Normal view

Received before yesterday

ஹெக்ஸகோன் – 11

2 October 2024 at 10:19

ஜூலை 10, 2023

 ஜூலை ஒன்பதுடன் எங்களுடைய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.  என்னுடைய கணவனாக குறும்படத்தில் நடித்த மேகவண்ணன் அவர் குடும்பத்துடன் பிரான்ஸின் தென் பகுதியிலிருக்கும் மோன்பெல்லியே என்ற ஊருக்கு செல்வதாகச் சொன்னார். அங்கே அவருக்கு ஒரு வீடு இருந்தது. ஜூலை மாதம் பிரான்ஸிலிருக்கும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை. ஒருவர் பாக்கியில்லாமல் அவரவருக்கு ஏற்ற இடங்களுக்கு குழந்தைகளை இட்டுச் செல்கிறார்கள். நீலவண்ணனுக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் அவளுடைய காதலனுடன் தனி வீட்டில் வசிக்கிறாள். சின்னவள் எம்மா. பத்தாவது படிக்கிறாள். மேகவண்ணனும் அவர் மனைவி மரியாவும் மகள் எம்மாவும் மோன்பெலியேவில் பதினைந்து நாட்கள் தங்கத் திட்டமிட்டிருந்தனர்.

‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார் மேகவண்ணன்.

‘ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கச் செல்லும்போது இந்தக் கரடி எதற்கு’ என்றேன்.

‘உன்னை பதினைந்து நாளும் எங்களோடு இருக்கச் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நடுவில் வரும் சனி ஞாயிறன்று எங்களுடன் இருக்கலாம். ஜூலை 15, 16 எங்களுடன் செலவழிக்கலாமே. நீ தேவதை. கரடி என்று சொல்லாதே’ என்றார் தன் மனைவியைப் பார்த்து புன்னகை செய்தபடி.

அவரும் ‘நீங்கள் வந்தால் சந்தோஷமே’ என்று உண்மையாக மனதார சொன்னதுபோல் தான் இருந்தது.

உடனே யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு டி.ஜி.வி. அதிவேக ரயிலில் பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார் மேகவண்ணன்.

*

பாரிஸ் மெத்ரோ ரயிலில், அதாவது பாரிஸுக்குள் மட்டுமே செல்லும் மெத்ரோவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல இரண்டு யூரோ மட்டுமே என்று தெரிந்தது. நம்மூர் ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். கிஷோர் வாங்கிக் கொடுத்திருந்த மெத்ரோ அட்டையில் பத்து முறை மெத்ரோவிலோ பேருந்திலோ பயணம் செய்யலாம். காலியானால் திரும்ப பணமேற்றிக் கொள்ள வேண்டும். பலர் பயணச்சீட்டு வாங்குவதில்லை. அட்டையைத் தேய்த்தால் திறக்கும் கதவின் மேலாக எகிறிக் குதித்து செல்வதை கவனித்தேன். அப்படிச் செல்பவர்களில் எண்பது சதவிகிதம் புலம் பெயர்ந்தவர்கள். எக்காலத்திலும் அப்படிச் செல்லக்கூடாதென்று கிஷோர் எங்களை முன்னரே எச்சரித்து விட்டார்.

‘டிக்கட் செக்கர் வந்துவிட்டால் ஃபைன். அதுகூடப் பரவாயில்லை. போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வந்தால் அடுத்தமுறை வீசா கிடைக்காது’ என்று பயமுறுத்தினார். அப்படியும் இரண்டு முறை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தேன், அட்டைவேலை செய்யாததால். சாந்த்ரா ‘பரவாயில்லை, என் பின்னால் வந்துவிடு’ என்று சொன்னார். அதனால் இரண்டு முறைபயத்துடன் பயணச்சீட்டில்லாமல் பயணித்தேன். ‘டிக்கட் செக்கர் வந்தால் நீ யாரோ, நான் யாரோ’ என்றார் குறும்புச் சிரிப்புடன்சாந்த்ரா.

ஷோபா சக்தியைப் பார்த்தபோது சொன்னார் ‘நானும் இப்படி எகிறிக் குதித்துதான் போவேன். தீபன் திரைப்படத்திற்கு ‘பால்ம்த’ஆர்’ (Palme d’or )விருது கிடைத்தபோது டிவியில் என் படத்தைக் காட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த நாளில் நான்மெத்ரோவில் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் என்னைப் பார்த்து நட்புடன் சிரிக்கவே, எகிறிக் குதிப்பதற்கு வெட்கப்பட்டுடிக்கட் வாங்கினேன். இந்த விருதுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று நேர்காணலில் கேட்டபோதுஇதைத்தான் சொன்னேன். முந்தி டிக்கட் வாங்க மாட்டேன். இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதால் டிக்கட் வாங்கவேண்டியிருக்கிறது என்று’ என்றார்.

