Normal view

Received before yesterday

சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள்

1 May 2025 at 04:16

1) சிறுமலைப்பயணம்

———————————————-

நான் அத்தனை அசிங்கமாக

மண்ணில் வீழ்ந்தபோதும்

உன் கண்களில் துளி

வெறுப்புப் படரவில்லை

அதற்கு முதல் நாளைப் போலவே

நீ என்னை அம்மு என்றழைத்தாய்

என் குறை வயிறு குறித்துக்

கவலைப்பட்டாய்

நல்ல பதத்தில் வெந்த

ஊன்சோறு ஊட்டிவிட்டாய்

கன்னத்தில் படிந்திருந்த

தூசியைத் தட்டிவிட்டாய்

தோளில் இடமளித்தாய்

நீராவியில் வெந்த கப்பக்கிழங்கும்

பொடி உப்புடன் மிளகாய்த்தூள் சேர்த்த

மாங்காய்ப் பிஞ்சும் வாங்கித் தந்தாய்

எல்லாவற்றுக்கும் மேலாக

சிறிய பெட்டிக்குள் பொதியப்பட்ட

பொன்னைப் போல பதனமாக

என்னைப் பழனிக்கு அனுப்பி வைத்தாய்

மொத்த இயலாமையையும்

முழுதாகச் சுகித்து

தற்கொலை முனையில் நின்ற

முதல் கையாலாகாதவனின்

நீண்ட பெருமூச்சுடன்

பேருந்து நிலையத்தில் இறங்குகிறேன்

உன் வாட்டம் உணர்ந்தும்

நீர் வார்க்க இயலாத என் கைகளை

கொள்ளி வைத்துக் கருக்கத் துணியாத

சுயநலவாதி நான்

மன்னித்துவிடு என்று கேட்கமாட்டேன்

இனிமேல் நான் உன் கண்களை

சந்திக்கக் கூடாது அவ்வளவு தான்.

2) அடைமழை

——————————

தேயிலை கொதிக்கும்

டீக்கடை பாய்லரின்

பட்டறைக்கு அடியில்

கதகதப்பாகப் படுத்துக்கொண்டு காலையிலிருந்தே விடாது பெய்கிற

இந்த மழையை வெறித்துக்

குரைத்தபடி இருக்கிறது நாய்

தென்கிழக்கு மூலையில்

கும்மரிச்சம் போட்டிருக்கும் கருமேகங்கள்

என்னையும் நாயையும் பிறகு அந்த

டீக்கடை பாய்லரின் பட்டறையையும்

விழுங்கிவிடத் துடிக்கின்றன

இவற்றிற்கு அப்பால்

உலகம் மற்றுமொரு பொன்விடியலுக்கான

பணிகளுக்கு தங்களைத்

ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.

3) ஒருத்தி

———————–

விட்டுப் பிரியும்போதெல்லாம்

கண்ணில் நீர் கோர்க்க

நெஞ்சோடு சேர்த்து

அணைத்துக் கொள்ளும்

அவளை உங்களுக்குத் தெரியுமா?

ஆம் எனக்கு அவள் நன்கு பரிச்சயம்

ஆலமரத்தைப் போல

மண்ணுக்கு மேலும் தன் வேரை

மனதாரப் பரப்பியிருப்பவள்

தண்டு முறிந்து வதங்கிப் போய்

வாழ்வின் அந்திமத்தில் இருக்கும்

சிறு தாவரத்தின் உயிருக்கு

உள்ளங்கையில் கொஞ்சம்

மழை கொண்டு வருபவள்

மேலும் உள்வாங்கிய போதும்

ஓயாத கடல் அலையைப் போல

அவள் மரணமில்லாதவள்!

4) பிரெட் ஆம்லெட்

———————————

மூணாறு மலைச்சாலையும்

மாட்டுப்பட்டி அணையும்

என் அடிவயிற்றுக் குமட்டலும்

நினைவுக்கு வருகின்றன

வழக்கம் போலவே

ஒன்றன்பின் ஒன்றாக

கும்பல் என்னை விட்டு

விலகிச் சென்றது அல்லது

நான் என்னைத் தனித்து

உருவிக் கொண்டேன்

பிரதமர் என் நண்பரென்று

பிதற்றிக் கொண்டிருக்கும்

முதியவரைச் சூழ்ந்து

அலைக்குமிழென சிரிப்புச் சப்தம்

பொங்கியெழுந்து கொண்டிருக்கிறது

கருத்த மேனியில்

அளவெடுத்தாற் போன்ற

காட்சிக்கு உகந்த

அங்கங்களோடு சிரிக்கும்

பிரெட் ஆம்லெட் கடைக்காரியின் மீது மேய்கின்றன

போதையில் மினுங்கும்

லாட்டரிச் சீட்டுக்காரனின் கண்கள்

சூடு குறைந்த எலுமிச்சைத் தேநீரை

என் கையளித்துவிட்டு உள்ளோடி

ஒளிந்து கொள்கிறாள்

கடைக்காரியின் மகள்

பிரதமரின் நண்பனாகும் சாத்தியம்

மிகுந்த தேசத்தில்

பிரெட் ஆம்லெட் கடைக்காரியின்

மகளாக வாழ்வது தான்

பெரும் சிரமம்.

5) ஆதுரமும் ஆண் மனமும்

—————————————————–

நீ அவன் நெஞ்சில் சாய்ந்து

ஆடியதை நான் பார்த்தேன்

பொய் சொல்லாதடி திருடி

முன்னெப்பொழுதோ நெஞ்சில் விழுந்த

நேசவிதை எத்தனை தான்

மண்ணைப் போட்டு மேவினாலும்

கிழித்துக்கொண்டு மேலெழும்பும் என்பதை

அறியாதவனா நான்?

ஆனால் ஒன்று

அந்தக் கணத்தில்

நான் ஆம்பளையாக இல்லை

என்பது பூரணமான உண்மை

ஒப்புக் கொள்கிறேன்.

( திண்டுக்கல் – கரூர் சாலையிலுள்ள

  கோவிலூர் மண்ணுக்கு)

00

சு. ராம்தாஸ்காந்தி

பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்

அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன

The post சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள் first appeared on Nadukal.

மகாத்மா காந்தி சிகரெட்

By:Para
24 April 2025 at 18:03

Pa Raghavan

ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை விளம்பரப் படங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இக்காலத்தில் பெரும்பாலும் திரைப்படத் துறையினர். அல்லது கிரிக்கெட் வீரர்கள். வேறு துறைப் பிரபலங்கள் வருவதை அபூர்வமாகவே பார்க்கிறோம்.

ஆனால் யோக்கியமாக ஒப்பந்தம் செய்து, உரிய தொகை கொடுத்தே விளம்பரங்களில் நடிக்கச் சொல்கிறார்கள். அத்துமீறல்கள் இதில் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இது விஷயத்தில் முன்னொரு காலத்தில் அநியாய அழிச்சாட்டியமெல்லாம் நடந்திருக்கும் போலிருக்கிறது.

பெயர் தெரியாத ஒரு சிகரெட் கம்பெனி, ‘மகாத்மா காந்தி சிகரெட்’ என்றொரு பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எந்த வருடத்திலிருந்து எப்போது வரை அது இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான யங் இந்தியாவில் காந்தி இது குறித்து ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். மது, சிகரெட் இரண்டின் மீதும் தனக்குள்ள ஒவ்வாமையை விரிவாக எடுத்துச் சொல்லி, சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த பிராண்டை நிறுத்திக்கொள்ளவோ, மக்கள் அதைப் புறக்கணிக்கவோ செய்தால் மிகுந்த நன்றி சொல்வேன் என்று பணிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் குறிப்பில் இருந்து நான் எடுத்துக்கொண்ட விஷயங்கள் இரண்டு.

1. 1921லேயே காந்தி, மகாத்மா என்று அறியப்பட்டிருக்கிறார்.

2. காந்தியை விளம்பர மாடலாகக் கொண்டால் பொருள் விற்கும் என்று அப்போதே வியாபாரக் கணக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காந்தியின் மறுப்பைப் பாருங்கள். மறுப்பு-எதிர்ப்பு-கண்டனம்தான் சாரம். ஆனால் சற்றும் பதறாத இயல்பும் நிதானம் தவறாத மொழியும் நிச்சயமாகத் திகைப்பூட்டும்.

யங் இந்தியா, ஜனவரி 12, 1921 இல் வெளியானது.

நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கிறார் என்று தெரிய வந்தபோது எவ்வளவு எரிச்சலடைந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். வெட்கத்துடன் இம்மனிதரின் தாள் பணிவதல்லாமல் செய்வதற்கு வேறொன்றுமில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

முற்றுமுடிவானது அல்ல தேடலுக்கான துவக்கம்

17 January 2014 at 21:48
பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்புநூல் பற்றிய கருத்துரை

 காந்தியைக் கடந்த காந்தியம் (காந்தியைக்  கடந்த  காந்தியம்  ஒரு  பின்நவீனத்துவ  வாசிப்பு   பற்றிய    நூலாய்வரங்கம் 7-12-2013 சனிக்கிழமை மதுரையில் நடந்தது. ஒருநாள் நிகழ்ச்சியாக அமைந்திருந்த இக்கருத்தரங்கை மாற்றுப்பண்பாட்டுச்சிந்தனைக் களம் ஏற்பாடு செய்திருந்தது. நண்பர் பெரியசாமிராஜா நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளைச் செய்திருந்தார்.  அந்நிகழ்ச்சியல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.

நண்பர் பிரேமின் காந்தியைக் கடந்த காந்தியம் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த நூலினை முன்வைத்து நடத்தப்படும் இந்த நூலாய்வரங்கில் நேரில் கலந்துகொள்ளமுடியாத நிலைக்காக எனது வருத்தங்களை பதிய வைக்கிறேன்.

“இயேசுவும் முகமதும் கலை பற்றி எதுவும் எழுதவில்லை. இந்த வகையான உண்மையையும் அழகையுமே நான் தேடுகிறேன். அதற்காகத்தான் வாழ்கிறேன். அதற்காக உயிரைவிடவும் செய்வேன்.”  (A Morning with Gandhiji, Young India, 13-11-1924, 20-11-1924) இந்த நூலின் 40-ம் பக்கத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள காந்தியின் இந்த வாசகங்களைத் திறப்பு வாக்கியமாகக் கொண்டு பிரேமின் காந்தியைக் கடந்த காந்தியம்  என்கிற இந்த நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறேன். இதை ஏன் திறப்பு வாக்கியமாகக் கொள்கிறேன் என்பதை இந்த வாசிப்பினூடாக நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

இந்நூலுக்குள் நுழைவதற்கு முன்பு, இதன் ஆசிரியர் பிரேம் பற்றிய எனது மனப் பதிவுகளாகச் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பிரேம் பற்றியும் பிரேமின் எழுத்துக்கள் பற்றியும் அறிமுகம் தேவை இல்லை. குறிப்பாகத் தொடர்ந்து அவரை வாசிக்கும் நமக்கு இந்த அறிமுகம் தேவையற்றதும்கூட. ஆனாலும் பிரேமுடனான கால் நூற்றாண்டு பழக்கத்தை முன்வைத்துச் சிலவற்றைச் சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதென்ன கால் நூற்றாண்டு என்று நீங்கள் யோசிக்கலாம். நூற்றாண்டுகளாக வரலாற்றைக் கதையாடுவது தமிழர்களான நமக்கு மிகவும் சுவராஸ்யமும் மகிழ்ச்சியும் தரக்கூடிய ஒன்று என்பதால்தான் 25 ஆண்டுகளை கால் நூற்றாண்டு என்று குறிக்கிறேன்.  நூற்றாண்டுகளுக்குக் குறைவான எந்த ஒரு நிகழ்வையும் நாம் வரலாறாகக் கருதுவதில்லை என்பதால், பிரேமின் நட்பு ஒரு வரலாற்றுத் தன்மைக் கொண்டது என்று சொல்வதற்கான முயற்சியாக. “வரலாறு முக்கியம் அமைச்சரே”  என்கிற புலிகேசி வடிவேலுவின் வசனம் நினைவிற்கு வருகிறது. தமிழ்ச் சமூகம் தன்னைக் கண்டடைந்த, கண்டடைந்து கொண்டிருக்கிற ஒரு கண்ணாடி வரலாறு என்பது.

பிரேமுடன் ஆன எனது தன்வரலாற்றுக் கதையாடலை கொஞ்சம் சொல்லி நூலுக்குள் நுழையலாம்.

PREM (2013)1988 அல்லது 1989-லிருந்து பிரேமை எனக்கு தெரியும். அதற்கு முன்பாக பிரேம் அல்லது பிரேதா-பிரேதனை சந்திக்கும் ஆர்வம் கிரணம் வாசிப்பில் எனக்கு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது 83-ல் ஈழப்போர் ஆதரவில் துவங்கிய எனது அரசியல் ஈடுபாடுகள் மூன்றாவது அணி ஆதரவு அரசியலாக மாறி மார்க்சிய-லெனினிய-மாவோயிஸ வாசிப்புகளின் வழி அமைப்பியல், பின்-அமைப்பியல் என விரிந்துகொண்டிருந்த காலம். 88-ல் எனது முதுநிலை அறிவியல் படிப்பு முடிவதோடு அரசியல் இயக்கச் செயல்பாடுகள் நின்று அறிவுத்துறை ஈடுபாடுகளில் கவனம் குவித்த நேரத்தில்தான் ஒரு மதியவேளையில் பிரேமை குடந்தையில் சந்திக்கிறேன். முதல் சந்திப்பிலேயே எனது நீண்டநாள் தேடுதலாக அல்லது ஒரு கனவாக இருந்த ஒரு அனுக்கமான மனிதரைச் சந்தித்த நினைவு தட்டியது எனக்குள்.

இதை எழுதும் இந்தக்கணம் பிரேம் ஒரு சாம்பல்நிற பெரிய ஜீன்ஸ் சர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து குடந்தை காந்திப் பூங்கா முனையில் ஒரு டீக்கடையில் தேநிர் அருந்தியபடி விவாதிக்கத் துவங்கியது காட்சியாகிறது. அக்காட்சியின் பசுமை மனதில் என்றும் நிழலாட தொடர்ந்து பார்க்கும் நேரங்களில் எல்லாம் அல்லது வாய்க்கும் நேரங்களில் எல்லாம் விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். ஆம்,  இன்றுவரை எங்களது உரையாடல்கள் ஓய்ந்தபாடில்லை.

பிரேம் பார்ப்பதற்கு இறுக்கமாகத் தெரிந்தாலும் மிகவும் அழகாகவும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். தனது கருத்துக்களைத் தெளிவாகவும் சரியாகவும் முன்வைக்கத் தெரிந்தவர். பல நாட்கள் இரவுகள் விடிவது தெரியாமல் டீ  சிகரெட் இல்லாதபோது பீடி எனப் பேசிக்கழித்திருக்கிறோம். எப்போதும் ஒரே அலைவரிசையில் அமையக் கூடியவை எங்கள் பேச்சு. சந்தித்த சில நாட்களிலேயே நான் அவரை எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பேசிக்கொண்டே 6 கி.மீ. உள்ள எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கும் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். இப்படி பல உரையாடல்கள் வழியாக நான் அவரிடம் கற்றவை ஏராளம். எப்போதும் எங்களுக்குள் ஒரு கருத்து உரையாடல் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

அவரது எல்லா நூல்களையும் எழுத்துக்களையும் ஒரு முதல்வாசகனின் ஆர்வத்துடன் வாசித்துவிடுவேன். ஆரம்பத்தில் பிரேமின் எழுத்துக்கள் என்னை வசீகரித்து அவரைப்போலவே எழுதும்படியாகப் பழக நேர்ந்துவிட்டது என்று சில இலக்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இப்படிக் கூறுவது என்னை உயர்த்த அல்ல. பிரேமின் எழுத்து அத்தனை வசீகரமானது என்பதை சொல்லவே. வசீகரம் என்ற வார்த்தையை அதன் ஆழ்ந்த அடர்ந்த இலக்கியப் பொருளில் புரிந்துகொள்ளவேண்டும்.  அது  மௌனி தனது கதைகளில் பயன்படுத்தும் வசீகரம் என்பதைப் போன்றதே. அது ஒரு ஆழ்ந்த பாதிப்பு, பிரேமின் எழுத்துக்கள் எழுத்தை உருவாக்குபவை என்பதைச் சொல்லவே இதை இங்கு சுட்டிக்காட்டினேன்.

அவரது எழுத்துகள் வாசிப்பவரிடம் ஒரு எழுத்தை உற்பத்தி செய்தபடி இருக்கும். சில எழுத்துக்கள் வாசிப்பவரிடம் பேச்சை மட்டுமே உற்பத்தி செய்யும். பிரேமின் எழுத்துகள் எழுத்தை உற்பத்தி செய்யும் ஒரு ஆழந்த மற்றும் அகன்ற மொழிப்புலத்தைக் கொண்டவை. அவரது மொழி ஒருவகை நிகழ்த்துதல் தன்மை கொண்டது. உருவகங்கள் காட்சிப்படிமங்கள் என எழுத்து ஒரு பிம்பத்தைக் கட்டி எழுப்பும் தன்மை கொண்டது.

காந்தியைக் கடந்த காந்தியம் என்கிற நூலும் காந்தி பற்றிய ஒரு புதிய பிம்பத்தை நம்மிடம் கட்டமைக்கிறது. பிரேம் அடிப்படையில் ஒரு படைப்பாளியாக, கோட்பாட்டளராக, அரசியல் செயல்பாட்டாளராக, திறனாய்வாளராக, இலக்கிய வாசிப்பாளராக இருப்பதால் தனது பன்முக வாசிப்பால் இத்தகைய பிம்பத்தை நம்மிடம் உருவாக்க முடிகிறது. அவரது எழுத்தில் படைப்பின் தெறிப்புகள் ஒருங்கு கூடிவிடும்.

அரசியல், வரலாறு, தத்துவம், மானுடவியல் எல்லாம் பிணைந்த ஒரு சமூக-உளவியல் தளத்திலான பன்முக ஆய்வாக பன்மெய்களை உள்ளடக்கிய ஆய்வாக வெளிப்படக் கூடியதாக இருப்பதே அவரது எழுத்தின் தனித்தன்மை. சில புதிய சொல்லாக்கங்களை அவர் உருவாக்கி வெளிப்படுத்தும்போது அது புதியதொரு மொழிப்புலத்தில் பயணிக்கும் துகளைப்போன்று ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கும் சொல்லாட்சியாக இருக்கும். தமிழில்  எண்ணற்ற புதிய வார்த்தைகளை, புதிய வாக்கிய அமைப்புகளை அவரது எழுத்தில் கண்டுணர முடியும்.

உதாரணமாக உருவகப்பெருக்கம், முற்றொருமை, உருவழிதல், நிகழ்த்துநிலை ஆன்மீகம், மீயுயர் மெய்மை, வல்லாற்றல், மெய்நிகர் போன்ற சொல்லாட்சிகள். வெறுமனே அர்த்தங்கள் செறிந்தவையாக மட்டமில்லாமல் அந்த மொழி ஒரு இயக்கத்தன்மை கொண்டதாக இருக்கும். இதுவரை அவரது நூல்களில், குறிப்பாக நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைத் தொகுப்பு, இசை உள்ளிட்ட பலவற்றைப்பற்றிய கோட்பாட்டுக் கட்டுரைகள் என எழுதப்பட்ட நூல்களில் இந்த “காந்தியைக் கடந்த காந்தியம்” என்பது வேறொரு புலத்தைச் சேர்ந்தது. அதாவது கணிப்பொறியில் வலைப்பின்னல் எனப்படும் கம்யுட்டர் நெட்வொர்க்கில் பயன்படும் டொமைன் போன்றது. அதாவது இதுவரையிலான அவரது எழுத்துக்களில் இந்த நூல் ஒரு புதிய டொமைனை உருவாக்கி உள்ளது. பிரேமின் எழுத்துக்கள் எப்போதும் புதிய டொமைன்களை உருவாக்கும் தன்மை கொண்டவைதான். நாம் அந்த டொமைனுக்குள் இணைக்கப்பட்டால், உடனடியாக நமது அறிவும் உணர்வும் செயல்படத்துவங்கும். அதற்குள் உள்ள மொழிப்புலத்தில் இயக்கம் கொள்ளும்போது ஒரு புதிய உணர்வுநிலையை, அறிதலைப் பெற்றுவிடுவோம். அப்படித்தான் காந்தி பற்றிய ஒரு புதிய அறிதலை இந்நூல் முன்வைக்கிறது.

