Normal view

Received before yesterday

பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து)

உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு. இறுக்கமான விதிமுறைகள் இல்லாததும், மிகச் சுலபமாக வாடகைத் தாய்கள் கிடைக்கும் சூழல் இங்கிருப்பதும் முக்கியமான காரணம். உலகம் முழுக்க ஒரு வருடத்தில் பத்து இலட்சம் செயற்கை கருத்தரித்தல்கள் நடக்கின்றன. அதில் 2.5 இலட்சம் அதாவது 25 சதவீதம் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான செயற்கை கருத்தரித்தல் மையங்கள் இந்தியாவில் திறக்கப்பட்டிருக்கின்றன- Dr. சிவபாலன் இளங்கோவன் (உயிர்மை, ஆகஸ்ட் 2022)

ழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் எழுதியுள்ள முதல் நாவல் ‘காயாம்பூ.’ இந்நாவல், குழந்தையின்மையால் ஒரு பெண் எதிர்கொள்ளும் கடும் அகப்புற நெருக்கடிகளையும் இதன் காரணமாகத் தினந்தோறும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களின் வணிகத் தந்திரங்களையும் மிகத் தீவிரமாகப் பேசியிருக்கிறது. இந்தப் பொருண்மையில் எழுதப்பட்ட முக்கியமான நாவலாகக் காயாம்பூவைக் கருதலாம். இந்நாவலுக்கு முன்பு, குழந்தையின்மையின் துயரத்தையும் அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்கள் மேற்கொண்ட சடங்கையும் பேசிய நாவல் ‘மாதொருபாகன்.’ இந்நாவல்மீது உருவாக்கப்பட்ட சர்ச்சைதான் லாவண்யா காயாம்பூவை எழுதக் காரணமாக இருந்திருக்கிறது. ‘மாதொருபாகன்’ சிவபெருமானுக்கான குறியீடு; ‘காயாம்பூ’ திருமாலுக்கான குறியீடு. இரண்டு நாவல்களையும் தொடர்ச்சியாக வைத்து வாசிக்கும்போதுதான், சமூகத்தில் குழந்தையின்மை என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு பெரிய அழுத்தங்களையும் மன உளைச்சலையும் உருவாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

1

‘குழந்தை’ என்ற உயிரின்மீது உருவாக்கப்பட்டுள்ள தொன்ம மதிப்பீடுகள் அதிக அளவில் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. குழந்தை இல்லாத பெண்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கு நியாயமான ஒரு காரணத்தையும் கூறமுடியாது. சங்கச் சமூகத்தில் தலைவிக்குக் குழந்தை இல்லாதபோது தலைவன் மறுமணம் செய்திருக்கிறான். இவளுக்குப் ‘பின்முறை வதுவை’ என்று பெயர். இவளை வாசலில் நின்று வரவேற்க வேண்டும் எனத் தலைவிக்கு ஆணை பிறப்பித்திருக்கிறது அக இலக்கணம். குழந்தை இல்லாத பெண்கள் திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தச் சங்கச் சமூகம் அனுமதி மறுத்திருக்கிறது. நற்காரியங்களில் இவர்கள் ஈடுபடக்கூடாது என்ற மூடநம்பிக்கை எப்போது உருவாகியிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. ‘எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருப்பினும் குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும் புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே’ (புறம்.188) என்று பாண்டியன் அறிவுடை நம்பி என்ற மன்னனே பாடிச் சென்றிருக்கிறான். நெட்டிமையார் பாடலில் (புறம்.9) இடம்பெற்றுள்ள ‘தென்புல வாழ்நர்க் க‌ருங்கட னிறுக்கும் / பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்’ வரிகளும் குழந்தைப் பேற்றின் சிறப்பைச் சொல்கின்றன. அதாவது பசு, பசு போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், பிணி உள்ளவர், இறந்த முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று போர் முரசறைகின்றனர்.

அகநானூற்றில் 86, 136 ஆகிய இரு பாடல்களும் சங்க காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் குறித்து விரிவாகப் பேசியிருக்கின்றன. இந்தப் பாடல்களில் இடம்பெற்றுள்ள இரு தகவல்கள் முக்கியமானவை. ஒன்று, தாலி கட்டிக்கொள்ளும் வழக்கம் அன்று இல்லை. இரண்டு, நான்கு பெண்கள்தாம் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர். ஐயரும் தாலியும் அன்றைய திருமணத்தில் இல்லை. மனமொத்துத் தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்ந்தனர். பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், திருமணம் நடத்திவைத்த அந்த நான்கு பெண்களும் பிள்ளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதனை, ‘புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று / வால் இழை மகளிர் நால்வர் கூடிக் / கற்பினின் வழாஅ நற்பல உதவிப் / பெற்றோற் பெட்கும் பிணையை யாகென’ (அகம். 86) என்ற நல்லாவூர்க்கிழார் பாடலால் அறியலாம். பிள்ளைபெற்ற மகளிர் நால்வர் கூடிச் செய்வதுதான் மரபு என்று பழைய உரை குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் இப்பாடலுக்கு உரை எழுதியவர்கள் ‘புதல்வர்’ என்ற சொல்லுக்கு ‘ஆண் குழந்தை’ என்றே பொருள் எழுதியிருக்கின்றனர்.

சங்க இலக்கியப் பாடல்களில் குழந்தைப்பேறு குறித்த பெருமிதங்கள் இடம் பெற்றிருந்தாலும் போரில் வீரமரணம் அடைந்த தம் மகன்களை நினைத்து, ‘ஈன்ற ஞான்றினும் பெரிதே’ என உவந்த தாயையும் ‘வாடுமுலை ஊறிச் சுரந்த’ தாயையுமே அதிகம் பேசினர். இவர்களுடன், ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்று பாடிய பொன்முடியாரையும் தமிழ்ச்சமூகம் உச்சிமுகர்ந்தது. இவர்களையெல்லாம்விட குழந்தைப்பேற்றின் மகத்துவத்தைத் திருவள்ளுவர்தான் அதிக அளவில் ஊதிப் பெரிதாக்கிவிட்டார் என்று தோன்றுகிறது. ‘மக்கட்பேறு’ என்றொரு தனி அதிகாரத்தையே படைத்துக் குழந்தைப்பேற்றின்மீது அளவுகடந்த உன்னதங்களை அடுக்கி விட்டார். ‘நல்ல பிள்ளைகளைப் பெறுவதைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு ஏதுமில்லை’ என்று முதல் குறளிலேயே தன் சாட்டையைச் சுழற்றிவிட்டார் வள்ளுவர். இதனைக் கடைசி குறள்வரை கடைப்பிடித்தார். ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ!’ என்று எழுதி பெண்களைச் சஷ்டி விரதம், சோமவார விரதம் என இருக்க வைத்தார். அடுத்தடுத்து உரை எழுதியவர்களும் வள்ளுவரின் பாடல்களுக்கு மேலும் மெருகூட்டினார்கள். குழந்தைப்பேறு வாய்க்காத ஒருவர், மக்கட்பேறு’ அதிகாரத்தை வாசித்து முடிக்கும்போது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாவார். அந்த அளவுக்கு வள்ளுவரின் எழுத்தாணி வேலை பார்த்திருக்கிறது. மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட ஆதி காவியங்களில் அடுத்த அரச வாரிசுகளை உருவாக்குவதில் என்னென்ன தந்திரங்களையும் மந்திரங்களையும் செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே குழந்தைப்பேறு என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாரிசு உருவாக்க ஏற்பாடாகப் பார்க்கப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சி செய்தவர்களும் இந்தத் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டனர். இலக்கியங்களும் இதனைப் பதிவு செய்தன. ‘பிள்ளைத்தமிழ்’ என்ற புதிய இலக்கிய வகைமையே தமிழில் உருவாகிவிட்டது. இன்று இலக்கியங்களும் வரலாற்றுக்கான ஆவணங்களாகப் பயன்படுகின்றன. எனவே, குழந்தைப்பேற்றின்மீது ஏற்றப்பட்ட தொன்ம மதிப்பீடுகளின் மூலத்தைக் கண்டறிவது மிகவும் அரிது என்றே கருதுகிறேன்.

நவீன இலக்கியங்கள்தாம் அன்பு, பாசம், கருணை, உறவு உள்ளிட்ட சொற்களுக்குப் பின்னே மறைந்துகொண்டிருக்கும் மிகையான மதிப்பீடுகளை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. அதுபோல குழந்தைப்பேற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் உன்னதங்களையும் தொடர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதன்மீது விரிசலை உருவாக்க வேண்டும். பெற்றோர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு எந்தப் பிள்ளையும் இப்போது உத்தரவாதம் கொடுப்பதில்லை. இந்தச் சூழலிலும் குழந்தைப்பேறு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், மணமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வாரிசு உருவாக்கத்தைவிடத் தங்களது பாலினத் தன்மையை நிரூபித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியே இன்று பெரிதாக இருக்கிறது. குழந்தை பிறந்து இறந்துவிட்ட இணையருக்கு, அடுத்த குழந்தை பிறக்கவில்லை என்றாலும் இச்சமூகம் அவர்களைப் பெரும் நெருக்கடிக்கு உட்படுத்துவதில்லை என்பது நிதர்சனம். அதனால் வாரிசு என்பதைக் கடந்து, தங்களது ஆண் / பெண் தன்மையை இச்சமூகத்திற்கு நிரூபிக்கவே ஒவ்வொருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதில் தன்முனைப்புக் காட்டுகின்றனர் என்று கருதவும் இடமிருக்கிறது. குழந்தை என்பது ஒவ்வொருவரது பெருமிதங்களின் அடையாளமாகக் காலந்தோறும் பார்க்கப்படுகிறது. அந்தப் பெருமிதங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களை நோக்கி ஓடுகின்றனர். குழந்தைப் பெற்றுக்கொள்ளுதலை ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகக் கருதாதவரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது.

2

‘காயாம்பூ’ நாவலின் கதைநாயகி நந்தினி; இவள் கணவன் துரை. இவர்களுக்குக் குழந்தை இல்லை. சமூக அழுத்தங்களின் காரணமாக நந்தினியும் துரையும் வெவ்வேறு கருத்தரித்தல் மையங்களில் தங்கள் உடல்களைச் சோதனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். நந்தினிக்கு மாதவிடாய் நிற்கும்வரை இந்தச் சோதனை முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தத் திட்டத்தைக் கை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வரும்போதெல்லாம் யாரோ ஒருவர் நந்தினியின் குறையைச் சுட்டிக் காட்டுகின்றனர். சக மனிதர்கள் கருணையே இல்லாமல் தொடர்ந்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரிடமுமே குறைபாடு இருப்பதால்தான் நாவலால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது. நந்தினியிடம் மட்டும் பிரச்சினை இருந்திருந்தால் தனிப்பட்ட தாக்குதல், மறுமணம் என நாவலுக்கு வேறொரு முகம்தான் கிடைத்திருக்கும். அவ்வகையில் நாவல் பால் சமநிலையைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது தொடர் பரிசோதனைகளின் மூலமாகக் கருத்தரித்தல் மையங்களின் வியாபாரத் தந்திரங்களையும் மனித உடல்களின்மீது நிகழ்த்தப்படும் மருத்துவ வன்முறைகளையும் புனைவு வெளிச்சப்படுத்தியிருக்கிறது. இதனை நாவலின் முக்கிய நோக்கமாகக் கருதலாம்.

திருமணத்திற்குப் பிறகான பெண்களின் மனநிலை மாற்றத்தை இந்தப் புனைவில் லாவண்யா நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார். பெருந்தன்மையும் சக மனிதர்கள்மீது கருணையும் கொண்ட பெண்கள், தங்களுக்கென்று ஒரு குடும்பம் உருவாகும்போது எப்படித் தங்களைச் சுயநலம் மிக்கவர்களாகத் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் நாவல் உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சுயநலத்திற்குப் பின்னாலும் குழந்தைகள்தாம் இருக்கிறார்கள் என்பதைத் தேன்மொழி, அலமேலு ஆகிய கதாபாத்திரங்களின் வழியாக நிறுவியிருக்கிறார். இது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “உலகில் நடக்கும் மாபெரும் அநியாயங்களுக்குப் பின்னால் இயங்கும் மனித சுயநலத்தின் நீட்சிக்கு குழந்தைப்பேறு ஒரு முக்கியமான காரணம் என்பேன். குழந்தைகள் உள்ள பெற்றோர் தனது வாரிசுகளை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கும் இடத்தில் மனிதம் சரியத் தொடங்குகிறது. அதுவே எல்லாச் சுயநலங்களுக்கு அடிப்படை வித்தாகிறது” (வாசகசாலை இணைய இதழ்) என்று பதில் அளித்திருக்கிறார் லாவண்யா. இதனை நாவலின் மற்றொரு கூறாக வாசிக்கலாம். ஆக, இவ்விரண்டு விஷயங்களை முதன்மைப்படுத்தி நாவல் உரையாடுகிறது.

