Normal view

Received before yesterday

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம் பெற்றவுடன் பயணம் தொடர்ந்தது.

நிகோலோ குழுவினரின் வருகை ஒற்றர்களின் மூலமாக குப்ளாய்கானுக்குத் தெரிவிக்கப்பட்டது. வழியில் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும்படி அந்தந்தப் பகுதி ஆட்சியாளர்களுக்கு குப்ளாய்கான் உத்தரவிட்டிருந்தார்.

பெரிய மலைகளை எல்லாம் கடந்து திபெத் பகுதிக்குள் நிகோலோ குழுவினர் சென்றனர். திபெத், எட்டு ராஜ்ஜியங்களையும், ஏராளமான நகரங்களையும் உள்ளடக்கிய பெரிய பரப்பளவாக இருந்தது. இந்தப் பகுதி முழுமையும் ‘கிரேட் கான்’ என்றழைக்கப்படும் குப்ளாய்கானுக்கு உரிய பகுதியாக இருந்ததால் எவ்வித சிரமும் இன்றி அவர்களுடைய பயணம் தொடர்ந்தது.

திபெத் பகுதி மக்கள் சிலை வழிபாடுகளில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்ந்தனர். அதிகமான வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்து வணிகத் தொழிலில் சிறந்து விளங்கினர். மலைகளால் சூழப்பட்ட இப்பகுதியைக் கடந்து மங்கோலிய அரசனைக் காண நிகோலோ குழுவினர் பயணப்பட்டனர்.

மங்கோலிய சாம்ராஜ்ஜியம் குறித்தும், செங்கிஸ்கான் வழிவந்த குப்ளாய்கான் பற்றியும், நிகோலோ தனது மகன் மார்க்கோ போலோவுக்கு எடுத்துரைத்தார். மங்கோலியப் பேரரசு, இராஜ்ஜியம் அமைத்த வரலாற்றைக் கேட்கத் தொடங்கினார் மார்க்கோ போலோ.

வெற்றி பெற வேண்டும் என ஓடத் தொடங்கியவர்களில் பாதிப் பேர், பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே விட்டுவிடுகின்றனர். மீதிப் பேர் ஓடினாலும் வெற்றி என்பது எதிராளியை வீழ்த்தியவருக்குத்தான் கிடைக்கிறது. அப்படி வெற்றி பெற்றவரின் பூமியில் நாம் நடந்துகொண்டிருக்கிறோம் என்றபோது மார்க்கோ போலோ ஆர்வமுடன் கேட்கலானார்.

இன்றிலிருந்து சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் மங்கோலிய அரசை உருவாக்கிய செங்கிஸ்கான் பிறந்தார். செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. பல நாடோடிக் கூட்டங்களாக மங்கோலிய மக்கள் சிதறி வாழ்ந்து வந்தனர். இதனால் பல எதிரிக்கூட்டங்கள் மங்கோலிய நாடோடி மக்களைத் தாக்கி வந்தனர்.

நாடோடி குழுக்களின் சண்டையில், செங்கிஸ்கானின் தந்தையும் நண்பர்களும் கொல்லப்பட்டனர். 12 வயதிலேயே போருக்குத் தயாரானார் செங்கிஸ்கான். நாடோடி மக்கள் குழுக்களை ஒருங்கிணைத்து, ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்று செங்கிஸ்கான் கனவு கண்டார். தமது கனவுக்குச் செயல் வடிவம் அளிக்கப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்.

செங்கிஸ்கான் மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றிணைத்து, மங்கோலியப் பேரரசைக் கட்டமைத்தார். வலிமையான இராணுவத்தை உருவாக்கி, வட சீனாவின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார். இப்போது நாம் நடந்து செல்லும் பாதைகளை, நகரங்களை செங்கிஸ்கான் கைப்பற்றி மிக வலிமையான தேசமாகக் கட்டமைத்தார்.

உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகளை வென்றெடுத்து ஆட்சிபுரிந்த ஆசிய மன்னன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் செங்கிஸ்கான். ஐரோப்பாவின் சில பகுதிகளையும் செங்கிஸ்கான் தனது மங்கோலியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றார்.

தனது தந்தை கூறிவரும் மங்கோலிய அரசின் வெற்றிகளை ஆர்வமுடன் கேட்டு வந்த மார்க்கோ போலோ, இவ்வளவு பரந்த நிலப்பகுதியை எவ்வாறு வென்றெடுத்தார் என்று தந்தையிடம் கேட்டார்.

