Normal view

Received before yesterday

குறளின் கதிர்களாய்…(517)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(517)

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

-திருக்குறள் -895(பெரியாரைப் பிழையாமை)

புதுக் கவிதையில்…   

ஆற்றல் மிக்க
அரசனின் சினத்துக்கு
ஆளானவர்
அவனிடமிருந்து தப்பிக்க
அவனியில்
எங்கு சென்றாலும்
ஆகிறார்
உயிர் பிழைக்க
இயலாதவராய்…!

குறும்பாவில்…

ஆளும் அரசனின் சினத்திற்கு
ஆட்பபட்டோர் அதிலிருந்து தப்பிக்க எங்கு
சென்றாலும் உயிபிழைக்க இயலாதவரே…!

மரபுக் கவிதையில்…

ஆற்ற லுடனே நாட்டினையே
ஆளும் வல்ல அரசனவன்
சீற்றம் கொள்ளும் வகையினிலே
சீண்டி விட்ட ஒருவர்தான்,
ஆற்றா அச்சம் கொண்டேதான்
அதனில் நின்றும் தப்பிக்க
மாற்ற மாக எங்குபோயும்
மண்ணில் வாழ இயலாரே…!

லிமரைக்கூ…

ஆள்வான் சிறப்பாய் நாட்டை,
அவ்வரசன் சினமுற வைத்தோர் எங்கொளித்தும்
அடைவார் உயிரிழக்கும் கேட்டை…!

கிராமிய பாணியில்…

ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு..

நல்ல மொறயில
நாட்ட ஆளுற ராசாவே
கோவிச்சிக்கிற அளவு நடந்தவன்,
பயந்து
தப்பிச்சி எங்க போனாலும்
அவனால
உயிரோட இருக்கமுடியாதே..

அதுனால
ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு…!

குறளின் கதிர்களாய்…(516)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(516)

ஏவவுஞ் செய்கலான் தான்தேரா னவ்வுயிர்
போஅ மளவுமோர் நோய்.

-திருக்குறள் -848(புல்லறிவாண்மை )

புதுக் கவிதையில்…   

நலம்தரும் செயலைப்
பிறர்
ஏவினாலும் செய்யாதவனாய்,
தானாகவும் உணர்ந்து
தெளியாதவனாய் உள்ளவன்
தாங்கியிருக்கும் உயிர்
போகும் வரை
தரணிக்கு அவனொரு
தாக்கும் நோயே…!

குறும்பாவில்…

அடுத்தவர் சொல்லியும் செய்யாமல்
அவனாகவும் அறிந்து கொள்ளாத அறிவிலி
உயிருள்ளவரை புவிக்கொரு நோயே…!

மரபுக் கவிதையில்…

நலமே யளிக்கும் செயலதனை
நல்லோர் சொல்லிச் செயாதவனாய்,
சுலப மென்றே தானறிந்து
சுற்றி யுள்ளோர் வியந்திடவே
பலவும் செய்யா அறிவிலிதான்,
பாரி லுள்ள நாள்வரையில்
உலகுக் கவன்தான் ஆவானே
ஊறு நல்கும் நோயெனவே…!

லிமரைக்கூ…

சொல்லியும் செய்யாத ஒருவனாய்
தானாய் அறிந்தும் செயல்படாத அறிவிலி
உயிருள்ளவரை உலகுக்குப் பெரியநோய்…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
நல்ல அறிவு வேணும்
நல்லதாப் பாத்து செய்ய
நல்ல அறிவு வேணும்..

நல்ல செயல செய்யிறதுக்கு
நாலுபேர் சொல்லியும் செய்யாமயும்
தானே ஒணர்ந்து
அறிஞ்சியும் செய்யாத
அறிவு கெட்டவன்,
அவன் உயிரோட இருக்கிறவர
ஒலகத்துக்கு
ஒரு நோயிதான்..

அதால
வேணும் வேணும்
நல்ல அறிவு வேணும்
நல்லதாப் பாத்து செய்ய
நல்ல அறிவு வேணும்…!

குறளின் கதிர்களாய்…(515)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(515)

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளஞ் சுடும்.

– திருக்குறள் – 799 (நட்பாராய்தல்)

புதுக் கவிதையில்…

கேடு வரும் காலத்தில்
கூட இருக்காமல்
கைவிட்டு
ஓடுகின்றவரின் நட்பு,
நமக்குச்
சாவு வரும்போது
சற்று நினைத்தாலும்
சுட்டிடுமே நெஞ்சை…!

குறும்பாவில்…

கெடும்போது நம்மைக் கைவிட்டோர்
நட்பினை நாம் சாகும்போது நினைத்தாலும்
சுட்டிடும் நமது நெஞ்சை…!

