1. கூவிக்கொண்டும் அகவிக்கொண்டும் உறுமிக்கொண்டும் கீச்சிட்டும் குரைத்தும் இருந்தோம் மொழிக்கு முன்பு மொழி வந்தது நாசமாய்ப் போனது பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறோம்
2 காலை மாலையைப் போல நடிக்கிறது
மாலையால் இரவு போல் நடிக்க முடிகிறது
இரவு நடிப்பதில்லை
அது அதன் இயல்பில்
அல்லது இரவின் வேறு வேறு வேஷங்களா பொழுதுகள்
அல்லாது இரவின் கனவுகளா பொழுதுகள்
கனவு கலைந்து விழிப்பது இரவாய் அல்லாது பகலாகவே அமைவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை
கண்டடைய ஏதுமில்லை தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள் பாடல் மெருகேற மெருகேற கீழ்வானம் சிவக்கிறது வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள்.
2.
இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு பிரிந்தேன் சுமையை இந்தப் புலர் பொழுதோ சுமையோடே விடிகிறது செல்லும் இடமெங்கும் சுமை தாளவில்லை சற்று இளைப்பாறலாம் எனில் ஏந்திக்கொள்ள யாருமில்லை தனிமையின் பாடலை யார் கேட்பர். காற்றோ கேட்காமலே அழைத்து வருகிறது மழையை. மழையில் கரைக்கின்றன சுமைகள்.
3.
ஊடலுடன் உறங்குகிறாள் மகள் புரண்டு புரண்டு படுக்கிறேன் உறங்கும் மகளின் முகமோ பூரண நிலவாய்ப் பொழிகிறது சலனமற்ற முகத்தைப் பார்த்தபடியே காலம் நகர்கிறது. உறக்கத்தில் நகைக்கிறாள் மகள் கனவின் ஊடே தொலைத்துவிட்டாள் போலும் ஊடலை.
4.
ராஜநடை நடக்கிறது மைனா விளிம்பு நிலையில் இருந்து மத்திம சாலை வரை செல்வதும் திரும்பவுதுமாய் இருக்கிறது பறத்தலை ஒத்தி வைத்துவிட்டு நடத்தல் இன்னொரு பரிமாணம் எதிலும் இழப்பில்லை புதிய புதிய திறவுகள் புதிய புதிய விடியல்கள்.
5.
கதவிடுக்கிலிருந்து வெளியேறி அங்குமிங்கும் ஓடிய கரப்பான் மல்லாந்து கிடக்கிறது. கரப்பான் கிடக்க காலம் ஓடுகிறது. ஓடுதல் மாற மாற கரப்பானைச் சுமந்தபடி கூட்டமாய் ஓடுகின்றன எறும்புகள்.
6.
நிதர்சனமாக அம்மாவின் புகைப்படம் மேலிருந்து கத்துகிறது வெள்ளைப் பல்லி. வழக்கமான நாள் இல்லையென்கிறது அதன் குரல் அம்மாவின் கண்களை காணக் காண அதில் தான் எத்தனை காருண்யம் அந்தக் கண்களைப் போல் இதுவரை சந்தித்ததில்லை இந்த வெள்ளைப் பல்லியின் கண்களோ நிலைக்குத்தி நிற்கிறது நேற்று நடுநிசியின் விழிப்பில் கொசு வலையில் ஊர்ந்து சென்ற அதே கண்கள் சட்டென நினைவுகளைக் கழற்றிவிடப் பழகிவிட்டது இக்காலம். எப்படி மறந்தேன் நேற்றை நதிக்கரையில் நின்றபடி உன் சாம்பலைத் தேடிய பொழுதுகள் எங்கு உள்ளன உன் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து விட்டு வெள்ளைப் பல்லியைத் தேடுகிறேன். எங்கேயோ ஒளிந்து கொண்ட கௌலியின் குரல் காற்றோடு வருகிறது.
7.
திண்மப் பொருள்களுக்கும் உயிர்களுக்கும் என்னவொரு பிணைப்பு. திண்மப் பொருள்கள் எப்படி இலகுவாய் உயிருக்குள் கலந்து விடுகின்றன அப்பாவின் கைக்கடிகாரம் அம்மாவின் பொட்டு தமக்கையின் ரிப்பன் தம்பியின் கையெழுத்து காதலியின் ஒற்றை ரோசா நண்பனின் சட்டையென எப்படி அவைகள் உயிர்ப்பூத்துக் கிளம்பி விடுகின்றன. ஏதோவொரு பயணத்தில் பேருந்தின் பெயர்ப்பலகைக்கூட நெருங்கிய உயிரின் பிம்பமாய் எழுகிறது. ஒரு நிமிடம் நண்பனை என்னிடம் அழைத்து வர அந்த ஊர்ப்பெயர் மட்டும் போதும். சில நேரம் திண்மப் பொருட்கள் மௌனத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றன. மகள் தூரத்திலிருந்து ஏதோ சைகை செய்கிறாள் அவள் ஒரு பக்கக் காதின் சாதனமோ என்னை முறைக்கிறது.
8.
கைக்குழந்தையோடு பிச்சை யாசிக்கும்
சிறுமி வாகன நெரிசலுக்கிடையே
நுழைந்து நுழைந்து மீள்கிறாள். சிக்னல் சிவப்பில் ஒளிர்ந்ததும் உள் நுழைகிறாள் சிக்னல் பச்சையில் ஒளிர்ந்ததும் வெளியேறுகிறாள் இரு வண்ணங்களுக்கிடையே சில சில்லறைகளைப் பெறுகிறாள். இடையே சில முகங்கள் கைக்குழந்தையைப் பார்க்கின்றன சில முகங்கள் இவளைப் பார்க்கின்றன சில பார்வைகளின் உக்கிரம் தாள முடியாது அவளோ சூரியனைப் பார்க்கிறாள். சூரியனும் முழுவீச்சில் அவளைப் பார்க்கிறான் அவள் விழிகளில் சிவப்பும் பச்சையும் மாறி மாறி விழுந்தபடியே இருக்கின்றன. திடீரென அவள் உடலும் சிவப்புக்கான சிக்னல் தந்துவிட்டது. சற்றே உணர்ந்தவள் நெரிசலை விட்டு வெளியேற வழியின்றி பூமியை ஓங்கி உதைக்கிறாள்.
9.
உடல் ஒட்டினார் போல் இரண்டு பனை மரங்கள் நிற்பது அபூர்வம். சிறுவயதில் பனை அருகில் முனி இருப்பதாக உலவிய கதையை நம்பியதுண்டு. பருவ வயதில் பழகிவிட்டது பனையோடு தான் எங்கள் விளையாட்டு கொழுத்தும் வெயிலில் பனையடியில் தான் நிழலுக்காய் ஒதுங்குவோம் காதலுக்குள் விழுந்த மாரி அக்காவை வெளியூர்க்காரனுடன் அங்குதான் கண்டிருக்கிறோம். பின்னர் அவனோடு சென்று விட்டதாய் ஊர்க்கதை உண்டு நாலு கழுதை வயதானபின் வெளியூர் வேலைக்குச் சென்று விட்டு திரும்பிய ஒர் நாள் மாலைக் கருக்கலில் மாரி அக்காவைத் தலைவிரிக் கோலமாய் பனை அருகில் கண்டேன். அவள் முனிபோல் இருந்தாள்.
