Normal view

Received before yesterday

கதை நிஜமான கதை

20 December 2024 at 14:28

அது ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு குட்டி நாடு.  ஏராளமான கனிமவளம் கொண்டது. அங்கு ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி.  அவருக்கு எதிரணியில் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் மற்றொரு வருங்கால சர்வாதிகாரி.  அவரை ஆட்சியில் அமரவைத்து, கனிமவளங்களை மொத்தமாகச் சுரண்டத் திட்டமிடும் ஒரு பன்னாட்டு ஏகபோகநிறுவனம். தானே ஒரு ராணுவப் புரட்சியை ஏற்படுத்தி, தனது ஆளை ஆட்சிக்குக் கொண்டுவந்தால், காலாகாலத்தில் சுரண்டலை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் அந்த நிறுவனம் ஒரு கூலி ராணுவப் படையை (mercenary army) ஏற்பாடு செய்கிறது.  கோடிக்கணக்கில் செலவு செய்து புரட்சியும் நடக்கிறது.  கூலிராணுவப்படையின் தளபதி கடைசியில்[i] இரு சர்வாதிகாரிகளையும் கொன்றுவிட்டு, சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஒரு மிதவாத மக்கள் தலைவரை அதிபராக்கிவிடுகிறார்  .கைக்காசைச் செலவழித்த நிறுவனம் செய்வதறியாது திகைத்துநிற்க சுபம் !

      மேற்படி 10-20 வரிக்கதை மிக நுட்பமாக எழுதப்பட்ட, பிரும்மாண்டமான நாவலான ‘தி டாக்ஸ் ஆஃப் வார் ( the dogs of war) என்ற நாவலின் மிக மோசமான சுருக்கம். தி டாக்ஸ் ஆஃப் வார் என்பது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய வரி. இந்த நாவலை எழுதியவர் தனது 27ஆவது வயதில் ‘டே ஆஃப் தி ஜகால்’ என்ற நாவலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்ற ஃபிரடெரிக் ஃபார்சித்.  டே ஆஃப் தி ஜகால் எட்வர்ட் ஃபாக்சின் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் திரைப்படமாகவும் வந்து சரித்திரம் படைத்தது. மேற்படி தி டாக்ஸ் ஆஃப் வாரும்கூட ஓரளவு மூலக்கதை சிதையாது, திடைப்படமாக வந்தது.  கூலி ராணுவப்படைத் தளபதியாக கிறிஸ்டோபர் வாக்கன் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருந்தார்.

      ஃபார்சித் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் அங்குலம் அங்குலமாக நுணுக்கமாக எழுதுபவர்.  டே ஆஃப் தி ஜகாலில் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்முறை பற்றி விவரிப்பது அற்புதம்.  1970களில் அவர் சொல்லும் சட்ட ஓட்டைகளை பல வருடங்கள் ஆராய்ந்து 2003ல் தான் பிரிட்டிஷ் அரசு சரிசெய்தது.  அதுபோலவே ராஜீவ்காந்தி படுகொலையில் பயன்படுத்தப்பட்ட மனிதவெடிகுண்டு முறை அவரது தி நெகொஷியேட்டர் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.

      இந்த நாவலை எழுத ஃபிரடெரிக் ஃபார்சித் உலகெங்கும் உள்ள தலைசிறந்த கூலிராணுவப்படை தளபதிகளைச் சந்தித்து, தாம் ஒரு நாட்டில் ராணுவப் புரட்சிக்கு ஏற்பாடு செய்துவருவதாகக் கூறி, பேச்சுவார்த்தைகள் நடத்தி, விஷயங்களைச் சேகரித்தார். கூலிராணுவத்தினரைத் தொடர்ந்து கண்காணித்து வரும் சி.ஐ.ஏ, கே.ஜி.பி, மொஸாத், எம்.ஐ.6 போன்ற உளவு நிறுவனங்கள் ஃபார்சித்தை தீவிரவாதி பட்டியலில் வைத்துக் கண்காணித்தன.  தி டாக்ஸ் ஆஃப் வார் நாவல் வெளிவந்ததும், சே! இதற்குத்தானா என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. கூலிராணுவப்படையை உருவாக்கி ஒரு நாட்டில் திடீர்புரட்சியை (coup)  ஏற்படுத்துவது எப்படி ( நம் ஊர் சமையல் குறிப்பு புத்தகம் போல!) என்பதை விளக்கமாக விவரிக்கும் ஹவ் டு ஸ்டேஜ் அ மிலிட்டரி கூப் என்ற நூலின் ஆசிரியர் கென் கானர் தி டாக்ஸ் ஆஃப் வார் நாவலைத்தான் கூலிராணுவப்படைகளுக்கு பாடநூலாகப் பரிந்துரை செய்கிறார்!

