Normal view

Received before yesterday

SANGA ILAKKIYATHIL NIGAZHTHU KALAI KARUVIKAL| A.ANBARASAN

Abstract
     Tamils ​​have held arts in high esteem in their lives from the beginning till the present day. They observe many rituals from birth to death. They perform many performing arts by touching and touching while performing rituals. Arts are intertwined with the life of Tamils.
Music dominates both the external and internal lives of Sangam Tamils. Through Sangam literature, we can learn about many musical instruments used by the people and performers of the Sangam period. Art is what touches the mind through the sense of sight. Music, based on sound and moving the mind and thought through the sense of hearing, has the unique ability to bring all beings under its control, from a man with a stone mind to a religious elephant.

சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைக்கருவிகள்
முன்னுரை
         
தமிழர்களின் வாழ்வில் அன்று முதல் இன்று வரை கலைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. பிறப்பு முதல் இறப்பு வரை பல சடங்கு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். சடங்குகளை மேற்கொள்ளும் போது தொன்று தொட்டு பல நிகழ்த்துக் கலைகளை அவர்கள் நிகழ்த்திக் கொண்டுள்ளர். கலைகள் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளன. இசைக்கலை சங்கத் தமிழர்களின் புறவாழ்வு, அகவாழ்வு என இரண்டிலும் மேலோங்கி நிற்கிறது. சங்க இலக்கியங்களின் வாயிலாக சங்க கால மக்களும், நிகழ்த்துக் கலைஞர்களும் பயன்படுத்தியப் பல இசைக்கருவிகளை அறிந்து கொள்ளமுடிகிறது. கண்புலன் வழியாக மனதைத் தொடுவது கலை ஆகும். இசைக்கலையானது ஒலியை அடித்தளமாகக் கொண்டு செவிப்புலன் வழியாக மனதையும் சிந்தனையையும் நெகிழச்செய்வது, கருங்கல் மனம் கொண்ட மனிதன் முதல் மதம் கொண்ட யானை வரை அனைத்து உயிர்களையும் தனது கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வரும் தனிச் சிறப்பு வாய்ந்தது.

இசைக்கருவிகளும் பாணர்களும்
         
பண்டையக் காலம் தொட்டே கலைகளுக்குத் தமிழர்கள் தம் வாழ்வில் சிறப்பிடம் கொடுத்தனர். தமிழர் தம் வாழ்வின் ஆதி முதல் அந்தம் வரை ஒன்றாகக் கலந்தது கலை. குறிப்பாகத் தமிழர்களின் போர் வாழ்வு, பொது வாழ்வு, சுகவாழ்வு என அனைத்து விதமான புறவாழ்வுக் கூறுகளிலும், இசைக் கருவிகளும், இசையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
 இசைக் கலையானது ஒலியின் அடிப்படையில் அமைந்து செவிப்புலன் வழியாக சிந்தையில் சேர்ந்து மனதை நெகிழ்த்துவது ஆகும். சங்க இலக்கியத்தில் தடாரி, முழவு, பறை, துடி, ஆகுளி, எல்லரி, பதலை போன்ற தோற்கருவிகளும், குழல், கொம்பு, நெடுவாங்கியம் ஆகிய காற்றுக் கருவிகளும், சீறியாழ், பேரியாழ் என்ற நரம்புக் கருவிகளையும் காணமுடிகிறது. இக்கருவிகளை நிகழ்த்துக் கலைஞர்களான, பாணர்களே பெரும்பான்மையாகப் பயன் படுத்தியுள்ளனர். மேற்கண்ட இசைக்கருவிகளை நிகழ்த்துக் கலைஞர்களாகிய இவர்கள் கலைகளை நிகழ்த்தும் போது அக்கலையை மேலும் மேன்மையுறச் செய்யப் பயன் படுத்தியுள்ளனர்.
 “இசைக் கருவிகளில் முதலில் தோன்றியவை தோல் கருவிகள். பின்னர் தோன்றியவைத் தாளக் கருவிகள், அதன் பின்னரே நரம்புக்கருவிகள் தோன்றின. சங்க இலக்கியத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற யாழ் வகைகள்  பல சொல்லப்பட்டுள்ளன. இசைப் பாணர்களிலும் அவர்கள் பயன்படுத்தும் கருவியின் அடிப்படையில் சிறுபாணர், பெரும்பாணர் என்று பிரிக்கப்பட்டுள்ளார்கள். பாடகர்களில் பல பிரிவுகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. மிக வளர்ச்சியடைந்த நிலையில்தான் சங்க காலத்தில் இசைக் கலை காணப்டுகிறது.”1

பாணர்களின் இசைப்பள்ளி
         
சங்க காலத்தில் வாழ்ந்த குடிகளில் பாணர்கள் தனிக்குடியாக வாழ்ந்துள்ளனர் என்பதைப் பின்வரும் மாங்குடி மருதனார் பாடல் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

“துடியன் பாணன் பறையன் கடம்பனென் 
றிந்நான்  கல்லது குடியு மில்லை”2       
பாணர்கள் தனிக்குடிகளாக இருந்தமையால் இவர்களிடத்தில் தம் சந்ததியினருக்குத் தனியாக இசையைக் கற்றுக் கொடுக்கும் முறை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். இளையவர்கள் தம் குடியைச் சார்ந்த மூத்தவர்களுக்குப் பணி நிமித்தமான உதவிகளைச் செய்ததன் மூலமாக இசைப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். “பாணர்களின் கலையானப் பாடுதல், அவிநயத்தல், உணர்ச்சியுடன் பேசுதல் ஆகியவை முதியவர்களிடமிருந்து வாய் வழியாகக் கற்கப் பெற்றன. இத்தகு கற்றலின் உட்கூறுகளான விதிமுறை, உட்கருத்து, மரபு வழி உள்ளடக்கம் போன்றவை நினைவூட்டும் வழியாக விளங்கின. இவை பாணராலும் அவையினராலும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப் பெற்றன. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் கல்வி என்ற ஒன்று இக்காலக்கட்டத்தில் இல்லாமலிருப்பது வியப்பளிக்கிறது.”3 எனக் கூறுகிறார் க.கைலாசபதி. இசைப்பயிற்சி கல்வியாக அளிக்கப்படாமல் தொழிலறிவாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கற்பிக்க எழுதிப் படிக்கும் கல்வி முறையாக இல்லாமல் தம் முன்னோர்களின் அனுபவத்தையும் அவர்களின் வாயிலாகக் கொண்ட கேள்வி ஞானத்தையும் கொண்டே பரம்பரையாக இவர்கள் இசையைக் கற்றிருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
மதுரைக்குப் பக்கத்தில் வைகையாற்றின் நீர்த்துறைக்கு அருகில் பூந்தோட்டங்கள் நிறைந்த இடத்தில் பெரும்பாணர்களின் வீடுகள் அமைந்திருந்ததையும், அவர்களது வீடுகளில் ஆடல், பாடல் சார்ந்த ஓசைகள் இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்ததையும்

“லவிரறல் வையைத் துறைதுறை தோறும் 
பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி
யழுந்துபட் டிருந்த பெரும்பா ணிருக்கையு”4
என்ற மதுரைக்காஞ்சிப் பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது. பாணர்கள் ஓய்வு நேரங்களிலும் தமது இல்லத்தில் நிகழ்த்துக் கலைகளை நடத்தியும் அதன் மூலமாக அவர்களின் அடுத்தத் தலைமுறைக்கு தமது கலைத் திறனைக் கற்பித்ததையும் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

இசைக்கருவியும் நிகழ்த்துக் கலைஞர்களும்
         
பாணர்கள் எங்கும் குழுவாகவேச் சென்றார்கள். இவர்கள் நிகழ்த்தும் கலைகளான ஆடல், பாடல் என்ற கலை பகட்டு அனுபவம் சார்ந்தது. இவர்களது கலைகள் பல்லிசைப் பாணர்கள் சேர்ந்து நடத்தும் கோவையாகவே அமைந்துள்ளன. இவ்வாறு இசைக் கருவிகள் பல இணைந்து நிகழ்த்தும் கலை அக்காலத்தில் “ஆமந்திரிகை” என்று அழைக்கப்பட்டுள்ளது.

“கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல் வழிநின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணும்மைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை”5
என்பதை மேற்கண்ட பாடல் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

சங்க கால நிகழ்த்துக் கலைச் சமூகம்
         
சங்க கால நிகழ்த்துக் கலைஞர்கள் விரிவான சமூக அமைப்பிற்கு உரியவர்களாக வாழந்துள்ளார்கள். இவர்கள் ஒரே சமூக அமைப்பில் வாழ்ந்து வந்திருந்தாலும் இவர்களுக்குள் தொழில் அடிப்படையில் பிரிவுகள் இருந்துள்ளன. பாணர், பொருநர், கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், கண்ணுளர், கிணைவர், துடியர், அகவுநர், கட்டுவிச்சியர், சென்னியர், குறுங்களியர், நகைவர், இயவர் என்றப் பிரிவுகள் குறிப்பிடத்தக்கப் பிரிவுகள் ஆகும்.


நிகழ்த்துக்கலைகள்

நிகழ்த்துக் கலைக் கருவிகள்
         
பண்டையத் தமிழகத்தின் வேட்டைச் சமூகத்தில் இசைத் தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்குப் பெரிதும் இடமளித்தது. இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என்று வகைப்டுத்தலாம். இயம் என்ற சொல்லிற்கு இசை, இசைக் கருவி என்று பொருள்.

“இயமெனும் பெயரே உரையும் ஓசையும் 
வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே”6
என்கிறது வடமலை நிகண்டு.

