Normal view

Received before yesterday

திணைகள் கவிதை விருது 2025

16 April 2025 at 08:10

இயற்கைப் படிமங்களில் துலங்கும் மீமெய்மையியலும்; பண்பாட்டு வேர்களில் கருக்கொள்ளும் சர்வதேசமும்…


பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ கவிதை நூலை முன் வைத்து…

– றியாஸ் குரானா

தேர்வு என்பது எப்போதும் சிலவற்றைத் தவிர்ப்பதிலிருந்தே உருவாகிறது. எதை எழுத வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லாம், குறித்த ஒரு நோக்கத்தின் தற்காலிகமான அவசியத்தின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன ஒன்று. ஆனால், திட்டமிட்டு தவிர்ப்பது என்பதுதான் தணிக்கையாகவும் புறமொதுக்கலாகவும் மாறிவிடுகிறது. தணிக்கை என்ற சொல் அநேகமாக தேர்வு என்பதில் பதிங்கியிருக்கும் மென்மையான வடிவம் என்பதில் இரண்டு கருத்தில்லாதபோதும், அதை அதன் மென்மையான அளவில் வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாத அவசியங்களின் அடியாக மிகக் கவனமாக தேர்வுச் செயலில் இறங்குவது இலக்கிய வெளியில் அறம்சார்ந்த ஒன்று. அந்த அறத்தை எப்போதும் தன்வசம் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் என்பதனால், விருதுக் தேர்வுக்காக என் கைவசம் கிடைத்த அனைத்து நூல்களையும் 20 முழுமையான நாட்களுக்கும் மேலாக நுணுக்கமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும், பல கோணங்களில் அணுகியும்தான் திணைகள் விருதுக்கான இறுதித் தேர்வை செய்திருக்கிறேன். அந்த வகையில், எனது இறுதித் தேர்வு என்பது ‘பூவிதழ் உமேஷ்‘ அவர்களின் ‘துரிஞ்சி’ கவிதை நூலாக இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்வின் போது சவாலாக இருந்த பல நூல்கள் இருந்தன. குறிப்பாக ஐந்து நூல்களைச் சொல்ல முடியும். அவற்றைக் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த வாய்பைத் தந்த திணைகள் விருதுக் குழவினருக்கு மிகுந்த நன்றிகளும் அன்பும். கடந்த இரண்டாண்டுகளில் தமிழின் விரிந்த பரப்பிற்குள் வெளிவந்த அநேக கவிதை நூல்களை ஒரே மூச்சில் வாசிக்கக் கிடைத்ததென்பது, சமகால தமிழ்க் கவிதைகளையும் அவற்றின் இயங்குவெளியையும் அறிந்துகொள்ள பெருவாய்ப்பாகவும் இருந்தது.

சமகாலத் தமிழ்க் கவிதையின் பன்முகப்பட்ட நிலப்பரப்பில், பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ (2023) ஒரு குறிப்பிடத்தக்க அதே சமயம் ஒரு சவாலான பிரசன்னத்தை நிகழ்த்துகிறது. இதுவரையிலான தமிழ்க் கவிதையின் சில பிரதான வழக்குகளிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் ஓர் அழகியல் வேட்கையையும், புனைவின் புதிய சாத்தியங்களைத் தேடும் ஒரு முனைப்பையும் இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது. தருமபுரி நிலத்தின் பிரத்தியேக மணத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அகவுலகச் சிடுக்குகளையும் வெறும் யதார்த்தப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளின் ஊடாக அணுகும் உமேஷின் கவிதைகள், தமிழ்க் கவிதை சார்ந்த சில மனநிலைகளை ஊடறுத்து, தனித்துவமான ஒரு திசைவழியை அக்கறைகொள்கின்றன. நவீனத்துவத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதையின் சில இயல்புகளான பதற்றமான அகவயத்தன்மை, கட்டமைப்புச் சிதறல், அசையும் படிமப் பெருக்கம் போன்றவற்றை நோக்கி நகரும் முனைப்பை கவனத்திற்கொள்ளும் அதே வேளையில், அவற்றைத் தனது பிராந்திய அடையாளத்தோடும் புனைவின் அதீத சாத்தியங்களோடும் இணைத்து, சமகாலத் தமிழ்க் கவிதையின் சில அடிப்படைகளைத் தகர்த்து வெளியேற வேண்டுமென்ற ஒரு தீவிரமான அவாவையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. இந்த அவாவின் வெற்றி, அதன் முழுமை, மற்றும் அது எதிர்கொள்ளும் விமர்சனக் கேள்விகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பார்வை, இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.

‘துரிஞ்சி‘ கவிதை நூலின் மைய உத்தி, யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான எல்லையைத் தொடர்ந்து கலைத்துப் போடுவதில் தங்கியிருக்கிறது. இது வெறும் அழகியல் உத்தியாக மட்டுமின்றி இருப்பையும் அறிதலையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கருத்தியல் நிலைப்பாடாகவும் விரிகிறது. தமிழ்க் கவிதையின் சில நீரோட்டங்களில் காணப்படும் நேரடிப் பதிவுமுறை அல்லது சமூக யதார்த்தவாதச் சித்தரிப்பு முறைகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க அளவு விலகி நிற்கிறது. தருமபுரி நிலத்தின் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள் ஆகியவை மீமெய்மைப் பார்வையின் வழியே புதுப்பிக்கப்பட்டு, அந்நியமாக்கப்படுகின்றன. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘ (பக்கம்:13) ‘பாறையின் கண்கள் போல இருக்கும் வெள்ளாட்டுக் குட்டிகள்‘ (பக்கம்:13) இந்தப் பரீட்சயநீக்கம் (Defamiliarization), பழகிப்போன பார்வைகளிலிருந்து வாசகனை விடுவித்து அனுபவத்தின் புதிய பரிமாணங்களைத் திறந்து பயணிக்கச் செய்கிறது. ‘விதைப் புத்தகம் (பக்கம்:19-22) போன்ற கவிதைகள், ‘விதை’ எனும் ஒரு எளிய கருத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தத்துவார்த்தமான, சில சமயங்களில் விளையாட்டுத்தனமான, பல அடுக்குகளில் விரித்தெடுக்கும் விதம், நேரடியான அர்த்த உற்பத்திக்குப் பதிலாக பன்முகப்பட்ட வாசிப்புச் சாத்தியங்களை உருவாக்குகிறது. இந்தப் போக்கு, தமிழ்க் கவிதையில் பொதுவாக நிலவிவரும் சில சித்தரிப்பு முறைகளின் வரம்புகளை மீறிச் செல்ல விழையும் ஒரு முயற்சியாகவேபடுகிறது. இத்தகைய மீறல் முயற்சி என்பது தவிர்க்கவியலாமல் சில அர்த்த உருவாக்குதலின் சிக்கல்களையும் (Hermeneutic challenges) தோற்றுவிக்கும் என்பதும் உண்மையே. படிமங்களின் அடுக்குகளும், புனைவின் தாவல்களும் சில சமயங்களில் தெளிவின்மையை நோக்கி நகர்ந்து வாசகனுக்கும் பிரதியின் உள்ளடக்கத்திற்குமான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். இந்த விமர்சனங்கள் தமிழில் மட்டுமல்ல உலகளவிலும் பல விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பானதும் சிக்கலானதுமான நியாயங்கள் உண்டு என்றபோதும், அர்தத்தைக் கண்டுபிடிப்பதில் பங்களிப்புச் செய்வது என்பது தேவையுடன் கூடிய சவாலான வினையாற்றும் செயல் என்பதை கவிதையை முன்வைத்து வாதிடும் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

