களிடம் இருந்து படித்த அவர், அடுத்த மூன்று வருடங்கள் சென்னையில் சித்தப்பாவின் வீட்டிலும், அடுத்த இரண்டு வருடங்கள் திருச்சியில் உள்ள பாட்டி வீட்டிலும், அடுத்த இரண்டு வருடங்கள் குன்னூரிலும், இன்டர்மீடியட் மீண்டும் பாட்டி வீட்டிலும் இருந்து பள்ளிப் படிப்பை முடித்தார். இப்படிப் பல இடங்களில் மாறி மாறிப் படித்தும் அவர் படிப்பில் சோடைபோக வில்லை என்பதுதான் வியப்பு. மீளுந்தன்மை என்பதன் நிதரிசன உதாரணம் டாக்டர் கே.

இவர் மிகச் சிறிய வயதில், ஒரு பூனைக் குட்டியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அதைக் குளிப்பாட்டலாம் என்று முடிவு செய்து, தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி விட்டார். அந்தப் பூனைக்குட்டி மூச்சுத்திணறி இறந்து விட்டது. அதைக்கண்ட அவரது தாயார் டாக்டர் கேவைக் கடுமையாகத் தண்டித்தார். அவரது தந்தை அது அளவு கடந்த அன்பால் விளைந்த செயல் என்று உணர்ந்து, ‘நீ கால்நடை மருத்துவர் வேலைக்குத்தான் லாயக்கு’, என்று திட்டினார். பின்னாட்களில் அவர் இதை அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. ‘எந்த நேரத்தில் சொன்னாரோ அதே போல ஆகி விட்டது’, என்று.

இன்னொரு வியக்கத்தக்கக் குணம், இசையில் அவருக்கிருந்த ஈடுபாடு. இசை விற்பன்னர்கள்போல் பிரமாதமான ஞானம் என்று கூற இயலாவிட்டாலும், ராகங்களைக் கண்டறியும் திறன் அவரிடம் இருந்தது. பல கீர்த்தனைகளைப் பாடும் திறனும் புரிந்துகொள்ளும் திறனும் அவரிடம் இருந்தது. அதேபோல், ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையிலும் அவருக்கு நல்ல அறிவு இருந்தது. இதற்கு அவரது தாய் வழி முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது. தாய் நல்ல பாடகி; தாத்தா சங்கர நாராயணன் சிறந்த வயலின் வித்வான். பல நண்பர்கள் திரு.கேயின் ராகங்களைக் கண்டறியும் திறன்பற்றி கூறக் கேட்டிருக்கிறேன். மற்றொரு விஷயம், பாரம்பரியமாக வாழும் பிராமணக் குடும்பங்களில் இசை என்பது அவர்கள் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அடிப்படையான சில திறமைகளைக் கொண்டிருப்பார்கள். அதனால், இவர் இசை ஞானம் உடையவராக இருந்ததில் வியப்பில்லை. அதேபோல இறை நம்பிக்கை அவர் தாயாரிடம் இருந்து வந்தது. அவர் சொல்வார், ‘என் தாய் எனக்குக் கடவுள் நம்பிக்கையைக் கற்றுக் கொடுத்தார். என் தாய்க்குத் திருமணம் ஆகும்போது 14 வயது. நான் பிறக்கும்போது அவளுக்கு வயது 15. அவளுக்கு நான் ஓர் இளவரசன். ஐந்தாவது வரை மட்டுமே படித்த அவளுக்கு 3 மொழிகளில் சரளமாகப் பேச எழுத வரும்’ என்று.

மற்றொரு போற்றத்தக்க அம்சம், அவரது பரந்துபட்ட விஷய ஞானம்! அவரது தொழிலைச் சார்ந்து மட்டுமல்லாது, பலதரப்பட்ட துறைகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பார். ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் அவரது அறிவு வியக்கத்தக்கது. எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். இதன் விளைவாக, அவரது எழுத்தாற்றல் ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றாக இருந்ததுடன், சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும், அழகாகவும் சொல்ல இயன்றது. முனைவர் பட்டம் படிக்கும் பல மாணவர்களிடம், எழுத்தாற்றல் குறித்து அவர் எடுத்துரைப்பார்.

டாக்டர் கேவின் மற்றொரு சிறந்த பண்பாக எல்லோரும் சொல்வது, அவரது பழகும் விதமும் தன்மையும். நிர்வாக நோக்கில் கடைநிலை ஊழியரிடம் இருந்து முதன்மை வனப் பாதுகாவலர் வரை ஒரே மாதிரி அன்புடன் பழகும் குணம்தான் இன்றும் அவரை ஓர் ஆதர்ச மனிதனாக, தலைவனாக, யானைப் பாகன்களுக்கு மத்தியிலும், யானை ஆய்வாளர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் நிலை நிறுத்தி இருக்கிறது. கால்நடை ஆய்வாளர் மணி, வெளிநாட்டுக் கால்நடை மருத்துவர் கிரிஸ் வெம்மர் சொல்வதுபோல் பாகன்கள், காவடிகளிடம் அவர் எப்படித் தோளில் கை வைத்துப் பேசுவார் என்று கூறுவதைப் பார்க்கும்போது இது விளங்கும். இதற்கான பயிற்சியும் மனமும், அவரது குடும்பத்தில் கிடைத்தது. ஏனெனில், அத்தனை சகோதரச் சகோதரிகளுடன் வாழும்போது, விட்டுக் கொடுப்பதும், பொறுப்புடன் உதவுவதும், பொறுப்பை எடுத்துக் கொள்வதும், தன்னைப்போல வந்து விடும். எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை இயல்பாக வந்துவிடும். நாங்கள் டாப்ஸ்லிப் சென்றபோது அங்கிருந்த பாகன்கள் கண்கள் பனிக்க டாக்டர் கேவைப் பற்றி இன்றும் நினைப்பதில் (25 ஆண்டுகளுக்குப் பின்!) வியப்பில்லை. அவரிடத்தை நிரப்ப வேறொருவர் இல்லை என்பதை அவ்வளவு எளிதில் மறுக்க முடியவில்லை. மிதுனபூரில், மொழி அறியாத இடத்தில் பல மாதங்கள் தங்கி, பணியில் ஈடுபட்ட பாகன்கள் எப்படி டாக்டர் கே அவர்களின் தேவைகளை உணர்ந்து உதவினார் என்பதை இன்றும் சொல்லி மகிழ்ந்தனர். Elephant Men என்ற ஆவணப்படம் அந்த வாழ்வை நன்கு எடுத்துரைக்கும்.

இப்படிப் பல கஷ்டங்களுக்கு இடையில் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்பை நோக்கி அடி எடுத்து வைத்தார். அன்று சென்னையில் மட்டும்தான் பொறியியல் கல்லூரி, அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையில். எனவே, இவரது மதிப்பெண்களுக்கு, (நல்ல விதம் என்றாலும் போட்டியில் வெல்லத் தக்கவை இல்லாததால்) பொறியியல் கிடைப்பது கடினமானது. ஆகவே சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் வேண்டா வெறுப்பாகச் சேர்ந்தார். அதற்குள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. வேதியியலுக்கு இது மேல் என்று உடனே சேர்ந்துவிட்டார். அது பின்னாட்களில் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடப் போகிறது என்று அவருக்கும் தெரியாது; யானைகளுக்கும் தெரியாது.

இந்தப் படிப்பையும் அவர் புரசைவாக்கத்தில் இருந்த தனது மற்றொரு சித்தப்பாவின் வீட்டில் இருந்துதான் படித்து முடித்தார். All those who wander are not lost என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, அவர் இத்தனை அலைச்சல்களுக்கிடையிலும், தனது குறிக்கோளான படிப்பை விடவில்லை; வாழ்விலும் தொலையவில்லை. மாறாக, வனக் கால்நடை மருத்துவர்களுக்கிடையே ஒரு ஜாம்பவான் என்று போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தார். யானை டாக்டர் என்ற அடைமொழியுடன் யானைகளைப் பற்றிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். அதற்கான உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது விவாதிக்கத்தக்கது, ஆனால் இங்கு அதற்கு இடமில்லை.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள் appeared first on கிழக்கு டுடே.

கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார். பின்னாளில் தாயின் பெயரையே தனக்கும் சூட்டிக்கொண்டார். ஹாரியட்டின் பெற்றோர் இருவரும் அடிமைகள். மேரிலாண்ட் மாகாணத்தில் அமைந்த டார்செஸ்டர் மாவட்டத்தில் இருந்த பெரிய பண்ணையில் வேலைசெய்தனர். மாடிஸன் கோட்டத்தில் பிளாக்வாட்டர் என்ற சிற்றாற்றுக்கு அருகே அமைந்திருந்தது பண்ணை.