‘ஆனாலும் இரண்டு யூரோ அதிகம்தான். பாவம், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்’ என்றேன் சாந்த்ராவிடம்.

‘இரண்டு யூரோவில் உங்கள் நாட்டில் என்ன வாங்க முடியும்?’ என்று சவால் விட்டார் சாந்த்ரா.

‘என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஏகப்பட்டது வாங்கலாம். இரண்டு லிட்டர் பால், தயிர், மூன்று நாளைக்குக் காய்கறி,…’ என்று வரிசையாக அடுக்கினேன்.

‘கிராமத்தில் இருக்கும் என் மாமியார் இருநூறு ரூபாய்க்குதான் கரண்ட் பில் கட்டுகிறார் ஒரு மாதத்துக்கு. ஏன்? ஒரு சல்வார்டாப்ஸோ, புடவையோ, சட்டையோ கூட வாங்கலாம்’ என்றேன். சாந்த்ரா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விடலாம் என்று நினைத்திருப்பார்.

பாரிஸில் விலைவாசி பயங்கரம். புறநகர்ப் பகுதிகளிலெல்லாம்கூட 1200 சதுர அடி வீடு ஆயிரம் யூரோ (கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்) வாடகை. மாதம் குறைந்த பட்சம் 3000 யூரோ சம்பாதித்தால் மட்டுமே மூச்சு விட முடியும். அதாவது கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும். இந்தியாவில் இருந்து பாரிஸ் சென்று பத்து நாள் இருக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும். விமான டிக்கட்டே 70,000ல் இருந்து 90,000 வரை. அங்கே செலவு செய்ய ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் குறைந்தது 1500 ரூபாய் கட்டணம் உண்டு.

*

சரியான பிளாட்பாரம் பார்த்து நின்றால் நாம் நிற்கும் பிளாட்பாரமில் வரும் எல்லா வண்டிகளும் நமக்கு வேண்டிய இடத்திற்குப் போகும். இந்த வண்டிதான் அங்கு போகும் அது போகாது என்றெல்லாம் இல்லை. சரியான பிளாட்பாரத்தில் நிற்பது மட்டும்தான் முக்கியம்.  எல்லாப் பக்கங்களிலும் வழி சொல்லும் பலகைகள் உண்டு. இரு முறை தனியாகப் போய் வந்துவிட்டால் மெத்ரோ நமக்குப் புரிபட்டு விடும். பாரிஸ் நகரத்தில் தனியாக மெத்ரோவில் ஏறி சுற்றிப் பார்ப்பது சுலபம்தான்.

‘சென்னையில் இப்படி வசதியில்லை. நான் அங்கு வந்தபோது பஸ்ஸில் ஏறி மிகவும் சிரமப்பட்டேன்’ என்றார் சாந்த்ரா.

‘முதலில் பாரிஸோடு சென்னையை ஒப்பிடுவதே தப்பு சாந்த்ரா. இந்த வானிலையும்  இப்படியான சாலைகளும் சென்னையில் இல்லை. எங்கள் மக்கள் தொகையையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் எங்கள் ஊர் மக்களிடம் வழி கேட்டால் உங்களை வீடு வரை கொண்டு விட்டு வருவார்கள்’ என்றேன்.

‘அது, ஆமாம்! மக்கள் ரொம்ப அன்பானவர்கள்’ என்றார்.

‘இங்கும் மக்கள் அன்பானவர்களே. தோபாந்தோனுக்கு நான் வழி கேட்டபோது எல்லோரும் வழி சொன்னார்கள் சாந்த்ரா. அதையும் சொல்ல வேண்டும்.’

‘நீ வழி கேட்ட அனைவரும் ஆண்களா?’

‘ஒருவரைத் தவிர அனைவரும் ஆண்கள்.’

‘அதானே பார்த்தேன்!’ என்றார் கிண்டலாகப் புன்னகைத்துக்கொண்டு.