காந்தி ஒரு மரபுவாதி என்கிற பழகிய அறிதலைக் கவிழ்த்து அவரை ஒரு நவீனத்துவத்தின் விளைபொருளாக முன்வைக்கிறது இந்நூல். காந்தி ஒரு இந்து மதவாதி என்று நம்பப்பட்டு வந்த கருத்தாக்கத்தைக் கொட்டிக் கவிழ்த்து அதற்குள் அவர் எப்படி கிறித்தவ, சமண, பௌத்த மதங்களின் அறிதலைப் பெற்று ஒரு புதிய இந்திய-இந்து மதம் ஒன்றைக் கட்ட முயன்றார் என்பதை விவரிக்கிறது. காதி என்பது அவரது உலுத்துப்போன கிராமிய மீட்டெடுப்புப் பழமைவாதம் என்பதை சிதைத்து அது எப்படி ஒரு உயிரோட்டமுள்ள தனிமனிதனை உழைப்பு என்கிற படைப்பிற்குள் நிறுத்தும் அந்நியமாதல் அற்ற பொருளாதாரம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பசுமை அரசியல், பெண்மைய அரசியல், தன்னுருவாக்க அரசியல், கூட்டுருவாக்க அரசியல், தலித் அரசியல், மதச்சார்பின்மை அரசியல் எனப் பலதளங்களில் காந்தி இந்திய அரசியல் சொல்லாடலை வெகுமக்கள் அரசியல் உளவியலாக மாற்றிய பாங்கை எடுத்துரைக்கிறது. காந்தியின் நன்நெறி அரிசியலை காந்திய விடுதலைக்கருத்தியலுக்கான மாற்று அரசியலாக, இடையீட்டு உரையாடலாகக் கண்டு விளக்குகிறது. காந்தியன் பெண்மையவாதம், பாலியல்நோக்கு, தீண்டாமைக்கு எதிரான நிலைபாடுகள் என அனைத்து பரிமாணங்களையும் கணக்கில் எடுத்து காந்தியம் என்பது இந்திய-மாற்று-அரசியலுக்கான உளவியலைக் கட்டமைத்ததை விவரிக்கிறது.

காந்தி அம்பேத்கர் முரணை அலசி காந்தியின் மீதான விமர்சனத்தை முன்வைத்து, காந்தியம் அம்பேத்கரை உள்வாங்கவேண்டுமே ஒழிய அம்பேத்கர் காந்தியை உள்வாங்க வேண்டியதில்லை என்கிற அரிதான ஒரு இணைவுநிலை கருத்தை முன்வைக்கிறது. காந்தியம் உருவாகக் காரணமான காந்தி என்கிற தன்னுருவாக்கம் பற்றி விவரிக்கிறது.

பின்நவீனம் விமர்சனமாக முன்வைக்கும் நோஸ்டலாஜியா என்கிற தாய்மண் ஏக்கம், பழமைக்கு திரும்பும் ஏக்கமாக, தாய்நாட்டுக் கலாச்சாரத்தை விமர்சனமற்று ஏற்கும் ஒரு உணர்வாக காந்தியிடம் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி அதுவே இறுதிவரை அவரது ஆழ்மனமாகக் கட்டமைகிறது. இந்துமதத்தின்மீது கடும் விமர்சனங்களைக் கொண்ட காந்தி இறுதிவரை இந்துமத குறியமைப்பை விட்டு வெளியேராமல் அதன் உள்ளடக்கங்களை மட்டும் மாற்ற முயன்றார். தான் போதிப்பது ஒரு “புதிய இந்துமதம்” என்பதைக்கூட வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும், இந்து சனாதன தர்மத்தை, வர்ணாசிரமத்தை, சாதியத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறையில் சாத்தியப்படாத விளக்கங்களைத் தந்துகொண்டிருந்தார் என்பதை விளக்குகிறது இந்நூல். உண்மையில் ஒரு இலட்சிய இந்துமதமே அவரது ஆழ்மன உளவியலாக இருந்தது. அதை இந்தியச் சமூகத்தின் ஆழ்தள உளவியலாக மாற்றியதில் காந்தியின் பங்கு கணிசமானது என்பதை விமர்சனத்துடன் அணுகவேண்டும். இந்த ஆழ்தளம் காந்தியைப் புனிதக் குறியீடாக மாற்றியது. இதற்கு எதிரான தன்முனைப்பு காந்தி என்கிற புனித பிம்பத்தைச் சுட்டு கொன்றுவிட்டு காந்தி கட்டிய ஆழ்தள உளவியலைத் தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது.

25 ஆண்டுகளாக ஒரு அந்நிய மண்ணில் இருக்கும் என்னால் அந்த நோஸ்டாலஜியா என்கிற பழமை அல்லது மரபு ஏக்க உணர்வின் தீவிரத்தை, வேகத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.  காரணம் அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் மத உணர்வால் அதிகம் பீடிக்கப்படுகிறார்கள். காரணம் மதம் என்பது தாய்மண் பற்றிய ஒரு கலாச்சார ஏக்கம்,  தாய்நாட்டு அடையாளம், அல்லது தனது குடும்ப உணர்விற்கான ஒரு பதிலீடு. அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் இரண்டு விஷயங்களைப் பெரும்பான்மையாகக் காணலாம். ஒன்று தங்கள் மத அடையாளத்தை உறுதிப்படுத்துவது. விளையாட்டாக சொன்னால், தமிழர்கள் இந்துவாக இருந்தால் பிஜேபி-யிலும், முஸ்லிம்களாக இருந்தால் பி.ஜே (பி. ஜெயுனாலாபுதின்) குழவிலும் இணைந்து விடுவார்கள். இவர்களுக்கு மதம் என்பது ஒரு அறிவாக, அறிதலாக, புலனாக மாறிவிடுகிறது. காரணம் தாய்மண் குறித்த ஏக்கம். குடும்பமற்ற தன்மையின் ஏக்கம். தனது சொந்தநிலத்துடன் ஏற்பட்ட பிணைப்பு. தனது தனிமை. அந்நியனாக உணர்வதால் வரும் அடையாளச்சிக்கல். இதனைத் தேசபக்தி சிண்ட்ரோம் அல்லது தேசபக்தி நோய்ககுறி அல்லது தாய்ஏக்கம் அதாவது பிறந்தமண் ஏக்க இடிபலாக்க நோய்ககுறி என்றும் சொல்லலாம். காந்தி இதிலிருந்து மீண்டு தன்னை ஒரு மகா “ஆத்மாவாக” பதிலீடு செய்ததில்தான் தனது வெற்றியையும் தோல்வியையும் அடைகிறார்.

காந்தி என்ற குறியீடு புனித இந்து மதவாத தீர்க்கதரிசன பிம்பமாகவும், பயனற்ற காங்கிரஸ் அரசியல் பேரமாகவும் (சூப்பர் ஈகோ) மாற்றப்பட்டுவிட்டதால். காந்தியை விட்டுவிட்டு காந்தியத்தை மறுவாசிப்பு செய்து புத்தாக்கம் செய்யும் பணியை இந்நூல் செய்கிறது.

பிரேம் முன்னுரையில் சொல்வதைப்போல ஓவர் இண்டர்பிரட்டேஷனாக சில இடங்களில் தோன்றினாலும், வாசிப்பின் சுதந்திரம், பிரதியை மறுகட்டமைப்பு செய்வது விடுதலைக்கான அரசியலின் பகுதி என்றவகையில் சரியானதும் ஏற்புடையுதுமான ஒன்றே.

காந்தி தன்னுருவாக்க முனைப்பிலிருந்து கூட்டுருவாக்க நிலைக்கு நகர்ந்து செல்லும் வினையைப் பற்றிய ஒரு சமூக,அரசியல், உளவியல் ஆய்வு இது. இதில் காந்தியின் தன்னுருவாக்கம் காந்தியம் என்கிற கூட்டுருவாக்கமாக மாறிச்செல்லும் புள்ளிகள் நுணுக்கமாக, காந்தியின் வாழ்நிலையை ஆராய்ந்து மிகவும் கவனமாகவும், சமூக,அரசியல்,பொறுப்புணர்வுடனும் விடுதலை ஏற்பு அரசியல் அறிவுச் செயல்பாட்டுடனும் எழுதப்பட்டுள்ளது. இதில் விடுதலை ஏற்பு அரசியல் அறிவுச்செயல்பாடு என்பது முக்கியமானது, கவனத்தில் இருத்த வேண்டிய ஒன்று. இந்த நூல் அத்தகைய ஒரு செயல்பாட்டை முன்வைக்கிறது.

காந்தியை மகாத்மாவாகவோ அல்லது புனிதராகவோ அல்லது மத தீர்க்கதரிசியாகவோ முன்வைக்காமல் அவரது கோட்பாட்டுக் கருத்தாக்கங்கள் எப்படி எதிர்காலத்திற்கானதாக முன் அனுமானிக்கப்பட்டுள்ளது என்பதை நுட்பமாக வாசித்துக் காட்டும் நூல் இது. பிரேமின் மொழிப்புலம் காந்தியை மகாத்மாவாக ஏற்க மறுப்பதையும் இந்த நூலில் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

காந்தியின் ஆகப்பெரும் கனவாக நான் கருதுவது அவர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக தனக்குள் உருவாக்கிக் கொண்ட வேட்கை பிம்பமே. அதாவது, காந்தி தனக்குள் தன்னை உருவகித்துக்கொண்ட பிம்பம்.  தான் ஒரு ஏசு அல்லது முகமதுநபி போன்று இந்தியாவிற்கான ஒரு தீர்க்கதரிசியாக மாறிவிட வேண்டும் என்பதே. இப்படி எண்ணுவது சுயநலம் சார்ந்த வேட்கை அல்ல. சகமனிதர்களின் துயரம் தாங்கமுடியாத மனதின் உக்கிரம் கொள்ளும் ஒரு பிம்பம். தானற்று பிறராகுதலால் உருவாகும் ஒரு சொல்லொன்னாத் துன்பநிலை. புத்தனுக்கு ஏற்பட்டதைப்போல, தன்னறிவு அற்ற நிலையில் உருவாகிப் படியும் வேட்கை. அந்த வேட்கை கொள்ளும் ஒரு பெருங்கனவு. அதில் உருவாகும் தன்னமைவு சமூகத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடியது. அது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. தனது உள்மன அவசத்தில் ஒரு பேரமைதி கொண்ட மனதை உருவாக்கிக் கொள்ள முனைவது. காந்தியின் தன்னுருவாக்கம் பற்றி முதற்பகுதிகளில் விவரிக்கும் பிரேமின் இந்த நூல் இப்புள்ளிகளைத் தடம்காண முனைகிறது, அல்லது தடமாக விட்டுச்செல்கிறது.

நவீனத்துவச் சொல்லாடலில் காலாவதியாகிப்போன தீர்க்கதரிசி என்கிற பிம்பத்தை ஒரு அரசியல் செயல்பாட்டுக்களத்தில் நவீன சிந்தனைகளுடன் புத்தாக்கம் செய்ய முயன்றவர் காந்தி என்பதே எனது கருத்து. எனது “புராதனத்தாயாக விரும்பிய நவீனத் தந்தை- காந்தியின் உடலரசியல் பற்றி.” என்ற  கட்டுரையில் இந்தக் கருத்தாக்கத்தைதான் தொட்டுச்செல்ல முயன்றிருக்கிறேன். இந்த நூலை வாசித்தபின் அந்தக் கருத்து எனக்குள் உறுதிப்பட்டது மட்டுமின்றி, அது ஒரு மதிப்புக்கூடிய சொல்லாடலாக மாறியுள்ளது. பொதுவாக ஒரு மார்க்சிய இடதுசாரி என்ற வகையில் காந்தியின்மீது இருந்து ஒருவித குறைவான பார்வை (அதை ஏளனப்பார்வை என்றுக்கூடச் சொல்லலாம்) முற்றிலும் தகர்ந்துபோய்விட்டது.

காந்தி ஒரு இந்திய மதத்தைக் கட்டமைக்க முயன்றதைப் பற்றி பிரேம் இதில் விவரிக்கிறார். இந்துமதம் என்று காந்தி முன்வைத்தது இன்று நாம் புரிந்துகொண்டிருக்கும் மரபான இந்துமதம் அல்ல என்று தனது பின்நவீனத்துவ வாசிப்பில் சிதைவாக்கம் செய்து முன்வைக்கிறார். காந்தி ஒருவகையில் பிராமண மேலாதிக்க இந்துமதத்தைத் தனது  தந்திர மொழியில் கீழ்நிலையாக்கி, தலைகீழாக தாழ்த்தப்பட்டவர்களை உள்ளடக்கிய ஒரு இந்து சமதர்ம மதத்தை உருவாக்க முயன்றார். சமதர்மம் என்பதை சோசலிஷம் என்கிற ஆங்கிலச் சொல்லிற்கானதாக நான் இங்கு ஆளவில்லை. பிராமண இந்துமதத்தின் அடிப்படையான  “தர்மா” வில் இல்லாத சமநிலை என்பதை இணைத்து சம “தர்மம்” என்கிறேன். காந்தியின் இந்து மதம் அதாவது இந்திய மதம் நுட்பமாக பழமைவாத பிராமண இந்துமதத்தை ஒழித்துவிடும் என்றுணர்ந்த இந்துத்துவ அடிப்படைவாதச் சக்திகள் காந்தியைக் கொன்று தங்கள் தர்மத்தையும் மகாத்மாவையும் காத்தன என்பது வரலாறு. மகாத்மாவாகத் தொடர தான் இயற்கையாக இறக்கக்கூடாது என்று தனது மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் காந்தி.

நண்பர் பிரேம் முன்வைக்கும் காந்தி பற்றிய பிம்பம் இந்தப் புள்ளியை வெட்டிச் சென்று காந்தியின் செயல்படு அரசியலான காந்தியம் என்கிற கோட்பாடு பற்றிய வரையறையைச் செய்ய முனைந்துள்ளது. அந்த வரையறையினை இந்திய அரசியல் எப்படித் தந்திரமாகக் காந்தியைப் புனித பிம்பமாக்கி காந்தியத்தை நிராகரித்துவிட்டது என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய இந்திய அரசியலுக்குக் காந்தி என்ற பிம்பம் தேவை, ஆனால் காந்தியம் தேவையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் பிரேம். ஆனால் விடுதலை ஏற்பு மாற்று அரசியல்வாதிகளுக்கோ காந்தியம் தேவை , காந்தி தேவையில்லை.

முன்னுரையில் பிரேம் “பின்நவீன, பெண்ணிய, மார்க்சிய உளப்பாங்கு உள்ளவன்” என்று தன்னை முன்வைக்கிறார். இதில் உளப்பாங்கு என்ற சொல்லாட்சி முக்கியமானது. ஒரு சிந்தனைமுறையை வழிகாட்டுதல் முறையாகக் கொண்டு ஒன்றை ஆராய்வது இயல்பானது. ஆனால் அந்த சிந்தனைகளைத் தனது உளப்பாங்காக கொள்வது என்பதே முக்கியமானது. இது ஒருவகையில் ஆதல் என்கிற “பிக்கமிங்” என்ற நிலை. பிரேமின் இந்த ஆதல் என்கிற நிலைதான் அவரது எழுத்துக்களின் ஒரு தனிச்சிறப்பான தன்மை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று உலகமய குப்பைக் கூடங்களாக, கழிவுகளாக மாற்றப்பட்ட மூன்றாம் உலகில் காந்தியத்தின் பசுமை அரசியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதை முதன்மைப் படுத்திக்காட்டுகிறார் பிரேம். இயந்திரங்கள் அற்ற சமூகத்தில் காந்தியத்தின் தேவைப்பற்றி பேசும் பகுதிகள் கொஞ்சம் கற்பனாவாதமாகத் தோன்றலாம். ஆனால், உலகம் அந்த நிலைக்கு நகரும் என்கிற ஊகத்தின் அடிப்படையில் அந்த கருத்தாக்கத்தை கவனத்துடன் பரிசீலிப்பது அவசியம் என்கிறார்.

நூல் பற்றிய அறிமுகத்தில் காந்தியம்-மார்க்சியம்-அம்பேத்கரியம் என்கிற இந்தியாவின் மூன்று முக்கிய முரண்கள் பற்றிப் பேசுகிறார். இன்று அம்பேத்கரியம் பொதுச்சிந்தனையில் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியம் புனிதப் பெருஞ்சொல்லாடலாக மூடப்பட்டுவிட்டது. மார்க்சியம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு உள்ளது என்கிற அவதானிப்பு முக்கியமானது. இந்த முப்பெரும் கோட்பாடுகளை இணைத்து ஒரு புதிய வழிகாட்டும் அரசியல் நெறிமுறையை, வாழ்தலுக்கான கோட்பாட்டை உருவாக்க முனையும் மாற்றுச் சிந்தனையாளர்கள் கவனம் குவிக்க வேண்டிய பகுதி இது. பெரியார், காந்தி, அம்பேத்கர் இணைப்பு பற்றிப் பேசுவதில் உள்ள சிக்கல்கள் கூட ஆராயப்படவேண்டிய முக்கியப் புள்ளிகள்.

நூலின் முக்கியமான பகுதியான காந்தியின் தன்னுருவாக்க அரசியல் பகுதிகள் மிகவும் கவனத்துடன் உள்வாங்கப்பட்டு எழுதப்பட்டு உள்ளது. காந்தி உருவான வரலாற்றைச் சொல்லும் இந்த முதல் பகுதியில் ஒரு சமூக-அரசியல்-உளவியல் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியச் சமூகத்தின் முற்றுப் பெற்ற நிலைபற்றிய வர்ணனையில் துவங்கி, தனிமனிதர்கள் தேவையில்லை என்ற நிலைக்கு நகர்ந்து, கூட்டுநினைவு என்பதாக மாறும் காந்திய உளவியல்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்திய தனிமனித உருவாக்க அரசியலில் காந்தி மற்றும் காந்தியத்தின் பங்களிப்புகள் பற்றிப் பிரேம் முன்வைக்கும் பார்வைகள் அசாத்தியமானவை. இந்தியாவில் அத்வைதம் கண்டுணர்ந்த தனிமனிதன் என்பதைக் காந்தி நவீன அரசியலில் மீட்டுருவாக்கம் செய்கிறார். சாமான்யர்களை சுதந்திர, சமஉரிமை, ஜனநாயக உணர்வுகொண்ட நவீனத்துவத்தின் தனிமனிதர்களாக கொள்கை, கோட்பாடு கொண்ட வரலாற்று அரசியல் தன்னிலைகளாக மாற்றியது காந்தியே.

காந்தி மிகைமனிதராக, அதிமனிதராக பல முரண்கொண்டவராக இருப்பதற்கான அவரது உளவியல் பின்னணிகளை விவரிக்கும் பிரேம் அதிலிருந்து அவர் தன்னை உருவாக்கிக்கொண்ட வரலாற்றை நுட்பமாக விவரித்துச் செல்கிறார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி “காந்தியாக” மாறிய அந்த தன்னுருவாக்க வரலாறு மிகவும் சுவராஸ்யமாகவும் அதே நேரத்தில் அதிக கவனத்துடனும் முன்வைக்கப்பட்டு உள்ளது.

நான் வாசித்த காந்தி பற்றிய நூல்களில் அதிகம் கவனம் கொள்ளாத ஒரு முக்கிய தடம் ஒன்றை சரியாகக் கண்டுணர்ந்து விவரிக்கிறார் பிரேம். இது அவரது அசாத்தியமான அறிவின், வாசிப்பின், சுயச்சிந்தனையின் பின்புலத்தில் உருவான ஒன்று. நவீனத்துவம் உருவாக்கிய தனிமனிதன் குற்றம் மற்றும் குற்றம் பற்றிய உணர்வு, அதாவது குற்றஉணர்வு என்பதின்மேல்தான் கட்டப்பட்டு உள்ளான். இதன் பின்புலம் மேற்கத்திய கிறித்துவத்தின் பாவமன்னிப்பு கருதுகோளே. மனிதப் பிறப்பே பாவத்தில்தான் உருவாகிறது என்பதே அதன் அடிப்படை. இந்தியச் சமூகத்தில் பாவமன்னிப்பு இல்லை, பரிகாரம் உண்டு. பாவமன்னிப்பு தனிமனித உணர்வோடு சேர்ந்தது என்றால், பரிகாரம் அந்த அமைப்பின் விதிகளோடு சேர்ந்தது. பரிகாரத்தில் அமைப்பு உளவியலே முதன்மையானது. காந்தி இந்த பரிகாரவாதத்தை நீக்கி உண்மையின் முன் நிர்வாணமாக நிற்பது என்கிற தனிமனித உளவியலை முன்வைக்கிறார். இது இந்திய மனிதனின் நவீன மனசாட்சியாக உருவமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உண்மை உள்ளது, அதைக் கண்டுணர்வதே காந்தி முன்வைத்த சத்தியம்.