10.
மியாவ்..மியாவ்… எனக் கத்திவிட்டு பூனையாகிவிட்டேன் என்கிறாள் மகள் அவள் தோழியோ கீ ..கீ…என்கிறாள் அவளும் கிளியாகிவிட்டாள் பவுடரை முகமெல்லாம் அப்பிவிட்டு பேயாகிவிட்டேன் என்கிறாள் ஒருத்தி காணாத பேயைக்கண்டு நானும் கிலி கொள்கிறேன். பதட்டம் தனிவதற்குள் சிங்கத்தின் கர்ஜனை யானையின் அம்பாரி வண்ண மர எழுச்சியென அதகளமாகிறது வீடு இடையே கிளியாய் ,பூனையாய் மாற நானும் விழைகிறேன் குரலோ என் சொல் கேள மறுக்கிறது அயர்வில் விலங்குகளோடு விலங்காய் கண் மூட சப்தத்தை விழுங்கிய வீட்டினுள் கானகத்தின் அமைதி
”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை” சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான் புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர் சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன ‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற அத்தர் மணக்கும் விரலின் வாஞ்சையைப் புறக்கணித்து சீனன் இன்னமும் கத்துகிறான் அல்லாப்பிச்சை மந்திரிப்பார் நாள்பட்ட வலியோடு வருபவர்களின் நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை மனதின் மெக்காவிலிருந்து அவர் அள்ளிப் பூசும்பொழுது சற்றே வலிமறந்த நோயுற்ற முகத்தின் மஞ்சள் பற்கள் சிரிக்கின்றன சீனன் கத்துகிறான் “காட்டுப்பூனை… காட்டுப்பூனை…” அல்லாப்பிச்சைக்குத் தெரியும் பொய்க்கும் ஒரு உடல் உண்டு கூசுகின்ற மனம் உண்டு . தனக்குக் கீழே இருக்கும் பூனைக் கூண்டின் கம்பிவரிசையை பாதங்களால் மெல்லத் தட்டுகிறார் இது ரமலான் மாதம் சொர்க்கத்தின் கதவுகளை ஏக இறைவன் திறந்தருளும் மாதம் பரிதவித்து ஒடுங்கிய பூனையின் கண்களை கால் விரல் நகங்கள் “பரவாயில்லை, விடு” எனப் பார்க்கின்றன தன்முன்னே குன்று குன்றாக வைக்கப்பட்டிருக்கும் சந்தனப் பாளங்களை அவரது உள்ளங்கை பிசைந்து சிறுசிறு வில்லைகளாக ஆக்குகின்றது கடைச்சிறுவன் கோழித்தீவன கம்பு தானியத்தை மாவாக அரைத்து மூட்டை கட்டி வருகிறான் நிறமூட்டிகளும், மணமூட்டிகளும் தெளிக்கப்பட்ட கம்பு மாவு மணக்கின்ற சந்தனமாக வெளியே வருகிறது தூரத்தில் சஹர் வேளைக்கான பாங்கொலி எழுகிறது சந்தனமெனப் பெயரிடப்பட்ட வழிகின்ற நீருடன் இருக்கின்ற மஞ்சள் பாளத்தை மலமென ஒருமுறை கண்கள் பார்க்கின்றன பன்னெடும் ஆண்டுகளாக கண்கள் உணருகின்ற அந்த ஒரு கண காட்சிப் பிறழ்வை இன்றுவரை சரிசெய்யவியலாத அல்லாப்பிச்சை பெருமூச்சுடன் குனிந்துகொள்கிறார் வறண்டு இறுகிவிட்ட தாவரத்தின் வேரைப்போன்ற அந்த நோன்பிருக்க இயலாதவனின் பாதத்தை கம்பிக்கூண்டுக்குள்ளிருந்து ஒரு ஈர நாவு மென்மையாகத் தடவுகிறது.
1) குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன் அழகழகாய்த் தெறிக்கின்றன சொற்கள்
2) பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன வானம் லேசாகத் தூரலிட்டு அழத் தொடங்கியது ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன் சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள் சந்தோஷங்களுக்கு இப்படி ஓர் ஆசையா
3) அ) புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம் ஒரே மாதிரி வரவேற்கிறது எனக்குத் தெரிந்து நிச்சயமாக அந்த மரம் புத்தனாகிவிட்டது
ஆ) ஒரு பட்டாம்பூச்சி என் வீட்டு வாயில் படிக்கு உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருக்கிறது நான் வெகு நேரமாக வாசலிலேயே காத்திருக்கிறேன்
இ) பறவையின் வயிற்றில் அமர்ந்து விதைகளாகப் பறந்து செல்கிறது மரத்தின் கனவு
ஈ) உறவுக்கு முன்பான கணங்கள் உறவுறும் கணத்தை விட மகத்தானவை
உ) இந்தத் தோட்டத்து மலர்கள் ஒவ்வொன்றும் தண்னொளி வீசி தனிமையில் மூழ்கி இருக்கிறது பூப்பதை விட ஒரு நற்செயலை செடியால் செய்ய முடியாது
4) வெறிச்சோடி கிடக்கும் மதியத்தின் வீதியில் சொர்க்கத்தில் இருந்து தப்பி வந்த பொன்னிற நிழல்கள் நடந்து செல்கின்றன அதன் பாத சுவடுகளை உருகி உருகி காதலிக்கிறது மஞ்சள் வெயில்
5) நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நான் காணாமல் ஆகிவிட்டேன் வெட்டவெளியில் இருந்து ஓர் உருவத்தை அழிப்பான் கொண்டு அழிக்க முடியும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை மாய உலகத்தின் புதிர் பாதையில் என்னை உடைத்து உடைத்து வழியெல்லாம் போட்டுக் கொண்டே செல்கிறேன் காத்திரு நண்பனே சரியாக வழி கண்டுபிடித்து உன்னிடம் திரும்ப வந்து விடுகிறேன்
6) புல் நுனி ஒரு பனித்துளியின் மதிப்பை உயர்த்திப் பிடிப்பதைப்போல நானுன்னை உயர்த்திப் பிடிக்கிறேன் சிந்தி விடாதே கண்ணே வெறும் நீர் தீற்றலாக
7) நான் விழித்திருக்கும் போது கனவு தோன்றுகிறது உறங்கும்போது நினைவு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது நான் கனவிழந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தேன் என்னைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள் மனநிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது விரைவில் இவருக்கு கனவு திரும்பி விடும் என்று
8) அவ்வளவு கோபமாகச் சொல்ல வேண்டிய விஷயத்தை இவ்வளவு செல்லமாக உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்கிறாய் ஒன்று உனக்குச் சொல்லட்டுமா என் மனக்காட்டின் சொல் விலங்குகள் அத்தனையும் அவ்வளவு இளங்குட்டிகள் அவற்றை அப்படியெல்லாம் அழுத்தி உச்சரிக்க முடியாது
9) என் உயிர்ப்பும் துடிப்பும் கண்டு ஒரு படகுக்குரிய மரியாதையை நீர் எனக்கு வழங்குகிறது நான் மிதக்கிறேன் நீரில் ஏற்றப்பட்ட திருவிளக்கை நோக்கி கிழக்கு முகமாக நீந்துகிறேன் எதையும் நனைக்கும் நீரால் எனக்குள் மிதக்கும் எண்ணங்களை நனைக்க முடியவில்லை
10) இளம் காலை நேரம் படுக்கையை விட்டு எழுந்து அமர்கிறாள் பௌர்னிகா அருகில் ஆடை கலைந்து குழந்தையைப் போல படுத்திருக்கும் கணவனைப் பார்த்து புன்னகைத்தாள் அவன் மார்பில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்கிறாள்.
