Normal view

Received before yesterday

54. இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.”- பன்னீர் செல்வம்.55. 55. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் – இரங்கராசு + 56. 56.    சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? -இரங்கராசு  : மெய்யுரை காண்க – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆன்மாவும் அவரைக்காயும்

By:Para
30 May 2025 at 00:30

Pa Raghavan

எனக்கு பீன்ஸ் பிடிக்கும். கொத்தவரங்காய் தவிர பீன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான காய்களும் உவப்பானவையே. வேறு வழியில்லை என்றால் கொத்தவரங்காயையும் சாப்பிடுகிறேன். ஆனால் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது நானாக இருந்தால் நிச்சயமாக அதை மட்டும் வாங்க மாட்டேன்.

பொதுவாகத் தாவர உணவு மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு வேண்டுதல் வேண்டாமை கூடாது. இருக்கிற சொற்பத்தில் கிடைப்பன அதனினும் சொற்பம். இதில் தேர்வு செய்து உண்பதெல்லாம் அடாது என்று நினைப்பேன். ஆனால் நியாயங்களும் நாவும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை.

இருக்கட்டும், சொல்ல வந்தது வேறு. எனக்குக் கொத்தவரங்காயை எப்படிப் பிடிக்காதோ, அதே போலப் பித்தகோரஸுக்கு அவரைக்காய் பிடிக்காது. பீன்ஸ் குடும்பத்தில், கொத்தவரங்காயாவது மெல்லிய கசப்புச்சுவை கொண்டது. அவரை என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. ஆனால் என்னைப் போலவே மிகத் தீவிரமான தாவர உணவுக் கொள்கை கொண்ட ஒரு மனிதர், வாழ்நாள் முழுவதும் அவரைக்காயை வெறுத்து வந்திருக்கிறார் என்றால் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

படிக்கிற காலத்தில் பித்தகோரஸ் தியரம் என்ற பதம் என் வாழ்வின் குறுக்கே வந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இவ்வாறு எது எதிர்ப்பட்டாலும் நகர்த்திவிட்டு நகர்ந்துவிடுபவனாக இருந்ததால் அப்போது நான் பித்தகோரஸைப் பொருட்படுத்தவில்லை. அது பெரும்பிழை என்று பின்னாள்களில் உணர்ந்தேன்.

அவர் கணித மேதை மட்டுமல்ல. தத்துவவாதி. தன்னைப் பின்பற்றவும் வழிபடவும்கூட ஆயிரக் கணக்கானவர்களைக் கொண்டிருந்தவர். பித்தகோரியம் என்று அவரது கொள்கைகளின் அடிப்படையில் அக்குறுங்குழுவினர் ஒரு மதத்தையே உருவாக்கி, பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவரின் வாழ்க்கையில் அவரைக்காய் ஏதோ விளையாடியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர் அதை அவ்வளவு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டியதில்லை.

கிமு 570இல் கிரேக்கத்தில் பிறந்த பித்தகோரஸ், எகிப்திலும் இராக்கிலும் தனது இளமைக்காலத்தைக் கழித்திருப்பதாகத் தெரிகிறது. கணிதம், தத்துவம், வானியல், விவசாயம் என்று ஏகப்பட்ட துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆர்வம் இருந்த அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக இறங்கி அகழ்ந்தெடுக்கப் பார்த்திருக்கிறார். என்ன எடுத்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்திலும் அவருக்கு ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்திருக்கிறது. தனது கருத்துகளை வாழ்நாள் முழுதும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எனவே அவருக்கு எல்லா துறைகளிலும் ஏராளமான எதிரிகளும் இருந்திருக்கிறார்கள். பித்தகோரஸ் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேச எங்கும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருந்திருக்கிறது. எப்போது அவர் தனது சித்தாந்தங்களைத் தொகுத்து ஒரு மதமாக்கப் பார்த்தாரோ, அப்போது அந்த எதிரிகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தொடங்கினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்தபடி (க்ரோடொனா என்ற நகரில் குடியிருந்திருக்கிறார்) மரணம்-மறுபிறப்பு குறித்தெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதைப் படித்தபோது வியப்பாக இருந்தது. இறந்தவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிற இந்து மதக் கொள்கைதான் பித்தகோரஸுக்கும் இருந்திருக்கிறது. அழிவற்ற ஆன்மா உடனடியாக இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு விடுகிறதென்று அவர் சொன்னார். அன்றைய ஐரோப்பாவில் இதையெல்லாம் யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரைப் பைத்தியம் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் இடைவிடாமல் எதிர்ப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

பித்தகோரஸ் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இசைக்குள்தான் கணிதம் வாழ்கிறது என்றார். எண்கள்தாம் எல்லாம்; அவற்றுக்கு மாய சக்தி உண்டு என்றார். கணிதத்தையும் இசையையும் ஒரு காக்டெய்ல் ஆக்கி வானியல் சார்ந்த தரிசனங்களைப் பெற முடியும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார். அது சார்ந்த பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார். அவை என்னவென்ற விவரம் சரியாகக் கிடைப்பதில்லை.

இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைப்  புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அப்புறம் அந்த அவரைக்காய்.

பித்தகோரஸுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரைக்காய் ஒரு கெட்ட காய். அசப்பில் அது மாமிசம் போலவே தோற்றமளிக்கிறது. என்றால், அது தாவரமே என்றாலும் உண்ணத்தகுந்ததல்ல என்று தீர்மானமாகச் சொன்னார். பித்தகோரஸுக்கு இந்து மதத்தில் உள்ளதைப் போல மேல் உலகம்-பூமி-கீழ் உலகம் என்கிற கருத்தக்கத்தில் தீவிர நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த அவரைக்காய், பூமிக்கும் அதற்குக் கீழான உலகங்களுக்கும் வேர்களின் வழியே பாதை அமைக்கிறதென்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். தாம் நம்பியதைத் தமது சீடர்களுக்கும் சொல்லி, போகிற இடங்களில் பார்க்கிற அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்; யாரும் அவரைக்காயைச் சாப்பிட வேண்டாம் என்று அச்சுறுத்தி அனுப்பி வைக்கும் அளவுக்கு அதில் அவர் தீவிரம் கொண்டிருந்தார்.

அவரது மரணம் குறித்துத் தெளிவான சரித்திரத் தகவல்கள் இல்லை. ஆனால் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அவரைக்காய் கதையும் ஒன்று.

பித்தகோரஸின் கருத்துப்படி, அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் குறுக்கே கடந்து போகக் கூடாது. அந்த வயலைக் கடப்பது என்பது முன்னோர்களின் ஆன்மாவை மிதித்துச் செல்வது போன்றது என்று அவர் சொன்னார்.

அப்படிப்பட்டவர் ஒரு சமயம் அவரது எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு தரப்பட்ட எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பித்தகோரஸை அவரது சீடர்கள்தாம் ஆபத்தின்றி பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பம். எங்கோ ஓரிடம். சீடர்களுடன் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். கைது செய்து இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.

விடிந்தால் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சீடர்கள் முடிவு செய்து, ஏதோ ஓர் உபாயத்தைக் கண்டறிந்து பித்தகோரஸின் கட்டுகளை அவிழ்த்து, அவரைத் தப்பித்து ஓடிவிடச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருந்த பித்தகோரஸ், ஓரிடத்தில் மிகப்பெரிய அவரைத் தோட்டம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.

அதைக் கடந்தால், உயிர் பிழைத்துவிடலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கொள்கை என்ன ஆவது? அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் கடந்தால் அது முன்னோரின் ஆன்மாவை மிதிப்பதற்குச் சமமல்லவா?

