கோவையின் சிற்பியின் இந்தியப் பயணம்
சே.ப.நரசிம்மலு நாயுடு
ஆரியர் திவ்வியதேச யாத்திரையின் சரித்திரம்
சேலம் பகடால நரசிம்மலு நாயுடு தன்னுடைய ‘திவ்வியதேச யாத்திரை சரித்திரம்’ நூலின் (அடையாளம் பதிப்பகம்) நூன்முகத்தில் “திவ்யஸ்தல யாத்திரை மாந்தர்க்கு சித்த சுத்தி முதலியன தப்பாது விளைவிப்பதோர் ஞானசாதனமாகும் என்பது யுக்தி அனுபவமாக சித்தமாக இனிது அறியப்படுதலின் அது சுருதிமொழி மாத்திரையாய் வருவதொன்றன்று….” என்று கடுந்தமிழ்நடையில் ஆரம்பித்தாலும் நல்லவேளையாக இந்தநடையை நூலில் கொண்டுவராமல் பெரும்பாலும் பேச்சுநடையிலேயே எழுதியிருக்கிறார். தென்னாட்டு, வடநாட்டு மக்களில் யார் சுத்தமானவர்கள் என்று ஒப்புநோக்கி கடைசியில் இவ்வாறு தீர்ப்பளிக்கிறார். “தென்தேசத்தாரின் பாத்திரங்களின் அழுக்கும் பிரயாகை ஜனங்களின் வஸ்திரங்களின் அழுக்கும் சமம் என்றும், தென்தேசத்தாரின் வஸ்திரசுத்தியும் பிரயாகை தேசத்தாரின் பாத்திரசுத்தியும் சமமென்றும் சொல்லலாம்”. பயணஇலக்கியத்தின் முன்னோடி நூலான இது பதிப்பு கண்டது 1889 ஆம் வருடம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
1886 ல், கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள கோயம்புத்தூரின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வதோடு குடும்பத்தோடு திவ்யதேச யாத்திரை செய்யவும் முடிவு செய்து 1886 டிசம்பர் 5ஆம் தேதி கோயம்புத்தூரிலிருந்து புகைவண்டியில் கிளம்பி ஆற்காடு, ரேணிகுண்டா, ரெய்ச்சூர், மன்மார், சோக்பூர், ஜபல்பூர் வழியாக அலகாபாத்தை அடைகிறார். வழியில் காசி,பிரயாகை முதலிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகள் தொல்லை தாங்காமல், தன்னுடைய தூரவீசிணியை (பைனாகுலர்) இழந்த வருத்தத்தோடு, சென்னையில் முன்னர் வசித்த, பல மொழிகளும் பேசத்தெரிந்த ரங்காராவ் என்ற பிராமணரை பணம் கொடுத்து உதவியாளராக அமர்த்திக்கொள்கிறார். அலகாபாத்து, காசி, கயா முதலிய எல்லா இடங்களிலும் ’ஆயிரம் தேள் கொட்டுவதுபோன்ற’ குளிரில், புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்தும், பிரார்த்தனைகள் பல செய்தும், பித்ருக்களுக்கு திவசம் கொடுத்தும் வந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்வதோடு அந்தந்த இடங்களின் பூர்வசரித்திரம் மற்றும் தற்கால நிலைமை குறித்து விளக்கியும் செல்கிறார். பின்னர் கயாவில் தன் குடும்பத்தை ஒரு பிராமணர் வசம் ஒப்புவித்துவிட்டு, தான்மட்டும் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று மீள்கிறார். அன்றைக்கிருந்த குறைந்த பிரயாணவசதிகளைக் கொண்டுபார்த்தால் இது ஒரு சாகசப்பயணமேதான்.
பிரயாகையில் ‘எக்கா’ எனப்படும் ஒற்றைக்குதிரைவண்டிதான் முக்கியமான போக்குவரத்து சாதனம். இரண்டுபேர் இடுக்குப்பிடித்தாற்போல பயணம் செய்யலாம். ‘தென்தேசத்து ஒற்றை மாடு, இரட்டை மாட்டு வண்டி போல் செய்துகொண்டு சுகப்படத்தெரியாமலிருப்பதுவன்றியில், கபிலை ஏற்றமிறைக்கும் மாடுகளை பின்போகப் பழக்கிவைக்காமல் ஒவ்வொரு இரைப்புக்கும் அவிழ்த்துக்கொண்டுபோய்க் கட்டி காலத்தை வீணாக்குகிறார்கள். இது விஷயத்தில் யாம் இரண்டொரு முறை சொல்லிக்கொடுத்தும் அவர்கள் அனுசரிக்கப் பிரியம்கொள்வதாய்த் தோன்றவில்லை’ என்கிறார்.
