Normal view

Received before yesterday

காகத்தின் நுண்ணறிவு!

காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் காலையில் காக்கை, குருவிகளுக்கும் அணிலுக்கும் உணவளிப்பது வழக்கம். காகங்கள் மிக புத்திக் கூர்மையுள்ள பறவைகள் என்று படித்திருந்தாலும் அதை இன்று நேரில் அறியும் வாய்ப்பு அமைந்தது. தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நம் வாழ்வோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஒரு பறவையினம் இது. இன்று காலை இட்லிதான் வைத்தேன். அதுவும் நேற்று இரவு உணவு விடுதியில் வாங்கி வந்த இட்லி என்பதால் காலையில் அது சற்று கெட்டிப்பட்டுவிட்டது. சிறிய துண்டுகளாக கிள்ளிப்போட்டுதான் வைத்தேன். ஆனாலும் வெகு நேரம் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்ததே தவிர ஒரு துண்டுகூட எடுக்கவில்லை. என்ன நினைத்ததோ, சற்று நேரத்தில் ஒரு இட்லித் துண்டை எடுத்து அதை அருகில் இருக்கும் தண்ணீரில் போட்டது. ஒரு நொடியில் மீண்டும் அதை எடுத்து உண்டது. இப்படியே இரண்டு மூன்று முறை செய்துவிட்டு ஒரு துண்டு இட்லியை அதேபோல் தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொண்டு பறந்துவிட்டது. குட்டிக்கு எடுத்துச் சென்று ஊட்டும் போல. உண்மையில் எனக்கு அப்படியொரு ஆச்சரியமாக இருந்தது. காக்கைதானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது, மனிதர்களைவிட புத்திசாலியாக இருக்கிறேன் என்று உணத்ர்த்திவிட்டுச் சென்றுவிட்டது. இன்று முழுவதும் காக்கை பற்றிய நினைவே சுற்றி சுற்றிச் வருகிறது.
நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை.
பழங்காலத்தில் கடற்பயணம் மேற்கொள்பவர்கள் காக்கைகளை கூண்டில் அடைத்து உடன் எடுத்துச் செல்வர். கரைக்குச் செல்லும் வழி அறியாத நேரத்தில் அந்தக் காகத்தை எடுத்து பறக்க விடுவார்கள். அந்தக் காகம் செல்லும் திசையைப் பின்பற்றிச் சென்று கரையை அடைந்துவிடுவார்களாம். அப்போது அந்தக் காகம் கரைந்து கொண்டே கரையையும் அடையும். கரையோரத்தில் வாழும் மக்கள் வழிமாறிய கப்பலில் பயணிகள் பசியுடன் வருவார்கள் என்பதறிந்து அவர்களுக்கு விருந்து சமைத்து வைத்துக்கொண்டு உபசரிக்கக் காத்திருப்பார்களாம்…. அதனாலேயே இன்றும் காகம் கரைந்தால் உறவினர் வருவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. உலகின் பழமையான நாகரிகங்களின் ஒன்றான மெசப்பத்தோமியா நாகரிகத்தின் நாணயங்களிலும், ஓவியங்களிலும் ஒரு மாலுமி காக்கையை பறக்கவிடுவது போன்று பொறிக்கப்பட்டுள்ளதும் இதன் பழமைக்கு ஆதாரமாக உள்ளது. ஆகா எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

” விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகைப் பாடல் மூலம் இதை அறியலாம். சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர் காகத்தைப் பற்றிப் பாடியே இப்பெயரைப் பெற்றுள்ளார். அவர்தான் காக்கைக் கரைந்தால் விருந்தாளி வருவர் என்ற பொருளில் ஓர் அகப்பாடல் புனைந்துள்ளார். முல்லைத் திணைக்குரிய பாடலிது. தோழி கூறுவதாக அமைந்துள்ள அப்பாடல் ..
திண்டேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே              (குறுந். 210)

ஐங்குறுநூற்றிலும் காக்கை குறித்த நம்பிக்கை கொண்ட இன்னொரு பாடல் வந்துள்ளது.

மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளை யோடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே
(ஐங். 391)
காகம் கரைதலைக் கண்ட தலைவி அதனை விரட்டித் துரத்துகிறாள். ஏனென்றால் காகம் கரைதல் தன் தலைவனுடைய வருகைக்கு நன்னிமித்தம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்நேரத்தில் ஊடலில் இருப்பவள் போலும் அவள் அதை நம்பவில்லை. கோபமாக காகத்தைத் துரத்திக் கொண்டே இருக்கையில் தலைவனைக் காணாது வருத்தத்தில் இருந்த தனது மெலிந்த கைகளிலிருந்த வளையல்கள் பாதி கழன்று தரையில் விழுந்தன. ஆனால் உண்மையில் திடீரென்று தன் தலைவன் வருவதைக் கண்ணுற்ற அந்தத் தலைவியின் உடலும் கைகளும் மகிழ்ச்சியில் பருத்துவிடுகின்றன. அதன் விளைவாக அவள் கையிலிருந்த மீதி பாதி வளையல்கள் உடைந்து சிதறிவிட்டனவாம். முதலில் காகம் தனக்குப் பொய்யான நம்பிக்கையூட்டுகிறதே என்ற கோபத்தில் தலைவி காகத்தை விரட்டுகிறாள்.
இப்படி தலைவனைப் பிரிந்த தலைவியின் உடல் மெலிவதும் அதனால் கைவளைகள் நெகிழ்ந்து மண்ணில் விழுவதும் அகப்பாடல்களில் அடிக்கடி காணமுடிகிறது. மெலிந்தபோது கழன்று விழும் வளையல்கள் தலைவனைக் கண்டவுடனே கைகள் பருத்ததால் வெடித்துச் சிதறின என்பதும் செறிந்தன என்று சொல்வதும் மிகைபடக் கூறல் என்றாலும் இலக்கியச் சுவைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அல்லவா இருக்கிறது!

அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கும் உண்டு. புனைவுகளிலும் இலக்கியங்களிலும் அண்டங்காக்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப்பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள், புனைவுகளின் படைப்பாளர்களால் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகின்றது. அண்டங்காக்கை துர்மரணத்திற்கும், இறப்புக்கும் இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாதக் கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும்,
நம்பப்படுகின்றது. இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்குப் படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
· மிகுந்த சக்தி வாய்ந்த இந்துத் தெய்வம் சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. மகாவித்தைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்துத் தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்தரிக்கப்படும் இத்தெய்வம் பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின்மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

கங்கைகொண்ட சோழபுரம்

 

நம் தமிழ்நாட்டின் முக்கியப் பெருமைகளில் ஒன்று என்றால் அது நம் வரலாற்றுச் சின்னங்களும், பிரம்மாண்டமான பழமையான ஆலயங்களும்தான். அந்த வகையில் 1090 ஆண்டுகள் பழமையான  கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனெசுகோ பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இக்கோவில் சோழர் கட்டிடக்கலையின் ஒரு அற்புத அடையாளம்.
இராசராச சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவன் மதுராந்தகன் என்ற இராசேந்திர சோழன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்று “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றவன்.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, பெரிய சிவலிங்கத்தையும் நந்தியையும் உருவாக்கியவன் தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீசுவரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டியுள்ளான். தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து கும்பத்திற்கு அபிசேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. புனித நன்னீராட்டு நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன்மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தவன், கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக்கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வது வழக்கமாம். இக்கோவில் முழுவதும் வெண்மையாகக் காட்டியளிப்பதற்குக் காரணம் கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். 250 ஆண்டுகள் சோழர் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த கோயில், பிரமாண்டமான கலை, சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றான இக்கோவில் ஐராவதேசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில் எனப் போற்றப்பட்டு யுனெசுகோவின் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதன் பிரம்மாண்டமான கோபுரத்தின் உயரம் 55 மீட்டர், அதாவது 180 அடி. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அழகான முற்றம் உள்ளது. பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக நின்று அருள்பாலிக்கிறார். கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.

60 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி . பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.

அண்மையில்தான் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது.
முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம்  இக்கோயிலில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த  முதலாம் குலோத்துங்க சோழனால் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும், தக்கயாகப்பரணியிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணமுடிகின்றது.  சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ள இக்கோவிலில், இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற பற்பல கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால்   ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சரசுவதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரசுவதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர்.
9 வயது சிறுமியின் வடிவில் புன்னகைத்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிடாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். மிக அபூர்வமான இக்கோலத்தைக் கொண்டவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சி. அதேபோல் 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.
கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  “வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வட கைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும். செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி, விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியவை இங்கிருந்து பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் இக்கோவில்தான்.
கங்கைகொண்டசோழீசுவரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் சயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவிலின் பல பகுதிகளில், குறிப்பாக, பிரதான மண்டபத்தில் அற்புதமாகச் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்ளன.

ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பல இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிற்பங்கள் இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

 

 

வாழ்க்கை ஒரு வட்டம்  

 

வாழ்க்கை முழுவதும் பணம், பதவி, செல்வாக்கு என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு ஒரு தருணத்தில் சற்று நின்று மூச்சுவிட நேரம் கிடைத்தபோது அவர் மனதில் மிகப்பெரிய வினா ஒன்று எழுந்தது. என்னதான் நேர்மையாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் தம் இறுதிக்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் எவருக்கும் இருப்பது இயல்புதானே? அப்படித்தான் அவருக்கும் அப்படியொரு ஐயம் எழுந்துவிட்டது. அதாவது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவருக்கு எதிலெல்லாம் அதிகம் ஈடுபாடு இருக்கும்? சொத்து, குடும்பம், ஆரோக்கியம் அல்லது சமுதாயம் – இவற்றில் எதன் மீது அதிக நேசம் ஏற்படும் என்ற ஐயம் ஏற்பட்டுவிடுகிறது. யாரிடம் போய் இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது என்று வெகு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அன்று தம் ஊருக்கு ஒரு மகான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சென்று சந்திக்கிறார். தன்னுடைய ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அந்த மகானிடம் சென்று தன்னுடைய வினாவை முன்வைக்கிறார்.

அந்த மகானும் புன்னகையுடன், “உனக்கு குழந்தை இருக்கிறதல்லவா? அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைன்னு சொல் பார்க்கலாம் ” என்று அவரையே திருப்பிக் கேள்வி கேட்டார்.

சற்று யோசித்தவர், வயிற்றுக்கு உணவு, பாதுகாப்பான தாயின் மடி அல்லது தந்தையின் தோள், அன்பு, பாசம், விளையாட்டு போன்றவையைத் தவிர பெரிதாக வேறு ஒன்றுமிருக்காதே என்றார்.

உடனே அந்த மகான், வாழ்க்கை என்ற இந்த வட்டத்தில் முதலும், முடிவும் ஒன்றுதான். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும் அந்த ஆரம்பக்கட்டத் தேவைகளைத் தவிர வேறு தேவைகள் ஏதுமிருக்காது. உணவு, தண்ணீர், மருந்துகள், வசதி, அன்பானவர்களின் பாசமும் அவர்களின் அருகாமையும் மட்டும்தான் அவர்களின் தேவையாக இருக்கும். ஆடம்பரம், பகட்டு, செல்வம், சொத்துபத்துகள், வங்கி இருப்பு, நகைகள், ஈகோ, ஆசைகள், சமூகம் போன்ற வெறும் மாயையாக இருந்த அனைத்தும் எண்ணங்களிலிருந்து மறைந்துவிடும் என்றார்.

அப்படியானால் பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்கும் எந்த வேறுபாடுமே இல்லையா சாமி’ என்று மீண்டும் கேட்டதற்கு அவர்,

‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யப்போகும் ஒருவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்ன தெரியுமா?

அதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையில் தாம் பெற்ற அமைதியும், மன நிறைவும் தரும் ஒரு சில நேசத்துக்குரிய நினைவுகள் மட்டுமே பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளவருக்குமான வேறுபாடு’ என்றார்.

அந்த மகான் சொன்னதைக் கேட்டவரின் மனதில் ஏதோ பொறிதட்ட ஊர், உலகம் ஆயிரம் சொல்லலாம், பெற்ற மனம் பித்தானாலும், பிள்ளை மனம் கல்லாகாது. தெளிவுபடுத்திய மகானுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவர், தன் வாழ்க்கை வட்டத்தின் அடுத்த கட்டத்தை எண்ணியபடியே நகர்ந்தார்.

