Normal view

Received before yesterday

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . 303

சக்தி சக்திதாசன்
லண்டன்

அன்பான வாசகர்களுக்கு, அன்பு வணக்கங்களுடன் அடுத்தொரு மடலோடு உங்கள் மத்தியில் வருவதில் மகிழ்கிறேன்.

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலைகளிலும் தினமும் ஏதோவொரு நாடகம் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது.

இங்கிலாந்து மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன ?

எனது கடந்த மாத மடலுக்கும் இந்த மடலுக்குமிடையில் பல அரசியல் அதிர்வுக் காட்சிகள் இங்கிலாந்து மேடையிலே அரங்கேறி விட்டன.

அது என்ன அதிர்வுகள் ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுந்திருக்கும்.

பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி எனும் அரசியல் கானகத்தில் அடைபட்டுக் கிடந்தது தொழிற்கட்சி.

தொடர்ந்து  தேர்தல் வெற்றிகளை சந்தித்து அரச அதிகாரத்தில்  12 வருடங்களாக இருந்தது கன்சர்வேடிவ் கட்சி.

அவர்களின் அரசியல் ஆணவம் மக்களின் வாழ்வாதாரச் சிக்கலைச் சிக்கும் வழிகளை கண்டறிய விடவில்லை.

அவ்விரக்தி மக்கள் மனதிலே கொடுத்த மாற்றம் லேபர் கட்சியை அதீத பெரும்பான்மை பலத்துடன் அரச கட்டிலில் அமர்த்தியது.

இதுவெல்லாம் நீங்கள் அறிந்ததே !

ஆனால் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து தொழிற் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

ஏனேனில் அதிரடியான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவதற்கு ஏதுவான ஒரு பொருளாதார ஸ்திர நிலையை வெளியேறிய கன்சர்வேடிவ் கட்சி விட்டுச் செல்லவில்லை.

விளைவு !

பொருளாதார ஸ்திரத்தை ஏற்படுத்த  மக்களுக்கு அதிருப்தி அளிக்கக்கூடிய சில கடினமான பொருளாதார நிலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை அரச அதிகாரத்திலுள்ள தொழிற்கட்சிக்கேற்பட்டது.

அதன் காரணமாக பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த ஒரு அரசின் பிரதமர்களில் மிக வேகமாக செல்வாக்கு சரிவைச் சந்தித்த முதலாவது பிரதமர் எனும் சாதனையை தனதாக்கிக் கொண்டார் நமது பிரதமர் கியர் ஸ்டாமர்.

அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை எனது அரசின் பதவிக்காலமான 5 வருட முடிவில் என்னைப் பற்றியும் எனது அரசின் கொள்கைகள் பற்றியும் கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார் பிரதமர்.

இதனிடையே பலகாலமாக இங்கிலாந்து அரசுக்கு தலையிடியாக இருந்துவருவது வெளிநாட்டவரின் அரசியல் தஞ்சம் கோரும் சட்டவிரோத குடியேற்றம்.

குறிப்பாக பிரெஞ்சு நாட்டிலிருந்து கள்ளத்தோணியில் இங்கிலாந்துக் கால்வாய் வழியாக உள்ளே நுழையும் வெளிநாட்டுகாரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இங்கிலாந்தில் தீவிர வலதுசாரக் கொள்கையுடைய கட்சிகளின் கூக்குரல் இங்கிலாந்தின் பொருளாதர , வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய குடியேற்றமே காரணம் என்று கூவியது.

மக்களின் கருத்துக் கணிப்புகளும் இங்கிலாந்தின் வெளிநாட்டவரின் குடியேற்றம் பற்றிய சர்ச்சையின் எதிரொலியாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ப்ரசாரம் செய்து வெற்றி கண்டவர் நைஜல் வராஜ் .

இப்போ இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக் கட்சி  Reform Party எனும் கட்சியின் தலைவராக கடந்த தேர்தலில் முதன்முறையாக வெற்றியீட்டி பாரளுமன்ற எம்.பி ஆக உள்ளார்.

இவர் அமேரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் ஆதரவாளர்.

ட்ரம்ப் அவர்களின் பரிபூரண ஆதரவும் இவருக்கு உண்டு.

இன்றைய இங்கிலாந்து அரசியல் சூழலில் கன்சர்வேடிவ் கட்சியையே இவர் இல்லாமல் ஆக்கி விடுவாரோ எனும் வகையில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்த சூழலில் தான் இம்மாத ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் இடம் பெற்றது.

இதுவரை இங்கிலாந்து அரசியல் மேடை கண்டிராத மிகபெரிய அதிர்வலைகளை இத்தேர்தல்கள் ஏற்படுத்தியது.

ஆமாம் இதுவரை இங்கிலாந்து தேர்தல்களம் சந்தித்திராத ஒரு புதுவிதமான முடிவை அள்ளி வீசியது.

காலகாலமாக இங்கிலாந்து தேர்தல் களத்தில் அதிமுக்கிய கட்சிகளாக விளங்கிய கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி இரண்டு கட்சிகளுமே அதிர்ந்து போகக்கூடிய வகையில் நைஜல் வராஜ் அவர்களது ரிபோர்ம் கட்சி Reform Party அதிக அளவிலான கவுன்சில்களையும், கவுன்சிலர்களையும் பெற்று பெருவெற்றி ஈட்டியுள்ளது.

கன்சர்வேடிவ், லேபர் இரண்டு கட்சிகளுமே அத்திவாரத்தில் ஆட்டம்.கண்டுள்ளன.

இங்கிலாந்தில் இதுவரை நடந்து வந்த இரு கட்சி ஆட்சிமுறை மாற்றம் காணப்போகிறதோ எனும் ஐயப்பாடு முதற்தடவையாக அரசியல்.அவதானிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

இதன் பிரதிபலிப்பு இதுவரை லேபர் கட்சி பிரதமராக இருக்கும் ஒருவரிடமிருந்து எதைக் கேட்க முடியாது என்று எண்ணிருந்தார்களோ அதைக் கேட்கும்படியாகி அவர்களின் நம்பிககைக்கு ஒரு பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களில் பெரும்பான்மையோர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்று ஆராயும் நிலைக்குக் கட்சிகளைத் தள்ளியுள்ளது.

காலகாலமாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை ஆதரிக்கும் கொள்கைகளை முன்வைக்கும் லேபர் கட்சியின் தலைவர் வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய வருகையால் இந்நாட்டு மக்கள் தம் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் எனும் தாழ்வு மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று பேசியுள்ளார்.

இதுவே ஒரு லேபர் கட்சித் தலைவர் முதன்முறையாக வெளிநாட்டவரின் வருகைக்கு எதிராக பேசிய முதல் பேச்சு என்று அரசியல் மட்டத்தில் கருதப்படுகிறது.

அதிரடியாக வெளிநாட்டவருக்கு கொடுக்கும் பணிகளுக்கான விசா , மற்றும் மாணவர்களுக்கான விசா ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன.

இதைத்தான் கவியரசர் ” மாற்றம் ஒன்றே மாறாதது ” என்று கூறியிருந்தாரோ ?

