Normal view
அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்
அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்
சிவப்பு நிறச் செருப்பு
சிவப்பு நிறச் செருப்பு
உதயசங்கர்
ஒரு ஒற்றைச் செருப்பு. இடது கால் செருப்பு. குப்பைத்தொட்டியில் கிடந்தது. யார் போட்டார்கள் என்று தெரியவில்லை. அதன் வாரும் அறுந்திருந்தது. ரொம்பப் பழைய செருப்பு. குப்பை பொறுக்கும் ஜெயக்கொடி அதைப் பார்த்தாள். மங்கலான சிவப்பு நிறத்தில் ஒரு பக்கமாய் தேய்ந்திருந்தது.
ஜெயக்கொடி அதைக் கையில் எடுத்தாள். இன்னொரு செருப்பு கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். இல்லை. அந்தச் செருப்பு யாருக்கும் பயன்படாது. அவள் கால்களில் செருப்பு இல்லை. செருப்பில்லாமல் பகல் முழுவதும் அலைந்து குப்பை பொறுக்குவாள். அப்போது தான் ஐம்பதோ அறுபதோ கிடைக்கும்.
போனவருடம் பள்ளிக்கூடத்துக்குப் போனாள். ஆனால் அப்பா இறந்தபிறகு அம்மாவுடன் குப்பை பொறுக்க வந்து விட்டாள். நிறம் மங்கிப்போன அந்தச் செருப்பைக் கையில் எடுத்துப் பார்த்தாள். தைத்துப் போடலாமா?
ஆனால் இன்னொரு செருப்பு இல்லையே!
சும்மா காலில் போட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தாள். இடது காலில் செருப்பைப் போட்டாள். என்ன மாயம்!
வலது காலிலும் செருப்பு தோன்றியது. இரண்டு செருப்புகளும் புத்தம் புதிதாக இருந்தன. ஜெயக்கொடியால் நம்ப முடியவில்லை. செருப்பைக்கழட்டினாள். மறுபடியும் பிய்ந்த ஒற்றைச் செருப்பாக மாறிவிட்டது. திரும்பப் போட்டாள்.
இரண்டு சிவப்பு நிற புத்தம் புதிய செருப்புகள் அவளுடைய கால்களில் ஒளிவீசின.
அம்மாவிடம் காட்டினால் எப்படி இருக்கும்? என்ரு ஜெயக்கொடி நினைத்தாள். அடுத்த கணம் ஜெயக்கொடி பறந்து கொண்டிருந்தாள். அம்மா இருந்த இடத்துக்குப் போய் இறங்கினாள்.
அம்மாவுக்கு ஆச்சரியம். அம்மாவிடம் நடந்ததைச் சொன்னாள்.
“ செருப்பு கிடைத்து என்ன பயன்? நீயும் தம்பியும் பள்ளிக்கூடம் போய் படிக்க வேண்டும்.. கல்வி தான் நம்மைக் காப்பாற்றும்.. இந்த மாயாஜாலம் எல்லாம் எதுக்கு? “ என்றாள் அம்மா.
அடுத்த நிமிடமே அரசுப்பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தாள். இப்போது புது யூனிபார்ம் போட்டிருந்தாள். அவளுடைய கால்களில் இருந்த சிவப்பு நிறச்சசெருப்பு யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
ஜெயக்கொடியின் தம்பியும் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்திருந்தான். அவர்கள் வீட்டுக்குப் போகும்போது குடிசை வீடு நல்ல காங்கிரீட் வீடாக மாறியிருந்தது. வீட்டில் டி.வி. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், என்று எல்லாப்பொருட்களும் இருந்தன.
ஜெயக்கொடிக்கும் அவளுடைய தம்பிக்கும் தனித்தனியே எழுத்து மேஜை மேஜை விளக்கு, ஒரு சிறிய நூலகம் என்று எல்லாம் இருந்தது.
ஜெயக்கொடிக்கு மகிழ்ச்சி.
காலையில் எழுந்து வெளியில் வந்தாள். அவளுடனே குப்பை பொறுக்கிய தேவமலர் கிழிந்த உடையுடன் குப்பை பொறுக்கப் போய்க் கொண்டிருந்தாள். முத்து மாமா ஓட்டை சைக்கிளில் பழைய பாத்திர மூட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பையன் செல்வம் மிட்டாய் கேட்டு அழுது கொண்டிருந்தான்.
இதை எல்லாம் பார்த்த ஜெயக்கொடிக்கு வருத்தமாக இருந்தது. அவள் சிவப்பு நிறச் செருப்பிடம் கேட்டாள்,
“ எல்லாவற்றையும் மாற்ற முடியாதா? “
“ இல்லை.. ஜெயக்கொடி.. இந்தச் செருப்பு யார் காலில் பொருந்துகிறதோ அவர்களிடம் மட்டும் தான் மாயாஜாலம் செய்யும்..” என்று பேசியது சிவப்பு நிறச்செருப்பு.
ஒரு கணம் யோசித்தாள் ஜெயக்கொடி.
” எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.. அதற்கு உன்னால் மாயாஜாலம் செய்ய முடியுமா? “
என்று கேட்டாள் சிவப்பு நிறச் செருப்பு ,
..“ சிந்திக்க வேண்டும்.. எல்லாரும் சிந்திக்க வேண்டும்.. ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தன என்று சிந்திக்க வேண்டும்..அதற்குக் கல்வி கற்க வேண்டும் ” என்று சொன்னது.
ஜெயக்கொடி தன்னுடைய காலில் இருந்து சிவப்பு நிறச் செருப்பைக் கழட்டினாள். மறுபடியும் பிய்ந்த செருப்பாக மாறியது. அவளும் பழைய ஜெயக்கொடியாக மாறினாள்.
ஆனால் இப்போது அவளுடைய மனதில் ஒரு உறுதி தோன்றியது. எப்படியாவது பள்ளிக்கூடம் போக வேண்டும். படிக்க வேண்டும். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.
ஜெயக்கொடியை வாழ்த்தி மறைந்தது சிவப்பு நிறச்செருப்பு.
நன்றி - கூட்டெழுத்து
ஒரே ஒரு பட்டாணி சொன்ன கதை
ஒரே ஒரு பட்டாணி சொன்ன கதை
உதயசங்கர்
குண்டுமணிப் பாட்டிக்கு யாரும் இல்லை. தனியாகக் குடிசையில் இருந்தார். குடிசைக்குப் பின்னால் ஒரு பட்டாணிச்செடி வளர்த்தாள். அந்தப் பட்டாணிச்செடி ஒரே ஒரு பூ பூத்தது. அந்த ஒரே ஒரு பூ ஒரே ஒரு காய் காய்த்தது. குண்டுமணிப்பாட்டி அந்த ஒரே ஒரு காயைப் பறித்து உரித்தாள். அதில் ஒரே ஒரு பட்டாணி இருந்தது.
குண்டுமணிப்பாட்டி அந்த ஒரே ஒரு பட்டாணியை ஒரு மண்சட்டியில் போட்டு மூடி வைத்தாள். மறுநாள் அந்த ஒரே ஒரு பட்டாணியைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று நினைத்தாள்.
இரவானதும் அந்த ஒரே ஒரு பட்டாணி தூக்கத்திலிருந்து முழித்தது. எப்போதும் பகலில் தூங்கி இரவில் முழித்து பட்டாணி தேசத்துக்குப் போய் ஆடி ஒடி விளையாடி விட்டு காலையில் திரும்பி வந்து செடியில் தூங்கும். இப்போது முழித்துப் பார்த்தால் ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்தப் பட்டாணிக்குத் தெரிந்து விட்டது. குண்டுமணிப்பாட்டி பறித்து உரித்து வைத்து விட்டாள்.
பட்டாணி தேசத்துக்குப் போக வேண்டும். என்ன செய்ய? அந்த ஒரே ஒரு பட்டாணி,
“ குண்டுமணிப்பாட்டி குண்டுமணிப்பாட்டி.. ”
என்று கூப்பிட்டது. உறங்கிக் கொண்டிருந்த குண்டுமணிப்பாட்டிக்கு யாரோ குசுகுசு என்று பேசுகிற சத்தம் கேட்டது.
களவாணிப்பயல் வந்துட்டானோ? அவர்,
“ யாரு? “ என்று குரல் கொடுத்தார். இப்போது பேச்சுச் சத்தம் கேட்கவில்லை. குண்டுமணிப்பாட்டி எழுந்து விளக்கைப் போட்டார். உள்ளே வெளியே தேடினார். யாரும் இல்லை. மறுபடியும் அந்தச் சத்தம் கேட்டது,
“ குண்டுமணிப்பாட்டி குண்டுமணிப்பாட்டி..”
அப்போது தான் குண்டுமணிப்பாட்டி ஒரே ஒரு பட்டாணியை மூடி வைத்திருந்த கிண்ணத்துக்குள்ளிருந்து சத்தம் வருவதைக் கேட்டாள். மெல்லப் பயந்து கொண்டே, ஒரே ஒரு பட்டாணியை மூடி வத்திருந்த மூடியை எடுத்தாள். அது தான் சரியான நேரம் என்று அந்தப் பட்டாணி துள்ளிக்குதித்தது. உருண்டு ஓடி மண்பானைக்குக் கீழே ஒளிந்து கொண்டது.
அது குண்டுமணிப் பாட்டிக்குத் தெரியாது. கிண்ணத்தில் ஒரே ஒரு பட்டாணி இல்லை. அவர் யோசித்தார். அங்கே தான் வைத்தோமா? என்று சந்தேகம் வந்து விட்டது. கீழே தரையில் அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். கிடைக்கவில்லை.
