Normal view

Received before yesterday

இந்த நாள் இப்படி விடிந்தது

26 ஜுலை 2016

’அந்த புத்தகத்தை எப்ப வாங்கிக்கலாம்?’ - சுரேகா நேற்றிரவு அழைத்தபோது எப்படிக் குடுக்கலாம் என்று பேசி இன்று காலை மெரினாவில் வந்து வாங்கிக் கொள்வதாக முடிவெடுத்தோம். காலை அவனே அழைத்தான். நான் மேன்ஷனை விட்டு இறங்கினேன். கையில் அவருக்குக் கொடுக்க வேண்டிய புத்தகமும், சி.ஏ.பாலனின் தூக்குமர நிழலில் - ம் இருந்தது.

வெளியே வானம் மெதுவாக தன் தூறலைத் துவங்கியிருந்தது. புத்தகத்தை மறைத்துக் கொண்டே நடந்தேன். மேன்ஷனிலிருந்து இறங்கி வலது புறம் திரும்பி, இடது வலதாய் திரும்பினால் சேப்பாக்கம் ஸ்டேடியம் சாலை வந்தது. இப்போது தூறல் இன்னும் வலுவாக ஆரம்பிக்கவே ‘நீ ஸ்டேடியம் முன்னாடி வந்துடு’ என்றேன் சுரேகாவிடம்.

நான் நடக்கவும் அவன் வரவும்.. இருவருமாய் அவன் பைக்கில் ரத்னா கஃபே வந்தோம்.

காஃபி. அரட்டை. பகிர்தல்.

‘இங்கதான் பிரபஞ்சன் அடிக்கடி வருவாராம். காலச்சுவடுல தேவிபாரதி ஒரு கதை எழுதிருப்பார்.. கழைக்கூத்தாடியின் இசை-ன்னு. அதுல படிச்சேன்’ என்றேன்.

காஃபியை முடித்துவிட்டு வெளியே வந்து நின்றும் அரட்டை தொடர்ந்தது. இந்த நாடகங்களிலெல்லாம் வருமே.. ‘அதோ.. அவரே வந்துட்டாரே’ என்று. அதுபோல இருந்தது கொஞ்ச நேரத்தில் தோளில் தொங்கும் பையுடன் பிரபஞ்சன் வந்தபோது.

’அடேய்! இப்பத்தாண்டா சொன்ன?’ என்றான் சுரேகா.

பிரபஞ்சன் நேராக உள்ளே சென்றார்.

‘இன்னொரு காஃபி அவர்கூட குடிப்போமா?’

உற்சாகமாக உள்ளே போனோம்.

‘சார்.. நான் பரிசல்.. இவர் சுரேகா’

அறிமுகமும் அதைத் தொடர்ந்து பல பகிர்தல்களும் நடந்தன. பெயர்களைப் பற்றிய பேச்சு வந்தது.

‘இது வானம்பாடிகள்ல எனக்கு வெச்ச பேரு. பாலசுப்ரமணியத்துக்கு சிற்பி. இன்னொருத்தருக்கு புவியரசு. எனக்கு பிரபஞ்சன்’

தற்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகவும், அதற்காகவே பீட்டர்ஸ் காலனி வீட்டில் இருந்து வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் சொன்னார்.

‘மித்தலாஜிக்கல் நாவல்தான்.  ஒரு ராஜா திடீர்னு பெண்ணா மாறிடறான். அங்க அவனுக்கு - அதாவது - அவளுக்கு ஒரு காதலன் செட் ஆகறான்.. அவனே மறுபடி ஆணா ஆகறப்ப அரண்மனைல ராணிகூட இருக்கான். இப்டி ஒரு மாசம்.. அப்டி ஒரு மாசம்.. அப்டி போகுது கதை. ப்ளாட்ஃபார்ம்ல 50 காசு புக்ல ஒருவரிய படிச்சப்ப தோணின கரு’

வெளியே வந்தோம்.

’எழுத்தாளனா இருக்கறதுல இப்ப பொருளாதாரம் ரொம்ப முக்கியத்துவம் வகிக்குது. என் வீட்ல என்னைக் கேள்வி கேட்காம இருக்கறதால போய்ட்டிருக்கு.. ‘

‘ஆமா சார்.. நாமெல்லாம் செல்லம்மாக்களால்தான் வாழறோம்’

’உண்மைதான்.. நான் வேலைக்குன்னு போகல. இப்டியே படிப்பு, எழுத்துன்னு இருந்துட்டேன். குமுதம், விகடன்ல எல்லாம் கொஞ்சநாள் வேலை பார்த்தேன். ஆனா அது எனக்கு ஒத்துவரலை’

‘விகடன்ல வேலை பார்த்தீங்களா?’

