Normal view

Received before yesterday

மாயரஞ்சனும் கானரஞ்சனும் – சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள்

நன்றி - வல்லினம் 

 


80களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். 84 சிறுகதைகளை எழுதிய பிறகு, ஏறத்தாழ 40 வருடங்கள் வரை நாவலே எழுதாமலிருந்தவர், 2019ஆம் ஆண்டு அவரது முதல் நாவலான ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலை எழுதினார். அதற்குப் பின்பான இந்த நான்காண்டுகளில் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’, ‘நான் லலிதா பேசுகிறேன்’ மற்றும் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ ஆகிய நாவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது ‘பிறவிப் பெருங்கடல்’ எனும் புதிய நாவலும் வெளியாகவுள்ளது. இரண்டு குறுநாவல்கள் கொண்ட ‘எடின்பரோவின் குறிப்புகள்’ எனும் குறுநாவல் தொகுப்பும் வெளிவந்துள்ளது. வெளிவராத ‘பிறவிப் பெருங்கடல்’ நாவலைத் தவிர்த்து பிறவற்றை இந்தக் கட்டுரையில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.


‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவல் ஆதித்யா சிதம்பரம் எனும் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளரின் வாழ்வையும் படைப்புகளையும் பற்றி பேசுகிறது. நூலாசிரியர் முன்னுரையில் மரியோ வர்கோஸ் லோசாவின் நோபல் பரிசு ஏற்புரையால் உந்தப்பட்டதாக குறிப்பிடுவது இனிய தற்செயல். ஏனெனில் லோசாவின் ‘ஆண்ட் ஜூலியா அண்ட் ஹெர் ஸ்க்ரிப்ட் ரைட்டர்’ நாவலில் முற்றுபெறாத வானொலி நாடகங்களின் பகுதிகள் நாவலின் அங்கங்களாகத் திகழும். இந்நாவலில் முற்றுப்பெறாத ஐந்து குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன.


‘அம்பிகாவும் எட்வர்ட்ஜென்னரும்’ மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலய நுழைவு போராட்டத்தின் பின்புலத்தில் நிகழ்வது. வைஸ்ராயாக இருந்த லின்லித்தோ பிரபு தொடங்கி ராஜாஜி, மதுரை வைத்தியநாத அய்யர், ஆர்.எஸ். நாயுடு, தி.செ. சௌ. ராஜன் உட்பட பல்வேறு வரலாற்று ஆளுமைகள் நாவலின் முற்பகுதியில் வந்து செல்கிறார்கள். மதுரை ஜேம்ஸ் மில்லின் பொது மேலாளர் எட்வர்ட் ஜென்னரை அம்பிகா எனும் பிராமண பெண் காதலிக்கிறாள். கள்ளு வியாபாரியாக இருந்து பின்னர் பஞ்சு வியாபாரியாக மாறிய சங்கரலிங்க நாடார் இவர்களின் நலன்விரும்பி. நாவலின் பெரும்பகுதி அம்பிகா ஜென்னரை எப்படித் திருமணம் செய்துகொள்கிறார் அதற்குச் சங்கரலிங்க நாடார் எப்படி உதவுகிறார் என்பதை விவரிக்கிறது. ஆலய நுழைவு தொடர்பான ஆவணங்கள் நாவலின் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.



‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலும் வரலாற்று பின்புலம் கொண்ட நாவல்தான். ஆர்.எஸ். சுப்புலட்சுமி, முத்துலட்சுமி ரெட்டி, ஜெமினி கணேசன் போன்ற முக்கியமான வரலாற்று ஆளுமைகள் உயிர்பெற்று உலவுகிறார்கள். நாவலுக்கு நடுவில் முத்துலட்சுமி ரெட்டி மாகாண கவுன்சிலில் குழந்தை திருமணம் ஒழிப்பு தொடர்பாக ஆற்றிய உரை முழுமையாக இடம்பெற்றிருக்கிறது. லலிதா குழந்தையாக இருக்கும்போதே விதவையாகி சென்னை இல்லத்திற்குக் கல்வி கற்க வருகிறார். டெல்லியில் சென்று மருத்துவம் பயில்கிறார். நீல்கமல் எனும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட வங்காளியைச் சந்திக்கிறார். ஐ.என்.ஏ விற்குச் சென்றவன் திரும்பவே இல்லை. அரசு மருத்துவராக இருக்கிறார். முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சிகளுக்குத் துணையாக இருக்கிறார். வெவ்வேறு மட்டத்திலிருக்கும் ஆண்கள் அவளை வசப்படுத்த முயன்றபடி இருக்கிறார்கள். தங்கையை இழக்கிறாள். அவளுடைய மரணத்துடன் நாவல் முற்றுப்பெறுகிறது. இறுதி பகுதியைத் தவிர்த்து மொத்த நாவலும் பிராமண மொழியின், லலிதாவின் தன்னிலையில் எழுதப்பட்டுள்ளது. நடுவில் ஒரு அத்தியாயம் மட்டும் முத்துலெட்சுமி ரெட்டியின் தன்னிலையில் வருகிறது.


‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நந்தினி எனும் பாடகியின் கதையைச் சொல்கிறது. அவளுடைய கணவன் சர்வேஸ்வரன் திருமணத்திற்குப் பின் அவளை விட்டுச்சென்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனந்தன் எனும் தொழிலதிபர் அவள் வீட்டுக்குள் தற்செயலாகப் பாடுவதைக் கேட்டு அதனால் ஈர்க்கப்படுகிறான். சபாவில் பாட வாய்ப்பு வாங்கிக்கொடுக்கிறான். தனி ஆல்பம் வெளியிட உதவுகிறான். ராம்பிரஸாத் எனும் இசை கலைஞர், ரேவதி எனும் வழக்குறிஞர் தோழி, தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பிரதான பாத்திரங்கள். தவிர வேறு வேறு பெயர்களில் வள்ளலார், அஸ்வத்தாமன், பட்டினத்தார் போன்றவர்கள் காணாமல் போன கதைகளைச் சொல்கிறார்கள். கதைசொல்லும் மாயப்பிறவி கடைசியில் தன்னைக் கடலில் கரைத்துக்கொள்வான். அந்த மாயப்பிறவியை நந்தினியை விட்டுச்சென்ற கணவன் சர்வேஸ்வரனாக வாசிக்க இடமுண்டு. ஆனந்தன் தனது மனைவி லாவண்யாவை விவாகரத்து செய்யவும் லாவண்யா கணவரை விவாகரத்து செய்வதற்கும் கணவன் சர்வேஸ்வரன் இறந்துவிட்டான் எனச் சான்று வாங்குவதற்காக நந்தினியும் ‘டைவர்ஸ்’ சாம்பசிவம் எனும் ஒரே வழக்கறிஞரைத் தனித்தனியாக அணுகுகிறார்கள் என்பதொரு சுவாரசியமான தற்செயல்.


‘எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவல் தொகுப்பில் ‘எடின்பரோவின் குறிப்புகள்’ மற்றும் ‘ரோஜா மலர்’ ஆகிய இரண்டு குறுநாவல்கள் உள்ளன. ‘அம்பிகா’ நாவலில் ஜெரால்ட் நிக்கல்ஸன் என்றொரு நாடோடி வெள்ளைக்காரர் ஆலய நுழைவு பற்றி ஆராய்ச்சி குறிப்புகளை அளிப்பார். எடின்பரோவை அவரது தொடர்ச்சி எனச் சொல்ல முடியும். காட்டில் குடிலமைத்து தனியாக வாழ்ந்து மறைந்தவன் எடின்பரோ அவனை மரத்தடியில் புதைத்துவிட்டு இறந்து ஓராண்டுக்குப் பிறகு மனைவி மகனுக்கு அவனுடைய மரணச்செய்தியைச் சொல்கிறார்கள். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று அங்கே இருக்கிறான். எடின்பரோ பம்பாயில் கள்ளக்கடத்தலில் ஈடுபடுகிறான். குற்றங்கள் நிறைந்த இருளுலகத்தில் உழல்கிறான். கவுசல்யா, அகதா, சுகந்தி, லதா எனப் பெண்கள் அவன் வாழ்வில் வந்தபடியிருக்கிறார்கள். காமத்தால் அலைக்கழிக்கிறான். நகைக்கடை, நில வியாபாரம் என விதவிதமான தொழில்களைச் செய்கிறான். ஒவ்வொன்றாக நீங்கிச்செல்கிறது. கொடைக்கானல் காளி கோயிலில் அடைக்கலமடைகிறான். துய்த்து அலுத்து துறப்பது தான் அவன் வாழ்க்கை பயணம். அவனது குறிப்புகளே குறுநாவல். ஏறத்தாழ ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலின் மாயப்பிறவியைப் போல. கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானிடம்’ கணேசனை நினைவுபடுத்தும் பாத்திர வார்ப்பு. ‘ரோஜாமலர்’ ஒரு துப்பறியும் கதை. ரஞ்சனியின் கணவரான மருத்துவர் பிரஸாத் கொல்லப்படுகிறார். யார் செய்தது?ஏன் செய்தது?என்பதைச் சுற்றி நகர்கிறது.

