Normal view

Received before yesterday

தமிழியல் தேடல்(5) -“தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு அறிவுச் சுரங்கமாக விளங்கும் நூலகங்கள்”

27 April 2025 at 11:23

“தமிழ் ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலான நூலகங்களின் பட்டியலையும் நூலகங்களில் இடம்பெற்றிருக்கும் நூற்பட்டியலையும் விளக்குகிறது இக்கட்டுரைத் தொகுப்பு”

புத்தகங்கள் வெறும் காகிதங்களால் அச்சடிக்கப்பட்ட தொகுப்புகள் அல்ல; நிகழ்கால வரலாற்றை எழுத்தினூடே, எதிர்காலத் தலைமுறைக்குக் கொண்டு செல்லப் பதிவு செய்யப்படும் வரலாற்றுப் பொக்கிஷங்கள். கடந்த காலச் செயல்பாடுகளை நிகழ்காலத்தில் கண்முன் நிறுத்தும் காட்சிப் படிமங்கள்.

புத்தகங்களின் இன்றியமையாமை உணர்ந்து, அவற்றைச் சேகரிக்கும் மையங்களாகப் புத்தக சாலைகள் முகிழ்ந்தன. அறிவுதேடலுக்கான நுழைவு வாயில்களாக விளங்கும் நூலகங்களின் பயன்பாடு, ஆய்வாளர்களுக்கு அவசியமானது. எனவே, ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வின் குறிப்பிட்ட காலத்தை நூலகங்களைப் பார்வையிடுவதற்காக ஒதுக்க வேண்டும்.

எழுத்தாளரும் திறனாய்வாளருமான ந.முருகேச பாண்டியன் அவர்கள் “தமிழ் ஆய்வில் தகவல் சேகரிப்பும் ஆய்வு நூலகமும்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். ஜனவரி 2017-ல் சான்லாக்ஸ் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையில், தமிழ்நாடு அளவிலான முக்கியமான ஆய்வு நூலகங்களின் பட்டியலைக் கொடுத்திருப்பார்.

அவர் கொடுத்த நூலகங்கள் பற்றிய சிறுகுறிப்புகளையும் சில நூலகங்களில் இடம்பெற்றிருக்கும் நூல்கள் பற்றிய செய்திகளையும் இக்கட்டுரையில் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

1) கன்னிமாரா நூலகம், மறைமலையடிகள் நூலகம்

கன்னிமாரா நூலகத்தின் பழம்பெருமையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் நம்மில் பலர் அறிந்திருப்போம். 1890ஆம் ஆண்டு மதராஸ் மாகாண ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு இந்நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1896ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள 4 தேசிய நூலகங்களில் ஒன்றாக இந்நூலகம் திகழ்கிறது. தற்போதைய கணக்குப்படி கன்னிமாரா நூலகத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

மறைமலையடிகள் நூலகமானது மறைமலையடிகளின் நூல் சேகரிப்பைக் கொண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் 1958இல் நிறுவப்பட்டது. தற்போது பதிப்பில் இல்லாத அரிய நூல்களின் இருப்பிடமாக விளங்குகிறது. இந்நூலகம் தற்பொழுது கன்னிமாரா நூலகத்தின் முதல் தளத்தில் செயல்படுகிறது.

கன்னிமாரா நூலகம் பற்றி மேலும் தகவல் அறிய,

https://tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juU1&tag=%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE#book1/

2) அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் 

1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரேபிய, பாரசீக மற்றும் சிங்கள மொழிகளைச் சேர்ந்த 50,180 ஓலைச்சுவடிகளும்; 22,134 கைப்பிரதிகளும்; 26,556 அரிய நூல்களும் காணப்படுகின்றன.

உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் காணப்படும் நூலகமாகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம் விளங்குகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. பழந்தமிழ் இலக்கிய – இலக்கணங்களில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு இந்நூலகம் ஒரு வரப்பிரசாதம்.

