Normal view

Received before yesterday

காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள்

கடலோரச் சிறகுகள்

மூங்கில் நிழலாய் விழும்,
கதிரவன் பூச்செவியில் நிசப்தம் பேசும் வானில்
நான் பார்த்தது ஒரு கடல்,
என் நாடுகளைக் கடந்து வந்த ஒரு மொழி.
அலைகள் என்னைத் தடவிக் கேட்டன,
“வந்த ஊர் எது?”
நான் பதிலளிக்காத நிஜங்களோடு
அவற்றின் மெல்லிய அசைவில் தேங்கி நின்றேன்.
பின்வட்டிய காலடிச் சுவடுகள்,
ஓர் அழியாத அடையாளமாய்
என் பயணத்தைப் பதிவு செய்தன,
புயல் தாண்டி எழுதப்பட்ட ஒரு கதையைப் போல.
இங்கு நான் யாருமில்லை;
ஆனால் கடலும் சூரியனும்
என்னை வாழ்த்தின
வலசையின் கவிதை எழுதியது
இங்கிருந்த கடற்கரைதான்.

*

அழிந்த நிலத்தில் அழகின் மொழி

பட்டுப்போன மரங்கள்
பழையதாயினும் புதுமையோடும் நிறைந்தவை,
பருவக்காலங்களைப் போலவே
அழிந்து, அழகடைந்தவை.

அவை நிறைந்திருக்கின்றன,
என் ஊரின் மலைசுற்றுப் பாதையில்…
வழி வழியாகச் சிதறியுள்ளன
இலைமலர் இலக்கணங்கள்.
ஒவ்வொரு கிளையும் ஒரு கதை,
ஒவ்வொரு வேரும் ஒரு காலச் செய்தி!

மழைத்துளி தொட்டுப் போன
பச்சை இலைக்கோணங்களில்,
பழைய காதல் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன
காற்று பிழைத்துச் சொல்கிறது அவற்றை
நேர்த்தியான சத்தமின்றி…

அந்தப் பாதையில்,
ஒரு பெண் நடக்கிறாள்
அவளோ ஒரே ஒரு நூல் நாயகி!
தோளில் துணிக்கட்டு, கண்களில் தீபம்,
நெஞ்சில் கவிதை, கால்களில் கதைகள்…
அவள் நடந்து செல்லும் ஒவ்வொரு அடியிலும்
மண் ஒரு பக்கம் பதிப்பாகிறது.

அவள் மீது விழுந்த கதிர்கள் கூட
உரைநடை பேசுகின்றன
“ஓ, நீதான் எங்கள் கதையின் கதைவளர்!”
பூக்கள் சிரித்துக்கொள்கின்றன,
வண்டுகள் மெல்லிசை வாசிக்கின்றன,
மலை மரங்கள் தலைகுனிகின்றன…
அந்தப் பாதை, ஒரு நூலகம் போல
நூல்கள் இல்லாத நூலகம்.
ஆனாலும், அவள் நடையே
ஒரு சிந்தனையின் தொகுப்பு,
முழுக் கவிதையின் வாசிப்பு!

*

மலையின் மனம்

பாறையின் மார்பைத் தழுவி,
அந்தி நிழலில் நிசப்தமாய் நிற்கும்
பழமையான குகை வாசல்
பேச மறந்த காலத்தின் மொழி அது.

வழி நடந்த பாதையில்
வெண்மணல் தடம் போலவே,
வெட்டியசைந்த கல்லடி படிகள்,
ஒவ்வொன்றும் ஒரு கதையைக் கூறும்.

இடப்பக்கமோ இலைக் கிளி,
வலப்பக்கமோ பசுமைக் கண்கூர்வு.
இரண்டின் நடுவே,
நானும், என் நினைவுகளும்.

எத்தனை காலங்களாய் இவள் காத்திருக்கிறாள்?
பூமியின் உள்மனம் போல,
இவளுள் மறைந்திருக்கும் பரம்பொருள்,
நம்மை நோக்கி ஒளிந்து பேசுகிறது.

கழல் போட்டு மேலேறும் ஒவ்வொரு படி,
ஒரு நெஞ்சில் சிந்தும் சங்கமம்.
கல் மட்டும் இல்லை இது,
நம் காலச்சுவடுகளுக்கான மௌனத் தூபி.

இலை மேல் இமைகள்
(ஒரு தேசாந்திரி பறவையின் கவிதை)

வெள்ளை அப்பா, வெள்ளை அம்மா,
அவர்கள் இருவருக்கும் நடுவிலே,
பசுமைக் கனவாக ஒரு சிறு வெள்ளை உயிர்.
மூவரும் ஓர் இலை மேல்,
சூரியனின் நிழலோடு சேர்ந்து,
காற்றின் இசையைக் காதுகளாக,
மௌனமே மொழியாக
அவர்கள் வாழ்ந்த பாதையைக் கொண்டு
ஒரு சிறு நினைவுப் பயணம்…
அந்த இலைக்கருகே,
நானும் ஒரு தேசாந்திரிப் பறவையாய்,
என் சிறகு சுருக்கி,
முதல்முறையாக உட்கார்ந்தேன்…
பறக்காமல், பார்க்கும் பயணம்
அவர்களை நோக்கி,
என்னை நோக்கிய பயணம்.
அவர்கள் கண்களில் புன்னகை இல்லை,
ஆனால் ஒரு நிம்மதி இருந்தது.
அவர்களது அமைதி,
என் உள்ளத்தின் கோலாரங்களைத் தொட்டது.
வாழ்க்கை என்பது ஒரு பறவைதான்,
ஆனாலும் அதற்கு இரவு
இரவில் மட்டும் தெரியும்
ஒரு இலை மேல்,
உறங்கும் முன்,
வாழ்ந்த எல்லா நிமிடங்களும்
பாடலாக மாறும்.

The post காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

ப.மதியழகன் கவிதைகள்

ஒரு கணம்

இதற்கு முந்திய நாட்களிலெல்லாம்
அப்படியொன்றும் நடந்துவிடவில்லை
மொட்டு விரிந்து மலராவதை
யாரேனும் பாரத்ததுண்டா?
இந்தவொரு இரவுக்காகத்தான்
இத்தனை இரவுகள் காத்திருந்தேன்
அணைக்கப்படாத விளக்குகளும்
நிறுத்தப்படாத தொலைக்காட்சியும்
கலைந்து கிடக்கும் உடைகளும்தான்
வீடுகளை வீடுகளாய் வைத்திருக்கின்றன
அழைப்பு மணி ஒலித்தவுடன்
அனிச்சையாக உடைகளைத்
திருத்திக் கொள்கிறாய்
உன்னில் நானும்
என்னில் நீயும்
ஏதோவொன்றைத் தேடிக்
கொண்டிருந்தோம்
பகல்பொழுது முழுவதும்
ஆறுதல் அளிக்கும் இரவுகளை
அழைத்துக் கொண்டிருந்தேன்
இரவு வானத்தில் எனக்காக
காத்திருக்கின்றன நட்சத்திரங்களும்
நிலவும்
நகரமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்
இந்த நள்ளிரவு, என் மனதை
வேட்கை கொள்ள வைக்கிறது
அவளைக் கண்டவுடன்
அணையுடைத்துக் காட்டாறெனப்
பாயக்கிறது என் காமம்.

*

எனது தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
உனது நிழலை முத்தமிட்டதை
இப்போது நினைத்துப் பாரக்கிறேன்
வாடிய மலர் கூட மகத்துவம் பெறுகிறது
உன் கூந்தலிலிருந்து விழுந்ததால்
அந்த ஒரு மழை நாளை
நம் இருவராலும் மறக்க இயலாது
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்
கடலாக வேண்டுமென்றால்
எழுந்து வா அலையில்
கால் நனைக்கலாம்
எனது துயரங்களைப்
பகிர்ந்துகொள்ள நிலவும்
நட்சத்திரங்களும் இருக்கின்றன
ஓய்வு நாளில் கூட
ஓய்வு கொள்ளாது
என்னைக் காண
வருகின்றன அவை
எனக்குள் நிரம்பி வழிகிறது
காதல்
வெந்து தணிந்தது காடு
உனது நினைவுகள் என்னைச்
சாம்பலாக்குகிறது
ஒருநாளும் என் மதுக்கிண்ணம்
காலியாக இருந்ததில்லை
எனது மரணத்தில் போது
காதலுக்காக மரித்தவர்களெல்லாம்
உயிர்த்தெழுவார்கள்
உன் தோளில் தலைசாய்த்துக் கொள்கிறேன்
என்னை அழ விடு
காதலுக்காக ஒருமுறையேனும்
கண்ணீர் சிந்த விடு
இதோ பூமழை தூவுகிறது
வானம்
எங்கள் காதலைப்
புனிதப்படுத்தும் விதமாக.

The post ப.மதியழகன் கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

செளமியா ஸ்ரீ கவிதைகள்

விளங்கிக்கொள்ள முடியாத
விசித்திரக் கதையின்
ஒவ்வொரு பக்கத்திலும்
உதிர்ந்து விழுகிறது இதயம்

நாவில் உமிழ்ந்த
பிரிவின் சோகம்
நஞ்சாய் நழுவி
எனக்குள் சென்று
உயிரைக் கொல்கிறது

வந்தீர்கள்
செல்கிறீர்கள்
உங்கள் இருப்பிற்கு பழக்கப்பட்டுவிட்ட
என் சிறுநெஞ்சை
எந்த மருத்துவரிடம் கொடுத்து
பழுது பார்க்க?

*

மன்னிப்பே கிடைக்காத
குற்றங்களை எல்லாம் செய்துவிட்டு
மானிட வேடத்தில்
திரிந்து கொண்டிருக்கிறாய்
தேவன் உன்னை எப்படி மன்னிப்பான்?
உனக்கு தண்டனை கொடுக்க
மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறான்
இந்த ஞாயிறன்று
உருகும் மெழுகை உற்றுப் பார்
அது மரித்துப்போன தேவனின்
தூய குருதி.

*

இழவிற்குத் தயாராகி வந்திருப்பவர்களின்
மலர்ச்செண்டுகள்
எப்படி குணமாக்கும்
ரணங்களை..?

*

சேர்ந்து ஒரு தேநீர் கூட அருந்தியதில்லை
அத்தனை சிறியதா நம் உறவு?

*

The post செளமியா ஸ்ரீ கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கிருத்திகா கவிதைகள்

சற்றுமுன் பெய்து முடித்த
அடைமழையோ
சாலையில் தேங்கிக் கிடந்த
மழைநீரோ
மழைநீரில் பிரதிபலித்த
எதிர் வீட்டுக்கூரையோ
கூரையின் மேல் அமர்ந்திருந்த
பறவையோ
அந்தப் பறவை உதிர்த்த
ஒற்றைச் சிறகோ
இவற்றுள் எதுவோ ஒன்றில்
தொடங்கக் காத்திருந்தது
அந்த ஓவியரின் வரையப்படாத ஓவியம்.

*

ஒரு கொத்து மொட்டுகளில் மலர்ந்திருக்கும்
ஒரே ஒரு பூவைப் போல
ஒரு கூடை காய்களில் கனிந்திருக்கும்
ஒரே ஒரு பழத்தைப் போல
ஒரு வெற்று மரத்தில் துளிர் விட்டிருக்கும்
ஒரே ஒரு இலையைப் போல
நம் வாழ்வை அவ்வப்போது உயிர்பித்துச் செல்லும்
மனிதர்களை வணங்குவோமாக!

*

நான் அமர்ந்திருக்கும் படிக்கட்டில் இருந்து பார்த்தால்,
அந்தத் தங்க அரளி மரத்தின்
மேற்கிளைகள் நன்றாகத் தெரியும்
கூடவே அதில் கூடு கட்டி வாழ்ந்து வரும்
மைனாவும் அதன் சிறு குஞ்சுகளும்…
சுள்ளிகளும் சருகுகளும் சேர்த்துக் கட்டிய அக்கூட்டில்,
அவ்வப்போது மைனாக்களின்
மஞ்சள் நிற அலகுகள் மட்டும் தென்படும்
சிறிய தங்க அரளி மலர்கள் போல…
தினசரி இரை தேடி உண்ணும் மைனாக்களுக்காக
நான் படிக்கட்டில் விதைகள் விட்டுச் செல்வதுண்டு
இன்று ஏனோ மைனாக்களும் அதன் கூடும்
எவ்வளவு தேடியும் காணவில்லை!
நான் எப்போதும் அமரும் படிக்கட்டில் மட்டும் கிடந்தன,
சில சுள்ளிகளும் ஒரு காய்ந்த சருகும்.
*

[email protected]

The post கிருத்திகா கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

மேகலா கருப்பசாமி கவிதைகள்

மழைக்கால வேட்டை

குடைக்கும், மழை கோட்டிற்கும்
இருமலுக்கும், ஜலதோஷத்திற்கும்
ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்
மழைக்காலம் அது.
நானும் அப்பாவும் மட்டும்
வேட்டைக்குத் தயாராவோம்.

மன்னர்களைப் போல,
அம்மாவையும் தங்கையையும்
ஆச்சரியப்படுத்தும்
புலி வேட்டை;
நரிக்குறவர்களின் சாமர்த்தியத்திற்க்கு
இரையாகும்
முயல் வேட்டை;
பொந்தில் புகை மூட்ட
புறந்தள்ளி ஓடிவரும்
ஆடவர்களின் எலிப்பிடி வேட்டை – அல்ல
எங்கள் வேட்டை.

மழை பெய்த
ஈரமான தரையின் பதத்தை
சூரியன் உண்ணுவதற்குள்,
எங்கள் வீட்டு வடைச்சட்டியில் வதங்கி
என் தொண்டைப் பசியைப் போக்க
காத்திருக்கும் மழைக்காளானின் வேட்டை.

முடிவில், கைநிறைய மழைக்காளான்களுடன்
வந்தாலும் வருவோம் !
அன்றி, கண்ணார மரக்காளான்களை
இரசித்த நினைவோடும் வருவோம்.

*

சாபத்தின் சாயல்

இளரத்தம் கொதித்தெழும்
இருபதுகளின் ஆரம்பம் அன்று.
“நூறு வருஷம் நல்லா இரு”
என்ற அப்பா அம்மாவின் ஆசி போதாது போல
கோவில் முன் மண்டியிட்டது
மூளையின் மையத்தில்
மௌன ஊஞ்சல் ஆடுகிறது இன்றளவும்.

நெடு நெடுவென வளர்ந்து வளைந்த
கிழட்டு மூங்கிலில்
மல்லியின் மணம் வீசக்கண்டேன் – எந்தன் அல்லியவள்
நினைவு துளிர் விடும்போதெல்லாம்.

பால்ய சிநேகிதன் முகம்,
தாரத்தின் உரசல்,
ஐந்தாம் வகுப்பு ஆசிரியையின் அழகு,
இவற்றைத் துறந்து அல்ல, மறந்த
துறவியாய் அடியெடுத்து வைக்கிறேன்
தொண்ணூறாவது பிறந்தநாளில்.

மங்கலான கண்ணொளியிலும்
பிராகசமாய்த் தெரியும்
அந்த ஒற்றை விண்மீன்
உரக்க அழைக்கிறது என்னை.
பேத்தியை ஊன்றுகோளாக்கி
மீண்டும் அதே கோவில் முன் நிற்கிறேன்
‘விடைகொடு’ எனக் கண்களில் நீர் ததும்ப;
எந்தக் கடைசி கண்ணீர்த் துளி
முற்றுப்புள்ளி ஆகுமோ..!

[email protected]

The post மேகலா கருப்பசாமி கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி

நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலப் பரப்பில் வீசும் மேகாற்று முகத்தை ஆரத்தழுவி பளிச் பளிச்சென்ற ஈர முத்தங்களை அள்ளித் தரும் போது எவ்வளவு பெரிய கொடிய மனதும் ஒரு சிறு கணத்தில் சில்லென்று ஆசுவாசப்படுகின்றன. இயற்கையின் பிடியில் அச்சுப்பிசிறாமல் இன்னுமிருக்கும் ஓர் நிலப்பரப்பு தேனி என்றால் அது மிகையாது!

இலக்கியத்தில் இளைப்பாறுவதென்பது தனிச்சுகமே. தான் பெற்ற அனுபவத்தையும் ரசனையையும் கற்பனையையும் எளிய மொழிநடையோடு குலைத்து படைப்புச் சோறாய் தமிழ் உலகின் கரங்களுக்கு ஆக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் தங்கேசுவரன். அப்படிப்பட்ட படைப்புச் சோறானது அகப்பையில் சோமாரி நாவில் வைத்து சுவைத்து சுவைத்து உண்டு இலக்கியப் பசியாற்றுமளவிற்கு இருக்கின்றது. 