‘ஆமாமா.. பாலசுப்ரமணியம் எனக்கு பழக்கம். அவர் 7.30க்க்கு வந்தார்னா.. நான் 7.45க்கு உள்ள இருப்பேன். நாந்தான் மொதலா போவேன். கதைகளைப் படிச்சு அதைப் பத்தி பேசிப்போம். அதான் எனக்கு முக்கியமான வேலை. அவர் மொதல்லயே சொன்னார்.. ‘பிரபஞ்சன்.. நீங்க வெளில இருந்தே வேலை பார்க்கலாமே.. உள்ள இருந்தா உங்களுக்கு சில சங்கடங்கள் வரக்கூடும். உங்களுக்கும் - இன்னொருத்தர் பேர் சொல்லி - அவருக்கும் பிரச்னை வரும்.. அப்டி வந்தா நான் அவங்க பக்கம்தான் நிப்பேன். ஏன்னா அவங்க என்னை நம்பி இருக்காங்க’ன்னார்.”

நாங்கள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். ‘யார் அவர்’ என்கிற கேள்விக்கு விடைகிடைக்காமல் எங்களால் அவர் சொல்கிற அடுத்த எந்த விஷயத்துக்கும் மனம் கொடுத்துக் கேட்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

மெதுவாக சிரித்தவர் அந்த ‘அவர்’ பெயர் சொன்னார்: ‘......... ஆனா கடைசில பாலு சொன்ன மாதிரிதான் ஆச்சு’

‘சினிமா பார்த்தா டிக்கெட் குடுத்து காசு வாங்கிக்கணும். ஒரு சினிமா பார்த்துட்டு டிக்கெட்டை தொலைச்சுட்டேன். நானும் விட்டுட்டேன். வீயெஸ்வி எனக்கு சிறந்த நண்பர். அவர் டெஸ்க்ல இருந்து சத்தமா டிக்கெட் கேட்டார். நான் தொலைச்சுட்டதா சொல்லி.., விடுங்கன்னுட்டேன். வீயெஸ்வி எனக்கு நல்லது பண்ண, ’அவர்’கிட்ட போய் ‘டிக்கெட்டை தொலைச்சுட்டார்.. பணம் குடுத்துடலாமான்னு கேட்டிருக்கார். உடனே ’அவர்’ அதெல்லாம் முடியாதுன்னு, அவர் கேபின்லேர்ந்து என் டெஸ்குக்கு வந்து அதெப்படி தொலைக்கலாம்னு ஆரம்பிச்சு..’

‘நீங்கதான் கேட்கவேல்லியே..’

‘ஆமா.. ஆனா அவங்க அப்டித்தானே ஆரம்பிப்பாங்க. அது எங்கங்கயோ போய்.. ப்ச். விடுங்க’
அப்போது அங்கு கவின்மலர் வந்தார்.

அவருடன் மீண்டும் ஒரு காஃபிக்கு பிரபஞ்சன் உள்ளே போக, ‘நாங்க ஏற்கனவே ரெண்டு ஆச்சு சார். கிளம்பறோம்’ என்று நின்றுகொண்டிருந்தோம்.

பேசிக்கொண்டிருக்கையில், ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் வந்தார். பைக்கை கடைக்கு நேராக நிறுத்தி இறங்கினார். முன்னே வந்த ஒரு மினிடோர் லோடு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தச்சொன்னார்.

அந்த வண்டி, இடதுபுறம் திரும்பி ஜாம்பஜார் ரோட்டில் நின்றது. இவர் பின்னாடியே போனார்.

’சரி.. போலாம்’ என்று சுரேகா சொல்லி, நடக்க.. நான் தொடர்ந்தேன். டிராஃபிக் கான்ஸ்டபிள் பைக்கை ஒட்டி நடந்தபோது கீழே என்னமோ கிடந்ததைப் பார்த்தேன்.

நூறு ரூபாய்.

அதன் மடிப்பே அது டிராஃபிக் கான்ஸ்டபிளின் பாக்கெட்டில் இருந்ததைச் சொன்னது. சரியாக இல்லாமல், வாங்கியதும் உள்ளங்கைக்குள் மடக்கிச் சுருட்டி யாரோ நீட்ட, வாங்கி அவசரத்தில் உள்ளே வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவரிடம் இருக்கப் பிடிக்காமல் அது வெளியே வந்து விழுந்திருக்கிறது.