இக்கவிதைகளில் வெளிப்படும் கவிதைசொல்லியின் குரலும் ஆழமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் குரலின் அழுத்தம் கிராமிய வேர்களைக் கொண்டிருந்தாலும் வெறும் மண் சார்ந்த பதிவுகளாகச் சுருங்கிவிடாமல், உலகளாவிய இருப்பியல் கேள்விகளுடனும், தத்துவார்த்தமான சிந்தனைகளுடனும் உரையாடுகிறது. இந்தப் பதற்றம் ஏறிய அகவயநிலையும், அதேசமயம் புனைவின் அதீத சாத்தியங்களுக்குள் சஞ்சரிக்கும் கவிதைசொல்லியின் குரலும் தமிழ்க் கவிதைகளில் பொதுவாகக் காணப்படும் நேரடியான சமூக விமர்சனக் குரல்களிலிருந்தோ அல்லது தீவிரமான உணர்ச்சி வெளிப்பாடுகளை முதன்மைப்படுத்தும் (பாடல் மரபின் தொடர்சியை உள்ளெடுத்த நவீன கவிதை) தன்மையிலான குரல்களிலிருந்து வேறுபடுகிறது. ‘நுணா‘ (பக்கம்:14) மற்றும் ‘அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல்‘ (பக்கம்:11-12) போன்ற கவிதைகளில் வெளிப்படும் நினைவுகள்கூட, நேரடியான கடந்தகாலப் பதிவுகளாக அல்லாமல் புனைவின் புதிர்ப்பாதை வழியே வெளிப்படுகின்றன. இந்தக் குரலின் தனித்தன்மை சில சமயங்களில் ஒருவித இருண்மைக்கு வழிவகுக்கலாம் என்றாலும் அதுவே தமிழ்க் கவிதைச் சூழலில் புதிய சாத்தியங்களுக்கான தேடலாகவும் அமைகிறது. இந்தத் தேடலின் சிக்கலான பயணத்தில் உருவாக்க வேண்டிய புனைவுகள் வாசகப் பரீட்சயத்தை எட்டும்போது மென்மைப்படுத்தும் ஒன்றாகவோ அல்லது தவிர்க்க வேண்டிய ஒன்றாகவோ மாற்றமடையலாம். அதற்கான கால எல்லை என்பது தமிழ்க் கவிதை வெளிக்கு அவசியமானது.

கருப்பொருள்களை அணுகும் விதத்திலும் ‘துரிஞ்சி‘ ஒரு விலகலை நிகழ்த்துகிறது. இயற்கை, நிலம், காதல், காமம், நினைவுகள், அரசியல், மரணம் போன்ற பொதுவான கருப்பொருள்களை இத்தொகுப்பு கையாண்டாலும், அவற்றை அணுகும் பார்வை மரபானதல்ல. இயற்கை, வெறும் அழகியல் பின்புலமாகவோ, மனித உணர்வுகளின் உவமையாகவோ பயன்படுத்தப்படாமல் அதுவே ஒரு விசித்திரமான, தன்னுணர்வு கொண்ட பாத்திரமாகப் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘, ‘பாறைகளின் கண்கள்‘ காதல் மற்றும் காமம் சார்ந்த சித்தரிப்புகள் ‘கொள்ளுக் கொடியில் ஆடும் காமம்‘ (பக்கம்:15) ‘அழிஞ்சி பழம்‘ (பக்கம்:81-82) ‘இரண்டாவது நாளில் சந்தித்தல்‘ (பக்கம்:78) நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தவிர்த்து வினோதமான படிமங்கள், விளையாட்டுத்தனம், சில சமயங்களில் ஒருவித அந்நியமாதல் ஆகியவற்றினூடாக வெளிப்படுகின்றன.

இது, காமம் குறித்த தமிழ் மனத்தின் சில தயக்கங்களையும் மரபான சித்தரிப்பு முறைகளையும் மீற விழையும் முயற்சியாகத் மேலோட்டமாகத் தோன்றுகிறது. ஆயினும், இந்த மீமெய்மை அடர்த்தி என்பது சில சமயங்களில் உணர்ச்சிகளின் ஆழத்தைத் தட்டையாக்கிவிடுகிறதா அல்லது வெறும் அழகியல் சாகசமாக நின்றுவிடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. சமூக யதார்த்தங்கள் குறிப்பாக வறுமை, ஒடுக்குமுறை, இடப்பெயர்வு போன்றவை நேரடிப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மைப் படிமங்களின் ஊடாகவே சித்தரிக்கப்படுகின்றன. ‘உங்களுக்கு ஏன் உப்புக் கரிப்பதில்லை‘ (பக்கம்:67-68) ‘தடினிக்காய் உனக்கல்‘ (பக்கம்:35-36). இந்த மறைமுகத்தன்மை அரசியல் கவிதைகள் மீதான தமிழ்ச் சூழலின் சில எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிச் செல்கிறது. ‘மீனவன்‘ (பக்கம்:45-46) ‘எங்கள் பிரதமர் மிக நல்லவர்‘ (பக்கம்:76) போன்ற கவிதைகளில் உள்ள அரசியல் விமர்சனம், குறியீடுகளின் வழியே செயல்படுவதால் அது நேரடியான தாக்கத்தை இழந்துவிட்டது என்று சிலருக்கு நீர்த்துப்போனதாகவும் தோன்றலாம். இது அரசியல் கவிதையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் குறித்த ஒரு புதிய விவாதத்தைத் தூண்டக்கூடியதாக தமிழச் சூழலில் இருக்க முடியுமே தவிர, உலகளவில் அரசியல் கவிதைகளோடு நெருக்கமுள்ளவர்களுக்கு அப்படியிருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

