Normal view

Received before yesterday

சொல்லாழி, குகை, ஆட்டக்கலாட்டா – கடிதம்

22 February 2025 at 18:31

குகை- ஜெயமோகன்

அன்புள்ள ஜெ,

சதீஷ் மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.

இந்தச் சந்திப்பின் முன்னரும் , பின்னரும் எழுதிய சிறு குறிப்பு. குகை கதைக்கு நன்றி, அதன் பின் நேற்று காதுகள் மீண்டும் வாசித்தேன், நல்ல அனுபவமாக இருந்தது.

மனக்குகை ஓவியம் 

சென்ற முறை இந்திராநகர் Atta Galatta வில் நடந்த கதை வாசிப்புக் கூடுகையைப் பற்றி முக்கால் எழுதியது இருக்கிறது. கூடுகை இரண்டு குறுநாவல்கள் பற்றியது 1) கிளி சொன்ன கதை 2) தீ அறியும்.  கூடுகைக்குப் பின், எவ்வளவு மனங்கள் உண்டோ அவ்வளவு பார்வைகள் உண்டு என்று மட்டுமே சொல்ல முடியும். எனக்கும் வாசிப்பில் சில திறப்புகள் கிடைத்தன. கேட்டல் இனிது. அதற்குள் நாளை அடுத்த கூடுகை வந்துவிட்டது

Atta Galatta இடத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இந்த புத்தகக் கடையில் ஒரு மேஜையை கலந்துரையாட நமக்கென்று ஒதுக்குகிறார்கள். புத்தகத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். உள்ளேயே காபி டீயெல்லாம் கிடைக்கிறது. எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். உட்கார்ந்து பேச மிக அழகான இடம். வசதியான இருக்கைகள், சிலபேர் லேப்டாப் , டேப்லட் போன்றவைகளை மேஜையில் வைத்துப் பேசினார்கள்.

இந்த முறை குகை என்ற குறுநாவல்இந்தக் கதை கடந்த சில நாள்களில் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

எப்போதாவது மெட்ரோ ரயிலில் அலுவலகம் செல்வதுண்டு. இது பெரும்பாலும் பறக்கும் ரயில். ஆனால் இது பாதாளத்தில் முதலில் செல்லும் ஒரு இடம் இருக்கிறது. அதுவரை பரந்து விரிந்து, கண் பார்க்கும் வரை தெரிந்த உலகம், ஒரு கணத்தில் குகைக்குள் செல்லும் போது இல்லாமல் ஆகும்.எல்லோருக்குள்ளும் ஒரு சிறு துணுக்குறல் ஒரு நொடியாவது நிகழும் என்றே நினைக்கிறன். வெளியே  பார்க்க ஒன்றும் இல்லை. விமானம் டேக் ஆப் ஆகிப் பறக்கும் அந்த நொடி போல் , எந்த குகையும் மனதை எதோ செய்கிறது.

ஒருவர் நாட்கணக்காய் நீண்டபடியே செல்லும் ஒரு நீண்ட குகைக்குள் பயணம் செய்ய வேண்டும் என்றால் எப்படி இருக்கும். இந்தப் பயணத்தின் சக மனிதர்களையும் இவரே கற்பனை செய்கிறார் என்றால்? எப்போதாவது தேவைக்கு மட்டும் குகையை விட்டு வெளியில் வந்து செல்ல வேண்டும் என்றால் ? இதற்க்கு மேல் இந்த குகையுமே இவர் கற்பனை என்றால் ?

