Normal view

Received before yesterday

266. BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 14

ரஷ்யா. இன்றைய உலகின் மிகப்பெரிய நாடு. உடையாமல் சோவியத் ஒன்றியமாக இருந்தபோது இன்னும் மிகப்பெரிய நாடு. உலக வரைபடத்தை நீளவாக்கில் வைத்து 24 துண்டுகளாக வெட்டினால், ஒவ்வொரு துண்டையும் கடக்க சூரியன் ஒருமணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் Time zone என்று பெயர். இந்தியாவைச் சூரியன் கடந்துபோக 2 மணிநேரத்திற்கு மேலாகும். ரஷ்யாவைக் கடக்க 11 மணிநேரமாகும்! அதாவது ரஷ்யாவின் கீழைக் கடைசி குடிமகன் இரவு தூங்கப் போனால், மேலைக் கடைசி குடிமகன் காலையில் அப்போதுதான் கண்விழிப்பான். ஆசியா ஐரோப்பா என இரு கண்டங்களில் பரவிய பெரிய நாடு. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து கஜகஸ்தான் நாட்டு எல்லைவரை செங்குத்தாக நீளும் உரல் (Ural) என்ற மலைத்தொடர் உண்டு. அதுதான் இவ்விரு கண்டங்களுக்கான வரப்பு. மேற்கே ஐரோப்பிய ரஷ்யா, கிழக்கே ஆசிய ரஷ்யா. சிந்து நதிக்கு அப்பால் உள்ளதெல்லாம் இந்தியா எனவும், சிரியாவுக்குத் தெற்கே இருப்பதெல்லாம் பாலஸ்தீனம் எனவும் அன்றைய உலகம் பெயரிட்டது போல, ரஷ்யா என்றால் பொதுவாக ஐரோப்பிய ரஷ்யா தான். ஆசிய ரஷ்யாவிற்குத் தனியே ஒரு குணமுண்டு, அதற்குச் சைபீரியா என்றொரு பெயருண்டு.

ஐரோப்பிய மாஸ்கோ நகரில் இருந்து, ஆசிய பசிபிக் கடற்கரை நகரான விளாடிவாஸ்டாக் வரை இரயிலால் இணைக்க அன்றைய ஜார் மன்னர்கள் ஓர் இரயில்பாதை திட்டம் கொண்டுவந்தார்கள். 9289 கிமீ. 8 time zones. அதாவது சூரியன் கடக்கவே 8 மணிநேரமாகும். மனிதன் இரயிலில் கடக்க இன்றைக்கு 8 நாட்களாகும். 26 ஆண்டுகள் கட்டினார்கள். கட்டி முடித்தபின் ரஷ்யப்புரட்சி வந்தது. உலகப்போரும் ஜார் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தன. பெரும்பாலும் சைபீரியாவின் குறுக்கே செல்வதால் Trans-Siberian railway என்று பெயர். இன்றுவரை மிகநீளமான இரயில்தடம் இதுதான். ஒரே இரயிலில் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய, உலகின் மூன்றாவது நீண்ட பயணமும் இதுதான். ஒருகாலத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் முதல் விளாடிவாஸ்டாக் வரை ஓடிய இரயில் பயணம்தான் உலகின் மிக நீண்டது. மாஸ்கோ முதல் வடகொரியா தலைநகர் பியொங்யாங் வரை ஓடும் இரயில்தான் இரண்டாவது இடம். இவை இரண்டும் Trans-Siberian railway வழியேதான் போகின்றன. உலகில் மிக நீண்ட தூரம் போகும் இரயில்கள் எல்லாமே Trans-Siberian railway ஒட்டியவை.

Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து மங்கோலியா நாடு முழுவதும் ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Mongolian என்று பெயர். Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து சீனாவின் ஊடே ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Manchurian என்று பெயர். எனவேதான் உலகப்பயணிகளின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிறது Trans-Siberian railway! பயணிகள் கவனத்திற்கு, கன்னியாகுமரி முதல் திப்ருஹர் வரை ஓடும் விவேக் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட இரயில் பயணம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway
ஆசிரியர்: Emma Fick
வெளியீடு: Harper Design
பக்கங்கள்: 236
—————————————————————————————————————————————————————————————————————————
நானும் ஓர் உலகப்பயணி என்பதால் Trans-Siberian railway பயணம் பற்றி புத்தகங்கள் தேடினேன். BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway. ஆசிரியர் Emma Fick. பீஜிங் முதல் மாஸ்கோ வரை Trans-Mongolianல் 26 நாட்கள் ஆசிரியர் பயணித்த கதைதான் இப்புத்தகம். பயணம் என்ற பெயரில் இன்று யூடியூபில் காணொளிகளாக வெறும் குப்பைகள். யூடியூப்பில் கம்போடியா / உஸ்பெகிஸ்தான் நாடுகளை விளக்கும் விதத்தில் நான் குப்பைகளை எளிதில் கண்டுபிடித்துவிடுவேன். இப்புத்தகம் அமைக்கப்பட்ட விதத்தில் ஈர்க்கப்பட்டு எடுத்துவந்து விட்டேன். பயணத்தின் போது, டைரியில் குறிப்புகள் எடுப்பது போல, முழுக்க முழுக்க கையால் வரையப்பட்ட படங்களாலும், கையால் எழுதி விளக்குவது போலவும் எழுதப்பட்ட புத்தகம் இது. சில பக்கங்கள் படிக்கவே தேவையில்லை, பக்கத்தில் உள்ள படங்களைப் பார்த்தாலே போதும். படங்களே பெரும்பாலான பயணத்தின் கதையைச் சொல்கின்றன.


(www.amazon.com)

நிறைய குறிப்புகள் எடுத்திருக்கிறேன். சீன எல்லையில் தண்டவாள அகலம் மாறும்போது, இரயிலையே தூக்கி சக்கரங்களை மாற்றும் விசித்திரம் படித்தேன். பழைய பாஸ்போர்ட்டில் விசா இருந்தால் அனுமதிக்காத உலகின் மிகமிக சில நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்குள் ஆசிரியர் அனுமதிக்கப்படாமல், மீண்டும் மங்கோலியா திரும்பி புது பாஸ்போர்ட்டில் விசா வாங்கி பயணித்த கதையை மறக்கமாட்டேன். பெண்கள்தான் செயற்கரியன செய்து சமகாலத்தில் என்னை வியப்பூட்டுகிறார்கள். இதே தளத்தில் மோனிஷா ராஜேஷ், பமீலா வாட்சன், Emma Fick. நீங்களும் படியுங்கள். கலாச்சாரக் காவலர்கள் பண்பாட்டை அழித்தொழித்து தடயங்களை மாற்றி வைக்கும்முன் முதலில் இந்தியாவைச் சுற்றுங்கள், கூடவே உலகையும் சுற்றுங்கள். முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள், பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்!

அனுபந்தம்:
—————-
இரயில் பயணங்கள் பற்றி அடுத்து எழுத எந்தப் புத்தகம் வாய்ப்பு தருமென தெரியவில்லை. அதுவரை எனது சுயபெருமைகள் கேளுங்கள்:

  1. இந்தியாவை 7 நாட்கள் எங்கும் தங்காமல் இரவில் இரயிலில் பயணித்து, பகலில் ஊர்சுற்றி இருக்கிறேன். இரண்டு முறைகள்.
  2. தாய்லாந்து நாட்டின் ஒருகிளை தவிர மற்ற எல்லாவற்றிலும் இரயிலேயே பயணித்து 9 நாட்கள் சுற்றி இருக்கிறேன்.
  3. வியட்நாம் நாட்டை வடக்கில் இருந்து தெற்காக மொத்தமாக இரயிலேயே பயணித்து 11 நாட்கள் சுற்றியிருக்கிறேன்.
  4. இந்தோனேசியாவின் ஜாவா தீவைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.
  5. உஸ்பெகிஸ்தான் நாடும் இரயில் பயணம் தான்.
  6. உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு இரயிலேயே 18 மணிநேரம் எல்லை கடந்திருக்கிறேன்.
  7. தைவான் நாட்டைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.

    இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்து அடுத்து இரயிலில் பயணிக்க இப்போது எனது குறிப்புகளில் 9 நாடுகள் உள! வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

266. BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 14

ரஷ்யா. இன்றைய உலகின் மிகப்பெரிய நாடு. உடையாமல் சோவியத் ஒன்றியமாக இருந்தபோது இன்னும் மிகப்பெரிய நாடு. உலக வரைபடத்தை நீளவாக்கில் வைத்து 24 துண்டுகளாக வெட்டினால், ஒவ்வொரு துண்டையும் கடக்க சூரியன் ஒருமணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் Time zone என்று பெயர். இந்தியாவைச் சூரியன் கடந்துபோக 2 மணிநேரத்திற்கு மேலாகும். ரஷ்யாவைக் கடக்க 11 மணிநேரமாகும்! அதாவது ரஷ்யாவின் கீழைக் கடைசி குடிமகன் இரவு தூங்கப் போனால், மேலைக் கடைசி குடிமகன் காலையில் அப்போதுதான் கண்விழிப்பான். ஆசியா ஐரோப்பா என இரு கண்டங்களில் பரவிய பெரிய நாடு. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து கஜகஸ்தான் நாட்டு எல்லைவரை செங்குத்தாக நீளும் உரல் (Ural) என்ற மலைத்தொடர் உண்டு. அதுதான் இவ்விரு கண்டங்களுக்கான வரப்பு. மேற்கே ஐரோப்பிய ரஷ்யா, கிழக்கே ஆசிய ரஷ்யா. சிந்து நதிக்கு அப்பால் உள்ளதெல்லாம் இந்தியா எனவும், சிரியாவுக்குத் தெற்கே இருப்பதெல்லாம் பாலஸ்தீனம் எனவும் அன்றைய உலகம் பெயரிட்டது போல, ரஷ்யா என்றால் பொதுவாக ஐரோப்பிய ரஷ்யா தான். ஆசிய ரஷ்யாவிற்குத் தனியே ஒரு குணமுண்டு, அதற்குச் சைபீரியா என்றொரு பெயருண்டு.

