ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு
ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு
எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க
எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.
கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!
நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம்,
நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை
அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி
கடித்தது.
கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே
அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு
ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி
எழுந்து எலியின் பின்னால் ஓடியது.
எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில்
போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப்
பார்த்தது.
இந்த சத்தம் கேட்டு சின்னுவும்
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது.
பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக
ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.
பசு மறுபடியும் சுவரில் முட்டியது.
பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி
கிடைத்தது.வேதனையில் கையைப்
பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது.
இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து
விட்டது.
ஒரு நாள் நீலகண்டன் குள்ளநரி நொண்டி நொண்டிக்
கதைப்பாட்டியும், நண்பர்களும் கூடியிருக்கிற ஆலமரத்தடிக்கு பணிவுடன் தலையைக்
குனிந்தபடி வந்தது. அதைப் பார்த்தால் சாதாரணக் குள்ளநரியைப் போல தெரியவில்லை. உடல்
முழுவதும் நீலநிறத்தில் இருந்தது. குள்ளநரியைப் பார்த்தது மெகர்பா கோழி
கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். குள்ளநரி மெகர்பா கோழியின் மீதே கண்
வைத்திருந்தது.
கோழி என்ன ஒரு அழகு!அதைப் பொரித்துச்
சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்!
எப்படியாவது கதைப்பாட்டியையும்
நண்பர்களையும் ஏமாற்றி இன்று மெகர்பா கோழியைக் கொண்டு போய் விடணும். குள்ளநரியின்
மனதில் அதுதான் திட்டம்.
குள்ளநரியைப் பார்த்ததும் நாய்க்குட்டி
கேட்டது,
“ குள்ளநரியே குள்ளநரியே.. இங்கே என்ன
வேலை உனக்கு? “
“ கறுமுறுன்னுச் சாப்பிட்டேன்.. குர்ர்ர்
குர்ர்ர்னு தூங்கணும்..” என்று குள்ளநரி சொன்னது.
பூனைக்குட்டி கேட்டது,
“ என்ன குள்ளநரியண்ணே.. ஒரே நீலநிறத்தில்
இருக்கிறே? “
குள்ளநரி,
“ நேற்று இரவு காட்டில் வனதேவன் என்னை
நீலநிற ஒளியில் முக்கியெடுத்தார். தெய்வத்துக்கு மிகவும் பிடித்த நிறம் நீலநிறம்
தான் என்று சொன்னார்..”
அதைக் கேட்டுக் கொண்டே வாயைத்
திறந்தபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது கல்யாணிப்பசு.
“ அதனால் நான் இன்று முதல் துறவறம்
பூண்டு விட்டேன்..மாமிசத்தைத் தொடக்கூட மாட்டேன்.. ஒரு உயிரையும் மனதாலோ,
வார்த்தையாலோ கூட துன்புறுத்த மாட்டேன்..”
என்றது குள்ளநரி.
“ உண்மையாகவா குள்ளநரியே!” என்று
நாய்க்குட்டி கேட்டது.
“ மெகர்பா கோழி மீது சத்தியம்.. வருகிற
வழியில் என்னுடைய காலில் ஒரு முள்ளு குத்திவிட்டது.. என்னை யாராவது காட்டுக்குக்
கூட்டிக் கொண்டு போகவேண்டும்..”
என்று குள்ளநரி பரிதாபமாய்க் கேட்டது.
“ நான் வர்ரேன்..” என்று கல்யாணிப்பசு
எழுந்தது.
“ ஐய்யய்யோ, பால் கறப்பதற்கு ஆல்பெர்ட்
சார் வரும்போது நீ இல்லையென்றால் பெரிய குழப்பமாகிவிடும்..குழந்தைகள் பால்
குடிக்கவேண்டாமா?”
என்று குள்ளநரி கேட்டது.
“ நான் வர்ரேன் “ என்று பூனைக்குட்டி
சொன்னது.
“ ஐய்யய்யோ.. ஆற்றில் நீந்தணுமே.. உன்னால
முடியாது பூனைச்செல்லம்..”
என்று குள்ளநரி சொன்னது.
“ அப்படியென்றால் நான் வருகிறேன்..”
என்று நாய்க்குட்டி சொன்னது.
“ ஐய்யய்யோ.. உன்னைப் பார்த்தால்
செந்நாய்க்கூட்டம் பாய்ந்து வந்துவிடும்.. வேண்டாம் கண்ணா..”