*

மேகவண்ணன் அழைப்பை ஏற்று பாரிஸிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோன்பெலியே நகரத்துக்கு TGV என்ற வெகு வேக ரயிலில் மூன்றரை மணி நேரத்தில் சென்றேன். கார் த லியான் என்ற ஸ்டேஷனில் இருந்துதான் வேறு ஊர்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் புறப்படுகின்றன. நந்தனின் வீட்டிலிருந்து கிளம்பியதால் அவர் என்னை வழியனுப்ப வந்திருந்தார். விமான நிலையத்தைப் போலவே ஒரு கட்டத்துக்கு மேல் அவரை அனுமதிக்கவில்லை. பயணிகள் மட்டும்தான் என்று தடுத்து விட்டனர். அது இரண்டடுக்கு ரயில். சுத்தமாக இருந்தது. எனக்குக் கிடைத்த இருக்கை நடுவில் மேசையோடு இருந்தது. இந்தப் பக்கம் இருவர் அந்தப் பக்கம் இருவர் என்று உட்காரலாம். இது மாதிரியான இருக்கைகள் சதாப்தியில் பொதுவாகப் பெட்டியின் நடுவில் இருக்கும். இந்த வண்டியில் பெட்டியின் கடைசியில் இருந்தது. எனக்கு எதிரே ஸ்டைலாக, புஜங்களில் டாட்டூ வரைந்த ஒரு தந்தையும் இருபதுகளில் இருக்கும் அவரின் மகளும் அமர்ந்திருந்தனர். என் அருகே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.

வண்டி கிளம்பும் நேரம் வந்ததும், டிக்கட் கலெக்டர் வந்து ‘எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா, ஏதேனும் வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். Bon Voyage!’ என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார். எல்லோரும் ‘மெர்சி’ என்றார்கள். அதற்குப்பின் அந்தப் பெட்டியிலிருந்து சத்தமேயில்லை.

வண்டி கிளம்பியவுடன் ‘உங்கள் போனை சைலண்ட் மோடில் வைக்கவும். மற்றவருக்கு தொல்லையில்லாமல் ஹெட்போனில் பாட்டு கேட்கவும். புகை பிடிக்கவும் கூடாது. குழந்தைகளுக்கான பிரத்யேகப் பெட்டி இருக்கிறது. வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவிப்பு பிரெஞ்சிலும், பிரெஞ்சைப் போன்ற உச்சரிப்புடன் ஆங்கிலத்திலும் வந்தது. சுரங்கப் பாதையினுள் செல்லும்போது விமானத்தில் போவதுபோல காதை அடைத்தது.

நம்மூர் போல ‘மத்தியானம் என்ன சமைச்சு வச்சிருக்க? கண்ணன் வந்தானா? ஊர் சுத்தாம சோறு தின்னானா இல்லியா?’ என்று அலற முடியாது. அனைவரும் இடித்து வைத்த புளிபோல் சீட்டில் ஒட்டிக் கொண்டு வீடியோ பார்க்கிறார்கள் அல்லது புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். போன் பேச வேண்டும் என்றால் பெட்டிக் கதவைத் திறந்து வெளியில் போய் கிசுகிசுத்து விட்டு வருகிறார்கள். முதல் வகுப்புப் பெட்டிக்காரர்களுக்கு தனியே வெளியில் ஒரு பெஞ்சு உண்டு. அதில் உட்கார்ந்து கதைக்கலாம், பத்து டெசிபலில். மனிதர்கள் என்ன, அந்த ரயிலில் பயணம் செய்யும் நாய் பூனைகளும் முனகுவது கூட இல்லை. அழகாக மடியில் உட்கார்ந்து கொண்டு வருகின்றன.

ரயிலின் ஒரு பெட்டி டைனிங் கார் மற்றும் பார். வேண்டுமென்றால் அங்கே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் நான் பார்த்த வரை எல்லோரும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

அப்பாவும் மகளும் வழியில் ஒரு ஊரில் இறங்கினார்கள். இறங்கும்முன் என்னிடமும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனிடமும் ‘Bonne journee’ (‘இந்த நாள் இனிய நாளாகட்டும்’) என்று சொல்லிவிட்டு இறங்கினார்கள். ஆஹா! அருமையான மக்கள் என்று நினைத்துக் கொண்டேன். மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பி வரும்போது என் எண்ணம் சற்று மாறியிருந்தது.

மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பும்போது ஸ்டேஷன் வாசலில் என்னை மேகவண்ணன் இறக்கிவிட்டுவிட்டுப் போய் விட்டார். நான் அறிவிப்பு வந்ததும் நேராக பிளாட்பாரத்துக்கு சிறிது முன்னால் நின்றிருந்த டிக்கட் சோதனை செய்பவரிடம் என் டிக்கட்டை காண்பித்தேன். அவர் ‘வலது பக்கம் செல்லுங்கள். Bonne Journee’ என்றார். நான் கோச் நம்பரைப் பார்த்து உள்ளே ஏறும்முன் என் பின்னாலிருந்து கடுமையான ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தால் தள்ளுவண்டியில் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி முறைத்துக் கொண்டிருந்தார். ‘என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டேன்.