      அதன்பிறகு ஃபார்சித் இரண்டாம் உலகப்போர்க்குற்ற நீதிமன்றத்திலிருந்து தப்பி தலைமறைவாக வாழும் நாஜிதளபதிகள் பற்றிய நாவலான ‘தி ஒடிஸ்ஸா ஃபைல்’, வளைகுடா போர் பற்றிய நாவலான ஃபிஸ்ட் ஆஃப் காட், சோவியத் யூனியன் சிதறுண்ட பின், அங்கு எழுந்த மாஃபியா அட்டகாசம் பற்றிய தி ஐகான், பனிப்போர் கால நாவலான தி டெவில்ஸ் ஆல்டர்னேடிவ் (பனிப்போர் காலத்திய நாவல்களில் அமெரிக்காவுடனான ஒரு சிக்கலில் ரஷ்யா ஜெயிப்பது மாதிரி முடியும் ஒரே நாவல் இதுதான்) என்று பல நாவல்கள் எழுதி ஏராளமான ரசிகர்களின் ஆதர்ச எழுத்தாளரானார்.  நம் கட்டுரை அதைப் பற்றியல்ல.

      எத்தனை நாவல் வந்தாலும் டாக்ஸ் ஆஃப் வாரின் தாக்கம் குறையவில்லை. ஒரு படைப்பாளனின் கூற்று பொய்யாகலாமா? கம்பனின் கூற்றை மெய்ப்பிக்க சரஸ்வதிதேவி கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாய் வந்த கதை போல,  தி டாக்ஸ் ஆஃப் வாரை உண்மையாக்க ஒரு பெரிய இடத்துப் பிள்ளை முடிவு செய்தார்.

      நாவலில் கூறப்படும் ஆப்பிரிக்கநாடு என்று விமர்சகர்கள் சந்தேகிக்கும் ஈக்வடோரியல் கயானா உண்மையாகவே கனிமவளம் நிறைந்த நாடு.  மேற்சொன்ன பெரிய இடத்துப் பிள்ளையின் பன்னாட்டு நிறுவனம் அதை விழுங்க ஆசை கொண்டது.  அந்தநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் ஒரு டுபாக்கூர் கம்பெனி அங்கு துவங்கப் பட்டது  கம்பெனிக்கு வந்துசெல்லும் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டன.  கூலிராணுவப்படை ஏற்பாடுகள் முடிந்தன.  திடீரென இந்தப்படை அந்தநாட்டில் நுழைந்து, அதிபரைக் கொன்று, கம்பெனிக்கு வேண்டப்பட்ட பொம்மையை அதிபர் நாற்காலியில் உட்கார்த்திவிட்டால், நாடே கம்பெனி கையில் ! கம்பெனி நாள் நட்சத்திரம் பார்த்துக் குறித்த சுபயோக சுபதினத்தில் 64 கூலிராணுவப்படையினர் ஜிம்பாப்வேயின் ஹாராரே விமானநிலையத்தில் விமானத்தில் ஏறியபோதே, எப்படியோ விஷயம் கசிந்து, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, ஈக்வடோரியல் கயானா ஆகிய மூன்று நாடுகளின் உளவு மற்றும் கமாண்டோ கூட்டுப்படை 64 பேரையும் சிறு சிராய்ப்புகூட இல்லாமல் கைது செய்தது.

கூலிப்படையினருக்கு தலா ஆயிரம் டாலர்கள்தான் கூலி பேசியிருந்தார்களாம்.  வேலை முடிந்து புதுஅதிபர் வந்ததும் அவரது மெய்க்காவலாளர் பதவி – மாதம் 10000 டாலர் சம்பளம் என்று ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறார்கள்.  கடைசியில் எல்லோரும் சிறையில்.  விசாரணையில் கூலிப்படையின் தளபதி சைமன் மான் தங்களை வேலைக்கு அமர்த்தியவர் பெயரைச் சொன்னதும் ஆப்ரிக்கக்கண்டமே அதிர்ந்தது.  தென் ஆப்ரிக்காவில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரையும் கைது செய்து இழுத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். வழக்கின் முடிவில் கூலிப்படையின் தலைவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை. மற்றவர்களுக்கு ஓராண்டு சிறைவாசம்.  ஏற்பாடு செய்தவரின் அம்மா உலகளாவிய செல்வாக்கு உடையவர். அவர் தலையீட்டால் பிள்ளைக்கு 30 லட்சம் ராண்ட் அபராதமும், மூன்றாண்டு சிறைத்தண்டனையும்.  அதுவும் அவரது நன்னடத்தைக்காக (!) தள்ளுபடி செய்யப்பட்டது.