ஐரோப்பிய மாஸ்கோ நகரில் இருந்து, ஆசிய பசிபிக் கடற்கரை நகரான விளாடிவாஸ்டாக் வரை இரயிலால் இணைக்க அன்றைய ஜார் மன்னர்கள் ஓர் இரயில்பாதை திட்டம் கொண்டுவந்தார்கள். 9289 கிமீ. 8 time zones. அதாவது சூரியன் கடக்கவே 8 மணிநேரமாகும். மனிதன் இரயிலில் கடக்க இன்றைக்கு 8 நாட்களாகும். 26 ஆண்டுகள் கட்டினார்கள். கட்டி முடித்தபின் ரஷ்யப்புரட்சி வந்தது. உலகப்போரும் ஜார் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தன. பெரும்பாலும் சைபீரியாவின் குறுக்கே செல்வதால் Trans-Siberian railway என்று பெயர். இன்றுவரை மிகநீளமான இரயில்தடம் இதுதான். ஒரே இரயிலில் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய, உலகின் மூன்றாவது நீண்ட பயணமும் இதுதான். ஒருகாலத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் முதல் விளாடிவாஸ்டாக் வரை ஓடிய இரயில் பயணம்தான் உலகின் மிக நீண்டது. மாஸ்கோ முதல் வடகொரியா தலைநகர் பியொங்யாங் வரை ஓடும் இரயில்தான் இரண்டாவது இடம். இவை இரண்டும் Trans-Siberian railway வழியேதான் போகின்றன. உலகில் மிக நீண்ட தூரம் போகும் இரயில்கள் எல்லாமே Trans-Siberian railway ஒட்டியவை.

Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து மங்கோலியா நாடு முழுவதும் ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Mongolian என்று பெயர். Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து சீனாவின் ஊடே ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Manchurian என்று பெயர். எனவேதான் உலகப்பயணிகளின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிறது Trans-Siberian railway! பயணிகள் கவனத்திற்கு, கன்னியாகுமரி முதல் திப்ருஹர் வரை ஓடும் விவேக் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட இரயில் பயணம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway
ஆசிரியர்: Emma Fick
வெளியீடு: Harper Design
பக்கங்கள்: 236
—————————————————————————————————————————————————————————————————————————
நானும் ஓர் உலகப்பயணி என்பதால் Trans-Siberian railway பயணம் பற்றி புத்தகங்கள் தேடினேன். BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway. ஆசிரியர் Emma Fick. பீஜிங் முதல் மாஸ்கோ வரை Trans-Mongolianல் 26 நாட்கள் ஆசிரியர் பயணித்த கதைதான் இப்புத்தகம். பயணம் என்ற பெயரில் இன்று யூடியூபில் காணொளிகளாக வெறும் குப்பைகள். யூடியூப்பில் கம்போடியா / உஸ்பெகிஸ்தான் நாடுகளை விளக்கும் விதத்தில் நான் குப்பைகளை எளிதில் கண்டுபிடித்துவிடுவேன். இப்புத்தகம் அமைக்கப்பட்ட விதத்தில் ஈர்க்கப்பட்டு எடுத்துவந்து விட்டேன். பயணத்தின் போது, டைரியில் குறிப்புகள் எடுப்பது போல, முழுக்க முழுக்க கையால் வரையப்பட்ட படங்களாலும், கையால் எழுதி விளக்குவது போலவும் எழுதப்பட்ட புத்தகம் இது. சில பக்கங்கள் படிக்கவே தேவையில்லை, பக்கத்தில் உள்ள படங்களைப் பார்த்தாலே போதும். படங்களே பெரும்பாலான பயணத்தின் கதையைச் சொல்கின்றன.


(www.amazon.com)

நிறைய குறிப்புகள் எடுத்திருக்கிறேன். சீன எல்லையில் தண்டவாள அகலம் மாறும்போது, இரயிலையே தூக்கி சக்கரங்களை மாற்றும் விசித்திரம் படித்தேன். பழைய பாஸ்போர்ட்டில் விசா இருந்தால் அனுமதிக்காத உலகின் மிகமிக சில நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்குள் ஆசிரியர் அனுமதிக்கப்படாமல், மீண்டும் மங்கோலியா திரும்பி புது பாஸ்போர்ட்டில் விசா வாங்கி பயணித்த கதையை மறக்கமாட்டேன். பெண்கள்தான் செயற்கரியன செய்து சமகாலத்தில் என்னை வியப்பூட்டுகிறார்கள். இதே தளத்தில் மோனிஷா ராஜேஷ், பமீலா வாட்சன், Emma Fick. நீங்களும் படியுங்கள். கலாச்சாரக் காவலர்கள் பண்பாட்டை அழித்தொழித்து தடயங்களை மாற்றி வைக்கும்முன் முதலில் இந்தியாவைச் சுற்றுங்கள், கூடவே உலகையும் சுற்றுங்கள். முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள், பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்!

அனுபந்தம்:
—————-
இரயில் பயணங்கள் பற்றி அடுத்து எழுத எந்தப் புத்தகம் வாய்ப்பு தருமென தெரியவில்லை. அதுவரை எனது சுயபெருமைகள் கேளுங்கள்:

  1. இந்தியாவை 7 நாட்கள் எங்கும் தங்காமல் இரவில் இரயிலில் பயணித்து, பகலில் ஊர்சுற்றி இருக்கிறேன். இரண்டு முறைகள்.
  2. தாய்லாந்து நாட்டின் ஒருகிளை தவிர மற்ற எல்லாவற்றிலும் இரயிலேயே பயணித்து 9 நாட்கள் சுற்றி இருக்கிறேன்.
  3. வியட்நாம் நாட்டை வடக்கில் இருந்து தெற்காக மொத்தமாக இரயிலேயே பயணித்து 11 நாட்கள் சுற்றியிருக்கிறேன்.
  4. இந்தோனேசியாவின் ஜாவா தீவைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.
  5. உஸ்பெகிஸ்தான் நாடும் இரயில் பயணம் தான்.
  6. உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு இரயிலேயே 18 மணிநேரம் எல்லை கடந்திருக்கிறேன்.
  7. தைவான் நாட்டைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.

    இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்து அடுத்து இரயிலில் பயணிக்க இப்போது எனது குறிப்புகளில் 9 நாடுகள் உள! வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

இந்தி ஏன் தேவையில்லை?

26 August 2020 at 13:43
Protesters blacken Hindi portion of Chennai Park railway sign ...


இந்தி எந்த பிரச்சனைக்கான தீர்வு?

இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஒன்றிய அரசு வெளியிடும் ஆணைகள், அறிக்கைகள் மற்றும் செய்திகள் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்றால், அவற்றை அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு மொழியில் வெளியிட்டாக வேண்டும். அந்த வகையில் ஒரு பொது மொழி கட்டாயம் தேவை. மேலும், பல்வேறு மொழிகளை பேசுபவர்கள், இணைந்து பணியாற்றும் போது, அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், உரையாடவும் ஒரு பொது மொழி தேவைப்படுகிறது.

நம் முன் என்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதை தெளிவாக வரையறுத்தால்தான் அதற்கான தீர்வுகளை எட்ட முடியும். இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி தேவை என்பது ஒரு பிரச்சனை. அதே போல், பிற நாடுகளோடு தொடர்பு கொள்ள ஒரு பொது மொழி வேண்டும் என்ற இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. ஆகவே, நம் முன்னால் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது.

  1. இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும்
  2. உலக நாடுகளுக்குள் ஒரு பொது மொழி வேண்டும் 

உலக நாடுகளுக்கான பொது மொழியாக ஆங்கிலம் வலுவான இடத்தை பிடித்து விட்டது. காரணம், அந்த மொழியில் ஏராளமான நூல்கள் மற்றும் தகவல்கள் தினமும் எழுதப்பட்டு வருகிறது. அறிவியல் நூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகிறது. ஆகவே உலகின் மற்ற நாடுகளோடு போட்டி போட, ஆங்கில அறிவும் அவசியம் என்றாகி விட்டது. இதை, இந்தி வேண்டும் என்று சொல்பவர்களும் மறுக்கவில்லை. அதனால்தான் இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கிறது.

இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கற்கிறார்கள், நாமும் ஆங்கிலம் கற்கிறோம் எனும் போது, இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும் என்ற பிரச்சனைக்கான தீர்வு எளிதாகி விடுகிறதே! ஆங்கிலம்தானே அந்த பொது மொழியாக இருக்க முடியும்? ஆனால் இங்குதான் புதிதாக ஒரு பிரச்னையை கிளப்புகிறார்கள். உலக நாடுகளோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கட்டும், ஆனால் இந்தியாவுக்குள் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதே இந்தியை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு! இரண்டு சிக்கல்களுக்கு ஒரு தீர்வு இருக்கும் போது, எதற்காக தனித்தனியாக இரண்டு தீர்வுகள்?

இந்தி பேசும் மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கும் போது, அவர்களால் ஏன் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது? எதற்காக இன்னொரு இணைப்பு மொழி? பள்ளியில் ஆங்கிலம் படித்தாலும் அவர்களால் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது என்றால், பள்ளியில் இந்தி படித்து விட்டு நம்மால் மட்டும் எப்படி இந்தியில் உரையாட முடியும்?

பொது மொழி வேண்டும் என்ற பிரச்னைக்கு எளிதான தீர்வு இருக்கும் போது, அவர்கள் இந்தியும் வேண்டும் என்ற வாதத்தில் இறுதியாக வந்து நிற்பது “என்ன இருந்தாலும் ஆங்கிலம் அந்நிய மொழி அல்லவா? இந்திதானே நமது மொழி. இந்தி பொது மொழியாக இருந்தால்தானே பெருமை” என்ற புள்ளியில்தான். ஆகவே, அவர்கள் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறுவது தங்களின் பெருமைக்காகத்தானே தவிர பிரச்சனைக்கான தீர்வாக அல்ல. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் இந்தி பொது மொழி என்பது பெருமையாக இருக்கலாம். பிற மொழியினரை பொறுத்த வரை ஆங்கிலமும் வேற்று மொழிதான், இந்தியும் வேற்று மொழிதான். ஆங்கிலத்தையும் இந்தியையும் ஒரே தராசில் வைத்து எடை போட்டு, ஆங்கிலத்தில் அறிவியல் நூல்கள் அதிகம் இருப்பதை உணர்ந்து அதை தேர்வு செய்கிறோம் நாம்.

