Normal view

Received before yesterday

செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப்

whatsapp

வாட்சாப்பில் நிரம்பி வழியும் செய்திகளால் அவதிப்பட்டது உண்டா? முக்கியமான தகவல்களைப் பெற பல மணி நேர உரையாடல்களில் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை என்கிறது வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அம்சம்.

whatsapp

நம்மில் பலரிடம் வீட்டு ஜன்னல்களைக் காட்டிலும் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குழுக்கள் இருக்கும். முக்கியத் தகவல் பரிமாற்றம், அரட்டை, செய்திப் பகிர்வு, சமூக நல்லிணக்கம் என அனைத்தையும் நாம் அதன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சில குழுக்களை நாம் முதன்மையாக (Pinned) வைத்திருக்கிறோம், சிலவற்றை நிரந்தரமாக அமைதி (Mute) ஆக்குகிறோம். ஆனால் அவற்றிலிருந்து முக்கியத் தகவல்களை நாம் தேட நேர்ந்தால், பல செய்திகளைத் தொட்டு நகர்த்தித் துழாவ வேண்டியிருக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள வாட்சாப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

வாட்சாப்பின் செய்திச் சுருக்கம் 

பலநாள் திறக்கப்படாத உரையாடல்கள், குழுக்களில் ஒளிந்திருக்கும் முக்கியமான தகவல்களை இனி எளிதில் கண்டுபிடித்து விடலாம். செயற்கை நுண்ணறிவை அதற்காக மெட்டா நிறுவனம் பணியமர்த்தி இருக்கிறது. தேவையான தகவல் இருக்கும் என நினைக்கும் (அல்லது) படித்தறிந்து கொள்ள வேண்டிய குழுவின் செய்திகளை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாகப் படித்துவிட்டு, ஒரே செய்திச் சுருக்கமாக (summary) கொடுக்கும் அம்சம் வாட்சாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாட்சாப்பில் செயல்பாட்டில் இருக்கும் மெட்டா செயற்கை நுண்ணறிவுதான் இந்த வேலையை நமக்காகச் செய்து தருகிறது. இந்தப் புதிய அறிமுகம், அதிக செய்திகளைப் படித்தறிய நேரமில்லாதவர்களுக்குப் பயனளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எப்படி இயக்குவது? 

செய்திகளைச் சுருக்கும் அம்சம் இப்போதைக்கு ஆண்டிராய்டு வாட்சாப் முன்னோட்டப் (Android Whatsapp Beta) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு உரையாடலின் அடிப்பகுதியிலும் சிலருக்கு “மெட்டா உதவியுடன் சுருக்கவும்” (Summarize using Meta AI) என்ற அமைப்பு காட்டும். அதைச் சொடுக்கினால் நொடியில் நம் தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு சுருக்கிக் கொடுத்துவிடும். இது மேம்பட்ட தனியுரிமை (Advanced Privacy) அம்சத்தை வைத்திருக்கும் உரையாடல்களில் வேலை செய்யாது. இதை பயனர்களின் விருப்பப்படி இயக்கவோ முடக்கவோ முடியும்.

செய்திகளை மெட்டா படிக்குமா? 

மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதும், நமது செய்திகளை செயற்கை நுண்ணறிவு படிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்தது.  இது பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஆனால், செய்திகள் அப்படி வாசிக்கப்படாது என்று மெட்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவில் தனிப்பட்ட செயலாக்க முறைப்படி இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது. அது அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு முற்றிலும் குறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வகையில்தான் பரிமாறப்படும் என்றும், அதை யாராலும் வாசிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சுருக்கம் செய்யும் தகவல்களும் பாதுகாப்பான இடைமுகத்தில் செயல்படுகிறது என்று மெட்டா உறுதி அளிக்கிறது. 

எங்கும் செயற்கை நுண்னறிவு

இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் சுருக்க அம்சம் மூலம் தகவல்களை விரைவில் புரிந்து கொள்ள முடியும். பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பயன்பாடு அனுபவத்தை உயர்த்த முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை விரைவில் முடிக்க முடியும். தொழில்நுட்ப உலகின் புதிய தாரகச் சொல்லான “எங்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற நோக்கத்திற்கு இம்முயற்சி வலு சேர்க்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். 

  • விவேக்பாரதி

வாட்ஸ்ஆப் செய்திச் சுருக்கம் குறித்த செய்தி

The post செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப் appeared first on செல்லினம்.