      தி டாக்ஸ் ஆஃப் வாரைப் படித்து, அதே நாட்டில், அதே போல ராணுவப்புரட்சி ஏற்படுத்தி, நாட்டையே பிடிக்க நினைத்த அந்தப் பெரிய இடத்துப் பிள்ளை ஸர். மார்க் தாட்சர்.  அவரது அம்மா இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் திருமதி. மார்க்கரெட் தாட்சர். இதன் முழுவிபரங்கள் பிபிசி செய்தித்தொகுப்பாக வந்தன.  இன்றும் நாம் இணையத்தில் இதன் விபரங்களைக் காணலாம். நூறுசத லாபம் என்றால் ஏகாதிபத்தியம் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று மார்க்ஸ் கூறியது எத்தனை சத்தியமான வார்த்தைகள் !

      நம் ஊர் அரசியல்வாதிகள், வாரிசுகள், தொழிலதிபர்கள் இது போன்ற ஆங்கில நாவல்களெல்லாம் அதிகம் படிக்காமல் இருப்பதும் ஒருவகையில் நன்மைதான் போலும் !    


பின்னி​ணைப்பு

இந்த மார்க் தாட்சரின் ​ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கம்​பெனியுல் முதலீடு ​செய்தவர்களில் முக்கியமானவர் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளர்.  அவ​ரைப் பற்றிய தனிக் கட்டு​ரை ஒன்று பின்னால் இருக்கிறது.

ப​டைப்புகளின் பட்டியல்

The Afghan  9/11 தாக்குதலுக்குப் பின் நடக்கும் க​தை. க​தையில் பின்​லேடனும் ஒரு பாத்திரமாக வருவார்.

Avenger ​  ​போஸ்னியப் ​போர் பற்றிய க​தை. ​போஸ்னியப் ​போ​ரையும், வியட்நாம் ​போ​ரையும் பற்றி மாற்றி மாற்றிச் ​சொல்லிச் ​செல்லும் இந்தக் க​தை 2001 ​செப்டம்பர் 10ம் ​தேதி அற்புதமாக முடியும்.

The Cobra

The Day of the Jackal – தி​ரைப்படமாக வந்தது.  இந்த நாவலுக்காக அவர் எட்கர் ஆலன் ​போ பரி​சைப் ​பெற்றார். இக்க​தையின் ​மோசமான தழுவலான ஆகஸ்ட் 1 என்ற ம​​லையாளத் தி​ரைப்படம் ​வெற்றிகரமாக ஓடியது.  மம்முட்டியும், ​கேப்டன் ராஜூவும் பிரமாதமாக நடித்த படம் இது.  பின்னர் , இதன் அடுத்த பாகமாக ஆகஸ்ட் 15 என்ற படம் கூட வந்ததாக ஞாபகம்.

The Deceiver   பனிப் ​போ​​ரை மிகமிக நுட்பமாகக் காட்டிய க​தை.

The Dogs of War  தி​​ரைப்படமாக வந்தது.

The Fist of God  சதாம் உ​சேன் முக்கிய பாத்திரமாக வரும் இந்த நாவல்       வ​​ளைகுடா ​போர் பற்றிய அரு​மையான பதிவு.  எனக்குத் ​தெரிந்து ஒ​ரே பதிவு என்றுகூடச் ​சொல்லலாம். 

The Fourth Protocol   தி​ரைப்படமாக வந்தது

Icon

The Kill List

The Negotiator

The Odessa File   தி​ரைப்படமாக வந்தது. நாஜி ​ஜெர்மனி பற்றி, உலகப் ​போர் முடிந்தபின் பல முக்கியமான நாஜி அதிகாரிகள் எப்படி ​போர்க்குற்ற விசாரண​கைளிலிருந்து தப்பி, ​வேறு ​பெயர் அ​டையாளங்க​ளோடு, ​வெவ்​வேறு இடங்களில் ​செல்வாக்காக வாழ்ந்தார்கள் என்ப​தைச் ​சொல்லும் க​தை.