சின்னமனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் தங்கேசுவரனின் கவிதைச் சொல்லாடல்கள் பீரங்கிகளாய் வெடிக்கும் என்பதை நான் அறிவேன். கவிதைப் பயணத்தை விட்டு விட்டு தடம் மாறி சிறுகதைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். தன் கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களும் மனக்குமுறல்களும் நூலாசிரியரைத் தூங்கவிடாமல் துரத்தி துரத்தி வந்திருப்பதைக் கதைகளில் காணமுடிகிறது. பள்ளிக்கூடங்களில் சமகாலங்களில் நடக்கும் நிகழ்வுகளும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே இருக்கும் உறவினைப் பற்றியும் விவரிக்கின்றன கதைகள். பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பு பள்ளிக்கூடச் சம்பவங்கள், ஆசிரியர்கள் மாணவர்களைச் சார்ந்தே இடம்பெற்றிருப்பதைக் காணலாம். 

இத்தொகுப்பில் முதல் கதை “மரகதப்புறா” என்ற தலைப்பில் ஆரம்பமாகிறது. மரத்திலிருந்து கீழே விழுந்த மரகதப்புறாவை மேல்நிலை வகுப்பில் படிக்கும் சசி என்ற மாணவன் பள்ளிக்கு எடுத்து வருவதையும், ஆசிரியர்களுக்களுமான உரையாடலைச் செம்மைப்படுத்தியும் பேசுகிறது‌. மாணவர்களின் பெருங்குரலால் தன் சருகுகளை பலப்படுத்தி தூவானத்தில் மெல்ல மெல்ல பறக்கும் மரகதப்புறாவை தன் கைகளில் ஏந்திய படி நின்ற சசி கலங்கும் போது நம் கண்களும் கலங்குகின்றன. இந்தக் கதை எனது பள்ளிக் காலத்து நினைவுகளைச் சுமந்து செல்கின்றது. அடைமழை பெய்து கொண்டிருக்கும் காலத்தில் எங்கள் ஊரைச் சுற்றி உழவும் நடவும் நடந்து கொண்டிருக்கும். சுடுகாட்டைத் தாண்டி நடந்து கொண்டிருக்கையில் வாவரக்காச்சி மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த செம்போத்துக் குஞ்சுவை விட்டுவிட்டுப் போக மனமில்லை. செம்போத்துக்குஞ்சுவை மஞ்சப்பைக்குள் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவிட்டேன். ஏழாப்பு டீச்சர் ராசம்மா வந்து கண்டு பிடித்து விட்டார். பதினோரு மணி இடைவேளையில் ஒட்டு மொத்த பள்ளிக் கூடமும் திரண்டு நின்றது. பிரிசிட்டம்மாள் சிஸ்டர் வந்து செம்போத்தை எடுத்துக் கொண்டு கான்வென்ட்டுக்கு சென்றது இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன நினைவுகளின் வெளியில். 

“இளநீர்” என்கிற கதையில் கண்களை இழந்து யாசகம் பெறும் கணவன் மனைவியின் பாடுகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார் கவிஞர் தங்கேஸ்வரன். கருவுற்றிருந்த தன் மனைவிக்கு ஒரு இளநீர் கேட்டு யாசகம் செய்யும் ஒருவனின் வேதனையை இந்தக் கதை பேசுகிறது. 

“காடை”- இந்தக் கதை முழுக்க முழுக்க ஒரு சம்சாரிக் குடும்பத்தைப் பற்றி விவரிக்கிறது. “களம் குடுத்து வளரத்தாலும் காடை காட்டுலதேன்”என்ற பழமொழியை அடிக்கடி மேற்கோள் காட்டி, கைவிட்டுப் போன புஞ்சையை மீட்டெடுக்கும் சம்சாரியின் வாழ்வு இதில் புலப்பகின்றது. செல்வச் செழிப்போடு இருந்தவன் பெண்களுக்காக சொத்தை இழந்தானோ, மீண்டும் ஒரு பெண்ணால் அந்த புஞ்சை திரும்பக் கிடைப்பதைக் கதைகளில் பார்க்க முடிகிறது. 

கைவிட்டுப் போன காணிகள் மீண்டும் ஒருசிலருக்கு கிடைத்துவிடும். பலருக்கு கிடைக்காது. எங்களின் காணி கைவிட்டுப் போன போது உணர்ந்த வலி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தாத்தா ஈடான்குடும்பன் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது காலக்கட்டத்தில் வெள்ளையர்களின் மில்லில் வேலை பார்த்து உழைத்துச் சம்பாதித்த வாங்கிய காணி இன்று எங்களிடமில்லை. 

மதுரை விமான நிலைய விரிவாக்கத்தால் ஒரு கிராமமே களவு போனதையும் நம் கண்முன்னே பார்க்க முடிகிறது. புஞ்சைகளும் காணிகளும் காடுகளும் வயல்களும் தோட்டங்களும் கைவிட்டுப் போகும்போது நிலமே வாழ்வென கிடந்த சம்சாரிகளுக்கு உண்டான வலிகளுக்கு மருந்துகள் ஏதும் உண்டா என்ற வினாக்கள் எழுப்பத் தோன்றுகின்றது. 

கொரானாவில் பாதிக்கப்பட்டு உலகமே தத்தளித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வை “உயிர்ப்பு” என்ற தலைப்பில் கதையாக்குகிறார் எழுத்தாளர் தங்கேசுவரன். ஆதரவற்ற இல்லத்தில் இருந்து ஒரு அட்டையை வைத்துக் கொண்டு உதவி கேட்டு வரும் பெண்ணை வீதியில் விரட்டிவிடும் சம்பவம். பொதுவாக சிலர் உதவி கேட்பதாக வந்து வீடுகளை நோட்டம் பார்த்துவிட்டு வீடுகளில் ஆள்கள் இல்லாத நேரம் களவு செய்வதை பத்திரிக்கை செய்திகளிலும் நேரடியாகவும் காண முடிகிறது. இவள் அப்படியாக கூட இருக்கலாம் என்று விரட்டிவிடுகிறார்கள் வீட்டார்கள். 

இந்தத் தொகுப்பிலே மிகச் சிறந்த கதை “பயல்”. பிள்ளைப்பேறு பெற்ற கணித ஆசிரியரை, தனியார் பள்ளியில் வேலைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடும் கணவரின் இரக்கமற்ற செயலையும், தாய் சேய் உறவையும் ஆழமாகப் பேசுகிறது. 

அனைத்து பள்ளிகளிலும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இந்த பள்ளியில் நடப்பது கொஞ்சம் வித்தியாசமாகவும் ரசனையாகவும் உள்ளது “பாடம்” என்ற தலைப்பில் அமையப் பெற்ற கதை. பள்ளிப் பாடவேளையில் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் பாட்டுத் தாத்தா பல திறன் கொண்ட வித்தகர். தலைமையாசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மிமிக்ரி, மேஜிக், பாட்டுப்பாடி அசத்துகிறார். நடிகர் விஜய் நடித்த ‘ரஞ்சிதமே’ பாடலைப் பாடி அசத்திய தாத்தாவால் பள்ளி முழுவதும் விசில் அடித்து அதிர்ந்தது. பாட்டுத் தாத்தாவுக்காக மாணவர்கள் கொடுத்த பரிசு ஆயிரத்து ஐநூற்றி எண்பது . தலைமையாசிரியர் கொடுத்த பரிசு ஐநூறு. 

தலைமையாசிரியருக்கு திருக்குறள் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்த தாத்தா, உதவியாளர் குமாரை அழைத்து டீக்கடைக்கு வரச்சொல்லி ஐம்பது ரூபாயை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்து விடும் காட்சி நெஞ்சைப் பிசைக்கிறது. 

சமூகத்தின் அவலநிலையை “அடக்கம்”என்கிற கதையின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் தங்கேசுவரன். ஆக்கிரமிப்புகளால் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இடமில்லாமல் தவித்தலையும், இறப்பு வீடுகளில் நடக்கும் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களையும் விவரிக்கிறது இக்கதை. 

“ஏழையாக கூட பொறந்திரலாம்; எளிய சாதியா பொறக்கக் கூடாது” என்று உரக்கப் பேசுகிறார் இந்நூலாசிரியர். 

ஆதிக்கவாதிகளின் அதிகார ஆணவச் செருக்கால் இங்கே எளிய மக்களை வம்புக்கு இழுத்து சாதிப் பெயரைச் சொல்லி போராட்ட களத்துக்கு தள்ளும் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார். சுடுகாட்டுக்கு இடவசதி கேட்டு நூறாண்டுகளாக போராடியும், அலைக்கழிக்கும் திராவிடக் கட்சிகளின் மெத்தனப் போக்கையும் அதிகார சாதிய அரசியலையும் தோலுரித்து காண்பித்திருப்பது கதைகளில் மலை முகடுகளாகத் தெரிகின்றது. இறந்த பின்னும் நிம்மதியாகப் போய் அடங்குவதற்குக் கூட சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாமலும் பாதை இல்லாமலும் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். சமீபத்தில் திரையில் வெளியான நந்தன் திரைப்படமும், அனைத்துப் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியான,கடலூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை ஆற்றுக்குள் மூழ்கி இழுத்துச் செல்லும் காட்சியும் இந்தக் கதையில் அடங்கும். 

எழுத்தாளர் தங்கேசுவரனுக்கு கதை மொழி நன்றாக பிடிபட்டு விட்டது. முதல் சிறுகதைத் தொகுப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு கதைகள் நூலைச் செம்மைப்படுத்துகின்றன. வாழ்த்துகள் எழுத்தாளர் தங்கேசுவரன் அவர்களுக்கு.

கதையும் எழுதுக !

கவிதையும் எழுதுக!

வாழ்த்துகளுடன் 

எழுத்தாளர் அய்யனார் ஈடாடி 

நூல்: மரகதப்புறா 

வெளியீடு:பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள்:160

விலை:ரூ160

[email protected]

The post மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி

எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று ” யாவரும் வெளியீடாக வந்துள்ளது.

தனிமனித உலகமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் எழுதப்படும் கதைகளை எங்ஙனம் பகுத்தறிவது அல்லது அவைகள் நமக்கு வெளிப்படுத்தும் கூறுகளுக்குள் எப்படி உள்நுழைவது என்பதில் பெரும் சிக்கல் வாசகர்களுக்கு மட்டும் இல்லாது இக்காலகட்டங்களில் எழுதும் இளம் எழுத்தாளர்கள் பலருக்கு இருப்பதாகவே தெரிகிறது. அதனால் என்னவோ இங்கு பலர் எழுதும் கதைகள் அவர்களின் முன்னோடிகளின் வகைமைக்குள்ளேயே மாட்டிக் கொண்டது மட்டுமின்றி அவர்களின் மொழியும் அங்கேயே தேங்கி விடுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் அக்காலகட்டத்தை இயக்கும் விசைகளாகச் சிலவற்றை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. அப்போது ‘இப்படிதான்’ என்ற ஒன்றை அவர்கள் கைவிடவேண்டி இருக்கிறது. அதைத் திறமாக கைக்கொண்டவர்களைதான் காலம் தன்னில் தேக்கி வைத்திருக்கிறது.

வணிகம், போர் அதனிலிருந்து வெளிப்பட்ட தத்துவங்கள், அரசியல் , கலை, வெற்றி, தோல்வி போன்றவை மனித குலத்தின் சிந்தனை முறையை மாற்றியுள்ளது. அதே போல் இந்த நூற்றாண்டுக்கான விசையாக ‘தொழில்நுட்ப அகம்’ அனைவருக்கும் பிரத்தியேக உலகை உருவாக்கியிருக்கிறது. அதில் அவர்களுக்கான வரைமுறைகளை உண்டாக்கிக் கொள்ள சாத்தியங்களைக் கொடுத்திருக்கிறது. அங்கிருந்து ஒருவன் எதையும் தன்னிலை படுத்த முயன்றுகொண்டே இருக்கிறான். அப்போது கடவுள், மொழி, அரசியல், செல்வாக்கு, உணர்வுகள் என யாவற்றுக்கும் புது அர்த்தங்களை கைக்கொண்டு விடும் சாத்தியங்களை வழங்கியிருக்கிறது அதனிலிருந்து இயல்பாய் எந்த வித அவசரம் இன்றி கதைகளை கைக்கொண்டு நம்மிடம் அளிப்பதாகவே லட்சுமிஹரின் கதைகள் இருக்கிறது.அதனால் என்னவோ ‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை ஒரு முக்கியமான தொகுப்பாகச் சொல்லமுடியும்.

 தொகுப்பின் முதல் கதையான ‘மெழுகு’ ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்ட இளவயது உடைய ஒருவன் மருத்துவரைச் சந்திக்கச் செல்லும் பயணத்தில் நிகழும் தொடர்புகளைச் சுற்றி அமைந்துள்ளது. சர்ச், அங்கு அறிமுகமாகும் பேபி எனும் கதாபாத்திரம் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் உரையாடலில், சமூகம் அவனுக்கு கொடுத்துள்ள கடவுள் என்னும் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கி தனது பிரார்த்தனைகள் வழியே தனக்கான கடவுளாக அதை உருமாற்றி, தனது நோயிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறான் என்பதே மீதி கதை. இக்கதை முதலில் வாசகர் மனதில் அதைக் கடந்து செல்லவே வலியுறுத்தும், ஆனால் இக்கதையைத் தொடர்ந்து செல்லும் வாசகன் பெறுவது அவர்களை ஆட்படுத்தி வைத்திருக்கிற விலங்குகளுக்கான பாதையை.

“வேண்டுதலின் உச்சரிப்பு என் சவத்திற்கு முன் இடப்படும் மலர் மாலைகள். அதில் அலங்காரம் என்ற எதுவும் இல்லை.

ஒருவரின் வேண்டுதலில் தலையிடுதல் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த காகிதத்தைப் பிரிக்கும் போது நமக்கான வரைமுறை எதன் அடிப்படையில் என்பதிலிருந்தே இங்குப் பல கேள்விகள் தனக்கான கருவை உருவாக்கி மீள்கின்றன,

இந்த தூதனிடம் எத்தனையோ வேண்டுதல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது..அவைகள் நிறைவேற்றப்பட்ட உடன் இங்கிருந்து அக்காகிதங்கள் தானாக மறையும் ..’ ”

                     —- மெழுகு கதையிலிருந்து…

பிரார்த்தனைகள் வழியாக உருமாற்றம் பெரும் கடவுள்கள் என்பது இந்த நூற்றாண்டு தனிமனிதனுக்கான கடவுளின் பிரத்தியேக வடிவம் என்பதில் இருந்து இத்தொகுப்புக்கான மற்ற கதைகள் தொடங்குகிறது.

இரண்டாவது சிறுகதையான ‘நிப்பாண காதை’ சிறுகதையும், வரலாற்று ஆன்மீக புதிர் பாண்டஸி கதையாக களம் மாறுகிறது, அதில் வரும் கதாநாயகி ஒரு ஜமீனின் மகள். தனது காதலால் வீட்டை விட்டு வெளியேறி கணவனை இழந்து, கைக்குழந்தையைக் கழுகு சதை பிண்டமாக நினைத்து கவ்விக் கொண்டு செல்ல, அதில் தன்னிலை இழந்து நிர்வாணமாக மீண்டும் தனது வீட்டிற்கு வரும் அவளை ஊர் மக்கள் அவளின் அப்பா கட்டிய வீட்டில் பூட்டி வைக்கிறார்கள். பிக்குணியின் பின்புல கதையில் புத்தன் ஆக நினைக்கும் ஒருவன் வரும் கதை. இவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல் என்பது முக்கியமானது. அவள் தன் உடலை எவ்வாறு கற்பனை செய்கிறாள்; தன் உடலைக் கடந்து என்ன தேடுகிறாள் அல்லது எவ்வாறு உருவகித்துக் கொள்கிறாள் என்பதான தொடர் கேள்விகளை நோக்கி வாசகனை இழுத்துச் செல்கிறது. அவளின் கோவத்தை வெறும் உடல் சார்ந்த கோபமாக மட்டுமில்லாமல் வேறோதொன்றின் வெளிப்பாடாகக் கண்டடைந்து, தன் உடல் என்னும் கற்பனையை அவன் எவ்வாறு கடந்து சென்று எதை அடைகிறான் மற்றும் அதன் எல்லைகளை உணர்வது என்பதே மீதிக் கதை.

இக்கதை மட்டுமல்ல இத்தொகுப்பின் எல்லா கதைகளும் தனி மனிதன் மேல் ஏற்பட்ட சமூகத்தின் மதிப்பீடுகளை மறு உருவாக்கத்திற்கே இட்டுச் செல்கிறது.

‘எதன் பொருட்டு தனக்கு இப்படி நடந்தது என்ற கோபத்தை, எல்லாவற்றையும் துறந்து வந்த ஒருத்தனிடம் காட்டிவிட்ட திருப்தி அவளிடம் இருந்தது ‘

              — நிப்பாண காதை கதையிலிருந்து…  

இக்கதைகளைத் தொடர்ந்து இக்காலத்தின் இளைய தலைமுறைகள் தனக்கான சமூக மற்றும் தனிமனித பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவுடன், தனது சூழலில் கிடைக்கும் நட்புகளை நோக்கிக் கதை வளர்கிறது. நிஜத்திலிருந்து விடுபட அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களைக் கவனிக்க முடிகிறது. அப்படிச் செல்பவர்கள் அடைவது என்ன.. அல்லது அதிலிருந்து எதை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது ‘ரெகுலர் லைப்’ க்கு வருகிறார்கள் என்ற கேள்வியைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைகளாக ‘ஆன் தி ராக்ஸ்’ சிறுகதையும், கதவுச் சிறகு சிறுகதையும் அமைகிறது.