மரபுக் கவிதையில்…

கேடு வாழ்வில் வந்தேதான்
கெட்டுப் போகும் காலத்தில்
நாடும் துணையாய் இல்லாமல்
நம்மைத் தனியாய்த் தவிக்கவிட்டே
ஓடும் ஒருவர் நட்பினையே
ஒடுங்கி நமதின் னுயிரதுதான்
கூடு விடுங்கால் நினைத்தாலும்
கொடிதாய் நெஞ்சில் சுட்டிடுமே…!

லிமரைக்கூ…

கெடும்போது நமைக்கை விட்டிடும்
நட்பினை நாம் சாகும்போது நினைப்பினும்
நமது நெஞ்சைச் சுட்டிடும்…!

கிராமிய பாணியில்…

ஆகாது ஆகாது
அணுவளவும் ஆகாது,
ஆபத்தில உட்டுப்போற நட்பு
ஆகவே ஆகாது..

கேடு நமக்கு வரும்போது
கூட இருக்காம
நம்மத் தனியா தவிக்கவுட்டு
ஓடிப்போற நட்ப
நாம சாகிற நேரத்தில
நெனச்சாலும் சங்கடத்தில
நம்ம மனசு
நொந்து போயிடுமே..

அதால
ஆகாது ஆகாது
அணுவளவும் ஆகாது,
ஆபத்தில உட்டுப்போற நட்பு
ஆகவே ஆகாது…!

குறளின் கதிர்களாய்…(514)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(514)

உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர்.

– திருக்குறள் – 778 (படைச்செருக்கு)

புதுக் கவிதையில்…

அமர் வரின்
ஆருயிர் பொருட்டு
அஞ்சாமல்
போரிடத் துணிந்திடும்
படைவீரர்,
அப்போர் வேண்டாமென
அரசன் சினந்து தடுத்தாலும்,
தம் வீரத்தில் என்றும்
தரம் குறையமாட்டார்…!

குறும்பாவில்…

போர்வரின் தம்முயிர்க்கு அஞ்சாது
செல்லும் படைவீரர், அரசன் சினந்தாலும்
சிறப்பில் குறைய மாட்டார்…!

மரபுக் கவிதையில்…

போரில் வெல்லத் துணிந்தேதான்
பொன்னாம் உயிருக் கஞ்சாமல்
நேரில் செல்ல விரும்பிநிற்கும்
நெஞ்சி லுறுதி கொண்டுள்ள
பாரி லுயர்ந்த படைவீரர்,
பாரை யாளும் மன்னவனும்
நேரில் சினந்தே தடுத்தாலும்
நேர்மைச் சிறப்பில் குறையாரே…!

லிமரைக்கூ…

போர்வரின் உயிர்க்கஞ்சி மறையார்
போகத்துணியும் படைவீரர், அரசன் சினந்தாலும்
படைச்சிறப்பில் அணுவும் குறையார்…!

கிராமிய பாணியில்…

படவீரன் படவீரன்
பழுதில்லாதவன் பயமில்லாதவன்,
அவந்தான் படவீரன்..

நாட்டுல போரு வந்தா
உயிருக்குப் பயந்து
ஒளிச்சிக்காம
உறுதியா
போருக்குப் போகத்
துணியிற படவீரன்,
ராசா கோவிச்சிக்கிட்டாலும்
அவனோட
படச்செறப்புல ஒருநாளும்
கொறஞ்சி போயிடமாட்டான்..

தெரிஞ்சிக்கோ,
படவீரன் படவீரன்
பழுதில்லாதவன் பயமில்லாதவன்,
அவந்தான் படவீரன்…!

குறளின் கதிர்களாய்…(513)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(513)

ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

– திருக்குறள் – 741 (அரண்)

புதுக் கவிதையில்…

அறிவொடு ஆண்மையும்
பொருளும் உடையோராய்ப்
பகைவர்மீது படையெடுத்துப்
போர் செய்யச்
செல்பவர்க்குச்
சிறந்ததாகும் அரண்,
அதுபோலப் பிறர்
படையெடுப்புக்கு அஞ்சித்
தம்மைப்
பாதுகாத்துக் கொள்ளும்
புகலிடமாகவும் அரண்
சிறந்ததாகும்…!

குறும்பாவில்…

ஆற்றலுடன் பகைவர் மீது
போர்தொடுத்துச் செல்வோர்க்கும், அதற்கஞ்சித் தற்காப்பு
செய்வோர்க்கும் சிறந்ததாகும் அரண்…!

மரபுக் கவிதையில்…

ஆண்மை யறிவு பொருளெனவே
அனைத்தும் கொண்டே படையெடுத்தல்
வேண்டிச் செல்ல வேண்டுமரண்
வேந்தன் தனக்குச் சிறப்பாக,
வேண்டு மதுவே மற்றவர்க்கும்
வெல்ல வருவோர் படையெடுப்பில்
தாண்டி வராமல் தற்காப்பாய்த்
தடுக்கும் அரணே தேவையாமே…!

