ஜெமீலா தாத்தா (சிறுகதை) – நஸீமா
’மணல் வீடு’ இதழில் வெளியான சகோதரி நஸீமா பர்வீனின் ‘ஜெமீலா தாத்தா’ கதை நன்றாக இருந்தது. இந்தச் சிறுகதை பற்றி நண்பர் ஜமாலனின் சிறு விமர்சனத்தை பின்னூட்டத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாசித்து வயதை உயர்த்திக் கொள்க!
ஆபிதீன் தாத்தாவின் வலைப்பக்கத்தில் வெளியாக அனுமதி வாங்கித்தந்த சென்ஷி மாமாவுக்கும் யாழினி மாமிக்கும் நன்றி. – AB
ஜெமீலா தாத்தா – நஸீமா
கோட்டைமேடு இடியாப்பச் சிக்கல்போல சந்துகளால் குறுக்கும் நெடுக்குமாகப் பாவிக் கிடந்தது. அங்கு நாங்கள் வசித்த பகுதி உள்ளங்கையை விரித்து வைத்ததுமாதிரி மலர்ந்து இருந்தது. அகன்ற சந்துக்குள் ஒரு மைதானம். அதைச் சுற்றிலும் குறுகலான நான்கு சந்துகள் நேராகவும் ஒரு சந்து மட்டும் கிடையாகவும் இருந்தன. நதிகள் கடலில் கலப்பதுபோல எல்லாச் சந்துகளின் முடிவும் வாலாங்குளத்தோடு கலந்தன. உள்ளங்கையின் ஆயுள்ரேகைபோல மைதானத்தில் ஒரு கொடிக்கம்பம். அதன்கீழே எப்போதும் பெண்கள் கூட்டமாய் அமர்ந்து ஊர்ப்பாடுகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்தக் குறுகிப் பரந்த உலகத்தின் ஜாம்பவிகள் பலரை நான் அங்கு கண்டிருக்கிறேன். உப்புத் தண்ணீர் குழாயடியில் தன் ஆளுமை காட்டுபவளையும், பழக்காரக் கடை வாசலில் பஞ்சாயத்துச் செய்பவளையும் தம் வீட்டுத் திண்ணையிலிருந்தபடியே பார்வையால் எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருப்பவளையும் பார்த்திருக்கிறேன். இந்தப் பெண்களின் வரிசையில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட ஜெமீலா தாத்தாவின் தலைமை அந்தக் கொடிக் கம்பத்தின்கீழ் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. ஏதாவதொரு அடர்ந்த நிறத்தில் கழுத்து முதல் தொப்புள் வரைக்கும் பட்டன் வைத்து தைக்கப்பட்ட முழுக்கைக் குப்பாயமும் பொடிப் பூக்கள் நிறைந்த வெளிர் நிறப் புடவையும் அணிந்த பூச்சைக் கண்ணி ஜெமீலா தாத்தாவை அந்தப் பகுதியில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவள் மந்திரித்துக் கொடுத்தால் சகல நோயும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை சந்துக்குள் துடிப்புடனிருந்த எல்லா இதயங்களின் ஆழத்திலுமிருந்தது. ஜெமீலா தாத்தாவுக்குப் பதிமூன்று பிள்ளைகள். கடைசி இரண்டு குழந்தைகள் அவளின் பேரக்குழந்தைகளை விடவும் இளையவர்கள். கடைக்குட்டி ஜான்சாவின் பசிக்காகச் சந்துக்குள் சில இளவட்டங்கள் ஏங்கியதுண்டு. தம் நண்பர்களோடு விளையாடிக் களைத்தவுடன் நேராகத் தாயின் மடி தேடி வரும் அந்தக் கன்றுக்குட்டிக்காக அவள் தன் குப்பாயத்தின் இறுதி ஐந்து பட்டன்களைப் பூட்டாமலே வைத்திருப்பாள். குழந்தை அவனாகவே வருவான். தன் பசியை நீக்கி அவனாகவே அங்கிருந்து போய் விடுவான். ஜெமீலா தாத்தாவுடைய பேச்சின் மும்முரத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது. உள்ளங்கை முகம் தவிர எல்லாப் பாகங்களும் மூடியபடி தோற்றம் தருபவள். ஒரு முடியின் நுனி கூட வெளியே தெரியாதபடியிருக்கும் அவள் தன் முலைகளைக் குறித்துக் கவனமில்லாமலிருப்பது சந்துக்குள் ஏனைய பெண்களினுடைய மனக்குறையாக இருந்தது. பசிக்கிற பிள்ளைக்கு உணவூட்டி உயிர் வளர்க்கிற செயல்தானே; ஒளிவு மறைவில் செய்யக் கூடிய அளவு அப்படியொன்றும் ஆபாசமானது இல்லையே என்பது ஜெமீலா தாத்தாவின் எண்ணமாகயிருந்தது. உம்மா கூட ஒருமுறை அவ நல்ல பொம்பள தான். ஆனா இது ஒன்னு தான் அவகிட்ட அசல்கேடு என்று முகம் சுளித்தாள். உம்மாவின் முகச் சுளிப்புக்குள் ஏளனச்சிரிப்பு புதைந்திருந்ததைப் பார்த்தேன்.