சரி இனி எமது பிரதமர் நாட்டின் பொருளாதாரச் சீரமைப்புக்காக எடுத்த நடவடிக்கைகளைப் பார்ப்போம்

வெளிநாட்டு வர்த்தக உடன்பாடுகள் பலவற்றை பிரதமர் கியர் ஸ்டாமர் எட்டியுள்ளார்.

அவரது இணக்கப்பாடுகள் இந்தியா , அமேரிக்கா , மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பனவற்றுடன் எட்டப்பட்டுள்ளன.

இது எமது பிரதமரின் சர்வதேச அளவிலான நிலையினை ஸ்திரப்படுத்தியுள்ளது எனும் கருத்துக்கு வலுச் சேர்க்கிறது.

குறிப்பாக அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் எமது பிரதமர் ஸ்டாமருக்கும் , அதிபர் ட்ரம்ப்புக்குமிடையிலான உறவைப்பற்றி  எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் பிரதமர் கியர் ஸ்டாமர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமேரிக்காவுடனும் , அதன் அதிபருடனும் ஒரு சுமுகமான உறவைப் பேணி வருகிறார்.

அடுத்து யூக்கிரேனுக்கும், ரஸ்யாவுக்கும் இடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு கியர் ஸ்டாமர் பக்கபலமாக இருப்பது போலத் தோற்றமளிக்கிறது.

சமீபத்தில்.பாலஸ்தீன)ன் பகுதியான காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகளைக் கண்டித்து மிகவும் காரசாரமான ஒரு செய்தியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து சார்பில் கியர் ஸ்டாமர் விடுத்துள்ளார்.

இந்த ஒருமாத காலத்துக்குள் பல காட்சிகள் அரங்கேறியுள்ளன இவை இனிவரும் நாட்களில் எமது அரசியல் அரங்கில் மேடையேற்றப்போகும் காட்சிகளை அடுத்த மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302

சக்தி சக்திதாசன்
லண்டன்

அன்பினிய வல்லமை வாசக இதயங்களே !

உங்களனைவருடனும் மீண்டும் ஒரு மடல் மூலம் இணைவதில் மகிழ்கிறேன்.

இங்கிலாந்தின் நிகழ்வுகள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எமது பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பது ஒருபுறமிருக்க சர்வதேச நாடுகளின் அரசியல் நகர்வுகளின் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில் இங்கிலாந்து நாடு இருக்கிறது.

குறிப்பாக யூக்கிரேன் , ரஸ்ய நாட்டுப் போரும் அதன் முன்னெடுப்புகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் நிலைப்பாட்டின் பக்க விளைவுகள் இங்கிலாந்துப் பிரதமருக்கு சங்கடத்தை விளைவித்தது.

ஆனால் சங்கடங்களில் சில சாதுரியங்களும் கிடைக்கும் சாத்தியக்கூறும் உள்ளதல்லவா ?

அது என்ன என்கிறீர்களா ?

இங்கிலாந்தின் உள்நாட்டு பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்கும் பொருட்டு பல சிக்கலான பொருளாதார திட்டங்களை முன்வைத்ததால் செல்வக்கு சரியக் கண்டார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

அந்நேரம்தான் அதிபர் ட்ரம்ப்பின் யூக்கிறேன் ரஸ்யப் போரின் மீதான திருப்பங்களின் தாக்கம் ஐரோப்பாவின் மீது விழுந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், அமேரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலைச் சமாளிக்கும் பாலமாகச் செயற்படத் தலைப்பட்டார் கியர் ஸ்டாமர்.

யூக்கிறேன் நாட்டிற்குச் சார்பாக செயற்பட்டு வந்த அமெரிக்க அரசியல் போக்கை மாற்றிய ட்ரெம்ப்பின் தாக்கம் ஏற்படுத்திய இடைவெளியை சமப்படுத்த இணக்கமுற்ற நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் தலமைப் பொறுப்பை கியர் ஸ்டாமர் ஏற்றார்.

சரிந்து கொண்டிருந்த அவரது அரசியல் செல்வாக்குக்கு முட்டுக் கொடுப்பது போல் அவர் மீது மக்களுக்கு ஒரு மதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

அதேநேரம் அமெரிக்க அதிபர் ஏற்படுத்திய இறக்குமதி வரி அதிகரிப்பினால் ஏற்பட்ட உலகச் சந்தையின் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய ஒரு அரசியல் அவசியம் ஏற்பட்டது.

அந்த நிலையில் அமெரிக்க அதிபருடனான உறவினை மிகவும் மென்மையான ஒரு போக்கில் எமது பிரதமர் அணுகிய முறை அவரது கட்சியில் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகளிலும் அவருக்கு ஓரளவு ஆதரவை கொடுக்கும் ஒரு நிலையைத் தோற்றியுள்ளது.

அடுத்து பிரித்தானிய இரும்பு ஆலையின் நிலை பெரிய செய்தியாகியது.

பிரித்தானியாவின் தொழிற்சாலைகளில் பெயர் பெற்றிருந்த பிரித்தானிய இரும்பு ஆலை பிரித்தானிய தொழிலதிபர்களிடமிருந்து சீன முதலீட்டாளர்களின் கைவசத்திலிருந்தது.

அவ்வாலை இலாபகரமானதாக இல்லாமல் நட்டத்தில் ஓடுகிறது என்பதால் அதனை மூடப்போவதாக அதன் சீன முதலீட்டாளர்கள் அறிவித்தார்கள்.

பிரித்தானியாவின் அடையாளமாக கால காலமாக ஓடிக்கொண்டிருந்த தொழிற்சாலை மூடப்பட்டால் அதனால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் கணக்கிலடங்கா

அதனைக் கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் அவசரச் சட்டத்தை அமுல் படுத்தி அவ்வாலையை தேசிய உடமையாக்கி அத்தொழிற்சாலையை உடனடி மூடுதலிலிருந்து காப்பாற்றியுள்ளது.

பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையும் அனைவரினதும் ஆதரவைப் பெற்றுள்ளது.

அதிகாரத்திலிருக்கும் பிரித்தானிய அரசுகளுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கும் பிரச்சனையாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரெஞ்சுக் கரையிலிருந்து நுழையும் “படகு அகதிகள்” இருந்து வருகிறார்கள்.

இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்ப்பதற்கான பலவித நடவடிக்கைககை அரசு முடுக்கி விட்டாலும் அது குறைவதாகத் தெரியவில்லை.

அதற்கான லேபர் அரசின் முக்கிய நகர்வுகள் கொடுக்கப்போகும் விளைவுகளை எதிர்நோக்கியபடி அரசியல் அவதானிகள்.

அடுத்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை பாரிய மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது.

சிலகாலமாகவே இங்கிலாந்தின் சுகாதார அமைச்சு பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

மருத்துவர் பற்றாக்குறை , தாதிகள் பற்றாக்குறை, மனநோய் பிரிவுகளுக்கான சேவைகளின் பற்றாக்குறையென பல குறைபாடுககௌச் சந்தித்தது.