மொழியும் படிமங்களும் இத்தொகுப்பின் தனித்துவத்திற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. வட்டார வழக்குகளை இயல்பாகப் புழங்கும்படி பாவிக்கும் அதே வேளையில் தத்துவார்த்தமான, சில சமயங்களில் அறிவார்ந்த ஒரு மொழியையும் கவிதைகள் பயன்படுத்துகின்றன. இந்த மொழி, பெரும்பாலும் உரைநடைக்கு நெருக்கமாக அதீத அலங்காரங்களைத் தவிர்த்து, அசையும் படிமங்களின் வழியாகவே தனது கவித்துவத்தை அடைகிறது. இங்கு பயன்படுத்தப்படும் அசையும் படிமங்கள், வெறுமனே காட்சிகளை விவரிப்பவையாக அல்லாமல் அறிந்துகொள்ளுதலின், அர்த்தம் உருவாக்குதலின் சவால்களையும், உணர்வுநிலைகளையும் கடத்துபவையாக பல சமயங்களில் பொருள்கோடல் சிக்கல்களைக் கொண்டவையாகவும் உள்ளன. தமிழ் மரபின் செழுமையான படிமவியல் வழக்கத்திலிருந்து (சங்க இலக்கியம் தொடங்கி) உமேஷின் படிமங்கள் வேறுபடும் இடம் எதுவென்றால், அவை பெரும்பாலும் தர்க்க ஒழுங்கைக் கலைத்துப் போடும் மீமெய்ம்மைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இது கடந்தகால தமிழ் நவீன கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிவோம். அதே நேரம் இவற்றை கவிதைகள் முழுமையிலும் பயன்படுத்திய ஈழத்துக் கவிஞர் சோலைக்கிளியும் இருக்கிறார். ஆயினும், உமேஷ், தனது கவிதையை நகர்த்திச் செல்லும் வசன நடையின் எதிர்பாராத தருணங்களில் இந்த அசையும் படிமங்களை பாவிப்பதோடு, அது தேவையான இடமாகவும் கவிதையின் இயங்கும் போக்கில் அமைந்துவிடுவதுதான் குறிப்பிட்டுக் காட்டவேண்டியது. இந்தக் கவிதை சொல்லும் முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது தீர்க்கமான தனித்தன்மையை முழுமையாகக் கண்டடைந்துவிடலாம் என்பது எனது கணிப்பீடு. இந்த அணுகுமுறை, சங்கப் படிமங்களின் நேரடித்தன்மை இயற்கை சார்ந்த இயல்புநிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறுபடக்கூடியது. கவிதைகள் நகர்ந்து செலலும்போது ஏற்படும் உரைநடைத் தாளம் என்பது இடைக்கிடை மரபின் தொடர்ச்சியை சில நேரங்களில் மனதில் ஏதாவதொரு மூலையில் தட்டி எழுப்பிவிடுகிறது.

சமகாலத் தமிழ்க் கவிதைகளின் அடிப்படைகளை தகர்த்து வெளியேறும் ஆவல் இக்கவிதைகளில் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்ற கேள்வி முக்கியமானது. ‘துரிஞ்சி‘ ஒரு முழுமையான உடைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்றால் இல்லை. ஆனால், ஏற்கெனவே இருக்கும் போக்குகளின் (பின்-நவீனத்துவச் சிதறல், அகவய நோக்கு) ஒரு தீவிரமான நீட்சியாக, ஒரு புதிய அழகியல் சேர்க்கையாக அமைகிறதா என்றால் விவாதத்திற்கு இடமின்றி அதை ஏற்க முடிகிறது. மீமெய்ம்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளைத் தமிழ் நிலத்தின் பிரத்யேக அனுபவங்களுடன் இணைக்கும் முயற்சியில் குறிப்பிடும் அளவு இவரது கவிதைகள் முன்னேறியுள்ளன என்பதுதான் உண்மை. இது, தமிழ்க் கவிதையை உலகளாவிய கவிதைப் பிரதிகளுடன் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படலாம். இந்த பண்பாட்டுக் கலப்பு தமிழ்க் கவிதையின் தனித்துவத்தையும், உலகளாவியத் தன்மையையும் ஒருங்கே சாத்தியமாக்கும் ஒரு வழியாக அமைகிறது. ஆயினும், இந்த அடிப்படைகளைத் தானே தகர்க்கும் படியாக, சில சமயங்களில் கவிதையை வரிவரியாக நகர்திச் செல்லும் போது கவிதைச் சம்பவங்களின் சீரற்ற தன்மை, சில படிமங்களின் செயற்கைத்தன்மை அல்லது மீமெய்ம்மை உத்தியின் பாணி மிகைப்பு போன்ற விமர்சனங்களுக்கும் இடமளிக்கிறது. எந்தவொரு தீவிரமான கவிதை உருவாக்க முயற்சியும் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது இயல்பே. இந்தப் புதிய திசைவழிக்கான தேடலில், சில கவிதைகள் அடையும் வெற்றியை மற்றவை அடையாமல் போகலாம்.