 

தொல்காப்பியம்

தொல்காப்பியம் யாருடைய அவையில் யார் முன் அரங்கேறியது?

தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு முதன்முதலில் மாற்றியவர் மழவை மகாலிங்க ஐயர்.

நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்ற மன்னனது அவையில், அதங்கோட்டாசான் என்பவர் முன்னிலையில் அரங்கேறியதாக பாயிரம் கூறுகிறது. தொல்காப்பியர் பற்றி பனம்பரனார்,  ‘ஐந்திரம்’ என்ற நூலை நன்கு கற்ற புலவர் என்றும், பல்புகழ் நிறைத்த படிமையாளர் என்றும் புகழ்கிறார்.

காப்புரிமை  (PATENT RIGHT)

பொதுவாக நாம் சொத்துகள் என்று குறிப்பிடும்போது அது அசையும் சொத்து பற்றியும், அசையாச் சொத்து பற்றியும் மட்டுமே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அறிவுசார் சொத்துகளையும் அதைப்போன்றே உயர்வாகவே மதிப்பிடப்படவேண்டியுள்ளது. காரணம் மற்ற
சொத்துகளைப்போன்று அறிவுசார் சொத்துகளையும் பரிமாற்றமும், பரிவர்த்தனையும் செய்ய இயலும். அதாவது ஒருவர் தமது அறிவைப் பயன்படுத்தி ஒன்றை கண்டுபிடித்தாலோ அல்லது தயாரிப்பைச் செய்தாலோ அது அவருடைய சொத்தாகிவிடுகிறது. அது எத்துணை சிறிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், சிறிய மாற்றங்கள் கொண்ட தயாரிப்புகளாக இருந்தாலும் அவை அறிவுசார் சொத்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன.

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் நிலம், மூலதனம் போன்றவைகளின் அடிப்படைகளில் மட்டுமே கணக்கிடப்படுவதில்லை. மாறாக அறிவுத் திறனே முக்கிய காரணி என்ற கருத்து, தற்போது உலகம் முழுவதும் வெகு விரைவாகப் பரவி வருவதைக்
காணமுடிகின்றது.

உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான “TRIPS” – Trade-Related Aspects of Intellectual Property Rights எனப்படும் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த குறைந்தபட்ச தரநிலைகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீனமயமான காலகட்டங்களில் அறிவுசார் சொத்துகளின் மதிப்புகள் கூடிக்கொண்டே வருவதால் அதற்குரிய விழிப்புணர்வும் அத்தியாவசியமாகிறது. நாம் நம் அறிவுசார் சொத்துகளை பதிவு செய்வதன் மூலம் அதனைப் பயன்படுத்துவதற்கான முழுமையானதும், முதன்மையானதுமான உரிமையைப் பெறுகின்றோம் என்பது முக்கியம். அதைவிட, நம்முடைய படைப்புகளைப் பதிவு செய்வதன் மூலம் நம்மை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு அதற்குண்டான அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் பெற முடிகின்றது. நம்முடைய அறிவு வளத்தைப் பயன்படுத்தி பொருள் வளத்தை மேம்படுத்திக்கொள்வதோடு, அதன் மூலம் பொது மக்களுக்கும் அவர்தம் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வழியமைக்க உதவுகிறோம். அறிவுசார் சொத்துகளை அவற்றின் தன்மைக்கேற்ப பல வகைகளாகப் பிரிக்கலாம். அதில் முக்கியமான முதல் வகையான காப்புரிமை அதாவது PATENT RIGHT என்பது பற்றித்தான் இன்று விவரமாக அறிய உள்ளோம்.

காப்புரிமை என்றால் என்ன?

காப்புரிமை என்பது அறிவுசார் சொத்துரிமையின் உரிமையாளரின் சட்டப்பூர்வ உரிமையைக் குறிக்கிறது. ஒரு விளைபொருளை அல்லது கண்டுபிடிப்பை தயாரிப்பதற்கான, பயன்படுத்துவதற்கான அல்லது விற்பனை செய்வதற்கான தனி உரிமை தான் காப்புரிமை என்பது. எளிமையான சொற்களில், இதன் பொருள், தயாரிப்புகளின் அசல் படைப்பாளர்களுக்கும் அவர்கள் அங்கீகாரம் வழங்கும் எவருக்கும் மட்டுமே அந்த படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான தனிப்பட்ட உரிமை உள்ளது. பொருளுக்கு மட்டுமின்றி பொருள்களின் வடிவமைப்புக்கும் (டிசைன்) காப்புரிமை பெறலாம் என்பதும் முக்கியமான செய்தி. காப்புரிமை ஒரு கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்பட்டுவிட்டால் அதுபோன்ற பொருளை உற்பத்தி செய்யவோ, உபயோகப்படுத்தவோ, சந்தைப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை அறிவுசார் சொத்துரிமை தொடர்பான முதன்மைச் சட்டம் இந்திய காப்புரிமைச் சட்டம், 1957 ஆகும். இந்தச் சட்டத்தின் விதிமுறைகள்படிதான் இன்றளவும் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைகள் செயல்படுகின்றன. 1970, 1999, 2002, 2005களில் இச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சொத்துரிமை பாதுகாக்கப்படுவது போன்று அறிவுசார் சொத்துரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் மிகப்பயனுள்ளது.

