Normal view

Received before yesterday

மும்பை இலெமுரியா அறக்கட்டளை நடத்தும் தொல்காப்பியத் திருவிழா!

 

 

மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளை தமிழின் முதல் இலக்கண நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு, தொல்காப்பியத் திருவிழாவினை 2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் மும்பையில் நடத்துகின்றது. 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழா நடைபெற உள்ளது. முதன்மை நிகழ்வுகளாகத் தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி, கருத்தரங்கம், கவியரங்கம், நூல்கள் வெளியீடு நடைபெறுகின்றன. தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்றிவரும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் திரு. த. சிவானந்தன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் தொல்காப்பியத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் இ.ஆ.ப., மகாராட்டிர மாநிலத்தின் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் ந. இராமசாமி இ. ஆ. ப., மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), திரு. சூ. ஜெயகுமார் இ. கா. ப.,  காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் திரு. சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து முனைவர் இ. வளனறிவு, முனைவர் மு. இளங்கோவன், முனைவர் அரங்க. மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். 

முனைவர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளன. 

எட்டுத்தொகைக் கவியரங்கத்தில் கவிஞர் இசாக் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெறும் கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லை பைந்தமிழ், புலவர் கார்த்தியாயிணி ஆகியோர் கவிதை பாடுகின்றனர். 

மாணவர்கள் பங்கேற்கும் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது. 

அனைவரையும் மும்பை, இலெமுரியா அறக்கட்டளை அன்புடன் அழைக்கின்றது.









 

❌