சரி நாளைக்கும் குழந்தைகள் பட்டினி தான் என்று நினைத்துக் கொண்டே படுத்து விட்டார். அவர் தினமும் அந்த ஊரில் இருக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு உணவு கொடுப்பார். அவரிடம் என்ன இருக்கிறதோ அதைப் பகிர்ந்து கொடுப்பார். அவர் பேசியதைக் கேட்ட ஒரே ஒரு பட்டாணிக்கு வருத்தமாகி விட்டது. அடடா! குழந்தைகளைப் பட்டினி போடலாமா? என்று நினைத்தது.
தரையில் ஒரு குதி குதித்தது. உடனே அந்தக் குடிசையில் சமையலுக்கான காய்கறிகள் நிறைந்து விட்டன.
கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலைங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், முள்ளங்கி, கேரட், என்று காய்கள் எல்லாம் அணிவகுத்து நடந்து வந்தன. குண்டுமணிப்பாட்டி வைத்திருந்த சுளகில் போய் நல்ல பிள்ளைகளாய் உட்கார்ந்து கொண்டன.
ஒரே ஒரு பட்டாணி மெல்ல உருண்டு, பட்டாணி தேசத்துக்குப் போய் விட்டது. ஆடிப்பாடிக் கொண்டாட்டம் முடிந்து காலையில் குண்டுமணிப்பாட்டி வீட்டுக்கு வந்து அதே பானைக்குக் கீழே ஒளிந்து கொண்டது.
காலையில் கண்விழித்துப் பார்த்த குண்டுமணிப்பாட்டிக்கு ஆச்சரியம்.
“ யார் இவ்வளவு காய்கறிகளையும் கொண்டு வந்தது? “ என்று யோசித்தார். ஏதோ ஒரு அதிசயம் நடக்குது. பரவாயில்லை. எப்படியாவது குழந்தைகள் நன்றாகச் சாப்பிட்டால் போதும். சத்தமாக,
“ வெறும் காய் மட்டும் இருந்தால் போதுமா? தானியங்கள் இருந்தால் தானே பொங்கிச் சாப்பிட முடியும்? “
என்று சொல்லி விட்டு உறங்கி விட்டார். அதைக் கேட்ட ஒரே ஒரு பட்டாணி தரையில் மூன்று முறை குதித்தது. உடனே நெல், கேப்பை, கம்பு, குருதவாலி, சாமை, திணை, வரகு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, எல்லாம் வரிசை வரிசையாக வந்து குண்டுமணிப்பாட்டியின் குடிசையில் நிறைந்தன.
காலையில் எழுந்த பாட்டிக்கு அதிசயமாக இருந்தது. அன்று அவர் ஊரில் ஏழைக்குழந்தைகள் அறுசுவை சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பாட்டுக்குச் சிரமப்பட்ட அத்தனை பேரையும் அழைத்து சாப்பாடு போட்டார். அதுமட்டுமல்ல, தானியங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்தார்.
அதன் பிறகு அவர் எப்போது என்ன வேண்டும் என்றாலும் வாய்விட்டுச் சொன்னால் போதும். அது நடந்து விடும். ஏனெனில் ஒரே ஒரு பட்டாணி அந்தப் பானைக்குக் கீழேயே தங்கி விட்டது.
ஆனால் ஒன்று. குண்டுமணிப்பாட்டி அவருக்காக எதையுமே கேட்டதில்லை. அதனால் தான் இத்தனை ஆண்டு காலமானாலும் பட்டாணி அங்கேயே இருக்கிறது. கொஞ்ச நாளில் குண்டுமணிப்பாட்டிக்கும் இதெல்லாம் அந்த ஒரே ஒரு பட்டாணியின் வேலை தான் என்று தெரிந்து விட்டது..
ஒரே ஒரு பட்டாணி இந்தக் கதையைத் தான் பட்டாணி தேசத்தில் சொல்லிக் கொண்டிருந்த போது கேட்டேன். அதைத் தான் உங்களுக்குச் சொன்னேன் குழந்தைகளா!
நான் எப்படிக் கேட்டேன் என்று நினைக்கிறீர்களா?
நானும் ஒரு பட்டாணி. ஹா ஹா ஹா ஹா
நன்றி - வண்ணக்கதிர்
தங்க மூக்கு
தங்க மூக்கு
ஒரு அடர்ந்த காட்டில் அபூர்வமான தங்கமூக்குப் பறவை ஒன்று இருந்தது. பகலில் சாதாரணமாக எல்லாப்பறவைகளைப் போல இருக்கும். இரவானதும் அதன் மூக்கு தங்கமூக்காகி விடும். பகலில் காட்டை விட்டு வெளியில் வராது.
காட்டின் நடுவில் உள்ள உயரமான பெரிய மரத்தின் பொந்தில் வீடு கட்டி வாழ்ந்தது. அந்த வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்தால் அந்தக் காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும். இரவானதும் பறந்து அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்லும். அங்கே யார் வீட்டில் விளக்கு எரிகிறதோ அந்த வீட்டு முற்றத்தில் இறங்கும். தன்னுடைய தலையை ஒரு உலுப்பு உலுப்பும். உடனே தங்க மூக்கிலிருந்து தங்கத்துகள்கள் உதிரும். பிறகு அங்கிருந்து பறந்து விடும்.
மறுநாள் குடிசையில் இருப்பவருக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் தங்கத்துகள்களை விற்று வீட்டுக்கு உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்வார். இப்படி ஏழைகளுக்கு உதவி செய்து வந்தது தங்கமூக்குப் பறவை. இதுவரை யாரும் அதைப் பார்த்தது இல்லை. எப்படி தங்கத்துகள் வந்தது என்று யாருக்கும் தெரியாது.
ஒருநாள் குருசாமி என்பவரது குடிசை வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தது தங்கமூக்குப் பறவை. அவர் வீட்டு முற்றத்தில் சென்று மூக்கை ஆட்டியது. பறந்து விட்டது.
குருசாமிக்கு ஆச்சரியம். அதை விட தங்கத்தை வாங்கிய ஊர்ப்பணக்காரரான நல்லதம்பிக்கு ஆச்சரியம். ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு மட்டும் தங்கம் எப்படி கிடைக்கிறது? அவர் இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான். தங்கம் கிடைத்தவரகளிடம் விசாரித்தான்.
பிறகு ஒரு குடிசை வீட்டைக் கட்டினான். இரவு முழுவதும் விளக்கை எரியவிட்டான். சன்னல் வழியே வெளியே முற்றத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
தங்க மூக்குப் பறவை வந்தது. அந்த இடமே வெளிச்சமாகி விட்டது. ஒளிவீசும் தங்கமூக்கை உலுப்பியது. தங்கத்துகள்கள் கீழே உதிர்ந்தன. பறந்து போய் விட்டது. இதைப் பார்த்த பணக்கார நல்லதம்பிக்குப் பேராசை வந்தது. அந்தப் பறவையைப் பிடித்து கூண்டில் அடைத்து விட்டால் தினம் தினம் தங்கம் கிடைக்கும். நாட்டில் பெரிய பணக்காரராகி விடலாம்.என்று நினைத்தான். அதற்கு அடுத்த நாளும் அதே போல குடிசை வீட்டில் விளக்கை எரிய விட்டான்.
ஆனால் தங்க மூக்குப்பறவை வரவில்லை. அப்போது தான் அவனுக்குப் ஒருமுறை வந்த குடிசைக்கு மறுமுறை தங்கமூக்குப் பறவை வருவதில்லை என்று புரிந்தது.. உடனே வேறு ஒரு குடிசையைக் கட்டினான். குருசாமி நல்லதம்பியிடம்,
“ ஐயா.. நீங்கள் நினைப்பது போல நடக்காது.. அற்புதங்களை நாம் கூண்டில் அடைக்க முடியாது.. தானாகத் தான் நடக்கும்..”
என்று எவ்வளவோ சொன்னான். ஆனால் நல்லதம்பி கேட்கவில்லை.
முற்றத்தில் கண்ணிவலை விரித்தான். அவன் நினைத்தபடியே தங்கமூக்குப் பறவை வலையில் மாட்டிக் கொண்டது. உடனே அதைப் பிடித்து ஒரு கூண்டில் அடைத்து அவனுடைய மாளிகைக்குக் கொண்டு போனான். உறங்கி எழுந்து காலையில் பார்த்தால் அந்தப் பறவையின் மூக்கு சாதாரணமாக இருந்தது. பணக்கார நல்லதம்பிக்குக் குழப்பம்.
என்ன ஆச்சு? என்று யோசித்தான். கூண்டுக்குள் அந்தப் பறவை வெளியில் வரப் போராடியது. கூண்டின் கம்பிகளில் முட்டி மோதியது. அந்தப் பறவையின் மூக்கு உடைந்தது. அது நல்லதம்பியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பிறகு இரவோ பகலோ அந்த அபூர்வப்பறவையின் மூக்கு தங்கமாக மாறவில்லை.
நல்லதம்பி,
“ ச்சீ ச்சீ.. இந்தப் பறவைக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பது வீண்..”
என்று நினைத்தான். பிறகு நல்லதம்பி அந்தப் பறவையை கூண்டிலிருந்து விடுவித்தான்.
கூண்டை விட்டு வெளியேறியதும் அபூர்வப்பறவையின் மூக்கு தங்கமாக மாறியது.