லிமரைக்கூ…

கொண்டே மனதினில் முரண்
போர்தொடுத்துச் செல்வோர்க்கும், அதற்கஞ்சித் தற்காப்பு
செய்வோர்க்கும் சிறந்ததாகும் அரண்…!

கிராமிய பாணியில்…

கோட்ட கோட்ட
நல்ல கோட்ட,
நாட்டுக்குப் பாதுகாப்பு
நல்ல கோட்ட..

அடுத்தவங்களோட
படயெடுத்துப் போற ராசாவோட
ஒடமகளப் பாதுகாக்கக்
கோட்ட
ஓதவியா இருக்கும்,
அதுபோல
அடுத்தவங்க படயெடுப்புக்குப்
பயந்து தற்காப்பா
ஒளிஞ்சிக்கதுக்கும் கோட்ட
ஒதவியாத்தான் இருக்கும்..

அதால,
கோட்ட கோட்ட
நல்ல கோட்ட,
நாட்டுக்குப் பாதுகாப்பு
நல்ல கோட்ட…!

குறளின் கதிர்களாய்…(512)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(512)

தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

-திருக்குறள் -731(நாடு)

புதுக் கவிதையில்…

என்றும் குறையாத
உணவுப்பொருள் விளைவிப்பவரும்,
அறவியல்பு கொண்டவரும்,
அழிதலில்லாச் செல்வமுள்ளவரும்
ஆகிய இவர்கள்
அனைவரும்
கூடிவாழ்வது நாடு…!

குறும்பாவில்…

குறையா உணவுப்பொருள் விளைவிப்பவர்,
அறவியல்பு உள்ளவர், அழியாத செல்வமுள்ளோர்
ஆகியோர் கூடிவாழ்வது நாடு…!

மரபுக் கவிதையில்…

என்றும் குறையா உண்பொருட்கள்
ஏற்ற வகையில் விளைவிப்போர்,
நன்றா யறத்தைப் பேணுகின்ற
நல்ல இயல்பு கொண்டோர்கள்,
என்றும் அழிவே யில்லாத
எதிலும் குறையாச் செல்வமுளோர்
என்னு மிவர்கள் சேர்ந்தொன்றாய்
இணைந்தே வாழ்ந்தா லதுநாடே…!

லிமரைக்கூ…

உண்பொருள் உற்பத்தியில் வெல்வர்
பலருடன் நல்லறத்தார் பெருஞ்செல்வர் சேர்ந்தொன்றாய்
வாழ்வதே நாடெனச் சொல்வர்…!

கிராமிய பாணியில்…

நாடுண்ணா அதுதான் நாடு,
நல்லவுங்க எல்லாருமே
நெறஞ்சிருந்தா அதுதான் நாடு..

ஒருநாளும் கொறவு வராம
ஒணவுப் பொளுகள
வெளச்சல் செய்யிறவங்களும்,
நல்லறத்தயே பேணிக் காக்கிற
நல்ல கொணம் உள்ளவங்களும்,
அழிஞ்சிபோவாத நெறஞ்ச
செல்வம் உள்ளவங்களும்,
எல்லாருமே
ஒண்ணாச் சேந்து
வாழுறதுதான்
நல்ல நாடு..

தெரிஞ்சிக்கோ,
நாடுண்ணா அதுதான் நாடு,
நல்லவுங்க எல்லாருமே
நெறஞ்சிருந்தா அதுதான் நாடு…!

குறளின் கதிர்களாய்…(511)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(511)

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.

– திருக்குறள் – 729 (அவை அஞ்சாமை)

புதுக் கவிதையில்…

நூல்பல கற்றறிந்தும்
கற்றதை
நல்லோர் நிறைந்த அவையில்
எடுத்துரைக்க அஞ்சும்
திறனற்றவர்,
கல்லாதவரைவிட மிகவும்
கடைப்பட்டவர் என்றே
கூறுவர்…!

குறும்பாவில்…

பலநூல் கற்றறிந்தும் படித்ததை
நல்லோர் அவையில் எடுத்துச்சொல்ல அஞ்சுபவர்
கல்லாதவரைவிட கடைப்பட்டவர் என்பர்…!

மரபுக் கவிதையில்…

நல்ல நூற்கள் பலகற்றே
நலமாய்க் கல்வி பெற்றிருந்தும்,
நல்லோர் நிறைந்த பேரவையில்
நவிலத் தயங்கி நற்கருத்தைச்
சொல்ல அஞ்சி வெளியேறும்
சொத்தை யான ஒருவர்தான்
கல்லா தாரின் கீழாகக்
கருதப் படுவார் காண்பீரே…!

