இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.
பாலக்காடு மாவட்டம் பாஞ்சஜன்யம் திரைப்படவிழாவுக்கு தன்னுடைய ‘காளி’ நிகழ்த்து ஆவணப் படத்தைத் திரையிட வந்திருந்த லீனா மணிமேகலையை பொற்றாமரை இதழுக்காக நேர்காணல் வேண்டி அணுகினோம். வினாக்களைத் தாருங்கள் மின்னஞ்சல்வழி விடையனுப்பித் தருகிறேன் என உடனே ஒத்துக்கொண்டார். மின்னஞ்சல் வழி லீனா மணிமேகலை தந்த நேர்காணல் இதோ.
இன்றைய தமிழ்க் கவிதைச்சூழல் பெண்களுக்கு புழங்கக் கூடியதாக உள்ளதா?
மொழி எனது எதிரி என்று ஒரு நூல் நீள நேர்காணலை விமர்சகர் சண்முகம் அவர்களுக்கு அளித்து அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. வரலாறு ஒரு நீலப்படம் என்று அறிவித்து, தமிழ் பெண்கவிதை குறித்த என் பெண்ணாடி கவிதைப்படத்தை முடித்திருப்பேன். மொழி ஒடுக்குபவன் கண்டுபிடித்த முதல் கருவி. இன்றல்ல வரலாறு நெடுகிலும் மொழி, பெண் மற்றும் பாலின சிறுபான்மையினரின் வெளிப்பாட்டை ஒடுக்கும் நிறுவனமாகத்தான் செயல்பட்டு வருகின்றது. சங்க காலப் பெண் கவிஞர்கள் என்பார்கள், ஆண்டாள் காரைக்கால் அம்மையார் என்பார்கள், புத்தகம் ஆய்வுக்கட்டுரைகள் புள்ளிவிவரம் என்று தூக்கிக் கொண்டு வருவார்கள் ஆனால் சமகாலத்தில் கவிதை எழுதும் பெண்ணை வேசி என்பார்கள். பெண் எழுதும் பிரதியை பெண்ணாகவே ‘வாசித்துக்’ தன் குறியை நீவி சுய இன்பம் காணும் தமிழ்ச் சமூகம் அடையவேண்டிய மன உயரம் இன்னும் சில நூற்றாண்டுகள் தூரம்.
இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழ் இலக்கிய வெளியில் முற்போக்கு சித்தாந்தப் பூச்சுற்றல்வாதிகள் பெருத்து, பெரியாரையும், அம்பேத்கரையும், மார்க்ஸையும் சாட்சிக்கு வைத்துக் கொண்டு எழுத வரும் பெண்ணைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார்கள். குடும்பம், அரசு, சாதி, மதம் என்று நிறுவனங்களை எதிர்த்துக் கொண்டு, அவை தரும் சமூகப் பாதுகாப்பையும் பணயம் வைத்து கலை இலக்கிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கும் பெண் நிராதரவாக உணரும் நிலைதான் நீடிக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேச புறப்படும் பெண்ணுக்கு சித்தாந்தவாதிகளின் அதிகாரத்திற்கும் எதிராக உண்மையைப் பேசும் நிலை ஏற்படும் போது தனிமைப் படுத்தப் படுகிறாள். பெண்ணுக்கென்று ஒரு தேசம் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண்ணுக்கென்று படைப்பு தேசமும் இல்லை.
கவிதைகள் எதிர் உரையாடல் தன்மையில் அமைவது ஒரு உத்தியா? அல்லது வேறு காரணங்கள் உண்டா?
பரத்தையருள் ராணி தொகுப்பிற்காக கவிஞர்கள் யவனிகா மற்றும் செல்மாவுடன் நடத்திய கலந்துரையாடலில் சொன்னதை மேற்கோள் காட்டினால் இதற்கு உகந்த பதிலாக இருக்கும். “வடிவம், உத்தி, அமைதி, இலக்கணம், வரையறை, மதிப்பீடுகள், என்றெல்லாம் சொல்லும் மரபு சார்ந்த பார்வையில் நான் தலையிட விரும்பவில்லை. அந்தப் பார்வை ஒரு இறுகிய வடிவத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும் இந்நிலை தொடர்வதே அமைதிக்கு வழியெனவும் ஒரு பிரமையை வலியுறுத்துகிறது. எனக்கோ அமைதிக்கு மீறி கலகம் தேவைப்படுகிறது. ஏன் என்றால் அந்த அமைதி ஒடுக்கப்பட்டவர்களின் மெளனம். என் கவிதையின் நோக்கமே அந்த மெளனத்தைக் கலைப்பதும், எதிர் உரையாடலையும், கலகத்தையும் ஏற்படுத்துவதும்தான். மொழியை உச்சபட்சமாக விமர்சிப்பதற்குக் கவிதையே எனக்குகந்த ஊடகமாக இருக்கிறது. அதனால் என் மூச்சிருக்கும் வரை அதைச் செய்து கொண்டே இருப்பேன்.
லீனா ஒரு வகையில் கவிதை எழுதிப் பார்க்கிறார் எனக்கு அது கவிதையாக இல்லை‘ என்ற ஜெயமோகனின் கருத்துக்கு உங்களின் எதிர் வினை என்ன?
அவருடைய மற்றுமொரு கட்டுரையில் “Male Chauvenist Pig” என்று அவரை நான் ஒரு உரையாடலின் போது விளித்தேன் என்று குறிப்பிட்டிருப்பார். நண்பராகவும் எழுத்தாளராகவும் நான் அறிந்தவரையில் ஜெயமோகன் ஒரு மரபான கலாச்சார ஆண். கலாச்சார ஆண்கள் பெண்ணை, பெண்ணுடலை, பெண்ணின் படைப்புகளைக் குறித்து தீர்ப்பு சொல்லிக்கொண்டே இருப்பதுதான் தமக்கு வாய்த்த வாழ்வின் பெரும் வினையாக ஏற்றுக் கொண்டவர்கள். அத்தகைய அதிகார போதையிலிருந்தும், அது விளைவிக்கும் பெருந்தனிமையிலிருந்தும், பெண் மீதான பதற்றங்களிலிருந்தும், கலாச்சார கருத்துருவக் கற்பிதங்களிலிருந்தும் ஒருவரை விடுவிக்கும் முயற்சியே எனது கவிதை நடவடிக்கை. மொழியில் விடுதலையை விரும்பாதவர்களுக்கு என் கவிதைகள் புலப்படாததில் எனக்கெந்த ஆச்சர்யமும் இல்லை.
மற்றபடி விமர்சன மரபில் phallic criticism என்ற பதமுண்டு. தமிழ் விமர்சன மரபு அதற்கொரு விளக்க ஏடு. அதைக் குறித்து விலாவரியாக தரவுகளோடு பேசுவதற்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றை ஒழுங்கு செய்தால் விரிவாக உரையாடலாம்.
தங்கள் கவிதைகள் பெரும்பாலும் தன்னிலை சார்ந்தே வெளிப்படுகின்றன. எழுத்தும் தன்னிலையிலிருந்து புறப்படும் எழுத்துகளாகவே உள்ளன. பெண்ணியக் கவிதைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதுகிறீர்களா? அல்லது இயல்பாகவே வருகிறதா?
இதுவரை 500 கவிதைகள் எழுதியிருப்பேன். அவற்றில் அகக் கவிதைகளுக்கு நிகராக புறக் கவிதைகளும் அடக்கம். ஒடுக்கப்பட்ட பாலினத்தின் பிரதிகள் பொதுவாக தமிழ் இலக்கியம் தொட மறுக்கும் புள்ளிகளை அதீதப்படுத்துவதால் ஏற்படும் பதற்றம் வாசிப்பையும் அக வெளிப்பாடுகள் மீது குவிக்கிறது எனக் கருதுகிறேன். தன்னிலை தானாக உருவாவதில்லை. பண்பாட்டால் தைக்கப்படுகிறது. To be precise. I am writing to unwrite myself from culture that oppresses my ‘self’ with my ‘sex’.
லீனா மணிமேகலைக்கு திரையுலகிற்குச் செல்லும் எண்ணம் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?
காலஞ்சென்ற என் தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி “இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் கருத்துப்புலப்படுத்தம்” என்ற ஆய்வை மேற்கொண்டு முனைவர்ப் பட்டம் பெற்றார். அவருடைய மறைவிற்குப் பிறகு அப்பாவின் ஆய்வைப் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்று எடுத்த முயற்சியில் பாரதிராஜாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதிர் பதின்ம வயதில் கிடைத்த சினிமா அனுபவம், நான் செய்து கொண்டிருந்த பொறியாளர் பணியை விட்டுவிட்டு கலைத்துறையைத் தேர்ந்தெடுக்கும் உத்வேகத்தை அளித்தது.
தமிழ் சினிமா நேற்றும் இன்றும் நச்சு ஆண்மைய சினிமாதான்’ என்ற கருத்துக்கொண்ட உங்களால் திரைத்துறையில் எப்படிப் பணிபுரிய முடிகிறது ?
தமிழ் இலக்கியம் small dick energy என்றால் தமிழ் சினிமா big dick energy. காற்று, நீர், நிலம் மாசுபட்டுக் கொண்டேயிருக்கும் சூழலில் நாம் வாழவில்லையா? அதுபோலத்தான் நச்சு ஆண்மைய படைப்புச் சூழலுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு சுயாதீன திரைக் கலைஞராக எனக்கென்று ஒரு படைப்புலகத்தை உருவாக்கியிருக்கிறேன். என் சினிமா சொன்ன கதைகளை, அணைத்துக் கொண்ட நிலங்களை, மக்களை, அவர்களின் பாடுகளை, தமிழ் சினிமாவில் எந்த விரைத்த ஆண்குறியும் இதுவரை சொன்னதில்லை. சொல்லப் போவதுமில்லை.
வெகுசன சினிமா தாண்டி ஆவண படங்கள் அல்லது குறும்படங்கள் போன்ற இடங்களில் இந்த ஆணாதிக்கம் இல்லையா?
ஆணாதிக்கம் இல்லாத இடம் எது? கரன்ஸி பாயாத பாலைவனம் என்பதால் அதிகாரத்தின் குவிப்பு இல்லை என சொல்லலாம். சுயாதீன சினிமா உதிரி நிலம். நான் விளிம்பில் நின்று இயங்குகிறேன். என் படைப்புகளால் விளிம்பின் மையத்தையும் வெடித்து சிதற வைக்க முயற்சி செய்கிறேன்.
மாடத்தி திரைப்படத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினைப் பற்றி நுட்பமாகப் பேசியிருப்பீர்கள். விளிம்பின் விளிம்பில் இருக்கும் மக்களின் வாழ்வியல் சிக்கலைக் கதைக்கருவாகக் கொண்ட திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?
பார்க்கவும் தகாதவர்கள் என்று ஒரு மக்கள் தொகையை ஒதுக்கியும் ஒடுக்கியும் வைக்கும் சமூகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன். சாதி என்ற பேரிழிவை என் படைப்புகளால் கேள்விக்குட்படுத்திக் கொண்டே இருப்பது என் படைப்புச் செயல்பாடுகளின் முதன்மை நோக்கம். 2003-இல் வெளிவந்த மாத்தம்மா என்ற ஆவணப்படம் முதல் 2019-இல் வெளிவந்த மாடத்தி என்ற முழுநீளக் கதைப்படம் வரை அதைச் செவ்வனே செய்திருக்கிறேன். இன்னும் செய்வேன்.
இப்படத்தை இயக்கும் போது ஏதேனும் நடைமுறைச்சிக்கலை அல்லது கருத்தியல் சார்ந்த சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்ததா? அப்படி ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி கூற முடியுமா?