செங்கிஸ்கானின் மங்கோலிய அரசின் வெற்றிக்கு முக்கியக் காரணம், ராணுவத்தைக் கையாளும் முறை என்று தந்தை நிகோலோ கூறினார். செங்கிஸ்கான் மூன்று பிரிவாக இராணுவத்தை வைத்திருந்தார். ஒரு பிரிவு சண்டையிட்டால் இன்னொரு பிரிவு ஓய்வெடுக்கும். இன்னொரு பிரிவு மோதலுக்குத் தயாராக இருக்கும். எதிரிப் படைகளின் முழுமையான பலத்தை அறிந்து அவர்கள் சோர்வடையும்போது மிகத் தீவிரமாகத் தாக்கும் உத்தியை மங்கோலிய வீரர்களுக்கு செங்கிஸ்கான் பயிற்றுவித்தார்.

நாடோடி இனக்குழுவை இராணுவமாக மாற்றி, மங்கோலிய அரசை உருவாக்கி, மிகச் சிறந்த ஆட்சி அளித்த செங்கிஸ்கான், ஒரு போரில் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வரலாறு கூறுவதை நிகோலோ தனது மகனுக்குக் கூறினார்.

செங்கிஸ்கானுக்குப் பிறகு அவரது மகன்களில் ஒருவரான ஒக்தாயி என்பவர் மங்கோலிய அரசின் தலைமையை ஏற்று அவர் வழியிலேயே பல இராஜ்ஜியங்களை மங்கோலிய எல்லைக்குப்படுத்தினார். ஒக்தாயி, செங்கிஸ்கானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் என்பதால் எவ்விதச் சிரமமும் இன்றி இராணுவத்தை வழிநடத்தி செங்கிஸ்கானின் கனவுக்குத் துணை நின்றார்.

ஒக்தாயி ஒரு பெரிய படையெடுப்புக்கு ஆயத்தமான நிலையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வழிவந்த தற்போதைய ககான் குப்ளாய்கான் மங்கோலிய அரசை வழிநடத்தி வருகிறார். சமவெளிகள், பாலைவனங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள் என அனைத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வலிமையான அரசனாக குப்ளாய்கான் திகழ்கிறார்.

செங்கிஸ்கான் சீனாவின் ஒரு பகுதியை வெல்ல, அவரின் வாரிசுகள் அடுத்தடுத்த பகுதிகளை வெல்ல, குப்ளாய்கான் ஒட்டுமொத்தச் சீனாவையும் வென்று தன் மங்கோலிய அரசின் கீழ் கொண்டு வந்தார். உலகின் மிகச் சக்தி வாய்ந்த மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் தூதுவர்களாக நாம் இப்போது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற முறை நாங்கள் மங்கோலியப் பயணம் வந்தபோது நூறு கிறிஸ்தவ அறிஞர்களையும், இயேசுவின் புனிதக் கல்லறை எண்ணெய்யையும் கொண்டு வாருங்கள் என்று கேட்டதற்காக நாம் மீண்டும் குப்ளாய்கானைச் சந்திக்க வந்துள்ளோம்.

செங்கிஸ்கான் உருவாக்கிய மங்கோலிய அரசின் கனவை நனவாக்கி முழுமையான சீனாவையும் ஆட்சி புரியும் குப்ளாய்கானை நாம் காணச் செல்கிறோம் எனச் சொல்லி முடித்தார்.

வளமும் செல்வங்களும் நிறைந்த மங்கோலிய அரசனைக் காண மார்க்கோ போலோ சென்ற வழிகளில் நிறைய மரங்கள் நடப்பட்டுப் பேணப்பட்டு வந்ததை மார்க்கோ போலோ கண்டார். குப்ளாய்கான் ஆணையால் அடுத்த ஒரு மாதம் தங்களின் பயணம் இனிமையாக இருக்கும் என்று போலோக்கள் எண்ணினர்.

கிழக்கு நோக்கிய பயணத்தில் சரசென்ஸ், சாகன் ஆகிய நகரங்களைக் கடந்து ஷாங்டு என்ற நகரத்தை போலோ குழுவினர் அடைந்தனர். அந்த நகரத்தில்தான் தற்போது குப்ளாய்கான் இருப்பதாக வீரர்கள் கூற, நிகோலோ குழுவினர் மிக மகிழ்வோடு பயணித்தனர்.