The Phantom of Manhattan

The Shepherd, பிரிட்டிஷ் ​போர் விமானி​யைக் கதாநாயகனாக ​வைத்து எழுதிய குறுநாவல். பிரடரிக் ஃபார்சித் ​போர் விமானியாகப் பணியாற்றியவர். நா​மே ​போர் விமானத்​தை ஓட்டுவது ​போன்ற அனுபவத்​தைத் தருவார் – சுஜாதாவின் பதினான்கு நாட்கள் நாவ​லைப் ​போல.

இ​வை தவிர no comebacks, the avenger என இரு சிறுக​தைத் ​தொகுப்புகளும் உண்டு.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

சோதனைக்குழாயில் டைனாசோர் !

4 October 2024 at 12:16

இணையத்தில் சமீபத்தில் கிடைத்த ஒரு ரத்தினம் The science of Michael Crichton என்ற மின்னூல்.  அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பத்துபேர் சேர்ந்து, மைக்கேல் கிரைட்டனின் விஞ்ஞான நாவல்களில் எத்தனை சதம்  விஞ்ஞானம் எத்தனை சதம் கதை என்று மிகக் கஷ்டப்பட்டு ஆய்வு செய்து எழுதிய நூல். பத்து கட்டுரைகள். 184 பக்கங்கள்.

      நூலைப்படித்தும், என்னையறியாமல் அப்படியே அவரது ஜுராசிக் பார்க் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.  ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் படமாக வந்து இன்றும் ஏதேனும் ஒரு சானலில்   நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே ஜுராசிக் பார்க்தான்.  ஒரு காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞான நாவலாக என்னைக் கவர்ந்த அதே ஜுராசிக் பார்க்.     அதில் விஞ்ஞானம் மிகவும் குறைவு,கதைதான் அதிகம் என்று 27 ஆண்டுகள் எம்பிரியானிக் ஸ்டெம் செல் துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் உள்ள டாக்டர் சான்டி பெக்கர் 40 பக்கத்திற்கு கட்டுரை எழுதிய பிறகு, கிரைட்டனின் தீவிர ரசிகன் என்றபோதிலும், அதை ஏற்பதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஆனாலும் மறுவாசிப்பில் மைக்கேல் கிரைட்டன் என்னை வேறுவிதமாக ஈர்த்தார்.

      6’9” உயர உருவத்தின் காரணமாக இருந்த கூச்சசுபாவத்தால் யாரிடமும் பேசிப் பழகாத தனிமை விரும்பியான கிரைட்டன் இயல்பாகவே ஒரு படைப்புமனம் கொண்டவராக இருந்தார்.  தொழிலால் மருத்துவர் என்றாலும் ஒருகட்டத்தில் முழுநேர எழுத்தாளரானார்.  திரைப்பட இயக்குனரானார்.  சக மருத்துவரான, சகஎழுத்தாளரான ராபின் குக் எழுதிய கோமா என்ற மருத்துவ திகில் படத்தை இயக்கினார்.  19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் கொள்ளையை வைத்து, தான் எழுதிய தி கிரேட் டிரைன் ராபரி என்ற நாவலை அதே பெயரில் படமாக எடுத்தார். இதில் சீன் கானரி நடித்திருக்கிறார். ஜுராசிக் பார்க்கில் கிழவர் ஹாமாண்ட் பாத்திரத்தில் அற்புதமாக  நடித்தவர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார் கிரைட்டன்.  அதிலும் வெற்றிதான்.  1994ல் அமெரிக்காவின் டாப் திரைப்படமாக ஜுராசிக் பார்க்கும், டாப் தொலைக்காட்சி தொடராக ஈ.ஆர் தொடரும், டாப் நாவலாக டிஸ்குளோசர் நாவலும் வெகுகாலத்திற்கு இருந்தன.  மூன்றுமே கிரைட்டனின் படைப்புகள்.  இவரைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் இந்த சாதனையை இன்றுவரை செய்யவில்லை. ஆனாலும் அடிப்படையில் மருத்துவரான அவரது மனம் விஞ்ஞானப் புனைகதைகளில்தான் இருந்தது.