செய்வதறியாமல் பித்தகோரஸ் குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டார். இப்போது, துரத்தி வந்த எதிரிகள் தாவிப் பிடித்து அவரைக் கொன்றுவிட்டார்கள்.

இது வெறும் கதையா, உண்மையிலேயே பித்தகோரஸின் முடிவு இப்படித்தான் நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் சாகவிருக்கும் தறுவாயிலும் கொள்கையை விட்டுத்தர மனமில்லாத ஒரு மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்திருப்பான்!

எனக்குக் கணக்கு வராது. அறிவியல் பிடிக்காது. வானியலெல்லாம் மழை வருமா வராதா என்று வெதர் ஆப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவோடு சரி. தத்துவங்களை முற்றிலுமாக வெறுப்பவன். மதத்தின் மீது  அறவே நம்பிக்கை இல்லாதவன். எனவே, எந்த விதத்திலும் பித்தகோரஸை நினைத்துக்கொள்ள நியாயமே இல்லாதவன் ஆகிறேன். ஆயினும் இந்த ஒரு கதை என்னை அவர்பால் சுண்டி இழுத்துக்கொண்டே இருக்கிறது.

என்றைக்காவது பித்தகோரஸை அல்லது அவரைப் போன்ற ஒருவனை வைத்து ஒரு நாவல் எழுதலாம். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், ஒருவேளை அது நடக்குமானால் என் நாவலின் நாயகன் அவரைக்காயை வெறுக்க மாட்டான்.  கொத்தவரங்காயைத்தான் வெறுப்பான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் "சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”"

மலேயா கணபதி

முதுபெரும்‌ பொதுவுடமைக்‌ கட்சித்‌ தோழர்‌ கே.டி.கே.தங்கமணி மலேசியாவில்‌ பல்வேறு பிரச்சாரக்‌ கூட்டங்களை முடித்துக்‌ கொண்டு, இந்தியாவுக்குக்‌ கப்பல்‌ ஏறுகிறார்‌. கப்பல்‌ ஏறுகிற நேரத்தில்‌ அவர்‌ முன்னே ஆயுதம்‌ தாங்கிய தோழர்கள்‌ செவ்வணக்கம்‌ செலுத்தி விடை தருகின்றனர்‌. செவ்வணக்கத்தை ஏற்றுக்‌ கெண்டு “நீங்கள்‌ யார்‌” எனக்‌ கேட்கிறார்‌ கே.டி.கே. அதற்கு அவர்கள்‌ பதில்‌ “தங்கள்‌ பாதுகாப்புப்‌ பணிக்காக, மலேயா கம்யூனிஸ்டு கட்சி நியமித்த கொரில்லாக்கள்‌".

ஒரு தோழரின்‌ உயிர்‌, உடல்‌ அகில உலகத்துக்கு மட்டுமல்ல, நான்கு கோடித்‌ தமிழர்களுக்கும்‌ பத்திரமாக திருப்பி ஒப்படைக்கிற, இந்த பாதுகாப்புக்‌ கவசத்தின்‌ சூத்ரதாரி கணபதி.

தீண்டாமை என்பது ஓட்டுவார்‌ ஒட்டி நோய்‌. காசம்‌ (சயரோகம்‌), சொறி, சிரங்கு, படை போன்ற நோய்களுக்கு இந்தக்‌ குணம்‌ உண்டு. தமிழ்‌நாட்டிலிருந்து மலேயா, சிங்கப்புர்‌, ரங்கூன்‌ சென்ற தமிழர்கள்‌, தங்களுடன்‌ இந்த தீண்டாமை நோயையும்‌ இடுக்கி கொண்டு சென்றார்கள்‌. தமிழகத்‌ தேநீர்க்‌ கடைகளில்‌ தனித்‌ தம்ளர்கள்‌ என்றால்‌ மலேயாவில்‌ தனித்‌ தகர டப்பாக்கள்‌. தாழ்த்தப்பட்ட மக்களின்‌ கண்ணீரின்‌ உப்பு, கடல்‌ கடந்த பின்னும்‌ அந்த தகர டப்பாக்களில்‌ கரைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களை தன்னுடன்‌ தேநீர்க்கடை அழைத்துச்‌ சென்று மற்றவர்க்குச்‌ சரி சமமாக பெஞ்சுகளில்‌ உட்கார வைத்து, தேநீர்‌ அருந்த செய்து, தானும்‌ அருந்துவார்‌ கணபதி.

1936 - 38 ல்‌ மலேயாவில்‌ தீண்டாமை எதிர்ப்புக்‌ கனலை உச்ச நிலைக்கு எடுத்துச்‌ சென்றார்‌ கணபதி. தீண்டாமைப் பிரச்சனையை எப்போதும்‌ பிற இன சமுதாய மக்களின்‌ முற்போக்கு சக்திகளை இணைத்துக்‌ கொண்டே முற்றிலும்‌ ஒழிக்கும்‌ போரட்டத்தினை வெற்றி பெறச்‌ செய்ய இயலும்‌ என்பதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டினார்.

அக்காலத்தில்‌ மலேயத்‌ தமிழர்களை 'ஒராங்கிள்ளேங்‌' என மிக இழிவாக அழைத்தார்கள்‌. மலேய மொழியில்‌ அந்த ஒரு சொல்லுக்கு திருடன்‌, கொலைகாரன், தாழ்ந்தவர்‌ என்று பல அர்த்தங்கள்‌. புதுப்புது அர்த்தங்களை உருவாக்கி, தமிழர்களை குற்றப்‌ பரம்பரை போல்‌ கருதிய எண்ண ஓட்டத்தை எதிர்த்து உலகிற்குத்‌ தொன்மையான நாகரிக நீரோட்டத்தை தந்தவர்கள்‌ தமிழர்கள்‌ என்ற கருத்தாக்கத்தை பதிய வைத்தார்‌ கணபதி.

மலேயா முழுவதும்‌ எதிப்புச்‌ சுவரொட்டிகள்‌ ஒட்டப்பட்டு சில இடங்களில்‌ சட்டத்தின்‌ துணையோடு எதிர்த்து இடையறாத போரட்டத்தை நடத்தி அந்தப்‌ பழிச்‌ சாயத்தை துடைத்து மலேயா சரிதத்தின்‌ பக்கங்களை வெண்மைப்படுத்தினார்‌ கணபதி.

ஒவ்வொரு போராளியும்‌, ஒவ்வொரு இலட்சியத்தை தலையில்‌ தூக்கிச் சுமந்து, அதை  நிவைற்றத்‌ தேவைப்படும்‌ மற்ற இலட்சியங்களை சுமையாகக் கருதி தரையில்‌ இறக்கி விடுவார்கள். அவரவர் எல்லைக் கோடுகளில் அவரவர்க்குச்‌ சுகம்‌. கத்தரிக்கப்ட்ட சிறகுகள்‌ அந்த எல்லைக்‌ கோடுகள்‌ வரை மட்டும்‌ செல்லும்‌.

கணபதி ஒரு மார்க்சியப்‌ போராளி. எல்லாத்‌ திசைகளையும்‌ உள்ளடக்கி எல்லாப்‌ பிரச்சனைகளையும்‌ உள்செறித்து, நடைமுறைகளின்‌ ஆயிரம்‌ கைகளை விரிக்கச்‌ சொல்கிறது மார்க்சியம்‌. மலேயா பல இன மக்களின்‌ கூட்டுத்‌ தீபகற்பம்‌, அங்கு தேசிய இனங்களை இணைத்துப்‌ போராடுவது, வரலாற்றின்‌ கட்டாயம்‌. போரட்டங்களை இணைத்தார்கள்‌. இணைத்தவர்கள்‌ பின்னாளில், கம்யூனிஸ்டாக மாறினார்கள்‌.