2


தாகூருக்குப் பிறகு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் ஆதித்யா சிதம்பரம். (எப்பேர்பட்ட கற்பனை!). அவரது ‘இரட்டை மனிதன்’ Dual man என்கிற நாவலுக்காக நோபல் பரிசு அளிக்கப்படுகிறது (பொதுவாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு புக்கர் போல ஒரு ஆக்கத்திற்கு வழங்கப்படுவதில்லை என எண்ணுகிறேன்). ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலாசிரியர் ஆதித்யா சிதம்பரத்தின் கடந்தகால வாழ்வைச் சொல்லும்போது அவனது தந்தை வெட்டுண்டு கொல்லப்படும் சித்திரம் விவரிக்கப்படுகிறது. காரண காரியங்கள் விளக்கப்படவில்லை. அடுத்த அத்தியாயத்திலேயே அவனது அம்மாவும் பாட்டியும் இறந்து ஆதரவற்று பிழைப்பு தேடி அலைகிறான் எனும் இடத்திற்குக் கதை தாவி விடுகிறது. இவ்வகையான கதைகூறுமுறையே அவரது பாணி. ஆதித்யா சிதம்பரம் போலவே சிறுவனாக தாய் தந்தையை இழந்த சித்தரஞ்சன்‌ எனும் சிறுவனின் கதையை ‘இரட்டை மனிதன்’ எனும் நாவல் சொல்கிறது. வளர்ந்த பிறகு சித்தரஞ்சன், மாயரஞ்சன், கானரஞ்சன் என இரண்டாகப் பிரிகிறான். மாயரஞ்சன் அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்தியவன். கானரஞ்சன் அன்பின் மலரை ஏந்தியவன். அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்தியவனுக்கு மீண்டும் மீண்டும் நன்மையே நிகழ்கிறது. அன்பெனும் மலரை ஏந்தியவனைத்துரதிஷ்டங்கள் துரத்துகின்றன. ஒரு வகையில் சுரேஷ்குமாரஇந்திரஜித் நாவல்களில் உள்ள இருமையாக இதைப் புரிந்து கொள்ள முடியும். மாயரஞ்சனும் கானரஞ்சனும் சந்திக்கும் புள்ளியே அவரது படைப்புலகம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் மனிதனின் நல்லியல்புகளின் மீது ஓயாமல் ஐயத்தை எழுப்புபவை என்பது ‘மினுங்கும் கண்கள்’ போன்ற அவரது சிறுகதைகளை வாசித்தவர்களுக்குத் தெரியும். ‘தேம்பாவணி’ இல்லத்தை நடத்தும் செபாஸ்டியன் நாடார், அவரது மகள் ரெஜினா (கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்) போன்ற முழு நேர்மறைப் பாத்திரங்கள் அவரது முதல் நாவலில் அறிமுகமானபோது எனக்கது ஆச்சரியமாக இருந்தது. ‘நான் லலிதா பேசுகிறேன்’ முழுக்க நேர்மறை கதைமாந்தர்களால் நிரம்பியவர்கள். லலிதா இளமையில் இருந்தே இன்னல்களைச் சந்தித்து வருபவள். ஆனால், அவள் எதிர்கொள்ளும் பெரும்பாலானவர்கள் உறுதுணையாகவே இருக்கிறார்கள். டெல்லியில் அவளிடம் தவறாக நடந்துகொள்ள முனையும் ஆசார பிராமணரும் திருமணத்திற்காக சம்மதம் பெற சந்திக்க வரும் வேணுகோபாலனும்,அவளை அடையத் துடிக்கும் மருத்துவ அதிகாரி விஸ்வநாதனும் விதிவிலக்குகள். குழந்தை திருமணம் புரிந்து கொண்டு சிறுமிவிதவையாக உள்ள லலிதா மருத்துவம் படிக்க உதவுவது இறந்து போன கணவரின் தந்தை. அம்பிகாவும் அவள் வாழ்வில் நல்லவர்களையே எதிர்கொள்கிறாள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தந்தை கூட வீட்டு பத்திரத்தையும் சாவியையும் அவளுக்கு அனுப்பி வைக்கும் அளவிற்கு நாகரிகமானவர். அக்கிரகார வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் உள்ள புறணி பேசும் ஆச்சாரவாதிகளே அதிகபட்சம் அவள் எதிர்கொண்ட எதிர்மறை நபர்கள். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலிலும் எதிர்மறை பாத்திரங்கள் என எவரையும் பெரிதாக இனம் காண முடியாது. மகளின் புது வாழ்வை முழுமனதுடன் தந்தை ஏற்றுக்கொள்கிறார்.



இந்த மூன்று நாவல்களும் பிராமண பெண்களை மைய கதாப்பாத்திரமாக கொண்டவை. ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் வரும் லலிதா குழந்தை திருமணத்தில் விதவையானவள். முற்போக்குச் சிந்தனை கொண்ட நீல்கமலைக் காதலிக்கிறாள் . ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவலில் வரும் அம்பிகா சாதி, மதம், தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து வீட்டை மீறி திருமணம் செய்தவர். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலின் நந்தினியைக் கணவர் நீங்கிச் செல்கிறார். ஆனந்தனுடனான உறவின் வழியாக புதிய தொடக்கத்தை எதிர்நோக்குபவள்.


இந்த மூன்று நாவல்களும் பிராமண சமூகத்தில் பெண்களின் நிலையைச் சீர்திருத்த நோக்கில் அணுகுகிறது. இன்றைய காலத்தில் குழந்தை திருமணமோ, விதவை மறுமணமோ பெரும் புரட்சியாகவோ கலகமாகவோ பார்க்கப்படுவதில்லை. அ. மாதவையா, பாரதி காலம் தொட்டு பேசப்பட்டு இன்று காலாவதியாகிப்போன ஆவண மதிப்பு மட்டுமே உள்ள கடந்தகால விஷயங்கள். சாதி மீறிய திருமணங்கள் இன்றளவும் முக்கியமான சிக்கல்தான். இடை நிலை சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான திருமண உறவுகள் பெரும் மோதலை ஏற்படுத்துகிறது என்பதே இன்றைய சமூக யதார்த்தம்.