குழந்தையின்மையினால் நந்தினி எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத்தான் நாவல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அந்த நெருக்கடி எப்படி உருவாகிறது என்ற கேள்விக்கு நாவல் கவனம் கொடுக்கவில்லை. ஏனெனில், இந்தக் கேள்வி பெரும் ஆய்வுக்குரியது. ஆனால் அந்த நெருக்கடி எப்படி மருத்துவத்தில் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கி விட்டிருக்கிறது என்பதில் நாவல் கவனத்தைக் குவித்திருக்கிறது. ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்கள் இன்று பெருநகரங்களைக் கடந்து சிறிய நகரங்கள்வரை தங்கள் வணிகத்தை நீட்டித்திருக்கின்றன. இதற்கென ஒரு பெரும் சந்தை உருவாகியிருக்கிறது. இந்தச் சந்தையைக் கட்டமைத்ததில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஊடகங்களும் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்கள் அளிக்கும் விளம்பரங்களினூடாகப் பெரும் வணிகத்தை ஈட்டுகின்றன. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இத்தகைய கருத்தரித்தல் மையங்கள் அளிக்கும் போலியான வாக்குறுதிகள் குழந்தையின்மையைச் சரிசெய்து கொள்வதற்கான பெரும் நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால் அங்கே என்ன நடக்கிறது; அந்த மையங்கள் எப்படிச் செயல்படுகின்றன? என்பதையெல்லாம் வெகுசன மக்கள் அறிந்துகொள்ள அத்தகைய மையங்கள் வாய்ப்புகளை வழங்குவதில்லை. இந்த நாவல் அதனை ஒட்டுமொத்தமாக விளக்கிக் காட்டியிருக்கிறது.

மூன்று வகையான (1. In Utero Insemination 2. In Vitro Insemination 3. Surrogacy) சிகிச்சைகள் ‘செயற்கை கருத்தரித்தல்’ மையங்களில் செய்யப்படுகின்றன. இதில் முதலிரண்டு வகைகள் குறித்து இந்நாவலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மூன்றாவது வகை, வாடகைத்தாய் முறை. இவ்வகையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அதிக பொருட்செலவாகும். பெரும் பணக்காரர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறையாக இதனைக் கருதலாம். இந்நாவல் உண்மைக்கு மிக அணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதனால் இந்தச் சிகிச்சைமுறைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளார் லாவண்யா. இது தொடர்பான மேலதிக விவரங்களை இணையம் வழியாக அறிந்துகொள்ள இக்கலைச் சொற்கள் உதவும். இப்படி எழுதப்பட்டிருப்பதால் இதனை மருத்துவம் சார்ந்த புனைவாகச் சுருக்க வேண்டியதில்லை. குழந்தையின்மை என்பதைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் உடல்மீதும் அவளது அந்தரங்கத்தின்மீதும் நிகழ்த்தப்படும் வன்முறையைத்தான் நாவல் பிரதானமாகப் பேசியிருக்கிறது. குழந்தைப்பேறில்லாத ஒட்டுமொத்தப் பெண்களின் பிரதிநிதியாக இந்நாவலின் நந்தினி இருக்கிறாள். அவர்களது ஒட்டுமொத்த வலியையும் இவள் தாங்கிக்கொள்கிறாள்; முடியாத தருணங்களில் கோபமாகவும் அழுகையாகவும் தன் இயலாமையை வெளிப்படுத்துகிறாள். அவளால் அவ்வளவுதான் செய்ய முடிகிறது.

லாவண்யா, இப்பிரதியை உருவாக்குவதற்கு நிறையப் பின்னணி வேலைகளைச் செய்திருக்கிறார். துரை சண்டிகரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிகிறான். நந்தினியும் திருமணத்திற்குப் பிறகு சண்டிகர் சென்றுவிடுகிறாள். அங்கேயே ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றுகிறாள். நந்தினி சொந்த நிலத்தைவிட்டு இடம் பெயர்ந்ததால், நாவலின் எல்லை விரிவடைந்திருக்கிறது. இல்லையெனில் மாமியார் – மருமகளுக்கு இடையிலான மோதலாக நாவல் சுருங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுக்கவே குழந்தையின்மை பிரச்சினை தீவிரத்துடன் அணுகப்படுவதையும் நாவல் இதன்மூலமாகச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் ‘செயற்கை கருத்தரித்தல்’ கூடாரங்கள் சண்டிகரைவிடத் தமிழகத்தில்தான் அதிகளவில் இயங்குகின்றன என்ற தரவையும் நாவல் அளிக்கிறது. குழந்தையின்மைப் பிரச்சினையால் நந்தினி அடையும் துயரங்களை மட்டுப்படுத்தவும் பிரதியை வாசிப்பவர்களின் மனக்கொந்தளிப்பை மடைமாற்றவும் இடையிடையே ஜெயந்தி – குமார் இணையரின் வாழ்க்கையும் நாவலில் சொல்லப்படுகிறது. மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தையைப் பெற்றுக்கொண்டு ஜெயந்தி படும் துயரங்கள் நந்தினியின் பிரச்சினையைக் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றன.

ஹரி என்றொரு கதாபாத்திரத்தையும் லாவண்யா உருவாக்கியுள்ளார். ஹரியைக் காயாம்பூ நிறத்தவனின் குறியீடாக வைத்தும் வாசிக்கலாம். இவன் நந்தினியைக் காதலித்தவன். இந்த விஷயம் நந்தினிக்குக் காலங்கடந்தே தெரிய வருகிறது. முன்பின் தெரியாத ஆண்களின் உயிரணுக்களைக் கொடையாகப் பெறுவதைவிட, தன்னைக் காதலித்த ஹரியின் உயிரணுவையே பெற்றுத் தன் கருமுட்டையில் செலுத்துகிறாள் நந்தினி. இதுவும் தோல்வியில் முடிகிறது. காயாம்பூ நிறத்தவன் கடைசிவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். கடவுளரின்மீதும் பிரதி கடுமையான இடையீட்டைச் செய்திருக்கிறது. இதெல்லாம் பிரதிக்குள் ஊடிழையாகத் தொடர்ந்து வருகின்றன. “அகிலம் ஆளும் அவளுக்கு, அந்தத் தொட்டிலோ இந்த வளையலோ கட்டினால்தான் என் நிலம தெரியுமா?” என்று ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதியில் நின்றுகொண்டு நந்தினி கேட்கிறாள். இது ரங்கநாயகி தாயாருக்கும் கேட்டிருக்கும்தானே! நந்தினியும் துரையும் போகாத கோயில் இல்லை; வணங்காத தெய்வங்கள் இல்லை. குழந்தைப்பேற்றிற்காக இச்சமூகம் உருவாக்கி வைத்துள்ள எல்லாச் சடங்குகளையும் தன்னை வருத்திக்கொண்டு செய்கிறாள் நந்தினி. இதில், வாழைப்பழத்தை நன்றாக மென்று, குழந்தைவரம் கேட்டு வந்திருக்கும் பெண்களின் வாயில் ஊட்டிவிடும் குப்பனூர் சாமியின் சடங்கும் அடக்கம். எல்லாச் சடங்குகளின் முடிவும் சுழியம். ஒருவேளை நந்தினிக்குக் குழந்தை பிறந்திருந்தால், அவளது வாழ்நாள் முழுக்க நேர்த்திக்கடன் மட்டும்தான் செலுத்திக்கொண்டிருக்க அவளுக்கு நேரம் இருந்திருக்கும். அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை; அவ்வகையில் ஆறுதல்.

‘செயற்கை கருத்தரிப்பு’ மையங்களில் செய்யப்படும் சிகிச்சை முறைகள் முழுக்க முழுக்க இயற்கைக்கு எதிரானவை; இயற்கையின்மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள். காந்தாரியின் வயிற்றிலிருந்து உதிர்ந்து விழுந்த சதைப்பிண்டத்தை, வியாசர் நூறு பாகங்களாகப் பிரித்து நெய் நிரப்பப்பட்ட பானைகளில் ஒவ்வொரு துண்டமாகப் போட்டு நூறு குழந்தைகளாக உருவாக்கித் தந்தார் என்பது மகாபாரதக் கதை. வியாசர் அன்று செய்ததைத்தான் மருத்துவர்களும் இன்று செய்கின்றனர். உயிரணு ஏற்றப்பட்ட கருமுட்டைகளைக் குப்பிகளில் அடைத்துக் குழந்தைகளை உருவாக்கித் தருகின்றனர். ஆனால், இந்த மையங்களில் சிகிச்சை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் விவரிக்க முடியாதவை. சிலவற்றை மட்டுமே லாவண்யா இந்நாவலில் பதிவு செய்துள்ளார். பூப்புச் சடங்கின்போது அப்பாவின் வேட்டியைச் சிறிதுநேரம் போர்த்திக் கொண்டிருக்க கூசிப்போன நந்தினிதான், பிறப்புறுப்பில் செய்யப்படும் HSG சோதனைக்காக ஆடவரின் முன்பு தன் மொத்த ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாகப் படுத்துக் கிடக்கிறாள். சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்கள், உடலாலும் மனதாலும் கடுமையான தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். அவர்களது அந்தரங்கம் சிகிச்சை என்ற பெயரில் பொதுமையாக்கப்படுகிறது. ‘கருவுறுதலுக்கான நமது சிகிச்சை முறைகள் பெண்ணின் மனவுளைச்சலைக் கவனம் கொள்ளாதது மட்டுமல்ல, இன்னும் அதை மோசமாக்கும் வகையில்தான் அமைந்திருக்கின்றன’ என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.

குழந்தையின்மையை ஒரு பெருங்குறையாகவும் தெய்வக் குற்றமாகவும் பார்க்கும்வரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது. அதேநேரத்தில் அவர்களிடம் காட்டப்படும் அதீத அக்கறையும்கூட அந்தக் குறையை அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும். மேலும், இந்தப் பிரச்சினை உள்ளவர்கள்மீது வீசுவதற்காகவே பல வசைச்சொற்களை இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அப்படியொரு வசைச்சொல்லைத் துரையும் எதிர்கொள்கிறான். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாகக் களையப்பட வேண்டும். நாவல் இதுபோன்ற எந்தத் தீர்வையும் முன்மொழியவில்லை. ஆனால் வாசிக்கும் ஒவ்வொருவரது மனதிலும் சில அசைவுகளை இப்பிரதி உருவாக்கும். இந்நாவல் குழந்தைப்பேறு பிரச்சினையினால் பாதிக்கப்படும் ஆண் / பெண் இருவரையுமே பொருட்படுத்தியுள்ளது. ஆனால் இப்பிரச்சினையினால் ஓர் ஆணைவிடப் பெண்ணே அதிகமும் பாதிக்கப்படுகிறாள். பெண் மட்டும்தான் குழந்தைப்பேறு பிரச்சினைக்குக் காரணமாக இருக்கமுடியும் என்று நீண்ட காலம் நம்பப்பட்டு வந்தது. அதிலிருந்து பெண்களை விடுவித்த பெருமை நவீன மருத்துவத்தையே சாரும். ஆனால் அதே மருத்துவம்தான் பெண்களை இப்படியும் சுரண்டுகிறது.

The post பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை first appeared on கனலி.

நீளும் பிரார்த்தனைகள்

நூல்: இதோ நம் தாய்

ஆசிரியர்: வயலட்

பதிப்பகம்: சால்ட்

விலை:125/-

**********************

புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றை துக்கத்தின் காரணிகளாகக் கண்டறிந்து, அவற்றிலிருந்து விடுபடுதலையே வீடு பேறென வகுத்த புத்தரின் உடற் பிணி குறித்து கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒருவராக அவர் அறிமுகம் ஆகிறார். நிகரற்ற நினைவாற்றல், அர்ப்பணிப்புணர்வு, கருணை என நற்குணங்களால் நிரம்பியிருந்தும் பரிநிர்வாண நிலையை அடைய முடியாது தவித்த ஆனந்தரின் தவிப்பு அன்பினால் விளைந்தது. அதே அன்புதான் ஆனந்தியையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.