“இயம் என்ப ஒகியே வார்த்தை 
வாச்சியம் இம்முப் பேரே”7
என்கிறது சூடாமணி நிகண்டு.

தோற்கருவிகள்
         
கருவிகளின் வடிவத்தை மரத்தால் செய்து அவற்றின் மேல் விலங்குகளின் தோலைக் கொண்டு மூடி இறுதி வடிவம் கொடுக்கப்படும் கருவிகள் தோற்கருவிகள் ஆகும். முரசு, முழவு, தண்ணும்மை, கிணை, தடாரி, பதலை, தட்டை, தொண்டகம், ஆகுளி, எல்லரி, சல்லி, துடி, உடுக்கை, மகுளி, பம்பை, மத்தரி, பறை ஆகியனக் பண்டைத் தமிழர் பயன் படுத்திய முக்கிய தோற்கருவிகள் ஆகும்.

பறை
         
சங்க இலக்கியத்தில் மணப்பறை, பிணப்பறை, பறைச்சாற்றல் போன்றக் கருவிப் பெயர்ச் சொற்கள் கையாளப் பட்டுள்ளதைப் பார்க்கும் போது பறை என்பது பல வகையானத் தோற்கருவிகளுக்கும் பொதுப் பெயராக அமைவதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்பறை என்ற இசைக் கருவிகளை இசைப்பவர்களே பறையர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். “தொடக்கக் காலத்தில் தோற்கருவிகளுக்கு ஒரு பொதுப் பெயராகப் பறை வழங்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் ஏறக்குறைய எழுபது வகையானத் தோற்கருவிகள் இருந்துள்ளன”8 என்கிறார் மு.வளர்மதி.
 பண்டைக் காலத்தில் மண்டை என்ற பெயர் பறைக்கு வழங்கப்பட்டுள்ளது. “பறைகளை அடித்தப் பாணர்கள் ‘மண்டைப் பாணர்கள்’ எனப்பட்டனர். பிற்காலத்தில் மண், மரம், பித்தளை முதலியவற்றால் செய்து தோற்கட்டியப் பறைகளையும் பழைய பெயராலேயே மண்டை என்று வழங்கியது ஒரு வகை உவமையாகுப் பெயராகும்”9 என்கிறார் இரா.இளங்குமரன்.
          பறைகளை அடித்த பாணர்களே மண்டைப் பாணர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். மரம், பித்தளை, மண் இவற்றால் வளையத்தை உண்டாக்கி அதன் மீது தோல் கட்டிய நிகழ்த்துக் கருவியே பறை. இன்றளவும் பறை என்பது தோற்கருவிகளின் பொதுப் பெயராகவே வழங்கப்படுகிறது. ‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை’ என்ற தொல்காப்பிய நூற்பாவும், ‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை’ என்ற குறளும் தோற்கருவிகளின் பொதுப் பெயர் தான் பறை என்பதற்குச் சான்றுகளாக அமைகின்றன.

சிறுபறை (ஆகுளி)
         
பறை என்ற இசைக் கருவியின் மற்றொரு வகையே சிறுபறை ஆகும். இச்சிறுபறை குறிஞ்சி நிலமக்களின் முதன்மையான இசைக் கருவியாக விளங்குகிறது. மானின் தோலால் கட்டப்படுவது சிறுபறை ஆகும்.
“மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை யயரும் குரவை”10

முரசு
         
தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே உள்ள தோலிசைக்கருவிகளில் ஒன்று முரசு. இக்கருவி அரசர்களுக்கு நிகரான மதிப்பு மிக்க கருவியாக போற்றப்பட்டுள்ளது. இது இடி போல் முழங்கும் தன்மையுடைய இசைக் கருவியாகும்.

“கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த

மாக்கண் முரச மோவில கறங்க”11

மேற்கண்ட பாடல் வரிகள் முரசு காளைகளின் தோலால் கட்டப்படுவது என்பதையும், அதிக ஒலி எழுப்பக் கூடியது என்பதையும் உணர்த்துகிறது.

முழவு
         
முரசில் இருந்து சற்று வேறுபட்டத் தோற்கருவி முழவு ஆகும். இது முரசு போலில்லாமல் மென்மையான இசையை உடைய கருவியாக அமைந்துள்ளது.

“மண்ணமை முழவின் பண்ணமை சிறியா 
ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க”12
         
இந்த முழவு சங்க இலக்கியத்தில் பலாப் பழத்திற்கு உவமையாகப் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. “கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ”13 இது முரசு போல் அதிரும் ஓசை இல்லாமல் இனிய ஓசை உடைய நிகழ்த்துக் கலைக் கருவியாகும். நன்னனது மலையில் மகளிருடைய ஆடலுக்கு ஏற்றவாறு இடைவிடாமல் முழவு ஒலித்தச் செய்தியைப் பின்வரும் மலைப்படுகடாம் பாடல் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“குரூஉக்கட் பிணையற் கோதை மகளிர் 
முழவுத் துயி லறியா வியலு ளாங்கண்”14
தண்ணுமை
         
தண்ணும்மை என்பது தோற்கருவிகளில் முதன்மையானது. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் மத்தளம் (அ) மிருதங்கம் என்ற இசைக் கருவியானது தண்ணும்மையின் பரிணாம வளர்ச்சியால் உண்டான இசைக் கருவியாகும். “மத்தளமாகிய மிருதங்கமே மிகவும் நேர்த்தியான இன்னிசையைக் கொண்டது. நாட்டியத்தின் சிறப்பிற்கு ஏனைய இசைக் கருவிகளைவிட மத்தளம் மிக மிகத் தேவைப்படுகிறது. எல்லாம் வல்ல ஆடவல்லான் தாண்டவமாடும் போது நந்தித் தேவரே தண்ணும்மை அல்லது மத்தளங் கொட்டியதாகக் குறிப்புகள் உள்ளன”15 என்கிறார் தெ.மு. பாஸ்கரத்தொண்டைமான்.

தடாரி
         
ஒரு பொருநனை ஆற்றுப்படுத்தும் மற்றொரு பொருநன் அவன் வைத்திருக்கும் தடாரி என்ற இசைக் கருவியைப் பின் வருமாறு எடுத்துரைக்கின்றான்.

“பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி
யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய”16
         
வெள்ளி முளைக்கும் இருட்டான விடியற்காலைப் பொழுதில் படம் விரித்தப் பாம்பின் படத்தைப் போன்றுள்ள அகலமான என் தடாரி இரட்டைத் தாளத்திற்குப் பொருத்தமுற இசைக்கும் என்பதில் இருந்து தடாரி என்ற இசைக் கருவியின் அமைப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது.

காற்றுக் கருவிகள்
         
துளையின் வழியாகக் காற்றைச் செலுத்தி இசை எழுப்பப் பயன்படும் நிகழ்த்துக் கலைக் கருவிகள் காற்றுக் கருவிகள் (அ) துளைக் கருவிகள் என்று வழங்கப்படுகின்றன. காற்றுக் கருவிகளில் புல்லாங்குழல் தலைமை வகிக்கின்றது. இப்புல்லாங்குழல் மூங்கில் என்ற தாவரத்தின் தண்டினைத் துளைத்து உருவாக்கப்படுகிறது. மூங்கில் புல் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். மூங்கிலுக்கு நிகண்டுகள் வேண், வேணு என்று பொருள் தருகின்றன. வடமொழியில் வேணு என்ற சொல் புல்லாங்குழலைக் குறிக்கிறது. பழங்காலத்தில் காட்டில் உலர்ந்த மூங்கில்களில் வண்டுகள் துளைத்தத் துளையின் வழியேக் காற்று நுழையும் போது ஓசை உண்டாவதை அறிந்த ஆயர்கள் மூங்கில்களை வெட்டி எடுத்து தாமே தீக்கட்டையால் துளைத்து பல துளைகளையிட்டு ஊதி பல்வேறு வகையான இசைகளை உண்டாக்கி மகிழ்ந்தனர்.

“யொன்றம ருடுக்கைக் கூழா ரிடையன் 
கன்றமர் நிரையொடு கானத் தல்கி 
யந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச்
செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலி” 17
         
என்ற பாடல் வரிகள் முல்லை நிலத்துக் குடிமக்களான ஆயர்கள் புல்லாங்குழலைச் செய்யும் போது முதலில் தீக்கோலைக் கடைந்து தீ உண்டாக்கி அக்கொள்ளியால் மூங்கில் குழாய்களில் துளையை உண்டாக்கி அதனை ஊதி இனிய ஓசையை எழுப்பினான் என்று கூறுவதன் மூலம் புல்லாங்குழல் உருவான வரலாற்றை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

கொம்பு
         
விலங்குகளின் கொம்பினால் செய்யப்படுவதால் இந்நிகழ்கலைக் கருவி ஊது கொம்பு என்றும் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் ஆவினத்தின் கொம்புகளால் செய்யப்பட்ட இக்கருவியானது இக்காலத்தில் உலோகத்தால் செய்யப்படுகிறது.