நல்லதம்பிக்கு அப்போது தான் புரிந்தது.
” எங்கே சுதந்திரம் இருக்கிறதோ அங்கே தான் அற்புதங்கள் நடக்கும்..”
அதன்பிறகு அந்த அபூர்வத் தங்கமூக்குப்பறவை கிராமத்துப்பக்கம் திரும்பியே பார்க்கவில்லை.
நன்றி - பொம்மி
சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும்.
சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும்.
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
நல்ல கோடைகாலம். எப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரத்தின் அடியில் குளுமையாக இருந்தது. கதைப்பாட்டி கதைமூட்டையைத் தலைவைத்து மதிய நேரம் உண்ட மயக்கத்தில் படுத்துறங்குவது வழக்கம். அப்போது சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் அங்கே ஆடு புலி ஆட்டம் விளையாடுவார்கள். பனையோலைப்பந்து செய்து தலைக்கு மேல் வீசி விளையாடுவார்கள். சில சமயம் கோலிக்குண்டும் விளையாடுவார்கள்.
ஆலமரத்தடியில் கிராமத்தார்கள் ஒரு பெரிய பானையில் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள். கோடைகாலம் அல்லவா? வழிப்போக்கர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். ஆறும் வற்றிய கடுங்கோடை.
ஒரு நாள், சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது கசுமலா காக்கா பறந்து வந்தது. அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து,
” கா கா கா கா கா “ இடைவிடாமல் கரைந்தது.
நாய்க்குட்டி கேட்டது,
“ என்ன காக்கா கத்திக்கிடேயிருக்கே.. காலில் எறும்பு கடித்து விட்டதா? “
பிறகும் காக்கா,
“ கா கா கா கா “ என்று கரைந்தது. பூனைக்குக் கோபம் வந்து விட்டது.
“ என்ன கசுமலா ஒளிந்து விளையாடுவதற்கு விட மாட்டேன் என்கிறாய்.. வாயை மூடவில்லையென்றால் நான் கடித்து விடுவேன்..”
என்று சொல்லிப் பயமுறுத்தியபடி பாய்ந்தது. கசுமலா அலறிக் கொண்டே பறந்து போய் ஆலமரக்கிளையில்.அமர்ந்து கரைந்தது.
“ கா கா கா கா கா..”
கதைப்பாட்டி விழித்துக்கொண்டாள். எழுந்து உட்கார்ந்து காக்காவிடம்,
“ என்ன கசுமாலா ஏன் கரைகிறாய்? “
என்று கேட்டார். கதைப்பாட்டிக்கு விலங்குகளின் மொழி தெரியும். சின்னு கேட்டாள்,
“ காக்கா என்ன சொல்லுது கதைப்பாட்டி..”
“ காக்காவுக்குத் தண்ணீர் வேண்டுமாம்..” என்று சொன்னார் கதைப்பாட்டி.
சின்னு ஓடிப்போய் தண்ணீர் இருந்த பானையை எட்டிப் பார்த்தாள். பானையில் கொஞ்சூண்டு தண்ணீர் தான் இருந்தது. காக்காவும் பறந்து வந்து எட்டிப் பார்த்தது.
“ கொஞ்சம் தான் தண்ணீர் இருக்கிறது இதை எப்படி காக்கா குடிக்கும்? “ என்று சின்னு கதைப்பாட்டியிடம் சொன்னாள்.
“ முன்னாடி ஒரு காலத்தில் கல்லைப் போட்டுத் தண்ணீர் குடித்தாய் அல்லவா? அதைப் போல குடித்துக்கொள்..”
பூனைக்குட்டி கோபத்துடன் சொன்னது. காக்கா ,” கா கா கா” என்று கரைந்தபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி வந்தது. கல்லை எடுத்து வந்து போட்டு தண்ணீர் மேலே வருவதற்கு நாலைந்து நாட்கள் ஆகிவிடும். அவ்வளவு பெரிய பானை.
அப்போது கதைப்பாட்டி,
“ பானைக்குள் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ குதித்து கழுத்தளவுக்கு முங்கிக் கிடந்தால் தண்ணீர் மேலே வந்து விடும்..” என்று சொன்னார்.
பூனைக்குட்டியின் மீசை பயத்தில் நடுங்கியது.
“ ஐய்யோ.. ஒரு தடவை சுடுதண்ணீரில் விழுந்த பூனைக்குட்டி நான்..இனி எந்தத் தண்ணீரிலும் குதிக்க மாட்டேன்..”
என்று சொல்லியது. நாய்க்குட்டி துணிச்சலுடன் ஓடி வந்து ஸ்டைலாகப் பானைக்குள் குதித்து கழுத்தளவுக்கு முங்கியது. தண்ணீர் பானையின் மேலே வந்தது.
காக்கா வந்து உட்கார்ந்து ஆசைதீரத் தண்ணீர் குடித்தது. காக்காவின் தாகம் தீர்ந்தது. காக்கா அங்கிருந்து போனபிறகு நாய்க்குட்டி தண்ணீரில் இருந்து வெளியில் வந்தது. அப்படிக் குதித்தபோது பானை உடைந்து விட்டது.
“ பரவாயில்லை.... தாகமெடுத்தவருக்குத் தண்ணீர் கொடுக்க முடிந்ததில்லையா.. அது பெரிய புண்ணியம்..” என்று கதைப் பாட்டி சொன்னார்.
நன்றி - பறயாம் நமுக்கு கதகள்
தொலைந்து போன நரி (சிறார் கதை) – தீபா சிந்தன்
பொம்மலாட்டம் – சிறார் கதை
நேற்று(நவம்பர் 08) தினமலர் பட்டம் மாணவர் இதழில் வெளியான என் சிறார் கதை.
பொம்மலாட்டம்
லதா பரபரப்பாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது தனது ஜியோமெட்ரி உபகரணங்கள் வைத்திருக்கும் சிறு பெட்டியைத் திறந்து சரி பார்த்துக் கொண்டாள். அவள் தன் பள்ளிப் பையைத் திறந்து திறந்து மூடுவதைக் கண்ட அவள் அம்மா செல்வி, சற்று கோபமானார்.
“தினமும் முந்தின நாள் நைட்டே ஸ்கூல் பேக்ல எல்லாம் பாத்து எடுத்து வச்சுருன்னு சொன்னா கேக்கறயா? காலைலதான் எடுத்து வைப்பியா? ஸ்கூலுக்கு லேட் ஆகுது, வேன் வந்துரும் சீக்கிரமா கிளம்பு” என்றார்.
பதற்றமான லதா “இதோ நான் கிளம்பிட்டேன்மா. நீங்க ரிப்பன்ல கங்கு போட்டு விட்டுட்டா போதும்.” என்றபடியே அம்மாவிடம் சென்றாள்.
அப்போதும் அவள் பார்வை அவ்வப்போது பையைத் தொட்டுத் தொட்டு மீண்டது. செல்வி அவளது ரிப்பனை அழகாய் முடிந்துவிட்டதும், பள்ளிப் பையை முதுகில் ஏற்றிக் கொண்டு, உணவுக் கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள். அம்மாவுக்கு கையசைத்துவிட்டு, பள்ளி வேனில் சென்று ஏறிக் கொண்டாள்.
பள்ளிக்குச் சென்றதும் முதல் வேலையாக தன் ஜியோமெட்ரி பாக்சைத் திறந்து அதிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கீழே வைத்தாள். அதன் அடியில் பெட்டியின் அளவுக்கே ஒரு வழவழப்பான காகிதம் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காகிதத்தைத் தூக்கியதும், அடியில் முழுதாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து வேறு எங்கு வைக்கலாம் என சிறிது நேரம் யோசித்தாள்.
அதற்குள்ளாக காலைப் பிரார்த்தனை மணி அடிக்கவும், மீண்டும் பணத்தை அங்கேயே வைத்து, அதே போல பெட்டியை அடுக்கி மூடினாள். அதை அப்படியே பைக்குள் தள்ளி, ஜிப்பை மூடி விட்டு, மற்ற மாணவியருடன் இணைந்து மைதானத்திற்குச் சென்றாள்.
தன் வகுப்புக்கான வரிசையில் சென்று நின்ற லதா, சரியாக தனக்கு முன்னால் ரெஜினா நிற்பதைக் கண்டாள். எல்லாம் சென்ற வார வெள்ளிக்கிழமை அன்று ரெஜினாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்றதில் ஆரம்பித்தது. கேக் வெட்டிய பிறகு, லதாவையும், கதீராவையும் மட்டும் தன் அறைக்கு அழைத்துப் போனாள்.
“டொட்டடொய்ங்…” என்று ஒலியெழுப்பியபடி அவள் தனது அலமாரியில் இருந்து எடுத்துக் காட்டியது ஒரு அழகிய டெடி பியர் கரடி பொம்மை.
“எங்க மாமா எனக்காக வாங்கித் தந்த பிறந்த நாள் பரிசு, எப்படி இருக்கு?”
கண்கள் விரிய அந்த பொம்மையைப் பார்த்து இருவரும் “சூப்பரா இருக்குடி. எஞ்சாய்” என்று சொல்லி பூரித்தார்கள். அந்த நேரத்தில் கலப்படமில்லா மகிழ்ச்சியுடம் சிரித்து விளையாடினாலும் தனக்கும் அதே போல ஒரு பொம்மை வேண்டும் என்ற எண்ணத்தை லதாவால் தவிர்க்கவே முடியவில்லை. மெல்லமாக அதைத் தொட்டுப் பார்த்தாள். பஞ்சுப் பொதி போல மிருதுவாக இருந்தது. அதன் விலை ஆயிரம் ரூபாயைத் தொடும் என்றாள் ரெஜினா.
