தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு மத்திய-மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் வழங்கும் ஆய்வு உதவித்தொகை பற்றிய விவரங்களைப் விளக்குகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளை முடிந்த பின்னர், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் மனத்தின்கண் விரியும். முனைவர் பட்டம் படிக்கலாமா என்ற யோசனை அகத்தினூடே எட்டிப் பார்க்கும் பொழுது, பொருளாதாரத்திற்கு என்ன செய்வது என்ற எண்ணம் அதனைத் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போடும்.
‘இன்னும் எத்தனை வருஷம்தான் படிப்ப? வேலைக்குப் போற எண்ணம் இல்லையா? பணம் சம்பாதிக்காமல் என்ன பண்ற?’ போன்ற கேள்விகள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மீது வளைத்து வளைத்துத் தொடுக்கப்படும் கணைகளாகும்.
ஆய்வுத்தேடலுக்கான செலவினங்களுக்கும், முனைவர் பட்டம் பயிலும் போது ஏற்படும் பொருளாதாரத் தேவைகளைப் நிவர்த்திச் செய்து கொள்ளவும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அவசியமாகிறது. அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோருக்கு உதவித்தொகை வழங்க ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அதனை ஒப்பிடும் போது, கலைப்புல ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் உதவித்தொகையும் குறைவு; நிறுவனங்களும் குறைவு.
தமிழ் ஆய்வு மாணவர்கள் பெரும்பாலானோர் JRF மட்டும்தான் ஆய்வு உதவித்தொகை என்ற எண்ணம் பூண்டுள்ளனர். JRF- க்கு இணையான உதவித்தொகை வழங்கும் பல நிறுவனங்கள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுலகில் உள்ளன.
தமிழில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோர் ஏதேனும் ஓர் உதவித்தொகையைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தைத் தார்பரியமாகக் கொண்டு, ஆய்வு உதவித்தொகை வழங்கும் சில நிறுவனங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
1) UGC NET – JRF
பல்கலைக்கழக மானியக் குழுவானது, 1989-ம் ஆண்டுமுதல் தேசிய தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு இரண்டு தாள்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தாள் 1 பொதுத்தாள். இதில் 50 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாள் பாடம் சார்ந்தது. இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். Cut off மதிப்பெண்கள் அடிப்படையில் NET தேர்ச்சி பெற்றவர்களும் , JRF தேர்ச்சி பெற்றவர்களும் அறிவிக்கப்படுகிறார்கள்.
JRF பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆய்வு உதவித்தொகையாக 37,000 ரூபாயும், HRA-க்காக குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகிறது. இதர செலவினங்களுக்கு (contingency) ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது. இரண்டாண்டுகளுக்குப் பின்பு, SRF தகுதி உயர்வு பெற்றவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது.
தேசிய தகுதித் தேர்வில் JRF கட் ஆப்பை நூலிழையில் நழுவ விட்டவர்களுக்கு NFOBC, NFSC பெல்லோசிப்கள் வழங்கப்படுகின்றன. தேசிய தகுதித் தேர்வு முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் NFOBC, NFSC தகுதிப் பட்டியல்கள் வெளியாகின்றன. இத்தொகையும் JRF-SRF -க்கு நிகரான உதவித் தொகையைக் கொண்டது.
2) ICSSR – ஆய்வு உதவித்தொகை
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) சமூக அறிவியல் துறைகளில் முழுநேர முனைவர் பட்டம் பயில்வோருக்கு மாதம் ரூ.20,000 வீதம் இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. மேலும், இதர செலவினங்களுக்காக (contingency) ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது.
ICSSR உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெளியாகின்றன. விண்ணப்பதைப் பூர்த்திச் செய்து பதிவு செய்தால் போதும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சில மாதங்களில் ICSSR தளத்தில் வெளியாகும்.NET தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த உதவித்தொகை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் மைசூரில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் யுஜிசியின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயில்பவர்களுக்கு மாதம் ரூபாய் 20,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது.இதர செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 20,000 தருகிறது.
அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 30 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய மொழிகள் துறைகளின்கீழ் அடங்கும் குறிப்பிட்ட சில புலங்களை மொழி நிறுவனம் வகுத்துக் கொடுத்துள்ளது.இப்புலங்களில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யுஜிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பயிலும் பெண் ஆய்வாளர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.குடும்பத்தில் ஒரு பெண் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தைப் பெற முடியும்.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு இத்திட்டம் பொருந்தும். ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குடும்பத்தில் இருந்தால் இத்திட்டம் பொருந்தாது. JRF-SRF க்கு இணையான தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
5) மத்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வு உதவித்தொகை (CURF)
இந்திய அளவிலான மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 8,000 வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஐந்து ஆண்டுகள்.