ஹாரியட் பிறந்த வருடம் 1815, 1820, 1825 என்று ஒவ்வொரு ஆவணத்திலும் பலவாறாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் பிறந்த இடம் எது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. படிப்பறிவில்லாத அடிமைகளின் குழந்தை, அதுவும் ஐந்தாவதாகப் பிறந்த மகள். பிறந்த தேதியைக் குறித்துவைப்பது பற்றியெல்லாம் யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். 2004இல் ஹாரியட் டப்மனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கேட் லார்ஸன் பற்பல ஆவணங்களைச் சரிபார்த்து 1822ஆம் ஆண்டில் ஹாரியட் பிறந்தார் என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து மற்ற எழுத்தாளர்களும் அதையே ஏற்றுக்கொண்டார்கள்.

ஹாரியட்டின் தாய் வழிப் பாட்டி ஆப்பிரிக்காவிலிருந்து மாடஸ்டி என்ற அடிமைக் கப்பலில் அமெரிக்கா வந்தார் என்பது மட்டுமே தெரியும். அவரது மூதாதையர்களைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஹாரியட்டின் பண்புகளையும் இயல்புகளையும் கொண்டு அவர் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் அஷாந்தி இனத்தவராக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை உறுதிப்படுத்தும் சான்றுகளோ தகவல்களோ கிடைக்கவில்லை. ஹாரியட்டின் தாய் வழித் தாத்தா வெள்ளைக்காரராக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஹாரியட்டின் பெற்றோர் 1808இல் திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்பதை நீதிமன்ற ஆவணங்களைக்கொண்டு அனுமானித்தனர்.

0

வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் செஸபீக் விரிகுடாவை ஒட்டிய நிலப்பகுதி பல சிற்றாறுகள் ஓடும் இயற்கை வளமிக்கது. அங்கே கப்பல் கட்டும் தொழிலோடு வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்றது. வண்டல் மண்ணின் வளத்தில் புகையிலை, கோதுமை, சோளம், பழ மரங்கள் போன்ற பயிர்கள் நன்கு வளர்ந்தன. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் வெள்ளை முதலாளிகளின் பண்ணைகளிலும் நிலங்களிலும் பெருமளவில் வெள்ளை ஒப்பந்தக்கூலிகளே வேலைசெய்தனர், சில பண்ணைகளில் அடிமைகளும் இருந்தனர். வெள்ளைத் தொழிலாளர்கள் முதலாளிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததால் 1730 முதல் ஆப்பிரிக்காவிலிருந்து கூட்டங்கூட்டமாக அடிமைகள் அழைத்துவரப்பட்டனர். அப்படித்தான் ஹாரியட்டின் மூதாதையர்களும் மற்ற ஆப்பிரிக்கர்களும் வலுக்கட்டாயமாக அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்படி வட அமெரிக்க நிலத்துக்கு நேரடியாக அடிமைகளாக வந்துசேர்ந்த முதல் ஆப்பிரிக்கர்கள் யார்?

0

வருடம்: 1619. இடம்: மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் சாவ் பாலோ டி லுவாண்டா நகரம். போர்த்துகீசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம். அங்கிருந்து 350 ஆப்பிரிக்க அடிமைகளை ஏற்றிக்கொண்டு பண்டைய புதிய ஸ்பெயினின் (தற்போதைய மெக்சிகோ) வேரா க்ரூஸ் நகருக்குப் பயணமானது சாவ் ஜோவா பௌடிஸ்டா என்ற பெயர்கொண்ட அடிமைக்கப்பல்.

பல வாரக் கடற்பயணத்துக்குப் பிறகு அடிமைக் கப்பல் மெக்சிகோ வளைகுடாவை அடைந்ததும் வைட் லயன் என்ற டச்சுக் கப்பலும் டிரஷரர் என்ற ஆங்கிலேயத் தனியார் கடற்படைக் கப்பலும் அதன்மீது தாக்குதல் நடத்தின. கப்பலில் இருந்த அடிமைகளில் சிலரைச் சிறைப்பிடித்தன. அவர்களுள் சுமார் 30 பேரை ஓல்ட் பாய்ண்ட் கம்ஃபர்ட் என்ற வர்ஜினியா மாகாணத்திலிருந்த ஆங்கிலேயக் காலனியில் உணவுப்பொருட்களுக்காக விற்றனர் வைட் லயன் கப்பல் குழுவினர். இது நடந்தது 1619ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் நாள். இன்னும் சில நாட்கள் கழித்து மேலும் 2, 3 பேரை விற்றனர் டிரஷரர் கப்பலைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்வு வர்ஜினியா மாகாணத்தின் வரலாற்றை மட்டுமல்ல வட அமெரிக்காவின் எதிர்கால சமூக அமைப்பையும் அரசியலையும் ஒருசேரப் புரட்டிப்போட்டது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதிலும் அடக்குமுறை செய்வதிலும் புதிய கட்டம் ஒன்று உருவானது.

1619இல் வர்ஜினியா காலனிக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் பண்டைய டோங்கா (Ndongo) பேரரசைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. தற்போதைய அங்கோலா நாட்டின் ஒரு பகுதி. மக்கள் கிம்புண்டு என்ற மொழியைப் பேசினார்கள். விவசாயத்தோடு கைத்தொழில், நெசவு, இரும்புப் பொருட்களைச் செய்யும் திறனையும் பெற்றவர்கள். இந்தப் பகுதிக்கு 16ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவுக்கு வந்த போர்த்துகீசியர்கள் இந்தப் பகுதியிலிருந்த சாவ் பாலோ டி லுவாண்டா துறைமுகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிறகு அங்கிருக்கும் மக்களைப் பல வழிகளில் அடிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கும் தங்கள் குடியேற்ற நாடுகளுக்கும் கொண்டுசென்றனர். அட்லாண்டிக் அடிமை வாணிகத்தின் முதல் 150 ஆண்டுகளில் பத்தில் ஒன்பது ஆப்பிரிக்கர்கள் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டனர். 1750 வரையிலும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகளவில் அடிமைப்படுத்தப்பட்டனர். இந்தத் தகவல்கள் எல்லாம் வரலாற்று ஆய்வுகள்மூலம் தெரியவந்தவை.

வர்ஜினியாவுக்கு வந்த ஆப்பிரிக்கர்களின் சட்ட நிலைமையும் எதிர்காலமும் குழப்பமாக இருந்தது. வர்ஜினியாவின் சட்டம் அடிமைத்தளையை ஏற்கவில்லை என்றாலும் உணவுக்காகப் பண்டமாற்றாக விற்கப்பட்டவர்கள் காலமுழுதும் அடிமையாக வேலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடிமைத்தளை என்னும் நிறுவனத்தின் கருத்தாக்கம் 17ஆம் நூற்றாண்டில் முழுமைபெற்றது. வாழ்நாள் முழுவதையும் அடிமைகளாகவே கழிக்கும் நிலையில் பெரும்பாலானோர் சிக்கித் தவித்தனர்.

வர்ஜினியாவின் மக்கட்தொகைக் கணக்கெடுப்புப் பட்டியல் ஆண்டனி, இசபெல்லா என்ற ஆப்பிரிக்க இணையரின் பெயரைப் பதிவுசெய்துள்ளது. ஃபோர்ட் அல்ஜெர்னூன் என்ற பகுதியின் தளபதியான கேப்டன் வில்லியம் டக்கரின் இல்லத்தில் வசித்தனர். 1624இல் அவர்களின் மகன் வில்லியம் பிறந்தான். அமெரிக்க மண்ணில் பிறந்த முதல் ஆப்பிரிக்கக் குழந்தை என நம்பப்படுகிறது.

0
ஆப்பிரிக்கர்கள் அமெரிக்கா வந்துசேர்ந்து இன்றைக்கு 400 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் கடந்தகால வரலாற்றைப் பேசுகையில் ஆப்பிரிக்க அடிமைகள் என்றும் நிகழ்காலம் பற்றி உரையாடுகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றும் அவர்களைக் குறிக்க ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆப்பிரிக்கா பல்லாயிரக்கணக்கான இனங்களையும் கலாசாரங்களையும் மொழிகளையும் கொண்டது. இந்த உண்மையைப் புரிந்துகொண்ட காரணத்தால் அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்க மக்களின் மூதாதையர்கள், சொந்த ஊர், கலாசாரம், மொழி ஆகியவை பற்றி விரிவான இனவிளக்க ஆராய்ச்சிகள் கடந்த சில பத்தாண்டுகளாக அமெரிக்காவில் நடந்து வருகின்றன.

எந்தெந்த வருடங்களில் எந்தெந்த ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வந்துசேர்ந்தனர்? எந்த நாட்டினர் அவர்களை யாரிடமிருந்து விலைகொடுத்து வாங்கினார்கள்? யாருடைய கப்பலில் அவர்கள் அட்லாண்டிக்கைக் கடந்தார்கள்? அமெரிக்காவின் கிழக்குக் கரையில் எந்தத் துறைமுகத்தில் இறங்கி எந்தப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்? ஒவ்வொருவரின் பெயரும் வயதும் பாலினமும் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்காக வரலாற்றாசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இனவரைவியல் வல்லுநர்களும் பல தகவல்களைத் திரட்டி ஆய்வுக்குட்படுத்தி வெளியிட்டு வருகிறார்கள்.