நிச்சயமாக அம்மாவோ அப்பாவோ இவ்வளவு விலையுள்ள பொம்மையை விளையாட வாங்கிக் கொடுக்க மாட்டார்கள் என்று லதாவுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் கேட்டு, திட்டு வாங்க வேண்டாம் என்று ஆசையை அடக்கிக் கொண்டு வளைய வந்தாள்.
****
நேற்று மாலை சலவை இயந்திரத்தில் துணிகளை பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். குறிப்பாக அப்பாவின் சட்டை, பேண்ட் போன்றவற்றின் பாக்கெட்டுகளை நன்றாகப் பார்த்துவிட வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தார். ரூபாய் நோட்டுக்களோ, முக்கியமான குறிப்பெழுதிய தாள்களோ ஏதேனும் தென்பட்டால் அம்மாவிடம் தனியாக எடுத்துக் கொடுக்க வேண்டும்.
அப்படித்தான் நேற்றும் அந்த கருநீல நிற முழுக்கைச் சட்டையின் பையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் சுருளாக இருப்பதைப் பார்த்தாள். எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு மீதித் துணிகளைப் போட்டு, இயந்திரத்தை ஓட விட்டாள். அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுத்துவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தாள்.
அந்த நேரம் பார்த்து அம்மா கடைக்குச் சென்றிருந்ததார். தனியே இருந்த லதாவின் மனத்தின் ஒரு மூலையில் ஒரு வெளிச்சம் தோன்றியது. இந்தப் பணத்தை நாமே எடுத்துக் கொண்டு, ரெஜினாவுடையதைப் போல அழகான டெடி பேர் பொம்மை ஒன்று வாங்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றி, நொடிக்கு நொடி வளர்ந்தது. அப்படித்தான் வீட்டுப்பாடம் செய்வதற்காக எடுத்துப் பரத்தியிருந்த புத்தகங்களுக்கு நடுவில் இருந்த ஜியோமெட்ரி பெட்டியின் அடியில் அந்த ரூபாய் நோட்டுக்கள் தஞ்சமடைந்தன.
***********
மதிய இடைவேளையின் போது அம்மா கட்டித் தந்திருந்த உணவை எடுத்து உண்ணும்போது மனம் உறுத்தியது. அம்மா, தினமும் அதிகாலையில் எழுந்து, ஒவ்வொரு வேளைக்குமாகப் பார்த்துப் பார்த்து சமைத்துத் தருகிறார். அப்பாவும் சமையலுக்கான உதவிகளைச் செய்வார். பிறகு அவருக்கும் தனக்குமான டப்பாக்களில் உணவுகளை அடைத்து வைப்பது என காலையில் பரபரப்பாக இருப்பார். லதாவுக்கான வேலை என்பது, காலையில் எழுந்து படிப்பதும், குளியல், சாப்பாடு என தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வதும் மட்டும்தான். மாலையில்தான் அவள் கொஞ்சம் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பாள்.
தனக்காகவே என அம்மாவும் அப்பாவும் செய்யும் வேலைகளின் பட்டியல் ஒவ்வொன்றாய்த் தோன்றி மறைந்தது. அப்பா அம்மாவிடம் கேட்டால், இப்போது இல்லாவிட்டாலும் காசு சேர்ந்த பிறகாவது வாங்கித் தருவார்கள். அதை விடுத்து அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து வந்தது தவறு என்று எண்ணினாள். அதை அப்பா எதற்காக வைத்திருந்தாரோ என்ற குற்ற உணர்வும் அவள் மனதில் எழுந்தது.
தான் செய்த செயல், அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. மதிய உணவை வேண்டா வெறுப்பாக விழுங்கி வைத்தாள்.
இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு பொம்மையை வாங்கினாலும், அதனை பகிரங்கமாக வீட்டில் வைத்து விளையாட முடியாது. கதீராவையோ, மற்றவர்களையோ அழைத்துப் போய் பெருமையாகக் காட்ட முடியாது. அப்படியென்றால் அந்த பொம்மையின் பொருள்தான் என்ன? தான் செய்த ஒரு தவறின் சாட்சியம் என்பது தவிர அப்பொம்மை தனக்கு எந்த விதத்திலும் பயன் தர முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டாள் லதா.
மாலை பள்ளி வேனில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் லதா. முதல் வேலையாக அம்மாவிடம் சென்று பணம் எடுத்ததைச் சொல்லிவிட வேண்டும். என்ன இருந்தாலும் தான் அம்மா, அப்பாவின் செல்லம் இல்லையா? தங்கள் செல்லங்கள் தெரியாமல் செய்த தவறுகளை பொறுத்துக் கொள்வார்கள்தானே அம்மா, அப்பாக்கள்? அவள் மனம் அமைதி அடைந்தது.
+++++++++++

எலியும் கல்யாணிப்பசுவும்
எலியும் கல்யாணிப்பசுவும்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.
கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!
நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம், நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி கடித்தது.
கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி எழுந்து எலியின் பின்னால் ஓடியது.
எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில் போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப் பார்த்தது.
இந்த சத்தம் கேட்டு சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது. பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.
பசு மறுபடியும் சுவரில் முட்டியது. பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி கிடைத்தது. வேதனையில் கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது.
இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து விட்டது.
நன்றி - புக் டே
சூசனா செய்த கலாட்டா
சூசனா செய்த கலாட்டா
உதயசங்கர்
ஒரு தடவை சூசனா ஆட்டுக்குட்டி சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியோருடன் கள்ளன்போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. பூனை தான் போலீஸ். பூனை போலீஸ் பிடிக்காதிருக்கவேண்டும் என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைக்கு ஓடினார்கள்.
சூசனா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள். நாய்க்குட்டி பாய்ந்து சென்று கதைப்பாட்டியின் பின்னால் போய் படுத்து உறங்கி விட்டது. அது கதைப்பாட்டிக்குத் தெரியாது. சூசனா பதட்டமாய் ஓடி ஓடி ஆற்றங்கரைக்கே சென்று விட்டது.
அப்போது தான் நீலகண்டன் குள்ளநரியும், ஒரு செந்நாயும், பல்லைக்காட்டிக் கொண்டு சூசனாவை நோக்கி வருவதைப் பார்த்தது. சூசனா ஒரே ஓட்டம். செந்நாயும் குள்ளநரியும் பின்னால் பாய்ந்து சூசனாவைப் பிடித்துக் கொண்டன.
“ சூசன்னா... எங்கள் அருமை பூங்குயிலே! உன்னுடைய நண்பன் தான் நான், நீலகண்டன் குள்ளநரி, என்னுடன் கூட இருப்பது பெரிய அறிவாளி் செந்நாய்ஜி. ஜங்கில் புக் ஜங்கில் புக் என்ற சினிமாவைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்தச் சினிமாவின் கதை, கதாநாயகன் வேடம் எல்லாம் செந்நாய்ஜி தான் செய்தது கண்ணு, சூசன்னா..”
சூசனா திரும்பிப் பார்த்தாள். செந்நாயின் கண்களில் தெரிந்த ஆசையைப் பார்த்ததும் அவளுடைய அனைத்துச் சந்தேகங்களும் தீர்ந்து விட்டன..அது ஒரு குதி குதித்து ஓடியது. முதலில் தெரிந்த தேவாலயத்துக்குள் நுழைந்து விட்டது. அங்கே திருப்பலிபூசை நடந்து கொண்டிருந்தது. பாதிரியார் ஓடிவந்த சூசனாவை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார்.
தேவலாயத்தின் முற்றத்தில் நின்று நீலகண்டன் குள்ளநரி சத்தமாய் கத்தியது.
“ இறங்கி வந்துரு சூசனா.. தேவாலயத்தில் உன்னைப் பலி கொடுத்து விடுவார்கள்.. நான் சொல்லலைன்னு நெனைக்காதே..”
“ செந்நாய் கொல்வதைக் காட்டிலும் பலியாடாவது பரவாயில்லை..” என்று சூசனா சொன்னது.
செந்நாய்க்குக் கோபம் வந்தது. ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட கைவசப்படுத்த முடியாத முட்டாள்... குள்ளநரியால் என்ன பயன்? கோபத்தைத் தீர்க்க நீலகண்டன் குள்ளநரியின் காதில் ஒரு கடி கடித்தது.
நீலகண்டன் குள்ளநரி கூப்பாடு போட்டுக் கொண்டு ஓடியது.
நன்றி - புக் டே
கோழியும் குள்ளநரியும்
கோழியும் குள்ளநரியும்
உதயசங்கர்
ஒருநாள் காலையில் நீலகண்டன் குள்ளநரி பதுங்கிப் பதுங்கி மெகர்பாவின் கூட்டுக்குப் பக்கத்தில் சென்றது. பிறகு சாதாரணமாகச் சொல்லியது,
“ மெகர்பா.. உன்னுடன் சேர்ந்து விளையாட வேண்டுமென்று எனக்கு தீராத ஆசை உணடு.. ஆனால் அந்த பாழாய்ப்போன நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒத்துக்கொள்ளவில்லை. கதைப்பாட்டி என்ற அந்த வயதான கிழவியும் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் பொறாமை. நீ கூட்டைத் திறந்து வெளியில் வா..”