ஆனந்தி, யசோதா, கௌதமி என சித்தார்த்தரின் வாழ்வில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் கதையிலும் புழங்குகின்றன. மரபான கதை சொல்லலாக இல்லாமல் ஆனந்தியின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் நூலில் கடைபரப்பப் படுகிறது. மாற்றுப் பாலினத்தவரின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணங்கள், நொய்மையான தருணங்கள் என கலவையாகக் காட்சிகள் விரிகின்றன.

சித்தார்த்தரின் வாழ்வில் முக்கியப் பாத்திரம் வகித்த அவரது சிற்றன்னை கௌதமியின் பெயரைக் கொண்டவர்தான் ஆனந்தியின் தாய். இளம்பருவத்தில் கல்வியும், தோழமையும் மறுக்கப்பட்டதால் காயப்பட்ட கௌதமி, தனக்குப் பெண் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கிறார். அவர் விருப்பிற்கு ஏற்ப பிறந்த மகனே பின்னால் தன்னை ஒரு பெண்ணாக முன்வைக்கும்போது, அவ்வுறவு விருப்பும் வெறுப்பும் கலந்த கலவையாகிறது. பொதுவாகவே அம்மா மகன் உறவைப் போன்றதல்ல அம்மா மகள் உறவு. அது பெரும்பாலும் சேர்ந்திருக்கையில் வெறுப்பும், இழந்தபின் அன்புமாக விரிவடையும் வினோதமான ரசாயனம். அதிலும் மாற்றுப் பாலின அடையாளத்தை முன் வைக்கும் மகளோடு கௌதமி கொண்டிருக்கக்கூடிய உறவு மிகவும் நுட்பமான சிடுக்குகள் நிறைந்தது.

தாயுடன் மட்டுமல்லாது, துணையாக வரும் யசோதா, தோழர்களான யாஸ்மின், கவின்,சிவா என அனைவருடனுமே ஆனந்தி கொள்ளும் உறவின் சிடுக்குகளே கதையின் பேசுபொருள் எனலாம். எல்லா சிடுக்குகளும் சேர்ந்து ஆனந்தியின் மீது சுமத்தும் தனிமை மனச்சோர்வாக மாறுகிறது. மனச்சோர்வென்பது உற்சாகக் குறைவு, எதிலும் நாட்டமின்மை, குற்றவுணர்வைத் தூண்டுதல் என பல்முனைத் தாக்குதலை நம் மீது நடத்தக் கூடியது. அதே கோணங்களிலேயே கதை விரிகிறது.

நாவலில் எல்லா சம்பவங்களும் விரிவாக உரையாடலுடன் முன் வைக்கப்படுவதற்கு மாறாக, தீற்றல்களாக அங்கங்கு சிந்திச் செல்லும் முறை மிக லாகவமாகக் கைவந்திருக்கிறது வயலட்டிற்கு. கதையல்லாத கதை சொல்லல், நிகழ்காலத்திற்கு பின்னணியாக வரும் கடந்த கால விவரணைகள் என கரடுமுரடான பாதையில் மிக அனாயசமாக காற்றில் மிதப்பது போலச் செல்கிறது மொழிநடை.  வயலட் நேரடிப் புனைவுகளையும் தொடர்ந்து எழுத வேண்டும்.

வில்லியம் ரைஸ் டேவிஸ், ஹெர்மன் ஓல்டன்பெர்க் , எரியும் நூலகத்தைக் கனவில் கண்டலறும் புத்த பிக்கு,  கே.எஸ் என தொடரும் வரிசையில் ஆனந்தியும் தம்மபதத்தின் பிரதிக்குள் தொலைந்து போகிறாள். தம்மபதத்தின் தத்துவச் சுழல்களுக்குள் அமிழும் ஆனந்தியின் முன் கலங்கரை விளக்காகச் சுடர்வது சிறிய குருசடியில் கடல் பச்சை நிறச் சேலையில் ஒளிரும் மேரியின் முகம்தான். அந்த முகமே கௌதமியைப் புரிந்து கொள்ள ஆனந்திக்கு உதவுகிறது.

மனம் உருகிப் பிரார்த்தனை செய்ய முயற்சிக்கும் ஆனந்தியிடம் அவள் மனம் உன்னால் அது முடியாது என்று கெக்கலி கொட்டுவதை என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. என் தோழியர் சிலருக்கும் தெய்வ நம்பிக்கையென்பது மிக பலவீனமானதொரு சரடாகத் தொடர்வதால் பல சமயங்களில் கோவிலில் சுற்றியுள்ளோரின் பக்தி பாவத்தைக் கண்டு வியந்து, நாணியதை அவர்கள் விவரித்தது படிக்கையில் நினைவில் எழுந்தது.

வழக்கமான கதை, அதற்கொரு முடிவு என்றில்லாது ஆனந்தியின் நாட்குறிப்பை எட்டிப் பார்ப்பது போன்ற வாசிப்பனுபவத்தை தந்த நாவல் இது.

மனச் சோர்விலிருந்து மீண்டெழ உளவியலில் முன்வைக்கப்படும் வழிமுறைகள் செயல்படுவது என்பதுதான். சின்னச் சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுவது, முன்பு மனதிற்கு இன்பமளித்துக் கொண்டிருந்தவற்றை மீண்டும் கையிலெடுப்பது ஆகியவையே சிறிய அளவிலான மனச்சோர்விலிருந்து மீளும் வழிமுறைகள். எனவே ஆனந்தி யசோதாவிற்காக முன்வைத்த வேண்டுதலையே நானும் அவளுக்காக முன்வைக்கிறேன்.

அவள் மனதில் சொற்கள் தோன்றட்டும்.அவள் பாதை வெளிச்சம் அடையட்டும்.

புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்

 நம்பியின் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை படிப்பது 'இன்பமும் துன்பமும்' கலந்தது என்று போகன் சங்கர் வேடிக்கையாக குறிப்பிடுகிறார். படிப்பது இன்பம் என்றால், இது போன்ற ஆழ்ந்த கட்டுரைகள் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் காணப்படுவதில்லை என்ற நினைப்பு துன்பம் என நாம் அதைப் புரிந்து கொள்ளலாம்.

ரொபர்தோ பொலானோ (Roberto Bolaño), ராபர்ட் வாரன் (Robert Warren), மேக்ஸ் சீபால்ட் (W. G. Sebald), மார்சல் ப்ரூஸ்ட் (Marcel Proust), டி எஸ் எலியட் (T S Eliott), நைபால் (V S Naipaul), சால் பெல்லோ (Saul Bellow), ஆல்பர்டோ மாங்கெல் (Alberto Manguel), கொர்த்தாஸார் (Julio Cortázar) போன்ற உலக இலக்கிய படைப்பாளிகளைப் பற்றியும், பேகம் ருகையா, தாராசங்கர் பங்கோபாத்யாய, பாதல் சர்க்கார் போன்ற இந்திய இலக்கியவெளியில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களை பற்றியும், சி சு செல்லப்பா, அசோகமித்திரனில் தொடங்கி சமகாலத்து கவிஞர்களான ந ஜெயபாஸ்கரன் மற்றும் இன்றைய இணைய தலைமுறையின் நட்சத்திரங்களான மயிலன் சின்னப்பன், போகன் சங்கர், சுனீல் கிருஷ்ணன், ரா கிரிதரன், காலத்துகள், எஸ் சுரேஷ் போன்றோரைப் பற்றியும் நம்பியின் பார்வையில் விரிவான விமர்சனக் கட்டுரைகள் வெளி வந்திருக்கின்றன.
ஓர் அரிய, அசந்தர்ப்ப தருணத்தில் என்னுடைய 'கால்பந்தாட்டம்' பற்றிய கவிதை ஒன்றைக் கூட சிலாகித்திருந்தார் நம்பி. அக்காலத்தில், ஞாலத்தின் மானப் பெரிய தருணங்களில் ஒன்று.
அப்புறம்தான் அது நிகழ்ந்தது. 'அரூ' என்றோர் அறிவியல்-புனைவுகளுக்கான பத்திரிகை தொடங்கப்பட, நம்பி 'புனைவாசிரியர்' அவதாரம் எடுத்தார். நகுலனின் வசனங்கள் என அவருடைய புனைவுலகம் ஒரு புதிர்பாதை (Maze track) என பேருரு எடுத்துக் கொண்டது.
விரிந்த வாசிப்பின் பின்னணியிலிருந்து, தன்னை ஒரு படைப்பாளியாக முன்னிறுத்திக் கொள்வோரின் ஆதார சிக்கல், அவர்களே அவர்களுடைய எழுத்தின் தீவிர விமர்சகராக இருப்பார்கள். அந்த அக்னி பரீட்சையைக் கடந்து அவர்கள் மேலெழுந்து வருவதே அவர்களுடைய முதல் வெற்றி.
சுனீல் கிருஷ்ணனின் தலைமையில், போகன் சங்கர் வெளியிட, கார்த்திகை பாண்டியன் பெற்றுக் கொள்ள நம்பி கிருஷ்ணனின் 'கடவுளும் கேண்டியும்' சிறுகதைத் தொகுப்பு, இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் சிறப்பானதொரு முறையில் வெளியாகி இருக்கிறது.
Nakulvacan had arrived. வாழ்த்துகள்.
('கடவுளும் கேண்டியும்' நூலின் முன்னுரை என அடியேன் எழுதியது, தற்போது சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கிறது. அதன் மறுபதிப்பு இங்கே)



ரு கதை அதனை எழுதியவரை விட்டு வாசகனை நோக்கிம் நகரும் வெளியில், அக்கதையின் ஆத்மா தன்னை நிகழ்த்திக் கொள்கிறது என்கிறார் நகுல்வசன்.  கேட்பதற்கு ஏதோ புரிவது போலவும், அதே சமயத்தில் புரியாதது போலவும் இருக்கிறது.  மேற்பட்ட வாசகம், இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘கடவுளும் கேண்டியும்’ என்கிற கதையில் இடம்பெற்றிருக்கிறது.  பார்த்தவுடன், வாசகர்கள் தாவிக் குதித்து தாண்டி ஓடும் பாண்டி ஆட்டத்து கட்டங்கள் போலத்தான் நகுல்வசனின் புனைவுகள் சுவாரசிய முகப்புகளைக் கொண்டிருக்கின்றன.  ஆனால் அவை சட்டென முப்பரிமான தோற்றம் கொண்ட புதிர் பாதைகளென (Mazes) நம்மை வெவ்வேறு திசைகளில் செலுத்துகின்றன.  திரும்பும் இடங்கள் எல்லாம் புதிய வாசல்களைக் கொண்டு வளைந்து வளைந்து செல்லும் புதிர்பாதைகள்.

கதைசொல்லிகளுக்கும் வாசகர்களுக்கும் ஓர் உணர்வுமயமான ஒப்பந்தம் அமைய வேண்டியிருக்கிறது.  ஆயுர்வேத பத்திரிகை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை, ஒரு காலணாவிற்கு (1940களின் நாணயம். ஒண்ணரை பைசாவிற்கு சற்றே கூடுதலான மதிப்பு கொண்டது) கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு கடவுள் பிரசன்னமாகிவிடுகிறார். 

அவ்வளவே ஆன விவரணையுடன் புதுமைப் பித்தனுக்கு தனது புனைவு வெளியில் கடவுளை ஒரு கதாபாத்திரமாக்கி விட முடிகிறது. அதை வாசகர்களாகிய நாமும், அப்படியே ஏற்றுக் கொண்டு கதைக்குள் புகுந்து விடுகிறோம். நம்பிக்கை மாறுபாடோ, பாரபட்ச கண்ணோட்டமோ எதுவுமில்லாமல் பிள்ளையவர்களின் அனுபவத்திலிருந்து, அவருடைய கடவுள் பிம்பத்தை நாமும் ஒற்றியெடுத்து அனுபவித்து, ரசித்து சிரித்து வைக்கிறோம். 

“உங்களுடனெல்லாம் கூட இருந்து வாழ முடியாது” என்று ஒட்டுமொத்த மனிதர்களைப் பற்றியும் அங்கலாய்த்து விட்டு மறைந்து போன கடவுளை விட, அவருடன் சமத்காரமாக பேசி ஜீவிய சந்தாவை வசூலித்து விடும் கந்தசாமியை விட, ஊருக்குப் போய்விட்ட தாத்தாவைக் கேட்டுக் கொண்டே எழுந்திருக்கும் குழந்தையிடம் ஒரு மகத்தான உணர்வுப் புள்ளியை பொதிந்து வைக்கிறார் புதுமைப்பித்தன். பிள்ளைக்கு வரும்படி ஒரு ஜீவிய சந்தா என்றால், நமக்கு வரும்படி அந்தக் கதையின் அங்கதமும், வாசிப்புச் சுவையும், தத்துவப் புலங்களும், இது போன்ற உணர்வு மையங்களும். 

