Normal view

Received before yesterday

தமிழியல் தேடல்(5) -“தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு அறிவுச் சுரங்கமாக விளங்கும் நூலகங்கள்”

27 April 2025 at 11:23

“தமிழ் ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலான நூலகங்களின் பட்டியலையும் நூலகங்களில் இடம்பெற்றிருக்கும் நூற்பட்டியலையும் விளக்குகிறது இக்கட்டுரைத் தொகுப்பு”

புத்தகங்கள் வெறும் காகிதங்களால் அச்சடிக்கப்பட்ட தொகுப்புகள் அல்ல; நிகழ்கால வரலாற்றை எழுத்தினூடே, எதிர்காலத் தலைமுறைக்குக் கொண்டு செல்லப் பதிவு செய்யப்படும் வரலாற்றுப் பொக்கிஷங்கள். கடந்த காலச் செயல்பாடுகளை நிகழ்காலத்தில் கண்முன் நிறுத்தும் காட்சிப் படிமங்கள்.

புத்தகங்களின் இன்றியமையாமை உணர்ந்து, அவற்றைச் சேகரிக்கும் மையங்களாகப் புத்தக சாலைகள் முகிழ்ந்தன. அறிவுதேடலுக்கான நுழைவு வாயில்களாக விளங்கும் நூலகங்களின் பயன்பாடு, ஆய்வாளர்களுக்கு அவசியமானது. எனவே, ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வின் குறிப்பிட்ட காலத்தை நூலகங்களைப் பார்வையிடுவதற்காக ஒதுக்க வேண்டும்.

எழுத்தாளரும் திறனாய்வாளருமான ந.முருகேச பாண்டியன் அவர்கள் “தமிழ் ஆய்வில் தகவல் சேகரிப்பும் ஆய்வு நூலகமும்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். ஜனவரி 2017-ல் சான்லாக்ஸ் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையில், தமிழ்நாடு அளவிலான முக்கியமான ஆய்வு நூலகங்களின் பட்டியலைக் கொடுத்திருப்பார்.

அவர் கொடுத்த நூலகங்கள் பற்றிய சிறுகுறிப்புகளையும் சில நூலகங்களில் இடம்பெற்றிருக்கும் நூல்கள் பற்றிய செய்திகளையும் இக்கட்டுரையில் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

1) கன்னிமாரா நூலகம், மறைமலையடிகள் நூலகம்

கன்னிமாரா நூலகத்தின் பழம்பெருமையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் நம்மில் பலர் அறிந்திருப்போம். 1890ஆம் ஆண்டு மதராஸ் மாகாண ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு இந்நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1896ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள 4 தேசிய நூலகங்களில் ஒன்றாக இந்நூலகம் திகழ்கிறது. தற்போதைய கணக்குப்படி கன்னிமாரா நூலகத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

மறைமலையடிகள் நூலகமானது மறைமலையடிகளின் நூல் சேகரிப்பைக் கொண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் 1958இல் நிறுவப்பட்டது. தற்போது பதிப்பில் இல்லாத அரிய நூல்களின் இருப்பிடமாக விளங்குகிறது. இந்நூலகம் தற்பொழுது கன்னிமாரா நூலகத்தின் முதல் தளத்தில் செயல்படுகிறது.

கன்னிமாரா நூலகம் பற்றி மேலும் தகவல் அறிய,

https://tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juU1&tag=%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE#book1/

2) அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் 

1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரேபிய, பாரசீக மற்றும் சிங்கள மொழிகளைச் சேர்ந்த 50,180 ஓலைச்சுவடிகளும்; 22,134 கைப்பிரதிகளும்; 26,556 அரிய நூல்களும் காணப்படுகின்றன.

உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் காணப்படும் நூலகமாகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம் விளங்குகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. பழந்தமிழ் இலக்கிய – இலக்கணங்களில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு இந்நூலகம் ஒரு வரப்பிரசாதம்.