மலேயா கம்யூனிஸ்களின்‌ போராட்டம்‌, காங்கிரசின்‌ தேசியப்‌ போராட்டம்‌, தமிழ்‌ மொழிப்‌ போராட்டம்‌, தீண்டாமை ஒழிப்பு போர்‌, மலேயா விடுதலைப்‌ போர்‌, ஏகாதிபத்திய எதிர்ப்புப்‌ போர்‌, வர்க்கப்‌ போரட்டம்‌ என்ற அனைத்திலும்‌ தலைமை ஏற்றிருந்தார்‌ கணபதி. பன்முகங்களிலும்‌ கருக்‌ கொண்டு அவர்‌ போர்க்‌ குணம்‌ உயிர்த்தது. அவர்‌ தலைமையேற்றும்‌ உறுதுணையாய்‌ இருந்தும்‌ பங்களித்த அமைப்புகள்‌ ஏராளம்‌.

  1. தமிழர்‌ சீர்திருத்தச்‌ சங்கம்‌
  2. விளையாட்டரங்கம்‌
  3. இந்திய இளைஞர்‌ கழகம்‌
  4. பகத்சிங்‌ உடற்பயிற்சி மன்றம்‌
  5. இந்துஸ்தான்‌ சோசலிசப்‌ படை
  6. பல்வேறு தொழிற்சங்கங்கள்‌
  7. மகளிர்‌ உரிமை அமைப்பு
  8. தீண்டாமை ஒழிப்பு இயக்கம்‌
  9. மக்கள்‌ சனநாயகக்‌ கழகம்‌
  10. அகில மலேயா கம்யூனிஸ்ட்‌ கட்சி
  11. நேதாஜி இந்திய தேசிய ராணுவம்

பன்முகப்‌ பணிகளில்‌ தோள்கொடுத்தவர்கள்‌ பலர்‌, அவர்களில்‌ வாழும்‌ நிஜம்‌ குருதேவன்‌. கணபதியை குரு இயக்கினாரா, குருவை கணபதி இயக்கினாரா என்று சொல்ல முடியாது. யார்‌, யாருக்கு ஆதாரம்‌ என்று அறுதியிடுவது சுலபமல்ல. தோழர்களாய்த்‌ தொடங்கி அகில மலேயா விடுதலைப் படை, கொரில்லாப்‌ படை வரை அது தொடர்கிறது. இன்குலாப் குறிப்பிடுவது போல தோழர்‌ குருதேவன்‌ வெறுந்‌ தாத்தவாக மட்டுமே இங்‌கே மா.லே கட்சியால்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டார்‌. ஆனால்‌ அவரது வாழ்க்கையின்‌ சொல்லப்படாத  புரட்சிப்‌ பகுதிகள்‌ எத்தனையோ உண்டு.

கணபதி போலவே தூக்குமேடையைச்‌ சந்தித்த வீரசேனன்‌, கீழக்காடு சுப்பிரமணியம்‌, சிந்தனையாளர்‌ அ.மார்க்ஸின்‌ தந்தை பாப்பா நாடு அந்தோணிசாமி, மலேசிய பழனி, தியாகி சாம்பசிவம்‌, திருமாக் கோட்டை இரத்தின சபாபதி, ராஜமாணிக்கம்‌, வாட்டாகுடி இரணியன்‌, செட்டிநாடு வீரசிம்மன்‌, புரட்சிப்‌ பித்தன்‌, மயில்‌ ராவணன்‌, முத்தையா, அருப்புக்கோட்டை ஜீவானந்தம்‌, அத்திப்பட்டு வீரசோழன்‌ என்று பலராலும்‌ தலையால்‌ முட்டுக்கொடுத்து தோள்களால்‌ தாங்கித்‌ தொடர்ந்த எழுச்சி வரலாறு, தமிழர்களுக்குப்‌ புதிய செய்தி.

பட்டுக்கோட்டைப்‌ பக்கமுள்ள தம்பிக்கோட்டையிலிருந்து நெல்‌ குவியும்‌ தஞ்சை பூமியில்‌ வயிற்றுக்கு ஒரு பிடி நெல்கூட கிடைக்காமல்‌ ஒன்பது வயதில்‌ கணபதி மலேயா பயணமாகிறார்‌.

"கருங்கல்‌ கணபதிக்கு சுடச்‌ சுடச்‌ சுட அதிரசமும்‌ அக்காரவடிசலும்‌, ஆனால்‌ தம்பிக்‌ கோட்டை கணபதிக்கோ தாங்காத விடுதலைப்‌ பசி” என்று கலைஞர்‌ கருணாநிதி எழுதுவார்‌. 'கயிற்றில்‌ தொங்கிய கணபதி' என 1952-ல்‌ எழுதிய நூலில்‌ குறிப்பிடுவார்‌. அது நாடகமாகவும்‌ தமிழ்நாட்டின்‌ பல இடங்களில்‌ நடத்தப்‌ பெற்றது.

கடல்‌ கடந்து சென்றதெல்லாம்‌ குடல்பசி தணிப்பதற்காக மட்டுமல்ல. தமிழ்ச்‌ சமுதாயத்தின்‌ மேன்மையை வளர்த்தெடுக்க - பொதுவுடமைத்‌ தீயை மூட்டிப்‌ பெரு நெருப்பாக்க என்பது, கணபதியின்‌ பின்னாளைய வரலாற்றுப்‌ பக்கங்கள்‌ வெளிச்சப்படுத்துகின்றன. மலேசியாவின்‌ விடுதலை வரலாறு கணபதியின்‌ பன்முகப்‌ போரட்டங்ளினூடாக தோள்மேல்‌ போட்டு தொடர்ச்சியாக நடந்து போகிறது.

கணபதி 1915-ல்‌ பிறந்தார்‌, 1949-ல்‌ தூக்குக்‌ கயிறு அவரை இறுக்கியபோது வயது 34. வாழ்வின்‌ ஒரு சிறிய இடம்தான்‌ அவருக்கு அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட அந்த சின்ன சந்தில்‌ அவர்‌ எத்தனை 'சாகசங்கள்‌' செய்திருக்கிறார்‌.

உலகின்‌ மாபெரும்‌ தொழிற்சங்கங்களின்‌ சம்மேளனத்திற்கு இணையாக பான்‌-மலேயா தொழிற்சங்க சம்மேளனம்‌ உருவாக்கப்படுகிறது. அகில மலேயா தொழிற்சங்கங்கள்‌ சம்மேளனம்‌, மலேயா அய்க்கிய முன்னனி, மலேயா அய்க்கிய கம்யூனிஸ்ட்‌ கட்சிகள்‌, இணைந்து பிரிட்டானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மலேயா விடுதலைப்‌ போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்‌. பிரிட்டீஷ்‌ ஏகாதிபத்தியம்‌ அவசர நிலைப்‌ பிரகடனம்‌ செய்து, பான்‌-மலேயா தொழிற்சங்கங்கள்‌ மேல்‌ பாசிச வெறிகொண்டு தாக்குகிறது. போராளிகள்‌ கொரில்லாப்‌ போரை முன்னெடுக்கிறார்கள்‌. அது ஒரு மக்கள்‌ சனநாயகப்‌ புரட்சி.

மக்கள்‌ சனநாயகப்‌ புரட்சி வெற்றி பெற்றிருந்தால்‌, மலேசியாவின்‌ சித்திரம்‌ மட்டுமல்ல, இந்தியாவின்‌ முகம்‌ கூட மாற்றி எழுதப்பட்டிருக்கும்‌. இந்திய முகத்திற்கு ஒரு முகவரி கிடைத்திருக்கும்‌.