இந்தி படிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் வைக்கும் மற்றொரு வாதம், இந்தி படித்தால்தான் அரசு பணிகள் கிடைக்கும் என்பது. இந்தி படித்தால்தான் குறிப்பிட்ட சில அரசு பணிகள் கிடைக்குமானால் அந்த சட்டத்தை அல்லவா நாம் கேள்வி கேட்க வேண்டும்? இந்த நாட்டில் அனைத்து மொழிகளும் சமம், ஆனால் ஒரு மொழி மட்டும் உசத்தி என்பதை எப்படி ஏற்றுகொள்வது? 

இந்தி படித்தால் வேலைவாய்ப்பு பெருகுமா?

2017ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு Economic Survey என்ற பொருளாதாரம் குறித்த கணக்கெடுப்பு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்பவர்கள் குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டது. அந்த அறிக்கை அரசு இணைய தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க் இதோ https://www.indiabudget.gov.in/budget2017-2018/es2016-17/echap12.pd

இந்த அறிக்கையின் படி, பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதில் முதலிடத்தில் இருப்பது உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்.

அத்தனையும் இந்தி பேசும் மாநிலங்கள்!!

268ஆம் பக்கத்தில் இந்த தகவல் இருக்கிறது. எண்ணிக்கை மைனசில் செல்ல செல்ல, வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் அதிகம் என்று பொருள் 

இந்த புள்ளிவிவரங்கள் மூலம், இந்தி பேசப்படுகிற மாநிலங்களில் இருந்துதான் அதிகமான எண்ணிக்கையில் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்கிறார்கள் என்பது தெளிவா தெரிகிறது. இந்தி சோறு போடாது, உழைப்புதான் சோறு போடும் என்பது தெரிகிறது. இந்திக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது புரிகிறது 

மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சனை?

அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால், எந்த ஒரு மொழியையும் இரண்டு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அன்றாட தேவைகளுக்கான சொற்களை இரண்டே நாட்களில் கூட கற்றுக்கொள்ளலாம். தேவை என்று வரும் போது மனித மூளை அசாத்திய வேகத்தில் வேலை செய்யும். 

ஆனால், பயன்பட போகிறதா இல்லையா என்று தெரியாமல் ஒரு மொழியை, அதுவும் பள்ளிப்பருவத்தில், கற்பது தேவையற்ற சுமையே. அந்த நேரத்தில் அவர்களை விளையாட அனுமதித்தால், அதுவே குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.

தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தாமல் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் எளிதில் எந்த மொழியையும் கற்று கொள்வார்கள் என்று கூறுவது, புத்தகத்தின் வாயிலாக கற்றுக்கொள்வதற்கு பொருந்தாது. தினமும் பேச பயன்படுத்தும் மொழியை மட்டுமே குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள். 

கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேருக்கு கல்லூரி முடிக்கும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிந்தது? 12 ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் படித்தும் நம்மால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதில்லை. ஆனால் வேலையில் சேர்ந்து ஆங்கிலத்தில் கட்டாயம் பேசி ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது, சில மாதங்களில் எளிதாக பேச வந்துவிடுகிறது. ஆகவே, ஒரு மொழியை பள்ளியில் படித்தால் அந்த மொழியில் பேச வந்து விடும் என்கிற வாதமே அடிப்படை இல்லாதது.  

தனியார் பள்ளிகளில் இந்தி

தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கிறார்களே! தனியார் பள்ளிகளில் சேர முடியாத ஏழைக் குழந்தைகள் எப்படி இந்தி கற்பார்கள்? ஆகவே அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

சில தனியார் பள்ளிகளில் நீச்சல் கூடத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். குதிரை ஏற்றமும் கற்றுக்கொடுக்கிறார்கள். ஏழைக்குழந்தைகள் நீச்சல் கற்க வேண்டாமா? ஆகவே அரசு பள்ளிகளில் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பலாமே! இந்தி கற்றுக்கொள்வதை விட நீச்சல் கற்றுக்கொள்வது முக்கியமாயிற்றே! உயிரை காக்குமே!

அது ஏன் முடியாதென்றால், இருக்கிற நிதியை அதை விட முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுக்க செலவு செய்ய வேண்டும். நம்மிடம் எல்லையற்ற அளவு நிதி இருக்கிறதென்றால், எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கலாம். ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. ஒரு நாளில் பள்ளியில் மாணவர்கள் இவ்வளவு நேரம்தான் செலவிட முடியும் என்று இருக்கிறது. இருக்கிற நிதியில், கிடைக்கிற நேரத்தில் மாணவர்களின் அடிப்படை கல்விக்கு தேவையானதை மட்டும் கற்றுக்கொடுத்தால் போதுமானது. இந்தி மொழி அந்த அடிப்படை கல்வியில் வராது.

தனியார் பள்ளிகளில் கொடுப்பதை எல்லாம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால், அந்த தனியார் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அவ்வளவு பணத்தை ஒவ்வொரு அரசு பள்ளி மாணவருக்கும் அரசு செலவு செய்தாக வேண்டும். அவ்வளவு நிதி வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பட்ஜெட் இப்போது இருப்பதை போல நான்கு மடங்கு அதிகமாக வேண்டும். பட்ஜெட் நான்கு மடங்கு அதிகமாக வேண்டுமென்றால் வரியை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும். செய்வோமா?

மூன்றாவது மொழியை கற்பதில் என்ன ஆபத்து இருக்கிறது? 

பயன்படாமல் போனால் என்ன? ஒரு மொழியை கற்றுக்கொண்டால் குடியா மூழ்கிப் போய் விடும் என்ற கேள்வி எழலாம்.

முதலில் உத்திர பிரதேசத்தில் இந்த ஆண்டு (2020) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகளை பார்த்து விடுவோம். செய்தியின் லிங்க்:

https://www.thanthitv.com/News/India/2020/06/30091831/1481674/Uttar-Pradesh.vpf

மொத்தம் 7.95 இலட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்தனர்! இந்தி பேசும் மாநிலத்திலேயே இத்தனை மாணவர்கள் இந்தியில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக குஜராத் மாநில ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்ப்போம்.

செய்தியின் லிங்க்:

https://www.hindustantimes.com/education/gseb-12th-arts-commerce-result-2020-live-updates-gujarat-board-hsc-result-check-topper-list-pass-percent-latest-updates/story-GJOc8Y3AFGrnyEplvMjCfK.html

இந்தி பாடத்தில் தேர்ச்சி அடைந்தவர்கள் 66.71 விழுக்காடு. தோல்வி அடைந்தவர்கள் 32.29 விழுக்காடு! அத்தனை மாணவர்களின் வாழ்விலும் ஒரு ஆண்டு வீண்! தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பெரும் பகுதியினர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்! 

தமிழ்நாட்டில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்காது என்று வைத்துக்கொள்வோம். சென்ற ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9.7 இலட்சம். அதில் 5% மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, 48 ஆயிரத்து 500 மாணவர்கள் தோல்வி அடைவார்கள். 

அப்படி மாணவர்களின் ஒரு ஆண்டு படிப்பை பணயம் வைத்து படிக்கிற அளவுக்கு இந்தியில் என்ன இருக்கிறது? உயர்ந்த இலக்கியங்கள் இருக்கிறதா? அல்லது ஆங்கிலம் போல வேறு எந்த மொழியிலும் இல்லாத அறிவியல் புத்தகங்கள் இருக்கிறதா?

எதிர்காலத்துக்கு தேவைப்படுகிற கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களையே அனைத்து மாணவர்களும் எளிதாக கற்று தேர்ச்சி அடையும் நிலையை நம் நாடு இன்னும் எட்டவில்லை. இந்த நிலையில் கூடுதலாக ஒரு சுமை தேவையா?

வேற்று மாநிலத்தவரை அவர்கள் தாய்மொழியில் கற்க விடாமல் தடுக்கிறோமா?

தமிழகத்தில் எந்த மொழியையும் கற்பதற்கு தடை இல்லை. தமிழகத்தில் மொழிவாரி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் வசதி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  

2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில் இதை பற்றிய புள்ளிவிவரங்கள் இருக்கிறது. அறிக்கை அரசு வலைத்தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: http://www.minorityaffairs.gov.in/sites/default/files/2.%2052nd%20Report%20English.pdf

அறிக்கையின் 136ஆம் பக்கத்தில், தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை மொழிகளுக்கான பள்ளிகளின் எண்ணிக்கை, மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் இருக்கிறது. அதில் தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், இந்தி, இவ்வளவு ஏன், குஜராத்தி மொழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் கூட இருப்பதை காணலாம்.
ஓசூர் பகுதிகளில், பல அரசு பள்ளிகளில் தெலுங்கு மற்றும் கன்னட வழி கல்வி பயிற்றுவிக்க படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், சில அரசு பள்ளிகள் மலையாளம் பயிற்றுவிக்க படுகிறது.

இது தவிர, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க உதவி வழங்கப்படுகிறது. பெங்காலி, ஓடியா மொழிகளிலேயே அவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்படுகிறது. 

இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்ட கல்விக் கொள்கை ஆவணத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: https://cms.tn.gov.in/sites/default/files/documents/schooledu_e_pn_2016_17.pdf

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தமிழ்நாடு பாடநூல் நிறுவனமே இந்தியில் புத்தகங்களை அச்சடித்து வழங்குகிறது!

புத்தகத்தின் லிங்க்:  http://tnschools.gov.in/media/textbooks/5th_Hindi_Final_19-03-19.pdf

இதில் இருந்தே தெளிவாகி இருக்கும். மாற்று மொழியினர் தங்கள் மொழியை கற்க தமிழகம் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஒரு படி மேலே போய் உதவி செய்து வருகிறது. ஆனால், திணிக்க நினைத்தால், எதிர்ப்பு கிளம்பும்!

நம்மை இந்த அளவுக்கு இந்தியை படிக்க சொல்லி வற்புறுத்துபவர்கள், அவர்கள் மாநிலங்களில் மொழிவாரி சிறுபான்மையினர் தங்கள் மொழியை கற்க என்ன வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

அதே மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில், 50ஆம் பக்கத்தில், உத்திர பிரதேசத்தின் இலட்சணத்தை காணலாம். 

எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை!! இதுதான் இந்தி பேசும் மாநிலங்களின் இரட்டை வேடம். இத்தனை ஆண்டுகளாக, பிற மாநிலங்கள் மூன்று மொழி கற்க வேண்டும் என்று சட்டம் போட்டவர்கள், தங்கள் மாநிலங்களில் இது வரை மற்ற மாநில மொழிகளை மூன்றாவது மொழியாக கற்க அனுமதித்தார்களா? இல்லை!

மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்யலாம் என்ற புதிய உருட்டு 

தற்போது மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று சமரசம் செய்தது போல் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அது நடக்காது என்று தெரியும். ஒரு வகுப்பில், ஒரு மாணவன் மட்டும் பெங்காலி மொழி கற்க விரும்பினால், அந்த மாணவனுக்காக மட்டும் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியுமா? குறைந்த பட்சம் 20 மாணவர்கள் வேண்டும், 30 மாணவர்கள் வேண்டும் என்று புதிதாக ஒரு சட்டத்தை கொண்டு வருவார்கள். கடைசியில், அனைத்து மாணவர்களும் இந்தி மொழியையே கற்கும் நிலைமை வரும்.

மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்ய தேவையான அளவு நிதியை ஓதுக்குவோம் என்று ஒன்றிய அரசு கூறுமேயானால், அதை முதலில் ஒரு இந்தி பேசும் மாநிலத்திலோ, குஜராத்திலோ செயல் படுத்தி காட்டட்டும்.  

குஜராத்தில் அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கவே தேவையான அளவு ஆசிரியர்கள் இல்லை. உபி, பிகார் மாநிலங்களில் இன்னும் மோசம். இரண்டு மொழிகளை கற்றுக்கொடுக்கவே நிதியை ஒதுக்காத அரசுகளா அத்தனை மொழிகளுக்கு நிதி ஒதுக்க போகிறது? இருக்கிற நிதி அனைத்தும் இந்தி சமஸ்கிருதத்துக்கே செலவிடப்படும்!

இந்தி பேசும் மாநிலங்களில், தென்னிந்திய மொழியை கற்க மாட்டார்கள். சமஸ்கிருதத்தையே விரும்புவார்கள். காரணம், இந்தி பேசுபவர்களுக்கு, சமஸ்கிருதம் படிப்பது எளிது. அவர்களுக்கு மூன்றாவது மொழி படிப்பது எளிதாகி விடும். ஆனால், தமிழகத்து மாணவர்களுக்கு சுமையாகி விடும்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி. 

இந்தி பேசப்படும் மாநிலங்களில் சமஸ்கிருதம்.

இதுவே அவர்கள் திட்டம்.

பிற மொழிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தேவையான அளவு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.

செம்மொழிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என்ற கேள்விக்கு, 3.2.2020 அன்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் சிங்க் படேல் அளித்த பதில் இது. மக்களவை வலைத்தளத்தில் இருக்கிறது. லிங்க் http://164.100.24.220/loksabhaquestions/annex/173/AU171.pdf 

மூன்று ஆண்டுகளுக்கும் செலவிடப்பட்ட மொத்த தொகை

சமஸ்கிருதம் – 643.84 கோடி 
தமிழ்             –    22.94 கோடி

644 கோடிக்கும் 23 கோடிக்கும் இடையே கடலளவு தூரம் இருக்கிறது. இதுதான் இவர்கள் பிற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். ஒன்றிய அரசின் தமிழ் மொழி பாசமெல்லாம் பேச்சளவில் மட்டுமே… செயலில் இருக்காது என்பதை அமைச்சர் கொடுத்த இந்த புள்ளிவிவரத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

இந்தி திணிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன?

  1. குறிப்பிட்ட அந்த நான்கு மாநிலங்களின் ஓட்டு! அந்த நான்கு மாநிலங்களில் இடங்களை அள்ளினால், மத்தியில் பெரும்பான்மை ஆட்சி அமைப்பது எளிது 
  2. இந்தியா முழுக்க ஒற்றை கலாச்சாரம் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறிக்கோள்.
  3. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் எளிதாகி விடும்
  4. கல்வியை முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முதல் படி  

கட்டுரைச் சுருக்கம் 

  1. இந்தி பேசுபவர்களும் ஆங்கிலம் கற்பதால், ஆங்கிலம் பொது மொழியாக இருப்பதே எளிதான தீர்வு.
  2. இந்தி மொழிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கு இந்தி மொழி பேசும் மாநிலங்களின் பொருளாதார பின்னடைவே எடுத்துக்காட்டு 
  3. புத்தகங்களில் படிப்பதன் மூலம் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியாது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்
  4. மூன்றாவது மொழி மாணவர்களுக்கு ஒரு தேவையற்ற சுமை. ஒரு ஆண்டு பின்தங்கும் ஆபத்து இருக்கிறது. இடைநிற்றல் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.
  5. தமிழகத்தில் பிற மொழியினர் அவர்கள் மொழியை கற்க வசதி இருக்கிறது.
  6. மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் கற்கலாம் என்பதை நடைமுறைப்படுத்துவது இயலாது.

நன்றி


263. ESPRIT DE BATTUTA (ALONE ACROSS AFRICA ON A BICYCLE)

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 11

ஆப்பிரிக்கப் பெருங்கண்டம். காலனியாதிக்கம் செய்யாததாலும், இயற்கையாகவும் மிகமிக சொற்ப தீவுகள் கொண்ட பெருநிலம். பிரமிடுகளால் எகிப்து தெரியும். பஞ்சத்தால் எத்தியோப்பியா சோமாலியா தெரியும். கிரிக்கெட்டால் தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே கென்யா தெரியும். இடிஅமினால் உகாண்டா தெரியும். மடகாஸ்கர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததென தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க ஜனாதிபதிகளால் லிபியா தெரியும். கடவுளின் தூதர்கள் நேரடியாக ஆட்சி செய்யும் நாட்டின் சில குடிமக்களுக்கு, பரமாத்மாக்கள் பறந்து போய் கையசைப்பதால் இன்னும் சில நாடுகள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. நன்னம்பிக்கை முனை. சூயஸ் கால்வாய். ஆப்பிரிக்க நிலம் பற்றி நமது சொற்ப அறிவு இவ்வளவுதான். இன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் 54 நாடுகள் உள்ளன. இப்பெருநிலத்தை அறிய இதுபோன்ற புத்தகங்கள்தான் உதவுமென எடுத்துவந்துவிட்டேன்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: ESPRIT DE BATTUTA (ALONE ACROSS AFRICA ON A BICYCLE)
ஆசிரியர்: Pamela Watson
வெளியீடு: Hardie Grant books
பக்கங்கள்: 512
—————————————————————————————————————————————————————————————————————————
ESPRIT DE BATTUTA (IN THE SPRIT OF BATTUTA). ALONE ACROSS AFRICA ON A BICYCLE. இபின் பட்டுடா பற்றி இத்தளத்தின் சில பதிவுகளில் படித்திருப்பீர்கள். மார்கோ போலோ, மெகஸ்தனிஸ், யுவான் சுவாங் போல உலகப் பயணங்களின் முன்னோடிகளில் ஒருவர். பட்டுடாவின் நினைவில் ஆப்பிரிக்காவின் குறுக்கே தனியாக சைக்கிளில், என்பதுதான் புத்தகத் தலைப்பு. பமீலா வாட்சன் ஆசிரியர். ஆஸ்திரேலியா சொந்த நாடு. அப்போது லண்டனில் வசிக்கிறார். அப்போது முப்பதைத் தாண்டிய வயது. அக்டோபர் 1992 முதல் ஏப்ரல் 1994 வரை 18 மாதங்கள். மொத்தம் 17 நாடுகள். 1750கிமீ படகில், 14527கிமீ தனியாக சைக்கிளில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய ஆப்பிரிக்கா வழியே கிழக்கு ஆப்பிரிக்கா என ஆப்பிரிக்காவின் குறுக்கே பயணித்த கதைதான் இது!

முப்பதாண்டுகள் கடந்துவிட்டன. நிறைய மாற்றங்கள். சூடான் அல்ஜிரியாவிற்குப் பிறகு மிகப்பெரிய நாடு ஜெயிரே என்று புத்தகத்தில் சொல்கிறார். இன்று தெற்கு சூடான் என்ற நாடு உருவாகி அவ்வரிசையை மாற்றிவிட்டது. கினியா என்ற பெயரில் மட்டும் ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகள். பப்பூவா நியூ கினியா என்றொரு நாடு ஆசியாவில் இருக்கிறது. காங்கோ என்ற பெயரில் இரண்டு நாடுகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. ஏதாவதொரு அமெரிக்க ஜனாதிபதி தனது குடிமக்களுக்கு உலகறிவு புகட்ட, இடம் மாற்றி அணுகுண்டோ வரியோ போட்டுவிடக் கூடாதென புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஒருபக்கம் ஒதுக்கி இரண்டு காங்கோகள் பற்றி தனி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அவர் சைக்கிளோட்டிய நாடுகளின் வரிசை இது:
1. செனெகல்
2. காம்பியா (ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள் மிகச்சிறிய நாடு. வெளியே சிசெல்ஸ்)
3. கினியா கொனார்க்ரி (பிரெஞ்சு கயானா என வரலாற்றில் படித்திருப்போம்; எபோலா வைரஸ் காலத்தில் படித்திருப்போம்; சிறுமிகளின் பாலுணர்வைக் கட்டுப்படுத்த மதத்தின் பெயரால், பெண்ணுறுப்பின் நரம்புக்குவியல் கொண்ட பாகத்தை வெட்டியெடுத்து சேதப்படுத்தும் கொடூர வழக்கத்தில் படித்திருப்பீர்கள்)
4. மாலி
5. புர்கினா பாஸோ
6. கானா (கோபி அனன் நாடு)
7. டோகோ
8. பெனின்
9. நைஜீரியா (அதிக மக்கள் கொண்ட ஆப்பிரிக்க நாடு; போகோ ஹரம் படித்திருப்பீர்கள்)
10. கேமரூன்
11. நிலநடுக்கோட்டு கினியா (நாட்டின் ஒருபகுதிகூட நிலநடுக்கோட்டின் மேல் கிடையாது; கினியா பிசாவு என மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் பெயரில் கினியா உண்டு)
12. காபான்
13. காங்கோ குடியரசு
14. காங்கோ ஜனநாயக குடியரசு (ஜெயிரே என்று சுருக்கமான பெயர்; அல்ஜீரியா சூடான் பிறகு மிகப்பெரிய ஆப்பிரிக்க நாடு)
15. ருவாண்டா
16. புருண்டி
17. தான்சானியா (பூமியின் தென்துருவத்தில் அதிக மக்கள் கொண்ட நாடு; கிளிமஞ்சாரோ இங்குதான் இருக்கிறது)