கூகுள் போட்டோஸ் : தேடல் எளிது

Google photos

நம்மில் பெரும்பாலானோர் படங்களைச் சேமித்து வைக்க கூகுள் போட்டோஸ் பயன்படுத்துகிறோம். அதிலிருந்து யாருக்காவது குறிப்பிட்ட படங்களை அனுப்ப நேரும்போது அவற்றைத் தேடுவதற்காகவே நீண்ட நேரம் திரையைத் துழாவி அவதிப்பட்டிருப்போம். அந்தத் தொல்லை இனி இல்லை என்கிறது கூகுள். எப்படி? 

Google photos

காலம் கடந்து நிற்கும் நினைவுப் படங்களை முன்னர் புகைப்படத் தொகுப்புகள் சேமித்து வைத்திருந்தன. இப்போது எல்லாருக்கும் கூகுள் போட்டோஸ் செயலிதான். நம் திறன்பேசியில் கிளிக் என்று எடுக்கும் ஒளிப்படம், கண்ணிமைக்கும் நேரத்தில் கூகுள் டிரைவில் சேமிக்கப்படுகிறது. பின் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்க இணையத்திலேயே பத்திரமாய் இருக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கும் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது புதிய சிறப்பம்சங்களை இதில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் அடிப்படையில் படங்களைச் சேமித்தல், நினைவூட்டல், ஒரே நபர்களை அடையாளம் கண்டு தனியாக தொகுத்து வைத்தல், பின்னணி உட்பட படத்தில் எதையும் எளிதில் திருத்துதல் எனப் பல மேம்படுத்தல்கள் வந்துள்ளன. 

கூகுள் அப்படி ஒரு சிறப்பு மேம்படுத்தலைத் தன் போட்டோ பிக்கர் அம்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் போட்டோஸில் இருந்து படங்களைப் பகிரும்போது குறிப்பிட்ட படத்தைத் தேர்ந்தெடுப்பது சிரமமாக இருந்தது. ஆயிரக் கணக்கில் படங்கள் இருந்தால், நீண்ட நேரம் திரையை துழாவித் துழாவிச் சென்று எடுக்க வேண்டியிருந்தது. இதை போட்டோ பிக்கரின் புதிய அம்சம் மாற்றியுள்ளது.

கூகுள் போட்டோஸ் செயலியில் பதிவேற்றப்படும் படங்களின் தன்மைகளைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் இதற்கு உதவி செய்கிறது. அதாவது, நாம் திறன்பேசியில் தட்டச்சு செய்யும் இடத்தில் எமோஜிகளைத் தேடும் தேடல் பட்டை  இருப்பதுபோல போட்டோ பிக்கர் இடத்திலும் தேடல் பட்டை அமைக்கப்பட்டுள்ளது. அதில் “கார்” “பிறந்தநாள்” என்பது போன்ற குறிப்புச் சொற்களை நாம் உள்ளிட்டுத் தேடினால் அதற்குத் தொடர்புள்ள படங்களை போட்டோ பிக்கர் தனியே பிரித்துக் காட்டிவிடுகிறது. இப்புதிய தேடுதல் அம்சம் கூகுள் போட்டோஸ் பயன்பாட்டை மிகவும் எளிமை ஆக்கியிருக்கிறது. 

இத்தேடுதல் அம்சத்தால் பயனர்கள் ஆயிரக்கணான படங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் விரைந்து எடுத்துவிட முடியும். பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகளை விட்டு வெளியேறாமல் படங்களை அனுப்பிவிட முடியும். கூகுளின் செயற்கை நுண்ணறிவு இந்த வேலையைத் துல்லியமாகச் செய்வதால் தனிப்பயனாக்கம் சிறந்த முறையில் நிகழ்கிறது. 

தற்போது வரை கூகுள் பிளே சிஸ்டம் வழியாக கூகுள் போட்டோஸை மேம்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே இவ்வம்சம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய ஆண்டிராய்டு மேம்படுத்தலில் அனைவருக்கும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பிக்ஸல் மற்றும் சாம்சங் கருவிகளில் சோதனை நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் புகைப்பட தொகுப்புகள், கோப்புகள் பகிரப்படுவது, சமூக ஊடகப் பயன்பாடுகள் போன்றவை எளிமையாகிறது. நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கூகுள் இயல்பாக தரும் 15 ஜிபி நினைவகத்தையும் கடந்து பல ஜிபிகளுக்கு புகைப்படங்களைச் சேமித்து வைத்திருக்கும் பயனர்களுக்கு, இப்புதிய அறிமுகம் மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

  • விவேக்பாரதி

கூகுள் போட்டோ பிக்கரின் தேடல் குறித்த செய்தி

The post கூகுள் போட்டோஸ் : தேடல் எளிது appeared first on செல்லினம்.