பல வருடங்களுக்கு முன் , நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் , ஊரில் இருக்கும் நாட்களில் நூலகத்திற்குச் செல்வது வழக்கம். பெரும்பாலும் நானும் நூலகரும் மட்டுமே இருப்போம். நாளில் முதல் வேலையாய் யாரும் நூலகம் செல்ல மாட்டார்கள். அப்போது மூன்றாவதாய் உடன் சேர்ந்த ஒருவரைத்தான் இங்கு சொல்ல வேண்டும். அப்போது இவர் பன்னிரண்டு படித்து முடித்த பையன். இவருடைய அப்பா நூலகரின் நெருங்கிய நண்பர். ஏனென்றால் அவரும் நூலகர் , வேறு ஒரு ஊரில், ஆனால் இருப்பது இங்கே. ஊரில் உரக்கடை வேறு வைத்து நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராமல் தற்கொலை செய்துகொண்டார். கடன் பிரச்சனை என்று நூலகர் சொன்னார்.குடும்பம் சிக்கலில் விடப்பட்டது. இந்த நிலையில் தான் பையனை நூலகத்தில் பார்த்தேன். ஒரு நாள் அவர் பெயரை கார்த்திக் M.B.B.S , M.D , F.R.C.S   என்று எழுதி கையெழுத்துப் போட்டிருந்தான். இரண்டு மூன்று பக்கங்கள் பின் தள்ளிப் பதிவேட்டைப் பார்த்தேன். எல்லா நாட்களும் அப்படியே எழுதப் பட்டிருந்தது. நான் அதை பார்ப்பதை அவன் பார்த்துவிட்டான். வேறு யாரும் இல்லை. இருக்கும் ஒரு மேஜையில் எதிரே அமர்ந்தேன். ‘எப்படின்னாலும் டாக்டர் ஆயிரணும் னா… ‘ என்று என்னிடம் சொன்னான் . பன்னிரண்டாவதில் தோற்று விட்டான் என்று சொன்னார்கள். ‘ ஒரு ரெண்டு தடவை மதுரை மெடிக்கல் காலேஜ் நானே போய்ப்  பார்த்தேன்செக்யூரிட்டி உள்ள விடமாட்டாங்கான்உள்ள போயிட்டா சீட்டு வாங்கிருவேன்உங்களுக்கு யாரும் தெரியுமான்னா.. ‘ என்று தொடர்ந்து கேட்டான். ‘இல்லப்பா..ஆனா அதுக்கு என்ட்ரன்ஸ் எல்லாம் இருக்குல்ல..’ என்றேன். ‘உள்ள போயிட்டா அப்புறம் தெரியாம படிச்சி வெளிய வந்துறலாம்னா..உங்களுக்கு ஆள் யாரும் தெரியுமா..உள்ள மட்டும் போயிட்டா போதும்என்று மீண்டும் சொன்னான்.  எனக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. பையன் நல்ல சிவப்பு, அழகாக இருப்பான். இஸ்திரி போட்ட முழு சட்டை , கைகளை இரண்டே மடிப்பு மடித்து விட்டிருப்பான். பின் கை கட்டி யோசித்த வண்ணம் நடப்பான். ‘விசாரிச்சு பாக்கேன்என்றேன். மீண்டும் ஓரிரு வாரங்களில் மதுரை மருத்துவக் கல்லூரி செல்வதாகச் சொன்னான். கிடைக்கும் வரை விடப்போவதில்லை என்றான். நூலகர் வீட்டில் அம்மா சொல் கேட்பதில்லை என்று சொன்னார். அப்பா மறைந்த பின் புத்தி பேதலித்து விட்டது என்று கூறினார்.   

அந்த உலகம் நமக்கு பிடிபடுவதே இல்லை. எப்போதும் மனநிலை பிறழ்ந்தவர்களை கூர்ந்து பார்க்கிறேன். ஊருக்கு வண்டியில் போகும்போதும் , வரும்போதும் தன்னந்தனியாய் , பல கீலோமீட்டர்களுக்கு ஒன்றும் இல்லாத , தலைபிளக்கும் வெய்யிலில் . கையில் ஒரு துணிப்பையுடன் , அழுக்கு உடுப்புகளுடன் , சடைக்கற்றை தொங்க தனியே நடக்கும் ஒருவரையாவது பார்க்கிறேன். அவர் மனதில் என்ன ஓடும் என்பது எனக்கு எப்போதும் பெரிய கேள்வியாய் உள்ளது