1940-களில் கட்டிய ஆயுள் சந்தாவிற்கு இன்றுவரை ஒரு சஞ்சிகையும் கிடைக்கப் பெறாத கடவுள், கந்தசாமி பிள்ளையின் ஆயுர்வேத கட்டுரை ஒன்றைத் தேடி, பிள்ளையவர்களின் பேரனின் முன்பு, அதே பிராட்வே, எஸ்பிளனேட் சந்திப்பில் பிரசன்னமாகிறார். இம்முறை, இந்த எஸ்பிளனேடு சந்திப்பு, பாஸ்டனில் இருக்கும் எஸ்பிளனேடு ஆற்றின் ஓரமாக இருக்கிறது. பேரப்பிள்ளையான கந்தசாமி (அமெரிக்க சூழலுக்கென ‘கேண்டி’), மெய்நிகர் கணிணியியல் சஞ்சிகை நடத்துகிறான். படைப்புக் கடவுளுக்கென புதிய படைப்புலகங்கள் திறக்கின்றன. 

கதாசிரியர் நகுல்வசனை நாம் சென்றடையும் முன்னர், ஓர் இலக்கிய விரிவுரையாளரின் பெருநிழலை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. நுட்பங்கள், உத்திகள், பாணிகள் என்று திறமைமிக்க இலக்கிய வித்தகரின் உலகு அது. புதுமைப் பித்தனின் மூன்றாம் தலைமுறை கதைசொல்லிகளென செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சினாப்டிக் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக விவரித்து கணிணியையும் கண்ணீர் மல்க வைக்க முடியும் என்கிறார் நகுல்வசன். 

நியூரோ மேப் வழியே கடவுளின் நினைவு அடுக்குகளை படம் பிடித்து அவருடைய உயிர்த்தெழலை, அதன் வழியே அவர் கொள்ளும் விழைவை காட்சிப்படுத்துகிறார் கதாசிரியர். தாத்தா கந்தசாமி பிள்ளையுடன் தத்துவ விசாரம் நிறைவு கொள்ளாது, விடைபெற்றுச் சென்ற கடவுளுக்கு, பேரன் கேண்டியின் வி ஆர் (Virtual Reality) சோதனைகள் வழியே அவருடைய விழைவுகள் நிறைவு கொள்கின்றன.  கேண்டி ஜாக்கிரதையாக, தாத்தாவின் நண்பருக்கென ஆண்டு சந்தாவை மட்டும் பற்று வைத்து, கடவுளுக்கு நல்ல மனுஷன் என்று சான்றிதழ் அளிக்கின்றார். 

தமிழ் இலக்கியத்தின் ஒரு சிறந்த புனைவை அதன் உணர்வுபுள்ளிகளின் தாக்கங்களை அடையாளப்படுத்தி, அறிவியல் புனைவு வெளியில் அதற்கென ஒரு நீட்சியை உருவாக்கியவர், அடுத்து, செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் கொண்டு “இறைவர்க்கோர் பச்சிலை” சிறுகதையில் தி. ஜானகிராமனை பற்றிக் கொள்கிறார்.  

செவ்வியல் சங்கீதத்திற்கான அடிப்படைகளை கணிணிமயமாக்குவதோடு, பாடகரின் மனோதர்ம கூறுகளை இணைத்து கச்சேரி செய்யும் ஏஐ பாடுகள் (AI Bots) என்று சுவாரசியக் களம். மெள்ள மெள்ள மணி ஐயர், அரியக்குடி ராமானுஜர், முசிறி சுப்ரமணியம், மகராஜபுரம் விஸ்வநாதையர் என்று பிரபலங்களின் பிரத்யேக நுணுக்கங்களை, திஜாவின் பாணியில், ஆங்காங்கே அலாதியான வர்ணனை வடிவங்களில் தூவிக்கொண்டு வருகிறார்.  காருகுறிச்சியாரின் பிர்காவைப் பற்றிய குறிப்புடன் கணிணியுடனான விவாதம் அப்படியே அறிவியல் புனைவு வெளியில் நம்மை நேரடியாக இறக்கி விட்டுவிடுகிறது.  நல்ல குரல்வளமும், திடமான சாகித்ய பாடமும், ஸ்வரபிரஸ்தாங்களில் தீர்க்கமும், ராக லட்சணங்களின் பூரண ஞானமும், இன்னமும் பல சங்கீத நுணுக்கங்கள் கைவரப் பெற்றிருந்தாலும், பிரவாகமென நிகழும் பாடலுக்கென ஒரு தருணம் அமைய வேண்டியிருக்கிறது.  சங்கரனின் பிலச்சுடேவையும், வதஸி யதி அஷ்டபதியையும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆசிரியர் அமைத்து வைத்திருந்ததை வாசிக்க நமக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அந்த மனோதர்மத்தைத் தேடிச் செல்கின்ற சிஷ்யனுக்கு ஒரு சிறு உபதேசமென மோகமுள் பாபுவை உதாரணமாக காட்டுகிறார் சங்கரன்.  பாரம்பரிய செவ்வியல் கலைக்கும், முன்னேறிப் பாய்ந்து செல்லும் தொழில்நுட்ப பிரவாகத்திற்கும், யாவர்க்கும் ஒரு பச்சிலை கொண்டு பூஜிக்க வேண்டும் என்ற திருமூலரின் கூற்றைக் கொண்டு வழிபடுகிறார் ஆசிரியர்.  சங்கரன் தன் அகத்தில் ஒலிக்கும் ஆதார ஸ்வரத்தின் ரீங்காரத்துடன், இசைக்கு நெக்குருகி நிற்கும் மனைவியிடம் திருமந்திர வரிகளைக் முணுமுணுத்தபடி அமைதி அடைகிறார்.  அந்தக் கதையில்,  ஒரு சிறிய வரியில் ‘கைகளால் கடிதம் எழுதுவதில்’ இருக்கும் அலாதியான சுகம் பற்றி வருகிறது.  

அந்தப் புள்ளியை அப்படியே விவரித்துக் கொண்டு “அரூ அறிபுனைப் போட்டி #500” சிறுகதையில்.  நான்கு பகுதிகளாக, அறிவியல் நுட்பங்களின் கார்னிவெல் ஒன்றை நிகழ்த்துகிறார் நகுல்வசன்.  அதிவேக கணிணித் திறன் மானுடத்தை விஞ்சி, பூமியைக் கையகப்படுத்திய ஒரு காலத்தில், நுண்கிருமி தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட போதிலும், ஓர் எதிர்பாராத அபாயம் ஒன்று கனன்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது.  அதிவேக கணிணிகள் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொண்ட காலத்தில், மூளைத்திறன் எனும் நுட்ப வேறுபாட்டிற்காக மானுடத்தனத்தை ஓர் அடையாளமாக மட்டும் கொள்ள, அதன் பக்கவிளைவாக பரந்து விரியும் கற்பனை வெளி எனும் வழூவை சீர் செய்வதாக  முடிகிறது அந்தக் கதை.

பாரம்பரிய கர்நாடக சங்கீத மரபு, தமிழிலக்கிய நுகர்ச்சியின் கிளர்த்தல்கள், இவற்றின் பின்னணி கொண்ட கதை மாந்தர்களைக் கொண்டு அறிவியல் புனைவு வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நம்மை, முற்றிலுமான வேறொரு அனுபவத்திற்குள் ஆழ்த்துகிறது “வூப்பிங்-பை’.  ஓர் அமெரிக்கக் குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு அசலான, யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான பதிவாக அமைந்திருந்தது.  நேரடி இந்தியப் புனைவுகளில் இதொரு குறிப்பிடத்தக்க முயற்சி.  பெக்மென் தம்பதியரின் வாழ்வில் ஒரு முக்கியமான காலக்கட்டம் அது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லவிருக்கும் மகனுடனான அவர்களுடைய நினைவு தொகுப்பு.  மகனுடைய பதினெட்டாவது பிறந்தநாளை சாக்காக வைத்து, தனக்குப் பிடித்த இசைத்தட்டுகளை, ஆடம்பரமான விலைக்கு தந்தை வாங்கி வருகிறார்.  இப்படித்தானே, பிள்ளைகளை முன்னிறுத்தி, அவர்களை மையப்படுத்தி, பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை சக்கரத்தை சுழல விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  டிம்மிக்கு பிடித்தமான வூப்பிங்-பை சமைக்கும்போது, அது சரியாக வரவேண்டும் என்று சாரா தெய்வங்களிடம் வேண்டுதல் வைக்கின்றார்.  ஏனோ,  அவருடைய வேண்டுதல்களுக்கு அவை செவிசாய்க்கவில்லை.   கதையின் இறுதியில் சாராவிற்கே உண்டாகும் வூப்பின் பை-க்கான ஏக்கத்தையாவது அந்த தெய்வங்கள் மனமிரங்கி தீர்த்து வைக்கட்டும்.  

ஒரு கொடூர வன்புணர்வு அசம்பாவித்த மனநெருக்கடியிலிருந்து மீண்டெழும் மனப்போராட்டத்தில், நிஜக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் உறுதியுடன் தன்னை நடத்தி செல்லும் ஜென்னியின் அனுபவ பயணமாக இருக்கிறது ‘நிஜத்தின் நிழல்’.  எதிர்பாரா தருணத்தில் தன் மீது பாய்ந்து மிருகபலத்துடன் ஆக்கிரமிக்கும் ஒருவனை எதிர்த்து நிற்கும் அந்த தருணத்திலேயே ஜென்னியின் போராட்டம் தொடங்கிவிடுகிறது.   மோசமாக தாக்கப்பட்டு நினைவை இழப்பதற்கு முன்பு, அந்தக் குற்றவாளியின் அடையாளங்களை நினைவில் தொகுத்துக் கொள்ள முயல்கிறாள். அந்தக் கோரச் சம்பவத்தின், அருவெறுப்பான மனப்பாதிப்புகளையெல்லாம் கடந்து, போலிசார், வக்கீல்கள், கோர்ட்டார் என்று பல அமைப்புகளின் சட்ட நடைமுறைகளில் திடமான பங்கெடுத்து, குற்றவாளிக்கான தண்டனையை பெற வைக்கிறார்.  ஆனால் ஜென்னியின் பயணம் அங்கே முடியாமல், மற்றுமொரு திருப்பத்துடன் தொடர்கிறது.  இம்முறை, குற்றவுணர்ச்சி மிகுந்த மனப்போராட்டத்தின் வழியே.  ரயில்கள் ஓடாத, பழைய இருப்புப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் ஜென்னியின் பாதையின் இறுதியில் என்றாவது ஒரு விளக்கொளி எழக்கூடும்.  அந்த விளக்கொளியின் பின்னரும் ஒரு கரிய நிழல் படிந்துக் கொண்டிருக்கக் கூடும்.  

காந்தியின் வாழ்வனுபவங்களைப் பற்றி நாம் அறிமுகமாவதற்கு முன்பே அவரைப் பற்றிய மகாத்மா என்கிற பிம்பம் நம்மைப் பற்றிக் கொண்டு விடுகிறது.  ஆனால், அவரை ஒரு மனிதனாக அணுகி, அந்த வாழ்வனுபவங்களை நாம் உன்னிப்பாக படிக்கும்போது, சராசரி நிலையிலிருந்து உன்னதத்தை எட்டிப் பிடிக்கும் ஓர் இலட்சியவாத தத்தளிப்பைக் காண முடியும்.  தன் அன்னைக்கும், மனைவிக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் மனிதன், அந்த எளிய வாக்குறுதிகளிலிருந்து பிறழாமல் இருக்க அவர் கடைபிடித்த நிலையுறுதியின் வீச்சு, இந்திய சுதந்திர போராட்டத்தின் ஆணி வேராக நிலைபெற்றது.  டாக்குமென்டரி தரவுகளைக் கொண்டு, அகப் போராட்டப் புள்ளிகளை கட்டமைத்து எழுதிய  நுட்பமான வரலாற்றுப் பதிவு “இவன் மனிதன்’.  