‘இன்னைக்கு இது உனக்குக் கெடைக்கணும்னு இருந்திருக்கு’ என்றான் சுரேகா.

அதை எடுத்து.. கொஞ்ச நேரம் கையில் வைத்துக்கொண்டிருந்த நான் கடைக்குள்ளே பார்த்தேன்.
ஹோட்டலின் யூனிஃபார்முடன் இருந்த ஒரு சிறுமி கடையில் போர்டை வைத்து ‘இன்றைய ஸ்பெஷல்’ என்று முத்துமுத்தாக எழுதிக்கொண்டிருந்தார்.

நேரே போய் அவரிடம் கொடுத்தேன். ‘என்னுதெல்லாம் இல்லைம்மா. கீழ கெடந்தது. நீ வெச்சுக்கோ’

வெளியே வந்தபோது சுரேகா என்னைக் கட்டிப்பிடித்து ‘நல்ல காரியம் பண்ணடா’ என்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்க ‘என்ன யோசனை’ என்றான்.

‘இல்லடா... அந்த நோட்டோட டிராவலை நெனைச்சேன்’

வெளியே வந்து பிரபஞ்சனும், கவின்மலரும் ‘இன்னும் போலயா’ என்றார்கள். அவர்களின் இந்தச் சம்பவத்தைச் சொன்னதும் ‘அந்தப் பணத்துக்கே கான்ஸ்டபிள்கிட்ட இருக்கறது பிடிக்கலை. அந்தக் கோணத்துல எழுதுங்க’ என்றார்.

எழுதணும் என்று நினைத்தேன். சொன்னேன். எழுதுவேனா என்று தெரியவில்லை :-)



இனிய இரண்டாயிரத்துப் பதினெட்டு!

நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே யாருக்காவது அட்வைஸிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது அல்லது ‘அட்வைஸ்லாம் இல்ல’ என்று எதையாவது உளறிக்கொண்டிருக்கிறோம். நேற்றைக்கு #வாசகசாலை க் கூட்டத்தில் இறுதி உரை - அதாவது அந்த நிகழ்வின் இறுதி உரை - வழங்கச் சொல்லி, மைக் கொடுக்கப்பட்டபோது அப்படித்தான் ஒரு அறிவுரையை அள்ளிவழங்கினேன். காந்திஜி சிறுவனுக்கு ‘அதிகம் சர்க்கரை திங்காதே’ என்று அறிவுறுத்திய கதை போல, அது கிட்டத்தட்ட சென்ற வருடம் நான் கடைபிடித்தது என்பதால் கொஞ்சம் உறுதியாகவே அந்த விஷயத்தைச் சொன்னேன். 2018ல் இதை எல்லாரும் கடைபிடிக்கவேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.
நம் நியூரான்களில் பரபரவென்று ஓடும் கருத்தோஃபோபியாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கச் சொன்னதுதான் அது. நாட்டில் என்ன நடந்தாலும் உடனடியாக அதைப்பற்றி நாலு வரிகளோ, நாற்பது வரிகளோ எழுதிக் கொட்டாவிட்டால் மனசு அடங்காமல் திரிகிறது.
நிஜத்தில் நம் கருத்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பதே நிஜம். அப்படியும் கருத்துச் சொல்லும் Urge இருந்ததென்றால் தோன்றுவதை எழுதி டிராஃப்டில் போட்டு வையுங்கள். பிறகு அதைப் பற்றி யார் யார் என்னென்ன சொல்கிறார்கள், பேசுகிறார்கள் என்று குறைந்தது 24 மணிநேரங்கள் கவனியுங்கள். ‘அட... இதத்தானே நான் நெனைச்சேன். மொதல்லயே போட்டிருந்தா எனக்கு இந்த 500 லைக்ஸ் கிடைச்சிருக்குமே’ என்று தோன்றும். அப்படிக் கவலைப்படத் தேவையே இல்லை. உங்கள் ஒவ்வொரு லைக்ஸிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அது நீங்கள் எப்போது எழுதினாலும் கிடைக்கும். முதலில்எழுதி, ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேசமயம், ஒருவிஷயத்தில் உங்களுக்கு தீவிரமான, தெளிவான கருத்து இருந்து அதில் நீங்கள் உறுதியாகவும் இருப்பீர்களென்றால் எழுதலாம். இல்லாதபட்சம், அதைப் பற்றிய அறிவும், தெளிவும் உள்ளவர்கள் எழுதியதைப் படியுங்கள். விவாதங்களைக் கேளுங்கள். இணையப் பரிச்சயம் இல்லாத சக நண்பர்களிடம் அதுபற்றி உரையாடுங்கள். 24 மணிநேரம் கழித்து அதைப் பற்றி எழுதும்போது இன்னும் தெளிவும் தீவிரமும் கிடைக்கும்.
இந்த ஒரு சுய ஒழுங்கை மட்டும் கடைபிடித்தால்.. அட்லீஸ்ட் என்னுடைய டைம்லைனாவது நியூஸ் பொல்யூஷனால் பாதிக்காமல் இருக்கும் என்ற சின்ன ஆசைதான் காரணம்.
மற்றபடி, இந்த 2018-ல் இண்டர்நெட் ஹேண்ட்லிங் சார்ஜஸ் இல்லாமல் சினிமா டிக்கெட் புக் செய்யவும், அவரசமாக ஆஃபீஸ் போகும்போது சிக்னலில் சிவப்பு விழாமலிருக்கவும், லேட்டாக வீட்டுக்குப் போகும்போது சிரித்தபடி மனைவி கதவு திறக்கவும், கேட்டதுக்கு டபுள் மடங்காக கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிஃப்ட் தரவும், பர்ஸை கையில் கொடுக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ் அமையவும், நீங்கள் நிற்கும் க்யூ வேகமாக நகரவும், இன்னபிற இனிமைகள் நடக்கவும் வாழ்த்துகள்!