நரம்புக் கருவிகள்
         
நரம்புக் கருவிகளில் நரம்புகள் இருக்கும். அவற்றை அதிர்வடையச் செய்து சீரான ஒலியை உண்டாக்கி மனித மனதிற்கு நன்மையைப் பயப்பன நரம்புக் கருவிகள் ஆகும். தமிழர்களது சிறப்பு வாய்ந்த நரம்புக் கருவியாக யாழ் விளங்கி உள்ளது. யாழும் அதன் வகைகளும் சங்க இலக்கியத்தில் பரவலாகப் பேசப்படுகின்றன. இசைக் கருவிகளின் உயர்ச்சிக்குக் காரணம் ஆதி கருவியாகிய யாழே ஆகும். இது யாளி என்ற விலங்கின் தலையைப் போல் செய்யப்பட்டதால் யாழ் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இக்கருவியின் அடுத்த வளர்ச்சியாக வீணை உருவாகியுள்ளது. வீணையின் பரிணாம வளார்ச்சியே இன்றைய இசைக் கருவியான கிட்டார்.
  வேட்டைச் சமூகத்தின் பயன்பாட்டில் இருந்த வில்லின் முறுக்கேறிய நாணிலிருந்து அம்பு செல்லும் போது உண்டான ஓசையே யாழ் உருவாக்கத்தின் மூலம் ஆகும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது.
யாழின் உறுப்புகள்
      யாழ் நரம்பு, யாழ் முறுக்காணி, கோடு, திவவு, பத்தல், பச்சை, போர்வை, தோற்பலகை, உந்தி, வறுவாய் போன்றவை யாழின் முக்கிய உறுப்புகள் ஆகும். மானின் தடம் போன்று இருக்கும் பத்தல், விளக்கின் சுடர் போன்ற யாழின் தோல், அதனை இழுத்து தைத்த போர்வை, வளையில் வாழும் நண்டின் கண்கள் போன்ற பிரடை என்று அழைக்கப்படும் ஆணி, எட்டாம் நாள் பிறையைப் போன்றத் தோற்றத்தையுடைய வறுவாய், பாம்பு படம் போன்ற தண்டு, பெண்களின் கையில் உள்ள வளையல்கள் போன்ற வார்கட்டு, நரம்புகள் முடைக்கப்படும் இடமான திவவு ஆகியவற்றைப் படம் பிடித்துக்காட்டுகிறது பின் வரும் பாடல்.

“குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் 
விளக்கழ லுருவின் விசியுரு பச்சை
யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் 
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்
கேள்வி போகிய நீள்விசித் தொடையன்”18
வில்யாழ்
         
குமிழ மரத்தின் உட்புறக் கூடாகியக் கொம்பில் மரத்தின் நாரை வளைத்துக் கட்டி வில்யாழ் செய்யப்பட்டுள்ளது.

“னின்றீம் பாலை முனையிற் குமிழின் 
புழற்கேட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின் 
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்”19
         
இப்பாடல் வரிகள் குமிழமரத்தின் துளையுள்ள கொம்பில் தானே தயாரித்த நரம்பினை வில் போல் கொம்பு வளைய இழுத்துக் கட்டி அந்த யாழில் குறிஞ்சிப் பண்ணை மீட்ட அந்த இசையைக் கேட்ட வண்டுகள் தம் இனத்தின் ஒலியாகக் கருதிக் கேட்கும் என்பதிலிருந்து வில்யாழ் உருவாக்கப்படும் விதத்தை அறிந்துக் கொள்ள முடிகிறது.

பேரியாழ்
         
வில்யாழைப் போன்று உருவத்தில் பெரியதாக அமைந்ததால் இது பேரியாழ் எனப்பட்டது. இதில் இருபத்தொரு நரம்புகள் இடம் பெற்று இருக்கும். இது சங்க காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு இசைக்கருவியாகும்.

“விடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபிற் கைதொழுப்உப் பழிச்சி”20
         
என்ற பாடலில் ஒரு பாணன் மற்றொரு பாணனைப் பார்த்து உன் இடது பக்கத்தில் உள்ள பேரியாழை இசைக்கும் முன் நம் முன்னோரின் தெய்வமான யாழ்தெய்வத்தை உன் கைகளால் தொழுது நாவினால் வாழ்த்தி வணங்கியப் பின் யாழினை மீட்டு என்று கூறுவதில் இருந்து பேரியாழின் முதன்மையை உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

சீறியாழ்
         
வில்யாழ்க்கும், பேரியாழ்க்கும் இடைப்பட்ட அமைப்பில் இருந்ததால் இது சீறியாழ் என்று அழைக்கப்டுக்கிறது. இது ஏழு நரம்புகளைக் கொண்டது.

“தெறரல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ்; 
நரம்பு இசைத்தன்ன இன்குரல் குருகின்”21
எனப் பாணர்கள் சீறியாழ் இசைத்துக் கடவுளரை வணங்கியது நற்றிணையில் காட்டப்பட்டுள்ளது.

“மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் 
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்”22
         
மேற்கண்ட பாடல் வழியாகப் பொற்கம்பியினைப் போன்ற முறுக்குக் கொண்ட நரம்பினைக் கொண்டச் சீறியாழை இடப்பக்கத்தே தழுவி நட்டபாடை என்ற பண் இசைத்த செய்தியை அறிந்துக் கொள்ள முடிகிறது. பொதுவாக நிகழ்;த்துக் கலைஞர்கள் யாழினை தனது இடப்பக்கதில் தழுவிக் கொண்டு வலது கரத்தால் அதன் நரம்புகளை அதிரச் செய்து இசையை நிகழ்த்தியதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

கஞ்சக் கருவிகள்
         
இசைக்கருவி வகைகளுள் ஒன்று கஞ்சக்கருவி. இக்கருவிகள் உலோகத்தால் செய்யப்படுபவை ஆகும். இவை பெரும்பாலும் வெண்கலத்தால் செய்யப்படுகின்றன. தாளம், பாண்டில், மணி போன்றக் கருவிகள் இப்பிரிவில் அடங்கும். பாண்டில் வட்டமான தட்டுக்களால் ஆன இசைக்கருவி வெண்கலத்தால் செய்யப்படுவது. இக்கருவி மலைபடுகாடமில் இடம்பெற்றுள்ளது.

“நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்”23
         
என்று உருக்கித் தட்டாகத் தட்டப்பட்ட பாண்டில் இசைக்கருவி அக்காலத்தில்  பயன்பாட்டில் இருந்துள்ளமையைக் காட்டுகிறது. இக்கருவி இக்காலத்தில் ஜால்ரா என்று அழைக்கப்படுகிறது.

முடிவுரை
         
சங்க காலத்தமிழர்கள் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நன்கு உற்று நோக்கி அது எதனால் நடக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வதில் வல்லவராக இருந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே குழல், பறை, முழவு, பாண்டில் போன்ற பல நிகழ்கலைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். தமிழர்கள் தாம் நிகழ்த்தும் கலைகளுக்கு ஏற்றப் படியான நிகழ்த்துக் கலைக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். நிகழ்த்துக் கலைஞர்கள் தாம் இசைத்த இசைக் கருவியின் பெயராலேயே அழைக்கப்பட்டுள்ளனர். தாம் நிகழ்த்தும் கலைகளுக்கு ஏற்றபடிப்யான நிகழ்க்கலைக் கருவிகளை உருவாக்கவும், அவற்றை இசைக்கவும் நன்கு கைத்தேர்ந்த வல்லுநர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை அறிந்துக்கொள்ளமுடிகிறது.
          ஒரு நிகழக்கலைக் கருவியை அடிப்படையாகக் கொண்டு அதில் பல வகையான நிகழ்க்கலைக் கருவிகளை உருவாக்கவும், அதன் முக்கிய உறுப்புக்களையும் அதன் அமைப்பைப் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டு அவற்றில் ஏற்படும் பழுதுகளையும் தாமே நீக்கவும் அறிந்து வைத்திருந்தனர் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

சான்றெண் விளக்கம்.
1.நா.வானமாமலை, கலைகளின் தோற்றம், பக்கம், 92.

2.புறநானூறு, பாடல் எண், 335.

3.க.கைலாசபதி, தமிழ் வீரநிலைக் கவிதை, பக்கம், 60.

4.மதுரைக் காஞ்சி, அடிகள், 340 – 342.

5.சிலப்பதிகாரம், அரங்கேற்றுக் காதை, அடிகள், 139 – 142;.

6.வடமலை நிகண்டு, பாடல் எண், 222.

7.சூடாமணி நிகண்டு, 11வது தொகுதி, பக்கம், 5.

8.மு.வளர்மதி, மனிதசமூக கலை அறிவியலின் மூலாதாரம், பக்கம், 112.

9.இரா.இளங்குமரன், பாணர், பக்கம், 38.

10.மலைபடகடாம் அடிகள், 321 – 322.

11.மதுரைக் காஞ்சி, அடிகள், 732 – 733.

12.பொருநராற்றுப்படை, அடிகள், 109 – 110.

13.மலைபடுகடாம், அடி, 511.

14.மேலது, அடிகள், 349 – 350.

15.தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்(ப.ஆ), தமிழ்க்கோயில்கள் தமிழர் பண்பாடு, ப.125.

16.பொருநராற்றுப்படை, அடிகள், 69 – 72.

17.பெரும்பாணாற்றுப்படை, அடிகள், 175 – 179.

18.பொருநராற்றுப்படை, அடிகள், 4 – 18. 

19.பெரும்பாணாற்றுப்படை, அடிகள், 180 – 184.

20.மேலது, அடிகள், 463 – 464.

21.நற்றிணை, பாடல் எண், 189.

22.மலைபடுகடாம், அடிகள், 534 – 535.

23.மேலது, அடி, 4.

துணைநூற்பட்டியல்

1.சங்கஇலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம். – நியூசெஞ்சுவரி புக்ஹவுஸ்(பி)லிட், அம்பத்தூர்,சென்னை – 600 050.

2.பாணர் –  புலவர் இரா.இளங்குமரன், மணிவாசகர் பதிப்பகம்,தாம்பரம்.

3.தமிழ் வீரநிலைக் கவிதை – க.கைலாசபதி, குமரன் புத்தக இல்லம், சென்னை.