மெகர்பா கோழி பயந்து போய்,
“ க்கொ க்கொ க்கோ க்கொ..” என்று அழத்தொடங்கியது. அப்போது குள்ளநரி, கூட்டின் கதவைத் தட்டியபடியே,
“ஆகா! எத்தனை இனிமையான குரல் உனக்கு மெகர்பா..நீ வெளியில் வா.. நான் உன்னுடைய நண்பன் தானே.. உன்னை காட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்கிறேன்.. இந்த உலகத்தையும் மேல் உலகத்தையும் காட்டுகிறேன்..”
மெகர்பா சத்தமாக, “ க்கொ க்கொ க்கொ க்கொ க்கொ “ என்று அழத் தொடங்கியது.
அழுகையைக் கேட்டு ஓடிப்போன சின்னு குள்ளநரியின் வாலைப் பிடித்து இழுத்தாள். நாய்க்குட்டி பாய்ந்து ஒரு கடி கடித்தது. பூனைக்குட்டி வாலைக்கடித்தபடி தொங்கியது.
நீலகண்டன் குள்ளநரி வேதனை தாங்காமல் சத்தமாய் ஊளையிட்டபடி ஓடிவிட்டது. கிராமத்துமக்கள் எல்லாரும் கற்களை எறிந்துக் கொண்டும், கம்புகளை வீசிக்கொண்டும் பின்னாலேயே ஓடினார்கள். ஓடிய நீலகண்டன் குள்ளநரி ஆற்றின் கரைக்குச் சென்று சேர்ந்தது.
வேறுவழியில்லாமல் ஆற்றில் குதித்து நீந்தி மறுகரையில் கரையேறியது.
நன்றி - புக் டே
நீலகண்டன் குள்ளநரியின் கதை
நீலகண்டன் குள்ளநரியின் கதை
உதயசங்கர்
ஒரு நாள் நீலகண்டன் குள்ளநரி நொண்டி நொண்டிக் கதைப்பாட்டியும், நண்பர்களும் கூடியிருக்கிற ஆலமரத்தடிக்கு பணிவுடன் தலையைக் குனிந்தபடி வந்தது. அதைப் பார்த்தால் சாதாரணக் குள்ளநரியைப் போல தெரியவில்லை. உடல் முழுவதும் நீலநிறத்தில் இருந்தது. குள்ளநரியைப் பார்த்தது மெகர்பா கோழி கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். குள்ளநரி மெகர்பா கோழியின் மீதே கண் வைத்திருந்தது.
கோழி என்ன ஒரு அழகு!அதைப் பொரித்துச் சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்!
எப்படியாவது கதைப்பாட்டியையும் நண்பர்களையும் ஏமாற்றி இன்று மெகர்பா கோழியைக் கொண்டு போய் விடணும். குள்ளநரியின் மனதில் அதுதான் திட்டம்.
குள்ளநரியைப் பார்த்ததும் நாய்க்குட்டி கேட்டது,
“ குள்ளநரியே குள்ளநரியே.. இங்கே என்ன வேலை உனக்கு? “
“ கறுமுறுன்னுச் சாப்பிட்டேன்.. குர்ர்ர் குர்ர்ர்னு தூங்கணும்..” என்று குள்ளநரி சொன்னது.
பூனைக்குட்டி கேட்டது,
“ என்ன குள்ளநரியண்ணே.. ஒரே நீலநிறத்தில் இருக்கிறே? “
குள்ளநரி,
“ நேற்று இரவு காட்டில் வனதேவன் என்னை நீலநிற ஒளியில் முக்கியெடுத்தார். தெய்வத்துக்கு மிகவும் பிடித்த நிறம் நீலநிறம் தான் என்று சொன்னார்..”
அதைக் கேட்டுக் கொண்டே வாயைத் திறந்தபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது கல்யாணிப்பசு.
“ அதனால் நான் இன்று முதல் துறவறம் பூண்டு விட்டேன்..மாமிசத்தைத் தொடக்கூட மாட்டேன்.. ஒரு உயிரையும் மனதாலோ, வார்த்தையாலோ கூட துன்புறுத்த மாட்டேன்..”
என்றது குள்ளநரி.
“ உண்மையாகவா குள்ளநரியே!” என்று நாய்க்குட்டி கேட்டது.
“ மெகர்பா கோழி மீது சத்தியம்.. வருகிற வழியில் என்னுடைய காலில் ஒரு முள்ளு குத்திவிட்டது.. என்னை யாராவது காட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவேண்டும்..”
என்று குள்ளநரி பரிதாபமாய்க் கேட்டது.
“ நான் வர்ரேன்..” என்று கல்யாணிப்பசு எழுந்தது.
“ ஐய்யய்யோ, பால் கறப்பதற்கு ஆல்பெர்ட் சார் வரும்போது நீ இல்லையென்றால் பெரிய குழப்பமாகிவிடும்..குழந்தைகள் பால் குடிக்கவேண்டாமா?”
என்று குள்ளநரி கேட்டது.
“ நான் வர்ரேன் “ என்று பூனைக்குட்டி சொன்னது.
“ ஐய்யய்யோ.. ஆற்றில் நீந்தணுமே.. உன்னால முடியாது பூனைச்செல்லம்..”
என்று குள்ளநரி சொன்னது.
“ அப்படியென்றால் நான் வருகிறேன்..” என்று நாய்க்குட்டி சொன்னது.
“ ஐய்யய்யோ.. உன்னைப் பார்த்தால் செந்நாய்க்கூட்டம் பாய்ந்து வந்துவிடும்.. வேண்டாம் கண்ணா..”
என்று சொல்லிய குள்ளநரி ஆசையோடு மெகர்பாவைப் பார்த்தது. மெகர்பா மெல்ல எழுந்து நின்று,
“ அப்படி என்றால் நான் வர்ரேன்..”
என்றது.
குள்ளநரி மகிழ்ச்சியுடன்,
“ அது போதும்.. உன்னை ஆற்றின் அக்கரைக்கு என் முதுகில் வைத்து நீந்துகிறேன்.. கொஞ்சநாள் அங்கே தங்கியிருந்த பிறகு நானே உன்னைக் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்..”
என்று சொன்னது.
இவ்வளவும் நடக்கும்போது கதைப்பாட்டி சொன்னார்,
“ கொஞ்சம் பொறுங்கள்.. செல்லங்களா.. கசுமலா காக்கா வருகிறது. அதுகிட்டேயும் கேட்கலாம்..”
கசுமலா காக்கா மூச்சிரைத்தபடியே,
“ சின்னுவின் அம்மா நீலம் முக்குவதற்காக கலக்கி வைத்திருந்த தொட்டியில் குளிச்சிட்டு வந்திருக்கு இந்தக் குள்ளநரி..” என்று சொன்னது.
கதைப்பாட்டி கையிலிருந்த கம்பினால் குள்ளநரிக்கு ஒரு அடி கொடுத்தாள். குள்ளநரியின் காலில் அடி பட்டது. தாங்கமுடியாத வலியினால் ஊளையிட்டுக் கொண்டே குள்ளநரி ஒரே ஓட்டம்.
அப்ப்டி ஓடும்போதே மெகர்பா கோழியைக் கவ்விக் கொண்டு போய் விடலாம் என்று ஒரு பாய்ச்சல் பாய்ந்தது குள்ளநரி.
அப்போதும் கிடைத்தது ஒரு அடி, கதைப்பாட்டியிடமிருந்து..
நன்றி - புக் டே
மெகர்பா கோழியின் கதை
மெகர்பா கோழியின் கதை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு முறை மெகர்பா கோழி கதைப்பாட்டியிடம் பிடிவாதம் பிடித்தது. ஊர் சுற்றிப் பார்க்கப் போக வேண்டும் என்று சொல்லியது.
“ மற்ற பறவைகளைப் போல என்னால் பறக்கமுடியாது.. அதனால் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கல்யாணிப்பசுவும் கதைப்பாட்டியும் கூட வரவேண்டும்.. நான் எப்போதும் முட்டைகள் கொடுக்கிறேன்..இல்லையா? எனக்காக இதைச் செய்யக்கூடாதா? “
சின்னு சொன்னாள்,
“ ஐய்யோ நான் ஸ்கூலுக்குப் போகணும்..”
பூனைக்குட்டி சொன்னது,
” நான் வந்தால் ஆல்பெர்ட்டினுடைய சட்டையை எலி கரும்பித் தின்று விடுமே..” என்று பூனைக்குட்டி சொன்னது.
“ அப்படியென்றால் ஆல்பெர்ட்டும் கூட வரட்டும்..” என்றது கோழி.
“ ஐய்யோ ஆடுகளைக் நீலகண்டன் குள்ளநரி கொன்று விடுமே? “ என்றான் ஆல்பெர்ட்.
கல்யாணிப்பசு சொன்னது,
“ நான் வந்தால் இந்தக் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு யார் பால் கொடுப்பார்கள்? தண்ணீர் சேர்த்தாலும் கூட யாரும் வேண்டாம் என்று சொல்வதில்லை..”
அதைக் கேட்ட கோழி, தரையில் விழுந்து புரண்டது.
“ க்கொக்கோ கொக்க்கோ “ என்று கூப்பாடு போட்டது.
கடைசியாக கதைப்பாட்டி,
“ நாய்க்குட்டியை அழைத்துக் கொண்டு போ “ என்று சொன்னார்.
அப்படி மெகர்பா கோழியும் நாய்க்குட்டியும் பயணம் புறப்பட்டார்கள்.