அவர் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஆய்வுகளை,  மாற்றங்களை வைத்துத் தன் நாவல்களைப் புனைந்தார்.  அவர் தமது நாவல்களில் கூறும் அறிவியல் ஆய்வுகளுக்கு, போக்குகளுக்குத் தரும் ஆதாரங்கள் அசைக்க முடியாதவையாக இருக்கும். செயற்கையாக டைனாசோர்களை உருவாக்கும் ஜுராசிக் பார்க்காக இருக்கட்டும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளின் சில அடிப்படை அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் லாஸ்ட் வேர்ல்ட்டாக் இருக்கட்டும், ( இதைத்தான் ஸ்பீல்பெர்க் டைனாசோரின் தாய்ப்பாசத்தைக் காட்டும் ஆங்கில அன்னை ஓர் ஆலயமாகக் கெடுத்தார்),காலயந்திரப் பயணத்தையும், 13ம் நூற்றாண்டு ஐரோப்பா வரலாற்றையும் அற்புதமாக இணைத்து எழுதிய ‘டைம்லைன்’, மனிதர்களைப் போல் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த மனிதக்குரங்கினை மையமாக வைத்து எழுதிய காங்கோ ( இது இதே பெயரில் திரைப்படமாகவும் வந்தது. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு சானலில் அது ஓடிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது இன்று மனிதக்குரங்குக​ளை ​​வைத்து வந்துள்ள பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் தி​ரைப்பட வரி​சைக்கு இந்த காங்​கோதான் முன்​னோடி) புவி வெப்பமயம் என்பதே ஒரு ஏகாதிபத்திய சதிதான் என்ற கருத்தில் ஏகப்பட்ட வ​​ரைபடங்கள், புள்ளிவிபரங்க​ளோடு எழுதப்பட்டு ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளான தி ஸ்டேட் ஆஃப் ஃபியர், என எல்லா நாவல்களுமே வாசகர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான தகவல்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு எழுதப்பட்டவை.  அவரவர் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்ற, 25,30 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உள்ள அறிஞர்கள் ( இவர்களும் கிரைட்டனின் தீவிர ரசிகர்கள்தான்)  கிரைட்டனின் நாவல்களை வரிவரியாக ஆராய்ந்து மேற்கூறிய நூலை எழுதிய பிறகுதான் கிரைட்டனின் நாவல்களில் 20 சதம்தான் விஞ்ஞானம், 80 சதம் கதைதான் என்று தெரிகிறது.    நம்  நாட்டில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு மாயக்கலவையான வசீகரஎழுத்து.

விஞ்ஞானக்கதையில் விஞ்ஞானத்தின் சதவிகிதம் குறைந்தால் என்ன?   கிரைட்டன் கதைகளில் அறிவியல் அடிப்படையில் கதை எழுதினாலும், அதையும்தாண்டி, கதையின் ஆதாரமாக அறிவியலின் நோக்கத்தை வைத்திருப்பது  இந்த மறுவாசிப்பில் தெரிந்த்து.  ஜுராசிக் பார்க்கில் கேயாஸ் கொள்கை பேசும் பேராசிரியர் டாக்டர் மால்கம் கிரைட்டன்தான். மால்கமின் குரலில் கிரைட்டன் அறிவியல் ஆராய்ச்சிகள் யாரால் செய்யப்படவேண்டும், ஆராய்ச்சிகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம், ஆராய்ச்சிகளுக்கு யார் செலவு செய்வது, ஆராய்ச்சிகளின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவா? சாதாரண மக்களின் நல்வாழ்விற்காகவா ? என்றெல்லாம் பேசுகிறார்.  ஜெனிடிக் இஞ்சினீயரிங், பரிணாமத் தத்துவம் என்றெல்லாம் போகும் கதையில் நடுநடுவே, மால்கம் குரலில்  கிரைட்டன்  ‘லேசர், டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், போலியோ சொட்டு மருந்து,ஹோலோகிராம்,கணினி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இவை எல்லாமே தனியார் ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. அரசுப் பல்கலைக்கழகங்களில் புதிய ஆய்வுகளுக்கு எவ்வித ஊக்குவிப்பும் கிடையாது,’  ‘இத்தனை முன்னேற்றத்திற்குப் பிறகும், துணி துவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள் வந்தபின்னும் கூட 1930களிலிருந்து இன்று வரை வீட்டுவேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் குறையவே இல்லை’, விஞ்ஞானிகள் தங்களை இயற்கையை வென்றவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் படகு செய்யலாம். ஆனால் கடலைச் செய்யமுடியாது.  அவர்களால் விமானத்தைச் செய்ய முடியலாம். ஆனால் காற்றைச் செய்யமுடியாது, என்றெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார். அவரது கோபம் விஞ்ஞானத்தின் மீதல்ல.  விஞ்ஞானத்தின் வர்த்தகமயத்தின் மீதுதான்.  அவரது நாவல்களில் விஞ்ஞானிகள் தீராத அறிவியல்தாகத்தோடு, அந்த  முயற்சியில் எத்தகைய இடையூறு வந்தாலும் ஏற்கத் தயாரானவர்களாக இருக்க, அவர்கள் ஆய்வு நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் லாபத்திற்காக எத்தகைய மோசமான செயலையும் செய்பவர்களாக  கவனமாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். அறிவியல் புனைகதைகளை வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுகள், விண்வெளிப் பயணம் என்பதைத் தாண்டி முதலாளித்துவ உலகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கடும்விமர்சனமாகத் தனது  நாவல்களை எழுதியவர் என்பதால் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு  ஜொலிப்பவர்   கிரைட்டன். 