ஜெமீலா தாத்தாவின் மூத்த மருமகன் வேறு யாரோ ஒருத்தியுடன் சினிமாவிற்குப் போன சேதி தெரிந்து ஒருமுறை பெரிய களேபரம் ஆனது. ஜெமீலா தாத்தா பெரிய ரகளையே செய்து விட்டாள். எதுக்குக் கண்டவளோட சினிமாவுக்குப் போனே என்று கேட்டு விட்டு அவள் ஒரு இங்கிலீஷ் படமே காட்டிவிட்டாள் என்பது சந்துக்குள் பல நாட்கள் பேச்சாயிருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவளது முந்தைய செயல்கேடு ஒன்னுமில்லாமல் போனது சந்துவாசிகளுக்கு.
எதுவான போதிலும் ஜெமீலாவிற்கு ஜால்றா போடுபவளும், ஏவிய பணியைச் சிரமேற் கொண்டு முடிப்பவளும் அவளுக்கு வலதும் இடதுமாயிருந்தார்கள். இந்தக் குழுவை இயக்கத்தில் வைத்திருக்கின்ற முக்கியஸ்திரியாக இருந்தவள் மொம்மும்மா (மஹ்மூதா பெரியம்மா என்று விளிக்கப்பட்டு நாள்போக்கில் மொம்மும்மாவாகிவிட்டது). நாலா பக்கத்திலிருந்து செய்திகளைச் சேகரித்து வருபவளும், இந்தப் படையிலிருந்து வேவு பார்த்துப் பிற குழுக்களில் தண்டோரா போடுபவளுமாகத் தானும் இயங்கி சந்துகளையும் இயக்கிக் கொண்டிருந்தாள். தண்டோரா என்றா சொன்னேன் இல்லை இல்லை. அவ்வளவு சத்தமாக வெளிப்படுத்துபவளில்லை. அவள் சொம்புத் தண்ணீரில் கடலினை மொண்டு வருபவள். நான்கு சொற்களிலிருந்து நானூறு செய்திகளை உருவாக்கும் வல்லமை அவளுக்கிருந்தது. எப்போதும் அவளுடைய வாயிலிருந்து வெளிவரும் மாறாத வாசகம் “ளா தெரியுமா” என்பது தான். இந்த வாசகத்தை அவள் தன் கரகரத்த குரலில் ஏதோ ஒரு ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கிற நிதானத்தோடு சொல்வாள்.
உம்மா எனக்கு விருப்பமான முட்டைப்பாலாடை சமைத்துக் கொண்டிருந்தாள். மிகவும் லேசான மஞ்சள் பெளர்ணமியாய் பாலாடைகளைச் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். நானும் அண்ணனும் சர்க்கரை, தேங்காய்ப் பூ தூவி பாலாடையை ஊதுகுழல்போலச் சுருட்டிக் கொண்டிருந்தோம். மொம்மும்மா வழக்கம் போல, லேடி எம்.ஆர். ராதா குரலில் “ளா தெரியுமா” என்றபடி வந்து நின்றாள். ப்ரு காப்பி குடித்த சுறுசுறுப்பை உம்மாவுக்குள் உண்டாக்கிவிடும் மந்திரச் சொல் அது. உம்மாவின் முகபாவத்தில் ஒரே ஆவலாதி. இந்தக் கோட்டைமேட்டுப் பெண்களின் செருக்கான இருப்பையும் இடிபோன்ற பேச்சையும் உம்மா தூரத்திலிருந்து ரசித்தாள். அருகில் செல்ல அஞ்சினாள். ஓங்கிய குரலிலல்லாமல் கள்ளச் சந்தைப் பொருள் விற்பன்னர் மாதிரி பதுக்கிப் பேசும் மொம்மும்மாவைத் தவிர யாரோடும் அவள் ஒட்டி உறவாடியதாக என் நினைவிலில்லை. ஒரு வட்டிலெடுத்து ஏழெட்டு முட்டைப்பாலாடையை அடுக்கி, மொம்மும்மாவிடம் நீட்டியபடி விளக்கிலிருந்து வெளிவரும் பூதத்துக்குக் காத்திருந்தாள்.