முடிவாக, பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘, சமகாலத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு அசாதாரணமான, தவிர்க்கமுடியாத தலையீட்டை நிகழ்த்த முயல்கிறது. அதன் மீமெய்மை அழகியல், மரபான தமிழ்க் கவிதை மனநிலையிலிருந்து விலகிச் செல்ல எத்தனிக்கும் பிரக்ஞை, நிலம் சார்ந்த அனுபவங்களை உலகளாவியப் புனைவு உத்திகளுடன் இணைக்கும் முயற்சி மற்றும் அது எழுப்பும் எண்ணற்ற அர்த்த உருவாக்கச் சாத்தியங்கள் ஆகியவை இத்தொகுப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது முன்வைக்கும் விமர்சனக் கேள்விகளும் அதன் கலைத்துவச் சவால்களும்கூட அதன் உயிர்ப்பிற்கும், சமகாலத் தமிழ்க் கவிதைச் சூழலில் அது நிகழ்த்தும் உரையாடலின் முக்கியத்துவத்திற்குமே சான்றுகளாக நிற்கின்றன. அடிப்படைகளைத் தகர்க்கும் அதன் ஆவல் முழுமையாக நிறைவேறியதா இல்லையா என்பதைவிட, அத்தகையதொரு தீவிரமான கலைவேட்கையுடன் அது பயணிப்பதே அதன் தனித்துவமாகிறது. எனவே, ‘துரிஞ்சி‘, அதன் அனைத்துச் சிக்கல்களோடும் வெற்றிகளோடும் சமகாலத் தமிழ்க் கவிதையின் போக்கைக் கூர்ந்து அவதானிப்பவர்களால் அவசியம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய, ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு செறிவான, சவால்நிறைந்த கவிதை நூலாக நம்முன் நிற்கிறது. இது, தமிழ்க் கவிதை தேங்கிவிடாமல் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டிருப்பதன் அடையாளம்.

The post திணைகள் கவிதை விருது 2025 first appeared on திணைகள்.

மதார் கவிதைகள்

30 March 2025 at 06:26

1.
கூவிக்கொண்டும்
அகவிக்கொண்டும்
உறுமிக்கொண்டும்
கீச்சிட்டும்
குரைத்தும்
இருந்தோம்
மொழிக்கு முன்பு
மொழி வந்தது
நாசமாய்ப் போனது
பேசிக்கொண்டு மட்டும்
இருக்கிறோம்

2
காலை
மாலையைப் போல
நடிக்கிறது

மாலையால்
இரவு போல்
நடிக்க முடிகிறது

இரவு நடிப்பதில்லை

அது அதன்
இயல்பில்

அல்லது
இரவின் வேறு வேறு வேஷங்களா பொழுதுகள்

அல்லாது
இரவின் கனவுகளா பொழுதுகள்

கனவு கலைந்து விழிப்பது
இரவாய் அல்லாது
பகலாகவே அமைவது
எவ்வளவு பெரிய
ஏமாற்று வேலை

3
நலமுடன் வரலாறு

வான் பார்த்தேன்

பறந்துகொண்டிருந்த
பறவைக் கூட்டத்துக்கு
பாரதப் பெயர்களிட்டேன்

சகுனி, குந்தி, கர்ணன்,அர்ஜுனன்…

பிறகு
குகன், ராமன், சீதை…

கண்ணகி, கோவலன்
மும்தாஜ், ஷாஜஹான்
கட்டபொம்மு, தேவராயர்
அம்பேத்கர், காரன்வாலிஸ்
ஒசாமா, ஒபாமா
காந்தி, ராஜராஜசோழன்

கணக்கு வழக்கின்றி
கலந்துவிட்ட கூட்டத்தில்
அம்பேத்கரும் ராமரும்
காந்தியும் ஹிட்லரும்
ஒசாமாவும் ராஜராஜனும்
ஒன்றாய்ப் பறக்கிறார்கள்

குழல் துப்பாக்கியை
எடுத்துக் குறிபார்த்தேன்

வைத்த குறி
பிசகாது
காலத்தைச் சுட்டு வீழ்த்தினேன்

4
இரண்டு பக்கமும்
கர்ஜிக்கும் சிங்கங்களுடன்
நினைவஞ்சலி போஸ்டர்

இறந்து இரண்டே மாதம்தான் ஆகிறது

வயது இருபது இருபத்தைந்து இருக்கலாம்

கொலையாக இருக்கலாம்

நெஞ்சு நிமிர்த்தி
மீசை முறுக்கி
முறைக்குமவனைப் பார்க்க
சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது

பாவி
அவன் கெட்டது போதாதென்று
சிங்கங்களையும்
சிரிப்பாக்கிவிட்டான்

5
எதிரொலிக்கிறது

மெளனத்தை
மனனம் செய்து
ஒப்பித்தபோது
மறந்துபோய்
பேசிவிட்ட வார்த்தை

-மதார்

The post மதார் கவிதைகள் first appeared on திணைகள்.

குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்

30 March 2025 at 06:26

1.

கண்டடைய ஏதுமில்லை
தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள்
பாடல் மெருகேற மெருகேற
கீழ்வானம் சிவக்கிறது
வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள்.

2.

இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு
பிரிந்தேன் சுமையை
இந்தப் புலர் பொழுதோ
சுமையோடே விடிகிறது
செல்லும் இடமெங்கும்
சுமை தாளவில்லை
சற்று இளைப்பாறலாம் எனில்
ஏந்திக்கொள்ள யாருமில்லை
தனிமையின் பாடலை
யார் கேட்பர்.
காற்றோ கேட்காமலே
அழைத்து வருகிறது மழையை.
மழையில் கரைக்கின்றன
சுமைகள்.

3.

ஊடலுடன்
உறங்குகிறாள் மகள்
புரண்டு புரண்டு படுக்கிறேன்
உறங்கும் மகளின் முகமோ
பூரண நிலவாய்ப் பொழிகிறது
சலனமற்ற முகத்தைப் பார்த்தபடியே
காலம் நகர்கிறது.
உறக்கத்தில்
நகைக்கிறாள் மகள்
கனவின் ஊடே
தொலைத்துவிட்டாள் போலும்
ஊடலை.

4.

ராஜநடை நடக்கிறது மைனா
விளிம்பு நிலையில் இருந்து
மத்திம சாலை வரை
செல்வதும் திரும்பவுதுமாய் இருக்கிறது
பறத்தலை ஒத்தி வைத்துவிட்டு
நடத்தல்
இன்னொரு பரிமாணம்
எதிலும் இழப்பில்லை
புதிய புதிய திறவுகள்
புதிய புதிய விடியல்கள்.

5.