புதியதொரு பொருட்களுக்கு அல்லது அவற்றின் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கு அதன் விண்ணப்பித்த நாளிலிருந்து 20 வருடங்களுக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தக் கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டிற்கு வந்துவிடும். கண்டுபிடிப்பாளர் தனியாகவோ, குழுவாகவோ அல்லது நிறுவனம் பெயரிலோ தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். இந்த முறையையே அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன. கண்டுபிடிப்பாளரை தவிர வேறு யாரும் இதில் உரிமை கொண்டாட முடியாது. வணிக நிறுவனங்கள் யாரேனும் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை தயாரித்து சந்தைப்படுத்தி இலாபம் ஈட்டும்பட்சத்தில் இலாபத்தில் ஒரு தொகையை கண்டுபிடிப்பாளர்களிடம் கொடுத்தே ஆகவேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சதவீதத்தில் ஆரம்பித்து 50 சதவீதம் வரை வணிக நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் கண்டுபிடிப்பாளருக்கு பங்குத்தொகை கொடுத்தே ஆக வேண்டும். ஒன்றிற்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒருவரே காப்புரிமை பெற முடியும். காப்புரிமைக்குத் தேவையான அடிப்படைக் காரணிகள் என்றால் அவை, கண்டுபிடிப்பு புதுமையானதாகவும், உலகில் வேறு யாரும் அறிந்திராத வகையிலும் இருக்க வேண்டும். கண்டுபிடிப்புத் தன்மையைப் பொறுத்தவரை, கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் அறிவைவிட கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடு கொண்டிருக்க வேண்டும். பொருளாதார முக்கியம் கொண்டிருக்க வேண்டும் அல்லது மேற்கூரிய இரண்டையும் கொண்டிருக்க வேண்டும். தொழில்துறைப் பயன்பாட்டைப் பொருத்தவரை, கண்டுபிடிப்பு தொழில்துறையால் உற்பத்தி செய்யக் கூடியதாகவும், அல்லது தொழில்துறையால் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

முதல் பதிவு செய்யப்பட்ட காப்புரிமை ஒரு தொழில்துறை சார்ந்த கண்டுபிடிப்புக்காக 1421இல் புளோரன்ஸ் (Florence) நகர கட்டிடக் கலைஞரும் பொறியாளருமான பிலிப்போ ப்ரூனெல்லெஸ்ஸிக்கு (Filippo Brunelleschi) வழங்கப்பட்டது. பளிங்குக் கற்களை ஏற்றிச் செல்லப்
பயன்படும் சக்கரங்களுடன் கூடிய ஒரு விசைப்படகு தயாரிப்பதற்கு அவருக்கு மூன்று வருட ஏகபோக உரிமை வழங்கப்பட்டது.

உலகத்திலேயே அதிக காப்புரிமை கொண்டவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுன்பையமாசகி என்பவர். இவர் தனியாகவும், குழுவாகவும் இதுவரை 5,460 கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ளார்.
அமெரிக்காவை சார்ந்த அறிவியல் வல்லுனரான தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்து தொன்னூற்று மூன்று கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார்.

நம் உரிமையை ஏன் காக்க வேண்டும் என்ற வினாவும் எழத்தானே செய்கின்றது. புதிய கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதாக இருப்பதோடு, அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. புதியவற்றைக் கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வம் அதைப்
பதிவு செய்வதில் இருக்க வேண்டும் என்பதும் அவசியம். அதைப்போல பழைய உரிமைகளைப் புதுப்பிப்பதிலும் ஆர்வம் கொள்ள வேண்டியதும் அவசியம். புதிய பொருளில், புதிய கண்டுபிடிப்புகள் / புதிய உத்திகள் தங்களிடம் இருந்தால் அதற்கு அறிவுசார் சொத்துரிமைக்கோரி விண்ணப்பிப்பது அதைப் பாதுகாப்பதே நாம் நம் நாட்டிற்குச் செய்யும்
முக்கிய கடமையாகவும் இருக்கும்.

கோவை, ஈரோடு பகுதிகளின் நூற்பாலைகளில் பார்த்தீர்களானால் அன்றாடம் ஏதோவொரு சிறிய சிறிய அல்லது பெரிய கண்டுபிடிப்புகளை போகிற போக்கில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் அனைத்திற்கும் காப்புரிமை பெற்றிருக்கிறார்களா என்பது ஐயமே.. பின்னலாடை என்கிற ஹொசைரி பல நேரங்களில் திரைப்பட வட்டாரங்களில் அடிக்கடி நாம் கேட்கும் வசனங்கள், “என் கதையை சுட்டுட்டாங்க .. என் பெயர் கூட குறிப்பிடப்படாமல் வேறு ஒருவர் பெயரைப் போட்டிருக்கிறார்கள். இதுவே ஒருவரின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பையோ அல்லது புதிய தொழில்நுட்பத்தையோ மற்றொருவர் எடுத்து தங்களுடையதைப் போன்று பயன்படுத்தினாலோ அல்லது வணிகம் செய்தாலோ எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் அறிவோம். இதுபோன்ற அறிவுத் திருட்டுகளைத் தடுப்பதற்காகவே பேடன்ட் எனப்படும் காப்புரிமை வசதி இருக்கிறது. ஆனாலும் அது பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகம் இல்லை என்பதும் உண்மை.

டிரேட் மார்க் எனப்படும் வணிக முத்திரைகள், கண்டுபிடிப்புகளின் டிசைன் எனும் வடிவங்கள், புவிசார் குறியீடுகள், காப்பிரைட் எனப்படும் படைப்பாக்க உரிமை, பேடன்ட் எனப்படும் காப்புரிமை ஆகியவை அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வரும் முக்கியமான விடயங்கள். சென்னை அலுவலகம் காப்புரிமை, வணிக முத்திரைகள் மற்றும் புவிசார் குறியீடுகளுக்கானது.
காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்புக்கு வழங்கப்படுகின்ற தனிப்பட்ட உரிமை ஆகும். இது சர்வதேச முறையிலும் தேசிய முறையிலும் என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
காப்புரிமை முக்கியமாக
1. பயன்பாட்டு காப்புரிமை
2. வடிவமைப்பு காப்புரிமை
3. தாவர காப்புரிமை
4.  மென்பொருள் காப்புரிமை
என்று வகைப்படுத்தப் படுகின்றன.