சீர்திருத்த எழுத்துக்களின் வரிசையில் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் எழுதிய காலத்தில் பிராமண பின்புலத்திலிருந்து பெண் விடுதலையைப் பேச வேண்டிய சமூக சூழல் நிலவியது. சுரேஷ்குமார இந்திரஜித் தனது ஆதர்சமாக ஜெயகாந்தனைக் குறிப்பிடுகிறார். ஆனால், அவரது சிறுகதைகளில் ஜெயகாந்தனின் தாக்கம் ஏதும் பெரிதாக புலப்படவில்லை. ஜி. நாகராஜனின் கதையுலகோடு சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதை மாந்தர்களைப் பொருத்திப்பார்ப்பதுண்டு. ‘அணு யுகம்’, ‘கிழவனின் வருகை’ போன்ற கதைகளை வாசிக்கும்போது ஜி. நாகராஜனின் உலகம் இயல்பாக அறமின்மையைப் பேசுகிறது என்பதை விட அறத்திற்கான ஏக்கத்தையும் அது இல்லாததன் விரக்தியையுமே வெளிப்படுத்துகிறது. அந்த ஏக்கம் கூட சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளில் வெளிப்பட்டதில்லை. ‘எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவலைத் தவிர்த்து பிற நாவல்கள் ஜெயகாந்தனின் லட்சியவாத உலகிற்கு நெருக்கமாக உள்ளது. பல நாவல்களின் பாத்திர வார்ப்புகளிலும் பேசுபொருள்களிலும் சர்வ நிச்சயமாக அவருடைய தாக்கத்தை உணர முடிகிறது. ‘அம்பிகா’ நாவலில் சங்கரலிங்க நாடார் எனக்கு ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ அண்ணாசாமியை நினைவுபடுத்தினார். வயதில் ஏறத்தாழ தந்தையின் வயதையொத்த சங்கரலிங்க நாடார் அம்பிகா எட்வர்ட் ஜென்னரைக் காதலிப்பதாகக் கூறும் வரை அவளது புடவையின் நிறத்தைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார். ஜெயகாந்தனின் எழுத்துக்கள் இலட்சியவாதத்தையம் சீர்திருத்த நோக்கையும் முன்வைப்பவை. மாயரஞ்சன் அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்திக்கொண்டு நுழைந்து படிப்படியாக அன்பெனும் விசையை உலக இயக்கத்தின் அடிநாதமாக கண்டுகொள்வது போன்றொரு பயணம் சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகளின் ஊடாக நிகழ்கிறது.


இந்நாவல்களின் பேசுபொருளைக் கொண்டு நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்பது இவற்றின் இன்றைய முக்கியத்துவம் என்ன என்பதே. இவற்றை இன்று ஏன் எழுத வேண்டும்? இலக்கியத்திற்கு எந்தப் பேசுபொருளும் அந்நியமானதில்லை, காலாவதியாவதில்லை. ஆனால், கூறுமுறையும் கோணமும் தேய்வழக்குகளற்று புதிதாக உள்ளதா என்பதே கேள்வி.



இம்மூன்று நாவல்களிலும் எதிர்மறை பாத்திரங்கள் என பெரிதாக ஏதுமில்லை என்றாலும் பழமைவாதம், ஆச்சாரம், மரபு போன்ற ‘அமைப்புகள்’ அவ்விடத்தை எடுத்துக்கொள்கின்றன. தனி மனிதர்களின் விழைவுகளுக்கும் மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளுக்கும் இடையேயான உராய்வைப் பேச முயல்கின்றன. மனிதர் உருவாக்கிய அமைப்புகள் எப்படித் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் உளவியல் தளங்களிலும் ஒரு வலைபோல விரிகிறது, அதை அறுத்து வீச முடியாமல் மனிதர்கள் எப்படி அதற்குள் சிக்குண்டு அழிகிறார்கள் என்பதே இம்மூன்று நாவல்களிலும் சுரேஷ்குமார இந்திரஜித் எழுப்பிக்கொள்ளும் முதன்மை கேள்வியாக உள்ளது. பிராமண பின்னணி என்பது இந்தக் கேள்வியை விவாதிக்க ஏதுவான பின்புலமாக மட்டும் காணும்போது மேற்சொன்ன கேள்வியை வந்தடையலாம். லலிதாவிற்கும் நந்தினிக்கு என்னவாகிறது? அவர்களால் சமூகத்தின் வரையறையைத் தாண்ட முடியவில்லை. லலிதா யாரையுமே மணக்காமல் பிரமை பிடித்து மூளையில் கட்டி வந்து மரணமடைகிறாள். ஆனந்தனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் தருணத்தில் நந்தினி தன்னை விட்டுச்சென்ற கணவனான சர்வேஸ்வரனைப் பற்றிய அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் புத்தி பேதலித்துப் போகிறாள். சட்டப்படி அவனுக்கான மரண சான்றிதழை வாங்கிவிட்டாள், ஆனந்தனும் தனது மனைவியை விவாகரத்து செய்து தயாராக இருக்கிறான். ஆனாலும் அவர்களால் இணைய முடியவில்லை. இந்தப் பேதலிப்பு தனி மனுஷியின் பிரமை என்பதொரு கோணம், சமூக வரையறையைத் தாண்ட முடியாத திண்மையின்மை என்பது இன்னொரு கோணம். இவ்விரு முடிவுகளுக்கு மாறாக அம்பிகா ஆங்கிலேயரான எட்வர்ட் ஜென்னரை மணந்துகொண்டு இங்கிலாந்துக்குச் செல்கிறாள். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமாகப் பயணித்து அவள் எண்ணிய சமூக பணிகளை ஆற்றுகிறாள். இந்தியக் குடும்ப, பண்பாட்டு அமைப்பிலிருந்து தப்பிச் செல்லும் அம்பிகா மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்கிறாள். அவள் தான் வாழ்ந்த, தனக்கு உரிமையுள்ள பரம்பரை அக்கிரகார வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்குவது குறியீட்டு ரீதியாக முக்கியமான செயல். பழைய பாரம்பரியத்தின் மீது அவளுக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. அங்குப் புதிய கட்டிடத்தை எழுப்புகிறாள். அதுவும் நடைமுறை பயன்கொண்ட விதவைகளுக்கான விடுதியை அமைத்து கொடுக்கிறாள். அம்பிகாவின் நிகழ்கால தேர்வுகளை வருங்காலம் குறித்த கனவுகள் முடிவு செய்கின்றன என்றால் பிறரின் தேர்வுகள் கடந்தகாலத்தின் பாற்பட்டதாக உள்ளன.


இருத்தலியல் கோணத்திலிருந்தும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் நாவல்களை நோக்க முடியும். இருத்தலியல் சிக்கல் என்பது நமக்கான பாதைகளை நாம் தேர்வு செய்வதில் உள்ள குழப்பத்தைக் சுட்டுவது. நமது ‘தன் விருப்பை’ நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் தடுமாற்றமும் குழப்பமும் தான் அடிப்படை. லலிதாவும் நந்தினியும் இருத்தலியல் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டவர்கள். அம்பிகாவுக்கு அத்தகைய சிக்கல் ஏதுமில்லை‌. ‘ரோஜா மலர்’ ரஞ்சனாவும் காதலை ஏற்பதா வேண்டாமா எனும் குழப்பத்திற்கு ஆளாகி லலிதா நந்தினி வரிசையில் சேர்ந்துகொள்கிறாள். ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலின் ஆதித்யா சிதம்பரம் அவன் மணந்துகொண்ட சாரதாவிடமிருந்து பெரிய குழப்பம் ஏதுமின்றி விலகிவிட முடிகிறது. அவனுக்குத் தேவை மனைவியல்ல தோழி என்பதை உணர்ந்துகொள்கிறான். ஆகவே, ரஞ்சனாவுடன் இயல்பாக இருக்க முடிகிறது. எடின்பரோ அகதாவை விட்டு விலகுகிறான். சுகந்தியை மணக்கிறான். அங்கிருந்தும் விலகுகிறான். குடும்பத்திற்குள் அவனாலும் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலவில்லை. ஆண்களால் குடும்ப அமைப்பை விட்டு எளிதாக விலகிச்செல்ல முடிவதுபோல் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பெண் பாத்திரங்களால் விலக முடியவில்லை. ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலில் எழுத்தாளர் ஆதித்யா சிதம்பரத்திடம் பேட்டி காணும்போது ‘இந்திய மக்களுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள். அதற்கு ‘பழமை பாறாங்கல் போல் அழுத்திக் கொண்டிருக்கிறது. தொல் நாகரிகம் கொண்ட நாடுகளில் இவ்வாறு ஏற்படுகிறது. வெளியே வாருங்கள். புதிய காற்றைச் சுவாசியுங்கள். உங்கள் கைகளில் புதிய இந்தியா உருவாகட்டும்.’ இந்தச் செய்திதான் அவரது எல்லா நாவல்களின் மையம் எனச் சொல்லிவிடலாம். லலிதா டெல்லியில் ஒரு மாமியுடன் பேசும்போது ‘மாமிக்கு சில சிந்தனைகள் இருக்கு காலங்காலமா தலைமுறை தலைமுறையா சில எண்ணங்களை சந்ததிக்கெல்லாம் கடத்திண்டு வருவா. இவாள்ளாம் இப்படித்தான் யோசிப்பா. உண்மையாக சொல்லப்போனா இந்த மாமியோட பேசறப்போ நான் என்னையறியாமலேயே தமாஷா பேசறேன்னு தோணுது’ எனத்தனக்குள்ளேயே சொல்லிக்கொள்கிறாள்.