‘பறவைகளைக் காணும் முகாமிற்கு நான் புதிது, நான் அதிகமாகப் பார்த்த பறவை இனமே காக்கை தான் “ என்று சொன்னதும் அவர் சிரித்துக்கொண்டே, “எல்லா இடங்களுக்கும் ஒரு பறவை இனம் காக்கைகள் தான் “ என்று சொன்னார் .

                    —- கதவுச் சிறகு கதையிலிருந்து

தொழில்நுட்பம் சார்ந்த இந்த வாழ்கைச் சூழலில், தன்னை சுற்றியுள்ள சக மனிதனிடம் இருந்து நாம் விலகி இருக்கப் பழகிக் கொண்டோம். இந்த விலகல்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் மீண்டும் இத்தொழில்நுட்பம் உருவாக்கும் கேளிக்கை உலகில் பெரும்பாலோனோர் மாட்டிக் கொள்கின்றனர். அதில் விரும்பி மாட்டிக் கொள்வதே இச்சூழலின் இன்னொரு முகம். அவ்வாறு இருக்கும் ஒருவன் தன்னை வெவ்வேறு நிலப்பரப்பு பயணங்களில் தேடி, தனது வாழ்க்கையில் சந்திக்கும் பெண் எவ்வாறு மீண்டும் சகமனிதன் கொடுக்கும் சுவையை அறிய வைத்துவிட்டுச் செல்கிறாள் என்பதையும், தான் வாழும் சூழலில் நிகழும் நிறைவின்மையைப் போக்கிக் கொள்ள வெவ்வேறு நிலத்தைத் தேடி மேற்கொள்ளும் பயணங்களில் அவர்கள் அப்பயணத்திற்கு அளிக்கும் அச்சிறுகால அளவைக் கொண்டு சக மனிதன் தரும் சுவையை அறியமுடியாமல் கடைசியில் அப்பயணத்தில் அவர்கள் பெற்ற கேளிக்கை நினைவுகளை மட்டும் சுமந்து திரும்புவதால் அவர்களே அறியாத நிறைவின்மையை சுமந்தே மீள்கிறார்கள். இதற்குக் காரணமும் அப்பயணத்தில் எல்லோரும் காட்டும் அவசரம். என்னதான் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் மனம் அதைச் சுற்றியே இருப்பதால் பயணத்திற்கும் மனதை அளிப்பதில்லை. இவ்விரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஊசலாட்டத்தையும் இக்கதைகளில் அறியமுடிகிறது.

‘சுவைகள் அனைத்தும் ஒன்றே; அது மனிதர்களைச் சார்ந்து மட்டும் பொருந்துவது அல்ல’

  • ஆன் தி ராக்ஸ் கதையிலிருந்து  

மெழுகு கதையின் அடுத்த அடி முன்னேறிய கதையாக ‘கித்தானுடைய வண்ணப் பேழை’ மரணத்தைப் பற்றி கூற்றைக் கேலியாக்குகிறது…

சினிமா நண்பன் பயணத்தின் போது ஓர் குழந்தையின் சவ ஊர்வலத்தைக் கவனிக்கிறான். அதில் அக்குழந்தையின் சவப்பெட்டி எப்போதும் இருக்கும் கருப்பு வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் இருப்பதைப் பார்க்கிறான். இப்போது சினிமா துறையில் இருப்பவன் அதன் பாதிப்பில் தனக்கான கதையாக அதை மாற்ற முயல்கிறான், அதே போன்று சவப் பெட்டியைச் செய்யச் சொல்கிறான், சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளி சென்றதால் அச்சவப்பெட்டியைத் தான் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு எடுத்து வருகிறான். அங்கு அவனுடன் சேர்ந்து சினிமா துறை சாராத இன்னொரு நண்பனும் இருக்கிறான். அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் இக்காலகட்டங்களில் மரணத்திற்கான பகடியை கைக்கொள்கிறது.

‘முடிவுறா அவ்வண்ணங்களில் அவளின் முகத்தைத் தேட முற்பட்டேன். என்னிடமிருந்து மறைந்து விளையாட தொடங்கியிருந்தாள். அந்த வண்ணப்பேழையின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது. ’  

    -‘கித்தானுடைய வண்ணப்பேழை’ கதையிலிருந்து

மரணம் தன்னை கதவாக மாற்றிக்கொண்டு தான் சந்திக்கும் மனிதர்களிடம் தனக்கான சாவியை அளித்துவிட்டு, தனக்குப் பின்னால் பல வண்ணத்தினை மறைத்து வைத்துக்கொண்டு, தன்னை தைரியமாக அணுகும் மனிதனுக்காக காத்திருக்கிறது.

மேலும் கடந்த காலத்தில் வெற்றியாகக் கொள்ளப்பட்ட பெருவிசைகளின் நினைவுச் சின்னங்கள், மரபுகள், நம்பிக்கைகள், வழக்கங்கள் இக்காலத்தில் எவ்வாறு பொருள் கொள்ளப்படும், அதன் மதிப்பை எப்படி உணர்கிறோம் என்பதைத் தொட்டுச் செல்லும் கதைகளாக யுதிரம், கூடார கரிசனம் மற்றும், வேடிக்கையும் இன்ன பிறவும் போன்ற கதைகள் உள்ளது. இம்மாதிரியான கதைகள் தொன்ம பாணிக் கதைகளாக மட்டும் நின்று விடாமல் வலுவான மானுட தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.  

எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்கிற பெரும் பொறுப்பை ஏற்றி இல்லையென்றால் அவனை மதிக்கத் தேவையில்லை என்று நினைத்து, அவன் மேல் அன்பு கொண்டு ஏற்றப்படும் மதிப்பின்மையை உணர்த்தும் கதையாக அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனையைக் கொள்ளலாம்.

“ஏன் மாமா இப்படி உன்ன கரிச்சுக்கொட்டிகிட்டே இருக்காங்களே உனக்கு கடுப்பாகல “

“கடுப்பாகி என்ன செய்ய போறோம் சொல்லு ..அதுல தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல..இது நான் வேணுன்னு எடுத்துகிட்டது அது அவங்களோடது…அவ்வளவுதான்..உன்னையும் இச்சமூகம் ஆசிர்வதிக்கட்டும்..”

       -அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை கதையிலிருந்து

இந்த அரசியல் புரிதல்களை நான் மேற்கோள் காட்டிய அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை கதையின் வரிகளில் இருந்து கவனிக்க முடியும். இச்சமூகம் சந்திரன் மாமா அவர்களின் மீது உருவாக்கும் பொருள்மயமாக்கலின் அழுத்தத்தை அவரின் மீது அன்பு கொண்டவர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டு இன்னொரு கதாப்பாத்திரற்கு சொல்லும் பதில்தான் முக்கியம். அதிலிருந்து அக்கதாபாத்திரத்தின் தேடல் எதை நோக்கியது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலேயே கதைகளில் வெளிப்படும் அகவுணர்வுகளின் விவரணைகள் எல்லாம் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஊடுருவிச் செல்வதால் நீண்ட வாக்கிய அமைப்புகள் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. மையக் கதாபாத்திரமான சந்திரன் தன் இயல்பில் இயங்கக் கூடிய பாத்திர வார்ப்பாய் அமைகிறது. அது லட்சுமிஹரை முதிர்ந்த கதை சொல்லியின் பாதைக்கு நகர்த்தியிருப்பதைக் காட்டுகிறது.  

மேலும் இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் வெறும் இந்த காலகட்டத்தைச் சார்ந்த விசைகள் உருவாக்கும் பிரச்சனைகளை தொட்டுக் காட்டும் கதைகள் மட்டும் அல்லாது இந்த தொழில்நுட்ப விசைகள் ஏற்படுத்தும் நிலையில்லா தன்மைகளினால் ஒருவனுக்கு தனக்குள் ஏற்படும் “தன்னை எங்ஙனம் இச்சமூகத்தில் பொருத்திக் கொள்வது, அதனால் ஏற்படும் கோபம், சோர்வு, பொருள்மயமாக்கலின் விளைவாக தன்னை இவ்வாறு காட்டிக் கொள்ளவேண்டும் என்கிற சமூகம் இடும் நிபந்தனை” ஆகியவற்றால் ஏற்படும் கேள்விகளை அலசும் கதைகளாகவும், தன்னை சுற்றியுள்ள நிலையின்மைகளில் எங்கு தன் சுயத்தை நிலைநிறுத்திக் கொண்டால் ‘உண்மை’ யை புரிந்துகொள்ள முடியும் என்கிற லட்சுமிஹரின் அல்லது அவரின் கதைமாந்தர்களின் தேடலின் விளைவான கதைகள்தான் இவை.

மேலும் இக்கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த குறைந்தபட்ச புரிதல்கள் எது வென்ற உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறது.

அதனால் இக்கதாபாத்திரங்கள் அனைத்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் தனக்கான அரசியல் புரிதல் என்னும் நிலையில் நின்றுதான் உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. அதற்கு மாறான கதை மாந்தர்களின் வாழ்க்கையையும் லட்சுமிஹர் எழுதாமல் இல்லை. கதைக்கான உண்மையைக் கண்டறிய விளையும் மனநிலை கதைகள் எங்கும் நிரம்பி இருக்கிறது அவரது பலம். அது மட்டுமில்லாமல் பெரும்பாலான கதைகளில் உரையாடல் சிக்கல்கள் இருக்கிறது, அது மொழியின் அலட்சியம் அன்று, இன்றைய நவீன உரையாடல்கள் அவை என்று தெளிவாய் புரிகிறது. வாசகனை லட்சுமிஹர் அதிகமாக நம்பியே இக்கதைகளை எழுதி உள்ளதாகத் தெரிகிறது. அதனால் சிறு கருணை கூட காட்டாத அவரின் கச்சிதமான கதை சொல்லும் முறை சிலரைத் திணறடிக்கலாம். கதை சொல்வதிலேயே முழு கவனத்தையும் கதைகள் குவித்திருக்கிறது அதுவே இந்த கச்சிததிற்குக் காரணம் சில நேரங்களில் அக்கதையை சிதறடித்தலில் இருக்கும் பாங்கு கதையை வாசகனின் எல்லையை விரிவடையவே செய்திருக்கிறது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் ‘materialistic’ மன நிலையிலிருந்து முழுவதுமாக விலகி நின்று கதைகளை எழுதுகிறான், அது அவனின் தனிப்பட்ட முடிவாக அதைப் பார்க்க முடியாதவையாக அமைகிறது. இக்கதைகள் அதிலிருந்து மீண்டும் வர எழுதிய கதைகளாகவே இயற்கை என்னும் பரப்பில் தன்னை ஒன்றாக்குவதற்கான முயற்சியாகவே இருக்கிறது. பலரின் மாதிரிகள் அவை.

பல தரப்பட்ட களங்களில் பயணித்தல், கதை வடிவத்தில் பெரிதும் மாற்றங்கள் இன்றி கதை கூறலில் பல எல்லைகளை தன்வசப் படுத்தியிருக்கிறார். அப்படியான கதை கூறலில் உள்ளும், புறமும் இயல்பாய் அக்கதைகளை நகர்த்துதல் மட்டுமின்றி இடைப்பட்ட கதைகளை லட்சுமிஹர் தானாக மறைப்பதையும் நம்மால் உணர முடிகிறது. அப்படியாக ‘இடை நிறுத்தல் வாசிப்பு’ என்ற ஒன்றை லட்சுமிஹர் தன்னுடைய கதைகளில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. அவரது முதல் தொகுப்பிலிருந்து இப்போது வரை அதைக் காணமுடிகிறது. அவைகள்தான் இக்கதைகளுக்குப் பன்முகத் தன்மையையும் வாசிக்கும் சுவாரசியத்தையும் கொடுக்கிறது. அவைகள் பெரிதும் கருத்தியல் முரண்களை, சீண்டல்களை வாசகர்களுக்கு இடையே ஏற்படுத்தத் தவறவில்லை. அப்படியாக வாசகர்களை புதிய எல்லையை அடையும் போது சில நேரங்களில் செயற்கையாக அவைகள் இருக்கிறதோ என்கிற அச்சமும் எழுகிறது ஆனால், அதில் லட்சுமிஹர் வெளிப்படுத்தும் சிந்தனைகள் அதில் உழன்று திரிந்த ஒருவனால் மட்டுமே எடுத்து வரக்கூடிய ஒன்று என்பது விளங்குகிறது. அதன் அர்த்தமாய் இங்கு வினவப்படுவது புதிய ஒரு கோணத்தை எந்த வித அச்சமும், பயமும் இன்றிச் சொல்லும் கதைகள் உள்நுழையக் கஷ்டம் எனினும் புது அனுபவமே. கதைகளை வாசிக்கையில் யாருடைய அடிதொட்டு இக்கதைகள் இயங்குகிறது என்பதைக் கண்டடைந்து அதை வகைப்படுத்த முடியாத படியாக கதைத் தேர்வும் சொல்லும் முறைகளும் வேறுபட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து ஒன்றே நமக்குப் புலப்படுகிறது கதை அல்லது கதையற்ற தன்மைக்கு உதவும் மொழியினை மட்டுமே லட்சுமிஹர் கையாளுகிறார். எந்த வித பாசாங்கோ அல்லது பக்க அளவோ அவருக்குப் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் தத்துவ ஒழுங்கின் அவசியமும் அவற்றின் கேள்வியும் நம்முடைய நம்பிக்கையை கேலிசெய்யாது கேள்விகேட்கிறது.

இக்கதைகள் அனைத்தையும் வாசிக்கும்போது கதையை சரியாக ஆசிரியர் முடிக்கவில்லை, சிறுகதை புரியவில்லை, முடிவில் ஒரு ட்விஸ்ட் இல்லை என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பலவற்றில் நாம் ஒத்துப் போகலாம். ஆனால், இக்கதைகள் அனைத்தும் லட்சுமிஹர் தொடங்கி வைக்கும் நமக்கான இன்றைய இளைய மனதின் பயணங்கள். இக்கதைகள் அனைத்தும் நாம் எதை பிடித்துக் கொண்டு அல்லது எங்கு நின்று கொண்டு உண்மையை அறியவோ அல்லது குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவாவது முடியுமா? என்கிற இயற்கையை நோக்கிய கைநீட்டலாகவே உள்ளது.

   இப்படியான கதைகள் தமிழில் மேலும் அதிகமாகவும் இன்னும் ஆழமாகவும் வருவதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகள் தன்னுடைய வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறது என்று நம்புகிறேன்.

[email protected]

The post ‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய்

“பதினொன்னு ஆனாலும் குளிக்காம சுத்துவீங்க. இன்னிக்கென்ன அதிசயம் எட்டுக்கெல்லாம் குளிச்சு உடுத்தி நெத்தில பட்டை போட்டாச்சு” வேகமாகத் தயாராகிக் கொண்டிருந்த நவகீர்த்தனை விஜயா கேள்வியுடன் பார்த்தாள்.

“சுத்திலும் புல்லு மண்டிக்கிடக்குனு நீதானே புலம்புன. அதான் ஆளு சொல்லியிருக்கேன். அப்படியே மேலயும் ரூம் போடலாமானு யோசனை. நாளைப்பின்ன பேரன் பேத்தினு வந்தா இடம் பத்தாதுல்ல?”

“அடேங்கப்பா! நானும் எத்தனையோ முறை சொல்லியாச்சு. காதுலயே போட்டுக்கல. இப்பதான் ஐயாவுக்கு ஞானம் பிறந்திருக்காக்கும்” என்றாள் விஜயா நொடிப்புடன்.

“அட எவடா இவ? தோணாம என்ன? காசு செலவு பண்ண தயாராயிருந்தாலும் செய்றதுக்கு ஆள் அமைய வேண்டாமா? கூலி வேலைக்கு இப்ப எங்க ஆள் கிடைக்குறாங்க? நேத்து ரேஷன் கடைல பரசுவை பார்த்தேன். இன்சூரன்ஸ் வேலையோட இந்த மாதிரி ஆளு புடிச்சும் தர்றானாம். அவன்தான் நல்ல வேலைக்காரங்க இருக்காங்க, அனுப்புறேன்னான்”

“பரவால்லயே. ஏங்க, வர்ற ஆளுங்களை பிடிச்சு வச்சு ஒழுங்கா வேலை வாங்கப் பாருங்க, ஏதாவது குதர்க்கம் பேசி துரத்தி விடாம”

“அது எனக்குத் தெரியாது பாரு. போடி, போய் டிபன் எடுத்து வை. அவனுங்க வந்துட்டா கூட நின்னு கண்காணிக்கவே நேரம் சரியாயிருக்கும்” என்றவர், “ஆனா, வருவானுங்களோ என்னமோ? யாரு சொன்ன மாதிரி சொன்ன நேரத்துக்கு வர்றானுங்க?” என்றும் சொல்லிக் கொண்டார். ஆனால், அவருடைய சந்தேகத்திற்கு வேலை வைக்காமல் எட்டரைக்கே “சார்” என்ற குரல் கேட்டது வாசலில்.

