Normal view

Received before yesterday

தமிழ் நாடக முன்னோடிகள்

15 January 2025 at 14:50

வாசிப்பின் நோக்கம் புதிய விஷயங்களை அறிதல் என்று ஆழமாக நம்புபவன் நான்.  சில புத்கங்களை வாசிக்கும் போது முழு புத்தகத்திலும் ஒரே ஒரு புதிய தகவல் கிடைக்கும். சில புத்தகங்களிலோ பக்கத்துக்குப் பக்கம் ஒரு புதிய தகவல் வந்து நம்மை திகைப்பில் ஆழ்த்தும். அத்தகைய ஒரு புத்தகம் தான் டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி – நாடக உலக முன்னோடிகள் என்ற ஒரு அருமையான புத்தகம்.  பின் அட்டையின் உட்புறத்தில் காணப்பட்ட 1918ல் வெளிவந்த ஒரு நாடகத்திற்கான நோட்டீசைப் பார்த்து ஈர்க்கப்பட்டு வாங்கிய இந்தப்  புத்தகம் என்னை ஏமாற்றவில்லை. உபாத்தியாயர் பி.ஆர். வெங்கட்டராமய்யர் அவா்களின் சிறந்த மானேஜ்மென்டுக்குட்பட்ட  பார்ஸி பால மனமோகன நாடகசபா கம்பெனியின் பார்ஸி பால சதாரம் என்னும் சரித்திரத்தைக் காண அழைக்கும் நோட்டீஸ் அது.

பம்மல் சம்பந்த முதலியார்

நூலாசிரியர் ராதாகிருஷ்ணன் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் இருந்த நாடக சபாக்களில் நடித்தவரோ என்று நினைத்தேன். இல்லை. அவர் ஒரு அரசு வங்கி ஊழியர். 1970களில் சென்னையில் அம்பத்தூர் கல்சுரல் அகடமி என்ற சபாவை ஆரம்பித்து நாடகங்கள் நடத்தியவர். போன நூற்றாண்டின் துவக்கத்தில் நாடகங்களில் நடித்த பல மூத்த கலைஞர்களை அவர்களது வயோதிக காலத்தில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவர். நீண்ட கால ஆய்வு, உழைப்பின் மூலம் ஏராளமான தகவல்கள் திரட்டி இந்த நூலை எழுதியிருக்கிறார்.

டி.வி.ராதாகிருஷ்ணன்

 மொத்தம் 67 கட்டுரைகள் . அவற்றில் 5 பொதுவான கட்டுரைகள். 8 பெண் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள். எஞ்சியவை ஆண் கலைஞர்கள் பற்றியவை. அதில் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார், டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள் என்று நாம் அறிந்தவர்கள் பற்றியும் உள்ளன. சின்ன பொன்னுச்சாமி படையாச்சி, கே.பி.கேசவன், சி.எஸ்.பாண்டியன், எஸ்.டிசுந்தரம், பி.டி.சம்பந்தம், எம்.எஸ்.எஸ்.சிபாக்கியம் என நாம் அதிகம் அறியாத பல ஆளுமைகள் பற்றியும் உண்டு.

கே.பி.சுந்தராம்பாள்
டி.எஸ்.துரைராஜ்
ஆர்.எஸ்.மனோகர்

நவாப் ராஜமாணிக்கத்திற்கு நவாப் பட்டம் வந்த கதை, முதன்முதலாக ஒரே ஊரில் இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்ட திரைப்படமான சந்திரகாந்தா,  பம்மல் சம்பந்த முதலியாரின் குழுவில் சமஸ்கிருத நாடகங்களில் நடித்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ( இவர் பின்னாளில் மனோகராவில் மனோகரனாகவும் நடித்தாராம்), சமஸ்கிருத நாடகங்களில் நடித்த மற்றொரு பிரபல நடிகரான ஆர்.எஸ்.மனோகர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சக்தி நாடக சபாவில் சேர்த்துவிட்ட  டி.எஸ்.துரைராஜ். தேவர் ஜாதி அமைப்பின் மாநாட்டுக்கு வர மறுத்த பாஸ்கரதாஸ், அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது, தினமும் அவரைப் பார்க்க வந்து அவருக்கு கோவில் பிராதமாக குங்குமம் வைத்து விட்ட கே.சாரங்கபாணி, நண்பரின் மனம் புண்படக்கூடாதே என்று அதை அழிக்காமல் வைத்துக் கொண்ட அண்ணாவின் நட்புக்குணம்,  எஸ்.எஸ்.ஆரின் நாடகம் பார்த்து, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி, பின்னர் அவரது நாடகத்தில் கதாநாயகியாகவும் ஆன நடிகை ஷீலா,  ரத்தக் கண்ணீர் மட்டுமல்லாது, திருஞான சம்பந்தர் என்ற நாடகத்தையும் எழுதியிருக்கும் திருவாரூர் தங்கராசு, அன்றைய நாடகங்களில் நாயக, நாயகிகளின் வாதப் பிரதிவாதங்களில் சம்பந்தப்பட்டவரின் ஜாதியை வைத்து கிண்டலாகப் பேசும் போக்கு என்று எத்தனை எத்தனையோ விஷயங்கள்.  படிக்கப் படிக்க கால இயந்திரத்தில் ஏறி, நாம் பிறக்காத அந்த பெட்ரோமாக்ஸ் லைட், மாட்டுவண்டி காலத்திற்குப் பயணித்து விடிய விடிய நாடகங்களைப் பார்த்த ஒரு அற்புதமான அனுபவம்.

தமிழ் நாடகங்களின், தமிழ் திரைப்படங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராயும் ஆய்வு மாணவர்களுக்கும், பொதுவான கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவல் சுரங்கம்.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி – நாடக உலக முன்னோடிகள்

டி.வி.ராதாகிருஷ்ணன்

நாதன் பதிப்பகம்

பக்கங்கள் – 226  விலை – ரூ 240

நன்றி – புதிய புத்தகம் பேசுது – டிசம்பர் 2024

❌