நேற்றிலிருந்து இடப்பக்க முகம் வலிக்கிறது முகவாதம் பீடித்த அப்பாவை மருத்துவமனைக்கு தனியாக அனுப்பிய நாட்கள் கடந்து பல வருடங்கள் ஆகின்றன
2.ஒவ்வொரு முறையும்
உன் வாசல் தேடி பிச்சை கேட்டு வந்த போதும் மறுத்த போதும் கதவுகளை அறைந்து சாத்திவிட்டு சென்ற போதும் நிறைந்து போன எனக்கு நீ காணாமல் சென்ற போது பசித்தது
3.
உச்சியில் மலர்ந்த பூவின் மீது உனக்கு அலாதி பிரியம் வாசத்தைக் கொய்ய மலையேறத் துவங்கினேன் ஏற ஏற வெளிச்சம் பாய்ச்சுகிறது
உச்சியில் எனக்கும் வானத்தில் பூத்திருக்கும் மலருக்குமிடையே தூரம் பூத்திருந்தது
4. நாமொன்றைத் தொடங்கினோம் எவ்வளவு அழகாய் இருக்கிறது பின் நடந்தவைகளைத் தவிர்க்கிறேன் இது போதுமானது “நாமொன்றைத் தொடங்கினோம்”
5. இந்திரியம்
தொலைந்து போன பெரியண்ணன் நீண்ட நாள் கழித்து வீடடைந்தான் அறைக்குள் ஆடை களைந்தான் அம்மணமாய்க் குளித்தான் சேலைத் தலைப்பை வாயில் பொத்திக் கொண்டாள் அம்மா பயந்து பக்கத்து வீட்டில் ஒளிந்தாள் சின்னத் தங்கை
ஈரத்துடன் கால்களைப் பரப்பிய படி உறங்கியவன் வலப்புறம் ஒருக்களித்தான்
இம்முறை படுக்கை விரிப்பை துவைக்கும்போது அம்மாவை துணைக்கு கூப்பிடக் கூடாது
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு நேரிளையத் தங்கையவள். ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.
இவையெதுவும் உண்மையல்ல கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த மருத்துவத் தாதி சலோமி. ஆண் வாசம் அறியாமால் பிள்ளையீன்ற கன்னி மரிக்கு இரண்டாம் சாட்சியானவள் சலோமி. யேசுவை முதன்முதலில் கிறிஸ்துராஜா என மனத்தில் கண்டுகொண்டவள் சலோமி. கொதியெண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்து எரிக் காயங்களின்றி மீண்ட புனித யோவானைப் பெற்றவள் சலோமி.
மேக்தலீனாவின் பரிமளத் தைலத்துக்குத் தன்னிரு பாதங்களைக் கொடுத்தார் யேசு. வெரோனிக்காவுக்குத் தன் பாடுகளின் ரத்தமுகத்தை ரோஜாவாக்கிக் கொடுத்தார். சலோமிக்கு ஏன் ஒன்றும் தரவில்லை?
இவற்றையெல்லாம்விட முக்கியம் எங்களூரிலும் ஒரு சலோமி வாழ்ந்தாள். அகலக் கால் எட்டவைத்து நடக்கும் ஆண்மூச்சுக்காரி. அவளின் மீன் பருவக் கண்களில் மூழ்கி எதிர்மீன்கள் பிடித்து மண்ணுக்குள் போனார் ஜான் கார்ல் மாக்ஸ் மாமா. அவர் கல்லறைக்கு மாதா சாம்பிராணி தூபமிடத்தான் நான் இப்போது போய்க்கொண்டிருக்கிறேன்.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
2.
சலோமியிடம் ஒரு மனக் கடிகாரம் உண்டு.
உலைக்கால் விண்மீன்கள் வானில் பூக்கும் ‘மீ’அதிகாலையில் கண் விழிப்பாள். அவித்த நெல்லை தலைச்சுமைந்து அரிசியாக்க கால் மணிக் காலத்தில் அரைக் கி.மீ. கடப்பாள். இரு வருடங்களுக்கு ஒரு பிள்ளை கணக்கில் நான்கு வருடங்களில் மூன்று பிள்ளைகள். ஆம்… அதொலொன்று ரெட்டைப் பிரசவம்.
எப்போதும் புயல் வேகம் புயல் வேகம். மரணத்தையும் தாண்டிப் பாய்ந்துவிட்டாள். ஆனால், அவள் பனியீர நத்தை.
அவளின் மீன்கள் கண்ணீரை உண்டு தண்ணீரைச் சுவைத்த கதை உங்களுக்குத் தெரியாமல் இருக்கட்டும்.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
3
சலோமியின் கண்களில் மீன் பருவம் துள்ளிய தொடக்கத்தில் தூண்டில்களை வெறுத்தாள் இல்லை. அவற்றைத் தாண்டிப் போய் நீந்தினாள். நீந்தினாள் எனவும் சொல்வதற்கில்லை. பொறிகளுக்கு ஒதுங்கினாள். ஒதுங்கினாள் என வரையறுக்க முடியாது அவள் நீரிலேயே இல்லை. ‘சலோமி இல்லை’ என்று சொல்லிவிட முடியாது இருக்கிறாள் ஒரு விரியனுக்கு இணைவியாக.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
4
சலோமி பிறந்தபோது அவள் வீட்டுக் கூரையில் இரு எரிவிண்மீன்கள் இறங்கின.
அவ்விண்மீன்களே பருவத்தில் கண்களிலும் ரவிக்கைக்குள்ளும் ஒளிரும் தனிமமாக அவளை மாற்றின இரவில்.
சலோமியின் மீன்பருவக் கண்கள்
5
சலோமியும் மலர்க்கொடியும் மனம் நெருங்கிய தோழிகள். இருவரும் சிறுபாவாடை கட்டிய பொன்வண்டுகளாகப் பறந்து பறந்து சுற்றிவந்தார்கள் பால்ய வனத்தில்.