பிரேம் கூறும் இந்தியா போன்ற முற்றுப் பெற்றுவிட்டதான எண்ணத்தில் உள்ளஇ முழுமையடைந்துவிட்டதான மூடுண்ட ஒரு அமைப்பில் காந்திதான் குற்றஉணர்வு என்ற ஒரு புதிய மனப்புலத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார். இதுதான் தனிமனிதனை அவனது எல்லாவித அமைப்புப் பாதுகாப்பிலிருந்தும் விலக்கித் தனியனாக ஆக்கி அச்சம் கொள்ள வைக்கும் ஒன்று. அந்த அச்சத்தின்முன் கடவுளும் அருகதையற்றவனாகிவிடுவான். அந்தத் தனிமையில் உணர்வது உண்மை, சத்தியம் மட்டுமே. காந்தி இந்த மனப்புலத்தைத் தனது வாழ்தலின்மூலம் இந்தியச் சமூகத்தில் கட்டமைத்தவர் என்பதே முக்கியம்.

காந்தியம் உருப்பெற்ற தளம் விளிம்பை மையத்திற்கும் மையத்தை விளிம்பிற்கும் நகர்த்தியது, இந்தக் குற்றணர்வுத் தளத்தை காந்தி மாற்றியமைத்தார். இதுவே அரசுமையவாதிகள், அடிப்படைவாதிகள் காந்தியை எதிர்க்கக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.

காந்தி குறித்த எனது தனிப்பட்ட வாசிப்பில் காந்தி உண்மையைத் தேடும் தனது பயணத்தில் தனக்குள் இருந்த ஒரு நவீன மனிதனுடன் போராடிக் கொண்டேயிருந்தார். அவரது ஆளுமை ஒரு பிளவாளுமைத் தன்மை கொண்டது. அதாவது சீசாய்ட் தன்மை கொண்டது. தனக்குள் ஒரு தீர்க்கதரிசியை ஒரு மதபோதகரை பிம்பமாகக் கொண்டு சிந்தித்தவர் என்பதால் எப்போதும் மனிதனாக இருப்பதின் வாதையை உணர்ந்தவராக இருந்தார். மனிதனும் தீர்க்கதரிசியும் அரசியல்வாதியும் ராஜதந்திரியும் சாமான்யனும் எனச் சூழலின் ஆளுமைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பிம்பம் முன்னிலை வகிப்பதை அவரது வாழ்வின் பல செயல்பாடுகள் முன்பின் முரணாக அமைந்ததிலிருந்து புரிந்துகொள்ளலாம். பிரேம் இந்நூலில் இந்த முரண்பட்ட நிகழ்வுகளைச் சமூக-உளவியல் பின்னணியில் விவரிக்கிறார். ஒரு இடத்தில் காந்தியிடம் இருந்த இந்த மனப்பிறழ்ச்சித் தன்மையைக்கூடச் சுட்டிக்காட்டுகிறார்.

காந்தி இந்திய மரபிற்கு வெளியே தனிமனிதத் தேடல் அதாவது இறைவனை நேருக்கு நேராக அறிதல் என்கிற புதிய வழியை முன்வைத்தார். அதாவது நவீனத்துவ வழியை முன்வைத்தார். இந்தியக் குழு, சாதி அமைப்பிலிருந்து தனிமனிதனை பிரித்தெடுக்க முயன்றார். ஆனால் இந்திய மரபை அவர் மீறினாரா? என்பது விவாதத்திற்கு உரியது.  பிரேமின் இந்த வாசிப்பில் இந்திய மரபை அவர் பல இடங்களில் மீறியதைச் சுட்டிக்காட்டி உள்ளார். அவை இன்னும் ஆழ்ந்த உரையாடலுக்கு உரியவையாக உள்ளன.

காரணம், காந்தி ஒரு புதிய சிக்கலை அடைந்தார். அதாவது நவீனமனிதனை இந்திய மரபிற்குள் மறுவரையரை செய்வதன்மூலம் ஒரு புதிய தீர்க்கதரிசனத்தை ஒரு புதிய நவீன மதத்தை (புதிய என்பதும் நவீன என்பதும் ஒன்றல்ல. நவீன கருத்தியலுக்கான புதியமதம் என்பதே) உருவாக்க முயன்றார். அதன் உள்ளுரையாகவும் வெளிச்செயலாகவும் அவருக்கு ஆசிரமும் அரசியலும் அமைந்தன.  இந்த இரண்டிற்குள்ளும் ஒரு இணக்கமின்மை இருப்பது அவருக்குள் ஒரு இன்மையை போதாமையை உருவாக்கிக்கொண்டே இருந்தது. இந்தப் போதாமையைக் காந்தி எப்படித் தனது செயல்களின் வழியாக பதிலீடு செய்தார் என்பதை இந்நூலில் நுட்பமாக விவரிக்கிறார் பிரேம்.

பிரேம் காந்தியின் நிகழ்த்துநிலை ஆன்மீகம் என்ற ஒன்றை விவரிக்கிறார். அதை ஒரு முன்நவீனத்துவ மதம் சார்ந்த சொல்லாடலுக்குள் வைக்காமல் நவீனத்துவ பகுத்தறிவுச் சொல்லாடலுக்குள்ளும் வைக்கமுடியாமல் பின்நவீன சொல்லாடலாக்க முனைகிறார். இது விரிவாக நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது, வாசகர்கள் இதனை வாசித்து அறிந்து கொள்ளலாம்.

காந்தியை நவீனத்திற்குள் வைத்து ஆராய்ந்து அவரது பின்நவீன நிலைக்கான தயாரிப்புகளாக இந்திய மரபை இணைக்க முயன்றதின் ஒரு வரைபடமாகவே துவங்குகிறது இந்நூல்.

“இறைமறுப்பாளருக்கு கடவுள் இறைமறுப்பாளராக இருக்கிறார்” என்ற காந்தியின் இவ்வாசகம் முக்கியமானது. கடவுளின் நீக்கமற நிறைந்த தன்மையை முன்வைப்பதன் மூலம் போதாமை என்பதை நிறைவு செய்யமுயல்கிறார். காந்தி தனது மதமாக அறிவித்தது உண்மையையே என்பதை அவரது குறிப்புடன் சுட்டுகிறார் பிரேம். ஆனால் உண்மை என்று காந்தி முன்வைப்பது சத்தியம் என்கிற இந்திய மரபில் உள்ள நித்தியம் அல்லது நிரந்தரம் சார்ந்த ஒரு கருத்தாக்கமே. உண்மை என்பது ஒரு சார்பியல் சார்ந்த நவீனச் சொல்லாடல் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காந்தி சொன்னது நித்தியமான ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள சத்தியம். அல்லது அதன் நவீன வடிவமாக உள்ள மனசாட்சி என்பதே. தனக்கு ஒருவன் உண்மையாக இருப்பதன்மூலம் மொத்த சமூகத்திற்கும் உண்மையானவனாக இருக்க முடியும் என்பதே. இந்த புள்ளிகளில் இன்னும் ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். காந்தியின் மனித பிம்பம் நவீனத்துவ மனதும் மரபான உடலும் கொண்டது. மனது விகசிக்கவும் உடல் ஒடுங்கவுமானது.

காந்தி குற்ற உணர்வையும் போதாமையையும் இந்தியச் சமூகத்தில் முன்வைத்தார் என்பது ஒரு முக்கிய ஆய்வுப்புள்ளி என்றால், நவீனநிலையை இந்தியவயமாக்குவது காந்தியின் செயல்திட்டம் என்பதைக் கண்டறிந்தது பிரேமின் மற்றொரு முக்கிய ஆய்வுப்புள்ளி. அதாவது காந்தி தன்னையறியாமல் ஒரு இந்திய நவீனத்துவத்தை கட்டமைக்க முயன்றார் என்பதே. இங்குதான் காந்தியை முழுமையாக தலைகீழாக்குகிறார் பிரேம். அதாவது காந்தியைச் சிதைவாக்கம் செய்து, வெளியில் மரபாக தோன்றுவதற்குள் உள்ள நவீனத்துவ வேட்கை நிலையை வெளிப்படுத்திவிடுகிறார். ஆக காந்தி நவீனத்துவத்தின் எதிரி அல்ல. அல்லது ஒரு மரபான மதவாதி அல்ல. நவீனத்துவத்தின் மேற்கத்தியவாதத்தை அதன் பகுத்தறிவுக் கருத்தியலை நீக்கி இந்திய நவீனத்துவத்தை மரபான சிந்தனைகளிலிருந்து கட்ட முயன்றவர். இதில்தான் அவரது தேசியம் என்பதும் உள்ளது. இது விரிவான ஆய்விற்கு உரியது என்பதை மட்டும் பதிய வைப்போம்.

காந்திக்கும் அவரது தந்தைக்குமான உறவு பற்றிய அலசல். இதனைப் பல உளவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர் என்ற போதிலும் இதனை பிரேம் காந்தியின் இணைமுரணாக முன்வைக்கிறார். இதில் பரவலாகப் பேசப்படும் பிராய்டை பயன்படுத்தி காயடிப்பு மனநிலை என்று ஆராயும் பணியைத் தவிர்த்திருப்பது ஆறுதலானது. காந்தியின் தந்தைக்கும் தாய்க்கும் இடையிலான உறவு காந்தியின் தன்னுருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி உள்ளது என்பதைக் கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

காந்தி “ஆங்கில கல்விபெற்ற பிரிட்டிஷ்-இந்திய அறிவுத்திட்டத்தின் உற்பத்தி” என்பதைச் சொல்லும் பிரேமின் கருத்து முக்கியமானது. காந்தியின் தந்திர உத்திகள் மரபு-நவீனம் இரண்டிலும் இயங்க உருவானது பற்றிய விவரிப்பும் முக்கியமானவை. குழந்தை மன இயல்பில் உருவாகும் பிறழ்ச்சி பற்றிய விவரணைகளும் கூட.

பக்கம்–40-ல் காந்தி மரபு மீறலையும் மாற்று வழக்குகளையும் தெரிவு செய்பவராக இருந்தார் என்று சொல்லும் பிரேம் காந்திக்கு ஒரு சலுகை அளிப்பதாகவே தோன்றுகிறது. மாற்று வழக்குகளைத் தெரிவு செய்தவர் மரபை மீறினாரா? காந்தி ஒரு அத்வைதி சனாதனத்தில் நம்பிக்கை கொண்டவர். வர்ணாஸ்ரம தர்மத்தை ஏற்றுக்கொண்டவர் என அவரே அறிவித்து உள்ளார். பிரேமின் இந்த அறிவுச் சட்டகத்திற்குள் இவற்றையும் உள்ளடக்கிக் கூறுவதன் மூலமே காந்தியை முழுமையாக இந்த சட்டகத்திற்குள் அடக்க முடியும். நூலின் இறுதியில் குறிப்பாக அம்பேத்கர் பற்றிய ஆய்வில் இதனை விவாதிக்கிறார். காந்தியின் மீதான விமர்சனமாக முன்வைக்கும் அதே வேளையில், வளர்ந்து வந்த பேரபாயமான இந்துத்தவ மதவாத சக்திகளுக்கு இது ஒருவகை ஊக்கமளித்தலாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனது வாழ்வே எனது செய்தி என்கிற காந்தியின் வாசகத்தை பிரேம் தலைகீழாக்குகிறார், செய்தி சொல்வதே வாழ்க்கை என்பதாக. ஒருவகையில் இந்தப் புள்ளி முக்கியமானது. தனது வாழ்வை ஒரு அரசியல், சமூக, மத ஆன்மீகச் செய்தியாக முன்வைப்பது. இதனை முகமது நபிகள் தனது இறுதிப் பேருரையில் அறிவித்த சுன்னா எனப்படும் “எனது வாழ்வே உங்களுக்கு வழிகாட்டி” என்பதோடு ஒப்பிடலாம். தன்னை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் ஒரு வழிகாட்டும்முறை என்பது தன்னுணர்வுமிக்க தீர்க்கதரிசிகளுக்குச் சாத்தியமானதே. தீர்க்கதரிசிகள் வாழ்தல் புலத்தை கட்டமைப்பவர்கள் என்பதால் தமது வாழ்வை ஒரு செய்தியாக முன்னுதாரணமாக மாற்றி விடுகிறார்கள். அல்லது அவரது வழித்தோன்றல்களால் மாற்றப்பட்டு விடுகிறார்கள்.

நான் மிகவும் ரசித்த வரிகள் பிரேமின் படைப்புணர்விற்கு ஒரு சான்றாக இதை சுட்டலாம். பக்.80–ல் “காந்தியின் பரிசோதனை முடிந்து காந்தியின் மீதான பரிசோதனை தொடங்கும் இடம்” என்று சத்தியசோதனை முடிந்தவுடன் துவங்கும் அவரது அரசியல் வாழ்வு பற்றி சொல்லப்பட்டுள்ள வாசகம்.  காந்தியின் வரலாறு முடிந்து, வரலாற்றில் காந்தி உருவாகும் புள்ளியை அற்புதமாக, ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடுகிறது. இது போன்ற இயங்கியல் முரணாக அமைந்த பல வாக்கியங்கள் இந்நூலில் மொழியழகை விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கு விரவிக் கிடக்கிறது.

பக். 87-ல் காந்தி உண்மையுடன் நடத்திய சோதனைகள் முடிந்து உண்மை காந்திக்கு வைக்கப்போகும் சோதனைகள் இங்கு தொடடங்கின என்கிறார் பிரேம். இதுவும் இலக்கிய ரசனையுடன் சொல்லப்பட்ட இயங்கியல் முரணை உள்ளடக்கிய ஒரு வாசகம். இத்தகைய வாக்கியங்களை திறப்பு வாக்கியங்கள் (key statement) எனலாம்.

“தேசபக்தி என்பது என்னைப் பொறுத்தவரை அனைத்து மக்களுக்குமான நல்வாழ்வு. அது ஆங்கில ஆட்சிவழியாகக் கிடைக்குமெனில் அதை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.” இதுபோன்ற காந்தியின் வாசகங்களை பொறுத்தமான இடங்களில் பயன்படுத்தி அதை விவரிக்கும் பகுதிகள் முக்கியமானவை. காந்தி விடுதலை, தேசபக்தி பற்றி கொண்டிருந்த கருத்து இன்று சொல்லப்படும் இந்திய தேசபக்தி என்கிற மட்டைப்பந்தாட்ட தேசபக்தியோ, மாட்டை வெட்டாதே மனிதனை வெட்டு என்கிற இந்துத்துவ பாசிச தேசபக்தியோ அல்ல. சுயநலமற்ற மக்கள் நலத்தில் அக்கறைக் கொண்ட தன்முனைப்புவாதமற்ற தேசபக்தி. சகமனிதனின் துயரத்தை தனதானதாக ஆக்கிக்கொள்ளும் ஒரு வேட்கைப் பரவசநிலை.

காந்தியம் என்றால் என்ன என்பதை விவரிக்கும் பிரேம் “காந்தி வறுமை, அடித்தளமக்கள் வாழ்வாதாரம் என்பதை அரசியல் சொல்லாடலில் இணைக்கிறார் ” (பக்.98) என்றும் காந்தியம் என்பது அடிப்படை ஆன்மீகவிடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, ஏழ்மையிலிருந்து விடுதலை, மனமும் உடலும் ஆன்மாவும் இணைந்த சத்தியாக்கிரகம் என்று ஒரு கோட்பாட்டு சட்டகத்தைத் தருகிறார். இதன் அரசியல் சமூக விளைவாக அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை எழுத காந்தியம் களம் அமைத்துக் கொடுத்தது என்கிறார்.

காந்தியம் என்பது காந்தியின் உடல்மைய அரசியல், மனிதமைய ஆன்மீகம், அறமைய இறையியல், இயற்கைமையப் பொருளாதாரம் என்கிற நான்கு மையங்களைக் கொண்டது என்றும் விவரித்துச் செல்கிறது இந்நூல்.

பக்-136-ல் காந்தியும் மார்க்சும் வரலாற்றை வேறுவிதமாகப்பார்த்தாலும் இரண்டும் போரற்ற அமைதியான உலகம் என்ற ஒன்றையே முன்வைத்தனர் என்கிறார். மார்க்சின் வர்க்கமாதல் என்ற செயலின் முதல் நிலையாகக் காந்தியை முன்வைக்கிறார். அதாவது வர்க்கமயமாதல், வர்க்க அறமாதல் என்ற போக்கில். மார்க்ஸ் சொன்ன தத்துவவாதிகள் பற்றிய குறிப்பில் உலகை விளக்குதலும் மாற்றுதலும் ஒன்றாகிவிடுகிறது காந்திக்கு. விடுதலையை தேர்ந்தெடுத்தவருக்கு அடிமைநிலை ஒன்றும் செய்யாது என்கிற காந்தியத்தின் நிலை அது.

இந்திய சுயராச்சியம் என்ற காந்தியின் மிக முக்கியமான நூல் ஒரு கோட்பாட்டு நூலாக முன்வைக்கப்படுகிறது. சமீபத்தில் செம்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் உலக அளவில் விவாதிக்கப்படுகிறது என்பது முக்கியம். காந்தியத்தை இந்த நூலைச் சிதைத்து வாசிப்பதன்மூலம் வெளிப்படுத்துகிறார் பிரேம். குறிப்பாக இந்த நூல் விவாதத்தை விரிவாக செய்து உள்ளார். காந்தியின் தன்னுருவாக்க வினையை சத்திய சோதனை நூலையும் கூட்டுருவாக்க வினையை ஹிந்த் சுவராஜ் என்கிற இந்தியத் தன்னாட்சி என்கிற நூலையும் கொண்டு விவரிக்கிறது இந்நூல்.

வளர்ச்சி குறித்த அரசியல் கருத்தாக்கம் மற்றும் உயர்தொழில்நுட்ப எதிர்ப்பில் காந்தியம் பின்நவீன வாசிப்பு செய்யப்பட்டுள்ளது. பகுத்தறிவின், நவீனத்துவத்தின், நவீன அறிவியலின், அதன் விளைபொருளான தொழில் நுட்பத்தின் கொடுங்கோன்மை, ஒற்றை உலகமான உலகமயப் பொருளாதாரத்தில் இந்த நூல் எதிர்த்து பாய்ச்சம் வெளிச்சம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

மனித உடலின் எல்லைகளை விரிவுபடுத்தியதால் வந்தகேடு. கால் என்பதை பல வாகனங்களாக மாற்றியது. இதன் தொடர்ச்சியாக போர் பொறியமைவுகள் கட்டமைக்கப்பட்டன. மனித உடல் ஒரு போர் எந்திரமாக கட்டமைக்கப்பட்டது. இந்த கேட்டை காந்தி முன்னுணர்ந்ததை விவரிக்கிறது இந்நூல். ஒருவன் தனது அருகில் உள்ள மனிதனுக்கு உதவிசெய்தால் போதும். ஆணவமே உலகம் முழுவதும் உதவி செய்வதான எண்ணத்தை உருவாக்குகிறது என்கிறார் காந்தி. பொதுநலம் என்பதன் பிம்பத்தையும் தன்மதிப்பு சுகத்தையும் கேள்விக்கு உட்படுத்தி உலகின் ஓரமைவாக்க கருத்தியலை அதன் பிம்பத்தை போட்டு உடைக்கிறார் காந்தி.