பல ஊர்களைச் சுற்றிப் பார்த்தார்கள். சில ஊர்களில் மக்கள் சும்மா சுற்றித் திரிகிற கோழியைச் சூப்பு வைத்துக் குடிக்கலாம் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
நாய்க்குட்டி அவர்களை விரட்டியடித்தது. இரவானதும் மெகர்பா உயரமான மரக்கொம்பில் உட்கார்ந்து கொள்ளும்.. நாய்க்குட்டி மரத்தினடியில் உள்ள பொந்தில் படுத்திருக்கும்.
ஒரு நாள் கோழியைப் பார்த்த ஒரு குள்ளநரி, இரவில் வந்து சொன்னது,
“ ஏ. அழகியே உன்னுடன் பேச வேண்டும்..என்று ஆசைப்படுகிறேன்.. கீழே வாயேன்..”
அப்போது மெகர்பா சொன்னது,
“ குள்ளநரி அண்ணே.. நீ மேலே ஏறி வா..கீழே என்னுடைய பாதுகாவலன் இருக்கிறான்.. தட்டி எழுப்பினால் மேலே வருவதற்கு வழி சொல்லித்தருவான்..”
குள்ளநரியின் வாயில் எச்சில் ஊறியது. ஆகா! எப்பேர்ப்பட்ட பேச்சு! என்ன ஒரு அழகு! அதன் இறைச்சி எவ்வளவு ருசியாக இருக்கும். ஆவல் அதிகமாகி கீழே படுத்துக் கிடந்த நாய்க்குட்டியை எழுப்பியது.
“ ஏய்.. காவல்காரா! மேலே போவதற்கு வழியைக் காட்டு..”
நாய்க்குட்டி ஒரே பாய்ச்சலில் குள்ளநரியின் வாலைக் கடித்துத் துண்டாக்கியது.
அவ்வளவு தான். குள்ளநரி ஓடியே போய் விட்டது.
அதோடு மெகர்பா கோழியின் ஊர் சுற்றும் ஆசையும் முடிந்தது. காலை விடிந்ததும் நாய்க்குட்டியுடன் கதைப்பாட்டியிடம் வந்து சேர்ந்தது.
நன்றி - புக் டே
உளுந்து வடையின் ஓட்டம்
1 உளுந்து வடையின் ஓட்டம்
உதயசங்கர்
மங்கலம் என்ற ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் வாழ்ந்து வந்தார்கள். தினம் தினம் வேலை செய்தால் தான் சாப்பிடமுடியும். ஒருநாள் தாத்தாவுக்கு உளுந்துவடை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. உடனே தாத்தா பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது. உளுந்து இருக்கிறதா? தெரியவில்லையே. இருக்கும் டப்பாக்களில் தேடினார். ஒரு டப்பாவில் ஒரு கைப்பிடி அளவு உளுந்து கிடந்தது. இரண்டு வடை சுடலாம். உளுந்தை தண்ணீரில் ஊற வைத்தார் பாட்டி. தாத்தா அதை ஆட்டுரலில் ஆட்டிக் கொடுத்தார்.
ஆட்டுரலிலிருந்து உளுந்து மாவை வழித்து எடுத்து ஒரு சட்டியில் போட்டார் தாத்தா.
“ . இரண்டு வடை தான் வரும்.. ஒரு வடை உமக்கு ஒரு வடை எனக்கு.. என்ன தெரிஞ்சுதா..” என்று கத்தினாள் பாட்டி. ஏன்னா தாத்தாவுக்கு காது கொஞ்சம் மந்தம்.
பிறகு பாட்டி வெங்காயம் பச்சைமிளாகாய் கறிவேப்பிலை எல்லாம் பொடிப்பொடித் துண்டுகளாய் நறுக்கி மாவில் போட்டுப் பிசைந்தார். அடுப்பில் வாணலியை வைத்தார். கொஞ்சூண்டு இருந்த கடலை எண்ணெயை ஊற்றினார்.
மாவை எடுத்து உள்ளங்கையில் தட்டி நடுவில் அழகாக ஒரு ஓட்டையைப் போட்டார். அதை எண்ணெய்ச்சட்டியில் போட்டு வேக வைத்தார். அவர் நினைத்த மாதிரி இரண்டு வடைக்குத்தான் மாவு இருந்தது. முதல் வடையை எடுத்து தட்டில் வைத்து விட்டு இரண்டாவது வடையைப் போட்டார். போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது தட்டிலிருந்த வடையைக் காணோம். சுற்றிச் சுற்றிப்பார்த்தார்.
” .. இங்கன இருந்த வடையைப் பார்த்தீரா? “ என்று கேட்டார்.
தாத்தா பதில் சொல்லவில்லை.
வாயைத் திறந்தால் வாயில் வடை இருப்பது தெரிந்துவிடுமே. அப்படியே அமுக்கரான் மாதிரி உட்கார்ந்து மெல்ல வடையை அசை போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாட்டிக்குத் தெரிந்து விட்டது.
“ கேட்டீரா.. இந்த வடை எனக்கு.உம்மரு கணக்கு முடிஞ்சுது .”
என்று பாட்டி கத்தினாள். தாத்தாவுக்குக் கேட்டதோ கேட்கவில்லையோ. அவர் மேலே கூரையைப் பார்த்தபடி அசை போட்டார். பாட்டிக்கு ஒரு சந்தேகம். ’ இந்த வடையையும் தாத்தா எடுத்துட்டார்னா.. என்ன செய்றது. வடையை எடுத்து தட்டில போடாம முந்தியில் முடிஞ்சுக்குவோம்னு’ நினைத்தாள்.
வடை வெந்ததும் அப்படியே கரண்டியில் எடுத்து முந்தியில் போட்டாள். அட, போடும்போது வடை தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த வடை அப்படியே சக்கரம் மாதிரி ஓடியது. பாட்டி எழுந்து வடையின் பின்னால் ஓடினாள். பாட்டி ஓடுவதைப் பார்த்த தாத்தாவும் வடையைப் பிடிக்க ஓடினார்.
வடை ஓடி வீட்டு வாசலைத் தாண்டி விட்டது. அப்போது பாட்டி,
“ ஒழுங்கா நில்லு இல்லைனா..அவ்வளதான்..” என்று மிரட்டினாள். வடை ஓடியபடியே,
“ ஓட்டைவடை நான்
உளுந்து வடை நான்
உலகம் சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை நான்..
குட்டிக்கரணம் போட்டாலும்
குதித்து குதித்து வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப் பிடிக்க முடியாது..”
என்று பாடியது. பாட்டி ஓடினாள். பின்னால் தாத்தா ஓடினார். ஆனால் ரொம்பதூரம் ஓட முடியவில்லை. அப்படியே நின்று விட்டார்கள்.
காடுமேடு எல்லாம் ஏறி ஓடியது உளுந்துவடை.
கல் மண் பார்க்காமல் உருண்டோடியது. எதிரே ஒரு காகம் பறந்து வந்தது. உளுந்துவடையைப் பார்த்ததும் ஆவலுடன் கொத்தி எடுக்க பாய்ந்து வந்தது. காகம் அருகில் வரும்வரை காத்திருந்து டக்கென்று ஒரு புதருக்குள் ஓடி விட்டது உளுந்து வடை. புதருக்குள்ளேயிருந்து,
“ ஓட்டைவடை நான்
உளுந்து வடை நான்
உலகம் சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை நான்
பறந்து பறந்து வந்தாலும்
பாடிப் பாடி வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப் பிடிக்கமுடியாது “
என்று உளுந்துவடை பாடியது. காகம் ஏமாந்து திரும்பிச்சென்றது. புதருக்குள்ளிருந்து பாய்ந்து சென்றது உளுந்து வடை. புதரில் படுத்திருந்த குள்ள நரி பின்னாலேயே பிடிக்க வந்தது. குள்ளநரிக்குப் பழைய பஞ்சதந்திரக்கதை ஞாபகம் வந்தது.
அப்போதே வாயில் எச்சில் ஊறியது.
உளுந்து வடை உருண்டு மரத்தின் மீது ஏறிக் கொண்டது.
“ ஓட்டை வடை நான்
உளுந்து வடை நான்
உலகம் சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை நான்
பாய்ந்து பாய்ந்து வந்தாலும்
பாட்டுப்பாடச் சொன்னாலும்
பிடிக்கமுடியாது
என்னைப் பிடிக்கமுடியாது “
என்று பாடியது.
கீழே இருந்த குள்ளநரி என்னென்னவோ நல்ல வார்த்தைகள் சொல்லிப்பார்த்தது. வடை அசையவில்லை.
அப்போது பெரிய காற்று அடித்தது. காற்றில் கிளைகள் வேகமாக ஆடின. வடை அப்படியே பறந்து போய் ஒரு ஓலைக்குடிசைக்கு முன்னால் விழுந்தது. அங்கே படுத்திருந்த நாய் எழுந்து மோப்பம் பிடித்து கவ்விக்கொள்ள ஓடி வந்தது.
உடனே உளுந்துவடை எழுந்து மறுபடியும் ஓடியது. பின்னாலேயே நாய் துரத்தியது.
” ஓட்டைவடை நான்
உளுந்து வடை நான்
உலகம் சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை நான்
துரத்தித் துரத்தி வந்தாலும்
நாலுகாலில் வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப் பிடிக்கமுடியாது ”
என்று பாடியபடியே ஓடியது.