“ஜெமீலா ஏர்வாடிக்குப் போயிட்டு வந்தாளல்லோ. ஏதோ முரீது கெடச்சிருக்குதாம்புளா.”
“அப்..பி..டியா”- குரல் வெளியே வராத படி உம்மா ரகசியமாகக் கேட்டாள்.
“தேரு… எல்லோரும் போய் பார்த்துட்டும் வந்துட்டும் இருக்காங்க. உனக்குத்தாம்புளா ஒரு மயிரும் தெரியாது”
“காலையில தானே நபீஸக்கா கடைக்குப் போயிட்டு வந்தேன். ஒருத்தரும் ஒன்னுஞ் சொல்லலியே” கொஞ்சம் சலிப்போடு சொன்னாள் உம்மா.
“போளா நீ கொஞ்சம் மூடிட்டு.. இப்பப் போயிப் பாரு அங்கே.. ஒரே பெருநாளாக் கெடக்குது”
“அப்டீனா.. வர்றீங்களா மொம்மும்மா.. நமக்கும் போய் ஒன்னு எட்டிப் பார்த்துட்டு வரலாமா”
“நான் இப்பத்தாம்ளா போய்ப் பார்த்துட்டு வாரேன். இரி…பல்கீஸ் வீட்டுலயும் போய்ப் பார்த்துச் சொல்லிட்டு வரேன். அந்தப் புள்ளக்கும் உன்ன மாதிரித்தான்.. நான் சொல்லாம ஒன்னுந் தெரியாது…” – என்றபடியே எழுந்து கையைச் சேலையிலேயே துடைத்துக் கொண்டு போனாள்.
மொம்மும்மா இனி இப்போதைக்கு வரப் போவதில்லை என்று உம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்கள் பக்கம் திரும்பி “ஜெமீலா தாத்தாட்டப் போயி ஒன்னு மந்திரிச்சுட்டு வரலாம் ரெண்டு பேரும் வறீங்களா…” என்று கேட்டாள். அண்ணனுக்கு ஏறிமேட்டில் கிரிக்கெட் மேட்ச் இருந்தது. வலது புற மூலையில் சாய்த்து வைத்திருந்த தென்னை மட்டையைக் கண்சாடை காட்டியபடி அதைச் சொல்லி அவன் நழுவினான்.
உம்மாவின் தைரியம் பற்றி எனக்குத் தெரியும். உம்மாவின் முகத்தில் யோசனை அப்பிக் கிடந்தது. நான் கொஞ்சம் பெரிய மனுஷித்தனத்தை அணிந்து கொண்டு “என்னத்த யோசிச்சிட்டிரிக்குற வா போவலாம் நான் வாரேன் உன்கூட” என்றேன். உம்மாவின் கண்களில் ஆச்சர்யம் விரிந்தது.
நான் ஒன்னும் உன்ன மாதிரி பயந்தாங்கோளியில்ல வா போவலாம் என்று நான் மிடுக்காக நின்றபடி வாயை நேராக வைத்துச் சொன்னேன். எல்லாம் காரணமாகத்தான்.