பாலியல் வன்முறையை எதிர்கொண்டு போராடிய குஜராத்தின் பில்கிஸ் பானு, சத்திஷ்கரின் சோனி சூரி, மணிப்பூரின் மனோரமா, ராஜஸ்தானின் பன்வாரி தேவி, மல்யுத்த வீராங்கனைகள் என்று எனது நீண்ட ஆவணப்படத் தயாரிப்பின் போது எனக்கு மிகப்பெரிய மனக்சோர்வு உண்டானது. நீதி, அரசு, நியாயம், தர்மம் என்று எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டது. உண்மையிலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படட பெண்ணுடலுக்கு நீதி என்பது சாத்தியமா? அப்படியே சட்டப்படி போராடி வெல்லும் நீதி போதுமானதா? நீதியென்றால் உண்மையில் என்ன? என்னோடு தங்கள் வாழ்க்கையைப் போராட்டங்களை அவ்வளவு தீர்க்கத்துடன் பகிர்ந்து கொள்ளும் பெண்களுக்கு என்னதான் நான் செய்து விட முடியும் என்பது போன்ற கேள்விகள் என்னை நிலைகுலைய வைத்து விட்டன. ஐந்து வருட உழைப்பை அப்படியே கைவிட்டு விட்டு மனம் குழம்பித் திரிந்தேன். மாடத்தியைக் கண்டடைந்ததும் அந்த கேள்விகளால்தான். நாட்டார் கதைகளும் அதன் ஆன்மச் சரடான Poetic Justice என்ற தர்க்கமும் என்னை ஆற்றுப்படுத்தியது. Nobodies do not have Gods; they are Gods என்ற பேருண்மை எனக்கு பற்றுக்கோலாகக் கிடைத்தது.
பெண் குறித்த கடவுள் புனைவுகளுக்குக் கொடுக்கப்படும் புனிதம் சமூக எதார்த்தத்தில் பெண்களுக்குக் கிடைப்பதில்லை.பெண் மீதான உடல் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த சமூக ஆணிய பார்வை இன்னும் கெட்டிப்படுவதனை பார்க்க முடிகிறது. காளி ஆவணப்படத்தில் அதனை எதிர்கொண்டீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
காளி என் மூதாதை. என் அவ்வா. காளியை நான் தரித்ததால் தாக்குண்டவர்கள் பார்ப்பனிய குண்டர்கள். காளியிடமிருந்து தாங்கள் பிடுங்கிய சிகரெட்டை நான் பிடித்திருந்தது அவர்களை வெறி ஏற்றிவிட்டது. நமது மூதாதைகளை, நம்மை, நாம் நடக்கும் பாதையை பார்ப்பனிய அடிப்படைவாதத்திலிருந்து விடுவிக்க நான் உருவாக்கிய படம் காளி. பத்துக்கும் மேற்படட எஃப் ஐ ஆர் கள், கொலை மிரட்டல், ரேப் அச்சுறுத்தல், என் சமூக ஊடக வலைத்தளங்களில் அத்துமீறி நுழைந்து என் புகைப்படங்களை, எனது குடும்பத்தின் புகைப்படங்களை என் படக்குழுவின் ப்ரொஃபைல்களைத் தாக்கியது, ஊடகங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி அவமதிப்பு செய்தது, அந்நிய நாட்டில் யாருமற்ற தனிமையில் இந்த வன்முறையையெல்லாம் தன்னந்தனியாகத் தாங்கியது, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சட்டரீதியாக மத்தியில் அரசை வென்றெடுத்தது என நான் போனது வெகு தூரம். இந்த அனுபவத்தால் நான் கற்றதும் உணர்ந்ததும் ஒரு கலைப்பிரதி என்ன சாதிக்கும் என்பதுதான். ஒற்றை இமேஜால் பாசிஸ்டுகளை எவ்வளவு அலற வைக்க முடியும் என்பதைக் கண்கூடாகப் பார்த்தபோது கலையின் ஆற்றல்தான் என்னை உறுதிப்படுத்தியது.
சித்தூர் போன்ற மூன்றாம் நிலை சிறு நகரத்தில் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழா குறித்த உங்களின் கருத்து. தமிழகத்தில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுகின்றனவா?
சித்தூரில் நடக்கும் பாஞ்சஜன்யம் பன்னாட்டுத் திரைப்பட விழாவைக் குறித்து எனக்கு எப்போதும் பெருமிதமுண்டு. இது முழுக்க முழுக்க திரை ஆர்வலர்களால், திரைப்படங்களால் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்குத் தேவையான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்பும் புரட்சிகர அரசியல் மனங்களால், மானுடத்தின் மேலுள்ள பற்றுள்ள நட்புள்ளங்களால் வழிநடத்தப்படும் விழா. சித்தூருக்கு வருவது எனது வீட்டிற்குத் திரும்புவது போன்றது. திரைப்பட ரசனை கேரளாவில் மேம்பட்டு இருப்பதும், மலையாள சினிமா உலக அரங்கில் பிரகாசிப்பதற்கும் இத்தகைய சிற்றூர்களில் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் திரைப்பட விழாக்கள்தாம் அடிப்படை. தமிழ்நாட்டில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்ப் படைப்பாளியாக இருந்தாலும் கேரளாவை எனது நிலமாக மலையாளிகளை எனது சொந்தங்களாக தான் நான் நேசிக்கிறேன். கனடாவில் இருந்தபோது நான் இழப்பாக உணர்ந்தது கேரள அன்பைத்தான்.
ஊடகத்துறையில் வெளிநாடுகளில் நீங்கள் பெற்ற கல்வி ஏற்படுத்திய புரிதல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
திரைப்படக்கலையைப் பொறுத்தவரை நானொரு தெருக் கலைஞி. தெரு தெருவாகச் சுற்றி எனது மக்களிடமிருந்து அவர்கள் சொன்ன கதைகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். கவிதையில் எனது மூதாதை ஒளவை என்றால் திரைப்படத்தில் எனது மூதாதை ஆகன்ஸ் வார்தா. திரைப்படப் பள்ளிக்குப் போவதற்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. திரைப்பட விழாக்களில் நான் கண்ட சர்வதேசப் படங்களும், சந்தித்த படைப்பாளிகளும்தாம் எனது ஆசிரியர்கள். ஆரம்பகட்டத்திலிருந்தே எனக்கு விருதுகளாக வழங்கப்படட fellowships திரைப்படக் கலையை அகடெமிக்காக கற்றுக்கொள்ள உதவின. ப்ரிட்டன் வழங்கிய Charles Wallace Art Award மற்றும் Common wealth Fellowship, ஐரோப்பிய யூனியன் வழங்கிய EU Fellowship, BAFTA Breakthrough Talent Selection வரிசையில் கனடா வழங்கிய Graduate Fellowship of Academic Distinction மூலம் எனது மாஸ்டர்ஸ் படிப்பை முடிக்க முடிந்தது. கறுப்பின அமெரிக்க கவிஞர் மாயோ ஏன்ஜெலோ, ஒரு குறிப்பிட்ட பூகோளப்பகுதிக்கு மட்டும் சொந்தமானவளாக உணராமல் பிரபஞ்சத்திற்கே சொந்தமாக உணர்வதுதான் விடுதலையுணர்வென்பார். என் திரைப்படங்கள், படைப்பாளியாகவும், மாணவியாகவும் நாற்பது நாடுகளுக்கு என்னை அழைத்துச் சென்றிருக்கின்றன. நான் சேர்த்த செல்வமெல்லாம் அறிவுச் செல்வம்தான்.
தமிழில் பால் புதுமையர் இலக்கியங்களுக்கான இடம் ?
தலித் இலக்கியம் போல, பெண்ணிலக்கியம் போல தமிழில் பாய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டிருப்பது பால் புதுமையரின் இலக்கியம். பெரியார் சொன்னது போல காட்டுமிராண்டி மொழியாகத் தேங்கிவிடாமல் தமிழை மேலும் மேலும் சமத்துவப்படுத்துவதும் புதுப்பிப்பதும் மேம்படுத்துவதும் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம்தான். ‘உலகின் அழகிய முதல் பெண்’ தொகுப்பில் பைசெக்சுவலாக வெளிப்பட்டேன். ‘அந்தரக்கன்னி’ என்ற தமிழின் முதல் லெஸ்பியன் கவிதைத் தொகுதியை எழுதிப் பதிப்பித்தேன். என்னை தமிழ் குயர் படைப்பாளியாகத்தான் அடையாளம் காண்கிறேன். நாம் அடைய வேண்டிய தூரம் அதிகம். நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் அடிப்படை இருமை எதிர்வுகள்தாம். குயர் சித்தாந்தம் அதை உடைத்து புதிய பார்வைகளை உருவாக்கும்.
மூன்றாம் பாலினத்தாருக்கான இடத்தை மறுக்கும் வலதுசாரி சிந்தனைகளை ஒரு செயற்பாட்டாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாலினத்தில் மூன்றாம் என்ன முதலாம் என்ன? அதுவே வலதுசாரிப்பார்வை இல்லையா? பாலின சமத்துவமும் விடுதலையும் மனித நேயத்தால் மட்டுமே அடைய முடியும். சக மனிதரை நேசிக்க விடாமல் தடுக்கும் சாதி, மத, நிற, வர்க்க, பாலினப் பாகுபாடுகளை வைத்து பிழைப்பு நடத்தும் வலதுசாரிகளைக் களையெடுக்க வேண்டும். என் கலை அதைத் தொடர்ந்து செய்யும்.
மாற்றுப் பாலினத்தார் குறிப்பாகத் தன்பாலின ஈர்ப்பாளருக்கான குரல் உங்கள் கவிதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது. பேசாப்பொருளைப் பேசத் துணியும் உங்கள் பெயர் பெண் கவிஞர்களின் வரிசையில் பலநேரங்களில் முன்னெடுக்கப் படுவதில்லை. எதனால் என நினைக்கிறீர்கள்?
எனக்கு எந்த வரிசையிலும் இடம் வேண்டாம். தனித்த குரலென்றாலும் தனித்துவமான குரலாக நானிருப்பேன். என் படைப்புகளை வாசிப்பவர்கள், பின்பற்றுபவர்கள், அதில் இளைப்பாறுகிறவர்கள்தாம் என்னை இயக்குகிறார்கள். இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு.
கவிஞர், விமர்சகர், ஆவணப்பட இயக்குனர், திரைக்கலைஞர், பெண்ணியச் செயல்பாட்டாளர் என பல்துறைகளில் இயங்குகிற லீனா தனது தொடக்க கால ஆக்கங்களில் இருந்து கடந்து வந்த பாதைகளை குறித்து என்ன நினைக்கிறார்? லீனா மணிமேகலை தன் அடையாளமாக எதைக் கருதுகிறார்?
நான் மேற்கு தொடர்ச்சி மலை முகட்டில் வளர்ந்து நிற்கும் ஒரு காட்டு நெல்லிச்செடி. பெருமழையிலும், தீக்காற்றிலும், சளைக்காது காய்க்கும் ஆன்மா. பசித்த மனிதர்களோ, வரையாடுகளோ யார் என்னைத் தேடி வந்தாலும் கனி தருவேன். மற்றதெல்லாம் வெறும் லேபிள்கள்தாம்.
ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார்.
ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.
குறிப்பாகக் கவிதைகளை எழுதும்போது அறிவு பூர்வமானதைப் பின்தள்ளி உணர்வே சொற்களைத் தருகிறது. தர்க்கம் என்பது பிரிக்கமுடியாத உணர்வுகளின் படிமுறை ஒழுங்கும் நியாயமும். அதை உணர்வின் வழி சொல்லும்போது தர்க்க சிந்தனையில்லாவிடில் கவிதை நிற்காது; நிராகரிக்கப்பட்டுவிடும். அறிவையும், தர்க்க அணுகுமுறையையும் மனித உணர்வுகளின் வழியாக எளிமைப்படுத்தலாம் அப்போது அந்தக் கவிதையோ சிறுகதையோ வாசகர்களின் அதிகரித்த கவனவீச்சைப் பெறுகின்றன.