குறிப்பாக இந்த நூலின் வாசிப்பில் நாம் அல்லது நான் இடர்ப்படும் இடம், ஒரு காந்திய சார்புநிலை அல்லது காந்தியை விடுதலைக் கருத்தியலுடன் இணைத்துப் பார்த்து அவரது கோட்பாடுகளை ஆதரவாக அரவணைத்து செல்லும் ஒருபார்வை நூல்முழுவதிலும் இழையோடுகிறது என்பதே. அம்பேத்கர் பற்றிய பகுதிகளில் மட்டுமே இந்த நிலை மாறி விழிப்புக்குள்ளாகிறது பிரதி. மற்ற பகுதிகளில் காந்திய நிலையின் நியாயப்பாடுகளை முன்வைக்கிறது. சில இடங்கள் இயல்பாகவும், சில இடங்களில் இயல்புகடந்த வலிந்தேற்றலாகவும்.  காந்தியை பின்நவீன வாசிப்பின்மூலம் முன்நவீனச் சிந்தனைகளை பிரேம் மறுஉரை செய்கிறாரோ என்கிற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

விஞ்ஞானம் பேரழிவை உருவாக்கியது என்பதும் இயற்கையை அழித்தது என்பதும் பிரேம் சொல்வதைப்போல போக்குவரத்து தொழில்நுட்பம் 100 ஆண்டுகளில் 3000 ஆண்டுகளுக்கான அழிவை சாதித்துவிட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதை எந்த அளவிற்கு மறுக்கமுடியாதோ அதே அளவிற்கு இதற்கான மாற்று வாழ்தல் என்ன என்கிற கேள்வியும் உள்ளது. மாற்று வாழ்தல் என்பது இயற்கையோடு இணைந்து காலால் நடக்க முடிந்த எல்லைவரை நடந்து தொடர்புகொள்ளும் சிறுசூழல் அமைப்புகளில் மட்டுமே வாழ்வது. இது சாத்தியமா? என்கிற கேள்வி அர்த்தமற்றது. சாத்தியப்படுத்த முடியுமா? என்கிற கேள்வியும் அனர்த்தமானதே. காரணம் உலகம் உருவாகிவிட்டபின், அதற்கான குறியமைப்புகளில் இயங்கத் துவங்கியபின், மறுபடியும் புராதன வாழ்க்கமுறைக்கு செல்வது என்பது முற்றிலுமான மனப்பிறழ்ச்சிக்கு மொத்த சமூகமும் மாறி நினைவழிக்கப்பட்ட நிலையில் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

நாடோடிகள்கூட இடப்பெயர்ந்து அலைதலைத்தான் தங்கள் வாழ்புலமாகக் கொண்டார்கள். இன்றைய சமூகத்தில் நாடோடிகளுக்கான ஒரு தன்னிலை அமைப்பாக காந்தியின் இந்த தன்னாட்சிக் கோட்பாட்டை மறுஉரை செய்து பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்பாக காந்தியிடம் உள்ளடங்கியருந்த மதச்சார்புநிலையை குறிப்பாக இந்துமத உணர்வையும் இந்துமதம் என்று அவர் இன்றை இந்திய பெருமதத்தை குறிக்கவில்லை என்றாலும், அது இந்துத்துவா சக்திகள் வளர எந்த அளவிற்கு ஆழ்தள அமைப்பில் அல்லது மத நினைவூட்டலில் துணைபோய் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். காந்தியைப் பற்றிய எந்த ஒரு மறுவாசிப்பிலும் இதைக் கவனத்தில் கொள்வது அவசியம். இன்றைய பேரழிவு எந்திரமான இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் கோரும் இந்தியனும் இந்து மதமும் ஒன்று என்பதுவே காந்தியின் நோக்கமாக இருந்தது. ஆனால் காந்தி இந்து என்பதை பன்மய நோக்கில் புத்தாக்கம் செய்தார். அவர்கள் அதை பிராமண மேலாதிக்க ஒற்றைமைய ஓரமைவாக்குகிறார்கள். குறிப்பாக பிராமண மேலாதிக்கமற்ற ஒரு இந்துமதமே காந்தியின் நோக்கமும் செயல்பாடும். அதுதான் அவரது உயிர் பறிக்க காரணமாக பிராமண சக்திகள் அமையும்படி வரலாறு நிகழ்த்திக்காட்டியது.

வாழ்நாள் முழுக்க இந்துமதத்தின் மேன்மைக்காக அதை நவீனப்படுத்தி அதன் கசடுகளைக் களைந்து புத்தாக்கம் செய்ய பாடுபட்ட காந்தி தனது மரணத்தின்மூலம் அதன் இந்துத்துவ கோரத்தை வெளிப்படுத்திக் காட்டிச் சென்றார். அந்தவகையில் காந்தி என்றும் வாசிப்பிற்கும் மறுவாசிப்பிற்கும் ஒரு மதச்சார்பற்ற உயரிய மதிப்பிற்கும் உரியவர்தான்.

காந்தியைக் கடந்த காந்தியம் என்ற தலைப்பிலேயே ஒரு விமர்சனம் உள்ளது. அது காந்தியம் காந்தியை கடந்த ஒன்று என்பதே. காந்தியின் இந்து மத உணர்வுகளை, இந்துமத ஆன்மீகப்பார்வையை, இந்துமதம்-இந்தியமதம் என்கிற இந்து உயர்நவிற்ச்சிப் பார்வையைக் கடந்து காந்தியம் என்கிற கோட்பாட்டை உரையாட இந்நூல் ஒரு துவக்கத்தை முன்வைத்துள்ளது.

நவீன உலகக்கட்டமைப்பின் அடிப்படையிலேயே அடிமைப்படுத்தலும் அழிவும் படிந்து கிடக்கிறது. ( பக். 153). அதனால் இயற்கையுடன் இணைந்த வாழ்வு இறைமையுடன் இணைந்த வாழ்வு என்கிற புராதன வாழ்முறையை அனுமானிக்கிறது காந்தியம். ”இந்தியா இந்த நவீன நாகரீகத்தை மறுத்துவிட்டு மெய்யான அறநெறிகளைக் கொண்டிருந்த தனது தொன்மையான வாழ்வியலுக்குத் ( ancient way of life ) திரும்பிச் செல்லுமென்றால் அந்த நொடியிலேயே அது விடுதலையடைந்து விடும்”  என்கிறார் காந்தி.

நவீன நாகரிகத்தைச் சமயத்தன்மையற்ற நாகரிகம் என்கிறார் காந்தி. சமயத்தன்மை என்பதே காந்தியின் அடிப்படைக் கருத்தியலாக இருந்துள்ளது. இயற்கை இறைமை இரண்டையும் இணைப்பது அதனால்தான். அவர் பகுத்தறிவை எதிர்த்து அதன் இருமை எதிர்வான சமயவாதத்தில் புகுந்துவிடுகிறார். சமயம் சரியா? தவறா? கடவுள் உண்டா இல்லையா? ஆன்மீகம், இறைமை போன்ற சொல்லாடல்களின் அரசியல் ஆகியவற்றின் கவனக்குவிப்புகள் இன்றி இவற்றைக் கையாளமுடியாது. இவை எல்லாம் முன்-நவீனக்கால சொல்லாடல்கள். காந்தி நவீனத்தை எதிர்க்க முன்நவீனக்கால கருவியான சமயத்தை கையில் எடுக்கிறார் என்கிற புள்ளியை கவனத்தில் கொள்ள வேண்டும். பின்நவீனம் மதம்போன்ற பெருங்கதையாடல்களை விமர்சிக்கிறது. அவ்வகையில் காந்தி ஒரு பின்நவீனத்துவர் அல்ல. ஆனால், இன்றை மையவாத கொடுங்கோன்மைக்கு எதிரான ஒரு பின்நவீனத்துவ வாசிப்பின் வழியாக காந்தியத்தை ஒரு சிறுசொல்லாடல் அமைப்பிற்குள் நிறுத்த முனைகிறது இந்நூல். அதனால் காந்தியத்தை ஒரு பின்நவீன ஆரம்பநிலைச் சொல்லாடலாக முன்வைக்கிறது.

நாடோடித்தன்மையும் குழுவாக வாழ்ந்த ஒரு பொற்கால நம்பிக்கையும் இணைக்கமுடியாது. வரலாற்றை மறுத்த காந்தி பண்டைய வரலாற்றை ஏற்கும் முரண்பாட்டை எப்படி பொருத்திப்பார்ப்பது? அதை உருவகம் என்பதாகச் சலுகை வழங்கிவிட முடியுமா? அது உண்மையில் உருவகமா? விடுதலை என்பது ஒவ்வொரு சமூகத்திலும் அன்றைய வரலாற்றுச் சொல்லாடலால் கட்டமைக்கப்படுவது. விடுதலை என்பதை எல்லா சமூகஅமைப்பிற்குமான ஒரு சொல்லாடலாக கொள்ளலாம். ஆனால் அதன் வடிவம், பொருள், இயக்கம், செயல்பாடு எல்லாம் ஒன்றாக இருப்பதில்லை.

இந்நூலின் குறிப்பான சில கவனக்குவிப்புப் பகுதிகளைப் பார்க்கலாம்.

பக். 157 ல் இந்தியாவில் தேசியவாதம் உருவானபோது அதில் இந்து மதவாதம் உள்ளடக்கமாக இருந்ததை சுட்டும் பகுதி முக்கியமானது.

பக்.158 ல் ஹிந்து சுவராஜ் புத்தகம் இந்துத்துவ வன்முறை இந்திய தேசியவாதத்திற்கு எதிரானதாகக் காந்தியால் முன்வைக்கப்பட்டது. காந்தி இந்துத்துவாவிற்கு எதிரான ஒரு கலாச்சார அடையாளமாக இந்திய  சுயராச்சியத்தை முன்வைத்தார்.

பக்-160 அம்பேத்கர், காந்தி இருவருக்கும் பயன்மதிப்பு மற்றும் நீதி குறித்து இருந்த  வேறுபாடு முக்கியமானது. அம்பேத்கர் இந்து மதத்தை பார்த்த விதமும் காந்தி பார்த்த விதமும் முக்கியமானவை. காந்தியின்நிலை இந்த இடத்தில்தான் சிக்கலடைகிறது என்கிற புள்ளியை சரியாகத் தொட்ட பிரேம் அதை விவரிக்காமல் காந்தியின் நிலைபாடுகளின் நியாயப்பாடுகளை அடுத்து விவரிக்கிறார். இந்த இடம் பிரேம் தனது அடுத்த பதிப்பிலாவது விரிவாக விவரிக்க வேண்டிய ஒன்று.

பக். 180-ல் 3 கேள்விகள் எழுப்பி பதில் சொல்லும் பகுதி மேற்கண்ட நாம் எழுப்பிய கேள்விகளை விவாதத்திற்கு உட்படுத்துகிறது. என்றாலும் அவை எல்லாவற்றையும் நவீன அறிவுவாதம் என்று ஒதுக்கிவிடுதல் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

காந்தியின் ஆத்மா பற்றிய விவாதத்தில் தர்க்கமுறையில் சொல்லுதலுக்கான சிக்கல்கள் உள்ளது. அதை பிரேம் இன்னும் ஆழமாக விளக்கவேண்டும். காந்தியின் ஆன்மா உடல் இணைமுரண்களை முரண்களற்றதாகக் காட்டும் பகுதிகளில் விடுபடுதல்கள் உள்ளது, அல்லது அப்பகுதிகள் முழுமையடையவில்லை. மீண்டும் ஆத்மா பற்றிய விளக்கத்தை மௌனமாக்கிச் செல்லும் ஒரு ஆன்மிகநிலையே உள்ளது. பகுத்தறிவால் அதை விளக்க வேண்டியதில்லை. அல்லது விஞ்ஞான சோஷலிஸத்தால் விளக்க வேண்யதில்லை. காந்தியக் கோட்பாடுகள் கொண்டே அதை விளக்க முயலலாம். அவற்றை உருவகமாகப் புரிந்து அழகியல், அரசியல் சொல்லாடலாக மாற்றுவது மீண்டும் ஒரு நம்பிக்கை அல்லது உணர்வு சார்ந்த ஒன்றாகவே எஞ்சுகிறது. மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை, காந்தியின்மீது வைக்கப்பட்டவை. அவற்றை நவீன அறிவியல் கொண்டு விளக்க வேண்டியதில்லை. மாறாக அறம் நீதி போன்ற கருத்தமைப்புகளால் செய்யப்பட்டுள்ள விளக்கம் இன்னும் தர்க்கம்கூடியதாக இருக்க வேண்டும்.

பக். 192 – காந்தி இலங்கை உரைதான் மிகமிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். அதில்தான் காந்தி நேரடியாக இந்துத்துவ பழமை மீட்புவாதத்தை எதிர்த்து தனது குரலைப் பதியவைக்கிறார். அவர் மதமாக முன்வைப்பதை ஒரு தந்திர உத்தியாக பயன்படுத்துகிறார் எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே அவனைத்தாக்கி குழப்பமடைய வைக்கிறார். தான் ஒரு இந்து என்பதற்கான அறமதிப்பீட்டை உருவாக்குகிறார். அதன்பின் இந்து என்ற பெயரில் வரும் பழமைவாதத்தை மறுத்து சரியானது எனபதாக ஒரு புதிய இந்த தர்மத்தை முன்வைக்க முனைகிறார். அதில் தீண்டாமை இல்லை, பன்மையான மதங்களின் சமாதான சகவாழ்வு உண்டு. நவீனத்துவக் கேடுகளைக் களைவதற்கான பொருளாதார அமைப்பு உண்டு. ஆனால் அவை எல்லாம் எந்திரங்களற்ற தேவைக்கானதை உடல் உழைப்பில் மட்டும் அடைவது. சமூகத்தின் வளர்ச்சி என்ற குறியின் மேல்நோக்கிய அல்ல கீழ்நோக்கிய கோட்டை நேர்க்கோடாக்கி சமநிலையில் நிறுத்த முயல்வது. இவைதான் காந்தியம் என்றால் இந்துமத தாக்கம் கொண்ட அல்லது ஒரு உருவகமாக முன்வைத்த காந்தி என்பவரது வாழ்வை அது கடந்து சென்றுவிட்டது. இன்று நமக்கும் தேவை காந்தி அல்ல காந்தியமே. அல்லது பிரேம் முன்வைக்கும் உத்தியான காந்தியாதல் என்பது.

பக். 204 மாயவரம் பொதுக்கூட்டத்தில் பேசியது 1915. இந்துமதம் என்பதை வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வை இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பக். 206 சாதி, வர்ணப்பிரிவினை பற்றிய காந்தியின் விளக்கம் தெளிவற்றதாகவும் குழப்பமாகவும் இருந்ததால் காந்தியச் செயல்திட்டம் என்பது தலித் விடுதலைக்கான அரசியலில் போதிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்கிற பிரேமின் வாதம் முக்கியமானது.

பக் 211 இந்த நூலின் மிக முக்கியமான ஒரு விவாதத்தை முன்வைக்கிறது. அது அம்பேத்கர் எப்படி காந்தியன் ஆன்மிக-அற-அரசியலை உள்வாங்கி தனது கருத்துக்களை வடிவமைத்துள்ளார் என்பது. காந்தியின் அரசியலில் ஏற்பட்ட பிழைகள் பற்றிய விமர்சனம் குறிப்பாக பூனா ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் நடந்துகொண்டவிதம் ஆகியவை பற்றிய விமர்சனத்தை காந்தியம் உள்வாங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் காந்தியையும் அம்பேத்கரையும் இணைப்பதற்கான முக்கிய தடையாக உள்ள அந்த இருள் பகுதிகள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு விமர்சன, சுயவிமர்சனப் பாங்கில் ஒரு ஒத்திசைவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமான ஒரு கருத்தாக்கம்.

இது குறித்துப் பலரும் சுட்டிக்காட்டிய போதும் இந்துத்துவாவின் தாக்குதல் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ள ஜனநாயகவாதிகள் பெரும்பான்மையான தாராளவாத இந்துக்கள், தலித் மற்றும் சிறுபான்மையினத்தவர்களான சீக்கியர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், நாத்திகர்கள், மார்கசியர்கள், இடதுசாரிகள் அனைவரும் வலதுசாரியாக கருதிக்கொண்டிருந்த காந்தியத்தை இடதுசாரி சிந்தனை தளத்திற்குள் வைத்து ஒருங்கிணைப்பதன்மூலம் இந்துத்துவா முன்வைக்கும் இந்துமதக் குறியீடுகளை அதற்கான திரட்டல்களை வலுவிழக்கச் செய்துவிடமுடியும். அவர்களது ”இந்துமதப் பொற்காலம்” என்ற கருத்தின் பிற்போக்குச் சிந்தனைகளை உடைத்து தூளாக்கி சரியானதொரு இந்தியப் பொற்காலக் கனவை உருவாக்க முடியும். அதற்கு மார்க்சிய, அம்பேத்கரிய, காந்திய கருத்தியல் ஒன்றை உருவாக்கும் செயல்திட்டத்திற்கான அடிப்படைகளை இந்த நூல் அறைகூவுகிறது. காந்தியை நிராகரிக்கலாம் ஆனால் காந்தியத்தை ஏற்கலாம் என்கிற நிலைபாடே இந்தப் புத்தகம் முன்வைக்கும் புதிய செய்தி. காந்தி என்பது புனித பிம்பம். காந்தியம் என்பது எதிர்காலத்திற்கான மாற்று அரசியலை முன்வைக்கும் விடுதலைக்கருத்தியல். இதுதான் காந்தி பற்றிய பிரேமின் பின்நவீன வாசிப்பு முன்வைக்கும் கருத்தாக்கம்.

நண்பர்கள் இந்நூலை பொறுப்புடனும் கவனமாகவும் வாசிப்பதன்மூலமும் தொடர்ந்து உரையாடுவதன் மூலமும் விடுதலைக்கான அந்தப் புள்ளியை நோக்கி நகரலாம். அந்தவகையில் ஒரு செயல்திறன்மிக்க நூலாக இது உருவாகி உள்ளது. இதுவே இன்றைக்கான மாற்று அரசியலுக்கான தேடலின் முதல் புள்ளியாக இருக்கும். இது முற்றுமுடிவானது அல்ல. தேடலுக்கான துவக்கம் என்பதைச் சொல்லி வாய்ப்பினை தந்த அனைவருக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லி முடிக்கிறேன்.

கட்டுரை வெளியான பன்மெய் வலை இதழின் சுட்டி.

http://panmey.com/content/?p=420

 -ஜமாலன் - 05-12-2013. [email protected]

எல்லாம் செயல் கூடும்

Dr Satya, Dr Bhumi, Thirunavukarasu, Chitran, Suneel, Manasa Bottom row- Prabahakaran Krishnammal Sabarmathi Sudhir Chandran 
 சிபியின் நடைபயண நாட்குறிப்புகளை வாசித்தபோது இதுவரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை சந்திக்காதது  பெரும் பிழை எனும் உணர்வு வலுபட்டது. இன்ன காரணம் என்றில்லை. சுணக்கம், அல்லது முனைப்பின்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட்டமிடல் ஏதுமின்றி பிப்ரவரி 2 ஆம் தேதி அவரை நேரில் சென்று சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டேன். குக்கூ சிவராஜிடம் கிருஷ்ணம்மாள் அங்கு இருப்பார்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு ஞாயிறு மதியம் புறப்பட்டோம். மனைவி மக்களுடன் சென்றேன். உடன் எழுத்தாளர்கள் சித்ரனும் பிரபாகரனும் வந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த நூறு வயது பாட்டியை காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை கண்ட விழிகளை அவர்களும் காண வேண்டும். காந்தியை கண்ட விழிகள் இந்த தளிர்களையும் காண வேண்டும். எத்தனை பெரிய காலமாற்றத்தில் சாட்சியாக அவர் நம்முன் வாழ்கிறார். இங்க தான் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் இரண்டு வாரம் தங்கினார் என்றொரு அறையை கைகாட்டினார். காமராஜர் இங்கயே தான் இருப்பார். எங்க வீட்டுக்காரர் இருந்தா வெளிலயே இருக்கிறதை எல்லாம் ஊதி முடிச்சுட்டு உள்ளே வருவார் என்று சொன்னார். வயதுக்குரிய உடல் மாற்றங்கள். மதியம் குட்டி தூக்கத்திற்கு பின் எங்களை காண வந்தார். 




காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே உள்ள ஊழியரகத்தில் தான் அவரை சந்தித்த்தோம். க்ரிஷ்ணாம்மாளின் சகோதரி மகனான இளங்கோ எங்களுக்கு உதவினார். பிள்ளைகள் வெளியே படிப்பதாகவும். அவர் பத்தாண்டுகளாக இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். கென்யா நாட்டை சேர்ந்த இருவர் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்கள். சர்வோதய தினத்திற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நடன வகுப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. சபர்மதி அவர்களுடன் சென்று விட்டாள். மலைகள் சூழ அழகிய இடம். உண்டு முடித்து ஓய்வெடுக்கும் நேரம். சற்று நேரம் கூடத்தில் அமர்ந்திருந்தோம். மெல்ல எங்களை நோக்கி நடந்து வந்தார். வயதிற்குரிய நினைவு தடுமாற்றம், குரல் தடுமாற்றத்தை கழித்துவிட்டால் திடமாக உள்ளார். கத்தி பேச வேண்டியிருக்கவில்லை. தொலைவில் நடந்து செல்லும் பெண்களை சரியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பார்வை நன்றாகவே இருந்தது. கூடத்தில் ஜெகந்நாதனின் படம் ஒரு பக்கமும் டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் அவர்களின் படம் இன்னொரு பக்கமும் மாட்டப்பட்டு இருந்தது. இன்னும் நிறைய படங்கள் மாட்டப்படுவதற்காக அங்கு இருந்தன. “இந்த இடம் ஊழியரகம்… வேலை செய்யிறவங்க வந்து தங்குறதுக்குன்னு உள்ள இடம். போலீஸ் தேடிக்கிட்டு இருந்த இங்க வந்துருவாங்க” என்று சிரித்தார்.    கிளம்புவதற்கு முன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்  வாழ்க்கை  வரலாறு நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலை வாசித்திருந்தேன். பிரிட்டிஷ் காவலர்கள், சுதந்திர இந்தியாவின் காவலர்கள் என எல்லோரும் அவரை விரட்டி இருக்கிறார்கள். பலமுறை பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறை சென்றிருக்கிறார்கள். அடிப்படை மனிதநேயம் இன்றி நடத்தப்பட்டிருக்கிறார்கள். கொள்கைக்காக சிறை என்பதை பெருமையாக எண்ணிய தலைமுறையின் இறுதி கன்னி. பண்ணையார்கள், கம்யூனிஸ்டுகள், காவலர்கள் என எல்லோருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டுள்ளார்கள். எதிர்ப்பு என்றால் வெறும் கருத்து பூசல் இல்லை. உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம். வினோபா தமிழகம் வருவதற்கு முன் பூதான பயணம் குறித்து ஏற்பாடுகளை செய்வதற்கு பயணிக்கும் போது ஒரு கிராமத்தில் அந்த ஊர் நிலக்கிழார் நன்கு உபசரித்து கைக்குழந்தையுடன் வரும் கிருஷ்ணம்மாளை தங்க வைக்கிறார். அன்றைய தினக்கூலி கேட்டு வரும் வேலையாட்களுக்கு விளக்கு வைத்துவிட்டதால் பணம் கொடுத்தால் லட்சுமி போய்விடும் எனும் காரணத்தை கூறி பண்ணையார் கூலி வழங்க மறுக்கிறார். விருந்தாளியாக சென்ற இடத்தில நமக்கேன் பொல்லாப்பு என ஒதுங்கி நிற்காமல் பண்ணையாரை கண்டிக்கிறார். எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்களை கண்டிப்பீர்களா என்று சொல்லி பெட்டி படுக்கைகளை தூக்கி தெருவில் வீசுகிறார்கள். இரவெல்லாம் கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் படுத்துறங்கினார். நீதிக்காக பிரச்சாரம் செய்வது சுலபம். நீதிமான்களாக காட்டிக்கொள்வது அதைவிட சுலபம். களத்தில் கண்முன் தெரியும் அநீதிக்கு ஆற அமர எதிர்வினை ஆற்றாமல் உடனடியாக ஆற்றுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும். மடத்தின் விருந்தாளியாக தங்கியிருந்தபோது சீனாவை போல் மக்களாக வன்முறையில் இறங்கி பிடுங்கிக்கொள்வதற்கு முன் மடத்தின் நிலத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லப்போக மடத்தினர் கிருஷ்ணம்மாளை வெளியேற சொல்கிறார்கள். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்ததை பற்றி எங்களிடம் சொன்னார். வீட்டிற்கே சென்று நிலமற்ற ஏழை பெண்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். திருவாரூரில் அம்மனுக்கு அவல் பாயாசத்திற்கு என 250 ஏக்கர் எழுதி வைத்துள்ளார்கள். அதை பிரித்து கொடுக்க வேண்டும். அம்மன் அடுப்பில் பாயாசம் வைக்க மாட்டாள். அடுப்பெரிய வேலை பார்க்கும் பெண்களுக்கு அந்த நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். “அரசு எல்லாம் கொடுத்துருச்சு.. நான் இப்ப திருவாரூருக்கு போகணும், கொஞ்சம் வெய்யில் குறையட்டும்னு பாக்குறேன். ஒரு ரெண்டு நாளுல போயி எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்திருவேன்” என்றார். பழைய நினைவுகளை இப்போது சொல்கிறாரா, அல்லது உண்மையிலேயே செல்ல வேண்டும் என சொல்கிறாரா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை. 

ஜெகந்நாதன் உழுபவர்களுக்கே நிலம் எனும்  நம்பியவர். அதுவே இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கும் என்று ஆழமாக நம்பினார். வினோபாவுடன் பூதானத்தில் நெருங்கி வேலை செய்தாலும் அவருடைய வழிமுறைகள் மீது விமர்சனம் இருக்கிறது. சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான முதல் சத்தியாகிரகம் செய்யும்போது காங்கிரஸ் காரர்களே ஜெகந்நாதனை எதிர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சரி, சொந்த அரசுக்கு எதிராகவே சத்தியாகிரகம் செய்வதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் தவறென்று இருந்தால் சத்தியாகிரகத்தை கைக்கொள்வேன் என்கிறார். வெவ்வேறு அமைப்புகளுடன் இயைந்து செயல்படுகிறார்கள், அமைப்புகளை தோற்றுவிக்கிறார்கள். அமைப்புகள் முக்கியமானவை, ஆனால் அவற்றுக்கு சில வரையறைகள் உள்ளன.  தாங்கள் அறம் என்று நம்புவதற்கு இடையூறாக தாங்கள் உருவாக்கிய/ பங்கெடுத்த அமைப்புகள் வந்தால் அவற்றை உதறி முன்னகரும் திண்மை பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. அமைப்புகள் அளிக்கும் பாதுகாப்பில் சுருங்கிக்கொள்ள தோன்றும். அமைப்புகளை பாதுகாப்பதை கடமையென கொள்வார்கள். அமைப்புகளின் நோக்கமே முக்கியம். காந்தியின் வழிமுறையும் அதுதான். ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலில் குமரப்பா வினோபாவுடன் பிணக்கு கொள்ளும் இடம் அபாரமான சிறுகதைக்குரிய பகுதி. காந்தியும் அய்யன்காளியும் உரையாடும் மெல்லிய நூல் போன்ற ஒரு பகுதி. குமரப்பா வினோபாவின் உன்னத இலட்சியத்தை புரிந்து கொண்டார். ஆனால் வினோபா நடைமுறைவாதியாக இல்லை எனும் வருத்தம் அவருக்கு உண்டு. பூதானத்தில் தானமாக அளிக்கப்பட பெரும்பகுதி நிலம் தரிசு தான். வினோபாவை பொறுத்தவரை இந்த அளவிற்காவது இந்த மாற்றம் நடக்கிறதே, இப்போது தரிசை கொடுத்தாலும் நாளை நல்ல நிலத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறார். குமரப்பாவோ கையெழுத்து இட்டு சேகரியுங்கள், உடனடியாக  பகிர்ந்து கொடுங்கள், பாசன வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என்கிறார். வினோபா அவை இப்போதைய தமது பணியல்ல என நம்புகிறார். விவசாய நிலத்தில் அறுவடைக்கு பிறகு தீ வைக்கப்படுவதை காட்டி குமரப்பாவிடம் சொல்கிறார்.  “அவர்கள் பழைய நிலத்திற்கு தீ வைக்கிறார்கள். நான் பழைய சமூகத்திற்கு தீ வைக்கிறேன். பழைய சமுதாயத்தின் நடைமுறைக்கு தீ வைக்கிறேன். அடுத்த தலைமுறை வரும் உழத்தொடங்கும். புதிய விதைகளை விதைக்கும். என் பணி தீ வைப்பது தான்.” குமரப்பாவிற்கு இந்த பதில் நிறைவளிக்கவில்லை.  நடைமுறையை கணக்கில் கொள்ளாத பதில் என்கிறார். விருந்துக்கு வாருங்கள் என அழைத்து இலையில் உப்பை மட்டும் பரிமாறுவது போல உள்ளது . இன்று முதலில் உப்பை சாப்பிடுங்கள், நாளைக்கு சாப்பாடு போடுவேன், அடுத்தநாள் சாம்பார் ஊற்றுவேன் என்பதை போல் உள்ளது உங்கள் பேச்சு என விமர்சிக்கிறார். தினமும் காலை (காலை என்று சொல்லலாமா என தெரியவில்லை) 2.30 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டிருந்தவர் என்றார் கிருஷ்ணம்மாள். ஆதி சங்கரரின் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்வது அவர் வழக்கம். பஜ கோவிந்தம் என சொல்லும்போது அரிக்கேன் விளக்கை தூக்கிக்கொண்டு கிருஷ்ணம்மாள் முன்னே நடக்க தொடங்குவார். விடிவெள்ளியை பார்த்து நிற்கும் வினோபா சொல்கிறார். விடிவெள்ளி வந்துவிட்டது சூரியன் விரைவில் உதித்துவிடும் தானே. குமரப்பா கிளம்பும் செய்தி அறிந்து குடிலுக்கு செல்கிறார். அங்கே எல்லா பொருட்களும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றன. வினோபா அவற்றை ஒழுங்காக பெட்டியில் அடுக்கி தருகிறார். ஒரேயொரு விவசாயி கலப்பையுடன் சென்று கொண்டிருக்கிறான். வினோபாவும் குழுவும் நடக்கும்போது எதிர்திசையில் நடக்கும் விவசாயியின் திசையில் குமரப்பா நடக்கிறார். காந்தியம் என்பது வெறும் ஆன்மிகம் அல்ல. வறட்டு லட்சியவாதம் அல்ல. நடைமுறை பயனை எப்போதும் கணக்கில் கொள்வது. உடனடி விஷயங்களை காலாதீதமான விழுமியங்களை கொண்டு எதிர்கொள்ள முற்படுவது. வினோபா காந்தியை காட்டிலும் மேலான ஆன்மீக வாதியாக இருக்கலாம் ஆனால் அவரால் காந்தியாக ஆக முடியாது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒருவகையில் காந்தியை சாராம்சமாக உள்வாங்கியவர்கள். காந்தி எதை செய்திருப்பாரோ அதையே இவர்களும் பல சமயங்களில்  செய்தார்கள்.   


நூலிலும் நேர்பேச்சிலும் வினோபாவை பற்றிய பல சுவாரசியமான சித்திரங்கள் வருகின்றன. வினோபா நாளுக்கு பதினெட்டு முறை தயிர்சாதமும் தேனும் உண்பார். ஒவ்வொரு முறையும் பகவத் கீதையின் முழு அத்தியாயத்தையும் பாராயணம் செய்துவிட்டு ஒரு கவளத்தை உண்பார். வினோபாவிற்கு உடலநிலை சரியில்லாமல் பீகாரில் இருந்தபோது இந்தியா முழுக்க தலையில் சோற்றையும் பருப்பையும் சுமந்தபடி சர்வோதய ஊழியர்கள் அவரை காண வருகிறார்கள். பிள்ளையை விட்டுவிட்டு வா என்றாலும் பூமி கையை இறுக பற்றிக்கொண்டதால் முதல் சில ஆண்டுகள் இவர்களுடனேயே திரிகிறார். மாணிக்கவாசகரின் அச்சோ பத்திலிருந்து முத்தி நெறி பாடலை வினோபா பாடுவாராம். அப்போது அவருக்கு ஓய்வெடுக்க வேண்டும் என பொருள் என்றார். பேசும்போதெல்லாம் குரலில் தெரிந்த நடுக்கம் பாடும்போது இல்லை. வள்ளலாரின் ‘எல்லாம் செயல் கூடும்’ பாடலை கொஞ்சமும் பிசிறின்றி பாடினார்.


 துறவியாக செல்ல இருந்தவரை பிடித்து கிருஷ்ணம்மாளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கதர் துண்டை தலையில் அணிவிப்பது தான் திருமணம். ஜெகந்நாதனும் கிறிஸ்து குல ஆசிரமத்தில் சிலர் தங்களது உடல் தேவைகளை முறையற்ற வழியில் தீர்த்துக் கொள்வதை பார்த்து சமூக வாழ்விற்கு நல்ல இல்வாழ்வு தேவை எனும் முடிவுக்கு வருகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை பற்றி சொல்லும்போதெல்லாம், அவர் என்றோ எங்க வீட்டுக்காரர் என்றோ தான் சொல்கிறார். திருமணமான தொடக்கத்தில் தன்னை தனியாக விட்டுவிட்டு அவர் அலைந்தது பற்றிய  குறை இப்போதும் கூட இருப்பதாக பட்டது. கீழே சிமெண்டு தரையை காண்பித்து இது அவரே தன் கையால போட்டது இன்ன வரை இருக்குது என்றார். ஜெகந்நாதன் போன்ற கணக்கற்ற தொண்டர்கள் தன்னலமற்று உழைத்த நிலத்தில் தான் நாம் எல்லோரும் இன்று  நிற்கிறோம். ஜெகந்நாதன் மண் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். போட்டதை போட்டபடி விட்டுவிட்டு அடுத்தடுத்து பயணிக்க அதுவே எதுவாக இருக்கும். இந்தியா முழுக்க கால்நடையாக அலைந்து  திரிந்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் நடந்தே சென்றிருக்கிறார்கள்.



ராலே கெய்தான் பற்றி சொல்லி கொண்டிருந்தார். கெய்தான் அமெரிக்க மிஷனரி. இந்திய விடுதலை பற்றி பேசியதால் மிஷனரியில் இருந்து நீக்க பெறுகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நெருங்கிய சகாக்களில் ஒருவர். கெய்தான் எல்லாருக்கும் வேலைகளை பிரித்து கொடுப்பாராம். மதியம் வரிசையாக எல்லோர் கைகளையும் சோதிப்பாராம். உடல் உழைப்பிற்கான தடயம் தென்பட்டால் தான் சோறு. மீண்டும் மாலையும் இதே சோதனை நடக்கும். அப்போது உழைத்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு சர்க்கரை வள்ளி கிழங்கு கொடுப்பார் என்றார்.   

‘சுதந்திரத்தின் நிறம்’ இறால் பண்ணைக்கு எதிரான போராட்டம் நிறைவு பெறாத காலத்தில் எழுதிய வாழ்க்கை சரிதை.  சரியாக சொல்வதானால் நீண்ட நேர்காணல்,  கூடவே லாரா கோப்பாவின் இந்தியா குறித்த அவதானிப்புகள் நிறைந்த நூல். கிருஷ்ணம்மாள் அவர்களின் மகன் டாக்டர் பூமியிடம் ஒரு முழுமையான வரலாறை  எழுத வேண்டியதன் அவசியத்தை கூறினேன். வாக்கரசியலுக்கு வெளியே இயங்கும் மகத்தான மனிதர்களை நாம் கண்டுகொள்வதில்லை. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அமைதியை உருவாக்க ஊர் ஊராக செல்கிறார்கள். கீழ்வெண்மணி கொடுமையின் போது முதல் மனிதர்களாக சென்று சேர்கிறார்கள். காந்தி, வினோபா, ஜெ.பி என மகத்தான மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள்.  சமகால அரசியல் விவாதங்களில் அவர்கள் இடம்பெறாமல் போகலாம். வாக்கரசியலே உரையாடலை தீர்மானிக்கும் ஆற்றலாக உள்ளது. ஏதோ ஒரு கட்சியின் ஓட்டு வங்கிக்கு உதவாத ஆளுமைகளை இங்கே நினைவில் நிறுத்துவது கடினம்.  மக்கள் நினைவுகளில் இவர்கள் என்றென்றும் நீடித்திருப்பார்கள். எத்தனை மகத்தான பெருவாழ்வு! சொற்களில் உழன்று கொண்டிருப்பவனாக மட்டும் இருப்பதற்காக  வெட்கினேன். தன் கையால் குழந்தைகளுக்கு ரொட்டி கொடுத்தார். பூமி அவர்களுடனும், சத்யா அவர்களுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். 


கிளம்பும் முன் அவர்களிடம் ‘தமிழகம் உங்களுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கு’ என்று சொல்லி  வணங்கினேன். ‘கடன் என்ன..கடமையை செய்யிறோம். அவ்வளவுதான்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல். ஆதர்ச எழுத்தாளரான யுவன் சந்திரசேகருடன் அவருடைய நாவல்கள் பற்றி உரையாடும்போது துறவு அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது கதைகளில் தொடர்ந்து தொழிற்படுவதை பற்றி கேட்டேன். “வெளியேறி எங்க போறான்? குடும்பம்ங்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியேறி போறவன் உலகமே தனது குடும்பங்கிற பெரிய வட்டத்திற்குள்ள போறான்னு பாக்கலாம் இல்லையா” என்றார். ஜெகந்நாதன் துறவியாக வேண்டும் என்று விழைந்து இல்லறத்தில் ஈடுபட்டவர். அவரை துறவி என்பதா இல்லறத்தார் என்பதா. எல்லா துறவிகளும் இல்லறத்தார் தான். புவி முழுமையும் அவர்களது குடும்பம். தன்னலமற்று நோற்கப்படும் யாவையும் நோன்பே. நான் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து உள்ளூர அனத்தல் பெருகியது. இந்த அனத்தல் நல்லதற்கே. உள்ளூர ஒலிக்கும் சன்னமான ஆனால் திடமான குரல் செவியில் விழக்கூடும்.






ஒரு காந்திய பயணம்

 

ஈரோடு- திருப்பூர்  அறக்கல்வி மாணவர்கள் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி கோவை போத்தனுர் காந்தி ஆசிரமத்திலிருந்து வேதாரண்யம் சத்தியாகிரக நினைவிடம் வரையில் 400 கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் யாத்திரையை  ஜனவரி 28 ஆம் தேதி நிறைவு செய்தார்கள்.  யாத்திரை எனும் சொல்லை குறித்து யோசித்து கொண்டிருந்தேன். தண்டி பயணம் என சொல்லவில்லை, யாத்திரை என்றே சொல்லியிருக்கிறார்கள். இயல்பாக பயணம் எனும் சொல்லுக்கு இருக்கும் உலகியல் வரையறைக்கு அப்பால் யாத்திரை எனும் சொல்லுக்கு ஒரு ஆன்மீக பொருள் சேர்கிறது. பயனத்திற்கொரு புனித நோக்கு சேரும்போது அது யாத்திரையாக ஆகிறது. 

                        


சிபி, அனுஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், லைலா பானு, அர்ச்சனா ஆகியோர் தான் மொத்த பயணத்தை நிறைவு செய்த அறுவர். கொடைக்கானல் சபரீஷ் இவர்களுடன் ஏறத்தாழ ஒரு வாரம் நடந்திருப்பார். சரண்யாவும் நான்கைந்து நாட்கள் நடந்தார் என்று எண்ணுகிறேன். சந்தானிகா, ஸ்ரீவித்யா, மோகன் ராஜ் ஆகிய மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் நடந்திருப்பார்கள். கண்டனூர் நாராயணனும் அவரது பனிரெண்டு  வயது மகன் ராம் சிதம்பரமும் இரண்டு நாட்கள் நடந்தார்கள். இந்த பயண நோக்கத்தை பற்றி நிறைய பேசலாம், ஆனால் 18 நாட்கள் நீண்ட நடை பயணம் என்பதே  நடந்தவர்களுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். உணவிற்கோ தங்குமிடத்திற்கோ பெரிய திட்டமிடல் இல்லாமல் மக்களை நம்பி நடந்தார்கள்.  சிறு இடர்களுக்கு  அப்பால் நான்கு பெண்கள் கொண்ட குழுவிற்கு எந்த தொந்தரவும் இல்லை.   


புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும்போது குடும்பத்துடன் சென்று சந்தித்து வந்தோம். நடந்து நடந்து கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தது. அனைவரும் பிளாஸ்திரிகள் ஒட்டியிருந்தார்கள். வாடை காற்றிலும் மழையிலும் நடந்ததால் லேசான உடல்நலமின்மை சிலருக்கு.  பிறகு வேதாரண்யத்தில் நிகழ்ந்த நிறைவு நாள் விழாவிலும் பங்கு கொண்டேன். மணப்பாறை- புதுக்கோட்டை வழியில் சித்தூர் எனும் கிராமத்தில் இருந்த கருப்பர் கோவில் வாசலில் மதிய ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது சென்று சேர்ந்தோம். அன்று மனைவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவு எடுத்து வருவதாக திட்டம். ஆனால் நாராயணன் கொண்டு வந்த காலையுணவை மதியம்தான் சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முந்தைய நாள் தங்கிய இடத்தில அந்த அளவு கவனிப்பு. நடந்து நடந்து இளைப்பீர்கள் என்று பார்த்தால் ஒரு சுற்று பெருத்ததாக தெரிகிறதே என கேலி செய்து கொண்டிருந்தோம். அதுவரையிலான பயணத்தில் அவர்கள் ஆகப்பெரிய சவாலாக உணர்ந்த விஷயத்தை பற்றி பேசினோம். மலைகளுக்கு இடையே இருளில் நடக்கும்போது தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக திட்டமிட்ட ஊரை அடைவதற்கு முன்பே வேறொரு ஊரில் தங்குமிடம்  தேடும் நெருக்கடி ஏற்பட்டதை பற்றி அனுஸ்ரீ கூறினார். தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக சொன்னார். சாலைகளில் துரத்தி வந்த குடிகாரர்கள், அனுமதி அளிக்காத தந்தை, உடல் ஒத்துழைக்குமா எனும் ஐயம் என வேறு வேறு விஷயங்களை சொன்னார்கள். தெரு நாய்களை எப்படி சமாளித்தீர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் திடமாக நடந்து வந்தால் விட்டுவிடும் என்றார்கள். பயணத்தின் ஊடாக சில நுட்பங்களை கண்டடைந்துள்ளார்கள். ஆண்கள் இருக்கும் வீட்டில் கழிவறை உபயோகிக்க கோரினால் அனுமதிப்பார்கள் என்பது அப்படியான ஒரு கண்டுபிடிப்பு. மாவட்டங்கள் தோறும் தங்களது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பு சார்ந்தும் சில விஷயங்களை சொன்னார்கள். பொதுவாக மனிதர்களின் நல்லதன்மை மீது நன்னம்பிக்கை ஏற்பட்டதாகவே சொன்னார்கள். பிளாஸ்டிக் பேட் பால் கொண்டு சுதீருடன் சிபியும் கௌதமும் விளையாடினார்கள். நாராயணன் ஏற்பாட்டில் இட்டிலி, இடியாப்பம், கவுனி பாயாசம் ஆகியவற்றை மதிய உணவாக உண்டோம். எங்களுடன் வந்த சிங்கப்பூர் கணேஷ் பை நிறைய நார்த்தம் பழத்தை கொண்டு வந்தார். உண்டு முடிக்கும் சமயத்தில் திண்டுக்கல்லில் இருந்து உமையாள் தேனப்பன் தம்பதியினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்களின் உடைகளை துவைத்து காயப்போட்டு கொண்டு வந்திருந்தார்கள். முதல்முறையாக அவர்களை சந்தித்தேன். தேனப்பன் கட்டுமான பொறியாளராக உள்ளார். உமையாள் ‘வேதாத்திரி மகரிஷி’ வாழ்க வளமுடன் யோக பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் நடக்க தொடங்கிய போது சுதீரும் அவர்களுடன் நடந்து வருவதாக பிடிவாதம் பிடித்தான். கொஞ்ச தூரம் நடந்தபிறகு நிறைவுநாளில் அவர்களுடன் நடக்கலாம் என்று உறுதியளித்து அழைத்து கொண்டேன். 


நிறைவு நாள் அன்று மதியம் அம்மாவும் என்னுடன் வந்தார். சுதீர், நாராயணன், அவரது மகன் ராம் சிதம்பரம், சிங்கப்பூர் கணேஷ் என எல்லோரும் புறப்பட்டோம். ரோட்டரி சங்கம் ஆங்காங்கு மாணவர்களுக்கு வரவேற்பு அளித்து வந்தது. இறுதி நான்கு கிலோமீட்டர் இருக்கும் போது வந்து சேர்ந்தோம். சுதீர், ராம், நாராயணன், கணேஷ் என எல்லோரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அறப்போர் ஜெயராமன், கிருஷ்ணன், குக்கூ நண்பர்கள் என ஒரு திரள் நடந்து வந்தது. நானும் அம்மாவும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்தோம். அரசு சித்த மருத்துவர் ரமேஷ் குமார் வேதாரண்யத்தில் தான் பணிபுரிகிறார். எனது கல்லூரி இளவல். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சத்தியாகிரக நினைவிடத்தில் கூட்டம் நடந்தது. ரோட்டரி சங்க கூட்டம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. நிறைய உரைகள். மாணவர்கள் தங்களது அனுபவங்களை செறிவாக பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அறப்போர் ஜெயராமன், பேராசிரியர் பழனித்துரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாரிசுகளான இருவரை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அறக்கல்வி ஆசிரியர்களான அனீஸ் நாயரும், லோகமாதேவி அவர்களும் நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கையெழுத்திட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிருஷ்ணன் மாணவர்கள் மீது விழுந்திருக்கும் பொறுப்பு சுமையை பற்றி பேசினார். காந்தியிடம் இந்த சிக்கல் உண்டு. காந்திக்கு எல்லாவற்றிலும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனும் சிக்கல் உண்டு. காலப்போக்கில் அது தான் மட்டும் என்பதாக இல்லாமல், மனைவி பிள்ளைகள், சீடர்கள் என தன்னை சார்ந்த எல்லோருமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது ஒரு நெருக்கடி. ஹரிலால் இந்த நெருக்கடியில் தாக்குபிடிக்காமல் உதிர்ந்தவன். உள்ளத்திண்மையை சோதிக்கும் சோதனைகள் இனிதான் வரக்கூடும். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 


கரியப்பட்டணம் எனும் ஊரில் விஜயலக்ஷ்மி எனும் வாசகர் வீட்டில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடை பயணம் முடித்த மாணவர்கள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. கௌதம் ஒரு மூலையில் தனியே அமர்ந்திருந்தான். சௌமியா ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள். சுமார் இருபது நாட்கள் ஒன்றாக செய்த பயணம். திரும்ப முடியாத காலத்துளிகளால் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்நினைவுகள் வாழ்நாள் சேகரம். பெரும் யாத்திரைகள் எந்த அளவிற்கு புறத்தில் நிகழ்கிறதோ அதே அளவிற்கு அகத்திற்குள்ளும் நிகழும். 


விஜயலஷ்மியின் இல்லம் அழகாகவும் விசாலமாகவும் இருந்தது. இரவு நெடுநேரம் பாட்டு, பேச்சு, கொண்டாட்டம் என சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரையிலான பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. நிரம்பி ததும்பும் நீர் நிலைகள். வயல் வெளிகள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிராதப ராமபுரம் எனும் ஊரில் ஊராட்சி தலைவராக உள்ளவரை சந்தித்தோம். முழு மூச்சுடன் முன்மாதிரி ஊராட்சியாக கொண்டுவர முனைகிறார். அவரது முயற்சிகள், இலட்சியங்கள் குறித்து பேச முடிந்தது. தன்னலமற்ற செயல் ஒத்த மனமுடையவர்களை ஒன்றிணைக்கும். 

காலை எழுந்து உணவு உண்டுவிட்டு கோடியக்கரை சென்றோம். தை அம்மாவாசையை என்பதால் கடற்கரையில் கூட்டம். குரங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வனக்காவலர்கள் அறிவுறுத்தினார்கள். கடலில் குளிக்க வேண்டும் எனும் திட்டத்தை நீரை பார்த்ததும் மாற்றி கொண்டேன். நான்கைந்து வண்டிகளில் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சென்றோம்.  வெளி மான், காட்டு பன்றி, கீரி, கலைமான் ஆகியவற்றை பார்த்தோம். நாராயணனும் ராம் சிதம்பரமும் எங்களுக்கு விதவிதமான பறவைகளை சுட்டி  காட்டினார்கள். உபயம் பறவை பார்த்தல் வகுப்பு, வெள்ளிமலை. ராஜராஜன் எழுப்பியதாக நம்பப்படும் பொன்னியின் செல்வன் புகழ் கலங்கரை விளக்கத்தை கண்டுவிட்டு திரும்பினோம். திரும்பும் வழியில் இரண்டு நரிகளை கண்டோம். (நாங்கள் மட்டுமே கண்டோம் என்பதில் சற்று கூடுதல் பெருமை).     


400 கிலோமீட்டர் வாக்குக்கு பணம் பெறாதீர்கள் எனும் செய்தியை தாங்கி ஆறு மாணவர்கள் நடந்து வருகிறார்கள். இது இந்த ஊர்களில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? இன்றைய அரசியல் சூழலில் இவர்களின் சன்னமான ஆனால் திடமான குரல் எடுபடுமா? எல்லா அறமின்மைகளும் இயல்பாக்கம் அடையும் காலகட்டம் இது. தேர்தலுக்கு நாளிருக்கிறது. இவர்களிடம் வாங்க மாட்டேன் என உறுதி அளித்தவர்கள் அந்த சொல்லை காப்பாற்றுவார்களா? எந்த கேள்விக்கும் துலக்கமான விடை என ஏதுமில்லை. உடலை மெய் என்று குறிக்கிறது தமிழ் மொழி. உடலை வருத்துதல் என்பது மெய் வருத்தம். உடலே நமக்கு முன் இருக்கும் தூலமான மெய். உடலை காப்பதே நம் அடிப்படை விசை. அதன் எல்லைகளை நகர்த்தி, அதையே பணைய பொருளாக வைக்கும் போது நாம் நம்பும் விஷயத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறோம். அதற்கொரு ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். சிறிய அளவிலாவது மாற்றங்கள் நிகழும். விதிமுறைகள் நாமே வகுத்து கொண்டவை. நமக்குள்ளாக ஏற்படுத்தி கொண்ட பொது ஒப்பந்தம். வாக்களிப்பது நம் கடமை. வாக்குகள் சந்தை சரக்குகளாக மாறும் போது நம் நலத்திற்காக நாம் ஏற்படுத்திய அமைப்புகளையும், விதிகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். பொது அமைப்புகள், பொது விதிகள் சுயநல தேவைகளுக்காக அலட்சியப்படுத்தப்படும் தோறும் பலவீனமடையும். காந்தியம் தனிமனிதனை மாற்றத்தின் அலகாக கொள்கிறது. இந்த பயணத்தின் ஊடே வெகு சில தனியர்கள் மாறினாலும் கூட சரிதான். முனை மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.   


காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள்

 

Sketch by Adhimoolam

ஜனவரி 2025 காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை 

முன்னூறு இதழ்கள் கடந்திருக்கும் காலச்சுவடிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் சூழலில் காந்தியம் குறித்த உரையாடலில் காலச்சுவடின் பங்களிப்பை இந்த தருணத்தில் மதிப்பிடுவதே என் கட்டுரையின் நோக்கம். இதன் பொருட்டு சில நாட்களாக பழைய இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன். காலச்சுவடில் என் எழுத்துக்கள் முதல் முறையாக வெளியானது காந்தியின் பொருட்டுதான். ஏப்ரல் 2014 இதழில் அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி அழித்தொழிப்பு’ நூலுக்கு எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ எனும் விரிவான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டது. அந்த முன்னுரை அம்பேத்கரின் பங்களிப்பையும் அவரது சிந்தனையின் முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுவதைவிட காந்தியை அவருக்கு எதிரியாக கட்டமைப்பதிலும் மேற்கோள்களை திரித்து காந்தியின் மீது

அவதூறு செய்வதிலும் அதிக கவனம் எடுத்துக்கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. அருந்ததிராய்க்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய விரிவான மறுப்பு ‘சுதந்திரமும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் சிறு பிரசுரமாக சர்வோதயத்தில் வெளியானது. பி. ஏ கிருஷ்ணன் கோரிக்கொண்டதின் பேரில் ராஜ்மோகன் காந்தியின் பதிலில் இருந்து ஒரு பகுதியை காலச்சுவடு பிரசுரித்தது. அதன் பின் 2020 ஆம் ஆண்டு ‘காந்தி 150’ எனும் சிறப்பு பகுதியும் 2023 ஆம் ஆண்டு ‘இன்றும் காந்தி’ எனும் சிறப்பு பகுதியும்  வெளியானதில் எனது பங்களிப்பும் உண்டு. திரிதீப் சுஹ்ருத்தின் ‘சத்திய சோதனை’ நூலுக்கான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியானது. ‘காந்தியும் ஆயுர்வேதமும்’ கட்டுரை பரவலாக கவனம் பெற்றது. ஆயுர்வேதம் எனும் பேசு பொருளைக் கொண்டு காந்தி மரபை எவ்விதம் அனுகினார் என காண முயற்சித்தது. ‘காந்தி சாதியவாதியா?’ என்னும்  கேள்விக்கு காந்தியின் எழுத்துக்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவரது வாழ்க்கை தருணங்களையும் கருத்தில் கொண்டு புதிய கோணத்தில் தனது வாதங்களை நிஷிகாந்த் கோல்கேயின் நூல் முன்வைக்கிறது. அண்மை காலத்தில் வெளிவந்த இவ்விறு சிறப்பிதழ்களில் த. கண்ணன், விஷ்ணு வரதராஜன், சித்ரா பாலசுப்பிரமணியம், சுரேஷ் பிரதீப், அரவிந்தன் கண்ணையன், பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் போன்றவர்கள் எழுதியுள்ளார்கள்.  இவை அண்மைய காலத்தில் வெளிவந்தவை என்பதால் இந்த கட்டுரையில் இவற்றை குறித்து பேசுவதை தவிர்க்க விரும்புகிறேன். இதற்கு முன் 2005, 2008 ஆண்டுகளில் காலச்சுவடு காந்தி சிறப்பு பகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை அவதானிப்பது சுவாரசியமாக இருக்கக்கூடும். 


பெரும்பாலான இந்தியர்களுக்கு இருப்பது போலவே எனக்கும் காந்தியின் மீது மதிப்போ வெறுப்போ ஆர்வமோ இல்லாத உறவு தான் இருந்தது. இதன் பொருள் என் அன்றாட வாழ்வில் அவருக்கு எந்த இடமும்  இல்லை என்பதுதான். இது மாறியதற்கு இரு முக்கிய காரணிகளை என்னால் சுட்ட முடியும். ஒன்று, ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ இரண்டு ‘இறுதி கட்ட ஈழப்போர்.’ காந்தியை போன்றே ஈழ அரசியல் குறித்தும் எனக்கு பெரிய அறிதலோ ஆர்வமோ கிடையாது. ஆனால் அதன் இறுதி தருணங்கள் மனதில் ஒருவித பதைப்பை உண்டாக்கியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் இன்றைய காந்தியும் வெளியானதாக நினைவு. ஒரு வரலாற்று ஆளுமைக்கு சரிநிகராக அமர்ந்து உரையாடும் வாய்ப்பு நமக்கு வெகு சிலரிடம் மட்டுமே கிடைக்கும். காந்தியை அத்தகையவராக அவரது அத்தனை முரண்பாடுகளோடும் கண்டுகொண்டேன்.  ‘காந்தி- இன்று’ என்று இணையதளத்திற்கு பெயரிட இரண்டு காரணங்கள். ஜெயமோகனின் நூலும், சுந்தர ராமசாமியின் கட்டுரையும். 1986 ஆம் ஆண்டு ஞானரதம் இதழில் வெளியான ‘காந்தி இன்று’ கட்டுரையில் காந்தியை எப்படி அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார். “நேர்மையான மறுபரிசீலனைக்கான காலம் இப்போது தோன்றுகிறதோ என மகிழ்வு கொள்வதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த மறுபரிசீலனை செம்மைப்பட நாம் காந்தியுடன் எந்தவிதமான உறவுகொள்ள வேண்டும்? இதுதான் மிக முக்கியமான விஷயம். நாம் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். மேற்கத்திய சித்தாந்தங்கள் எவற்றிலும் சிறைப்பட்டு நிற்காமல், மதக் கோட்பாடுகள் எவற்றிலும் சிக்குண்டு கிடக்காமல் நாம் அவரைப் பார்க்க வேண்டும். எவ்விதமான முடிவுக்கும் வர நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் சுதந்திரத்தை, எந்த அமைப்புக்காகவும் விட்டுக்கொடுக்கப் பிடிவாதமாக மறுத்து, திறந்த மனத்துடன் நாம் அவரைப் பார்க்க வேண்டும்.”  சு ராவின் காந்தி குறித்த பார்வையின் நீட்சி காலச்சுவடில் தொடர்ந்து வெளிப்படுகிறது என்று எண்ணுகிறேன். 


2000 க்கு மத்தியில் காந்தி மீதான கவனம் மீண்டும் துளிர்க்க தொடங்கியதற்கு என்ன காரணம் என ஆராய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான சிக்கல்களை கொண்டிருப்பது போல அவற்றுக்கான முறை மருந்துகளையும் கொண்டிருக்கும் என நம்புகிறேன். உலகமயமாக்கல் வாசல்களை திறந்துவிட்டது. ஒருவகையில் உலகமயமாக்கல் முதலில் கோரும் பலியாக காந்தி தான் இருப்பார் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் மால்களில் சிகார் பிடிக்கும் சேகுவேரா டி ஷர்டுகளை விற்பனை செய்வது போல உலகமயமாக்கல் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தியது. நுகர்வின் உச்சத்தில் திளைத்து பொருளின்மையை உணரும் ஒரு நகர்ப்புற / படித்த மேல் நடுத்தர வர்க்கம் 2000 களின் மத்தியில் உருவானது. 


அக்டோபர் 2005 காலச்சுவடு இதழில் எஸ். பிரசன்னா எழுதிய ‘‘காந்தியும் நானும்’ இந்த புதிய தலைமுறையின் பிரதிநிதி என சொல்லலாம். புதிய குரல்கள் கேட்க தொடங்குகிறது. அன்றைய காலகட்டத்தில் காலச்சுவடு இதழ்களில் பங்காற்றிய சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம்  போன்றோரின் குரல்கள் இதே மரபின் தொடர்ச்சி என தோன்றுகிறது. கண்ணன் தண்டபாணி தொடங்கி இன்று முனைப்புடன் செயலாற்றி வரும் குக்கூ சிவராஜ் குழுவினர்  வரை இந்த சரடு இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது. ‘அரசியல் காந்தி’ மீது இவர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. களச் செயல்பாட்டிற்கு காந்தியிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்கள். பிரசன்னாவின் ‘காந்தியும் நானும்’ கட்டுரை அரசியல் நீக்கம் செய்யப்பட அந்தரங்கமான காந்தியை முன்வைக்கிறது. “காந்தியுடன் என்னால் தனிப்பட்ட முறையில் உறவுகொள்ள முடிகிறது. தனிப்பட்ட பிரச்சினைகளைப் பேச முடிகிறது. இந்த உலகுடன் உறவுகொள்ள, இந்த உலகைப் புரிந்துகொள்ள அவரால் எனக்கு உதவி செய்ய முடிந்தால் அதுவே போதுமானது. உலகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க என்னால் வழி கூற முடியாது. உலகமயமாக்கல் நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல முடியாது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வளர்ச்சி பற்றிய கேள்விகள் முடிவில்லாத விவாதத்திற்குரியவை. காந்தியாலும் இதற்கெல்லாம் விடைகூற முடியுமா என்பதும் சந்தேகம்தான். உலகம் தற்போது எதிர்கொள்ளும் தீவிர வாதத்தைக் காந்திய வழிப்படி எதிர்கொள்ள முடியுமா என்பதற்குப் பதில் கூறுவதும் எளிதல்ல. ஆனால் என்னால் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமை என்ற கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த வீட்டில் இருப்பவருடன் இணக்கமாக வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான நெறிகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதுதான் இப்போதைக்குச் சாத்தியம். நமது தனிப்பட்ட வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் மாற்றம் நம்முடைய ஆத்ம சத்தியால் நாளை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியலாம். காந்தி போன்றவர்கள் ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் நீடித்ததவத்தின் விளைவாய்த் தோன்றுபவர்கள். ஒரு சமுதாயத்தின் சராசரித் தரத்தைத் தாண்டிய மாபெரும் பாய்ச்சலை அச்சமுதாயத்தினுள் இருக்கும் ஒருவரால் நிகழ்த்த முடியாது. காந்தி, அவர் வாழ்ந்த சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையின் லட்சிய வடிவம்.”  



எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் ‘அரசியல் காந்தியே’ அதிகமும் விவாதிக்கப்பட்டார். இடதுசாரி எழுச்சி, தலித் அமைப்புகளின் வளர்ச்சி காந்தியை முழுக்க எதிர்மறையாக அணுகின. ஆகவே ஒரு குறுகிய அறிவுஜீவி வட்டத்திற்குள் அவரை நுணுகி ஆராயும்  மயிர்பிளக்கும் விவாதங்கள் அதிகமும் நிகழ்ந்தன. அறிவு சூழலுக்கு வெளியே காந்தி பரவலடைவார் என்பதை எவரும் கணித்திருக்க முடியாது. மரபான காந்திய அமைப்புகளும் ஆசிரமங்களை அதை தோற்றுவித்தவர் மறைந்ததும் வலுவிழந்து போவதை தான் நாம் காண்கிறோம். உதாரணமாக ஏப்ரல் 2006 இதழில்  தியோடர் பாஸ்கரன் எழுதிய ‘காந்தியும் கிறிஸ்துவும்’ எனும் கட்டுரை வேலூர்- திருப்பத்தூரில் ஆசிரமம் அமைத்து தொண்டாற்றிய மருத்துவர் சவுரிராயன் யேசுதாசனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தேசிய கண்ணோட்டம் கொண்ட கிறிஸ்தவர்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு காலனிய காலகட்டத்து கிறிஸ்தவ மைய நீரோட்டத்திலிருந்து விலகி இத்தகைய ஆசிரமங்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அவற்றை தோற்றுவித்தவர் மரணமடையும் போது அந்த அமைப்பும் செயலற்று போகின்றன. உலகமயமாக்கலுக்கு பிறகு ஒருவகையில் காந்தியும் ‘பிராண்ட்’ ஆக ஆனார்.  காந்தி இப்படி புதிய தலைமுறையினரிடம்  பரவலாவதை அவரை எதிர்க்கும் அரசியல் தரப்புகள் எரிச்சலுடன் எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆகவே காந்தியை அரசியல் ரீதியாக நிராகரிக்க வேண்டிய காரணங்களையும் விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்தார்கள். அவை ஏற்கனவே அறுதி உண்மைகளாக அவர்களால் கருதப்பட்டவை. 2005 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் நெய்தல் கிருஷ்ணனும் பிரசன்னாவும் எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் இதை காட்டுகின்றன. இரா. முருகானந்தம் பிரசன்னாவின் கட்டுரையை சிலாகித்து எழுதியிருக்கிறார். ஜனவரி 2006 இதழில் காந்தியை மதிப்பிடுவது சார்ந்த விவாதத்தில் பிரசன்னா எழுதுகிறார் ‘அவர் பெரிதும் பாராட்டப்படுவது அவர் குறையற்றவர் என்பதால் அல்ல, ஒரு சாதாரண மனிதன், ஏசுவைப் போன்றோ புத்தரைப் போன்றோ ஐன்ஸ்டைனைப் போலவோ கடவுளின் குழந்தையாகவோ பிறவி மேதாவியாகவோ பிறக்காமல், தன் முயற்சி மற்றும் ஆத்மசக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையடைந்தார் என்பதால்.’ காந்தி மீதான அரசியல் விமர்சனங்கள் இந்த தலைமுறைக்கு பெரிய விஷயமாக இல்லை. அவரை காபந்து செய்ய வேண்டும் எனும்  ஏதுமற்றவர்கள்.  அரசியல் வரம்பிற்குள் அவரை விமர்சித்து நிராகரிக்கும் தலைமுறைக்கும் அரசியல் நீக்கம் செய்யப்பட காந்தியிடமிருந்து ஊக்கம் பெறும் தலைமுறையினருக்கும் இடையேயான உரையாடலாக இதை காண முடியும். தி. அ. ஸ்ரீனிவாசன் திருச்சி கருப்பையாவிற்கு எழுதிய மறுப்பில் ‘போயர்’ என்பது ஆப்பிரிக்க பூர்வகுடி எனும் நம்பிக்கை வெளிப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அது அப்படி அல்ல என்பதை விளங்கியதை வாசிக்கும்போது வேடிக்கையாக இருந்தது. காந்தியை விமர்சிப்பதில் நமக்கு இருக்கும் முன்முடிவுகளும் அவசரங்களும் எத்தகையது என்பதற்கு சிறந்த உதாரணம் . அருந்ததி ராய் காந்தி வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கும் அதே எண்பதுகளின் திரைக்கதையை மீள கொண்டுவருகிறார். அன்னா ஹசாரே இயக்கம் உட்பட மத்திய வர்க்கத்தினரின் எழுச்சிகளை எளிதில் புறந்தள்ளுகிறார். காந்திய ஈடுபாடும் அவருக்கு அப்படியான மோஸ்தராக தான் தென்படுகிறது. 



 

இந்த உரையாடலும் நன்மையையே விளைவித்தது. இந்த புதிய தலைமுறை இளைஞர்களில் ஒரு சாரார் என் ஜி ஓ  செல்கிறார்கள். சிறிய எண்ணிக்கையிலானவர்கள் காந்தியை ஆழ்ந்து அறிய தொடங்கினார்கள். இதே பிரசன்னா தான் ஆகஸ்ட் 2014 இதழில் ‘அருந்ததி ராயின் காந்தி’ என அவருக்கு வலுவான மறுப்பை எழுதுகிறார். “திரைக்கதை எழுதும் அவருடைய திறமையைப் பயன்படுத்தித் தலித்துகளின் எழுச்சி என்ற வரலாற்றில் காந்தியின் ‘வில்லத்தனமான’ பங்கைப் படிப்படியாக அடுக்குகிறார். இந்தச் செயலில் அவரும் இந்துக்களின் மரபார்ந்த பழக்கமான தொன்ம உருவாக்கலில் தான் ஈடுபடுகிறார். அவருடைய கட்டுரையிலிருந்து அம்பேத்கரைவிட காந்தியைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்கிறோம். அதுவும் ராய் நமக்குக் காட்ட விரும்பும் காந்தியை. ராயின் நாடகத்தில் காந்தி ஒரு துராத்மா. அவர் ஒரு பொய்யர். மனுவாதி. நிற வெறியர். அம்பேத்கருக்கு எதிரான சதிகாரர்.”    



பிரசன்னாவை போலவே சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம், த. கண்ணன் போன்றோர் காந்தியை அரசியல் ரீதியாகவும் முன்வைக்கும் வலுவான குரல்களாக ஆயினர். காந்தியின் குறைகளை, தளைகளை ஏற்றுக்கொண்டு அவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அதிகம் முன்னிறுத்துபவர்களாக ஆயினர். அசிஷ் நந்தி, ராமச்சந்திர குஹா, மகரந்த் பரஞ்சபே போன்றோர் வழி காந்தியை நெருங்கினர். ‘காலச்சுவடு’ இந்த தலைமுறையை உருவாக்கியது என்று சொல்வதை விட இப்படியான தலைமுறையின் இருப்பை கண்டுகொண்டு அவர்களுக்கான வெளியை அமைத்து கொடுத்தது என்பதை சொல்ல வேண்டும். அரசியல் காந்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதில் காலச்சுவடின் பங்கு முக்கியமானது என்று நம்புகிறேன். அதிலும் குறிப்பாக இந்துத்துவ எழுச்சியின் பின்புலத்தில் அரசியல் காந்தி மறுவாசிப்பு செய்யப்படுகிறார், மீள கண்டடையப்படுகிறார். 2010 முதல் ஏழெட்டு ஆண்டுகள் இணையத்தில் தீவிரமாக செயல்பட்ட இன்னொரு பெயரையும் குறிப்பிட வேண்டும். ராட்டை ரகு சமூக ஊடகங்களில் போகிற போக்கில் காந்தி மீது குவிக்கப்படும் அவதூறுகளுக்கு அயராமல் தரவுகளுடன் பதில்  அளித்தார். இன்று அவை கணிசமாக குறைந்ததற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்று எண்ணுகிறேன். 



ஒரு சிந்தனை எப்படி சமூகத்தில் ஊடுருவுகிறது என்பதை கவனிப்பது சுவாரசியம். கோட்ஸே என்பவர் தனி மனிதர் அல்ல, அதே விளைவை விரும்பிய திரளின் பிரதிநிதி எனும் பார்வை எனக்கு உண்டு. இந்த பார்வையை நான் வந்தடைய முக்கியமான காரணம் தேவி பாரதியின் ‘பிறகொரு இரவு’ குறுநாவல். காவல்துறையினரும், அரசியலில் அவர் பெயரை சொல்லி ஆதாயம் பெறுபவர்களும்  காந்தியின் மரணத்திற்காக காத்திருக்கும் சித்திரம் வெளிப்படும்.  ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ எனும் சிறப்பு பகுதி வெளியாகிறது. தி. அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கத்தில் அசிஷ் நந்தியின் நீள் கட்டுரை ‘இறுதி சந்திப்பு’ அந்த இதழில் தான் வெளியானது. இக்கட்டுரை வெளியாவதற்கு பதிமூன்று ஆண்டுகள் முன்னர் தி.அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த நந்தியின் இன்னொரு கட்டுரை ஏப்ரல்- ஜூன் 1995 காலச்சுவடு இதழில் வெளியானது. இன்று அக்கட்டுரையை வாசிக்கும்போது மனம் உவகை கொள்கிறது. நந்தியை தமிழ் சிந்தனை பரப்பில் அறிமுகப்படுத்தியது காலச்சுவடின் மிக முக்கியமான பங்களிப்பு என்று கருதுகிறேன். 

‘காந்தியும் கோட்ஸேயும் இந்தியாவின் எதிர்காலம்’ கட்டுரையில் கோட்ஸேயை தனித்த வெறியனாக சித்தரிக்க முயல்வதற்கு மாறாக அவனை ஒரு தரப்பின் பிரதிநிதியாக நிறுத்தி காட்டுகிறார் நந்தி. கோட்ஸேயுடைய அரசியல் வாழ்க்கை 30 களில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமையில் தொடங்கி அவரை சுடுவதற்கு முன்பான வணக்கத்துடன் முடிவடைந்தது என்கிறார். காந்தியை கொன்றதற்காக கோட்ஸேவை விமர்சிக்கும் ஆர்தர் கோஸ்லர், ஆர்வல் போன்றோரிடம் கூட கோட்ஸேவுடைய அதே சிந்தனையே வெளிப்படுகிறது என்கிறார். கோட்ஸே பகுத்தறிவுவாதி, அறிவியலை நம்புபவன், சீர்திருத்தவாதி, தயவு தாட்சண்யமற்ற அரசியலை முன்னிறுத்துபவன். அவன் உண்மையான காரண காரிய அறிவு சித்தாந்தத்தின் நவீன பிரதிநிதி.  அதிநவீன இந்துவாக பிரகடனப்படுத்திக்கொண்ட அவன் இந்தியா சமய சார்பற்ற இனவேறுபாடாற்ற நாடாக திகழ வேண்டும் என்று விரும்பினான். இன்றுவரை ஆர். எஸ்.எஸ் நிலைப்பாடு அதுவே.  காந்தி இவற்றுக்கு நேர் எதிரானவர். அந்த கட்டுரை இப்படி முடிகிறது ‘நவீன உலகின் சார்பாகவும் அதன் ஆர்வல்கள்  கோஸ்லர்கள்  மற்றும் கிஸ்ஸிங்கர்கள்  சார்பாகவும்  காந்தியை கொலை செய்வதைத்தவிர கோட்ஸேவிற்கு வேறு வழியில்லை. காந்திக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோட்ஸேவை விரட்டி ஓட்டுவதற்கு மரணத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு உகந்த வழி இல்லை.’ ஜி. நாகராஜனின் ‘கிழவனின் வருகை’ சிறுகதை கோட்ஸே குறித்த இத்தகைய பகுப்பாய்வை நந்தி எழுதுவதற்கு பலகாலம் முன்னரே முன்வைக்கிறது. நவீனத்துவம் காந்தியை புரிந்துகொள்வதில்  எதிர்கொண்ட சிரமங்களை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கர், பெரியார், சாவர்க்கர் உட்பட காந்தியை விமர்சித்த தரப்புகள் நவீனத்துவ தன்மை கொண்டவை என தோன்றுகிறது. இந்த கட்டுரை 1995 ல் என்னவகையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும்? காலச்சுவடு வெளியிட்ட கோட்ஸே ஆதரவு கட்டுரையாகவே இது பொருள்பட்டிருக்கும்.   விமர்சனங்களுக்கு பதில் எழுதும் முகமாக தி. அ ஸ்ரீனிவாசன் டிசம்பர் 1995 இதழில் ஒரு குறிப்பு எழுதுகிறார்.  கோட்ஸே நகர்ப்புற, நவீனமயமான, உயர்சாதி மேற்கத்திய வயப்பட்ட தனியான சலுகைகள் வேண்டும் என கோரும் தரப்பின் பிரதிநிதி எனும் நந்தியின் கூற்றை சுட்டிக் காட்டுகிறார்.  காந்தியோ கிராமப்புற சாமானியர்களின் தரப்பை சார்ந்தவர். அவர்களது அறியாமையை வளர்ச்சிக்கான தடையாக காணும் மேட்டுக்குடியினரின் தரப்பு தான் கோட்ஸே எனும் நந்தியின் பார்வையை  விளக்குகிறார். 2008 ஆம் ஆண்டு இதே கோணத்தை விரிவாக பேசும் நந்தியின் கட்டுரை வெளியானபோது இத்தகைய எதிர்வினைகள் வரவில்லை. நந்தியின் கோணம் அறிவு சமூகத்தில் பொது ஏற்பு பெற்றுவிட்டது என்பதையே இது குறிக்கிறது.



 ‘இறுதி சந்திப்பு’ கட்டுரையின் பேசுபொருளை மட்டும் முன்வைத்து தனியாக இன்னொரு கட்டுரை எழுத முடியும். “கிருஷ்ணனுக்குக் கம்சன் எப்படியோ அப்படித்தான் காந்திக்குக் கோட்சேயும். ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் என்றாலும் இருவரும் பிரித்துப்பார்க்க முடியாதவர்கள், கம்சன் கிருஷ்ணனை அறிந்திருந்த அளவுக்கு அர்ஜுனன் கிருஷ்ணனை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. வெறுப்பு அன்பைக் காட்டிலும் பிணைப்பு மிகுந்தது. அன்பு பார்வையை மழுங்கச் செய்யும்; வெறுப்போ அதைக் கூர்மையாக்கும்.” எனும் டி.கே. மகாதேவன் மேற்கோளோடு தொடங்குகிறது கட்டுரை. “அரசியல் படுகொலைகள் ஒவ்வொன்றும் கொலையாளியும் அவனுக்குப் பலியாகுபவரும் இணைந்து கூட்டாகத் தயாரித்தளிக்கும் ஓர் அறிக்கை.” எனும் வரியொரு தீர்க்க தரிசனம் போல ஒலிக்கிறது. காந்தி எதை மாற்ற முயன்றார் என விவாதிக்கும் பகுதி மிகவும் முக்கியமானது.  இந்தியாவின் பாரம்பரிய அதிகார அமைப்புக்குக் காந்திய அரசியல் தரப்பு  இரண்டு தளங்களில் ஆபத்து விளைவிப்பவையாக பார்க்கப்பட்டன. இந்தியச் சமூகத்தின் மையமும் விளிம்பும் எவை? அவற்றின் வரையறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் காந்தியின் முயற்சிகள் முதல் ஆபத்து. இரண்டாவது, சமூகத்தின் உள்ளோட்டமாக இருந்த ஆண்மை, பெண்மை பற்றிய கருதுகோள்களின் மீதான அவரது மறுதலிப்பு. அறிவு புனிதமானதாகவும் பிராமணியத்தன்மைகொண்டதாகவும் நம்பவைக்கப்பட்டிருந்த ஒரு கலாச்சாரப் பின்புலத்தில், கருத்துக்குச் செயலினும் மேலான புனிதத் தன்மை அளிக்கப்பட்ட ஒரு சூழலில் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை ஏற்காமல் அதற்கு மாறாக  இந்திய அரசியலை அறிவுஜீவித்தனத்திலிருந்து விடுவிப்பதே அவரது முதல் குறிக்கோளாக  இருந்தது என நந்தி எழுதுகிறார். 


காந்தியச் சிந்தனையின் இன்னொரு முக்கிய அம்சமாக நந்தி கவனப்படுத்துவது, மனித சமூகத்தைப் பண்படுத்தும் சக்தியாகப் பெண்மையை அவர் கண்டறிந்ததை தான். ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருதரப்பின் ஆண் அடையாளத்திற்குள் பெண்மையின் அம்சங்களான ஆக்கிரமிக்காத தன்மை, அரவணைக்கும் குணம், அஹிம்சை, இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் 'கலந்து' செயல்படும் தன்மை போன்றவற்றை விரிவுபடுத்தக் காந்தி முயன்றார் என்கிறார். காந்தி பாலியலைக் கடந்த, இந்து சமய மகாத்மாவாக மட்டுமின்றி, கிறித்தவத்தில் புனித பிரான்ஸிஸ்ஸைப் போலக் கிறித்துவின் மணப்பெண்ணாகவும் இருக்க விரும்பினார் என்று கூறுகிறார்.  நாதுராம் கோட்ஸே தனக்குள்ளிருந்த பெண் தன்மையை அழித்து ஆண் தன்மையை முன்னிறுத்தியவன். நாதுராம் ஒரு பெண்ணாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு மூக்குக் குத்தப்பட்டு வளையம் (நாத்) இடப்பட்டது. இதனால் ராமச்சந்திரா என்னும் இயற்பெயர் கொண்ட அவன் நாதுராம் என்று அழைக்கப்படலானான். அவனுக்கு சிறுவயதில் குறிசொல்லும் திறன் இருந்து வளர்ந்து அவனது சமூக பார்வை விரிவடையும் போது அது மறைந்துவிடுகிறது. ஒருவகையில் இதை பெண் தன்மையின் அழிவு என கொள்ளலாம். அந்தராத்மாவின் சன்னமான ஆனால் திடமான குரல் காந்திக்கு ஒலித்தபடி இருந்ததை ஒப்பிட்டு நோக்க வேண்டும். ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் தனக்குள்ளிருக்கும் பெண்மையை அழிக்கும் சித்திரம் நந்தியின் மேற்சொன்ன பார்வையின் நீட்சி என கொள்ள முடியும். காந்தி கொலையைப் பற்றி இப்படி எழுதுகிறார்.  “ஒரு சமூகத்தின் மையமாக இருப்பதை உடைத்தெறிந்து, புதியதொரு சுதந்திரமான சமூகத்தையும் பழமையின் சிதைவுகளிலிருந்து புதியதொரு அதிகார அமைப்பையும் ஏற்படுத்த முயன்றதன் மூலம், அச்சமூகத்தின் அதிகார மரபுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்த சக்தி ஒன்றைக் கட்டுக்குள் வைப்பதற்காக, அந்த மரபுகள் முயன்ற கதை இது என்று கொள்ளலாமல்லவா?” தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ கதைக்கு உந்துதலாக நந்தியின் கட்டுரைகள்  இருந்திருக்கக்கூடும் என தோன்றுகிறது. ஜனவரி 2008 காந்தி சிறப்பிதழில் தான் தேவிபாரதியின் கதையும் வெளிவந்தது. நந்தியை வாசிக்காமல் தேவிபாரதியின் வழியே நான் நந்தியின் கூற்றை சென்றடைந்திருக்கிறேன். 


ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பு பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் முக்கியமானது. காந்தி மீது அறிவுஜீவிகளுக்கு இருந்த விலக்கம் பற்றி யு.ஆர். அனந்தமூர்த்தியின்  ‘இன்றைக்கு இருக்கும் காந்தி’ கட்டுரை விவாதிக்கிறது. இன்றைய அறிவுஜீவிகளின் சிக்கலையும் காந்தி அவர்களிடமிருந்து வேறுபடும் இடத்தையும் பேசுகிறது. “அறிவு ஜீவிகளான நாம் நாலைந்து அடி முன்னால் எடுத்து வைத்ததுபோலத் தெரிந்தாலும், நாலைந்து அடி பின்னுக்குப் போயிருப்போம். ஆளுகிறவர்கள் யார் என நாம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்படி சற்றாவது பேசியிருப்போம். காந்தி சமூகம் மற்றும் தேசம் பற்றிய கேள்வியை ஒரு சம்சாரியின் நிலையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.” அனந்தமூர்த்தியின் அவதானிப்புகள் கூர்மையானவை. காந்திக்குத் தொழில்நுட்பவாதியின் குணம் இருந்ததாக குறிப்பிடும் அவர் காந்தியை ராமனுடன் ஒப்பு வைக்கிறார். புனைவு எழுத்தாளராக அனந்தமூர்த்தியின் சொற்கள் கூர்மையானவை. அவதானிப்புகள் துல்லியமானவை. “ஒரு தேசத்தை ஏககாலத்தில் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் பார்க்கும் வல்லமை காந்திக்கு இருந்தது” என்பது மிக முக்கியமான அவதானிப்பு. நம்மால் தேசமாக பார்க்கும்போது சமூகமாக பார்க்க முடிவதில்லை, சமூகமாக பார்க்கும்போது தேசமாக காண முடிவதில்லை.  காந்தி நம் துக்கங்களிலும் சங்கடங்களிலும் நிலைத்திருப்பார் எனும் அனந்தமூர்த்தியின் கூற்று அதன் உண்மையால் நிலைபெறுகிறது. நாதியற்றவர்களுக்குரிய போராட்ட வடிவத்தை கண்டடைந்தவராக  காந்தி என்றும் நினைவுகூரப்படுவார். 