பரீட்சை விடுமுறைகளில் அந்தந்த சீஸனைப் பொறுத்து கோட்டைமேட்டு சந்துகள் கலகலத்துக் கிடந்தன. கால் பரீட்சை விடுமுறையில் சாபிராவோடு பம்பரம் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். சாபிரா, ஜெமீலா தாத்தாவின் மகள். என் வயதொத்தவள். சாட்டையின் கட்டிலிருந்து விடுபடும் போதெல்லாம் பம்பரம் சுழன்று தன் சுதந்திரத்தைக் கொண்டாடித் தீர்த்தது. சாபிராவைக் கூப்பிட வந்த ஜான்சா பம்பரத்தைக் கேட்டு ஓரியாடினான். நான் என் உள்ளங்கைக்குள்ளாகப் பொத்திப் பிடித்துக் கொண்டேன். அவனுக்கு வந்த ஆங்காரத்தில் என் புறங்கையில் கடித்து வைத்துவிட்டான். இரண்டு பற்கள் சதையில் அழுத்தி இரத்தம் துளிர்த்திருந்ததை உம்மாவிடம் காட்டியபோது அவள்முகம் வாடியதே தவிர ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அழுகை முட்டி நின்ற நான், “ஏளா ஒன்னுஞ் சொல்லாம நிக்குற.. நானே ஜெமீலா தாத்தாட்ட போய்ச் சொல்லிக்குறேன்” என்று வீறாப்பாகக் கிளம்பியபோது “வேண்டாளா, அந்தப் பொம்பள உன்ன எடுத்து ஜாக்கிட்டுக்குள்ள போட்டு இறுக்கீருவா என்றாள். அதைச் சொல்லும்போது உம்மா, வலதுகையின் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையுமாகச் சேர்த்துப் பிடித்து ஏதோ கரப்பான்பூச்சியைப் பிடித்து தூக்குவது போன்ற பாவனையில் காட்டினாள். எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. நான் கொடிமரத்தடிக்கு ஓடினேன். “ஜெமீலா தாத்தா… ஜான்சா எனைக் கடிச்சு வச்சுட்டான்.. பல் பூந்து ரத்தம் வருது பாத்தீங்களா…” என் கையைத் திருப்பிக் காண்பித்தபடி அலறினேன். தன் பரிவாரங்களோடு உரையாடிக் கொண்டிருந்த அவள் என் குறுக்கீட்டை விரும்பவில்லை. அவளின் கண்கள் என்னை ஓரப்பார்வையாகக் கூர்ந்து நோக்கின. “பூச்சைக்கு இருட்டுலயும் கண்ணு தெரியுற மாதிரி ஜெமீலா தாத்தாவோட பூச்சைக் கண்ணுக்குப் பேயி நல்லாத் தெரியுதுளா.. அதோட கண்ணப் பார்த்தாலே மந்திரவாதியோட கண்ணு மாரிதானே இருக்கு” என் அண்ணன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. என் இறுக்கம் தளர்ந்து அச்சம் எனைக் கவ்வத் தொடங்கியது. என் இதயத்துடிப்பு காதுக்கு அருகில் கேட்பதை உணர்ந்தேன். ஆனாலும் அங்கேயே நின்றேன். நிற்க வேண்டும் என்ற பிடிவாதமில்லை. கால்கள் நகரும் வலுவிலில்லை என்பதே உண்மை. ஜெமீலா தாத்தாவுடைய பார்வையில் பிடிபட்டு சதாம் மேல் சேர்ந்த முத்தும்மா ஊமச்சியின் சைத்தான் வெளியே குதித்ததாக என் அண்ணன் சொல்லிய நிகழ்வு ஓர்மைக்கு வந்ததும் நான் பயந்தேபோனேன். பயத்தில் எனக்கு ஒன்னுக்கு வந்துவிடும்போல இருந்தது. அவளின் பார்வையில் பிடிபட்டு எனக்குள்ளிருந்து ஏதாவது ஒரு சைத்தான் குதிக்கப் போகிறதா? கருத்த குகைக்குள் இரண்டு வேட்டை மிருகங்கள்போல என்னைப் பார்த்துக் கொண்டிருந்த கருவளைத்த அவளுடைய கண்களை அவள் மிகச் சாவகாசமாக திருப்பிக் கொண்டு ஒரு மகாராணி போன்ற தோரணையில் “ப்பூ… இவளோவுதானா..சாரமில்ல…போ” என்றாள். இல்லை இல்லை உத்தரவிட்டாள். நான்கு எட்டில் இருக்கும் வீடு, அன்றைக்குப் பார்த்து நடக்க நடக்க எட்டாததுபோல தூரமாய்த் தெரிந்தது. வீட்டிற்குள் வந்தபோது ஏதோ கேட்க வந்தவளாக உம்மா என் முகத்தையே பார்த்தாள். நான் விசும்பலோடு மூச்சிழுத்தேன். விசும்பலில் ஒரு கணம் என் வாய் சற்று கோணியது. அவ்வளவுதான்.. பளிச்சென்று சிரித்தபடி கொன்னாவாய்ச்சி…. நான் தான் போவாதே…ன்னேனே… கேட்டாத்தானே.. போயி இப்ப மூக்குப் போய் வந்தியா.. இதெல்லாம் தேவையா”.. என்றாள். மூக்கும் போயி வாயும் கோணியதாக உம்மாவால் கேலிப்படுத்தப்பட்ட அவலட்சணத்தைச் சிறு பிள்ளையாக இருந்த என்னால் தாங்க முடியுமா. நான் என் தைரியத்தை நிரூபிக்க இப்போது நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கோணவாய் என்று உம்மா செய்த கிண்டலை நேர் செய்ய நல்லதொரு சந்தர்ப்பம்… அதனால் தான் “வா ளா, போலாம். நான் வாரேன்.. மந்திரிச்சிட்டு வருவோம்” என்றேன்.