லிமரைக்கூ…

பலநூல் அறிந்த கற்றோர்
கற்றவற்றை அவையில்பேச அஞ்சிலவரைக் கல்லாதாரின்
கீழாய் கருதுவர் மற்றோர்…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
தைரியம் வேணும்,
சபயில பேசப் பயப்படாத
தைரியம் வேணும்..

பெரிய படிப்பெல்லாம் படிச்சிருந்தும்
படிச்சி அறிஞ்சத
பலரும் கூடுற நல்ல சபயில
எடுத்துச்சொல்ல தைரியமில்லாம
பயந்து ஓடுறவன,
ஒண்ணும் படிக்காதவனவிட
ரெம்பக்
கீழானவனாத்தான்
எல்லாரும் நெனப்பாங்க..

அதால
வேணும் வேணும்
தைரியம் வேணும்,
சபயில பேசப் பய்படாத
தைரியம் வேணும்…!

குறளின் கதிர்களாய்…(510)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(510)

பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.

– திருக்குறள் – 657 (வினைத் தூய்மை)

புதுக் கவிதையில்…

பழியைத் தந்திடும்
இழிதொழில் செய்து
ஈட்டும் செல்வத்தைவிட,
தீவினை ஏதும் செய்யாமல்
வினைத் தூய்மையுடன்
செயல்பட்டுச்
சான்றோர் பெற்றிடும்
வறுமை
மிக உயர்ந்ததே…!

குறும்பாவில்…

இழிதொழில் செய்து பழியுடன்
ஈட்டும் செல்வத்தைவிட சான்றோர் நல்வினையாற்றி
பெற்றிடும் வறுமை உயர்ந்ததே…!

மரபுக் கவிதையில்…

நீங்காப் பழியைச் சுமந்தேதான்
நீசச் செயல்கள் செய்வதனால்
ஓங்கிச் சேரும் செல்வத்தால்
ஒருவன் வாழ்வில் ஈட்டுகின்ற
வீங்கும் ஆக்க மதனைவிட
வினையின் தூய்மை யதனாலே
வாங்கும் வறுமை சான்றோர்க்கு
வாய்க்கும் உயர்வே ஆகிடுமே…!

லிமரைக்கூ…

தீயன தீராப்பழியைத் தாங்கி
செய்வதால்வரும் செல்வத்தைவிட நற்செயல்தரும் வறுமையால்
சான்றோரின் புகழ்வளரும் ஓங்கி…!

கிராமிய பாணியில்…

செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
செய்யிற செயலு
வாழ்கயில செம்மயா இருக்கணும்..

பழிபாவம் தருற
கேடான செயலச் செய்து
சேக்கிற செல்வத்தவிட
ஒருத்தருக்கும் கேடு தராத
நல்லதச் செய்றதல
நல்லவங்களுக்கு வருற
வறுமயும் ஒசத்திதான்..

அதால
செம்மயா இருக்கணும் செம்மயா இருக்கணும்
செய்யிற செயலு
வாழ்கயில செம்மயா இருக்கணும்…!

குறளின் கதிர்களாய்…(509)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(509)

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோ
ரெழுபது கோடி தலை.

– திருக்குறள் – 639 (அமைச்சு)

புதுக் கவிதையில்…

அருகில் இருந்தே
அரசனுக்குத்
தவறான வழிகளைக் காட்டி
அவன் பெயருக்குப்
பழுதுண்டாக்க எண்ணும்
அமைச்சனை விட
எழுபது கோடிப்
பகைவர்
பக்கத்தில் இருந்தாலும்,
அவர்கள்
நல்லவராவரே…!

குறும்பாவில்…

அருகிருந்து தவவறான வழிகாட்டி
அரசர் புகழைக் கெடுக்கும் அமைச்சனைவிட
எழுபதுகோடிப் பகைவர் மேலே…!

மரபுக் கவிதையில்…

அருகே யிருந்தே அல்வழியை
அரசர் தமக்கே உரைத்தவர்தம்
பெருமை தனையே கெடுக்கின்ற
பேதை அமைச்சன் தனைவிடவும்
வருத்தும் கோடி எழுபதாக
வந்தே எதிர்க்கும் வயவரெலாம்
உருவில் பகைவர் தானெனினும்
உண்மை நெறியில் உயர்ந்தோரே…!

லிமரைக்கூ…

பழிவர அரசர் பாலே
வழிகாட்டிப் பக்கமிருக்கும் தீயமைச்சனைவிடப் பகைவர்
எழுபது கோடியும் மேலே…!

கிராமிய பாணியில்…

இருக்கணும் இருக்கணும்
நல்லவனா இருக்கணும்,
ராசாவுக்கு மந்திரி
ரெம்ப நல்லவனா இருக்கணும்..