சுகாதார அமைச்சர் பல மாதங்களாக நடாத்திய ஆய்வுகளின் பின்னர் தேசிய சுகாதார சேவையின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய கட்டமைப்பின் கீழ் ஒரே நடவடிக்கைகள் பல பிரிவுகளினால் பல தடவைகள் மேற்கொள்ளப்படுவதால் தேவைக்கதிகமான உத்தியோகத்தர்களுடன் , அளவுக்கதிகமான நேரம் செலவிடப்படுவதாகக் கூறியுள்ளார்.

நோயாளிகள் சிகிச்சை பெறுவது இலவசமாகவே நடைபெறுவது என்பதை இன்றுவரை கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது.

ஆனால் இச்சேவையைபிதே கொள்கையில் தொடர்ந்தும் கடைப்பிடிக்க இத்தகைய மாற்றம் அவசியமானது என்கிறார் சுகாதார அமைச்சர்.

மருத்துவசேவை பிரித்தானியவாசிகளுக்கு இலவசம் என்றாலும் உல்லாசப் பிரயாணிகளாக வருவோரும், பிரித்தானியவாசிகளாக அல்லாதோரும் கட்டணம் அறவிடப்படுவார்கள் என்பது சிலகாலங்களின் முன்னாலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

கடந்த கன்சர்வேடிவ் கட்சி அரசிலிருந்த போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தம் லேபர் கட்சி தேர்தல் வெற்றி பெற்று அரசமைத்ததும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு மீண்டும் ஒரு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. மருத்துவ பதவிகளில் அதியுயர் பதவியான மருத்துவ விசேடத்துறை நிபுணர்கள் தமக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததினால் தாம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

அந்த முனைப்பில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சி அரசுக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

அவர்கள் பொருளாதாரத்தைச் சீராக்கவென்று எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கப் போகிறதா இல்லையா என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கத் தொடங்கப் போகிறது.

இந்த இடைவெளியை அரசியல் , பொருளாதார விமர்சகர்கள் , நிபுணர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லேபர் அரசாங்கமும் , அக்கட்சியின் தலைமைத்துவமும் தம் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பொதுமக்களாகிய நாம் இப்புதிய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று கூறி பதவிக்கு வந்தவ்ர்கள் கொண்டு வந்த மாற்றங்கள் நம் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்று அதை நோக்கிய கணிப்பிலிருக்கிறோம்.

அதேநேரம் சர்வதேச அரங்கில் அமெரிக்க நாட்டின் தலைமைத்துவம் கொண்டுவரும் அதீத மாற்றங்கள் ஏற்படுத்தும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தப்போகும் மாற்றங்களின் விளைவு என்ன ?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்களை தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என்று சூளுரைத்து பதவிக்கு வந்த அதிபர் ட்ரம்ப் நூறு நாட்களாகியும் எந்தப் போரையும் நிறுத்த முடியாமல் தவிக்கிறார்.

அமெரிக்கா , சீனாவுக்கெதிரான வர்த்தகப் போரில் சிக்கிக்கொண்டு பல நாடுகள் அல்லாடுகின்றன.

மியான்மார் நிலநடுக்கத்தை ஏற்படுத்திய இயற்கையின் சீற்றம் காவு கொண்ட உயிர்கள் ஆயிரமாயிரம்.

ஆக மொத்தம் விடையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் சில வினாக்களின் விடைகளையாவது அடுத்த மடலில் பகிர முடியுமா பார்ப்போம்.

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (302)

சக்தி சக்திதாசன்

அன்பானவர்களே !

மிக நீண்ட இடைவெளியின் பின்னால் மீண்டும் இங்கிலாந்தின் நாட்டு நடப்புகளின் அலசலோடு உங்களின் முன்னால் வல்லமையூடு பயணிக்கிறேன்.

வாரம் ஒரு மடல் என்று முன்பு நான் வரைந்த மடலின் இடைவெளி இப்போது மாதம் ஒன்றாக மாறும் என்பதை அன்புடன் இனிய வாசக உள்ளங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கடைசி மடலுக்கும், இந்த மடலுக்கும் இடையே பல வருடங்கள் உருண்டோடி விட்டன.

வருடங்கள் பறந்தது மட்டுமல்ல அந்த வருடங்கள் தமக்குள் அமுக்கிக் கொண்ட நிகழ்வுகள் ஒராயிரம்.

அவற்றினில் உலகம் பூராவும் ஒட்டு மொத்தமாக அனுபவித்தது கொரோனா எனும் ஒரு கொடிய நிகழ்வு.

நான் வாழ்ந்து கொண்டிருக்கும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து தேசமும் தன் பங்கிற்கு கொரோனாவின் பாதிப்பிற்குள்ளாகியது.

அத்தனை வருட இடைவெளியில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசுவது முடியாத காரியம் அது என் நோக்கமும் அல்ல.

இன்றைய நிலையில், இன்றைய இங்கிலாந்தின் நடப்புகளின் அடிப்படையில் அதை நோக்கிய ஒரு புலம்பெயர் தமிழனின் கோணப் பார்வையிலேயே எனது இம்மடல் மீண்டும் பிறப்பெடுக்கிறது.

இவ்வருடம் அதாவது 2025 ஜனவரி மாதம் 30 ம் தேதி நான் இங்கிலாந்தில் கால்பதித்த 50வது வருடத்தினுள் நுழைகிறேன்.

18 வயது இளைஞனாக, இயந்திரவியற் பொறியியல் துறை மாணவனாக ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தேன்.

இன்று எனது 68 இன் நடுப்பகுதியில் , ஓய்வு பெற்ற பொறியியலாகனாக, ஒரு டாக்டரின் தந்தையாக , எட்டு வயதுப் பேத்தியின் தாத்தாவாக இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.

இந்த ஐம்பது வருடங்களில் நான் இங்கிலாந்தில் கண்ட மாற்றங்கள் எனது அனுபவப் புத்தகத்தின் அத்தியாயங்களாகப் பதியப் பட்டுள்ளன.

என்னுடைய இங்கிலாந்தின் நிகழ்வுகளை நோக்கிய பார்வையும் அந்தக் கோணத்திலேயே அமையப் போகிறது.

இது ஒரு மதிநுட்பம் நிறைந்த அறிவாளியின் தீர்ப்பு அல்ல.

ஒரு சாதாரணப் பாமரனின் வாழ்வை நோக்கிய பார்வை.

சரி இனி இந்த மடலின் நோக்கத்திற்குள் பிரவேசிப்போம்.

அதற்கான முன் விளக்கம் பூர்த்தியாகி விட்டது என்றே எண்ணுகிறேன்.

இங்கிலாந்து இதுவரை காலமும் இல்லாத ஒரு புது அலகிற்குள் கால் பதித்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

2010 இலிருந்து 2024 வரை அரசியல் அதிகாரம் தமது ஏகபோக உரிமை எனும் வகையில் அரசமைத்திருந்த கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் அதிகாரம் 2024 நடந்த தேர்தலின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

தேர்தலில் அதீத பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியீட்டியது லேபர் – தொழிற் கட்சி.

லேபர் கட்சி தேர்தலில் வெற்றியீட்டியது என்பதை விட கன்சர்வேடிவ் கட்சி தோல்வியைத் தேடிக் கொண்டது என்பதே உண்மையாகும்.

அதை எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா ?