பிரயாகையில் நாயுடுவுக்கு ஒரு விந்தையான அனுபவம் நேர்கிறது. அவருடன் அழைத்துச் சென்ற ராமாராவின் சகோதரி மகளுக்கு பேய் பிடித்துவிடுகிறது. அதாவது சிலநாட்களுக்கு முன் கங்கையில் குளிக்கச் சென்று, எல்லோரும்பார்க்க ஆற்றோடுபோய்விட்ட அவள்கணவன், இரவில் கனவில் வந்து ‘வா, போய்விடலாம்!’ என்று அழைக்கும் நேரம் அவளுக்கு உடலை முறுக்கிக்கொண்டு பேய் பிடித்தாற்போல ஆகிவிடுகிறது. அன்றும் அப்படியே நேர, தாங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று அந்தப்பெண்ணின் தாயார் முறையிட, தன்னுடன் அழைத்துச் சென்ற மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காதபோது, சிறிது வேப்பிலையை முகத்திற்குநேரே வீசி, தனக்குத்தெரிந்த மந்திரங்களைச் சொல்கிறார். அந்தப் பெண் நலமடைகிறாள். இதேபோன்ற அனுபவம் அவருக்கு காசியிலும் நேர்கிறது.
காசியில் நாயுடு தங்கியிருக்கும் பிராமணரின் வீட்டில் வேலைசெய்து கொண்டிருக்கும் வேணுபாய் என்கிற மராட்டிய பிராமணப்பெண்ணுக்கும் இதே போன்ற ஒரு நிலை ஏற்படுகிறது. இவள் தன்னுடைய அண்ணன், தம்பி மனைவியரின் கொடுமை தாங்காமல் காசிக்கு ஓடிவந்த இளம்விதவை. இதுபோன்ற பலரையும் தொடர்ந்து காண்கிறார். காசியின் மூன்று கஷ்டங்கள் ராண்டி, சாண்டி(மாடுகள்), படீல் என்கிறார் நாயுடு. ராண்டி என்றால் விதவைகள். வீட்டில் குடும்பத்தாரின் கொடுமை தாளாத இளம்விதவைகள் காசியில் கங்காஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டால் அடுத்தஜென்மத்திலாவது தீர்க்கசுமங்கலிகளாக இருக்கலாம் என்கிற நம்பிக்கையில் ஊரைவிட்டுக் கிளம்பி வந்துவிடுகிறார்கள். இவர்களை ஆரம்பத்தில் பிதுர், சிரார்த்த காரியங்களுக்கு வேலைக்கு வைத்துக்கொள்ளும் பண்டாக்கள் அவர்கள் பருவமடைந்த பிறகு விபசாரத்தில் ஈடுபடுத்திவிடுவதோடு, ராணிபோல இருக்கும் தம் மனைவிமார்களுக்கு வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்கிறார்கள். ’காசி மகாபுண்ணிய க்ஷேத்ரமாகையால் விபசாரத்தை தோஷமாகப் பாராட்டக்கூடாது என்கிறார்கள் சிலர். என்ன நியாயமோ தெரியவில்லை?’ என்கிறார் நாயுடு. இளம்விதவைகள் படும் பாடுகளை வங்கஇலக்கியத்தின் மூலம் அறிந்த நமக்கு இவர்களில் எத்தனைபேர் அந்தந்த வீட்டாராலேயே கொண்டுவந்து விடப்பட்டர்களோ என்ற கேள்வி எழாமலில்லை. காசியின் இன்னொரு துயரமாக நாயுடு குறிப்பிடுவது கழிவறை வசதியின்மை. அடுக்கடுக்கான மாடி வீடுகள். ஆனால் ஒரு வீட்டிலும் தனிப்பட்ட கழிப்பறை என்று கிடையாது. ஒரு தளத்தை மட்டும் அதற்கென்று ஒதுக்கி விடுகிறார்கள். சுத்தம் செய்வதும் கிடையாது.
பிரயாகையில், காசியிலும் நாயுடு பார்க்கச்சென்ற கலாசாலைகளில் இவரை உரையாற்றச் சொல்ல இவரும் தயக்கத்தோடு ஆழ்வார்கள், நாயன்மார்கள் பெருமையைக்கூறி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். இதேபோல கல்கத்தா காங்கிரஸில் ஒரு கலந்துரையாடலுக்கு தலைவராக இருக்க வாய்ப்புக் கிடைக்கிறது. பெயரளவில் கேள்விப்பட்டிருந்த அத்தனை தேசியத்தலைவர்களையும் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. ’கல்கத்தா நகரமண்டபத்தைப் போல ஒரு அழகான கட்டிடத்தை இந்து தேசத்திலேயே கண்டதில்லை. வந்து கூடியிருந்த மூவாயிரம் ஜனங்களில் எத்தனைவிதமான தொப்பிக்காரர்கள், உடுப்புக்காரர்கள், பாஷைக்காரர்கள், மீசைக்காரர்கள்? அத்தனை பேரும் ‘தேசாபிமானம்’ என்னும் பொதுவிஷயத்திற்காக ஆயிரக்கணக்கான மைலைக் கடந்து வந்து கூடியிருந்த அழகை வருணிக்க அந்தக் கம்பநாட்டார் பிறந்து வந்தாலன்றி என்னால் முடியாது’ என்கிறார் நாயுடு. அங்கு ஹூக்ளி நதியில் நண்பர்களோடு சிறு கப்பலில் பயணம் செய்து வந்து ஒரு ஆங்கிலேயபாணி நடன நிகழ்ச்சிக்குச் செல்லுகிறார். அங்கு வங்காள பாபுக்கள் இசைத்த மேற்கத்திய இசையை கேட்டுக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த ஷியாமாராவ் விட்டல் என்கிற பம்பாய் ஹை கோர்ட் வக்கீல் நாயுடுவின் கையைப்பிடித்துக்கொண்டு ’இந்த கீதம் கோயம்புத்தூர் ராகவய்யர் கீதத்தைவிட சுகமாக இருக்கிறதா என்ன?’ என்று கேட்க, நம்மூர்க்காரர் பெயர் எங்கெல்லாம் பரவியிருக்கிறது என்று ஆனந்தப்படுகிறார் நாயுடு.