இளமைகாலம் இலக்கிய பாதிப்பு:நான் பிஃஷப் க்யூபர் கல்லூரியில் எம்.எஸ்.சி (ஊடகவியல்) படிக்கத் தொடங்கினேன். ஆனால் அதை நிறைவு செய்யவில்லை. அக்காலகட்டத்தில் இலக்கிய வாசிப்புக்குள் அறிமுகமானேன். எங்கள் கல்லூரியின் நூலகம் சிறப்பானது. இன்றும் இலக்கிய நூல்கள் பெரிதும் அடங்கிய கல்லூரிகளில் எங்கள் கல்லூரியும் ஒன்று. நவீன இலக்கிய நூல்கள் அனைத்தும் அங்கே இருக்கும். புதிதாக வந்த புத்தகம் அனைத்தையும் நான்
சிறார்களுக்கு எந்த
உபதேசமும் தேவையில்லை. சுற்றியுள்ள உலகத்தின் சாளரங்களை சாகசமாகவும்
மந்திரக் கணங்களாகவும் மனத்தைத் தொடும் கதைகளாகவும் கூறி நாம் திறந்தால்
போதும். சிறார்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்
ஒரு குழந்தை தன் மனதிற்குள் உள்ளதைப் பகிரும் தருணத்தில் நான் நிஜமாகவே அந்தக் குழந்தையுடன் இருக்கவிரும்புகிறேன். இதுதான் ஒரு கதைசெய்யும் மாயம். கதையின் மூலம் ஒரு குழந்தையின் மனதிற்குள் ஊடுருவ முடிகிறது. அக்குழந்தை சொல்லும் வார்த்தைகள்
எனக்குள் எத்துணை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல முயற்சிப்பேன்.
May 15, 2025
அழகியல் விமர்சனத்தின் ஒரு விசேஷமான இயல்பை அல்லது எல்லையை சொல்லவேண்டியிருக்கிறது. அழகியல் விமர்சனத்தால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை நிறுவமுடியாது. அது தன் கலை அனுபவத்திலிருந்து சில அவதானங்களை முன்வைக்கிறது, வாசகனுக்கு அதை பகிர்கிறது. அந்த அனுபவத்தை கொஞ்சமேனும் ஏற்றுக்கொண்டவர்களிடம் மட்டுமே அதனால் பேசமுடியும். உதாரணமாக, நான் எம்.டி.ராமநாதன் நல்ல பாடகர் என்று சொல்லி, அவரின் தனித்தன்மைகளாக நான் உணர்ந்ததை சொல்கிறேன். நீங்கள் அந்த தனித்தன்மைகளில் சிலவற்றை ஏற்கிறீர்கள், சில தனித்தன்மைகளை மறுக்கிறீர்கள் என்றால் நாம் உரையாடலாம். மாறாக, நீங்கள் எம்.டி.ராமநாதன் பாடகரே அல்ல என்று சொன்னால் நம்மால் உரையாடவே முடியாது. உங்களிடம் எம்.டி.ராமநாதன் கலைத்தன்மைகொண்டவர்தான் என்பதை சொல்லி நிறுவ அழகியல்விமர்சனத்தால் முடியாது.
பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான மாவனல்லை பாரா தாஹீர் உடனான நேர்காணலோடு இவ்விதழில் உங்களை சந்திக்கிறோம்.
இலக்கியத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை தொடர்ந்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். » Read more about: தேசமான்ய பாரா தாஹீர் »
R.உமாமகேஸ்வரி குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்; பத்திரிக்கையாளர். தமிழ்ப் பகுதியின் அரசியல் சமூகம் பண்பாடு சார்ந்த ஆய்வுகள் நிறைய ஆங்கிலத்திலேயே வெளியாகியிருக்கின்றன. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். இந்த வரிசையில் தமிழ்ப் பகுதி குறித்த கலாச்சார ஆய்வாளர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் உமாமகேஸ்வரி. ஆனால் இவர் தமிழ் பின்புலத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழகம் பற்றி எழுதியிருக்கும் ஆய்வுகளுள் சமகால அரசியல் அடையாளங்கள் பற்றியதே அதிகமாக இருக்கிறது. இப்பின்னணியில் விதிவிலக்காக கலாச்சார ஆய்வில் ஈடுபட்டவர் உமாமகேஸ்வரி. எனினும் இவர் பெயர் தமிழ்நாட்டு […]
நாட்டார் இசை என்று சொன்ன உடனே நமக்கு மெல்லிய இசை நினைவுக்கு வருவது இல்லை. கட்டுப்படுத்தப்படாத நிலையில் வெளிப்படும் மனித உணர்வுகள் என்றவுடனும் நமக்கு முதலில் உக்கிரமான வன்மையான இசை கொண்ட பாடல்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நாட்டுப்புற இசை (கிராமம்), கானா பாடல்கள்(நகரம்) என இரு பிரிவு பாடல்களிலும் இத்தகைய தன்மையான பாடல்களே இன்று மக்கள் மத்தியில் பரவலாக கவனத்தில் உள்ளது. இந்திய நாட்டார் இசை மரபு, பக்தி இசை மரபு ஆகிய இரண்டையும் நோக்கினால் […]
1990களில் பிற்பகுதியில் படிப்பை முடித்து சென்னையில் வேலைகளில் சேருவதும் விடுபடுவதுமாக இருந்த காலகட்டத்தில் நவீன ஓவியனாய், தன் கலை ரீதியான சிந்தனையின் நீட்சியாகவே பார்ப்பவர்களிடமும் உடனடியாக மோதி உரையாடல் நிகழ்த்தும் கலைஞனாக, நண்பராக கொந்தளிப்பும் உற்சாகமுமாய் அறிமுகமானவர் நடேஷ். நண்பர் சி. மோகனுக்கு பிரியத்துக்குரிய வட்டத்தில் நானும் இருந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே செல்லமாக இருந்தவர் நடேஷ். 1999 காலகட்டத்தில் என் கோடம்பாக்கம் அறைக்கு வருமளவுக்கு நடேஷ் நெருக்கமாகிவிட்டார்.
புலி, பூனை, நாய் எல்லாமே நேச்சுரலான யோகா மாஸ்டர்ஸ் மாமு, மனுஷனோட பரிணாமத்தில் சீக்கிரம் மூக்கில் ஸ்ட்ரா வளர்ந்துவிடும், நிலத்தடி நீர் எல்லாம் கீழ போய்க்கிட்டிருக்கு என்பது போன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியேதான் அறைக்குள் நுழைவார்.
அலியான்ஸ் பிரான்சேஸ் கலாசார மையத்தின் நுழைவுக் கூரையில் நடேஷ் பிரமாண்டமாக வரைந்த யானை ஓவியம் பல ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்தது. சைக்கிள் ஓட்டும் யானை என்று ஞாபகம். எம் எப் ஹூசைன் போல பரந்த வெளிகளை கலைக்குப் பயன்படுத்தும் உத்வேகம் நடேஷ் உடையது.
இலக்கிய நண்பர்கள் பத்துபேர் மட்டுமே பங்குகொண்ட எனது பதிவுத் திருமணத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் சீக்கிரம் குட்டி போட்டுடு ராஜா என்று ஆசீர்வாதம் செய்தார். எனது முதல் கவிதைத் தொகுப்புக்கு யார் பதிப்பாளர் என்பது தெரிவதற்கு முன்னரே அவரது ஓவியக் கித்தான்கள் மூன்றை நான் எனது பேக்கில் வைத்து ஓவியம், இலக்கியம் தெரியாத எனது உறவினர்களிடமும் விரித்து விரித்துக் காட்டியது எனக்கு இப்போது ஞாபகத்தில் உள்ளது. ந. முத்துசாமியின் மகனாக இருப்பினும் இலக்கியவாதிகளின் நண்பர்களாக இருந்தாலும் குறைவான புத்தக அட்டைகளிலேயே அவர் ஓவியம் இடம்பெற்றிருக்கிறது. அவரது சித்திரங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் எனது பெயர் பலருக்கு ஞாபகமாக இருப்பதற்குக் காரணமான ‘சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்’ கவிதையைக் கொண்டாடி அவர் வரைந்து தந்த சித்திரம் அந்தப் படைப்புக்கு கூடுதல் வலுவைத் தந்தது. தீராநதி இதழில் அந்தப் படத்துடன் சேர்ந்தே வெளியானது. 2001இல் வெளிவந்த எனது முதல் தொகுப்பான மிதக்கும் இருக்கைகளின் நகரம் தொகுதியின் அட்டையும் என் கவிதைகளின் பயணமும் அவருடைய ஓவியத்திலிருந்தும் தொடங்கியது எனது பேறுதான். தமிழின் அபூர்வமான சிறுகதைத் தொகுதியான ந. முத்துசாமியின் நீர்மை தொகுதிக்கு நடேஷ் வரைந்த கோட்டோவியம் இன்றும் வலுவான உணர்வை அளிப்பது. தந்தையின் உள்குணத்தையும் சேர்த்து ந.முத்துசாமிக்கு ஆதர்சமாக தத்துவஞானி குர்ஜிஃப்பின் முகமும் உள்ளே இருக்க வரைந்திருப்பார். சாரு நிவேதிதாவின் நேனோ சிறுகதைத் தொகுதிக்கு வரைந்த அட்டைப்படமும் வலுவானது. மௌனியின் சிறுகதைத் தொகுப்புக்கு அவர் வரைந்த அட்டைப்படமும் முக்கியமானது.
நடேஷ் எனக்கு அறிமுகமானதற்குப் பிறகுதான் ந. முத்துசாமியும் அவர் மனைவியும் எனக்கு அவர்கள் வீட்டில் அறிமுகமானார்கள். ந. முத்துசாமி, நடேஷ், கோணங்கி, நான் நால்வரும் ஒரு மாருதி வேனில் நகரத்தில் குடித்துக் கொண்டே பேசியபடி அலைந்து திரிந்த ஒரு இரவு மறக்க இயலாதது. 2004-2005 ஆக இருக்கலாம். வள்ளுவர் கோட்டம் அருகே வேலு மிலிட்டரி ஹோட்டல் பாரில் எங்கள் சாயங்காலம் தொடங்கியது. அதற்குப் பிறகு மகாத்மா காந்தி சாலையில் உள்ள காவேரி ஒயின்ஸுக்கு வந்துசேர்ந்தோம். ந. முத்துசாமிக்கேயுரிய ஆகிருதியும் கம்பீரமும் போதையில் அதிகரித்திருந்தது. சொல்லுங்க என்பது போன்ற தொனியில் மாருதி காரின் சீட்டை ஒரு அரியணையாக அந்த இரவில் மாற்றியிருந்தார்.
வேளச்சேரியில் இயங்கிவந்த எம் டி முத்துக்குமாரசாமியின் தேசிய நாட்டார் வழக்காற்றியல் உதவி மைய வளாகத்தில், எம்டிஎம்மின் நெருங்கிய தோழர் என்பதால், நடேஷின் வருகை அடிக்கடி நிகழ்ந்ததும் அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது.
ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக கவிதை மொழியில் தனது அவதானிப்புகளை டைரிக் குறிப்புகளைப் போல எழுதியவர். முத்துசாமியின் நாடக மொழி உச்சம் கொண்ட, அதேநேரத்தில் நேர்கோட்டுத் தன்மையில்லாத உரைநடை அது. அவற்றில் சிலவற்றை மொழிபெயர்த்து நான் மணல் புத்தகம் இதழிலும் பிரசுரித்துள்ளேன். புலிகளைத் தொடர்ந்து ஓவிய வரிசையாக இட்டபோது புலி என்ற உருவத்தின் மீது எனக்கும் பெரிய மயக்கம் ஏற்பட்டது. அப்போது ‘புலிதான் எனது படிமம்’ என்ற கட்டுரையை மணல் புத்தகத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கோட்டுச் சித்திரங்களை ஆங்கிலத்தில் ‘Before becoming blind’ என்ற நூலை வெளியிட்டு அது எனது கைகளுக்கு புத்தம்புதிதாக வந்து சேர்ந்தபோது அதன் தலைப்பு அதிர்ச்சியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நடேஷுடனான பழக்கம் குறைந்தநிலையில் எம் டி முத்துக்குமாரசாமி தான் அவருக்கு நீரிழிவால் கண் பார்வை வேகமாகக் குறைந்துவருவதைச் சொன்னார்.
அந்த நூலை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இடம்கேட்டு சி. மோகன், எம் டி முத்துக்குமாரசாமி, ஏ எஸ் பன்னீர்செல்வம், அபராஜிதன் எல்லாரையும் ஒருங்கிணைத்து ‘Before becoming blind’ நூலுக்கு ஒரு நண்பர்கள் சந்திப்பைக் கூட்டம்போல நான் ஏற்பாடு செய்ததுதான் எனக்குக் கடைசியாக இருக்கும் ஒரு நிறைவு. ஓவியனுக்கு கண் தெரியாமல் போகும் வேதனை எப்படியானது?