பரசு சொன்னவிதத்தில் இருவர் நின்றிருந்தனர். “வேலைன்னு…..” என்றனர் இவர் பார்வை பட்டதும்.

“ம்”மென்ற உறுமலுடன் உள்ளே வருமாறு கைகாட்டினார் நவகீர்த்தன்.

கிரில் கதவு திறந்து அவரெதிரே வந்து நின்றவர்களைக் கண்கள் மேலும் கீழுமாக அளந்தன. ஒருவனுக்கு இளவயது. இன்னொரு ஆளுக்கு மத்திய வயதிருக்கும். அவர் எதிர்பார்த்தது போல அழுக்குச் சட்டையும், கழுவாத முகமும், வாயில் பான்பராக் கறையுமாக இல்லாமல், சுத்தமான பேண்ட் சட்டையில் நேர்த்தியாக உடையணிந்திருந்தனர்.

“தோட்டத்தை சுத்தம் பண்ணனும். செய்வீங்களா?” சுற்றிலும் சீர் கெட்டிருந்த நிலத்தைக் காட்டியவர், “அட! நான் வேற தமிழ்ல பேசுறேன். புரியுமா?” என்றார்.

“புரியுங்க சார்” என்றனர் ஒருமித்த குரலில்.

“பரவால்ல… வரும்போதே கத்துக்கிட்டு வந்திடுறீங்க” என்றார் நவகீர்த்தன் ஒருவித நக்கல் சிரிப்புடன்.

“உங்க ஆளுங்கதானே ரயிலு முழுக்க அடைச்சுட்டு வந்து இறங்குறீங்க. இப்பல்லாம் எதிர்ல பார்க்குற பத்துல நாலு உங்க மூஞ்சிதான். தெருவுக்கு நாலு பானிப்பூரி கடை வந்துடுச்சு. ஹோட்டலு, ஒர்க்ஷாப்னு எல்லா இடத்துலயும் உங்க ராஜ்ஜியம். ஹ… போறபோக்கை பார்த்தா வீடு நிலம்னு வாங்கி நீங்க இங்க டேரா போட, நாங்கதான் ஊரை காலி செஞ்சுட்டு போகணுமாட்டம் இருக்கு”

அவர் கீழ்ப்பார்வையும் ஏளன சிரிப்புமாகப் பேச, அத்தொனி பழகியதுதான் என்பது போல இருவரும் சலனமேயில்லாமல் நின்றிருந்தனர்.

“சரி, முதல்ல தோட்டத்தை சுத்தம் பண்ணுங்க. புதரெல்லாம் வெட்டி சமப்படுத்தணும். செடிங்களை ஒழுங்கு பண்ணி தண்ணியோடற பாதை கட்டணும். மேல ரூம் போடுற ஐடியா வேற இருக்கு. இருக்குற வாட்டர் டேங்க் தண்ணி போதல. இன்னொரு சின்டெக்ஸ் ஏத்தணும். கொத்தனார் வேலை, பிளம்பிங்கெல்லாம் தெரியுமா?”

“தெரியுங்க”

“இப்ப தலையாட்டிட்டு வேலை தெரியாம முழிச்சா தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு”

“இல்லைங்க சார். எல்லா வேலையும் செய்வங்க”

‘அப்பாடா! தனித்தனியாக ஆள் தேடி அல்லாட வேண்டாம்’ நிம்மதி பெருமூச்சுக்கிடையிலும் அவருடைய இடக்கு அடங்கவில்லை.

“அது சரி. காசு சொளையா கிடைக்குதுனா ஏன்பா செய்ய மாட்டீங்க? நமக்குதான் அங்க மவுசுனு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு வந்துடுறீங்க, சாமர்த்தியம்தான்யா. சரி, வேலையை ஆரம்பிச்சிட்டு பாதில ஓடிடக்கூடாது. சாப்பிடுறதுக்கு ஒரு மணிநேரம், டீ குடிக்க ஒரு மணிநேரம்னு பொழுதைக் கழிக்காம வேலையை சட்டுபுட்டுனு முடிக்கணும். சரியா?”

“சரிங்க சார்”

“இருங்க. பரசுட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்” அவர் உள்ளே போய்விட்டு வெளியே வருவதற்குள் சட்டையைக் கழற்றி வைத்து இருவரும் தோட்டத்தில் இறங்கியிருந்தனர். ‘பரவாயில்லையே! முன்பணம் வேணும். டூல்ஸ் எடுத்துட்டு வரணும், நாளைக்கு வரேன்னு சாக்கு போக்கு சொல்லாம சட்டுனு இறங்கிட்டானுங்க. இவனுங்கள வெச்சே எல்லாத்தையும் முடிச்சுக்கணும்’ என்று கணக்கிட்டவர், “ஏய் விஜயா, வேறென்னென்ன சில்லறை வேலை இருக்குனு யோசிச்சு சொல்லு. அப்புறம் சிங்க் ஒழுகுது. பாத்ரூம் குழாய்ல தண்ணி வரலனு நாளைக்கு குறை படிக்காத” என்றார்.

எட்டிப்பார்த்த விஜயாவின் முகத்திலும் மெச்சுதல் வந்து போனது. “அட! அதுக்குள்ள பசங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க”

“பஞ்சம் பொழைக்க வர்றவனுங்க… கிடைக்குற வேலையைத் தக்க வச்சிக்கிட்டா தான் உண்டுனு மடமடனு இறங்கிட்டானுங்க. சரி, கொஞ்சம் டீ வச்சு கொடேன். தாகமா இருக்கு. அடியேய்! நீ வேற அவனுகளுக்கும் சேர்த்து போடாத… பேசின காசை கொடுத்தா போதும். அதுக்கே சலாம் போட்டு வாங்கிட்டு போவானுங்க, புரியுதா?”

“புரியுது சாமி. புரியுது” விஜயா முனகிக்கொண்டே உள்ளே சென்றாள்.

அடுத்தவிரு மணி நேரங்களிலேயே புல்புதர்கள் அகற்றி செப்பனிடப்பட்டு, பாத்ரூமில் இருந்து வரும் தண்ணீர் வரத்து சரி செய்யப்பட்டு, ஓரமாய்க் கிடந்த செம்மண்ணை வெட்டி செடி கொடிகளுக்குப் பரத்தி எனத் தோட்டம் பளிச்சென்றானது. விஜயாவால் நம்பவே முடியவில்லை. “அட, நம்ம தோட்டமா இது?” என்று சுற்றிச் சுற்றி வந்தாள்.

மதிய உணவுக்குக் கூட அவர்கள் நேரம் எடுக்கவில்லை. பத்தே நிமிடத்தில் கொண்டு வந்த உணவை வேகமாகக் கொத்தி தின்றுவிட்டு, “அடுத்த வேலைங்க சார்” என்று வந்து நின்றனர்.

மாலை நான்கு மணிக்குள் விஜயா சொன்ன சமையலறைக் குழாய் அடைப்பு, காரை பெயர்ந்த இடங்களைப் பூசுவது, நெடுநாட்களாக ஒழுகிக் கொண்டிருந்த பைப்பை சரி செய்வது என்று நிறைய சில்லறை வேலைகளும் நடந்துவிட்டன. வேலை நேரம் முடிந்தும் செல்லாமல் மாடிக்குச் சென்று ரூம் அளவுகளை அளந்து குறித்து விட்டுதான் இருவரும் கிளம்பினார்கள்.

“மாடா உழைக்கிறானுங்க. ஒரு டம்ளர் டீ தர உங்களுக்கு மனசு வரல” விஜயா முனக, “கடைசியாக போகும்போது அஞ்சு பத்து சேர்த்து கொடுக்கலாம். நீ சும்மா இழுத்து விடாதே. அப்புறம் அதுவே வழக்கமாகிடும்” என்றார் நவகீர்த்தன்.

“சரியான கஞ்சமகாப்பிரபு!” நவகீர்த்தன் அவளைச் சட்டை செய்யாமல் சட்டையைப் போட்டிக் கொண்டவர்களிடம் சென்றார்.

“நாளைக்கு காலைல சீக்கிரம் வந்துடணும். வெயிலுக்கு முன்னாடி ஆரம்பிச்சாதான் வேலை ஒழுங்கா நடக்கும், புரியுதா? இப்ப கிளம்புங்க”


தலையாட்டியவர்கள் தயங்கி நின்றனர்.

“என்ன?”

“இன்னிக்கி கூலி…”

“பரசுட்ட கொடுக்கிறதாதானே பேச்சு. அவன்கிட்ட வாங்கிக்குங்க”

“சார்” அப்போதும் கிளம்பாமல் நின்றபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், அவருடைய கறார் முகம் கண்டு வேறுவழியின்றி புறப்பட்டனர்.

“பாதிக்குப் பாதி கொடுத்தா என்ன? ரொம்ப பண்றீங்க”

“உனக்கொன்னும் தெரியாது, சும்மா இரு. ஊர் பேர் தெரியாதவனுங்க யார் எப்படினு சொல்ல முடியாது. வாங்கிட்டு அப்படியே கழண்டுகிட்டா? நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்” விஜயாவிடம் வள்ளென்று விழுந்தவர், தூரத்தில் வரும் பழகிய ஸ்கூட்டர் சத்தத்தில் புன்னகைத்தார்.

“நம்ம கணேசன் வர்றான் போல”.

வந்தது அவர் நினைத்தது போலவே அவருடைய பால்ய நண்பர் கணேசன்தான். பணி ஓய்வுக்குப்பின் இந்த ஏரியாவிலேயே கணேசனும் அபார்ட்மெண்ட் வாங்கி வந்துவிட, வாரமொருமுறையாவது சந்தித்து விடுவார்கள்.

“எப்படி இருக்கப்பா?” நல விசாரிப்புகளுக்கு இடையே விஜயா தந்த காபியை அருந்தி அளவளாவியவர்கள் அப்படியே வாசலில் அமர்ந்துவிட்டார்கள்.

“இடம் ஜோராகிடுச்சே” செம்மையாகத் தெரிந்த சுற்றுப்புறத்தைக் காட்டிக் கேட்டார் கணேசன்.

“ஆளுங்க வந்தாங்க சுத்தம் பண்ண” என்ற நவகீர்த்தன், மாடியில் செய்யவிருக்கும் வேலைகள் பற்றியும் சொன்னார்.

“நல்லதுதான். கையோட செஞ்சுடு. பையனும் மருமகளும் நல்லா இருக்காங்களா? பாஸ்டன் எப்படி இருக்காம்?” என்றார் கணேசன்.

நவகீர்த்தன் சுரத்தில்லாமல் “ம்ம்”மென்றார்.

“லீவுக்கு வர்றாங்களா?”

“இல்லப்பா. இருக்குற விசா பிரச்சனைல அவன் வர்றது கஷ்டம். பார்க்கணும்னா நாங்கதான் போகணும் போல. அவனும் வர சொல்றான். போனமுறை எங்களுக்கு எடுத்த விசா காலாவதியாகாம இருக்குல்ல”

“சந்தோசமா போய்ட்டு வாங்களேன். என்னப்பா ஏதாவது விசேஷமா?”

“விசேஷமொன்னுமில்ல கணேசா. இப்பதான் குழந்தை பிறந்தாலும் அந்த ஊரு சிட்டிசன் இல்லன்னு சொல்றாங்களே. அதுவொரு கொடுமைனா இவன் வேலைலயும் சங்கடமான நிலைமை. போன வாரம் ரொம்ப மனசு கஷ்டப்பட்டு பேசினான். நீ ஒன்னும் கவலைப்படாத. எல்லாம் சரியாகும். நானும் அம்மாவும் வந்து கொஞ்ச நாள் இருக்கோம்னு தைரியம் சொன்னேன்”

“ஏன், என்னாச்சு? பிரமோஷன் வரப்போகுதுனு அன்னைக்கு சந்தோசமா சொல்லிட்டுருந்தியே?”

“அதுலதான்பா பிரச்சனையே. கடைசி நிமிஷத்துல அந்த ஊரு ஆளுக்கே குடுத்துட்டானுங்க போல. நம்ம பசங்களுக்கு என்ன திறமை இருந்தாலும்… ப்ச்.. நிறம் இருக்குது பாரு, நிறம். அதுதான் முன்ன வந்து பேசுது. இதெல்லாம் வெளில தெரியாதுப்பா. உள்ளுக்குள்ளயே ஊறுற விஷம். ப்ச்..எவ்வளவு உழைச்சாலும் அதுக்குரிய மதிப்பு கிடைக்கலையேன்னு ரொம்ப கவலை பையனுக்கு”

“என்னப்பா இது? அமெரிக்கானாலே ஆயிரத்தெட்டு பிரச்சினையா இருக்கு இப்ப”

“அதையேன் கேட்குற? இஷ்டத்துக்கு எல்லாத்துலயும் கைவச்சு மாத்த அமெரிக்கா என்ன இவனுங்க அப்பன் வீட்டு சொத்தா? எங்கெங்க இருந்தோ வந்த ஜனங்க கட்டமைச்ச நாடுதானே அது. வந்தேறிகள் உருவாக்கிய நாடுனு தான் சொல்வாங்களே. என்னமோ இவனுங்கதான் பூர்வக்குடி மாதிரியும், வெளிலருந்து வந்தவங்க அகதி மாதிரியும் தள்ளிவைக்கிறது என்ன மாதிரியான மனநிலை பாரு… சொல்லப்போனா ஆதிகுடிகளா இருந்த செவ்விந்தியர்களை விரட்டிட்டு முகாம் போட்டவங்கதான் இப்ப இருக்குறவங்க. இதுல அடுத்தவனுக்கு மட்டும் ஆயிரம் சட்டதிட்டம் சொல்லிட்டு…”

“அதைச் சொல்லு” கணேசன் ஆமோதித்ததில் நவகீர்த்தனின் ஆவேசம் அதிகரித்தது.

“சொல்லப்போனா இந்தப் பூமிக்கு யாருப்பா எல்லைக்கோடு விதிக்க முடியும்? காத்தும், மண்ணும், மழையும், கடலும் எல்லாருக்கும்தானே சொந்தம். யாரும் எங்கயும் போய் பிழைக்கலாம். திறமையிருந்தா பெரிய இடத்துக்கு வரலாம். அதுதானே நியாயம். தர்மம். இவனுங்க யாரு இஷ்டத்துக்கு கோடு வரைஞ்சு ‘நீ வா, நீ வராதே, நீ கீழ போ, நீ மேல வா’னு சொல்ல? என்னவொரு அதர்மம் பாரு. நாள் போகப்போக மனுஷ புத்தி முன்னேறிப் போகாம பின்னாடிதான் இழுத்துட்டுப் போகுது. உலகமே பிற்போக்கா ஓடுற மாதிரியிருக்கு” அவர் பொரிந்து தள்ள…

வீட்டுக்குள்ளிருந்த விஜயா மட்டுமல்ல, அவரது பேச்சை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்த மண்ணும், காற்றும், மரங்களும், அகன்ற ஆகாயமும் கூட, ‘அட! என்ன அறம்! இதுவல்லவோ அறம்!’ என்று தங்களுக்குள் தலையாட்டிச் சிரித்துக் கொண்டன.

[email protected]

The post விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி

“நமஸ்காரம். நான் சங்கரன் பேசறேன். ஞானவாபில நம்ம நம்பர் குடுத்தா. சார் வாசுதேவன் தானே?”

“திதி என்னிக்கு வருது?”

“கார்த்திகை மாசத்துல, பௌர்ணமி கழிஞ்ச பஞ்சமி திதியா?”

“நவக்கிரஹ ஹோமமுமா?”

“கம்ப்ளீட் பேக்கேஜா கேக்குறேளோ?”

“காசென்னன்ணா ஆகப் போறது? அப்பாக்கு மனசார செய்றதுலன்ணா ஷேமம். இந்த காலத்துல யார் பண்றா? எள்ளு வாங்க யோசிக்கற ஜெனரேஷன். என்னமோ சொல்றாலே… ஆங்.. ஜென்-ஸி!”

“ஞானவாபில அமௌண்ட் சொல்லிட்டாளா? பேருதான் ஞானவாபி. யதார்த்தமா அது ஞான லாபி. நீங்க அவா வழியா வந்தேள்னா ஆகறத விட என்கிட்ட நேரடியா சொன்னா முப்பது பெர்சண்ட் கம்மியாகும்”

“அதெப்படியா? ஜாமானுக்குனு ஒரு அமௌண்ட் சொல்லுவா. அது ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். அதுல பாதி ஜாமான் மிச்சமாகும். எல்லாம் ஞானவாபிக்கு போய்டும்! நானா இருந்தேன்னா என்ன தேவையோ அத மட்டும் வாங்கிண்டு வருவேன். அவா வழியா வர்றேள்னா எனக்கான தட்சணையும் பிடிச்சுண்டுதான் கெடைக்கும். நேரடியா எங்கிட்டயே சொன்னேள்னா கணக்கு வேற. ஒரு பிராமணா பசிய போக்குன கணக்காவும் உங்களுக்கு புண்ணியம் வரும்”

“பேஷ்! பண்ணிடலாம். ஜாமான் நானே வாங்கிண்டு வந்துடறேன். காலம்பற சாவகாசமா ஒரு எட்டரைக்கு ஆரம்பிச்சுடலாம். எட்டு மணிக்கு வந்துட்டா அரேஞ்ச் பண்ண வசதியா இருக்கும்”

“ஹோமத்துக்கு பதினாரு செங்கலும் அரை மூட்டை மணலும் வேணும். சவுரியமா?”