4.தமிழ்க் கோயில்கள் தமிழர் பண்பாடு – தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்,  கௌரா பதிப்புக் குழுமம், சென்னை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.அன்பரசன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்),
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, 
திருவண்ணாமலை – 606 603,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,

வேலூர் – 632 115.


 

அ.அன்பரசன்,
உதவிப்பேராசிரியர்,

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி,

திருவண்ணாமலை – 606 603.

நெறியாளர்

முனைவர் மு.பாலமுருகன்,
இணைப்பேராசிரியர், ஆய்வுநெறியாளர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, 
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603.

The post SANGA ILAKKIYATHIL NIGAZHTHU KALAI KARUVIKAL| A.ANBARASAN appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

Velli Veethiyar Padalkalil Pen Mozhiyum Punaivum|Dr.A.Kohila

Abstract
               
The writings of the feminists are primarily recorded by the people’s life. They have recorded their inner self through their works. He was born in Madurai. His songs are cantered on his own experiences. He followed the songs of the Sangha literary traditions.


வெள்ளி வீதியார் பாடல்களில் பெண்மொழியும் புனைவும்         

பெண்படைப்பாளிகளின் எழுத்துக்கள் மக்கள் வாழ்வியலை முதன்மையாகக் கொண்டவை. தனது படைப்புகள் வழியாக தன் அகஉணர்வுகளை சுயம் இழக்காமல் பதிவு செய்தனர்.பிரிவாற்றாமையால் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளைத் தனக்கே உரிய பெண் மொழியடன் புனைந்தார் வெள்ளிவீதியார் என்பதை எடுத்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது இவ்வாய்வு.
         
மதுரையில் வெள்ளிவீதியார் பிறந்தார்.இவரின் பாடல்கள் தன் சொந்த அனுபவங்களை மையமிட்டே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. சங்க இலக்கிய மரபுகளைப் பின்பற்றியே பாடல்களை உருவேற்றினார்.தனிபட்ட ஆண் பெண் இருவரிடையே உள்ள காதல் உணர்வினை மறைத்துத் தலைவன் தலைவி பெயர்களைக் கூறுவதைத் தவிர்த்தார். இயற்கையைத் தனிப் பொருளாகக்கொண்டு மானிட உணர்வுகளைப் பதிவு செய்வதை நோக்கமாக் கொண்டார்.
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப்பிறர் முன்னர் 
கல்லாமைகாட்டியவள்-வாழி சான்றீர்”1
         
என்ற கூற்றிற்கிணங்க வெள்ளிவீதியார் புலமைப் பெற்றிருந்தார்.இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலிய உணர்வுகளைக் கூறாமல் தலைவனும் பாங்கனும் காதல் பொருளாக நிகழ்த்தும் பாடல் ஒன்றினை மட்டும் வெள்ளிவீதியார் பாடியிருக்கிறார்.காமம் செப்பல் ஆண்மகற்கமையும் என்பது ஆண்பாற் புலவர்களுக்குப் பொருத்தமாவது போல் பெண்பாற் புலவர்கள் பாடல்களுக்கு பொருத்தமாக அமையவில்லை.அதே போல் பெண்பாற் புலவர்கள் பாடல்களில்  இளமை நலம் பயவாமல் இருப்பது தாங்கொணாத் துயர நிலையாகவேப் பதிவு செய்திருப்பதைக் காணமுடிகிறது.இந்நிலையை ஆண்பாற்புலவர் பாடல்களில் காண முடியவில்லை.

“வெண்மணல் விரிந்த வீததை கானல்”2
“இலங்கு வெள் அருவி போல”3               
“தண்டுடைக் கையர் வெண்தலை சிதவலர்”4
“வான்கரும்பின் ஓங்கு மணற் சிறுசிறை”5
“சிறு வெள்ளாங்குறுகே சிறுவெள்ளாங்குறுகே”6
என வெள்ளிவீதியார் வெண்மை என்ற சொல்லாடல் மீது பற்றுக் கொண்டவராக வெள்ளிய மணல் பரந்த கடற்கரை வெண்மைத்தலையினை உடைய தலைவன் என பதிவு செய்திருப்பதின் வழி தன் பெயரை ஒவ்வொருப்பாடலிலும்  பதிவு செய்யவேண்டும் என்பதில் தனித்துவம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
இவரது பாடல்கள் பிரிவாற்றாமையை முதன்மையாக கொண்டிருக்கின்றன. இவர் செய்யுட்கள் சோக கீதங்கள் எனக் கூறத்தகுந்தவை. இவர் தம் பாடல்கள் இகத்துறை தழுவியவை. இவர் பாடல்களில் ஒன்பது தலைவிக் கூற்றாகவும் மூன்று தோழிக் கூற்றாகவும் ஒன்று செவிலித்தாய் கூற்றாகவும்  ஒன்று மட்டும் தலைவன் கூற்றாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
          கற்பு நெறி பிறழாமை தலைவியின் அவல நிலை காமம் மிக்க கழிபடர்கிளவி முதலானவையே பாடலின் பொருண்மைகளாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர்க் காட்சிகற்புச் சிறந்தன்று”7
எனத் தலைவிக்கூற்றுரைக்கு ம் போது தலைவிக்கு நாணும் கற்பும் கடவாமை வேண்டும் என்கிறார்.

“நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முன்னீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின்ஊரின்
குடிமுறை  குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம்காதலரே”8
         
என பெரும்பாலும் தலைவிக் கூற்றினையே  தன்மைப்படுத்தியிருக்கிறார். காதலனைத் தேடிப் பிரிந்த துயரத்தைப் பின்வருமாறுப் பதிவு செய்கிறார்.

“காலேப் பரிதப்பினவே கண்ணே நோக்கி
நோக்கி வாள் இழந்தனவே”9
“வெண்தேர்தாதின் புன்னையோடு கமழும்
பல் கானல் பகற்குறி வந்து நம்
மெய்கவின் சிதையப்பெயர்ந்தமை”10
         
என்று தன் தோழியிடம் தன்  காதலைக்கூறுகிறாள்.மற்றொருப்பாடலில் தலைவியின் மனநிலையைக் கீழ்க்கண்டவாறு பதிவு  செய்கிறார். கடல் ஒலிக்கின்றது. கடல்நீர் பொங்கிக் கரையை உடைக்கின்றது. தாழையும் பெயர்ந்து நறுமணம் வீசுகின்றது. பறவைகள் கூக்குரலிடுகின்றன. அத்தருணத்தில் காதலன் தன்னுடன் இல்லையே என புலம்புவதாக அமைந்துள்ளது.

“ஓங்கு மணற்சிறுசிறை
தீம்புனல் தெரிதர வீந்து உக்காஅங்கு
தாங்கும் அளவைத்தாங்கி
காமம் தெரிதரக் கைநில்லாதே”11
                   
என பசலையால் உண்ட அழகினையும்

“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்த உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது”12         
என தலைவியின் புலம்பலையும் காம உணர்வினையும் கூறுகிறார்.இதே கருத்தினை ஔவையார் உடன்போக்கில் சென்ற தலைவியின் காதல்உணர்வினை வெள்ளிவீதியாரைத் தழுவி

“உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின்எம் அளவைத்தன்றே வருத்தி
வான்றோய்வற்றே காமம்
சான்றோ ரல்லர் யாம் மரீஇயோரே”13         
இவ்வகையில் தலைவியின் களவையும் கற்பையும் பேசுவதில் இருவரும் ஒன்றுப்படுவதைக்காணமுடிகிறது.இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 13. களவிற்கு உரியன 5 கற்பிற்கு உரியன 8. இவரின் மாந்தர்கள் களவினராயினும் கற்பினராயினும் காதல் உணர்வு கொண்டவர்கள்.பாடும் புலவர்க்குப் பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் உணர்வு அகத்திணை இலக்கியத்தில் இல்லை.இதனை மாற்றும் விதமாக  வெள்ளிவீதியார் செயல்பட்டிருப்பதைக்காண முடிகிறது.இவர் பாடிய பாடல் அகத்தைத் தழுவி எழுதப்பட்டனஎன்பதைப் பின்வருமாறு அறியலாம்.

“மகளீர் தழுவிய துணற்மையானும்
மள்ளர் குழீஇய  விழவி னானும்”14
         
என்ற ஆதிமந்தியின் அகப்பாடலை ஒத்து தம் பாடலைப் பாடி  இருக்கிறார்.உடன்போக்கு பொருள்வயிற்பிரிவு ஆகியவையும் தன் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறார்.இவர் கற்பு நெறியின் போக்குகள் அகத்தை சார்ந்தவையாகவே  அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.களவு நெறியின் பண்புகள் குறித்து  அதிகம் பேசி இருப்பதைக் காணமுடிகிறது.பிறக்கூறுகளை குறிப்பாக தொன்மத்தைத் தன் பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைப் பின்வருமாறு உணரலாம்.

“————————- யானே 
காதலர் கெடுத்த சிறுமையோடு   நோய்கூர்ந்து
ஆதிமந்திபோல பேதுற்று”15
         
தன் அனுபவத்தை வெளிக்கொணரத் தொன்மத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.

தொகுப்பாக
Ö பிரிவாற்றாமையை  மையமாகக் கொண்டு பாடல்களை எழுதினமை.

Ö சுய உணர்வு குறிப்புகளாக பாடல்களை உருவாக்கியமை.

Ö இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டு களவுநெறி கற்பு நெறி வாயிலாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தியமை.

Ö வெள்ளிவீதியார் என்ற பெண் மொழியின் புனைவுகள் அடிப்படையின் வாழ்வின் உணர்வு பிம்பங்களே என்பதை அறிய முடிந்தமை.