மிக நீளமான அழகான அரண்மனையைக் கண்டு ரசித்துக் கொண்டே சென்றார் மார்க்கோ போலோ. பதினேழு வயதில் பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ தற்போது இருபத்தியோர் வயது இளைஞராகத் தன் தந்தையுடன் குப்ளாய்கானைச் சந்திக்க அரண்மனை மதிலுக்குள் நுழைந்து அரசவையை அடைந்தார்.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல் appeared first on கிழக்கு டுடே.

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர்.

படாசன் நகரத்தைக் கடக்கவே பதிமூன்று தினங்களை போலோ குழுவினர் செலவிட நேர்ந்தது. படாசன் நகரை ஆண்ட மன்னர் பரம்பரை, அலெக்சாண்டரில் இருந்து தொடங்குவதாக எண்ணி தங்கள் அரசை நடத்தி வருகின்றனர் என்றும், அந்தப் பகுதி அரசர்கள் சுல்கர்னைன் என்ற பட்டத்தைத் தங்கள் பெயருக்கு முன் சூடிக் கொள்கின்றனர் என்றும் போலோ அறிந்துகொண்டார்.

படாசன் என்ற நகரம் இயற்கையான கணவாய்களையும் கோட்டைகளையும் கொண்டு திகழ்வதால் இந்தப் பகுதியை மாற்று அரசுகள் படை எடுத்துத் தாக்குவது மிகவும் சிக்கலானது என்று நிகோலோ போலோ விளக்கினார்.

படாசன் நகரைக் கடக்கும்போது மார்க்கோ போலோ கடுமையான காய்ச்சலால் துன்புற நேர்ந்தது. ஏற்கெனவே இந்தப் பாதையில் நிகோலோ பயணித்திருந்ததால், அந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று தனது மகனின் காய்ச்சலுக்குத் தகுந்த மருத்துவ உதவியைப் பெற்றார்.

மார்க்கோ போலோவின் காய்ச்சல் குணமானவுடன் நிகோலோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். கடுமையான நிலப்பகுதிகளைக் கடந்து அடுத்ததாக அவர்கள் சென்றடைந்த பகுதி, காஷ்மீர். காஷ்மீரில் சிலை வழிபாடு மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. இந்தப் பகுதி மக்கள் தங்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட எதையும் செய்வதில்லை என்று மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார்.

வெனிஸ் நகரத்தில் இருந்து பல பொருட்களை, பட்டுப்பாதை வழியாக வணிகர்கள் மூலம் காஷ்மீரத்து மக்கள் பெறுகின்றனர் என்ற செய்தியும் மார்க்கோ போலோவுக்கு வியப்பைத் தந்தது. காஷ்மீரிலிருந்து பயணித்ததால் சில நாட்களில் பெருங்கடலை அடையலாம் என்ற தகவலையும் மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார். இந்தப் பகுதியை ஆட்சி செய்யும் அரசர்கள் துறவிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதை மார்க்கோ போலோவின் உறவினர் மாப்பியோ விளக்கினார்.

காஷ்மீரில் வசிக்கும் மக்கள் விலங்குகளைக் கொல்வதில்லை. மாறாக விலங்குகளைத் தங்களின் வழிபாட்டு நிலையில் வைத்து வணங்குகின்றனர். கெஷ்மீர் என்றழைக்கப்படும் இப்பகுதியில் வாழும் மக்கள் அரிசி, பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பகுதி அதிகமான குளிரும் இல்லாமல், அதிகமான வெயிலும் இல்லாமல் இதமான தட்பவெப்பத்தைக் கொண்ட பகுதியாக இருக்கிறது எனப் பல விஷயங்களை மார்கோ போலோ தெரிந்துகொண்டார். வெனிஸிலிருந்து புறப்பட்டு சில ஆண்டுகள் பயணித்து, பல நகரங்களை மார்க்கோ போலோ குழுவினர் கடந்திருந்தனர்.

மார்க்கோ போலோவின் குறிப்புகளைக் கொண்டு காஷ்மீர் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், அவருடைய சில குறிப்புகள் காஷ்மீரின் பதின்மூன்றாம் நூற்றாண்டை ஓரளவு வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிடுவது இங்கு பதியத்தக்கது.

இதற்கடுத்து காஷ்மீர் நகரிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்காமல், வடகிழக்குப் பாதையில் நிகோலோ போலோ குழுவினரின் பயணம் தொடங்கியது.