0

புதிய உலகம் என்றழைக்கப்பட்ட அமெரிக்காவுக்கு வந்த ஆப்பிரிக்கர்கள் பற்பல திறன்களைக் கொண்டவர்கள். உள்நாட்டு, தூரதேச வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிரிக்க மொழிகளைத் தெரிந்து வைத்திருந்திருந்ததோடு ஐரோப்பிய மொழிகளையும் பேசினர். இதனால் சில நேரங்களில் மொழிபெயர்ப்பாளர்களாகவும் விளங்கினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, உலோகக் கொல்லியல், மண்பாண்டத் தொழில் எனப் பல தொழில்களைச் செய்பவர்களும் இவர்களிடையே இருந்தனர்.

தொடக்கத்தில் ஸ்பானிய, டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனிகளை அமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆப்பிரிக்கர்களின் குடியேற்றம் உதவியது. இவர்களுள் ஒப்பந்தக் கூலிகளும் அடிமைப்படாமல் சுதந்திரமாக வாழ்பவர்களும் இருந்தனர். நிலத்தைப் பண்படுத்தி, தங்களைப்போன்ற அடிமைகளுக்குத் தங்குமிடங்களையும் உரிமையாளர்களுக்குக் கோட்டைகளையும் கட்டினர். அன்றாட உணவுக்கான பயிர்களோடு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதிசெய்வதற்காக அரிசி, அவுரி நீலம் எனப்படும் இண்டிகோ போன்றவற்றையும் பயிரிட்டனர். கால்நடைகளையும் பன்றிகளையும் வளர்த்தனர். பைன் மரங்களை வெட்டி அவற்றிலிருந்து டர்பண்டைன், பிசின், தார் ஆகியவற்றைச் சேகரித்தனர். காலப்போக்கில் அமெரிக்காவின் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சியிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற நாட்டை நிறுவுவதிலும் ஆப்பிரிக்கர்கள் பெரும்பங்கு வகித்தனர்.

ஒரு நாட்டை நிறுவுவதற்கு அல்லும் பகலும் உடல் நோக உழைத்த ஆப்பிரிக்கர்களின் பங்களிப்பு எப்படி முழுவதுமாக மறைக்கப்பட்டது? எப்போதுமே அடிமையாக இருக்கும் துயரத்துக்கு எப்படி ஆளாகினர்? இத்தனைத் திறன்களையும் அனுபவங்களையும் பெற்றிருந்தவர்கள் எதனால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்? அவர்களின் சமூக, கலாசார வரலாறு ஏன் உலகின் கண்களுக்குத் தெரியாமல் போனது? இத்தனைக் கேள்விகளுக்கும் விடைதேட முற்பட்டனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலத்தின் சிந்தனையாளர்கள் மக்களை வகைப்படுத்துவதற்கு நிறத்தைப் பயன்படுத்தினர். ஐரோப்பாவுக்கு முதலில் வந்த ஆப்பிரிக்கர்களான சஹாரா நிலப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தங்களுக்கு நிகரானவர்களாக ஏற்றுக்கொள்வதில் ஐரோப்பியர்களுக்குப் பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் அமெரிக்க இந்தியர்களும் ஆப்பிரிக்கர்களும் வந்தபோது அந்தப் பார்வை மாறியது.

பண்டைய கிரேக்க எழுத்தாளர்கள் உருவாக்கிய மாபெரும் உயிர்ச் சங்கிலி (Great Chain of Being) என்ற படிமம் ஆப்பிரிக்கர்களை எல்லா இன மக்களுக்கும் கீழே வைத்தது. ஆப்பிரிக்கர்கள் மனிதர்களுக்குக் கீழ்நிலை, விலங்குகளுக்குச் சற்று மேலே என்ற கிரேக்கர்களின் கருத்து எல்லோரின் பார்வையையும் மாற்றியது. நிறம், உடலமைப்பு, மனப்பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை ஆறு முக்கியப் பிரிவுகளாக ஐரோப்பியர்கள் வகைப்படுத்தினார்கள். குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றுவதற்கு முந்தைய கட்டமே ஆப்பிரிக்கர்கள் என்ற இனவாதக் கருத்து வலுப்பெற்றது. அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் உழைப்பாளர்களின் தேவை பல மடங்கு அதிகரித்தபோது ஒவ்வொரு மனித இனமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டவை என்ற எண்ணம் வேரூன்றியது. நாளடைவில் ஐரோப்பியர் அல்லாதவரைப் பற்றிய எதிர்மறை நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் கற்பிதங்களும் கெட்டிப்பட்டன. வெள்ளை நிறத்தவர்கள் மேன்மக்கள், கறுப்புத் தோலுடையவர்கள் இழிவான கீழ்மக்கள் என்ற எண்ணம் ஐரோப்பியர்களின் மனதில் வலுவாக விதைக்கப்பட்டது.

காரணமறிதல், பகுத்தறிதல் ஆகிய இரண்டின் வழியாக முன்னேற்றமடைய வேண்டும் என்ற கருதுகோளைக் கொண்ட விழிப்புணர்வு இயக்கம் மனிதர்களின் உரிமைகளை நிலைநாட்டும் புதிய நாடொன்று உருவாக வழிவகுத்தது. அதே நேரம் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதையும் அங்கீகரித்தது என்பது முரண்நகை. ஆப்பிரிக்கர்களின் இழிநிலையை நிறுவவும் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தவும் வரலாற்றில் பல தகவல்கள் தவிர்க்கப்பட்டன, மறைக்கப்பட்டன. ஆப்பிரிக்க சமூக வரலாறும் கலாசாரப் பாரம்பரியமும் திரிக்கப்பட்டன, தவறாகப் பொருள்கொள்ளப்பட்டன.

இன்னொரு புறம் ஆப்பிரிக்கர்களின் வரலாறும் கலாசாரமும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டவை, எழுத்தில் பதிவு செய்யப்படவில்லை. அட்லாண்டிக் அடிமை வாணிகத்துக்கு முந்தைய பதிவுகள் கிரேக்க, அரேபிய, போர்த்துகீசிய பயணிகள், வாணிகர்கள், துறவிகள் போன்றோரால் எழுதப்பட்டவை. அடிமை வாணிகத்தினால் வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு வந்தவர்களின் வாழ்வும் வரலாறும்கூட ஐரோப்பியர்களால் பதிவுசெய்யப்பட்டவை. வெள்ளையர்கள் உயர்வானவர்கள் என்ற கருத்து எவ்வளவு வேரூன்றியிருந்தது என்றால் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கறுப்பின சமூகவியலாளர்கள் சிலரும் அந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

0

17ஆம் நூற்றாண்டில் புகையிலைப் பயிர் வட அமெரிக்காவின் பசுந்தங்கமாக இருந்தது. தொடக்கத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய நில உரிமையாளர்களும் அவர்களின் வேலையாட்களும் நிலத்தில் இறங்கிப் பணிசெய்தனர். செலவைச் சமாளித்து லாபம் ஈட்டுவதற்கு விளைச்சல் அதிகமாக வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும். இன்னும் அதிகமான தொழிலாளர்கள் தேவை. இதற்குத் தீர்வாக 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய ஒப்பந்தக் கூலிகளையும் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளையும் கூட்டிவந்து இந்தப் பணியில் ஈடுபடுத்தினர்.

18ஆம் நூற்றாண்டில் வர்ஜினியா மாகாணத்தின் செஸபீக் விரிகுடா பகுதியில் புகையிலைப் பயிர் அபரிமிதமாக விளைந்தது. 1629இல் வர்ஜினியா 1.5 மில்லியன் பவுண்டுகள் புகையிலை உற்பத்தி செய்தது. 1775இல் அது 100 மில்லியன் பவுண்டாக உயர்ந்தது. அடிமை ஆப்பிரிக்கர்களும் அவர்களின் சந்ததியினரும் சிந்திய வியர்வைதான் அதற்குக் காரணம்.

வர்ஜினியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆப்பிரிக்கர்கள் பெரும்பங்கு வகித்தனர். அந்தப் பகுதியில் ஆப்பிரிக்கர்களைக் குடியேற்றுவது தொடர்ந்து நடைபெற்றது. காலனியின் பொருளாதார, அரசியல், சமூகத் தலைமையில் நில உரிமையாளர்கள் தனியாதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திய ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகவே வைத்திருந்தனர். வெள்ளை உழைப்பாளர்களின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தடைகளை அகற்றினர். அவர்களின் ஒப்பந்தம் முடிந்ததும் நிலம் வாங்கும் வாய்ப்பையும் உரிமையையும் வழங்கும் சட்டங்களை இயற்றினர். இதன் காரணமாகக் கூலிக்கு வேலைசெய்த வெள்ளைக்காரர்கள் ஒப்பந்தம் முடிந்ததும் உரிமையாளர்களாகினர். ஆனால் ஆப்பிரிக்கர்கள் நிரந்தரமாக அடிமைகளாகவே இருந்தனர். அடிமை ஆப்பிரிக்கர்களும் அவர்களின் சந்ததியினரும் காலங்காலமாகச் சுரண்டப்பட்டனர். வர்ஜினியாவுக்கு வந்துசேர்ந்த அடிமைகள் அங்கிருந்து அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கு இட்டுச்செல்லப்பட்டனர்.