துணை நூல்கள்
1.நெய்தற்கலி.24

2.குறுந்தொகை.386

3.அகநானூறு.362

4. குறுந்தொகை.146

5. குறுந்தொகை.149

6.நற்றிணை.70

7.தொல்காப்பியம் இளம் உரை

8.குறுந்தொகை.130

9. குறுந்தொகை.42

10.நற்றிணை பாடல்

11.குறுந்தொகை.149

12.குறுந்தொகை.44

13.ஔவையார் பாடல்

14.ஆதிமந்திப்பாடல்

15.அகநானூறு.45

 
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ கோகிலா,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,


சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,

மாதனாங்குப்பம், சென்னை – 600 099.

 

The post Velli Veethiyar Padalkalil Pen Mozhiyum Punaivum|Dr.A.Kohila appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

Kurunthogaiyil Mullai Malar|Dr.N.Anitha|A.Prabakaran 

Abstract

         The Tamil people’s relationship with nature has been both intimate and enduring, shaping their cultural, emotional, and literary sensibilities since ancient times. Rooted in an ecosystem that provided essential needs such as food, clothing, and shelter, this connection fostered a tradition of deep reverence for the natural world. Tamil classical literature, beginning with the Tolkappiyam, reflects this bond through its unique classification of landscapes in Agam and Puram poetry, often symbolized by specific flowers, which marks a distinctive feature of Tamil poetics. Among these, the Mullai flower holds particular significance in Akam poetry, where it represents the rainy season, fidelity, and romantic longing. The flower serves not merely as a decorative element but as a literary device that evokes emotions of love, separation, and the passage of time. Both the hero and the heroine perceive the blooming and fragrance of Mullai as metaphors for emotional states and seasonal transitions. This study examines the representation of the Mullai flower in Kurunthogai, illustrating how its natural attributes are closely integrated into the emotional and cultural life of the Tamil people, while emphasizing its lasting literary and symbolic importance.


Key words: Kurunthogai, Mullai malar, Season, Blooming, Emotional status


“குறுந்தொகையில் முல்லை மலர்

ஆய்வுச் சுருக்கம்

       பண்டைய காலத்திலிருந்து தமிழர் வாழ்வியல் இயற்கையோடு நெருங்கிப் பொருந்தியதாகும். மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பவை இயற்கையோடு சார்ந்து அமைய, அதன் மீது அன்பும் மரியாதையும் செலுத்தியது தமிழரது வாழ்வியல் மரபாகும். தமிழில் கிடைத்த முதல் நூலான தொல்காப்பியமும் , அகத்திணை  மற்றும் புறத்திணை பெயர்களில் மலர்களின் பெயர்களைக் கொண்டு அடையாளப்படுத்தி இருப்பது  தமிழின் தனித்துவமான பண்பாகும். சங்க இலக்கியங்களிலும் மலர்கள் பற்றிய செய்திகள் விரவி காணப்படுகிறது. அவ்வகையில் அக இலக்கியமாக விளங்கும்  குறுந்தொகையில்  கார்காலத்துடனும் காதல் வாழ்வுடனும் பின்னிப் பிணைந்துள்ளது  முல்லை மலர்.
முல்லை மலர் கற்பின் அடையாளமாகவும், காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் உவமைகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கார்காலம் வந்ததையும், காதல் துயரங்களையும், நினைவுகளையும் இம்மலர் பிரதிபலிக்கிறது. தலைவனும், தலைவியும் முல்லை மலரின் அரும்புதலையும், மணம்தூற்றலையும் உணர்ச்சிப் பரிமாற்றமாகவும், காலச் சுழற்சிக்கான அடையாளமாகவும் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாய்வு, குறுந்தொகையில் முல்லை மலரின் இயற்கை பண்பும், அதன் வழியாக தமிழரது அக வாழ்வியலும் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஆய்ந்து, அதன் இலக்கிய முக்கியத்துவத்தையும் வாழ்வியல் ஒத்திசைவையும் விளக்குகிறது.


திறவுச் சொற்கள் : குறுந்தொகை , முல்லை மலர் , காலமும் பொழுதும் , அரும்புதல் , மன உணர்வுகள்


முன்னுரை

     நூற்றாண்டுகள் பல கடந்தும், சுவடியிலிருந்து கணினி வரை வளர்ச்சியடைந்தும், கவிதையின் வடிவங்களில் மாற்றங்கள் இருப்பினும், பொருண்மைகளில் சில உவமைகள் இன்றும் மாறவில்லை. பெண்ணை வர்ணிக்கும் போதெல்லாம், மலர்களோடு உவமிப்பது இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அவ்வகையில் சங்க இலக்கிய குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது. அவற்றில் ஒன்றான முல்லை மலர் இன்றும் பெண்கள் விரும்பி சூடும் மலராக உள்ளது. அம்முல்லை மலர் சங்ககால அக வாழ்வில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றது.
சங்க கால மக்கள் நிலங்களை ஐந்திணைகளாகப் பிரித்து வாழ்ந்து வந்தனர் காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லைத் திணையாகக் கூறப்பட்டது. முல்லைத் திணையின் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுதைக் குறிப்பிடும் போது ‘காரும் மாலையும் முல்லை’ (தொல்காப்பியம்.பொருளதிகாரம்:6) என்கிறது தொல்காப்பியம். இது திணைக்கு வகுக்கப்பட்டதாயினும்   முல்லை மலர், மலரும் காலமும் பொழுதும் அவையே ஆகும்.  இதனை ‘கார்நயந்து எய்தும் முல்லை’  (ஐங்குறுநூறு: 454) என்பதிலிருந்து அறியலாம்.


       சங்கப்பாடல்களைப் படிக்கும் போது முல்லை மலர் கற்பு காலத்தில் தலைவன் உடன் இருக்கும் போது சூடும் மலராக இருப்பதைக் காணமுடிகிறது. கார்காலத்தைத் தலைவனுக்கு அறிவித்து தலைவியினை நினைவுப்படுத்தும் மலராகவும், தலைவிக்கு தலைவன் வருகையை எதிர்நோக்கச்  செய்யும் மலராகவும் உள்ளது. முல்லை மலர் பற்றி டாக்டர் சி. பாலசுப்ரமணியன் தம்நூலில்,


முல்லைப்பூ வெண்மை நிறமும், நறுமணமும் நிறைந்த பூவாகும். மேலை நாட்டு இலக்கியங்களில் ‘லில்லி’ (lily) மலர் பெறும் சிறப்பினும்  மேலாக ஒருபடி தமிழ் இலக்கியங்களில் முல்லை மலர் பெற்று விளங்குகின்றது. கற்பின் சிறப்பினை விளக்கி முல்லைப்பூ சிறந்து நிற்கின்றது.(டாக்டர் சி. பாலசுப்ரணியன், மலர் காட்டும் வாழ்க்கை, ப. 4)

       என்று கூறுகிறார்.
கற்பு வாழ்க்கை மேற்கொண்டு தலைனுடன் இருக்கும் பெண்களே முல்லை மலரைச் சூடியுள்ளனர் (குறுந்தொகை :19). தலைவனும் மணம்புரிந்த போது முல்லை மலர் சூடியிருந்தப் பதிவையும் காணமுடிகிறது (குறுந்தொகை :193). சங்க இலக்கிய குறுந்தொகையுள் முல்லை மலர் பற்றிய பதிவுகளை ஆராய்ந்து அகவாழ்வில் முல்லைமலரின் நிலைக்களனும் உவமை நலனும் பற்றி விளக்குவதே இவ்வாய்வு ஆகும்.


இலக்கியங்களில் முல்லை மலர்

       வெண்மை நிறம் கொண்ட முல்லை மலர் கொடிப்பூ வகையைச் சேர்ந்தது. அதன் இதழ்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் பொருந்தி முருக்கி வைத்தாற் போன்றும், கூர்மையான முனை கொண்டு இருக்கும். இதனை ‘புரிநெகிழ்  முல்லை’ (கலித்தொகை:61) என்றும்  ‘முல்லை வைநுனை’ (அகநானூறு:4) என்றும் பாடப்பட்டுள்ளதால் அறிய முடிகிறது. சிறிய வடிவம் கொண்டு நறுமணம் மிக உடையது என்பது, ‘சிறுவீ முல்லை பெரிதுகமழ் அலரி’ (நற்றினை :361) என்ற வரிகளில் புலனாகும். நறுமணம் மிக்க முல்லை மலர் வழிபாட்டு மலராகவும் உள்ளது இதனை,


—– —- ——நெல்லொடு

நாழிகொண்ட நறுவீ முல்லை

அரும்பவிழ் அலரிதூஉய்க்கை தொழுது’   (முல்லைப்பாட்டு 8- 10)

         என்ற பாடலடிகள் சித்தரிக்கும். மேலும் புறநானூற்று பாடல்களில் முல்லையின் பெயரில் பயின்று வரும் புறத்துறைகள் அகத்திணையிலுள்ள முல்லைப் பாடல்களுடன் நெருங்கிய ஒற்றுமையுடன் காணப்படுகிறது என்பதை,


அகப்பொருளில் முல்லை மணத்தில் முடிந்தது. கற்பின் குறியீடாகி  இல்லறம் போற்றப்பட்டது. வாழ்வு பெருமையுற்றது. அகவாழ்வின் பெருமைக்குக் காரணமான முல்லையின் பண்புகள் மக்கள் மனதில் ஆழவேரூன்ற அதன் காரணமாகப் புறத்திணையுள்ளும் முல்லைப் பெயரில் துறைகள் அமைக்கப்பட்டன என்று சொல்லுதலே பொருத்தமாகும்.   (வி.சி. சசிவல்லி, முல்லை, பக்: 30,31)

       மேற்கண்ட கூற்றின் வழி அறிய முடிகிறது. நிலத்தையும், ஒழுக்கத்தையும் குறிக்கும் முல்லை மலர்  குறுந்தொகையில் 14 இடங்களில் பல்வேறு வர்ணனைகள்,  உவமை நலம் ஏற்று கற்பு வாழ்வினை  நம் கண்முன் நிறுத்துகின்றது.