முதலில் காப்புரிமை ஒன்றை குறித்த கண்டுபிடிப்புக்காகப் பெற்றுக்கொள்ள முன்னர் குறித்த கண்டுபிடிப்பானது காப்புரிமைக்கு தகுதி உடையதா? ஏற்கனவே அவ்வாறன கண்டுபிடிப்பு சந்தையில் உள்ளதா? அதற்கு காப்புரிமை பெறப்பட்டதா போன்ற சில அடிப்படை பரிசோதனைகளை நிகழ்த்துவது அவசியம். பின்னர் சட்டத்தரணி ஒருவர் மூலமாக காப்புரிமை விதிகளுக்கேற்ப காப்புரிமை வழங்கும் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதனை பதிவு செய்துகொள்ள முடியும். சர்வதேச முறையில் காப்புரிமம் பெற்றுக்கொள்ள Switzerland இல்
அமைந்துள்ள International Bureau of the World Intellectual Property Organization (WIPO)க்கு விண்ணப்பிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் காப்புரிமை பெறுவதற்கான பயிற்சி மையம் வைத்திருக்கிறார்கள். காப்புரிமை சட்ட மசோதா 1999-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.

காப்புரிமை அலுவலகம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. எந்த ஒரு பொருளுக்கும் 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமை பெற கண்டுபிடிப்பைப் பற்றிய இருவகையான குறிப்பேடுகள் வழங்கப்பட வேண்டும்.

அவை:
1. தற்காலிக குறிப்பேடுகள்
2. முழுமையான குறிப்பேடுகள்

1. தற்காலிக குறிப்பேடுகள்

தற்காலிக குறிப்பேடுகள் என்பது முன்னுரிமைக்காக ஆராய்ச்சியை முடிக்கும் முன்னரே பதிவு செய்து வைப்பதாகும். இந்த ஆய்வு பற்றியும் கண்டுபிடிப்பு பற்றியும் முழுமையானத் தகவல் தரவேண்டியதில்லை. எனினும் தற்காலிக குறிப்பேடுகள் காப்புரிமை ஏதும் வழங்காது. இது ஒரு
கண்டுபிடிப்புப் பற்றிய முன்னுரிமையைப் பெற மட்டுமே வழிவகுக்கிறது. தற்காலிகக் குறிப்பேடு பதிவு செய்த 12 மாதங்களுக்குள் முழுமையான குறிப்பேடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இயலாத பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படும். ஒரு கண்டுபிடிப்பை முடித்துவிட்டால் நேரடியாக முழுமையான குறிப்பேட்டிலும் பதிந்து கொள்ளலாம். தற்காலிகக் குறிப்பேடு பெற்றிருத்தல் என்பது கட்டாயம் இல்லை.

2. முழுமையான குறிப்பேடுகள்

காப்புரிமை பெற கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் பற்றிய முழுமையான குறிப்பேடு காப்புரிமை அலுவலகத்தில் சமர்பிக்கப்படுதல் அவசியம். ஒரு முழுமையான குறிப்பேட்டில் கீழ்க்காணும் அம்சங்கள் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.

1. கண்டுபிடிப்பின் பெயர் / தலைப்பு
2. அக்கண்டுபிடிப்பு எந்தத் துறையைச் சேர்ந்தது
3. அக்கண்டுபிடிப்பு பற்றிய முழு வரலாறு. அத்துறையில் கண்டுபிடிப்புடன் தொடர்புடைய முந்தைய கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம்.

4. கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி பற்றிய முழு ஆராய்ச்சி முடிவுகள்.
5. கண்டுபிடிப்பை புரிந்து கொள்ள படங்கள்
6. கோரப்படும் உரிமைகள் பற்றிய விவரம் தெளிவாக இருத்தல் அவசியம். என்னென்ன பண்புகளுக்குக் காப்புரிமை தேவைப்படுகிறது, காப்புரிமை விண்ணப்பதாரர் பெயரில் மட்டும்
வழங்கப்பட்டால் போதுமா அல்லது வேறு நபருடன் சேர்த்துக் கோருகிறாரா என்பன போன்ற தகவல்கள் சரியாக இருத்தல் வேண்டும்.

உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமை பெறுவது எவ்வாறு?

இன்றைய நடைமுறை அளவில் உலக அளவில் காப்புரிமை பெற வழியில்லை.  பொதுவாக நாம் எந்த நாட்டில் பயன்படுத்துகிறோமோ அந்நாட்டில் உள்ள வழிமுறைப்படி காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது வட்ட அளவில் காப்புரிமை பெறுவதற்கான ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் அல்லது ஆப்ரிக்க வட்டார அறிவு சார்ந்த காப்புரிமை அலுவலகம் என்ற நிறுவனங்கள் ஆங்காங்கு தோன்றியுள்ளன. இவை அக்குறிப்பிட்ட நாடுகள் / பகுதிகளுக்கான காப்புரிமைகளை வழங்குகின்றன. கூட்டுறவுக் காப்புரிமை உடன்பாடு உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமைகளை வழங்குகிறது. எனினும் அவை ஒரு நாட்டு காப்புரிமை போலவே பயன்பாடு உடையவை. இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். உங்களுடைய தயாரிப்பைப் போல் மற்றவர்கள் அப்படியே செய்து விற்க முடியாது. வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் நாற்பதாயிரம் விண்ணப்பங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமை கோரி வருகின்றன. அதில் சென்னை அலுவலகத்துக்கு மட்டுமே சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் வருவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் இந்தியாவில் இப்படி வரும் விண்ணப்பங்களில் சுமார் 85 சதவீதம் வெளிநாட்டினருடையவை என்ற வேதனையான செய்திகளும் வருகின்றன.
பொதுவாக தாராளமயமாக்கல் வந்தபிறகு பல நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்புகளை அனுப்புவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் எளிதாகிவிட்டன. 1990-ம் ஆண்டிலிருந்தே இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், காப்புரிமைச் சட்ட மசோதா 1999-ம்
ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது. கடின உழைப்பினாலும், சீரான முயற்சியினாலும் உங்களுடைய தயாரிப்புகளை நீங்கள் தரமானதாகத் தயாரித்து விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