ஒரே ஊர்தான் என்றாலும் பதின்பருவத்தில் இருவரும் தனித்தனியே பிரிந்திருக்கப் பழகினார்கள். அவர்கள் இருந்த இடம் அவரவர் வீடுகளாய் இருந்தன. வாசல் தாண்டி வெளிவருவதற்குள் பொன்வண்டுகளை ஈசல்பூச்சிகளென நம்பவைத்தனர்.
பிறகுதான் கல்யாணத் தீப்பெட்டியில் பொன்வண்டுகள் தனித்தனியே அடைந்தன வெவ்வேறு ஊர்களில்.
பொன்வண்டுகளுக்கு மரக்கிளையில் வாழ்வதைவிட தீப்பெட்டிக்குள் வாழ்வது சலித்தபோது சலோமிக்கு இரண்டு குட்டிப்பொன்வண்டுகள். மலர்க்கொடிக்கு மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி நாள்
நினைப்பில் நானொரு ஓவியன் முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா? நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால் என்னவெல்லாம் வரைந்திருப்பேன்?? முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்… அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்… தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்… அன்றி, ஒரு தவளைக்கு என் தலையைப் பொருத்திப் பார்த்திருப்பேன்… சொந்த மூக்கை இன்னுங்கூட பெரிதுபடுத்தி இருப்பேன்… பருவம் பூத்த போது எனக்குச் சொன்ன பாலியல் கதையில் வரும் நீ….ள ஆண் குறியைப் போல எனக்கும் ஒன்றைச் சமைத்து அதைத் தோளில் போட்டுக் கொண்டு சாவகாசமாய் நடந்திருப்பேன் – அச்சமயம் மென் காற்று தீண்டச் சொகுசாகும் என் குதத்தின் பாவனையை ஓவியத்தில் கொண்டுவரப் பார்ப்பேன். கோபம் முட்டும் போது அதேகுறியை அறுத்தெறிவது போலவும் ஓர் ஓவியம்…
நான் காகம் நிறைய வரைவேன்… எனக்குப் பிடித்த தவிட்டுக் குருவிகளையும்… மிகவும் நைஸான கறுப்புத் தோளை எனக்குப் போர்த்திக் கொள்வேன்… யானையைச் சின்னதாக்கிக் கொள்வேன் குட்டி பப்பி சைஸில் பிறகு பன்றியை நேசிக்கும் மனிதர்களைப் படைப்பேன்…. என் அம்மாவைப் பெருச்சாளி தின்பது போல் வரைந்திருப்பேன்…
அது யாராக இருக்கக்கூடும் என்று ஊகித்திருப்பேன்… நானும் என்னை அன்னை ஆண்டாளும் கைகோர்த்து ஆடும் நான் கண்ட கனவினைத் தாளில் வார்த்து சட்டகம் போடுவேன்… அதில், என் தோளிலும் அவள் தோளிலுமாய் அமர்ந்திருக்கும் ரெண்டு பச்சைக் கிளிகளின் வதனப் பச்சையை இஷ்டத்துடனே இருவர் முகங்களிலும் அப்பிக் கொள்வோம்… மறவாமல் ரெண்டு பேர் மார்பிலும் தலா ஒரு மாலை சுமப்போம்; யாருக்காக..? நான் மரத்தில் காய்த்துத் தொங்கும் குழந்தைகள் செய்வேன்… கை, கால்கள் பூட்டி நடக்கும் மரம், செடி, கொடி, பழம் பண்ணுவேன்.. ஆலிஸை எனக்குப் பிடிக்கும், அரூபமாகி ஒரு குறிக்குள் புகுவேன்…. அங்கே போன பின் ஒரு தோற் கரும்பு உண்டு பண்ணி அவளுக்கு உச்சமேற்றுவேன்… என் வாய்க்குள் பிறன் கரும்பின் இனிப்பு புதைவது போல் ஒன்று வரைந்து ரகசியமாய் வைத்துக் கொள்வேன்… பிறகு நாலு கால், கைகள் வேண்டும் எனக்கு… பிறகு நான் நாமமோ எதுவோ தரித்துக் கடவுளாகுவேன்… யாருக்கு நான் வரந் தருவது.. என்ன தருவது…. என்பதைத் தீவிரமாய் யோசித்து நேரம் போக்கும் கடவுள்தான் நான் என்பது நான் வரைய நினைக்கும் ஒரு கேலிப்படத்தின் உள்ளடக்கம். எனக்கு அரசு தந்த சைக்கிளையும், நான் சம்பாதித்து வாங்கிய வெஸ்பாவையும் ஒரே சமயத்தில் ஓட்டுவது போல் வரைந்து
ரெண்டுக்கும் என் லட்டு என்று பெயரிடுவேன்… மூக்கின் நடுச்சரத்தில் நண்டொன்றைப் புல்லாக்கு போல் மாட்டிக் கொண்டு ஒரு புஸ்டி உடல் கட்டையும் ஒரு நோஞ்சான் தேகத்தையும் கற்பனை செய்வேன் அது கலீஜாய் இருக்குமா?? எனக்கொரு மீனின் ரவுண்டு கண் இருந்தால், எனக்குக் கைச்சட்டையில் செதில் இருந்தால், எனக்கொரு கழுதைக் குறி இருந்தால், எனக்கொரு முந்தைய வாலிருந்தால் எனக்கு முற்றும் போது அழுத்தவென ஒரு பருவ முலை தேவையின் போது மட்டும் முளைத்தால்… நான் நட்சத்திரம் பார்த்து வந்தால்… பீ வண்டாகி அதை உருட்டிக் கொண்டு போய் பத்திரமாய் சேமித்துவிட்டுத் திரும்பினால்… பிடிக்காதவரை ஓவியத்திலாவது நாலு சாத்து சாத்தி, மிதித்தால் மேலும் எதுவும் காணாது மறைந்த என் பாட்டிக்கோர் உயிர் தருவேன் நான். அன்றி, அவள் இழந்த பருவக் கணவனை மீட்டுத் தருவேன். அக்கணவனைக் கொன்று போட்ட அவன் பங்காளிமார்களை மிகுத்திரு பாட்டியார் வதம் செய்வது போல் வரைவேன். சாராயத்தில் அவருக்குக் கலந்து கொடுத்த விஷம் வாய்க்குள் போகும் போது அஃதொரு தேளாகி, எனினும் சமத்தாகி, சிரித்து எதுவும் பண்ணாமல் அவர் மறு வாயின் வழியே நோகாமல் பிரசவிப்பது போல் ஒரு புராணம் பண்ணுவேன்… எருமை பலி தந்து – பன்றியைக் குத்திப் போட்டுக்
கூந்தல் அலைய அலையப் பம்பை உடுக்கை அடிக்க ஆடி ஆடி ஓய்ந்து ஓய்ந்து, அவர்களை வணங்குவேன்… எதுவும் பேசாத என் அம்மாவை கொற்றவை ஆக்குவேன். எங்கள் பால்யத்தில் வருசமெல்லாம் நாசியிலேறி தவிக்கச் செய்த பொதுக்கழிப்பறையின் மல வாசத்தை அள்ளி அதிகாரிகள் முகத்தில் பூசுவேன் தீரா வன்மம் கொண்டு. பிறகு நான் தரிப்பேன் வள்ளலார் போலொரு வெள்ளுடை. பிறகு நான் தரிப்பேன் ஒரு சமணனைப் போல் ஒரு நிர்வாணம்… பிறகோ நான்: ஜோதியில் எரிவேன்… கடலினில் ஆழ்வேன்… கைலி கட்டி, கையில் வீணையுடன், தாடி வைத்துச் சட்டையில்லாமல் ஒரு புதுச்சாமியார் நான்… அப்போது வரும் அமைச்சன் என் காலில் விழுவதைக் கண்டு நாசமாய்ப் போவாய் என்று நிஜ வாக்கு சொல்லுவேன்… பிறகாவேன் ஒரு சிட்டுக் குருவி பிறகாவேன் ஒரு சந்தனக் காக்கை பிறகாவேன் ஒரு தைல மரம் பிறகாவேன் ஒரு மனத்தக்காளிக் கொத்து பிறகாவேன் நாவல் தனிப்பழம் பிறகாவேன் ஆற்றின் அடிமணல் நைஸ்…. மற்றும் பிறகும் ஆவேன் நானொரு ஈறிலியாய்…
சற்றும் நகர்த்த முடியா இந்நினைவை இழுத்து இழுத்து இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்
இனி வெறும் சறுக்குப் பாதைகளே உருட்டி விட்டால் சிதறுவதற்கு இருக்கின்றன ஆயிரம் வழிகள்
அதில் எதிலாவது விழுந்து எத்துண்டாவது உடைந்தாலும் ஏழு ஜென்மத்துக்கும் மூச்சிழுத்து பிழைத்துக்கொள்ள மாட்டேனா?