சுற்றுச்சூழல், கடவுள் நம்பிக்கை, சத்தியாகிரகம், பொது வாழ்க்கை ஆகிய நான்கு தளங்களில் காந்தியின் தேவை இன்றுமுள்ளதாக அடையாளப்படுத்துகிறார் ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி இன்னும் தேவைப்படுகிறார்’ எனும் கட்டுரையில். ஜி எஸ் ஆர் கிருஷ்ணன் எழுதிய ‘அறியப்படகுட காந்தி’ இந்த சிறப்பிதழில் எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த கட்டுரை. சில அசலான அவதானிப்புகளை கிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.  ‘சுதேசியம் என்பது ஒரு சித்தாந்தம். கதர் என்பது சுதேசியத்தின் மையமான, பருண்மையான உண்மை. கதரில்லாத சுதேசியம் என்பது உயிரற்ற உடம்பு போன்றது. புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மட்டுமே அது தகுதியானது.' எனும் காந்தியின் மேற்கோளை கொண்டு காந்தி கொள்கையை உயிர் என்றும் நடைமுறையை உடல் என்றும் காணும் பொதுப்போக்கை எப்படி தலைகீழாக ஆக்குகிறார் என்பதை காட்டுகிறார். ஸ்டாலின் ராஜாங்கம் வழி நான் அறிந்துகொண்ட அயோத்திதாசர் வரலாறு என்பது இறுகிய பாறையல்ல, நெகிழ்வானது, காலந்தோறும் மாறுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார். காந்திக்கும் வரலாறு குறித்து இத்தகைய பார்வையிருந்ததை அறியும்போது வியப்பாக இருந்தது. கிப்பனின் ரோம சாம்ராஜ்யம் எனும் வரலாற்று நூலை காட்டிலும் மகாபாரதம் மேலானது என காந்தி கருதியதாக கிருஷ்ணன் எழுதுகிறார்.  “உண்மைக்கும் புனைகதைக்குமான இடைவெளி மிகவும் குறுகியது. வரலாறே இல்லாத நாடுதான் மகிழ்ச்சியானதென்று தான் கருதுவதாகவும்” காந்தியின் சிந்தனைகளை பற்றி கிருஷ்ணன் எழுதுகிறார். வரலாறு ஆயுதமாக பயன்படக்கூடும் எனும் புரிதல் காந்திக்கு இருந்ததாக தெரிகிறது. கலை குறித்து காந்திக்கும் ராமச்சந்திரனுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் இன்றும் விவாதத்திற்கு உரியது. ‘எப்போது மனிதன் சத்தியத்தில் அழகைக் காண முடிகிறதோ அப்போதுதான் உண்மையான கலை உருவாகும்' என்பதே அவர் நோக்கில் கலைக்கான வரையறை. 'சத்தியத்தையும் அழகையும் பிரிக்க முடியாதா?' என்னும் ராமச்சந்திரனின் கேள்விக்குக் காந்தியின் பதில் 'உண்மையைத் தவிர அழகானது ஒன்றுமில்லை. ஆனால், உண்மை பல விதங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.’ வி. ராமமூர்த்தி காந்தியின் கடைசி  இருநூறு நாட்கள் நூலுக்கு எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளது. சுகுமாரன் மொழியாக்கத்தில் அம்பேத்கர் பார்வையில் காந்தியம் எனும் அப்துல் மஜீதின் கட்டுரை இதே இதழில் வெளியாகியுள்ளது. காந்தியத்தை விமர்சன நோக்கில் அலசுகிறது. 


தமிழ் காந்திய எழுத்துக்களில் 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பிதழுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று நம்புகிறேன். ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ நூலில்  நந்தி, குஹா போன்றோரின் தாக்கம் வெளிப்படுகிறது.  2008 சிறப்பிதழில் பெரும்பாலான கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தன. 2020, 2023 சிறப்பிதழ்களில் அணில் நூரியா, திரிதீப் சுஹ்ருத் போன்றோரின் ஒருசில கட்டுரைகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டன. பிற கட்டுரைகள் அனைத்துமே அசலானவை. காந்தியை பற்றி பேசவும் எழுதவும் சில அசலான குரல்கள் இடைப்பட்ட காலத்தில் உருவாகியுள்ளன என்பதையே இது காட்டுகிறது. இந்த குரல்கள் இங்கு நிலைபெற வேறு பல ஆளுமைகள் காரணிகளுடன் சேர்ந்து  காலச்சுவடு இதழும்  நிச்சயம் முக்கிய  பங்காற்றியுள்ளது என சொல்ல முடியும். 


காந்தி சிறப்பிதழ்களை தவிர கணிசமாக காந்தியை குறித்து எழுதப்பட்டுள்ளன. அவ்வப்போது விமர்சனபூர்வமான எழுத்துக்களும் பதிவாகியுள்ளன. ப்ரேமின் காந்தியை கடந்த காந்தியம் புத்தக பகுதி இரண்டு கட்டுரைகளாக பிரசுரமாகியுள்ளன. நவம்பர் 2018 இதழில்  ‘காந்தியால் தொடங்கிய தலித்துகளுக்கான பள்ளிகள்’ எனும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை காந்தியின் அரசியல் மீதான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயல்தளத்தில் அவரை மதிப்பிட முனைகிறது. “மதுரையின் கீழடி போன்ற பண்பாட்டுப் பெருமையோடு இணையும் நம்முடைய உளவியல், சேவாலயம் போன்ற சமூகப் போராட்டப் பெருமையோடு இணைவதில் தயக்கம் கொள்கிறது. ஏனெனில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குப் பிம்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நமக்கு அது தொந்தரவாய் இருப்பதில்லை. வரலாற்றில் நிகழ்ந்துவிட்டதால் மட்டுமல்ல அதை ஆதரிக்கிறோமோ இல்லையோ அவ்வாறு நடந்தது என்ற அளவிலாவது பலவற்றைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்குச் சொல்லப்படும் ‘முற்போக்கு’ வரலாறு முற்றிலும் அரசியல் மயப்பட்டது. இதையெல்லாம் தாண்டி காந்தியர்களும் இக்களத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதை வரலாற்று நிலை கருதியாவது தலித்துகள் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்பலாம்” என எழுதுகிறார். நவம்பர் 2024 இதழில் ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய ‘மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்’ எனும் கட்டுரையில் ‘ஆனால் இன்று தலித்துகள் காந்தியையும் காந்தியர்களையும் ஏற்றுக்கொண்டால் கூட மற்றவர்கள் அதை அனுமதிக்க’த்  தயாராக இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன’ என்று எழுதுகிறார். தலித்துக்கள் மதுவிலக்குக்காக நடத்திய பத்திரிக்கைகள், சங்கம் குறித்தும் காந்தி- இராஜாஜி ஆகியோர் மதுவிலக்கு சார்ந்து ஆற்றிய பணிகள் குறித்தும் பேசுகிறது. ஜனவரி 2010 இதழில் அரவிந்தன் ‘காந்தி ஏன் உப்பை எடுத்தார்?’ எனும் கட்டுரையில் உப்பின் குறியீட்டு முக்கியத்துவத்தை விளக்குகிறார். ஆகஸ்ட் 2017 இதழில் ‘ காந்தி கண்ட பாரதி’ கட்டுரையில் ய மணிகண்டன், பாரதி நடத்திய பாலபாரதம் இதழ் பற்றிய அறிவிப்பு காந்தியின் தென்னாபிரிக்க பத்திரிக்கையான இந்தியன் ஒபினியனில் வெளிவந்துள்ளது என்பதை எடுத்து காட்டுகிறார். தற்போது சித்ரா பாலசுப்பிரமணியம் மதிப்புரைகள், காந்தி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 



காந்தியை பற்றிய கட்டுரைகளைத் தவிர்த்து ராமச்சந்திர குஹா, அசிஷ் நந்தி, கணேஷ் தேவி, ஜி.எஸ். லட்சுமண அய்யர், நிர்மல் வெர்மா  போன்ற முக்கியமான காந்திய ஆளுமைகளுடனான நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்லால் பகுகுணா, ஈரோடு ஜீவானந்தம், லட்சுமண அய்யர், லாரி பேக்கர், தரம்பால், க.மு நடராஜன், சசி பெருமாள் போன்ற காந்திய ஆளுமைகளுக்கு விரிவான அஞ்சலி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது தமிழ் அறிவு சூழலில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் காலச்சுவடுக்கு முக்கிய பங்கு உள்ளது. காந்தியும் அம்பேத்கரும் வேறெந்த தலைவர்களை காட்டிலும் இன்று உயிர்ப்புடன் இருக்க முக்கிய காரணம் அவர்கள் இன்றும் நம்மோடு விவாதித்தபடி உள்ளார்கள் என்பதே. வாசிக்கப்படும் வரை, விவாதிக்கப்படும் வரை வரலாற்று ஆளுமைகள் ரத்தமும் சதையுமாக நம்முடன் இருப்பதாகத்தான் பொருள். நமது அன்றாடங்களை தீர்மானிப்பவர்களாக வாழ்க்கை முறைகளை வழிநடத்துபவர்களாக வரலாற்று ஆளுமைகள் உருமாறுவதற்கு அறிவுலகம் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அவ்வகையில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருக்க காலச்சுவடு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றிவருகிறது. 




 









காந்தி எனும் விடுதலை

 


(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'எஸ்ரா -100' நிகழ்ச்சியில் 5ம் சுற்றில் 21ம் அமர்வில் “காந்தியோடு பேசுவேன்” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)

புனைவிலக்கியங்கள் படைப்பது மட்டுமல்லாது, புனைவிலக்கியங்களைப் பற்றி உரையாற்றுதிலும் திரு எஸ்ரா அவர்கள் மிகவும் அலாதியான திறன் கொண்டவர் என்பதை அவருடைய உரைகளைக் கேட்டிருப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.  இதில் ஒரு முக்கிய பண்பு என்னவென்றால், அவரால் தஸ்தவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களைப் பற்றியோ, டூமா-வின் த்ரீ மஸ்கிடியர்ஸ் பற்றியோ ஆற்றொழுக்குடன் பேசக்கூடிய தீவிரத்துடன், சமகாலத்து தமிழ்ச்சூழலின் இலக்கியங்களைப் பற்றி விரிவாகப் பேச முடியும்.  அவருடைய தணியாத வாசிப்பார்வம் அவரை அப்படி புத்துணர்ச்சியுடன், நடப்பு உலகின் இலக்கிய நிகழ்வுகளுடன் பிணைந்து வைத்திருக்கிறது.  அவரளவிற்கு இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் பிரேமையும் திறமையும் கொண்டு, தொடர்ந்து இலக்கிய உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமைகள் தமிழுலகில் மிக அரிது.

அப்படியான ஒருவருடைய சிறுகதையான  "காந்தியோடு பேசுவேன்" பற்றி ஒரு காந்தி ஜெயந்தியன்று உரையாற்ற நேர்ந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்திய சுதந்திர போராட்டகாலத்தைக் காட்டிலும், தற்காலத்தில் காந்தியின் தேவை நமக்கு அதிகமாக இருக்கிறது.  மேற்குலகிலும் சரி, இந்திய பெருநிலத்திலும் சரி, காந்தி மீதான வகைதொகையற்ற பக்தியுணர்விற்க்கு இணையாக, காழ்ப்புமிழ்தலும், தூற்றுதலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகின்றன.  இந்த மனித சமூகத்தின் மீது நேர்மையான, உன்னதமான அக்கறை கொண்டு காந்தி தன் முழு வாழ்க்கையும் ஒரு பரிசோதனை முயற்சியாக, உன்னதத்தை நாடும் ஒரு சீரிய முயற்சியாக முன் வைத்திருக்கிறார். அவருடைய கட்டுரைகளும் பத்திரிகை பதிவுகளிலும் அதை நாம் காண முடிகின்றது.

காந்தியின் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் வைக்கப்படும் கேள்விகளையும் உள்ளிழுத்து, அவற்றுக்கான விளக்கங்களுடனே தன்னுடைய வாழ்க்கையை காந்தி ஒரு திறந்த நூலாகவே அமைத்துக் கொண்டிருந்தார்.  இன்றைக்கும் காந்தியத்தின் மீதான கருத்து வேற்றுமைகளை, விரிவாக விவாதிக்கும் பல கூறுகளையும் உள்ளடக்கியது காந்தியின் வாழ்க்கைப் பதிவுகள்.  தீவிர மதப்பற்றுடையவராகவும் ஆனால் மத அடிப்படைவாதத்தை தீர்க்கமாக மறுத்து வருபவருமான காந்தியை மேற்குலகு புரிந்து கொள்ளவே பல காலம் ஆனது.  1930களிலிருந்தே அவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவரை ஒரு மதத்தலைவராக வரையறுத்து வைத்ததால், அவர் பெயர் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  இறுதியில் 1949ல் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது அதே மத அடிப்படைவாதம் காந்தியை காவு வாங்கி விட்டிருந்தது.

இன்றும் அரசியல் வெளியில் காந்தியின் மீது தோட்டாக்கள் செலுத்தப்பட்டுதான் வருகின்றன.

இலக்கிய வெளியில் காந்தியை நாம் அடையாளப்படுத்தும் போது, அவருடைய பரிமாணங்கள் புத்துருவாக்கம் கொள்கின்றன.  அதன் வழியே நாம், எளிய மக்கள், ஓரிரு அடிகளாவது எடுத்து வைக்க உறுதி உண்டாகின்றது.  அப்படியானதொரு படைப்பாக "காந்தியோடு பேசுவேன்" அமைந்திருக்கிறது.

இங்கிலாந்திற்கு, லண்டன் மாநகருக்கு புலம்பெயர்ந்த பேராசிரியர் லட்சுமணன், தன் அன்னையின் வாழ்க்கை வழியே காந்தியை தரிசிக்கும் நிகழ்வுதான், 'காந்தியுடன் பேசுவேன்' புனைவு.  காந்தி என்கிற பிம்பத்தின் மீதான வசீகரத்திற்கு இணையாக, இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகள் என்று எவர் மீதாவது கொட்டப்பட்டிருக்கிற்தா என்கிற கேள்வி லட்சுமணனை உறுத்துகின்றது.  அவரே காந்தியை நெருங்கிச் செல்ல தயங்குகிறார்.  அவ்வளவு மனத்தடைகளை இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது.  ஆனால் அவருடைய அம்மாவின் இளமைக் காலத்தில், கணவனின் காம இச்சைக்கான வெறும் உடலாக மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருந்த பெண்மணிக்கு காந்தி என்கிற ஆளுமை எவ்வளவு பெரிய விடுதலையை அளித்திருக்கின்றது என லட்சுமணனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்குகின்றது.

அரசுப்பணியில் இருந்த அவருடைய அப்பாவிற்கு, அம்மா ஒரு மனுஷி என்கிற பிரக்ஞை சிறிதும் இல்லை.  அப்பாவைத் தாண்டிய உலகம் என்று எதுவும் விதிக்கப்படாத நிலையில் லட்சுமணனின் அம்மா மெல்ல மெல்ல காந்தியைப் பற்றி அறிந்து கொள்கிறாள்.  சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் தாண்டி அவளுக்கு காந்தியின் மீது பெரும் பிரேமை உண்டாகிறது.  ஒரு தருணத்தில் அந்த பிரேமையின் ஈர்ப்பு அவளை குடும்பத்தை விட்டு துறந்து வார்தாவில் உள்ள காந்தியின் ஆசிரமத்தைத் தேடி தனியே புறப்பட்டு செல்லத் தூண்டுகிறது.

மொழி புரியாத பிரதேசத்தில் அந்நிய மனிதர்களிடையே அந்த எளிய ஆசிரமத்தில் அவள் காந்தி என்கிற அற்புத மனதை மட்டும் நம்பி தன் வாழ்க்கையை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொள்கிறாள்.  என்னவொரு சித்திரம் பாருங்கள்.  அந்த லயிப்பு அவளுக்குப் பின்னால் லண்டனில் உள்ள லட்சுமணனைத் தேடிப் போகும்போதும் அப்படியே இருக்கிறது.  காந்தியை, காந்தியின் கண்கள் கொண்டு பார்க்கும் அற்புத வரம் அம்மாவிற்கு வாய்த்திருக்கிறது.

லட்சுமணனின் மனைவியான ராகேல் இன்னொரு காந்தியச் சித்திரம்.  காந்தியிடம் அம்மா கண்ட பூரண விடுதலையை, அம்மாவின் வழியே ராகேலுக்கும் சாத்தியமாகின்றது.  வெகு இயல்பாக.  இதை காந்தியின் சொற்களிலே எஸ்ரா ஓரிடத்தில் விவரிக்கிறார்.  அம்மாவைப் போன்ற பெண்கள் தனது செயல்பாடுகளின் மீது உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கைதான் அவரை உறுதியாக இருக்கச் செய்கின்றது.  அந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தவர்கள் மீது அவருக்கு என்றும் நன்றி இருப்பதாக காந்தி சொல்கிறார்.

லட்சுமணனின் அம்மாவின் வாழ்க்கை நான்கு பகுதிகளாக நம் கண் முன்னே விரிகின்றன.  எளிமையான இயல்பு வாழ்க்கை கொண்ட சிறுமிப் பருவம்.  மோசமான வதையும், சிறுமையும், ஒடுக்குதலையும் கண்ட திருமணப் பருவம். காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள முற்பட்டு பிறகு அவரிடம் முற்றிலும் சரணடையும் சிஷ்யை பருவம்.  அதன் பிறகு ஒரு முழுமையான, தன்னிறைவு கொண்ட பெண்மணியாக உருக்கொள்ளும் அன்னைப் பருவம்.  லட்சுமணனுக்கு அம்மாவின் நான்காம் பருவம் மட்டும்தான் அதிகம் தெரிந்திருக்கின்றது.  பிறகு மெல்ல மெல்ல பின்னகர்ந்து ஆம்மாவின் வரலாற்றை உணரத் தொடங்குகிறார்.  

ஆனால் அவருடைய மனைவி ராகேலுக்கு அவ்வளவு காலமெல்லாம் தேவைப்படவில்லை.  காந்தியை படத்தில் பார்த்தே அவளுக்கு அவரைப் பற்றிய மனச்சித்திரம் துலக்கமாக உருவாகி விடுகிறது.  அதன்வழியே அவளால் அம்மாவை மிக இயல்பாக புரிந்து கொள்ள முடிகின்றது.  முடிவில் லட்சுமணனுக்கு காந்தி மீதும் உண்டாகும் தீவிர ஈர்ப்பைப் பற்றியும் எச்சரிக்கை அளிக்கின்றாள்.  "நீ வேகமாக அவரை அணுகும் போது, அதே வேகத்தில் அவரை விட்டு விலகவும் சாத்தியம் அதிகம்.  உன் அம்மா போல் காந்தியைப் புரிந்து கொண்டு அவரைப் போல வாழ முயற்சி செய்" என்கின்றாள்.

காந்தி தன் லட்சியங்களை, தன் ஆதர்சங்களை, தன் பரிசோதனைகளை கொண்டே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்.  காந்தியின் வழி செல்பவர்களும் அப்படியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.  லட்சுமணனின் அம்மாவிற்கு வார்தா ஆசிரம வாழ்க்கை முழுமையாக சித்திக்கவில்லை.  இரண்டரை மாதங்களிலே, லட்சுமணனின் அப்பா வார்தா வந்து அம்மாவை பலவந்தமாக அவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு மீட்டிழுத்துக் கொண்டு போகிறார்.  வீட்டை விட்டு ஓடியதற்கு தண்டனையாக வலது கையை முறித்தும் போட்டு விடுகிறார்.

ஆம்.  காந்தியத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்ட லட்சுமணனின் அம்மாவிற்கு பரிசாக அந்த கை முறிவு.  காந்தியை கண்டடைந்தால் கிடைக்கும் பூரண விடுதலைக்கு சமமாக அந்த முறிந்த கையும் அவருக்கு இருந்தது.

காந்தியுடன் ஆத்மார்த்தமாக பேசுவது என்பது ஏதோ இலகுவான, சொகுசான அனுபவமாக இருக்கப் போவதில்லை.  இருக்கவும் முடியாது.  அதொரு தீர்க்கமான ஆன்ம விசாரத்திற்கான பயணம்.  காலத்திற்கும் தன்மீது கொட்டப்படும் தூஷணைகளையும், தோட்டாக்களையும் தாங்கிக் கொண்டு புன்சிரித்தபடி இருக்கும் காந்தியின் பிம்பம் போல், முறிந்த கையுடன் காந்தி வாழ்ந்த இலண்டனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவைப் போல, உரத்துடன் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மிகப் பயணம்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

❌