0

வட அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதில் பல வகை இருந்தது. தொடக்கத்தில் எல்லா ஆப்பிரிக்கர்களும் அடிமைகளாகவே இருக்கவில்லை. விலைக்கு வாங்கும்போது குறிப்பிடப்பட்ட ஒப்பந்தக் காலம் முடிந்ததும் விடுதலை பெற்றனர் சிலர். இன்னும் சிலர் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுதந்திர மனிதர்களாகவே வந்துசேர்ந்தனர், அதற்கான சட்ட ஆவணங்களையும் வைத்திருந்தனர். தந்தை அடிமையில்லை அல்லது வெள்ளையர், ஆனால் தாய் அடிமை என்கையில் பிறக்கும் குழந்தையின் நிலை என்ன? குழந்தை தந்தையின் பெயரைப் பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும் ஆனால் தாயின் அடிமை நிலையைப் பெற்று உரிமையாளருக்குச் சொந்தமாக அவருக்குப் பணியாற்றவேண்டும்.

செஸபீக் விரிகுடாவில் கலக்கும் ஜேம்ஸ் ஆற்றின் கரையில் ஜேம்ஸ்டவுன் என்ற குடியிருப்பை ஆங்கிலேயக் குடியேறிகள் நிறுவினர். அவர்களுக்குத் தீவிரமான உழைப்பைக் கோரும் விவசாயமோ வேறு பணிகளோ செய்யத்தெரியாது. ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துவரப்பட்ட வெள்ளைக்காரத் தொழிலாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அடிமைகளாக வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் அந்தப் பகுதியைச் சீரமைத்து வாழ்விடத்தையும் விளைநிலத்தையும் நிறுவக் கடுமையாக உழைத்தனர். ஹாரியட்டின் முன்னோர்கள் மேரிலாண்ட் மாகாணத்துக்கு அப்படித்தான் வந்துசேர்ந்தனர். அந்தப் பகுதியில் குடியேறிய வெள்ளைக்காரர்களின் உடைமையாகினர்.

ஹாரியட்டின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அடிமைப்படுத்திய வெள்ளைக்காரர்களின் வாழ்க்கை குறித்து கிடைத்துள்ள ஆவணங்களை ஆய்வுசெய்கையில் அந்த இரு இனக் குழுக்களின் வாழ்க்கை எத்தனை வேறுபாடுகளைக் கொண்டிருந்தன என்பது தெரியவருகிறது. பாட்டிசன், தாம்சன், ஸ்டூவர்ட், ப்ராடஸ் போன்ற வெள்ளைக்காரர்களின் குடும்பங்கள் ஹாரியட் டப்மன் குடும்பத்தினரின் வாழ்வில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள் appeared first on கிழக்கு டுடே.

கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்

பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர். எல்மினா என்றால் போர்த்துகீசிய மொழியில் சுரங்கம் என்று பொருள். இன்று வரையிலும் அந்தப் பெயர்தான் புழக்கத்திலுள்ளது. பின்னர் அந்தப் பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது கோல்ட் கோஸ்ட், தங்கக் கடற்கரை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் தங்கத்தை வாங்குவதற்குத் தானே நேரடியாக எல்மினா நகரத்துக்குச் சென்றார். ஐரோப்பியர்கள் வாங்கிய தங்கத்துக்கு அமெசிக் (பெர்பெர்) இனத் தரகர்கள் அதிக வரி விதித்ததுதான் காரணம்.

15ஆம் நூற்றாண்டில் கடற்கரையைப் பார்த்தபடி அமைக்கப்பட்ட பீரங்கிகளைக்கொண்ட கோட்டையொன்றை எல்மினாவில் அமைத்தனர் போர்த்துகீசியர்கள். மற்ற ஐரோப்பியர்கள் எவரும் எந்த நேரம் வேண்டுமானாலும் கடல்வழியே தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் அதை எதிர்கொள்வதற்காக அந்த ஏற்பாடு. உள்நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்கள் பெரிய தாக்குதல்களை நடத்தும் சாத்தியமில்லை என்பதும் காரணம்.

தொடக்கத்தில் கோட்டையின் நிலவறை தங்க வர்த்தகத்துக்காகக் கட்டப்பட்டிருந்தாலும் 16ஆம் நூற்றாண்டுவாக்கில் அதன் பயன்பாடு மாறியது. மேல்தளத்தை உண்ணவும் உறங்கவும் வழிபாடு செய்யவும் பயன்படுத்தினர் போர்த்துகீசிய வணிகர்கள். நிலவறையில் ஆப்பிரிக்காவின் உட்பகுதியிலிருந்து பிடித்துவந்த மக்களை அடைத்து வைத்தனர். அடிமை வாணிகக் கப்பல்கள் ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ அவர்களை ஏற்றிச்செல்லும் வரையில் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும்கூட அடைப்பட்டுக்கிடந்தனர் ஆப்பிரிக்கர்கள். தாய்நாட்டில் அவர்கள் கடைசியாகப் பார்த்தது எல்மினாவின் இருண்ட நிலவறையைத்தான். அவர்களில் உயிர்பிழைத்தவர்களுக்கு அங்கே கட்டுண்டு கைதிகளாகக் கிடந்ததுதான் தங்கள் ஊரைப்பற்றிய கடைசி நினைவாகிப்போனது.

0

ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்தி வேறு கண்டங்களுக்கு இட்டுச்சென்றதுதான் உலகின் மிகப் பெரிய வலுக்கட்டாயமான குடிபெயர்தல் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். அந்தக் குடிபெயர்தல் ஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்க நிலப்பகுதியில் வசித்துவந்த தொல்குடி இனங்களான அமெரிக்க இந்தியர்களின் அழிவை ஈடுகட்டுவதற்காக நடந்தது என்பது கூடுதல் துயரம்.

1492இல் ஹிஸ்பானியோலா தீவுக்கு கொலம்பஸ் வந்தபோது அந்த நிலத்தின் தொல்குடிகளான டைனோ இன மக்களின் தொகை பல லட்சமாக இருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் 32,000 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இதனால் வயல்களில் பணிசெய்யப் போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு அடிமைகளைக் கொண்டுசென்ற போர்த்துகீசியர்களும் ஸ்பானியர்களும் இப்போது கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்தப் பக்கம் இருந்த நிலப்பகுதிக்குச் செலுத்தினார்கள். 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக இட்டுச்செல்லப்பட்டார்கள், அவர்களில் சுமார் இருபது லட்சம் பேர் வழியிலேயே இறந்துபோனார்கள்.

1518இல் ஸ்பெயினை ஆண்ட முதலாம் சார்லஸ் மன்னன் ஸ்பெயின் நாட்டுக் கப்பல்கள் ஆப்பிரிக்க அடிமைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டுவராமல் நேராக அமெரிக்க நாடுகளுக்கும் தீவுகளுக்கும் ஏற்றிச் செல்லலாம் என அனுமதி வழங்கினான். அந்தச் சமயத்தில் அட்லாண்டிக் அடிமை வாணிகம் தொடங்கவில்லை என்றாலும் ஸ்பெயினிலிருந்து ப்யூர்டோ ரிகோவுக்கும் ஹிஸ்பானியோலியாவுக்கும் சென்ற கப்பல்களில் சில சமயம் ஓரிரு அடிமைகளும் மற்ற நேரங்களில் 30 முதல் 40 பேர் வரையிலும்கூடப் பயணப்பட்டனர். 1520களில் ஆப்பிரிக்காவின் சாவோ தோம் தீவிலிருந்து ஸ்பெயின் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த புதிய ஸ்பெயினுக்குப் பயணமான கப்பலில் சில நூறு அடிமைகள் இருந்தனர். 1540களில் ஸ்பெயின் குடியேற்ற நிலங்களுக்கும் தற்போதைய அமெரிக்காவின் மாகாணங்களான ஃப்ளாரிடா, நியூ மெக்சிகோ, சௌத் கரோலினா பகுதிகளுக்கும் ஆப்பிரிக்கர்கள் கொண்டுவரப்பட்டனர் என்று நம்பப்படுகிறது. இவர்களில் சிலர் ஒப்பந்தக் கூலிகள். அடிமைப்பட்டவர்களும்கூடத் தங்களுக்கான விலையைக் கொடுத்து விடுதலையைப் பெறும் வாய்ப்பு இருந்தது.