ஒரு புனைவின் நீட்சியாக, அல்லது பக்கவிளைவாக மற்றொரு புனைவை உருவாக்கும் புதிர்பாதை விளையாட்டின் இன்னுமொரு வடிவம் ‘வழியனுப்புதல்’.  பதாகை பத்திரிகையில் ‘சம்பவம்’ என்கிற குறுங்கதை சட்டகத்தில், சிகந்தர்வாசி என்கிற எஸ். சுரேஷ் எழுதிய ‘ஹௌடா’ கதையின், இணை கோடாக நிகழ்கிறது வழியனுப்புதல்.  ‘ஹௌடா’விற்கு முற்றிலும் வேறான சூழல்களின் பின்னணி, கதை மாந்தர்கள், மனநிலைகள் என நிகழ்கிறது ‘வழியனுப்புதல்’.  இடையில் ஒரு புள்ளியில் இரு கதைசொல்லிகளும், இரயில் ப்ளாட்பாரத்தில் நிகழும் ஒரு அசந்தர்ப்ப சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கால்பந்து போட்டியின் மீது கவனத்தைத் திருப்புகிறார்கள்.  ஆனால் அந்த சம்பவத்தின் பாதிப்பு அவர்களுக்கு இருவேறு மனநிலைகளை அளிக்கிறது.  

சமூக ஊடகங்களில் தங்கள் சுய அனுபவங்களை, சுவாரசிய துணுக்குத் தெறிப்புகளிலிருந்து, ஒரு கேம்ப்ஃபயர் களியாட்டக் கூடலில் சுற்றியமர்ந்து கொண்டு சேர்ந்து உருவாக்கும் கேளிக்கை புனைவுகள்வரை பலவகையில் உருவாகி வருவதைக் காண முடிகின்றது.  மேலும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் கொட்டிச் செல்லும் அரைகுறை பிரதிகள் மலிந்த நவீன காலத்தில், புனைவெழுத்தின் எல்லைகளை நகுல்வசன் அநாயசமாக விரித்துக் கொண்டு செல்கிறார்.  வருங்கால குவாண்டம் கணிணிகளின் அதிவேக செயல்பாடுகளின் நுணுக்கங்களை புதிய கலைச்சொற்கள் கொண்டு அழகுதமிழில் விவரிக்கும் ஒரு கோடியிலிருந்ந்து, ஒரு நவீனக் கவிதையைத் திறக்கும் நுண்ணிய புள்ளியை விளக்கிக் காட்டும் மற்றொரு கோடியின் படைப்பூக்க நிலைக்கு பாயும் நகுல்வசனின் விஷய ஞானம் அபரிமிதமானது.  ஏழு கதைகளைக் கொண்ட இந்த சிறிய தொகுப்பு, நகுல்வசன் அமைக்கும் புதிர்பாதைகளூடே, ஒரு சிறந்த  புனைவுப் பயணத்தை நமக்கு அளிக்கின்றது.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

கிணற்றை மூழ்கடித்த வெள்ளம்: ஜே ஜே சில குறிப்புகள்

(சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் "நூல் வாசிப்பு முற்றம்" சார்பாக, "ஜே ஜே சில குறிப்புகள்" நூல் பற்றிய எனது கருத்துரை, 9 நவ 2023, வியாழனன்று ஒளிபரப்பாகியது. அதன் எழுத்து வடிவம்)



1978க்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நூலைப் பற்றி 2023ம் ஆண்டில் நாம் பேசுவதற்கான தேவை இந்த நாவலிலேயே இருக்கின்றது.  இந்த நாவலின் எழுத்தாளரும், அதில் படைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளரும், அவர்களின் தீர்க்கதரிசனமாக முன்வைப்பது, 90களுக்கு பிறகு, தமிழ் இலக்கியம் தன்னுடைய குறுகிய எல்லைகளை கடந்து பரந்த வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதுதான்.  '21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிற்குள், ஒரு தவளை கூட கிணற்றுக்குள் இருக்க முடியாது.  அப்படி பிடிவாதமாக வெளிவராதவை உயிர் மூச்சற்று அழிந்து போகும்" என்கிறார் எழுத்தாளர்.  அதாவது கிணற்றுத் தவளைகள் உலகளாவியத் தவளைகளாக ஆகிவிடும் என்பது எழுத்தாளர் மற்றும் ஜேஜே-வின் முடிபு.  

இந்திய பண்பாட்டு விசாரமும், மேற்கத்திய தர்க்க சிந்தையும் ஜேஜே-யின் எழுத்தின் சாரமாக, பாலுவால் அடையாளப்படுத்தப்படுகின்றன.  

கோபாலகிருஷ்ண அடிகா, குட்டிக்கிருஷ்ண மாரார், என்று, இந்திய பெருநிலத்தின் ஒரு பெரும் முன்னோடி எழுத்தாளர் பரிவாரத்தை , மொழிகளைக் கடந்து இந்த சிந்தனைப் பிரவாகத்தை எப்படி இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற ஆற்றாமையின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் இந்த நாவல் என்று குறிப்பிடுகிறார்.  



இந்த நாவலில் இடம்பெறும் உதாரண எழுத்தாளரான ஜேஜே-விலிருந்து ஏனைய பல எழுத்தாளுமைகளுக்கு ஒரு முன்மாதிரி நிஜங்கள் உண்டு.  முல்லைக்கல் மாதவன் நாயர்,  முளங்காடு கிருஷ்ண வைத்தியர் ஐயப்பன். திருச்சூர் கோபாலன் நாயர் எனப் பலரும் மலையாள எழுததுலகின் உண்மையான முகங்கள் என்று பல விமர்சனக் குறிப்புகளிலிருந்து நாம் அறிகிறோம்.  அந்தவகையில் இதன் கதைசொல்லி பாலுவின் எண்ணவோட்டங்களுக்கு ஒரு தீர்க்கமான பின்புலம் நமக்குப் புலனாகின்றது. ஒரு அனுபவக் குறிப்பு, அல்லது பத்திரிகை செய்தி என எடுத்துக் கொண்டு அதை ஜேஜே-வின் பார்வையில் விவரித்துக் கொண்டே, பாலுவின் பார்வையினூடே செல்கிறது நாவல்.  பாலுவின் ஆதர்சம் ஜேஜே என்றால், ஜேஜே-யின் நிர்தாட்சண்யமான எழுத்துத் தீவிரம் பாலுவிடம் படிந்திருக்க வேண்டும்.  ஆனால் எழுத்தாளரால் அந்த இடத்தை விலகியிருந்து ஆராதிக்க மட்டுமே முடியும் என்பதால், ஜேஜே-வும் பாலுவுமாக இணைகோடுகளுக்கிடையே ஒரு தர்க்கபூர்வ உணர்ச்சி தத்தளிப்பை நிகழ்த்துகிறார் நாவலாசிரியர்.  இந்த அனுபவக் குறிப்புகளின் மேல் நிகழ்த்தப்படும் தத்துவ விசாரணைகள்,  அவை நிகழ்ந்த பின்புலன்கள் பற்றிய மேலதிக தகவல்கள், அவற்றிடையேயான எழுத்தாளரின் அகப்பயணம், இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் அழகியல் என்று ஒரு கலாபூர்வ நிறைவைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். 

நோயுற்றிருந்த இளம்பருவத்தில், புனைவுலகை அடைக்கலமாகக் கொண்ட, கற்பனாவாத இளைஞனுக்கு, ஜேஜேயின் ஆண்-பெண் உறவுப் பற்றியக் கட்டுரை ஒன்று பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.  மாய்மாலங்களும், பொய்முகங்களும், எவ்வித சமரசங்களும் அற்ற, ஏளனங்களும் நுண் கேலிகளும் செறிந்த அப்பட்டமான எழுத்து. ஒருவகையில் ஜேஜே-வின் பரிச்சயம் பாலுவை கற்பனாவாதச் சூழலிலிருந்து தரைக்கு இழுத்து வருகிறது.  அதொரு கிராஷ் லேண்டிங் போன்ற நிலைகுலையவைக்கும் தரையிறக்கம். அதைத் தொடர்ந்து  பாலு தன்னுடைய சிறுவயதில், தன் சகோதரியுடனான பால்ய விளையாட்டை பகுத்தாராய முற்படுகிறார்.  ஒரு நெருக்கடி நிலை அளிக்கும் உந்துதலும், அதை சமாளிக்க முற்படும்போது உண்டாகும் தீவிரத்தின் பரவச நிலையும் ஒரு பகுதி.  அதன் வழியே அடையும் வெற்றியினால் உண்டாகும் மகிழ்ச்சி.  இடையே அந்த பாவனை உலகு விலகி, கனவுகள் பிடுங்கப்படும்போது உண்டாகும் அவஸ்தை.  இந்த மூன்று பகுப்புகளை நம் வாழ்வின் எந்தவித பகுதிகளுக்கும் நாம் பொருத்திக் கொள்ள முடியும்.  நாராயண குருவின் சீடரான சத்தியானந்தரின் ஆசிரமத்தில் பாலுவின் உடல் நோய்களுக்கு சிகிச்சைகள் நடக்கின்றன.  சத்தியானந்தரின் மானுட சேவையில் தன்னை கரைத்துக் கொள்ளும் உன்னத நோக்கம் எவ்வளவு தூரத்திற்கு பயன்தரும் பெறுமானத்தைக் கொண்டது என்ற நிதர்சனம் பாலுவிற்கு உறைக்கிறது.  சத்தியானந்தரின் தீர்க்கமான ஒருமுகப்பட்ட நோக்கிற்கு எதிர்மாறாக, அனைத்திலும் அலைக்கழிக்கப்படும், எதிலும் கொஞ்சம் நம்பிக்கையும், தொடர்ச்சியான தேடுதலையும் கொண்டவனாக, தன்னை உணர்கிறார் பாலு, முக்கியமாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜேஜே-வால், அவனுடனான சந்திப்புகளால், அவனுடனான கருத்து பரிமாற்றங்களால் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும் என பாலு நம்புகிறார்.  பதிலுக்கு இவரால் தமிழிலக்கியத்தின் உச்சத்தை ஜேஜே-விற்கு கடத்தி விட வேண்டும் என்பது பாலுவின் விழைவு.  

ஜேஜே-வை சந்திக்கச் செல்லும் எழுத்தாளர் மாநாட்டில் திருச்சூர் கோபாலன் நாயரை சந்திக்கின்றார்.  பாலுவின் ஆதர்ச எழுத்தாளர்கள் தளத்தில் இருப்பவரல்ல கோபாலன்.  முற்போக்கு சரித்திர நாவல் என்ற பெயரில் பிற்போக்கான படைப்பை உருவாக்கியவர் என்பது பாலுவின் கணிப்பு.  அதற்கேற்றாற்ப் போல அவருடைய ஆதர்சமான ஜேஜேவின் எழுத்து, கோபாலன் நாயருக்கு அந்நியமாக இருக்கிறது.  அங்கே ஒரு புத்தகக் கடையில் வைத்து ஜேஜே-வை முதன்முதலாக பார்க்கிறார் பாலு.  சேர்த்தலை கிருஷ்ண ஐயர் மற்றும் முன்ஷி வேலுப் பிள்ளை போன்றோரின் பேச்சுக்களை விட ஜேஜே-வின் பேச்சு இளைஞர்களை ஈர்க்கிறது.  பாலுவும் அறிமுகப் படுத்தப் படுகிறார்.  அப்பொழுதுதான் ஜேஜே-யின் புகழ்பெற்ற வாசகமான 'சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?" கிண்டலை பாலு எதிர்கொள்கிறார்.  அது அன்றைய தீவிர இலக்கியச் சூழலில் எழுத்தாளர் கல்கியை கேலி செய்த போக்கின் எதிரொலி.  புதுமைப் பித்தனைப் பற்றி ஜேஜே-விடம் பாலு பிரஸ்தாபிக்க முற்படும்போது, முல்லைக்கல் மாதவன் நாயரின் வருகையோடு அந்த சந்திப்பு முடிந்து போகிறது.  

சூரியனை நோக்கி பறக்க முற்படுவதற்கும், கூரை மேலேறி கூவும் கோழியின் நிலைப் பற்றியுமான பாலுவின் விசாரம் தொடர்கிறது.  ஜேஜே தன்னுடைய நெருக்கடி காலத்தில் மிகுந்து உந்துதலோடு செயல்பட்டிருக்கிறான்.  ஆனால் வேதனைகளுக்கும், வறுமைக்கும் மத்தியில்தான் எழுத்து பரிமளிக்க வேண்டுமென்பதில்லை.  சிந்தனை பீறிடும் எழுத்தை படைப்பிலக்கியமாக ஏன் கொள்ள முடியாது என்பது பாலுவின் கேள்வி.  