“ஒண்ணும் சிரமமில்ல. வர்ற வழில ஏற்பாடு பண்ணிடலாம்”

“பெரிய ரூல்ஸ் எல்லாம் இல்லை. பையனுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு. அதுவும் திதி முடிச்ச பெறகுதான். காலைல கண்டிப்பா கெடையாது. நைட் பசிச்சதுன்னா பட்சணம், ஸ்நாக்ஸ் சாப்டுக்கலாம். அப்பா ஆத்மா பசியார்ற வகைல சிறப்பா செஞ்சிடலாம்”

***

எட்டு மணிக்கு டி.வி.எஸ் – எக்ஸ்.எல்லை வீட்டின் வாசலில் நிறுத்தினார். பொறித்த அப்பளங்களும் சிறு பாக்கெட்களில் திண்பண்டங்களும் கொண்டு விற்பவனின் வண்டி போல அது பொருட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இரண்டடுக்கு வீட்டை மேலும் கீழுமாக பார்த்தார். தூசிக்கு இடமன்றி மிளிர்ந்து கொண்டிருந்தது. வராந்தாவில் நின்றுகொண்டிருந்த மினி கூப்பர் காரின் மீது படாமல் சாமான்களை வீட்டிற்குள் எடுத்து வந்தார். கொண்டு வந்த சாமான்களை வீட்டின் மைய அறையில் பரப்பி வைத்துக் கொண்டிருந்தார். கைகளின் லாவகத்திற்கு ஏற்ப கண்கள் வீட்டிலிருந்த பொருட்களின் மீது மேவின. பளபளக்காத மார்பில்களால் தரை பாவப்பட்டிருந்தது. பாதி திரையரங்கை நினைவூட்டும் தொலைக்காட்சியும், பார்த்த மாத்திரத்தில் அசதி நீங்கும் ரெக்லைனரும் பொறாமைத் தீயின் திரியைப் பற்ற வைத்தன. மனதிற்குள் தொகையை சற்று அதிகமாக கேட்டிருக்கலாமோ என்று யோசித்தார்.

சமையலறையிலிருந்து வந்த மைதிலி சங்கரனுக்கு வணக்கம் வைத்தாள்.

“டீ காபி எதாவது சாப்பிடுறீங்களா?”

மொழியில் பிராமண வாடை சிறிதும் வீசாமல் இருந்தது. சங்கரனுக்கு சின்னதான அசௌகரியமும் தொற்றியது.

“காலம்பற பட்டினிதான். திதி முடிச்ச கையோட சாப்பிடறேன். திதிக்கு சாப்பாடு என்ன செஞ்சிருக்கேள்?”

“வாசுதேவன் ஆர்டர் போட்டிருக்கார். லெவனுக்கு வந்துரும். டிலே எதுவும் இருக்காது”

“பேஷ்! நான் போய்ட்டு செங்கல்லும் மண்ணும் எடுத்துண்டு வந்துர்றேன். குக்கர்ல சாதம் மட்டும் வச்சிருங்கோ. குழைவா வந்தா பேஷ். இது படைக்கறதுக்காக கேக்கறேன்.”

வாசலில் வாசுதேவன் நடைபயிற்சி முடித்து திரும்பியிருந்தார். சங்கரனை அடையாளம் கண்டவராய் வணக்கம் வைத்தார். மைதிலியின் அதே கேள்விகளும், அதே விதமான பதில்களுமாய் உரையாடல் முடிந்தது. வாசுதேவன்-மைதிலி தம்பதியருக்கு வயது நாற்பதுகளில் இருக்கக்கூடும் என்று அனுமானித்தார். எந்த பிராமண வீட்டிற்கும் காரியமாக செல்லும்போதும் தன்னை ‘மாமா’ எனும் அடைமொழியுடன் அழைப்பது சங்கரன் அறிந்திருந்த வழக்கம். மரியாதை நிமித்தமாக அர்த்தம் பெறும் சொல். அதன் வழியே அந்த வீட்டுடன் சங்கரன் சகஜமாகி விடுவார். இங்கோ அந்நியமாகவே உணர்ந்தார். வாசுதேவன் குடும்பத்தாரின் வேர்கள் மட்டுமே பிராமண சம்மந்தமாக இருந்தது. பழக்கங்களும் வழக்கங்களும் அதன் சாயலை இழந்திருந்தன.

செங்கல்லும் மணலும் வாங்கிக்கொண்டு திரும்பினார். வரும் வழியிலேயே அன்றைய செய்தித்தாள் ஒன்றும் வாங்கிக்கொண்டார். மனதுள் கேள்விகள் ஓடின.

அந்த வீட்ல நியூஸ்பேப்பர் இருக்குமா?

அவாளப் பாத்தா நியூஸ் பேப்பர் படிக்கிறவா மாதிரி தெரியலையே?

அவா ஏன் நியூஸ் பேப்பர் படிக்கணும்? இவ்வளவு வருமானம் வந்தா வரி இல்லைனு வர்ற நியூஸ்ஸுக்கும் இவாளுக்கும் என்ன சம்மந்தம் இருக்கப் போறது? இவா எகனாமிக் டைம்ஸ் வாங்கறவாளா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதுக்கும் நாமளே வாங்கிண்டு போறது சாமர்த்தியம்!

அஷ்ட லட்சுமியும் ஒரே வீட்ல ஏன் குடியிருக்கா? நம்ம அட்ரெஸ்லாம் அவ கண்லயே படாதோ?

பகவான் பக்கத்துல ஆரத்தி எடுக்கறவாளுக்கும் ஸ்பெஷல் தரிசனத்துல வர்றவாளுக்கும் கடாக்‌ஷத்துல எப்பவுமே பாரபட்சம்தான்!

வண்டியை நிறுத்திவிட்டு வாசலை கவனித்தார். சாலை மூளியாக இருந்தது. ஒத்தாசைக்கு கிருஷ்ணமூர்த்தி இருந்தால் தேவலை என்று பெருமூச்சு விட்டார். கிருஷ்ணமூர்த்தி தங்கை மகன். தங்கை மற்றும் தங்கையின் கணவருடைய மறைவிற்கு பிறகு சொந்த மகனாக வளர்க்கிறார். சங்கரன் கிருஷ்ணமூர்த்திக்காக திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவனுக்கு படிப்பு வரவில்லை. பாடசாலையிலும் தத்தி. எடுபிடிக்காக இருக்கட்டும் என்று ஞானவாபிக்கு உடன் அழைத்துச் சென்றார்.

ஞானவாபி பிராமணர்களுக்கான சிறு நிறுவனம். வேதங்களைப் பயிற்றுவிக்கும் பாடசாலை. அத்துடன் பல்வேறு விதமான ஹோமங்களுக்கும், சிரார்த்த வேலைகளுக்கும், திருமண வைபவங்களுக்கான குருக்களுக்கும் பிராமணர்கள் ஞானவாபியை அணுகுவர். பிராமண உட்பிரிவுகளான நான்கு வேதங்களுக்கும் மந்திர உச்சாடனங்கள் மாறுபடும். அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார் சங்கரன். தங்கை மரணிக்கும் வரை அனைத்து விதமான ஆசார அனுஷ்டானங்களையும் முன்னின்று நடத்தினார். மறைவிற்கு பிறகு சிரார்த்தம் மட்டுமே செய்ய ஒப்புக்கொண்டார். அவரின் இந்த முடிவு ஞானவாபியில் உள்ள பிற குருக்களுக்கு முதலில் அதிர்ச்சியளித்தது. ஆனாலும், சங்கரன் முடிவில் எந்த மாற்றமுமில்லை. சங்கரனின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கப் போகிறார்கள் எனும் அர்த்தத்தில் பிற குருக்கள் விரைவிலேயே ஆசுவாசம் அடைந்தனர். சங்கரன் பணியற்று இருக்கும் நேரங்களில் தங்களுக்கு வரும் சிரார்த்த காரியங்களை அவருக்கு கொடுக்கவும் அவர்கள் தவறுவதில்லை. தொடர்ந்து கிடைத்த சிரார்த்தங்களில் சங்கரனுக்கு காலம் ஓடியது.

சங்கரனே முயன்று பார்த்தும் கிருஷ்ணமூர்த்திக்கு மந்திரங்களும் முறைமைகளும் மனனம் ஆகவில்லை. சங்கரன் கேட்காத வண்ணம் பலர் அசமந்தம் என்று குறிப்பிடுவர். சங்கரன் காதில் விழும்போது மனக்கிலேசம் அடைவார். அதற்காக யாரிடமும் முரண்பட்டதில்லை. சங்கரனும் வாய்ப்புள்ள நேரமெல்லாம் கிருஷ்ணமூர்த்தியை அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஞானவாபியிலுள்ள பிற குருக்களும், சிரார்த்தம் செய்கிறவர்களும் கிருஷ்ணமூர்த்தியையோ அல்லது எடுபிடிகளுக்காக இருப்பவர்களையோ அழைக்கும் போது தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை அளிக்க வேண்டும். சங்கரன் ஒரே வீட்டில்தானே வசிக்கிறோம் எனும் சலுகையைக் காட்டி கொடுப்பதில் குறைத்துக் கொள்வார். வாசுதேவன் வீட்டு வாசலிலிருந்தே அலைபேசியில் அழைத்துப் பார்த்தார்.

“கிட்டு, வரமுடியுமா?”

“இங்கதான் செகண்ட் அக்ரஹாரம் தாண்டி பங்களா தெருக்கு”

சிறுவயது முதலே அழைத்து வந்ததால் சங்கரன் மட்டும் கிட்டு என்று அழைப்பது பழக்கமானது. முன்னர் வாங்கி வந்த பொருட்களுக்கு அருகில் செங்கல்லையும் மணலையும் வைத்தார். வாசுதேவன் நடைபயிற்சி செய்த உடையுடனும், மைதிலி சுடிதார் ஒன்றிலும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதற்கான சாத்தியம் கொண்ட பொருட்கள் எதுவும் பார்வையில் தட்டுப்படவில்லை. நேரம் எட்டரையாகியிருந்தது. வாசுதேவனின் அலைபேசியில் எட்டரைக்கு அலாரம் ஒன்று அடித்தது.

“ஆரம்பிக்கலாமா?”

வாசுதேவனுடைய குரலில்தான் எத்தனை தோரணை!

“நீங்க டிரஸ் மாத்திண்டு வந்துருங்கோ. கிட்டு வர்றேன்னு சொல்லிருக்கான். வந்தவொடன ஆரம்பிச்சிடலாம்”

மைதிலியைப் பார்த்து, “பஞ்ச பாத்திரம், வெண்கல சொம்பு, ஒரு அஞ்சு தாம்பாளம் வேணுமே?”

சமையலறையிலிருந்து தூசி படர்ந்திருந்த மூட்டையொன்றை தூசி மேலே படாதவாறு எடுத்துவந்து சங்கரனுக்கு அருகில் வைத்தாள்.

“போன வருஷம் செஞ்ச பாத்திரம். அப்படியே பேக் பண்ணி வச்சிட்டோம்”

“பேஷ்! நான் எடுத்துக்கறேன்”

கிட்டுவின் வருகை ஆசுவாசப்படுத்தியது. வாசுதேவன் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சங்கரன் பார்த்தவுடன் பள்ளி மாணவனைப் போல, “எனக்கு பஞ்சகச்சம் கட்டத் தெரியாது”

எத்தனை முறை கேட்ட சொற்கள் இவை. ஹோமங்களுக்கு செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வயது நிரம்பிய தலைமுறையின் கோரிக்கை. பலருக்கு சங்கரனே கட்டி விட்டிருக்கிறார். வெற்றுடம்பும், தொந்தியும், சில நேரங்களில் வியர்வையும், இடுப்பற்ற ஒல்லியான தேகங்களும் நினைவில் மண்டின. கட்டிப் பழகிய சங்கரனின் கைகளுக்கு கட்டிவிடுவது பொருட்டே அல்ல. ஆனாலும் நினைவில் ஓர் வியர்த்தம். வாசுதேவனைப் பார்க்கும்போதும் மனதுள் குமுறல்கள் ஓடியது.

இவ்ளோ சம்பாதிக்கறா? மார்பிளால இழைச்சிருக்கா? ஒரு பஞ்சகச்சம் கட்டத் தெரியாதா? சம்பாதிக்க கத்துகிட்ட விஷயங்கள்ள கடுகளவு இருக்குமா பஞ்சகச்சம் கட்ற வேலை? காசு சேந்துட்டா பிராம்ணாவா இருக்கறது வேற ரூபம் எடுத்துடறது!

உள்ளுக்குள் ஓடும் உரையாடலிலிருந்து விடுவித்துக் கொண்டு வாசுதேவனைப் பார்த்தார்.

“பரவாயில்லை சார். வெறுமனே வேஷ்டி கட்டிண்டு வாங்கோ”

மைதிலிருக்கு நிச்சயம் மடிசார் கட்டத் தெரியாது என்று அனுமானத்திற்கு வந்திருந்தார். அதனாலேயே எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. ஹோமம் வைப்பதற்கான இடத்திற்கு அடியில் கண்யா கோலம் போடத் தெரியுமோ? ஏன் வீணாய் கேட்டுக் கொண்டு என்று மைதிலியைப் பார்ப்பதையே தவிர்த்தார். மைதிலி வைத்த மூட்டையில் பித்தளையும் செம்பும் நிறம்மாறத் துவங்கியிருந்தன.

“கிட்டு, இன்னிக்கு வேலை செத்த ஜாஸ்தி. சலிச்சுக்காம செய்யணும். கேட்டியோ?”

வேலைகள் செய்வதில் கிட்டு கெட்டிக்காரன். சங்கரனிடம் கெட்ட பெயர் வாங்கக்கூடாது எனும் வைராக்கியம் எப்போதும் அவனிடம் இருக்கும்.

“ஒரு கிண்ணத்துல புளியும், குடிக்க ஜலமும் கிடைக்குமா?”

கிருஷ்ணமூர்த்தியிடம் பணிக்கான கட்டளைகளை இடத் துவங்கினார். பாத்திரங்களை புளியை வைத்து சுத்தமாக்கி தருவதும் முடித்த கையுடன் ஹோமத்திற்கான கண்யா கோலமிடுவதும் முதற்கட்ட பணியானது. வீட்டில் எங்குமே பெரியவர்களின் புகைப்படம் இல்லாமலிருந்தது. அப்பாவின் புகைப்படத்தைக் கேட்டவுடன் உள்ளறையிலிருந்து வாசுதேவன் துடைத்துக் கொடுத்தார். நெற்றி நிறைய திருநீற்றுடன் அவர மிக அழகாகத் தென்பட்டார். அப்புகைப்படத்தை சங்கரன் ஒருமுறை துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு தரையில் அதனை நிற்க வைத்தார்.

கிருஷ்ணமூர்த்தி சுத்தம் செய்வதற்குள் சந்தனத்தில் பிள்ளையார் பிடிப்பதும், மலர்களை ஒழுங்கிபடுத்தி வைப்பதும் செய்து முடித்தார். பதினைந்து நிமிடத்தில் ஹோமத்திற்கான இடங்கள் அனைத்தும் ஏற்பாடாகின. வாசுதேவன் வந்தமர்ந்தவுடன் மந்திர உச்சாடனங்களுடன் சிரார்த்தத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு சொல்லிற்கும் கைகளை எங்கு வைக்க வேண்டும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு சொல்வதைப் போல விரிவாக எடுத்துரைத்தார். வாசுதேவனுக்கு மந்திரங்கள் அட்சர சுத்தமாக சொல்ல இயலவில்லை என்பதும் சங்கரனுக்கு சங்கடமானது. அப்பாவிற்கு சிரார்த்தம் செய்ய வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதே எனும் சிந்தனையே அன்று நிகழும் சடங்கில் சங்கரனுக்கு சமாதானமாய் அமைந்தது.

“அப்பா பேரு?”

“நாராயணன்”

“அம்மா?”

“விசாலாஷி”

வாசுதேவனின் முகபாவத்தில் இருவரும் இல்லை என்பதை புரிந்து கொண்டார். அப்பா வழி மூத்தோர் இரண்டு தலைமுறைப் பெயர்களையும் விசாரித்தார்.

“தாத்தா-பாட்டி பேரு ஷேஷாத்ரி – ருக்மணி. அவங்க அப்பா அம்மா பேரு தெரியலையே”

சங்கரனுக்கு அடுத்த சங்கடம். மூன்றாம் தலைமுறையின் பெயர் தெரியாமல் இருப்பது அவர் செல்லும் வீடுகளின் மற்றொரு வாடிக்கை. அப்படித் தெரியாது என்று சொல்லும் இடங்களில், “ராமச்சந்திரா! என்ன ஜெனரேஷனோ. ஒண்ணும் சொல முடியாது. நாங்கல்லாம் அஞ்சு தலைமுறை பேரு தெரிஞ்சு வச்சிருப்போம். இப்ப ஒரு தலைமுறை ஞாபகம் வச்சுக்கறதே பெரிய விஷயமாப் போயிடுத்து!”