கதவிடுக்கிலிருந்து
வெளியேறி
அங்குமிங்கும் ஓடிய கரப்பான்
மல்லாந்து கிடக்கிறது.
கரப்பான் கிடக்க
காலம் ஓடுகிறது.
ஓடுதல் மாற மாற
கரப்பானைச் சுமந்தபடி
கூட்டமாய் ஓடுகின்றன
எறும்புகள்.

🐾

6.

நிதர்சனமாக
அம்மாவின் புகைப்படம்
மேலிருந்து கத்துகிறது
வெள்ளைப் பல்லி.
வழக்கமான நாள்
இல்லையென்கிறது
அதன் குரல்
அம்மாவின் கண்களை
காணக் காண
அதில் தான் எத்தனை காருண்யம்
அந்தக் கண்களைப் போல்
இதுவரை சந்தித்ததில்லை
இந்த வெள்ளைப் பல்லியின்
கண்களோ
நிலைக்குத்தி நிற்கிறது
நேற்று
நடுநிசியின் விழிப்பில்
கொசு வலையில்
ஊர்ந்து சென்ற அதே கண்கள்
சட்டென நினைவுகளைக் கழற்றிவிடப் பழகிவிட்டது இக்காலம்.
எப்படி மறந்தேன் நேற்றை
நதிக்கரையில் நின்றபடி
உன் சாம்பலைத் தேடிய பொழுதுகள் எங்கு உள்ளன
உன் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்து விட்டு
வெள்ளைப் பல்லியைத் தேடுகிறேன்.
எங்கேயோ ஒளிந்து கொண்ட
கௌலியின் குரல்
காற்றோடு வருகிறது.

🐾

7.

திண்மப் பொருள்களுக்கும் உயிர்களுக்கும்
என்னவொரு பிணைப்பு.
திண்மப் பொருள்கள் எப்படி இலகுவாய்
உயிருக்குள் கலந்து விடுகின்றன
அப்பாவின் கைக்கடிகாரம்
அம்மாவின் பொட்டு
தமக்கையின் ரிப்பன்
தம்பியின் கையெழுத்து
காதலியின் ஒற்றை ரோசா
நண்பனின் சட்டையென
எப்படி அவைகள்
உயிர்ப்பூத்துக்
கிளம்பி விடுகின்றன.
ஏதோவொரு பயணத்தில்
பேருந்தின்
பெயர்ப்பலகைக்கூட
நெருங்கிய உயிரின்
பிம்பமாய் எழுகிறது.
ஒரு நிமிடம்
நண்பனை என்னிடம் அழைத்து வர
அந்த ஊர்ப்பெயர் மட்டும் போதும்.
சில நேரம்
திண்மப் பொருட்கள்
மௌனத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றன.
மகள்
தூரத்திலிருந்து
ஏதோ சைகை செய்கிறாள்
அவள்
ஒரு பக்கக் காதின் சாதனமோ
என்னை முறைக்கிறது.

🐾

8.

கைக்குழந்தையோடு பிச்சை யாசிக்கும் 

சிறுமி வாகன நெரிசலுக்கிடையே 

நுழைந்து நுழைந்து மீள்கிறாள்.
சிக்னல் சிவப்பில்
ஒளிர்ந்ததும்
உள் நுழைகிறாள்
சிக்னல் பச்சையில்
ஒளிர்ந்ததும்
வெளியேறுகிறாள்
இரு வண்ணங்களுக்கிடையே சில சில்லறைகளைப் பெறுகிறாள்.
இடையே
சில முகங்கள் கைக்குழந்தையைப் பார்க்கின்றன
சில முகங்கள்
இவளைப் பார்க்கின்றன
சில பார்வைகளின் உக்கிரம் தாள முடியாது
அவளோ
சூரியனைப் பார்க்கிறாள்.
சூரியனும் முழுவீச்சில்
அவளைப் பார்க்கிறான்
அவள் விழிகளில்
சிவப்பும் பச்சையும்
மாறி மாறி விழுந்தபடியே இருக்கின்றன.
திடீரென
அவள் உடலும்
சிவப்புக்கான சிக்னல் தந்துவிட்டது.
சற்றே உணர்ந்தவள்
நெரிசலை விட்டு வெளியேற வழியின்றி பூமியை ஓங்கி உதைக்கிறாள்.
🐾

9.

உடல் ஒட்டினார் போல்
இரண்டு பனை மரங்கள்
நிற்பது அபூர்வம்.
சிறுவயதில்
பனை அருகில்
முனி இருப்பதாக உலவிய கதையை நம்பியதுண்டு.
பருவ வயதில் பழகிவிட்டது
பனையோடு தான் எங்கள் விளையாட்டு
கொழுத்தும் வெயிலில்
பனையடியில் தான் நிழலுக்காய் ஒதுங்குவோம்
காதலுக்குள் விழுந்த
மாரி அக்காவை
வெளியூர்க்காரனுடன் அங்குதான் கண்டிருக்கிறோம்.
பின்னர் அவனோடு சென்று விட்டதாய்
ஊர்க்கதை உண்டு
நாலு கழுதை வயதானபின் வெளியூர் வேலைக்குச் சென்று விட்டு
திரும்பிய ஒர் நாள்
மாலைக் கருக்கலில்
மாரி அக்காவைத்
தலைவிரிக் கோலமாய் பனை அருகில் கண்டேன்.
அவள்
முனிபோல் இருந்தாள்.

🐾
10.

மியாவ்..மியாவ்…
எனக் கத்திவிட்டு
பூனையாகிவிட்டேன்
என்கிறாள் மகள்
அவள் தோழியோ
கீ ..கீ…என்கிறாள்
அவளும் கிளியாகிவிட்டாள்
பவுடரை முகமெல்லாம்
அப்பிவிட்டு பேயாகிவிட்டேன்
என்கிறாள் ஒருத்தி
காணாத பேயைக்கண்டு
நானும் கிலி கொள்கிறேன்.
பதட்டம் தனிவதற்குள்
சிங்கத்தின் கர்ஜனை
யானையின் அம்பாரி
வண்ண மர எழுச்சியென
அதகளமாகிறது வீடு
இடையே
கிளியாய் ,பூனையாய் மாற நானும் விழைகிறேன்
குரலோ
என் சொல் கேள மறுக்கிறது
அயர்வில்
விலங்குகளோடு விலங்காய் கண் மூட
சப்தத்தை
விழுங்கிய வீட்டினுள்
கானகத்தின் அமைதி

  • குமரேசன் கிருஷ்ணன்

The post குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள் first appeared on திணைகள்.