0

முக்கோண அடிமை வாணிகம் என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மூன்று கண்டங்களுக்கிடையே மூன்று கட்டங்களில் நடைபெற்ற வாணிகம் என்பதால் அந்தப் பெயர். முதல் கட்டமாக, வர்த்தகத்துக்கான துணிவகைகள், ரம் போன்ற மதுவகைகள் எனச் சரக்குகளை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் கப்பல்கள் ஏற்றிச் செல்லும். இரண்டாம் கட்டத்தில், ஆப்பிரிக்க நாடுகளின் அரசர்கள் அந்தப் பொருட்களுக்கு விலையாக அண்டைநாட்டு மக்களைக் கைப்பற்றி அடிமைகளாக விற்றனர். கடைசி கட்டமாக அடிமைகளைக் கப்பலில் ஏற்றி அமெரிக்காவுக்கு இட்டுச் சென்றனர் ஐரோப்பியர்கள். அங்கே அவர்களை விற்றுப் பண்டமாற்றாக சர்க்கரை, புகையிலை, பருத்தி, நெல், விலங்கு ரோமம், தோல் போன்ற பொருட்களைக் கொள்முதல்செய்து ஐரோப்பாவுக்குக் கொண்டுபோயினர். இந்த வர்த்தகப் பயணத்தின் பாதைகள் முக்கோண வடிவில் அமைந்ததால் முக்கோண அடிமை வாணிகம் எனப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடலின் வழியே அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்கர்கள் கூட்டிச் செல்லப்பட்டதால் அந்தக் கட்டத்தை மத்திய பாதை என்றும் அந்த வாணிகத்தை அட்லாண்டிக் அடிமை வாணிகம் என்றும் குறிப்பிட்டனர்.

0

ஆப்பிரிக்காவில் அடிமைப்படுத்தல் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வழக்கம். உள்நாடுகளில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் சஹாரா பாலைவனத்தின் வழியாக வட ஆப்பிரிக்காவுக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி கடற்கரைக்கும் கொண்டுசெல்லப்பட்டு மத்தியதரைக்கடல் பகுதிகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அட்லாண்டிக் அடிமை வாணிகம் தொடங்கிய பிறகு மக்களைச் சிறைப்பிடிப்பதற்கென்றே போர்கள் நடந்தன.

பெற்றோர் வேலைக்குச் செல்கையில் வீட்டில் தனியே இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டனர். இதனால் வீடுகளில் தனியே இருக்கும் குழந்தைகளில் வயதில் பெரியவர்கள் மரத்தின்மீது ஏறி யாராவது வந்தால் மற்ற குழந்தைகளை எச்சரிக்கை செய்வார்கள். அதையும் மீறி எத்தனையோ இளவயதினர் பிடிபட்டனர். உட்புறப் பகுதிகளில் வசித்தவர்கள் மற்ற இனத்தவர்களாலோ தங்களது இனத்தைச் சேர்ந்தவர்களாலோ சிறைப்பிடிக்கப்பட்டனர். இன்னும் சிலர் உறவினர்களால் நயவஞ்சகமாக விற்கப்பட்டனர். இதனால் மக்கள் எப்போதும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டனர்.

பெரும்பாலும் இளவயதினரே சிறைப்பட்டதால் வயதானவர்களையும் குழந்தைகளையும் கவனிப்பதற்கு யாருமற்ற நிலை ஏற்பட்டது. வயல்களில் பணிசெய்ய ஆளில்லை. சில பகுதிகளில் சுமார் நூறு ஆண்டுக்குக் குழந்தைகளே அதிகம் பிறக்கவில்லை. ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த பகுதிகளில் பலதார மணம் நடைமுறைக்கு வந்தது. வழக்கமாக ஆண்கள் செய்யும் பணிகளைப் பெண்கள் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐரோப்பியப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆப்பிரிக்கத் தொழில்கள் நலிவுற்றன. இளவயதினர் அதிகம் சிறைப்பிடிக்கப்பட்ட பகுதிகள் ஒரு காலத்தில் வளம்கொழிக்கும் பேரரசுகளாக இருந்தாலும் நாளடைவில் வளர்ச்சியின்றி மோசமான நிலையை அடைந்தன.

சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் தப்பியோடாமலிருக்க அவர்களின் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டன. சில நேரம் அவர்களின் கழுத்தில் மரக்கட்டைகளைக் கட்டிவைத்தனர். தப்பியோடினாலும் குனிந்து ஓடையில் நீரருந்த முடியாமல் தாகத்தில் தவித்து இறக்கத்தான் வேண்டும். சிக்கியவர்கள் அவரவர் பகுதியிலிருந்து மேற்குக் கரையிலிருந்த துறைமுகங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர். வரும் வழியிலேயே பயணத்தின் கடுமை தாங்காமல் பல பேர் இறந்து போயினர்.

நாட்கணக்கில் பல மைல்கள் நடந்து மேற்குக் கடற்கரையில் இருக்கும் துறைமுகங்களுக்குச் சென்றுசேர்ந்ததும் பேன் பிடிக்காமல் இருக்கத் தலையை மொட்டையடிப்பார்கள். ஆடைகளை நீக்கி உடம்பு முழுவதும் எண்ணெய் பூசுவார்கள். அப்போதுதான் உடம்பு பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் தெரியும், அடிமை வாணிகர்கள் நல்ல விலைக்கு வாங்குவார்கள்.

ஐரோப்பிய வாணிகர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் எந்த அடிப்படை வசதியுமற்ற கப்பல்களில் கால்நடைகளைப்போல அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 500 முதல் 600 பேர் வரையில் சென்றுசேரும் இடத்துக்கேற்ப ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் பயணம் செய்யவேண்டிய கொடுமை. ஆண்களையும் பெண்களையும் தனித்தனிப் பகுதிகளில் அடைத்தனர். இரண்டிரண்டு பேராகச் சங்கிலியில் கட்டிவைத்தனர். ஒருவரின் வலது காலை அடுத்தவரின் இடது காலோடு பிணைப்பார்கள். கப்பலின் பணியாளர்கள் பெண்களை வன்புணர்வு செய்தனர்; இதனால் பெண்களில் சிலர் கருவுற்றனர். அடிமைகளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவும் நீரும் வழங்கப்பட்டது; பீன்ஸ், சோளம், கிழங்கு, அரிசி ஆகியவை உணவாக அளிக்கப்பட்டது. நீண்ட காலப் பயணத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் அடிமைகளுக்கு உணவு தரமாட்டார்கள். குடிநீர் இல்லாமல் தாகத்தால் தவித்து வயதானவர்கள் இறந்துபோவார்கள்.

சில நேரங்களில் விலங்கை விடுவித்து அடிமைகளை நடமாடவிடுவதும் கப்பலின் மேல்தளத்துக்கு அழைத்துவருவதும் உண்டு. அடிமைகளில் சிலர் உயிர்வாழப் பிடிக்காமல் கடலுக்குள் குதித்துவிடுவார்கள். சிலர் தப்பிச்செல்வதற்காகக் கலகம் செய்வார்கள். பெரும்பாலும் ஆண்களே கலகத்தில் ஈடுபட்டதால் பெண்களைவிடவும் அதிகம் கண்காணிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் சுகாதாரமற்ற சூழலில் பல மாதங்களுக்கு அடைத்துவைக்கப்பட்டதாலும் குளியலறை, கழிவறை வசதியில்லாததாலும் அடிமைகள் நோயால் பீடிக்கப்பட்டு அதிகளவில் இறந்துபோயினர். எந்தச் சடங்கும் சம்பிரதாயமுமின்றிச் சடலங்களைக் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள். கப்பல் பணியாளர்கள் கீழ்த்தளத்துக்குப் போகவே அஞ்சியதால் யாராவது இறந்தால்கூடத் தெரியாது. உயிரோடு இருப்பவர்கள் உயிரற்ற உடலோடு பல நாட்கள், ஏன் பல வாரங்கள்கூடப் பிணைக்கப்பட்டிருக்கும் அவலநிலையும் ஏற்பட்டதுண்டு. இந்தக் கொடுமைகளைத் தாங்கமுடியாதவர்கள் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதும் வாடிக்கை. அப்படி அவர்கள் கடலுக்குள் குதிப்பதைத் தடுக்கச் சுற்றிலும் வலைகட்டியிருப்பார்கள்.

அடிமைப்பட்ட துயரம், எதிர்த்துத் தற்காத்துக்கொள்ளமுடியாத கையறு நிலை, மனவழுத்தம், உளச்சோர்வு, உணவு, நீர், கழிப்பறை வசதியற்ற சூழல், கடல்பயண ஒவ்வாமை, நோய்த்தொற்று, எதிர்காலம் குறித்த விடைதெரியா கேள்விகள், சொந்த நிலத்தையும் மக்களையும் பிரிந்த சோகம் என எண்ணற்ற காரணங்களால் 15 முதல் 20 சதவீத மக்கள் பயணத்திலேயே இறந்துபோயினர். அடிமைக் கப்பல்களை மிதக்கும் கல்லறைகள் என அழைத்தனர். சுமார் 20 லட்சம் மக்கள் இப்படி இறந்துப்போனதாகக் கூறப்படுகிறது. இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் என்கிறது மற்றுமொரு கணிப்பு.

0

அலெக்சாண்டர் ஃபால்கன்ப்ரிட்ஜ் என்ற மருத்துவர் 18ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகளுக்குச் செல்லும் அடிமைக் கப்பலில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பணிக்காலத்தில் பார்த்தவற்றையும் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவங்களையும் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். எப்படியெல்லாம் பிடிபட்டனர் என்பதை அடிமைகளிடம் கேட்டுப் பதிவுசெய்தார். கர்ப்பிணியாக இருந்த பெண்ணை அண்டை வீட்டுக்காரர்கள் மாலை விருந்துக்கு அழைத்துப் பின் அடிமை வாணிகர்களிடம் விற்றுவிட்டனர். அதேபோல வேறொரு இளைஞன் தன்னைச் சிறைப்பிடிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு தப்பிக்க முயற்சி செய்கையில் பெரிய நாயை ஏவிப் பிடித்தனர். இவற்றையெல்லாம் கேட்ட அலெக்சாண்டர் தன்னுடைய வாழ்வின் கடைசிக்கட்டத்தில் அடிமை வாணிகத்துக்கு எதிராகச் செயலாற்றினார்.