ராசாவோட
பக்கத்தில இருந்துக்கிட்டே
அவரோட பேருக்குப
பழுது வாறமாதிரி
வழிகாட்டுற
கேடுகெட்ட மந்திரியவெடவும்,
எதுத்து நிக்கிற
எழுவது கோடிப் பகயாளியும்
எவ்வுளவோ ஒசத்திதான்..

அதால
இருக்கணும் இருக்கணும்
நல்லவனா இருக்கணும்,
ராசாவுக்கு மந்திரி
ரெம்ப நல்லவனா இருக்கணும்…!

குறளின் கதிர்களாய்…(508)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(508)

அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கண் படும்.

– திருக்குறள் – 625 (இடுக்கண் அழியாமை)

புதுக் கவிதையில்…

அடுக்கடுக்காய்த் துன்பம்
அடுத்தடுத்து வந்தபோதும்,
அதற்காக
அச்சம் சிறிதும்
அடையாத ஒருவனை
அடுத்துவந்த துன்பம்
துன்புற்றே பட்டழியும்…!

குறும்பாவில்…

அடுத்தடுத்துத் துன்பம் வந்தபோதும்
அதற்காகச் சிறிதும் கலங்காதவன் பெற்ற
துன்பமது துன்புற்றே அழிந்திடும்…!

மரபுக் கவிதையில்…

அடுக்காய்த் துன்பம் வாழ்வினிலே
அடுக்கி வந்தே அமுக்கிடினும்
நடுங்கிப் பயத்தில் நலிவுறாமல்
நல்ல முறையில் வாழ்கின்ற
மிடுக்கா யுள்ள ஒருவன்தன்
மீது மோதும் துன்பமதும்
கெடுக்க வியலா நிலையெய்திக்
கெட்டே அழிந்து போய்விடுமே…!

லிமரைக்கூ…

துன்பம் வரினும் அடுக்கி,
அதற்குச் சிறிதும் அஞ்சிடான் முன்னே
அத்துன்பமே வீழ்ந்தழியும் தடுக்கி…!

கிராமிய பாணியில்…

தொயரப்படாத தொயரப்படாத,
தொயரப்படாத வாழ்க்கயில
துன்பம் வந்தா தொயரப்படாத..

அடுக்கடுக்காத் துன்பம்
அடுத்தடுத்து வந்தாலும்,
அதப்பாத்து
கொஞ்சமும் பயப்படதவங்கிட்ட
வந்த துன்பமும்
துன்பப்பட்டே
அழிஞ்சி ஒழிஞ்சி போவுமே..

அதால
தொயரப்படாத தொயரப்படாத,
தொயரப்படாத வாழ்க்கயில
துன்பம் வந்தா தொயரப்படாத…!

குறளின் கதிர்களாய்…(507)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(507)

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

– திருக்குறள் – 611 (ஆள்வினையுடைமை)

புதுக் கவிதையில்…

முடியர்து நம்மால்
இதனைச் செய்ய
என்று
மனம் தளர வேண்டாம்,
செயலொன்றைச்
செய்து முடிப்பதற்குரிய
பெருமையைப்
பெற்றுத் தந்திடும்
பெருமுயற்சியே…!

குறும்பாவில்…

நம்மால் முடியாதென மனந்தளராதே,
செயலொன்றைச் செய்து முடித்திடும் பெருமையைப்
பெற்றுத் தந்திடும் முயற்சியே…!

மரபுக் கவிதையில்…

நம்மால் செய்யக் கடினமென
நாட்ட மின்றிச் சோர்வுற்றுச்
செம்மை யானச் செயலெதையும்
செய்யத் தவற வேண்டாமே,
நம்மை யந்தச் செயலைத்தான்
நன்கு முடிக்கும் பெருமையினை
தம்மால் பெற்றுத் தந்திடுமே
தளரா நமது முயற்சியதே…!
லிமரைக்கூ…

வேண்டாம் முடியாதெனத் தளர்ச்சி,
விடாத முயற்சி பெற்றுத் தந்திடுமே
வெற்றிப் பெருமையுடன் வளர்ச்சி…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
வாழ்க்கயில வேணும்,
வேலயச் செய்யும்போது
விடாத மொயற்சி வேணும்..

நம்மால
இதச் செய்ய முடியாதுண்ண
மனத்தளர்ச்சி
வேண்டவே வேண்டாம்,
ஒரு செயலச்
செய்து முடிக்கவுள்ள
பெருமய
விடாத மொயற்சி ஒண்ணே
வாங்கித் தந்திடுமே..

அதால
வேணும் வேணும்
வாழ்க்கயில வேணும்,
வேலயச் செய்யும்போது
விடாத மொயற்சி வேணும்…!

குறளின் கதிர்களாய்…(506)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(506)

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

– திருக்குறள் – 579 (கண்ணோட்டம்)

புதுக் கவிதையில்…

தம்மைத் துன்புறுத்தும்
இயல்புடையோரிடத்தும்
இரக்கம் கொண்டு
அவர் குற்றத்தைப்
பொறுத்தருளும் பண்பே
புவியாளும் மன்னர்க்குப்
பெருமை தரும்
தலையாய இயல்பாகும்…!