‘சீக்கிரம் ஏறு, இல்லையென்றால் எனக்கு வழியை விடு’ என்று கடுகடுவென்று சொன்னார். பிரான்ஸ் வந்தபிறகு முதல் முறையாக கடுஞ்சொல் கேட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளே ஏறினேன். அந்தப் பெண்மணிக்கு அந்த டபுள் டெக்கர் வண்டியின் மேலடுக்கில் இருக்கைபோல. எனக்கும் மேலடுக்கில்தான் இருக்கை. அவர் தள்ளுவண்டியை மேலே தூக்கிக் கொண்டு போக சிறிது சிரமப்பட்டார். நான் தயங்கிக்கொண்டே ‘உதவி வேண்டுமா’ என்று கேட்க ‘தேவையில்லை, எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்’ என்று கடுப்படித்தார். தேவையா இது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேசவேண்டும் என்றிருந்தது. ஆனால் தயக்கத்தினால் பேசவில்லை. பிரஞ்சு SNCF ரயில்வே, தன் பயணிகளை பக்கத்தில் உட்கார்ந்து பயணிப்பவருடன் பேச வைப்பதற்கு முயற்சி செய்கிறது. 65 சதவிகித பிரஞ்சு மக்கள் ரயிலில் தன்னுடன் பயணிப்பவரிடம் பேச விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் மற்றவர் பேச விரும்ப வேண்டுமே என்ற தயக்கத்தில் பேசுவதில்லை என்று அந்த ஆய்வு சொல்கிறது. சிலர் அமைதியாக ஓய்வாக இருக்கவே விரும்புகிறார்கள். தங்களுக்கான நேரமாக அதைக் கருதுவதால் யாருடனும் பேச விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கிறது. இதில் குழம்பிப் போய், குறைந்த பட்சம் Valentine’s Day, Christmas போன்ற சமயங்களிலாவது கூட பயணிப்பவருக்கும் ஒரு கேக்கோ பிஸ்கட்டோ எடுத்து வாருங்கள் என்று ரயில்வே சொல்கிறது. பசியில் வயிறு இறைந்தால்கூட முழு பெட்டிக்கும் கேட்குமளவு நிசப்தத்தோடு செல்கிறது TGV. நம் ரயில் பயணங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

நம்மைப் பார்த்து இவர்கள் திருந்துவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். பாவம் என்று நினைத்துக் கொண்டேன்.

-தொடரும்

ஹெக்ஸகோன் – 7

3 July 2024 at 15:44

29  ஜூன் 2023, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சத்தம் மனதை என்னவோ செய்தது. நியூஸில் காண்பித்த அந்த சிசிடிவி பதிவில் துப்பாக்கியை காரின் உள்ளே வைத்து பாயிண்ட் ப்ளாங்கில் சுடுகிறார் அந்தக் காவலர். கார் சிறிது தூரம் சென்று ஒரு கம்பத்தில் அடித்து நின்றது.

‘பஸ் வராது, பஸ்ஸை எல்லாம் எரிக்கிறார்கள்’ என்று ஒரு பெண்மணி நாங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது சாந்த்ராவிடம் சொன்னார். சிந்துஜா, லாவண்யா, நான் மூவரும் சாந்த்ராவுடன் மோன் மார்த்தர் போகலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்திலேயே பேருந்து நிறுத்தம் இருந்ததால் அங்கு நின்று கொண்டிருக்கும்போது இப்படி ஒரு செய்தி.

நாங்கள் பாரிஸில் இறங்கியதற்கு முந்தைய நாள் நாஹேல் என்ற பதினேழு வயது அல்ஜீரிய வம்சாவளி சிறுவனை ஊரின் புறநகர் பகுதியான நான்தெர்ரில் (Nanterre) ஒரு காவலர் சுட்டுக் கொன்றிருந்தார். அந்தச் சிறுவனின் காரை நிறுத்தி பேப்பர்களைக் கேட்க, அவன் காவலர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வண்டியைக் கிளப்பியிருக்கிறான். அதனால் அவனைச் சுட்டிருக்கிறார் காவலர்.

புறநகர்ப் பகுதியிலெல்லாம் ஒரே கலவரம். பேருந்துகளைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். பிரான்ஸ் முழுக்கக் கலவரம் பரவி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியில் அடிக்கடி நாஹேலின் அம்மாவைக் காண்பித்து எல்லோரையும் வெறியேற்றிக் கொண்டிருந்தார்கள். நல்ல சுபயோக சுபதினத்தில் வந்திறங்கியிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். சில இடங்களில் போலீசாரைத் தாக்கினார்கள்.

நாஹேலைச் சுட்ட காவலரை கைது செய்து விட்டார்கள். அவருக்கு ஆதரவாக ஒரு மந்திரி குரல் கொடுத்து பல மில்லியன் டாலர்களை அந்தக் காவலரின் குடும்பத்துக்காக சேகரித்தார். பிரான்ஸே இரண்டுபட்டு நின்றது.