ஜேஜேயின் எழுத்தில் எம் கே அய்யப்பனின் தாக்கத்தைப் பற்றி பாலு குறிப்பிடுகிறார்.  எம் கே மார்ச்கியவாதி.  இந்திய மரபு சிந்தனைக்கு மாறான போக்கைக் கொண்டவர்.  அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்ட நிலைகுலைய வைக்கும் நோக்குடன் எழுதுவதை விட, ஒரு சமூக அமைப்பை மாற்றிப் போடும் விஞ்ஞான நோக்குடன் எழுதவேண்டிய அவசியத்தை பற்றி அவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்ததாக ஜேஜே-வின் நாட்குறிப்புகள் சொல்கின்றன என பாலு குறிப்பிடுகிறார்.  இந்த நாட்குறிப்புகள் பிற்பாடு பத்திரிகைக்கான எழுத்து பிரதிகளாக வடிவம் பெற்றிருக்கின்றன.  நேர் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட கேள்விகளின் மீது ஜேஜே-யின் எழுத்து விவாதங்களை கட்டியெழுப்புகின்றன.

வறுமையுற்ற சூழலில்தான் கலை படைப்பூக்கத்தின் உன்னதத்திற்கான வழி பிறக்குமென்றால், வறுமையும் வேண்டாம் கலையும் வேண்டாம் என்று ஆதுரத்துடன் சொல்லும் ஜேஜே கலையை காசாக்க மட்டுமே பயன்படுத்தும் வணிக மனநிலை மீது சிறிதும் மதிப்புக் கொள்வதில்லை.  இந்த சட்டகத்தை ஜேஜே வழியே பாலுவும், பாலுவின் வழியே கதாசிரியனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.  

கிருஷ்ண ஐயரின் ஒன்பது வயது பேத்தி, புல்வெட்ட வரும் கிழவன் ஒருவரின் சொந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே அவர் வேலையை முடித்துக் கொண்டு போகும்போது அவருடன் போய் விடுகிறாள். "அவர் ஒரு பாதி கதையை சொல்லி முடிப்பதற்குள் அவர் வேலை முடிந்து கிளம்பி விட்டார்.  மறுபாதியைக் கேட்க அவருடன் போய்விட்டு வந்தேன்" என்று அவள் விளக்குவதைக் கேட்காமல் வீட்டார் அந்த சிறுமியைப் போட்டு மொத்துகின்றனர்.  இந்த சம்பவத்தை ஜேஜேயின் நாட்குறிப்புகளிலிருந்து படிக்கிறார் பாலு.  கூடவே ஜேஜே-யின் மனைவி சரசம்மா "அந்தப் பெண் புத்திசாலி.  இன்னமும் கூட நேரம் கழித்து வந்திருக்க வேண்டும்" என்று சொல்கிறாள்.

ஏஜி சோமன் நாயரை சந்திக்க ஜேஜே வரும்போது பாலு வாசகநிலையிலிருந்து சற்று முன்னேறி சிறுகதைகள் எழுத்தாளனாகி விட்டார்.  இப்போது பாலுவிற்கு ஜேஜே-யுடன் முரண்படும் புள்ளிகளும், அப்படி முரண்படுவதற்கு அவருக்கான நியாயங்களும் தெரியத் தொடங்கிவிட்டன.  ஆனாலும் ஜேஜே-தான் தன்னை பழமைவாத வரம்புக்குள்ளிருந்து உந்தித் தள்ளி வெளிப்பட வைத்தது என்ற நம்பிக்கையில் மாற்றமில்லை.  அவர் உறக்கத்தைக் கலைத்து, சுரணைக் கெட்டத்தனத்தையும் தடித்தனத்தையும் குத்திக்காட்டி உணரச் செய்ததே ஜேஜே-வின் எழுத்துத்தான்.

அடுத்து ஓர் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி பாலு விவரிக்கும்போது, பாலுவும் ஓர் எழுத்தாளனாக அங்கீகாரம் பெற்று அந்த மாநாட்டின் விருந்தினராக கலந்து கொள்கிறார்.  அப்போது ஆல்பேர் காம்யு இறந்த செய்தி வருகிறது.  தொடர்ந்து ஜேஜே-வின் மரணச் செய்தியும்.  இந்துசூடன், கே பி கங்காதரன், தாமரைக்கனி, பசவப்பா என பல்வேறு எழுத்துலக தொடர்புகளிடையே தன் ஆதர்சத்தின் இறப்பை எழுத்தாளர் கடந்து செல்லும் காட்சி சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றது.  அதுவரை ஜேஜே-வை மையமாக கொண்டு பாலுவின் அகப்பயணமாக நகரும் நாவல், மெல்ல பாலுவின் புறவுலகை அவருடைய சுயபச்சாதாபமும், அங்கதமும் கலந்த விவரணையில் வாசகர்களுக்கு புலனப்படுத்துகிறது.  ஜேஜே-வின் மறைவிற்காக தன்னுடைய இரங்கலை இவ்வுலகிற்குத் தெரிவிக்க தத்தளிக்கும் ஓர் எழுத்தாளனாக பரிணாமம் அடைகிறார்.

ஜேஜே-வுடனான எழுத்தாளரின் நினைவோடை தொடர்கிறது.  நாம் ஒரு சம்பவத்தை நினைவடுக்குகளில் இருந்து மீட்டெடுக்கும்போது அதன் மீதான புதிய புரிதல்களும் திறப்புகளும் உண்டாகின்றன.  பாலுவிற்கும் அவர் தகப்பனார் எஸ். ஆர். எஸ்ஸுக்கும் அறிமுகமாகியிருந்த சம்பத்தின் நாட்டகத்திற்கு செல்லும்போது ஜேஜே-வை பாலுவின் அப்பா பார்த்தது பற்றி அடுத்த அத்தியாயம் பேசுகிறது.  காலத்தின் இடைவெளியிலோ, அல்லது தூரத்தின் இடைவெளியிலோ ஒரு காட்சி நமக்கு நன்றாக துலக்கமடைகின்றது என்று ஜேஜே சொல்வது அசோகமித்திரனின் நாவலில் வரும் கூற்றை ஒட்டி இருப்பதாகத் தெரிகின்றது.  நெருக்கத்தில் புலனாகாத பல நுணுக்கங்கள் அகல்கையில் உயிர்பெற்று நம்மை இழுத்துப் பிடிக்கின்றன.  ஜேஜே-வை ஓர் ஓவியனாக எழுத்தாளர் கண்டடையும் இடம் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது.  இத்தனைக்கும் அவர் அப்பாவுடனான அந்த பயணத்தில் ஜேஜே இடம்பெறவில்லை.  ஒரு அப்ஸ்ட்ராக்ட் (நுண்புல) வகை ஓவியத்தை  காட்சிபடுத்தும் அத்தியாயம் ஒரு சிறிய அப்ஸ்ட்ராக்ட் உத்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றது.  அது ஒரு சிறிய மறைமுக பொத்தான் (ஸ்விட்ச்) போல சரளமான விவரனைப் பகுதிக்கிடையே, அது மறைத்து பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது எனலாம்.

பாலுவிற்கு ஜேஜே போல, ஜேஜேவிற்கு ஓர் பெரும் அகத்தூண்டுதலாக அரவிந்தாட்ச மேனன் நாவலில் சொல்லப்படுகிறார்.  இசை இலக்கியம் ஓவியம் என்ற கலைகளின் கூட்டுப் பரிமாணமாக அரவிந்தாட்சன் போன்ற ஆளுமைகள் பாலுவின் மனதில் எவ்வகை தாக்கம் செலுத்தினர் என்பதை இந்தப் பகுதி வழியே நாம் புரிந்து கொள்ளலாம்.   ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஜேஜே-விற்கு எதிரில் நின்றிருக்கும் தொழுநோய் பிச்சைக்காரனைப் பார்த்ததும், ஜேஜேவின் சிந்தைப் பிரவாகம் கட்டற்று ஓடுகின்றது.  பிச்சைக்காரன் மீது இரக்கப்படுவது என்பது இயல்பு.  ஆனால் அதில் நம்மை நாமே ஒரு படி மேலே ஏற்றிக் கொண்டு கொடையளிக்கும் பீடத்தில் நம்மை வைத்துக் கொள்ளும் ஒரு மறைமுக ஈகோ உணர்வும் எழுந்து விடுகிறது.  'தான் கொடையளிக்கிறோம்' என்ற உணர்வின்றி ஒருவருக்கு அவருடைய நிலைக்கு சமமாக, முடிந்தால் அதற்கும் கீழாக தன்னை வைத்துக் கொண்டு கொடயளிக்க இயலுமா என்ன?  அப்படி உதவி பெற்றுக் கொள்பவர் சற்றேனும் சிறுமை உணர்வு அடையாமல், அதை வேறு வக்கிர பிரயோகமாக கொள்ளாமல் அதைக் கடந்து போக முடியுமா? இது என்னைப் போன்ற சாமானியர்களின் சிந்தைப் போக்காக இருக்கலாம்.  ஜேஜேவிற்கு இந்த கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரனுக்கு உதவும் நிலை இன்னமும் பன்மடங்கு விரிவான பெரும் அகச்சிக்கலாக உருவெடுத்து நிற்கின்றது.  அந்த சிக்கலில் ஜேஜே உழன்று தவித்து, தெளியும்போது பல மணி நேரம் கடந்து விட்டிருக்கின்றது.  இப்போது உணர்ச்சி பிரவாகத்துடன் அந்த குஷ்டரோகி பிச்சைக்காரனைத் தேடி ஓடி வேறொரு குஷ்டரோகியைக் காண்கின்றான்.  அவனுக்கு முன்னால் ஒரு வெள்ளி நாணயத்தைப் போட்டுவிட்டு, அவனால் அந்த நாணயத்தை தரையிலிருந்து பற்றியெடுக்க முடியுமோ என்று உடனடி உந்துதலில் அந்த நாணயத்தை எடுத்துக் கொடுக்க குனிகிறான்.  அந்த இடைப்பட்ட பின்ன நொடியில் அந்தக் குஷ்டரோகி அந்த நாணயத்தை தன் காலால் அழுத்திக் காபந்து பண்ணிக் கொள்கிறான்.  இந்த சம்பவம் ஜேஜே-வை பெரும் அவமானத்திற்குள்ளாக்குகிறது.  'ஜென்மக் கணக்கு' எனும் சிறுகதையில் இப்படியானதொரு அனுபவச் சித்திரத்தை நானும் எழுதியிருக்கிறேன்.  பாலுவோ, ஜேஜே-வோ அடைந்த அனுபவம் போல் அந்த சித்திரமும் என் அனுபவத்தின்பால் உந்தப்பட்டு உருவானதுதான்.  தன்னுணர்வு அற்று பிச்சையளிப்பது பற்றிய அகக் கூச்சத்தில் தடுமாறும் ஒரு பாத்திரம்.  எதிரில் இருக்கும் பிச்சைக்காரி அவன் தடுமாற்றத்தை மறுதளிக்கும் அகந்தையாக புரிந்து கொண்டு அவளிடமிருந்த ஓர் இருபது பைசா நாணயத்தை இவனுக்கு கொடுத்துவிட்டு விலகிப் போவாள்.  அந்த சிறுமையை எப்படிக் கடப்பது என்று அவன் அல்லலுறுவான். 

தனிநபர் சுதந்திர சிந்தையின் அபத்த வெளிப்பாடுகள் இப்படியான நம்பமுடியாத முரண்களில் கொண்டு நிறுத்திவிடுகின்றன.  முல்லைக்கல் மாதவன் நாயர் போன்ற வெகுஜன வணிக படைப்பாளிகளின் சிந்தைக்கு அப்பாற்ப்பட்ட வெளியில் ஜேஜே நின்று கொண்டிருக்கிறான்.  சாமர்த்தியமான பெயர் உதிர்த்தல்கள், உலக இலக்கிய வாசிப்பனுபவம் என்கிற பீற்றல்கள், மைய நிரோட்ட இலக்கிய போக்கில் எதிராக தருக்கி நிற்கும் அகந்தை, இவையெல்லாம் முல்லைக்கல் மாதவன் நாயரை சீண்டுகிறது.  ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை.  அதனால் உண்டாகும் எரிச்சல்களும் கோபங்களும் கிளர்ந்தெழுகின்றன.  தங்கள் நிலையை காபந்து பண்ணிக் கொள்வதற்கென இலக்குகளை மாற்றியமைத்துக் கொண்டு சாமர்த்திய கேள்விகளை சாடிக் கொள்கின்றனர்.  இடையே ஜேஜே-வின் வாழ்க்கையின் காதல் பக்கம் ஒன்று வந்து போகின்றது.  ஜேஜே-யின் மனைவி சாராம்மாவின் பார்வையில் ஜேஜே மிகவும் திறமைசாலியான அரசியல்வாதியாக இருக்கிறார்.  