மாவீரன்‌ மலேயா கணபதியின்‌ வரலாறு போலவே மலேயா விடுதலைப்‌ போரை முன்னெடுத்த அக்னிக்‌ குஞ்சுகளின்‌ வரலாறும்‌ சொல்லப்படாமலே போயிருக்கக்‌ கூடும்‌. மணிகள்‌ மண்ணில்‌ கிடக்கையில்‌ உமிகள்‌ ஊர்வலம்‌ போகின்றன. அப்படி அப்படித்தானே நடை முறை அரசியல்‌ நிகழ்வுகளும்‌ நடந்தவாறுள்ளன. தமிழனின்‌ பழைய முன்மாதிரிகளை அகழ்ந்தெடுக்கும்‌ ஆர்வமின்மை, உழைப்புச்‌ சோம்பல்‌ இன்னும்‌ எத்தனை போராளிகளின்‌ வாழ்க்கை சரிதத்தை காவு கொள்ள போகிறதோ?

இந்த ரீதியில்‌ அல்லாமல்‌ மாவீரன்‌ கணபதியின்‌ மறைக்கப்பட்ட வரலாற்றை நம் முன்‌ வைத்து வரலாற்றுக்‌ கடமையை நிறைவு செய்திருக்கிறார்‌ இரா.உதயபாசுகர்‌,

ஒரு தேசத்தின்‌ திசையை மாற்றியமைத்த புரட்சியாளர்களின்‌ சரிதத்தை எழுதிட முதலில்‌ அவர்களைப்‌ பற்றிய செய்திகள்‌ தொகுக்கப்பட வேண்டும்‌. செய்திகள்‌, உண்மைகளாக இருப்பது, உண்மைகளைக்‌ காலவரிசைப்டி இயக்கவரிசைப்படி கோர்த்து அடுக்குவது, இவ்வளவும்‌ செய்து முடித்த பிறகு இப்போது ஒரு சுயமான படைப்பாளியின்‌ வேலை விரிகிறது. படைப்பாற்றலை இழைத்து, ஓட்டம்‌ குறையாமல்‌ எடுத்துச்‌ செல்வது லேசுப்பட்ட காரியம்மல்ல. ஒரு சுய படைப்பாளியை விட கூடுதலான கைகளும்‌, ஆற்றலும்‌ கொண்டவனாய்‌ ஒரு வரலாற்றாசிரியன்‌ மாறுகிறான்‌

பாட்டுத்‌ திறத்தால்‌ வையத்தைப்‌ பாலித்திடப்‌ பிறந்த பாரதிக்கு மரணம்‌ தீண்டியபோது வயது 38. மலேயா கணபதி தூக்கு மேடையில்‌ நின்றபோது வயது 34 தான்‌. பன்முகக்‌ கவிதைத்‌ திறத்தாலே பாரதி இன்றும்‌ வாழ்கின்றார்‌. பாரதியின்‌ வாழ்க்கை விவரணைப்‌ படமாகவும்‌ (டாகுமெண்டரி) வந்து, நிகழ்த்திக்‌ காட்டப்பட்டுள்ளது. இதுபோல்‌ பன்முகப்‌ போராட்ட பரிமாணங்‌ கொண்ட மாவீரன்‌ மலேயா கணபதியின வாரலறும்‌ டாகுமெண்டரியாக வரவேண்டிய கட்டம்‌. தமிழ்‌ அன்பர்கள்‌ முயல்வார்களாக.

இலக்கியவாதி - எந்த அடையாளங்களுடன்‌?

தேர்‌தல்‌ முடிந்துவிட்டது, அனைத்தையும்‌ தீர்மானிக்கிற அரசியலை மக்கள்‌ தீர்மானித்து முடித்து விட்டார்கள்‌. பணம்‌, சாதி, பகட்டு என்ற பொங்குமாங்‌ கடல்கள்‌ பெருக்கெடுக்க, மக்கள்‌ மூழ்கி எடுத்து வந்தது முத்துக்களா, சிப்பியா என்பதை ஜனநாயகம்‌ நிரூபணம்‌ செய்யும்‌. 

மழை பெய்து ஓடை, வாய்க்கால்‌, ஆறுகளில்‌ மண்டியும்‌ ககிழியுமாய் வரும்‌ புதுவெள்ளப்‌ பெருக்கின்‌ அழுக்கைச்‌ சாப்பிட மீன்கள்‌ எதிர்த்தேறிச்‌ சாடிவரும்‌. சாடி கூட்டம்‌ கூட்டமாய்‌ வலையில்‌ அகப்படுவது போல, அழுக்கைச்‌ சாப்பிட்டு அரசியலைத்‌ தூய்மைப்படுத்தி விட்டார்களா மக்கள்‌? காலம்‌ சொல்லும்‌.

நடத்து முடிந்த தேர்தலில்‌ சாதி அணிவகுப்பு விசுவரூபம்‌ எடுத்திருந்தது. ஒரு தொகுதியில்‌ எந்தச்‌ சாதி அதிகம்‌ இருக்கிறதோ, அந்த சாதி வேட்பாளரை நிறுத்துவது என்பதுடன்‌ கூடுதலாக, சாதிக்‌ கட்சிகள்‌ என்ற வெளிப்படையான அடையாளங்களுடன்‌ அரசியல்‌ கட்சிகள்‌ ஒளிவு மறைவின்றி வாக்கு வேட்டை நடத்தின. தேர்தலில்‌ அந்தந்தச்‌ சமூகத்தினைச்‌ சேர்ந்தவர்கள்‌ கூட்டாக வாக்களித்துள்ளனர்‌.

சமூகம்‌ என்ற வார்த்தை சாதியைக்‌ குறிப்பதாகக்‌ குறுகிவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல்‌, சமூகம்‌ என்றால்‌ குறிப்பிட்ட சாதிக்குழுவைச்‌ சேர்ந்தவர்‌ என்று பொருள்‌ ஆகிவிட்டது. மக்கள்‌, வர்க்கம்‌, உறவுகள்‌, வாழ்வு, பண்பாடு என்ற பன்முக அர்த்தங்கள்‌ இருந்தன முன்பு. இப்போது அந்தச்‌ சொல்லின்‌ உள்முகம்‌ ஒடுங்கிவிட்டது.

சமூகம்‌ என்று அர்த்தப்படுத்துகிற சாதிகளுக்குள்ளேதான்‌ அரசியல்வாதிகள்‌ இருக்கிறார்கள்‌. கல்வியாளர்கள்‌ இருக்கிறார்கள்‌. கவிஞர்கள்‌ இருக்கிறார்கள்‌. மக்கள்‌ பிரிவுகள்‌ அனைத்தும்‌ இந்த வட்டத்துக்குள்‌ இயங்கிக்‌ கொண்டிருப்பது தெரிகிறது. பேராசிரியர்கள்‌, மருத்துவர்கள்‌, பொறியியலாளர்கள்‌, கல்வியாளர்கள்‌, விஞ்ஞானிகள்‌ இவர்கள்‌ அனைவரும்‌ சிந்தனையாளர்‌ வகையினர்‌. இவர்களுக்குள்‌ கருக்கொண்டிருக்கும்‌ ஆற்றல்‌ வல்லமை,  ஆளுமை வெளித்‌தெறிந்ததும்‌, அறிவுச்‌ சொந்தம்‌ கொண்டாடி, சாதிகளுக்குள்‌ அடையாளப்படுத்துகிறார்கள்‌.