காஷ்மீரிலிருந்து பன்னிரண்டு நாட்கள் மலைகளுக்கு இடையே பயணித்து, படாசன் நகரை ஆட்சி செய்யும் அரசனின் சகோதரரால் ஆளப்படும் வகான் என்ற நகரை இக்குழுவினர் அடைந்தனர். அந்நகரில் மூன்று நாட்கள் பயணித்து, உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகளைக் கடந்து, கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் பயணம் தொடர்ந்தது. போலோர் நகரைக் கடந்து காஷ்கர் என்னும் பகுதியை நிகோலோ குழுவினர் அடைந்தனர். இந்தப் பாதைகளில் சில நாட்கள் குதிரைகளுக்கு உணவுகூட இல்லாமல் பயணிக்க நேர்ந்தது.

காஷ்கர், சீன ஆட்சிக்குட்பட்ட மேற்குப் பகுதி. ஒரு காலத்தில் காஷ்கர் தனித்த ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது குப்ளாய்கானின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

காஷ்கர் பகுதி மக்கள் பல வகையான வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை வணிகரான போலோவின் தந்தை விளக்கினார். மேலும், காஷ்கர் பகுதியில் முகமது கடவுளை வழிபடும் மக்களும், கிறித்தவக் கடவுளை வழிபடும் மக்களும் வாழ்வதை அறிந்துகொண்டார். இப்படிப் பல அனுபவங்களையும், நிலவியலால் பல தடுமாற்றங்களையும் கடந்து சமர்கண்ட் என்ற பகுதியை அடைந்தபோது நிகோலோ குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர்.

சமர்கண்ட் பகுதியை ஆட்சி புரிந்த சகதை என்பவர், கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய அரசராக ஆட்சி புரிந்தார். சமர்கண்ட் பகுதியின் காவலர்கள் நிகோலோ குழுவினரை சகதை முன் அழைத்துச் சென்றபோது அரசன் மிகவும் மகிழ்ந்துபோனார். கிறிஸ்தவம் செழிப்பாக இருக்கும் நிலப்பகுதியில் இருந்து வந்திருந்த நிகோலோ குழுவினர் மிக மரியாதையாக அங்கு நடத்தப்பட்டார்கள்.

உலகின் சக்தி வாய்ந்த அரசனைச் சந்திக்கப் போகும் கனவில் தனது தந்தையுடன் பயணத்தைத் தொடர்ந்த மார்க்கோ போலோ, வழியில் பல சிரமங்களைக் கடந்து உடல் நலிவுற்று ஒருவழியாக அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில் appeared first on கிழக்கு டுடே.

மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

பட்டுப் பாதையில் பயணத்தைத் தொடங்கிய நிகோலா போலோவும், அவரது உறவினர் மாப்பியோ போலோவும் செங்கீஸ்கானின் பேரன் குப்ளாய்கானைச் சந்தித்தனர்.

மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் நன்மதிப்பைப் பெற்ற நிகோலோ போலோ, அரசனின் தூதராகச் சில செய்திகளைப் போப் தலைவரிடம் கொண்டு செல்லும் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். அதன்படி கிறித்தவ அறிஞர்கள் நூறு பேரையும், இயேசுவின் கல்லறையில் இருக்கும் புனித எண்ணெய்யும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வெனிஸ் நகரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

வெனிஸ் நகரத்தில் மகனையும் உறவுகளையும் சந்தித்து குப்ளாய்கானின் தூது பணிக்காக அடுத்த பயணத்தைத் திட்டமிட்டபோது தனது மகன் மார்க்கோ போலோவும் உடன் வர, பெரும் பயணம் தொடங்கியது. தனது தந்தையுடன் பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ பல நிகழ்வுகளைக் கண்ணுறும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து குப்ளாய்கானின் தூது பணிக்காக எல்லோரும் போப் தலைவரைச் சந்திக்கச் சென்றனர்.

1269-ல் போப் தலைவர் போப் க்ளெமென்ட் மரணமடைய, புதிய போப் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதை அறிந்த மார்க்கோ போலோவின் தந்தை, தனக்கு நெருக்கமான கிறித்தவ ஆலயத்தின் தலைவர் கிரிகோரி எக்ஸ் என்பவரைச் சந்தித்து மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் செய்திகளைக் கூறினார். இதற்குப் பதிலளித்த கிரிகோரி எக்ஸ், கார்டினல்கள் இன்னும் புதிய போப் யாரையும் தெரிவு செய்யவில்லை எனப் பதிலளித்தார்.