ஓவியர் நடேஷைக் கடைசிவரை எம் டி முத்துக்குமாரசாமி பார்த்துவந்தது எனக்குத் தெரியும். கூத்துப்பட்டறைக்காக தனது கவிதைகளை அக்காலகட்டத்தில் நாடகமாக்கமும் செய்துகொண்டிருந்தார் எம் டி எம். அவருக்கு நடேஷின் மறைவு பெரும் இழப்பு.
ஆதிமூலம் போல, மருது போல ஒரு பெரிய கலை ஆளுமையாக இன்னும் அதிகமாக பொதுவெளியில் அறியப்பட்டிருக்க வேண்டியவர் நடேஷ். நவீன நாடகங்களுக்கு லைட்டிங் அமைப்பதில் முக்கியமான ஆளுமையாகப் பார்க்கப்படுபவர். புதிய கலைவடிவமான இன்ஸ்டாலேஷன் என்னும் நிர்மாணக் கலையில் நடேஷ் இங்கே முன்னோடி.
நடேஷ் மற்றும் ஷங்கர். புகைப்படம் : ஸ்நேகிதன்
முத்துசாமி இறந்துபோய், அம்மாவும் இறந்துபோய் அவர்கள் ஆதரவிலேயே இருந்துவந்த நிலையில் பாதி சீவன் போன நிலையிலேயே நான் நடேஷை இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்தேன். ஒரு காலையும் எடுத்திருந்தார்கள். அவர் வரைந்து வைத்திருந்த சில கோட்டுச் சித்திரங்களை அனுமதி பெற்று பொறுக்கி வந்தேன். நன்றி நடேஷ். போய் வாருங்கள்.
இந்து தமிழ் திசை நாளிதழில் பணியாற்றிய போது ஆசையுடன் செய்த நேர்காணல்களில் ஒன்று நடேஷ் உடையது…அதில் அவர் தனது முழு குணம் மணத்துடன் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் உள்ளது. அதுவே இன்றைய ஆறுதல்.
“எனது சித்திரம் என் வாழ்வை நடத்த நான் அனுமதித்தேன். படைப்புக் காரியத்தில் அடைக்கல உணர்வே கிடையாது. வேலை முடிந்தவுடன் அங்கே உரிமைத்துவம் போய்விடுகிறது” என்று சொன்ன நடேஷ் தனது வாழ்க்கையிலிருந்தும் உரிமையைப் பறித்துக் கொண்டு போய்விட்டார்.
நடேஷின் நேர்காணல் இது...
நீங்கள் எப்போது ஓவியம் வரையத் தொடங்கினீர்கள்?
நான் மூணுவயதில் படம் போட ஆரம்பிச்சேன். என்னோட அம்மா இல்லையில்லைன்னு சொல்றாங்க. ஐந்துவயதுன்னு சொல்றாங்க. அம்மா சொல்றதுதான் சரியாக இருக்கும்.
அந்தக் காலத்துல சாக்பீஸ் கொடுக்க மாட்டாங்க. மாக்கல் சட்டி உடைந்த சில்லை எடுத்துட்டு தரை, சுவர் எல்லாத்திலேயும் கிறுக்கிக் கொண்டே இருப்பேன். சுத்தமா இருக்கிற சுவர் எனக்கு அந்த வயசுல பிடிச்சதே இல்லை. சிதிலமா, உடைஞ்சு கிடக்கிற சுவர்கள் எனக்குப் பிடிக்கும். அதில் உள்ள வடிவங்கள் என்னை ஏதேதோ செய்துகொண்டிருக்கும்.
உங்களுக்கு ஆசிரியர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?
எனக்கு ரத்தமும் சதையுமாகத்தான் குருக்கள் இருக்க வேண்டும். என்னுடைய இயல்புக்கேற்ற குரு என்றால் அவன் லியானர்டோ டாவின்சி தான். அவன் என்னைப் போல எல்லா வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறான். ஓவியம் மட்டும் இல்லாம அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் அவன் ஈடுபட்டிருக்கிறான். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஐரோப்பிய ஓவிய முறைகள், நீர்வண்ண ஓவியங்களை வரைவது எல்லாவற்றையும் படிச்சிருக்கேன். இங்கே என்னுடைய குருமார்னு சொன்னால் ஆர்.பி.பாஸ்கரன், ஆதிமூலம் போன்றவங்கதான். ஆர்.பி.பாஸ்கரன் தான் கோட்டை எங்கே உடைக்கணும்னு கற்றுத்தந்தார். ஸ்டில் லைஃப் ஓவியத்தில் ஒரு தட்டை வரையும்போது, கோட்டை எங்கே தூக்கணும்னு அவர்தான் சொன்னார். தட்டோட வடிவத்தை உணர்த்துகிற கோடு எங்கே இருக்குது என்பதை அவர் சொல்லிக் கொடுத்தாரு. அதுவரை புத்தகக் கட்டோட அலைஞ்சுகிட்டிருந்த நான் பாக்கெட்ல ஒரு கரித்துண்டை போட்டுட்டு சுதந்திரமாக நடந்துவரத் தொடங்கினேன். பள்ளிக்கூடப் பருவத்தில் என் கையில் இருந்த ஓவிய வேகத்தை திரும்ப மீட்டுக்கொடுத்தார். ஆதிமூலம் ஒரு நல்ல கலரிஸ்ட்; நன்றாக கலர் வைப்பார். அவர் மூலமாகத்தானே நானும் வளர்ந்தேன். ஓவியர் சந்ரு என்னைத் திருப்பிவிட்ட மனுஷன்களில் ஒருவர். அச்சுதன் கூடலூரும் ரொம்ப முக்கியம். வசுதா தொழூர், டக்ளஸ் என்று எனக்கு பல குருமார்கள் இருக்காங்க. எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தமும் எனக்கு குருதான். அவர் எழுதவே வேண்டாம். நடமாடும் சிறுகதை அவர்.
தமிழ் சிறுபத்திரிக்கைகளில் நவீன ஓவியர்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கிறது..அந்த உறவு உங்களது படைப்பை செழுமைப்படுத்தியிருக்கிறதா?
தமிழ் சிறுபத்திரிக்கைக்காரர்கள் அவர்கள் எழுதுகிற எழுத்துக்கு கோடு போடுற ஆள்தான் ஓவியன்னு நினைக்கிறாங்க. நான் கதையைப் படிச்சுட்டு கோடு போடவே மாட்டேன். நான் ஏற்கெனவே வரைந்த கோட்டோவியத்தைத் தான் கொடுப்பேன். ஒவ்வொரு கலைஞனும் எழுத்தாளன் மாதிரிதான் வாழுகிறான். நான் எழுத்தாளனுக்கு பொம்மை போடறவன் மட்டும் இல்லை. நானும் கவிதையெல்லாம் எழுதுவேன். அதை வெளியிட்டது இல்லை.
ஐயோ இந்த வார்த்தை கொலை பண்ணுதே, அந்த வார்த்தைக்கிட்ட இருந்து எப்படித் தப்பிப்பேன் என்று நினைத்த நேரம் எல்லாம் உண்டு. மரணாவஸ்தை கொடுக்கும்.
நவீன ஓவியங்களுக்கு அர்த்தம் இருக்கிறதா?
இயற்கை, எந்த அர்த்தத்தையும் உருவாக்குவதில்லை. சும்மா இருக்கிறது. நாம் வாழும் கலாச்சாரம் தான் எல்லாத்திலயும் அர்த்தத்தை உருவாக்கிப் பார்க்குது.
இயற்கை இரண்டாக இருக்கு. படுபயங்கரமான குளிர், படுபயங்கர வெப்பமாக இருக்கு. ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கு. இரவும் பகலுமாக இருக்கு. இதை எப்போது மனிதன் இரண்டாகப் பார்க்காமல் ஒன்றாகப் பார்க்கத் தொடங்குகிறானோ அப்போதுதான் நமக்கு ஞானம் வரும். இயற்கையை விட்டுவிட்டு மனிதன் கலாச்சாரத்துக்குள் இறங்கும்போது தகராறும் முரண்பாடும் தொடங்கிவிடுகிறது. எப்போ பார்த்தாலும் அதனால்தான் சண்டை இந்த உலகத்தில் நடந்துகொண்டே இருக்கிறது.
என்னோட ஓவியங்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு முரண்களையும் நான் வைக்கிறேன். ஆனால் இரண்டும் அடிச்சுக்காம முட்டிக்காம மோதாம இருக்கணும். பிரச்னையில்லாம வாழணும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். பச்சையையும் சிவப்பையும் பிரதான வண்ணங்கள்னு சொல்வாங்க. பச்சையையும் சிவப்பையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும்போது கடுமையாக அடிக்கும், தொந்தரவு செய்யும். அதைப் பக்கத்திலேயே வைத்து அதை வாழவிடணும்னு நினைக்கிறேன். ஆண், பெண் இரண்டுபேரும் சண்டைபோட்டா எப்படி குழந்தை பெறும். இரண்டுபேரும் இணைந்தால்தானே குழந்தை பிறக்குது. ஆனால் மனுஷனுக்கு இரண்டு முரண்கள் தகராறு பண்ணிகிட்டே இருக்கணுங்கறது விருப்பமாக இருக்கு. அவனுடைய அவசியமாகவும் இருக்குது.
முரண்களற்ற ஆனந்தமான நிலைதான் உங்கள் படைப்புகளோட லட்சியம்னு சொல்றீங்களா?
ஆமாம். ஆனால் சந்தோஷமான நிலையில் படைப்பு வரும்னு சொல்ல முடியாது. நல்ல மனநிலையைக் கண்டுபிடித்தால் தான் நல்ல சந்தோஷத்தை படைப்பில் கொண்டுவர முடியும். ஆனால் சந்தோஷமான மனநிலையில் ஒரு படைப்பு வெளிப்பாடு சாத்தியமான்னும் தெரியவில்லை. நகைச்சுவை உணர்வுக்குள் அடக்கப்பட்ட வன்முறை இருக்கிற மாதிரியே, பிரச்னைகள் நீடிப்பதில் மனிதனுக்கு சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. விழுந்து விழுந்து ஒருவன் சிரிக்கிறான் எனில் அதற்குப் பின் பதப்படுத்தப்பட்ட வன்முறை உள்ளது.
நல்ல சந்தோஷமான மனநிலையில் ஒருவன் சிரிக்கவேண்டும் என்ற அவசியமே கிடையாது.
படைப்பு என்பது இயற்கையின் ஒழுங்கைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறை என்று நீங்கள் பார்க்கிறீர்களா?
சில அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருது. நான் ஒருமுறை பழைய மகாபலிபுரம் சாலையில் ஏதோ ஒன்றை நினைச்சுக்கிட்டு வேகமாகப் போய்க்கிட்டிருக்கேன். கன்னாபின்னான்னு வண்டி போகுது. ஒரு நூறு மாடு என்னை நோக்கி வந்துக்கிட்டிருக்குது. நான் வேகத்தைக் கட்டுப்படுத்தறேன். ஆனால் மோதறதைத் தவிர வேறு வழியே இல்லைன்னு தெரியுது. ஆகா செத்தேன் என்றே நினைத்துக் கொண்டேன். ப்ரேக் போட்டாலும் அடிச்சுக் கீழே தான் விழணும். ஆனால் மாடுகளை மோதுறதுக்கு பத்து அங்குலம் இருக்கும்போது, மோசஸூக்கு வழிவிட்டு கடல் பிரிஞ்சமாதிரி எல்லா மாடுகளும் பிரிஞ்சு எனக்கு வழிவிட்டுது. நான் உள்ளே போயிட்டேன். எப்படித் தப்பிச்சேன்னே எனக்குத் தெரியவில்லை. இயற்கையில் அந்த மாடுகளுக்குள் அர்த்தம் இல்லாத ஒரு தொடர்பு நடக்கிறது. என் பைக் அடிச்சா அதுக்கும் வலிக்கும். எனக்கும் வலிக்கும். ஏன் அந்த மாடுகள் வழிவிட்டன. தப்பிச்சுட்டேன். அதுபோன்ற அனுபவங்கள் வழியாகத் தான் படைப்பு வெளியே வரும்.