“ஒத்தைக்குப் போவனுமேன்னு மடிச்சிட்டிருந்தேன். நல்ல காலம்.. பெரிய மனுஷி துணைக்கு வாராங்கோ. வாடி கொமுரிப்புள்ள” என்றபடி சேலை முந்தானையைத் தலையிலும் தோளிலுமாகப் போர்த்திக் கொண்டு மெதுவாக வெளியே வந்தாள். பஞ்சுமிட்டாய் கலரில் சைனா சில்க் பாவாடையும் குப்பாயமும் அணிந்திருந்த நான் உம்மாவை ஒட்டிக்கொண்டு நடந்தேன். புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஜாக் பள்ளிவாசலுக்கு ளுஹர் தொழுவதற்காகப் போய்க் கொண்டிருந்த இபுராஹிம் அண்ணன் ஜெமீலா தாத்தாவின் வீட்டை நோட்டம் விட்டபடியே போய்க்கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் உம்மா ஜெமீலா தாத்தா வீட்டுக்குள் போனாள். சந்து பரபரப்பாக இருந்தது. ஜெமீலா தாத்தாவின் வீட்டுக்குள் நுழைகையில் ஊதுபத்திக் கற்றைகளின் புகையும் மணமும் நம்மைச் சுற்றி வளைத்து உள்ளுக்குள் அழைத்துப்போனது. வீடு ஒரு குட்டித் தர்காவாக மாறியிருந்தது. இரும்புக் கட்டில்மீதிருந்த பிய்ந்த பெட்டின்மேல் வழுவழுப்பான பச்சைத் துணி விரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பேரரசிபோல ஜெமீலா தாத்தா உட்கார்ந்து ஏதோ வாய்க்குள்ளாக ஓதிக் கொண்டிருந்தாள். அவள் கழுத்து முதல் கணுக்கால் வரை மறைக்கும் தொழுகைக் குப்பாயமும் தலையில் ஒரு பச்சை மக்கனாவும் (முக்காடு) அணிந்திருந்தாள். அவளுக்கு முன்பாக ஒரு டீப்பாய், அதன் மீதும் பச்சைத் துணி விரிக்கப்பட்டிருந்தது. அதன் ஒருபுறம் ரஹாலும் அதன்மீது குர்ஆன் கிதாபும் விரித்து வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் நிறைய தாயத்துகள் கோர்க்கப்பட்ட கயிறுகளும் தஸ்பீஹ் மணிச் சரங்களும் கொத்துக் கொத்தாக இருந்தன. இரண்டு வாழைப்பழங்களில் ஊதுபத்திக் கற்றைகள் புகையை உமிழ்ந்து கொண்டிருந்தன. சந்துவாசிகள் ஒவ்வொருவராக தத்தம் பிள்ளைகளை அழைத்து வந்து மந்திரித்துப் போய்க் கொண்டிருந்தார்கள். அவளுடைய மக்கள் பன்னிரண்டு பேரும் ஒவ்வொரு வேலையில் பணிக்கப்பட்டிருந்தார்கள். ஜான்சா இடையில் பால்குடித்துவிட்டுப் போவான் என நான் நினைத்தேன். ஆனால் அவனை மட்டும் அங்கு காணவில்லை. வெளியே விளையாடப் போயிருந்தானோ என்னவோ. மூன்றாவது மகன் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில சிறார்களை விரட்டுவதிலே மும்முரமாக இருந்தார். இரண்டு பிள்ளைகள் சத்தமாக குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். மூத்த மகள் பயபக்தியோடு தாயத்து பிணைக்கப்பட்ட கயிறுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஜெமீலாவிடம் நீட்ட அவள் ஊதுபத்தி புகையில் காட்டி ஓதியும் ஊதியும் கொடுத்துக் கொண்டிருந்தாள். அடுத்தவள் வருபவர்களுக்குத் தாயத்தில் ஒன்றும் தஸ்பீஹ்மாலையில் ஒன்றுமாகக் கொடுத்தாள். கூடவே வெள்ளை நிறத்தில் பூ போன்ற இனிப்பு மிட்டாய்களையும் கொடுத்தார்கள். எங்கள் முறை வந்தபோது உம்மா என் முதுகின்பின் கைவைத்து முன்னோக்கித் தள்ளினாள். சதுரங்கக் கட்டங்களில் ராஜாவின் கம்பீரத்திற்கு