குறும்பாவில்…

இன்னல் தமக்குத் தந்திடும்
இயல்புடையோரிடத்தும் இரக்கத்துடன் பொறுத்திடல் மன்னர்க்கு
உயர்வளிக்கும் தலையாய பண்பு…!

மரபுக் கவிதையில்…

இன்னல் தமக்குத் தருகின்ற
இயல்பை யுடையோர் தம்மிடமும்
துன்பம் மறந்தே யவர்தந்த
தொல்லை மறந்தே பொறுமையுடன்
அன்பாய் இரக்க மதுகாட்டி
அணைத்துச் செல்லும் அருங்குணமே
மன்னர் தமக்குப் பெருமைதரும்
மதிப்ப துயர்ந்த பண்பாமே…!

லிமரைக்கூ…

துன்பம் தமக்குத் தந்திடும்
தீயோரிடத்தும் இரக்கத்துடன் பொறுத்திடும் இயல்பால்
மன்னர்க்குப் பெருமை வந்திடும்…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும் நல்லகொணம்
ஒலக வாழ்க்கயில
எல்லாருக்கும் வேணும் எரக்ககொணம்..

தனக்குத் துன்பம் தருற
கொணமுள்ளவங்க கிட்டயும்
எரக்கம் காட்டி
அவுங்க குத்தத்தயெல்லாம்
பொறுத்துப் போறது
நாட்டு ராசாவுக்குப்
பெரும தரக்கூடிய
ஒசந்த பண்புதான்..

அதால
வேணும் வேணும் நல்லகொணம்
ஒலக வாழ்க்கயில
எல்லாருக்கும் வேணும் எரக்ககொணம்…!

குறளின் கதிர்களாய்…(505)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(505)

கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.

-திருக்குறள் – 566 (வெருவந்த செய்யாமை)

புதுக் கவிதையில்…

எல்லோரிடமும்
கடுஞ்சொல் சொல்பவனாய்,
இரக்க குணம்
இல்லாதவனாய்
அரசன் அமைந்துவிட்டால்,
அவனது பெருஞ்செல்வமும்
அவனிடம் நிலைத்து நிற்காமல்
அப்பொழுதே
அழிந்துபோகும்…!

குறும்பாவில்…

கடுஞ்சொல் சொல்பவனாய் இரக்கமே
இல்லாதவனாய் அரசன் இருந்தால், அவனது
பெருஞ்செல்வமும் நிலைக்காதே அழியும்…!

மரபுக் கவிதையில்…

நாட்டை யாளும் மன்னனவன்
நல்ல வார்த்தை பேசாமல்
காட்ட மான கடுஞ்சொல்லைக்
கனிவே யின்றி உரைப்பவனாய்,
காட்டும் நெஞ்சில் இரக்கமது
கடுகின் அளவும் இலாதவனாய்
நாட்டுக் கமைந்தால் அவன்செல்வம்
நலிந்தே அழியும் நிலைக்காதே…!

லிமரைக்கூ…

சொல்பவனாய்க் கடுமையான சொல்லை,
இரக்கம் இல்லாதவனாயும் மன்னன் இருந்தால்
அவன்செல்வம் நிலைத்திருப்பதே யில்லை…!

கிராமிய பாணியில்…

செய்யணும் செய்யணும்
நல்லதே செய்யணும்
நாட்டு ராசா,
மக்களுக்கு
நன்ம தராதத
செய்யாம இருக்கணும்..

கடுஞ்சொல்லு
சொல்லுறவனாயும்
எரக்கமே இல்லாதவனாயும்
ராசா இருந்தா
அவனோட பெருஞ்செல்வமும்
அவங்கிட்ட நெலச்சி நிக்காம
அழிஞ்சியே போவும்..

அதால
செய்யணும் செய்யணும்
நல்லதே செய்யணும்
நாட்டு ராசா,
மக்களுக்கு
நன்ம தராதத
செய்யாம இருக்கணும்…!

குறளின் கதிர்களாய்…(504)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(504)

பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

-திருக்குறள் – 532 (பொச்சாவாமை)

புதுக் கவிதையில்…

நிற்கமல்
நித்தம்வரும் வறுமை
ஒருவனது
அறிவைக் கொல்வதுபோல்,
ஒருவனது மறதி
அவனுடைய
புகழையே கொன்றுவிடும்…!

குறும்பாவில்…

நித்த வறுமை ஒருவனின்
அறிவை அழித்திடுவது போல, மறதி
அவனது புகழைக் கெடுத்துவிடும்…!