லாகிரிவஸ்துகள் மற்றும் பெண்களின் மீதான வடநாட்டு மக்களின் மிதமிஞ்சிய மோகம், தேங்காய் பருமனுள்ள கொய்யாப்பழங்கள் மற்றும் பிற கனிகள், முஸ்லீம் படையெடுப்புகளினால் ஏற்பட்ட சிதிலங்கள், சமண பௌத்தத் தலங்கள், விவசாயச் செய்திகள், ஆங்காங்கு தாம் கண்ட தொழில்துறை முன்னேற்றங்கள், ரயில் பயணத்தில் இந்திய மக்களைப் பற்றி தவறாகப்பேசிய வெள்ளையருடன் விவாதத்தில் ஈடுபட்டது, சென்னை பீப்பிள்’ஸ் பார்க் தீ விபத்து, ‘பாஞ்ச் ரூபியா ஆவ்’ என்று அழைக்கும் வெள்ளைக்கார வேசிகள் என்று பல செய்திகளைப் பதிவுசெய்கிறார் நாயுடு. அவருக்கு வரும் கடிதங்களும், தந்திகளும் மொத்தமாக ஒருவர் மூலம் சேகரிக்கப்பட்டு அவரிடம் வந்து சேர்வதாக ஏற்பாடு. அவருடைய முக்கிய உறவினர் இறந்த செய்தியே அவருக்கு தாமதமாகத்தான் வந்து சேர்கிறது. இன்றைக்கு அரைமணிநேரம் ‘ஃபோன் சிக்னல்’ இல்லாவிட்டால் ஏற்படும் நம்முடைய பரிதவிப்பின் பின்னணியில் இதைப் புரிந்துகொள்ளலாம். பாட்னா, அயோத்தி, கான்பூர், லக்னோ, மும்பை, டெல்லி, ஆஜ்மீர், உஜ்ஜயினி, ஆந்திரா, கர்நாடகா என்று கிட்டத்தட்ட மூன்று மாதகாலம் விரிந்த ஒரு பயணத்திற்குப்பிறகு 1887 பிப்ரவரி 25 ஆம் தேதி கோயம்புத்தூர் வந்து சேர்கிறார் நாயுடு.
அலகாபாத் திரிவேணிசங்கமத்தில் கோயம்புத்தூர் வாசிகளுக்காக நாயுடுவின் பிரார்த்தனை – ’ஓ! கோயம்புத்தூர் மகாஜனங்களே! அடியேம் உங்களுடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரரென்று மதித்து தேசாபிமானத் தொழிலைச் செய்ய கலீகட்டணத்திற்கு அனுப்பினீர்கள். நாமும் அதற்கிசைந்து வருகையில் இந்தப் புண்ணிய ஷேத்திரத்தை தரிசிக்க இடமாயிற்று. ஆகவே உங்களையும் எமது பெரிய உபகாரிகளாக மதித்து உங்களுக்கு பூரண சுகவாழ்வைப் பிரசாதிக்கும்படி இந்தப் புண்ணியஷேத்திரத்தில் பரமாத்வாவைத் தியானிக்கிறோம். அவரும் அப்படியே பிரசாதித்தருள்வாராக. ஓ! கோயம்புத்தூரே, உனக்கு மங்களமுண்டாவதாக! ஓம் தத் சத், ஹரி ஓம்!’
தனக்கு இந்த வாய்ப்பளித்த கோயம்புத்தூருக்கு நாயுடு திரும்பிச் செய்தவை ஈடுசெய்யமுடியாதவை. ஊர் திரும்பியதும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்துகொண்டு தாம் இந்தியா முழுதும் கண்ட தொழிற்சாலைகளைப் பற்றிப் பேசி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டியது, போத்தனூர் சர்க்கரை ஆலை, பீளமேடு ஜின்னிங் மில்லுகள் போன்றவற்றை அமைக்க முக்கியக் காரணியாக இருந்து தொழிற்புரட்சியைத் தொடங்கி வைத்தது, சிறுவாணியிலிருந்து கோயம்புத்தூருக்கு குடிநீரைக் கொண்டுவந்தது என்று நிறைய. இதற்கான விதைகளெல்லாம் அவர் மனதில் அந்த நெடிய யாத்திரையிலேயே விழுந்துவிட்டிருந்தன.
கிருஷ்ணன் சங்கரன்
***