எதிரில் பதுங்கிப் பதுங்கி ஒவ்வொரு அடியாக நகரும் சிப்பாய் கணக்காக நான் தயங்கித் தயங்கி முன் நடந்தேன். அவள் நிரம்பவும் அழகாகக் குர்ஆன் வசனமொன்றை ஓதினாள். அவளுடைய மிரட்டலான குரல் அடுப்பின் சூட்டில் உருகிக் கரையும் வெண்ணெயாக இளகி வழிந்தது. அந்தக் குரலில் வெளிப்பட்ட இசையையும் காருண்யத்தையும் நினைக்கையில் இப்போதும் மனதுக்குள் ஈரம் துளிர்க்கிறது. ஜெமீலா தாத்தா என் தலைமீது அவளின் பரந்த கைகளை வைத்து அவள் பக்கமாக இழுத்தாள். அவளின் மறு கையில் பால்பச்சை நிற தஸ்பீஹ் மணிகள் உருண்டு கொண்டிருந்தன. தஸ்பீஹ் மணியின் ஒளி அவளின் பூனைக் கண்களில் மினுங்கியது. ஓதி முடித்ததும் என் தலையில் ஊதிவிட்டு வெடுக்கென என்னைப் பின்புறமாக நகர்த்திவிட்டாள். “கொஞ்சம் மெதுவாத் தள்ளினாத்தான் என்னவாம்” நான் மனதுக்குள் பொருமிக்கொண்டேன். உம்மாவிடம் தஸ்பீஹ் மணியும் சீரணையும் கொடுத்தாள். உம்மா அதை வாங்கிவிட்டு மெதுவாக நகர்ந்து விட்டாள். நான் என் தோழமைகளோடு சேர்ந்து கொண்டு ஓரமாக நின்றேன்.
நேரமாக ஆக ஜெமீலா தாத்தா வீட்டுக்குள் ஜனங்களும் சுவாரஸ்யமும் கூடிக் கொண்டேயிருந்தது. திடீரென ஒரு கட்டத்தில் கட்டிலின்மீது ஏறி நின்று அவள் உடலை சிலுப்பியபடி ஓதலானாள். பிறகு ஓதுகிற முறைமையிலிருந்த காருண்யம் நீங்கி வெறுமனே ஓதினாள். பிறகு சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தாள். அங்கிருந்த பெண்கள் ஜெமீலா தாத்தாவுக்குக் கணக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். நானும் என் சகாக்களும் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம். ஜெமீலா தாத்தா சாடுவதும் மோதுவதும் சந்துவாசிகள் பலரைக் குறித்த முறைப்பாடுகளை உரத்துச் சொல்வதுமாக அமர்க்களப்படத் தொடங்கினாள். அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் சிலர் கள்ளத்தனமாகச் சிரித்தார்கள். சிலர் பதற்றமாகிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஒரு நாற்பது ஐம்பது இளவட்டங்கள் கட்டையும் கையுமாக திபுதிபுவென்று வந்தார்கள். கட்டைகள் கரடுமுரடாக இருந்தன. அதிகாரத்தின் அரிதாரம் பூசப்பட்ட அவற்றிற்குள் மிரட்டலைத் தவிர்த்து வேறு ஒன்றுமில்லா வெறும் கட்டைகளாக மட்டுமே இருந்தன. வீட்டிற்குள் வேடிக்கைச் சுடர்விடும் முகங்களோடு நின்று கொண்டிருந்த எல்லோரையும் வெளியேறுமாறு கட்டளையிட்டார்கள். நாங்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடினோம். ஜெமீலா தாத்தாவின் வீட்டுப் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். நூற்றுக்கும் மேலான வேகத்தில் போய்க் கொண்டிருந்த அவளின் கணக்கு சட்டென்று பூஜ்யத்திற்கு வந்து நின்றது. ஜெமீலா தாத்தாவும் மக்களும் சீறினார்கள். ஆனாலும் வந்திருந்தவர்களின் எண்ணிக்கைக்கு முன்னால் இவர்களின் சீற்றம் ஒன்றுமில்லாமல் உடைந்தது. வந்திருந்த கூட்டத்தில் முதல்வனாக இருந்தவன் வெள்ளிக்கிழமை பயான் தொனியில் பிரசங்கிக்கத் தொடங்கினான்.