உங்கள் பொருளுக்கு அதிக கிராக்கி நிலவும் இந்த நிலையில் அதை கவனம் கொள்ளும் மற்றவரும் அதே போல தயாரிக்க முற்படலாம். இதனால் உங்களது உழைப்பு வீணாவதோடு சந்தையில் இலாபமும் குறையக்கூடும். இதைத் தவிர்க்கவே காப்புரிமை பெறுவது அவசியமாகிறது. மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கொல்கத்தாவிலும், அதன் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை, சென்னையிலும் உள்ளன. தமிழ் நாட்டில் இருப்பவர்கள் சென்னையிலேயே காப்புரிமை பெறலாம். புதிதாகத் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும், ஏற்கனவே உள்ள பொருள்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு காப்புரிமை பெறலாம். ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படுகிறது என்றாலும் அப்பொருளை கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகக் கண்டுபிடிப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வுதான். இதுவரை யாராலும் முன்னெடுக்கப்படாத புதிய கண்டுபிடிப்புகளே காப்புரிமைக்குத் தகுதியானவை. அந்த வகையில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு முன்பே அது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் தயாரித்த பொருளுக்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறதா என்பதை இணையதளத்தில் தேடி தகவல்களைப் பெறலாம். அதனைத் தெரிந்து கொள்வதற்கான இணையதளம் உள்ளது. (www.ipindia.nic.in) சென்னை அலுவலகம் பற்றிய விவரத்தை [email protected] என்ற இணையதளத்திலும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் பெறலாம். wipo என்ற இணையதள தேடுதல் மூலம் பிற நாடுகளில் எந்தெந்த பொருள்கள் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல்வேறு காப்புரிமை அலுவலகங்களின் இணையதளங்களும் காணக்கிடைக்கின்றன. பாரம்பரிய மருந்துகள் சார்ந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோருவோர், இந்திய அரசின், பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம், அதாவது டிரடிஷனல் நாலெட்ஜ் டிஜிட்டல் லைப்ரரி என்ற அமைப்பில் அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும்
எந்த ஒரு கண்டுபிடிப்பும் மனித சமூகத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்தியர்களுக்கு படைப்பாற்றல் அதிகம் இருந்தாலும் அறிவுசார் சட்டத்தை பயன்படுத்துவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்தியா பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பாரம்பரிய முறைகளுக்கு மற்றொரு நாட்டில்
காப்புரிமை வழங்கி இருப்பின் இந்திய நாடு தகுந்த ஆதாரங்களைக் காட்டி அங்கு கொடுக்கப்பட்ட காப்புரிமையை நிரந்தரமாக இரத்து செய்யலாம். ஒருமுறை இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மஞ்சள் உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் வல்லமை படைத்தது எனக் கண்டுபிடித்துள்ளதாக கூறி காப்புரிமை பெற்றனர். இதை எதிர்த்து இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் “பழங்காலக்கலை” என்ற அடிப்படையில் ஆதாரங்களுடன் வாதிட்டதால் மஞ்சளுக்கான அமெரிக்க காப்புரிமை ரத்து செய்யப்பட்டது. இதன் கூற்றுப்படி மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக இந்திய மருத்துவக் கழகம் 1953 – ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகையையும் சமர்ப்பித்தது. பின்பு அமெரிக்க காப்புரிமை மஞ்சளுக்கான காப்புரிமையை இரத்து செய்தது. ஏனெனில் கண்டுபிடிப்பு என்பது,
1. தனித்தன்மை உடையதாகவும், புதியதாகவும், பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் மஞ்சள் வழக்கு தனித்தன்மை உடையதாகவும் புதியதாகவும் இல்லை என்பதால் இரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு, ஐக்கிய நாடுகள் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் (யுஎஸ்பிடிஓ) வழங்கிய மஞ்சள் மற்றும் பாசுமதி அரிசி  காப்புரிமைகளும் 1990களின் பிற்பகுதியில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் வழங்கிய வேம்பின் காப்புரிமையை இந்திய அரசு வெற்றிகரமாகப் போராடி இரத்து செய்தது நினைவு கூறத்தக்கது. ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்டிஏ என்ற உர நிறுவனத்திற்கு வேம்பின் கொட்டையிலிருந்து பூஞ்சாணக்கொல்லி தயாரிக்கும் முறைக்கு உரிமம் வழங்கியது. பாரம்பரிய முறையை ஆதாரங்களுடன் வாதிட்டதால் இந்திய அரசு இதிலும் வெற்றி கண்டது. இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். இந்தியாவில் உங்களுடைய தயாரிப்பைப் போலவே
இன்னொருவர் தயார் செய்து விற்க முடியாது. அதே சமயம் உங்கள் தயாரிப்புகளை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு
விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 40 ஆயிரம் பேர் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பதற்காக இவர்கள் காப்புரிமை பெறுகின்றனர்.