2017 - கற்றுக்கொண்டதும்.. பெற்றுக்கொண்டதும்!

2017. எல்லா வருடங்களையும்போலவே எதையெதையோ கற்றுக்கொண்ட ஆண்டு.
எப்போதும்போலவே எனக்குள் புதுப்புது திறப்புகளை இசையும் வாசிப்பும் திறந்தன. அதேபோல மனிதர்களும்.
ட்விட்டர், ஃபேஸ்புக் மோகமெல்லாம் ஒழிந்து வருடங்களாகிவிட்டது. இந்த இடங்களில்லெல்லாம் லைக்ஸை எண்ணாமல் ஒரு பார்வையாளனாகக் கடந்துபோகும் மனம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு அனுபவத்தை, உணர்வைப் பகிர்ந்து கொள்ள இவற்றை நாடுகிறேன் என்பதில் சந்தேகமில்லை. நேரடியாக லைக்கோ, கமெண்டோ இல்லாவிட்டாலும் இன்னாருடைய கண்கள் இந்தப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கும் என்ற உணர்வே போதுமானதாக இருக்கிறது. ஒரு வாழ்த்தைப் பெற்றதைப் போல உணரவைக்கிறது.
ட்விட்டரில் #135DaysOfKalyanji என்றொரு Hashtag ஆரம்பித்து 135 நாட்களுக்கு கல்யாண்ஜியின் புத்தகங்களில் இருந்து எனக்குப் பிடித்த Quotesஐப் பகிர்ந்து கொண்டேன். கைப்பட எழுதி, லே அவுட் செய்து தினமுமொன்றாகப் பகிர்ந்தேன். மனத்திருப்தியாக அமைந்த நாட்கள் அவை. இப்போதும் கூகுளில் #135DaysOfKalyanji என்று தேடினால் கிடைக்கும். கல்யாண்ஜியிடம் அதை யாரோ பகிர ‘என் கையெழுத்துதான் இது’ என்றிருக்கிறார். நான் அவரிடம் ‘அது என் கையெழுத்து’ என்று சொன்னபோது ஆச்சர்யப்பட்டார். என்னுடையது போலவே இருந்ததே என்றார்.
ஸ்கிரீன் டைம் எப்போதும்போல அதிகம்தான். 2018லாவது குறைத்துக்கொள்ள பிரயத்தனப்படலாமென்றிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல வெறித்தன வாசிப்பைத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமாக சிறுகதைகள். லாசரா, ரேமண்ட் கார்வர், யங் ஹா கிம், அரவிந்த் அடிகா, தஞ்சை பிரகாஷ், எஸ்ரா, ஜெமோ, கந்தவர்வன், சர்வாகன், டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், ஜெயந்தன் என்று கலந்து கட்டிய வரிசை. ஒரு புத்தகம் என்றெல்லாம் இல்லாமல், ஒரு நாளைக்கு இரண்டு சிறுகதைகள் என்ற இலக்கில் பறக்கிறது குதிரை. நல்ல காபிக்குப் பிறகு சில மணி நேரங்கள் ஒன்றுமே குடிக்காமல் இருப்போமே, அப்படி ஒரு சில கதைகளின் தாக்கத்தால், சில நாட்களுக்கு ஒன்றுமட்டும்தான். கிண்டில், நல்லதொரு துணைவனானது இந்த வருடம்தான்.
நண்பன் கட்டதுரை ‘30 Days Walking Challenge’ என்ற ஒன்றை ஆரம்பிக்க, 5 கிமீ, 10 கீமீ என்று தினமும் நடைப்பழக்கம் ஆரம்பித்தது. அதுவும் மழையில் இயர்ஃபோனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நடக்கும் அனுபவமெல்லாம் கிடைத்தது. ஒருநாளைக்கு - 3 தவணைகளில் - 33 கிமீ நடந்ததெல்லாம்.. நடந்தது.. நடக்கும்போது, ஆடியோ புக்ஸ் கேட்பது, சில நல்ல உரைகளைக் கேட்பது என்று அந்த நேரமும் பயனுள்ளதாய் அமைவது டபுள் தமாக்கா! கூடவே அவன் பரிசளித்த்த அடிடாஸ் ஷூவும்.
பாட்டு கேட்பதில் புதிய உத்திகளை இந்த வருடம் முயன்றேன். ஒரு பாடலை, அதில் வரும் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியை மட்டும் உன்னிப்பாக கவனித்து ஏழெட்டு முறை கேட்பது.. அதைத் தொடர்ந்து அந்த இசைக்கருவி வேறு பாடல்களில் எப்படியெப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சங்கிலித்தொடர் போல கேட்பது இப்படி. கோரஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறும் பாடல்கள் என்னென்ன இருக்கின்றன, எப்படியெப்படியெல்லாம் கோரஸ் பாடப்பட்டிருக்கின்றன.. இப்படி. இப்படித்தான் ‘இசையில் தொடங்குதம்மா’வும், ‘மகராஜனோடு ராணி வந்து சேரும்’ பாடலும் கடந்த ஒரு வாரமாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