அரவிந்தாட்சனின் சொற்களில், பாலுவிற்கு தெரிவது ஜேஜே தன்னை ஒரு பெரும் இசையுலக பெர்ஃபெக்‌ஷனிஸ்டாக வைத்துக் கொண்டு, ஏனைய அபஸ்வரங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் வாழ்க்கை முழுவதும் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றான். ஜேஜே-வின் மீது தீவிர விமர்சனம் வைத்திருக்கும் பலருக்கும் அவன் மீதான அபிமானம் குன்றியதில்லை.  மாறாக ஜேஜே-விற்கு எதுவும் பிடிக்காமல் போய்க் கொண்டிருந்தன.   பாலு ஜேஜே-வின் பால்யக்காலம் பற்றி பிரஸ்தாபிக்க ஆரம்பிக்கின்றான்.  ஜேஜே-வின் எழுத்துலக பயணம் பற்றி விரிவான பல குறிப்புகள் சொல்லப்படுகின்றன.  அவனுடைய கால்பந்தாட்ட விளையாட்டு அனுபவங்கள் பற்றி அவ்விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி ஜேஜே எழுதிய கட்டுரைகள், அவனுடைய தொழிற்சங்க நல பங்களிப்புகள், அதனால் சிறை சென்றது, அவனுடைய இன்னபிற புத்தகங்கள் வெளியான ஆண்டு என்று அவனுடைய இறப்புவரை நுணுக்கமாக தொகுக்கப்பட்ட குறிப்புகளை நாம் காண முடிகின்றது.  இந்தக் குறிப்புகளின் தொகுப்பு இந்த நாவலுக்கு ஒரு வித்தியாசமான வடிவத்தை அளித்தாலும் ஜேஜே எனும் ஆளுமைப் பற்றியதொரு குறுக்குவெட்டுத் தோற்றம் அளிக்கப்படுகின்றது.  தன்னுடைய அன்றாட பணிகளுக்கென, தன் குடும்பத்திற்கு தேவையான இதர வேலைகளுக்கென ஒரு குற்றேவல் புரியும் தேவதையை அவன் மனம் நாடுகிறது.  அப்போதுதான் அவன் இந்த சமூகத்திற்கான மகத்தான பங்களிப்பை சுதந்திரமாகவும், தீர்க்கமாகவும் செய்ய முடியும்.  இதே போன்றதொரு பாதிப்பை பாரதியின் வாழ்க்கையிலும் நாம் காண முடிகின்றது.  எங்கோ இருக்கும் கரும்புத் தோட்ட ஊழியர்களுக்காக மனம் இரங்கி கவிபாடும் மனதை அன்றாடப் பசிப்பிணிக்கென அல்லாட வைப்பது நியாயமாகுமா.

ஜேஜே-வின் இறுதிக் காலங்களில் அவன் இந்த மனித சமூகம் மீது தொடர்ந்து நிராசைக்குட்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஓர் எழுத்தாளனை நேர்த்தியாக மதிப்பிடுவது போல், ஜேஜே-வின் மூன்று முக்கிய நூல்களைக் கொண்டு, ஓர் அனுபந்தமும் இந்த நாவலின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.  இந்த நாவலுக்கு பின்னர் தமிழ்வெளியில் இது போன்ற நவீன போக்குகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் பல வந்திருக்கின்றன.  அந்தவகையில் ஒரு முக்கியமான போக்கை ஜேஜே சில குறிப்புகள் தொடங்கி வைத்திருக்கின்றன.

ஜேஜே-வின் மீதான பாலுவின் பிரேமை, மெள்ள மெள்ள ஜேஜே-வின் ஆதர்சமான அரவிந்தாட்ச மேனன் மீது சென்றடைகிறது.  பித்தேறிய படைப்பூக்க மனநிலையிலிருந்து, ஒழுங்கமைதி கொண்ட தாள லயத்துடனான செய்நேர்த்தியின் அடர்த்தி நோக்கி ஜேஜே நகர்கிறான்.  அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை நிரப்பும் அன்றாடச் செயலின் தாள லயத்துடனான இசைவில் மையம் கொள்ளும் ஜேஜேவின் குறிப்புடன் நாவல் நிறைவடைகிறது.  

பாலுவோ, அல்லது ஜேஜே-வோ தீர்க்கதரிசனத்துடன் சொல்லிய கிணற்றுத் தவளைகள் தங்கள் சுவர்களை தாண்டி வெளியே வந்து வெட்டவெளியில் இனிய சங்கீதம் பாட ஆரம்பித்து விட்டனவா என்றால் அதொரு நீண்ட விவாதத்திற்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது.  ஆனால் அந்த கிணற்றின் சுவர்களை அளந்து பார்க்க ஓர் அலகை இந்த நூல் நிச்சயமாக உருவாக்கித் தந்திருக்கின்றது.  இலக்கிய வெளி எனும் கிணற்றை மூழகடிக்கும் வெள்ளத்தின் தோற்றுவாய் என இந்த நூலைக் குறிப்பிட்டலாம்.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

சஞ்சயனின் கண்கள்

பிரபல எழுத்தாளர் பானுமதி நடராஜன் அவர்கள், அம்மாவின் பதில்கள் சிறுகதை தொகுப்பிற்காக எழுதிய நூல் விமர்சனம்.  புனைவுகள் மட்டுமல்லாது, "வாசிப்போம், தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " என்ற ஃபேஸ்புக் குழுமத்திலும் தொடர்ந்து வாசித்து, நுட்பமான விமர்சனக் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பானுமதி அவர்களைப் போன்றோரின் வாசிப்பு வீச்சு எப்போதும் வியப்பளிப்பது.  இந்தக் கட்டுரையின் தலைப்பு அதற்கோர் உதாரணம்.  இன்னுமொரு கிளப்ஹவுஸ் நிகழ்ச்சியில், 'கத்திக்காரன்' கதைக்கென அவர் முன்வைத்த விமர்சனமும் அபாரமானது.  இது போன்ற கருத்து  பகிர்வுகளைப் பெறுமிடத்தில் இனி எப்போதும் நம் எழுத்து இருக்க வேண்டும் என மனவுறுதி கொள்ளும்படியான விமர்சனத்திற்கு நன்றி ]



அம்மாவின் பதில்கள் & பிற கதைகள்
ஆசிரியர்: ஸ்ரீதர் நாராயணன்
பதிப்பகம்: யாவரும்-பதாகை
விலை ரூபாய் 170/_

சஞ்சயனின் கண்கள்
எழுத்தாளரின் 13 சிறு கதைகளும் வாழ்வெனும் போர்க்களத்தில் நடக்கும் அனைத்தையும் சஞ்சயனின் கண்களால் பார்த்திருக்கின்றன. எந்தத் தரப்பையும் சாராமல், ஆனால், எதையும் விட்டுவிடாமல் பார்க்கவும், பேசவும், மௌனிக்கவும் செய்கின்றன. போரின் முன்னே தோன்றும் அசாதாரண அமைதி, அறத்துடன் தொடங்கி பின்னர் அனைத்தையும் விட்டுவிட்டு உக்கிரமாகும் போர், தளர்ந்து, ஒசைக் கேவலுடன், கதறலுடன், பின் எப்போதுமே மறக்க இயலாத வடுக்களுடன், சிறிய இனிமை காட்டி, அதனால் சிறிது நிம்மதியூட்டி அடங்கும் போர் என்று அனைத்தும் கதைகளில் காணக் கிடைக்கின்றன.
விடுதலைப் போரில் எம்டன் செல்வரத்தினத்தை காட்டும் கதை அவரது வரலாற்று அறிவைச் சொல்கிறது என்றால், ஜென்மக் கணக்கும், அம்மாவின் பதில்களும் குடும்ப நிகழ்வுகள். எம்டன் செல்வரத்தினம் ,கிழக்குப் பதிப்பகத்தின் சென்னை தின சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. அதில் நான் ஆறுதல் பரிசு அஸ்வதா மாவிற்காக பெற்றேன் (சந்தடி சாக்கில் சுயபுராணம்) தரகு, உடைநீர் ஓசை, கற்பகம் மூன்றும் மையமாக பெண்ணைச் சுற்றி வந்தாலும் மூவருமே ஒவ்வொரு விதத்தில் வஞ்சிக்கப்பட்டவர்கள். ஆரஞ்சு பொம்மை, பிரார்த்தனை, செந்தாழை மூன்றிலும் தாய்மை கொண்டாடப்படுகிறது. ஆனால், மாறுபட்ட விதங்களில்.
அம்மாவின் பதில்களில் மனோதத்துவம் இழைஇழையாகப் பின்னப்பட்டுள்ளது.'அம்மாவைப் பற்றி பேசும் போதெல்லாம், நந்தினியின் குரலில் ஆங்காரம் ஏறிக்கொண்டே போகும். அவள் கோபம் அம்மாவின் மேலா, அல்லது அம்மாவின் இடத்தில் அவள் இல்லாமல் போனதாலா என்று சமயத்தில் அவனுக்கு சந்தேகம் ஏற்படும்.'. அம்மா, பழைய சம்பவங்களை நினைப்பதில்லை. அப்பா, தேங்கிய குட்டையாகி விட, அவள் ஜீவ நதியாக ஓடுகிறாள்_அடுத்த மாநிலம் எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டில்லை. அவளது கம்பீரமே அவள் சொல்லிக் கொண்டே இருக்கும் பதில்; விமர்சனங்கள் அவளை பாதிப்பதில்லை. ஆனால், மகன்'திகில் உலகில்'காண திரை :நிகழ்ச்சியில் திடீரென கத்தியபடி வரும் குள்ளனை பார்த்து பயப்படுகிறான்.
ஜென்மக் கணக்கு அக்னி நட்சத்திரப் போர். இதில் மகனுக்கும் சிற்றப்பனுக்கும் இடையே நிலவும் வார்த்தைகள் இல்லா வஞ்சப்போர்.'புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்ட'தயாளன் சமநிலையைப் பேணச் சொல்லுவது அபாரம். கதையின் முடிவில் குமரம்பெருமாள் காரில் எப்படி ஏறுகிறார் என்பதை படியுங்கள்.
தரகில் என்னை கவர்ந்தது, குறைவாகப் பேசி தன்னை நிறைவாக ஒரு சாட்சியாக மட்டுமே நிறுவிக் கொண்ட கருணாகரன் முத்தாய்ப்பாக சொல்வது
அருமையாக
இருக்கிறது_'அதானே, தரத்துக்கு ஏத்த தரகு, வடியலுக்கு ஏத்த விறகு '
உடைநீர் ஓசையில், மாலினி, ரகுராமனை பார்த்து அவள் பேச நினைத்த சொற்கள் அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டு அவள் மட்டும் வெளியே கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள்.
ஆரஞ்சு பொம்மை, வீடுகளில் நாம் காணும் யதார்த்தம். நண்பர் வருகையில் ஒரு முகம், அவர் குழந்தைக்காக தரும் பரிசை கொண்டாடும் அதே முகம், அவர் போன பிறகு அந்தப் பரிசைஅப்புறப்படுத்தும் உள் மனம் காட்டும் நிஜமுகம். ஸ்ரீதருக்கு பிடித்த நிறம் ஆரஞ்சோ? அம்மாவின் பதில்களில் ஆரஞ்சு வண்ண இனிப்பு பெட்டி, இதில் பொம்மை, கற்பகம் கதையில் ஆரஞ்சு வண்ண ஆர்கிட் பூக்கள்!
கற்பகம் கதை வண்ணதாசனை நினைவில் கொண்டு வந்தது-'இரவில் மலர்ந்த பன்னீர் மலர், பகலில் ஒளித்து வைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்து விடும்.'மருதாணி வெளிறிய விரல்களுடன் கற்பகம் மறு வீட்டுக்கு வந்தது அவள் வாழ்வில் பளீரென்ற வண்ணத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது என்பதை அழகாகச் சொல்கிறது.
பிரார்த்தனை, அப்படி ஒரு நண்பனுக்காகவும் அவன் அன்னைக்காகவும் என்னை ஏங்க வைத்துவிட்டது.
சாமியும் கும்பிட வேண்டும் , மேனியும் நோகக்கூடாது என்பதைப் போன்ற கதை ஏ பி என் பெட்டிக்கடை சம்பவம். லைப்ரரி புத்தகத்தை அபேஸ் செய்யும் பலரை நான் அறிவேன்.
சவரம் செய்த முகம் உண்மையில் காட்டுமிராண்டியின் முகம். தோடி ராகத்தை அடமானம் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்த ஜமீன்தாரை நினைவு படுத்தும் கோர முகம்.
இளைப்பாறுதல் கதையின் நாயகி ஒரு நார்மடி பாட்டி. பேருறுவம் எடுத்துக் கொண்டு நிற்கிறாள். பேத்தியின் கணவனுக்கு மாப்பிள்ளை என்ற மரியாதை மட்டும்தான்-ஆனால் அழுத்தமாக பேசுகிறாள்-பேசிப் பார்த்து பிரச்சனையை தீர்க்க சொல்கிறாள்; வம்சத்தை வளர்க்கச் சொல்கிறாள்.'பூ தச்ச பின்னலோடு, தாழம் பூவில் மல்லிகை சரம் கோர்த்து, சந்திர சூரிய வில்லை எல்லாம் அலங்கரிக்க நீளமான பின்னலோடு'பார்த்த கொடும்பாளூர் அத்தை மகனின் உள்ளார்ந்த காதல்.; ஒரு சிலருக்கு நினைவில் மட்டுமே வாழ கொடுத்து வைத்திருக்கிறது.
கோடி டா மன அவஸ்தைகளைப் பற்றி, உடல் சார்ந்து சொல்கிறது. எவ்வளவு பிரியமான உயிர் துணையாக இருந்தாலும் அந்தத் துணை இறந்த பிறகு எதிர்பாலினத்தோழமை ஒன்றாவது வேண்டி இருக்கிறது. குள வரம்பினுள் ததும்பும் நீர்.
செந்தாழை எழுதப்பட்ட விதத்தாலும், உணர்வுகளின் ஓட்டத்தாலும், யார் பெற்ற பிள்ளையோ இப்படி அடையாளம் இல்லாமல் மார்ச்சுவரியில் கிடக்கிறதே என்று அலறும் தாய்மையின் இயல்பாலும், அவன் தன் பிள்ளை இல்லை என்றாலும், இனியும் தான் ஐட்டங்காரன் அன்னை என்றுதான் அழைக்கப்பட கூடுமோ என்ற பகீர் உணர்வாலும் சிறப்பாக வந்துள்ள கதை. என்னை மிகக் கவர்ந்த கதை
'ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்து போகும் பல கண ங்களையும், அவற்றில் தொக்கி இருக்கும் உறவுகளையும், அவற்றினுள் உள்ள ஒலிகளையும், மௌனங்களையும் சுமந்து கொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்ல மெல்ல செவியைத் துளைக்கும் கர்ண நாதம் போல் அதிர ஆரம்பிக்கின்றன.'எழுத்தாளர் அம்பை
எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஒன்றை மட்டும் சொல்கிறேன். கதை தரகு பக்கம் 39-சோகைய அன
மதுரை, திருநெல்வேலியின் தமிழும், அந்த வட்டாரத்தின் சொல் மொழிகளும் ஈர்க்கின்றன.