(https://pamelawatson.com/)

இவரின் பயணம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலானவர்கள் போல் சுற்றுலாத் தலங்களுக்கும், கேள்விப்பட்ட இடங்களுக்கும் இவர் சைக்கிளோட்டவில்லை. யூடியூபர்கள் போல் ஆதிவாசிகள் குடியிருப்புகளுக்குப் போய் நடனமாடவில்லை, கண்டதைத் தின்னவில்லை. ஆங்கிலம் பிரெஞ்சு என காலனிப்படுத்திய நாட்டின் மொழி கொஞ்சம் பேசும் மக்கள். புரியாத அவர்களின் தாய்மொழி. காலநிலை, உணவு, சுகாதாரம், பணம், பணமதிப்பிழப்பு, அந்நிய மண், கருப்புத் தோலுடைய மனிதர்களுக்கு இடையில் தனித்துக்காட்டும் வெள்ளைத்தோல், மலேரியா, உட்கார்ந்து போகும் கழிவறை, கொசு, வெயில், நாய்க்கடி, ரேபிஸ் தடுப்பூசி, பாம்பு, காட்டு விலங்குகள், கொள்ளையர்கள். Can I rest with you? You are mrs or miss? Are you married? Shall we marry? என்று பயணம் முழுவதும் ஆண்களின் கேள்விகள். பயணம் முடித்து வீடு திரும்பியவுடன், ‘உன்னை யாராவது வன்புணர்ந்திருப்பார்கள், அல்லது கொன்றிருப்பார்கள்’ என நினைத்ததாக ஒரு நண்பர் சொல்கிறார்.

பெரும்பாலான இடங்களில் சிறுவர்கள் விரட்டுகிறார்கள். காசு கேட்கிறார்கள். படகில் போனால் ஆண்கள் எல்லாம், சர்ரென்று ஓரமாக சிறுநீர் கழிக்கிறார்கள். இவள் அடக்கிவைக்கிறாள். ஆற்றில் குளித்தால், ஆண்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். புத்தகத்தில் மூன்று இடங்களில் கடுமையாக தாக்கப்படுகிறாள். சிம்பன்சி குரங்குகள் இருக்கும் ஒரு பண்ணைக்குப் போகிறார். முதன்முதலில் வெள்ளைத்தோலைப் பார்த்த 8 குட்டிகள், பால்குடிக்க ஆசிரியரின் மாரைத் தடவுகின்றன. ஒரு கிராமத்து சந்தையில் அவரைச் சுற்றி கும்பல் கூடுகிறது. எல்லார் முன்னிலையில் ஒரு கிழவன் இவரின் மாரைத் தடவுகிறான். கும்பல் சிரிக்கிறது. ஏற்கனவே படகு போய்விட்டதாகவும் அடுத்த ஊரில் பிடித்துவிடலாம், பைக்கில் அமருங்கள் என்றொருவன் சொல்ல, இவளும் அமர, இன்னொருவன் திடீரென பின்னால் அமர, விருட்டென்று பைக் சந்துபொந்தென யாருமற்ற பகுதிகளில் பறக்கிறது.

10 வாரங்கள் படகு இல்லாமல் சைக்கிளோட்ட முடியாமல் ஓரிடத்தில் மாட்டிக்கொள்கிறாள். புதிதாக வீடியோ கேசட் நுழைந்த ஓர் ஊரில் இவளும் நுழைகிறாள். அதை இயங்கவைக்க இவளை அழைக்கிறார்கள். I never watched video என்கிறாள். டெக்னாலஜி தெரியாத ஒரு வெள்ளைக்காரியா என திட்டுகிறார்கள். ரஜினிகாந்த் தனது ஆட்டோவிற்குப் பெண் பெயர் வைத்து அழைப்பது போல், இவள் தனது சைக்கிளை ஆணாகப் பாவிக்கிறாள். புத்தகம் முழுவதும் அழகு ஆண்களைச் சைட் அடிக்கிறாள். எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே டீ குடித்துக் கொண்டு, பிள்ளைவரம் கொடுக்கும் ஆண்களை as hopeless as men என புத்தகம் முழுவதும் கிண்டல் செய்கிறாள். பக்கெட்டில் நீர் இறைப்பது, பழைய துணிகளை அமுக்கி தலையணை செய்வது, கொப்பரைகளில் தானியங்களை வேகவைப்பது, ஆண் பெண் என கிராமங்களில் தனித்தனி திறந்தவெளிக் கழிப்பிடங்கள், விலையுயர்ந்த நாப்கின்கள் என எல்லாவற்றையும் பழகிக் கொள்கிறாள்.


(https://pamelawatson.com/)

We prefer freedom in poverty, to riches in slavery. ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் சொல்கிறாள். ஆப்பிரிக்காவின் எல்லா சர்வாதிகாரிகளும் தனது சொந்த குடிமக்களை நம்பாமல், இஸ்ரேல் அல்லது மொராக்கோ நாட்டினரை மெய்க்காப்பாளர்களாக வைத்திருப்பார்களாம். அங்கும் ஒரு நாட்டில் டெல்டாவில் எண்ணெய் எடுக்கிறார்கள். அங்கும் ஒரு நாட்டில் பணமதிப்பிழப்பு செய்கிறார்கள். இவள் பயணிக்கும் போதுதான் இரண்டு நாட்டுத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகப்பெரும் இனப்படுகொலை ஒரு நாட்டில் ஆரம்பிக்கிறது. இவளின் இப்பயணத்தைக் கண்டவர்கள் வழியெங்கும் ‘நீயொரு பெண்ணில்லை ஆண்’ என்று சொல்வதாக அமையும் புத்தகம், So you are a woman then என முடிகிறது. இப்புத்தகத்தின் மிகப்பெரிய பலமே ஆசிரியரும், அவர் சந்திக்கும் பெண்களும்தான். விறகு சேகரிப்பவள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பாலியல் தொழிலாளிகள் என பலர். அவர்கள்தான் குடும்பத்தை, சமூகத்தைக் கட்டமைக்கிறார்கள். பிறக்கும் இடமும், குருட்டு அதிர்ஷடமும் அவர் சந்திக்கும் பெண்களைவிட தன்னை எப்படி ஒரு பாதுகாப்பான வாழ்க்கைமுறையில் வைத்திருக்கிறது என அவரே ஓரிடத்தில் நொந்துகொள்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மிகவும் ரசித்துப் படித்து, பல குறிப்புகள் எடுத்த புத்தகம் இது. பயணம் சைக்கிள் ஆப்பிரிக்கா என்று உங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒவ்வாத விடயங்கள் சொல்லும் புத்தகம் இதுவென்றாலும், விசு சொல்வது போல் வீட்டிலும் நாட்டிலும் புரட்சிகரமான செயல்களைச் செய்யத் தொடங்கி வைப்பவள் பெண்தான்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

258. Eden: An Indian Exploration of Jewish, Christian and Islamic Lore

கடவுள். காதல் போல் வசதியான பொய். கடவுளின் பெயரால் மதம். சகிக்க முடியாத மனிதத் தன்மையற்ற தமது செயல்களுக்கு ஆட்சியாளர்கள் காரணம் காட்ட தன்னுடன் வைத்திருக்கும் வசதியான உண்மை இந்த மதம். குடிமக்களும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் தெரிந்த வடிவமே தன்னை ஆள்பவர்கள் என்று காலங்காலமாக நம்பும் சித்தாந்தம் இந்த மதம். அரசியலில் மதம் கலக்கும் போது ஆட்சியாளன் பரமாத்மா. குடிமக்கள் கர்மா. அதனால் தான் ஒரு சமூகத்தையே மயக்கடிக்கும் போதை இந்த மதம் என்று வெறுக்கிறது கம்யூனிசம். Religion is opium of masses. ஆனால் மதம் போல மனிதத்திரளை வெகு எளிதில் திரட்டிவிடும் வஸ்து வேறேதுமில்லை. உலகின் மூலைகளெங்கும் பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மையிது. ஜெயமோகன் சொல்வதுபோல, மதம் மூலம் தேசியத்தைக் கட்டி எழுப்பிய அரசுகள் தான் காலந்தோறும் நிலைத்து நின்றிருக்கின்றன.

தனது மதத்தைத் தனது குழந்தைகளுக்குச் சொல்லி வளர்ப்பது கிட்டத்தட்ட குழந்தைகள் மேல் திணிக்கும் வன்முறை என்பவர்களும் உண்டு. எல்லா மதத்தினரும் சமமாக பயிலும் தமிழ்நாட்டில் கூட, பள்ளிப்படிப்பை விட்டு வெளியேறும் போது, பிற மதங்கள் பற்றிய அறிமுகம் கூட இல்லாமலேயே வெளிவருகிறோம். நம் சமூகத்தில் நம் பெற்றோரின் மதம், நம் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய ஜென்மப்பாவம்! இப்படிப்பட்ட சமூகத்தை மதம் என்ற ஓபியம் மூலம் மலுங்கடிப்பது சுலபம். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் குழந்தைகளைப் பெற்று தள்ளுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீவிரவாதிகள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் வசியமாய் மதமாற்றுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் வழிபாட்டுத் தலங்களைத் தீட்டாக்குகிறார்கள். ஓபியம் சமூகம் எளிதாக நம்புகிறது. அந்தக் குறிப்பிட்ட மதங்களுக்கு முன், இங்கு எப்படி இருந்தது என்று ஓபியம் சிந்திக்க விடுவதில்லை. பிற மறைநூல் சாத்திரங்களைப் பாரதி சொன்னது போல் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: Eden: An Indian Exploration of Jewish, Christian and Islamic Lore
ஆசிரியர்: Devdutt Pattanaik
வெளியீடு: Penguin
பக்கங்கள்: 312
விலை: 500 ரூபாய் என நினைக்கிறேன்
—————————————————————————————————————————————————————————————————————————
யெஹோவா கர்த்தர் அல்லா. தோரா விவிலியம் குரான். ஆபிராம் ஆப்ரஹாம் இப்ராஹிம். இஸ்மேல் இஸ்மேல் இஸ்மேயில். ஜோப் யோபு அயூப். டேவிட் தாவீது தாவுத். சனி ஞாயிறு வெள்ளி. யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம். மூன்றும் மத்திய கிழக்கில் தோன்றிய மதங்கள். ஒரே கடவுள் கொள்கை. கடவுளுக்கு உருவமில்லை. கடவுள் ஆண்பால். கிறிஸ்தவத்தில் மூவொரு கடவுள். கிறிஸ்தவத்தில் பெரும்பாலும் உருவ வழிபாடு உண்டு. ஒன்றில் சொர்க்கம் நரகம் இல்லை. இப்புத்தகத்தின் அட்டைப்படம் போல, ஒன்று பாம்பு என்று சொல்லுமிடத்தில், இன்னொன்று மயில் என்று சொல்லும். ஒன்றில் பிரசவம் சாபம், இன்னொன்றில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் பாவத்தில் பங்கில்லை. ஒன்றில் பெண்ணுக்கு மாதவிலக்கு, ஆணுக்கு வழுக்கை, இன்னொன்றில் மனிதனுக்கு ஆடையும் மரணமும் தண்டனைகள்.

