Normal view

Received before yesterday

சோறு (சிறுகதை) – விழி.பா. இதயவேந்தன்

அம்மா சின்ன வயதில் எங்களை எப்படியெல்லாம் கவனித்தார்கள் என்று நினைத்தால் இன்னமும் அதிர்ச்சியாய்த்தான் இருக்கிறது. ஏழ்மை வாழ்விலும் ஒரு முன்னேற்றம். கேட்கும் பொருளையோ தின்பண்டங்களையோ தவறாமல் வேலையைவிட்டு வரும்போது வாங்கிவருவார்கள்.

அம்மாவின் வருகைக்காகவே நானும் தங்கையும் விசேஷமாய் காத்திருப்போம். வரும் சமயத்தை அறிந்து நின்றுகொண்டே தூரத்தில் கண்களைத் துழாவுவோம். அம்மாவின் பொட்டு பூவில்லாத தோற்றமும் எண்ணெய் இல்லாத தலையும் மங்கிய நகராட்சிப் புடவையும், மற்றவர்களைக் காட்டிலும் தனித்துக் காட்டிக் கொடுக்கும். மடியில் கனத்து முடுக்காய் இருக்கிறதா எனத் துருவிப் பார்ப்போம்.
அப்படி இருந்தால் என்னைக் காட்டிலும் தங்கைக்கு அதிக மகிழ்ச்சி. பூமியிலிருந்து. கைகளைத் தட்டிக்கொண்டு அம்மா கிட்ட நெருங்க நெருங்க எகிறித் தவிப்பாள். கண்களில் ஒருவித ஒளி மின்னல் கீற்றுக்களாய்ப் படரும்.

நோயும் படுக்கையுமாய்க் கிடந்த அப்பாவைக் குணப்படுத்த அம்மா எவ்வளவோ செலவு செய்தும் தீர்க்க முடியவில்லை. அக்கடாவென்று விட்டுவிட்டாள். தன் சக்திக்கு மீறி பெரிய பெரிய ஆஸ்பத்திரிக்கு என்று கூப்பிட்டுப்போக முடியவில்லை. எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் அம்மா பொட்டு வைத்து பூவைத்துப் பார்த்ததில்லை.

நகரில் கடைவீதியில், சினிமா கொட்டகையில் பஸ் நிலையத்தில், இரயில் நிலையத்தில் இப்படி எங்கும் பெண்கள் எப்படியெல்லாம் சீவி சிங்காரிச்சுப் போகிறார்கள். அம்மாவிற்கு வசதிகளும் வாய்ப்பும் இல்லாவிட்டாலும் சாதாரணமாய் எண்ணெய் தடவிகூடத் தலையை முடிந்துகொள்ள அக்கறையில்லாமல்போனது. அம்மாவாகவே அப்படியே வளைத்து சுருட்டிக்கொள்வாள். முடிகள் கறுத்தும் பழுத்தும் இருக்கும்.

எனக்கும் தங்கைக்கும் என்று எண்ணெய் வாங்கி வைத்திருப்பாள். தங்கை தடவிவிட்டாலும் மிரட்டி மறுப்பாள். அவளுக்கென்று சொந்த விருப்பங்கள் என்று எதையும் செய்துகொண்டதாய் நான் பார்த்ததில்லை.

காலையில் அய்ந்து மணிக்கு எழுந்து ஓடுவாள். ஆறு மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேஸ்திரியிடம் வருகைப் பதிவேட்டில் கைரேகை
வைத்துவிட்டு வேலை செய்யும் தெருவிற்குப் போவாள். சின்னதும் பெரியதுமாய் ரெண்டு வாளியில் தட்டு சுரண்டியைப் போட்டுக்கொண்டு பீ வண்டியைத் தள்ளிக்கொண்டு வருவாள். மருதூர் பக்கம்தான் அவள் வேலை செய்யும் தெரு.

புடவையைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு பீ வண்டியைத் தெருவில் நிறுத்திவிட்டு வீட்டுக்குத் தகுந்த மாதிரி வாளி சுரண்டியுடன் கக்கூசுக்கு மலம் அள்ளப்போவாள். ஒன்றிரண்டு வீடாய் இருந்தால் சின்னவாளி; அய்ந்தாறு குடித்தனம் இருந்தால் பெரியவாளி. வீட்டுக்கு வீடு வாரி வந்து பீ வண்டியில் கொட்டுவாள். பனியோ, காற்றோ, மழையோ வெயிலோ சிட்டாய்ப் பறப்பாள்.

மருதூர் பகுதியில் அம்மா வேலை செய்கிறாள் என்றுதான் பெயர். சமயத்தில் அவசர ஆத்திரத்திற்கு அம்மாவைத் தேடிப் பிடிக்க முடியாது.