இந்தியாவில் காப்புரிமை செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம் அது குறித்த விழிப்புணர்வு இங்கு அதிகம் இல்லாததே காரணம் என்கின்றனர் சென்னை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்புப் பிரிவு இணை ஆணையர் ஆர். தேவன் அவர்கள். இந்தியா உயர்கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடு. ஒரு வருடத்திற்கு பல இலட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இருக்கும் இந்திய அரசின் அறிவுசார் காப்புரிமை அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஏதோ ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி காப்புரிமை கோரினாலே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்காக பெருகும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
தமிழகத்தில் மட்டுமே 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கண்டுபிடிப்புகளை தங்களது துறைகளில் மேற்கொள்கின்றனர். இவற்றை பதிவு செய்து காப்புரிமை பெற்றால், அந்த தயாரிப்பால் பயன் பெறும் நிறுவனங்கள் அதற்கு ராயல்டி தொகை அளிக்கும். இதன் மூலம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பயனைடையும். வெளிநாடுகளில் காப்புரிமை பெறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவிலும் இந்த நடைமுறை வந்தால் காப்புரிமை பெறுவது அதிகரிக்கும். நமது தயாரிப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் எளிதில் கிடைக்கும். பொதுவாகவே, காப்புரிமை பெறுவதற்கும் அதற்கான விண்ணப்பம் செய்வதற்குமான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்குமோ என்ற ஐயம் அனைவருக்கும் வருவது இயல்புதான். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அதற்குரிய கட்டணம் சொற்பம்தான்.  காப்புரிமைக்கு
விண்ணப்பிக்க இந்திய அரசு தனிநபருக்கு ரூ. 700/-, குழுக்கள், நிறுவனங்கள், போன்றவைகளுக்கு ரூ.4000/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பதாரர் விண்ணப்பித்த 48 மாதங்களுக்குள் பரிசோதனைக்கு வருமாறு பரிசோதனைக் குழுவிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும். இதற்கு நபர் ஒருவருக்கு ரூ. 1000/- ம் நிறுவனங்களுக்கு  ரூ. 3000/- ம் செலுத்தப்பட வேண்டும். அதோடு பதிவுசெய்வதற்கென தனிநபர் ரூ. 1500/- ம் நிறுவனங்கள் ரூ. 5000/- ம்  காப்புரிமை பெறும் சமயத்தில் செலுத்த வேண்டும். ஆனால் திட்டப்பணி வரைவை எழுதி, தட்டச்சு செய்து அச்செடுத்து சமர்ப்பிப்பதுதான் சற்று சிரமமான காரியம் என்பதோடு செலவு சற்று அதிகம் பிடிப்பதும் அதற்குத்தான். ஒரு தனி நபரின் கண்டுபிடிப்புக்கான விண்ணப்பத்திற்கு சுமார் இரண்டாயிரத்திலிருந்து ஏழாயிரம் ரூபாய் வரை
செலவாகும். ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பு என்றால் அதற்கு இதைவிட நான்கு மடங்கு செலவாகும் என்கிறார்கள். அப்படி ஒரு கண்டுபிடிப்புக்காகப் பெற்ற காப்புரிமைக்கு 20 வருடம்தான் மதிப்பு இருக்கும். அதன்பின் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். உரிமையாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பையும் அதற்கான காப்புரிமையையும் எவருக்கு வேண்டுமானாலும் விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ செய்யலாம். வெளிநாடுகளில் கண்டுபிடிப்பாளர்களை பெரும்பாலான நிறுவனங்கள் ஆதரிக்கும் அளவிற்கு இங்கே இல்லையென்றாலும் அகமதாபாத்திலுள்ள ‘இண்டியன் இன்னொவேஷன் ஃபவுண்டேஷன்’
போன்ற ஒரு சில அமைப்புகள் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்கொள்வோமானால் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 5 இலட்சம் பொறியாளர்களாவது உருவாகிறார்கள். அதேபோலபௌதிகம், நுண்ணுயிரியல் போன்ற அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களும் தங்கள் இறுதியாண்டு ப்ராஜெக்ட் எனும் திட்டப்பணி
வரைவுகளில் பத்து சதவீதம் மட்டுமே கூட காப்புரிமை அலுவலகத்துக்கு வந்தாலே போதும், மிகக் குறைந்தபட்சமாக 50,000க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் தொழிலுக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் வெளிவரக்கூடும். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் தங்கள்
ப்ராஜெக்டுகளையே விலைக்கு வாங்கித்தான் சமர்ப்பிக்கிறார்கள் என்கிற வருத்தமான தகவல்களை மட்டுமே காப்புரிமை அளிக்கும் அதிகாரிகள் அளிக்கின்றனர். அந்த வகையில் இளைஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை சரியாகத் திட்டமிட்டு மேற்கொண்டு காப்புரிமை பெற்றால் பெரியளவில் சாதிக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொண்டு மாணவர்களுக்கு சரியான வழியில் பயிற்சி அளிக்கவேண்டியதும் ஆசிரியர்கள், பேராசிரியர்களின்
முக்கிய கடமை. பொறியியல் மாணவர்கள் காப்பீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம். காப்புரிமை ஆய்வாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. காப்பீடு முகவர் போன்று இவர்கள் செயல்படலாம் என்றும் தேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதும் கவனம் கொள்ளத்தக்கது.
காப்புரிமையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். முதலில் ஒரு கண்டுபிடிப்பின் முழுமையான திட்டப்பணி வரைவாக உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும். பின் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களது இணையவெளியில் அதுபற்றிய முழுமையான விவரங்கள் வெளியிடப்படும். இந்த நேரத்தில் இந்தத் திட்டப்பணி தொடர்பாக மற்றவர்களுக்கு ஏதேனும்
எதிர்ப்பு இருந்தால் தெரிவிப்பார்கள். ஒரு காப்புரிமைக்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்க விளைந்தால் 4 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு மாதம் நீட்டிக்கலாம். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பவர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அவர் எதற்காக, என்னென்ன பண்புகளை எதிர்க்கிறார் என்ற முறையான விளக்கங்கள் கொடுக்க வேண்டும். இந்த விளக்கம் எழுத்து வடிவத்தில் என்னென்ன குறிப்புகளை தெரிவிக்கிறார் என ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அலுவலர் இவ்விளக்கம் மற்றும் ஆதாரங்களைப் பார்த்துக் காப்புரிமை அளிப்பு பற்றி முடிவு செய்வார். காப்புரிமை பெறுவதற்கு படிவம் -2 ஐ பூர்த்தி செய்ய வேண்டும். இது தவிர படிவம் -1 மற்றும் படிவம் -18-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி ஏதும் எதிர்ப்பு இல்லாத நிலையில்தான் அது காப்புரிமைக்குத் தகுதியானதாகக் கருதப்படும். ஆனாலும் காப்புரிமைக்குத் தகுதியானதுதான் என்று உறுதி செய்த பிறகும் அடுத்த கட்ட சோதனைக்குத் தயாராக வேண்டும். அதாவது காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கும் அந்த நபர்தான் இந்த கண்டுபிடிப்பைச் செய்தவரா, அல்லது வேறு எவருடையதாவது அபகரிக்கப்பட்டுள்ளதா என சோதிக்கப்படும். இதற்காக அந்த திட்டப்பணி தொடர்பான ஐயங்களையும், தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களையும் அதற்குரிய நிபுணர்கள் நேர்காணல் மூலம் கேட்டறிவார்கள். பின்னர் எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் சரிபார்த்து, அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே காப்புரிமை வழங்கப்படும்.