இப்போது இந்த அணிவகுப்பில்‌ புதிதாக வந்திருப்பவர்கள்‌ இலக்கியவாதிகள்‌. விவசாயி, தொழிலாளி, வியாபாரி, அலுவலர்‌, வழக்குரைஞர்‌, விழையாட்டு வீரர்‌, நீதிபதி என்று ஒவ்வொருவரும்‌ சமுதாயத்தில்‌ ஒவ்வொருவகைப்‌ பாத்திரம்‌ ஆற்றுகிறார்கள்‌, அவர்கள்‌ என்னவாக இருந்தாலும்‌ இலக்கியம்‌ அவர்களை மனிதனாக உணரச்‌ செய்கிறது.

யார் இலக்கியத்தை தொடுகிறார்களோ, அவர்களை இலக்கியம்‌ தொட்டுப், பிசைந்து, மனித குணங்களுள்ள ஒருவராக பக்குவப்படுத்துகிறது. இலக்கியத்தின்‌ உச்ச பட்ச நோக்கம்‌ மனிதனை மனிதானாக உணரச்‌ செய்வது.

இலக்கியவாதி சமுதாயத்தில்‌ தான்‌ வகிக்கின்ற பாத்திரத்தை தீர்மானித்ததும் கருத்துப் பரப்பாளன்‌ என்ற சார்புநிலை உருவாகி விடுகிறது. கருத்து அறிவிப்பாளனாக, சிந்தனைப்‌ பரப்பாளனாக செயல்படுகிறான்‌. தனது கருத்துகளை கதை, கவிதை, கட்டுரை, நாவல்‌, பேச்சு என்ற பல வடிவங்கள்‌ வழியாக இன்னொருவருக்கு எடுத்துச்‌ சொல்கிறபோது அங்கு இன்னொருவர்‌ என்ற இடத்தில்‌ சமுதாயத்‌ தொடர்பு வந்துவிடுகிறது. சமுதாயத் தொடர்பில் இலக்கியவாதி அறிவிப்புச்‌ செய்கிற கருத்துக்கள்‌, அவைகளின்‌ செயல்பாடுகள்‌ மிக முக்கியமானவை. இங்கே இலக்கியவாதியின்‌ பாத்திரத்தை அவன்‌ கருத்துகள்‌ எடுத்துக்‌ கொண்டு வினையாறுகின்றன. எனவே சமூதாயம்‌ பற்றிய கூடுதல்‌ அக்கறை கொண்டவர்‌ என்ற பின்புலத்துடன்‌ முன்னேவரக்‌ கடமைப்பட்டவன்‌ இலக்கியவாதி.

அவ்வகையில்தான்‌ அவன்‌ எழுத்துக்கும்‌ வாழ்க்கைக்கும்‌ சிந்தனைக்கும்‌ செயல்பாடுகளுக்கும்‌ அதல பாதாள வேறுபாடுகள்‌ இல்லாதவனாக எதிர்பார்க்கப்படுகிறான்‌. சாதாரண மனிதர்கள்‌ போல்‌ அல்ல. கருத்து அறிவிப்பாளன்‌ என்ற பாத்திரம்‌ அவனுடையது. என்னவாக சிந்திக்கிறானோ அதற்கு முரணற்றவானக, சமுதாயத்தின்‌ பல்வேறு துறைகள்‌ பற்றி அவன்‌ அக்கறைகளுக்கு அவனே மாறுபாடு அற்றவனாக குறைந்தபட்சம் தன்னுடைய எழுத்துக்கு தானே நியாயம்‌ சொல்லக்‌ கடமைப்பட்டிருக்கிறான்‌.

சாகித்ய அகாதெமி விருது, ஞானபீட விருது, கதாவிருது எனப்‌ பல இலக்கிய விருதுகளை வழங்குகிற தெள்ளத்‌ தெளிவான அமைப்புகள்‌ சில உள்ளன. அவை தவிர தமிழ்ச்‌ சூழலில்‌ சில அமைப்புகள்‌, தனியொருவர்‌ பெயரிலோ அல்லது அறக்கட்டளைகளாகவோ விருதுகள்‌ வழங்கி எழுத்தாளர்களைக்‌ கெளரவித்து வருகின்றன.

இந்த இலக்கிய விருதுகள்‌ எந்த அடையாளங்களிலிருந்து வழங்கப்படுகின்றன? உன்னதமான இலக்கிய படைப்புகள், உயர்ந்த மேதமை என்ற அடையாளத்திலிருந்தா? அப்படி இருந்தால் நமக்கு முற்றிலும் உடன்‌ பாடே. கெளரவிக்கப்படுகிற இலக்கியங்கள் மீது நமக்கு மரியாதை உண்டு. கெளரவிக்கப்படுகிற இலக்கியவாதிகள் மீதும். ஆனால் வேறு எந்தக் கீழான அடையாளத்தின் காரணமாக மரியாதைக் குரியவர்களாக ஆக்கப்படுகிறார்கள்‌?

பரிசுகள் வழங்கும் அமைப்‌புகளின் குணங்களை, குறிக்கோள்களை வகிந்து, உள் கிடைக்கும் ரணப்பித்தை எடுத்து முகர்ந்து பார்த்தால்‌ ஒரு கெட்ட வாசனை வீசும்‌ - அது சாதிய வாசம்‌. பரிசுகளைக்‌ கொண்டு போய்ச் சேர்க்கிறவர்கள்‌ மட்டுமல்ல - பரிசுகள்‌ போய்ச்‌ சேருசிற இட ம்‌ பற்றியும்‌ கேள்விகள்‌ எழும்புகின்றன.

தமிழ்‌ இலக்கியச்‌ சூழல்‌, விருதுகள்‌ என்ற சாதிய நஞ்சு பாய்ந்து நீலம்‌ பாரித்துப் போய்க்‌ கொண்டிருக்கிறது. வெளிப்படையாக தமிழகம்‌ முழுவதும்‌ அறியப்பட்ட இந்தப்‌ பரிசுகள்‌ மட்டுமல்ல, ஆங்காங்கே இயங்குகிற சாதியக் குழுக்களால்‌ வழங்கப்படுகிற பரவலாக வெளித்‌ தெரியமால்‌ இயங்குகிற அமைப்புகளும்‌ இந்த மினுமினுப்பான திருப்பணியைச்‌ செய்து கொண்டிருக்கின்றன.

பரிச பெறுகிற இலக்கியவாதிகள்‌, சாதிய உணர்வோடு அந்த மரியாதையை ஏற்றுக்‌ கொள்கிறார்களா என்ற கேள்விக்கு, இவரிவர்‌ இப்படி இல்லை என்ற பதில்களை நாம்‌ அடுக்க முடியாது. கேள்விகளுக்கு அவர்களே பதில்‌ சொல்லக்‌ கடமைப்பட்டவர்கள்‌. சாதிய அடையாளமா, இல்லையா என்பதை அவரவர்‌ நெஞ்சு அறியும்‌.

அமைப்புகளின்‌ நோக்கம்‌ அறிந்து, அந்த கெளரவத்துக்கு நான்‌ உகந்தவனில்லை என்று மறுதலிப்பதுதான்‌ பொறுப்புள்ள பதில்‌. மனித உள்‌ மனசுகளை அகழ்ந்து ஆராய்ந்து அக்கக்காகப்‌ பிய்த்து, பிரித்து எடுத்து வித்தைகள்‌ நிகழ்த்துகிற ஒரு இலக்கியவாதி, ஓர்‌ அமைப்பின்‌ உள்நிறம்‌ என்ன என்பதைக்‌ கண்டறிய முடியாதவனாக இருக்கிறான்‌ என்பது உலக அதிசயங்களுள்‌ ஒன்றைக்‌ கூட்டிக்‌ கொள்வதாக இருக்கும்‌.