கரைசேரா கப்பல்கள்
தெருமுனை தாண்டிடாத காகிதக் கப்பலை தெருவெங்கும் விட்டு யார் கப்பல் கரை சேரும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்
அங்கும் இங்குமாய் அது தத்தளித்து பார்க்கும் எங்களை அலைக்கழித்து சாரல் மழையில் சற்றே சாய்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் முழுதும் தொய்ந்து மூச்சுத் திணறி முங்கிற்று
நாங்களோ அடுத்த கப்பலுக்கு காகிதம் கிழித்தபடி…
ஒரு தடித்த கீறல்
பாதி கழுவிய வலுவலுப்பில் மங்கியொழுகும் குவளைகள் அவசரத்திற்கு எப்போதும் கிடைத்திடாத கரண்டிகள் பொடிசுகள் தைரியமாய் கையாள முடிந்த கத்திகள் தண்ணீர் ஊற்றி சுத்தினாலும் அரையாது அடம்பிடிக்கும் தேங்காய் துண்டுகள் எறும்பின் நகர்வு இல்லாது சுவைத்திட முடியா திண்பண்டங்கள் எப்போது போட்டாலும் அட்டூழியம் பண்ணும் தொலைக்காட்சி அமைப்புகள் நாள் பூராய் துவைப்பதாய் சுழற்றிக்கொள்ளும் சலவை இயந்திரம்
எல்லாம் அதனதன் போக்கில் சோதிக்கும் சுதந்திரம் கொண்ட பாட்டி வீட்டிலிருந்து வெளியேறுகிறாள் சிறுமி ஒருத்தி விழுந்து கிடந்த ஒற்றைப் பனம்பழம் எடுக்க வந்த ஆசையுடன்.
முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம், அரசுக் கல்லூரி சித்தூர்,பாலக்காடு கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம்
ஆய்வுச் சுருக்கம்
பொருள்கொள்ளும் செயல்முறை முடிவற்ற ஒன்று. ஏனெனில் அர்த்தம் என்பது முடிவில்லாத ஒன்று. எந்த ஒரு விளக்கமும் எல்லா அர்த்தங்களையும் புலப்படுத்துவதில்லை ஒவ்வொரு விளக்கமும் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கின்றது. ஒரு பனுவலில் புகுந்து வாசகன் தன்னை மறந்துவிடும் செயல்பாடுதான் பொருள்கோளியல். மேலும் பொருள்கோளியலின் அடிப்படை ஒரு பனுவலை வரலாற்றுப் பார்வையில் அணுகுவது ஆகும். தமிழ் இலக்கண நூலான நன்னூல் தானே கர்த்தாவாக இருந்து எவ்விதம் பொருள்கோளியல் முறைமைகளை எடுத்துரைக்கிறது என்றும், நன்னூல் இடைக்காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்டது எனினும் எல்லா காலகட்ட வாசகனுக்கும் பொருள் புலப்பாட்டிற்கு உதவுகிறது என்றும், ஆராய வேண்டி உள்ளது. ஒரு பனுவலைப் பழைய மரபிற்குள் வைத்து வாசிப்பதும், ஒரு பனுவலுக்கு பொருள் விளக்கம் தருவதும், அதை பகுத்து ஆராய்வதும் பொருள்கோளியல் துறையின் அடிப்படை ஆகும். பொருள்கோளியல் துறையின் அடிப்படையில் நன்னூலை அணுகுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திறவுச்சொற்கள்
நன்னூல், தொல்காப்பியம், பனுவல், பொருள்கோளியல்,
முன்னுரை
தமிழில் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தை சார்பு நூலாகக் கொண்டு பவணந்தி முனிவரால் நன்னூல் எழுதப்பட்டது. நன்னூலில் எழுத்து, சொல் என இரண்டு அதிகாரங்களையும், 474 நூற்பாக்களும் இடம்பெறுகின்றன. இந்நூல் தொல்காப்பியத்தை எளிமையாகவும் தெளிவாகவும் கற்க உதவுகிறது. நன்னூல் இடைக்காலகட்ட சமூக, சமய,அரசியல் பொருளாதார நோக்கத்தோடு இலக்கணம் கூறுகின்றது. இத்தகைய சிறப்புடைய நன்னூலை பொருள்கோளியல் துறையின் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொருள்கோளியல்
பொருள்கோளியல் பனுவல்களின் அர்த்தத்தை நுட்பமாகப் புரிந்து கொள்வதற்கான பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் ஒரு தத்துவ நோக்கு ஆகும். பொருள்கோளியல் துறை வரலாறு, தத்துவம், சமூகவியல் ஆகிய துறைகளிலும் புகுத்திப் பார்க்கப்படுகிறது. பொருள்கோளியல் துறை மேலைநாடுகளில் உரை வரைதல், சொல்லுக்கு விளக்கம் தருதல், நூற்பொருளைப் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள மொழிபுணர் இயல்பு என்னும் கருத்தைப் பொருள்கோள் என்று உரையாசிரியர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.இந்தச் சூழலில் மொழிபுணர் இயல்பை முழுமையான பொருள்கோள் முறையாகக் கருத முடியாது என்ற வாதத்தை முன்வைத்து தொல்காப்பியத்திலுள்ள சில பொருள்கோடல் முறைகளைத் தொகுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது,