மரபுக் கவிதையில்…

நித்தம் வாழ்வில் நிரந்தரமாய்
நில்லா திடராய் வரும்வறுமை
சத்த மிலாதே யொருவன்தன்
சார்ந்த அறிவைக் கெடுத்தேதான்
சித்தம் மயங்கச் செய்வதுபோல்,
சிந்தை கொள்ளும் மறதியது
புத்தி கெடவே வைத்தொருவன்
புகழை யழித்து விட்டிடுமே…!

லிமரைக்கூ…

தினமும் வந்திடும் வறுமை
ஒருவனின் அறிவை அழித்தல்போல், மறதி
ஆக்குமவன் புகழை வெறுமை…!

கிராமிய பாணியில்…

கொடியது கொடியது
மகாக் கொடியது,
மனுசனுக்கு மறதி
மகாக் கொடியது..

மனுச வாழ்க்கயில
மாறாத வறும வந்தா
ஒருத்தனோட
அறிவயே அழிச்சிப்புடும்,
அதுபோல
மறதி ஒருத்தனுக்கு வந்தா
அது அவனோட
பேரு பொகழயெல்லாம்
போக்கடிச்சிடுமே..

அதால,
கொடியது கொடியது
மகாக் கொடியது,
மனுசனுக்கு மறதி
மகாக் கொடியது…!

குறளின் கதிர்களாய்…(503)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(503)

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடைகுடையார் மாநிலத் தில்….!

-திருக்குறள் -526(சுற்றந்தழால்)

புதுக் கவிதையில்…

ஒருவன்
பெரிய கொடையாளியாகவும்,
சினத்தைச்
சிறிதும் விரும்பாத
சிறந்த குணமுடையவனாகவும்
இருந்தால்,
அவனைப்போல் சுற்றத்தாரையுடையவன்
அவனியில்
வேறு யாருமில்லை…!

குறும்பாவில்…

கொடையாளியாய், கோபம் விரும்பாத
குணவானாய் ஒருவன் இருந்தால் அவனைப்போல்
சுற்றமுடையோர் உலகில் வேறில்லை…!

மரபுக் கவிதையில்…

இல்லை யெனவே மறைக்காமல்
இருக்கும் வரையில் கொடுக்கின்ற
நல்ல குணமாம் கொடைத்தன்மை
நாளும் இயல்பாய்க் கொண்டவனாய்,
பொல்லாக் கோபம் கொள்ளாமல்
பொறுமை பேணும் ஒருவன்போல்
வல்ல சுற்றம் பெரிதுடையோர்
வையம் தன்னில் வேறிலரே…!

லிமரைக்கூ…

கொடையாளியாய், கொடிய குற்றம்
கோபம் கொள்ளா ஒருவனுக்குபோல் வேறெவர்க்கும்
அமையாது பெரிய சுற்றம்…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
ஒறவு வேணும்,
விட்டு வெலகாத
குடும்ப ஒறவு வேணும்..

கொடயாளியாவும்
கோவப்படாதவனாயும்
ஒருத்தன் இருந்தா
அவனப்போல
குடும்ப ஒறவுகள்
கூடுதலா உள்ளவனா
ஒருத்தனுமில்ல..

அதால
வேணும் வேணும்
ஒறவு வேணும்,
விட்டு வெலகாத
குடும்ப ஒறவு வேணும்…!

குறளின் கதிர்களாய்…(502)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(502)

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை.

-திருக்குறள் -488(காலமறிதல்)

புதுக் கவிதையில்…

வெல்ல நினைக்கும் வேந்தர்
தம் பகைவர்
அழியும் காலம் வரும்வரை
அவரைக் கண்டால்
அவரிடம்
பணிவுடையவராய் செயல்படவேண்டும்,
காலம் வந்தால்
அப்பகைவர்
கட்டாயம் அழிவார்…!

குறும்பாவில்…

வெல்ல விரும்பும் அரசர்
பகைவர்முன் பணிக, காலம் வரும்போது
நிச்சயமாய்ப் பகைவர் அழிவார்…!

மரபுக் கவிதையில்…

வெல்ல விரும்பும் வேந்தரவர்
வெறுக்கும் பகைவர் அழிந்தொழியும்
நல்ல காலம் வரும்வரையில்
நயமாய்ப் பணிக அவர்முன்னே,
வெல்ல இதுவும் வழிமுறைதான்
வெற்றி எளிதில் பெற்றிடவே,
பொல்லாப் பகைவர் அழிந்திடுவார்
பொருந்திக் காலம் வருகையிலே…!

லிமரைக்கூ…

வெல்ல விரும்பும் மன்னர்
பகைவர்முன் பணிக, காலம் வரும்போதவர்
நிச்சயமாய் அழிவர் பின்னர்…!

கிராமிய பாணியில்…

செயல்படணும் செயல்படணும்
நல்லா அறிஞ்சி செயல்படணும்,
செயல்படுறதுக்கு முன்னால
சரியான காலமறிஞ்சி செயல்படணும்..