சாந்த்ராவுக்குக் கோபம் பொங்கியது.  ‘இந்த நாடு எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது?’ என்று முகம் சுளித்தார்.

நம்மூர்க்காரர் ஒருவர் ‘இந்த வெள்ளைக்காரன்களை இப்படித்தான் அடிக்கடி கலவரம் செய்து பதட்ட நிலையிலேயே வச்சிருக்கணும். இல்லைன்னா நம்மையெல்லாம் ஊரக் காலி பண்ணச் சொல்லிருவான்’ என்றார். இவரென்ன மாற்றிச் சொல்கிறார்? எனக்கு இந்த தாரதம்யங்கள் எல்லாம் புரிவதேயில்லை. புரியவும் வேண்டாம்.

‘சரி! வாருங்கள் மோன்மார்த்தருக்கு (Montmartre) நடந்தே போய் விடலாம். அதோ தெரிகிறதே கதீட்ரலின் கோபுரம்’என்றார்.

சாந்த்ராவின் வீடு ஒன்பதாவது அரோந்தீஸ்மோவில் (arrondissement) இருந்தது. Ile-de-Paris என்று சொல்லக் கூடிய பாரிஸ் நகரம் இருபது அரோந்தீஸ்மோக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பாரிஸின் நடுவில் ஓடும் லா ஸென் (La Seine)நதியின் வலதுபுறத்தில் இருக்கும் அரோந்தீஸ்மோக்கள்தான் இடது பக்கத்தைவிட பிரபலமான பகுதி. ஏழாவதில் ஈஃபில் (Eiffel) டவர் இருக்கிறது.  இந்தப் பகுதிதான் பாரிஸின் ஆடம்பரமான பகுதி. சாதாரண மக்கள் வசிக்க இயலாது. அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் வசிக்கும் இடம். லூவ்ர் அருங்காட்சியகம் முதலாம் அரோந்தீஸ்மோ. மோன்மார்த்தர் பதினெட்டாவதில் இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மேயர் உண்டு. ஒன்று,இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அரோந்தீஸ்மோக்களை பார்த்துக்கொள்வது மட்டும் ஒரே ஒரு மேயர்.

நடக்கலாம், பக்கம்தான் என்று சாந்த்ரா சொன்னதும் ஏதோ மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து லஸ் கார்னர் வரை தூரம்தான் இருக்குமென்று நினைத்தோம். ஆனால் அது மூன்றரை கிலோமீட்டர் என்று தெரிந்திருந்தால் வேறு இடம் போகலாம் சாந்த்ரா என்று சொல்லியிருப்போம்.

பாரிஸ் மக்கள் வேகவேகமாக நடந்துகொண்டே இருக்கிறார்கள். பஸ் நிறுத்தத்தில் பஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்று ஒரு பேனல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதில்  பத்து நிமிடத்துக்கு மேல் காட்டினால் சாந்த்ரா நடக்க ஆரம்பித்து விடுவார். அவர் மட்டுமல்ல. எல்லோருமே அப்படித்தான். சினிமாவில் காண்பிப்பதுபோல் பாரிஸில் ஹை ஹீல்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு நடக்கவே முடியாது. மேலும் கீழுமாக இருக்கும் சாலைகள், கற்கள் பதித்த சாலைகள் பிரசித்தம். இப்போதெல்லாம் அந்த பெருமைமிகு கற்கள் பதித்த சாலைகளில் இருக்கும் கற்களை எடுத்துவிட்டு நல்ல சாலையே போடுகிறார்கள் என்றார் சாந்த்ரா. ஏதாவது ஸ்டிரைக் என்றால் அந்தக் கற்களை நோண்டி எடுத்து போலீஸார் மேலும் பேருந்துகளின் மேலும் வீசுகிறார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஒரு வழியாக மூன்று கிலோமீட்டர் மூச்சு வாங்கிக்கொண்டு நடந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்ததால் சிரமம் தெரியவில்லை. வானிலையும் ஒத்துழைத்தது. அது கோடைக் காலம் என்று அவர்கள் சொன்னாலும் சென்னைவாசிகளாகிய எங்களுக்கு அந்த 21 டிகிரி வானிலை ஊட்டியைபோல் இருந்தது. ஆனால் பாரிஸ் வானிலை இன்று இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென்று வெயிலடிக்கும், அல்லது மழை பெய்யும். மாலையானால் குளிரும். அதனால் அடுக்கடுக்காக உடுத்திக்கொண்டு செல்கிறார்கள். தேவையானால் கோட்டைப் போட்டுக் கொள்ளலாம் அல்லது கழற்றி விடலாம்.