நகைக்கும் முல்லை
     

         கார்காலத்தில் பூக்கும் மலரான முல்லை, கொடியில் அரும்பு தோன்றும் காட்சி கார்காலத்தின் வரவை அறிவிப்பது மட்டுமல்லாமல், கார்காலமே முல்லை அரும்பாகிய பற்களைக் கொண்டு சிரிப்பது போன்று இருப்பதாக,


– –    – –    பூங்கொடி முல்லைத்

தொகு முகை இலங்கு எயிறு ஆக

நகுமே தோழி! நறுந்தண் காரே       (குறுந்தொகை:126)       

     என்று தலைவி தோழியிடம் தலைவன் காலம் நீட்டித்த நிலையில் கூறுகின்றாள். இதேப்போல் குறுந்தொகை 186-வது பாடலிலும் தலைவன் வாராமையால் தனித்திருக்கும் தலைவி தன்னை நோக்கி முல்லை நகுவதாகத் தோழியிடம் கூறுகின்றாள்.
கார்காலத்தில் முல்லை அரும்புதல் முல்லையின் முறுவலாய் தலைவனுக்குத் தோன்றுகிறது. தலைவன் கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடலில்,


– –    – –    – –    – –    – –   

முல்லை! வாழியோ, முல்லை! – நீநின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை;

நகுவை போலக் காட்டல்

தகுமோ ,  மற்று – இது தமியோர் மாட்டே? (குறுந்தொகை :162)

      என்று தன்னைப் பேணும் மகளிர்க்குப் பற்றுக்கோடாக இல்லாதவரைப் பார்த்து முல்லை எள்ளி நகையாடுவதாகக் கூறுகின்றான்.
இப்பாடல்களில் தலைவனும் தலைவியும் இயற்கையாகக் கார்காலத்தில் முல்லை அரும்புவதைக் கண்டு, தங்களைப் பார்த்து நகைப்பதாக முல்லை மலரைக் கூறுவது  நம் ரசனைக்கு விருந்தாகிறது.
முல்லை மலர் கார்காலத்தில் பூக்கும் காட்சியைக் காட்டுப் பூனை தன் பற்களைக் காட்டிச் சிரிப்பதுப் போன்று இருப்பதாகக் குறுந்தொகையின் இரண்டு பாடல்களில் பாடப்பட்டுள்ளது. பல நாட்கள் பெய்த மழையினால் பூத்த மெல்லிய சிறிய அரும்புகள், காட்டுப் பூனை சிரித்தாற்போலக் காட்சியளிக்கும். (குறுந்தொகை: 220)


– –    – –    ஒளிவிடு  பல்மலர்

வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி (குறுந்தொகை:240)

      இப்பாடலில் முல்லைப்பூ வெருகுப்பூனையின் பற்களைப் போல் தோன்றி, சிரித்து அச்சுறுத்துவதாய் இருக்கின்றது என்கிறாள் தலைவி.


பருவம் உணர்த்தும் முல்லை

       கார்காலத்தின் மாலைப் பொழுதுகளில் மலரும் மலர் முல்லை. அவ்வாறு முல்லை அரும்புவதும், போதாய் மலர்வதும் என ஒவ்வொரு நிலையும் கார்காலத்தின் வருகையையும், முதிர்வையும் உணர்த்தும் அடையாளமாய் பாடல்களில் காணப்படுகிறது. அவ்வகையில்


– –    – –     – –   புறவில்

பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச்

செல்வான் செவ்வி கொண்டன்று.

உய்யேன் போல்வல் தோழியானே         (குறுந்தொகை:108)
         

       இப்பாடலில் முல்லையின் வெண்ணிற மலர்கள் விண்மீன்களாகவும், செம்புலம், செக்கர் வானமாகவும் தோன்றி, எல்லாம் கார்ப்பருவத்தின் காட்சியாகவே தனக்குத் தெரிவதாகத் தலைவி நினைக்கின்றாள். இவ்வாறே சூடப்பெறாத முல்லை துன்பத்திற்கு ஏதுவாயிற்று என்றும், தலைவனைப் பிரிந்த தலைவிக்கு எல்லாப் பொழுதும் மாலைப் பொழுதாகவேத் தோன்றியது என்றும் புலவர் பாடுகின்றனர் (குறுந்தொகை:234) மேலும் கோவலர் அணிந்து வந்த கண்ணியில் (மாலையில்) உள்ள முல்லை மலர்கள் கார்கால வருகையை உணர்த்தி நிற்கின்றது (குறுந்தொகை:358)


மணம் வீசும் முல்லை
         

      முல்லை மலரின் நறுமணமானது நினைவூட்டும் இடங்களைப் பற்றி குறுந்தொகையில் நான்கு பாடல்களில் பேசப்படுகின்றன. தலைவி ஊடல் கொண்ட இடத்து தலைவன் தன் நெஞ்சிடம், வீட்டில் வளர்க்கப்படும் முல்லைக் கொடியானது மனையின் மரத்தின் மேல் மலர்ந்து நாற்றம் வீசும். ஆனால் பயனற்று இருக்கும். அதுபோல தலைவியின் கூந்தலும் முல்லை மலரின் நாற்றம் வீசும், அது தன்னால் நுகரப்படாமல் அழகு பயனற்றுப் போகிறது என்று தலைவன் கூறுவதாகப் பரணர் பாடலில் (குறுந்தொகை:19) உள்ளது. இதேப்போல் தலைவிக் கூற்றாக அமைந்த அரிசில் கிழார் பாடல்,


மணந்தனன்மன் எம்  தோளே;

இன்றும், முல்லை முகை நாறும்மே           (குறுந்தொகை:193)

       என்று தலைவன் சென்ற திங்களில் தலைவியை மணந்தானாயினும் அவன் சூடிவந்த முல்லையின் மணம் இன்றும் தன் தோள்களில் வீசுவதாகத் தலைவி கூறுதல், தலைவனின் அன்பு மாறாப் பண்பினை விளக்குவதாக உள்ளது.
மேலும் கார்காலத்தில் முல்லை மலர்ந்து மணம் பரப்பிய போது, வினைமுற்றி மீளும் தலைவனுக்கும் முல்லையின் மணம் வீசும் நுதலுடைய தலைவியின் நினைவும் (குறுந்தொகை: 323); தலைவிக்கு முல்லை மலர்ந்து மணம் வீச தலைவன் வாராமையால் இது கார்பருவம் தானா என்ற ஐயமும் எழுகின்றது (குறுந்தொகை: 382). இவ்வாறு தலைவிக்கும் தலைவனுக்கும் முல்லை மலர் மலர்ந்து மணம் வீசி ஓருவரை ஒருவர் நினைவூட்டுவதாகக் கூறப்பட்டுள்ளமைக் கற்பு வாழ்வில் முல்லை பெறும் இடத்தை எண்ணத்தோன்றுகிறது.


முல்லையில் மலர்ந்த உவமை

      தலைவியின் மேனி நலனும் மென்மை தன்மையும் மலர்களுடன் ஒப்பிடுவது மரபாய் நிற்கின்றது. அவ்வகையில் ‘எதிர்முகைப் பசுவீ முல்லை’ (குறுந்தொகை: 62) என்று தலைவயின் மேனி தளிரைக் காட்டிலும் மென்மையும், நிறமும் உடையது என்கிறான், மற்றமொரு பாடலில் தலைவன் தன் நெஞ்சிற்கு, செலவுக் குறிப்பு அறிந்து தலைவியின் வேறுபட்ட நலனைக் கூறும் போது,


புலம் தேர் யானைக் கொட்டிடை ஒழிந்த

சிறவீ முல்லைக் கொம்பின் தாஅய்,

இகழ் அழிந்து ஊறும் கண்பனி . . .          (குறுந்தொகை: 348)

        என்ற பாடலில் யானையின் கொம்புகளுக்கு இடையே அதனால் உண்ணப்பெற்று எஞ்சிய முல்லையின் கொடிகள் பின்னி, மலர்கள் உதிர்ந்து கிடத்தல், தலைவியின் அணிகள் அணிந்த மார்பில் கண்ணீர்த்துளிகள் உதிர்ந்து கிடந்தமைப் போன்றதாக உவமிக்கப்பட்டது. தலைவியின் அணிகலன் முல்லைக்கொடிக்கும், உதிர்ந்த மலர்கள் தலைவியின் மார்பில் உதிர்ந்த கண்ணீர்த் துளிகளுக்கும் உவமமாயின. இவ்வாறு முல்லை மலர் தலைவியின் மேனி நலனிற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.


முடிவுரை
         

      முல்லை மலர் கற்பின் அடையாளமாக உள்ளது. சூடும் மலையாக மட்டும் அல்லாமல் அக உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும், அடையாளச் சின்னமாகவும் உள்ளது. கார்காலத்தின் வரவை அறிவித்து அரும்பும் முல்லை மலர்; தலைவனையும் தலைவியையும் பார்த்து சிரிக்கும் முல்லை மலர்; காட்டுப்பூனையின் பற்கள் போன்று காட்சியளிக்கும் முல்லை மலர்; தன் மணம் பரப்பி தலைவிக்கும் தலைவனுக்கும் துணையை நினைவூட்டும் முல்லை மலர்; தலைவியின் மேனி நலனுக்கு உவமையாக்கப்பட்ட முல்லை மலர், என இவ்வாறு குறுந்தொகையுள் முல்லை மலர் கற்பு வாழ்வியலோடு இணைந்து இருப்பதை அறிய முடிகிறது. தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டமைக்கு முல்லை மலர் பற்றிய பதிவுகளும் சான்றாக அமைகின்றது. முல்லை மலர் சூடும் பொருளாக அழகு நலனக்காக மட்டுமல்லாமல் அழகியலைத் தாண்டி வாழ்வியலோடு இணைந்துள்ளது.