உங்களுக்கு சிறுவயதிலேயே கூத்துக்கலைகளைப் பார்க்கும் பின்னணி இருந்திருக்குது.. நவீன நாடகங்களுக்கு நீங்கள் ஒளியமைப்பு செய்கிறீர்கள்…இன்ஸ்டாலேசன் என்னும் நிர்மாணக் கலையிலும் நீங்கள் முன்னோடியாக இருந்திருக்கிறீர்கள்…இப்படிப்பட்ட பின்னணியில் உங்களை என்னவிதமான கலைஞர்னு வகைப்படுத்துவீர்கள்?
கூத்துதான் என்னோட நிறங்களை அப்பட்டமாக வைத்திருக்கிறது. கூத்துக்கலைஞர்கள் போடும் உடைகளிலிருந்து என்னோட வண்ணங்களை எடுத்துக்கிட்டேன். சோழர்கால, பல்லவர் சிற்பங்களும் என்னுடைய உருவங்களின் மீது தாக்கம் செலுத்தியுள்ளது.
இன்ஸ்டாலேசன் படைப்பைப் பொறுத்தவரைக்கும் எழுத்து, ஓவியம், புகைப்படம் எல்லாத்தையும் அதில் சேர்த்துப் போடமுடியும். பணமும் அதிகம் தேவைப்படும் வேலை அது. நான் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாலேசன் படைப்பு செய்துகொண்டிருக்கிறேன்.
என்னுடைய சாப்பாடுத் தட்டு ஒன்று இருக்கிறது. சின்னவயதிலிருந்தே அது வீட்டில் இருக்கிறது. அந்தத் தட்டில் பொம்மைத் துப்பாக்கியை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். அதற்கு ‘‘ஃப்ரோசன் கன் ஆன் மை ஈட்டிங் ப்ளேட்’’ என்று அதற்குப் பெயர் வைத்தேன். என் சாப்பாட்டுத் தட்டில் உறைந்த துப்பாக்கி’ என்பது ஒரு படிமம். சாப்பாடுத் தட்டும் பளபளவென்று இருக்கவேண்டும். பனிக்கட்டியும் பார்த்தாலே சில்லென்று இருத்தல் வேண்டும். அதற்கு புகைப்படம் எடுப்பது அவசியம். அதை நான் புகைப்படம் எடுக்கப்போகிறேன். அந்தப் புகைப்படத்துக்குக் கீழே “TERRORISM” என்ற வார்த்தைக்கு வெப்ஸ்டர்ஸ் அகராதி கொடுத்திருக்கும் அர்த்தத்தை அச்சிடுகிறேன். அடுத்த பத்தியில் நடேஷின் அர்த்தம் இருக்கும். அதுதான் எனது சாப்பாடுத் தட்டில் துப்பாக்கி என்பது.
இன்னொரு உணவுத்தட்டில் பெட்ரோல் கன்னை வாங்கி உறையவைத்தேன். அது அடுத்த படம். இந்த இரண்டு புகைப்படங்களையும் வைத்து அதற்குக் கீழேயும் எது டெரரிசம் என்று கேள்வி இருக்கும்.
கனிம எரிபொருளுக்காக யுத்தம் செய்பவனைத்தான் பெரிய தீவிரவாதி என்று நினைக்கிறேன். ஓவியனாக என்னோட இந்தக் கேள்வி அரசியல் ரீதியானது, சுற்றுச்சூழியல் ரீதியான கேள்வி.
தமிழ்நாட்டில் நவீன ஓவியத்திற்கு ஒரு மரபு உருவாகி நூற்றாண்டுகளாகப் போகிறது. இந்தச் சூழ்நிலையில் புகைப்படங்களைப் போல தத்ரூப சித்திரங்களுக்குத் திரும்ப மதிப்பு வந்துள்ளதே?
பின்நவீனத்துவக் கலையைப் பொறுத்தவரை, வர்த்தக ஓவியங்கள் உட்பட எல்லாவற்றையும் கலையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே எது விற்கும் என்பதை ஓவியங்களாகப் போட்டு காசு பார்ப்பவர்களும் உண்டு. அதில் பெரிய தத்துவ உள்ளடக்கத்திற்கு எல்லாம் வேலையே இல்லை. இன்று பேஸ்புக் வந்துவிட்டது. இதற்கு என்ன அர்த்தம். கடைசியாக முகம்தான் புத்தகம் என்ற இடத்திற்கு மனிதகுலம் வந்திருக்கிறது. முகத்தைத் தவிர வேறு தனித்துவம் இல்லை என்ற தீர்மானத்திற்கு தள்ளிவிட்டார்கள்.
சென்னை ஓவியக் கல்லூரி முதலில் கைவினைத் தொழில்களுக்கு பயிற்சி கொடுக்கிற இடமாகத் தான் இருந்தது..பின்னால அது நவீன ஓவியர்களை உருவாக்கிய இடமாக அறியப்படுகிறது... இப்போது கைவினைக் கலைகள் மற்றும் தொழில்நுட்பம் அங்கே இல்லாமல் ஆகிவிட்டதே…
ஒரு அம்சம் பிரதானமாகத் தலைதூக்கிறப்போ, இன்னொரு விஷயம் நலிஞ்சு போயிடுது. நவீன ஓவியம் எவ்வளவு முக்கியமோ, கைவினைக் கலைஞர்களின் தொழில்நுட்பமும் அவசியம் என்ற நிலை வருவதற்கு 80 ஆண்டுகள் இங்கே தேவைப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பாவில் எல்லா கலைகளையும், கைவினைத் தொழில்களையும் தொடர்ந்து போஷிச்சு பாதுகாத்து வைத்திருக்கிறான். எதையும் அவன் அழியவிடுவதில்லை.
நுண்கலைகளை மதிப்பதில் இந்தியா போன்ற நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இன்னும் தொடர்கிறது இல்லையா?
கடவுளை அவர்கள் வைத்திருந்த இடத்தில் கலைக்கு இடம் கொடுத்து விட்டார்கள். கோயிலுக்கு இருக்கும் மதிப்பை அருங்காட்சியகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அருங்காட்சியகங்களுக்குக் கட்டணமும் குறைவு.
ஓவியங்களில் பிராந்தியக் கூறுகளை அடையாளம் காணமுடியுமா? உதாரணத்திற்கு தமிழ் ஓவியர்னு ஒருவரை எப்படி சொல்லமுடிகிறது?
ஒரு சினிமாவை எப்படி தமிழ் சினிமா என்று அடையாளம் காண்கிறோம். நான் என்னுடைய ஓவியங்களில் அடர்த்தியாகத் தான் வண்ணங்களைப் பயன்படுத்துகிறேன். ஆதிமூலமும் அடர்த்தியாகத் தான் வைத்தார். எட்டு மாதங்கள் உஷ்ணம் தகிக்கும் இடம் இது. அந்த வெப்பம் நமது ஓவியங்களிலும் பிரதிபலிக்கும். எனது ஓவியத்தில் ஏன் பச்சை நிறம் ஆதிக்கமாக இருக்குதுன்னு, வடநாட்டு ஓவியர் ஒருவர் கேட்டாரு. நான் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக, மரங்களாக இருக்கு.
உங்கள் ஓவியங்களில் பறவைகளும், குருவிகளும் வருகின்றன. அவை காணாமல் போவது தொடர்பான துயரங்களை ஓவியமாக்குகிறீர்களா?
மனிதனும் பறவைகளைத் துரத்தியடிப்பது போலத்தான் துரத்தியடிக்கப்படுகிறான். அந்த ஓவியங்களில் ஒரு ஒப்பாரி இருக்கிறது என்று நண்பர் பன்னீர்செல்வம் சொன்னார். அது என்னுடைய ஒப்பாரியாக கூட இருக்கலாம். சில பேர் அதை இரைச்சல் என்பார்கள். நம்முடைய கலாச்சாரமே இரைச்சலானதுதானே.
உங்கள் ஓவியங்களில் தொடர்வரிசையாக புலிகளின் உருவத்தை பல்வேறு பண்புகளில் சித்திரமாக்கியுள்ளீர்கள் . அதைப்பற்றி சொல்லுங்கள்…
இயற்கை ஒரு ஒழுங்கில் இருக்கு. அதற்கான பெரிய அடையாளமாக புலியைப் பார்க்கிறேன். வரிக்குதிரையின் உடலில் உள்ள கோடுகள் கோணல்மாணலாகப் போடப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும் படுபயங்கர ஒழுங்கு வடிவில் இருக்கும். வேப்பமரத்தின் கீழே படுத்துக் கொண்டு மரத்தைப் பார்த்தீர்கள் என்றால், இலைக்கூட்டம் அத்தனையும் ஒரு சீரொழுங்கில், வடிவத்தில் இருக்கும். புலி நடக்கும்போது, பார்த்தீர்கள் என்றால் அதன் கோடுகள் சேர்ந்து பிரிவதைப் பார்ப்பது அற்புதமான நிகழ்வாக இருக்கும். ஒரு போதையே வரும். அதன் அழகில் மயங்கிதான் தொடர்ந்து புலியைப் போட்டுக்கொண்டே இருந்தேன். புலிவாலைப் பிடித்தது போலத்தான். இப்போது புலி போடுவதை நிறுத்திவிட்டேன்.
சிரிக்கும் புத்தரை ஒரு ஓவியமாகப் போட்டேன். அதைத் தொடரவேண்டும் என்று ஆசை உள்ளது.
எனக்கு நிறைய அழகான பெண்கள் தோழிகள். எப்போதும் அவர்களை மனரீதியாக காதலித்துக் கொண்டே இருக்கவேண்டும். அழகுதான் காரணம். 20 வருஷம் இருக்கலாம். கோவாவில் நண்பர் ஒருத்தரின் வீட்டில் தங்கியிருந்தேன். அற்புதமான இடம் அது. மழை கொட்டிமுடித்த ஒரு வாரத்திற்குப் பிறகு காலை நடை கிளம்புகிறேன். மழையின் காரணமாக பச்சைப் பசேலென்று புல் எல்லா இடத்திலும் கிளம்பி நிற்கிறது. சூரிய வெளிச்சம் அது மேல் அடிக்கும்போது நிலமே ஒளிருது. மூணு, நாலு மாசம் ஈரமாக இருக்கும் இடம் அது. அப்போதுதான் அட்டகாசமான காட்சி ஒன்றைப் பார்த்தேன். கருப்பு மரம் ஒண்ணு. அந்த மரத்தில் ஒரு கொடி அப்போதான் படரத்தொடங்குது. மரத்தின் இரண்டுபக்கமும் அது சமச்சீராக படர்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்தக்காட்சியைப் பார்த்தபிறகு எல்லா விஷயங்கள் மீதும் மதிப்பு போயிடுச்சு. நவீன ஓவியம் சார்ந்த என்னோட கருத்துகள் அனைத்தையும் குப்பையில் போட்டுவிட்டேன். அந்தக் கொடியின் சமச்சீர்மையை, அதன் மொழமொழப்பை நான் ஓவியத்தில் கொண்டுவரவேண்டும். ஒரு பக்கம் பெரிய இலை. இன்னொரு பக்க நுனியில் சிறிய இலை. கருப்பு மரத்தில் அழகாக அது ஏறிக்கொண்டிருக்கிறது. அந்தப் பச்சை நிறத்தை நான் இன்னும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணிக்கிட்டுதான் இருக்கிறேன்.