சுவடிகளின் பட்டியலைக் காண, 

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kxyy&tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88++A+Descriptive+Catalogue+of+the+Tamil+Manuscripts+in+the+Government+Oiental+Manuscripts+Library%2C+Madras

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8khyy&tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88++A+Descriptive+Catalogue+of+the+Tamil+Manuscripts+in+the+Government+Oiental+Manuscripts+Library%2C+Madras#book1/

3) டாக்டர் உ.வே.சா.நூலகம்

உ.வே.சாமிநாதையர் அவர்கள் சேகரிப்பில் இருந்த நூல்கள், ஓலைச்சுவடிகளைக் கொண்டு இந்நூலகம் தொடங்கப்பட்டது. 1943இல் சென்னை பெசண்ட் நகர் அருண்டேல் கடற்கரை சாலையில் நிறுவப்பட்டது. இங்கு 1,832 நூல்களும் 939 சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உ.வே.சா.விற்குப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய 3000கும் மேற்பட்ட கடிதங்களும் இங்கு உள்ளன. 

மேலும் தகவல் அறிய,

https://uvesalibrary.org/

4) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழியல் ஆராய்ச்சியை வளர்தெடுத்தற் பொருட்டு, 1994ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தொடங்கப்பட்டது. நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம் எனத் தமிழாய்வு வெளியில் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது. இங்குத் தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 5,00,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், 30 இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்களுடன் மின்நூலகம் இணையத்தில் பவனி வருகிறது.

 தமிழ் அச்சுப்பயன்பாட்டின் வரலாற்றை விவரிக்கும் வகையிலும் சிந்துவெளி ஆராய்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் வகையிலும் இரண்டு அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணக் காப்பகம் இங்கு செயல்படுகிறது. இந்நூலகத்தின் சிறப்புகளை விளக்கி ஆனந்த விகடன் பத்திரிகையில் “1000 காலத்துப் பரண்” என்ற தலைப்பில் வாராந்திர தொடர் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது. 

 மின்நூலகத்திற்கான இணைப்பு,

https://rmrl.in/ta/dl/books

5) தமிழ்நாடு ஆவணக் காப்பகம் 

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு அருகில் ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1640 முதல் தற்பொழுது வரை வெளியான அரசாணைகளும் அரிய ஆவணங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 2.3 இலட்சம் நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தலைப்புகளின்கீழ் ஆய்வு மேற்கொள்வோருக்கு இக்காப்பகம் ஒரு பெருங்கொடை.

6) பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்

சமூக அறிவியல், தொல்லியல், சூழ்நிலையியல், இந்தியவியல் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்கிறது. இங்கு 70,000 புத்தகங்களும் 460 ஆய்வேடுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகளுக்கெனத் தனியாக நூலகம் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஆய்வு மாணவர்களுக்கு அரிய கருவூலமாக விளங்குகிறது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.ifpindia.org

7) மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி நூலகம்

 சென்னை இலக்கியச் சங்கம் 1812இல் தொடங்கப்பட்டது. இச்சங்கம் தோற்றுவித்த நூலகம் பழமையும் முக்கியத்துவமும் வாய்ந்தது. இங்கு இரண்டு நூற்றாண்டுகளாக வெளியிடப்பட்ட 83,000கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இலக்கிய சங்கத்தின் முக்கியப் பங்களிப்பாக இந்நிறுவனம் நடத்திய மெட்ராஸ் இதழைக் குறிப்பிடலாம். இந்த இதழ் புவியியல், வானிலையியல், விலங்கினங்கள், தாவரங்கள், கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த விரிவான ஆராய்ச்சிகளை வெளியிட்டது. 

8) அடையாறு நூலகம் & ஆய்வு நிறுவனம்

சென்னை அடையாறு பகுதியிலுள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் ‘அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ செயல்பட்டு வருகிறது. இந்நூலகம் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்பவரால் 1886ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 2,50,000 அச்சுத் தொகுப்புகளும் 20,000 ஓலைச் சுவடிகளும் உள்ளன.

9) சரசுவதி மகால் நூலகம்

இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலான பல மொழிகளில் உள்ள ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.வரலாறு, மருத்துவம், அறிவியல், தத்துவம், மதம், இசை, நாட்டியம், சிற்பம் போன்ற பல கலைகளை பறைசாற்றும் சிறந்த நூல்களின் இருப்பிடமாக இந்நூலகம் விளங்குகிறது.

சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலையிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட சுவடிகள் சுமார் 47,000 மேல் உள்ளன. அதில் வடமொழிச் சுவடிகள் 39,000. தமிழ்ச் சுவடிகள் 4,200. மராத்தி ஓலைச் சுவடிகள் 3000. தெலுங்குச் சுவடிகள் 800 ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் சுமார் 4500 நூல்களை மன்னர் சரபோஜி சேகரித்து வைத்துள்ளார். 