உண்மையில்‌ இத்தகைய அமைப்புகள்‌ தொலை நோக்குப்‌ பார்வையுடன்‌ செயல்படுகின்றன. பழைய சமூக அமைப்பு முறைக்குள்‌ கலைஞர்கள்‌, இலக்கியவாதிகள்‌, சிந்தனையாளர்களை உள்திணித்துக்‌ கொள்வதும்‌, புதிய சமூக உருவாக்கத்திற்கான செயல்பாடுகளிலிருந்து இவர்களை அப்புறப்படுத்துவதும்‌ இந்த அமைப்புகளின்‌ நோக்கமும்‌ நிறைவேற்றமும்‌ என ஒன்றாய்‌ ஒரு புள்ளியில்‌ குவிகின்றன.

சமுதாயத்தின்‌ கருத்து அறிவிப்பாளர்களாக பணியாற்றுகிற எழுத்தாளர்கள்‌, பேராசிரியர்கள்‌, கல்வியாளர்கள்‌, விஞ்ஞானிகள்‌, சிந்தனையாளர்கள்‌ விஞ்ஞானபூர்வமாக சமுதாயத்தை, அதன்‌ இயக்கத்தை ஆய்வு செய்வதும்‌ சமூக மனிதன்‌ என்ற முறையில்‌ அதற்கு நேரெதிரான நடவடிக்கை, செயற்போக்கு கொள்வதும்‌ இழிவான முரண்கள்‌. எவ்வளவு வேண்டுமானலும்‌ ஆய்வு செய்யலாம்‌: உபதேசம்‌ செய்யலாம்‌: வாழ்க்கைக்கு வருகிறபோது வழுக்கி விழலாம்‌ என்ற ஆபத்தான கொள்கை கொஞ்சம்‌ கொஞ்சமாய்‌ விரிந்து ஆயிரம்‌ கோரப்‌ பற்களும்‌ நகங்களும்‌ கொண்டு இளைய தலைமுறையையும்‌ உள்செறித்து விழுங்கத்‌ தயாராகி வருகிறது.

இன்றைய சூழலில்‌ எழுத்தாளனுடைய தளம்‌ விரிந்த எல்லைகளுடையது. இன்னொரு பொருளில்‌ எல்லைகளற்றது. எழுத்து, இலக்கியம்‌ என்ற வட்டத்துக்குள்‌ மட்டும்‌ இயங்குபவனாக எழுத்தாளன்‌ இருக்க முடியாது. எழுத்தை சமூகப்‌ பொறுப்புடன் கையாளுகிறவனாக இருக்கிறபோதே, எழுத்து அல்லாத பிற சமூகப்‌ பிரச்சனைகளுக்கும்‌ இட்டுச் செல்லப்படுகிறான். அவனைச்‌ சூழ நிகழ்கிற அனைத்திலும்‌ கருத்துச் செயல்பாடுள்ளவனாக வட்டம் விரிவடைகிறது. விரிவடைகிற இயல்புகளுக்கு எதிராகத்‌ தன்‌ வட்டத்தைச் சுருக்கிக் கொள்ளுதல்‌, தன்‌ படைப்பாற்‌றலைத் தனக்குத்தானே பங்கப்படுத்திக்‌ கொள்ளுதல் ஆகும். தன்‌ சுய படைப்பாற்றலுக்கு எதிரான முதல் கோடாரியை அவனே வீசுகிறான்‌.

இளைய தலைமுறை களங்கமற்ற நெஞ்சப்‌ பரப்பும்‌ செயலாற்றத்‌ துடிக்கும்‌ நெஞ்சத்‌ துணிவும்‌ கொண்டது. எந்த அழுக்கும்‌ தனக்குள் அண்டாதவாறு காப்பது மட்டுமல்ல, சமுதாயத்ததில்‌ மண்டிக் கிடக்கும்‌ அழுக்கை வெளியேற்றுகிற போராளிகளாகவும்‌ வெளிப்படுகிறார்கள்‌. எழுத்துக்கும்‌ எழுத்தாளனுக்கும்‌ உள்ள இடைவெளியை மிக எளிதாகவே அவர்கள்‌ அடையாளம்‌ காணுவார்கள்‌. ஒருவருடைய நிழலும்‌ அவருடையதாக இல்லை என்பதைக்‌ காணுகிற போது அதிர்ச்சியடைவார்கள்‌. இலக்கியப்‌ படைப்பாளிகளின்‌ கருத்துக்களால்‌ உலுக்கப்பட்டு அவர்களது நடைமுறைகளால்‌ அதிர்ச்சியடைகிற இளைய தலைமுறையினர்‌ அரசியல்வாதிகள் போலவே இலக்கிவாதிகளும்‌ ஆகிவிட்ட அவலத்தைப்‌ பேசுவார்கள்‌.

இலக்கியப்‌ பறவைகளின்‌ சிறகுகள்‌ சாதிய எண்ணெய்ப்‌ பிசுபிசுப்பில்‌ சிக்கி, சுதந்திரமாகப்‌ பறத்தல்‌ தடைப்பட்டுப்‌ போனதை அக்கறையுடன்‌ சுட்டிக்‌ காட்டுவார்கள்‌.

ஒரு கவிஞனை முன்னிறுத்திச்‌ சொன்ன வெ.சாமிநாத சர்மாவின்‌ இந்த வரிகள்‌ நமது ஞாபகத்திற்கு வரட்டும்‌.

"கவிஞனே, தொட்டாற்சிணுங்கி செடியைப்‌ போன்றதன்றோ உனது அறிவு. உனது இதயமும் தொட்டாற்‌ சிணுங்கிதான்‌: பிறர்‌ துயர்கண்டு நீ எவ்வளவு துடிக்கிறாய்! அநீதியைக்‌ கண்டு எப்படிப்‌ பொருமுகிறாய்‌! தீநெறி என்று தெரிந்தும் எப்படி துணுக்குற்று அதனின்றும்‌ ஒதுங்கிக்‌ கொண்டு விடுகிறாய்‌?"

- பா.செயப்பிரகாசம், அக்டோபர்‌ 1999

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013

பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம்,  பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.



வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன்.

எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள் என்று பலவகையாக பெயரிடப்பட்ட அந்த நாள். 

உலகப் பரப்பில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒரு தனித்த பண்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு பண்பாட்டு நிகழ்வு எதன் காரணமா எக்காலத்தில் தோன்றியது என்று கண்டறிவது, அந்த ஆதி புள்ளியை கண்டறிவது கடினம். இறுதிக்கும் இறுதியாய் ஒரு நம்பிக்கையாக மட்டுமே அதற்கு விளக்கம் காணுகிறார்கள். யூகம், அனுமானம் இவற்றினால் அதை சுற்றிக் கட்டப்பட்ட கதைகளும் உண்டு. தமிழனம் எடுக்கும் பொங்கல் விழா யூகத்தின் காரணமாய், அனுமானத்தின் காரணமாய் கட்டப்பட்ட ஒரு கதை நிகழ்வல்ல. அது ஒரு நம்பிக்கை அல்ல. சங்கராந்தி போல, தீபாவளி போல, கார்த்திகை போல மூடத்தனத்தின் மேல் கட்டப்பட்டஆரிய நிகழ்வுகள் அல்ல. காலம் மாறுதலை, தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தில் காலச் சூழற்சியில்  எழுந்த ஒரு மாறுதலை சுட்டும் ஒரு வரலாற்று நிகழ்வு. இனக் குழு சமூகமாக இருந்த தமிழ் இனம், வேளாண் சமூகமாக மாறியத்தின் அடையாள புள்ளி அது.