தோப்பில் முகம்மது மீரான், ‘சாய்வு நாற்காலி’நாவலுக்காக 1997-ல் சாகித்தியஅகாடமி விருதுபெற்றவர்.கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள -தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர். தற்போது திருநெல்வேலியில் வசிக்கும் தோப்பில், போர்த்துக்கீசியப் படையெடுப்பைப் பின்னணியாகக்கொண்டு புதிய நாவலை எழுதிவருகிறார். உங்கள் சொந்த ஊர்... கன்னியாகுமரிமாவட்டத்தில் உள்ளதேங்காய்ப்பட்டணம். அது மலையாளம், தமிழ் என இரு மொழிகளும் பேசப்படும் ஊர். 1940-ல் பிறந்தேன். பள்ளிப் படிப்பெல்லாம் அங்கே பக்கத்திலேயேதான் படித்தேன். கல்லூரிப் படிப்பு நாகர்கோவிலில் உள்ள தென்திருவாங்கூர் இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் படித்தேன். கதைகள் எழுதுவதில் நாட்டம் எப்படி வந்தது? பத்து, பன்னிரெண்டு வயதில் இருந்தே கதைகள் எழுதுவேன். எங்கள் ஊரில் கொலைச் சம்பவங்கள் மிக அபூர்வமாகத்தான் நடக்கும். அப்படி நடக்கும்போது அதைப் பற்றிச் சுத்துப்பட்டு ஊர்களில் உள்ள கவிஞர்கள் கவிதையாகப்பாடுவார்கள் (கொலைச் சிந்து). அம்மாதிரிப் பாடல்களை அவர்களே பாடி சந்தையில் விற்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிப் படிப்பேன். பக்கத்து ஊர்களில்நடக்கும் கூத்து நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்ப்பேன். இதுமட்டுமல்ல என் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். எங்கள் அப்பா எல்லோரையும் சுற்றி உட்காரவைத்துக் கதைகள் சொல்வார். இவை எல்லாம்தான் காரணம் என நினைக்கிறேன். ‘ஒரு கடலோரகிராமத்தின் கதை’ முழு நாவலும் என் அப்பா சொன்ன கதைதான். உங்கள் முதல் படைப்பும் அதுதானா? அதற்கு முன்பு நிறைய கதைகள் எழுதி மலையாளப் பத்திரிகைகளுக்குஅனுப்புவேன். அனுப்பிய சில நாட்களிலேயே கதைகள் திரும்ப வந்துவிடும். அப்போது தமிழ் எழுதத் தெரியாது. 1962 வாக்கில் எங்கள் பகுதியில் நடந்த மீனவர் - முஸ்லிம் கலவரத்தை ‘ஒரு ரிப்போர்டிங்’ போல முழுமையாக எழுதினேன். அதை மலையாளப் பதிப்பகங்களுக்கு அனுப்பினேன். அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த ரிப்போர்டிங்கை மலையாள எழுத்தாளர்கள் கே. ஜி. சேதுநாத், மலையாள நடிகர் கரமணை ஜனார்த்தனன் ஆகியோர் படித்துவிட்டு ‘சிறந்த நாவல்’என்றார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது ‘கூனன் தோப்பு’ நாவலாக வெளிவந்தது. முதலில் பிரசுரமான கதை எது? மெட்ராஸில் (சென்னை) இருந்து வந்த‘பிறை’ என்னும் ஒரு பத்திரிகையில்1968-ல் எனது முதல் சிறுகதை ‘நரகபூமியில்’ பிரசுரமானது. அந்தக் கதைமலையாளத்தில் எழுதப்பட்டுமொழிபெயர்க்கப்பட்டது. நிலா முதீன்என்பவர்தான் மொழிபெயர்த்தார்.அந்தச் சமயத்தில் நானும் மெட்ராஸில் வேலை பார்த்ததால் ‘பிறை’யில் தொடர்ந்து எழுதினேன். தமிழில் நேரடியாக எழுதியது எப்போது? இப்போதுதான். ரொம்பச் சமீபத்தில்தான். ‘சாய்வுநாற்காலி’க்கு முன்பு வரை நான் நேரடியாகத் தமிழில் எழுதியதில்லை. நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதிப் பிரதி எடுக்க வேண்டும். தமிழில் வாசிப்பும் 1990களுக்குப் பிறகுதான். 2000 வருடத் தமிழ் எழுத்து வரலாற்றைவிட்டுவிட்டு வேறோர் இடத்தில் இருந்து நீங்கள் கதை சொல்லத் தொடங்குகிறீர்கள் எனலாமா? எனக்குத் தமிழ் இலக்கியம் தெரியாது.எங்கள் ஊர் பெரிய கலாச்சார பூமி. அங்கு இருந்த நிலப் பிரபுத்துவ அமைப்பால் அடிமைப்பட்ட மக்களின் வாழ்க்கையைத்தான் எடுத்துக்கொண்டேன். நான் ஜெயகாந்தனை வாசித்தது கிடையாது;மெளனியை வாசித்தது கிடையாது; பிச்சமூர்த்தியை வாசித்தது கிடையாது. எனக்குத் தெரிந்த விஷயத்தை, எனக்குத் தெரிந்தபடி என்னுடைய மொழியில் சொல்கிறேன். அவ்வளவுதான். தமிழில் நீங்கள் வாசித்த படைப்புகளில் உங்களைப் பாதித்தவை எவை? என்னை எந்த நூலும், ஆசிரியரும் பாதித்தது கிடையாது. 1990களுக்குப் பிறகுதான் தமிழ் வாசிக்கவே ஆரம்பித்தேன். அதற்குக் காரணம்பேராசிரியர் கி.நாச்சிமுத்துதான். “தமிழ்ல ஏதாவது படிச்சிருக்கீங்களா?”எனக் கேட்டார். “படிச்சதில்லை சார்” எனச் சொன்னேன். “இதபடிச்சுப்பாருங்கன்னு” சுந்தரராமசாமியின் ‘புளிய மரத்தின்கதை’யையும் கி.ராஜநாராயணனின்‘கோபல்ல கிராம’த்தையும் கொடுத்தார். இந்த ரெண்டும்தான் நான் முதலில் வாசித்த தமிழ் புத்தகங்கள். உங்கள் எழுத்துக்கு முன்னோடி என யாரையும் சொல்ல முடியாதா? இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அவர்களுடைய மொழியைக் கொண்டே எழுதக் காரணமாக இருந்தவர் வைக்கம் முகம்மது பஷீர்தான். அவரது கதைகளைப் படித்தபோதுதான் நாமும் இஸ்லாமிய வாழ்க்கையைப் பதிவுசெய்யலாம் எனத் தோன்றியது. அவர் பெரிய மேதை. அவர் மொத்தம் எழுதியது 1900 பக்கங்கள்தாம். பாலைச்சுண்டக் காய்ச்சுவதுபோலப் பக்கங்களைச் சுருக்கிவிடுவார். அவரின் நூறு பக்கங்களைப் படித்தால், ஆயிரம் பக்கமாக விரிந்துகொள்ளும். அது பஷீரிடம் உள்ள சிறப்பு. அது நம்மால் முடியுமா? ஒருவகையில் உங்கள் எழுத்துகளை வட்டார வழக்குக் கதைகள் என வகைப்படுத்தலாமா? எனக்கு இதில் மாறுப்பட்ட கருத்து உண்டு. இப்படி வகைப்படுத்துவது எழுத்தைச் சிறுமைப்படுத்தும் வேலை இல்லையா? இதுமாதிரியான வகைப்படுத்துதல் மலையாளத்தில் இல்லை. பெருமாள்முருகன், பூமணி, சோ. தர்மன் எல்லாம் தமிழின் பெரிய எழுத்தாளர்கள். அவர்களையும் வட்டார வழக்கு என்றால், பொதுக்கதைகள் எவை? அசோகமித்திரன் எழுதுவதா? உங்கள் கதைகளில் தொடர்ந்து இஸ்லாம் அடிப்படைவாதத்தைப் பதிவுசெய்துள்ளீர்கள். இதை உங்கள் சொந்த சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது? எதிர்ப்புகள் வந்தன. யாரும் புத்தகம் வாங்கமாட்டார்கள்; படிக்க மாட்டார்கள். ‘முஸ்லிம் எதிரி’ எனப் பிரச்சாரம் செய்தார்கள். இதற்குச் சகபடைப்பாளிகளும் காரணம். அதேசமயத்தில் கவி.கா.மு.ஷெரீப், அப்துல்வகாப் உள்ளிட்ட பலரிடம் இருந்து பாராட்டுகளும் வந்தன. அடிப்படைவாதிகள்தாம் என்னை எதிர்த்தார்கள். சமூகத்தில் அவர்கள்தானே அதிகம்? இன்றைக்குள்ள இஸ்லாமியத் தமிழ் எழுத்துகளை வாசிக்கிறீர்களா? இம்மாதிரி வகைப்படுத்துதல் மீது எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் வாழ்க்கையைப் பதிவுசெய்த வகையில் அர்ஷியா என்பவரின் முயற்சி எனக்குப் பிடித்திருந்தது. கீரனூர் ஜாகிர் ராஜா, களந்தை பீர்முகம்மது எழுத்துகளும் பிடித்திருக்கின்றன. இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? போர்த்துக்கீசியப் படையெடுப்பின் காரணமாக எங்கள் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் இன்றைக்குப் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையைத்தான் நாவலாக எழுதிவருகிறேன். உங்கள் எழுத்துகளுக்கு வரலாறுதான் ஆதாரமாக இருக்கிறதா? நான் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் கடந்த காலத்தின் வழியாக வரலாற்றுக்குச் சென்றுவிடுவேன். வரலாறு எனக்குப் பிடிக்கும். வரலாற்றுப் புத்தகங்கள் நிறைய வாசிப்பேன். வரலாற்றை மறந்துவிட்டுப் படைப்புகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை படைப்பு என்பது கடந்த காலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். நிகழ் காலம் அதற்கு முக்கியமல்ல.
சந்திப்பு, புகைப்படம்: மண்குதிரை, (தி இந்து தமிழ், ஜூலை, 26, 2014)
மலையாள சினிமாவின் இளம் தலைமுறை இயக்குநர்களுள் ஒருவர் லிஜோ
ஜோஸ் பெல்லிசேரி ‘ஆமென்’ ‘அங்கமாலி டைரீஸ்’ படங்கள் மூலம் தமிழகத்திலும் கவனம் பெற்றவர்.
அவரது புதிய படம் ஈ.ம.யோ. வெளியாகயிருக்கிறது. சென்னை வந்த அவர் பெங்களூர் விமானத்தைப் பிடிப்பதற்கு இடையிலான அரைமணி நேரத்தில் அவருடன் நிகழ்த்திய உரையாடலின்
சுருக்கப்பட்ட வடிவம்.
உங்கள் முதல் படமான ‘நாயகன்’ ஒரு த்ரில்லர் வகை. மலையாள த்ரில்லரை
எஸ்.என்.சுவாமி த்ரில்லர், கே.ஜி.ஜார்ஜ் த்ரில்லர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
இதில் எதைச் செய்ய வேண்டுமென நினைத்தீர்கள்?
வித்தியாசமான த்ரில்லர்தான் செய்யத்தான் விருப்பம். ஆனால்
படமாக வெளிவந்தது, நான் படமாக்க நினைத்த த்ரில்லர் கதை அல்ல. முதல் படத்தில் நிறைய
விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. இப்போது பார்க்கும்போது படம் சரியாக வரவில்லை என்பது
புரிகிறது.
படத்தின் நாயகன் ஒரு கதகளிக் கலைஞர் என்பதைத் தீர்மானித்திருந்தீர்களா?
அதுதான் அந்தக் கதையில் ஒரு ஈர்ப்பான விஷயமாக இருந்தது. கதகளி
மாதிரியான ஒரு கலையுடன் வன்முறையை இணைக்கும்போது கிடைக்கும் முடிவுதான், இந்தப் படத்தைப்
பொறுத்தவரை எனக்கு உற்சாகத்தைத் தந்தது. இந்த அம்சம்தான் இதை ஒரு வித்தியாசமான த்ரில்லர்
படமாக்கும் என்று நம்பினேன்.
ஆனால், அது நடக்கவில்லை, இல்லையா?
ஆமாம். திரும்பப்
பார்த்தபோது எனக்குப் பிடித்த மாதிரி அதை நான் உருவாக்கவில்லை எனத் தெரிந்தது. என்
படங்களைப் பார்த்தால் எப்போதும் தவறுகள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. கலைஞர்கள் எல்லோரும்
இப்படித்தான் இருப்பார்களா, நூறு சதவீதம் திருப்தி
வந்துவிட்டால் பிறகு எதற்கு படம் செய்ய வேண்டும்? ஒரு கலைஞனாக நான் 30 சதவீதம்கூட வளரவில்லை
என்பதுதான் என் அபிப்ராயம்.
‘அங்கமாலி டைரீஸ்’
வெற்றிக்குப் பிறகுமா?