அதேபோன்று இன்றும் சொல்லத் தோன்றியது. ஆனால், தைரியம் வரவில்லை.

“நம்ம அப்பாவ வழியனுப்பி வைக்கறோம். மூணு தலைமுறைக்கு சேத்தாப்ல இந்த சிரார்த்தம். அப்பாக்கு செய்றப்போ கொள்ளு தாத்தா பரலோகம் போய் சேந்துடுவார். தெய்வத்தோட ஐக்கியம் ஆகிடறார். ஐக்கியமாற எடத்துல பேருக்கு அர்த்தம் என்ன இருக்கு! தெய்வத்தோட பேரே வச்சிடலாம். எல்லாம் தெய்வக் கணக்கு!”

வாசுதேவனின் கொள்ளுத் தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டியின் பெயராக பெருமாள்-லக்ஷ்மி என்று குறிப்பிட்டார். லக்ஷ்மி எனும் சொல்லைக் கேட்டவுடன் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் கண்ணீர் துளிர்ப்பதைக் கவனித்தார்.

“சிரார்த்தம் முடியப் போறது. வாசல தெளிச்சு பெருசா கன்யா கோலம் போடணும். அதுக்குத் தேவையான ஜாமான எடுத்து வைடா கிட்டு”

கண்ணீர் தளும்புவதை பிறர் பார்க்க விரும்பாதவனாய் ஒதுங்கி, தலைகுனிந்தவாறு நடந்தான். கொள்ளுத் தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டியின் பெயரை அடிக்கடி சொல்ல வேண்டிய நிர்பந்தம் சிரார்த்தத்தின் முறைமையில் ஏற்பட்டது. மூன்று கையளவு உருண்டையாக சோற்றைப் பிடிக்க வேண்டும் என்று மைதிலியிடம் கூறினார். சுடுசோற்றில் மைதிலியின் கைகள் நடுக்கமெடுத்தன. இரண்டொரு நிமிடம் காத்திருந்தார். பின் சாதம் இருந்த தாம்பாளத்தை தன் பக்கம் இழுப்பதாக பாவனை செய்தார்.

“எல்லாம் ஒரு பாவனைதான். நீங்கதான் பிடிக்கணும். உருண்டை செதறவும் கூடாது. அது பெரியவாளுக்கு ஆகாது. நான் உருண்டை பிடிச்சுடறேன். நீங்க கடைசியா ஒரு தடவ மேலாப்ல ஒரு தடவ உருட்டிட்டு வச்சாப் போதும்”

உள்ளங்கையில் எள்ளை வைத்துக் கொள்ளச் சொன்னார். பின் உத்தரீணியில் நீரை எடுத்து எள்ளை வழிந்து மூன்று உருண்டை சாதத்தின் மீது விழும் வகையில் செய்கையை பாவனை செய்தார். எள் சோற்றுருண்டையின் மீது படர்ந்தது.

“ஒவ்வொரு ஆத்மாவும் சாப்டதுக்கு சமம். அவா வயிறு நிறைய உங்க வீட்ல செல்வம் சேரும்”

ஒவ்வொரு உருண்டையின் மீது பாவனையை நிகழ்த்தும் போதும் அது யாருக்கானது என்று தம்பதிகளின் பெயரை உச்சரித்தார். கடைசி உருண்டையின் மீது செயல்படுத்தும்போது

“கேசவபெருமாள்-சீதா லக்ஷ்மிக்கு”

என்று கூறினார். சிரார்த்தத்தின் இடையே அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவனிடமும் மைதிலியிடமும் பெயர் மாற்றம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வாசல் கதவிடையே அடுத்தகட்ட பணிக்கான ஆணைக்காக காத்திருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் திடுக்கிடல் தென்பட்டது. சங்கரனைக் கோபமும் ஆதுரமும் கண்ணீரும் நிறைந்த பார்வையில் பார்த்தான். சங்கரன் கட்டுப்படுத்தி கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்காமல் பார்வையைத் தவிர்த்தார்.

“சிரார்த்தம் முடிஞ்சது. கிட்டு இத எல்லாம் ஒரு பக்கெட்ல எடுத்து வாசல்ல வச்சிரு. வாசல தெளிச்சு பெருசா கன்யா கோலம் போட்ரு. முடிச்சிட்டு சொல்லு. நவக்கிரஹ ஹோமத்தை ஆரம்பிச்சிடலாம்”

சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டு காபியைப் பருகினார். சத்தமான மந்திர உச்சாடனங்களுடன் ஹோமத்தை செய்து முடித்தார். வீட்டிலுள்ளவர்களை அவர்தம் ராசி நட்சத்திரங்களைக் கூறி ஆசிர்வதித்தார். தட்சணை அளிக்க வேண்டிய பகுதி வந்தது. முன் கூறிய பணத்தை ஏற்கனவே ரொக்கமாக எடுத்து வைத்திருந்தனர். அளிக்க முன்வரும்போது, “பண்ணதுலயே சிறப்பான நவக்கிரஹ ஹோமம் இதுதான். பகவான் அனுக்கிரஹம் நன்னா இருக்கறது. சரஸ்வதி என் நாக்குல சாஷ்டாங்கமா உக்காந்துட்டா. இல்லாட்டி அட்சரம் பிசகாம இப்படி ஸ்லோகம் வருமோ! ஏண்டா கிட்டு இத மாதிரி கணீர்னு ஒரு ஹோமத்த கடைசியா எப்ப பண்ணோம்?”

சத்தமாக சிரித்துக்கொண்டே, “பாருங்கோ மாமா, சின்னப்பயல் இந்த கிட்டு. எங்கூடதான் எல்லா ஹோமத்துக்கும் வர்றான். அவனால யோசிக்கவே முடியல. ஹோமம் பண்றச்ச அவன பாத்தேனே. கண்ல தண்ணியா கொட்றது. அதென்ன ஹோமப் பொகைனாலயா? அனுக்கிரஹம். சொன்னா என்னைய காமெடி பண்ணுவா. பகவானே பகடிதான் இந்தக் காலத்துல”

பேசிக்கொண்டே தட்சணை அளிக்க வேண்டிய தாம்பாளத்தை வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் சகிதமாக தயார் செய்தார். ரொக்கத்தை எப்படி இரண்டாகப் பிரிக்க என்று வாசுதேவன் காதில் கூறினார். அதை அவர்கள் பிரித்து வைக்கும்போது, “விட்டா நான் கண்டத பேசிண்டே இருப்பேன். சொன்னததான் தரணும்னு இல்லை. பாத்து செய்ங்கோ மாமா. எங்க வயித்துக்கும் உங்க தோப்பனார்தான் இன்னிக்கு அதிபதி”

வாசுதேவன் பர்ஸிலிருந்து மேலும் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை இரண்டு தட்டுகளிலும் சேர்த்தார். சிரித்துக் கொண்டே சங்கரனும் கிருஷ்ணமூர்த்தியும் பெற்றுக் கொண்டனர். ஹோமத்தின் கடைசியில் சங்கரன் தம்பதியை ஆசிர்வதித்தார். காகத்திற்கு சோறுவைத்து விட்டு வரச் சொன்னார்.

பிராமணனுக்கு அன்னமிடும் வழக்கத்தை சுருக்கிக் கொண்டு சிரார்த்தம் செய்பவருக்கு இட்டுக் கழிப்பதாக காலப்போக்கில் முறைமை மாறியிருந்தது. சங்கரனும் கிருஷ்ணனும் வரவழைத்திருந்த உணவை வயிறார சாப்பிட்டனர். கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து மட்டும் சாப்பிடும் போது அசௌகரியம் தென்பட்டது. மைதிலி அதைக் கவனித்தவாறு, “சாப்பாடுல ஏதவது கொறையா?”

சங்கரன் புரிந்துகொண்டவராய் பதிலளிக்க முந்தினார்.

“சாப்பாட்டா? இது அமிர்தம். அவன் வயிறு சுண்டக்காய் வயிறு. வீட்லயே காக்காய்க்கு வைக்கற அளவுக்குதான் அவன் சாப்பிடுவான். இவ்ளோ பட்சணம் பாத்தா கண்லயே பசியாறிடுமே. சாப்பிடறது கொஞ்சம் கஷ்டம்தான்”

சங்கரனின் பகடி சிரிப்பை வரவழைத்து சூழலை மாற்றியது. சாப்பிட்டவுடன் இலைகளை எடுப்பதில் மைதிலியிடம் விருப்பமின்மை தென்பட்டதால் கிருஷ்ணமூர்த்தியிடமே கூறி வாசலிலிருந்த முன்னோர்களுக்கான உணவுடன் சேர்க்கச் சொன்னார். சிரார்த்தம் முழுதுமாக முடிந்தவுடன் சின்ன இடைவெளிவிட்டு ஹோமம் நிகழ்ந்த இடத்தைச் சுட்டினார்.

“சாயங்காலம் அணைஞ்சிடும். அப்ப சுத்தம் செஞ்சிருங்கோ. செங்கல் ஓரமா வச்சிருங்கோ. வருஷா வருஷம் தேவைப்படும். சிரமமா இருந்தா சொல்லுங்கோ.. சாயரச்சே வந்து நானே எடுத்துண்டு போயிர்றேன்.”

“பரவாயில்லை” என்று கூறி வாசுதேவன்-மைதிலி தம்பதியினர் விடைகொடுத்தனர்.

வாசலில் இருந்த மூத்தோர்களுக்கான உணவை பொதுக்கழிவு நீருடன் கலந்தார்.

“ஆத்துல கரைச்சா கோடி புண்ணியம். ஆனால், ஆறு இருக்கவே ஊர்க்காரா கோடி புண்ணியம் செஞ்சிருக்கணுமே!”

முன்னோர்களின் உணவு வைத்திருந்த பக்கெட்டைக் கழுவி கிருஷ்ணமூர்த்தி ஒப்படைத்தவுடன் இருவரும் கிளம்பினர். வீடுவரை சங்கரனும் கிருஷ்ணமூர்த்தியும் பேசாமல் பயணித்தனர். வீடு வந்தவுடன் கிருஷ்ணமூர்த்தியை மட்டும் இறங்கச் சொன்னார். வாசல் கதவைத் திறக்கும் வரை காத்திருந்துவிட்டு வீட்டிற்குள் சென்றார். தங்கையின் குடும்பப் புகைப்படத்தின் முன் இருவரும் நின்றனர். தனக்கு அளித்த தொகையையும் சேர்த்து கிருஷ்ணமூர்த்தியிடமே கொடுத்தார். கிருஷ்ணமூர்த்திக்கு வெடித்து அழ வேண்டும் என்று தோன்றியது. சங்கரனுக்கு தங்கையின் புகைப்படத்தைப் பார்க்க மனமில்லாமல் வாசல்பக்கம் திரும்பினார்.

“அவா மட்டும் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா ஏன் பேர மாத்தி சொன்னீங்கன்னு கேட்ருப்பா?”

“நானா சொல்லல கிட்டு. தானா அப்படி வர்றது. சொந்த தலைமுறை பேரு தெரியாதவாளுக்கு லக்ஷ்மிக்கும் சீதா லக்ஷ்மிக்கும் என்ன வித்தியாசம் தெரிஞ்சுடப்போறது?”

“அம்மா பேர வேணும்னே சொன்னா மாதிரிதான் எனக்குத் தோன்றது!”

“வேணும்னு சொன்னதாவே வச்சுக்கோயேன்.”

முன்னிருந்த புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, “ரெண்டு பேரையும் கொரோனா கொண்டு போனப்போ நியாயத்த யார் கணக்குல எழுதுவ? சீதாவ பாக்கக் கூட இல்ல. முகம் கடைசியா எப்படி இருந்துச்சுனு கூடத் தெரியாது. ஒவ்வொருத்தருக்கும் நான் செய்ற சிரார்த்தம், சீதாக்கு செய்றதாதான் எனக்குள்ள இருக்கு. சிரார்த்தத்தோட பயனே ஒருத்தர் போய்ட்டா அவா வீட்ல இருக்கற எல்லாரையும் ஒருத்தர் இல்லைனு நம்ப வைக்கறதுதான். இத்தன தடவ சிரார்த்தம் செய்றேன். ஆனா, சீதா போனதா மனசு நம்ப மாட்டேங்குது!”

சங்கரன் குரல் தடுமாறியது. காட்டிக்கொள்ள விரும்பாமல் தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.

“மாட்னானு கேட்டியே? மாட்னா என்ன! தெய்வத்து பேர்ல மாத்த வேண்டியதுதான். அவ்ளோ கோபம் இருக்கு. கொரோனா பேர்லயும் தெய்வத்தோட பேர்லயும். யார் மேல காட்ட முடியும். எல்லாம் என் கர்மா.”

கிருஷ்ணமூர்த்தியின் முன் அழ விரும்பாதவராய் அங்கிருந்து முன்னறைக்குத் கிளம்பினார். கிருஷ்ணமூர்த்தி பணத்தை கேசவ பெருமாள்-சீதாலக்ஷ்மி என்று பெயரிட்டிருந்த அப்பா-அம்மாவின் புகைப்படத்தடியில் வைத்துவிட்டு சமையலறை நோக்கித் திரும்பினான்.

“ஞானவாபி போய் தனியா உக்காந்து அழ வேண்டாம். வெயிட் பண்ணுங்கோ. காபியோட வர்றேன்”.

[email protected]

The post சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கூத்து  – பிறைநுதல்

வெய்யில் ஏற ஏற கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அழுகைச் சத்தம் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. சின்னாவிற்குப் பசித்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்தான். நேற்றிலிருந்தே அவனது வீட்டில் சமைக்கவில்லை. பக்கத்து வீட்டு அம்மா இவனை நேற்று முழுவதும் கவனித்துக் கொண்டார். அவர் வீட்டில்தான் நேற்று சாப்பிட்டான். இன்று என்னாவாகுமென்று தெரியவில்லை. மெல்ல நடந்து வீட்டை விட்டுத் தள்ளியிருந்த, அவனது தந்தை வழக்கமாக அமரும் வேம்பின் அடியில் அமர்ந்தான். உரைக்கும் ஏறு வெய்யிலுக்கு வேம்பினடி சற்றே இதமாக இருப்பதாகப் பட்டது அவனுக்கு. மரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட மேடையிலும் தரையிலும் வேப்பம் பூக்கள் தரையில் சிந்திய சீம்பாலாய்ச் சிதறியிருக்க,சின்னா அண்ணாந்து மரத்தைப் பார்த்தான். மெலிதான சிறிய வேப்பம் பிஞ்சுகள் பூக்களிடையே தொங்கிக் கொண்டிருந்தன. நினைவுத் தெரிந்த நாட்களாக அப்பாவை இந்த வேம்பினடியில்தான் சின்னா அதிகமாகக் கண்டிருக்கிறான். மழைக் காலங்களில் கூட அப்பா திண்ணையோடு சரி. அப்பா வீட்டுக்குள் வந்தால், அன்று ஏதோ விசேஷம் அல்லது வெளியூர் கிளம்புகிறார் என்று அர்த்தம். வெகு சில தருணங்களில் மட்டும் நடு இரவில் உறக்கம் கலைந்து அம்மாவைத் தேடுகையில், அம்மா அப்பாவுடன் இந்த வேம்பினடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான்.  இனி அப்பா இல்லை என்னும் பொழுது என்ன செய்வது என்று சின்னாவிற்கு விளங்கவில்லை. அம்மாவும் அண்ணன்களும் இவனைக் கட்டிகொண்டு அழும்போது மட்டுமே இவனுக்கு அழுகை வந்தது. அதுவும் ஓய்ந்துபோய் இங்கே வேம்பினடியில் வந்தமர்ந்திருக்கிறான். காற்றில் வேம்பு மெல்ல சலசலக்க, சின்னாவின் மடியில் சில பூக்கள் உதிர்ந்து விழுந்தன. அதில் இரண்டை எடுத்து நாக்கில் வைத்து ருசி பார்த்தான் சின்னா.

       மெல்லக் கூட்டம் அதிகமாகத் தொடங்க, சிலர் வந்து சின்னாவோடு வேம்பினடியில் அமர்ந்தனர். அனைவரும் ஏன் சின்னாவை இரக்கத்துடன் பார்க்கிறார்கள் என்று புரியாமல் அங்கிருந்து வீட்டின் பின்புறமிருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். தொழுவம் இன்னும் சுத்தப்படுத்தப் படாமல் இருக்க, சிறுநீர் கலந்த ஆடுகளின் புழுக்கைகள் நாற்றமெடுத்துக் கொண்டிருந்தது. யாரோ அவனைச் சத்தமாக அழைக்க சின்னா வீட்டின் முன்புறம் அனைவரும் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அப்பா சட்டை அணிவிக்கப்பட்டு, சால்வை போர்த்தி நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார். அனைவரும் மௌனமாகக் கூடியிருக்க ஆலாப் (ஆலமுத்து என்பதன் சுருக்கம்)பெரியப்பாதான் அனைவரையும் பார்த்துக் கேட்டார்

“தேங்கா உடைச்சுருவோமா?”