திருச்செந்தாழை கவிதைகள்

30 March 2025 at 06:22

”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை”
சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான்
புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே
தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை
சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே
கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர்
சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன
‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு
முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற
அத்தர் மணக்கும் விரலின்
வாஞ்சையைப் புறக்கணித்து
சீனன் இன்னமும் கத்துகிறான்
அல்லாப்பிச்சை மந்திரிப்பார்
நாள்பட்ட வலியோடு வருபவர்களின்
நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை
மனதின் மெக்காவிலிருந்து
அவர் அள்ளிப் பூசும்பொழுது
சற்றே வலிமறந்த நோயுற்ற முகத்தின்
மஞ்சள் பற்கள் சிரிக்கின்றன
சீனன் கத்துகிறான்
“காட்டுப்பூனை… காட்டுப்பூனை…”
அல்லாப்பிச்சைக்குத் தெரியும்
பொய்க்கும் ஒரு உடல் உண்டு
கூசுகின்ற மனம் உண்டு .
தனக்குக் கீழே இருக்கும்
பூனைக் கூண்டின் கம்பிவரிசையை
பாதங்களால் மெல்லத் தட்டுகிறார்
இது ரமலான் மாதம்
சொர்க்கத்தின் கதவுகளை
ஏக இறைவன் திறந்தருளும் மாதம்
பரிதவித்து ஒடுங்கிய பூனையின் கண்களை
கால் விரல் நகங்கள்
“பரவாயில்லை, விடு” எனப் பார்க்கின்றன
தன்முன்னே குன்று குன்றாக
வைக்கப்பட்டிருக்கும் சந்தனப் பாளங்களை
அவரது உள்ளங்கை பிசைந்து
சிறுசிறு வில்லைகளாக ஆக்குகின்றது
கடைச்சிறுவன் கோழித்தீவன கம்பு தானியத்தை
மாவாக அரைத்து
மூட்டை கட்டி வருகிறான்
நிறமூட்டிகளும், மணமூட்டிகளும் தெளிக்கப்பட்ட
கம்பு மாவு
மணக்கின்ற சந்தனமாக வெளியே வருகிறது
தூரத்தில் சஹர் வேளைக்கான
பாங்கொலி எழுகிறது
சந்தனமெனப் பெயரிடப்பட்ட
வழிகின்ற நீருடன் இருக்கின்ற
மஞ்சள் பாளத்தை
மலமென ஒருமுறை கண்கள் பார்க்கின்றன
பன்னெடும் ஆண்டுகளாக
கண்கள் உணருகின்ற
அந்த ஒரு கண காட்சிப் பிறழ்வை
இன்றுவரை சரிசெய்யவியலாத
அல்லாப்பிச்சை பெருமூச்சுடன் குனிந்துகொள்கிறார்
வறண்டு இறுகிவிட்ட
தாவரத்தின் வேரைப்போன்ற
அந்த நோன்பிருக்க இயலாதவனின்
பாதத்தை
கம்பிக்கூண்டுக்குள்ளிருந்து
ஒரு ஈர நாவு மென்மையாகத் தடவுகிறது.

பா. திருச்செந்தாழை

The post திருச்செந்தாழை கவிதைகள் first appeared on திணைகள்.

பாத்தேறலுக்குப் புகழஞ்சலி

30 March 2025 at 04:06

சிங்கப்பூரின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், தீவிர தூயதமிழ்ப் பற்றாளர், 11 நூல்களின் ஆசிரியர், IceCream என்பதற்குப் பனிக்கூழ் என்ற சொல்லை வழங்கியவருமான பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில் சென்ற வியாழன் இரவு 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்கள். அன்னாரது இறுதிச் சடங்கு  மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்றது.

மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.க / MIC) கட்சியின் தேசியத் துணைத்தலைவரும், தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான டத்தோ மு.சரவணன் அவர்கள், பாத்தேறல் அவர்களின் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் சனிக்கிழமை 28 மார்ச் நண்பகல் சிங்கப்பூர் வந்திருந்தார்.  

பாசிர் ரிஸ்ஸில் இருக்கும் பாத்தேறல் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரின் நல்லுடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர் மகள் கண்ணகி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன், கவிமாலை முன்னாள் தலைவர் இறை.மதியழகன் ஆகியோர் டத்தோ சரவணன் அவர்களுடன் கூடவே இருந்தனர். சுமார் ஒருமணி நேரம் அங்கு அமர்ந்து பாத்தேறல் ஐயாவைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.   கவிமாலைக் கவிஞர்கள் கவிஞர் கி.கோவிந்தராசு , கவிஞர் கருணாகரசு, கவிஞர் கோ. இளங்கோ, கவிஞர் பனசை நடராசன் போன்ற பல கவிஞர்களும் இல்லத்துக்குச் சென்று பாவலருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சிங்கப்பூர் கவிஞர் மறைவுக்கு டத்தோ சரவணன் அவர்கள் நேரில் வருகை புரிந்து ஆறுதல் கூறிச் சென்றது, சிங்கப்பூர் மலேசியத் தமிழ் நல்லுறவுக்கு நல்லுதாரணமாகவும், டத்தோ அவர்கள் நெஞ்சில் தமிழ் மீதும் தமிழ்ப் படைப்பாளர்கள் மீதும் உள்ள உண்மையான மதிப்பையும் அக்கறையையும் உணர்த்தும் விதமாகவும் அமைந்தது.

அவருக்கு  ‘பாத்தேறல்’ என்ற பட்டத்தை 1989 ஆம் ஆண்டு வழங்கியவர் ம.இ.க முன்னாள் தேசியத் தலைவரும் சரவணன் அவர்களின் அரசியல் வழிகாட்டியுமான, முன்னாள் மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சர் அமரர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தது மேலும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

மாலை 6:45 மணிக்கு மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன். கொள்கை ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் திரு அருண்.மகிழ்நன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழ்முரசு இணை ஆசிரியர் கனகலதா, எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் தமிழாசிரியர் திரு முத்துமாணிக்கம், மக்கள் கவிஞர் மன்றத்தின் சார்பாக கவிஞர் இராமசாமி, முனைவர் தேன்மொழி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள். கவிஞர் புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் நிகழ்வை வழிநடத்தி இரங்கல் உரையாற்றினார்கள்.