ஒன்றில் துறவு கிடையாது. ஆபிரகாமின் சந்ததிகள் என்ற அடையாளமாக ஒன்றில், ஆண்கள் மேல்தோல் வெட்டுவதில்லை. இரண்டில் பரலோகம் உண்டு. ஒன்றில் இறப்பிற்குப் பின்னான பயணத்தைக் குறிக்கும் உத்தரிக்கிற ஸ்தலம் என்றொரு இடமுமுண்டு. பிரளயம் வரை கடவுள் நேரடியாகவே மூன்றிலும் மனிதனிடம் பேசி இருக்கிறார். சவுல் மூலம் ஒரு மதம் அரசாக உருவெடுத்தது உலகில் முதலில் யூதம் என நினைக்கிறேன். பிராமண மதம் போல யூதம் தனதெல்லை மீறி பரவுவதுமில்லை, யாரையும் சேர்ப்பதுமில்லை. கான்ஸ்டன்டைன் முதல் அரசுகளால் கிறிஸ்தவம் பரவியது. அரசாங்கமாகவும் மதமாகவும் ஒரே நேரத்தில் பரவியது இஸ்லாம். இப்படி ஆபிரகாமின் இம்மூன்று மதங்களின் அரசியல் பற்றி முந்தைய பதிவுகள் பலவற்றில் எழுதியிருக்கிறேன்.

ஜியா ஒவ்வொருவர் கைக்கும் போய், சிலுவைப்போர் ஜிஹாத் போய், போப் கலீபா போய், அணு பெட்ரோல் என இந்த ஒன்றேகால் நுற்றாண்டுகளாக பேஜர் வரை பாய்கின்றன! இவற்றை மதமாக தேவ்தத் பட்நாயக் அவர்கள் புத்தகமாக எழுதியிருக்கிறார் என்றதும் வாங்கிவிட்டேன். காரணம் இவர் மதவாதி அல்ல. குறியீடுகள் சிந்தாந்தங்கள் என்று பல விடயங்களைத் தொடர்புபடுத்தி எழுதுவார். உதாரணமாக கிரேக்க அமேசான் பற்றி எழுதினால், பெண் வீரர்களை மட்டுமே கொண்ட படைக்கு அரசர்கள் அப்பெயர் வைத்தார்கள் என்பார், அப்படியே இங்கு சந்திர குப்த மௌரியர் அதேபோல் ஒருபடை வைத்திருந்ததாக சொல்வார். அவர் புத்தகங்களில் அவர் கைப்பட வரைந்த படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும். அப்படங்கள் கதை சொல்லும். இரண்டு மதங்களில் கடவுளுக்கு உருவமே கிடையாதே, எப்படி வரைந்திருப்பார் என்ற ஆர்வம்!


(பார்வையற்ற ஈசாக்கிடம் எசாயூ போல் வேடமிட்டு ஏமாற்றும் யாக்கோபு. இயேசு சொன்ன இடத்தில் வலையிட்டு அதிக மீன் கிடைத்தல்)

சரி, An Indian Exploration என்று ஏன் தலைப்பில் சொல்கிறார். அது நீங்கள் புத்தகம் படித்ததால் தான் புரியும். அவர் எழுத்து நடை அப்படி. ஆசிரியரின் நடையில் எனக்கு புதிதாக கிடைத்த தகவல்கள் சில:

  1. பாரவோன் ஆட்சியில் பஞ்சம் போக்கிய யோசேப் / ஜோசப் / யூசூப், உபரி தானியங்களைச் சேர்த்து வைத்த இடங்கள் தான் பிரமிடுகளாம்!
  2. செங்கடல் வழியே எகிப்தில் இருந்து இஸ்ரேல் நடந்து வர, 40 ஆண்டுகளா என்ற எனது சந்தேகத்திற்குப் பல ஆண்டுகள் கழித்து இப்புத்தகம் பதில் சொன்னது.
  3. சாலமோனின் நீதியை நிலைநாட்ட மூன்று மதங்களிலும் மூன்று வெவ்வேறான கதைகளாம்! எனக்கு ஒரு கதைதான் தெரியும். அதைப் போல் ஓர் அரசன் காஷ்மீரை ஆண்டார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
  4. இம்மூன்று மதங்களுக்கு முன்னரே அதே நிலத்தில் ஒரே கடவுள் கொள்கை இன்றும் பேசும் இன்னொரு மதம் பற்றி, ஒரு பக்கம் நிறைய குறிப்பெழுதி வைத்திருக்கிறேன்.

இம்மதங்கள் சாத்தானைப் பற்றி என்ன சொல்கின்றன? பிலாத்துவைப் பற்றி விவிலியம் ஏன் இவ்வளவு துல்லியமாக விவரிக்கிறது? எவ்வளவு அந்நியமாய் இருந்தாலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் மொழியைத் தாண்டி எளிய மக்களை எளிதாக எப்படி நெருங்க முடிந்தது? படித்துப் பாருங்கள். இப்பிறப்பில் ஒழுங்காக வாழச் சொல்லி மனிதனின் மறுபிறப்பை மறுக்கும் இம்மதங்களை, கடவுள்கள் மறுபிறப்பெடுக்கும் இந்திய வழியில் கதை சொல்கிறது இப்புத்தகம். எனக்கு கிரேக்க வழியில் இம்மூன்று மதங்களைக் கேட்டறிய வேண்டும் என்ற ஆவலுண்டு. ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்கள். நிறைய மதங்களைப் படியுங்கள் மதமற்று வாழ!

(முகமது நபியைச் சொர்க்கத்திற்குச் சுமந்து சென்ற பறவை)

அனுபந்தம்:
—————-

  1. யூதம் அறிய முகில் அவர்களின் யூதர்கள் புத்தகம் படிக்கலாம். இத்தளத்தில் 36ம் புத்தகம்.
  2. இயேசுவை மட்டும் அறிய கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ படியுங்கள்.
  3. என்னைக் கவிதை உலகிற்குள் இழுத்தவர்கள் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான். ‘பாலை நிலா’ என்ற தலைப்பில் கவிக்கோ அவர்கள், முகமது நபி பற்றி கவிதை வடிவில் எழுத ஆரம்பித்தார். சில உதாரண கவிதைகள் அவருக்கே உரிய நடையில் அட்டகாசம்! அவர் மறைவிற்குப் பின், பதிப்பகத்தாரை விசாரித்தேன். அந்நூல் நிறைவேறவே இல்லை என்பது தமிழுக்குப் பேரிழப்பு.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

256. And then there were none

உலகின் கடைசி மனிதன் தனியாக இருந்தபோது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
– மிகச்சிறிய சஸ்பென்ஸ் கதையாக சுஜாதா சொன்னது

தாண்டவராயன் கதை படித்த பிறகு கொஞ்சம் திமிர் தலைக்கனம் எகத்தாளம். எந்தப் புதினத்தை எடுத்தாலும் ஒட்டவேயில்லை. மிகவும் கடினப்பட்டு மூன்றில் ஒரு பங்கான 180 பக்கங்கள் படித்தபிறகு, ஒரு தமிழ்ப் புதினத்தைச் சென்றவாரம் தான் நிரந்தரமாக மூடி வைத்துவிட்டேன். இந்த விபத்தில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்குப் பல காலங்கள் ஆகும். இதனால் தான் நான் புதினங்கள் படிப்பதேயில்லை. இப்படி பலமுறை எனக்கு முன்னர் நடந்திருக்கிறது. அந்நேரங்களில் என்னை மீட்டெடுக்க எப்போதும் என்னிடம் திருக்குறள் உண்டு. அப்பறம் அகதா கிறிஸ்டி. நான் தமிழ்ப் புதினங்களால் கொல்லப்படும்போது, நான் அந்த அம்மாவின் ஆங்கிலத் துப்பறியும் புதினங்களைப் படிப்பதுண்டு. விரசம் கலவி முத்தம் ஏதும் இருக்காது. கதாநாயகன் துப்பாக்கி எடுத்து சண்டை போட மாட்டார். எழுத்தில் கவிதை நடையோடும். மூளைக்கு வேலைதரும் கதைக்களங்கள்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: And then there were none
ஆசிரியர்: Agatha Christie
வெளியீடு: Harper Hollins
முதல் ஈடு: 1939
பக்கங்கள்: 250
விலை: ரூபாய் 299
வாங்கிய இடம்: Amazon.com
—————————————————————————————————————————————————————————————————————————
Longest uncut single-shot Tamil movie. அகரம் என்றொரு தமிழ்ப்படம் வந்தது. வெட்டு இல்லாமல் எடுக்கப்பட்ட மிக நீண்ட தமிழ்ப்படம். அதாவது முதல் காட்சியில் ஒளிப்பதிவாளர் கேமராவை ஆன் செய்தால், கடைசி காட்சியில் தான் ஆஃப் செய்வார். கேமரா நகரும், இடையிடையில் கதாப்பாத்திரங்கள் கேமராவின் எல்லைக்குள் வந்துவந்து நடித்துவிட்டு போவார்கள். கடினம்தான். சென்னையில் சத்யம் திரையரங்கில் பார்த்தேன். என்னைத் தவிர அநேகமாக மற்றவர்கள் எல்லாம் அப்படம் சம்மந்தப்பட்டவர்கள் நண்பர்கள் உறவினர்கள். படம் முழுக்க நொய்நொய்யென்று பேசிக்கொண்டே இருந்தார்கள். கடுப்பாகி எழுந்து போகக்கூட நினைத்தேன். ஒரு கேள்விக்கு விடைகிடைக்க கடைசி வரை பொறுமையாகப் பார்த்தேன். காரணமில்லாமல் ஒவ்வொரு கொலையாக நடக்கும் அந்த த்ரில்லர் திரைப்படத்தில் கண்டிப்பாக ஒரு பிளாஷ்பேக் இருக்கும். வெட்டு இல்லாமல் கடந்தகால, நிகழ்கால காட்சிகளை இணைத்து எப்படி சொல்வார்கள்? உண்மையிலேயே அக்காட்சியை நன்றாக எடுத்து இருந்தார்கள்.