​எப்போதும்போல மனிதர்கள் நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காலமெல்லாம் கற்றுக்கொண்டாலும் நமக்குப் போதவில்லை. சின்னத் துணுக்குறலுக்கும் ‘என்ன ஆச்சு கிருஷ்ணா?’ என்று கேட்கும் நண்பர்களையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவர எண்ணி, சில எழுதினேன். எழுதியவற்றில் இரண்டுதான் எனக்குப் பிடித்தது. மற்றவற்றை மீண்டும் படிக்க எண்ணி, ஓரம்கட்டி வைத்தேன். ஒரு சில எழுத்துக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்ந்து கொண்டேன்.
1993லிருந்து எனக்குக் கனவாக இருக்கும் ஆனந்தவிகடனில் பணி என்பது நேரடியாக நிறைவேறியது இந்த ஆண்டுதான். பணியின்பொருட்டே நிறைய படிக்க நேர்ந்ததும், மகிழ்ச்சியான விஷயம். ஏஜண்ட் வீட்டுக்கே சென்று முதல் ஆளாக வாங்கிய ஒரு பத்திரிகையின் ஒவ்வொரு பக்கங்களையும் வெளிவரும் முன்னே ரசித்துப் படித்து கருத்தைப் பகிர்ந்து என்று.. மனநிறைவான விஷயம். பணியையும் தாண்டி, அதில் என் பெயரும் வரவேண்டும் என்று அவ்வப்போது எழுதியும் கொண்டிருந்தேன். ஒரே இதழில் ஆறு படைப்புகளெல்லாம் வந்தது இந்த வருடம்தான். இந்த வருடத்தின் ஆகச்சிறந்த மனநிறைவு.. இந்த விஷயம் எனலாம்.
2018ல் இன்னும் படைப்பு சார்ந்து தீவிரமாக இயங்கும் எண்ணம் இருக்கிறது. சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவருவது சர்வ நிச்சயம். குறைந்த பட்ச இலக்காக, ஒன்று இருக்கிறது.
நாளைக்குத் தேதி எழுதும்போது, 2017 என்று முடிக்காமல் இருக்க வேண்டும்.

எழுதிய நாள்: 31.12.2017

ஒரு மொட்டையின் கதை!