பாவலரின் மகள் கண்ணகி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தி தந்தையும் நினைவுகளை வருத்தத்தோடு பதிவு செய்து, ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

தலைப்பிள்ளையான அவர் ஒரு வயதில் இருந்தபோது, தந்தையார் தனக்காக எழுதிய கவிதையை கண்ணீர் மல்கப் பாடினார். அவருடன் ஐயாவின் மகள்கள் தமிழ்க்கோதை, கலைச்செல்வி, மகன் மணிமாறச் செல்வன் ஆகியோர் இணைந்து பாடியது அனைவரையும் நெகிழச்செய்ததோடு ஒரு தந்தைக்குத் தக்க நினைவஞ்சலியாகவும் அமைந்தது.

அதன் பின் சடங்கு நிகழ்வுக்குப் பின்னர் அன்னாரது உடல் எரியூட்டப் பட்டது.

கவிமாலையில் மரபுக் கவிதை எழுதுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தனித்தமிழில் எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரொக்கத் தொகையைப் பரிசாக வழங்கியவர்.  கவிமாலையின் 298ஆவது மார்ச் மாதச் சந்திப்பு 29.03.2025 மாலை 6 மணிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.  அதில் பாத்தேறலுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பாத்தேறல் பற்றி கவிமாலை வெளியீடு செய்த வரலாறும் வரிகளும் குறும்படம் திரையிடப்பட்டது.  கவிமாலைக் கவிஞர்கள் பாத்தேறலின் கவிதைகளை வாசித்து அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது அவருக்கான புகழஞ்சலியாக அமைந்தது.   

தமிழுக்கான சிந்தனை உழைப்பை வழங்கிய சிங்கப்பூர்ப் பாவலர்கள் வரிசையில் அவருக்கு நீங்கா இடம் உண்டு. பாத்தேறல் அவர்களின் படைப்புகள் அவரது புகழ் வாழ்வை உறுதிசெய்யும். வாழ்க பாத்தேறலின் புகழ்!
.
– கவிஞர் இறை மதியழகன்

30.03.2025.

The post பாத்தேறலுக்குப் புகழஞ்சலி first appeared on திணைகள்.

கார்த்திக் திலகன் கவிதைகள்

8 February 2025 at 14:28

1)
குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து
கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன்
அழகழகாய்த் தெறிக்கின்றன
சொற்கள்

2)
பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது
மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன
வானம் லேசாகத் தூரலிட்டு
அழத் தொடங்கியது
ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன்
சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து
நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள்
சந்தோஷங்களுக்கு
இப்படி ஓர் ஆசையா

3)
அ)
புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம்
ஒரே மாதிரி வரவேற்கிறது
எனக்குத் தெரிந்து நிச்சயமாக
அந்த மரம் புத்தனாகிவிட்டது

ஆ)
ஒரு பட்டாம்பூச்சி
என் வீட்டு வாயில் படிக்கு
உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருக்கிறது
நான் வெகு நேரமாக வாசலிலேயே காத்திருக்கிறேன்

இ)
பறவையின் வயிற்றில் அமர்ந்து
விதைகளாகப் பறந்து செல்கிறது மரத்தின் கனவு

ஈ)
உறவுக்கு முன்பான கணங்கள்
உறவுறும் கணத்தை விட மகத்தானவை

உ) இந்தத் தோட்டத்து மலர்கள் ஒவ்வொன்றும்
தண்னொளி வீசி தனிமையில் மூழ்கி இருக்கிறது
பூப்பதை விட ஒரு நற்செயலை செடியால் செய்ய முடியாது

4) வெறிச்சோடி கிடக்கும்
மதியத்தின் வீதியில்
சொர்க்கத்தில் இருந்து தப்பி வந்த
பொன்னிற நிழல்கள் நடந்து செல்கின்றன
அதன் பாத சுவடுகளை உருகி உருகி
காதலிக்கிறது மஞ்சள் வெயில்

5)
நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது
திடீரென நான் காணாமல் ஆகிவிட்டேன்
வெட்டவெளியில் இருந்து ஓர் உருவத்தை
அழிப்பான் கொண்டு அழிக்க முடியும்
என்பதை அவரால் நம்ப முடியவில்லை
மாய உலகத்தின் புதிர் பாதையில்
என்னை உடைத்து உடைத்து
வழியெல்லாம் போட்டுக் கொண்டே செல்கிறேன்
காத்திரு நண்பனே
சரியாக வழி கண்டுபிடித்து
உன்னிடம்
திரும்ப வந்து விடுகிறேன்

6)
புல் நுனி ஒரு பனித்துளியின்
மதிப்பை உயர்த்திப் பிடிப்பதைப்போல
நானுன்னை
உயர்த்திப் பிடிக்கிறேன்
சிந்தி விடாதே கண்ணே
வெறும் நீர் தீற்றலாக

7)
நான் விழித்திருக்கும் போது
கனவு தோன்றுகிறது உறங்கும்போது
நினைவு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது
நான் கனவிழந்து
மருத்துவ மனையில்
அனுமதிக்கப் பட்டிருந்தேன்
என்னைப் பரிசோதித்து
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்
மனநிலையிலும்
நல்ல முன்னேற்றம் இருக்கிறது விரைவில் இவருக்கு
கனவு திரும்பி விடும் என்று

8)
அவ்வளவு கோபமாகச் சொல்ல
வேண்டிய விஷயத்தை
இவ்வளவு செல்லமாக உன்னால்
எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்கிறாய்
ஒன்று உனக்குச் சொல்லட்டுமா
என் மனக்காட்டின்
சொல் விலங்குகள் அத்தனையும்
அவ்வளவு இளங்குட்டிகள்
அவற்றை அப்படியெல்லாம்
அழுத்தி உச்சரிக்க முடியாது

9)
என் உயிர்ப்பும் துடிப்பும் கண்டு
ஒரு படகுக்குரிய மரியாதையை
நீர் எனக்கு வழங்குகிறது
நான் மிதக்கிறேன்
நீரில் ஏற்றப்பட்ட
திருவிளக்கை நோக்கி
கிழக்கு முகமாக நீந்துகிறேன்
எதையும் நனைக்கும் நீரால்
எனக்குள் மிதக்கும் எண்ணங்களை
நனைக்க முடியவில்லை

10)
இளம் காலை நேரம் படுக்கையை
விட்டு எழுந்து அமர்கிறாள்
பௌர்னிகா
அருகில்
ஆடை கலைந்து
குழந்தையைப் போல
படுத்திருக்கும்
கணவனைப் பார்த்து
புன்னகைத்தாள்
அவன் மார்பில்
ஒட்டி இருந்த
ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில்
வைத்துக் கொள்கிறாள்.