சுவடிகளின் பட்டியலைக் காண, 

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kxyy&tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88++A+Descriptive+Catalogue+of+the+Tamil+Manuscripts+in+the+Government+Oiental+Manuscripts+Library%2C+Madras

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8khyy&tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88++A+Descriptive+Catalogue+of+the+Tamil+Manuscripts+in+the+Government+Oiental+Manuscripts+Library%2C+Madras#book1/

3) டாக்டர் உ.வே.சா.நூலகம்

உ.வே.சாமிநாதையர் அவர்கள் சேகரிப்பில் இருந்த நூல்கள், ஓலைச்சுவடிகளைக் கொண்டு இந்நூலகம் தொடங்கப்பட்டது. 1943இல் சென்னை பெசண்ட் நகர் அருண்டேல் கடற்கரை சாலையில் நிறுவப்பட்டது. இங்கு 1,832 நூல்களும் 939 சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உ.வே.சா.விற்குப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய 3000கும் மேற்பட்ட கடிதங்களும் இங்கு உள்ளன. 

மேலும் தகவல் அறிய,

https://uvesalibrary.org/

4) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழியல் ஆராய்ச்சியை வளர்தெடுத்தற் பொருட்டு, 1994ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தொடங்கப்பட்டது. நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம் எனத் தமிழாய்வு வெளியில் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது. இங்குத் தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 5,00,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், 30 இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்களுடன் மின்நூலகம் இணையத்தில் பவனி வருகிறது.

 தமிழ் அச்சுப்பயன்பாட்டின் வரலாற்றை விவரிக்கும் வகையிலும் சிந்துவெளி ஆராய்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் வகையிலும் இரண்டு அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணக் காப்பகம் இங்கு செயல்படுகிறது. இந்நூலகத்தின் சிறப்புகளை விளக்கி ஆனந்த விகடன் பத்திரிகையில் “1000 காலத்துப் பரண்” என்ற தலைப்பில் வாராந்திர தொடர் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது. 

 மின்நூலகத்திற்கான இணைப்பு,

https://rmrl.in/ta/dl/books

5) தமிழ்நாடு ஆவணக் காப்பகம் 

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு அருகில் ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1640 முதல் தற்பொழுது வரை வெளியான அரசாணைகளும் அரிய ஆவணங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 2.3 இலட்சம் நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தலைப்புகளின்கீழ் ஆய்வு மேற்கொள்வோருக்கு இக்காப்பகம் ஒரு பெருங்கொடை.

6) பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்

சமூக அறிவியல், தொல்லியல், சூழ்நிலையியல், இந்தியவியல் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்கிறது. இங்கு 70,000 புத்தகங்களும் 460 ஆய்வேடுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகளுக்கெனத் தனியாக நூலகம் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஆய்வு மாணவர்களுக்கு அரிய கருவூலமாக விளங்குகிறது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.ifpindia.org

7) மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி நூலகம்

 சென்னை இலக்கியச் சங்கம் 1812இல் தொடங்கப்பட்டது. இச்சங்கம் தோற்றுவித்த நூலகம் பழமையும் முக்கியத்துவமும் வாய்ந்தது. இங்கு இரண்டு நூற்றாண்டுகளாக வெளியிடப்பட்ட 83,000கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இலக்கிய சங்கத்தின் முக்கியப் பங்களிப்பாக இந்நிறுவனம் நடத்திய மெட்ராஸ் இதழைக் குறிப்பிடலாம். இந்த இதழ் புவியியல், வானிலையியல், விலங்கினங்கள், தாவரங்கள், கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த விரிவான ஆராய்ச்சிகளை வெளியிட்டது. 

8) அடையாறு நூலகம் & ஆய்வு நிறுவனம்

சென்னை அடையாறு பகுதியிலுள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் ‘அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ செயல்பட்டு வருகிறது. இந்நூலகம் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்பவரால் 1886ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 2,50,000 அச்சுத் தொகுப்புகளும் 20,000 ஓலைச் சுவடிகளும் உள்ளன.

9) சரசுவதி மகால் நூலகம்

இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலான பல மொழிகளில் உள்ள ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.வரலாறு, மருத்துவம், அறிவியல், தத்துவம், மதம், இசை, நாட்டியம், சிற்பம் போன்ற பல கலைகளை பறைசாற்றும் சிறந்த நூல்களின் இருப்பிடமாக இந்நூலகம் விளங்குகிறது.

சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலையிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட சுவடிகள் சுமார் 47,000 மேல் உள்ளன. அதில் வடமொழிச் சுவடிகள் 39,000. தமிழ்ச் சுவடிகள் 4,200. மராத்தி ஓலைச் சுவடிகள் 3000. தெலுங்குச் சுவடிகள் 800 ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் சுமார் 4500 நூல்களை மன்னர் சரபோஜி சேகரித்து வைத்துள்ளார். 