துணைநூற் பட்டியல்

1.கணேசையர், சி.(பதிப்பாசிரியர்.), தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினாக்கினியர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு.,2007.


2.சசிவல்லி,வி.சி.,முல்லை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு.,1998.


3.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்., கு. வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்)
ஐங்குறுநூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட்., சென்னை, மூன்றாம் அச்சு.,2007.


4.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்., கு. வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்)
கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம்  அச்சு.,2007.


5.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்., கு. வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்)
குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம் அச்சு.,2007.


6.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்.,கு.வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்),
நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம் அச்சு,2007.


7.பரிமணம்,அ.ம.பாலசுப்பிரமணியன்.,கு.வெ., (தலைமைப்பதிப்பாசிரியர்கள்),
பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, மூன்றாம் அச்சு ,2007.


8.பாலசுப்பிரமணியன்.,சி.,மலர் காட்டும் வாழ்க்கை, நறுமலர்ப்பதிப்பகம்., சென்னை, இரண்டாம் பதிப்பு .,1982.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்கள்

1.முனைவர் நா.அனிதா
 

உதவிப்பேராசிரியர் 

தமிழ்த்துறை
 

எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
 

திருச்சி-621105


2.ஆ.பிரபாகரன்

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை


நேரு தொழில் நுட்பக் கல்லூரி


கோயம்புத்தூர் – 641105.

 

The post Kurunthogaiyil Mullai Malar|Dr.N.Anitha|A.Prabakaran  appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

Sanga Illakkiyathil Udanpoku Suzhalgal|M.Mageswari

Abstract
      

       In Sangam literature, those who lived in natural settings and further, among the Sangam people who lived in harmony with nature, the land was classified into five regions, namely Kurinji (hilly), Mullai (forest), Marutham (agricultural), Neithal (coastal), and Palai (arid), and people lived accordingly. Among these people who lived in this way, the event of elopement is seen and known through Sangam poems. This research article aims to investigate how the setting of elopement is structured in Sangam literary works such as Narrinai, Kurunthokai, Agananuru, Kaliththokai, and Paripaadal, and to analyze the reasons for it.


“சங்க இலக்கியத்தில் உடன்போக்குச் சூழல்கள்”

முன்னுரை
                  

      சங்க இலக்கிய அகநூல்களில் இயற்கைச் சார்ந்த சூழலில் வாழ்ந்து வந்தனர். மேலும் இயற்கையோடு வாழ்ந்த சங்க மக்களிடையே ஐந்து நிலங்களாகப் பாகுபடுத்தி குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப் பிரித்துக்கொண்டு மக்கள் வாழ்ந்தனர். இவ்வாறு வாழ்ந்த மக்களிடையே உடன்போக்கு என்ற நிகழ்வு காணப்படுவதை சங்கப்பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. சங்க அக நூல்களான நற்றிணைஇ குறுந்தொகைஇ ஐங்குறுநூறுஇ அகநானூறுஇ கலித்தொகை போன்ற அகநூல்களில் உடன்போக்குச் சூழல் எவ்வாறு அமைகிறது அதற்கான காரணங்களை ஆராய்வதாக இக்க்ட்டுரை அமைந்துள்ளது.


சங்க இலக்கியம்
                  

     சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகையும்இ பத்துப்பாட்டு ஆகும். எட்டுத்தொகை அகநூல்களான நற்றிணைஇ குறுந்தொகைஇ ஐங்குறுநூறுஇ அகநானூறுஇ கலித்தொகை போன்ற நூல்களில் உடன்போக்கு செய்திகள் அறியமுடிகிறது. முதலில் வேட்டையாடிய சமூகமாக இருந்தது. பின்பு தாய்வழி சமூகமாக மாறியது. ஓர் இனத்துக்குள்ளாகவே மணம் செய்துகொள்ளும் முறை இருந்து வந்தது.   பின்பு நெய்தல் நிலத் தலைவி தன் தந்தையோடு குறிஞ்சி நிலத்திற்குச் செல்லும் போது அவளின் மீது தலைவன் காதல் கொள்கிறான.; களவு வாழ்க்கையை பெற்றோர் ஏற்றுக் கொண்டால் உறவினர் முன் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் உறவினருக்கும் பெற்றோருக்கும் தெரியாமல் உடன்போக்கு நிகழ்த்துவர்.


உடன்போக்கு
                  

       உடன்போக்கு என்பது மனம் ஒத்த தலைவனும்  தலைவியும் களவு வாழ்வில் இருந்து கற்பு வாழிவில் அடி எடுத்து வைக்கும் முதல் நிகழ்வாகும். இதில் தலைவன் தலைவியை பாலை நில வழியாக தன் ஊருக்கு அழைத்துச் செல்வான். இதனை உடன்போக்கு என்பர். உடன்போக்கு என்பதற்கு கொண்டுதலை கழிதலஇ;  கடைகொண்டு பெயர்தல்இ போகிய திறத்து உள்ளிட்ட வெவ்வேறு சொற்களை கையாண்டுள்ளனர். சங்க இலக்கியத்தில் உடன்போக்கு என்ற சொல்லிற்கு  குறிப்பில் உடன்போகாஇ கொண்டுதலை கழிதல்இ புணர்ந்துடன் போகா என்று குறிக்கப்படுகிறது.


சங்க இலக்கியத்தில் உடன்போக்குச் சூழல்கள் 
                  

       சங்க இலக்கியத்தில் உடன்போக்குப் புhடல்களாக மொத்தம் 122 பாடல்கள் உள்ளன. இவற்றில் உடன்போக்கு நிகழ செவிலிஇ நற்றாய்இ தோழிஇ தலைவிஇ தலைவன்இ கண்டோர் போன்றோர்களின் மூலமாக  அலர்இ அம்பல்இ இற்செறிப்புஇ வரைவு கடாதல்இ வெறியாட்டுஇ தாயின் மீது அச்சம்இ  தாயின் ஐயம் பற்றிய உணர்வுஇ மகளை காக்கும் தாயின் காவல்இ தாய் கடிந்துரைத்தலும் அலைத்தலும் இத்தகைய சூழல் தான் உடன்போக்குச் செல்ல காரணமாக அமைந்த சூழலாகும்.


அலர்
     

      அலர் என்பது ஒருவருக்கொருவர் சொல்வழியே மறைமுகமாக தூற்றும் பழிச்சொல் எனப்படும்.  தோழியினால் தலைவிக்கும் தலைவனுக்கும் உடன்போக்கு நிகழ்வதின் தோழின் சொல்லாற்றல் அறிவாற்றல் வெளிப்படுகிறது. மேலும் தலைவிக்கும் தலைவனுக்கும் இடையில் உள்;ள ஏற்றத்தாழ்வை களைத்து அவர்களை உடன்போக்கிற்கு இசைப்பதை காணமுடிகிறது.  
அவை


புதுமலர் தீண்டிய பூநாறு குருஉச்சுவர்

கடுமாப்பூண்ட நெடுந்தேர் கடைஇ

நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு

செலவு அயர்ந்திசினால்: யானே

அலர் சுமந்து ஒழிகஇவ் அழுறங்கல் ஊரே!”1
         

        நம்மூர் தெருக்களிலே சிலரும் பலருமாக கூடி நின்று தம் கடைக்கண்ணாற் பார்த்து மூக்கின் உச்சியிலே சுட்டுவிரலைச் சேர்த்துக் கொண்டவராகப் பழி தூற்றித் திரிவாராயினர். அவரது பழியுரைகளைக் கேட்டறிந்த தம் அன்னையும் சிறுகோல் ஒன்றைக் கைக்கொண்டு சுழற்றுப்படியே என்னை அடிப்பர். இவற்றால் யானும் மிகவும் துயர் உற்றேன். ஊர் பழியின்றும் பிழைத்ததற்குத் தலைவனுடனே உடன்போக்கு சென்றுவிடுதலே நன்று என்ற நற்றிணைப் பாடலில் நெய்தல் திணையில் தோழிக்கூற்றில் இடம்பெற்றதை அறியமுடிகிறது.


அம்பல் 
                  

        அம்பல் என்பது ஒருவருக்;கொருவர் மறைமுகமாகச் சைகைமொழி தூற்றும் பழியை அம்பல் என்பர். அவை
அம்பல் மூதூர் அலர்வாயப் பெண்டிர்


“இன்னா இன்னுரை கேட்ட சிலநாள்

அறியேன் போல் உயிரேன்

நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே”2
 

     இப்பாடலடிகள் மூலம் அம்பல் காரணமாக உடன்போக்குச் சூழலுக்கு காரணமாக இருப்பதை நற்றிணையில் பாலைத்திணையில் காண்கிறோம்.

மேலும்   

“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற

சிறுகோல் வலந்தனள் அன்னை அலப்ப

அலந்தனென் வாழி தோழி!”3
         

       தலைவியின் நிலையினை அன்னை அறிந்தாள். ஊரில் உள்ள மக்கள் அலர் அம்பல் தூற்றுகின்றனர். நல்ல மனையின் கண்ணே தனித்திருப்பாரை வாட்டி வருத்தங்கொள்ளச் செய்யும்படியாக வருகின்ற தீய  வாடை காற்றானது வருத்தமடைய செய்கிறது.