ஆதித்யா சிதம்பரம் மணமுறிவு செய்து கொண்டவன். தோழி ரஞ்சனாவுடன் இருக்கிறான். அதாவது குடும்ப அமைப்பிற்கு ஆட்படாமல் இருக்கிறான். லலிதாவும் நந்தினியும் குடும்ப அமைப்புகளில் இருந்து தப்ப விரும்பும் அதே நேரத்தில் அன்பின் பொருட்டு நுழையவும் விரும்புகிறார்கள். இந்த முரணை எதிர்கொள்ள முடியாமல் தான் அவர்கள் பித்தர்களாகி விட்டார்களா? லலிதா ‘நேக்கு கல்யாண ஆசை இருக்கான்னு நேக்கே தெரியலை. இருக்குன்னு தான் தோண்றது. எல்லாருக்கும் இருக்கற ஆசை தானே. ஆனா திருமண வாழ்க்கைல ஒரு ஆணோட என்னால இருக்க முடியுமா. அது பிரச்சினைதான். இப்ப நான் என் இஷ்டப்படி இருக்கேன். அப்புறம் ஆத்துக்காரர் இஷ்டப்படி தான் நடக்கணும்’ என எண்ணுகிறாள்.


பண்பாட்டு சேகரம் தனிமனிதனின் காம விழைவுகளை என்னவாக பாதிக்கிறது என்பதை அவரது நாவல்களிலிருந்து இரண்டு தருணங்களை எடுத்துக்கொண்டு விரிவாக காணலாம். ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலில் ஆதித்யா சிதம்பரம் காட்டுமன்னார்கோவிலில் வசிக்கும் விதவையான சாரதாவை மணந்துகொள்ள முடிவு செய்வான். சாரதாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைப்பவர் சாராதாவின் மாமா சந்தானம். அதுவரை காமத்துடன் காணாத சந்தானம் ஆதித்யா சிதம்பரம் சாரதாவைத்திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதும் மிகுந்த கிளர்ச்சியை உணர்கிறார். எவ்வளவோ அடக்க முயன்றும் அவரால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை சாரதாவிடம் வெளிப்படுத்தவும் செய்கிறார். சாரதா பதிலுக்கு உங்களுக்கு உடலுறவு தான் வேண்டுமா என்கிறாள். இல்லை ஒரேயொருமுறை அணைத்துக்கொள்கிறேன் போதும் என்கிறார். சாரதா அவளுக்கு அந்தத் தருணத்திலிருந்து அம்பாளாக ஆகிறாள். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலிலும் நந்தினி அம்பாளாக ஆகும் தருணம் உண்டு. ‘அவர் வீட்டை விட்டு ஓடிப்போறதுக்கு முந்தின நாள் ராத்திரி ‘நான் யார்’ என்று மூன்று தடவை தனக்குத்தானே கேட்டுண்டார். என்ன ஆச்சு உங்களுக்குன்னு கேட்டேன் ஒண்ணுமில்லேன்னு சிரிச்சார். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா என்றார். என்னோட ஆத்துக்காரர்னு சொன்னேன். அது மட்டும் தான் உனக்கு தெரியும்னு சொன்னார். அப்புறம் என் ட்ரெஸ்ஸை எடுத்துட்டு நிர்வாணமா இருக்கச் சொன்னார். நகைகளையும் எடுக்கச் சொல்லிவிட்டார். திருமாங்கல்யத்தையும் எடுக்கச் சொன்னார். நான் முடியாதுன்னு சொன்னேன். அவர் வற்புறுத்தி அதையும் காதுதோடு, நெற்றி போட்டு எல்லாத்தையும் எடுக்கச் சொல்லிவிட்டார். என் உடம்புல ஒண்ணுமே இல்லை. நிற்கச் சொன்னார். நின்னேன். என் கால்ல நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டார். நான் பதறிப் போனேன். நீ தேவி ரூபம் நான் ஒண்ணுமே இல்லைன்னு மயங்கிவிட்டார். சற்று நேரத்துலே எழுந்து என்கூட முரட்டுத்தனமா செக்ஸ் வைச்சுண்டார். அப்படியே தூங்கிட்டார். அடுத்த நாள் காலைலேந்து அவரை காணோம்.”


சுரேஷ்குமார இந்திரஜித் காரைக்காலம்மையார் பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளார். துய்க்க முடியாத தூய்மை இறைத்தன்மையடைகிறது என்பது இந்திய நம்பிக்கை. கள்ளமற்ற தெய்வீகம் நம்மைத் தொந்திரவு செய்கிறது. ‘பிளாக் மிர்ரர்’ தொடரில் ஒரு அத்தியாயத்தில் பாடகியாக விரும்பும் கள்ளமற்ற தெய்வீகப் பெண்ணை உனது மூலதனத்தைப் பாட்டில் செலவிடுவதைவிட பாலியல் வேட்கைக்கு உகந்தது என மடைமாற்றுவார்கள். இந்திய மரபு காமத்தைப் பக்தியாக மேல்நிலையாக்கம் செய்து கொள்வதன் வழி கற்பிதமான குற்ற உணர்விலிருந்து இந்திய மனம் தன்னை விடுவித்துக் கொள்கிறதா என்றொரு கேள்வியைச் சுரேஷ்குமார இந்திரஜித் எழுப்புகிறார்.



கனவுக்கும் நிஜத்துக்குமான கோட்டை அழிக்கிறார் என்பதை விட இந்த இருமையை மறுதலிக்கிறார். எல்லாமே சாத்தியங்கள் எனும் நிலையில் இந்தப் பிரிவினைக்குப் பொருளில்லை. ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ கதையில் அம்மா குறித்து ஆதித்யா சிதம்பரம் சிறுவனாகக் காணும் கனவு ஒரு மாற்று யதார்த்தம் எனும் அளவிற்கு விரிவாகத் துல்லியமாக காட்சிப்படுத்தப்படுகிறது. நீல்கமல் குறித்து லலிதா காணும் கனவுகளுக்குத் தொடர்ச்சியுண்டு. அவை பகல் கனவுகள் அல்லது பிரமை அல்லது இணைகதைகள் எனச் சொல்ல முடியும். சங்கரலிங்கம் நாடார் அம்பிகாவின் வீட்டிற்குச் செல்வதாகக் காணும் கனவையும் இதே வரிசையில் வைக்கலாம். இக்கனவுகள் மாற்று சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுகின்றன. மையக்கதைக்குச் சில அடுக்குகளை உருவாக்கி அளிக்கின்றன. இந்த வழமையிலிருந்து முற்றிலும் வேறு ஒரு விதமான கனவு என்று ஒன்றைச் சொல்லலாம் என்றால் அது ‘அம்பிகா’ நாவலில் மதுரை வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மனைப் பற்றி காணும் கனவு. அம்மன் ரதத்தில் வந்து ஐயருக்குக் கோவிலை பக்தர்கள் அனைவருக்கும் திறந்துவிடுமாறு ஆணையிடுகிறாள். கணித மேதை ராமானுஜத்திற்குச் சூத்திரங்கள் நாமகிரித் தாயாரால் அருளப்பட்டதைப் பற்றி பின்னொரு சமயத்தில் நாவல் விவாதிக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் தனித்துவமான நுண்ணிய அவதானிப்புகளை எழுதுபவர். உதாரணமாக ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் ஒரு இடத்தைச் சுடடிக்காட்டலாம். ஆகஸ்ட் 15, 1947 அன்று என்ன நிகழ்ந்தது என்பது குறித்து பல்வேறு வரலாறுகள் உள்ளன. எத்தனையோ நிகழ்வுகளும் கதைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அன்று முதன் முறையாகக் கொடியேற்றும்போது சரியாக ஏற்ற வேண்டும் எனும் பதட்டம் பற்றி எவரும் குறிப்பிட்டதாக நினைவில்லை. நியாயமான பதட்டம் தான். சிரஸ்தாராக இருந்தவர் மட்டுமே கவனிக்கக்கூடிய பதட்டம். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும்போது இந்தப் பதட்டமிருந்திருக்கும். அம்பிகாவும் ஜென்னரும் கற்பனை பாத்திரங்கள் என்றாலும் அவர்களுக்கு முன்மாதிரிகள் உண்டு. அம்பிகாவே ருக்மணி அருண்டேல் பற்றி குறிப்பிடவும் செய்கிறாள். அதே போல் நந்தினி – ஆனந்தனுக்கு எம்.எஸ்- சதாசிவம் தொடர்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.