எது படித்தாலும் தமிழ்ச்சூழலில் என்ன நிலமை என்று யோசிக்கும் என் மனம் இப்போதும் அதேபோல் யோசித்தது.  விஞ்ஞானக்கதைகளை ஓரளவு எழுதியவர் சுஜாதா மட்டுமே. இவ்வகைக்கதைகள் தமிழில் இல்லாததற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார். ‘ஒரு தையல் இயந்திரமோ, ரேடியோவோ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாத நமக்கு எதற்கு வம்பு, இருக்கவே இருக்கிறது சாய்வு நாற்காலி, மத்யானத் தூக்கம், நினைவுத்திரைகள் பின்னோக்கிச் செல்வது, சமயலறைச் சண்டை, சாதிச் சண்டை, வட்டார வழக்கு, என்றும் மாறாத காதல், இது போதும் என்கிற பொன் செய் மனோபாவத்தால்தான் முக்கியமான இவ்வகைக் கதைகள் தமிழில் வரவில்லை என்கிறார் சுஜாதா.  தமிழின் ஒரே விஞ்ஞான எழுத்தாளரான சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் கதை எவ்வளவு ? விஞ்ஞானம் எவ்வளவு ? என்ற ஆய்வு இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.  நண்பர் இரா. நடராசன் மனம் வைப்பாரா?

பின்னி​ணைப்பு

ப​டைப்புகள் பட்டியல்

Airframe

The Andromeda Strain   தி​ரைப்படமாக வந்தது

Binary

A Case of Need

Congo (novel)  தி​ரைப்படமாக வந்தது

Dealing: or the Berkeley-to-Boston Forty-Brick Lost-Bag Blues

Disclosure   தி​ரைப்படமாக வந்தது

Drug of Choice

Easy Go

Eaters of the Dead  தி​ரைப்படமாக வந்தது

Grave Descend

The Great Train Robbery  தி​ரைப்படமாக வந்தது

Jurassic Park (novel)  தி​ரைப்படமாக வந்தது

The Lost World (Crichton novel) தி​ரைப்படமாக வந்தது

        Micro

Next

Odds On

Pirate Latitudes

Prey

Rising Sun   தி​ரைப்படமாக வந்தது

Scratch One

Sphere   தி​ரைப்படமாக வந்தது

State of Fear

The Terminal Man

Timeline   தி​ரைப்படமாக வந்தது

The Venom Business

Zero Cool

Nonfiction

Electronic Life

Five Patients

Jasper Johns

Travels

​மைக்​கேல் கி​ரைட்டனின் ப​டைப்புகள் பற்றி வந்துள்ள நூல்கள்

The science of Michael crichton by Kevin R.Grazier

இது மிக முக்கியமான நூல். ​மைக்​கேல் கி​ரைட்டனின் முக்கிய நாவல்கள் அ​னைத்தும் பற்றி எழுதப்பட்ட கட்டு​ரைகளின் ​தொகுப்பு. 1) The andromeda strain, 2) Virtual reality and man-machine interface in disclosure and the terminal man, 3)Shock to the system, 4)Neanderthals and werdols, 5)Primate behaviour and misbehaviour in Michael Crichton’s congo, 6)crichton’s travel in time. 7)Artificial life in Michael Crichton’s prey, 8)Be afraid. Be very afraid : Michael Crichton’s state of fear, 9) Science comes second in next என்று ஒவ்​வொரு நாவலிலும் உள்ள விஞ்ஞான, கற்ப​னை கல​வை பற்றி ​பெரிய விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் இந்தக் கட்டு​ரைகளின் த​லைப்புக​ளைப் பார்த்தா​லே​யே அவர் எத்த​னை ​பெரிய விஞ்ஞான ​எழுத்தாளர் என்பது ​தெரியும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

❌