ஆமாம், ‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகும் நான் 50 சதவீதம்கூட
வளரவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் நிறைய படங்கள் பார்க்கிறோம், வெளியில்,
இந்தியாவில். அவையெல்லாம் முழுமையான படமாக இருக்கும். என்னுடைய படங்கள் பார்க்கும்போது
காட்சிகளை ரசிப்பேன். ஆனால் தவறுகள் தெரியும். முழுமையாக இல்லை எனத் தோன்றும். இது
ஒரு கலைஞனின் விதி என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவன் படத்தை எல்லோரும் ரசிப்பார்கள்.
ஆனால் அவனால் ரசிக்க முடியாது.
ஆமென்
யதார்த்த மலையாள சினிமாவில் உங்களுடைய ‘சிட்டி ஆஃப் காட்’
மூலம் ஒரு புதிய பாவனையை உருவாக்க முயன்றீர்கள் எனலாமா?
கே.ஜி.ஜார்ஜ் ‘ஆதமிண்ட வாரியலு’ படத்திலேயே இதைச் செய்து
பார்த்திருக்கிறார். சத்யஜித் ரே ‘கஞ்சன்சங்கா’வில் செய்திருக்கிறார்.
ஆனால், உங்கள் படம், அம்ரோஸ் பெரோஸ்’போல ஒரு கிளையிலிருந்து
பிரிந்துசெல்கிறது இல்லையா?
அந்த வடிவம் அதற்கு முன்பே இங்கு இருக்கிறது. ஆனால் அலெக்ஸான்ரோ
இன்னாரிட்டு இந்த வடிவத்தைப் பயன்படுத்தும்போது அது பிரபலமானது. பல அடுக்குகளில் கதை
சொல்வதற்கு ஒரு சர்வதேசக் கவனமும் கிடைத்தது. எனக்கு அதுபோல ஒரு படம் செய்ய விருப்பம்.
அப்படித்தான் ‘சிட்டி ஆஃப் காட்’ உருவாகியது. முயற்சி என்ற வகையில் அந்தப் படம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் தியேட்டரில் இரண்டு நாட்கள்தான் இருந்தது.
‘ஆமென்’ தெய்வம், மனித அவதாரம் எடுக்கும் ஒரு படம். தொன்மமும்
உண்டு. த்ரில்லரிலிருந்து ஏன் சட்டனெ ஒரு மாற்றத்தைத் தேடிப் போனீர்கள்?
ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்கக் கூடாது என்றுதான்
முயன்றுவருகிறேன். ஒரு புது வகைப் படத்தில் வேலை பார்ப்பதில் உற்சாகம் கிடைக்கிறது.
ஒரு கிராமத்துக் கதையைச் சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் இதுவரை மலையாள சினிமாவில் காண்பிக்காத
சினிமாவாக இருக்க வேண்டும் என நினைத்தேன். தமிழ்நாட்டுக் கிராமம் என்றால் பாரதிராஜாவின்
கிராமம் மனத்தில் காட்சியாக உருவாகிறது. அதுபோல கேரள கிராமம் என்றால் சத்யன் அந்திக்காடின்
கிராமம் உருவாகும். இதற்கு மாற்றான ஒரு கிராமத்தை உருவாக்குவதைச் சவாலான காரியமாக எடுத்துக்கொண்டேன்.
அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
ஆமெனின் வெற்றி உங்களை ‘டபுள் பேரல்’ போன்ற பரிசோதனை சினிமா
செய்துபார்க்கத் தூண்டியதா?
கண்டிப்பாக. ‘ஆமென்’ ஒரு சராசரி கிராமத்துப் படமல்ல. ஒரு
ஃபேண்டசியான கிரமாத்துக் கதை எனச் சொல்லலாம். அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற தைரியத்தில்
இதையும் முயன்று பார்த்தேன். மேலும் எனக்குச் சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் பிடிக்கும்.
அதுபோன்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்டு சினிமா செய்ய நினைத்தேன். அதுதான் டபுள்
பேரல். ஆனால் அது சரியாக வரவில்லை. வெளியான
தேதியை முன்பே தீர்மானித்ததால் அவசர, அவசரமாக படத்தை முடித்தோம். அதனால் அது முழுமையான
சினிமாவாக வெளிவரவில்லை. மக்களும் அதை வரவேற்கவில்லை.
திலீஷ் போத்தனின் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ போன்ற யதார்த்தவாத
படங்களுக்கு கிடைத்த வெற்றியின் பாதிப்பிலான ‘அங்கமாலி டைரீஸ்’ செய்தீர்கள்?
யார்த்தமான படமாகத்தான் அதைச் செய்தோம். ஆனால், அந்தக் கதைக்கான
தேவையாக அது இருந்தது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் வேலை பார்க்கும்போது சினிமா உருவாக்குவது
ஒரு மன அழுத்தமான வேலை அல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். கதையை உருவாக்குவதிலிருந்து
அந்தப் படத்தின் ஒவ்வொரு வேலையைச் செய்யும்போதும் லேசாக உணர்ந்தேன். சினிமா என்பது
எளிமையான, லேசான வேலைதான். நாம்தான் தேவையில்லாத அழுத்தத்தை இழுத்துப் போட்டுக்கொள்கிறோம்.
இவற்றை இந்தப் படம்தான் சொல்லிக் கொடுத்தது. ஆனால், இதை எல்லோருக்கும் பொதுவாகப் பார்க்க
முடியாது. ‘ஈ.ம.யூ.வி’லும் இதைத் தொடர்ந்திருக்கிறேன்.
அங்கமாலி டைரீஸ்
அதனால்தான் ஈ.ம.யூ.வை 18 நாட்களில் செய்ய முடிந்ததா?
இத்தனை நாளுக்குள் முடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து படப்பிடிப்புக்குச்
செல்லவில்லை. நாங்கள் கதைக்காகப் போதுமான அளவு வேலை பார்த்தோம். அது 18 நாட்களுக்குள்
முடிந்துவிட்டது. ‘அங்கமாலி டைரீஸு’ம் ‘ஆமெ’னும் 40 சொச்சம் நாட்களுக்குள் எடுத்த படங்கள்தாம்.
அங்கமாலி டைரீஸிலும் ஈ.ம.யூ.விலும் நட்சத்திரங்கள் இல்லை.
இனி லிஜோவுக்கு நட்சத்திரங்கள் தேவை இல்லையா?
அங்கமாலீஸ் டைரீஸ் ஒரு ஆளின் கதை கிடையாது. அது ஒரு ஊரின்
கதை. அதில் நட்சத்திரங்கள் இருந்தால் சரியாக இருக்காது. மேலும் பொதுவாக நான் கதைக்குத்தான்
நடிகர்களைத் தேடுகிறேன். இந்திரஜித், பிருத்விராஜ், ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த என்
முந்தைய படங்களுக்கும் அப்படித்தான். நட்சத்திரங்கள் இல்லை என்றால் தியேட்டர்களுக்கு
ஆட்கள் வருவார்களா என்ற சந்தேகமெல்லாம் வரும். ஆனால் தியேட்டரில் ஒருநாள் தாக்குப்
பிடித்தால் போதும். கதைக்காக ஆட்கள் வருவார்கள். அங்கமாலி டைரீஸுக்கு நடந்தது.
அங்கமாலி டைரீஸ் ஒரு அரசியல் படம் என விமர்சனங்கள் வந்தன.
அப்படித் தீர்மானித்து உருவாக்கிய படமா அது?
அப்படியெல்லாம் தீர்மானிக்கவில்லை. ஒரு கலையை அரசியல் நோக்குடன்
செய்யக் கூடாது என நினைப்பவன் நான். சினிமாவைப் பார்க்கும் பார்வையாளர் ஒருவர், அதில்
காணக்கூடிய அரசியல்தான், அந்தப் படத்தின் அரசியல். நாமாக ஒன்றை வலியுறுத்தித் திணிக்கக்
கூடாது. படம், ஒரு மனுஷனைப் பற்றி, ஒரு ஊரைப் பற்றிச் சொல்லும்போது அதன் அந்த மனுஷனின்,
ஊரின் அரசியலையும் சேர்த்து வெளிப்பட வேண்டும். நாமாக திணிக்க வேண்டியதில்லை.
அந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும்
பார்க்கவில்லை. இதுவும் இறந்த வீட்டைப் பற்றிய கதைதான். ஆனால் இதில் ஒரு மீனவக் குடும்பத்தில்
நடக்கும் இறப்புச் சடங்கைப் பதிவுசெய்திருக்கிறேன். பொதுவாக நாம் எல்லோருமே இறப்பை
அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை. நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து
நிற்க வேண்டும், என்ற கேள்வியையும் இதில் புகுத்திப் பார்த்திருக்கிறேன்.
சென்னையில் நான்காவது
வாரத்தைத் தாண்டியிருக்கும் மலையாளப் படம் ‘மாயாநதி’. அதில் விசாரணை அதிகாரியாக முக்கியக்
கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஒளிப்பதிவாளர், நடிகர் இளவரசுவின் நடிப்பு பாராட்டைப் பெற்று
வருகிறது. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
‘மாயாநதி’ வாய்ப்பு எப்படி வந்தது?
ஒருநாள் பென்னி என்பவர் போனில் அழைத்து, “ஆஷிக் அபுவின் உதவியாளர் பேசுகிறேன்.
படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. செய்ய முடியுமா?” எனக் கேட்டார். ஆஷிக் அபுவின்
படங்கள் மீதிருந்த நம்பிக்கையால் உடனடியாக `சம்மதம்’ எனச் சொல்லிவிட்டேன்.
உங்கள் கதாபாத்திரம் குறித்து ஒன்றும் கேட்கவில்லையா?
குணச்சித்திர நடிகர்களுக்குப் பொதுவாக முழுக் கதையும் தெரிந்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை. நமக்கு முன்னால் நடந்த சம்பவங்கள், பின்னால் நடக்கவிருக்கும் சம்பவங்கள்
ஓரளவு தெரிந்தால் போதும். அப்படி நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்கள் கதைப்படி நம் கதாபாத்திரத்துக்குத்
தெரிந்திருக்க வேண்டுமா, இல்லையா இதுதான் முக்கியம். இந்தப் படத்திலும் எனக்குச் சம்பவங்களாகத்தான்
சொன்னார். நானும் அதைத்தான் கேட்டேன். அதுதான் நல்லது.
காதல் படமாக வெளிப்படும் இந்தப் படத்தை உங்கள் கதாபாத்திரம்தான் சமூக,
அரசியல் படமாக்குகிறது..?
ஆனால் இதை நானும் உங்களைப் போல் படம் பார்க்கும்போதுதான் உணர்ந்தேன்.
விசாரணை அதிகாரியான என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி, பிடிபடும் குற்றவாளியான டோவினோ
தோமஸிடம் பேசும் காட்சி ஒன்று இருக்கிறது. இந்த வசனம் தேவையற்றது என நினைத்தேன். ஆனால்
அது படத்துக்கு வேறு கலரைக் கொடுத்துவிட்டது. ஏனென்றால் அதற்கு முந்தைய காட்சி வரை
தொடரும் காதலில் நானும் ஒரு பார்வையாளனாக ஒன்றிப் போய்விட்டேன். சின்னச் சின்ன வசனங்களில்
வழியே ஆஷிக் அபு பெரிய மாற்றத்தையே படத்துக்குக் கொடுத்துவிடுகிறார்.
வசனத்துக்கு முக்கியத்துவம் தரும் தமிழ்ப் படங்களிலிருந்து வேறுபட்ட
‘மாயாநதி’ அனுபவம் எப்படி இருந்தது?
புதுமாப்பிள்ளையான எங்கள் சக போலீஸ்காரரை கல்யாணமான அன்றே குற்றவாளியைத்
தேடும் பணிக்கு அழைக்கக் காத்திருக்கும் காட்சியைத்தான் முதலில் எடுத்தோம். புதுமாப்பிள்ளை
தன் மனைவிக்கு முத்தம் தருவதை நான், கார் சைட் மிரரர் வழியாகப் பார்த்து ஒரு உணர்ச்சியைத்
தர வேண்டும். ஆனால் என்ன உணர்ச்சியைத் தர வேண்டும் எனச் சொல்லவில்லை. நான் அந்தப் புதுமாப்பிள்ளைக்கு
உயர் அதிகாரி. முகத்தைச் சுழித்திருக்கலாம். கிண்டலாக ஏதாவது பேசியிருக்கலாம். ஆனால்
பெரிய பாவனை இல்லாது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். “இதுதான் எங்களுக்கு வேண்டியது”
என ஆஷிக் அபு தன் கைகளை உயர்த்திக் காண்பித்தார்.