என்று சொல்லிய குள்ளநரி ஆசையோடு
மெகர்பாவைப் பார்த்தது. மெகர்பா மெல்ல எழுந்து நின்று,
“ அப்படி என்றால் நான் வர்ரேன்..”
என்றது.
குள்ளநரி மகிழ்ச்சியுடன்,
“ அது போதும்.. உன்னை ஆற்றின் அக்கரைக்கு
என் முதுகில் வைத்து நீந்துகிறேன்.. கொஞ்சநாள் அங்கே தங்கியிருந்த பிறகு நானே
உன்னைக் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்..”
என்று சொன்னது.
இவ்வளவும் நடக்கும்போது கதைப்பாட்டி
சொன்னார்,
“ கொஞ்சம் பொறுங்கள்.. செல்லங்களா..
கசுமலா காக்கா வருகிறது. அதுகிட்டேயும் கேட்கலாம்..”
கசுமலா காக்கா மூச்சிரைத்தபடியே,
“ சின்னுவின் அம்மா நீலம் முக்குவதற்காக
கலக்கி வைத்திருந்த தொட்டியில் குளிச்சிட்டு வந்திருக்கு இந்தக் குள்ளநரி..” என்று
சொன்னது.
கதைப்பாட்டி கையிலிருந்த கம்பினால்
குள்ளநரிக்கு ஒரு அடி கொடுத்தாள். குள்ளநரியின் காலில் அடி பட்டது. தாங்கமுடியாத
வலியினால் ஊளையிட்டுக் கொண்டே குள்ளநரி ஒரே ஓட்டம்.
அப்ப்டி ஓடும்போதே மெகர்பா கோழியைக்
கவ்விக் கொண்டு போய் விடலாம் என்று ஒரு பாய்ச்சல் பாய்ந்தது குள்ளநரி.
அப்போதும் கிடைத்தது ஒரு அடி, கதைப்பாட்டியிடமிருந்து..
ஒரு நாள் சின்னு நாய்க்குட்டிக்கும்
நாய்க்குட்டி பூனைக்குட்டிக்கும்பூனைக்குட்டி காக்காவுக்கும் காக்கா கல்யாணிப்பசுவுக்கும் தலையில் பேன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது,
“ கதைப்பாட்டி! கதைப்பாட்டி! ” என்று அழைத்தபடி
சூசனா என்ற ஆட்டுக்குட்டி ஓடி வந்தது. நல்ல உச்சிப்பொழுது. கதைப்பாட்டி துள்ளி
எழுந்தார்.
“ என்னாச்சு சூசனா..” என்று கதைப்பாட்டி
பரபரப்புடன் கேட்டார். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும் சூசனாவைச்
சுற்றி நின்றார்கள். சூசனா மூச்சிரைத்தபடி,
“ நான் சிங்கத்தின் வாயிலிருந்து
கஷ்டப்பட்டு தப்பித்து வருகிறேன்..”
என்றது.
“” நீ எப்படி சிங்கத்தின் வாயில் போய்
விழப்போனே? “ என்று பூனைக்குட்டி கேட்டது.
“ நானாய் போய் விழலை.. ஆல்பெர்ட் எல்லா
ஆடுகளையும் ஆற்றங்கரையில் மேய்ப்பதற்காகக் கொண்டு போனான்.. நான் ஆற்றில் தவறி
விழுந்து விட்டேன்.. ஆல்பெர்ட் கவனிக்கவில்லை..”
“ முதலில் மூழ்கி எழுந்தபோது ஒரு உழக்கு
கிடைத்தது.. இரண்டாவது தடவை மூழ்கி எழுந்த போது ஒரு தொரட்டி கிடைத்தது. மூன்றாவது
தடவை மூழ்கி எழுந்த போது ஒரு கொட்டு கிடைத்தது. நான்காவது தடவை மூழ்கி எழுந்தபோது
ஒரு நீர்க்கோழி கிடைத்தது.
அப்படியே ஆற்றின் அக்கரைக்குப் போய்
விட்டேன். இதை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் ஒரு குகைக்குள் போய் விட்டேன்.
குளிரைப் போக்குவதற்காக தீ மூட்டிக் காய்ந்து கொண்டிருக்கும் போது வெளியிலிருந்து
ஒரு சத்தம்.
“ உள்ளே யாரு? “
“ அப்புறம் ? “ என்று நாய்க்குட்டி
கேட்டது.
“ யார் வெளியே? ” என்று நானும் கேட்டேன்.
அப்போது சிங்கம் வெளியிலிருந்து
முழங்கியது,
“ நான் சிங்கராஜா..”