தொடர் வெற்றிகளைக் கண்டு வந்த கன்சர்வேடிவ் கட்சி தேர்தல் வெற்றி தமக்கேயுரியது எனும் பாங்கில் நடக்கத் தொடங்கினார்கள்.

கொரோனா கொடுத்த தாக்கமும், ப்ரெக்ஸிட் எனும் பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் ஒன்றாகத் தாக்கின.

அந்தத் தாக்கங்கள் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியது.

கன்சர்வேடிவ் கட்சியில் பிரதமர் பொரிஸ் ஜான்சன் உட்பட பல முன்னனி உறுப்பினர்கள் தாம் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் பாணியில் செயற்பட்டார்கள்.

மக்களின் மனங்களில் விளைந்த விரக்தியின் விகிதத்தைக் கணக்கிடத் தவறினார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அமேரிக்க அரசியல் தளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் அரசியல் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவைக் கணக்கிலெடுக்கத் தவறினார்கள்.

பொரிஸ் ஜான்சனின் வீழ்ச்சியை அடுத்து பதவிக்கு வந்த லிஸ் ட்ரஸ் என்பவரின் கண்மூடித்தனமான பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சி அவரை மிகக்குறைந்த காலம் பதவி வகித்த பிரதமர் எனும் முத்திரையுடன் வெளியேற வைத்தது.

தொடர்ந்து இங்கிலாந்தின் முதலாவது ஆசியப் பிரதமர் எனும் சாதனையுடன் பதவிக்கு வந்தார் பிரித்தானிய ஆசியரான ரிஷி சுனாக்.

லிஸ் ட்ரஸ் எடுத்த பொருளாதார நகர்வுகளின்  எதிர்மறை விளைவுகளை சரியாகக் கணித்தவர் ரிஷி சுனாக்.

பொருளாதாரக் கொள்கைகளில் நிபுணத்துவம் கொண்டிருந்து பணவீக்கத்தைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இருப்பினும் அடுத்த தேர்தல் காலத்துக்கு முன்னால் பொருளாதாரத்தை அவரால் சீர் செய்ய போதுமான அவகாசம் இருக்கவில்லை.

விளைவு !

2024 இல் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படு தோல்வியடைந்தது.

கியர் ஸ்டாமர் தலைமையில் புதிய அணுகுமுறைகளுடன் தேர்தல் களத்தில் குதித்த லேபர் கட்சி அமோக வெற்றியடைந்தது.

நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல இவ்வெற்றி லேபர் கட்சியின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட மக்களின் விரக்தியின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்.

பதவிக்கு வந்த லேபர் கட்சியின் முன்னால் மிகப்பெரிய சவால்கள் காத்துக் கிடந்தன.

பொருளாதார ஏணியின் அடிமட்டத்தில் இருக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையிருந்தது.

உழைக்கும் மக்களின் உயர்வினை பிரதானக் கொள்கையாக லேபர் கட்சி கொண்டுள்ளது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் பொருளாதாரத்தைச் சீர் செய்வதற்கு தேவைப்படும் நிதியை பொறுப்பான முறையில் கண்டெடுத்து செயற்பட வேண்டிய தேவை லேபர் கட்சிக்கு இருந்தது.

அதற்காக பல அரசாங்க திணைக்களங்களுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையிருந்தது.

அதன் பொருட்டு லேபர் கட்சியின் நிதியமைச்சர் எடுத்த பல செயற்பாடுகள் லேபர் கட்சி உழைக்கும் மக்களின் கட்சி எனும் அபிப்பிராயத்துக்கு முரணாக இருந்தது.

நாட்டின் பொருளாதார வளத்தைச் சீர் செய்வதற்கு இவை அவசியமானவை என்னையும் , எனது அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் அடுத்த தேர்தலுக்கு முன்னால் கணிப்பீடு செய்யுங்கள் எனும் வாதத்தை முன் வைக்கிறார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

அவரது செல்வாக்கின் கருத்துக் கணிப்பு பெருமளவில் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.

எனக்கு எனது மீதான மக்களின் கருத்துக் கணிப்பை விட என் நாட்டின் முன்னேற்றமே முக்கியமானது என்கிறார் பிரதமர்.

இதற்கிடையில் சர்வதேச அளவிலான பிரச்சனைகளில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பற்றிய செயற்பாடுகளும் முன் நிற்கின்றன.

உக்ரைன், ரஸ்யாவுக்கிடையிலான மூன்று வருட யுத்தம்.

இஸ்ரேல் , பாலஸ்தீன மக்களுக்கிடையிலான போர் எனும் நிகழ்வுகள் துருத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தான் அமேரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் ஜனாதிபதியாகியுள்ளார்.

பல அதிரடி கொள்கைகளை விளைவுகளை எண்ணாமல் அடுத்தடுத்து அள்ளி வீசுகிறார் ட்ரம்ப்.

பக நாடுகளுக்கெதிராக வர்த்தக யுத்தத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப் அவர்களின் இங்கிலாந்துப் பொருட்களின் மீதான வரிவிதிப்பை மட்டுப்படுத்த வேண்டிய தேவை கியர் ஸ்டாமருக்கு உண்டு.

அதன் நிமித்தம் அதிபர் ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் லேபர் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளோடு முரண்பட்டாலும் அமேரிக்க ஜனாதிபதியோடு மேவிப் போக வேண்டிய தேவையுள்ளது.

இந்நிலையில் தான் அதிபர் ட்ரம்ப் உக்ரைன் – ரஸ்ய யுத்தத்தை நிறுத்த எடுத்த முயற்சிதில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுடன் எழுந்த பிரச்சனையை தீர்க்கும் நடுவராக கியர் ஸ்டாமர் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.

அந்த பாத்திரத்தைச் செவ்வனே நிறைவேற்றினார் எமது பிரதமர் என்றே சொல்ல வேண்டும்.

அத்தோடு உக்ரைன் நாட்டின் அதிபருக்கு சார்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளை ஓரணியில் ஒன்று திரட்டுவதில் தலைமைப் பொறுப்பெடுத்துச் செயலாற்றினார்.

இவரது செயற்பாட்டினால் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு இவ்வணியில் இப்போது 25 நாடுகள் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

இவரது இந்த தலைமைத்துவ செயற்பாடு இங்கிலாந்தில் சரிந்து போயிருந்த இவரது செல்வாக்கை மக்களிடையே உயர்த்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

அடுத்து உள்நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த தேசிய மருத்துவ சேவை – என்.எச்.எஸ் மறுசீரமைக்கப்படுவது லேபர் கட்சியின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்றாக இருந்தது.

அதனை நோக்கிய செயற்பாடாக தேசிய மருத்துவ சேவை உலுக்கப்பட்டு வேரோடு மாற்றங்களுக்குள்காக்கபடும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பும் மக்களிடையேயும், அரசியல் அவதானிகளிடமும் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது.

அடுத்து சமூக திட்டமான நலிவுற்ற மக்களுக்கான அரசாங்க உதவிகளை மறு சீரமைக்கும் திட்டங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

இதைப்பற்றிய உத்தியோகபூர்வமான அறிக்கைகள் வெளிவராத நிலையில் வதந்திகளின் அடிப்படையில் பல ஊகங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருக்கிறது.