டேவிட் லிவிங்க்ஸ்டன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர், கிறிஸ்தவச் சமயப்பரப்பாளர். 19ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் பயணம்செய்தபோது அங்கு கண்ட காட்சிகளைத் தன்னுடைய நாட்குறிப்பில் விவரிக்கிறார்.

’19 ஜூன் 1866 – மரத்திலிருந்து தொங்கிய பெண்ணொருத்தியின் உடலைக் கண்டோம். அவளால் கூட்டத்தில் இருந்த மற்றவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்கமுடியவில்லை. அதனால் வேறு யாரும் அவளைச் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக உரிமையாளர் அவளைக் கொன்றுவிட்டார் என்று அங்கிருந்த மக்கள் விளக்கினார்கள்.

26 ஜூன் 1866 – கத்தியில் குத்தப்பட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டோ இறந்த பெண்ணின் உடலைக் கண்டோம். அவளால் வேகமாக நடக்கமுடியவில்லை என்பதால் கோபமடைந்த அரேபிய உரிமையாளர் தனக்கு ஏற்பட்ட இழப்பினால் ஆத்திரமடைந்து அவளைக் கொன்றுவிட்டார் என்று சொன்னார்கள்.

27 ஜூன் 1866 – பசியினால் உயிரிழந்த மெலிந்த உடல்கொண்ட மனிதனை இன்று கண்டோம். அருகில் அதேபோன்ற நிலைமையில் இருந்த இன்னும் பல அடிமைகள் இருந்தனர். போதுமான உணவில்லை என்பதால் உரிமையாளர்கள் அவர்களை அங்கேயே விட்டுவிட்டுப் போனது தெரியவந்தது. அவர்களில் பலர் சிறுவர்கள். எங்கிருந்து வந்தார்கள் என்பதைச் சொல்லக்கூடத் தெம்பில்லை.

இந்த நாட்டில் விந்தையான நோயினைக் கண்டேன். சுதந்திர மனிதர்களாக இருந்தவர்கள் அடிமைப்பட்டதால் மனமுடைந்துபோவதுதான் அந்த நோய்.’

0

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளை விலைகொடுத்து ஏற்றிச் செல்லும் ஐரோப்பியக் கப்பல்களுக்குக் காப்பீடு செய்வது வழக்கம். 1781இல் ஜோங் என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக அட்லாண்டிக்கைக் கடக்கத் தாமதமானது. கப்பல் பணியாளர்களும் அடிமைகளும் நோய்வாய்ப்பட்டுத் தினம்தினம் செத்துக்கொண்டிருந்தார்கள். காப்பீட்டு ஒப்பந்தப்படி கடலில் தொலைந்துபோனவர்களுக்குத்தான் இழப்புத்தொகை கிடைக்கும், நோயினால் இறப்பவர்களுக்கு அல்ல. இதனால் கப்பல் தலைவன் 100க்கும் மேற்பட்ட அடிமைகளைக் கடலுக்குள் தள்ளிக் கொன்றான்.

0

அடிமை வாணிகம் சூடுபிடிக்க ஆரம்பித்ததும் அதில் பெரும்லாபம் ஈட்டவேண்டுமென்றால் அடிமைகள் ஆரோக்கியமாகப் பயணம் செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டனர் வாணிகர்கள். ஒவ்வொரு அடிமையும் 800 முதல் 1200 அமெரிக்க டாலர்கள் வரை விலைபோனார்கள். இதனால் 18ஆம் நூற்றாண்டுவாக்கில் கப்பல்களின் வடிவமைப்பு சீரமைக்கப்பட்டது. அடிமைகளின் இறப்பு விகிதம் குறையவேண்டுமென்பதற்காகக் கீழ்த்தளங்களைக் காற்றோட்டமாக அமைத்தனர். கப்பலைச் செலுத்துவதற்குப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் பயணக்காலம் குறைந்தது. கடல் பயணத்தில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும் கப்பலில் வைத்திருந்தனர். சில கப்பல்களில் மருத்துவர்களும் அறுவைசிகிச்சை வல்லுநர்களும் அடிமைகளுடன் பயணம்செய்தனர். இந்த மாற்றங்களால் போட்ட முதலீட்டுக்கு நட்டமின்றி அடிமை வாணிகம் சிறப்பாக நடந்தது.

ஹாரியட் டப்மனின் மூதாதையர்களும் இன்னும் பல லட்சம் ஆப்பிரிக்கர்களும் இதேபோலத்தான் சொந்த மண்ணையும் இனத்தையும் சேர்ந்த மக்களால் வஞ்சிக்கப்பட்டு ஐரோப்பிய வாணிகர்களுக்கு விற்கப்பட்டு அடிமைக் கப்பலில் வட அமெரிக்கா வந்தடைந்தனர்.

எல்லாம் சரி, வட அமெரிக்க நிலத்தில் ஆப்பிரிக்க இன மக்களைக் காலங்காலமாக அடிமைப்படுத்திக் கீழ்நிலையிலேயே வைத்திருக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? எதிர்பாராமல் நடந்த நிகழ்வொன்றுதான் அதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்கிறது வரலாறு.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அவரது கணுக்கால் தண்டவாளத்திற்கும், ஸ்லீப்பர் கட்டைக்கும் இடையில் சிக்கி, கணுக்கால் எலும்பு முறிந்து, கால் நடக்க இயலாமல் போனது. நல்லவேளையாக அவரது நண்பர்கள் சிலர், அருந்தவசெல்வன் போன்றோர் ரயிலடியில் இருந்ததால், உடனே அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இருக்க வேண்டியதாயிற்று. காரணம், தகடுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவுகளைச் சரி செய்யும் முறை அப்போதுதான் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் வந்திருந்தது. இவருக்கோ கணுக்கால் எலும்புகள் நொறுங்கி இருந்தன. புதிய முறை சிகிச்சையில் தேர்ந்த மருத்துவர்கள் குறைவு. எனவே சிகிச்சைக் காலம் நீண்டது. கிட்டத்தட்ட மே மாதம்தான் அவர் வீடு திரும்பினார். காலில் கட்டுடன், ஜூனில் பணிக்கு வரத் தொடங்கினார். ஆகஸ்ட் மாதம் மாவுக்கட்டு விலக்கப்பட்டு கிரீப் எனப்படும் துணிக்கட்டுடன் நடமாடிக் கொண்டிருந்தார். ஆயினும், முழு ஆரோக்கியத்துடனோ, நடக்கக்கூடிய நிலையிலோ அவர் இருந்தார் என்று சொல்ல முடியாது. சற்று விந்தி விந்திதான் நடக்க முடிந்தது.

மதம் கொண்ட யானையின் அருகில் சென்று சிகிச்சை அளிப்பது எந்த அளவிற்கு உசிதம் என்பது கேள்விக்குறிதான். அசம்பாவிதம் இல்லாமல் செயல்பட முடியுமா என்பதும் சொல்ல முடியாத நிலை. ஆயினும், அதனைத் தன்னுடைய தலையாயக் கடமை என்றெண்ணி, திருச்சிக்குக் கிளம்பினார். இதுதான் தொழிலை ஊதியத்திற்காகச் செய்பவர்களுக்கும், அர்ப்பணிப்புடன் செய்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு!

மற்றொரு முக்கியமான விஷயம், அந்தக் காலகட்டத்தில், துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தும் முறை இல்லை. எனவே, யானையை நெருங்காமல் தொலைவிலிருந்து பாதுகாப்பாக மயக்க மருந்து செலுத்த முடியாது. கட்டாயம் சற்றேனும் அருகில் சென்றுதான் ஆக வேண்டும். அவரது கால் இருந்த நிலையில், அது எவ்வளவு ஆபத்தானது என்று நான் சொல்லத் தேவையில்லை. யானை வெகுண்டு திரும்பினால், இவரால் ஓட முடியுமா? ஆயினும், அவர் மாலையில் செய்தியும் பணிக்கட்டளையும் கிடைத்ததும் புறப்பட்டு விட்டார், திருச்சிக்கு. அப்போது நடைமுறையில் இருந்த ஊதுகுழல் (புளோ பைப்) மற்றும் 3 டோஸ் மயக்க மருந்துகளுடன்.

அந்தக் காலகட்டத்தில் காட்டு மிருகங்களுக்கு மயக்க மருந்து பயன்பாடு டாக்டர் கே அவர்களால்தான் தொடங்கப்பட்டது. அதுவரை ஊதுகுழலால்தான் மயக்க மருந்து செலுத்தப்படும். ஏனெனில், காட்சிச் சாலையில் இருக்கும் விலங்குகளுக்கும், வீட்டு விலங்குகளுக்கும்தான் கால்நடை மருத்துவர்கள் இந்த முறையில் மயக்க மருந்து தருவர். காட்டு விலங்குகளுக்கு மயக்க மருந்து தந்து பிடிப்பதோ அல்லது சிகிச்சை அளிப்பதோ யாரும் அறியாத ஒன்று.