“என்ன வேலை செய்றீங்க.. இதுக்கெல்லாம் இஸ்லாத்துல இடமில்ல. நீங்க சொல்ற மாதிரி அவுலியாமாரும் இல்லை. அம்பிகாமாரும் இல்லை. இதெல்லாம் அல்லாஹ்வுக்கு இணைவைக்குற பாவம். அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்க” என்று சொன்னதோடு இனி இந்த மாதிரி ஏதாவது செஞ்சீங்கன்னா குடும்பத்தோட அடிச்சி வெரட்டீருவோம் என்று மிரட்டவும் செய்தான். பின்னர் மொத்தமாகக் கலைந்து போனார்கள். சைத்தானையும் பேயையும் மனிதருக்குள்ளிருந்து வெளியேற்றி விரட்டியடிக்கும் ஜெமீலா தாத்தாவின் பார்வையினுடைய சக்தி ஊடுருவ முடியாத இந்தக் கட்டைகளின் வரவுக்குப் பிறகு ஜெமீலா தாத்தா வீட்டிலிருந்த பசுமை நீங்கி இரண்டு நாட்கள் கருமை சூழ்ந்திருந்தது. மற்ற வீடுகளில் வியப்புகளும் வேடிக்கைகளும் முணுமுணுத்துக் கிடந்தன. அந்தச் சந்துக்குள் கலர் டீவியின் சங்கீதம் ஒலித்த ஒரே வீடு செவிட்டுக்காதர் வீடு. மறுநாள் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி பார்க்க நாதியற்று அது அவிந்து கிடந்தது.
இந்த முஜாயிது பசங்களிடம் தகவல் சொல்லி அவர்களை ஏவிவிட்டது சாலவூட்டு இபுராஹிம் தான் என்பதை மூன்றாவது நாளில் முறம் சுத்திக் கண்டுபிடித்திருந்தாள் ஜெமீலா தாத்தா. பிறகு முட்டை மந்திரித்துக் கொண்டிருந்ததாகச் சந்துக்குள் பரவலாகப் பேசினார்கள். அடுத்து வந்த நாட்களில் நான் எதிர்பார்த்தபடி “ளா தெரியுமா” என்ற மொம்மும்மாவின் குரல் எங்கள் வீட்டுக்குள் மெல்ல நுழைந்தது.
“ளா, உம்மா வாப்பாயும் மக்களும் ரண்டு நாளாச்சு வெளியில காணோம். உள்ளாறயே என்னமோ ப்ளான் பன்னுறாளுங்கோலாட்டம் இரிக்குது. என் வூட்டுக்கும் ஜெமீலா வூட்டுக்கும் எடையில ஒரு செவுரு தானே.. என்னதான் நடக்குதுன்னு எட்டிப் பாத்தேன். அரிசி மாவை ஜெமீலா கொலச்சுட்டிருந்தா. அரிசி ரொட்டிக்குத் தான் மாவு கொளய்க்குறானு நான் நெனச்சேன்…. மாவுல பொம்மயச் செஞ்சு உள்ளாற சொவப்புக் கலருல என்னுமோ வச்சு மந்திரிக்கிறா. இன்னுட்டு அதையெடுத்து எளநிக்குள்ள வச்சு மூடிம்போட்டு ஆணி அடிச்சா. பின்ன அதயெடுத்துத்துட்டு தொடிக்கு வந்தா. நானும் மெதுவ்வா என் வூட்டுத் தொடியில வந்து நின்னு என்ன செய்யுறான்னு பார்த்தேம்புளா.. கொளத்துல அவ வீசுன எளநி மெதந்துட்டிருக்கு.. என்னென்னமோ செஞ்சிட்டிருக்குறா. அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம். எதயாவது மந்திரிச்சு என் வூட்டுக்குள்ள வீசுவாளோன்னு எனக்கு திக்குதிக்குன்னு இருக்கு” என்று பயந்த பாவனைபோல நடித்துச் சொன்னாள். பின் உம்மாவும் மொம்மும்மாவும் வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். போகையில் மொம்மும்மா எப்போதும் போல “ளா உன் மனசுலயே கெடக்கட்டும் யாருட்டயும் எதுவும் சொல்லிக்கிடாத” என்று மறவாமல் சொல்லிப் போனாள்.