இற்செறிப்பு
         

      தலைவியை ஊரார் அலர் தூற்றும் காரணமாக அன்னையானவள் இற்செறித்து புறம் போகாமல் இருக்க காவல் செய்கிறாள். இதனால் தலைவிக்கு உடன்போக்குச் சூழல் ஏற்படுகிறது. இதனை ஐங்குறுநூற்றில்


“கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்

கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய

வேறுபல் பருஞ்சுர  மிறந்தன

ஏற்கெடுத்திருந்த வறனில் யாய்க்கே”4   

       என்ற பாடல் மூலம் இற்செறிப்பு காரணமாக உடன்போக்கு நிகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.


வெறியாட்டு       
        

        தன் தலைவனைக் காண வேண்டும் என்னும் ஏக்கமும் காண இயலுமோ என்ற ஐயமும் தலைவியின் மன நோய்க்கு காரணமாயின. வெறியாடல் என்பது மன நோயினை அறியும் முயற்சி ஆகும். சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்களிடையே வெறியாட்டு என்னும் வெறிக்கூத்து மிகவும் பரவியிருந்தது. வெறி எனும் சொல் தெய்வத்தைக் குறிப்பதாகும். வெறியாட்டு மூலமாகவும் உடன்போக்குச் சூழல் ஏற்பட தோழி உதவுகிறாள். இதனட மூலம் தலைவியின் நோய் வெறியாட்டால் தீராது. துலைகனால் தான் முடியும் என்ற உணர்வைத் தலைவனுக்குத் தெரிவித்தல் ஆகும்.


தாயின் மீது அச்சம்
         

      தோழி தலைவியை நோக்கி ஊரின்கண் அலரெழவும் சேரி ஆரவாரிப்பும் ஒழிவின்றி நம்மை அலைகின்ற அன்னைஇ தலைவியானவள் தன் மனையைவிட்:டு வெளியே செல்லாமல் உறைவாளாக என்று அன்னையின் கண்டிப்பு காரணமாக உடன்போக்குச் சூழல் தலைவிக்கு ஏற்படுகிறது. இதனை குறுந்தொகையில்


”ஊஉர் அலர் எழச் சேரி கல்லென

ஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை

இருக்க தன்மனை யானே”5
         

      என்ற பாடல் மூலம் அன்னையின் அச்சத்தால் உடன்போக்கு நிகழ்வதை அறியமுடிகிறது.


தாயின் ஐயம் பற்றிய உணர்வு
         

       களவுப் புணர்ச்சியிலே ஈடுபட்டு இருந்த தலைவி தலைவனுக்கு ஊரலர் அதிகமாயிற்று. அன்னையின் சொல்லும் கடுமையாயிற்று. தலைவியானவள் துடிதுடித்தாள். இந்நிலையிலே தலைவன் தலைவியுடன் உடன் போக்கிலே செல்லப் போவதாக முடிவு செய்து விட்டான். தாயின் கடிந்துரைத்தலும் கவனிப்பும் கண்டிப்பும்  தலைவியின் உடன்போக்குச் சூழலுக்கு காரணமாவதை அகநானூற்றில்


”உன்னங் கொள்கையொடு உளம் கரந்து உறையும்

அன்னை சொல்லும் உய்கம்”6
         

     இப்பாடல் மூலம் அன்னையின் கடும்சொற்கள் உடன்போக்குச் சூழலுக்கு காரணமாவதை அறியமுடிகிறது.
 

தாய் கடிந்துரைத்தலும் அலைத்தலும்
         

     களவினால் ஊரலர் எழுந்தது. அன்னையோ  தெய்வத்தால் வந்தது என எண்ணி  தெய்வத்திடம் முறையிடுதல் வரைவு கடாதல்  இற்செறிப்பு ஏற்படுத்துதல்  அலர் அம்பல் போன்ற இன்னல்கள் இருப்பதால் உடல் மெலிவு  காரணமாக தோழியின் உதவியுடன் உடக்போக்கு காணப்படுகிறது. இதனை அகநானூற்றில்


கௌவை மேவலர்  ஆகி இவ்ஊர்

நிறைய பெண்டிர் இன்னா கூறுவ

புரைய அல்ல என் மகட்கு எனப் பரைஇ

நம் உணர்ந்து ஆறிய கொள்கை

அன்னை முன்னர் யாம் என் இதற்படலே”7
         

          ஊரலர்  தூற்றலையே விரும்புவராகி இவ்வூரில் நிறைந்திருக்கும் அதிக பெண்டிர் இன்னாத சொற்கள் பலவும் பேசுகின்றனர். இதனால் அன்னையானவள் தெய்;வத்திடம் முறையிடுதல்  வெறியாட்டு நடத்துதல் போன்றவை தலைவிக்கு ஏற்படுவதை அறிந்த தோழியானவள் தலைவனிடம் முறையிட்டு உடன்போக்கிற்கு உடன்படுத்துதல் ஆகும். 


முடிவுரை
       

♣சங்க காலத்தில் தலைவன் தலைவி  களவுக்காலத்தில் சந்தித்து உரையாடுதல் தலைவி தலைவனின் மனநிலை செவிலி நற்றாய் இவர்களின் சூழ்நிலை உடன்போக்கிற்கு காரணமாக அமைந்த சூழல் போன்றவற்றை ஆராய்வதாக அமைந்துள்ளது.
 அலர் அம்பல் பற்றி சங்ககால மக்களின் நடைமுறை சூழ்ந்த வாழ்க்கைமுறையினை வெளிப்படுத்துகிறது. இயற்கையான சூழலையும் வெளிப்படுத்துகிறது.
     

♣களவு வாழ்க்கையில்  தலைவன் தலைவி சந்திப்பு காரணமாக தலைவிக்கு ஏற்படும்  மாற்றங்களை அறிந்த ஊர் பெண்டிர் பேசும் பேச்சு தலைவியின் மாற்றத்திறகு காரணம் தலைவன் என தோழி அறிந்து உடன்போக்குச் சூழலுக்கு முக்கிய காரணம் ஆகிறாள்.
 தலைவியன் உடல் மெலிதல்  இதனை கண்ட தாய் வேலன் அவறியாட்டு நிகழ்த்துதல்  இலக்கியங்களில் கலப்பு மணம் நிகழ்ந்தது போன்ற செய்தகளை எட்டுத்தொகை அகநூல்கள் குறிப்பிடுகிள்றன. 
 

♣சங்க இலக்கியத்தில் பெண்கள் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. அறநெறியைப் பின்பற்றி வாழ்ந்த செய்தியும் அறியமுடிகிறது. தனக்கு பிடித்தவன் ஏழ்மையானவனாக இருந்தாலும் அவûனுடைய தகுதிக்கு இறங்கி தலைவி சென்றதை அறியமுடிகிறது.
         

♣தலைவி பிறந்த வீட்டில் இருக்கும்போது செல்வ செழிப்புடன் வளமாக காணப்படுகிறாள். ஆனால் தலைவனுடன் உடன்போக்கில் சென்று பின்னர் பாலை நிலத்தின் வெம்மையையும் தாங்காதவளாகவும் தலைவனின் வீட்டில் துன்பம் படுபவளாகவும் இருக்கின்றாள்.
         

♣சங்க காலத்தில் தலைவி தலைவனுடன் உடன்போக்கு சென்றபோது தோழியின் வருத்தம் செயல்பாடுகள், உணர்வுகள் அறிய முடிகிறது. செவிலித்தாயின் உணர்வுகள், புலம்பல்கள் காணப்படுகிறது. நற்றாய் வீட்டில் இருந்தபடியே நினைத்து பார்த்து வருந்துபவர்களாக உடன்போக்கு பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.
         

♣ தற்காலத்தில் உடன்போக்கு என்றபது ஓடிப்போவது என்று தவறான எண்ணமாக கொண்டுள்ளனர். நற்றாய், செவிலி, தோழி, தலைவன், தலைவி கணடோர் – இக்கதை மாந்தர்கள் உலக வழங்கில் காணப்படுபவர்கள் போலவே சங்க காலத்தில் படைக்கப்பட்டுள்ளனர் என்று உடன்போக்கு பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.


சான்றெண் விளக்கம்

1.நற்றிணை.பா.149


2.நற்றிணை.பா143


3.நற்றிணை.பா.149


4.ஐங்குறுநூறு.பா.385


5.குறுந்தொகை.பா.262


6.அகநானூறு.பா.65


7.அகநானூறு.பா.95


துணைநூற்பட்டியல்

1. சுப்பிரமணியன்  ச.வே, நற்றிணை மூலமும் உரையும்


2. சோமசுந்தரனார் பொ.வே  – ஐங்குநூறு


3. சோமசுந்தரனார் பொ.வே  – குறுந்தொகை


4. சுப்பிரமணியன்  ச.வே   – அகநானூறு மூலமும் உரையும்


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

மா.மகேஸ்வரி,


REG NO 204PHD23F10324TAM,

முழு நேர முனைவர்பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை, 

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி,


திருவள்ளுவர் பல்கலைகழகம்,


திருவண்ணாமலை- 606603. 

 

நெறியாளர்  


முனைவர் கோ. சாந்தமூர்த்தி,

இணைப்பேராசிரியர்,


தமிழ்த்துறை,


கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி,

திருவண்ணாமலை -606603.

 

The post Sanga Illakkiyathil Udanpoku Suzhalgal|M.Mageswari appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

❌