And then there were none. அப்பறம் அங்கு யாருமேயில்லை. ஒரு தீவு. ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத 10 பேர் அங்கு ஒரே நாளில் வரவழைக்கப்படுகிறார்கள். 3 பெண்கள், 7 ஆண்கள். 10 பேரும் ஒவ்வொருவராக வெவ்வேறு முறைகளில் சாவதாக, அவர்கள் தங்கும் அறை ஒவ்வொன்றிலும் பள்ளிக் குழந்தைகள் பாடல் ஒன்று இருக்கிறது. வந்த இரவே அடுத்தடுத்து இருவர் மர்மமாக மரணிக்கின்றனர். அப்பாடல் போல ஒவ்வொருவராக இறந்து, கடைசியில் யாருமே இல்லாமல் போகப் போகிறார்கள் என அவர்களுக்குப் புரிந்து சுதாரிக்கிறார்கள். அதுவே நடக்கிறது. அப்பறம் அங்கு யாருமேயில்லை. 9 பேரைக் கொன்றுவிட்டு, ஒரு பிளாஸ்பேக் சொல்லி கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் மொக்கை கதையை அந்த அம்மா எழுத மாட்டார். அதிகப் பிரசங்கித்தனமாக புதினத்தின் கடைசி பக்கம் போய், கடைசி வரியைப் படித்தால் கொலைகாரன்/ரி பெயர் இருக்கிறது. நான் படிக்கும்போது, அகரம் திரைப்படம் போல எனக்கு கொலை செய்வது யாரென்று முக்கியமாகப் படவேயில்லை. அதைவிட முக்கியமான ஒன்றை அந்த அம்மா இக்கதையில் வைக்கவேயில்லை. அதைத் தேடித்தான் புதினத்தைப் படித்து முடித்தேவிட்டேன். அதுதான் கதைசொல்லியின் வெற்றி! நான் இதுவரை படித்த அகதா கிறிஸ்டி புதினங்களில், எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். சுவர் இல்லாமல் சித்திரம் வரையும் கதை!

மனைவி பிணம் இருக்க, கணவன் மற்றவர்களுக்கு உணவு சமைக்கிறான். செத்தவர்களை அவரவர் அறைகளில் பூட்டி வைத்துவிட்டு, சாகப்போகிறவர்கள் சாப்பிட்டு சரக்கடித்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். என்ன இந்த அம்மா இப்படி லாஜிக் இல்லாமல் கதை சொல்கிறது என்று யோசித்தால், அதற்கெல்லாம் பதில் வருகிறது. நண்பனின் மனைவியை அபகரிக்கும் மிகச் சிறந்த ஆன்மிகவாதி ஒருவன், எல்லா நாட்களும் கோவிலுக்குப் போகிறான், தாவீது தன் தளபதி மனைவியை அபகரிக்கும் திருப்பலி வாசகம் வாசிக்கப்படும் நாள் தவிர, என்று அந்த அம்மா எழுதும் போது, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ரசித்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரே பெண், 4 ஆண்கள் இருக்கும் நிலையில் யார் கொலையாளி என்று எல்லார் மேலும் எல்லாருக்கும் சந்தேகம். எல்லாருடைய உடைமைகளையும் சோதனை செய்கிறார்கள். ஒவ்வொருவர் உடலையும் சோதனையிட வேண்டிய கட்டாயம். இப்படி கதை வைத்து, அந்த 4 ஆண்கள் அந்த ஒரு பெண்ணை நம்மூர் சினிமாவில் என்ன செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியும். புது வசந்தம் திரைப்படம் தவிர! அடுத்து சாவை வைத்துக் கொண்டு கடைசியில் ஒரு ஆண், ஒரு பெண் மட்டும் மிஞ்சினால் சட்டுபுட்டென்று ஆகவேண்டிய காரியத்தைப் பார்க்க நாம் ஓர் உடன்படிக்கைக்கு வருவோம். இந்த அம்மா இவ்விரண்டு இடங்களையும் மிக எளிமையாக கடந்து போகிறது.

அப்பறம் அங்கு யாருமேயில்லை என்றாவதற்கு முன்னர், நீங்களும் ஒருமுறை படித்துவிடுங்கள். நானும் அடுத்த தமிழ்ப் புதினத்தின் விபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற, இன்னொரு அகதா கிறிஸ்டி புத்தகம் வாங்க வேண்டும்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

255. The Violinist’s Thumb

கொடுத்த வேலையைத் தவிர உறுப்புகள் வேறு எதையாவது செய்தால், மூளை கடுமையான தண்டனை தரும். வயலின் கிடார் போன்ற இசைக்கருவிகளைத் தொழில்ரீதியில் பயன்படுத்தி சில விரல்களை அதிகமாக பயன்படுத்தும்போது, இசையறிவு இல்லாத மூளை ஏதோ தப்பென்று புரிந்து எதிர்வினையாற்றும். என்ன செய்யும் தெரியுமா? தெரியாவிட்டால் விட்டுவிடுங்கள். சில விடயங்களை அதிகம் ஆராய தேவையில்லை. பிறகு சூப்பர் சிங்கர்கள் பஞ்சம் வந்துவிடும். இப்புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து அப்படிப்பட்ட புத்தகம் என்று நினைத்தேன். சாம் கின் அவர்களின் அனைத்து புத்தகங்களையும் படிப்பவன் நான். விலைதான் அதிகம். அழகு யுவதிகள் சூழ டிராமில் பயணித்து, மெல்பேர்ன் நகர பல்கலைக்கழக நூலகத்தில் இப்புத்தகம் இருப்பதைக் கண்டுபிடித்து, புரட்டினேன். A T C G. புரியவில்லையா?

வாட்சன் கிரீக் என்ற இருவர் கண்டுபிடித்து சொன்னதாக பள்ளியில் படித்தது. மனித செல்லிற்குள் இருக்கும் உட்கருவில் ஏணிப்படிகள் போல் சுருள் சுருளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் சமாச்சாரத்தில் இருக்கும் அமிலங்கள். DNA RNA ஜீன்ஸ் குரோமசோம் பற்றிய புத்தகம் இது. இந்த விடயங்கள் இன்னதென்று தெரியாமல் இந்த நான்கு வருடங்களில் சீரழிந்தவர்கள் பார்த்திருப்பீர்கள். அதனால் பணக்காரன் பட்டியலில் டக்கென்று இடம்பெற்றவர்களைப் படித்திருப்பீர்கள். அப்பறம் விருதுகள். அவர்கள் மனைவிகள் ஓபன் டென்னிஸ் பார்ப்பதைக் குளோசப் படங்களாக ஊடகங்கள் துரத்தியத்தைக் கண்டிருப்பீர்கள். நிகழ்கால எதார்த்தம்!

ஒரு காலத்தில் X குரோமசோம் மட்டும்தான் இருந்தது. அதாவது பெண் மட்டும்தான். பாலினத்தையும் கொண்டிருக்கும் 23வது குரோமசோமில் ஏதோ தவறாகி Y தோன்றி, ஆண் இனம் தோன்றிவிட்டது. தவறை இயற்கை ஏற்கனவே சரிசெய்ய ஆரம்பித்துவிட்டதாக போனவாரம் செய்திகள் செப்பின. அதாவது ஆண் இனத்தைக் களையெடுக்கிறதாம் இயற்கை! உலக அரசியலில் சிக்குண்டாலும் சாமானியனும் அச்சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவனுக்குப் புரியும்படி எழுதும் சாம் கீன் புத்தகம் இது.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: The Violinist’s Thumb
ஆசிரியர்: Sam Kean
—————————————————————————————————————————————————————————————————————————
ஒருமட மாதும் ஒருவனும் ஒன்றாகி இன்ப சுகம் கண்டு, ஆண் உயிரணுக்கள் பெண்ணிற்குள் வந்தால், அங்கு பெண்ணின் எதிர்ப்பு சக்தி செல்கள் தடுத்து நிறுத்தும். அவற்றை ஏமாற்றி செல்ல ஏற்கனவே ஆண் சில மாறுவேட வஸ்துகளையும் சேர்த்தே கொண்டுவரும். பிறகு உடன்படிக்கைபடி கருவில் ஒரே ஒரு செல்லாக உயிர்கள் தரிக்கின்றன. அந்த ஒரு செல் எப்படி, கண் காது மூக்கு நகம் முடி மூளை எலும்பு பீழை என்று பல வடிவம் பெறுகிறது? அந்த ஒரு செல்லிற்கு, ஒருபக்க உடலை ஜெராக்ஸ் எடுத்து மறுபக்கமும் இன்னொரு கை கால் வைக்க எப்படி தெரிகிறது? அப்படி இரட்டையாக வைத்தபின்னும் ஒருபக்க சிறுநீரகத்தைக் கொஞ்சம் ஏற்றியும், ஒருபக்க நுரையீரலைக் கொஞ்சம் இறக்கியும் வைக்க எப்படி தெரிந்து கொண்டது? பெண் வயிற்றில் கரு வளரும்போது மருத்துவரிடம் சோதனைக்குச் செல்கிறீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நோய்களின் வரலாற்றைக் கேட்கிறார். மாமனாரின் மொத்த வரலாற்றை எதற்காக கேட்கிறார்? கணவனைவிட அவரின் தந்தைக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் என்ன அப்படி தொடர்பு?