10) ஞானாலயா ஆய்வு நூலகம்     

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஞானாலயா ஆய்வு நூலகம். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். 1959ஆம் ஆண்டு, நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. தமிழில் அச்சாக்கம் பெற்ற நூல்களின் முதல் பதிப்புகள் பல இங்கு கிடைக்கின்றன. இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி – டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையர் இணைந்து நடத்தி வருகின்றனர்.

11) மதுரைத் நான்காம் தமிழ்ச்சங்க நூலகம் (செந்தமிழ்க் கல்லூரி)

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நிறுவப்பட்டது.மதுரை சிம்மக்கல் பகுதியில் இச்சங்கத்தின் நூலகம் அமைந்துள்ளது. தற்போது பதிப்பில் இல்லாத பல அரிய நூல்கள் இங்குக் கிடைக்கின்றன. இச்சங்கம் வெளியிட்ட செந்தமிழ் இதழ் தமிழாய்வின் முன்னோடி இதழாகக் கருதப்படுகிறது. 

12) கரந்தைத் தமிழ்ச் சங்கம் 

கரந்தைத் தமிழ்ச் சங்கம் 14 மே 1911 அன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடி என்னும் கரந்தையில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தை த.வே.இராதாகிருட்டினப் பிள்ளை நிறுவினார். சங்கத்தின் முதல் தலைவராக த.வே.உமாமகேசுவரம் பிள்ளை செயல்பட்டார். இச்சங்க நூலகத்தில் முக்கியமான ஆய்வுநூல்கள் பல பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இச்சங்கம் நடத்திய ‘தமிழ்ப்பொழில்’ என்ற ஆய்விதழ் தமிழாய்வுப் புலத்தில் முக்கியமானதாக விளங்குகிறது.

13) திரு.வி.க. நூலகம்

திரு.வி.க. நூலகம் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியிலுள்ள மேலப்பாதி கிராமத்தில் செயல்படுகிறது. இந்த நூலகம் 1946 நவம்பர் 15 அன்று தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு சுமார் 19,000 நூல்கள் உள்ளன. வரலாறு, அரசியல், பொதுவுடமை, கதைகள், சிறுகதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறு, தொழில் எனப் பல்துறை சார்ந்த நூல்கள் இங்கு உள்ளன.

14) கோபால் ராவ் நூலகம்

கும்பகோணம் அரசினர் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றியவர் கோபால் ராவ். இவர் மறைந்த பிறகு, இவரிடம் பயின்ற மாணவர்களால் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வாழைத் தோட்டத்தில் 1895-ம் ஆண்டு மே மாதம் கோபால் ராவ் நூலகம் உதயமானது. இங்கு 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்நூலகத்தில் சமஸ்கிருத புத்தகங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன.

15) பென்னிங்டன் பொது நூலகம்

தமிழகத்தின் பழமையான நூலகங்களில் இரண்டாம் இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகம் உள்ளது. இங்கு 37,910 தமிழ் நூல்களும் 32,185 ஆங்கில நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளாக அறிவுத் தேடலுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது.

16) ஆதீன நூலகங்கள்

சைவ ஆதீனங்களின் தமிழ்ப்பணி பங்கு அளப்பரியது. சைவ இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், சிற்றிலக்கியம் என பல்வேறு வகைமையிலான அரிய நூல்களின் இருப்பிடமாக ஆதீன நூலகங்கள் விளங்குகின்றன. அவ்வகையில் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, மதுரை, தருமை, பேரூர் போன்ற ஆதீனங்களில் செயல்படும் நூலகங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.17) பவானந்தர் கழகம் நூலகம்சென்னை வேப்பேரியில்பவானந்தர் கழக நூலகம் பதிப்பகமுமாகத் தமிழாய்வுலகில் வலம் வருகிறது. இது பவானந்தம் பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டது. அரிய தமிழ் நூல்கள், ஏட்டுச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் எனப் பல ஆவணங்கள் இங்கு உள்ளன.

18) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்

தமிழியல் ஆய்வை வளர்த்தெடுத்தற் பொருட்டுத் தமிழ்நாடு அரசால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், ஓலைச்சுவடிகளும், அரிய நூல்களும் உள்ளன. மேலும், முனைவர் பட்ட ஆய்வேடுகளும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடுகளும் இடம்பெற்றுள்ளன.

19) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பாவேந்தர் நூலகம்

செவ்வியல் இலக்கியங்களில் முனைவர் பட்டம் பயில்வோர் தன்னுடைய ஆய்வுக் காலத்தில் அவசியம் பார்க்க வேண்டிய நூலகம் இதுவாகும். நூலகத்தில் 47,450 நூல்களும் 4800 அரிய செவ்வியல் நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. பல அரிய நூல்களைக் கொண்டு இணைய நூலகம் செயல்படுகிறது.

இணைய நூலகத்தைப் பார்வையிட,

https://library.cict.in/ebooks.html

20) நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம்

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. பல்லடம் மாணிக்கம் அவர்களின் சேகரிப்பில் இருந்த நூல்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழின் பல்துறை சார்ந்த ஒரு லட்சம் புத்தகங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% சதவீத நூல்கள் தற்பொழுது பதிப்பில் இல்லாதவை.

அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றவை பெரும்பாலானோர் அறிந்தவை என்பதால் விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட, நூலகங்களுக்குச் சென்று நூல்களைத் தேடித் தேடி இன்புறுங்கள். தேடிய நூல்களின் தீர்க்க தரிசனம் கிடைக்கப்பெறும் போது ஓர் அலாதியான இன்பம் அகத்திடையே பரவும்.

நூலகங்களுக்குச் செல்வது என்பது, அறிவுசார் நெறியில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதற்கான சாட்சியம்.

The post தமிழியல் தேடல்(5) -“தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு அறிவுச் சுரங்கமாக விளங்கும் நூலகங்கள்” appeared first on Kaanalvari.

தமிழியல் தேடல் (3) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிறுவனங்கள்”

தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு மத்திய-மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் வழங்கும் ஆய்வு உதவித்தொகை பற்றிய விவரங்களைப் விளக்குகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளை முடிந்த பின்னர், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் மனத்தின்கண் விரியும். முனைவர் பட்டம் படிக்கலாமா என்ற யோசனை அகத்தினூடே எட்டிப் பார்க்கும் பொழுது, பொருளாதாரத்திற்கு என்ன செய்வது என்ற எண்ணம் அதனைத் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போடும்.

‘இன்னும் எத்தனை வருஷம்தான் படிப்ப? வேலைக்குப் போற எண்ணம் இல்லையா? பணம் சம்பாதிக்காமல் என்ன பண்ற?’ போன்ற கேள்விகள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மீது வளைத்து வளைத்துத் தொடுக்கப்படும் கணைகளாகும்.

ஆய்வுத்தேடலுக்கான செலவினங்களுக்கும், முனைவர் பட்டம் பயிலும் போது ஏற்படும் பொருளாதாரத் தேவைகளைப் நிவர்த்திச் செய்து கொள்ளவும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அவசியமாகிறது. அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோருக்கு உதவித்தொகை வழங்க ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அதனை ஒப்பிடும் போது, கலைப்புல ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகையும் குறைவு; நிறுவனங்களும் குறைவு.

தமிழ் ஆய்வு மாணவர்கள் பெரும்பாலானோர் JRF மட்டும்தான் ஆய்வு உதவித்தொகை என்ற எண்ணம் பூண்டுள்ளனர். JRF- க்கு இணையான உதவித்தொகை வழங்கும் பல நிறுவனங்கள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுலகில் உள்ளன.

தமிழில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோர் ஏதேனும் ஓர் உதவித்தொகையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தைத் தார்பரியமாகக் கொண்டு, ஆய்வு உதவித்தொகை வழங்கும் சில நிறுவனங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

1) UGC NET – JRF

பல்கலைக்கழக மானியக் குழுவானது, 1989-ம் ஆண்டுமுதல் தேசிய தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு இரண்டு தாள்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தாள் 1 பொதுத்தாள். இதில் 50 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாள் பாடம் சார்ந்தது. இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். Cut off மதிப்பெண்கள் அடிப்படையில் NET தேர்ச்சி பெற்றவர்களும் , JRF தேர்ச்சி பெற்றவர்களும் அறிவிக்கப்படுகிறார்கள்.

JRF பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆய்வு உதவித்தொகையாக 37,000 ரூபாயும், HRA-க்காக குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகிறது. இதர செலவினங்களுக்கு (contingency) ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. இரண்டாண்டுகளுக்குப் பின்பு, SRF தகுதி உயர்வு பெற்றவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது.