நான் சைக்கிளில் செல்லும் போது ஓரிடத்தில் ஒரு பஸ் ஸ்டாப்பில் வசிக்கும் மனிதரை தினமும் பார்க்கிறேன். நீளமான உட்காரும் நாற்காலிகளுக்குப் பின் நாலைந்து பிளாஸ்டிக் பிக் ஷாப்பர் பைகள். துணிகள் மற்றும் நாம் குப்பை என்று சொல்பவை, பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை. சில தினங்களில் நாற்காலியில் கைவைத்து கீழே அமர்ந்திருப்பார். பக்கத்தில் உள்ள அடுத்த நிறுத்தத்தில் மட்டுமே நாற்காலியில் அமர்வார். எப்போதும் படுப்பதில்லை. இவரைப் போல் ஊரில் ஒருவர் சென்ற முறை ஒரு நாலைந்து பிக் ஷாப்பர் வைத்து ஒரு மூடிய கடைமுன் வாழ்ந்துகொண்டிருந்தார். இம்முறை சென்றபோது கடை திறந்து விட்டது. அன்று நான் டீ குடிக்கும் கடையில் எதிரே டீ குடித்துக் கொண்டிருந்தார். வாழ்வை இப்போது இரண்டு பைகளில் சுருக்கி விட்டார். எங்கும் இப்போது இரண்டு பைகளுடன் காண்கிறேன். என்ன நினைக்கிறார் என்று அறிய பேசிப் பார்க்க வேண்டும் என்று தோன்றும், எதோ உள்ளிருந்து அணை போடுகிறது. கொஞ்சம் பார்த்தால் தப்பில்லை, ஆனால் ரொம்பப் பார்த்தால் சிக்கலாகலாம். அன்று ஒருவர் பள்ளிக்கட்டடத்தின் முன்னிருந்த மிகப் பெரிய போர்டை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார். நானும் அவர் பின் நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அவர் பார்த்துக்கொண்டிருத்த பலகையில் மாணவர்களின் படங்கள் , 2024 நடந்த போட்டியில் பள்ளி வென்றது பற்றி  எழுதப் பட்டிருக்கிறது. இவர் கையில் இருப்பது ஒரு இருபது ரூபாய் நோட்டு. இரண்டு கை விரித்து நோட்டை கண் கீழே பிடித்திருக்கிறார். மடக்கிய இடது உள்ளங்கையில் ஒரு இரண்டு ரூபாய் நாணயம். ஒரு முறை அண்ணாந்து போர்டைப் பார்ப்பார். கண் கீழே வந்து நோட்டைப் பார்ப்பார். பின் கையை விரித்து நாணயத்தைப் பார்ப்பார். இதை ஒரு பத்து முறையாவது நான் பின்னால் இருந்து பார்க்க செய்துகொண்டிருந்தார். எனக்கு எதுவும் பிடிபடவில்லை. ஒரு கணத்தில் 2024-ல் உள்ள 20-தை , கையில் உள்ள 20 ரூபாய் தாளையும், உள்ளங்கையில் இருக்கும் நாணயத்தின் இரண்டையும் பார்த்து மனதில் ஒரு புரிதலை  வரைகிறார் என நினைத்தேன். ஒரு சிலர் எங்கள் இருவரையும் பார்த்துச் செல்வதைப் பார்த்து டீ கடைக்குள் நுழைந்தேன். தினமும் ஒரு ஒரு நம்பரும் கண்டறிவது இவ்வளவு பரவசமாகுமா, இல்லை துன்பமா? ஒரு ஒரு சொல்லும் இப்படித்தானா?  . My Stroke of Insight – Jill Bottle Taylor எழுதிய ஒரு புத்தகம். ஒரு நாள் மூளை ஸ்ட்ரோக்கில் அவர் நினைவாற்றல் அழிகிறது. அந்தக் கணத்தில் அவரே மருத்துவமனைக்கு போன் செய்து , முதலுதவி வரவழைத்து மருத்துவமனையில் சேர வேண்டும். ஆனால் அவருக்கு நம்பர் என்றால் என்ன என்பது அழிந்து போகிறது. அவற்றை படமாய் நினைத்து எவ்வாறோ தப்பிப் பிழைக்கிறார் என்பது ஞாபகம் வந்தது. எனக்கு இப்போது இவர் என்ன நினைக்கிறார் என்பது கேள்வியாய் நின்றது

ஆனால் குகை நாவலில் வருவது ஒரு மனம் பிறழ்ந்தவரின் சித்தரிப்பில் வரும் கதை. அதுவே இதை சிறப்பாக்குகிறது. அவர் மன ஓட்டம் படிக்கும் நமக்கு வெளிப்படுகிறது. முதல் முறை படிக்கும்போது அவர் சொல்லும் கதை மிகவும் அழுத்தமாக நம்மை அவர் பக்கம் இழுக்கிறது. அவரது பிறழ்வு , அங்கங்கே கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஆனால் மேலோட்டமாய் படித்தால் கதை கச்சிதமாய் இருக்கும். எங்கும் சந்தேகம் எழுவதில்லை. மீண்டும் ஒருமுறை படிக்கும் போது, ஒரு துணுக்குறல் ஏற்படுகிறது

அவரிடம் அம்மா மட்டும் கொஞ்சம் பேசுவார். மனைவி உள்பட வேறு யாரும் பேசுவதில்லை. புது வீட்டில் பெரிய அறை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். அம்மா தூக்க மாத்திரை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். சிலசமயம் மாத்திரையை வாயில் மட்டும் வைத்து உள்ளே சென்று துப்பிவிடுகிறார். சிலமுறை கையில் வாங்கி அப்புறம் தின்பதாகச் சொல்லி அறை உள்ளே சென்று விடுகிறார்.

அவர் நூலகத்தில் படித்த கலைக்களஞ்சியங்களையும், ஆங்கிலேயர் பற்றிய தரவுகளையும் வைத்து தன் வசிக்கும் வீட்டின் கீழே  (வடமாநிலம் என நினைக்கிறேன்) ஒரு குகையை அவரே கண்டுபிடுக்கிறார். இங்குதான் கதை பாய்ச்சல் போடுகிறது. வீட்டைத் தோண்டி குகையை கண்டறிவதும் , படிப்படியாக தினமும் உள்ளே நுழைந்து ஒன்றோடொன்று இணைக்கும் பல குகைகளை கண்டுபிடிப்பதும், பின்னர் வரைபடத்துடன் அது ஊரையே இணைக்கின்றதென்பதும் வெகு அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. என்ன பாறை , ஏன் இங்கு இப்படி பாறை, எப்படி அவர் அந்த தொடர் சங்கிலியை கண்டு பிடுக்கிறார் என்பதெல்லாம் மிக நுணுக்கமாய் வருகிறது.