காப்புரிமைக்குத் தகுதியில்லாத கண்டுபிடிப்புகள் என்று வரையறுக்கப்பட்டவை பலவும் உள்ளன என்றாலும், அதில் முக்கியமான சிலவற்றைக் காணலாம். இயற்கை விதிகளுக்கு முரணான கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் அமைதி, சுமுக நிலைமை போன்றவற்றைப் பாதிக்கும்
கண்டுபிடிப்புகள். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அல்லது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு எதிரான கண்டுபிடிப்புகள். வேளாண்மை அல்லது தோட்டக்கலையின் முறைகள்
மூளையின் செயல்பாடுகள் குறித்த திட்டம் மற்றும் முறைகள், விளையாட்டு முறைகள் தகவல்களை வழங்குதல் குறைக்கடத்தி ஒருங்கிணைந்த சுற்றுகள் பற்றிய வரைபட விளக்கம்
பாரம்பரியமாக அறியப்பட்ட ஒன்றின் கூட்டமைப்புகள், அவற்றின் மறுபடிவங்கள் சார்ந்த கண்டுபிடிப்புகள் அணுசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகள் பொது நலன், மனிதநேயத்தின் கொள்கைகள் மற்றும் அறநெறிக்கு முரணான முடிவுகள். போன்றவைகள் உள்ளிட்டவைகள் காப்புரிமைக்கு தகுதியில்லாதவையாக கருதப்படுகின்றன. பல நாடுகளில், குளோனிங் துறையில் ஆராய்ச்சிக்கு காப்புரிமை பெறுவது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்கல் பற்றி பார்த்தால், காப்புரிமை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் உற்பத்தியானது சந்தையில் மதிப்பளித்தால் மட்டுமே காப்புரிமை வணிகத்திற்கு உறுதியான பலனை அளிக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். காப்புரிமையிடப்பட்ட கண்டுபிடிப்பை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் எவை என்று பார்க்கலாம்.
காப்புரிமையிடப்பட்ட கண்டுபிடிப்பினை நேரடியாக வர்த்தகமயமாக்கலாம்.
காப்புரிமையை வேறொருவருக்கு விற்கலாம்.

காப்புரிமையின் உரிமையை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.
இணைந்த உடன்பாட்டு வியாபாரத்தை, அதாவது கூட்டு சேர்ந்து வணிகம் மேற்கொள்ளலாம்.
காப்புரிமை தலையீட்டிற்கான தீர்வு பற்றியும் அறியவேண்டும். அதாவது தங்களது காப்புரிமையில் மற்றவர்கள் தலையீடு செய்கின்றனர் என்று நம்பினால் முதலாவது நடவடிக்கையாகத் தலையீடு செய்பவர்களின் உற்பத்தி அல்லது படிமுறையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பின்பு அவர்களுக்கு, ‘நிறுத்து அத்துடன் தவிர் கடிதம் அனுப்ப வேண்டும். இதனால் தலையீட்டாளர் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவர் அல்லது உரிமமிடல் ஒப்பந்த பேச்சிற்கு இணங்கி வருவர். இவ்வாறு நடைபெறாத சமயத்தில் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடைச்சட்டத்தினைக் கேட்டுப் பெறலாம். பின்னர் தலையீட்டாளர் நடவடிக்கைகளைப் பொறுத்து நீதிமன்றம், தலையீட்டாளர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பணிக்கலாம். அல்லது காப்புரிமை உரிமையாளருக்கு நட்டஈட்டினை அளிக்க தீர்மானிக்கலாம்.

இந்தியாவில் காப்புரிமையும் பதிப்புரிமை பதிவு முறை மிகவும் எளிமையாகி வருவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. வலிமையும் துடிப்பும் மிக்க அறிவுசார் சொத்துரிமை உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. காப்புரிமைகள், வடிவமைப்புகள், பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தகம் முத்திரைகளை ஆராய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து இந்த ஆய்வுகள் திருப்தி அளிக்கின்றன. புதுமைகளின் மையமாக இந்தியா உருவாவதற்கு வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் பெரிய அளவில் உதவும். புது நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கான கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. அறிவுசார் சொத்துரிமை செயல்முறை முன்பை விட எளிமையாகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அலுவலர்கள் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் அலுவலர்கள், பதிவு செய்தல் மற்றும் சேவைகளை பெறுவதை எளிமைப்படுத்துவதற்காக முடிவெடுப்பதற்கான கால அளவையும் டிஜிட்டல் முறைக்கு மாறுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறையும்
மறுசீரமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.உதாரணத்திற்கு, வர்த்தக முத்திரை விதிகளின் கீழ் முன்பிருந்த 74 படிவங்கள் 8 ஒருங்கிணைந்த படிவங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பிப்பது எளிதாகிறது. வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு வழங்கும் உலகின் மிகச் சிறந்த முதலீட்டு மேம்பாடு விருது இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

காப்புரிமை பெறுவதன் பயன்கள்

1. காப்புரிமை உரிமையாளரின் கண்டுபிடிப்பிற்கு பாதுகாப்பளிக்கிறது.
2. அதன் பயனை அவர் முழுமையாக அடைய உதவுகிறது.
3. பிறர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
4. உரிமையாளரின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

காப்புரிமை பெறப்படாத பொருட்களை யார் வேண்டுமானாலும் வணிக முறையில் பயன்படுத்த முடியும்.
1. கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்பால் பொருளாதார முறையில் பலன் பெறாவிடில், அவர் தமது கண்டுபிடிப்பை பிறர்க்குப் பயன்படும் வகையில் ஏதேனும் தனியார் நிறுவனத்திலோ அல்லது வேறொருவரிடமோ விற்று விட காப்புரிமையில் அனுமதியுண்டு.
2. காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்வளர்ச்சிக்கு அடிகோலுகிறது.
3. காப்புரிமையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய அடிப்படையாக அமையும்.
4. இந்த காப்புரிமையானது மேலும் பல ஆராய்ச்சிகள், முன்னேற்றக் கண்டுபிடிப்புகளை செய்யத் தூண்டுகோலாக அமையும்.
5. காப்புரிமை வர்த்தகத் தொழில்துறைக்கு ஒரு சொத்தாக அமைகின்றது. அதிகக் காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் பொருளாதார அளவில் வசதி படைத்ததாக கருதப்படுகிறது.
6. குறிப்பிட்ட காப்புரிமைக் காலம் முடிந்த உடன் அக்காப்புரிமை பெற்ற பொருள் அல்லது தொழில் நுட்பம் பொது உபயோகத்திற்கு வந்துவிடுகிறது.

இவ்வளவு பயன்பாடுகள் உள்ள வகையில் எந்த ஒரு சிறு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதற்குரிய காப்புரிமையை விரைவில் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நம் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

❌