நாவல்கள் சார்ந்து எனது விமர்சனங்களையும் சொல்ல வேண்டும். தமிழ் நாவல் வரலாற்றில் இந்த நாவல்களின் தனித்துவமான பங்களிப்பு என்ன என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால் பெரிதாக ஏதுமில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.


சிறுகதைகளில் எவையெல்லாம் அவருடைய பலமாக இருந்ததோ அவை நாவல்களில் பலமாக வெளிப்படவில்லை. முன்னமே கூறியது போல் பேசுபொருள் காலாவதியாவதில்லை ஆனால் கூறுமுறை ஆகிவிடும். ‘மாபெரும் சூதாட்டம்’ , ‘மறைந்து திரியும் கிழவன்’,’எலும்புக்கூடுகள்’, ‘கால்பந்தும் அவளும்’,’நடன மங்கை’ எனப் பல அபாரமான கதைகளை எழுதியவர். தமிழ் சிறுகதை வரலாற்றில் சுரேஷ்குமார இந்திரஜித்முக்கியமான எழுத்தாளர் என்பதில் எனக்கு ஐயமில்லை. பேசுபொருள், கூறுமுறை என இரண்டிலுமே புதிய தலங்களுக்குத் தமிழ் சிறுகதைகளை நகர்த்தி சென்றவர். சிறுகதைகளில் பல நூதனங்களைச் செய்த முன்னோடியாகத் திகழும் சுரேஷ்குமார இந்திரஜித்தால் அத்தகைய நூதனங்களை நாவல்களில் கொண்டுவர முடியவில்லை என்பதே என் நோக்கு. எந்த நாவலுமே நிறைவான வாசிப்பனுபவத்தை எனக்குக் கடத்தவில்லை. சிறுகதைகளிலும்,ஓரளவு குறுங்கதைகளிலும் வெளிப்படும் கூர்மை நாவல்களில் வெளிப்படவில்லை‌. இயல்பாக அத்தகைய கூர்மை வெளிப்பட்ட ஆக்கம் என்பதாலேயே ‘எடின்பரோவின் குறிப்புகள்’ அவர் எழுதிய நாவல் குறுநாவல்களில் சிறந்ததாக ஆகிறது. பஞ்சு வியாபாரம் தொடர்பாக குமாஸ்தாவுடன் சங்கரலிங்கம் நாடார் உரையாடும் பகுதிகளை வாசிக்கும்போது பஞ்சு வியாபாரத்தின் படிநிலைகள் அடுத்தடுத்த பக்கங்களில் மும்முறை சொல்லப்படுகிறது. நாவல்களை எப்படி வளர்த்துக்கொண்டுபோவது எனும் சிக்கல் உள்ளதாகப்பார்க்கிறேன். அவை இயல்பாக வளராமல் செயற்கையாக நீட்டிக்கப்படுகின்றன எனும் எண்ணமே ஏற்படுகிறது. ‘அம்பிகா’ நாவல் மிக முக்கியமான வரலாற்று பின்புலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து திசை மாறிச் செல்கிறது. நாவலுக்குப் பின் இணைப்புகளாக பல்வேறு ஆவணங்களை அளித்துள்ளார். வரலாற்று புனைவில் வரலாறு தனியாகவும் புனைவு தனியாகவும் துண்டிக்கப்படுகிறது. இதை ஒரு நூதனமான உத்தியாக கருத முடியுமா எனத்தெரியவில்லை. வாசகனாக அது எனக்கு எவ்வித கிளர்ச்சியையும் கொடுக்கவில்லை‌. நாவலின் செய்திறன் சார்ந்து போதாமையைச் சுட்டுவதாகவே படுகிறது. ஒப்பு நோக்க ‘லலிதா’ நாவலில் வரலாறு கதைச்சரடோடு இணைந்து பயணிக்கிறது. முத்துலட்சுமி ரெட்டி கவுன்சிலில் ஆற்றிய உரை மொத்தமாக அளிக்கப்பட்டுள்ளது. லலிதா சொல்லிக்கொண்டிருக்கும் கதையில் திடீரென்று முத்துலெட்சுமி கதைசொல்லியாக ஆகிறார். இவையிரண்டும் கடந்தகால பாத்திரங்கள். நந்தினி சமகாலப் பெண் ஆனால், அவளுடைய சித்தரிப்பு நான் உணரும் இன்றைய யதார்த்தத்திலிருந்து வெகுவாக விலகியிருக்கிறது. எழுபதுகளின் பாத்திர வார்ப்பு எனத் தோன்றுகிறது. ஆகவே, அவள் மீது பெரிதாக கரிசனம் கொள்ள முடியவில்லை.


இந்தப் போதாமைகள் ஒரு புறமிருந்தாலும், சுரேஷ்குமார இந்திரஜித்தின் நாவல்கள் அவரது சிறுகதைகளை விடவும் அதிகம் பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன். சிடுக்கற்ற மொழியில் வாசக மனம் பற்றிக்கொள்ள ஒரு சுவாரசியமான ‘கதையை’ அவரால் உயிர்ப்புடன் எழுத முடிகிறது. அவரது படைப்புகளுக்குள் நுழைய சாமான்ய வாசகர்களுக்கு நாவல்களே சிறந்த வாயில்களாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. சிறுகதைகளில் அவர் ‘எழுத்தாளர்களின் எழுத்தாளராக’ இன்றளவும் இருக்கிறார் என நான் கருதுவதால் எனக்குள்ள எதிர்பார்ப்பாகவும் இதை கொள்ள முடியும்.


‘பாட்டி முறுக்கு சுட்டு அடுக்குவதுபோல் ஒரே மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்தேன்’ என ஒரு நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள் எழுதுவது என்பது எழுபது வயதில் காரோட்டப் பழகுவுது போல. அதிலொரு சாகசமும் குறுகுறுப்பும் உள்ளது. அவரது படைப்பூக்க விசை எனக்கு வியப்பளிக்கிறது. தன்னைத் தொடர்ந்து மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டும் எனும் முனைப்பு எனக்கு உந்துசக்தியாகவும் உள்ளது. ‘கடைசி எழுத்து என்பது வந்து சேர்ந்து நிலைத்திருக்கும் இடமல்ல கடந்து செல்லும் இடங்களில் ஒன்று’ எனக் குறிப்பிடுகிறார். அந்த விசை ஓயாதிருக்கட்டும்.‌

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும்.

நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள்.

செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேலைக்காக வேறு ஊருக்குச் செல்லும்போது மல்லிகைப்பூ கொடி சிறியதாக இருந்தது. இப்போது பெரிதாகப் படர்ந்திருக்கிறது. சாயந்திர நேரம். மதினி காபி தயார் செய்துகொண்டிருக்கலாம். சங்கரன் அண்ணாச்சி ஹாலில் உள்ள ஊஞ்சலில்தான் மதியம் படுத்திருப்பார். சரியாக நாலு மணிக்கு அவருக்கு விழிப்பு வந்துவிடும் என்று மதினி சொல்லியிருக்கிறாள். நாலேகால் மணிக்கு அவருக்கு பில்டர் காபி வேண்டும். இப்போது அவர்கள் வீட்டிற்குள் நுழையலாம். முறுக்கு, அதிரசம் கொண்டுவந்து மதினி வைத்துவிடுவாள். சங்கரன் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியதை நினைத்தால் அலுப்பாக இருக்கிறது. இன்னொரு நாள் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எதிரே குடை பிடித்துக்கொண்டு சோமு பிள்ளை வந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது செருப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குடை. டிசைன் குடை அல்ல. நீளமான கருப்புக் குடை. வாக்கிங் ஸ்டிக்காக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

சோமு பிள்ளை, “எப்படா வந்தே. வேலை மாறியிருக்கியா. அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா. எவ்வளவு நாள் இருப்பே. உங்கப்பனை விசாரிச்சதா சொல்லு” என்றார்.