1269 முதல் 1971 வரை புதிய போப் தேர்ந்தெடுப்பதில் கடுமையான சிக்கல்களைக் கத்தோலிக்க திருச்சபை சந்தித்தது. கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கிட்டத்தட்ட 33 மாதங்கள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படாத நிலை இந்தத் தேர்தலில்தான் நீடித்து வந்தது.

உலகின் சக்தி வாய்ந்த அரசன் குப்ளாய்கானின் நட்பைக் கைவிட விரும்பாத போலோக்கள், தம் மகன் மார்க்கோ போலோவையும் அழைத்துக் கொண்டு ஏக்ரே என்ற நகரத்தை மீண்டும் அடைந்தனர். அங்கு ஏற்கெனவே சந்தித்த கிரிகோரி எக்ஸ் என்ற திருச்சபைத் தலைவரைச் சந்திக்கக் காத்திருந்தும் அவரைச் சந்திக்க இயலவில்லை.

புதிய போப்பும் தேர்வாகவில்லை என்ற செய்தி கிடைக்க, வேறு வழியில்லாமல் ஆசியாவை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்க இருந்த நேரத்தில் அவர்களை ஒரு தூதர் சந்தித்தார். அவர்களுக்கு ஆச்சரியமூட்டும் ஒரு செய்தி கிடைத்தது.

புதிய போப் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்றும், 2 வருடம் ஒன்பது மாதங்களாக நடைபெற்ற தேர்தலில் நிகோலோவின் நண்பரான கிரிகோரி எக்ஸ்தான் இப்போது போப் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்து அது. இதைக் கேட்டதும் போலோக்கள் மகிழ்ந்தனர்.

போப் தங்கியிருக்கும் அரண்மனைக்குச் சென்று, புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிகோரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின் சில நாட்கள் கழித்து மங்கோலிய அரசன் குப்ளாய்கான் கேட்ட சில விபரங்களைப் புதிய போப்பிடம் தெரிவித்தார். உடனே அவரும் புனித எண்ணெய்யை ஒரு குடுவையில் அளித்தார்.

அதே சமயம் குப்ளாய்கான் கேட்ட நூறு கிறிஸ்தவ அறிஞர்களை உடனடியாக அனுப்ப இயலாது என்றும், சிறிது காலத்திற்குப் பின்னர் அனுப்புவதாகவும் கூறிய கிரிகோரி, இப்போதைக்கு இரண்டு கிறித்தவ அறிஞர்களை மட்டும் போலோக்களுடன் அனுப்புவதாகக் கூறினார். இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு போலோக்களும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களது பயணத்தில் இடையூறு ஏற்பட்டது. போலோக்களுடன் வந்த இரண்டு கிறித்தவ அறிஞர்களும் மங்கோலியர்களைப் பற்றி அறிந்து, அங்கு சென்றால் உயிர் வாழ்வது சிரமம் என அஞ்சினர். இதையடுத்து போலோக்களுக்குத் தெரியாமலேயே தப்பிச் சென்றனர். இது தெரிந்தவுடன் போலோக்கள் திகைத்துவிட்டனர்.

ஆனால் வேறு வழியின்றி மீண்டும் பயணத்தைத் தொடங்கிய நிகோலோ, மார்க்கோ போலோவுக்கு பயணங்களின் நிலைகளையும், மங்கோலிய அரசு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் எடுத்துக்கூறினார்.

புதிய போப் தேர்வு செய்வதற்கு எவ்வாறு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆனதோ அதேபோல மார்க்கோ போலோ குழுவினரின் பயணமும் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளைக் கடந்தது. போலோக்கள் தங்களின் பயணத்தின் வழியில் கடுமையான பாலைவனங்களைக் கடக்க மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

வழியில் குளிர்காலங்களையும், கடும் கோடைக் காலங்களையும், மழைக்காலங்களையும் அவர்கள் சந்தித்தனர். ஆனாலும் மங்கோலிய அரசனைக் காண வேண்டும் என்ற முனைப்பில் அவர்களது பயணத்தைத் தொடர்ந்தது. பல நகரங்களைக் கடந்து வந்த போலோக்கள், வழியில் பாக்தாத் என்ற நகரை அடைந்தனர்.