நான் சொன்னேன்,
“ அப்படியா.. நான் சூசனா ராணி..”
“ எங்கே உன்னுடைய கையைக் காட்டு..” என்று
சிங்கம் வெளியிலிருந்து கேட்டது. நான் தொரட்டியை நீட்டினேன்.
“ உன் வயிறைக் காட்டு..”என்ரது சிங்கம். நான் கொட்டை வெளியில்
காட்டினேன்.
“ உன் குரலைக் கேட்கட்டும்..” என்றது
சிங்கம். நான் நீர்க்கோழியின் கழுத்தைப் பிடித்து இறுக்கினேன்.
அது “ க்வா க்வா க்வா க்வா..” என்று
அலறியது.
சிங்கம் பயந்து ஒரே ஓட்டமாய் ஓடி
விட்டது. நான் அந்த நேரத்தில் ஆற்றின் இக்கரைக்கு நீந்தி வந்தேன். மூச்சிரைத்துக்
கொண்ட சூசனாவை சின்னு கட்டிப்பிடித்தாள். நாய்க்குட்டி சின்னுவைக் கட்டிப்பிடித்தது.
நாய்க்குட்டியை பூனைக்குட்டி கட்டிப்பிடித்தது.
பிறகு எல்லாரும் வட்டமாக நின்று ரிங்கா
ரிங்கா ரோசஸ் பாடி விளையாடினார்கள்.
சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியின்
கிராமத்தில் ஆல்பெர்ட் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஆல்பெர்ட்டுக்கு மனைவியும்
இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஞாயிறு தோறும் குடும்பத்தோடு சர்ச்சுக்கு
போகும்போது நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சர்ச்சின் முற்றம் வரை போகும்.
ஒரு நாள் ஆல்பெர்ட் ஓடி வந்தான்.
அவனுக்குப் பின்னால் ஒரு மலைப்பாம்பும் விரட்டிக் கொண்டு வந்தது. மலைப்பாம்பைப்
பார்த்தவுடன் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பாய்ந்து
கதைப்பாட்டியின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள். நய்க்குட்டியின் வாலில்
தொங்கியபடி பூனைக்குட்டியும் ஓடியது.
நாய்க்குட்டி,
“ க்க்க்க்ர்ர்ர்ர் “ என்று உறுமியது.
கதைப்பாட்டிக்குப் பயந்து பெரிய சண்டை எதுவும் வரவில்லை. ஆல்பெர்ட் சொன்னான்,
“ கிராமத்து மக்கள் தீ வைத்துக்
கொளுத்திய போது, பாம்பைக் காப்பாற்றியது நான் தான் கதைப்பாட்டி.. இப்போது இது
என்னையே விழுங்க வருகிறது... இது சரிதானா? சொல்லுங்கள்..”
மலைப்பாம்பு சொன்னது,
“ பசித்ததனால் தான் கதைப்பாட்டி.. வயதான
காலத்தில் கவலைப்பட வேண்டாம்.. இந்த ஆலமரத்திடமும், அந்த ஆற்றிடமும்,
கல்யாணிப்பசுவிடமும் கேட்டால் போதும்.. மனிதர்கள் மனிதர்களுக்குச் சாதகமாகவே
சொல்வார்கள்.. அதனால் கதைப்பாட்டி நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம்..”
ஆல்பெர்ட் ஆலமரத்திடம் கேட்டான்.
கம்பீரமான காற்றின் சத்தத்தில் ஆலமரம் தீர்ப்பு சொன்னது,
“ மனிதன் தானே. அப்படித்தான் செய்வான்.. மனிதனை
விழுங்கினால் போதாது.. கடித்து சவைத்து சாப்பிட வேண்டும்.. சோர்வைப் போக்கும்
நிழல் தரும் மரத்தையே வெட்டி எறிகிற கெட்டவன்..”
கல்யாணிப்பசு மேய்ந்து கொண்டிருந்த
இடத்திலிருந்தபடி தலையைக்கூட உயர்த்திப் பார்க்காமல் சொன்னது,
“ பாலையெல்லாம் ஒட்டக்கறந்து அதில்
தண்ணீர் கலந்து விற்கிறவர்கள் மனிதர்கள்.. விழுங்கிவிடு.. மனித வர்க்கத்தை
அப்படியே விழுங்கணும்.. தெரிஞ்சுதா? “
ஆற்றிடம் கேட்டபோது, ஆறு மகிழ்ச்சியுடன்
கடகடவெனச் சிரித்து,
“ தாகத்துக்குக் குடிக்கும் தண்ணீரில்
அத்தனை குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி மோசமாக்குவது மனிதர்கள் தான்..