எல்ஜி பயனர்கள் கவனத்திற்கு

LG phone

திறன்பேசிகளின் தொடக்க காலத்தில், கோலோச்சியிருந்த எல்.ஜி நிறுவனம், தனது உற்பத்தியை அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொண்டது. இப்போது அதன் பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியமானபணி ஒன்று மீதம் இருக்கிறது. என்ன தெரியுமா?

LG phone

உலகளாவிய திறன்பேசி சந்தையில் ஒரு காலத்தில் எல்.ஜி நிறுவனம் தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்தது. அதன் வெல்வெட், விங் போன்ற ரகங்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தன. தொழில்நுட்ப தரத்திலும், வடிவமைப்பிலும் தனித்தன்மையோடு திகழ்ந்தன. சிறப்பான காட்சித்திறன், ஒலித்திறன்களோடு இருந்தன. குறிப்பாக 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் எல்ஜியின் ஜி மற்றும் வி ரக திறன்பேசிகள் அதிகம் விற்பனையாகின. வலுவான மென்பொருள் ஆதரவுக்கு எல்ஜி புகழ்பெற்றிருந்தது. ஆனாலும் அதன் பின் நிகழ்ந்த போட்டிகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் எல்ஜி திறன்பேசிகள் திணறின. 

புதுப்புது அறிமுகங்களும், அதில் கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்தல்களும் எல்ஜிக்கு நெருக்கடியாக அமைந்தன. அதன் விளைவாக 2021-ம் ஆண்டு, அந்நிறுவனம் பெரும் முடிவு ஒன்றை எடுத்தது. தனது திறன்பேசிப் பிரிவை முற்றிலுமாக மூடுவதாக எல்ஜி அறிவித்தது. இனி எல்ஜி திறன்பேசிகள் உற்பத்தி ஆகாது என்ற நிலை உருவானது. குளிர்சாதனங்கள், சலவை இயந்திரம், தொலைக்காட்சி போன்ற மற்ற மின்சாதன பொருள்களின் சந்தையில் சற்றும் குறைவின்றி தன் இடத்தை வெற்றிகரமாக தக்க வைத்திருந்த எல்ஜி, திறன்பேசியில் சறுக்கியதால் இம்முடிவை எடுத்தது. ஆனால் அப்போதும் பயனர்களை முற்றிலுமாக கைவிட்டுவிடவில்லை எல்ஜி. 

திறன்பேசி உற்பத்தியை முற்றிலுமாக மூடிவிட்டாலும், பயனர்கள் நலன் கருதி தேவையான காலக்கெடுவினை வழங்கியது. அதாவது, 2019-க்கு பிறகு வெளியான முக்கியமான திறன்பேசிகளான எல்ஜி வெல்வெட், விங் மற்றும் ஜி, வி தொடர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்று எல்ஜி அறிவித்தது. அந்த காலக்கெடு, இந்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், எல்ஜி பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியப் பணிக்கான நேரம் நெருங்கிவிட்டது. 

பயனர்கள், ஜூன் 30 2025-க்குள் எல்ஜி திறன்பேசியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன ஆண்டிராய்டு அம்சம் வரை தரவிறக்கி, உட்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் 30-க்குப் பிறகு எந்தவித மேம்படுத்தலோ, பாதுகாப்பு புதுப்பிப்புகளோ வழங்கப்பட மாட்டாது. அதேபோல், கணிப்பொறியுடன் எல்ஜி திறன்பேசிகளை இணைக்கும் தனித்துவமான மென்பொருளான எல்.ஜி பிரிஜ் சேவையையும் இதே காலக்கெடுவுடன் நிறுத்திக் கொள்ள எல்ஜி திட்டமிட்டுள்ளது.  

தனித்துவமான பயனர் இடைமுகம் (User Interface) வழங்குதல் உள்ளிட பல நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த எல்ஜி திறன்பேசி, இனி முற்றிலும் வரலாற்றின் அங்கமாகப் போகிறது.

  • விவேக்பாரதி

எல்ஜியின் மேம்படுத்தல் குறித்த உத்தரவாதம்

எல்ஜியின் அவகாசம் முடிவடைவது குறித்த செய்தி

The post எல்ஜி பயனர்கள் கவனத்திற்கு appeared first on செல்லினம்.