10) ஞானாலயா ஆய்வு நூலகம்     

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஞானாலயா ஆய்வு நூலகம். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். 1959ஆம் ஆண்டு, நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. தமிழில் அச்சாக்கம் பெற்ற நூல்களின் முதல் பதிப்புகள் பல இங்கு கிடைக்கின்றன. இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி – டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையர் இணைந்து நடத்தி வருகின்றனர்.

11) மதுரைத் நான்காம் தமிழ்ச்சங்க நூலகம் (செந்தமிழ்க் கல்லூரி)

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நிறுவப்பட்டது.மதுரை சிம்மக்கல் பகுதியில் இச்சங்கத்தின் நூலகம் அமைந்துள்ளது. தற்போது பதிப்பில் இல்லாத பல அரிய நூல்கள் இங்குக் கிடைக்கின்றன. இச்சங்கம் வெளியிட்ட செந்தமிழ் இதழ் தமிழாய்வின் முன்னோடி இதழாகக் கருதப்படுகிறது. 

12) கரந்தைத் தமிழ்ச் சங்கம் 

கரந்தைத் தமிழ்ச் சங்கம் 14 மே 1911 அன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடி என்னும் கரந்தையில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தை த.வே.இராதாகிருட்டினப் பிள்ளை நிறுவினார். சங்கத்தின் முதல் தலைவராக த.வே.உமாமகேசுவரம் பிள்ளை செயல்பட்டார். இச்சங்க நூலகத்தில் முக்கியமான ஆய்வுநூல்கள் பல பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இச்சங்கம் நடத்திய ‘தமிழ்ப்பொழில்’ என்ற ஆய்விதழ் தமிழாய்வுப் புலத்தில் முக்கியமானதாக விளங்குகிறது.

13) திரு.வி.க. நூலகம்

திரு.வி.க. நூலகம் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியிலுள்ள மேலப்பாதி கிராமத்தில் செயல்படுகிறது. இந்த நூலகம் 1946 நவம்பர் 15 அன்று தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு சுமார் 19,000 நூல்கள் உள்ளன. வரலாறு, அரசியல், பொதுவுடமை, கதைகள், சிறுகதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறு, தொழில் எனப் பல்துறை சார்ந்த நூல்கள் இங்கு உள்ளன.

14) கோபால் ராவ் நூலகம்

கும்பகோணம் அரசினர் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றியவர் கோபால் ராவ். இவர் மறைந்த பிறகு, இவரிடம் பயின்ற மாணவர்களால் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வாழைத் தோட்டத்தில் 1895-ம் ஆண்டு மே மாதம் கோபால் ராவ் நூலகம் உதயமானது. இங்கு 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்நூலகத்தில் சமஸ்கிருத புத்தகங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன.

15) பென்னிங்டன் பொது நூலகம்

தமிழகத்தின் பழமையான நூலகங்களில் இரண்டாம் இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகம் உள்ளது. இங்கு 37,910 தமிழ் நூல்களும் 32,185 ஆங்கில நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளாக அறிவுத் தேடலுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது.

16) ஆதீன நூலகங்கள்

சைவ ஆதீனங்களின் தமிழ்ப்பணி பங்கு அளப்பரியது. சைவ இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், சிற்றிலக்கியம் என பல்வேறு வகைமையிலான அரிய நூல்களின் இருப்பிடமாக ஆதீன நூலகங்கள் விளங்குகின்றன. அவ்வகையில் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, மதுரை, தருமை, பேரூர் போன்ற ஆதீனங்களில் செயல்படும் நூலகங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.17) பவானந்தர் கழகம் நூலகம்சென்னை வேப்பேரியில்பவானந்தர் கழக நூலகம் பதிப்பகமுமாகத் தமிழாய்வுலகில் வலம் வருகிறது. இது பவானந்தம் பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டது. அரிய தமிழ் நூல்கள், ஏட்டுச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் எனப் பல ஆவணங்கள் இங்கு உள்ளன.

18) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்

தமிழியல் ஆய்வை வளர்த்தெடுத்தற் பொருட்டுத் தமிழ்நாடு அரசால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், ஓலைச்சுவடிகளும், அரிய நூல்களும் உள்ளன. மேலும், முனைவர் பட்ட ஆய்வேடுகளும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடுகளும் இடம்பெற்றுள்ளன.

19) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பாவேந்தர் நூலகம்

செவ்வியல் இலக்கியங்களில் முனைவர் பட்டம் பயில்வோர் தன்னுடைய ஆய்வுக் காலத்தில் அவசியம் பார்க்க வேண்டிய நூலகம் இதுவாகும். நூலகத்தில் 47,450 நூல்களும் 4800 அரிய செவ்வியல் நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. பல அரிய நூல்களைக் கொண்டு இணைய நூலகம் செயல்படுகிறது.

இணைய நூலகத்தைப் பார்வையிட,

https://library.cict.in/ebooks.html

20) நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம்

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. பல்லடம் மாணிக்கம் அவர்களின் சேகரிப்பில் இருந்த நூல்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழின் பல்துறை சார்ந்த ஒரு லட்சம் புத்தகங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% சதவீத நூல்கள் தற்பொழுது பதிப்பில் இல்லாதவை.

அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றவை பெரும்பாலானோர் அறிந்தவை என்பதால் விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட, நூலகங்களுக்குச் சென்று நூல்களைத் தேடித் தேடி இன்புறுங்கள். தேடிய நூல்களின் தீர்க்க தரிசனம் கிடைக்கப்பெறும் போது ஓர் அலாதியான இன்பம் அகத்திடையே பரவும்.

நூலகங்களுக்குச் செல்வது என்பது, அறிவுசார் நெறியில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதற்கான சாட்சியம்.

The post தமிழியல் தேடல்(5) -“தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு அறிவுச் சுரங்கமாக விளங்கும் நூலகங்கள்” appeared first on Kaanalvari.

தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்”

19 March 2025 at 13:51

தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வு விருந்து படைக்கும் வகையில், அரிய நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களின் பட்டியலும் நூற்பட்டியலும் இக்கட்டுரையில் தொகுத்துக்  கொடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வுத் தேடலில் உழன்று வரும் ஓர் ஆய்வாளருக்கு அடிப்படைத் தேவைகளாகவும் ஆய்வுத்திறவு ஊற்றுகளாகவும் ஆய்வு நூல்கள் விளங்குகின்றன. ஆய்வுத் தேடலின் அடிநாதமே சான்றாதாரங்களைத் தேடித் திரட்டுதல்தான். ஆய்வுச் சான்றாதாரங்களை முதன்மை, துணைமை என இருவகையாகப் பகுப்பர். ஆய்விற்கு முத்தாய்ப்பானவை முதன்மைச் சான்றாதாரங்கள் என்றால், ஆய்விற்குச் செழுமைச் சேர்ப்பன துணைமைச் சான்றாதாரங்கள்.

ஆய்வுலகில் காய்த்தலுவத்தலில்லா துணிபுகளை நிலைநாட்ட, முதன்மைச் சான்றாதாரங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலான துணைமைச் சான்றாதாரங்களை வகுத்தளித்தல் அவசியம். அவ்வண்ணம், துணைமைச் சான்றாதாரங்களைப் பெற பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பதிப்பகங்கள் துணை செய்கின்றன.

1) மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் பதிப்பகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய ச.மெய்யப்பன் என்பவரால் மணிவாசகர் பதிப்பகமும், மெய்யப்பன் பதிப்பகமும் தொடங்கப்பட்டது. மணிவாசகர் பதிப்பகத்தில் 3450 நூல்களும், மெய்யப்பன் பதிப்பகத்தில் 750 நூல்களும் வெளிவந்துள்ளன. இவ்விரு பதிப்பகங்களும் சங்க நூல்கள் முதல் சமகால நூல்கள் வரை மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

 நூற்பட்டியலைக் காண

மணிவாசகர் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1Ne2HQz5HynxPC2cMh8SMqpMMcFPUSBmX/view?usp=drivesdk

மெய்யப்பன் பதிப்பகம்

https://drive.google.com/file/d/1NaHTMCZiHYUvK8CaIsOzY2sdnAXYivnA/view?usp=drivesdk

2) தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

திருவரங்கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை, மா.திரவியம் பிள்ளை ஆகிய மூவரும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்க்க 1920ஆம் ஆண்டுச் செப்டம்பா் மாதம் தொடங்கிய பதிப்பகம்தான் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ் பதிப்புலகில் நூற்றாண்டுகளைக் கடந்து வலம்வரும் சிறப்பு இந்நூற்பதிப்புக் கழகத்திற்கே உரித்தானது.