தமிழில் கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிக்கிறீர்களா?
எனக்கும் அதில் சலிப்புதான். அதனால் சில படங்களில் நடிக்காமலே இருந்துவிட்டேன்.
முதலில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தேன். ‘நெறஞ்ச மனசு’ படத்துக்குப் பிறகு குணச்சித்திர
கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. பிறகு அப்பா கதாபாத்திரங்கள். அதிலும்
இரண்டு வகை இருக்கின்றன. ‘களவாணி’ அப்பா, இன்னொன்று ‘முத்துக்கு முத்தாக’ அப்பா. பிறகு
இதுமாதிரியெல்லாம் கேட்கிறீர்களே, நாலைஞ்சு வருஷத்துக்குள் நடிகனும் பழசாகிடுவான் இல்லையா?
குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்கிறீர்களா?
குணச்சித்திர நடிப்பு என்பது கடைமடை விவசாயம் போன்றது. கதாநாயகன், நாயகி,
நகைச்சுவை நடிகர் எல்லோரும் பாசனம் செய்ததுபோகத்தான் நமக்கு வரும். நாங்கள் கீழத் தஞ்சை
விவசாயிகள். சினிமாக்களில் இறந்துபோன குடும்ப உறுப்பினராக ஒரு ஃபோட்டோ வீட்டில் மாட்டியிருப்பதைக்
காண்பிப்பார்கள். பார்த்திருக்கிறீர்களா? அப்படியாகவும் நாங்கள் கதைக்குள் இருக்க வேண்டியிருக்கும்.
குணச்சித்திர நடிகராக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் சிறு நகைச்சுவையை
வெளிப்படுத்துகிறீர்களே...
குணச்சித்திர நடிகராக நகைச்சுவை வெளிப்படுத்துவது மிகக் கஷ்டமான காரியம்.
‘மாயாநதி’யிலும் சிறு நகைச்சுவையும் வேண்டுமென்றார்கள். முதலில் எனக்கு கொஞ்சம் பயம்தான்.
ஆனால் அது வெளிப்பட்டுள்ளது. அதைத் திட்டமிடுவதில்லை.
ஒளிப்பதிவு இயக்குநரான நீங்கள் எப்படி நடிப்புக்குள் வந்தீர்கள்?
கதை எழுதுவதற்காகத்தான் முதலில் சினிமாவுக்கு வந்தேன். ஊரில் இருக்கும்
ரஷ்ய இலக்கியப் பரிச்சியம் அப்படியான துணிவைத் தந்தது. சந்தர்ப்பவசத்தால் ஸ்டில் ஃபோட்டோகிராஃபர்
ஆனேன். பத்திரிகைகளுக்கு அட்டைப்படமேல்லாம்கூட எடுத்திருக்கிறேன். பிறகு மோஷன் ஃபோட்டோ
மீது ஆசை வந்தது. பி.கண்ணனின் உதவியாளராகச் சேர்ந்தேன். நடிப்பு எல்லாம் பின்னாடிதான்.
எப்போது?
பாரதிராஜா படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தேன். ‘முதல் மரியாதை’யில்
ஸ்டில் ஃபோட்டோகிராபராகவே நடித்தேன். ‘வேதம்புதிது’ படத்தில்தான் அதுபோல ஒரு காட்சியில்
நடிக்கச் சொன்னார். நானும் நடித்தேன். ஆனால் அது ஒருநாளுடன் நின்றுவிடவில்லை. வசனமெல்லாம்
கொடுத்துப் பேசச் சொன்னார். பிறகுதான் தெரிந்தது, நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரத்தில்
என்று. இந்த ‘வேதம்புதிது’ கதாபாத்திரத்தை மீண்டும் ‘தவசி’யில் செய்தேன். ‘பொற்கால’த்திலும்
அதே போன்ற கதாபாத்திரம்தான்.
ஒளிப்பதிவாளராக ஏன் தொடர்ந்து இயங்க முடியவில்லை?
ஒளிப்பதிவாளராக 11 படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அவை பெரும்பாலும்
கிராமப் பின்னணி அல்லது குடும்பப் படங்களாகவே இருந்தன. வித்தியாசமாகப் பணியாற்ற விரும்பினேன்.
‘தவசி’ படத்தில் நடிகனான பிறகு எனக்கு ஒளிப்பதிவாளர் வாய்ப்பு ஏதும் வரவில்லை என்பதுதான்
உண்மை. என்னுடன் பணியாற்றிய இயக்குநர்களும் வெற்றிபெறவில்லை. இது என்னுடைய வாய்ப்பின்மைக்கு
ஒரு காரணமாக இருக்கலாம்.
நியூஸிலாந்து சங்கநாதம் தமிழ் ரேடியோ - 18 ஜனவரி 2013
பொங்கல் வாழ்த்து உரை மற்றும் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னணி பற்றி எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
வணக்கம். முதலில் நியூஸிலாந்து வாழ் தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள். குறிப்பாய் தமிழ் கலை இலக்கிய வட்டத்தின் சங்கநாதம் வானொலி மூலமாக நாளை நடக்கவிருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் வாழும் ஒரு எழுத்தாளன் நான். எழுத்தாளன் என்பவன் முந்திய காலத்து ஞானிகள் போல சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும் என்று கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறுவார். தமிழ் சமூகத்தின் மனசாட்சியாய், தமிழகத்தின் மனச்சாட்சியாய் நான் உங்களுடன் இந்த பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விழைக்கிறேன்.
எந்த நாளில், எந்த சூழலில் நீங்கள் இந்த பொங்கல் திருநாளை எடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நாம் ஒன்றும் இல்லை நமக்கென்று ஒன்றுமில்லை. ஏதிலிகளாய் உலக வீதிக்கு நடத்தப்பட்டுள்ளோம் நாம் என்றொரு நிலை இன்று இருக்கிறது. நமக்கென்று ஒரு காலம் இருந்தது. அது ஒரு காலம். அதுதான் பொங்கல் திருநாள், உழவர் திருநாள், அறுவடை திருநாள் என்று பலவகையாக பெயரிடப்பட்ட அந்த நாள்.
உலகப் பரப்பில் ஒவ்வொரு இனமும் தனக்கென ஒரு தனித்த பண்பாட்டு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. ஒரு பண்பாட்டு நிகழ்வு எதன் காரணமா எக்காலத்தில் தோன்றியது என்று கண்டறிவது, அந்த ஆதி புள்ளியை கண்டறிவது கடினம். இறுதிக்கும் இறுதியாய் ஒரு நம்பிக்கையாக மட்டுமே அதற்கு விளக்கம் காணுகிறார்கள். யூகம், அனுமானம் இவற்றினால் அதை சுற்றிக் கட்டப்பட்ட கதைகளும் உண்டு. தமிழனம் எடுக்கும் பொங்கல் விழா யூகத்தின் காரணமாய், அனுமானத்தின் காரணமாய் கட்டப்பட்ட ஒரு கதை நிகழ்வல்ல. அது ஒரு நம்பிக்கை அல்ல. சங்கராந்தி போல, தீபாவளி போல, கார்த்திகை போல மூடத்தனத்தின் மேல் கட்டப்பட்டஆரிய நிகழ்வுகள் அல்ல. காலம் மாறுதலை, தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தில் காலச் சூழற்சியில் எழுந்த ஒரு மாறுதலை சுட்டும் ஒரு வரலாற்று நிகழ்வு. இனக் குழு சமூகமாக இருந்த தமிழ் இனம், வேளாண் சமூகமாக மாறியத்தின் அடையாள புள்ளி அது.
வேட்டைச் சமூகமாக இருந்த ஓர் இனம், வேளாண் சமூகமாய் நாகரிக உயர்வு பெறுகிறது. தம் உழைப்பை, உணவு தானியத்தை தங்களுக்கு தந்த சூரியனை, வான் மழையை, காற்றை, இயற்கையை வணங்கினார்கள் தமிழர்கள். பிள்ளைகளை போல் பொத்தி பொத்தி வளர்த்த பயிர்கள், தங்கள் தலையால் தானியம் தந்து வணங்குகிற போது, அந்த பயிர்களை கொண்டாடும் அறுவடைக்காலத்தை அவர்கள் வணங்கினார்கள். அந்த அறுவடைக்காலத்தை கொண்டு சேர்த்த, கழுத்து ஓடிய பாடுபட்ட மாடுகளை, அவர்கள் மாட்டு பொங்கல் என்ற நினைவு கொண்டார். அந்த பொங்கலை தங்களுக்கு கொண்டுதந்த உழைப்பாளிகளை, அவர்கள் காணும் பொங்கல் என்று கொண்டாடினார்கள். பொங்கல் திருநாள், உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று மூன்று வகையாக இவைகளை அவர்கள் வகுத்து தங்களுடைய நன்றிகளை தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் மே தினம் போல், மாவீரர் நாள் போல் பொங்கல் விழாவில் மேற்கொள்ள வேண்டிய சங்கர்ப்பங்கள் என உறுதி மொழிகள் உண்டு.
பொங்கல் எனும் பழைய தமிழர் திருநாளில் தமிழர் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள்கள் என்ன?
சித்திரையில் இருக்கும் தமிழா
நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்
கற்பித்ததே அறிவு கோவா 60 ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சித்திரை திருநாளில் தொடங்குகின்ற புத்தாண்டு 60 மாதங்களும் வடமொழிப் பெயர்கள். 60 ஆண்டுகளும் வடமொழிப் பெயர்கள். நாயக்க மன்னர் ஆட்சியில்தான் இதை புழக்கத்துக்கு கொண்டு வந்தார்கள்.
நாம் இங்கே கவனிக்க வேண்டியது இந்த உழவர் திருநாளில், பொங்கல் திருநாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் என்ன. சாதி ஒழித்தல் ஒன்று. தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை மறந்தால் மறுபாதிக் தொலங்குவதில்லையாம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். நாம் இந்த நாளிலே சாதி பேதங்கள் கற்பித்து கொண்டு, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். இன்றைய தமிழகம் இதே நிலையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் நிலைமைகள் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் சாதி பேதங்கள் பாராட்டுவது என்பது ஒவ்வொருவருடை ரத்தத்திற்கும் உள்ளேயும் ஊறி இருக்கிறது. ஆகவே சாதி ஒழித்தல் ஒன்று, தமிழ் வளர்த்தல் மற்றொன்று.
அன்றைக்கு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் போராடினோம். ஆனால் இந்தி ஆதிக்கத்துக்கு பதிலாக ஆங்கில ஆதிக்கம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நாம் அன்னை மொழியாகவே ஏற்றுக் கொண்ட, ஏனென்றால் - எது ஆங்கிலத்தை இது உங்கப்பன் வீட்டு மொழியா? என்று கேட்டார் கவிஞர் காசி ஆனந்தன். ஆனால் அது அப்பனாக இல்லை. நமக்கு அம்மாவாகவே மாறி இருக்கிறது. எனவே நம்முடைய வாழ்வியல் மரபுகளில் எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய தமிழன் இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த பொங்கல் திருநாளில் நாம் சூளுரைக்க வேண்டியவை - போலி போலியான உறுதிமொழிகள், பாவனைகள் செய்தல் அன்றி உண்மையாகவே நாம் உழைக்கும் மக்களுக்காக, உழவர்களுக்காக, பாடுபடும் மக்களுக்காக நாம் உறுதி ஏற்போமேயானால், ஜாதி ஒழித்தலும், தமிழ் வளர்த்தலும், உலகமயமாதலை எதிர்த்தலும் என்ற மூன்று கோட்பாடுகளை முன்வைத்து இந்த பொங்கல் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். உறுதி ஏற்போம்.
பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற பெருமைக்குரியவர்..
இலங்கை திருநாட்டில் எழில் கொஞ்சும் மலையகத்தில் கம்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா டீன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். கலைக்குடும்பத்தின் வாசனையில் பூத்த இவர் இலங்கையின் முதல் தினசரியான “தினதபால்” ஆசிரியர் காலஞ்சென்ற மீரா மொஹியிந்தீன் அவர்களின் பேத்தியாவார்.