நன்றியில்லாதவர்கள்.. விழுங்கிவிடு.. பாம்பே..”
என்று சொன்னது.
அப்போதுஆல்பெர்ட்டின் மனைவி கதறி அழுது
கொண்டே ஓடி வந்தார். அவர் பாம்பிடம்,
“ கணவரில்லாமல் நான் எப்படி வாழமுடியும்?
என்னை முதலில் விழுங்கி விடு..”
என்று சொன்னார்.
பாம்புக்குப் பரிதாபம் தோன்றியது. என்ன
ஆனாலும் பெண்ணல்லவா? பாவம். பாம்பு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தது. அதைச் சொல்லி
ஒரு துளி மண்ணை வாரிப்போட்டால் யாராக இருந்தாலும் இறந்து விடுவார்கள். இரண்டாவது மந்திரத்தைச்
சொல்லி மண்ணைப் போட்டால் அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள்.
ஆல்பெர்ட்டின் மனைவி மந்திரம் சொல்லி
மண்ணையள்ளி பாம்பின் மீது போட்டார்.
பாம்பு செத்துப் போய் விட்டது.
கதைப்பாட்டி இதையெல்லாம் பார்த்தும்
கேட்டும் மூக்கில் விரலை வைத்தபடி அப்படியே இருந்தார்.
ஒரு நாள் உச்சிவேளையில் சின்னுவும்,
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் மண்ணைக் குழைத்து அப்பம் சுட்டு விளையாடிக்
கொண்டிருந்தனர். அப்போது கசுமலா காக்கா ஆலமரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்து,
“ கா கா கா கா கா கா..” என்று கரைந்தது..
கதைப்பாட்டி காக்கா கவலையோடு
கரைவதைக் கவனித்தார். கதைப்பாட்டி எழுந்து எழுந்து சென்று,
“ என்ன கசுமலா.. உனக்கு என்ன கவலை? “
என்று கேட்டார். காக்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைப்
பார்த்த நாய்க்குட்டியும், சின்னுவும், பூனைக்குட்டியும் விளையாட்டை
நிறுத்திவிட்டு கதைப்பாட்டியின் அருகில் சென்றார்கள்.
கசுமலா காக்கா தாழப்பறந்தபடியே,
“ கா கா கா கா கா “ என்று கூப்பாடு போட்டபடி கதைப்பாட்டியைச் சுற்றிச்
சுற்றி சிறகுகளடித்து பறந்தது.
கதைப்பாட்டிக்கு பறவைகள் விலங்குகள்
பேசுகிற மொழி தெரியும். நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் சின்னுவும் ஒரே
குரலில்,
“ ஏன் காக்கா இப்படி கரையுது
கதைப்பாட்டி..” என்று கேட்டார்கள்.
“ கசுமலா காக்காவின் முட்டைகளை ஒரு
நல்லபாம்பு முட்டைகளைத் தின்று விட்டுப் போய் விட்டதாம்..”
“ அட..பாவமே! “ என்று சின்னு சொன்னாள்.
“ ஐய்யய்யோ..” என்று நாய்க்குட்டியும்
சொன்னது.
அப்போது கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம்
சொன்னார்,
“ நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன்..
அமைதியாக இரு..” என்று சொல்லி விட்டு சின்னுவின் கழுத்திலிருந்து
தங்கச்சங்கிலியைக் கழற்றி பாம்பின் புற்றில் போடுமாறு கதைப்பாட்டி கசுமலா
காக்காவிடம் சொன்னாள்.
கசுமலா காக்கா அதைச் செய்தது.
சின்னுவிடம் வீட்டுக்கு ஓடிப்போய் விவரம் சொல்லச் சொன்னார் கதைப்பாட்டி.
தங்கச்சங்கிலியைக் கழற்றி விளையாடும்போது காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது
என்று சின்னுவும் வீட்டில் சொன்னாள்.
தங்கச்சங்கிலியைத் தேடி வந்த சின்னுவின்
வீட்டுக்காரர்கள் அந்த நல்லபாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள்.
கசுமலா காக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
பறந்து வந்து கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.
இப்போதும் கதைப்பாட்டியின் கன்னத்தில்
ஒரு கரும்புள்ளி இருக்கிறது... பாருங்கள்!
சின்னுவும், நாய்க்குட்டியும்,
பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில்
சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,
“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா..
இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”
கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை.
கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி
‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘
பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக்
கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள்
நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய
நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு
வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.
காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது.
பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம்
மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச்
சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச்
சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,
“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை?
“
“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது
கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு
நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு
ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.
அதைக் கேட்ட காக்காவின் கண்கள்
கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடுத்தாள்.
ஜோஜூ ஜார்ஜ் நடித்த படங்கள் எதாவது ஒரு வகையில் கவனத்தில் பதியக் கூடியவையாய் இருக்கும். ’சோழா’, ’ரெட்ட’, ’நாயட்டு’, ’பட’ எல்லாம் நுட்பமாக
சித்தரிக்கப்பட்ட திரில்லர் படங்கள். புலிமாடா அங்கங்கு எரிச்சல் பட வைத்தாலும் புதுசாய்
இருந்தது. அவர் இயக்கியிருக்கிறாரே என்று ‘பணி’ ( Pani - மலையாளம்) பார்த்தாகி விட்டது.
மிகச் சாதாரணமாக
ஆரம்பித்த படம் அடுத்தடுத்த காட்சிகளில் மிரட்ட ஆரம்பித்தது. அவ்வளவு சந்தடி மிக்க பஜாரில் சத்தமில்லாமல் நடக்கும் கொலை பதற வைக்கிறது.
எதோ விளையாட்டுப் பையன்கள் போலிருந்தவர்கள்தான் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாய்
உருவெடுத்து நின்றார்கள். அந்த முதல் அரை மணி நேரம் இருந்த பிடிமானம் எல்லாம் போகப் போக இழந்து, தர்க்கங்கள் வடிந்து போய், கடைசியில் வழக்கமான சினிமாவாகி முடிகிறது.
மொத்த ஊரையும்
ஆட்டிப் படைக்கும் தாதாக்களின் குடும்பம், அவர்கள் எழுப்பி வைத்திருக்கும் ராஜ்ஜியம்,
அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க நாதியற்ற நிலைமை எல்லாவற்றிலும் பலத்த அடி விழுகிறது.
எதற்கும் துணிந்த இரண்டு பொடிப் பையன்கள் அவர்கள் அனைவரையும் நடுங்க வைக்கிறார்கள்.
ஊர் அதை உள்ளுக்குள் ரசிக்கிறது. இதை மட்டிலும் கதையாக எடுத்துக் கொண்டு காட்சிகளை
வடிவமைத்திருந்தால் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றிருக்கும்.
லும்பன்களாய்
இருந்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் வசதிகளாலும் அவர்கள் ரசனை மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
தெருவில் பசியோடு அலையும் லும்பனிடம் என்ன ரசனை இருக்கும்? இந்த முரண்பாட்டை பெண்ணோடு
உறவு கொள்வதில்தான் காட்சிப்படுத்த வேண்டுமா?
பகைமையையும்,
பழிவாங்கும் வேகத்தையும் வேறு புள்ளியிலிருந்து தொடர்ந்திருந்தால் பார்வையாளர்கள் இந்த
சினிமாவை சரியான கோணத்தில் பார்த்திருக்கக் கூடும்.
அந்த இரண்டு
இளைஞர்களின் கொட்டங்களை ஊர் உள்ளுக்குள் ரசிக்கிறது. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ் பக்கம் இல்லை. ஆனால் பார்வையாளர்களால் அந்த இளைஞர்களை
ரசிக்க முடியவில்லை. அவர்கள் ஜோஜூ ஜார்ஜ் பக்கம் இருக்கிறார்கள். அந்த இரண்டு பேரும்
அவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்படுவதை நியாயம்
என உணர்கிறார்கள். இந்த சினிமா தோல்வி அடைந்த இடம் அதுதான்.
அபிராம்சந்திராவின் "மாயராணி" கவிதை போலவே பெரு.விஷ்ணுகுமாரின் "காலம் போல கல்" கவிதை மலையாளத்தில் சிலாகிக்கப்பட்டது. பெரு.விஷ்ணுகுமார் மலையாளக் கவி அபிராமின் இரண்டு கவிதைகளை மொழியாக்கம் செய்திருந்தார். அவை : 1எளிதல்ல இந்த முகபாவம்1989-இல்பகலென்று தோன்றாதஒரு பகலில்,மழையென்று உறுதியாய் கூறமுடியாத ஒரு மழையில்சுயம் இழந்த வண்ணத்துபூச்சிகளைதேநீர் அருந்தும்போதுநினைத்துப்பார்க்கும்
விசேஷம் (Vishesham) என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார். இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.
ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்… நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.
கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார். ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).
புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.