நிறைய இருப்பதால் நேரடியாக இப்புத்தகத்தில் இருந்து சில குறிப்புகளைப் பட்டியலிடுகிறேன்.

  1. குரோம்சோம்களின் பெயர்கள் 1 2 3 … 23 என எண்கள்தான். ஆனால் ஜீன்களுக்குப் பெயர்களுண்டு என சில உதாரணங்கள் சொல்கிறார் ஆசிரியர். எல்லாம் காரணப் பெயர்கள். தலைப்பிள்ளைகள் இறந்தே பிறக்க காரணமான ஜீன், மூன்றாவது முலைக்காம்பு கொடுக்கும் ஜீன், Pokemon போன்றவற்றை மிகவும் ரசித்தேன்.
  2. கூட்டி பெருக்கினால் 64 இருக்க வேண்டுமே. ஏன் 20 அமிலங்கள் மட்டும் மனித செல்லிற்குள் இருக்கின்றன? இன்றைக்கு பத்து வயது பையன் கூட பதில் சொல்வான். ஆனால் அதைக் கண்டுபிடிக்க, வெவ்வேறு துறைகளில் பலரைக் கொண்டு 20 குழுக்கள் அமைத்து ஆராய்ந்து நோபல் பரிசு வாங்கி இருக்கிறார்கள்! RNA tie club.
  3. ஆண் பெண் பாலுறவு. இந்த டிசைனில் அதிகம் சந்தோசம் அடைவது யார்? பாதிக்கப்படுவது யார்? காலங்காலமாக இந்த சந்தேகம் உண்டு. ஆணாகவும் பெண்ணாகவும் வாழ்ந்த அர்ச்சுனனைப் பிடித்துக்கூட கேட்டிருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தவர் என்று, இரத்த வெள்ளத்தில் சாக கிடந்த பிதாமகனிடம், பல கேள்விகள் கேட்டு குறிப்புகள் எடுத்துக் கொண்டபோது, தவறாமல் இடம்பெற்ற கேள்வியிது. அந்த ஆள் அதற்கும் சலிக்காமல் பதில் சொல்லியிருக்கிறார்! Million dollar question! நாம் என்ன கதைகள் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். இயற்கைக்கு ஒரு கணக்குண்டு. கர்ப்பம் கர்ப்பகாலம். ஒன்று இன்னொன்றைப் பாதிக்கும். ஆணுக்கு ஒன்று தேவை என்றால், பெண்ணிற்கு இன்னொன்று. அதைத் தீர்மானிப்பதும் ஒரு ஜீன். விஷமும் ஜீனே, விஷமுறிவும் ஜீனே!
  4. மனிதன் பாலூட்டியாக உருவெடுத்த போது, இனிமேல் தேவையில்லை என இன்னும் நம்முள் தூங்கிக் கொண்டிருக்கும் ஜீன்களைப் பட்டியலிடுகிறார். குளுக்கோஸ் அடுத்து இன்று நாம் அதிகம் எடுக்கும் சர்க்கரை லாக்டோஸ். பாலில் இருக்கிறது. நம் முன்னோர்களுக்கு அதைச் செரிக்கும் சக்தி கிடையாது. அலர்ஜி. அந்த அலர்ஜி ஜீன் அமைதியாகிவிட்டது. Lactose tolerance. திடீரென யாராவது வந்துவிட்டால் தடால்புடால் என்று எழுந்து சரிசெய்து ஒன்றுமே நடக்காதது போல் இருந்து கொள்கிறோம். சில விலங்குகள் போல் கல்லடி வாங்குவதில்லை. அதிலும் ஒரு ஜீன். பாலூட்டியானதால் ஏற்கனவே இருக்கும் ஜீன்கள் எப்படி திணறுகின்றன என இன்னொரு பட்டியல். வெள்ளைத்தோல் சூரிய ஒளிக்குப் புண்ணாவது ஒரு ஜீனால். தான் வரும் முன் தன் பெருமைகளைச் சொல்லச் சொல்லும் அரசியல்வாதி ஜீன் ஒன்று.
  5. எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் பரம்பரை புகைப்படங்களை மட்டும் வைத்து அறிவியல் படித்த Hapsburg lip!
  6. பின்னிப் பிணைந்து இரட்டையாகவே சுருள்சுருளாக போகும் DNA, BJP RSS போல் சிக்கிக் கொள்வதுபோல் பார்வைக்குத் தெரிந்தாலும் அவை எப்படி சிக்கிக் கொள்வதில்லை? உச்சி வழுக்கை முதல் கால்நகம் வரை எப்படி சரியான தகவலைப் பரம்பரைக்கு கடத்துகின்றன? Knot theory. அதை இரண்டு முறை படித்துவிட்டு குழம்பிப் போய் திரிந்தேன்! ஒருவேளை தகவல்கள் தவறாக புரிந்துகொள்ளப் பட்டால்? Philadelphia swap.
  7. வாயும் வயிறுமாய் இருக்கும்போது குங்குமப்பூ அது இதுவென பெண்தான் கருவை ஊட்டி வளர்கிறாள். ஊரான் பிள்ளையை ஊட்டி வளக்கணும்டா, அப்பதான் உன் பிள்ளை தானாய் வளருமென்று ஆணிற்குச் சொல்லிவிட்டு அவனை அடுத்தவேளை பார்க்கச் சொல்கிறது. இப்படி காரியம் முடிந்தவுடன் கடமை முடிந்ததென காலங்காலமாக திரும்பிப் படுத்துக் கொள்ளும் ஆணுக்கும், பிறக்கப்போகும் குழந்தையின் உடல் நலனுக்கும் சம்மந்தமே இல்லையென்ற நம்பிக்கையைப் பொய்யாக்கிய கதை. ஒரு கிராமத்தையே நூறாண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து கண்டுபிடித்த விடயம்!
  8. ஒத்த சிந்தனையுடைய பெண்களுக்கு ஒரே நேரத்தில் மாதவிலக்காகிறது என்று முடியாட்சிகளில் அந்தப்புர பெண்கள் நம்பியதை முன்னொரு புத்தகத்தில் சொல்லியிருந்தேன். அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்தவைகள் பட்டியலில் இப்புத்தகத்தில் வருகிறது. குரங்குகளை மனிதனுடன் கலப்பது! புனிதரின் இரத்தம் என்று வவ்வாலின் முத்திரத்தை வைத்தது! புலியின் மேல் சிங்கம், சிங்கம் மேல் புலி, உயர்தர ஜீன்களுடன் குடிமக்கள், அசுர பலத்துடன் போர்வீரர்கள், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா. இயேசுவை மீண்டும் உருவாக்கலாம் என்ற பேச்சு வந்தபோது இன்னொரு விஞ்ஞானி சொன்னாராம்: You are trying to bring back one of the few people that are supposed to come back anyway.
  9. நீங்கள் ஈரல் அதிகம் சாப்பிடுவீர்களா? மூத்திரத்துடனும் முரண்டு பிடிக்கும் விட்டமின் A நல்லவரா? கெட்டவரா?



சாம் கின் புத்தகங்களில் நான் மிகவும் கடினப்பட்டு படித்தது இதுதான். சில பகுதிகள் எனக்கு புரியவில்லை; தேடி புரிந்து கொள்ள பொறுமையும் நேரமும் இல்லை. அவரின் Iceberg surgeons என்ற புத்தகத்தைச் சிங்கப்பூர் நூலகங்களில் கண்டுபிடித்து படித்தேன். இரண்டு கட்டுரைகளுக்கு மேல் ஒட்டவில்லை. வைத்துவிட்டேன். Violinist’s Thumbல் நான் மிகவும் ரசித்த மூன்று விடயங்களுடன் முடித்துக் கொள்கிறேன்.

  1. ஒரு விலங்கின் ஜீன் இன்னொரு வேறொரு விலங்கின் ஜீனை எப்படி ஆக்கிரமிக்கிறது என்ற கட்டுரை! பிரமித்துப் போனேன். பூனையின் சிறுநீரைப் பார்க்கவே முடியாது என்று கிராமங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். பூனையின் உடலுறவைப் பார்த்த அதிர்ஷ்டத்தால் தான் பிரதமரானதாக ஒருவரின் கதையுமுண்டு. பூனைகள் உங்களின் செல்லப்பிராணி என்றால், இப்புத்தகம் உங்களுக்குப் பிடிக்காது! அதுவே பூனைகளின் வெற்றி.
  2. ஐன்ஸ்டின் மூளையை விஞ்ஞானம் பதப்படுத்தி வைத்திருக்கிறது என்று இயற்பியல் ஆசிரியர் டேவிட் ராஜ் அவர்கள் சொன்னதில் இருந்து தெரியும். இத்தளத்தின் 150வது புத்தகத்தில் ஒருவரி சொல்லாத ஆசிரியர், ஐன்ஸ்டின் மூளைக்கு இப்புத்தகத்தில் ஒரு கட்டுரையே ஒதுக்கி இருக்கிறார். அடேயப்பா!
  3. இப்புத்தகத்தின் தலை சிறந்த பகுதியே, புத்தகத்தின் தலைப்பைக் கொடுத்த அந்த வயலின் மேதை கதைதான்!

ஜீன் என்பது மொழி வேதியியல் கணக்கு நிகழ்தகவு தேற்றம் விதி அறிவியல் மரபியல் தகவல் வரலாறு வினையூக்கி பெயர்ச்சொல் ஆகுபெயர் மங்களவழக்கு இடக்கரடக்கல் தொகை தளை தலைமுறை வினையாலணையும்பெயர் பணம் அரசியல் நீ நான் அது இது எல்லாம்! ஏழாம் அறிவு படம்போல தலைமுறைக்கு அறிவைக் கடத்த முடியுமா? குலவித்தை கல்லாமல் பாகம்படுமா? ஆட்டுக்கும் அளந்துதான் வைத்ததா கொம்பை? அறிவுடை மாந்தரும் கற்புடை பெண்டிரும் ஒரு சாதியில் மட்டும்தான் பிறப்பார்களா? கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்றொன்றுண்டா? படித்துப் பாருங்கள்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

❌