நூலினைப் பெற
Be4Books
#24, Shop No.B, First Floor,
S.G.P Naidu Complex,
Velachery main road,
Velachery, Chennai -600 042.

Conduct & watsup No.90424 61472
gpay:+91 99400 21472

(பிரதிகள் வேண்டுவோர் என்னுடைய தனிப்பட்ட வாட்சப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். +1 (630) 363-0673)


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை


நாம் பெரும்பாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளுக்கு விடைச் சொல்லும் புத்தகம் தான் இது. உதாரணமாக, பேய் இருக்கா இல்லையா? சாதி என்றால் என்ன? மேல் சாதி, கீழ் சாதி என எதை வைத்துச் சொல்கிறார்கள்? மனசு எங்கே இருக்கு? என்பதைப் போல் அடிக்கடி நம் செவிகளும் கேட்ட கேள்விகளான உனக்கு மூளை இருக்கா? சமைப்பது யாருடைய வேலை?, நீங்க என்ன சாதி? என்ற கேள்விகளுக்குப் பதிலையும்;

கண்ணாடி முன்னால் நில்லுங்கள்!
கொஞ்சம் வரலாறு,
சாமி கண்ணைக் கெடுத்திடும்!
கொஞ்சம் புவியியல்,
இருட்டு எனக்குப் பிடிக்கும்
என்ற தலைப்புகளில் புதிய பல தகவல்களையும் சொல்லும் புத்தகமாய் எழுதப்பட்டுள்ளது.

யாராவது ஒரு வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உனக்கு மூளை இருக்கா? இல்லையா? என்று கேட்போம். அதே அந்த வேலையை ஒருவர் திறம்படச் செய்து விட்டால், “என்ன மூளை அவனுக்கு!” என்று சொல்வோம். சிறு பிள்ளைகளைத் திட்டும் பொழுது ” மூளை இல்லாத முண்டம்” என்றெல்லாம் திட்டுவதும் உண்டு. அப்படிப்பட்ட மூளையின் பங்கு என்ன? மூளை எங்கு உள்ளது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் மூளை இருக்குமா? இல்லை… இல்லை… மூளையின் அளவு எல்லோருக்கும் 1 கிலோ முதல் 1.4 கிலோ எடை அளவு தான் இருக்கும். ஆனால், ஓர் உறுப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ! அந்த அளவிற்கு அதனுடைய வளர்ச்சியும், அதைப் பயன்படுத்தாமல் விட்டால் நாளடைவில் அது அழிந்தும் விடும் என்பதற்குச் சான்றாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணம் மூளை தான். அதனால், மனிதர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து மூளைகளும் “சமமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பட வேண்டும்.” பொது நன்மைக்காக நம்முடைய மூளைகள் யோசிக்க வேண்டும். புதிது புதிதாக நம் மூளை யோசிக்க வேண்டும். இல்லாவிடில் அது பழசாகிவிடும் என்பதை உணர்த்துகிறது.

சமைப்பது யாருடைய வேலை? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் முதலில் பெண்களைத் தான் சொல்வார்கள். ஆனால், சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் நன்றாகவே சமைக்கத் தெரியும். அப்படித் தெரியாவிடினும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். வளரும் போதே ஆண் பிள்ளைகளுக்கும் சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். என்பதை ஒரு தெளிவான பார்வையுடன் சொல்லி, “நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்? நான் தான் சம்பாதிக்கிறேன்.” என்று இனி பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்டால், அதற்கு ஒரு பதில் சொல்லப்பட்டுள்ளது. அது, அப்பா வாங்கும் சம்பளத்தில் 1 பங்கு அப்பாவுக்கும், +0.8 பங்கு அம்மாவுக்கும், +0.6 பங்கு ஒரு குழந்தைக்கும், +0.6 பங்கு இன்னொரு குழந்தைக்கும் உண்டாம். இனி சட்டம் தெரியாமல் எந்த ஆணாவது பேசினால் இதைச் சொல்லிவிடலாம் பதிலாக!

நாம் யாரிடமாவது கொஞ்சம் நன்றாகப் பேசி பழகி விட்டால் போதும், அடுத்து அவர்கள் தெரிந்து கொள்ள நினைப்பது என்ன சாதி? என்றுதான். அந்தச் சாதிக்கான விளக்கம், சாதி வந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு, இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவை மேல்சாதி, கீழ்சாதி என்பது சரிதான் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு சாதி. “முட்டாள் சாதி”.

சாதியாவது, கீதியாவது எல்லோருமே குரங்கின் பேரப்பிள்ளைகள் தான் என்பவர்கள் எல்லாம் ஒரு சாதி, மனிதச் சாதி அதாவது “அறிவாளி சாதி “.

இன்றைக்குத் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரக்கூடியதை நன்கு கவனித்தால்,
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா?
முகப்பரு போக வேண்டுமா? உடம்பில் நாற்றம் வருகிறதா?
பல் பளிச்சிட வேண்டுமா?
என ஏதோ நாமெல்லாம் ஒட்டுமொத்தக் குறையுடன் பிறந்ததைப் போல, ஒவ்வொன்றையும் குறையாகக் காட்டி விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் சாடியுள்ள புத்தகம்.

மேலும், நிறம் என்பது அழகு அல்ல; உழைப்பும், படிப்பும் நல்ல பேச்சும், நல்ல பழக்கமும் தான் அழகு; என “கண்ணாடி முன்னால் நில்லுங்கள்” என்ற கட்டுரை சொல்லியுள்ளது.

‘வரலாறு’ என்றாலே ஓர் அறுவை என்பதைப் போல பள்ளி நாட்களிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆம்! வரலாற்றில் ராஜா, ராணி, நாடு, போர், ஆட்சி மட்டும் இருந்தால் அறுவையாகத் தானே இருக்கும். ஒரு ராஜா நாட்டை ஆண்டு, அவன் ராஜபோக வாழ்க்கை வாழ அவன் உழைத்தானா? உழைத்தது மக்கள்; போரில் போராடி உயிரை விட்டது மக்கள்; அவர்கள்தான் வரலாறு. “ராஜாக்களை பேசுவது மட்டுமல்ல, மக்களைப் பேசுவதும் தான் வரலாறு” என்பதைச் சொல்லியவிதம் அருமை.

சிலர் சின்ன பிள்ளைகளிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். “அப்படியெல்லாம் பேசக்கூடாது… சாமி கண்ணைக் கொத்திவிடும்…” என்று! அப்படி மூடநம்பிக்கையான, பாம்பு பால் குடிக்குமா?, பாம்பு டான்ஸ் ஆடுமா?, கிழமைகளில் நல்ல கிழமை, கெட்ட கிழமை என்று உண்டா?, ஏன் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? என இந்தக் கேள்விகளுக்கான தக்க அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும், ஜோசியம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைத் தொடுத்து, “அறிவியல் தான் இனி வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமி எவ்வாறு தோன்றியது? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருந்தது பூமி. அங்கே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்ததால் பூமி நிரம்பிப் பல காலம் நீர்க்கோளமாகவே இருந்ததாகவும், பிறகு நீர் ஆவியாகி நிலப்பரப்பு வெளியில் தோன்ற ஆரம்பித்த பின்பு அதுதான் கண்டங்களாகவும், கடலாகவும் மாறியது என்பதையும், நிலப்பரப்பு தோன்றிய போது ஏழு கண்டங்களெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே கண்டம் தான், அது “பாங்கீ கண்டம்” அப்போது மனிதன் கிடையாது.

அதன் பிறகு இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. ஏனென்றால், பூமியின் மேற்பரப்பில் இருந்த “டெக்டோனியம் பிளேட்டுகள்” (பூமி முட்டை போல் இருக்க, அதன் ஓட்டின் மேல் தான் கடலும், கண்டமும் இருந்தது. அந்த ஓடு உடைந்து பத்துத் தட்டுகளாய் மிதந்தது. அதுதான் டெக்டோனியம் பிளேட்) நகர்ந்ததால் மேல் பகுதி “லாராஷிய கண்டமாகவும்”, கீழ்ப்பகுதி “கோண்ட் வானா” கண்டமாகவும் பிரிந்தது.

முன்பு இந்தியா நான்கு பக்கம் கடலாக இருந்ததையும், பிறகு மூன்று பக்கம் கடலைக் கொண்டதாக மாறிய நிகழ்வையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் புத்தகம் அமைந்தது.

இப்படி உருவான இந்தப் பூமி எப்படியெல்லாம் கூறு போட்டு,
உன் நாடு, என் நாடு
உன் இனம், என் இனம்
உன் மொழி, என் மொழி
உன் சாதி, என் சாதி என்று மாற்றிய மனிதர்களுக்கு ஒன்று சொல்லியுள்ளார்.

“டெக்டோனியம் பிளேட் நகராத வரைக்கும் தான் இந்தியாவுல இருக்க முடியும். அதுவரைக்கும் வாய பொத்திக் கிட்டு இருக்கணும். வரலாறும் தெரியாம, புவியியலும் தெரியாம முட்டாள் தான் உன் நாடு, என் நாடு என்று சொல்லுவான்.” என்று இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இந்த உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசகர்களாகிய நமக்கு வைத்துள்ளார். நிறைவாக “இருட்டை எனக்குப் பிடிக்கும்” என்ற கட்டுரையின் வாயிலாக நமக்கும் இருட்டைப் பிடிக்க வைத்துள்ளார். உங்களுக்கும் பிடிக்க வேண்டுமா? படித்துப் பாருங்கள் புத்தகத்தை…


நூல் தகவல்:

நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும் 

ஆசிரியர் :  ச. தமிழ்ச்செல்வன்

வகை :   கட்டுரை 

வெளியீடு :  வாசல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

பக்கங்கள் : 80

விலை : ₹  70

 

The post இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன்

10 September 2023 at 06:17

பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

The post வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன் appeared first on Vimarsanam Web.

❌