இதில் பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இதையெல்லாம் கடபதற்கு எதிர்நீச்சலடிக்கும் வல்லமை கியர் ஸ்டாமருக்கு இருக்கிறதா ?

இதைப்பற்றிய அடுத்தடுத்த நகர்வுகளை இனிவரும் மடல்களில் பார்க்கலாமே!

2024 ஒரு பின்னோக்கிய பார்வை

சக்தி சக்திதாசன்
லண்டன்

2024 எனும் உலகளாவிய நிகழ்வுகள் நிறைந்த ஒரு வருடம் அவசரமாக ஓடி இன்று அதன் அந்தத்தில் வந்து நிற்கிறது.

இவ்வருடப் பயணத்தில் நாம் கடந்து வந்த பயணத்தில் நடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்க்கும் வேளையிது.

இன்றைய உலகின் மாற்றங்கள் உலகின் அமைதியை நோக்கிப் போகிறதா ? அன்றி பதட்டமான  ஒரு சுழலுக்கு : ச் செல்கின்றதா ? என்பது ஒரு கேள்விக்குறியாகத் தொங்கிக் கொண்டேயிருக்கிறது.

இவ்வருடம் உலகின் கேந்திர முக்கியத்துவம் கொண்ட நாடுகளின் தேர்தல்களை உள்ளடக்கிய ஒரு வருடமாக அமைந்திருந்தது.

உலகப் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய  மேற்குலக நாடுகள் என கணிக்கப்படும் அமேரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகள் தேர்தல்களை எதிர்கொண்டன.

அதே போன்று  தென்கிழக்கு ஆசிய துணைக் கண்டத்தின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த இந்தியாவும் தேர்தலை எதிர் கொண்டது.

மேற்குறிப்பிட்ட நாடுகளின் அரசியல், பொருளாதார உதவிகளில் தங்கியிருந்த சிறீலங்காவும் தனது தேர்தலை எதிர்கொண்டது.

2024 யூலை மாதம் 4 ம் தேதி ஐக்கிய இராச்சியம் தனது தேர்தலை எதிர்கொண்டது.

பொருளாதார வீழ்ச்சி , வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு என்பவற்றின் தாக்கங்களின் பிரதிபலிப்பாக 14 வருடங்கள் அரசாட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடைந்தது.

மேற்குலக நாடுகளில் முதலாவது இந்தியப் பின்னனியைக் கொண்ட ஆசியப் பிரதமர் எனும் சாதனை படைத்த ரிஷி சுனாக் அவரது தலைமையின் கீழியங்கிய கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் படுதோல்வியைச் சந்தித்தார்.

இராமர் பதினான்கு வருடங்கள் கானக வாழ்க்கையை மேற்கொண்டது போல 14 வருடங்கள் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அரசியல் கானகத்தில் சிக்கிய லேபர் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.

இத்தேர்தலில் தொழிற்கட்சி அடைந்த வெற்றி அவர்களால் பெறப்பட்டதா ? இல்லை அரசிலிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடா எனும் வாதம் இன்றும் அரசியல் அவதானிகள் மத்தியில் கேள்வியாகவே இருக்கிறது.

பிரதமராக பதிவியேற்ற கியர் ஸ்டாமர் இந்தப் 14 வருட அரசியல் கானஜ வரலாற்றில் தொழிற்கட்சி கண்ட மூன்றாவது தலைவராவார்.

ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவேன் எனும் உறுதியுடன் பதவிக்கு வந்த கியர் ஸ்டாமரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மாற்றத்தை விட ஏ”மாற்றத்தையே” கொடுத்திருக்கிறது போன்றதொரு தோற்றத்தையே கொடுத்திருக்கிறது.

மக்கள் என்னை விரும்ப வேண்டும் என்பதல்ல என் நோக்கம் , நாட்டினை வளப்படுத்துவதற்கு ஏற்ற அத்திவாரத்தைப் போடுவதே முக்கியம்.

இப்போது எனது கொள்கைகளை மதிப்பீடு செய்யாதீர்கள் நான் எடுக்கும் இந்த அடிப்படை மாற்றங்களின் மீது நாம் எழுப்பப்போகும் உறுதியான வளம் பலனளிக்கும் போது என்னை மதிப்பீடு செய்யுங்கள் என்கிறார் கியர் ஸ்டாமர்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

அடுத்து இந்தியத் தேர்தல் வந்தது. பிரதமர் மோடிக்கு இணையான எதிர்கட்சிகள் இல்லை பிரதமர் மோடியின் பா.ஜா.கா அமோக வெற்றியீட்டப் போகிறது எனும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் தேர்தலின் முடிவு பிரதமர் மோடியின் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் தனியாக அரசமைக்கும் அதிகாரத்தை இழந்து கூட்டரசாங்கம் அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கட்சி தி.மு.க அமோக வெற்றியீட்டி அவரின் செல்வாக்கை நிரூபித்தது.

உலக அரங்கில் இன்றைய பாரதம் மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது.

இந்தியாவின் இந்த ஸ்தானத்தின் தாக்கங்களை இனிவரும் ஆண்டுதான் வெளிக்கொணரும்.

பொருகாதாரச் சிக்கல்களுக்குள் அழுந்தி அக சர்வதேச நாடுகளின் உதவியுடன்  நிமிர்ந்த சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமே அதிர்ச்சி அளித்தன.

அரசமைக்கும்  சந்தர்ப்பமே அற்ற கட்சி எனும் அபிப்பிராயதிற்குள்ளான ஜே.வி.பி ஏனைய இதர  இடதுசாரக் கொள்கைக் கட்சிகளுடன் சேர்ந்தமைத்த தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான 56 வயதே ஆன அனுர குமார தேசநாயக்கா அமோஜ வெற்றியீட்டி சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதியாகப் பதவியேற்றார்.

அதைத்தொடர்ந்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றியீட்டி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்தது .

இதிலே குறிப்பிட வேண்டிய விடயம் இலங்கையின் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாராளுமன்ற அங்கத்தினரில் மூவர் அரசாங்கக் கட்சியான என்.பி.பி ஐச் சேர்ந்தவர்கள் என்பதுவே.

முதன்முறையாகத் தமிழ் மக்கள் பழைய தமிழ் அரசிதல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்து புதிய ஐனாதிபதி தமக்கான தீர்வுகளைத் தருவார் என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாகவே இலங்கைத் தீவின் மக்களின் மனோநிலையில் ஒரு மாற்றம் தென்படுகிறது.

ஊழலை ஒழிப்பேன் எனும் கோஷத்தை முன்வைத்த அநுர குமார திசநாயக்கவின் அரசியல் மாற்றம் எனும்.வாதத்தை ஏற்று மக்கள் புதியதோர் இளம் தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது போல் தெரிகிறது.

இது தமிழர் பிரதேசங்களிலும் எதிரொலித்திருப்பதுதான் ஆச்சரியம்.

அருச்சுனா இராமநாதன் எனும் ஒரு சுனாமி தமிழர் பிரதேசங்களினுள் புகுந்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது போல் தெரிகிறது.

இம்மாற்றம் நேர்மறையானதா ? எதிர்மறையானதா ? என்பதை எதிர்வரும் வருடம் தான் க வேண்டும்.