எல்லோரும் மௌனமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,சீனி மாமா சொன்னார்

“ம். இனிமே ஆக வேண்டியதைத்தான பாக்கனும். ஒடச்சிரலாம்”

  ஆலாப் பெரியப்பா கூட்டத்தில் யாரையோ தேடினார். சின்னாவைக் கண்டு அருகில் வர சொன்னார். சின்னா அருகில் வந்ததும் சட்டையைக் கழற்றச் சொன்னார். இவன் ஒன்றும் பேசாமல் கழற்ற, சின்னாவை அப்பாவின் அருகில் நிறுத்திவிட்டு ஊதுபத்தி ஏற்றினார். சூடம் கொளுத்தி அப்பாவிற்குக் காட்டச் சொன்னார். சின்னாவும் அவ்வாறே செய்தான். அவர் சொன்னபடியே சூடத்தட்டை கீழே வைத்துவிட்டு தேங்காயை எடுத்து சூடத்தில் காட்டிவிட்டு, அவர் கொடுத்த சிறிய கொடுவாளால் தேங்காயை இரண்டாக உடைத்தான் சின்னா. தேங்கா கன கச்சிதமாக இரண்டாக உடைய, கூட்டத்திலிருந்து பெருத்த அழுகைச் சத்தம் எழுந்தது. அம்மாவின் அழுகுரல் மட்டும் தனித்துக் கேட்க அம்மாவைத் திரும்பிப் பார்த்தான் சின்னா.

கூட்டத்தில் யாரோ பேசுவது அவனுக்குக் கேட்டது. “தேங்கா உடஞ்சதப் பாத்தியா? ஆயுள் முடிஞ்சுதான் போயிருக்காரு. இல்லனா பச்சப்புள்ள அவனுக்கு இவ்வளவு கச்சிதமா தேங்கா உடைக்க வருமா?”

அம்மா ஒடிவந்து இவனைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள். சின்னாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்ணீர் பொலபொலவெனக் கொட்ட வாய்விட்டு அழுதான் சின்னா.

     உறவினர்களின் வருகை தொடர்ந்து அதிகரிக்க, இழவு சொல்லப் போனவர்கள் ஒவ்வொருவராக திரும்பி வரத் தொடங்கியிருந்தார்கள். பந்தல் இடப்பட்டு ஓரிரு மர இருக்கைகளும், சில இரும்பு நாற்காலிகளும் இரவல் வாங்கிப் போடப்பட்டன. பந்தலின் முன்பாக வரிசையாக அண்ணன்களுடன் சின்னாவும் நிற்க வைக்கப்பட்டான். இழவுக் கேட்க வருபவர்கள் வரிசையாக நின்றிருந்தவர்களின் கரங்களைத் தொட்டு விட்டு அப்பாவைக் காணச் சென்றார்கள். சின்னாவிற்குப் பசித்தது. நல்லவேளையாக இரண்டு தூக்கு வாளிகளில் தேநீரும் ஒரு பொட்டலம் நிறைய வடையும் யாரோ வாங்கிவர, சின்னா பரவசமானான். ஒரு சிறிய குவளையில் தேநீரும் இரண்டு வடைகளையும் சின்னாவிடம் யாரோ முதலில் வந்து தர, சின்னா அவசர அவசரமாக தின்னத் தொடங்கினான். தொண்டை அடைத்துப் புரையேறியது சின்னாவிற்கு. அருகில் நின்றிருந்த பெரிய அண்ணன் தலையைத் தட்டிக்கொடுத்து, நீரைப் புகட்டிவிட்டு, “மெதுவாத் தின்றா தம்பி” என்றார். ஏனோ அண்ணன்கள் யாரும் வடையையோ தேநீரையோ தொடவில்லை. உறவினர்கள் வற்புறுத்தியும் அவர்கள் வேண்டாமென்றார்கள். சின்னா தேநீரை குடித்ததும் ஆசுவாசமாயிருப்பதை உணர்ந்தான்.

 மேளக்காரர்கள் வந்ததும் வடையையும் தேநீரையும் விழுங்கிவிட்டு மேளம் கொட்ட ஆரம்பித்தார்கள். உச்சி வேளை கடந்தது. வெய்யிலையும் பொருட்படுத்தாமல் சின்னா மேளக்காரர்களின் அருகிலேயே நின்று, அவர்கள் மேளம் கொட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே யாரேனும் இழவுச் சீர்கொண்டு வரும் செய்தி வர, மேளக்காரர்கள் தெரு முனைவரைச் சென்று மேளம் கொட்டி அழைத்து வந்தார்கள். அவர்கள் கொடுக்கும் அஞ்சையோ பத்தையோ வாங்கி வேட்டியில் முடிந்து கொண்டார்கள். மாலை நெருங்க, நெருங்க மற்ற பணிகள் துரிதப் படுத்தப் பட, இழவு சொல்லப் போனவர்கள் அனைவரும் திரும்பியிருக்க, தொலைவிலிருந்த ஊர்களிலிருந்து அப்பொழுதுதான் உறவினர்கள் வரத் தொடங்கினார்கள். பந்தலுக்குள் அழுகை அதிகரிப்பதும் தேய்வதுமாக இருந்தது. அம்மாவின் அழுகுரல் சற்றே தொய்ந்திருப்பதாகப் பட்டது சின்னாவிற்கு.

  அப்பொழுதுதான் அந்த மூவர் மிக மெதுவாக நடந்து வந்து பந்தலின் முன்பாக நின்றார்கள். இரண்டு வயது முதிர்ந்த கிழவர்களும் ஒரு வயது முதிர்ந்த கிழவியும். அதில் சற்றுக் குள்ளமாக இருந்த கிழவரை அப்பாவுடன் ஒரு சில தருணங்களில் சின்னா கண்டிருக்கிறான். ஒவ்வொருவரின் தோளிலும் ஒரு பெரிய துணிப்பை தொங்கிக் கொண்டிருந்தது. மேளம் நிறுத்தப் பட்டு ஒரு மெல்லிய சலசலப்பு கூட்டத்தில் உண்டானது. மேளக்காரர்களில் வயதில் மூத்த இருவர் மட்டும் வந்து வந்திருந்தவர்களை கைத்தாங்கலாகப் பிடித்து, “என்ன அய்யா. இப்பத்தான் வாரீங்களா?” என்று விசாரித்து கைத்தாங்கலாக அழைத்துக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு போய் அப்பா முன்பாக நிறுத்தினார்கள். சின்னாவும் கூடவே போனான். அம்மா இவர்களைப் பார்த்ததும் வயதான கிழவியைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தாள். இப்பொழுது அம்மாவின் ஒப்பாரி வேறுவடிவம் கொண்டது. இதுவரை அப்பாவின் அருமை பெருமைகளை மட்டுமே ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தவள். இப்பொழுது அவர் இல்லாமல் போனதால் அவளுக்கு நேரப்போவதை ஒப்பாரியாக வைத்தாள்.

‘நான் எட்டு ரூவா சேலை கட்டி

நான் இலைபோல போட்டுவச்சி

நான் கையெல்லாம் வளைபோட்டு

நான் கொண்டையில பூவச்சி ஆஆஹாயின்

நான் பக்கத்துல வந்து நின்னா

என்ன பார்வதி தேவிம்பங்க ஆஆஹாஆஅய்ன்’ – இடையில் மூக்கை சிந்திக் கொள்கிறாள். மீண்டும் ஒப்பாரியைத் தொடர்கிறாள்.

‘இனி நான் பூவும் பொட்டும் விட்டு

வளையலும் தாலியும் விட்டு

முன்ன சீதேவின்னு சொன்னவங்க

இனி மூதேவி என்பாங்க.

 நான் பாகம் பார்த்து வந்தாலும்

என் முகம் பார்த்தா தோசம்பாங்கோ ஓஓஓ?’

 கிழவிக்கு பல்லெல்லாம் கொட்டிப் போயிருக்க, மூசு மூசு என்று சத்தம் வராமல் மூச்சிரைக்க அழுதாள். கிழவர்கள் எந்த சலனமும் காட்டாமல் அப்படியே அப்பாவைப் பார்த்தப்படியே இருக்க, கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் மெல்ல வழிந்து கொண்டிருந்தது. கிழவியும் அம்மாவும் அழுது ஓய, குள்ளமான கிழவர் அப்பாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்

“சுப்பா!? நீயும் போயிட்டியா?. நல்லது கெட்டதுக்காவது முகத்தைப் பாத்துக்கிட்டோம். இனிமே அதுகூட முடியாது”(இதைச் சொல்லுகையில் கூட்டத்தில் அழுகைச் சத்தம் எழுந்து அடங்கியது).

“நீ உண்மையிலேயே பெரிய மனுஷன்டா. வாழ்கையிலயும் சாவுலயும் எங்களச் செயிச்சிட்டடா” என்றுவிட்டு கைத்தாங்கலாக மற்றவர்கள் அழைத்து வர, மேளம் கொட்டுமிடத்தின் அருகாமையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மூவரும் அமர வைக்கப்பட்டனர். மேளக்காரர் பெரியவரிடம் வந்து, “அய்யா. ஏதோ தொழில் தெரியாத பயலுவள வச்சி ஒப்பேத்திக்கிட்டிருக்கேன். தப்புத்தவறு இருந்தா மன்னிச்சுக்குங்க”என்றதும், சின்னா கிழவரை ஆச்சரியமாகப் பார்த்தான்.

கிழவர், “நீ அடிடா. உன்னய குத்தஞ்சொல்லி என்ன ஆகப்போவுது?. சுப்பன் என்ன திரும்பியா வரப்போறான். வர வர எனக்குக் காது வேற மந்தமாத்தான் கேக்குது”என்றார்.

மேளக்காரர் திரும்பிவந்து தனது சகாக்களிடம், “டேய் பாத்துக்குங்க. இவருதான் வேஷக்காரர் நல்லு. ஒரு காலத்துல இவரு கூத்துக்கட்டி ஆடினா, தேர் பாக்க வர்ற கூட்டத்தைவிடவும் அதிகமா கூட்டம் கூடும். இந்தா கூட இருக்காங்களே அவங்க ரெண்டு பேரு,இப்ப செத்திருக்காரே சுப்பன், அவுரு எல்லாம் கூட்டளிங்க. அவுங்களுக்குத் தெரியாத தாளமில்ல, ஆடாத ஆட்டமில்ல, வாசிக்காத வாத்தியங்க இல்ல. அதனால பாத்து வாசிங்கடா. தாளம் தப்பக் கூடாது”என்று விட்டுத் தன் பணியைத் தொடர்ந்தார். சின்னா மெல்ல கிழவரின் அருகில் சென்று அவர்கள் ஏதாவது பேசுகிறார்களா என்று கவனித்தான். அவர்கள் மூவரும் பேசவே இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை. மூவரும் எங்கோ பார்ப்பதும், தங்களுக்குள்ளாக அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வதுமாகவே இருந்தனர். இடையில் ஆலாப் பெரியப்பா வந்து தேநீரும் வடையும் கொடுத்த பொழுது, மறுப்பு எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டனர். கிழவர்கள் வடையை அப்படியெ மெல்லக் கடித்துத் தின்ன, கிழவி மட்டும் வடையை தேநீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்து வாயில் போட்டு சப்பித் தின்றாள்.

   இரவு நெருங்குகையில் இரவுப் பிணம் காப்பது பற்றியதான பேச்சு எழுந்தது. ஒவ்வொரு வரும் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்ல ஆரம்பித்தனர். ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை வாடகைக்குக் கொண்டு வந்து மூன்று திரைப்படங்களைப் பார்க்கலாம் என்றார் (அப்பொழுது எல்லாம் எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி இருந்ததில்லை. இரவு  முழுவதும் விழித்திருக்க தொலைக்காட்சிப் பெட்டியை வாடகைக்கு எடுக்கும் வழக்கம் இருந்தது. அதில் மூன்று திரைப்படங்களை பார்த்து முடிக்கையில் விடிந்து விட்டிருக்கும்). மற்றொருவர் முத்தியைக் (தேவரடியார்களின் பரம்பரையில் எஞ்சியுள்ள ஒரே ஜீவன். பக்கத்து ஊரில் ஒதுக்கப்பட்ட குடிசையில் வாழ்பவள்) கூட்டிவந்து கிளுகிளுப்பாட்டம் ஆட வைக்கலாம் என்றார்.

  வேசக்காரர் நல்லு எழுந்தார். மெதுவாகச் சென்று அப்பாவின் முன்பாக நின்று, அனைவரையும் பொத்தாம் பொதுவாகப் பார்த்துவிட்டு மெல்ல நடுங்கும் குரலில் சொல்ல ஆரம்பித்தார்.

“சுப்பன் போயிட்டான். கூத்து கட்டுறது அவனுக்கு எவ்வளவுப் புடிக்கும்னு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் கூத்து கட்டுனா இனிமேப் பொழக்க முடியாதுன்னு எங்களவிட்டு வந்து புள்ளக் குட்டிங்கள எல்லாம் படிக்க வச்சு, கட்டிக்கொடுத்து, ஒரு நல்ல சம்சாரியா நெற வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிருக்கான். சம்சாரியா இருந்தாலும் கூத்தும் பாட்டும் செழிப்பா இருந்த காலத்திலயும், அது கொஞ்ச கொஞ்சமா நாதியத்துப் போனப்பயும், சுப்பன் வேஷங்கட்டலயேத் தவிர, எங்களுக்கு ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டுதான் இருந்தான். கூத்து இல்லாத நாள்ல கேவுரோ கம்போ கொண்டு வந்து எங்கப் பசிய ஆத்தியிருக்கான். முப்பது வருஷமா அவன் கூத்து கட்டலதான். ஆனாலும் அவனுக்குக் கூத்துன்னா உசுரு. ஆதனால நான் இப்ப சுப்பனுக்காகக் கூத்தாடப் போறேன். நல்லபடியாப் போன அவனோட உசுரு நல்லபடியா அடங்கட்டும். நீங்க பிடிச்சிருந்தாப் பாருங்க. இல்லனா உங்களுக்குப் பிடிச்சதப் பண்ணிக்குங்க. எங்களுக்கு ஒரு ஓரமா கொஞ்சம் எடம் மட்டும் கொடுத்திருங்க” என்று விட்டு மெல்லத் தள்ளாடியபடியே மூவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவர்கள் மூவரும் கொண்டு வந்திருந்த பைகளை அவிழ்த்தார்கள். ஒரு பையில் சிறிய நாதஸ்வரமும் தவிலும் இருக்க,மற்றொன்றில் மற்ற வாத்தியங்களும் இருந்தன. கிழவியின் பையில் காற்சலங்கைகளும், சாயம் போன சேலையும், பெண்களுக்கே உரிய சில அணிகலன்களும், ஒரு ரசம் போன முகம் பார்க்கும் கண்ணாடியும், சில முகப்பூச்சு பொடி டப்பாக்களும் இருந்தன. அவர்கள் கூத்துக்குத் தயாராகத் தொடங்க, கூட்டம் மெல்ல முனுமுனுத்தது. சின்னாவின் அருகிலிருந்து ஒருவர், “இந்த மூனும் இன்னும் போய்த் தொலய மாட்டேங்குது. இன்னும் நம்ம உயிர வாங்குது. இந்த காலத்துல யாரு கூத்துப் பாப்பா? கரகாட்டம்னாக்கூடப் பரவாயில்ல?” என்று அவர்கள் காது படவே சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

யாரோ ஒருவர், “ஒழுங்கா நடக்கக் கூட முடியல. இதுங்க எதுக்கு கூத்தாடப் போவுதுங்க?. பாத்துப்பா இவங்களுக்கும் சேத்துப் பாட கட்டுர மாதிரி ஆயிடப்போவுது”என்றார்.

    இவ்வாறாக பலதரப்பட்ட விமரிசனங்கள் எழ, இறுதியாக பெரிய அண்ணன் மற்றும் அம்மாவின் கருத்தைக் கேட்டனர். பெரிய அண்ணனும் அம்மாவும் கிழவரின் கருத்தை ஆமோதிக்க கூட்டம் மெல்ல முனுமுனுத்தது. சிலர் மெதுவாக நழுவினார்கள். சின்னாவிற்கும் சற்றே ஏமாற்றம்தான். மூன்று திரைப்படங்களாவது பார்த்திருக்கலாமே!