தேசிய தகுதித் தேர்வில் JRF கட் ஆப்பை நூலிழையில் நழுவ விட்டவர்களுக்கு NFOBC, NFSC பெல்லோசிப்கள் வழங்கப்படுகின்றன. தேசிய தகுதித் தேர்வு முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் NFOBC, NFSC தகுதிப் பட்டியல்கள் வெளியாகின்றன. இத்தொகையும் JRF-SRF -க்கு நிகரான உதவித் தொகையைக் கொண்டது.

2) ICSSR – ஆய்வு உதவித்தொகை

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) சமூக அறிவியல் துறைகளில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோருக்கு மாதம் ரூ.20,000 வீதம் இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. மேலும், இதர செலவினங்களுக்காக (contingency) ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது.

ICSSR உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெளியாகின்றன. விண்ணப்பதைப் பூர்த்திச் செய்து பதிவு செய்தால் போதும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சில மாதங்களில் ICSSR தளத்தில் வெளியாகும்.NET தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த உதவித்தொகை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு,

https://icssr.org/doctoral-fellowship

3) இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம்(CIL)

இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் மைசூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் யுஜிசியின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயில்பவர்களுக்கு மாதம் ரூபாய் 20,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது.இதர செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 20,000 தருகிறது.

அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 30 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்திய மொழிகள் துறைகளின்கீழ் அடங்கும் குறிப்பிட்ட சில புலங்களை மொழி நிறுவனம் வகுத்துக் கொடுத்துள்ளது.இப்புலங்களில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு, https://drive.google.com/file/d/16EUj24z9NmpeZB_buLnJ0BX5kDnY6jBY/view?usp=drivesdk

4) சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித்தொகை

யுஜிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயிலும் பெண் ஆய்வாளர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.குடும்பத்தில் ஒரு பெண் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தைப் பெற முடியும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு இத்திட்டம் பொருந்தும். ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குடும்பத்தில் இருந்தால் இத்திட்டம் பொருந்தாது. JRF-SRF க்கு இணையான தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்கள் பெற,

https://drive.google.com/file/d/175mgtZiAv4AavFHaoqMhW6m6f4tWqlx4/view?usp=drivesdk

5) மத்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வு உதவித்தொகை (CURF)

இந்திய அளவிலான மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 8,000 வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஐந்து ஆண்டுகள்.

பல்கலைக்கழக அளவிலான தகுதித் தேர்வின் மூலமாகவும், தேசியத் தகுதித் தேர்வின் மூலமாகவும் இந்த உதவித் தொகை பெற ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

(நன்றி – திரு.விக்னேஷ், ஆய்வு மாணவர்)

6) முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை (CMRF)

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகையினை அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகளில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் (TRB)நடத்துகிறது.

இந்த உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. கலைத் துறைகளில் 60 மாணவர்களும், அறிவியல் துறைகளில் 60 மாணவர்களும் வழங்கப்படுகிறது.கலைத்துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயும், அறிவியல் துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாயும் இதரச் செலவினங்களுக்காக வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.

மேலும், முழுநேர முனைவர்‌ பட்டப்‌படிப்பு மேற்கொள்ளும்‌ தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

7) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT)

செவ்வியல் இலக்கண-இலக்கியங்கள் அல்லது அதனோடு தொடர்புடைய புலங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு, மாத உதவித் தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு இரண்டாண்டுகள். இதர செலவினங்களுக்கான தொகை ஆண்டுக்கு ரூபாய்.18,000.

இந்திய அளவிலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முனைவர்பட்டம் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல்-மே மாதங்களில் செம்மொழி மத்திய நிறுவனத்தின் தளத்தில் வெளியாகின்றன.

அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 50 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், தகவல் அறிய –

https://www.cict.in/fellowship.php

8) வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (VIT)

வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறை செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் முனைவர் பட்டம் பயில மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முனைவர் பட்டம் பதிவு செய்த முதல் ஆறுமாதங்களுக்கு மாதம் 20000 வீதம் ஆய்வு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 25,000 ஆகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 30000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.

(நன்றி – திரு.பிரதீப், ஆய்வு மாணவர் )

9)SRM பல்கலைக்கழகம்

SRM பல்கலைக்கழகம் காட்டங்குளத்தூரில் தமிழ் ஆய்வுத்துறை இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிப்போருக்கு மாதம் ரூ.31,000 வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.