 

The post கார்த்திக் திலகன் கவிதைகள் first appeared on திணைகள்.

கதிர்பாரதி கவிதைகள்

8 February 2025 at 14:28
சலோமியின் மீன் பருவக் கண்கள்

1
யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள்
சலோமி.
யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும்
‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக்
கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி.

இல்லையில்லை
யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி.

அவையெல்லாம் கிடையாது,
சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில்
இருவருக்கு அம்மா.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு
நேரிளையத் தங்கையவள்.
ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.

இவையெதுவும் உண்மையல்ல
கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த
மருத்துவத் தாதி சலோமி.
ஆண் வாசம் அறியாமால் பிள்ளையீன்ற கன்னி மரிக்கு
இரண்டாம் சாட்சியானவள் சலோமி.
யேசுவை முதன்முதலில் கிறிஸ்துராஜா என
மனத்தில் கண்டுகொண்டவள் சலோமி.
கொதியெண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்து
எரிக் காயங்களின்றி மீண்ட
புனித யோவானைப் பெற்றவள் சலோமி.

மேக்தலீனாவின் பரிமளத் தைலத்துக்குத்
தன்னிரு பாதங்களைக் கொடுத்தார் யேசு.
வெரோனிக்காவுக்குத் தன் பாடுகளின் ரத்தமுகத்தை
ரோஜாவாக்கிக் கொடுத்தார்.
சலோமிக்கு ஏன் ஒன்றும் தரவில்லை?

இவற்றையெல்லாம்விட முக்கியம்
எங்களூரிலும் ஒரு சலோமி வாழ்ந்தாள்.
அகலக் கால் எட்டவைத்து நடக்கும் ஆண்மூச்சுக்காரி.
அவளின் மீன் பருவக் கண்களில் மூழ்கி
எதிர்மீன்கள் பிடித்து மண்ணுக்குள் போனார்
ஜான் கார்ல் மாக்ஸ் மாமா.
அவர் கல்லறைக்கு மாதா சாம்பிராணி தூபமிடத்தான்
நான் இப்போது போய்க்கொண்டிருக்கிறேன்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

2.

சலோமியிடம் ஒரு மனக் கடிகாரம் உண்டு.

உலைக்கால் விண்மீன்கள் வானில் பூக்கும்
‘மீ’அதிகாலையில் கண் விழிப்பாள்.
அவித்த நெல்லை தலைச்சுமைந்து அரிசியாக்க
கால் மணிக் காலத்தில் அரைக் கி.மீ. கடப்பாள்.
இரு வருடங்களுக்கு ஒரு பிள்ளை கணக்கில்
நான்கு வருடங்களில் மூன்று பிள்ளைகள்.
ஆம்… அதொலொன்று ரெட்டைப் பிரசவம்.

எப்போதும்
புயல் வேகம் புயல் வேகம்.
மரணத்தையும் தாண்டிப் பாய்ந்துவிட்டாள்.
ஆனால், அவள் பனியீர நத்தை.

அவளின் மீன்கள்
கண்ணீரை உண்டு தண்ணீரைச் சுவைத்த கதை
உங்களுக்குத் தெரியாமல் இருக்கட்டும்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

3

சலோமியின் கண்களில்
மீன் பருவம் துள்ளிய தொடக்கத்தில்
தூண்டில்களை வெறுத்தாள் இல்லை.
அவற்றைத் தாண்டிப் போய் நீந்தினாள்.
நீந்தினாள் எனவும் சொல்வதற்கில்லை.
பொறிகளுக்கு ஒதுங்கினாள்.
ஒதுங்கினாள் என வரையறுக்க முடியாது
அவள் நீரிலேயே இல்லை.
‘சலோமி இல்லை’ என்று சொல்லிவிட முடியாது
இருக்கிறாள் ஒரு விரியனுக்கு இணைவியாக.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

4

சலோமி பிறந்தபோது
அவள் வீட்டுக் கூரையில்
இரு எரிவிண்மீன்கள் இறங்கின.

அவ்விண்மீன்களே
பருவத்தில் கண்களிலும் ரவிக்கைக்குள்ளும்
ஒளிரும் தனிமமாக அவளை மாற்றின
இரவில்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

5

சலோமியும் மலர்க்கொடியும்
மனம் நெருங்கிய தோழிகள்.
இருவரும்
சிறுபாவாடை கட்டிய பொன்வண்டுகளாகப்
பறந்து பறந்து சுற்றிவந்தார்கள்
பால்ய வனத்தில்.

ஒரே ஊர்தான் என்றாலும்
பதின்பருவத்தில் இருவரும்
தனித்தனியே பிரிந்திருக்கப் பழகினார்கள்.
அவர்கள் இருந்த இடம்
அவரவர் வீடுகளாய் இருந்தன.
வாசல் தாண்டி வெளிவருவதற்குள்
பொன்வண்டுகளை ஈசல்பூச்சிகளென
நம்பவைத்தனர்.

பிறகுதான்
கல்யாணத் தீப்பெட்டியில்
பொன்வண்டுகள் தனித்தனியே அடைந்தன
வெவ்வேறு ஊர்களில்.

பொன்வண்டுகளுக்கு
மரக்கிளையில் வாழ்வதைவிட
தீப்பெட்டிக்குள் வாழ்வது சலித்தபோது
சலோமிக்கு இரண்டு குட்டிப்பொன்வண்டுகள்.
மலர்க்கொடிக்கு
மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி நாள்

The post கதிர்பாரதி கவிதைகள் first appeared on திணைகள்.

❌