ஒரு சமயம் அப்படித்தான். தங்கராசு மாமா செத்துப்போய்விட்டாரென்று வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடிவந்தேன். அம்மா வேலை செய்யும் இடமெல்லாம் தேடினேன். ரெண்டொரு தெருவில் அம்மா கிடைக்கவில்லை. தெருவில் தண்ணி அடித்துக்கொண்டிருந்த பொம்பளையிடம் விசாரித்தேன்.

“ஏங்க எங்க அம்மாவப் பாத்தீங்களா?” “யாருப்பா உங்கம்மா?”

“பாக்கியம்.”

“பாக்கியமா, எந்த பாக்கியம்?”

“அதாண்டி கக்கூஸ்காரி பாக்கியம்.”

பக்கத்தில் சில்வர் தவலையுடன் நின்றிருந்தவள் உசுப்பினாள். இவள் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். ஏன் அப்படிப் பார்க்கிறாள் என்று எனக்குக் கேட்க வேண்டும் போலிருந்தது. சட்டை கிழிந்திருந்தாலும் தைத்துத் துவைத்துப் போட்டிருந்தேன். தலையில் எண்ணெய் தேய்த்து அப்பா கற்றுக்கொடுத்த மாதிரி இடதுபக்கம் வகிடெடுத்து வலது பக்கம் தூக்கி வாரியிருந்தேன்.

“கக்கூஸ்காரி மவனா நீ?”

‘ஏன் பாக்கியம் மவனா நீ’ என்று கேட்கக்கூடாது; என் மனம் சஞ்சலப்பட்டது.

“வந்து எடுத்துட்டுப் போயிட்டா, அந்தத் தெருவுல போய்ப்பாரு”

நான் நகர்ந்தேன்.

“படிக்கிறயாடா?”

மரியாதை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகிப்போனது. வந்தபோது ‘யாருப்பா’ என்றவள் போகும்போது, ‘டா’ என்கிறாள். இது அம்மாவின் அடிமைச் சின்னம். அம்மாவிலிருந்து தலைமுறைக்கும் தொடரும். அப்டீதான் அவுங்க பேசுவாங்க. நான் சுதாரித்துக்கொண்டேன்.

“ம்”

“என்ன படிக்கிறடா?”

“எஸ்.எஸ்.எல்.சி.”

நான் தொடர்ந்து பேச்சுக்கொடுக்காமல் நகர்ந்தேன். திருவள்ளுவர் தெரு, குப்புசாமி தெரு, பாரதியார் தெரு, மாரியம்மன் கோயில் தெரு என்று சுற்றினேன்.

கோடித்தெருவில்தான் அம்மாவைப் பிடித்தேன். வெய்யில் உச்சிக்கு எட்டியிருந்தது. அகோரமாய் மண்டையைப் பிளக்கும் அளவிற்கு உஷ்ணம். அம்மாவைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. உதடுகள் காய்ந்திருந்தது. உடல் முழுக்க வியர்வையால் நனைந்துவிட்டது. வாளியைப் போட்ட கையோடு இடுப்பிலிருந்த வெற்றிலைப் பாக்குப் பையை எடுத்துப் பிரித்தாள். ஒரு பாக்கை எடுத்து மென்றாள். அரை வெற்றிலையைக் கிழித்தெடுத்து லேசாய் சுண்ணாம்பு தடவி திணித்தாள்.

“ஏம்ப்பா பள்ளிக்கொடம் போவலயா?”

“இல்லம்மா”

“ஏன், போவுல, ங்கொப்பா திட்டியிருப்பாரே.” “தங்கராசு மாமா செத்துருச்சு; அப்பா கூப்டாரச் சொன்னாரு.”

“தங்கராசு அண்ணனா ஏன்?”

அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“தெருவுல சண்ட வந்திச்சு. அவரு குடிச்சிட்டு இருந்தாரு. பேச்சுவாக்குல சுவர நெட்டித் தள்ளிட்டாரு அந்த நொள்ள செங்கேணி. பாராங்கல்லு மேல உழுந்து மார வலிக்குது மார வலிக்குதுன்னாரு; அதுக்குள்ள போயிடுச்சு”

அவள் சற்று நேரம் திகைத்தாள்.

“வாம்மா போலாம்.”

“தே இரு இன்னும் நாலு ஊடுதாம். எடுத்துட்டு வந்துடறேன்.”

“நாளைக்கு செய்யலாம் வாம்மா.”

“அட அவ மோசமானவப்பா, அதிகாரிக்கு சும்மாவாச்சும் எழுதிப் போடுவா; தோ வந்துடறேன். நீ சாப்டயா, இந்தா இத அப்டீ தின்னமேல உக்காந்து சாப்டு.”

நான் பசித்து அழுதால், அம்மா ஏதாவது தின்பதற்கு வாங்கிக் கொடுத்து அழுவாள். சின்ன வயதிலேர்ந்து அம்மாவுக்கு அப்படி ஒரு சுபாவம்.