ஓட்டம்னா ஓட்டம். அப்படி ஒரு ஓட்டம். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஓடுவோம் என்று நினைத்தது உளுந்துவடை. அப்படியே எதிரில் தெரிந்த வீட்டுக்குள் போய் தட்டில் படுத்து உறங்கியது.
உறக்கத்திலேயே,
“ . ஓட்டைவடை நான்
உளுந்து வடை நான்
உலகம் சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை நான்
ஓடி ஓடி விரட்டினாலும்
பறந்து பறந்து வந்தாலும்
குதித்து குதித்து வந்தாலும்
துரத்தித் துரத்தி வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப் பிடிக்கமுடியாது ”
பாடியது.
எங்கே போச்சு? எப்படி வந்தது? என்று ஆச்சரியப்பட்ட பாட்டி வடையை பிய்த்து வாயில் போட்டார் பாட்டி.
” என்னைப் பிடிக்க முடியாது..” பாடிய படியே பாட்டியின் வயிற்றுக்குள் பத்திரமாகப் போனது உளுந்துவடை.
நன்றி - விஞ்ஞானத்துளிர் அறிவியல் மாத இதழ்
.
குட்டத்தி புறாவின் கதை
குட்டத்தி புறாவின் கதை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு தடவை சின்னுவின் வீட்டில் குட்டத்தி என்ற பெயர் கொண்ட ஒரு புறா வந்து முட்டையிட்டது. எத்தனை முட்டைகள் இட்டன என்று யோசிக்கிறீர்களா? பத்து முட்டைகள். சின்னு முட்டைகளை எடுத்து வீட்டுக்குள் கொண்டு போய் வைத்து விட்டாள். புறா எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. அதை நினைத்து கவலைப்பட்ட புறா போகும்போது கல்யாணிப்ப்பசு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
“ எங்கே போகிறாய் குட்டத்திப்புறாவே! “ என்று கல்யாணிப்பசு கேட்டது.
“ நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. சின்னு அவற்றை வீட்டுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டாள்.. கேட்டாலும் கெஞ்சினாலும் கொடுக்கவில்லை... சின்னுவின் வீட்டு முற்றத்தில் நிற்கும் வாழையை முட்டித் தள்ளி விடு பசுவே..” என்று குட்டத்திப்புறா கேட்டது.
“ அய்யோ என்னால் முடியாது..” என்று கல்யாணிப்பசு தலையாட்டியது. அப்போது ஆடுமேய்க்கும் ஆல்பெர்ட் வந்தான்.
“ அட யாரு இது.. குட்டத்தி புறா தானே.. எங்கே போகிறாய்? “
என்று கேட்டான்.
“ நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. சின்னு அவற்றை வீட்டுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டாள்.. கேட்டாலும் கெஞ்சினாலும் கொடுக்கவில்லை... சின்னுவின் வீட்டு முற்றத்தில் நிற்கும் வாழையை முட்டித் தள்ளி விடாத பசுவை அடிக்க வேண்டும் ஆல்பெர்ட்..”
என்று கேட்டது குட்டத்திப்புறா.
“ அய்யய்யோ எனக்கு முடியாது.. “ என்று சொல்லி ஆல்பெர்ட் ஓடிப்போய் விட்டான். அதன் பிறகு குட்டத்திப்புறா எலியைப் பார்த்தது.
“ எங்கே போகிறாய் குட்டத்திப்புறா..? “
என்று எலி கேட்டது.
“ ஏ ஏ நான் அப்படி ஆள் இல்லை..” என்று எலி சொன்னது. அதன்பிறகு பூனையைச் சந்தித்தது.
“ நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. சின்னு அவற்றை எடுத்துக் கொண்டு போய் விட்டாள்... கேட்டாலும் கெஞ்சினாலும் கொடுக்கவில்லை... சின்னுவின் முற்றத்தில் இருக்கும் வாழையை முட்டித் தள்ளி விடாத கல்யாணிப்பசுவை அடிக்காத ஆல்பெர்ட்டின் சட்டையை கரும்பிச் சாப்பிடாத எலியைப் பிடிக்கலாமா பூனையே! ..”
“ பழைய காலத்தில் என்றால் செய்து விடுவேன்.. இப்போது கதைப்பாட்டியின் முன்னால் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறேன்.. எதுவும் செய்ய முடியாது..”
என்று பூனை சொன்னது. அதன்பிறகு புறா நாய்க்குட்டியைச் சந்தித்தது.
“ நம்முடைய குட்டத்திப்புறா எங்கே போகிறது? ஏன் முகம் வாடிப்போய் இருக்கிறது? “ என்று நாய்க்குட்டி கேட்டது.
“ நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. எல்லா முட்டைகளையும் சின்னு எடுத்துக் கொண்டாள். சின்னுவின் வீட்டு முற்றத்தில் இருக்கும் வாழையை முட்டித் தள்ளாத கல்யாணிப்பசுவை அடிக்காத ஆல்பெர்ட்டின் சட்டையைக் கரும்பித் தின்காத எலியைப் பிடிக்காத பூனையைக் கடிப்பாயா நாய்க்குட்டி? “
என்று குட்டத்திப்புறா கேட்டது.
“ ஏய் பெரிய வெட்கக்கேடு.. நான் இப்போது பெரிய வீட்டில் இருப்பவனாக்கும்.. நான் இதைச் செய்யமாட்டேன்..” என்று கழுத்தை உயர்த்திக் கொண்டு சொன்னது.
குட்டத்திப்புறா சோகத்துடன் போகும்போது ஒரு எறும்பினைப் பார்த்தது. புறா எறும்பிடம் சொன்னது,
“ நான் இட்ட பத்து முட்டைகளை ஒளித்து வைத்த சின்னுவின் வீட்டு முற்றத்தில் வாழை மரத்தை முட்டித்தள்ளாத கல்யாணிப்பசுவை அடிக்காத ஆல்பெர்ட்டின் சட்டையைக் கரும்பித் தின்காத எலியைப் பிடிக்காத பூனையைக் கடிக்காத நாய்க்குட்ட்டியின் வாலில் கடிப்பாயா எறும்பே..”
உடனே எறும்பு சொன்னது,
“ அதுக்கென்ன! குட்டத்தியக்கா.. நான் செய்றேன்..”
எறும்பு நாய்க்குட்டியின் வாலில் கடித்தது. நாய்க்குட்டி பூனையைக் கடித்தது. பூனை எலியைப் பிடிக்க ஓடியது. எலி ஆல்பெர்ட் சட்டையைக் கரும்பித் தின்றது. ஆல்பெர்ட் கல்யாணிப்பசுவுக்கு அடி கொடுத்தான். கல்யாணிப்பசு சின்னு வீட்டு முற்றத்திலிருந்த வாழைமரத்தை முட்டித் தள்ளியது.
நன்றி - புக் டே
மனிதனின் இயல்பு
மனிதனின் இயல்பு
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியின் கிராமத்தில் ஆல்பெர்ட் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஆல்பெர்ட்டுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஞாயிறு தோறும் குடும்பத்தோடு சர்ச்சுக்கு போகும்போது நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சர்ச்சின் முற்றம் வரை போகும்.
ஒரு நாள் ஆல்பெர்ட் ஓடி வந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு மலைப்பாம்பும் விரட்டிக் கொண்டு வந்தது. மலைப்பாம்பைப் பார்த்தவுடன் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பாய்ந்து கதைப்பாட்டியின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள். நய்க்குட்டியின் வாலில் தொங்கியபடி பூனைக்குட்டியும் ஓடியது.
நாய்க்குட்டி,
“ க்க்க்க்ர்ர்ர்ர் “ என்று உறுமியது. கதைப்பாட்டிக்குப் பயந்து பெரிய சண்டை எதுவும் வரவில்லை. ஆல்பெர்ட் சொன்னான்,
“ கிராமத்து மக்கள் தீ வைத்துக் கொளுத்திய போது, பாம்பைக் காப்பாற்றியது நான் தான் கதைப்பாட்டி.. இப்போது இது என்னையே விழுங்க வருகிறது... இது சரிதானா? சொல்லுங்கள்..”
மலைப்பாம்பு சொன்னது,
“ பசித்ததனால் தான் கதைப்பாட்டி.. வயதான காலத்தில் கவலைப்பட வேண்டாம்.. இந்த ஆலமரத்திடமும், அந்த ஆற்றிடமும், கல்யாணிப்பசுவிடமும் கேட்டால் போதும்.. மனிதர்கள் மனிதர்களுக்குச் சாதகமாகவே சொல்வார்கள்.. அதனால் கதைப்பாட்டி நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம்..”
ஆல்பெர்ட் ஆலமரத்திடம் கேட்டான். கம்பீரமான காற்றின் சத்தத்தில் ஆலமரம் தீர்ப்பு சொன்னது,
“ மனிதன் தானே. அப்படித்தான் செய்வான்.. மனிதனை விழுங்கினால் போதாது.. கடித்து சவைத்து சாப்பிட வேண்டும்.. சோர்வைப் போக்கும் நிழல் தரும் மரத்தையே வெட்டி எறிகிற கெட்டவன்..”
“ பாலையெல்லாம் ஒட்டக்கறந்து அதில் தண்ணீர் கலந்து விற்கிறவர்கள் மனிதர்கள்.. விழுங்கிவிடு.. மனித வர்க்கத்தை அப்படியே விழுங்கணும்.. தெரிஞ்சுதா? “
ஆற்றிடம் கேட்டபோது, ஆறு மகிழ்ச்சியுடன் கடகடவெனச் சிரித்து,
“ தாகத்துக்குக் குடிக்கும் தண்ணீரில் அத்தனை குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி மோசமாக்குவது மனிதர்கள் தான்.. நன்றியில்லாதவர்கள்.. விழுங்கிவிடு.. பாம்பே..”