(நன்றி – திரு.கமலக்கண்ணன், உதவிப் பேராசிரியர்)

மௌலானா ஆசாத் ஆய்வு உதவித் தொகை, ராஜீவ்காந்தி தேசிய உதவித் தொகை போன்ற திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மத்திய அரசால் கைவிடப்பட்டன.

மேற்சொன்னவை தவிர, தமிழ்நாடு அளவிலான பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்லூரிகளும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றன. இவற்றை ஆய்வு மாணவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்படுதல் இன்றியமையாதது.

The post தமிழியல் தேடல் (3) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிறுவனங்கள்” appeared first on Kaanalvari.

தமிழியல் தேடல்(2) – “ஆய்வு மாணவர்களுக்கு அருங்கொடை – முனைவர் பட்ட முன்னாய்வுத் தலைப்புகள்”

2 February 2025 at 13:24

தமிழில் இதுவரை வெளிவந்த முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்புகளை உள்ளடக்கிய இணையச் சுட்டிகளைத் தொகுத்துரைக்கிறது இக்கட்டுரை.

ஓர் ஆய்வாளர் முனைவர் பட்டம் பதிவு செய்தவுடன், அவர்தம் உள்ளக்கிடக்கையில் தோன்றும் முதல் வினா ஆய்வை எங்கிருந்து தொடங்குவது என்பதுதான். தேர்வு செய்த ஆய்வுத் தளத்தில் தனக்கு நன்கு பரிச்சயம் இருப்பினும் ஆய்வுச் சிக்கலை எவ்வாறு இனங்காண்வது, கருதுகோள் எவ்வாறு அமைப்பது என அடுக்கடுக்கான ஐயப்பாடுகள் எழும்.

ஆய்வாளர் பதிவு செய்தவுடன் செய்யவேண்டிய முதல் வேலையே முன்னாய்வுகளைத் தேடுவதுதான். தமிழாய்வுப் பரப்பில் இதுவரை வெளிவந்த ஆய்வுகளைப் பார்வையிடுவதன் மூலம் அதிகம் தொட்ட இடமும், தொடாமல் விட்ட இடமும் நன்கு புலப்படும்.

ஆய்வு இடைவெளிகளைப் பூர்த்தி செய்யும் கொடுமுடிகளாகவும், ஆய்வுச் சிக்கல்களை இனங்காணும்  தோற்றுவாய்களாகவும் முன்னாய்வுகள் விளங்குகின்றன. எனவே, ஓர் ஆய்வாளர் முன்னாய்வுகளில் இருந்து தனது ஆய்வைத் தொடங்குதல் அவசியம்.

அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோர் அவர்தம் ஆய்வேட்டின் முதல் இயலை முன்னாய்வுகள் பற்றி விளக்குவதற்காக ஒதுக்குவர். ஆனால் தமிழாய்வில் இத்தகைய முறை இல்லை. சில ஆய்வேடுகளின் ஆய்வுச் சுருக்கத்தில் மட்டும் ஆய்வு முன்னோடிகள் பற்றி ஓரிரு வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகத் தமிழண்ணல் பணியாற்றிய போது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளின் பட்டியலையும், ஆய்வேடு பற்றிய குறிப்பையும் சேகரித்து, ‘தமிழாய்வு’ என்னும் தலைப்பிலான ஆய்வலடங்கலை வெளியிட்டார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையானது,1982 முதல் 2000 வரை செய்யப்பட்ட முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத்தலைப்புகளை உள்ளடக்கிய ஆய்வடங்கலை வெளியிட்டது.

தொடக்கக் காலத்தில், பல்கலைக்கழக அளவில் செய்யப்பட்ட இந்த முயற்சிகள் கால வெள்ளத்தில் கைவிடப்பட்டன.

தற்பொழுது, ஒவ்வொரு பல்கலைக்கழகமாகச் சென்று முன்னாய்வுகள் தேடினால் நேரமும் பணமும் விரயமாகுமெனப் பெரும்பாலான ஆய்வாளர்கள் முன்னாய்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. முன்னாய்வுகளைப் பார்வையிடாமல், இதுவரை செய்த ஆய்வுகளையே தொடர்ந்து செய்தால் ஆய்வுலகம் எந்தப் பயனும் அடையாது.

எனவே, முன்னாய்வுகளின் அவசியத்தை உணர்ந்து அதனை எளிமையாக் கண்டறியும் வகையில் இணையச் சுட்டிகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

 

1) ஷோத்கங்கா

பல்கலைக்கழக மானியக் குழுவின்கீழ் செயல்படும் ‘INFLIBNET’ மையத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு இத்தளம் தொடங்கப்பட்டது.