அவள் மடியை அவிழ்த்து இலையோடு இழுத்து திண்ணை மேல் வைத்தாள். பழய சோற்றைப் பிழிந்து வைத்து காரக்குழம்பு ஊற்றி இருந்தார்கள். அம்மாவின் மடி ஈரமாக இருந்தது.

“அம்மா, இன்னிக்கு அம்மாவாச ஆச்சே, மதியானம் எப்டீம்மா”

“அதான்ப புரியல. பேசாம விமலாவ உட்டு தெருவுல சோறு வாங்கச் சொல்ல வேண்டியதுதான்”.

அவனுக்கு சாவு ஒரு பக்கம் இருந்தாலும் மனதுக்குள் பெருத்த சந்தோசம் ஏற்பட்டது. அமாவாசை கிருத்திகைன்னா பொதுவாக வீட்டில் எல்லோருக்கும் கொண்டாட்டந்தான். மதிய வேலைக்குப் போகும் போது அலுமினிய தாளாவை எடுத்து அதனுள் கிண்ணம் தேக்சாவைப் போட்டுக் கொண்டு மூடுவதற்காக துணி ஒன்றையும் எடுத்துக் கொள்வாள். மதிய வேலை செய்துவிட்டு மேஸ்திரியிடம் சொல்லிவிட்டு அவரவர் மலமெடுக்கும் தெருவிற்குப் போவது போல் அம்மாவும் அம்மாவாசை கிருத்திகைக்கு வீடு வீடாகச் சோறு வாங்க வந்து விடுவாள். பொழுது நேரம் சாய்ந்து இருட்டத் தொடங்கியதும் நாங்கள் சோற்றுக்காக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு அம்மா அரிசி கடன் வாங்கி வந்து ஆக்கமாட்டாள். மறுநாள் குழம்பும் வைக்கமாட்டாள். மீந்த குழம்பைச் சுடவைத்து வைப்பாள். வேண்டுமட்டும் பரிமாறுவாள். சோற்றில் மீந்ததைத் தண்ணீர் ஊற்றி வைப்பாள்.

தீபாவளி, பொங்கல் என்றால் படு குஷி. தீபாவளிக்கு வேலை செய்யும் இடங்களில் பட்டாசு சத்தம், புதுச் சட்டையும் சந்தோசமும் நிறைந்து இருக்கும். எனக்கு அவற்றின் மேலெல்லாம் ஆசை கிடையாது. தங்கை கூட அம்மா எப்ப வருவாங்க என்று காத்திருந்து என்னை நச்சரிப்பாள். தெருவில் ‘இட்லிக்காரம்மா’ கிழவியிடம் வாங்கித் தின்று காலமெல்லாம் வயிறுக்கு மாளாது.

தீபாவளி அன்று அம்மா தெருவில் வாங்கி வரும் இட்லி பூப்பூவாய், பெரியதாய், சில கனத்தும், தடித்தும், விதவிதமாய் இருக்கும். ஜவ்தாளொன்றில் முறுக்கு, அதுரசம், இனிப்புப் பலகாரம் என்று ஒரு பக்கம். வடை, குழம்பு, சீசாவில் எண்ணெய், சீயக்காய்ப் பொட்டலம் என்று ஒரு சேர வாங்கி வருவாள்.

கொடுக்க மனம் வராத ஒரு சிலர் புலம்புவார்கள். ஒரு முறை குழம்பு தேக்சாவைத் தூக்கிக் கொண்டு அம்மாவுடன் உதவிக்காக வீடு வீடாக வந்து கொண்டிருந்தேன்.

“ஏன்டி, கெவர்மெண்ட்டுல உனக்கு சம்பளம் குடுக்கல.”

அந்தப் பொம்பளை அவளை மாதிரியே தடிப்பாய்க் கேட்டாள்.

“குடுக்கறாங்கதான்.”

“பின்ன சும்மா எனாம் கேக்க வந்துட்ட?”

“விக்கிற வெலவாசி தெரிமா; நாங்க எப்படி பொழைக்க முடியும்?”

“அதுக்கு சம்பளம் அதிகமா வேணும்னு அரசாங்கத்துல போராடுங்க.”

“நாங்க போராடனா குடுக்கவாப் போறாங்க, போராடிப் பாத்துட்டம், இன்னும் போராடிக்கிட்டுதான் இருக்கிறோம்.”

“அங்க உட்டுட்டு, பின்ன இங்க வந்துடற, அமாவாசைக்கு சோறு, கிருத்திகைக்கு சோறு, தீபாவளிக்கு, பொங்கலுக்கு, இன்னாதான்-“

“தேம்மா, கஷ்டப்பட்டு உம் பீய காலம் பூறா வார்றமே, நெஞ்சில எங்கனா ஈரம் இருக்காஉனுக்கு. எங்க வறுமைக்கு உன்கிட்ட பிச்ச எடுக்கறம். இஷ்டம் இருந்தா குடு இல்லாட்டி உடுமா.”