மோசமாக உடை உடுத்தியவரை என்னால் பார்க்கவே முடியவில்லை. அந்தந்த இடத்துக்குத் தகுந்தாற்போல் உடுத்துகிறார்கள். முக்கியமாக இன்னொரு விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரிய கழுத்து உள்ள உடைகளை பெண்கள் அவ்வளவாக அணிந்து நான் பார்க்கவில்லை. அவர்கள் உடலுக்குத் தகுந்தாற்போல் அட்டகாசமாக ஆடை அணிகிறார்கள். மிகவும் குட்டியான ஷார்ட்ஸோ, அல்லது மினி ஸ்கர்ட்டோ அதிகம் காணப்படவேயில்லை. அப்படி யாராவது அணிந்திருந்தால் அவர்கள் சுற்றுலாப் பயணிகள். மிகவும் பாந்தமாக அழகாக உடலுக்குத் தகுந்தாற்போல் உடையணிவதில் வித்தகர்கள் பாரிஸ்காரர்கள். நான் காலையில் உடை உடுத்தி, அலங்காரம் செய்துகொண்டு கூடத்துக்கு வந்தால் சாந்த்ரா தலையிலிருந்து பாதம்வரை பார்ப்பார். அவர் முகமே சொல்லிவிடும் நாம் சரியாக உடுத்திக்கொண்டிருக்கிறோமா இல்லையா என்று.

ஒருநாள் அவருடைய ஒட்டக நிற கைப்பையைக் கொண்டு வந்து ‘இந்த டாப்ஸோடு இது ஒத்துப் போகிறதா’ என்று கேட்டார்.’ நான் சந்தேகமாக தலையை ஆட்டியதும், உள்ளே போய் மாற்றிக்கொண்டு வந்தார்.

நான் ஒருநாள் ‘இந்த ஸ்கர்ட் போட்டுக் கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ‘அதற்கான கால்கள் உனக்கு இருந்தால் போட்டுக்கொள்ளலாம்’ என்றார்.

அவர்கள் உயரமெல்லாம் நம்மைப் போல்தான் என்றாலும் உடல் பெருத்த மனிதர்களை பெரிதாகப் பார்க்க முடிவதில்லை. இப்படி வேகுவேகுவென்று தினமும் மைல் கணக்கில் நடந்தால் எங்கிருந்து உடம்பு வரும்?

மோன்மார்த்தர் போகும் வழியில் ஜான் ரெனுவார் (Jean Renoir) வீட்டைத் தாண்டிச் சென்றோம். அந்த வீட்டின் வெளியே ஒரு பலகையில் ‘இங்கு ஜான் ரெனுவார், திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், 1937 – 1969 வரை வசித்தார்’ என்று எழுதியிருந்தது. ஒரே சந்தோஷமாகி விட்டது எனக்கு. அடுத்த தெருவில்தான் ஃப்ரான்ஸுவா த்ரூஃபோ (François Truffaut) வசித்தார். அங்கு நாளை கொண்டு போய் காட்டுகிறேன் என்றார் சாந்த்ரா என் முகத்தைப் பார்த்து. ஃப்ரான்ஸுவா த்ரூஃபோவின் Quatre cents coups (400 blows) நாம் இருக்கும் தெருவில்தான் எடுத்தார் என்று சாந்த்ரா சொன்னவுடன் எனக்கு எப்படி என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

என் உற்சாகத்தைப் பார்த்து ஜான் ரெனுவார் வீட்டின் வழியே என்னைக் கூட்டிச் சென்று விடவேண்டும் என்று சாந்த்ரா நினைத்தார். ஆனால் அந்த ரோடு தனியார் ரோடு என்பதால் அங்கிருந்த காவல்காரி எங்களை அனுமதிக்கவில்லை. அந்த சாலையிலிருந்து வெளியே வந்து ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் பின்னால் ஓடி விடலாம் என்று சாந்த்ரா நினைத்தாலும் அந்தக் கண்கொத்திப் பாம்பு காவல்காரி ‘சாரி! உள்ளே விட முடியாது’ என்று சொல்லி விட்டார். சாந்த்ராவுக்கு வருத்தம்.

‘பழைய வாட்ச்மேனாக இருந்தால் விட்டிருப்பான்’ என்று சுணங்கினார்.

நாங்கள் படித்தபோது எங்கள் புத்தகத்தில் கோதிக் பாணியில் மோன்மார்த்தர் படங்கள் இருக்கும். அப்படித்தான் இருக்கப் போகிறது என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். கனவுலகத்திலேயே வாழும் எனக்கு இத்தனை வருடத்தில் அவற்றையெல்லாம் சரி செய்திருப்பார்கள் என்று என் மூளையில் உறைக்காதது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் வழியில் Le Bateau Lavoir ஐப் பார்த்தவுடன் மறுபடி சந்தோஷம் ஊற்றெடுத்தது. அந்த இடத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் பெரிய அறிஞர்களும், எழுத்தாளர்களும், ஓவிய மேதைகளும் தங்கியிருந்தார்கள். ஒரு காலத்தில் அந்த அழுக்கு வீட்டின் அறைகளில் தங்கியிருந்துதான் உலக சாதனை படைத்தார்கள் பல  மேதைகள். அன்று இந்த மோன்மார்த்தர் முழுவதும் இவர்கள் ஆட்சி தான்.