உலகில் முதன் முதலில் மெசப்பட்டோமியக் கலாச்சாரத்தில் தான் பல்வேறு வகையான உரைகள் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கிரேக்க புராணக்கதைகளில் ஹெர்மிஸ் என்னும் கதாபாத்திரத்தைப் பற்றி அறிய முடிகிறது. அக்கதாபாத்திரம் கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு தூது செல்பவனாகவும், மொழியை கண்டுபிடித்தவனாகவும் கூறப்படுகிறது. ஹெர்மிஸ் கூறும் சொற்கள் ஈரடித்தன்மை கொண்டதாக இருந்தது. இச்சொற்களுக்குப் பொருள் என்ன என்று மக்கள் கேட்டனர். அதற்கு ஹெர்மிஸ் பொருள் விளக்கியதாகவும் தெரிகின்றது. ஹெர்மிஸ் என்னும் பெயரில் இருந்து பொருள்கோளியலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ஹெர்மியோடிக்ஸ் உருவாக்கப்பட்டது. இதனை மேலைநாடுகளில் அறிஞர்கள் (theory of textile interpretation and analysis) அதாவது ஒரு பனுவலுக்கு பொருள் விளக்கம் தருதல் அதைப் பகுத்து ஆராய்தல் பற்றிய கோட்பாடு என்று விளக்கம் தருகின்றனர். பொருள்கோளியல் துறை கடினமான மொழிகளை உடைய நூல்களை விளக்குகின்ற விதிகளை அல்லது முறைகளைக் கொண்டதாக இருக்கிறது. பொருள்கோளுக்கு அடிப்படையான உரை விளக்கம் பற்றி அணமையில் சிந்தித்த தமிழ் ஆய்வாளர்கள் சில கருத்துக்களைக் கூறியுள்ளனர்.பொருள்மாறுபடுவது அல்லது அர்த்தமாறுபடுவது அல்லது அர்த்த மயக்கம் தான் பொருள்கோள் துறையின் முக்கியமானது.பொருள் மாறுபாட்டிற்கு காரணம் ,
பாடவேறுபாடு
சொற்பிரிப்பு
கொண்டுகூட்டு
கலை மரபு
தொகைப்பெயர் விளக்கம்
ஒரு சொல்லுக்குப் பல பொருள்
நயம் கூறுதல்
விளங்கக் கூறுதல்
கதைகளைப் பொருத்துதல்
ஆகியவைகள் காரணமாக இருக்கின்றன. இலக்கண நூல்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதற்கும் ,உரைகள் தோன்றுவதற்கும் இக்கூறுகளே காரணமாக இருக்கின்றன.
பொருள்கோளியல் அணுகுமுறை
பொருள்கோளியல் அடிப்படையில் நன்னூல் உருவாக்கத்தின் காரணத்தன்மை, காலத்தன்மை, கலாச்சாரத்தன்மை ஆகியவற்றை ஆராய இயலும். இலக்கண நூல்களின் விதிவருமுறை, விதிவிலக்கு முறை ஆகிய கற்பித்தல் கோட்பாடுகளின் வழி நன்னூலுடன் பொருள்கோளியலை பொருத்திப் பார்க்க இயலும்.
பொருள்கோளியல் சுழற்சி
நூலைப் பெறுபவன்
குறி, குறியீடு, பனுவல் ஆசிரியர்
பொருள்கோளியலை முக்கோண வடிவம் வாயிலாக விளக்கலாம். பொருள்கோளியல் ஒரு பனுவலை உருவாக்குவதிலும், அந்நூலினை விளக்குவதிலும் குறிப்பாகப் பனுவல்களின் மெய்மையான அர்த்தத்தை அணுகுவதிலும் அக்கறை காட்டுகின்றது. நூல், அந்நூல் நூலின் ஆசிரியர், வாசகரின் மனநிலை ஆகியவை அந்நூலைப் பொருள் புரிந்து கொள்ள உதவுகின்றது.
“புரிந்துகொள்ளலும், விளக்கமும் இரு வேறு கோணங்கள் என்றாலும் ஒன்றினின்றும் மற்றது பிரிக்க முடியாத தொடர்பு கொண்டவை .புரிந்துகொள்ளல் என்பது நம் மனத்தின் நனவுப்பகுதி ,புறநனவிலிப் பகுதி ஆகியவற்றில் நிகழும் ஒரு செயல்முறை ஆனால் விளக்கம் என்பதில் ஒருவனின் வரலாறு,பண்பாடு,சமூகம்,மொழி ஆகிய காரணிகளை ஆராய வேண்டும் இம்மாதிரி ஒரு பனுவலின் குறிகளை விளக்குவதிலும் ,குறிப்பாகப் பனுவலின் மெய்யான அர்த்தம் என்பதை அணுகுவதிலும் பொருள்கோள் அக்கறை காட்டுகிறது.” க. பூரணச்சந்திரன் [ தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம் ,ப.4] பனுவலை வாசகன் முக்கோண சுழற்சியின் வாயிலாக பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பொருள்கோளியல் துறை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
நன்னூலில் பொருள்கோளியல்
பொருள்கோளியல் துறைக்கும், நூல் உரை உருவாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நன்னூல் உரைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது நுண்ணிய உரை வேண்டும் என்கின்றது. உள்நின்று அகன்ற உரை என்பதற்கு ஒருவரது மனத்தின் ஆழ்நிலையில் பல காலமாக தங்கி இருந்து பேச்சு வாயிலாக வெளிப்படுகின்ற விளக்கம் என்று பொருள் கொள்ளலாம். உரையானது வழிவழியே வாய் மொழியாக பரப்பப்பட்டது. பொருள்கோளியல் துறையும் வாய்மொழி, நம்பிக்கை இவற்றின் வழியாக தோன்றியது என்று மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்.
‘’தமிழ் மரபில் ஆசிரியர் தம் மாணவர்களுக்கு வாய்மொழியாக பழைய நூலுlக்கு உரையும் விளக்கமும் கூறி வந்தனர். இவ்வாறு ஒரு நூல் பல தலைமுறைகளைக் கடந்து வரும்போது ஒவ்வொரு பரம்பரைக்கும் உரிய கருத்துக்களையும் விளக்கத்தையும் சேர்த்துக் கொண்டு உருவாக்கப்படுகிறது. (உரையாசிரியர்கள், அரவிந்தன் மு. வை, பக்கம்:64 )
ஒரு நூலுக்கு உரை செய்தல், உரை விளக்குதல் என்பதைத் தாண்டி ஒரு பனுவலைப் புரிந்து கொள்வது வயது, கால சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். பொருள்கோளியல் துறை பொருளை வாசகனின் மனநிலைக்கு ஏற்ப புரிந்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது.
பொருள்கோளியல் துறையில் எல்லா பனுவல்களும் சமமானவை என்றும், விவிலியம் போன்ற சமய நூல்களுக்கு தனி இடம் தர வேண்டாம் என்றும் கூறுவர். ஆனால் தமிழ் மரபில் சமய நூல்களுக்கு முக்கியத்துவம் தரும் வழக்கம் இருக்கிறது.