சைவ இலக்கியங்கள், இலக்கணங்கள் தொடர்பான நூல்களைத் தொடர்ந்து அச்சிற் பதிப்பித்து வருகிறது. கழகத்தின் குறிப்பிடத்தக்க பணியாகக் கழகத் தமிழகராதியைச் சுட்டலாம். இதன் முதல் பதிப்பு கடந்த 1964-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, தற்போது வரை 100 பதிப்புகளைக் கண்டுள்ளது.

தேவநேய பாவாணா், செங்கல்வராயப் பிள்ளை, தா.கோவிந்தன், சீனி. வேங்கடசாமி, மா.ராசமாணிக்கனாா், சோமசுந்தரனாா், ஒளவை துரைசாமி பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர் பலரின்  படைப்புகளைக் கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆய்வுலகுக்குக் கழகம் நடத்தி வந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழின் பங்கு அளப்பரியது.

3) செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமானது 41 செவ்வியல் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள், அகராதிகள், அடைவுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து நூல்களும் 50% கழிவு விலையில் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன. 500 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு கிடையாது. தற்பொழுது, செவ்வியல் நூல்களைச் செம்பதிப்பாக அச்சிற் பதிப்பித்து வருகின்றனர். இதுவரை இறையனார் களவியல், ஐங்குறுநூறு (மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை), கைந்நிலை ஆகிய நூல்களுக்குச் செம்பதிப்பு வந்துள்ளது.

புத்தகப் பட்டியலைக் காண –

4) தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பள்ளிகளில் கல்விப்புலம் சார்ந்த பாடப் புத்தகங்களை உருவாக்கத் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, உலக வரலாறு, இந்திய வரலாறு, சங்க இலக்கியம், சிறார் இலக்கியம் தொடர்பான நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சிலவும் இதன்வழி வெளிவந்துள்ளன. நாட்டுமையாக்கப்பட்ட நூல்களைக் மிகக்குறைந்த விலையில் வாங்க இந்நிறுவனம் ஒரு வரம். இந்நிறுவனத்தின் வெளியீடான தமிழ்-தமிழ் அகரமுதலி முக்கிய நூலாகும்.

நூல்களைப் பெற –

5) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

https://textbookcorp.tn.gov.in/publication_tam.php

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 நூல்களை அச்சு வாகனம் ஏற்றியுள்ளது.  பெரும்பாலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பயின்றவர்களின் ஆய்வுகளை நூலாகக் கொணர்ந்துள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://ulakaththamizh.in

6) பாரி நிலையம்

தமிழியல் ஆய்வு உலகிற்குப் பாரி நிலையத்தின் பங்கு அளப்பரியது. இதுவரை 7,000 – 8000 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது.

மு.வரதராசானாரின் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பிரசுரமாகியுள்ளன. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரனார் போன்ற ஆளுமைகளின் படைப்புகளை வெளியிட்டுள்ளனர்.

7) உமா பதிப்பகம்

உமா பதிப்பகம் 1986இல்  இராம. இலட்சுமணன் என்பவரால் தொடங்கப்பட்டது. செவ்விலக்கிய நூல்கள், பக்தி இலக்கியங்கள், இதிகாச, புராண நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளது.

வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் கம்பராமாயண உரை நூல்களைப் பதிப்பித்தது உமா பதிப்பகத்தின் குறிப்பிடத்தகுந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.

8) அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம்  வாயிலாகத் தமிழ் ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன.

அண்ணா பல்கலைக் கழக நூற்பட்டியலைக் காண,

http://sekalpana.blogspot.com/2009/04/blog-post_15.html

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் ஏப்ரல் 14 (தமிழ்ப் புத்தாண்டு) மற்றும் செப்டம்பர் -15 (தமிழ்ப் பல்கலைக் கழக நிறுவன நாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள்) ஆகிய நாட்களில் 50% சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கின்றன. மற்ற நாட்களில் 25% கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

நூல்களைக் காண,

9) உ.வே.சா. நூல் நிலையம்

உ.வே.சா நூலகம் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலக வளாகத்தில் உ.வே.சா. நூல்நிலையம் செயல்படுகிறது.