“எல்லோரும் நல்லா இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் ஊர்ல இருப்பேன்” என்றேன்.

“உனக்குக் கல்யாணம் எப்போ” என்றார் சோமு பிள்ளை. அவர் எனக்கு என்ன முறை வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.

“இப்போ இல்லை. இப்பதானே வேலைக்குப் போயிருக்கேன்” என்றேன்.

அவர் “நல்லா இரு” என்று ஆசீர்வாதம் மாதிரி சொல்லிவிட்டுச் சென்றார். அவர் முழுக்கை சட்டை அணிவார். சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடியை அதற்கான கூட்டுடன் வைத்திருப்பார். அது புடைத்திருக்கும்.

இந்த நேரத்தில் வாசலிலோ சாலையிலோ ஆட்கள் இல்லை. மதிய மயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கமாட்டார்கள். என் ஆபீசர் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று, மூன்றரை மணிவரை மந்த நேரம், மூளை சுறுசுறுப்பாக இருக்காது என்று சொல்லுவார்.

மாகாளி பலசரக்குக் கடை பெரிதாக இருந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் இந்தக் கடை மூக்குப்பொடி கடையாக இருந்தது. T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி என்று பெரிய எழுத்தில் போர்டு இருக்கும். ஒரு வாட்டசாட்டமான வாலிபர் முறுக்கு மீசையுடன் உரலுக்கு முன் உட்கார்ந்து ஆட்டுக்கல்லைப் பிடித்துக்கொண்டு இருக்கும் பெரிய ஓவிய போர்டு மாட்டப்பட்டிருந்தது. மூக்குப்பொடி போட்டவர்கள் எங்கேதான் போனார்கள் என்று தெரியவில்லை. புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு மூக்குப்பொடி மேல் ஈடுபாடு ஏற்படவில்லை.

என் அத்தை மூக்குப்பொடி போடுவாள். “சுறுசுறுப்பா இருக்கு. மூளை வேலை செய்யுது. மூக்கடைப்பு உடனே விலகியிரும்” என்பாள் அத்தை. பக்கத்தில் சென்றால் மூக்குப்பொடி நெடி அடிக்கும். மூக்குத் துவாரங்களின் வெளிப்புறத்தில் மூக்குப்பொடி ஒட்டியிருக்கும். மூக்குப்பொடி போட்டுவிட்டு மூக்கை ஒரு சிறு கைக்குட்டை போன்ற துணியால் ராவிவிடுவாள். அந்தத் துணியில் மூக்குப்பொடி ஒட்டியிருக்கும். அவள் அருகிலேயே அந்தத் துணி கிடக்கும். கையைக் கழுவிவிட்டு சமையல் செய்வாளா என்பது தெரியவில்லை. மாமா ஒருதடவை சொன்னார். “உங்க அத்தை வைக்கிற வெண்டைக்காய் புளிக்குழம்புக்கு ஈடு இணை கிடையாது.” மூக்குப்பொடி சமையலுடன் கலந்தால் ருசியாக இருக்கும் போல.

என் நண்பன் சோணைமுத்து கணக்கு வாத்தியார் கிளாஸ்லே மூக்குப்பொடி போட்டுவிட்டு தும்முவோம் என்றான். நான் விளைவுகளை அறியாமல் ஒப்புக்கொண்டேன். ஒரு பொடி மட்டை வாங்கி வந்தோம். கணக்கு வாத்தியார் உற்சாகமாகக் கிளாஸை நடத்திக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வேறு யாருக்கும் புரிந்ததா என்றும் தெரியவில்லை. சோணைமுத்து, பொடி மட்டையைப் பிரித்தான். ஒரு சிட்டிகைப் பொடியை விரல்களில் எடுத்துக்கொண்டோம். மூக்கருகே கொண்டுசென்று மூச்சை இழுத்தேன். மண்டைக்குள் சுரீர் என்றது. பெருந்தும்மல் வந்தது. தொடர்ந்து தும்மல் வந்தது. எனக்கும் மேலே சத்தமாக, அடக்கமுடியாமல் சோணைமுத்து தும்மிக்கொண்டிருந்தான். பையன்களுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றுதானே வாத்தியார் நினைக்கவேண்டும். அப்படித்தான் முதலில் நினைத்திருப்பார். ஆனால் இரண்டு பையன்களுக்கு ஒரே நேரத்தில் ஜலதோஷத்தில் தும்மல் வரும் என்று எப்படி நம்புவார். எங்கள் இருவரையும் வரச்சொன்னார். தும்மிக்கொண்டே வந்தோம். எங்கள் முகத்தைப் பார்த்தவருக்கு விவரம் தெரிந்துவிட்டது. அதற்குள் கணக்கு வாத்தியார் மூன்று தும்மல்கள் போட்டுவிட்டார். அவரால் பேச முடியவில்லை. அவருக்கு மேலும் தும்மல் வந்தது. எங்களை அறை வாசலில் முட்டி போடச் சொன்னார். அவர் அறைக்கு வெளியே வந்து மூக்கைச் சிந்தி முகத்தைக் கழுவிவிட்டு அறைக்குள் நுழைந்து கணக்குக் கிளாஸ் எடுத்தார். ஹெட்மாஸ்டரிம் சொல்லி, எங்கள் அப்பாக்களை ஸ்கூலுக்கு வரச்சொல்லி கேவலப்படுத்திவிட்டார் வாத்தியார். நான் அப்பாவிடமும் அடி வாங்கினேன்.

பலர் கூட்டமாக மூக்குப்பொடி வாங்கிய கடையில் ஒரு காலத்தில் கூட்டமில்லாமல் போய்விட்டது. பலசரக்குக் கடை வந்துவிட்டது. மூக்குப்பொடிக் கடை வைத்திருந்தவர், செல்வாக்காக இருந்தவர், இப்படி வீழ்ச்சி அடைவோம் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.

பருத்திப்பால் கடை வைத்திருக்கும் ரங்கண்ணன் கடை திறக்க ஆயத்தமாக இருந்தார். ஒரு தள்ளுவண்டி. வண்டியின் கீழ்த்தளத்தில் அடுப்பு. தீ எரிந்துகொண்டிருக்கும். அடுப்பின் மேலே வெண்கலப் பானை. எவர்சில்வர் மூடி. ஒரு வாளித் தண்ணீர். கிளாஸ் கழுவ உபயோகப்படும். இன்னொரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் தனியாகத் தண்ணீர் இருக்கும். எவர்சில்வர் வாளித் தண்ணீர் அழுக்கான பிறகு தண்ணீர் மாற்றிக்கொள்வார். எனக்குப் பருத்திப்பால் என்ற பெயரைக் கேட்டாலே அருவருப்பாக இருக்கும். பருத்தியிலிருந்து பஞ்சை அல்லவா எடுப்பார்கள். அந்தப் பஞ்சிலிருந்து தயார் செய்யும் துணியை அல்லவா பலவகைகளில் பயன்படுத்துகிறோம். அந்தப் பருத்தியிலிருந்து தயார் செய்யும் பாலை எப்படிக் குடிப்பது. நினைத்தாலே எனக்குக் குமட்டியது. பிறகுதான் தெரிந்தது பருத்தி விதையை ஆட்டுரலில் ஆட்டி அரைத்து செய்யப்படுவது என்று. எனக்குப் பிடிக்கவில்லை. ஜலதோஷம் பிடிக்கும்போது நெஞ்சு கபத்திற்கு நல்லது என்று அப்பா பருத்திப்பால் குடிக்கச் சொல்வார். இனிப்பாக இருந்தது. ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. சினிமா தியேட்டரில் போரடிக்கும் காட்சி வரும்போது குறைந்த விலை டிக்கெட் பகுதியிலிருந்து ‘பருத்திப்பால்’ என்று சத்தம் வரும். பருத்திப்பாலை போரடிக்கும் காட்சியுடன் இணைத்த புத்திசாலிகள் உள்ள ஊர் இது.