“குடுக்கலைன்னா இன்னாடி செய்வ? நாலு நாள் கக்கூஸ் எடுக்க வரமாட்ட; நாறிப் போயிடும்னு பாக்குறியா; எங்க வூட்டுக்காரரு யாரு தெரிமா. அதிகாரிகிட்ட சொல்லி உன் வேலைக்கு ஒலவெச்சுடுவன் சாக்கிரத.”

“தேம்மா ரொம்பதான் சில்த்துக்காத; உம் புத்தி உன்னோட வெச்சுக்கோ – காசுக்கு பீத்தின்ற ஆளில்ல நாங்க. எங்க வேலைய நாங்க செய்வோம். அதிகாரி கிதிகாரின்னு மெரட்டாத. எங்களுக்கும் சங்கம் இருக்கு.”

அம்மாவும் விடாமல் உரிமையாய்ப் பேசுவாள்.

தீபாவளிப் பலகாரங்களைக் கொண்டு வந்ததும் எனக்கு பஞ்சு பஞ்சாய் உள்ள இல்லியை அழுத்திப் பார்த்து வைப்பாள். கறிக்குழம்பு தனியாய் வாங்கி வந்ததை ஊற்றுவாள். வடை சாம்பாரோடு வேண்டுமட்டும் பரிமாறுவாள். முறுக்குப் பலகாரங்களை அடுக்குப் பானையில் ஜவ்தாள் உறையோடு வைத்து அவ்வப்போது ஒவ்வொன்றாய் எடுத்துத் தருவாள்.

பொங்கலுக்கும் அப்படித்தான். விதவிதமாய்ப் பொங்கல் சோறு வாங்கி வருவாள். எனக்கு இனிப்புப் பொங்கல் பிடிக்காது. தங்கை பிரியமாய் சாப்பிடுவாள். பால் நிறம் போன்ற வெண்பொங்கலை வைத்து சாம்பார் ஊற்றுவாள். பழம் நழுவிப் பாலில் விழுந்து வாயில் விழுந்தாற்போல் லாவகமாய் இறங்கும்.

ஊரெல்லாம் தீபாவளி, பொங்கல்னா எங்களுக்கும் இந்தவிதமாய் ஒருவித சந்தோசம்.

நான் அம்மாவை உட்கார வைத்துக் கொண்டு தெருவிற்கு வந்தேன். சைக்கிளை விட்டு இறங்கியதும் சொல்லாமல் கொள்ளாமல் அழுகை பீறிட்டு வந்தது அம்மாவுக்கு. பறையொலி ரொம்ப தூரம் கேட்கும் அளவிற்குக் காதைக் கிழித்தது. அழுது முடித்து கொஞ்ச நேரத்தில் அம்மா எழுந்து வந்து விமலாவின் காதில் கிசுகிசுத்தாள்.

மாலை முழுவதும் டன் டன்னக்கர, டன் டன்னக்கர பறையொலி ஆட்டம் பாட்டத்துடன் ஒலித்தது. மாமாவின் சாவிற்கு உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். மறுநாள்தான் எடுப்பதாய் இருந்தது. அம்மா மட்டுமில்லை தெருவில் பலர் வேலைக்கு விடுமுறை சொல்லியிருந்தார்கள்..

பொழுது சாய்ந்து செங்கல் மங்கலாய் இருந்தது. விமலா சோற்றுக் கூடையுடன் வந்ததும் அம்மா அவள் வீட்டிற்குப் போய்ப் பார்த்தாள்.

“இன்னாடீ சோறு ரவதான் கீது”

“ஏன்கா, நீ இல்லாம சோறே எவளும் தர்ல; இன்னா பேசுறாங்க தெரிமா. வாயில வந்தத திட்டீட்டு கெடைச்சத வாங்கியாந்தன்.”

அம்மாவுக்குப் பார்க்க பகீர் என்றது. விமலாவைப் பாதி சோறு குழம்பு எடுத்துக்கொண்டு, மீதியை எங்கள் வீட்டில் வைக்கச் சொன்னாள். எனக்கும் தங்கைக்கும் உள்ளுக்குள் ஏராளமான சந்தோசம்.

லோல்பட்டு லொங்கழிஞ்சி அம்மா எங்களைக் காப்பாற்றியதை நினைத்தால் இன்னமும் அதிர்ச்சியாய்தான் இருக்கிறது. அதிர்ச்சிகள் சில வரலாறு தருவது.

*

நன்றி : தினமணிசுடர் (டிசம்பர் 3 ,1994)

❌