என்று சொன்னது.
அப்போதுஆல்பெர்ட்டின் மனைவி கதறி அழுது கொண்டே ஓடி வந்தார். அவர் பாம்பிடம்,
“ கணவரில்லாமல் நான் எப்படி வாழமுடியும்? என்னை முதலில் விழுங்கி விடு..”
என்று சொன்னார்.
பாம்புக்குப் பரிதாபம் தோன்றியது. என்ன ஆனாலும் பெண்ணல்லவா? பாவம். பாம்பு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தது. அதைச் சொல்லி ஒரு துளி மண்ணை வாரிப்போட்டால் யாராக இருந்தாலும் இறந்து விடுவார்கள். இரண்டாவது மந்திரத்தைச் சொல்லி மண்ணைப் போட்டால் அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள்.
ஆல்பெர்ட்டின் மனைவி மந்திரம் சொல்லி மண்ணையள்ளி பாம்பின் மீது போட்டார்.
பாம்பு செத்துப் போய் விட்டது.
கதைப்பாட்டி இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் மூக்கில் விரலை வைத்தபடி அப்படியே இருந்தார்.
நன்றி - பறயாம் நமுக்கு கதகள்
புதிய வானம்! புதிய பறவைகள்!
புதிய வானம்! புதிய பறவைகள்!
உதயசங்கர்
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் ஒரு புதிய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் நுழைந்திருக்கிறது. சிறார் இலக்கியத்தின் வகைமைகளான பெரியவர்கள் சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களே சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதுகிற இலக்கியம் என்று பொதுவாகப் பிரிக்கலாம். அதில் குழந்தைகளே குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியிருக்கும் மிகச் சிறப்பான காலமிது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. குழந்தைகள் ஒரு புதிய வானத்தை வரைந்து புதிய சிறகுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சமூகம் உச்சி முகர்ந்து நம்முடைய குழந்தைகளைப் பாராட்ட வேண்டும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை குழந்தைகளுக்கென்று முகிழ் என்ற அமைப்பை உருவாக்கி அதில் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தைகளே பங்கு பெறும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகள் இப்போது ஜில் ஜங் ஜக் என்ற கதைத்தொகுப்புடன் தங்கள் சிறகுகளை விரித்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் கற்பனைக்கு நம்முடைய நடைமுறை வாழ்வின் தர்க்கம் கிடையாது. கவித்துவத்தர்க்கம் மட்டுமே உண்டு. கவித்துவத் தர்க்கமென்றால் மண்ணும் மரமும் டி வி. யும் பிரிட்ஜும் நாயும் நரியும் குருவியும் கோழியும் பேசும். பாடும். ஆடும். ஓடும். காரணகாரியம் கிடையாது. கதை எப்போது தொடங்கி எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும் முடியலாம்.
சுயமான கருத்துகளோ சிந்தனைகளோ உருவாகாத குழந்தைப்பருவத்தில் அவர்கள் எப்படி கதை எழுதுவார்கள்? பெரியவர்கள் எழுதுவதைப் போல ஒரு கருத்தை வலியுறுத்தியா? அறநெறியைச் சொல்லியா? நீதி நன்னெறிக்கதைகளையா? அவர்கள் வாசித்ததை, கண்டதை, கேட்டதை, கற்பனையை, அந்தக் கணநேரத்தில் தோன்றுவதைக் கதையாக்குகிறார்கள். கதை என்று கூட அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அப்படி வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சியடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி தான் அவர்களுடைய கலையின் சாராம்சம். அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கதைகளுக்குள் கருத்தைத் திணிக்கவோ தேடவோ கூடாது. ஆனால் நுட்பமாக வாசிப்பவர்களுக்கு குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் யதார்த்த உலகத்தைத் தங்கள் கதைகளில் பிரதிபலிப்பதைக் கண்டுணர முடியும்.
அப்படித்தான் ” ஜில் ஜங் ஜக் “ தொகுப்பிலுள்ள 22 கதைகளிலும் குழந்தைகலின் தங்களுடைய படைப்பூக்கத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் சுதந்திரமான அவர்களுடைய புனைவுத்திறனின் தெறிப்புகளாக மின்னுகின்றன.
இளநிலாவின் மரப்பாச்சி கதையில் பகையை மன்னிக்கச் சொல்லும் மரப்பாச்சிப்பொம்மை வருகிறது. பட்டாசு வெடிக்காத தீபாவளியைக் கொண்டாடச் சொல்கிறார் தன்னுடைய கதையான ராமு கொண்டாடிய தீபாவளி கதையில் தீரன். ஜடை பறக்குமா? பறக்குமென்கிறார் சுபவர்ஷனி. அதே போல சிவப்புக்கரடி பொம்மை பேசும்போது என்ன நடக்கிறதென்றும் சொல்கிறார் சுபவர்ஷனி.
குட்டைநிலா, பந்தாடு, பந்தாடு. சமையலறையில் மாயப்பெட்டி, தொட்டால் சிவக்கும் என்று நான்கு கதைகளையும் நான்குவிதமாக எழுதிப்பார்த்திருக்கிறார் பிரணவ். நிவேதிதாவின் நண்பர்களான சிட்டுக்குருவியும் எழிலும் கதை நட்பைச் சொல்கிறது. அபியும் புலியும் கதையில் அபி புலியிடமிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்றும் ஒரு மரம் ஒரு நபர் கதையில் மரத்தின் முக்கியத்துவதை எளிய நிகழ்வின் வழியே சொல்கிறார் அக்ஷலீணா.
பூங்காவில் நிலா என்றவுடன் நாம் நினைப்பதற்கு மாறாக யார் அந்த நிலா என்று சொல்கிறார் ரித்விக். அத்துடன் உண்டிகோல் சிறுவன் கதையில் எல்லாவற்றையும் பகிர்ந்து சாப்பிட வேண்டுமென்றும் சொல்கிறார் ரித்விக். விங்குகளைக் காப்பாற்றும் சகோதரர்களைப் பற்றி குணதீப் எழுதுகிறார். ஜில் ஜங் ஜக் கதையில் மூன்று நண்பர்களைப்பற்றியும் எதையும் செய்யாமல் சாப்பிடுவதற்கு ஆசைப்படும் நண்பனைப் பற்றியும் சொல்கிறார் கீர்த்தனா. வானவில்லின் கதையில் எப்படி வானவில்லுக்கு இத்தனை நிறங்கள் ஒன்றாய் சேர்ந்தன என்று சொல்லும் கீர்த்தனா. டியானும் கியானும் கதையில் அவர்களுடைய நண்பனான பூபாவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடினார்கள் என்றும் எழுதியிருக்கிறார். யானைக்குச் சர்ப்ரைஸ் பார்ட்டி கதையில் நண்பர்கள் சேர்ந்து எப்படி யானைக்குச் சர்ப்ரைஸ் கொடுத்தார்களென்றும் உருளைக்கிழங்கும் முருங்கைக்காயும் கதையில் காய்கறிகள் மட்டுமே வாழும் உலகத்தைப் பற்ரியும் எழுதியிருக்கிறார் கீர்த்தனா. சாய் பாக்கியவாவின் சிறு காட்டு நண்பர்கள் கதையில், யானையின் அட்டகாசத்தை சிறுவிலங்குகள் எப்படி அடக்குகின்றன என்று எழுதியிருக்கிறார். ரோஸ் டீ கதையில் அனு எப்படி ரோஸ் டீ போட்டாள் என்றும் டீக்கடையே வைத்து நடத்துமளவுக்கு எப்படி மாற்றம் நிகழ்ந்ததென்றும் சொல்கிறார்.
எல்லாக்கதைகளிலும் உள்ள மிக முக்கியமான அம்சமாகக் கருதுவது, குழந்தைமையின் கற்பனை சிறகுகள் விரித்து ஒரு புதிய இதுவரை யாரும் யோசித்திராத ஒரு உலகத்தை நமக்குக் காட்டுகின்றன. அந்த உலகத்தைக் கண்டு களிப்பதும் முக்கியம். அதை விட முக்கியம் குழந்தைகளின் படைப்பூக்கத்தின் உயிர்த்துடிப்புகளை உணர்வது என்று நினைக்கிறேன். இந்தக் கதைகள் குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் நம்முடைய அறிவை இன்னும் விரிவடையச் செய்து மேலும் உயர்வாக்கும் என்று நம்புகிறேன்.
. கதைகளை எழுதியுள்ள அத்தனை குழந்தைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
கதைகளுக்கு மிகச்சிறப்பாகப் படங்களை வரைந்திருக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்!
புதிய வானத்தில் புதிய பறவைகளின் பயணம் தொடங்கிவிட்டது. இன்னும் இன்னும் உயரத்திற்குச் செல்லட்டும்.!
( ஜில் ஜங் ஜக் நூலுக்கு எழுதிய முன்னுரை )
காக்காவும் கொக்கும்
காக்காவும் கொக்கும்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,
“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா.. இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”
கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை. கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி ‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘ பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக் கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.
காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது. பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம் மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச் சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச் சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,
“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை? “
“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.
அதைக் கேட்ட காக்காவின் கண்கள் கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள்.
நன்றி - புக் டே
பறயாம் நமுக்கு கதகள்