பெரியப்பா வீட்டை நெருங்கிவிட்டேன். வாசலில் பெரியம்மை நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் ஆச்சரியப்பட்டாள். அவள் முகம் எப்போதும் சிரிப்பு உள்ள முகம். “உள்ளே வா. எப்ப வந்தே. வீட்லே எல்லோரும் நல்லா இருக்காங்களா. பக்கத்துலே இருந்தாலும் நடந்து போகச் சள்ளையா இருக்கு. உடம்பு நோவுது. உங்க பெரியப்பாவுக்கு எப்பவும் நான் கூட இருக்கணும். இருந்த எடத்தை விட்டு அசைய மாட்டேங்குறார். ஈஸிசேருலே படுத்திருக்கிறவர் கையிலே இருந்த பேப்பர் கீழே விழுந்துச்சுன்னா எடுக்கறத்துக்கு என்னைக் கூவுவார். நான்தான் போய் எடுத்து அவர் கையிலே கொடுக்கணும். ஈஸிசேரை விட்டு எந்திருச்சு எடுத்துக்கிட்டாத்தான் என்னவாம். எடுக்கமாட்டார். பேனைப் போடறதுக்கும் ஆப் பண்றதுக்கும் கூட நான்தான் போகணும்.” என்றாள்.

பெரியப்பா பின்கட்டில் உள்ள தோட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இவ்வளவு பேசமாட்டாள். நான் உள்ளே நுழைந்தேன். பின்கட்டைப் பார்த்து, “யாரு வந்திருக்கா பாருங்க. ராசாக்கண்ணு வந்துருக்கு. ஊர்லேயிருந்து லீவு போட்டு வந்திருக்கும்போல. ஊர்லேயிருந்து முறுக்கு, காரசேவு, ஜிலேபி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கு” என்றாள்.

நான் உள்ளே நுழைந்த உடனேயே பலகாரப் பையை பெரியம்மையிடம் கொடுத்துவிட்டேன்.

நான் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். பின்கட்டிலிருந்து தலைப்பாக்கட்டுடன் பெரியப்பா வந்தார். “முருங்கை காய்ச்சுத் தொங்குது. நல்ல விளைச்சல் பூமி. காய்கறி, தக்காளி, மிளகாய் நல்லா வருது. எப்ப வந்தே” என்றார்.

நான், ஊருக்கு வந்த விவரம், வேலை பார்க்கும் இடம், தங்கியிருக்கிற இடம், வேலை நிலவரம் பற்றியெல்லாம் அவரிடம் சொன்னேன். பெரியம்மை உள்ளே காபி தயார் செய்துகொண்டிருந்தாள்.

ஒரு தட்டில் நான் கொண்டுவந்திருந்த காரச்சேவைப் பிரித்துக் கொஞ்சம் காரச்சேவை வைத்து, என் முன்னால் ஸ்டூலை இழுத்துப்போட்டு வைத்தாள். காபி டம்ளரையும் வைத்தாள். பெரியப்பாவிற்குத் தட்டில் நிறைய காரச்சேவு வைத்திருந்தாள். காபி டம்ளரும் பெரியதாக இருந்தது.

என் அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் சேர்ந்து ஐந்து ஏக்கர் நஞ்சை நிலம் இருந்தது. பூர்வீகச் சொத்து. பெரியப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். அப்பா கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால் நிலத்தின் பக்கம் செல்வதில்லை. அறுவடை முடிந்த பிறகு பெரியப்பா, நெல் அரைத்து எங்கள் பங்காக அரிசி மூட்டைகளை வீட்டில் இறக்கிவிடுவார். அப்பாவிற்குத் தன் பாகத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ‘எல்லோருக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. பெரியவர்கள் இருக்கும்போதே சில விஷயங்களை செட்டில் செய்துவிடவேண்டும்’ என்று அவர் நினைக்கிறார். பெரியவர்கள் காலத்துக்குப்பின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. எல்லாமே குழம்பிவிடும். வெளியூரில் இருக்கும் பெரியப்பா மகன்களுக்கும் எனக்குமே ஒத்துப்போவதில்லை. தங்கைக்குத் திருமணம் செய்யவேண்டும். பெரியப்பாவிடம் ஆனந்தபவன் அரியநாயகம் அண்ணாச்சி மூலம் அப்பா சொல்லிவிட்டார். பெரியப்பா பதில் சொல்லவில்லை. இருமியதாக அப்பாவிடம் அண்ணாச்சி சொன்னார். நான் சின்னப் பையன் இதிலெல்லாம் தலையிட முடியாது. பெரியப்பாவையும் பெரியம்மாவையும் பார்க்க வந்தேன்.

சம்பிரதாயமான விஷயங்களுக்குப் பிறகு, நான் பெரியப்பாவிடம், “பெரியப்பா நீங்க ஒரு பாட்டுப் பாடணும். கேக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு” என்றேன். பூனை ஒன்று பின்கட்டிலிருந்து உள்ளே வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டது.

பெரியப்பா, “என்ன பாட்டுப் பாட” என்றார்.

பெரியம்மை சிரித்துக்கொண்டே, “நீங்க பாட்டுப் பாடி பலகாலம் ஆச்சு. ‘சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி’ பாடலைப் பாடுங்கள்” என்றாள். பெரியம்மையைப் பார்த்து ஒரு காலத்தில் இந்தப் பாடலை அவர் பாடியிருப்பார் போல.

பெரியம்மையைப் பெரியப்பா பார்த்தார். பெரியம்மை வெட்கப்பட்டாள். பெரியப்பா பாடினார். ‘சித்திரம் பேசுதடி... உன் சித்திரம் பேசுதடி. எந்தன் சிந்தை மயங்குதடி...’ என்று ஆரம்பித்தார். ‘பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி...’ என்ற இடத்திலும், ‘என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நான் அறிவேன்’ என்ற இடத்திலும் பெரியம்மை வெட்கப்பட்டாள். பெரியப்பாவும் சும்மா இருக்காமல் பெரியம்மையை நோக்கிக் கையை நீட்டி நீட்டிப் பாடினார். பாடி முடித்தார். பெரியம்மை கூச்சம் தாங்காமல், “காபி ஆறிவிட்டது. சுட வைச்சு கொண்டு வாரேன்” என்று பெரியப்பா குடிக்காமல் வைத்திருந்த காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் சென்றாள்.

பெரியப்பா ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்திருந்தார்.