வேட்டைச் சமூகமாக இருந்த ஓர் இனம், வேளாண் சமூகமாய் நாகரிக உயர்வு பெறுகிறது. தம் உழைப்பை, உணவு தானியத்தை தங்களுக்கு தந்த சூரியனை, வான் மழையை, காற்றை, இயற்கையை வணங்கினார்கள் தமிழர்கள். பிள்ளைகளை போல் பொத்தி பொத்தி வளர்த்த பயிர்கள், தங்கள் தலையால் தானியம் தந்து வணங்குகிற போது, அந்த பயிர்களை கொண்டாடும் அறுவடைக்காலத்தை அவர்கள் வணங்கினார்கள். அந்த அறுவடைக்காலத்தை கொண்டு சேர்த்த, கழுத்து ஓடிய பாடுபட்ட மாடுகளை, அவர்கள் மாட்டு பொங்கல் என்ற நினைவு கொண்டார். அந்த பொங்கலை தங்களுக்கு கொண்டுதந்த உழைப்பாளிகளை, அவர்கள் காணும் பொங்கல் என்று கொண்டாடினார்கள். பொங்கல் திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று மூன்று வகையாக இவைகளை அவர்கள் வகுத்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் மே தினம் போல், மாவீரர் நாள் போல் பொங்கல் விழாவில் மேற்கொள்ள வேண்டிய சங்கர்ப்பங்கள் என உறுதி மொழிகள் உண்டு. 

பொங்கல் எனும் பழைய தமிழர் திருநாளில் தமிழர் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்கள் என்ன?

சித்திரையில் இருக்கும் தமிழா

நித்திரையில் இருக்கும் தமிழா 

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் 

கற்பித்ததே அறிவு கோவா 60 ஆண்டுகள் 

தரணி ஆண்ட தமிழனுக்கு 

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு 

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சித்திரை திருநாளில் தொடங்குகின்ற புத்தாண்டு 60 மாதங்களும் வடமொழிப் பெயர்கள். 60 ஆண்டுகளும் வடமொழிப் பெயர்கள். நாயக்க மன்னர் ஆட்சியில்தான் இதை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்கள். 

நாம் இங்கே கவனிக்க வேண்டியது இந்த உழவர் திருநாளில், பொங்கல் திருநாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் என்ன. சாதி ஒழித்தல் ஒன்று. தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை மறந்தால் மறுபாதிக் தொலங்குவதில்லையாம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். நாம் இந்த நாளிலே சாதி பேதங்கள் கற்பித்து கொண்டு, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். இன்றைய தமிழகம் இதே நிலையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் நிலைமைகள் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் சாதி பேதங்கள் பாராட்டுவது என்பது ஒவ்வொருவருடை ரத்தத்திற்கும் உள்ளேயும் ஊறி இருக்கிறது. ஆகவே சாதி ஒழித்தல் ஒன்று, தமிழ் வளர்த்தல் மற்றொன்று. 

அன்றைக்கு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் போராடினோம். ஆனால் இந்தி ஆதிக்கத்துக்கு பதிலாக ஆங்கில ஆதிக்கம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நாம் அன்னை மொழியாகவே ஏற்றுக் கொண்ட, ஏனென்றால் - எது ஆங்கிலத்தை இது உங்கப்பன் வீட்டு மொழியா? என்று கேட்டார் கவிஞர் காசி ஆனந்தன். ஆனால் அது அப்பனாக இல்லை. நமக்கு அம்மாவாகவே மாறி இருக்கிறது. எனவே நம்முடைய வாழ்வியல் மரபுகளில் எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய தமிழன் இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொண்டிருக்கிறது. 

எனவே இந்த பொங்கல் திருநாளில் நாம் சூளுரைக்க வேண்டியவை - போலி போலியான உறுதிமொழிகள், பாவனைகள் செய்தல் அன்றி உண்மையாகவே நாம்  உழைக்கும் மக்களுக்காக, உழவர்களுக்காக, பாடுபடும் மக்களுக்காக நாம் உறுதி ஏற்போமேயானால், ஜாதி ஒழித்தலும், தமிழ் வளர்த்தலும், உலகமயமாதலை எதிர்த்தலும் என்ற மூன்று கோட்பாடுகளை முன்வைத்து இந்த பொங்கல் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். உறுதி ஏற்போம்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

258. Eden: An Indian Exploration of Jewish, Christian and Islamic Lore

கடவுள். காதல் போல் வசதியான பொய். கடவுளின் பெயரால் மதம். சகிக்க முடியாத மனிதத் தன்மையற்ற தமது செயல்களுக்கு ஆட்சியாளர்கள் காரணம் காட்ட தன்னுடன் வைத்திருக்கும் வசதியான உண்மை இந்த மதம். குடிமக்களும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் தெரிந்த வடிவமே தன்னை ஆள்பவர்கள் என்று காலங்காலமாக நம்பும் சித்தாந்தம் இந்த மதம். அரசியலில் மதம் கலக்கும் போது ஆட்சியாளன் பரமாத்மா. குடிமக்கள் கர்மா. அதனால் தான் ஒரு சமூகத்தையே மயக்கடிக்கும் போதை இந்த மதம் என்று வெறுக்கிறது கம்யூனிசம். Religion is opium of masses. ஆனால் மதம் போல மனிதத்திரளை வெகு எளிதில் திரட்டிவிடும் வஸ்து வேறேதுமில்லை. உலகின் மூலைகளெங்கும் பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மையிது. ஜெயமோகன் சொல்வதுபோல, மதம் மூலம் தேசியத்தைக் கட்டி எழுப்பிய அரசுகள் தான் காலந்தோறும் நிலைத்து நின்றிருக்கின்றன.

தனது மதத்தைத் தனது குழந்தைகளுக்குச் சொல்லி வளர்ப்பது கிட்டத்தட்ட குழந்தைகள் மேல் திணிக்கும் வன்முறை என்பவர்களும் உண்டு. எல்லா மதத்தினரும் சமமாக பயிலும் தமிழ்நாட்டில் கூட, பள்ளிப்படிப்பை விட்டு வெளியேறும் போது, பிற மதங்கள் பற்றிய அறிமுகம் கூட இல்லாமலேயே வெளிவருகிறோம். நம் சமூகத்தில் நம் பெற்றோரின் மதம், நம் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய ஜென்மப்பாவம்! இப்படிப்பட்ட சமூகத்தை மதம் என்ற ஓபியம் மூலம் மலுங்கடிப்பது சுலபம். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் குழந்தைகளைப் பெற்று தள்ளுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீவிரவாதிகள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் வசியமாய் மதமாற்றுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் வழிபாட்டுத் தலங்களைத் தீட்டாக்குகிறார்கள். ஓபியம் சமூகம் எளிதாக நம்புகிறது. அந்தக் குறிப்பிட்ட மதங்களுக்கு முன், இங்கு எப்படி இருந்தது என்று ஓபியம் சிந்திக்க விடுவதில்லை. பிற மறைநூல் சாத்திரங்களைப் பாரதி சொன்னது போல் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: Eden: An Indian Exploration of Jewish, Christian and Islamic Lore
ஆசிரியர்: Devdutt Pattanaik
வெளியீடு: Penguin
பக்கங்கள்: 312
விலை: 500 ரூபாய் என நினைக்கிறேன்
—————————————————————————————————————————————————————————————————————————
யெஹோவா கர்த்தர் அல்லா. தோரா விவிலியம் குரான். ஆபிராம் ஆப்ரஹாம் இப்ராஹிம். இஸ்மேல் இஸ்மேல் இஸ்மேயில். ஜோப் யோபு அயூப். டேவிட் தாவீது தாவுத். சனி ஞாயிறு வெள்ளி. யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம். மூன்றும் மத்திய கிழக்கில் தோன்றிய மதங்கள். ஒரே கடவுள் கொள்கை. கடவுளுக்கு உருவமில்லை. கடவுள் ஆண்பால். கிறிஸ்தவத்தில் மூவொரு கடவுள். கிறிஸ்தவத்தில் பெரும்பாலும் உருவ வழிபாடு உண்டு. ஒன்றில் சொர்க்கம் நரகம் இல்லை. இப்புத்தகத்தின் அட்டைப்படம் போல, ஒன்று பாம்பு என்று சொல்லுமிடத்தில், இன்னொன்று மயில் என்று சொல்லும். ஒன்றில் பிரசவம் சாபம், இன்னொன்றில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் பாவத்தில் பங்கில்லை. ஒன்றில் பெண்ணுக்கு மாதவிலக்கு, ஆணுக்கு வழுக்கை, இன்னொன்றில் மனிதனுக்கு ஆடையும் மரணமும் தண்டனைகள்.