பகயாளிய செயிக்கணுண்ணா
அவனுக்கு
அழிவு காலம் வாறவரைக்கும்
ராசா அவங்கிட்ட
கொஞ்சம்
பணிவாத்தான் போகணும்,
காலம் வரும்போது அவனுக்குக்
கட்டாயம்
அழிவு வந்திடும்..

அதால
செயல்படணும் செயல்படணும்
நல்லா அறிஞ்சி செயல்படணும்,
செயல்படுறதுக்கு முன்னால
சரியான காலமறிஞ்சி செயல்படணும்…!

குறளின் கதிர்களாய்…(501)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(501)

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.

-திருக்குறள் -470(தெரிந்து செயல்வகை)

புதுக் கவிதையில்…

தமது செயல் நிறைவேறிட
அரசாள்வோர்
தமது தகுதிக்குப் பொருந்தாதவற்றைச்
செய்தால் அதனை
உலகோர் மதியார்,
அதனால்
அவர் இகழாத வழிகளை
எண்ணிச் செயல்படவேண்டும்…!

குறும்பாவில்…

தம்தகுதிக்குப் பொருந்தாதவற்றை அரசர்
செய்தால் உலகோர் இகழ்வர், அதனாலவர்
இகழா வகையில் செயல்படவேண்டும்…!

மரபுக் கவிதையில்…

மன்னர் தனது தகுதிக்கு
மாறாய்ச் செயல்கள் செய்கின்ற
தன்மை தன்னைப் பார்த்தாலே
தாங்கா உலகோர் மதிக்காமல்
அன்னார் செயலை இகழ்வாரே,
அதனைக் கருத்தில் கொண்டேதான்
என்றும் அவர்கள் இகழாமல்
ஏற்றும் வகையில் செயல்வேண்டும்…!

லிமரைக்கூ…

தகுதிமறந்து செயல்படும் மன்னர்
இகழப்படுவதால் தவறதைத் தவிர்த்துச் செயல்பட
வேண்டும் மக்கள் முன்னர்…!

கிராமிய பாணியில்…

செயல்படு செயல்படு
நல்லாத் தெரிஞ்சி
நல்லமொறயில செயல்படு..

நாடளுற ராசா
தனக்க தகுதிய மறந்து
தாழ்வான செயல்களச் செய்தா
மக்கள் யாருமே
மதிக்கமாட்டாங்க,
அதுனால
மக்கள் எகழ்ந்து பேசாத வகதெரிஞ்சி
மன்னரு செயல்படணும்..

அதால
செயல்படு செயல்படு
நல்லாத் தெரிஞ்சி
நல்லமொறயில செயல்படு…!

குறளின் கதிர்களாய்…(500)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(500)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை.

– திருக்குறள் – 434 (குற்றங்கடிதல்)

புதுக் கவிதையில்…

தனக்கு அழிவைத்
தந்திடும் பகை
தான் செய்யும் குற்றமே,
அதனால்
அக்குற்றம் செய்யாமலிருப்பதே
நோக்கமாகக் கொண்டு
தன்னைக்
காத்துக்கொள்ள வேண்டும்…!

குறும்பாவில்…

குற்றம்தான் ஒருவனுக்கு அழிவினைக்
கொணரும் பகையாகும், அதனால் அக்குற்றம்
வராமல் காத்துக்கொள்ள வேண்டும்…!

மரபுக் கவிதையில்…

அழிவாம் முடிவைத் தருகின்ற
ஆற்றல் மிக்கக் குற்றமெனும்
இழிந்த பகையே வந்துலகில்
இடரைத் தருமே மாந்தர்க்கே,
அழிவைத் தடுக்கும் மார்க்கமதாய்
அந்தக் குற்றம் அணுகிடாத
வழியில் நம்மைக் காக்கின்ற
வகையில் வாழ்தல் நலமாமே…!

லிமரைக்கூ…

குற்றமே அழிவுதரும் பகை,
அதனை உணர்ந்தே வாழ்வில் தேர்ந்தெடு
அக்குற்றம் வராத வகை…!

கிராமிய பாணியில்…

செய்யாத செய்யாத
குத்தம் செய்யாத,
கூண்டோட அழிக்கிற
குத்தம் செய்யாத..

ஓலக வாழ்க்கயில
ஓனக்கு
அழிவத் தருற பக
நீ செய்யிற குத்தந்தான்,
அத ஒணந்து
அந்தக் குத்தமெதும்
செய்யாம வாழ்ந்து
ஒன்னக் காப்பாத்திக்கோ..

அதால
செய்யாத செய்யாத
குத்தம் செய்யாத,
கூண்டோட அழிக்கிற
குத்தம் செய்யாத…!

❌