அன்றைய நடைமுறைப்படி, இந்த மயக்க மருந்தை வாங்குவதற்குப் பெரும் பாடு பட வேண்டும். மாவட்ட வன அதிகாரி சிபாரிசு செய்து அரசுக் கிடங்கில் மருந்தாளுநர் பரிந்துரைத்தால்தான் ஒரு டோஸ் மருந்து கிடைக்கும். அந்த அளவிற்குக் கட்டுப்பாடுகள். சிவப்பு பட்டை நடைமுறைகள். இவற்றுக்கிடையில், அந்த 3 டோஸ் மருந்திலேயே காரியத்தை முடிக்க வேண்டும். இல்லையேல், மறுபடி இந்த நடைமுறையை முதலில் இருந்து திரும்பத் தொடங்க வேண்டும். அதற்கு மேலும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகள் நிறைந்த காலத்தில் அவர் பணியாற்றியதே ஒரு பெரும் சவால்தான். அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல், விலங்குகளின் நலனுக்காக அவர் செயல்பட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இன்றுபோல எல்லா வசதிகளுடன் (போக்குவரத்து, மருந்துகள், துப்பாக்கி) ஒரு படையுடன் (!) சென்று ஒரு விலங்கை மயக்கமடைய (டார்ட்) செய்வதுபோல் அல்ல அன்று!

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்தபோது, ஏறக்குறைய இரவு ஒரு மணி. அதாவது அடுத்த நாள் புலர்காலை. டாக்டர் கே அந்த இடத்தையும் சூழலையும் உன்னிப்பாக நோக்கினார். யானை எவ்வாறு நடந்து கொள்கிறது என்று தாற்காலிகத் தடுப்புகளுக்கு வெளியே நின்று அவதானித்தார். அது ஒரு திறந்த வாசல் கொண்ட தென்னந்தோப்பு. வாயிலின் எதிர்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் உயரமான மண்கரை. திறந்த வாயில் தற்போது கட்டைகள் கொண்டு அடைக்கப்பட்டுவிட்டது; அந்தத் தடுப்பை ஒட்டி வசந்த மண்டபத்தின் மதில் சுமார் அரை கிலோமீட்டர் நீண்டு கிடந்தது. மதிலிலிருந்து ஒரு 50 அடி தூரத்தில் யானையைக் கட்டும் மேடை இருந்தது. தடுப்பின் மற்றொரு முனையில் அஹோபில மடத்தின் ஒரு சிறிய கோவிலும் மண்டபமும். மற்றொரு புறம் நந்தவனமும் அடுத்த தெருவில் உள்ள வீடுகளின் புழக்கடை சுவர்களும். தோப்பினுள் யானை தனியாக, சங்கிலி அனுமதிக்கும் அளவு சுற்றி வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது வசந்த மண்டபத்தின் மதில் சுவரின் அருகே (சுமார் 20 அடி தூரம் தொலைவில்) வந்து சற்று நிற்பதை ஒரு சடங்காகச் செய்து கொண்டிருந்தது. சுற்றிலும், முன்பே சொன்னது போல, விளையாட்டு மைதானங்களில் பொருத்தும் பெரும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு அந்தத் தோப்பைப் பிரகாசமாகப் பகல் போல வைத்திருந்தன.

அங்கிருந்த பாகன்களிடம் சற்று அளவளாவினார். யாரெல்லாம் இந்த யானையைப் பிடிக்க முடியும் என்று ஆழம் பார்த்தார். அவர்களது மனநிலையை நன்கு புரிந்து கொண்டார். யாரும் யானை அருகில் போகத் தயாரில்லை என்று அறிந்தார். யானைகளை மிகச் சாதுரியமாகக் கையாளும் பல பழங்குடிப் பாகன்களிடம் பழகிய அவருக்கு இந்தக் கோவில் யானைகளின் பாகன்கள் வித்தியாசமாகத் தெரிந்தனர். கோழிக்கமுத்தியிலும் முதுமலையிலும் உள்ள பழங்குடிப் பாகன்கள் யானையை அவர்களது வீட்டு அங்கத்தினர்போல வைத்திருப்பர். அந்த முகாம்களுக்குப் போனவர்களுக்குத் தெரியும், அந்தப் பாசப் பிணைப்பு. ஆனால் இங்கு நிலைமை சற்று வேறு விதமாக இருந்ததை உணர்ந்தார். அங்கு கையாளும் முறைகள் இங்கு செல்லாது என்று அறிந்தார். முற்றிலும் அவரை நம்பி இந்தச் செயல்பாடு உள்ளது என்று உணர்ந்தார். ஆகவே, இவர்களது பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்று அறிய அவருக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. மேலும், அவர் கையாளப்போகும் நடைமுறை, யானை மயக்கம் அடையும் வரை அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதனால், தெளிவாகத் திட்டமிட்டு காரியத்தில் இறங்கத் தீர்மானித்தார். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

‘இந்த வசந்த மண்டபத்தின் மதில் சுவரின் மேலே ஏறுவதற்கு ஏதாவது படி அல்லது வழி இருக்கிறதா?’ என்று கேட்டார். உடனே மடத்துக்காரர்கள், ‘வழி இருக்கிறது, படிகள் வழியாக மேலே போகலாம்’ என்றனர். டாக்டர் கே, ஊதுகுழலும் மயக்க மருந்து குப்பிகளும் அடங்கிய தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த வழியைக் காட்டச் சொன்னார்.

மெதுவாக, கிரீப் கட்டு போட்ட காலுடன், சிரமப்பட்டு மற்றவர்கள் உதவியுடன் மதில் மேல் ஏறி, அந்தக் காலுக்குப் பெரும் அழுத்தம் தராதவாறு வசதியான ஓர் அமரும் நிலையைத் தெர்ந்தெடுத்தார். ஏனெனில், அப்போதுதான் முழு பலத்தில், ஊதுகுழலில் மருந்தை வைத்துச் செலுத்த முடியும். மருத்து செலுத்துவதற்கு நல்ல சீரான சமநிலையும் கிடைக்கும். ஊதும் போது நிலை தடுமாறாமலும் இருக்க முடியும். அப்படியே அமர்ந்துகொண்டு, ஒருமணி நேரம் யானையின் நடையுடை பாவனைகளைக் கவனித்தார். மதிலின் அருகில் வந்தால் சில நிமிடங்கள் நிற்பதை யானை கிருஷ்ணன் வழக்கமாகக் கொண்டிருப்பதை அனுமானித்தார். அந்த நிலையில் யானைக்கு ஊதுகுழல் வழியே மயக்க ஊசியைப் போடுவது நல்லது என்று சரியாக அனுமானித்தார். அதற்கேற்ப மருந்தைக் குழலில் நிரப்பினார். யானை மறுமுறை மதிலருகே வரும் நேரத்திற்குத் தயாராக இருந்தார். பார்ப்பவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவ்வளவு பெரிய யானையை ஊதுகுழலால் மயக்கம் அடையச் செய்ய முடியுமா என்று சந்தேகத்தில் இருந்தனர். யானை மற்றொரு முறை தனது சுற்றை முடித்து மதிலருகே வந்து நின்றது. ஆச்சரியகரமாக, மக்கள் டாக்டர் கே. கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பெரும் குழப்பம் விளைவிக்காமலும், சத்தம் போடாமலும் அமைதியாக இந்த வித்தியாசமான நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

யானை கிருஷ்ணன் வந்து மதிலுக்குச் சுமார் 20 அடி தொலைவில், சற்றே பக்கவாட்டில், நெற்றியைக் காட்டியவாறு நின்றது. அப்போது அதன் நெற்றி தெளிவாக விளக்கொளியில் தெரிந்தது. மருத்துவர் கே, முழுப் பலத்தையும் பிரயோகித்து மயக்க ஊசியைக் குறி வைத்து ஊதினார். சேஷாத்திரி சொன்னதுபோல, ‘ஊப்ப்’ என்ற அந்தச் சத்தம் எல்லோருக்கும் கேட்டது. மயக்க ஊசி, மருந்துடன் சரியாக நெற்றிப் பொட்டில் தைத்தது. யானை சற்று உதறி ஆடியது. ஆனால் பெரிதாக எந்த அசைவையும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் யானை தள்ளாடி நடந்தது. டாக்டர் கே, உடனே அங்கிருந்த மாவுத்தர்களை உள்ளே இறங்கி யானையைச் சங்கிலி கொண்டு பிணைக்குமாறு கூறினார். அதற்காகக் காத்துக் கொண்டிருந்ததுபோல நான்கைந்து பாகன்கள் உள்ளே தடுப்பைத் தாண்டி ஓடிச் சென்றனர். டாக்டர் கே.வும் மெதுவாக மதிலிலிருந்து இறங்கி, மற்றவர்கள் உதவியுடன் பின்தொடர்ந்து சென்றார்.