ஒன்றில் துறவு கிடையாது. ஆபிரகாமின் சந்ததிகள் என்ற அடையாளமாக ஒன்றில், ஆண்கள் மேல்தோல் வெட்டுவதில்லை. இரண்டில் பரலோகம் உண்டு. ஒன்றில் இறப்பிற்குப் பின்னான பயணத்தைக் குறிக்கும் உத்தரிக்கிற ஸ்தலம் என்றொரு இடமுமுண்டு. பிரளயம் வரை கடவுள் நேரடியாகவே மூன்றிலும் மனிதனிடம் பேசி இருக்கிறார். சவுல் மூலம் ஒரு மதம் அரசாக உருவெடுத்தது உலகில் முதலில் யூதம் என நினைக்கிறேன். பிராமண மதம் போல யூதம் தனதெல்லை மீறி பரவுவதுமில்லை, யாரையும் சேர்ப்பதுமில்லை. கான்ஸ்டன்டைன் முதல் அரசுகளால் கிறிஸ்தவம் பரவியது. அரசாங்கமாகவும் மதமாகவும் ஒரே நேரத்தில் பரவியது இஸ்லாம். இப்படி ஆபிரகாமின் இம்மூன்று மதங்களின் அரசியல் பற்றி முந்தைய பதிவுகள் பலவற்றில் எழுதியிருக்கிறேன்.

ஜியா ஒவ்வொருவர் கைக்கும் போய், சிலுவைப்போர் ஜிஹாத் போய், போப் கலீபா போய், அணு பெட்ரோல் என இந்த ஒன்றேகால் நுற்றாண்டுகளாக பேஜர் வரை பாய்கின்றன! இவற்றை மதமாக தேவ்தத் பட்நாயக் அவர்கள் புத்தகமாக எழுதியிருக்கிறார் என்றதும் வாங்கிவிட்டேன். காரணம் இவர் மதவாதி அல்ல. குறியீடுகள் சிந்தாந்தங்கள் என்று பல விடயங்களைத் தொடர்புபடுத்தி எழுதுவார். உதாரணமாக கிரேக்க அமேசான் பற்றி எழுதினால், பெண் வீரர்களை மட்டுமே கொண்ட படைக்கு அரசர்கள் அப்பெயர் வைத்தார்கள் என்பார், அப்படியே இங்கு சந்திர குப்த மௌரியர் அதேபோல் ஒருபடை வைத்திருந்ததாக சொல்வார். அவர் புத்தகங்களில் அவர் கைப்பட வரைந்த படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும். அப்படங்கள் கதை சொல்லும். இரண்டு மதங்களில் கடவுளுக்கு உருவமே கிடையாதே, எப்படி வரைந்திருப்பார் என்ற ஆர்வம்!


(பார்வையற்ற ஈசாக்கிடம் எசாயூ போல் வேடமிட்டு ஏமாற்றும் யாக்கோபு. இயேசு சொன்ன இடத்தில் வலையிட்டு அதிக மீன் கிடைத்தல்)

சரி, An Indian Exploration என்று ஏன் தலைப்பில் சொல்கிறார். அது நீங்கள் புத்தகம் படித்ததால் தான் புரியும். அவர் எழுத்து நடை அப்படி. ஆசிரியரின் நடையில் எனக்கு புதிதாக கிடைத்த தகவல்கள் சில:

  1. பாரவோன் ஆட்சியில் பஞ்சம் போக்கிய யோசேப் / ஜோசப் / யூசூப், உபரி தானியங்களைச் சேர்த்து வைத்த இடங்கள் தான் பிரமிடுகளாம்!
  2. செங்கடல் வழியே எகிப்தில் இருந்து இஸ்ரேல் நடந்து வர, 40 ஆண்டுகளா என்ற எனது சந்தேகத்திற்குப் பல ஆண்டுகள் கழித்து இப்புத்தகம் பதில் சொன்னது.
  3. சாலமோனின் நீதியை நிலைநாட்ட மூன்று மதங்களிலும் மூன்று வெவ்வேறான கதைகளாம்! எனக்கு ஒரு கதைதான் தெரியும். அதைப் போல் ஓர் அரசன் காஷ்மீரை ஆண்டார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
  4. இம்மூன்று மதங்களுக்கு முன்னரே அதே நிலத்தில் ஒரே கடவுள் கொள்கை இன்றும் பேசும் இன்னொரு மதம் பற்றி, ஒரு பக்கம் நிறைய குறிப்பெழுதி வைத்திருக்கிறேன்.

இம்மதங்கள் சாத்தானைப் பற்றி என்ன சொல்கின்றன? பிலாத்துவைப் பற்றி விவிலியம் ஏன் இவ்வளவு துல்லியமாக விவரிக்கிறது? எவ்வளவு அந்நியமாய் இருந்தாலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் மொழியைத் தாண்டி எளிய மக்களை எளிதாக எப்படி நெருங்க முடிந்தது? படித்துப் பாருங்கள். இப்பிறப்பில் ஒழுங்காக வாழச் சொல்லி மனிதனின் மறுபிறப்பை மறுக்கும் இம்மதங்களை, கடவுள்கள் மறுபிறப்பெடுக்கும் இந்திய வழியில் கதை சொல்கிறது இப்புத்தகம். எனக்கு கிரேக்க வழியில் இம்மூன்று மதங்களைக் கேட்டறிய வேண்டும் என்ற ஆவலுண்டு. ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்கள். நிறைய மதங்களைப் படியுங்கள் மதமற்று வாழ!

(முகமது நபியைச் சொர்க்கத்திற்குச் சுமந்து சென்ற பறவை)

அனுபந்தம்:
—————-

  1. யூதம் அறிய முகில் அவர்களின் யூதர்கள் புத்தகம் படிக்கலாம். இத்தளத்தில் 36ம் புத்தகம்.
  2. இயேசுவை மட்டும் அறிய கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ படியுங்கள்.
  3. என்னைக் கவிதை உலகிற்குள் இழுத்தவர்கள் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான். ‘பாலை நிலா’ என்ற தலைப்பில் கவிக்கோ அவர்கள், முகமது நபி பற்றி கவிதை வடிவில் எழுத ஆரம்பித்தார். சில உதாரண கவிதைகள் அவருக்கே உரிய நடையில் அட்டகாசம்! அவர் மறைவிற்குப் பின், பதிப்பகத்தாரை விசாரித்தேன். அந்நூல் நிறைவேறவே இல்லை என்பது தமிழுக்குப் பேரிழப்பு.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

❌