அப்போலினர்(Apollinaire), ஹென்ரி மதிஸ்(Henri Matisse), பிக்காஸோ (Picasso)(இங்கிருக்கும்போது தான் அவர் Young girl with a flower Basket, Les Demoiselles d’Avignon போன்ற படங்களை வரைந்தாராம்), வான் கோக் (Van Gogh)(வான் கோ என்று அவர்கள் உச்சரிப்பதில்லை) ஜார்ஜ் ப்ராக் (Georges Braque), மார்க் ஷகால்(Marc Chagall)மற்றும் பலர் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வாசலில் கீழே விழுந்து கும்பிட வேண்டும் என்று தோன்றினாலும் ‘ரொம்ப டிராமா போடாம வா’ என்று என்னுள் இருக்கும் பெனாத்தா என்னை அமுக்கினாள்.

ஒரு இடத்தில் சாலையின் ஓரத்தில் வான் கோக்கின் படத்தை வைத்து எழுதியிருந்ததன் சுருக்கம்:

 

இவர் 1886 இல் பாரிஸுக்கு வந்தபோது  பல நூறு ஓவியர்களில் ஒருவர். பிரெஞ்சு தலைநகர் அப்போது கலைஞர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் செல்வத்தையும் புகழையும் தேடுவதற்காக வெகு தொலைவில் இருந்து வந்தனர். வின்சென்ட், தனது சகோதரர் தியோவுடன் இங்கு வசித்து வந்தார்.

வின்சென்ட் வான் கோக் பாரிஸ் நகர கவர்ச்சியின் அதீதத்தில் மயங்கிக் கிடந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1888இல், அவர் உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் அதிக அழுத்தத்திற்கு தான் உட்படுத்துவதை உணர்ந்தார்.

பின்னர் மோன்மார்த்தர் வந்து மற்ற ஓவியர்களுடன் பழகத் தொடங்கிய பிறகு, அடர்த்தியான வண்ணங்களில் வரைவதை விட்டுவிட்டு இம்ப்ரெஷனிஸ்ட் முறையை பரிசோதிக்கத் தொடங்கினார். ஓவியங்களைப் பற்றி விவாதிக்கக் கூடிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு விவாதித்தார்.

வான் கோக் மறக்க முடியாத கலைப் படைப்புகளை உருவாக்கினார். இந்த மோன்மார்த்தர் காலகட்டத்தை அவரது கலை வளர்ச்சியில் ஒரு முக்கியமான ஆயத்த கட்டமாகக் காணலாம். பின்னாளில் பிரபலமடையப்போகும் ப்ரோவென்ஸ்(Provence) காட்சிகளை அவர் வரைவதற்கு இங்கு அவர் மேற்கொண்டது ஒரு பயிற்சி ஆய்வு.

 

‘போதும் படித்தது. சீக்கிரம் வா, இன்னும் நிறைய இருக்கிறது’ என்ற குரல் கேட்டவுடன் அதை போட்டோ எடுத்துக்கொண்டு ஓடினேன்.

பின்னர் நந்தனுடன் ஒரு நாள் வான் கோக்கின் அமைதியான அந்த எழில் கொஞ்சும் கிராமத்துக்குப் போனேன். அந்த ஊர் இடுகாட்டின் ஒரு மூலையில் இருந்தது வான் கோக்கின் கல்லறை. பக்கத்தில் அவனுடைய சகோதரன் தியோவினுடைய கல்லறை. இருவரின் கல்லறை மேலும் அலங்காரமாக செடியை வளரவிட்டிருந்தார்கள். மோன்மார்த்தரிலிருந்த கூட்டம் இங்கில்லை. ஏன், யாருமே இல்லை. நானும், நந்தனும், அந்தக் கல்லறையைப்பராமரிப்பவரும் மட்டுமே இருந்தோம். அவருடைய கல்லறைக்கு பின்னால் சாலையில் இருந்த மரத்தில் ஹிரோன்தெல் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன.

‘ ஹிரோந்தெல் பறவைகள்’ என்றார் நந்தன்.

‘ஹும். பிரெஞ்சில் ஒரு பழமொழி உண்டு. Une hirondelle ne fait pas le printemps !’

‘அப்படியென்றால் ?’