பெரியப்பா என்னைப் பார்த்துச் சொன்னார். “தம்பி ராசாக்கண்ணு. நம்ம பூர்வீக நிலத்தை எங்க அப்பா இறந்தபின்னாலே நான்தான் உழுதுகிட்டு வாரேன். உங்க அப்பாவுக்கும் அதுலே பாதிப்பங்கு சட்டப்படி இருக்கு. அரியநாயகம் அண்ணாச்சி, உங்க அப்பா பாகம் பிரிக்க விருப்பப்படறதா சொல்றாரு. எனக்கு வேலை இல்லை. விவசாயம்தான் எனக்குத் தொழிலு. இவ்வளவு காலமும் நிலத்துலே உழைச்சுருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. வேலை பாக்கிறாங்க. உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளைக் கரையேத்தணும். உங்க அப்பாவுக்கும் பெரிய அளவுலே வருமானம் இல்லை. நிலத்தை பாகம் பிரிச்சாலும் உங்கப்பாவாலே விவசாயம் பண்ண முடியாது. வேலைக்குப் போறாரு. வேற ஆள்ட்டே விவசாயத்துக்கு புதுசா குத்தகைக்கு விட்டா பல பிரச்சினைகள் வந்து சேரும். பக்கத்துலே என் பாகம் நிலம் இருக்கும். அதனாலே நான் ஒரு யோசனை சொல்றேன். அஞ்சு ஏக்கர் நிலத்துலே ஆளுக்குப் பாதின்னா இரண்டைரை ஏக்கர் நிலம் வருது. நான் உரிமையிலே கேக்கறேன். எனக்கு அறுபது பெர்சண்ட் நிலம், அதாவது அரை ஏக்கர் கூடுதலா மூணு ஏக்கர் வரும். உங்க அப்பாவுக்கு அரை ஏக்கர் குறைவா, இரண்டு ஏக்கர் வரும். இந்த இரண்டு ஏக்கரை வெளி ஆளுக்கு வித்தா என்ன விலை போகுமோ அந்த விலை கொடுத்து நான் வாங்கிக்கறேன். அதுக்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்றேன். அரை ஏக்கர் கூடுதலா எனக்கு விட்டுக்கொடுத்தது இந்த நிலத்துலே உழைச்ச மூத்தவர்ங்கிறதுனாலே கேக்கறேன். அவருக்கு அரை ஏக்கர் விட்டுத்தர சம்மதம் இல்லைன்னா ஆளுக்கு இரண்டரை ஏக்கர்னே பிரிச்சுக்குவோம். அதுக்குண்டான கிரையத் தொகையை நான் கொடுத்திர்றேன். எப்படி முடிவோ அதுக்கு ஏத்த மாதிரி வர்ற தை மாசம் பத்திரம் பதிஞ்சுக்குவோம். உங்க அப்பாகிட்டே கேட்டுச் சொல்லு.”

பெரியப்பாவிற்கு கண்கள் கலங்கிவிட்டன. பெரியம்மை சுடவைத்த காபியை வைத்துவிட்டு பெரியப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். “நீ என்ன சொல்றே” என்று பெரியம்மையைப் பார்த்துக் கேட்டார். “நான் என்ன சொல்றது. நீங்க சொன்னதுக்கு மேலே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றாள் தயங்கிக்கொண்டே.

“பெரியப்பா, இன்னொரு பாட்டு” என்றேன். “என்ன பாட்டு” என்றார். பெரியம்மை, “அமுதும் தேனும் எதற்கு” என்றாள். பெரியப்பா காபியை நிதானமாகக் குடித்தார்.

பெரியப்பா பாடினார். ‘அமுதும் தேனும் எதற்கு... நீ அருகினிலே இருக்கையிலே எனக்கு...’ என்று ஆரம்பித்து பெரியம்மையை நோக்கி மீண்டும் கையை நீட்டி நீட்டிப் பாடினார்.

‘நிலவின் நிழலோ உன் வதனம்... புது நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்...’ என்று பெரியப்பா பாடும்போது பெரியம்மை நிலைகொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு அழலானாள். பெரியப்பா பாடுவதை நிறுத்திவிட்டார்.


நான் அப்பாவிடம் பெரியப்பா நிலம் தொடர்பாகச் சொன்னதைக் கூறினேன். அப்பாவிற்குக் கண்கள் கலங்கிவிட்டன. அம்மா, “இரண்டு பேருக்கும் சம பங்குதானே. எதுக்கு அவருக்கு அரை ஏக்கர் கூடப் போகணும்” என்றாள். அப்பாவிற்குக் கோபம் வந்து அம்மாவைத் திட்டினார். “உனக்கு உலகம் தெரியாது. அவரு எனக்கு மூத்தவர். நல்லது கெட்டதுக்கு முன்னாலே நின்னவரு. எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தவரு. கரெக்டா கணக்குப் பாக்கக் கூடாது. அவருக்கு அரை ஏக்கர் விட்டுத்தரலாம். நான் ஒத்துக்கலைன்னா ஆளுக்கு இரண்டரை ஏக்கர் எடுத்துக்கலாம்னும் சொல்லியிருக்காரு. என்னைப் பெரியவர் சோதிக்கறாரா என்னன்னு எனக்குத் தெரியலை. டேய் ராசாக்கண்ணு இடையிலே வேற ஆள் வேணாம். நீயே சொல்லு. இரண்டு ஏக்கர் அப்பாவுக்குப் போதும்னு சொல்லியிரு.”

அடுத்த நாள் பெரியப்பா வயக்காட்டிற்குச் சென்றிருந்ததால் இந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு வயக்காட்டிற்குச் சென்றேன். கூழ் குடித்துக்கொண்டிருந்தார். அப்பா இரண்டு ஏக்கர் பாகம் பெற்றுக்கொண்டு அவரிடம் கிரையம் கொடுக்க விருப்பம் தெரிவித்திருப்பதாவும், தங்கச்சிக்கு தை மாசத்துலேருந்து மாப்பிள்ளை பாக்கப்போவதாகவும் சொன்னேன். பெரியப்பா சிரித்தார்.

“நான் யோசித்துப் பார்த்தேன். இந்த நிலந்தானே எனக்கு வருமானத்தைக் கொடுத்திருக்கு. கூட அரை ஏக்கர் நிலம் கேக்கறது நியாயமில்லை. அவருடைய பாகம் இரண்டரை ஏக்கருக்கும் நான் கிரயத்தொகை கொடுத்திர்றேன். நான் ஏற்கனவே சொன்னதை வைச்சு இரண்டு ஏக்கர் போதும்னு உங்க அப்பா பிடிவாதம் பிடிக்கவேண்டாம். நாளைக்கு உங்க அம்மையோட அப்பாவை வரச்சொல்லு. பத்திர எழுத்தரையும் வரச்சொல்றேன். உங்க அப்பா இரண்டரை ஏக்கர் பாக விடுதலை கொடுக்கற மாதிரியும் அதற்கான கிரயத் தொகை நான் கொடுக்கிற மாதிரியும் பேசி முடிச்சுக்குவோம்.”

பெரியப்பாவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் எனக்குக் கூட அரை ஏக்கர்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன்” என்றார்.

“என்ன பெரியப்பா. நீங்க மூத்தவரு. நல்லது கெட்டதுக்கு முன்னாலே நின்னு நடத்திக்கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு இல்லாததா” என்றேன்.

“தம்பி ராசாக்கண்ணு. நான் சொன்னதைச் சொல்லு. இதுலே தேவையில்லாம தாவா பண்ணிக்க வேணாம்.”

நான் வீட்டுக்குச் சென்று அப்பாவிடம் கூறினேன். “அப்பா இதுலே தேவையில்லாம யோசிக்காதீங்க. நாளைக்கிப் போவோம். பெரியப்பா விருப்பப்படி முடிச்சுக்குவோங்கிற வார்த்தையோட நின்னுக்குவோம். அவர்தான் தெரியாம சொல்லிட்டேங்கிறாரே.” அப்பா ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள் பழங்கள், ஸ்வீட்கள் சகிதம் பெரியப்பா வீட்டிற்குச் சென்றோம். அரை ஏக்கர் பற்றி இருவருமே பேசவில்லை. பத்திர எழுத்தர், நில விவரங்களையும் சம பாக விவரங்களையும் குறித்துக்கொண்டார். பத்திரத்தில் எழுதவுள்ள விஷயங்களைக் கூறினார். பெரியம்மையிடம் பெரியப்பா, “இப்ப உனக்கு திருப்திதானே” என்றார். பெரியம்மை ஆமோதிப்பதுபோல் சிரித்தாள்.

நான் ஊருக்கு வந்ததில் சுபமாக ஒரு வேலை முடிந்தது. தை மாசம் பத்திரப் பதிவு நடைபெற்றது. தை மாசமே தங்கைக்கு மாப்பிள்ளை அமைந்தது. பங்குனி மாசத்தில் திருமணம் நடக்க முடிவானது.

***

நன்றி: ‘உயிர்மை’, செப்டம்பர் 2023

வலது கண் : சுரேஷ்குமார இந்திரஜித்

March 27, 202225 அவன் கவரைத் திறந்து படுக்கையில் கவிழ்த்தான். கிழிக்கப்பட்ட ஒரு போட்டோவின் பகுதி இருந்தது. அது ஒரு பெண்ணின் வலது கண் உள்ள பகுதி. தனியாக அந்த வலது கண்ணைப் பார்த்தது அச்சுறுத்துவது போல் இருந்தது.
❌