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்”(நன்னூல், பாயிரவியல்)
இலக்கண நூல்களுக்கு உரை காணுதல் என்பது அக்கால சமூக, சமய அரசியலுக்கு ஏற்ப உரை மாறுபட்டது. இலக்கண நூல்களுக்குப் பல உரைகள் தோன்றின. ஒவ்வொரு உரை ஆசிரியரும் சொல்லுக்கு உரை காணும் விதம் மாறுபடுகிறது.
நன்னூலில் பொருள்கோள்
பொருள்கோளியல் துறைக்கும் இலக்கண நூல்கள் குறிப்பிடும் பொருள்கோளுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஒரு செயலில் சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வதற்கு ஏற்ற வகையில் நேராகவோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறையை பொருள்கோள் என்று வழங்குவர்.நன்னூலார் பொருள்கோளை எட்டு வகைப்படுத்துகிறார்.
“யாற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூண்
தாப்பிசை அளைமறியாப்பு கொண்டு கூட்டு
அடிமறி மாற்று எனப் பொருள்கோள் எட்டே’’ [நன்னூல், நூ .411]
நன்னூலார் பெயர் வினைகளாகிய சொல்லையும் அவற்றின் பொருளையும் பாடலில் இருக்கும் முறையில் அல்லாமல் பொருந்தும் வகையில் வரிசையாக நிறுத்தி முறையாக அல்லது எதிராகப் பொருள் கொள்வது என்று கூறுகிறார்.
கூட்டுவில் பொருள்கோள்
செய்யுளின் இறுதிச்சொல்லை முதற் சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுவது கூட்டுவில் பொருள்கோள் என்பர்.
செய்யுளில் சொற்கள் முன்னும் பின்னும் சென்று பொருள்கொள்ளும் முறையினை தாப்பிசைப் பொருள்கோள் என்பர்
அளைமறியாப்புப் பொருள்கோள்
செயலில் இறுதிச்சொல் அல்லது இறுதி அடி கீழ்மேலாய் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளும் முறை அளைமறியாப்புப் பொருள்கோள் என்பர்.
கொண்டுகூட்டுப்பொருள்கோள்
செய்யுளில் பல அடிகள் சிதறிக்lகிடக்கும் சொற்களை ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டி பொருள் கொள்ளும் முறை கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்பர்.
அடிமறி மாற்றுப்பொருள்கோள்
அடிமறி மாற்றுப் பொருள்கோள் இரு வகைப்படும்.அவையாவன,
ஏர்புழிக் கூட்டு அடிமாற்றுப் பொருள்கோள்
ஒரு செயலின் அடிகளைப் பொருளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கூட்டி பொருள் காண்பது.
பொருள் இசை மாறாஅடிமாற்றுப் பொருள்கோள்.
ஒரு செயுளின் அடியை எங்கே மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் இசையும் மாறாமல் இருப்பது.
நன்னூலார் ஒரு பனுவலை எவ்வாறு வாசகன் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் துணைபுரியும் வகையில் பொருள்கோளை உருவாக்கி உள்ளார். பொருள்கோள் அடிப்படையில் வாசகர் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை வாசகனின் பொருள் புலப்பாட்டுத் தன்மையானது வாசகனின் வயது, காலம், சமூக பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். பொருள்கோள் துறையும் ஒருபனுவலை சமூக, சமயப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும் என்கிறது.
சமூக சமயச்சூழலுக்கேற்ப பொருள் கொள்ளல்.
தமிழ் மொழியில் சொற்களின் பொருள் புரிதலைப் பற்றி ஆராயும் பொழுதுபொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே எனக் கூறுவர். ஒரு சொல்லின் பொருள் இன்னொரு சொல்லால் அறியப்படுகிறது.அச்சொல்லின் பொருளை தேடிக்கொண்டே போனால் வரம்பில்லாமல் போகும். இதனை பொருள்கோளியல் துறையில் (Endless semiosis) என்பர். அதேபோன்று ஒரு நூலின் பொருளை அந்நூல் தோன்றிய சமூகத்தின், சமயத்தின் காலத்தின் அடிப்படையில் பொருள் புரிந்து கொள்ள முடியும்.
மேற்கூறிய நூற்பாக்கள் நன்னூல் தோன்றிய இடைக்காலக்கட்ட சமூகத்தை வெளிப்படுத்துகிறது தொல்காப்பியத்தில் திணை வகைப்பாடிடில் இடம்பெறாத தேவர், நரகர் பற்றிய சிந்தனை இடைக்கால கட்டத்தில் தோன்றிய புராண இதிகாசங்களில் தேவர்,நரகர் பற்றிய கதைகளின் வழியாக இலக்கண நூல்களில் அவர்களை உட்படுத்த வேண்டிய தேவை எற்பட்டது.நன்னூல் தோன்றிய காலக்கட்டத்தின் விளைவாக சில இலக்கண கூறுகளைப் புதிதாக கூறுகின்றது.
அணு பற்றிய கொள்கை சமணர்களுடையது. ஒரு பொருள் அணுவின் செயற்கையால் உருவாகி விடுவதில்லை அதனோடு காலமும், ஆகாயமும் சென்று உருவாகிறது என்பது சமணர் கொள்கை. எழுத்துக்களின் தோற்றத்திற்கு கூறப்பட்டுள்ள சமணர் கொள்கையில் முக்கியமானது.’தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை’ என்பதாகும். சொற்களின் பொருள் புலப்பாடும் முடிவில்லாதது ஆகும். அது வாசகனின் மனநிலைக்கேற்ப மாறுபட்டு கொண்டே இருக்ககூடியது.
நன்னூலில் எதிர்நிலைச் சொற்கள்
மொழியில் எதிர்நிலை உறவு கொண்ட சொற்கள் பொருள்ப் புலப்பாட்டிற்கு உதவுகின்றன.உதாரணமாக நன்மை,தீமை தேவர்,நரகர் இம்மாதிரி சொற்களை பயன்படுத்தும் பொழுது அச்சொற்கள் எதிர்நிலைச் சொற்களையும் அதனோடு சேர்ந்து பொருள்ப் புலப்படுத்தும் வாசகரின் மனதில் ஒரு சொல்லின் எதிர்நிலை தன்மையும் எழுகிறது இம்மாதிரிச் சொற்கள் பொருளைப் புரிந்து கொள்ளவும் ஆழ்ந்து சிந்திக்கவும் உதவுகின்றது.
“மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை” (நன்னூல்:132)
இந்நூற்பாவைப் போன்று நன்னூலில் உயர்திணை, அஃறிணை, உயிருள்ளது இல்லாதது, ஆண்பால், பெண்பால் ,இயல்பு வழக்கு, தகுதி வழக்கு, வழு, வழுஅமைதி போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன இது போன்ற சொற்கள் பொருள்கோளியல் துறை அடிப்படையில் ஒரு பனுவலை புரிந்து கொள்ள உதவுகின்றன.