‘ஒரு ஹிரோந்தெல் பறவை வசந்தத்தின் அறிகுறியல்ல என்பது நேரடி மொழிபெயர்ப்பு. அதாவது வெளித்தோற்றங்களை நம்பக்கூடாது என்றும் ஒரு தனிப்பட்ட உண்மையிலிருந்து பொதுவான முடிவுகளை எடுப்பது நியாயமல்ல என்றும் சொல்கிறது.’

‘ஓ! வான்கோக்கிற்கு இது பொருந்துமோ ?’

‘இருக்கலாம்.’

‘ஏன் க்ளாத் மோனேவின் வீட்டைப் பார்க்க வரும் கூட்டத்தைப் போல் இங்கு யாரும் வருவதில்லை?’ என்று நந்தன் கேட்டபோது என்னிடம் பதில் இல்லை.

வான் கோக் வாழ்ந்த 37 வருடங்களில் 38 இடங்களில் இருந்திருக்கிறார். அவர் தன் வாழ்நாளின் கடைசி 70 நாட்களைக் கழித்த Auberge Ravoux என்ற விடுதியைப் பார்க்கும்போது கண்டிப்பாக மனம் பிசையும். அந்த விடுதியின் ஐந்தாம் நம்பர் அறையில் அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த அறையை அதற்குப்பின் யாருக்கும் தராமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். வான் கோக் தன் படங்களை மாட்டுவதற்காக அடித்த ஆணிகள் கூட அப்படியே இருக்கிறதாம். நான் சென்ற அன்று அந்த விடுதி மூடியிருந்தது. அடுத்த நாள்தான் திறப்பார்கள் என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றமாக இருந்தது.

இந்தப் பயணத்தில் பல இடங்களை பார்க்கத் தவறினேன். ஒன்று சரியான நாளில் சென்றிருக்க மாட்டேன். அல்லது சரியான நேரத்தில் போயிருக்க மாட்டேன்.

‘இந்த 75 அடி அறையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உணர்வதற்கு நிறைய இருக்கிறது’ என்று எழுதி வைத்திருந்தார்கள்.  இந்த அறை 1985 முதல் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மோனேவைப் போல் வின்சென்ட் வான் கோக், தான் வாழ்ந்த காலத்தில் புகழடையவேயில்லை. ஏழ்மையில் வாடினார்.  கடைசியாக தன் சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதத்தில் அங்கேயிருக்கும் கஃபேயில் என்னுடைய படங்களைக் காட்சிப்படுத்தலாம் என்றிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசு அவர் ஆசையைப் பூர்த்தி செய்தது.

‘இந்த வழியாக எத்தனை முறை சென்றிருப்பாய், இந்தக் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருப்பாய், இதோ தெரியும் இந்த வெட்டவெளியை வரைந்திருப்பாய், இல்லையா? லட்சக்கணக்கான மக்கள் இந்த வாசல் வழியாக வந்து உன் வெற்று அறையைப் பார்ப்பார்கள் என்று கிஞ்சிற்றும் நினைத்திருக்க மாட்டாய். நீ கால் பதித்த இந்தச் சாலைகள் முழுக்க Vincent, Vincent, Vincent என்று பெயர் பொறித்த தங்கக் குமிழ்களைப் பதிப்பார்கள் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்.’

‘க்ளாத் மோனே உயிருடன் இருந்த காலத்திலேயே புகழுடன் ஆர்ப்பரித்து வாழ்ந்ததுபோல் இன்று அவர் இடம் மக்களால் ஆர்ப்பரிக்கிறது. உன் மணற்கடிகையின் கடைசித் துகள்களை இங்கு செலவழித்தாய். உனக்கு அங்கீகாரம் அளிக்காமல் கொன்று விட்டோமே என்ற அவமானத்தால் இந்தக் கிராமமே மயான அமைதியை அப்பிக்கொண்டிருக்கிறது. என்ன செய்ய! இருக்கும்போது வைதுகொண்டு இகழ்ந்துகொண்டு பாராமுகமாக இருந்து, இல்லாதபோது மாரில் அடித்துக்கொள்வதுதானே மானுட வழமை’ என்று என்னென்னவோ நினைத்தபடிநடந்துகொண்டிருந்தேன்.

கிராமத்தின் சாலையில் ஆங்காங்கே Vincent என்று எழுதியிருந்த தங்கநிற குமிழ்களைத் தடவிப் பார்த்தேன்.

நின்று, மூடியிருந்த அந்த ஐந்தாம் நம்பர் அறையைத் திரும்பிப் பார்த்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

நல்லவேளை! அந்த விடுதி மூடியிருந்தது. இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறியிருப்பேன்!

  • அடுத்த அத்தியாயம் அடுத்த புதன்கிழமை

❌