அவருக்கு இப்போது நகரின் கீழ் குகை வழியாக மேலே தெரியும் எந்த இடத்திற்கும் செல்ல முடியும். மேலே பேசுபவர்களின் குரல் கேட்கிறது. அப்பா நினைவு வருகிறது. ஓரிடத்தில் தினமும் அப்பாவிற்குப் பிடித்த ஆர். டி .பர்மன் பாடல்கள் கேட்கிறார். ஆங்கிலேயர்களைப் பார்க்கிறார். கடந்து செல்கிறார்கள். பார்த்தவுடன்குட் மார்னிங், சார்என்கிறார். அவர்கள் வழிக்கு வராதே என்கிறார்கள், இவரும் போவதில்லை. இந்தப் பெரிய ரகசியத்தை அம்மாவிடம் முதலில் ஒரு முறை  சொல்ல நினைத்து சொல்லாமல் , பின்னர் சொல்கிறார். இந்த இடம் அழகானது. இவர் எப்படி வீட்டின் கீழே சுரங்கம் இருக்கிறது, ஊரையே இணைக்கிறது, ஏன் வெள்ளைக்காரன் இதைக்  கட்டினான் என்று விளக்கிச் சொல்கிறார்.   மேலும் இப்போது ஊரில் அணு குண்டு விழுந்தால்  தான் மட்டும் தப்பித்து விடுவேன் என்று சொல்கிறார். குண்டு வெடித்து சில நாள் கழித்து வெளிவருவேன் என்கிறார். இவ்வளவுக்கும் அம்மா அவருக்கு சோறு போட்டு குழம்பும் ரசமும் ஊற்றிய வண்ணம், குழம்பும் ரசமும் சாப்பாடும்  மட்டுமே பதில் பேசுகிறார்.  தன்னை வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் தான் ஜூனியர் டாக்டரிடம் மிரட்டி தான் உடலுறவு கொண்டதை அதே இடத்தில்  குகையின் கீழே இருந்து  கேட்டதாக சொல்கிறார்

யாருக்கும் தெரியாமல் கீழே இருந்து பூமியை பிளந்து கொண்டு மேலே தோன்றவேண்டும் என நினைக்கிறார். அவரே நினைத்து அவர் தோன்றும் இடம் இருவர் இருக்கும் ஒரு படுக்கையறை. பார்த்த அவரை துரத்துகிறார்கள், குகையும் வழி காட்டாமல் மூடி விடுகிறது.

இந்தக் கதையைப் படித்ததும் நினைவுக்கு வருவது, Beautiful Mind திரைப்படம். இதுவும் உள்ளிருந்து சொல்லப்படுவது.நீங்களும் ஹாலுசினேஷன் உள்ளேயே இருந்திருப்பீர்கள், ஆனால் எது உண்மை, எது மாயத்தோற்றம் என்பது நடந்தபின் தான் தெரியும்.

எம்.வி.வி யின் காதுகள் இதை நெருங்கிய படைப்பு. இந்தக் கதையின் மகாலிங்கம் அவரே என்று அவர் சொல்லியிருக்கிறார். 20 வருடம் காதில் ஒலிக்கும் கெட்ட வார்த்தைகளுடன் வாழ்ந்திருக்கிறார். எப்படியோ வெளியே வந்து இந்தக் கதையையும் எழுதியிருக்கிறார்.

பின்சேர்க்கை

கூட்டத்திற்குப் பின் எழுதியது

நான் செல்லும் போது தேவதேவன் சார் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார். யுவ புரஸ்கார் பரிசு பெட்ரா லோகேஷ் ரகுராமன் இருந்தார். ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்கள் பலர் இருந்தனர். மிகத் துடிப்பான நிகழ்வு. நான் படிக்கத்  தவற விட்டது, கடைசியில் நடந்தது பொருந்தாக் காமம் என்பதையே என நினைத்தேன். பலர் பல்வேறுவிதமாய் படித்திருந்தனர். ஸ்வேதா சொல்லிய மேற்கோள் இந்த தான் கதையின் மிகச் சிறந்த சுருக்கம் என நினைத்தேன்: “ஒரு ஓவியன் சிறையில் அடைந்திருந்தாலும், அவனுக்கு உரிய வானத்தை அவனே வரைந்து , பறந்து வெளியேறுவான்

முத்து,

பெங்களூர் 

https://muthuvishwanathan.blogspot.com/2025/02/blog-post.html

❌