இங்கும் பொறுமைதான் எமக்குத் தேவைப்படுகிறது.

புதிய அரசின் செயற்பாடுகளின் போக்கை அவதானிப்பது ஒன்றே இப்போதைக்கு செய்யக்கூடியது.

அடுத்து வந்ததோ மிகப்பெரிய மாற்றம். ஆம் அமெரிக்க நாட்டின் ஐனாதிபதிக்கான தேர்தலின் முடிவு பலருக்கு வித்தியாச உணர்வுகளுடனான அதிர்ச்சியை அளித்திருக்கின்றது.

ஐனநாயகக் கட்சியின் வேட்பாளர் தற்போதைய ஐனாதிபதி ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் குதிக்கிறேன் என்று ஆரம்பித்தார்.

அவருக்கெதிராக சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக சர்ச்சைக்குரிய ட்ரம்ப் அவர்கள் போட்டியில் இறங்கினார்.

இருவர்களுக்குமிடையிலான முதலாவது தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஜோ பைடன் சறுக்க அவரின் உதவி ஐனாதிபதியான இந்தியப் பின்னனியைக் கொண்ட கமலா ஹரிஸ் போட்டியில் இறங்கினார்.

மிகவும் இறுக்கமான யார் வெல்லுவார்கள் என்று கணிக்க முடியாத தேர்தல் என்று சொல்லப்பட்ட தேர்தல் முடிவுகள் ட்ரம்பிற்கு அதீத வெற்றியைக் கொடுத்தது.

விளைவு !

வருகின்ற ஐனவரி 20ம் தேதி ட்ரம்ப் அவர்கள் அமேரிக்க நாட்டின் 48 வது ஐனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

ஐனாதிபதியாஜ ட்ரம்ப் பதவியேற்பது பலரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாகவும், சிலருக்கு சர்க்கரையை வாயில் போட்டதாகவும் உணர்வுகளைக் கொடுத்திருக்கின்றது.

ரஸ்ய நாட்டின் அதிபர் , சீன நாட்டின் அதிபர், வட கொரிய நாட்டின் அதிபர் ஆகியோருக்கு ட்ரம்ப் வருகை ஆறுதலைதளிக்கும்.

ஏனைய பல நாடுகள் இவரது அரசியல் வருகையை மிகவும் எச்சரிக்கையுடன் அணுகுகின்றன.

தனது தேர்தல் பிரசாரங்களில் வேளைக்கு வேளை பல முரணட்ட கருத்துகளை முன் வைத்தவர் ட்ரம்ப்.

பதிவிக் கதிரையில் அமர்ந்ததும் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறார் என்பது 2025 இல் தான் வெளிச்சமாகும்.

நிறவேற்று துவேஷத்துக்கு தூபமிடுபவர் ட்ரம்ப் எனும் கருத்து பலரின் மத்தியில் நிலவுகிறது.

தனது அரசமைப்பில் ஆறு இந்தியப் பின்னனி கொண்டவர்களுக்கு இடமளித்திருப்பது இவர் மீதான மேற்கூறிய விமர்சனத்தை கேள்விக்குறியாக்குகிறது.

வெளிநாட்டவர் அமேரிக்க நாட்டில் குடியேறுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தனது முக்கித கொள்கையாகக் கொண்டுள்ள இவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை 2025 வெளுக்க வைக்குமா ?

பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

இந்த உலகத்தின் சுழற்சியில் எத்தனையோ மாற்றங்கள் ?

காலநிலை மாற்றங்கள் , இயந்திர முறை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் என அவசரமான துரிதகதியில் இம்மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம்  இருக்கின்றன.

காலநிலை மாற்றங்களுக்கு மனிதராகிய நாம் இயற்கைச் சீரழிவை மேற்கொள்ளுவதே காரணம் என்றொரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.

ஆனால் இல்லை இது இயற்கையாகவே இப்பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இதற்கு மனிதரின் நடவடிக்கைகள் காரணமில்லை என்பது ஒரு சாராரின் வாதம்.

எது எப்படியிருப்பினும் நாம் வாழும் சூழலின் காலநிலை மாறனடைந்திருக்கிறது என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.

இதனை எப்படிக் கையாளுவது என்பதற்காக வருடாவருடம் சர்வதேச நாடுகள் கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகின்றன.

இம்மாற்றங்ககைத் தடுக்கும் முயற்சி சரியான திசையில் செல்கிறதா என்பது சந்தேகமே !

கடந்த வருடத்தின் தேர்தல்களை ஒருபுறம் தள்ளுவோம் , காலநிலை மாறங்களைக்கூட ஒருபுறம் தள்ளுவோம் ஆனால் நாகரீக  உலகு என்று சொல்லிக் கொள்ளும் நாம் வெறும் மண்ணாசைக்காக ஆயிரமாயிரம் உயிர்களைக் காசு கொள்ளும் செயல் பக இடங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஊக்ரேன் ரஸ்யா ஐரோப்பிய சூழலில் கொன்றொழிக்கும் உயிர்கள் .

மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீனிய மக்களின் உரிமைக்கான போராட்டமும் அதனை அடக்குகிறோம் எனும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களும் அபகுதியைத் தீராத புகை.மண்டலத்தினுள் அமிழ்த்திக் கொண்டிருக்கின்றன.

உயிரிழந்து, வீடிழந்து , நாடிழந்து துடித்துக் கொண்டிருக்கும் மக்களின் அழுகுரல் ஒருபுறமும், கைதிகளாக பாகஸ்தினியர்களின் உரிமைப்போர் எனும் பார்வையில், அரபு தீவிரவாத அமைப்புகள் கடத்திச் சென்றவர்களின் நிலையறியாமல் ஓலமிடுவோர் ஒருபுறமுமாக காணும் அவலக் காட்சிகள்.

உயிரழிவைத் தடுக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுப்பார்களா என சர்வதேச சமூகத்தை எதிர்பார்த்து ஏமாறும் ஒரு நிலை.

இந்தக் கட்டத்தில் தான் தான் பதவியேற்று 24 மணி நேரத்தில் போர்களை நிறுத்துவேன் என்று சூளுரைத்த ட்ரம்பின் தேர்தல் வெற்றி எவ்வகை மாறத்தைக் கொண்டு வரப் போகிறது என்று சமாதானத்தை விரும்பும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கான தீர்வையும் 2025 தனக்குள் புதைத்து வைத்திருக்கிறதோ ?

இங்கிலாந்திலே 50 வருடங்களை எட்டிப்பிடிக்கப் போகும் எனக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஏதோ உறவினர்களைப் போல தென்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் அரசரான சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வில் பல அதிமுக்கிய பிரச்சனைகள் தோன்றின.

அரசரான சார்ள்ஸ் அவர்கள் புரஸ்ட்ரேட் கான்சர் வியாதியால் தாக்கப்பட்டார்.

தெய்வாதீனமாக அவருக்கு தகுந்த சமயத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் குணமடைந்து வருகிறார். இன்பமும் சிகிச்சை முடிவடையவில்லை.

அதேநேரம் அரசரின் மருமகளும் முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அவர்களின் மனைவி கத்தரீன் வயிறு சம்மந்தப்பட்ட புற்றுநோயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். தற்போது அவரது சிகிச்சைகள் நிறைவுற்றதாகக்  கூறப்படுகிறது.