             இரவு எட்டு மணியாகிய பொழுது கிழவி ஒப்பனையை ஆரம்பிக்க, கிழவர்கள் தவில் மற்றும் இன்னபிற வாத்தியங்களை இசைத்து சரி பார்க்கத் தொடங்கினார்கள். கிழவியின் ஒப்பனை சின்னாவை ஆச்சரியமடைய வைத்தது. மெல்லத் தனது நடுங்கும் கரங்களால் தோடு, மூக்குத்தி கழுத்துச் சங்கிலி என ஒன்றன் பின் ஒன்றாக அணிந்து கொண்டாள். அனைத்து அணிகலன்களிலும் மேல்பூச்சு விட்டுப் போயிருந்தது. யாரோ ஒருவர், ” இன்னும் பதினாரு வயசுக் கொமரின்னு நெனப்பு” என்றார். கூட்டத்தில் மெல்லச் சிரிப்பலை எழுந்தது. கிழவி அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு சிறிய டப்பாவிலிருந்து வாசனைப் பொடி எடுத்து இரஸம் போன முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபடி முகப்பூச்சுப் பூசலானாள் அவள். முகப் பூச்சு முடிந்ததும், சிறிய குப்பியிலிருந்து மை போன்ற ஒன்றை எடுத்து உதட்டுச் சாயம் பூசலானாள். இப்பொழுது கிழவியை பார்த்தால் ஐந்து வயது குறைத்து மதிப்பிடலாம் போலிருந்தது. பையில் இருந்து சுருக்கங்கள் நிறைந்த சாயம் போன சேலையை எடுத்துக்கொண்டு, துணி மாற்ற கண்களால் இடம் தேடினாள் கிழவி. குறிப்பறிந்து அக்கா அவளை வீட்டிற்குள்ளாக அழைத்துப் போனாள். சில நிமிடங்கள் கழித்து அவள் வெளிவருகையில் இன்னும் ஐந்து வயது குறைத்து மதிப்பிடலாம் போலிருந்தது.

   மணி பத்தான போது மேளக்காரர்கள் ஓய்ந்திருந்தனர். இனியும் வெளியூர் ஆட்கள் வரப்போவதில்லை. நாளைக் காலையில்தான் வருவார்கள். உள்ளூர் ஆட்கள் அனைவரும் தத்தமது வீட்டில் உணவருந்திவிட்டு இரவுப் பிணம் காக்க வந்தமர்ந்தனர். சின்னாவிற்கும் பக்கத்து வீட்டு சாப்பாடு கிடைத்தது. நன்றாகவே சாப்பிட்டான். ஏனோ அம்மாவும் அண்ணன்களும் சாப்பிடவில்லை. தேநீரோடு நிறுத்திக் கொண்டார்கள். பக்கத்து வீட்டிற்கு கிழவர்கள் மூவரையும் அழைத்துப் போய் அண்ணிதான் சாப்பிட வைத்தாள். சாப்பிட்டு விட்டு வந்ததும் பந்தலில் மையமாகத் தேர்ந்தெடுத்து சின்னா வீட்டுப் போர்வை வாங்கி விரித்தார்கள். கிழக்குப் பார்த்து கிழவர்கள் மூவரும் அமர்ந்தார்கள். வேஷக்காரர் நல்லுதான் முதலில் ஆரம்பித்தார்.

“எல்லாருக்கும் வணக்கம். நான் கூத்துக்கட்டுறேன்ன உடனே ஒத்துக்கிட்டதுக்காக எல்லாருக்கும் நன்றி. போனமாசம் வரைக்கும் என்மேல “மாமா மாமா”ன்னு பாசமா இருந்து, என் ஊருக்கு வரும்போதெல்லாம் என்னப் பாத்துட்டு பேசிட்டுப்போற சுப்பன், இப்ப உயிரோட இல்ல. அவனும் நானும் எங்க கூட்டாளிங்களோட சேந்து போடாத கூத்து இல்ல. போகாத ஊரு இந்த ஜில்லாவுலேயே இல்ல. அவன் போடாத வேசமில்ல. பாடாத பாட்டு இல்ல. தெரியாத வாத்தியமில்ல. அவன் இல்லனா எங்களுக்கு வேலயே ஒடாது. ஒத்த ஆளா மொத்த சாமானையும் தலைல சொமந்துக்கிட்டு பத்து கல் இருவது கல் தூரத்தையும் ஒரே நாள்ள நடந்துடுவான். திரும்பி வரும்போது மக்கள் எல்லாரும் கொடுக்கிற கேவுரு, கம்பு, சோளத்தையும் ஒத்த ஆளாவே சொமந்து வருவான். அமாவாச இருட்டிலயும் நாங்கப் பயமில்லாம நடந்தே அஞ்சாரு பொம்பளங்கள அழச்சிக்கிட்டு, கூத்தாடப் போயிருக்கோம். காரணம் சுப்பனும் காத்தானும் (இறந்துபோன சின்னாவின் பெரியப்பா) கூடஇருந்ததனால. இவனுங்க ரெண்டுபேரு சேந்து பத்து பேர ஒரே தள்ளாத் தள்ளிருவானுங்க. என்னமோ கடைசி வரைக்கும் பொண்ணுங்களுக்கோ பொருளுங்களுக்கோ சேதாரம் ஏதும் இல்லாமதானிருந்துச்சி. திடீர்னு சுப்பன் கூத்தாடப்போன புதூர்லயே (அம்மாவின் ஊர்) பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுக்கப்புறம் அவன் கொஞ்சகாலம் எங்களுக்குத் துணையா வந்தானே தவிர வேசங்கட்டல, பாட்டுப்பாடல. தங்கச்சித் தம்பிங்கக் கல்யாணம் புள்ளக்குட்டிங்கன்னு முழுக்க சம்சாரியாவே ஆயிட்டான். இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் எங்கக் கூத்தப் பாக்குறதுக்காவது வந்துக்கிட்டே இருந்தவன் ஒரு கட்டத்துக்கு அப்புறமா அவனால வரமுடியாமலே போயிடுச்சி. காத்தானும் திடீர்ன்னு போய்ச் சேந்ததனாலே, எங்கக் கூத்து நொடிக்க ஆரம்பிச்சிச்சு. பேசுன பணம் கெடைக்கிறதில்ல. தஞ்சாவூர், திருச்சிலருந்து கரகாட்டக் கோஷ்டிங்க வர ஆரம்பிச்சாங்க. அப்பவே சுப்பன் சொன்னான். மாமா, வேணாம் விட்டுடுங்க. வந்து விவசாயத்தப் பாருங்கன்னு. பின்னாடி கஞ்சிக்கே வழியில்லாமப் போனாலும் போயிடும்னு. புள்ளக்குட்டிங்களுக்கு ஒன்னும் சேத்து வக்க முடியாது. ஒரு நல்லது கெட்டது கூடப் பண்ண முடியாதுன்னு. அவன் சொன்னப்படிதான்ஆச்சு. வீதிக்கு வீதி ஊமப்படம் ஆரம்பிச்சு, அப்புறம் பேசும் படமாயி, அப்புறம் கலர்ப் படமாயி இப்ப வீதிக்கு வீதி டீவி பொட்டி வந்துருச்சு. சுப்பன் சொன்ன சொல்லு பலிச்சிருச்சி. இப்ப அவன் சொன்னத நெனச்சிப் பாக்குறம். அவன் எடுத்து சொன்னப்ப எங்களுக்கு ஒறைக்கல. திமிரா இருந்திட்டோம். உண்மயச் சொன்னா எங்களுக்கு இதவிட்டு வேற எதுவும் தெரியல. ஆனா, அவனுக்கு எல்லாம் தெரியும். கத்துக்கிட்டான். குழந்த குட்டிங்கள நல்லபடியா வளத்திட்டான் அவன். உயிரோட இருந்தவரைக்கும் அவனுக்குன்னு எங்களால எதுவும் செய்ய முடியல. செத்ததுக்கு அப்புறம் எங்களால முடிஞ்ச இந்த கூத்தப் போடுறோம். அப்பா சுப்பா, தப்பு இருந்தா மன்னிச்சு ஏத்துக்கப்பா” என்றவாறே தடுமாற்றத்துடன் எழுந்து அப்பாவைப் பார்த்து வணங்கினார். கூட்டம் மெய்மறந்து அவர் சொன்னதை செவிமடுத்துக் கொண்டிருக்க அம்மா மட்டும் இடை இடையே கேவிக்கொண்டிருந்தாள்.

  கூத்து ஆரம்பித்தது. என்ன கூத்து என்பதைக் கூட அவர்கள் சொல்லவில்லை. முதலில் அப்பாவைப் பற்றியப் பாட்டு வந்தது. முதலில் என்னப் பாடுகிறார்கள் என்பது யாருக்கும் புரிபடவில்லை. மெல்ல மெல்ல சுருதி ஏற கூட்டத்தின் சலசலப்பு குறைந்து அனைவருக்கும் கிழவர்களின் பாடல் மொழிப் புரிய ஆரம்பித்தது.

“அய்யா நீ

எட்டுவச்சிநடந்தா

எட்டுத்திக்கும்

கொட்டிமுழங்கும்

அய்யா

அப்பனுக்கு அடங்காப் பிள்ளையும்

சுப்பன் கூத்தப் பாத்து அடங்கும்

அய்யா நீ

ஒத்தக்கூத்துப் போட்டாலும்

மொத்த ஊரே விருந்து வைக்கும்”

என்றாக சின்னாவின் அப்பா புராணம் நீண்டது. சின்னாவிற்கு அப்பாவின் குழந்தைச் சிரிப்பிற்கும் அமைதியான சுபாவத்திற்கும் ஏனோ இந்த வர்ணனை பொருந்தவில்லை என்றே தோன்றியது. அப்பாவின் சேமிப்புகளில் இருந்த சில நாடகப் புத்தகங்களில் இவர்கள் பாடுவதைப் போல் சில செய்யுள்கள் இருப்பதை சின்னா கண்டிருக்கிறான். வாசித்தும் இருக்கிறான். ஆனால், அவை அவனுக்குப் புரிவதில்லை. தாள லயத்திற்கு ஏற்ப அவர்கள் பாடிக்கொண்டேப் போனார்கள். வார்த்தைகள் சரளமாக எதுகை மோனையுடன் வந்து விழுந்தன. நேரம் செல்லச் செல்ல குரலின் தடுமாற்றம் நீங்கி கம்பீரம் கூடியது. கிழவி ஆடத் தொடங்கிய பொழுது சின்னாவால் நம்ப முடியவில்லை. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் வந்தவள் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றி ஆடமுடிகிறது என்று அதிசயித்தான். அன்றைய நாடகம் கண்ணகி கோவலன் நாடகம் என்பது அவர்கள் சொல்லாமலேயேப் புரிந்தது. கிழவிக்குத்தான் அதிகப் பங்களிப்பு. கண்ணகியாக, மாதவியாக, வழிகாட்டும் மூதாட்டியாக, பணிப்பெண்ணாக, மாதவியின் தாயாக என ஏகப்பட்ட வேடங்கள். உருவம் மாறவில்லை, உடை மாறவில்லை. ஆயினும், அனைவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. இடையிடையேக் கிழவர்கள் கோவலனாக ஒருவரும், மற்றொருவர் பாண்டிய மன்னனாக ,பொற்கொல்லனாக, வழிப்போக்கனாக, யாசிப்பவனாக எழுந்து ஆடிப் பாடிவிட்டு அமர்வார்கள். மாதவியைக் காண கோவலன் கிளம்பும்போதெல்லாம், பெண்கள் சிலர் மாதவியையும், சிலர் கோவலனையும் திட்டினார்கள். வறுமை வந்து பிழைப்புக்காக பாண்டிய தேசம் புறப்படுகையில் அனைவரின் கண்களும் குளமாயின. கோவலனின் பிணத்தைக் கட்டிக்கொண்டு கண்ணகி அழும் அந்த வேளையில் மட்டும் அங்கு அழாத பெண்களோ, கலங்காத ஆண்களோ இல்லை என்றானது. அம்மாவின் அழுகை அப்பொழுது மட்டும் தனித்த ஒரு ஒப்பாரியாக மாறி வீரியமெடுத்தது. பொற்கொல்லனும் பாண்டிய மன்னனும் அனைவரின் சாபத்திற்கும் ஆளானார்கள். இறுதியாக மதுரை அழிந்து கண்ணகி குறையா கோபத்துடன் தெற்கே கிளம்புவதாக நாடகம் முடியும் பொழுது கீழ்வானம் வெளிறத் தொடங்கியிருந்தது. கடைசி கடைசியாக மூவரும் எந்த வாத்தியத்தையும் இசைக்காமல், அப்பாவின் முன்பாக நிற்க, மூத்தவர் நல்லு உரத்தக் குரலில் ஒப்பாரி வைப்பதுபோல் பாட ஆரம்பித்தார்.

“சட்டக்கி கஞ்சிப் போட்டு சுத்திய காலம்போய் சுப்பா-இந்த

கட்டக்கி கஞ்சிக்கே வழியில்லடா சுப்பா.

எட்டூருக்கும் கூத்து கட்டிய காலம் போய்-இப்ப

ஒத்த காசுக்கு வழியில்லடா சுப்பா.

கூத்த விட்டா வேற தெரியல்லே-சுப்பா

கூத்துக்கே இப்போ கதியில்லெ.

பெத்ததுக்கு சீர்செய்யவும் வழியில்லெ- சுப்பா

செத்துப் போகவும் வழி தெரியல.

இப்பவும் நீதான் ஜெயிச்சிட்ட- சுப்பா

எப்பவும் நெனக்க வச்சிட்ட.

பொறுப்பா குடும்பம் நடத்தி -சுப்பா

புள்ளக் குட்டிங்களஆளாக்கி

பெருவாழ்வு வாழ்ந்திட்டடா சுப்பா.

பயப்படாமப் போயிட்டு வா

பக்கத்தொணையா அந்த சாமியிருப்பான்.

நிம்மதியாப் போயிட்டு வா- அந்த

குலசாமி உன் குடும்பத்தக் காத்து நிப்பான். ”

என்று முடித்தபொழுது கூட்டம் பெருங்குரலெடுத்து அழுதது. சின்னாவிற்கும் அழுகை முட்டிக் கொண்டுவந்தது. கிழவர்கள் மூவரும் தங்களது இயல்புக்குத் திரும்பும் பொழுது நன்றாகவிடியத் தொடங்கி இழவு கேட்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. சின்னா தனது தாத்தாப் பாட்டிகளைக் கண்டறியாதவன். ஏனோ சின்னா அந்த மூவரையும் தனது தாத்தாப் பாட்டியாகவே அந்தக்கணம் உணர்ந்தான்.

     தாத்தாக்களும் பாட்டியும் வாத்தியங்களை எடுத்து தங்களது பைகளில் வைத்து கட்டிக் கொண்டிருந்தார்கள். பாட்டி தனது வேசம் கலைத்து, உடைமாற்றி, முகம் கழுவிக்கொள்ள, மூவரும் சென்று வேம்பினருகில் அமர்ந்தார்கள். முகத்தில் ஏதோ ஒன்று நிறைவேறியதைப் போல சாந்தம் நிறைந்து ஒளி மிகுந்திருந்தது. மெல்ல உறக்கத்திலாழ்ந்தார்கள்.

    சாவு வீட்டின் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து அப்பாவைத் தூக்குகையில் மெல்ல எழுந்து வந்து கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டார்கள். மயானம் வரை பாட்டியும் வந்தது ஆச்சரியமாக அனைவருக்கும் இருந்தது. ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை. சின்னா மொட்டையிடப்பட்டு, மும்முறை அப்பாவின் உடலைச் சுற்றி வலம் வந்து கொள்ளியிட்டான். சிதையில் அப்பாவின் உடல் மெல்ல வேகத் தொடங்க, அனைவரும் அங்கிருந்த புளியமரத்தில் கூடி கூடி அப்பாவின் இறுதிப்பயணத்தின் வரவு செலவு கணக்குப் பார்க்கப்பட்டது. மயானப் பணத்தின் வரவு கைக்கொள்ளப்பட்டு, கடைசிப் பயணத்திற்காக உழைத்தவர்களுக்கு (பாடை கட்டியதிலிருந்து முடியெடுப்பது வரை) கூலிகொடுக்கப்பட்டது. கடைசியாக தாத்தாக்களிடம் சிலநூறு ரூபாய்களை கூத்துப் போட்டதற்காக ஆலாப் பெரியப்பா கொடுக்கப் போக, தாத்தாக்கள் வாங்க மறுத்துவிட்டனர். மேளக்காரரும் ஆலாப் பெரியப்பாவும், பெரிய அண்ணனும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவர்கள் வாங்க மறுத்துவிட, கூட்டம் செய்வதறியாது திகைத்தது. பெரியவர் சொன்னார்

“என் சுப்பனுக்காக நான் போட்ட கூத்துக்குக் கூலி வாங்கினா அது நல்லால்ல. ஏற்கனவே நான் பட்ட கடன எல்லாம் தீர்க்க முடியல. இப்போ இவனுக்காகப் போட்ட கூத்துக்குப் பணம் வாங்கி, அந்தக் கடன கொண்டுப் போய் எந்த ஜென்மத்துலத் தீர்க்க. இன்னக்கி நாங்க இருக்கோம் அவனுக்காக கூத்து கட்டுனோம். நாளைக்கி நாங்களும் போயிட்டா?. . . எங்களுக்கு அந்தக் கொடுப்பின கூடக் கிடையாதே” என்றவாறே கண்களில் நீர்வழிய அவர் மெல்லத் திரும்பி மேற்காக நடக்க, மற்ற இருவரும் பின்தொடர்ந்தார்கள். அனைவரின் கண்களிலும் நீர் நிரம்பி பார்வையிலிருந்து அக்கணம் அவர்கள் மறைந்துபோனார்கள்.

chanbu_sp@yahoo. co. in

The post கூத்து  – பிறைநுதல் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

❌