பல்கலைக்கழக அளவிலான தகுதித் தேர்வின் மூலமாகவும், தேசியத் தகுதித் தேர்வின் மூலமாகவும் இந்த உதவித் தொகை பெற ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
(நன்றி – திரு.விக்னேஷ், ஆய்வு மாணவர்)
6) முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை (CMRF)
தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகையினை அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகளில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் (TRB)நடத்துகிறது.
இந்த உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. கலைத் துறைகளில் 60 மாணவர்களும், அறிவியல் துறைகளில் 60 மாணவர்களும் வழங்கப்படுகிறது.கலைத்துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயும், அறிவியல் துறை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாயும் இதரச் செலவினங்களுக்காக வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கூடுதலாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.
மேலும், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
7) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT)
செவ்வியல் இலக்கண-இலக்கியங்கள் அல்லது அதனோடு தொடர்புடைய புலங்களில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு, மாத உதவித் தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு இரண்டாண்டுகள். இதர செலவினங்களுக்கான தொகை ஆண்டுக்கு ரூபாய்.18,000.
இந்திய அளவிலான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முனைவர்பட்டம் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல்-மே மாதங்களில் செம்மொழி மத்திய நிறுவனத்தின் தளத்தில் வெளியாகின்றன.
அதேபோல், முனைவர் பட்ட மேலாய்வுக்கு (post doctor) மாதம் 50 ஆயிரம் ரூபாயும், மற்ற செலவுகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறை செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் முனைவர் பட்டம் பயில மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
முனைவர் பட்டம் பதிவு செய்த முதல் ஆறுமாதங்களுக்கு மாதம் 20000 வீதம் ஆய்வு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 25,000 ஆகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 30000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.
(நன்றி – திரு.பிரதீப், ஆய்வு மாணவர் )
9)SRM பல்கலைக்கழகம்
SRM பல்கலைக்கழகம் காட்டங்குளத்தூரில் தமிழ் ஆய்வுத்துறை இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிப்போருக்கு மாதம் ரூ.31,000 வழங்கப்படுகிறது. இத்தொகையின் கால அளவு மூன்று ஆண்டுகள்.
(நன்றி – திரு.கமலக்கண்ணன், உதவிப் பேராசிரியர்)
மௌலானா ஆசாத் ஆய்வு உதவித் தொகை, ராஜீவ்காந்தி தேசிய உதவித் தொகை போன்ற திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மத்திய அரசால் கைவிடப்பட்டன.
மேற்சொன்னவை தவிர, தமிழ்நாடு அளவிலான பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்லூரிகளும் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றன. இவற்றை ஆய்வு மாணவர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்படுதல் இன்றியமையாதது.
தமிழில் இதுவரை வெளிவந்த முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்புகளை உள்ளடக்கிய இணையச் சுட்டிகளைத் தொகுத்துரைக்கிறது இக்கட்டுரை.
ஓர் ஆய்வாளர் முனைவர் பட்டம் பதிவு செய்தவுடன், அவர்தம் உள்ளக்கிடக்கையில் தோன்றும் முதல் வினா ஆய்வை எங்கிருந்து தொடங்குவது என்பதுதான். தேர்வு செய்த ஆய்வுத் தளத்தில் தனக்கு நன்கு பரிச்சயம் இருப்பினும் ஆய்வுச் சிக்கலை எவ்வாறு இனங்காண்வது, கருதுகோள் எவ்வாறு அமைப்பது என அடுக்கடுக்கான ஐயப்பாடுகள் எழும்.
ஆய்வாளர் பதிவு செய்தவுடன் செய்யவேண்டிய முதல் வேலையே முன்னாய்வுகளைத் தேடுவதுதான். தமிழாய்வுப் பரப்பில் இதுவரை வெளிவந்த ஆய்வுகளைப் பார்வையிடுவதன் மூலம் அதிகம் தொட்ட இடமும், தொடாமல் விட்ட இடமும் நன்கு புலப்படும்.
ஆய்வு இடைவெளிகளைப் பூர்த்தி செய்யும் கொடுமுடிகளாகவும், ஆய்வுச் சிக்கல்களை இனங்காணும் தோற்றுவாய்களாகவும் முன்னாய்வுகள் விளங்குகின்றன. எனவே, ஓர் ஆய்வாளர் முன்னாய்வுகளில் இருந்து தனது ஆய்வைத் தொடங்குதல் அவசியம்.
அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பயில்வோர் அவர்தம் ஆய்வேட்டின் முதல் இயலை முன்னாய்வுகள் பற்றி விளக்குவதற்காக ஒதுக்குவர். ஆனால் தமிழாய்வில் இத்தகைய முறை இல்லை. சில ஆய்வேடுகளின் ஆய்வுச் சுருக்கத்தில் மட்டும் ஆய்வு முன்னோடிகள் பற்றி ஓரிரு வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகத் தமிழண்ணல் பணியாற்றிய போது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளின் பட்டியலையும், ஆய்வேடு பற்றிய குறிப்பையும் சேகரித்து, ‘தமிழாய்வு’ என்னும் தலைப்பிலான ஆய்வலடங்கலை வெளியிட்டார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையானது,1982 முதல் 2000 வரை செய்யப்பட்ட முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத்தலைப்புகளை உள்ளடக்கிய ஆய்வடங்கலை வெளியிட்டது.
தொடக்கக் காலத்தில், பல்கலைக்கழக அளவில் செய்யப்பட்ட இந்த முயற்சிகள் கால வெள்ளத்தில் கைவிடப்பட்டன.
தற்பொழுது, ஒவ்வொரு பல்கலைக்கழகமாகச் சென்று முன்னாய்வுகள் தேடினால் நேரமும் பணமும் விரயமாகுமெனப் பெரும்பாலான ஆய்வாளர்கள் முன்னாய்வுகளில் அக்கறை காட்டுவதில்லை. முன்னாய்வுகளைப் பார்வையிடாமல், இதுவரை செய்த ஆய்வுகளையே தொடர்ந்து செய்தால் ஆய்வுலகம் எந்தப் பயனும் அடையாது.
எனவே, முன்னாய்வுகளின் அவசியத்தை உணர்ந்து அதனை எளிமையாக் கண்டறியும் வகையில் இணையச் சுட்டிகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
1) ஷோத்கங்கா
பல்கலைக்கழக மானியக் குழுவின்கீழ் செயல்படும் ‘INFLIBNET’ மையத்தால் கடந்த 2011ஆம் ஆண்டு இத்தளம் தொடங்கப்பட்டது.
பெரும்பாலான ஆய்வாளர்கள் அறிந்த தளம் இது. இத்தளத்தில் 6000-க்கும் மேற்பட்ட தமிழ் ஆய்வேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் வாரியாக ஆய்வேடு முழுமையும் இடம்பெற்றுள்ளது.
இத்தளம் திருச்சி தந்தைப் பெரியார் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.காசிமாரியப்பன் அவர்களின் நிர்வாகத்தின்கீழ் செயல்படுகிறது.
இத்தளத்தில் 3000-க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் தலைப்புகளும், ஆய்வு பற்றிய சிறுகுறிப்பும் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆய்வுகளை வகைமைகள் அடிப்படையில் தேடும் வகையில், இத்தளம் எளிமைப்படுத்திக் கொடுத்துள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ.மணவழகன் அவர்களால் நிர்வகிக்கப்படும் தளம். இத்தளத்தில் 1000-க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகள், பல்கலைக்கழகம் – தலைப்பு – நெறியாளர் – ஆய்வாளர் – ஆண்டு என்ற வரிசைக்கிரம அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நூலகத்தில், இந்தியா – தமிழ்நாடு அளவிலான பல்வேறு பல்கலைக்கழங்களில் சமர்ப்பிக்கப்பட்ட 721 முனைவர் பட்ட ஆய்வேடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வேடுகளின் ஆய்வுத்தலைப்புகள் நிறுவன நூலகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளபட்ட 239 முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும், 368 ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத் தலைப்புகளும் கீழ்க்காணும் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின்கீழ் சிற்பம், இசை, நாட்டுப்புறவியல், மானுடவியல் அறிவியல்தமிழ் எனப் பல்வேறு புலங்கள் செயல்படுகின்றன. இப்புலங்கள் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் தலைப்புகள், ஆய்வடக்கம் ஆகியன பின்வரும் சுட்டியில் உள்ள கையடக்க ஆவண வடிவமைப்பில் (Pdf) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் செந்தமிழ்ப்பாவை அவர்களின் வலைப்பதிவில் பாரதியார், பாரதிதாசன், அழகப்பா ஆகிய பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட சில ஆய்வேடுகளின் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஒட்டுமொத்தமான முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்புகள், ஆய்வுக்குறிப்புகள் ஒரே தளத்தின்கீழ் ஒருங்கிணைத்துக் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில், ஆய்வாளர் தெரிவுசெய்யும் தலைப்பில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் தொழில்நுட்பத்தைத் தமிழாய்வுத் துறையில் கொண்டு வரவேண்டும்.
தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமோ, மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனமோ இப்பணியைச் செய்தால் தமிழாய்வுலகம் பெரும் பயனடையும்.