உ.வே.சா பதிப்பித்த நூல்கள் முதல் எழுதிய நூல்கள்வரை அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

உ.வே.சா வின் அருங்கொடைகளைக் காண , https://uvesalibrary.org/publications/

10) தமிழ்மண் பதிப்பகம்

தமிழறிஞர்களின் நூல்களை முழுமையான படைப்புத் தொகுதிகளாகத் தமிழ்மண் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தின் தனிச்சிறப்பாக 45,000 பக்கங்களில் அறிஞர் அண்ணாவின் 123 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைக் கடந்த 2019இல் வெளியிட்டுள்ளது.

 கா.அப்பாத்துரையார், வ.சு.ப.மாணிக்கம், இளங்குமரனார்,  மறைமலை அடிகள், ந.சி.கந்தையா பிள்ளை, தேவநேயப் பாவாணர், சாமி சிதம்பரனார், திரு.வி.க., மயிலை.சீனி.வேங்கடசாமி ஆகிய தமிழறிஞர்களின் பங்களிப்புகளை முழுத் தொகுப்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கப் பணியாகும்.

நூல்களைக் காண,

https://drive.google.com/file/d/1NiyqYNAkq5yLf6y4fQK4n5S1tONP245e/view?usp=drivesdk

11) வனிதா பதிப்பகம்

தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட பெருமைக்குரியது வனிதா பதிப்பகம். தமிழ் முதுகலைப் பட்டதாரியான அம்சவேணி இப்பதிப்பகத்தைக் கடந்த 1978ஆம் ஆண்டுத் தொடங்கினாா். 3000 தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல்களைப் பெற,

https://vanithapathippagam.com/bookdetails.php

12) காவ்யா பதிப்பகம்

பேரா. சண்முகசுந்தரம் அவர்களால் 1981ஆம் ஆண்டுக் காவ்யா பதிப்பகம் தொடங்கப்பட்டது. தொகுப்பு நூல்களுக்குப் பெயர் பெற்ற பதிப்பகம். தமிழ் ஆய்வுலகிற்குப் பல அருங்கொடைகளை வாரி வழங்கியுள்ளது.

13) ஆழ்வார்கள் ஆய்வு மையம்

தமிழ்ப் பதிப்புச் சூழலில் வைணவ இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளை வெளியிடும் குறிப்பிடத்தக்கப் பதிப்பகம். புராணங்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளது.

நூற்பட்டியலைக் காண,

https://bookday.in/aiwargal-aivu-maiyam-book-price-list/

14) பரிசல் பதிப்பகம்

பரிசல் பதிப்பகம் தமிழ் ஆய்வுலகிற்கு அரிய நூல்கள் பலவற்றை அச்சு வாகனம் ஏற்றும் மகத்தான பணியைச் செய்து வருகிறது. சமகால ஆய்வாளர்கள் எழுதிய பல ஆய்வு நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இப்பதிப்பகத்தைச் சிவசெந்தில்நாதன் அவர்கள் நடத்தி வருகிறார். இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பா.ரா.சுப்பிரமணியன் பெயரிலான இளம் ஆய்வறிஞர் விருதை ஆண்டுதோறும் பரிசல் பதிப்பகம்  வழங்கி வருகிறது.

வெளியீடுகளைக் காண,

https://www.commonfolks.in/books/parisal-putthaga-nilayam

15) அறவாணர் தமிழ்க்கோட்டம்

அற இலக்கியங்களில் ஆழங்கால் கொண்டு, ஆய்வுவெளியில் பல திறப்புகளை உருவாக்கித் தந்தவர் பேரா.க.ப.அறவாணர். இவர் பெயரில் செயல்படும் இப்பதிப்பகத்தை, இவரது துணைவியர் தாயம்மாள் அறவாணர் அவர்கள் நிர்வகித்து வருகிறார். க.ப.அறவாணரின் ஆய்வு நூல்கள் அனைத்தும் இங்குக் கிடைக்கின்றன.

காலச்சுவடு, நியூ செஞ்சுரி புத்தகநிலையம், அடையாளம், பாரதி புத்தக நிலையம், சாகித்ய அகாதெமி வெளியீடு போன்றவை ஆய்வாளர்கள் அறிந்த பதிப்பகங்கள். ஆகையால் இத்தொகுப்பில் அவை விரிவாக  விவரிக்கப்படவில்லை.

பொருளாதாரப் பயன் கருதாது, ஆய்வுலகில் புதுப்புது செல்நெறிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பதிப்பகங்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பொக்கிஷம்தான்.

The post தமிழியல் தேடல்(4) – “தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பொக்கிஷமாய் திகழும் பதிப்பகங்கள்” appeared first on Kaanalvari.

❌