Normal view
நினைவாலணையும் முகம் – க.மோகனரங்கன்:
ஆசிரியர் குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசம்பட்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். பொறியியல் பட்டதாரி. கவிதைகள் எழுதுவதைத் தவிர, விமர்சனம், மொழிபெயர்ப்பு போன்ற துறைகளிலும் இயங்கி வருகிறார்.
பிணியும் பேறும் எப்படி ஒருவரே இருக்கமுடியாதோ அப்படி ஒரு வார்த்தைக் கோர்வை நினைவாலணையும் முகம். நெஞ்சினிலே நினைவுமுகம். காதலும், கனவும், பிரமையும் கலந்த கவிதைகள் காற்றுவெளியில் அந்த முகத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன. சகல தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் பின், வெற்றி தேவதையாக வீட்டிலிருக்குமவள்.
‘ இந்த இரவு தான்
எவ்வளவு ஆறுதலானது.
உந்தன் கண்மைக் கருப்பிலிருந்து
பிறந்து,
கார்குழல் சுருளுக்குள்
வளரும் இருள் தான்
என் மருள் நீக்கும் மருந்து”
எல்லாக் கேள்விகளுக்கும் பதிலில்லை.
எல்லாக் கேள்வி கேட்பவருக்கும் பதிலில்லை. சில நேரங்களில் பதிலிருந்தும் சொல்வதற்கு ஏதுமில்லை.
” கேட்கவும் சொல்லவுமாகத்தான்
எரியும் நினைவுகளைக்
கரிந்தடங்கச் செய்கிறோம்
இன்மையின் கருந்துளை ஒன்று
மீதமில்லாமல் உறிஞ்சிக் கொள்கிறது
சொல்வதற்கும் முந்தைய சொற்களை”
நாளை ஏதாவது நல்லது நடக்கலாம் என்ற ஆழ்மன நம்பிக்கையே இவ்வாழ்வின் ஆதாரம். எல்லாம் சரியாகி விடும் என்பது அசட்டு நம்பிக்கை என்று அறிவுக்குப் புலப்படாதவரை எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது.
” எல்லாவற்றின் மீதும் பட்சமின்றிப்
படர்கிறதொரு பற்றின்மை
இருப்பினும்
இன்னும் பிரிக்கப்படாததொரு
பரிசுப்பொதியைப் போலவே
ஒவ்வொரு நாளையையும்
அனுமானம் எதுவும் கொள்ளாமல்
அவிழ்க்க முயல்கிறேன்”
நம் வாழ்வின் மகிழ்ச்சியும், திருப்தியும் எதிரிருப்பவரின் நிலையிலிருந்தே எடுத்துக் கொள்கிறோம். எல்லாமே வெளியிலிருந்து எடுப்பது என்றான பின் நம் நிம்மதி என்பது நாம் இரக்கப்படும் நிலையிலிருக்கும் அயலாரிடமிருந்து கிடைப்பது. இந்த நத்தையும், முள்ளெலியும் நாம் தான்.
” ஓடு உடைந்த நத்தை ஒன்று
தான் ஊர்ந்து செல்லும் தடத்தில்
முள்ளெலி ஒன்றை
எதேச்சையாக எதிரிடுகிறது
ஒரு கணம் நின்று ஒன்றையொன்று
உற்றுப் பார்த்தபின் இரண்டும்
தத்தமது திசையில் தொடந்தேகின
அன்றைய உறக்கத்தில்
மிருதுவான சருமத்தோடு
மெத்தென்ற கட்டிலில்
முள்ளெலி படுத்திருக்க
நத்தையின் கனவையோ
முட்கள் கிழித்தன”
அனுபவத்தின் கனம் கவிஞர்களுக்கு வார்த்தையின் மேல் படிகிறது. ‘உள்ளத்தில் கிளைத்திருந்த வலியை துளி இலையெனக் கிள்ளி வைத்தேன்’ என்ற வரி போல் நூலெங்கிலும் அனுபவச்சாரம் வார்த்தைச் சிதறல்களாக மாறியிருக்கின்றது. அதிக நாள் வாழ்பவர்களுக்கு அதிகத் தவறுகள் சேகரமாயிருக்கும். கவிஞர்கள் வரிகளின் வழி வலியைக் குறைக்க முயலலாம்.
எதையேனும் செய்து கடந்தகாலத்தை மாற்ற நினைப்பதும், வார்த்தைகளைத் தூதாக அனுப்பி வராதவளை வரவைக்க முயல்வதும், முடிவில்லா விளையாட்டு. கவிதைகளை நினைவுகூரல்கள் என்கிறார் முன்னுரையில் மோகனரங்கன். மகிழ்வாக இருப்பதாக நினைப்பதும், துக்கமாக உணர்வதும் உண்மையில் வேறுவேறில்லை, நம் மனநிலைதான்.
பழகிய ஆற்றில் குளித்தெழுந்த உணர்வு.
பிரதிக்கு:
தமிழினி 86672 55103
முதல்பதிப்பு டிசம்பர் 2024
விலை ரூ.110.