எப்போதும் அதிக அளவில் சர்ச்சைகளுக்குள் அகப்பட்டுக் கொள்பவர் அரசரின் தம்பி இளவரசர் அண்ட்ரூ.

சர்ச்சைகள் அனைத்தையும் ஓரளவு கடந்து விட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கிறிஸ்துமஸ் சமயத்தில் புது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டார்.

இவருடன் நெருக்கமாகப் பழகி வந்த ஒரு சீன செல்வந்தர் சீன அரசாங்கத்துக்காக உளவு பார்பவர் என்று இங்கிலாந்தின் இரகசிய உளவுத்துறை கண்டுபிடித்தது.

இத்தகைய நஅர் ஒருவரை இங்கிலாந்தின் அரச பரம்பரையின் இரகசியங்களுக்கு அண்மையில் நடமாடக் காரணமாயிருந்தார் என்று அவர்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவருக்கூடாக முன்னைய பிரதமர்களாக இருந்த டேவிட் கமரன், திரேஸா மே போன்றோருக்கு நெருக்கமாக இந்தச் சீன நபர் நடமாடியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே 2924 இங்கிலாந்துக்கு அரசியல், பொருளாதாரம் , மக்களின் வாழ்வாதாரம் என்பனவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

மாற்றத்தை எதிர்பார்த்தோ அன்றி அரசின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாகவோ மக்கள் அதிகப் பெருபான்மை வாக்களித்து லேபர் கட்சியை அரசில் அமர்த்தியிருக்கிறார்கள் .

ஆனால் பதவியில் அமர்ந்து முதலாவது பட்ஜெட்டிலேயே ஓய்வூதியக்காரர்களின் சலூகைகள் மீது கையை வைத்து கடும் எதிர்ப்புள்ளாகியிருக்கிறார்கள்.

தாம் எதிர்பார்க்காத அளவில் பொருளாதாரச் சிக்கல்களை முந்தைய அரசாங்கம் கையளித்த காரணமே தாம் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது எனது அவர்களது விளக்கம்.

இதற்கான உண்மைகளும் , இவர்களின் நடவடிக்கைகளின் தாக்கத்தையும் 2025 இல் காண முடியும் என்பதே கேள்வி.

எனது பின்புல நாடான சிறீலங்காவில் எனது சோதரர்களின் நீண்டகால உரிமைகளுக்கான ஓலத்தை பல எதிர்பார்ப்புகளுடன் பதவிக்கு வந்த அநுர அரசு தீர்த்து வைக்குமா என்பதும் 2025க்கே வெளிச்சம்.

எதிர்பார்ப்புகளோ  ஓராயிரம் ஏமாற்றமா? இல்லை திருப்தியா விடைகாண அவலுடன் நுழைவோம் 2025க்குள் வாருங்கள்.

லண்டனில் கம்பன் விழா

சக்தி சக்திதாசன்
இங்கிலாந்து

காரைக்குடியில் 1939ம் ஆண்டு ஏப்பிரல் மாதம்  2,3 ம் நாட்களில் கம்பனின் தமிழ்த்திறனைப் போற்றி சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல சா.கணேசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே காரைக்குடி கம்பன் கழகம்.

கம்பனில் மோகம் கொண்ட அமரர்  சா.கணேசன் தமிழின் மீதும், தமிழின் முன்னோர்கள் மீதும் அளவிலா ஆர்வம் கொண்டவர்.

இந்திய தேசிய காங்கிரஸ், பின்னர் சுதந்திரா கட்சி எனும் கட்சிகளில் இணைந்து இந்திய விடுதலைப் போரிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் முன்னேறத்துக்காக அரசியலில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் தமிழக மேலவை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

கம்பன் கழகத்தை அமைத்து கம்பருக்காக திருநாள் எடுத்தவர் சா. கணேசன். அனைவருக்கும் “கம்பனடிப்பொடி” எனும் கெளரவப் பெயரால் அறியப்படுபவர்.

காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் இன்று தமிழகத்தின் பல பாகங்களிலும், சர்வதேச அளவில் தமிழர் செறிந்து வாழும் பல நாடுகளிலும் கிளைகள் பரப்பி கம்பனின் தமிழ்ரசக் கனிகளைத் தாங்கி நிற்கிறது.

இலங்கையில் கம்பனடிப்பொடியின் நேரடி ஆசியுடன் உலகெங்கும் பறந்து கம்பனையும் தமிழையும் போற்றி வருகிறார் ஐயா இலங்கை ஜெயராஜ்.

அந்த வழியில் இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் மாநகரில் கோலாகலமாக கம்பன் கழக இலண்டன் கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கம்பன் தமிழையும், தமிழிலக்கியத்தையும் கண்ணெனப் போற்றும் அன்பர்கள் ஒன்றிணைந்து யாம் பெற்ற இன்பம் பெறுக இங்கிலாந்து வாழ் தமிழர் என்பதற்காக இக்கம்பன் கழகத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

இவ்வங்குரார்ப்பன விழாவிற்காக தாய்த்மிழ்ப் பின்புலங்களில் இருந்து பண்பட்ட பேச்சாளர்கள், தமிழறிஞர்கள் வந்திருந்தார்கள்.

குறிப்பாக ” கம்பவாரிதி ” எனப் பெயர் பெற்ற திரு இலங்கை ஜெயராஜ்.

தமிழகத்தில் புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர் திருமதி பாரதி பாஸ்கர்,

தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர் தமிழறிஞருமான திரு. பாரதி கிருஷ்ணகுமார்.

இலங்கை தமிழ் மற்றும் சமயச் சொற்பொழிவாளர் தமிழருவி சிவக்குமார்.

இலங்கையின் மற்றொரு சிறந்த இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் முனைவர்  ஸ்ரீ பிரசாந்தன்.

முன்னால் மலேசிய துணை அமைச்சரும், தமிழ் ஆர்வலருமான திரு டத்தோ சரவணன்.

எனப் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்ட இரண்டு நாட்கள் நிகழ்வு கடந்த ஜூலை 13,14ம் தேதிகளில் லண்டன் அல்பேர்ட்டன் சமூகக் கூட்டரங்கு மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து சுமார் இரவு 10 மணி வரை நடந்தது.

பட்டிமன்றம் , உரையரங்கம், நாட்டியநாடகம் எனப்பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

துரதிர்ஷ்டவசமாக பல மாதங்களுக்கு முன்னராகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததால் முதலாம் நாள் அங்குரார்ப்பன நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

இரண்டாம்நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு நானும் எனது மனைவியும் நண்பர் ஒருவருடன் மூன்று மணிக்கு முன்னதாகவே மணடபத்தை அடைந்து விட்டோம்.

மண்டப ஒழுங்கு மிக நேர்த்தியாகவே அமைக்கப்பட்டிருந்தது.

வாசலிலேயே தமிழ்க் கலாச்சாரப் பிரகாரம் மங்கக விளக்கின் ஒளியுடன் வரவேற்கக் காத்திருந்தார்கள்.