நன்னூலில் பொதுச்சொற்கள்
பொருள் அடக்குநிலைச் சொற்கள் என்றபொதுச் சொற்கள் பொருள்கோளியல் துறையில் முக்கிய இடம்பெறுகிறது.நன்னூலில். வழக்குச் சொற்கள், அசைச் சொற்கள், ஐம்பால், மூவகை இடம் போன்ற சொற்கள் இடம்பெறுகின்றன. ஒரு பனுவலில் அசைச் சொற்கள் இடம் பெறுமாயின் அச்சொற்கள் எவை? ஏன் வருகிறது? அதன் தேவை என்னவென்று அறிந்த ஒருவனால் மட்டுமே சரியான பொருள் புரிந்துகொள்ள இயலும். மொழியில் பொதுச்சொற்கள் பொருள்ப் புலப்பாட்டிற்கு உதவுகின்றன.
நன்னூலில் உரிச்சொற்கள்
உரிச்சொற்கள் ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாய் திகழும் சொற்கள். ஒரு சொல் பல பொருளுக்கு உரிமை உடையதாக இருக்கும். இது மொழியில் பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயரடையாகவோ, வரும். உரிச்சொற்களை நன்னூலார்,
அதாவது உரிச்சொற்கள் இசை,குறிப்பு ,பண்பு என்று பல்வேறு தன்மைகளைக் குறிப்பதாய் ஒரு குணம் தழுவியதாயும் பல குணம் தழுவியதாயும் பெயர் ,வினைகளை விட்டு நீங்காததாய் செய்யுளுக்கே உரித்தாய் வருவது உரிச்சொல். என்று கூறுகின்றது.
சான்றாக,
\கடிமனை – காவல்
கடிவாள் – கூர்மை
கடிமிளகு – கரிப்பு
கடிமலர் – சிறப்பு
இம்மாதிரியான சொற்கள் பொருள் புரிந்து கொள்வதில் இடர்பாடு ஏற்படுத்துகின்றன கடிமனை எனும் சொல்லில் கடி என்பது காவலை உணர்த்தும் என்பது அறிந்தவனால் மட்டுமே அச்சொல்லின் பொருளை உணர முடியும். ஆனால் பொருள்nகோளியல் துறையில் கடி என்ற சொல்லின் பொருளை அறியாத வாசகன் வேறொரு பொருள் கொள்ள முடியும். அதனால் பொருள்கோளியல் துறையில் உரிச்சொற்களுக்கு பொருள் கொள்வது வாசகனைப் பொருத்தது எனக்கூறுகின்றது,
நன்னூலில் ஒப்புருச்சொற்கள்
நன்னூலில் சொல் தொடர்பற்ற பல பொருளைக் குறிக்கும் சொற்களை ஒப்புருச் சொற்கள் என்பர்.
“மரமல் லெகின் மொழி இயல்பு அகரம்
மருவ வலிமெலி மிகலுமாகும்” (நன்னூல்:12)
எகின் என்ற சொல்லுக்கு மரம், விலங்கு, அன்னம் என்னும் பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சொல்லின் பொருள் மாறுபட்டு கொண்டே இருக்கும். அப்பொருள் புலப்பாட்டிற்கு வாசகனின் சமூகம், அரசியல் சூழலே காரணமாக இருக்கின்றன. இம்மாதிரியான சொற்களை பொருள்கோளியல் துறையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கின்றனர்.
முடிவுரை மொழியில் இலக்கணம் இலக்கியத்தை ஒரு வரைச்சட்டகத்துல் அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவ்விலக்கணங்களை மேலை நாடுகளில் உள்ள பொருண்மையியல், பொருள்கோளியல் போன்ற பல கோட்பாடுகளில் பொருத்திப் பார்க்க இயலுகின்றது.அவ்வகையில் நன்னூல் பொருள்கோளியல் துறையின் பலக் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இலக்கண நூல் ஒரு மொழியை நெறிப்படுத்துவது மட்டுமல்லாமல் இலக்கணத்தை அது தோன்றிய சமூகம், அரசியல், பொருளியல் காரணங்களின் அடிப்படையில் ஆராய இயலுகின்றது. மீண்டும் மீண்டும் இலக்கண நூல்கள் தோன்றுவதற்கான காரணம் மொழியில் ஏற்படும் மாற்றங்களாகும். அவகையில் நன்னூல் 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக சமய அரசியல் காரணங்களை பிரதிபலிக்கிறது. பொருள் கொள்ளும் செயல்முறை முடிவற்ற ஒன்று. ஏனெனில் அர்த்தம் முடிவில்லாத ஒன்று. எந்த ஒரு விளக்கமும் எல்லா அர்த்தங்களையும் தர இயலுவதில்லை. அது தற்காலிகமானதும் வாசகனை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது..பொருள்கோளியல் துறையில் நூலும் வாசகனின் மனநிலையுமே பொருள் புரிதலுக்கு உதவுகின்றன.
துணைநூற்பட்டியல்
1 அரவிந்தன், மு. வை, உரையாசிரியர்கள் மாணிக்கவாசகர் பதிப்பகம்,சென்னை,2008.
2.சுப்பிரமணியன், சா.வே.,தொல்காப்பியம் மூலம்,தமிழ் இலக்கண நூல்கள் ,மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்,மு.ப.2007
3.தண்டபாணி தேசிகர். ச. நன்னூல் விருத்தியுரை, பாரிநிலையம் சென்னை, 1998. மூன்றாம் பதிப்பு.
4.பூர்ண சந்திரன், க தொல்காப்பியத்தை முன்வைத்து சில சிந்தனைகள் பொருள்கோள் ஓர் அறிமுகம், அடையாளம் வெளியிடு, 2021 முதல் பதிப்பு.
5.. முனைவர்.பி.சி.ஜெகதாதமிழ்ச்செல்வன்,முனைவர்,க.தமிச்செல்வன் ,நன்னூல் சொல்லதிகாரம் மூலமும் உரையும்.
ஆற்றல் மிக்க
அரசனின் சினத்துக்கு
ஆளானவர்
அவனிடமிருந்து தப்பிக்க
அவனியில்
எங்கு சென்றாலும்
ஆகிறார்
உயிர் பிழைக்க
இயலாதவராய்…!
குறும்பாவில்…
ஆளும் அரசனின் சினத்திற்கு
ஆட்பபட்டோர் அதிலிருந்து தப்பிக்க எங்கு
சென்றாலும் உயிபிழைக்க இயலாதவரே…!
மரபுக் கவிதையில்…
ஆற்ற லுடனே நாட்டினையே
ஆளும் வல்ல அரசனவன்
சீற்றம் கொள்ளும் வகையினிலே
சீண்டி விட்ட ஒருவர்தான்,
ஆற்றா அச்சம் கொண்டேதான்
அதனில் நின்றும் தப்பிக்க
மாற்ற மாக எங்குபோயும்
மண்ணில் வாழ இயலாரே…!