வழியில் பார்த்த அழகிய நகரங்களில் அனைத்திலும், மிக முக்கிய நகரமாக பாக்தாத்தைக் குறிப்பிடும் மார்க்கோ போலோ, பாக்தாத் நகரத்தின் நடுவில் பாயும் நதி இந்தியப் பெருங்கடலுக்கு அழைத்துச் செல்லும் பயண நதியாகவும் திகழ்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

பாக்தாத் நகரிலிருந்து கடலுக்குப் பயணிக்கச் சுமார் 18 நாட்கள் ஆகின்றன என்றும், இந்தப் பகுதியில் சுவையான பேரிச்சம் பழங்கள் கிடைக்கின்றன என்றும் பதிகிறார்.

பாக்தாத் பற்றி வியப்பாகப் பல செய்திகளைக் கூறினாலும், குறைவான செய்திகளையே மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். பாக்தாத் நகரை அடுத்து வழியில் ஈரானின் தப்ரீஸ் நகரை அடைந்தபோது சிறிய இளைப்பாறுதலை மார்க்கோ போலோ குழுவினர் அடைந்தனர்.

தப்ரீஸ் நகரில் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்து பெர்சியா சென்றனர். அங்கிருந்து மிக அழகியக் குதிரைகள், நிலப்பகுதி வழியாக இந்திய அரசர்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதையும் போலோ பதிவு செய்துள்ளார்.

பெர்சியாவுக்கு அடுத்து அவர்கள் பயணப்பட்ட நகரம் யாஸ்ட். யாஸ்ட் என்பது ஈரானில் உள்ள ஒரு பழமையான நகரம். இது யாஸ்ட் மாகாணத்தின் தலைநகராகத் திகழ்ந்தது.

யாஸ்ட் என்பதற்கு ‘தூய்மையானது’ மற்றும் ‘புனிதமானது’ என்று பொருள். இந்நகரத்தை ‘நல்ல மற்றும் உன்னத நகரம்’ என்று மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். (2017-ம் ஆண்டு யுனெஸ்கோ இந்த நகரத்தை உலகின் மிகப் பாரம்பரிய நகரம் என்று அடையாளப்படுத்தியும் உள்ளது).

யாஸ்ட் நகரம் பாரசீக ஈரானையும் கெர்மானையும் இணைக்கும் நகராக விளங்கியது என்று மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். தப்ரீஸ், யாஸ்ட் நகரங்களில் பல்வேறு அனுபவங்களைப் பெற்ற போலோ குழுவினர், தங்களின் பயணத்தை அதே பாதையில் மீண்டும் ஒரு கோடைக் காலத்தில் தொடர்ந்தனர்.

இத்தாலியிலிருந்து பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ குழுவினர், சில நகரங்களில் இளைப்பாறுதலை ஏற்படுத்திக் கொண்டு ஈரான் நாட்டின் தென் கிழக்கு மூலையில் உள்ள கெர்மான் நகரை அடைந்தபோது கடுமையான கோடைக் காலத்தின் நிலையை இயல்பாகவே உணர்ந்தனர்.

கெர்மான், மலைகளால் சூழப்பட்டு ஆனால் மழையை ஆண்டுக்கணக்கில் காணாத நகராகவே இருந்தது. கெர்மன் நகரத்தின் சரிவுப் பகுதியில் மட்டும் கடும் குளிர் இருந்ததை மார்க்கோ போலோ பதிவு செய்கிறார்.

கெர்மான் நகரில் ஹார்முஸ் என்ற சமவெளிப் பகுதி, நீண்ட பாதைகளைக் கொண்டது. அதில் கொள்ளையர்களின் ஆபத்தும் உள்ளது என்பதை மார்க்கோ போலோ பதிவு செய்து, அந்நகரில் துறைமுகம் ஒன்று உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறார். அந்தத் துறைமுகத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்று தந்தை நிகோலோ மூலம் அறிந்தார்.

தனது தந்தை நிகோலோவுடன் பல ஆண்டு பயணத்தை நிதானமாகக் கடந்த மார்க்கோ போலோ, உலகின் பல அதிசயங்களைக் கண்டார். கெர்மான் நகரில் பல சிறு நகரங்களைக் கண்ணுற்று தமது குழுவுடன் பயணித்த நிகோலோ குழுவினர், அடுத்துச் சில நாட்களுக்கு மிகக் கடுமையான நீர் அறவே இல்லாத ஒரு நிலப்பகுதியைக் கடக்கும் பயணத்தைத் தொடங்கினர்.

வழியில் ஏழாம் நாளில்தான் அந்தக் குழுவினருக்குப் பருக நீர் கிடைத்தது. அந்தப் பாதைகளைக் கடந்து குஹானன் நகரைக் கடந்து பல நிலங்களின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார் மார்க்கோ போலோ.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும் appeared first on கிழக்கு டுடே.

மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

கடலோடு எல்லை முடிந்து விட்டது, மலைகளுக்கு அந்தப் பக்கம் எதுவும் இல்லை, எல்லை தாண்டினால் தொல்லை என்பது போன்ற சிந்தனைகள் பெருகியிருந்த காலகட்டம். பக்கத்து ஊர்களையே பார்த்திடாத மனிதர்கள் அன்று வாழ்ந்து வந்தார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த பார்வையோடு உலகம் முடிவுற்றது என்று எண்ணி, இருக்கும் இடத்திலேயே பிறந்து, மலர்ந்து, வளர்ந்து, தளர்ந்து, முடிந்துபோன வாழ்க்கையை வாழும் மனிதர்களுக்கு மத்தியில், பயணங்களே பாதைகளைத் தீர்மானிக்கின்றன எனும் நோக்கோடு எல்லைக்கோடுகளை மீறி, கடலைத்தாண்டி, மலையைத் தாண்டி மலைக்க வைக்கும் பயணங்களே வரலாறுகளாக எஞ்சி நிற்கின்றன என்று எண்ணிய பயணிகளே வரலாற்றை உருவாக்கியவர்களாகத் திகழ்கிறார்கள்.

பயணங்கள் பரவசத்தையும் வரலாற்றையும் வழிநெடுக வாழ்ந்த மாந்தர்களின் வாழ்வியலையும் கற்றுத்தரும்.  ஒரு பயணி பறவையைக் கண்டு அதிகம் பொறாமை கொள்வான். பறவையோடு பயணத்தை அதிகாலையில் தொடங்குவான். சில நேரங்களில் பறவை உறங்கும் வேளையிலும் பயணிப்பான். வணிக நோக்குப் பயணம் வரலாற்றுப் பயணமாக, திசைகளை அறிவிக்கும் பயணமாக, தேசங்களை அடையாளம் காட்டும் பயணமாகச் சில நேரங்களில் மாறிப்போகும். கடலுக்கு அப்பால், மலைக்கு அப்பால், காட்டிற்கு அப்பால் இருக்கும் தேசங்களையும் தேசாந்திரிகளையும் அவர்களின் வாழ்வியலையும் வழிகளையும் வலிகளையும் பயணிகளால் மட்டுமே கற்க இயலும். நீர் இருக்கும் ஓரத்தில் வாழ்ந்தவர்கள்  மத்தியில் நீரோடும் கடலிலும் ஆறுகளிலும் பயணித்த பயணிகளின் வாழ்க்கை நூற்றாண்டுகளைக் கடந்தும் நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

புவியியலின் புரிபடாத கோடுகளையும்  காடுகளையும் ஏடுகளில் தந்து பயணம் மேற்கொள்பவர்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்தவர்கள் பயணிகளே. உழவுக்காக உழுநிலத்தில் விதை நட்டு, நட்ட விதையை உணவாக்கி, அதை உயிராக்கி உயிர்ப்பதே வாழ்வு என்று எண்ணி வாழ்ந்த மானுடக் கூட்டத்தில், கடல் தாண்டி, மலை தாண்டி தேசமும் மக்களும் உள்ளனர் என்று தேடி ஓடிய தேசாந்திரிகளின் சொல் இன்று தேடப்படும் வரலாறாகத் தேடி ஓட வைக்கின்றது.

இன்று உலகில் பெரும் செல்வாக்கோடு திகழும் பல தேசங்களைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிச்சமாக்கியவர்கள் பயணிகளே. காற்றை, புயலை, மழையை, மலையை, பாலைவனத்தை, சோலைவனத்தைத் தாகத்தோடு சுற்றி, தகிக்கும் வெயிலில், கொட்டும் மழையில், வாட்டும் குளிரில், வருத்தும் பசியில் பயணித்து தன்வயப்படுத்தியவர்களின் வாழ்க்கை நாம் எண்ணவே ஏக்கத்தை வெளிப்படுத்துபவையாகத் திகழ்கின்றன. வண்ணங்களைக் காணாமல் கடலின் அலைகளை மட்டுமே கண்ணுற்றுக் கண்ணுற்றுக் கடல் தாண்டியவர்களின் கதைகள் நாம் வியக்கும் வரலாறுகள் ஆகின்றன.