தொல்லை இல்லை

Do Not Disturb

திறன் பேசிகளில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் தொல்லை தாராதீர் (DND – Do Not Disturb) அம்சத்தை, மீண்டும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை கூகுள் மேற்கொண்டுள்ளது. அதன் விரிவாக்க முயற்சிக்கு பயனர்களின் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Do Not Disturb

என்னதான் ஆச்சு? 

‘தொந்தரவு செய்யாதே’ என்ற நேரடி மொழியாக்கம் கொண்ட ‘டு நாட் டிஸ்டர்ப்’ அம்சம், திறன்பேசிகளில் வரும் அழைப்புகள், செய்திகள் மற்றும் தகவல்களின் ஒலி அமைப்பைத் தானாகக் குறைத்து, அமைதியான சூழலை உருவாக்குகிறது. அன்றாடம் திறன்பேசிகளில் வந்து குவியும் நூற்றுக் கணக்கான தகவல் அறிவிப்புகளால் தொல்லை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இவ்வம்சம் வரமாகச் செயல்படுகிறது. விமானப்பயன்முறை (Airplane mode), அறிவிக்கைகளை (Notifications) அணைத்து வைப்பது, திறன்பேசியை அமைதியான நிலையில் வைப்பது (Silent mode) போன்ற வழக்கமான வழிகள் இதற்கு இருந்தாலும், தொல்லை தராதீர் (DND) என்பது எளிதில் உதவும் கண்கண்ட மருந்தாக அமைகிறது. வாகனம் ஓட்டுபவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் இவ்வம்சம், ஒரே தொடுதலில் பயனளித்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இவ்வம்சத்தை விரிவாக்க முயன்ற ஆண்டிராய்டு, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மோட்ஸ் (Modes) என்ற புதிய தொகுப்பைக் கொண்டு வந்தது. பொதுவாக அமைப்புகள் பகுதியில் ஒரே தொடுதலில் இயக்கக் கூடியதாக இருக்கும். அதில் தொல்லை தராதீர் அம்சத்தை, ஆண்டிராய்டு 15 இயங்குதளங்களில் மோட்ஸ் என்ற தொகுப்புக்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம் பொதுவாக இருந்த இந்த அம்சத்தை,  வாகனம் ஓட்டுதல், தூக்கம், பணிச்சூழல் எனப் பல செயல்பாடுகளுக்கு தனிப்பயனாக்கும் வசதி உருவாக்கப்பட்டது.

சிக்கல் வந்தது

ஆண்டிராய்டு 15 மேம்படுத்தலைப் பயன்படுத்திய பயனர்களிடமிருந்து இந்தப் புதிய மாற்றம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கு முன்னர் ஒரே தொடுதலில் இயக்கும் வகையில் விரைவுச் சுட்டியாக இருந்த தொல்லை தராதீர் அம்சம், மோட்ஸ் என்ற தொகுப்புக்குள் வைக்கப்பட்டது. இதனால், இவ்வசதியை அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு இதை இயக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படிகள் தேவைப்பட்டன. இது கடினமாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்தனர். பலரிடமிருந்தும் இதே வகையான புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் கூகுள் நிறுவனம் தொல்லை தராதீர் அம்சத்தைப் பழைய நிலைக்கு மாற்றும் முடிவுக்கு வந்துள்ளது. 

மீண்டும் எளிமையாகிறது

ஆண்டிராய்டு 16 மேம்படுத்தலின் பீட்டா பதிப்புகளில், தொல்லை தராதீரு் அம்சத்தைப் பழைய படி விரைவுச் சுட்டியாக அமைத்து கூகுள் சோதித்து வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்ஸ் அம்சத்துடன் சேர்த்து பொதுவானதொரு தொல்லை தராதீர் அம்சத்தை விரைவுச் சுட்டியாக வைக்கும் முயற்சி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பயனர்கள், புதிய விரைவுச்சுட்டியை, தற்போதைய மோட்ஸ் விரைவுச்சுட்டியுடன் சேர்த்தோ தனியாகவோ இயக்க முடியும். முன்னோட்ட நிலையில் உள்ள இந்த வசதி, விரைவில் ஆண்டிராய்டு 16 இன் முதன்மை வெளியீட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், கூகுள், பயனர்களின் பின்னூட்டங்களை கவனித்து, தொல்லை தராதீர் விரைவுச்சுட்டியை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், பயன்பாட்டை எளிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த மாற்றம், ஆண்டிராய்டு பயனர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

கூகுள் மோட்ஸ் பற்றிய செய்தி

டிஎண்டியின் புதிய மாற்றம் பற்றிய செய்தி

The post தொல்லை இல்லை appeared first on செல்லினம்.

❌