சரியாக நாற்பதாவது நாளில் இபுராஹீம் கை கால் வராமல் படுக்கையிலானபோது ஜெமீலா தாத்தாவுக்கு மவுசு கூடியிருந்தது. அவள் மந்திரிப்பதைக் கொஞ்சம் மறைத்தும் ஒளித்தும் தொடர்ந்தாள். என்றாலும் ஜெமீலாவின் பெருமிதமான கண்களுக்குள் விழுந்த துரும்பாகக் கட்டைகள் உறுத்திக் கொண்டேயிருக்க ஒருநாளில் இரவோடு இரவாக அவர்கள் அங்கிருந்து வீட்டைக் காலிசெய்து கண்களுக்கு அகப்படாத தொலைவிற்குப் பெயர்ந்தார்கள்.
குளத்து நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் கருதி புறம்போக்கு வீடுகளை அகற்றுகிற புல்டோசர் வாகனத்தின் இரும்புக் கரம் கோட்டை மேட்டுக்குள் நுழையும்வரை யாருமற்று சிதிலமடைந்து இருண்டு கிடந்தது ஜெமீலா தாத்தாவின் வீடு. ஏதோ அவமானத்தில் நாணியதுபோல.
முப்பது வருடத்திற்குப் பிறகு குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் அவளைப் பார்த்து அடையாளம் கண்ட உம்மா என்னிடம் திரும்பிக் கேட்டாள். யாருன்னு தெரியுதா?. என் ஓர்மைத் தடத்தில் நான் அந்த முகத்தைப் புரட்டிப் பார்த்தேன். எனக்கு எந்தப் பிடியும் கிடைக்கவில்லை. கண்கள் மட்டும் எங்கோ பார்த்தவைபோல ஒரு குறிப்பை உணர்த்தின. உம்மா என் யோசனையைப் புரிந்து கொண்டு ஜெமீலா தாத்தா என்றாள். மெலிந்து ஒட்டிய தேகமும் கூன் நடையுமாக இறகுகள் உதிர்ந்த பறவை போல இருந்தாள். ஒரு குறிப்பிட்ட இஸ்லாமியக் கட்சியில் ஜான்சா ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறானாம். அவன் தான் எல்லாரோடும் தன்னையும் வேனில் ஏற்றிக் கூட்டி வந்ததாகச் சொன்னாள். என் பால்யத்தில் பச்சைக் கொடிக்கம்பத்தின் கீழும் வழுவழுப்பான பச்சை நிறத் திரைச்சீலைகள் சூழ ஓதிக் கொண்டும் பேரரசியாக வீற்றிருந்த ஜெமீலா தாத்தாவின் சாயலை என்னால் அந்த முதிர்ந்து தளர்ந்த உருவத்துக்குள் பொருத்திப் பார்க்க முடியவில்லை. கருப்பு நிற பர்தாவும் முக்காடும் அணிவித்து அழைத்து வரப்பட்டிருந்த அந்த எண்பது வயது மூதாட்டியின் கண்கள் கிழட்டுக்கழுகு ஒன்றின் கண்களை ஒத்திருந்ததை மட்டுமே என்னால் காண முடிந்தது.
*
நன்றி : நஸீமா பர்வீன் , மணல் வீடு
*
உயிர்மை இதழில் வெளியான நஸீமாவின் ’குஸக்கம்’ சிறுகதை (குஸ்கா தின்ற மயக்கம் என்று நினைக்கிறேன் :-)) விரைவில் இங்கே வெளியாகும், இன்ஷா அல்லாஹ்.