கையில் லண்டன் கம்பன் கழக  விழா மலர் கையளிப்புடன் மண்டபத்தினில் நுழைந்தோம்.

மண்டபம் நிறைந்து வழிந்தது அதிர்ஷ்டவசமாக மண்டபத்தின் பின் இருக்கைகளில் சில எமக்குக் கை கொடுத்தன.

மண்பத்தினுள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது அங்கேருக்கும் ஓரிரண்டு இருக்கைகளில் யாராவது இருக்கிறார்களா ? என்று விழா அமைப்பாளர்களில் ஒருவர் வந்து வினவி புதிதாக வருபவர்களை உட்கார வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

இருக்கைகள் மண்டபத்தின் உள்ளே நிரம்பியதால் வெளியே வரவேற்புகூடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியின் முன்னால் ஒரு ஐம்பது இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிகள் நேரலையாக அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

இலவசமாக விருந்தினர்க்கு தேநீர் கூடத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இரண்டாம் நாள் நிகழ்வின் ஆரம்பம் அழகாகத் தொகுப்பாளரினால் விவரிக்கப்பட்டது.

மங்கல விளக்கேற்றலையும் வரவேற்புரையையும்,தகைமை உரையையும் அடுத்து இங்கிலாந்திலே பிறந்து இங்கு பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவர்களாக இருக்கும் ஒரு யுவனும், ஒரு யுவதியும் தமிழில் சிந்தனையரங்கத்தை ஆரம்பித்தார்கள்.

அது பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் முன்னிலையில் நடந்தது.

மிகவும் அருமையாக கம்ப இராமாயணத்தைப் பற்றி அவ்விளைஞனும், வளரும் தலைமுறை மத்தியில் தமிழின் வளர்ச்சி பற்றிய கருத்துரையை அந்த இளம் மாணவியும் உரை நிகழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமார். இளைய பேச்சாளர்களின் திறமையை வெகுவாக பாராட்டி தனக்கெயுரிய நகைச்சுவை கலந்த பேச்சுடன் அரங்கை மகிழ்ச்சியிலாழ்த்தினார்.

தொடர்ந்த  இளம் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இராமாயண நாட்டிய நாடகம் செவிகளுக்கும், கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.

முழு இராமாயணத்தின் சாரத்தையே வெறும் ஒரு மணி நேரத்துக்குள் அதன் மையக் கருத்துக் குன்றாமல் அச்சிறு நடிகர்கள் நிகழ்த்தியமை அரங்கத்தையே மகிழ்வான வியப்புக்குள் ஆழ்த்தியது.

இடைவெளியின் போது தமிழ் இலக்கிய நயத்தைக் குறிப்பாக கம்பனின் நயத்தை விருந்தாகத் தந்த அமைப்பினர் மிகவும் நியாயமான விலையில் சிற்றுண்டிகளை அளித்து வாய்க்கும் சுவையளித்தார்கள்.

இடைவேகைக்கு சற்று முன்னதாக மக்கள் பணிக்காகச் சேவையாற்றுபவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் மாண்பளித்துக் கெகரவிக்கப்பட்டார்கள்.

இடைவேளையைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பட்டிமன்றம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தலைப்பு கம்பைராமயணத்தின் வீரம் செறிந்த நிலம் இராமனின் அயோத்தியா ? அன்றி இராவணனின் இலங்கையா ? என்பதுவே அயோத்தியே என்று தமிழருவி சிவக்குமார், பாரதி கிருஷ்ணகுமார், ஆகியோர் வாதிட இலங்கையே என பேச்சாளர் ஸ்ரீ பிரசாந்தன், திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் வாதிட்டனர்.

மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னர் அயோத்திதான் வீரம் செறிந்த நிலம் என்று நடுவர் கம்பவாரிதி தீர்ப்பளித்தார்.

சிறப்புரை மாண்புமிகு முன்னாள் மலேசிய துணையமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கபட்டது.

அருமையான நிகழ்வுகளுடன் இனிதே முடிந்த விழாவின் இறுதியில் அனைவருக்கும் அருமையான சாத்வீக விருந்தளித்து விடைதனுப்பி வைத்தார்கள்.

இவ்விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னால் பல தமிழ் இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நேசர்கள் எனப் பகரச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது எனது பாக்கியமே !

எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனங்களில் கம்பனின் ஆளுமையும், அதனுடன் கலந்த இலக்கிய நேசமும் எத்தகைய ஆழமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.

தமிழை நேசிப்பவன், தமிழை வாசிப்பவன், தமிழை யாசிப்பவன் எனும் ஒரு சாதாரண பாமர ரசிகனின் உள்ளக் கிடக்கையை வெளியிட வேண்டியது எனது கடமை என எண்ணுகிறேன்.

விழா முடிந்த பின்னால் விழா அமைப்பாளர்கள் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது.

இலண்டனில் அதுவும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் ஒரு சாதாரண பிறந்தநாள் விழாவிற்கே ஏற்படும் செலவினைப் பற்றி அறிந்தவன்.

இத்தகைய அளவில் இலக்கிய விழா ஒன்றை அமைப்பதில் உள்ளப் பொருளாதார, நிர்வாகச் சிக்கல்கள் உணரக்கூடியதே.

இவ்விழாவிற்கான செலவினில் பல நல்ல உள்ளங்கள் விழா அமைப்புக்குழுவிற்கு உதவியதை அவர்களே பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

இலவச அனுமதியுடன் தேநீர் இரவு உணவு உபசாரங்களுடன் விழா நடைபெற்றது.

அங்கே மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் நன்கொடை செய்ய விரும்புவோர்களுக்கான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

இரண்டு நாட்களையும் சேர்த்து அண்ணளவாக ஆயிரம் பார்வையாகர்கள் வந்திருந்ததாக அவ்வமைப்பாளர் சொன்னார்.

அமைப்பாளர்கள் ஒரு தேநீர் லண்டன் காசில் ஒரு பவுண்டு என்று அறவிட்டிருந்தால் கூட சுமார் 800 பவுண்டுகள் வரை அதவது இந்திய ரூபாய் எட்டு லட்சம் அறவிட்டிருக்கலாம்.

ஆனால் அங்கிருந்த நன்கொடைப் பெட்டிகளின் மொத்தம் அதன் அரைப்பங்காவது வந்திருக்குமா என்பது சந்தேகமே !

ஒரு சினிமா பார்ப்பதற்கு 15 பவுண்டுகள் கொடுக்கிறோம்.

சினிமா நடிகர்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு குறைந்தது 30 பவுண்ட்ஸ் கொடுத்துக் கலந்து கொள்கிறோம்.

அதைப் பார்ப்பது தவறென்பதல்ல எனது வாதம் ஏனெனில் ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் அவர்களது தெரிவு.

ஆனால் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கம்பன் எனும் கவிச்சக்கரவர்த்தியின் தமிழை ரசிக்க வந்த ரசிகர்கள் எத்தனை தூரம் இதைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதுவே கேள்வி.

எமது அடுத்த தலைமுறையை நோக்கி இலக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமானால் அருகி வரும் பார்வையாளர்களின் பங்களிப்பின்றி நிறைவேறாது.

அடுத்த வருடம் கம்பன் விழாவில் சந்திப்போம்.

❌