டிசம்பர் 29 2017
--- 
"வரியெல்லாம் சேர்த்து மொத்தமா 1000 ரூவாய்க்குள்ள சொல்லுங்கம்மா” என்று கேட்டுக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அது ஒரு யுனிசெக்ஸ் சலூன். ஹேர்கட் செய்ய நான் அங்கு சென்றிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் அவரது மகள்.

”அப்படின்னா இந்த Pack போட்டுக்கோங்க” என்று எதையோ காட்டினார். “டேக்ஸ்லாம் சேர்த்து 890 ரூவா வரும்”

அந்த அம்மா தலையாட்ட, மகள் முகத்தில் அதிருப்தி. “அதெல்லாம் போதும்ப்பா. போ” என்று அம்மா சொல்ல, உள்ளே சென்றார் மகள்.

சோபாவில் அமர்ந்திருக்கும்போது, அந்த அம்மாவின் முகம் வாடியிருந்தது. நிலைமையைச் சமாளிக்கப் பேச்சுக்குடுத்தேன். கொட்டித்தீர்த்தார் அவர்.

“எல்லாம் என் தப்புதான். சின்ன வயசுல நல்லா விளையாடறானு கோ-கோ விளையாடவிட்டேன். இப்ப என்னடான்னா இவ்ளோ கறுத்துட்டா ” என்று அங்கலாய்த்தபடி ஆரம்பித்தார்.

விஷயம் இதுதான். அவரது மகள் கறுப்பாக இருந்தார். அதில் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை. “இப்ப காலேஜ் படிக்கறா. கோ-கோல ஸ்டேட் லெவல்ல விளையாடிருக்கா. ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவா. இவளே கொரியோகிராஃபும் பண்ணுவா. இப்ப காலேஜ்ல ஏதோ ஃபங்ஷனுக்கு டெய்லி ப்ராக்டீஸ் போகுது. ’கறுப்பா இருக்க. அதுனால நீ சொல்லிக்குடுத்துட்டு, ஆடறப்ப நாலாவது வரிசைல போய் ஆடு’னு சொல்லிட்டாங்கனு இன்னைக்கு ஒரே புலம்பல். அதான் வந்தோம்” என்றார்.

நானும், அந்த சலூனில் பொறுப்பில் இருந்த பெண்மணியும் அவருக்கு எடுத்துச் சொன்னோம். ‘அழகுன்றது வெளில இல்லம்மா.. கறுப்புங்கறது வெறும் நிறம்தான்’ போன்ற எல்லா க்ளிஷே வசனங்களையும் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தோம். “எல்லாம் நானும் சொல்லிருக்கேன் தம்பி. யாரோ ஒருத்தர் டெய்லியும் கிண்டல் பண்றாங்க. ‘ஏண்டி இவ்ளோ கறுப்பா இருக்க?’ன்னு கேட்கறாங்கனு சொல்லுவா.” என்றார் அந்த அம்மா. அந்த சலூன் பொறுப்பாளினி, ‘அப்பப்ப இங்க கூட்டிட்டு வாங்கம்மா, சர்வீஸ்க்கு அல்ல.. நான் பேசறேன் அவங்ககிட்ட” என்றார். 

நான் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. அங்கிருந்து ஹேர்கட் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். குளித்து முடித்து, இந்த விஷயத்தைச் சொன்னேன். “யாரோ என்னமோ சொல்லணும்னு இருக்கணும். அதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா?” என்று உரையாடல் தொடர்ந்தது. எனக்கு போனமாசமே மொட்டை போட ஆசை இருந்தது. அப்போது ‘எதுக்கு? சும்மா இருங்க’ என்ற உமா, “இப்ப போட்டுக்கவா?” என்று கேட்டதும் ‘ஓகே... உங்க இஷ்டம்’ என்றார்.

சட்டென்று கிளம்பி, கீழே வந்து ஒரு பார்பர் கடையில் மொட்டை போட்டுக்கொண்டேன்.




இரண்டு நாட்களாக ‘எதுக்கு மொட்டை.. எந்தக் கோயில்... அய்ய.. நல்லாவே இல்ல. பார்க்கவே சகிக்கல. உங்க மொத்த அழகும் முடில மட்டும்தான் இருந்தது போலயே’ என்று எக்கச்சக்க கமெண்ட்ஸ்!

ஒரே மாதிரி இருக்கறதுல என்ன த்ரில் இருக்கப்போவுது? ல்ல?

.

❌