ஏனெனில், யானை ஆஜானுபாகுவான ஒரு கொம்பன். சுமார் 10 அடி உயரமும், நல்ல வலுவான உடலும், நீண்ட கொம்புகளும் உடைய முரட்டு யானை. சில நேரம் இந்த ஒரு டோஸ் போதாமல் போனால், மாவுத்தர்களுக்குப் பிரச்சினை ஆகலாம். அதனால் இன்னொரு டோஸையும் எடுத்துக் கொண்டு டாக்டர் கே பின் தொடர்ந்தார். நினைத்ததுபோல யானை முற்றிலும் அடங்கவில்லை. பாகன்கள் சற்றுத் தொலைவிலேயே நின்று விட்டனர். அதற்குள் டாக்டர் கே யானையின் பின்னால் சற்றுத் தொலைவில் பாதுகாப்பாக நின்று இரண்டாவது ஊசியை அதன் பின் பகுதியில் செலுத்தினார். மிக வேகமாக, அதே நேரம் சரியானபடி செயல்பட்டு இரண்டு டோஸ் மருந்தையும் டாக்டர் கே செலுத்தியிருந்தார். யானை மேலும் தள்ளாடத் தொடங்கியது. பின் மயங்கி நின்றது. அதன் பின், எளிதாக யானையின் அருகே பாகன்கள் செல்ல முடிந்தது. பயமின்றிப் பணி செய்யத் தைரியம் கொண்டனர்.

ஒரு யானையை, மயக்கத்தில் நின்ற நிலையில் வைக்க மிகத் தீவிரமான அளவு மருந்தைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஜைலோ சீன் போன்ற மருந்து, யானையின் செயல்களைக் கட்டுப்படுத்தி நின்ற நிலையிலேயே வைக்கும் தன்மை வாய்ந்தது (குறைந்த அளவுகளில்). யானையை இடம் மாற்ற அல்லது வேறு சில சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் கூடுதலான அளவில் மருந்தை உபயோகிக்க நேரிடும். ஏனெனில், அப்போதுதான் நினைத்ததுபோல காரியத்தைச் செய்ய இயலும். அதற்கான நேரமும் கிடைக்கும். அதன் பின்னர், யானையை நிலைக்குக் கொண்டு வர மற்றொரு மருந்தைப் பயன்படுத்த வேண்டி வரும். அதற்கு ரிவைவல் டோஸ் என்று பெயர். இங்கு, அதுபோலச் செய்ய நேரவில்லை என்று அனுமானிக்கிறேன்.

காரணம், இங்கு நோக்கம் யானையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான். வெகு நேரம் சிகிச்சை அளிப்பது அல்ல. எனவே டாக்டர் கே, யானையை அவர்கள் சங்கிலி கொண்டு பிணைக்கும் வரை, சிறிய கால அவகாசத்திற்கு மட்டும் மயக்க மருந்து கொடுத்து இருப்பார் என்று தோன்றுகிறது. நமக்கு எப்படி மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை முடிந்ததும் சில மணி நேரங்களில் நாம் மீண்டும் சுய நினைவு அடைகிறோமோ, அதுபோல. இதை நான் டாக்டர் கே-யுடன் 25 ஆண்டுகள் கால்நடை ஆய்வாளராகப் பணி புரிந்த மணி என்பவரிடமும், டாக்டர் மனோகரனிடமும் (மற்றொரு சிறந்த கால்நடை வைத்தியர்) ஊர்ஜிதம் செய்து கொண்டேன். எப்படியாயினும் பாகன்கள் கிருஷ்ணனை முன்கால், பின்கால் என நான்கு கால்களையும் சங்கிலி கொண்டு பிணைத்துவிட்டனர். இனி, யானை தன் இஷ்டம்போல எங்கும் செல்ல முடியாது. இந்தக் கிருஷ்ணன், அதன் பின் சில வருடங்கள் கழித்து திருவள்ளூர் கோவிலுக்கு அனுப்பப்பட்டது என்பது வேறு கதை.

இந்த நடவடிக்கை முடிவு பெறும்போது விடிந்துவிட்டது. அன்று அங்கிருந்தவர்கள் மட்டும்தான், இது எப்படிப்பட்ட ஒரு தீரச் செயல் என்று அறிவார்கள். ஒரு முரட்டுக் கொம்பனை, ஊதுகுழல் கொண்டு மயக்க மருந்து செலுத்தி மயக்கம் அடையச் செய்வது எவ்வளவு சிரமமான செயல் என்பதை இந்தத் தொழிலில் உள்ளவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரு டோஸ் மருந்து வீண் ஆனாலோ, அல்லது குறி தவறினாலோ மொத்த முயற்சியும் பயனில்லாமல் போகும். ஊதும் திறன், குறி பார்த்தல், மருந்தின் அளவு எனப் பல செயல்பாடுகள் இங்கு கச்சிதமாக இருக்க வேண்டும்.

டாக்டர் கே ஊதுகுழல் மூலம் சுடுவதை ஒரு பயிற்சியாகச் செய்வார் என்று அவரது மகன் ஸ்ரீதர் சொல்வதுண்டு. வீட்டிலேயே ஒரு குறி அட்டை வைத்து பல்வேறு தூரங்களில் நின்று ஊதி, குறி தவறாமல் இருக்கப் பயிற்சி செய்வார் என்று விவரிப்பார். அது தன் தொழிலில் அவருக்கிருந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது. அதேபோல நான் சந்தித்த பலரும், யானையை (அல்லது எந்த மிருகத்தையும்) பார்த்த மாத்திரத்தில், அதற்கு ஏற்ற மயக்க மருந்து அளவு என்ன என்பதை உடனே கணிக்க வல்லவர் டாக்டர் கே என்ற விஷயத்தை வியப்புடன் கூறுவர். அதற்கு அடித்தளம், மிருகத்தின் உடல் எடையும் உருவமும்தான். அதனால்தான், டாக்டர் கே-வுக்கு வனத்துறையில் மற்றவர் பொறாமைப்படத்தக்க அளவில் செல்வாக்கு மட்டுமல்ல, பெரும் மரியாதையும் இருந்தது. ஆனால் அதை என்றும் அவர் தவறாகப் பயன்படுத்தியதில்லை!

இங்கு நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்- டாக்டர் கே-இன் நிலைமையைத் துல்லியமாகக் கணிக்கும் திறன்; தன் பலவீனங்களை அறிந்து செயல்படுதல்; கூட நின்று செயல்படுபவர்களை அனுசரித்து திட்டமிடுதல்; கள நிலவரத்திற்கு ஏற்ப தன் திட்டத்தை வகுப்பது; புது யுக்திகளைக் கையாளுவது; எந்த நேரத்திலும் நிதானத்தை இழக்காதது எனப் பல நிர்வாகப் பாடங்களை இந்த நிகழ்விலிருந்து நாம் அறியலாம்.

ஜீயருக்கு பரம சந்தோஷம், யானையை உயிருடன் மீட்டதில். மக்களும் நிறைந்த மகிழ்வடைந்தனர். கோவில் யானையைச் சுட்டுக் கொல்லாமல் காப்பாற்றியதற்கு. என்ன, பல வருடங்கள் கழிந்துவிட்டதால் பல நேரடிச் சாட்சிகள் உயிரோடு இல்லை. அதிர்ஷ்டவசமாக பரோடா வங்கி ஊழியர் சேஷாத்திரியும் (உள்ளூர் வாசி), பழைய பாகன் ஸ்ரீதரன் நாயரும், பாகன் ராஜேஷும் கிடைத்தனர். இவர்கள் கிடைக்க நண்பர் மாலோலன் பெரிதும் உதவினார். சில சந்தேகங்களை நண்பர்கள் மணியும் டாக்டர் மனோகரனும் தீர்த்து வைத்தனர். அதனால், இந்த நிகழ்வை மீட்டெடுக்க இயன்றது.

வருத்தமான விஷயம், அன்று எந்த நாளேடோ, பத்திரிக்கையோ இந்தச் சம்பவத்தை இப்போது நான் சொன்னது போல விவரமாக எழுதவில்லை. பெட்டிச் செய்திபோல வந்ததாகத் தகவல். அன்றைய அரசாங்கம் அல்லது வனத்துறை இதை ஒரு வீரச் செயல் என்று கருதவில்லை. எப்படி வ.உ.சி.யின் தியாகம் இன்று அறியப்படாமல் போனதோ, அதேபோல இந்த நிகழ்வும் மறக்கப்பட்டுவிட்டது. இதை மீட்டெடுத்ததில், எனக்குப் பெரும் நிறைவும் மகிழ்ச்சியும். அதைவிட மகிழ்ச்சி, உண்மையான அர்ப்பணிப்பு, தொழில் பக்தி, நேர்த்தி, ஜீவகாருண்யம், பக்கவாட்டுச் சிந்தனை, திட்டமிடல், தன்னலம் அற்ற சேவை, செயல்பாடு போன்ற சொற்களின் சரியான அர்த்தத்தை உணர வைக்க இயன்றதுதான்!

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2 appeared first on கிழக்கு டுடே.

❌