1254-ம் ஆண்டில் இத்தாலியில் வெனிஸ் நகரத்தில் வணிகக் குடும்பத்தில் நிகோலோ என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் மார்க்கோ போலோ. தனது மகன் பிறப்பதற்குச்  சில மாதங்களுக்கு முன்னர்  வணிகரான நிகோலோ ஒரு நீண்ட பயணத்திற்குத் தயாரானார். தந்தை பயணம் மேற்கொண்ட சில மாதங்களில் மார்க்கோ போலோ பிறந்தார். பிறந்த சில காலங்களில் தனது தாயாரை இழந்து உறவினர்கள் இல்லத்தில் வளர்ந்தார்.  தந்தையின் பயணம் பற்றி ஏதும் அறியாத மார்க்கோ போலோ சிறு சிறு பொம்மைகளுடன் விளையாடி மகிழ்ந்தான். தனது தந்தையைப் பற்றி உறவினர்களும் ஊராரும் கூறும் கதைகளைக் கேட்டு வளர்ந்த மார்க்கோ போலோ தாமும் வணிகராக மாறிட வேண்டும் எனும் உத்வேகத்தில் வளர்ந்தான்.

மார்க்கோ போலோவின் பதினைந்தாவது வயதில், 1269-ல்  நீண்ட பயணம் மேற்கொண்டிருந்த நிகோலோ, நீண்ட அனுபவங்களுடன் பல மலைகளையும் கடல்களையும் தாண்டி வெனிஸ் நகரம் வந்தடைந்தார்.

அங்கு நிகோலோவும், அவரது நெருங்கிய உறவினரான மாப்பியோ போலோவும் மிகச் சிறந்த செல்வாக்கு மிக்க வணிகர்களாகத் திகழ்ந்தனர். பெரும் செல்வங்களைப் பயணத்தின் வழி கொண்டுவந்த இருவரும் வெனிஸ் நகரத்தில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தனர். வெனிஸ் நகர சபையின் செல்வாக்கும் சொல்வாக்கும் உடைய நபராகத் திகழ்ந்த மார்க்கோ போலோவின் தந்தை நிகோலோவை பலரும் சந்தித்தனர். அவர்களிடம் தங்களின் பயண அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தார் நிகோலோ.

வெனிஸ் நகரம் சிறுசிறு தீவுகளால் ஆன நகரமாகவே பல நூற்றாண்டுகளாகத் திகழ்ந்து வந்தது. பக்கத்து ஊர் என்பதே படகுப் பயணத்தால் ஆனது என்பதால் நீரோடும் வாழ்க்கை இந்த ஊர் மக்களின் வாழ்வோடு கலந்திருந்தது.

இரண்டாண்டுகள் வெனிஸ் நகரத்தில் தங்கியிருந்த நிக்கோலோவும் மாப்பியோவும் மீண்டும் ஒரு பயணத்திற்குத் திட்டமிட்டனர். பதினேழு வயதாகியிருந்த மார்க்கோ போலோ தாமும் பயணத்தில் உடன் வருவதாகத் தந்தையிடம் தெரிவிக்க, தந்தை, மகனின் பயண ஆசைக்குத் தடை சொன்னார். தனது உறவினரான மாப்பியோவும் மார்க்கோ போலோவின் பயண ஆசையை நிராகரித்தார்.

தாய் இல்லாமல் உறவினர் இல்லத்தில் வளர்வதைவிட உங்களுடன் நீண்ட பயணம் வருவதையே விரும்புகிறேன் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேறுவழியின்றித் தந்தை நிகோலோ, மகனின் ஆசைக்குச் சம்மதம் தெரிவித்தார்.  சிறுவயதில் தாயை இழந்திருந்த மார்க்கோ போலோ, தந்தையுடன் அணுக்கத்தில் வளரவும் அவரிடம் கற்றுக்கொள்ளவும் விரும்பி தம் உறவினர்களிடம் பயணங்கள், வணிகங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தந்தையைப் போலவே வணிகராக, இந்த வெனிஸ் நகர மாந்தராக, பலரும் வியக்கும் மனிதராக வளரவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பயணத்தின் ஏற்பாடுகளில் பரவசமானார்.

1271ஆம் ஆண்டு. தம்மை வணிகராக மனதில் நிலைநிறுத்திக் கொண்டு தந்தையுடன் கிழக்கு நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கினார். மலைகள், கடல்கள், பாலைவனங்கள், காடுகள், கண்டங்கள் தாண்டிப் பயணம் தொடர்ந்தது.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும்  appeared first on கிழக்கு டுடே.

❌