பெரும்பாலான ஆய்வாளர்கள் அறிந்த தளம் இது. இத்தளத்தில் 6000-க்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் வாரியாக ஆய்வேடு முழுமையும் இடம்பெற்றுள்ளது.

https://shodhganga.inflibnet.ac.in/simple-search

 ‘INFLIBNET’ மையத்தின் மற்றொரு தளம் ஷோத்கங்கோத்ரி. இத்தளத்தில் முனைவர் பட்ட ஆய்வுகளின் சுருக்கம் மட்டும் இடம்பெற்றுள்ளது.

https://shodhgangotri.inflibnet.ac.in/

2) தமிழ் ஆய்வுகள்

இத்தளம் திருச்சி தந்தைப் பெரியார் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.காசிமாரியப்பன் அவர்களின் நிர்வாகத்தின்கீழ் செயல்படுகிறது.

இத்தளத்தில் 3000-க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் தலைப்புகளும், ஆய்வு பற்றிய சிறுகுறிப்பும் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆய்வுகளை வகைமைகள் அடிப்படையில் தேடும் வகையில், இத்தளம் எளிமைப்படுத்திக் கொடுத்துள்ளது.

https://www.tamilaivugal.org/

3) தமிழியல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ.மணவழகன் அவர்களால் நிர்வகிக்கப்படும் தளம். இத்தளத்தில் 1000-க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகள்,  பல்கலைக்கழகம் – தலைப்பு – நெறியாளர் – ஆய்வாளர் – ஆண்டு என்ற வரிசைக்கிரம அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://thamizhiyal.com/

மேலும், இவரின் அனிச்சம் என்ற வலைப்பதிவிலும் சில ஆய்வுத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

http://anichchem.blogspot.com/search?updated-max=2023-12-12T01:38:00-08:00&max-results=20&reverse-paginate=true

4) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலகத்தில், இந்தியா – தமிழ்நாடு அளவிலான பல்வேறு பல்கலைக்கழங்களில் சமர்ப்பிக்கப்பட்ட 721 முனைவர் பட்ட ஆய்வேடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வேடுகளின் ஆய்வுத்தலைப்புகள் நிறுவன நூலகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://library.cict.in/ta/td.html

5) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளபட்ட 239 முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும், 368 ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும் கீழ்க்காணும் தளத்தில் இடம்பெற்றுள்ளன.

https://ulakaththamizh.in/home

6) தமிழ்ப் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின்கீழ் சிற்பம், இசை, நாட்டுப்புறவியல், மானுடவியல் அறிவியல்தமிழ் எனப் பல்வேறு புலங்கள் செயல்படுகின்றன. இப்புலங்கள் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் தலைப்புகள், ஆய்வடக்கம் ஆகியன பின்வரும் சுட்டியில் உள்ள கையடக்க ஆவண வடிவமைப்பில் (Pdf) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.tamiluniversity.ac.in/english/library-2/tamil-university-theses-and-dissertation/

7) தமிழாய்வு – வலைப்பதிவு

அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் செந்தமிழ்ப்பாவை அவர்களின் வலைப்பதிவில் பாரதியார், பாரதிதாசன், அழகப்பா ஆகிய பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட சில ஆய்வேடுகளின் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

http://thamizhaaivu.blogspot.com/2016/11/blog-post_59.html

மேலும் இவரின் மற்றுமொரு வலைப்பதிவில் சில ஆய்வுத் தலைப்புகளும், ஆய்வடக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

https://vairamani-lakshmi.blogspot.com/2011/08/tamil-research-topics-1.html

தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஒட்டுமொத்தமான முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்புகள், ஆய்வுக்குறிப்புகள் ஒரே தளத்தின்கீழ் ஒருங்கிணைத்துக் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில், ஆய்வாளர் தெரிவுசெய்யும் தலைப்பில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் தொழில்நுட்பத்தைத் தமிழாய்வுத் துறையில் கொண்டு வரவேண்டும்.

தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமோ, மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனமோ இப்பணியைச் செய்தால் தமிழாய்வுலகம் பெரும் பயனடையும்.

The post தமிழியல் தேடல்(2) – “ஆய்வு மாணவர்களுக்கு அருங்கொடை – முனைவர் பட்ட முன்னாய்வுத் தலைப்புகள்” appeared first on Kaanalvari.

❌